Tag: செ. இரா. செல்வக்குமார்

  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இப்பதிவு சூலை 18, திங்கட்கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது. அக்கிழமையின் வல்லமையாளர் விருதுக்காக, 2016 ஆண்டுக்கான கார்னிகி கார்ப்பொரேசன் கிரேட்டு இம்மிகிரண்டு (பெரும்புகழீட்டிய குடியேறியவர்) விருது பெற்ற திரு. அரி சீனிவாசன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

    ஒவ்வொரு ஆண்டும் கார்னிகி நிறுவனத்தார் பெரும்புகழ் ஈட்டிய குடியேறிய அமெரிக்கர்களுக்கு விருதுகள் வழங்குகின்றார்கள். 2016 இல் நான்கு இந்திய கொடிவழி குடியேறிகளுக்கு இவ்விருது வழங்கப்பெற்றது. 30 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 42 பேர் இவ்விருதைப் பெற்றார்கள். இந்தியர்களில் கூகுளின் சுந்தர் பிச்சை, பி.பி’.எசு (PBS) என்னும் பொது அலைபரப்பக நிறுவனத்தின் முக்கிய செய்தி நிகழ்ச்சியாகிய நியூசு அவர் (PBS NewsHour) மூத்த செய்தியாளர் அரி சீனிவாசன், அமெரிக்காவின் மெக்கின்சி (McKinsey) கம்பெனியின் தலைவர் விக்கிரம் மல்கோத்திரா, நேசனல் நூல் திறனாய்வு வட்டத்தின் பரிசுபெற்ற நூலாசிரியர் பாரதி முக்கர்ச்சி ஆகியோர் இருந்தனர்[1]. செய்தி ஊடகத்தில் அரி சீனிவாசன் (Hari Sreenivasan) அவர்களின் வளர்ச்சி சிறப்பானது.


    அரி சீனிவாசன் (Hari Sreenivasan) . படம் [3]

    1974 ஆண்டு மும்பையில் பிறந்த அரி சீனிவாசன் அமெரிக்காவுக்கு வருகையில் அவருக்கு அகவை 7. அமெரிக்காவில் மேற்கே உள்ள வாசிங்கடன் மாநிலத்தில் சீயாட்டில் நகரத்தில் நேத்தன் ஃகேல் உயர்நிலைப்பள்ளியில் (Nathan Hale High School) படித்தார். 1995 இல் பியூச்சே சவுண்டு பல்கலைக்கழகத்தில் (University of Puget Sound) மக்கள் செய்தித்தொடர்பியலில் (mass communication) இளங்கலைப் படிப்பை முடித்துவிட்டு, வட கரோலினா மாநிலத்தில் இராலே (Raleigh) என்னும் நகரத்தில் என்.பி’.சி (NBC) -யைச் சேர்ந்த WNCN-TV என்னும் தொலைக்காட்சி நிறுவனத்தில் 1995 இல் முழுநேரப்பணியில் சேர்ந்தார். பின்னர் ஏபி’சி(ABC) செய்தி ஊடகத்திலும் பின்னர் சிபி’எசு (CBS) செய்தியூடக நிறுவனத்திலும் பணியாற்றிய பிறகு 2009 ஆம் ஆண்டு பொது அலைபரப்பக்கத்தில் சிம் இலேரர் நியூசவர் (Jim Lehrer NewsHour) என்னும் புகழ்பெற்ற செய்தி நிகழ்ச்சியில் முதலில் செய்தி தொகுப்பாளராகவும் இணையவழி செய்தி வழங்குபவராகவும் இருந்து பின்னர் மதிப்பு வாய்ந்த மூத்த செய்தியாளராகவும் நிலைத்த செய்திவாசிப்பாளராகவும் உயர்ந்தார். பொது அலைபரப்பகம் (PBS) என்பது விளம்பரங்கள் அதிகம் இல்லாமல், பொதுமக்களும் கொடையாளர்களும் தரும் நன்கொடையையும் இதன் அடிப்படையில் அரசின் உதவியையும் கொண்டு கட்சி சார்புகள், மத, இன சார்புகள் ஏதுமின்றி மிகுசிறப்பாகவும் ஆழமாக அலசியும் நேர்த்தியுடன் அளிக்கும் செய்தியூடகம். பொது அலைபரப்பகத்தின் நடுநிலைமையும் நிகழ்ச்சிகளின் நேர்த்தியும் பெரும்புகழ் பெற்றவை. இந்தியத்தலைமை அமைச்சர் நரேந்திர மோதீ அவர்கள் செப்டம்பர் 28, 2014 அன்று அமெரிக்காவுக்கு வந்தபொழுது அரி சீனிவாசனும் 2014 ஆண்டு அமெரிக்க அழகிபோட்டி வெற்றியாளரான நினா துவுலூரி அவர்களுமாகச் சேர்ந்து மாடிசன் சதுக்கத்தில் நிகழ்ந்த திரு மோதீயின் உரையாற்று நிகழ்ச்சியை நடத்திக்கொடுத்தார்கள்.

    அரி சீனிவாசன் சூலை 2016 இல் கார்னிகி நிறுவனத்தாரின் பெரும்பபுகழ் குடியேறி விருது பெற்றுள்ளார் [1].

    திரு அரி சீனிவாசன் அவர்களைப் பாராட்டி சூலை 18 ஆம் நாள் திங்கட்கிழமை தொடங்கும் கிழமைக்கான வல்லமையாளராக அறிவித்து வாழ்த்துகின்றோம்

    அடிக்குறிப்புகள்

    [1] India Aborad (http://www.indiaabroad-digital.com/indiaabroad/20160708?pm=1&fs=1&pg=3#pg3 )
    [2] English Wikipedia (https://en.wikipedia.org/wiki/Hari_Sreenivasan)
    [3] படம் கூகுள் பக்கம் (https://plus.google.com/u/0/+HariSreenivasan); http://www.pbs.org/newshour/author/hari-sreenivasan/

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இப்பதிவு சூலை 11, திங்கட்கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது. அக்கிழமையின் வல்லமையாளர் விருதுக்காக, அருமையான அறிவியல்நூல்கள் எழுதியுள்ள முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

    சூலை 2, 2016 அன்று முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் கோட்பாட்டுவேதியியலுக்கான அடிப்படைக்கணிதம் என்னும் 316-பக்க உயர்கணித நூலொன்றை அனைவரும் இலவசமாகத் தரவிறக்கிப் படிக்கும்படி வெளியிட்டுள்ளார் [1].
    இந்நூல் அறிவியல்-கணிதத் துறையின் ஆழங்குன்றாமல் எழுதப்பெற்றிருப்பது பெருஞ்சிறப்பு. இந்நூல் மட்டுமன்றி கடந்த சில ஆண்டுகளில் எட்டு அருமையான நூல்களை இலவசப்பதிப்பாக வெளியிட்டு தமிழுலகுக்கு அருந்தொண்டு ஆற்றியிருக்கின்றார். இவற்றுள் புகழ்பெற்ற ”One Two Three… Infinity: Facts and Speculations of Science” என்னும் தலைப்பில் சியார்ச்சு கேமாவ் (George Gamow) எழுதிய நூலின் தமிழாக்கத்தை ”ஒன்று , இரண்டு, மூன்று, முடிவிலி” என்னும் தலைப்பில் முனைவர் கோட்டாளம் மொழிபெயர்த்துள்ளார். இதேபோல தகுலசு ஆடம்சின் (Douglas Adams) “The Hitchhiker’s Guide to the Galaxy” என்னும் புகழ்பெற்ற நூலையும் தமிழில் ”பால்வீதியின் பயணிகளுக்கான ஒரு வழிகாட்டி” என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். அறிவியல் துறையில் எழுதுவோர்க்குப்பயன்படும் விதமாக அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களை தமிழாக்குவதற்கான ஒரு கையேடு என்னும் அருமையான நெடிய நூல் ஒன்றையும் எழுதியுள்ளார் [2].

    மகாகவி பாரதியாரின்
    ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
    செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!’

    என்னும் பொன்மொழிகளைச் செயற்படுத்திவரும் நற்றமிழர் இவர்.


    முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் . படம் [3]

    முனைவர் கோட்டாளம் அவர்கள் அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் 1984 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். அதற்குமுன்பு சென்னையில் இருக்கும் இந்திய தொழினுட்பக்கழகத்தில் (ஐ.ஐ.டி-சென்னை) முதுநிலை அறிவியல் பட்டமும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேதியியலிலே இளநிலைப் பட்டமும் பெற்றார். இப்பொழுது அறிவியல் இலக்கியங்களைத் தமிழில் ஆக்குவதையும் மொழிபெயர்ப்பதையும் பேரார்வம் காட்டி உழைத்துவரும் இவர் பற்பல அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றி பெரிய பொறுப்புகளில் இருந்துள்ளார். கிரே ஆய்வு (Cray Research), இசுட்ரக்சுரல் பயோ இன்ஃபர்மாட்டிக்சு (Structural Bioinformatics), இரியாக்ஃசன் திசைன் (Reaction Design) போன்ற பல நிறுவனங்களில் பணியாற்றியிருக்கின்றார். வேதியியலில் உயர்திறன் கணிமைகளில் இவர் பெரும்வல்லுநர். பெரும் நுண்ணறிவுபெற்ற இவர் தமிழில் நூல்கள் எழுதி தமிழ்ப்பணி ஆற்றுவது பெருமகிழ்ச்சி தருவது. இவர் ஆக்கிய அல்லது மொழிபெயர்த்த நூல்களை மின்வடிவில் யாரும் எளிதாக இலவசமாகத் தரவிறக்கிப் படிக்கும்படி செய்திருப்பதும் இவருடைய தொண்டுள்ளத்தைக் காட்டுகின்றது. இவரெழுதிய நூல்களைத் தரவிறக்கிப் படிக்க கீழ்க்காணும் பக்கத்தை அணுகவும்[4]. முனைவர் கோட்டாளம் அவர்கள் Journal of Chemical Physics, Journal of Statistical Physics, Biopolymers போன்ற அறிவியல் ஆய்விதழ்களில் தன்னுடைய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார். சுபிரிங்கர் ஃபெர்லாகு (Springer Verlag) என்னும் பதிப்பகத்தாரின் நூலில் இவருடைய கட்டுரை ஒன்றும் வெளியாகியுள்ளது. புத்தாக்கப்படைப்புக்கான உரிமமும் பெற்றுள்ளார்.

    முனைவர் கோட்டாளம் அவர்கள் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் வாழ்ந்து வாழ்கின்றார்.

    முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்களின் அருமைமிகு அறிவியல் தமிழ்நூல் படைப்புத் தொண்டினைப் பாராட்டி அவரை சூலை 11, திங்கட்கிழமைக்கான வல்லமையாளராக அறிவித்து வாழ்த்துகின்றோம்.

