Blog

  • திருமால் திருப்புகழ் (86)

    கிரேசி மோகன்

    Krishna for today. Venugopal. Watercolour.  Keshav
    Krishna for today. Venugopal. Watercolour.
    Keshav

    கண்ணன் திருப்புகழ்….
    ——————————————
    ’’கண்ணன் அந்தாதி’’(வெண்பா)….
    ———————————————————-

    Krishna for today Goverdhana series. Watercolour.  Keshav
    Krishna for today Goverdhana series. Watercolour.
    Keshav

     

    புதிரவன் போக்கு புலனவன் தாக்கு
    மதிரதம் மாயையில் மூழ்கக் -கதிரவன்
    போல்தோன்றிக் காரிருள் தோல்சீவிக் காத்திடும்
    மால்வண்ணம் யாமறியோ மே….(36)

    மேய்ப்போன் அவனிருக்க மந்தை மனமேனோ
    போய்ப்போய்ப் புலனைந்தைப் பேணுகின்றாய் -தாய்போல
    சக்திக்(கு) உகந்து சகலர்க்கும் ஊட்டிடுவான்
    பக்திகர்ம ஞானவழிப் பேறு….(37)

    பேரைப் புகழைப் பலனை எதிர்பார்த்து
    நூறைக் கடந்தும்நீ நோகின்றாய் -பாரோர்
    பரிகசிக்கக் காட்டில் பிணமாகும் முன்பே
    அரிபசிக்(கு) ஆளாகி ஆடு….(38)

    ஆடு நனைய அழுத நரியாக
    வாடுவாய் நெஞ்சே வழியடைத்து -நாடகம்
    சோகமயம் ஆகும்முன் மேகநிற தேகனை
    ஆக விடாதிங்(கு) அழை….(39)

    அழைக்கும் குரலைக்கேட்(டு) ஆடா(து) அசங்காது
    உழைக்கவரு வானவன் ஓடி -மழைக்குக்
    குடையாய் மலையேந்தி கோகுலம் காத்த
    இடையன் இணைப்பில் இரு….(40)

    ———————————————————————————————————————

    Share
  • Demise of Mr N Ramakrishnan

    Dear TLCS Members, Friends and Well Wishers,

    1. We wish to inform that Mr N Ramakrishnan, a life member of the Tamil Language and Cultural Society passed away peacefully on Thursday 15 May 2014 at about 6.30pm.

    2. MrRamakrishnan was working full time with Little India Shopkeepers & Heritage Association?s Secretariat (LISHA) and was closely associated with the Indian Restaurant Association, Singapore (IRAS).

    3. His wake will be held at Blk 148, Tampines Ave 5, #06-268, Singapore 521148 on Saturday, 17 May 2014 from 5 pm onwards.

    4. The cortege will leave his home on Sunday 18 May 2014 at 4 pm. It will proceed first to Little India Arcade and thereafter to Hall 2, Mandai Crematorium. Cremation will be at 6 pm.

    5. On behalf of the Tamil Language and Cultural Society and its members,
    I wish to express our sympathy and heartfelt condolences to the family of the late Mr N Ramakrishnan.

    6. May his soul rest in peace.

    With deepest regards,

    M Harikrishnan
    President
    Tamil Language and Cultural Society

    Share
  • மழை

    இசைக்கவி இரமணன்

    animation
    சிலநேரம் மழைவலுக்கும்
    சிலநேரம் கவிபொழியும்
    சிலநேரம் வலுவிழக்கும்
    சிலநேரம் களையிழக்கும்

    செப்பாமல் வருவதில்லை
    என்றாலும், ஆச்சரியம்
    தப்பாமல் பெய்வதில்லை
    தமிழ்போலத் தான்மழையும்!

    செல்லுங்கால் செப்பாமல்
    செல்கிறதே! விதியிலே
    நின்றேங்க வைக்கிறதே!
    நீளவிழி வழிகிறதே!