    அடிக்குறிப்புகள்

    [1] https://drive.google.com/file/d/0BzwpbxABzaV5TXU4aVhRMy11SlU/edit
    [2] https://www.facebook.com/kottalam/posts/1247793848565202?pnref=story
    [3] படம்- முனைவர் கோட்டாளம் அவர்களின் முகநூல் (https://www.facebook.com/kottalam?fref=nf)
    [4] https://www.facebook.com/kottalam/posts/1247793848565202?pnref=story

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இப்பதிவு சூலை 4 ஆம் கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது [1]. அக்கிழமையின் வல்லமையாளர் விருதுக்காக பெட்னா (FeTNA) என்றழைக்கப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

    வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை தொடர்ந்து 29 ஆண்டுகளாக வட அமெரிக்காவில் அருமையான தமிழ்ப்பணி ஆற்றிவரும் ஓர் இலாபநோக்கமற்ற தன்னார்வலர்களால் ஆன குழுமம். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான தமிழ்க்குடும்பங்கள் தங்களின் வேலைநேரம் போக மீதிநேரத்தைத் தமிழுக்காக இரவும் பகலுமாக உழைத்து வியப்பூட்டும் ஒரு கலைவிழாவும் ஒன்றுகூடலும் வெற்றிகரமாக நடத்திவருகின்றார்கள். வட அமெரிக்காவில் இருக்கும் ஏறத்தாழ 40 தமிழ்ச்சங்கங்களின் ஒருங்கிணைந்த பேரவை இந்த பெட்னா என்பது.


    ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் விடுதலை நாளாகிய சூலை 4-ஐ ஒட்டி நான்கு நாள்கள் ஏதேனும் ஓர் அமெரிக்க நகரத்தில் பல்கலைவிழா எடுக்கின்றார்கள். இந்தியாவிலிருந்தோ தமிழர்கள் வாழுமிடங்களிலிருந்தோ தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழறிஞர்களையும் தமிழ்க்கலைஞர்களை வட அமெரிக்காவுக்கு வரவழைத்து பெருமைப் படுத்துகின்றார்கள். வட அமெரிக்காவில் வாழும் குழந்தைகளும் சிறார்களும் இளைஞர்களும் தமிழ்மொழி, தமிழ்க்கலை தமிழிலக்கியம் முதலியவற்றில் ஆழமாக ஆர்வம்பற்றிக்கொள்ளுமாறு மிகச்சிறப்பாக நிகழ்ச்சிகள் அமைத்து பெருவெற்றி கண்டுவருகின்றார்கள். ஒவ்வொரு ஆண்டும் 2000-3000 தமிழர்கள் ஒரு நகரத்தில் கூடி இவ்விழா எடுப்பது என்பது வட அமெரிக்காவில் எளிதன்று. இவ்விழா எடுப்பதை இந்தியத்துணைக்கண்டத்தின் பிறமொழியினத்தாரும் பெருமையுடன் பார்க்குமளவும் சிறப்பு வாய்ந்ததாகவுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கத்தமிழர் முன்னோடிகள் (Tamil American Pioneer) விருது என்னும் ஒன்றை நிறுவி, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற பல துறைகளில் பெரும்புகழ் நாட்டிய தமிழர்களைப் பெருமைப்படுத்தி வருகின்றார்கள். ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து பின்னர் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் இராசுச் செட்டி அவர்கள், ஐ.இ.இ.இ. (IEEE) -யின் மார்க்கோனி விருதுபெற்ற பேராசிரியர் பால்ராசு அவர்கள், மாந்த உரிமைகள் துறையில் நன்கறியப்பட்ட கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆந்தசங்கரி அவர்கள் போன்ற பலரையும் பெருமைப்படுத்துவதைப் பார்க்கும் தமிழிளைஞர்கள் தமிழ்க்குமுகத்தின் மீதும் தமிழர்களின் வெற்றிகளின் மீதும் ஆர்வம் ஏற்பட்டு ஈர்க்கப்படுகின்றார்கள். இளைஞர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றார்கள்

    ஒவ்வொரு ஆண்டும் தமிழுக்குத் தொண்டாற்றிய சிலரையோ அல்லது முக்கிய நிகழ்ச்சியையோ முதன்மைப்படுத்தி விழா எடுக்கின்றார்கள். சென்ற ஆண்டு வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது. 2014 ஆம் சுந்தரேசனார் நூற்றாண்டு. 2013 ஆம் ஆண்டு தனிநாயகம் அடிகளார், 2012 ஆம் ஆண்டு மு. வரதராசனார் என்றும் அதற்கு முன்னதான ஆண்டுகளில் அறிஞர் அண்ணா, பெரியசாமி தூரன் என பலரின் நினைவை முன்னிறுத்திக் கொண்டாடித் தமிழ்பரப்புகின்றார்கள். 2016 ஆண்டாகிய இவ்வாண்டு நியூ செர்சியில் திரென்றன் (Trenton) நகரில் நடந்த பெட்னா விழாவைத் தனித்தமிழ் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடினார்கள்.


    தனித்தமிழ் இயக்க நூற்றாண்டுவிழா . படம் [4]


    மேடையில் இளைஞர்களின் தமிழ்கலை முழக்கம் . படம் [5]

    வருமாண்டு (2017) அமெரிக்காவின் மினெசோட்டா (Minnesota) மாநிலத்தில் 30 ஆம் ஆண்டுவிழாவாகக் கொண்டாடவிருக்கின்றார்கள். 2016 ஆம் ஆண்டு பெட்னாவின் தலைவர் திரு. நாஞ்சில் பீற்றர் அவர்களுக்கும், அவருடைய அருமையான அணியினருக்கும் பாராட்டுகள் [3]. ஆர்வமும் உழைப்பும் மிக்க நற்றமிழர்கள் நல்லணியாக உழைத்து ஒவ்வொரு ஆண்டும் பெருஞ்சிறப்பு மிக்க விழா எடுத்து தமிழ்வளர்ப்பது மட்டுமல்லாமல் தமிழ்ச்சங்களின்வழி தமிழ்க்கல்வி, கலை, தமிழ்க்கலைப் போட்டிகள், கவிதை, இலக்கிய நிகழ்ச்சிகள் என ஆண்டுமுழுவதும் தணியாத ஆர்வ்த்துடன் தமிழ்வளர்க்கின்றார்கள். பெட்னாவின் தமிழ்ப்பணியை விரித்து எழுதினால் நூலாகிவிடும். பெட்னா தமிழ்ப்பணி வரலாற்றுப்புகழ் பெற்றதாகிவிட்டது. பெட்னாவின் நிகழ்ச்சிகளின் படங்கள் பலவற்றையும் இங்கேயும், இங்கேயும் காணலாம்.

    பெட்னாவின் தமிழ்ப்பணியைப் பாராட்டி சூலை 4 ஆம் கிழமையின் வல்லமையாளர் விருது பெறும் நிறுவனமாக அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்ளுகின்றோம். பெட்னாவையின் அதை நடத்தும் அனைவரையும் பாராட்டுகின்றோம்.

    அடிக்குறிப்புகள்

    [1] இப்பதிவு சூலை 4 அன்று வரவேண்டியது. சில காரணங்களால் அதனை இன்றுதான் வெளியிட நேர்கின்றது.
    [2] http://www.fetna.org/
    [3] இக்கட்டுரை எழுத நிறைய செய்திகளையும் குறிப்புகளையும் என் வேண்டுதலுக்கு இணங்க நல்கிய, ந்லகுவித்த திரு நாஞ்சில் பீற்றர் அவர்களுக்கும், திருவாளர் தில்லை குமரன், சொக்கலிங்கம், மகேந்திரராசு, பொற்செழியன் இராமசாமி, முத்துசாமி செந்தில்நாதன், திருவாட்டி கீதாஞ்சலி பொன்முடி ஆகியோருக்கும் பிறருக்கும் என் நன்றி.
    [4] படம் தில்லை குமரன் அவர்களின் முகநூல் பக்கம்
    [5] பெட்னா தளம்

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இப்பதிவு சூன் 20 ஆம் கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது [1]. அக்கிழமையின் வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் இமய மலையின் எவரெசுட்டு முகட்டின் உச்சியை எட்டிய தமிழகத்தின் முதல் தமிழர் அவில்தார் கே. சிவக்குமார் அவர்கள்


    இமயமலையின் எவரெசுட்டு முகட்டின் உச்சியை எட்டிய முதல் தமிழ்நாட்டுத் தமிழர் அவில்தார் கே. சிவக்குமார் அவர்கள். படம் [2]

    இந்தப் புவி உலக உருண்டையிலேயே ஆகப்பெரிய உயரமான மலை இமயமலையில் உள்ள எவெரெச்சுட்டு முகடே. இதன் உயரம் 8,848 மீட்டர். உலகத்தில் வட அமெரிக்காவிலோ, தென்னமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ ஆப்பிரிக்காவிலோ, ஆத்திரேலியாவிலோ 7000 மீட்டர் உயரம் உள்ள மலைகூடக் கிடையாது. ஆசியாவைத் தாண்டி உள்ள உலகில் தென்னமெரிக்காவில் அருச்செண்டீனாவில் உள்ள அக்கான்காகுவா (Aconcagua) மலையே மிக உயரமானது. அதன் உயரம் 6,961 மீட்டர் மட்டுமே. ஆனால் இமயமலைத் தொடரில் 8,000 மீட்டர் உயரத்தை எட்டும் மலைமுகடுகளோ 14 உள்ளன! இமயமலைத்தொடரில் 7000 மீட்டரைத்தொடும் மலைமுகடுகள் 126 உள்ளன. இமயமலை அடுக்குத்தொடர் முழுவதுமே கரடுமுரடான, பனிமூடிய கொடுமுடிகள் நிறைந்தவை. இவற்றில் எவெரெசுட்டு மலையானது உலகின் உச்சி. இம்முகட்டை முதன்முதலாக எட்டியவர்கள் செர்ப்பா என்னும் மக்கள் இனத்தைச் சேர்ந்த தென்சிங்கு நோர்கே (Tenzing Norgay) என்பாரும் நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்டு இல்லரி (Edmund Hillary) என்பாருமே. இவர்கள் 1953 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் நாள் காலை 11:30 மணிக்கு உச்சியை எட்டி அரியசெயல் செய்து உலகப்புகழீட்டினார்கள்[3]. அதற்குமுன் யாரும் இந்த உச்சியை எட்டவில்லை. 2010 ஆம் ஆண்டுவரை 3,142 பேர் உச்சியை எட்டியிருக்கின்றார்கள் [3]. இந்த எவரெசுட்டு முகட்டைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் எவரும் அவில்தார் கே. சிவக்குமார் அவர்கள் எட்டும்வரை எட்டவில்லை. ஆனால் மலேசியாவைச் சேர்ந்த தமிழர் மூவர் எட்டியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியத் தமிழர்கள் திரு. மகேந்திரன் முனுசாமி (எவரெசுட்டை எட்டியது மே 23, 1997), திரு மோகனதாசு நாகப்பன் ((எவரெசுட்டை எட்டியது மே 23, 1997), திரு தி. இரவீந்திரன் (இவர் வடக்கே இருந்து திபெத்திலிருந்து ஏறிய முதல் ஆசியர்; உச்சியை எட்டியது 2013 இல்) ஆகிய மூவரையும் குறிப்பிடல் வேண்டும் [4]. ஆனாலும் தமிழகத்தைச்சேர்ந்த தமிழர் எவரும் திரு சிவக்குமார் எவெரெசுட்டை எட்டவில்லை.

    எவரெசுட்டு மலையை எட்ட முயன்று 200 உக்கும் மேலானவர் உயிர்துறந்துள்ளார்கள். மலையில் உச்சிப்பகுதிகளில் காற்றின் அழுத்தமும் உயிர்வாழ இன்றியமையாத உயிர்வளி எனப்படும் ஆக்சிசனின் அளவும் மூன்றில் ஒருபங்குதான் இருக்கும். கடல்மட்டத்தில் ஒரு மணித்துளிக்கு 20-30 மூச்சிழுப்புகள் இருக்குமென்றால், மலையின் உயரமான பகுதிகளில் அதே அளவு உயிர்வளியை மூச்சாக உட்கொள்ள ஒரு மணித்துளிக்கு 80-90 முறை மூச்சு இழுத்துவிடவேண்டும். எவெரெசுட்டுக் கொடுமுடியை எட்டி அரிய செயல் நாட்டியிருக்கும் அவில்தார் சிவக்குமார் அவர்களைப் பாராட்டி சூன் 20 ஆம் கிழமையின் வல்லமையாளராக அறிவித்து நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

    அடிக்குறிப்புகள்

    [1] இப்பதிவு சூன் 20 அன்று வரவேண்டியது. எதிர்பாராத காரணங்களால் அதனை இன்றுதான் வெளியிட நேர்கின்றது.
    [2] The Hindu, June 13, 2016
    [3] ஆங்கில விக்கிப்பீடியா ‘Mount Everest”
    [4] முகநூலில் ஐயை மணிமேகலை இராசன் அவர்கள் செ.இரா. செல்வக்குமார் பதிவில் கருத்திட்டதைத் தொடர்ந்து திரட்டிய செய்தி. ஆங்கிலவிக்கிப்பீடியா (https://en.wikipedia.org/wiki/M._Magendran ) (http://malaysianindianhistory.blogspot.ca/2013/08/t-ravindran-first-asian-to-conquer.html)

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர் 2013-2014 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருதுபெறும் முதுபெரும் தமிழறிஞர் சோ. ந. கந்தசாமியார் அவர்கள்

    மிகவும் புகழ்பெற்றவர் என்றாலும், இவருடைய பெயர் அண்மையில் அதிகமாக எடுத்துரைக்கப்படாமையால் அதிகம் அறியப்படாத பேரறிஞர். இவர் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்திலுள்ள, உடையார்பாளையம் வட்டத்தில் செயங்கொண்ட சோழபுரம் அருகில் உள்ள இலையூர் என்னும் ஊரில் திசம்பர் 15, 1936 இல் பிறந்தார். இவருடைய பெற்றோர் திரு சோ.நடராசனார், திருவாட்டி மீனாம்பாள் அம்மாள் ஆகியோர் ஆவர். கந்தசாமியார் தொடக்கக் கல்வியை இலையூரிலும், உயர்நிலைக் கல்வியை உடையார் பாளையத்திலும் தொடர்ந்தார். அதன்பின் அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கு இளங்கலை பொருளாதாரம் (1958) எம்.லிட்டு (1963), முனைவர்ப்பட்டம் (1971) ஆகியவற்றைப் பெற்றார். மொழியியல் பட்டயம், வடமொழிப் பட்டயம் ஆகியவற்றையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் அறிஞர் அ.சிதம்பரநாதன் செட்டியார், தெ.பொ.மீ ஆகியோரின் மேற்பார்வையில் நேரடியாகக் கற்றார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.[1]


    மூதறிஞர் சோ.ந. கந்தசாமியார். படம் [1]

    இவர் தாக்கம் ஏற்படுத்திய பல நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். அவற்றுல் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன [1]:

    இலக்கிய நூல்கள்:
    சங்க இலக்கியத்தில் மதுரை
    திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்
    இலக்கியமும் இலக்கிய வகையும்
    தமிழிலக்கியச் செல்வம் (ஐந்து தொகுதிகள்)
    திருமுறை இலக்கியம்
    திருமுறையில் இலக்கிய வகை
    உலகத் தமிழிலக்கிய வரலாறு(கி.பி.501-கி.பி.900)
    மணிமேகலையின் காலம்
    பரிபாடலின் காலம்
    இலக்கியச்சோலையிலே

    இவை தவிர இவர் எழுதிய திறனாய்வு நூல்கள்:
    Bharathidasan As a Romantic Poet
    Anthology of Book Reviews
    தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்

    எழுதிய மொழிபெயர்ப்பு நூல்கள்:
    English Translation of Sundarar Devaram Volume I (patikam 1-50)
    Volume II(patikam 51-100) (Tota 1026 verses)
    Tirumantiram(Total 527 verses)

    இலக்கணம் பற்றிய நூல்கள்:
    தமிழிலக்கணச் செல்வம்(இரு தொகுதிகள்)
    தொல்காப்பியம் – எழுத்ததிகாரத் தெளிவு
    புறத்திணை வாழ்வியல்
    தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்(மூன்று தொகுதிகள்)
    கலித்தொகை யாப்பியல்

    மொழியியல்:
    A Linguistics Study of Paripatal(M.Lit.Thesis)
    A Linguistics of Manimekalai

    தத்துவம்:
    தமிழும் தத்துவமும்
    தமிழிலக்கியத்தில் பௌத்தம்
    தமிழிலக்கியத்தில் அறிவாராய்ச்சியியல்
    இந்தியத் தத்துவக் களஞ்சியம் (மூன்று தொகுதிகள்)
    பௌத்தம்
    Buddhism As Expounded in Manimekalai(Ph.D. Dissertation)
    Indian Epistemology as Expounded in the Tamil Classics
    Tamil Literature and Indian Philosophy
    The Yoga of Siddha Avvai(Published in Canada)
    Advaitic Works and Thought in Tamil
    The Encounter Between saiva sidhanta and Advaita vedanta

    இவர் தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணியில் இருந்தார். பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்திலும் (1979-85), தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் (1985-1997), சில காலம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் தம் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார். பாலிமொழிப் பாடல்கள் பலவற்றை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றலுடையவர். கல்வெட்டுகளிலும் நல்ல புலமையுடையவர் [1].

    80 அகவை நிறையவிருக்கும் முதுபெரும் தமிழறிஞர் சோ. ந. கந்தசாமியார் அவர்கள் இந்தியக் குடியரசுத்தலைவரிடமிருந்து புகழ்மிக்க தொல்காப்பியர் விருது பெறவிருக்கின்றார் [2]. இவ்விருதோடு 5 இலட்சம் இந்திய உருபாய் பரிசும் உண்டு. தமிழாசானை வணங்கி இக்கிழமையின் வல்லமையாளராக அறிவிவித்துப் பாராட்டுகின்றோம். .

    அடிக்குறிப்புகள்

    [1] தமிழ் விக்கிப்பீடியாவில் பேராசிரியர் சோ.ந. கந்தசாமியார் அவர்களைப்பற்றிய கட்டுரை ( https://ta.wikipedia.org/s/57x ). முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் வலைப்பதிவு -http://muelangovan.blogspot.ca/2008/08/15121936.html
    [2] தமிழறிஞர் சோ. ந. கந்தசாமியார் அவர்களுக்குத் தொல்காப்பியர் விருது அறிவிப்பு. இந்து தமிழ் நாளிதழ் சூன் 8, 2016

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர் 17 வயது நிரம்பிய இளைஞை. அமெரிக்காவில், இல்லினாய் (Illinois) மாநிலத்தில், ஒரு பள்ளி மாணவி. ஐம்பது இலட்சம் உருபாய் ($75,000 அமெரிக்க வெள்ளி) பரிசை வென்றவர்

    இந்தவார வல்லமையாளர் செல்வி. மீனா செகதீசன் (Meena Jagadeesan) என்னும் இளம் மாணவி. இவர் இன்ட்டெல் (Intel) நடத்தும் அறிவியல் திறனாளர் தேடல் போட்டியில் (Intel Science Talent Search) அடிப்படை ஆய்வுப் பிரிவில் இரண்டாவது பரிசை வென்றுள்ளார்.

    Meena_Jagadeesan_Intel

    செல்வி மீனா செகதீசன் 2016 ஆம் ஆண்டு இன்ட்டெல் அறிவியல் திறனாளர் தேடல் போட்டியில்[1]

    2016 ஆண்டில் அமெரிக்காவில் 1750 மேனிலை மாணவர்கள் புகழ்பெற்ற இன்ட்டெல் நிறுவனத்தின் அறிவியல் திறனாளர் தேடல் போட்டியின் பங்குபெற்றனர். அவர்களில் 300 பேர் அரையிறுதி நிலையில் தேர்வானார்கள். இறுதியில் வெறும் 40 பேர் மட்டுமே தேர்வானார்கள். இந்த 40 பேரும் ஒரு மில்லியன் அமெரிக்க வெள்ளி மதிப்புடைய பரிசுகளை வெல்ல வாசிங்கடன் தி.சி-யில் போட்டிப்போட்டனர். தங்களின் புதிய ஆய்வுகளையும் கண்டுபிடிப்புகளையும் காட்சிப்படுத்தினர். அவற்றை மூன்று பிரிவுகளில் தேர்வு செய்தனர். அவையாவன அடிப்படை ஆய்வு (Basic Research), உலக நலம் (Global Good), புதுமையாக்கம் (Innovation). இந்த ஒவ்வொரு பிரிவிலும் முதற்பரிசாகப் பதக்கம் பெறுபவர் $150,000 அமெரிக்க வெள்ளியும், இரண்டாம் பரிசுபெறுபவர் $75,000 அமெரிக்க வெள்ளியும், மூன்றாம் பரிசு பெறுபவர் $35,000 அமெரிக்க வெள்ளியும் பெறுவர். மீதமுள்ள இறுதிநிலையாளர்கள் ஒவ்வொருவரும் $7,500 பெறுவர். இப்போட்டிகள் மிகவும் உயர்தரம் கொண்ட கடுமையான போட்டிகள். 75 ஆண்டுகள் கால வரலாற்றில் இம்முறை முதன்முறையாகப் பெண்கள் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற்றுள்ளனர் [2].

    செல்வி மீனா செகதீசன் அமெரிக்காவில் இல்லினாய் மாநிலத்தில் நேப்பர்வில் என்னும் இடத்தில் வாழ்கின்றார். அங்குள்ள பிலிப்ஃசு எக்சீட்டர் அக்கதெமி (Phillips Exeter Academy) என்னும் கல்வி நிறுவனத்தில் படிக்கின்றார் [3]. இவர் இன்ட்டெல் போட்டியில் தன்னுடைய கணித ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேட்பதற்கு எளிமையாக இருந்தாலும் ஆழமான கருத்தாகிய சார்பியச் சேர்மங்கள் கோவை பற்றிய ஆய்வில் கணக்கிடுவதில் புதிய தொடர்புகளைக் கண்டுபிடித்துள்ளார். இப்புதிய தொடர்புகள் வரைகோல வகைகளுக்கிடையே உள்ளவை. அவருடைய ஆய்வைச் சுட்டும்பொழுது கீழ்க்காணுமாறு இன்ட்டெல் நிறுவனத்தார் குறிக்கின்றனர்: ”Meena Jagadeesan investigated an object in algebraic combinatorics, or the mathematics of counting, to reveal a novel relationship between classes of graphs.”[2].

    கணிதம், அறிவியல், பொறியியல் தொழினுட்பம் போன்ற துறைகளில் பெண்கள் அண்மையில் முன்னேறி வருகின்றார்கள். இன்னும் முன்னேறவேண்டும் என்னும் கருத்துள்ளது. 1901 ஆம் ஆண்டுமுதல் நோபல் பரிசை வென்றவர்களைக் கணக்கிட்டால் 825 ஆண்களும் 47 பெண்களும் வென்றுள்ளார்கள் [4] இவர்களில் இயற்பியல் வேதியியல், மருத்துவத்துக்குப் பரிசுபெற்ற பெண்கள் குறைவே. பொறியியலிலே 1980-களில் 5.8 % பேர்தான் அமெரிக்காவில் பெண்களாக இருந்தார்கள். இப்பொழுது முன்னேறி 18 முதல் 20 % பேர் பெண்களாக இருக்கின்றார்கள் [5]. அமெரிக்காவில் 2014 ஆம் ஆண்டில் 99,173 பேர் பொறியியலிலே இளங்கலைப் பட்டம் பெற்றனர். இவர்களிலே 19.9 % பேர் பெண்கள். பொறியியல் துறையில் பேராசிரியர்களில் பெண்களாக இருப்பவர்கள் பலநிலைகளில் 10.2 % முதல் 22.8% உள்ளனர் [6]. கணிதத்திலும் பிற அறிவியல் துறைகளிலும் பெண்களின் விகிதம் பற்றிக்கீழ்க்காணும் வலைத்தளம் காட்டுகின்றது [7]. இப்படியான சூழலில் செல்வி மீனா செகதீசன் புகழ்பெற்ற இன்ட்டெல் போட்டியில் கணிதத்தில் ஆய்வு செய்து இரண்டாம் பரிசு பெற்றது மிகவும் போற்றுதலுக்குரியது.

    இதுகாறும் முன்னாள் இன்ட்டெல் அறிவியல் திறனாளர் போட்டியில் வென்றவர்களில், 8 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர், இருவர் கணிதத்தின் மிக உயரிய பரிசாகிய பீல்டுசு பதக்கம் (Fields Medal) பெற்றுள்ளனர், ஐந்துபேர் அமெரிக்காவின் மிக உயரிய தேசிய அறிவியற்பதக்கம் (National Medal of Science) பெற்றுள்ளனர், 12 பேர். மெக்கார்தர் சிறப்பாளர் பெருமைகளையும் (MacArthur Fellowships) பெற்றுள்ளனர், 30 பேர் தேசிய அறிவியல் அக்காதெமி உறுப்பினராகவும், ஐவர் தேசிய பொறியியல் அக்காதெமியின் உறுப்பினராகவும் உயர்ந்திருக்கின்றனர் [8].

    இவார வல்லமையாளரான செல்வி மீனா செகதீசன் அவர்களும் வருங்காலத்தில் இன்னும் பல பெருமைகளைப் பெறுவார் என நம்ப இடமிருக்கின்றது.

    இன்ட்டெல் பரிசு பெற்றவர்கள் அனைவரைப்பற்றியும் வலையிடம் [2] இல் காணலாம். அடிப்படை ஆய்வில் முதல்பரிசு பெற்ற அமொல் பஞ்சாபி (Amol Punjabi), மூன்றாம் பரிசு பெற்ற குனால் சுரோஃபு (Kunal Shroff), உலக நலப்பிரிவில் முதல்பரிசுபெற்ற பெய்கி பிரௌன் (Paige Brown), இரண்டாம் பரிசு பெற்ற மைக்கேல் இழ்சாங்கு (Michael Zhang), மூன்றாம் பரிசுபெற்ற நேத்தன் சார்லசு மார்சல் (Nathan Charles Marshall), புதுமையாக்கம் பிரிவில் முதல்பரிசு பெற்ற மாயா வர்மா (Maya Varma), இரண்டாம் பரிசுபெற்ற மிலிந்து சகோட்டா (Milind Jagota), மூன்றாவது பரிசுபெற்ற காவியா இரவிச்சந்திரன் (Kavya Ravichandran) ஆகியோர் அனைவரும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

    செல்வி மீனா செகதீசன் அவர்களை இந்தவார வல்லமையாளராக அறிவித்துப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

    அடிக்குறிப்புகள்:
    [1] இன்ட்டெல் அறிவியல் திறனாளர் தேடல் போட்டி 2016 இல் வெற்றியாளர்கள் அறிவிப்புத்தளத்தில் உள்ள படம். http://www.intel.com/content/www/us/en/education/competitions/science-talent-search/winners.html
    [2] இன்ட்டெல் போட்டித்தளம், http://www.intel.com/content/www/us/en/education/competitions/science-talent-search/winners.html (”Of note, this year for the first time in the event’s 75-year history, female finalists outnumbered male finalists by a small margin (21 girls to 19 guys).”)
    [3] https://www.exeter.edu/news_and_events/news_events_18235.aspx
    [4] http://www.telegraph.co.uk/news/worldnews/11922707/Nobel-Prize-winners-How-many-women-have-won-awards.html
    [5] https://www.asme.org/career-education/articles/undergraduate-students/engineering-still-needs-more-women
    [6] http://www.asee.org/papers-and-publications/publications/14_11-47.pdf
    [7] https://www.maa.org/external_archive/columns/launchings/launchings_09_09.html
    [8] https://en.wikipedia.org/wiki/Intel_Science_Talent_Search

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்த வார வல்லமையாளர் 2 வயதுக் குழந்தைப் பருவத்திலேயே இசையுலகில் அரிய புகழீட்டியவர்.

    இந்தவார வல்லமையாளர் சித்திரவீணை ந. இரவிக்கிரண் (இரவிகிரண்) அவர்கள் தன் 2-ஆவது அகவையிலேயே [1] இசைத்தேர்ச்சியை இசையறிஞர்கள் முன்னே வியப்பூட்டும் விதமாக வழங்கி, அரிய புகழீட்டியவர். இப்பொழுது தனது 49 ஆம் அகவையில் திருக்குறளின் 1330 குறட்பாக்களுக்கும் இசைவாணர்கள் தேனிசை எனப்போற்றும்படியாக கருநாடக இராகங்களில் இசையமைத்துள்ளார். மொத்தம் 169 இராகங்களில் அரிய தாள அமைப்புகளுடன் அமைத்து அரிய செயல் ஆற்றியிருக்கின்றார். நம்புதற்கு அரியதாய் வெறும் 16 மணிநேரத்திலேயே இதனை அமைத்தார் [2][3]

    சித்திரவீணை இரவிக்கிரண் அவர்கள் பிப்பிரவரி 12, 1967 இல் மைசூரில் பிறந்தார். இவர் 1969 இலேயே இசைமேடையில் தன் இசைப்புலமையை வெளிப்படுத்தியவர். தன்னுடைய முதல் இசைக் கச்சேரியை தன் 5-ஆவது வயதில் நடத்தினார். குழந்தைமேதை எனப்புகழப்பட்டவர். இவருடைய குருவும் தந்தையும் சித்திரவீணைக்கைலைஞர் நரசிம்மன் அவர்கள். இரவிக்கிரணின் பாட்டனார் புகழ்பெற்ற கோட்டுவாத்தியக் கலைஞர் நாராயணர் அவர்கள். திரு. இரவிக்கிரணன் அவர்களை”இந்திய இசையின் மோட்ஃசார்ட்டு” என அமெரிக்காவின் விசுக்காசின் செர்னல் அறிவித்தது (“the Mozart of Indian Music” by the Wisconsin State Journal, USA) [4]

    Ravikiran_Performance_at_Age_2

    1969 இல் இரண்டு அகவையில் இசைமேடையில் குழந்தைமேதை இரவிக்கிரண் [5]

    மிக இளமையான பருவத்திலேயே இந்தியக்குடியரசுத்தலைவரிடம் இருந்து சங்கீத நாடக அக்காதெமிப் பரிசைப் பெற்றார் [6]
    Youngest_to_receive_President_of_India_Award

    குடியரசுத்தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களிடம் இருந்து சங்கீத நாடக அக்காதெமி பரிசைக் கலைஞர் இரவிக்கிரண் அவர்கள் பெறுதல் [5].

    கலைஞர் இரவிக்கிரண் மிகப்பல விருதுகளையும் பெருமைகளையும் பெற்றவர். அரிய கோட்டுவாத்தியத்தை வாசித்து தன் பாட்டனார் வழியில் மீண்டும் இவ்விசைக் கருவியை வழக்கில் நிறுவியவராயினும், தானும் புதிய இசைக்கருவிகளையும் இசைவகைகளையும் தோற்றுவித்தவர்.

    கோட்டுவாத்தியம் என்பது வீணைபோலவே தோற்றமளித்தாலும் விரற்கட்டை அல்லது ”மெட்டுகள்” எனப்படும் தடுப்புகள் இல்லா ஓர் இசைக்கருவி. இசை கமகங்களையும் அலைவுகளையும் ஒரு கட்டைபோன்ற உறுப்பால் நரம்புகள்மீது அல்லது கம்பிகளின் மீது அழுத்தித் தேய்த்து, இழைத்து இசையுருவாக்கப்படும். சித்திரவீணை என்னும் அரிய இசைக்கருவி 21 நரம்புகள் கொணடது. தனது 10 ஆவது வயதிலேயே இந்தச் சித்திரவீணையை வாசிக்கும் கலைஞராக மாறினார். 20 நரம்புகள் அல்லது இழைகள் கொண்ட நவச்சித்திரவீணை என்னும் புதிய கருவியையும் கண்டுபிடித்தார். மெல்ஃகார்மனி (“melharmony”) என்னும் புதிய இசைவடிவத்தை உருவாக்கினார். மேற்கத்திய ஒத்திசையெனப்படும் ”harmony” என்னும் வகையோடு சுரங்களால் ஆன இராகம் போன்ற ”மெலடி” என்பதையும் பிணைத்து மெல்ஃகார்மனி என்னும் இசைவடிவத்தை உருவாக்கினார்.

    இவருக்குத் தமிழ்நாட்டின் கலைமாமணி விருதும், மத்தியப்பிரதேசத்தின் குமார் காந்தர்வ சம்மான் விருதும், இந்தியாவின் உயர்விருதாகிய சங்கீத நாடக அக்காதெமி விருதும் வழங்கப்பட்டன. பிறவிருதுகளின் பட்டியலை விக்கிப்பீடியாவில் காணலாம் [1]. சித்தார் கலைஞர் பண்டிதர் இரவிசங்கர் இவரைப் புகழ்ந்து கூறியபொழுது, ”கடவுளை நம்பாவிட்டால் இரவிக்கிரணைப் பாருங்கள்” (“If you don’t believe in God, look at Ravikiran.”) என்றார் [6].
    Chitravina_Ravikiran_with_Sitar_Maestro_Ravi_Shankar

    சித்தார் கலைஞர் பண்டிதர் இரவிசங்கர் அவர்களுடன் சித்திரவீணைக் கலைஞர் இரவிக்கிரண் [7]

    சித்திரவீணை அல்லது கோட்டுவாத்தியத்தின் படங்களை அடிக்குறிப்பு [8] இல் காட்டப்பட்டுள்ள தொடுப்பில் காணலாம். கீழே உள்ள படம் கோட்டுவாத்தியம் போன்ற விசித்திர வீணை என்னும் கருவியாகும்.

    கோட்டுவாத்தியம்

    கோட்டுவாத்தியம் போன்ற விசித்திரவீணை எனப்படும் கருவி [9]

    16 மணிநேரத்தில் 1330 திருக்குறளுக்கும் 169 இராகங்களில் அரிய தாளத்துடன் இசையமைத்துப் பேரினிய செயலாற்றிய கலைஞர் சித்திரவீணை இரவிக்கிரண் அவர்களை இந்தவார வல்லமையாளராகப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

    அடிக்குறிப்புகள்:
    [1] https://en.wikipedia.org/wiki/N._Ravikiran ; தமிழ் விக்கிப்பீடியா ( https://ta.wikipedia.org/s/49q3 )
    [2] https://www.youtube.com/watch?v=FS7T3E6Zzt8
    [3] https://www.youtube.com/channel/UCKXaa7bnupptNV6ZBjlicMw
    [4] http://host.madison.com/news/local/education/local_schools/school-spotlight-mozart-of-indian-music-visits-middleton-cross-plains/article_ccf9e83c-a080-11e2-bb5a-0019bb2963f4.html
    [5] இரவிக்கிரண் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து.
    [6] Page 253 of “Another Garland, Biographies of Carnatic Composers and Musicians” – N Rajagopalan 1992
    [7] Lata Ganapathy’s Facebook wall (விக்கிப்பீடியாவழியாக [1]), ஏப்பிரல் 2011.
    [8] http://instrumundo.blogspot.ca/2012/12/gotuvadyam-chitravina-chitra-veena.html?_sm_au_=iVVkHt1v418sNSsR
    [9] https://en.wikipedia.org/wiki/Gottuvadhyam#/media/File:Ch2.JPG

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    செ. இரா.செல்வக்குமார்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர் பிரேசிலில் இரியோ தி செனரோ (Rio de Janeiro) நகரில் தங்கப்பதக்கம் வென்ற சென்னை மாணவி.

    இந்தவார வல்லமையளர்  உலக அளவில் அரிய செயல்  படைத்த ஒரு வியப்பூட்டும் சிறுமி.  இது இனிய செய்தியேயாயினும், இவருடைய செயலைப் புரிந்துகொள்ள சில கசப்பான உண்மைகளை அறிந்தால்தான் வெற்றியின் பின்புலம் தெரியும்.

     தெருவோரக்குழந்தை-Chennai_gir_278389_2784721g

    பிரேசிலில் தங்கப்பதக்கம் வென்ற எப்சியா ((ஃகெப்சிபா, ஹெப்சிபா, Hepsiba)[6] )

    உலகிலுள்ள 2200 மில்லியன் குழந்தைகளில், 1000 மில்லியன் குழந்தைகள் வறுமையில் வாடுகின்றனர் [1]. வளரும்நாடுகளில் 1900 மில்லியன் குழந்தைகள் இருக்கின்றார்கள். ஆனால் அதில் 640 மில்லியன் குழந்தைகள் தாங்கள் இருக்கச் சரியான இடமில்லாமலும், 400 மில்லியன் குழந்தைகளுக்குச் சரியான குடிநீர் இல்லாமலும் இருக்கின்றார்கள் [1][2].  ஆண்டுதோறும் 10.6 மில்லியன் குழந்தைகள் 5 வயது அடையும் முன்பே இறந்துவிடுகின்றார்கள்.

    இந்தக் குழந்தைவறுமை நிலையை நாடுதோறும் அல்லது  உலகத்தின் பகுதிதோறும் அளவிட  குழந்தைகள் வளர்ச்சிச்சுட்டெண் (கு.வ.சு) (Child Development Index, CDI)  என்று ஓர் அளவீட்டை உருவாக்கி அதைப் பயன்படுத்துகின்றனர் [3].  இவ்வெண் குறைவாக இருந்தால் தேவைப்படும் வளர்ச்சி குறைவு என்று பொருள். அதாவது குழந்தை வறுமைநிலை குறைவு.  இவ்வெண் அதிகம் என்றால் வறுமைநிலை அதிகம்.  வளர்ந்தநாடுகளில் இவ்வெண் 2.1, ஆப்பிரிக்காவில் 34.5, இந்தியத்துணைக்கண்டத்தில் 26.4. கிழக்கு ஆசியா 8.5 , உலகத்தின் சராசரி 17.5. [3]

    வறுமையில் வாடும் குழந்தைகளுக்குப் புதுநம்பிக்கைத் தரவும் அவர்களுக்கு உதவவும் அவர்களுக்கென தெருவோரக்குழந்தைகளுக்கென ஒரு புதிய அனைத்துலக விளையாட்டுப் போட்டிகள் இவ்வாண்டு தென்னமெரிக்காவில் உள்ள பிரேசிலில்  நடைபெற்றது.  இதனை  Street Child Games 2016 என அழைக்கின்றார்கள்[5].  இதில் 9 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் மார்ச்சு 14-20, 2016 ஆகிய நாள்களில் ‘’இரியோ’’ என அழைக்கப்படும் இரியோ தி செனரோ  (Rio de Janeiro) நகரில் கூடி போட்டிப்போட்டார்கள். இங்குதான்  2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்குப்போட்டிகள் (Rio de Janeiro)நடக்கவிருக்கின்றன.

    இப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த அகவை 16 நிரம்பிய எப்சிபா (ஃகெப்சிபா, ஹெப்சிபா, Hepsiba) என்னும் சிறுமி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதுமட்டுமல்லாமல் இன்னும் இரண்டு பதக்கங்கள் வென்றுள்ளார்.  இவருக்குக் கருணாலயா என்னும் அமைப்பு உதவி செய்துள்ளது. இவருடைய வாழிடம் முன்பு’’ நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு அருகே இருந்த சாலையோர நடைமேடை, தற்போது சென்னை மாநகராட்சியின் வீடற்றவர்களுக்கான தங்கும் கூடாரம்’’[6]. இவருக்குச் சரியான இருப்பிட முகவரிகூட இல்லாததால் கடவுச்சீட்டு (Passport) வாங்குவதுகூட சிக்கலுடையதாக இருந்தது, பிரேசிலுக்குப் போகவும் பணம் கிடையாது எனினும் கருணாலயாவின் உதவியோடு பிரேசிலுக்குப் போனதுமட்டுமல்லாமல் அங்கே தங்கப்பதக்கத்தையும் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கத்தையும் வென்று வந்திருக்கின்றார். பதக்கங்களைவிட அவர் தனக்குக் கிடைத்தப் புதுநட்புகளைப் பற்றிப் பெருமையாகக் கூறுகின்றார்.  எப்சிபா இப்பொழுது தனக்கு பாக்கித்தான், எகிப்து, பிரிட்டன், அர்ச்சென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளில் நண்பர்கள் உள்ளார்கள். செல்வி எப்சியா அவர்களின் உணர்வுகளை அவர் கூற்றாகவே:

    ” மொதல்ல எனக்கு பிரேசில் போக வாய்ப்பு கிடைக்குமான்னு சந்தேகமா இருந்துச்சு. அங்க போறதுக்கு பணமும் இல்லை. கருணாலயா அமைப்புக்காரங்கதான் உதவி செய்தாங்க. இப்ப டவுட்டன் கவர்மெண்ட் ஸ்கூல்ல [பள்ளியில்] பிளஸ் 1 படிச்சிட்டு இருக்கேன். பிரேசிலில் தெருவோரக் குழந்தைகளுக்கு போட்டி நடக்குதுன்னு எங்களைக் கூட்டிட்டுப் போறதுக்காக டெஸ்ட் மேட்ச்[சு] [தேர்வுப்போட்டி] நடத்துனாங்க. அதுல நான் முதல் ஆளா வந்தேன். ஸ்கூல்ல [பள்ளியில்] நடக்கற போட்டிகள்ல பரிசு வாங்கியிருக்கேன். ஆனா, சர்வதேச அளவுல கலந்துக்குவோம்னு நினைக்கல. சென்னையில இருக்கும்போது காலை சாப்பாடுகிங்கறதே கிடையாது. அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு பூ விக்கறதால அவங்ககிட்ட எதுவும் கேக்க முடியாது. போட்டிக்குத் தயாராகும்போது முட்டை, சுண்டல்னு நிறைய கொடுத்தாங்க. அதனால நல்லா ஓட முடிஞ்சது. ஜெயிச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொன்னாங்க. எப்பவும் போலத்தான் ஓடினேன். நாலு பதக்கம் வாங்குவேன்னு நினைச்சு கூடப் பார்க்கலை சார்…” என்றார் கண்களில் உற்சாகத்தோடு.” [4]

    முதல் முயற்சியே தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. செல்வி எப்சியாவுக்கு வல்லமையின் நிறைந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும். மேன்மேலும் வெற்றிகள் சமைத்து நல்வாழ்வு பெற்று நலமுடன் வாழவும் நல்வாழ்த்துகள்.

    அடிக்குறிப்புகள்:
    [1]  Shah A (2010). Poverty Facts and Stats. Global Issues [ http://www.globalissues.org/article/26/poverty-facts-and-stats ]  .

    [2] விக்கிப்பீடியா, [https://en.wikipedia.org/wiki/Child_poverty ]

    [3] Save the Children (2008). The Child Development Index: Holding governments to account for children’s wellbeing. Save the Children. London, UK.
    [4] ஆனந்தவிகடன் , முகப்புச் செய்தி, ‘’தங்கம் வென்ற ‘தெருவோரத் தங்கம்’…! -பிரேசிலை அதிர வைத்த சென்னை சிறுமி! ‘’ மார்ச்சு 21, 2016
    [5] http://www.streetchildgames.org/ [அணுகியநாள் மார்ச்சு 27, 2016]
    [6] த இந்து, நாளிதழ் [இ]ரம்யா கண்ணன், ‘’ தெருவோர குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி: பிரேசிலில் முத்திரை பதித்த சென்னை[ச்] சிறுமி’’, மார்ச்சு 22, 2016

    Share
  • அயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம்

    செ.இரா. செல்வக்குமார்.

     

     அயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம்

    வேற்றுமொழிச்சொற்கள் இல்லாமல் எழுதுதல் தனித்தமிழ். ஆனால் அப்படியான தனித்தமிழ் எப்பொழுதும் எங்கும் இருந்ததே கிடையாது, இருக்கவும் முடியாது. ஆனால் எல்லோருக்கும் புரியும்படியாகவும் தமிழ்வேரிலிருந்து கிளைக்கும் நல்ல தமிழ்ச்சொற்களை எடுத்தாண்டு நல்ல இலக்கணத்தைப் பின்பற்றி எழுதலாம் என்பதே குறிக்கோள். தமிழ் மரபுக்கு மீறிவரும்பொழுது ஒலியைத் தோராயமாகக் காட்ட எழுதலாம். கிரந்தம் இல்லாமல் எழுதுவதால் தமிழில் 66+ 13 = 79 எழுத்துகள் குறைவாகப் பயன்படுத்தலாம். எழுத்தைக் குறைப்பது மட்டுமே நோக்கமன்று, வேறுபல சிக்கல்களில் இருந்தும் பிழைக்கலாம். மிஞ்சிப்போனால் ஃக, ஃப, ஃச ஆகிய மூன்று காற்றொலிகளைச் சிறுபான்மையாகப் பயன்படுத்தலாம். இதுவும் கூடவே கூடாது எனச்சொல்வோர் உண்டு. அவர்களின் கூற்றில் நல்லறிவுரையும் உள்ளது. எனவே இயன்ற அளவு இயல்பான தமிழிலேயே எழுதலாம். எளிமையைப் போற்றுவோம் என்பதே குறிக்கோள்.

    எண் அயற்சொல் பொது வழக்கு தமிழ் வழக்கு
    1 Big பிக் பெரிய/பிய்கு [பி’க்’கு’]
    2 Biscuit பிஸ்கேட் பிசுக்கோத்து
    3 Bore போர் (அடிக்கிறது) துளை/ஆழ்துளை/போர்
    4 Bow போ / பவ் வில்/இருகண்ணி முடிச்சு/போவ்
    5 Bra பிரா பிரா/கச்சை
    6 Bread பிரட் பிரெடு
    7 Broadway பிராட்வே பிராடுவே
    8 Chaddi (Hindi word) ஜட்டி சயிட்டி
    9 Charles Darwin சார்லஸ் டார்வின் சார்லசு தார்வின்
    10 Deutschland டாய்ச்லாந்து இடாய்ச்சுலாந்து
    11 Dublin டப்ளின் தபுலின்
    12 Fancy பேன்சி பேன்சி
    13 Germany ஜெர்மனி செருமனி
    14 Great கிரேட் பெரிய/பேரரருமை/கிரேட்டு
    15 Greed கிரீட் பேராசை/கிரீடு
    16 Greet கிரீட் வாழ்த்து/கிரீட்டு
    17 HariKi ஹரிகி அரிகி
    18 Hsuan Tsang யுவான்சுவாங் உவான்சுவாங்கு
    19 Hyundai ஹூண்டாய்/ஹண்டே ஃகூண்டை/குயுண்டை/உயுண்டை/ஃகுயுண்டை
    20 Jam ஜாம் பழக்களி/நெரிதடை/சாம்
    21 Japan ஜப்பான் சப்பான்
    22 Kasthuri கஸ்தூரி கத்தூரி
    23 Kushboo குஷ்பு குட்பு
    24 Laddu லட்டு இலட்டு/உலட்டு
    25 Lakh லட்சம் இலட்சம்
    26 Lead லீடு ஈயம்/முன்செலி/வழிகாட்டி/இலீடு
    27 League லீக் குழு/இலீகு
    28 Leak லீக் கசிவு/இலீக்கு
    29 Load லோடு சுமை/உலோடு
    30 London லண்டன் இலண்டன்
    31 Mississippi மிஸ்ஸிஸிப்பி மிசிசிப்பி
    32 Missouri மிஸ்ஸௌரி மிசௌரி
    33 Pig பிக் பன்றி/பன்னி/பிக்கு
    34 Pour போர் ஊற்று/போர்
    35 Robert Clive ராபர்ட் கிளைவ் இராபர்ட்டு கிளைவ்
    36 Rod ராடு கம்பி/இராடு
    37 Rupa Devi ரூபாதேவி உரூபாதேவி
    38 Rupee ரூபாய் உருபாய்
    39 Russia ரஷ்யா உருசியா
    40 San Francisco ஸான் ஃபிரான்ஸிஸ்கோ சான் பிரான்சிசுக்கோ/சான் பிரான்சிசிக்கோ
    41 Shailaja ஷைலஜா சைலசா
    42 Spa ஸ்பா நலநீர்க்குளி/ இசுப்பா
    43 Stephen Hawking ஸ்டீஃபன் ஹாக்கிங் இசுட்டீபன் ஆக்கிங்கு
    44 Stepney ஸ்டெப்னி வைப்பாழி/தெப்பினி
    45 Store ஸ்டோர் கடை/இசுட்டோர்/சேமி
    46 Story ஸ்டோரி கதை/இசுட்டோரி/அடுக்கு
    47 Street ஸ்டிரீட் தெரு/இசுற்றீட்டு
    48 Sure ஷ்யூர் உறுதி/சுயூர்
    49 Times Now டைம்ஸ் நவ் தைம்சு நவ்
    50 Xuanzang யுவான்சுவாங் சுவான்சுவாங்கு

     

     

     

    Share
  • இந்தவார வல்லமையாளர்!

     

    செ.இரா. செல்வக்குமார்

    சீனிவாசவரதன்

    இந்தக் கிழமையின் வல்லமையாளர் வியப்பூட்டும் ஒரு கணிதவியலாளர்.

    உலகத்திலே பல்லாயிரக்கணக்கான துறைகளும் கலைகளும் உள்ளன. கடந்த 5000-6000 ஆண்டுகளாக மாந்தர்கள் வாழ்வியல் வரலாற்றை ஒருசேர எண்ணிப்பார்த்தால் வியப்பே ஏற்படுகின்றது. என்றாலும், மிகவும் வியப்பூட்டும் வளர்ச்சியானது கடந்த 200-300 ஆண்டுகளில்தான் நிகழ்ந்துள்ளதெனில் அது மிகையாகாது.  அதிலும் குறிப்பாக அறிவியல், கணிதம் ஆகிய அடிப்படைத்துறைகளிலும் அதன் பயன்பாட்டுத்துறைகளாகிய பொறியியல், மருத்துவம் முதலிய துறைகளிலும் கடந்த 70-150 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சிதான் மிகப்பெரியது.  வெறும் 150 ஆண்டுகளுக்கு முன்னால் போனாலே  மாட்டுவண்டிக்காலம்தான்.  மகிழுந்து, தொலைபேசி, வானூர்தி,  தொலைக்காட்சி,  கணினி, இணையம், மரபணுவியல், முதலியவை எதுவும் தோன்றியிருக்கவில்லை அல்லது மிகவும் தொடக்கநிலையிலே இருந்தன.

    இத்தனைக்கும் அடிப்படையான அறிவியல் என்னும் துறையில் உலகத்தில்  பெரிதும் போற்றப்படும்  இந்தியர்கள் ஒருசிலரே. அறிவியலாளர்களில்  இயற்பியல்  நோபல் பரிசு பெற்றவர்களாகிய  உயர்திரு ச.வெ. இராமன் (சர். சி.வி. இராமன்),  உயர்திரு. சுப்பிரமணியன் சந்திரசேகர் (1910 –1995) ஆகியவர்களோடு அண்மையில்  வேதியியல் நோபல் பரிசுபெற்ற  உயர்திரு. வெங்கடராமன் (வெங்கி’’) இராமக்கிருட்டிணன் (பிற. 1952) அவர்களையும் பலரும் அறிந்திருப்பார்கள்.  உயர்திரு. இராமக்கிருட்டிணன் அவர்கள் புகழ்பெற்ற பிரித்தானிய இராயல்  சொசையிட்டி  (Royal Society) என்னும்  வேந்தியக் குமுகத்தின் தலைவராகவும் இருக்கும் பெருமை பெற்றவர்.   ஒப்பரிய கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களைப் பற்றியும் அறிவோம்.

    நோபல் பரிசு போலவே புகழ்பெற்ற  கணிதத்துறைக்கான பரிசு ஏபல் பரிசு (Abel Prize).  இதனை ஆபல் பரிசு என்றும் அழைப்பர். இப்புகழ்மிகுந்த பரிசைப்பற்றி தமிழுலகில் அவ்வளவாகப் பலரும் அறிந்திருப்பதில்லை. இவ்வுயரிய பரிசைப்  பெற்ற தமிழராகிய பேராசிரியர் சாத்தமங்கலம் .அரங்க ஐயங்கார் சீனிவாச வரதன் (சா. அர. சீனிவாச வரதன், S.R. Srinivasa Varadhan)  (பிறப்பு சனவரி 2, 1940) அவர்களை அறிந்துகொள்வோம். இப்பெரும் புகழாளரே  இந்தவார வல்லமையாளர்.

    பேராசிரியர் சா.அர. சீனிவாச வரதன் அவர்களின் தந்தையார்  திரு. அரங்க ஐயங்கார் சென்னைக்கு அருகே ஏறத்தாழ 30 கி.மீ தொலைவில் உள்ள பொன்னேரி என்னும் ஊரில் உள்ள போர்டு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் கற்பிக்கும் பள்ளி ஆசிரியராக இருந்து தலைமை ஆசிரியராக உயர்தவர்.  அங்கே பள்ளியில் படிக்கும்பொழுதே சீனிவாச வரதன் அவர்களுக்குக் கணக்குப்பாடங்களில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. அதற்குக் காரணம் அங்கு இருந்த கணக்கு ஆசிரியரே.  அவர் ஆர்வம் காட்டிய மாணவர்களைத் தன்வீட்டுக்குக் கிழமை இறுதி நாள்களான சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் அழைப்பார்.  ஆர்வத்தைத்தூண்டும் கணக்குகளை விளையாட்டும் போட்டியும் போல மாணவர்களுக்குக் கொடுப்பார். கணக்குப் போடுவது கூட களிப்பூட்டும் ஒன்றாக இருக்கும் என்பதை சீனிவாச வரதன் அவர்கள்  அப்பொழுதே உணர்ந்தார்.  பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சென்னையில் (அப்பொழுது மதராசு)  உள்ள மாநிலக்கல்லூரியில் கணிதவியலில் இளநிலை படிப்பை முடித்தார்.  ஓராண்டிலேயே முதுநிலைப் பட்டமும் 1960  இல் பெற்றுவிட்டு,  தன்  அகவை 20 இல் கொல்கத்தாவில் உள்ள புகழ்மிக்க இந்திய புள்ளியியல் கழகத்தில்  (Indian Statistical Institute)  புள்ளியியலிலே மேற்படிப்பு படிக்கப்போனார். புள்ளியியல் படித்தால்  தொழிலகங்களில் நல்ல வேலை கிடைக்கும் என நம்பியிருந்தார்.  புள்ளியியல்வழி தரக்கட்டுப்பாடு (Statistical quality control)  பற்றிப் படித்தால் நல்லது என நினைத்து 6-8 மாதங்கள் படித்தும்பார்த்து அவருக்கு நிறைவு ஏற்படவில்லை.  அப்பொழுது அங்கே இருந்த வரதராசன் பார்த்தசாரதி,  அரங்காராவ்  ஆகியவர்களுடன் சேர்ந்து  கணிதநோக்கில் நிகழ்தகவு (வாய்ப்பியல்) (probability) என்னும் துறையில் புகுந்தார்.  அப்பொழுதிலிருந்து அவருடைய வியப்பூட்டும் வளர்ச்சி தொடங்குகின்றது.

    கொல்கத்தாவின் இந்தியப் புள்ளியியல் கழகத்தில் (இ.பு.க, ISI) இருந்த புகழ்மிக்க கலயம்புடி இராதாகிருட்டிணராவ் (க. இரா. இராவ் C.R. Rao)  அவர்களின் மாணவராக மாறினார்.   உலகப்புகழ்பெற்ற  ஆந்தரே நிக்கொலாவிச்சு கோல்மொகுரோவ் (Andrey Nikolaevich Kolmogorov ) என்னும் உருசிய ஆய்வாளர்  1962 ஆம் ஆண்டு ஒரு மாதம்  இந்தியப் புள்ளியியல் கழகத்துக்கு வருகை தந்திருந்தார்.  சீனிவாச வரதன் அவர்களின் முனைவர்ப்பட்ட ஆய்வுரையை  1962 இலேயே அவரிடம் கொடுத்து  அவரைத் தேர்வாளராக இருக்கச் செய்தார்கள். அவர் சீனிவாச வரதன் அவர்களுடைய ஆய்வுரையை உருசியாவுக்கு எடுத்துப்போய்  அங்கே மாசுக்கோவில் இருந்து கீழ்க்காணுமாறு  வியந்து மடலில் எழுதினார்  [2]

    ‘’ This is not the work of a student, but of a mature master.’’
    (இது ஒரு மாணவரின் ஆய்வன்று, முதிர்ச்சியடைந்த கலைநிறைஞனுடையது)

    தன்னுடைய 23 ஆவது வயதில்  திரு சீனிவாச வரதன் எழுதி கோல்மொகுரோவ் பாராட்டிய முனைவர்ப்பட்ட ஆய்வுரையின் தலைப்பு

    Convolution Properties of Distributions on Topological Groups
    (இடவியல் குழுக்களில் பகிரமைப்புகளின் புணர்த்தொகை)

    தன் 23-ஆவது அகவையிலேயே அமெரிக்காவில் நியூயார்க்குப் பல்கலைக்கழகத்தின்  புகழார்ந்த கூராந்து கணிதவிய அறிவியல் கழகத்தில் (Courant Institute of Mathematical Sciences)  முதுமுனைவராகச் சேர்ந்தார்.  24 ஆவது வயதில்  தன்னைவிட 7 வயது இளைய வசுந்தரா என்பாரை மணந்தார்.   தன் 32-ஆவது அகவையிலேயே நியூயார்க்குப் பல்கலைக்கழகத்தில் முழுநிலைப் பேராசிரியராக உயர்ந்தார்.  இது அரியதோர் உயர்ச்சி. இவருடைய கணிதவியல் கண்டுபிடிப்புகளைப் பொதுமக்கள் புரிந்துகொள்வது கடினம், ஆனால் அவை மிகவும் அடிப்படையானவை அறிவானவை என உணர்ந்த அறிவுலகம் அவருக்குப் பல பரிசுகளைத் தந்து பெருமைப்படுத்தியுள்ளது.   சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிடமுடியும்.

    அமெரிக்க கணிதக்குமுகமான அமெரிக்க மேத்தமேட்டிக்கல் சொசையிட்டியும் ( American Mathematical Soceity) இலண்டனின் வேந்தியக் குமுகமும் (Royal Society of London) சேர்ந்து வழங்கும் சியார்ச்சு தாவீடு பிர்க்காஃபு பரிசை ( George David Birkhoff Prize) 1994 இல் வென்றார்.

    அமெரிக்க மேத்தமேட்டிக்கல் சொசையிட்டி தரும்  இலிராய் பி. இசுட்டீல் பரிசை ( American Mathematical Soceity’s  Leroy P Steele Prize) 1996 இல் வென்றார்.

    சீனிவாச வரதன் அவர்கள் ஆய்வு செய்த இன்னொரு கணிதக் களமான பெரிய விலகுமைகள் (large deviations) என்பதில் இவர் செய்த ஆழ்ந்த ஆய்வுகளுக்காக 2007  ஆம் ஆண்டில் ஏபல் பரிசு வழங்கினார்கள்.  ஏபல் பரிசுக்குழு எழுதிய பரிசுரையில்  அவருடைய 1966 ஆம் ஆண்டு ஆய்வுக்கட்டுரையைக் குறிப்பிட்டுக் கீழ்க்காணுமாறு எழுதினார்கள் [3]

    In his landmark paper ‘Asymptotic probabilities and differential equations’ in 1966 and his surprising solution of the polaron problem of Euclidean quantum field theory in 1969, Varadhan began to shape a general theory of large deviations that was much more than a quantitative improvement of convergence rates. It addresses a fundamental question: what is the qualitative behaviour of a stochastic system if it deviates from the ergodic behaviour predicted by some law of large numbers or if it arises as a small perturbation of a deterministic system? The key to the answer is a powerful variational principle that describes the unexpected behaviour in terms of a new probabilistic model minimizing a suitable entropy distance to the initial probability measure. In a series of joint papers with Monroe D Donsker exploring the hierarchy of large deviations in the context of Markov processes, Varadhan demonstrated the relevance and the power of this new approach. A striking application is their solution of a conjecture of Mark Kac concerning large time asymptotics of a tubular neighbourhood of the Brownian motion path, the so-called ‘Wiener sausage’. Varadhan’s theory of large deviations provides a unifying and efficient method for clarifying a rich variety of phenomena arising in complex stochastic systems, in fields as diverse as quantum field theory, statistical physics, population dynamics, econometrics and finance, and traffic engineering. It has also greatly expanded our ability to use computers to simulate and analyze the occurrence of rare events. Over the last four decades, the theory of large deviations has become a cornerstone of modern probability, both pure and applied.’’

    இவ்வளவு புகழ்மிக்க ஆய்வுகள் செய்துவரும்பொழுதே  இவர் இருமுறை கூராந்து கணிதவிய அறிவியல் கழகத்தின் இயக்குநராகவும் பணிபுரிந்திருக்கின்றார் (1980-84 , 1992-94).

    அமெரிக்காவிலேயே ஆகப்பெரிய பெருமையாகிய தேசிய அறிவியல் பதக்கத்தைNational Medal of Science) அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பராக்கு ஒபாமா 2010 இல் வழங்கினார்.

    கணிதத்தைத் தவிர இவருக்கு வேறு எதில் ஆர்வம் என்றால் பயணம் செய்வதும் தமிழும் தமிழ் இலக்கியமும் எனக் கூறியுள்ளார். அவர் அமெரிக்கக் கணிதக்குமுகத்துக்கு அளித்த நேர்காணலில் கூறியவற்றை அவர் கூற்றாகவே கேட்கலாம் [2]

    ‘’ I like reading Tamil literature, which I enjoy. Not many people in the world are familiar with Tamil as a language. It is a language which is 2,000 years old, almost as old as Sanskrit. It is perhaps the only language which today is not very different from the way it was 2,000 years ago. So, I can take a book of poetry written 2,000 years ago, and I will still be able to read it. To the extent I can, I do that.’’

    இவருடைய பெருமைமிகு வாழ்க்கையில் பெரும் துன்பகரமான நிகழ்ச்சியும் ஒன்றுள்ளது. இவருக்கு கோபால், அசோக்கு என இரண்டு  மகன்கள். 1969 ஆம் ஆண்டு பிறந்த  மூத்த மகன் கோபால் 2001  ஆண்டு ஆகத்து மாதத்தில் நியூயார்க்கில் கேண்டர் ஃபிட்சுகெரால்டு (Cantor Fitzgerald) என்னும் நிறுவனத்தில் இயக்குநராகச் சேர்ந்தார்.  ஒருமாத காலத்தில் செப்டம்பர் 2001 இல் உலகவணிகக் கோபுரங்களின் மீது வானூர்தி மோதி ஏற்பட்ட கொடுநிகழ்வில் எதிர்பாராது இறந்துபோனார்.

    2008 ஆம் ஆண்டு இந்தியா இவருக்குப் பதும பூசன் விருது வழங்கி பெருமைப்படுத்தியது. அகவை 76 ஆனாலும், இன்றும் ஆழமான ஆய்வுரைகளை எழுதிவெளியிடுகின்றார் [4].

    பேராசிரியர் சீனிவாச வரதன் தன் நண்பர்களால் ‘’ரகு’’ என அழைக்கப்படுகின்றார். அவருடைய நியூயார்க்குப் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கத்தில் அவருடைய அண்மைய ஆய்வுக்கட்டுரைகளின் குறிப்புகள் உள்ளன. [4]
    இவ்வார வல்லமையாளரான ஏபல் பரிசாளர்   பதுமபூசன், அமெரிக்கத்தேசிய அறிவியல் பதக்கம் வென்ற பேராசிரியர் சீனிவாச வரதன் அவர்களைப் பாராட்டி மகிழ்கின்றோம்.

    [1] பல குறிப்புகள் இதிலிருந்து பெற்றவை: http://www-groups.dcs.st-and.ac.uk/history/Biographies/Varadhan.html
    [2] M Raussen and C Skau, Interview with Srinivasa Varadhan, Notices Amer. Math. Soc. 55 (2) (2008), 238-246.
    {3] The Abel Prize 2007.
    {4] http://math.nyu.edu/people/profiles/VARADHAN_SRS.html
    [5] படம் பெற்ற இடம் http://www.paulcarlislekettler.net/s-r-srinivasa-varadhan-awarded-national-medal-of-science/varadhan/

    Share
  • வல்லமையாளர் விருது பொறுப்பேற்கும் செ.இரா. செல்வக்குமார்

    பவள சங்கரி

    அன்பினிய நண்பர்களுக்கு,

    வணக்கம். கடந்த 200 வாரங்களாக வல்லமையாளர் தேர்வை மிகச் சிறந்த முறையில் நடத்தியுள்ள நம் வல்லமை ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு.திவாகர், வல்லமை ஆசிரியர் குழு உறுப்பினர் முனைவர் தேமொழி அவர்களையும் மனமார வாழ்த்தி, அடுத்து உயர்திரு செ.இரா. செல்வக்குமார் அவர்களை இப்பொறுப்பை ஏற்று நடத்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். மேலும் இப்பணியில் உதவிய திரு. இன்னம்பூரான்,  பேராசிரியர் நாகராசன் அவர்களையும் பாராட்டி மகிழ்கிறோம். இதுவரை 200 வல்லமையாளர்களை நாம் பாராட்டி மகிழ்ந்திருக்கிறோம். மேலும் பல வல்லமையாளர்களை திருமிகு செ.இரா. செல்வக்குமார் அவர்கள் தெரிவு செய்ய உள்ளார்கள் என்பதையும்  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    crசெ.இரா. செல்வக்குமார் கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்திலே மின்னிய, கணினியியப் பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். அவருடைய ஆய்வும் கற்பித்தலும் குறைக்கடத்தி நுண்கருவிகள் (Semiconductor micro-nano eleactronic devices) துறையைச் சார்ந்தது. அவர் கிண்டி பொறியியற்கல்லூரியில் இளநிலை பொறியியற்பட்டமும் இந்தியத்தொழினுட்பக்கழகம் (ஐ.ஐ.டி), மும்பையில் முதுநிலைப்பட்டமும், சென்னை இந்தியத்தொழினுட்பக்கழகத்தில் (ஐ.ஐ.டி)  முனைவர்ப்பட்டமும் பெற்றவர். பின்னர்  வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் முதலில் முதுமுனைவராகவும் பின்னர் பேராசிரியராகவும் ஆனார். 1992 இல் கலிபோர்னியாவிலுள்ள இசுட்டான்போர்டு (Stanford) பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும், (Visiting faculty),  பின்னர் 2003 இல் பிரின்சிட்டன் (Princeton) பல்கலைக்கழகத்தில் வருகைதரு சிறப்பாளராகவும் (Visiting Fellow) பணியாற்றியிருக்கின்றார். வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் 9 ஆண்டுகள் (1996-2005) வாட்டுமேட்டு (WATMAT) என்னும்  பொருளறிவியல், பொறியியல் நடுவத்தின்  இயக்குநராக இருந்தார். ஐ.இ.இ.இ (IEEE)  என்னும் அனைத்துலகப் பொறியியல் நிறுவனம் நடத்தும்  ‘’IEEE Bipolar/BiCMOS Circuits and Technology Meeting.’’ என்னும் கருத்தரங்கத்தின் தலைவராக 1994 இல் இருந்தார்.  ஐ.இ.இ.இ ஆய்விதழ் ஒன்றுக்குச் சிறப்பாசிரியராகவும்  இருந்தார். வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் மேலவை (Senate) உறுப்பினராகவும், பல்கலைக்கழக ஆளுநர் குழுவின் (Board of governors) உறுப்பினராகவும் 3 ஆண்டுகள் (2006-2009) பணியாற்றியிருக்கின்றார். 1992 முதல்  American Men and Women of Science என்னும் தொகைநூலில் குறிக்கப்பெற்றுள்ளார்.

    crs

    இவர் கடந்த 25 ஆண்டுகளாக இணையத்தில் தமிழில் எழுதிவருகின்றார். Alt.culture.tamil,  soc.culture.tamil, tamil.net போன்ற மடலாடற்குழுமங்களின் நிறைய எழுதியிருக்கின்றார். அதன் பின் இப்பொழுது முகநூலிலும், அவர் நடத்தும் தமிழ்மன்றம் என்னும் கூகுள் மடலாடற்குழுமத்திலும் தொடர்ந்து எழுதிவருகின்றார். இவர் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 820 கட்டுரைகளைத்தொடங்கி எழுதியும் 20,000 உக்கும் கூடுதலான தொகுப்புகள் செய்தும் ஆக்கம் அளித்திருக்கின்றார். பள்ளிநாள்களிலிருந்தே தமிழ்ப்பற்றுடன் தமிழ்வளர்ச்சி சார்ந்தவற்றில் பங்காற்றி வருகின்றார். முகநூலில் அதிகமான தமிழ் மொழிபெயர்ப்புகள் செய்தவர் இவரே.   மாதத்துக்கு 80 மில்லியன் பேருக்கும் மேலானோர் வருகைதரும் கோரா (Quora) என்னும் தளத்தின் முன்னணி எழுத்தாளர்களில்  (Top Writers) ஒருவராக 2016 இல் அறிவிக்கப்பெற்றுள்ளார்.  அங்கு  அவர் எழுதியவையும் பெரும்பாலும் தமிழ்சார்ந்தவையே.

    cr2

    மேலும் ஓவியம் வரைதல், களிமண் சிலைவடித்தல், பாப்புனைதல், பாறையேற்றம், மொழியியல் ஆர்வம் போன்ற பல்கலைகளிலும் வித்தகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அவரைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய வலைப்பக்கங்கள்:

    https://ece.uwaterloo.ca/~selvakum/biop.html

    https://uwaterloo.ca/electrical-computer-engineering/people-profiles/chettypalayam-selva-selvakumar

     விக்கிப்பீடியா பயனர் பக்கம்:  https://ta.wikipedia.org/s/1lo
    முகநூல் பக்கம் :  https://www.facebook.com/c.r.selvakumar

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com , vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில்  தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம்.  மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    _______________________________________________________

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செப்டெம்பர் 22, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார் அவர்கள்

     

    selvakumar2

     

    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பாடங்களை விரைவில் தமிழ் விக்கிபீடியா வழியாக தமிழர்கள் யாவரும் பெற்று பயன்பெறும் வகையில் இடம்பெற முயன்று வருகிறார்  கனடாவைச் சேர்ந்த பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார் (C.R.Selvakumar) அவர்கள். சென்ற புதனன்று (செப்டெம்பர் 17, 2014) சென்னையில் நடந்த, பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சார்ந்த அறிஞர்கள் பலர் பங்கு பெற்ற பயிலரங்கில்  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விக்கிபீடியா என்பது கலைக்களஞ்சியம் மட்டுமல்ல, தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான தொழில்நுட்பம்.  அதனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது என்று கூறி இத்திட்டத்தின் இன்றியமையாமையை வலியுறுத்தியுள்ளார்.  கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகளுள் ஒருவராக அயராது செயலாற்றித்  தமிழை இணைய உலகத்திற்கு கொண்டுவரும் நோக்கத்தில் இப்பணியைச் செய்து வரும் பேராசிரியர் செல்வக்குமார் அவர்கள் இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்.

    வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டே அலுவலகப் பணிகளைச் செய்யலாம்,  இருந்த இடத்தில் இருந்து கொண்டே அயல்நாட்டிலும் வேலை பார்க்கலாம் என்ற வசதி சென்ற நூற்றாண்டின் முற்பகுதிகளில் அறிவியல் கதைகளில் மட்டும்தான் கற்பனையில் எழுத முடிந்திருக்கும். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக மிகவும் குறுகிவிட்ட இன்றைய உலக அரங்கு, இந்த நூற்றாண்டில் மொழிகளின் வளர்ச்சிக்கு மற்றொரு சவாலை வைத்திருக்கிறது.   உலகப் பொதுமொழியாகப் பல்கிப் பரவிவிட்ட ஆங்கிலம் இணையத்தில் செயலாற்றுவதற்கு இன்றியமையாத மொழியாக மாறிய நிலையினால் இக்கால இளைஞர்கள்,  நடப்புலகின் நிலையை அனுசரித்து ஆங்கிலவழியில் செல்லும் நிர்பந்தத்தில் உள்ளனர்.

    தேவையானால் ஆங்கிலம் பயன்படுத்திவந்த சென்ற தலைமுறையினர் போல அல்லாது, சமூகவலைத்தளம் மூலம் உலக நட்புகளுடன் உறவாடுவதில்  குறுக்கிடும் மொழி என்ற தடையைக் களைய  வேண்டிய இன்றியமையாத்  தேவையினால் இளைய சமுதாயத்தினரின் வாழ்வில் ஆங்கிலம் பின்னிப்பிணைந்துள்ள காலமிது.   இத்தகையப் போட்டியில் பல உலக மொழிகளும்  வளரும் களம் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் மாறிவிட்டிருக்கிறது.

    இந்தச் சூழ்நிலையில், உலக  மொழிகள் யாவும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு   ஈடுகொடுத்து தகவல்களை மொழியாக்கம் செய்து வழங்கவும்; இதுவரைப் பயன்பாட்டில் இருந்து வந்த மொழித் தரவுகளை எண்ணிம வடிவில் மாற்றி உடனே தேடி அடையும் வண்ணம் சேமித்து வைத்து வழங்க வேண்டிய நெருக்கடியான நிலையை… அதையும் குறுகிய காலத்தில் தங்கள் மொழி மக்களுக்கு வழங்க வேண்டியக் கட்டாயத்தில் உள்ளனர்.  முன்னேற்றத்தை நோக்கி மாறிக்கொண்டே வரும் தொழில் நுட்பக்கருவிகளைக்   கையாளும் தொழில் வல்லுனர்கள்  தமிழுக்குக் கிடைத்திருப்பதும், அவர்கள் இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு  தமிழ் வளர்ச்சிக்குப்  பணி செய்வதும் பாராட்டப்பட வேண்டிய செயல்கள்.  கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் மொழியைக் கணிம உலகின் எண்ணிம வடிவங்களில் முன்னெடுத்துச் செல்ல முயலும் நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளின் ஆக்கப்பூர்வமான செயல்களும், தனிமனிதர்களின் தன்னார்வ முயற்சிகளும்  அளவிலடங்காது.  அத்தகையப் பணியில்  தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்  பேராசிரியர் செல்வக்குமார் அவர்கள்.

    தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து படித்து,  இப்பொழுது கனடா நாட்டின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பேராசிரியராகப் பணிபுரியும்  செல்வக்குமார்  மின் மற்றும் கணினி இயல் துறையில் வல்லுநர்.  குறைகடத்திகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.  அத்துடன் நிறுத்திவிடாமல் தமிழ் விக்கிப்பீடியாவில் இதுவரை 800க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியும், இருபதாயிரம் தொகுப்புளும் செய்திருக்கிறார். தமிழகராதியான  தமிழ் விக்சனரியிலும் பல்லாயிரக்கணக்கான சொற்கள் சேர பல வழிகளிலும் உதவி உள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவில் அதிகம் பங்களித்த முதல் ஐவர் வரிசையிலும் இடம் பிடித்து இருக்கிறார். தமிழில் கலைச்சொற்கள் ஆக்குவதிலும் அறிவியல் பயன்முக அறிவியல் படைப்புகள் செய்வதிலும் ஆர்வம் மிகக் கொண்டவர் இவர்.

     

    selvakumar3“தமிழ் விக்கிப்பீடியா என்பது உலகளாவிய தமிழர்கள் சேர்ந்து அவரவர்களுக்கு கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து தமிழில் எல்லா வகையான செய்திகளையும் கருத்துகளையும் மிகவும் சுருக்கமாகவோ, விரிவாகவோ எழுதி வளர்க்கக்கூடிய ஓர் அருமையான தொழில்நுட்பத்திட்டம், அறிவுத்தொகுப்பாக்கம். விக்கி என்பது முதலில் ஒரு தொழில்நுட்பம் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். கூட்டாகப் பலரும் ஒருங்கிணைந்து கூட்டாக்கம் செய்யச் சிறந்த ஒரு நுட்பம். “

    ….

    “அனைவரும் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தினாலும், பலர் தாங்களும் பங்கேற்று தரவுகள் வழங்கலாம் என்பதை உணர்வதில்லை.  உணர்ந்தவர்களும் அவ்வாறு பங்களிப்பதால் தங்களுக்கு என்ன பயன் என்று எண்ணுகிறார்கள்.  குழுவாகப் பணிபுரிவதும், ஒருவருக்கொருவர் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு உறவாடுவதும், புதிய தொழில் நுட்பத்தைத் தெரிந்து கொள்வதும், மேலும் பல அறிந்துகொள்வதும் பலனாகக் கிடைக்கிறதே, அது சிறந்த பயனல்லவா?” என்று கேள்வி எழுப்புகிறார் செல்வக்குமார்.

    தமிழ்க் கணிமை வரலாற்றில் திசுக்கி (TSCII) உருவாக்கத்தில் பங்கு கொண்டதுடன், தொடர்ந்து ஒருங்குறி நிறுவனத்தில் உறுப்பினராக இருந்து கணித்தமிழுக்கு அரிய பணிகள் ஆற்றிவருகின்றார். பல புகழ்பெற்ற பேராசிரியர்களும் தமிழ் ஆர்வலர்களும் பங்கு கொள்ளும் “தமிழ்மன்றம்” என்னும் கூகுள் குழுமம் ஒன்றை நடத்தி வருகின்றார். மின்னூலாக்கம் வகையிலும் முன்னோடியாக, மதுரைத்திட்டத்திற்கும் முன்னரே நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை முதன்முதலாக மின்வடிவில் வெளியிடும் பணியில் அக்குழுவில் ஒருவராகப் பங்களித்துள்ளார். ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை தமிழில் வெளியிடும் வகையிலும் பெரும்பங்கு அளித்துள்ளார்.

    மலேசியா வாழ் தமிழர்,  திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன் அவர்கள் “தமிழ்க்கணிமைத் துறையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்களில்  ஒருவர் மதிப்புமிகு பேராசிரியர் செ.இரா.செல்வக்குமார். தமிழ் விக்கிப்பீடியாவைச் செழிக்கச் செய்த – செழுமை செய்துகொண்டிருக்கும் முன்னோடிகளில் இவருக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு. தமிழ்க்கூறு நல்லுலகம் காலத்திற்கும் நன்றியோடு நினைத்துப்பார்க்க வேண்டிய அளவுக்கு மிகப்பெரும் பங்களிப்பைத் தமிழுக்கு வழங்கியிருக்கும் கொடையாளர் இவர் எனில் மிகையன்று,” என்று இவரது தமிழ்க்கணிமைத் துறை பங்களிப்பைப் பாராட்டுகிறார்.

    தன்னார்வப் பணியாக தமிழ்க்கணிமைத் துறையில் பங்களிப்பைச்  செய்து வரும் இவருடைய முயற்சிக்காக பேராசிரியர் செ.இரா.செல்வக்குமார் அவர்களை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

     

     

     

     

    தொடர்புத் தகவல்:
    C.R. Selva (Selvakumar)
    Faculty of Engineering, E&CE Department
    University of Waterloo
    200 University Avenue West
    Waterloo, Ontario, Canada N2L 3G1

    Email:- selvakumar@uwaterloo.ca
    Phone:- (519) 888-4567 ext.3978
    Linkedin :- http://ca.linkedin.com/pub/c-r-selvakumar/1b/a54/15
    Google + :- https://plus.google.com/111751091024415944844/
    தமிழ் விக்கிப்பீடியாவில் செல்வா: http://ta.wikipedia.org/s/1lo

    வலைப்பக்கங்கள்:
    https://ece.uwaterloo.ca/~selvakum/
    https://ece.uwaterloo.ca/~selvakum/biop.html
    https://uwaterloo.ca/electrical-computer-engineering/people-profiles/chettypalayam-selva-selvakumar

    வலைபதிவுகள்:
    தமிழ் விக்கிப்பீடியா குறித்த வலைப்பதிவு: http://tamilwikipedia.blogspot.com/
    தமிழ்வெளி: http://tamilveli.blogspot.com/

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     
    Share