    வெட்டவெளியை ஒரு
    வேல்கடைந்து போட்டதுபோல்
    திரள்திரளாய்க் கருமேகம்
    வையத்தைச் சூழ்ந்துகொள்ளும்
    விழியிமைக்காதுற்று நிற்கும்
    தாங்கவொண்ணா அமைதியிலே
    தாரணி ஸ்தம்பிக்கும்
    தேவலோக மேகத்தைத்
    தென்னைமரப் பறவையொன்று
    சாவகாசமாய்ப் பார்த்தபடி
    சாம்பலற்ற வெண்சிறகால்
    சற்றே கிசுகிசுத்துச்
    சடுதியில் மறையுங்கால்
    மூடிவைத்த சங்கீதம்
    மொத்தமும் கவிழ்ந்துகொள்ளும்

    ஆயிரம்பல்லாயிரம்
    ஆனந்தப் பதங்கள்
    அத்தனையும் ஒவ்வொன்றாய்
    ஆச்சரியக் குறிகளாய்
    மண்தொட்டுச் சற்றே
    விண்ணெழுந்து மண்கலந்து
    விதியென்னும் மடைமாறி
    விரைந்து செல்லும்..

    கவிதையோ
    மண்ணிருந்து விண்சென்று
    மண்ணுக்கே திரும்பிவரும்

    சித்தக் கடலையாரோ
    சிலுப்பியது மூண்டெழும்
    சிறுபுத்தி தூளாகும்
    சிறுமனம் அல்லாடும்
    மொத்த உடலுமொரு
    மூர்க்கப்பேய் வசமாகும்
    விவரிக்க முடியாத
    வினோதத் தருணத்தில்
    உயிரைப் பலியாக்கி
    உலகின்பால் சென்றுவிழும்
    உதிர்ந்த உயிர் மீண்டும்
    உடலுக்குள் சென்று நெகிழ்ந்து
    அடுத்து பலியாக
    அண்ணாந்து காத்திருக்கும்

    மழையும் கவிதையும்
    மகாசக்தி அருட்கொடை
    மழையிலே மண்மகிழும்
    கவியிலே விண் நெகிழும்
    இரண்டுமே மானிடத்தில்
    இறைமையைக் காட்டிநிற்கும்

    மழைவந்து சென்றது

    கவிமுத்தம் பெறவேண்டி
    மனம் திறந்து கிடக்கிறது….

    02.06.2013/ஞாயிறு/21.00

    படத்திற்கு நன்றி:

    http://www.todanceintherain.com/about-the-author/

    Share
  • ஐந்தாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    முனைவர் அண்ணாகண்ணன்
    5_five

    சிந்தனை, செயல், முன்னேற்றம் என்ற மையக் கருவுடன், 2010 மே 16 அன்று தன் முதல் இடுகையை வல்லமை வெளியிட்டது. 4 ஆண்டுகளை நிறைவு செய்து, 2014 மே 16 அன்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த 4 ஆண்டுகளில் வல்லமை ஒட்டுமொத்தமாக 5726 படைப்புகளை வெளியிட்டுள்ளது. இவற்றுக்கு 8204 பின்னூட்டங்கள் கிடைத்துள்ளன. பல நாடுகளிலிருந்து பல்லாயிரம் வாசகர்கள், இலட்சத்துக்கும் மேலான முறைகள், வல்லமையின் பக்கங்களை வாசித்துள்ளார்கள்.

    2013 மே 16 முதல் 2014 மே 15 வரையிலான இந்த ஓராண்டில் வல்லமை, முக்கியத்துவம் வாய்ந்த பல முத்திரைகளைப் பதித்துள்ளது. அவற்றுள் சிலவற்றை இங்கே காண்போம்.

    வல்லமையின் தொடர்கள்

    இந்த ஒரே ஆண்டில் வல்லமை, 30க்கும் மேற்பட்ட தொடர்களை வெளியிட்டுள்ளது.

    திரைப்படங்களின் மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை எழுத்தாளரும் நடிகருமான கிரேசி மோகன், வெண்பாவிலும் சந்தப் பாடல்களிலும் தமக்குள்ள தனித் திறனை வல்லமையில் வெளிப்படுத்தியுள்ளார். திருமால் திருப்புகழ் என்ற தலைப்பில் அவர் தினந்தோறும் இயற்றி வரும் துடிப்பான, வீச்சு மிகுந்த பாடல்கள், வாசகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

    பேராசிரியர் பெஞ்சமின் லெபோ எழுதிய சைவ சமயம் அறிவியல் மையம், ராமஸ்வாமி ஸம்பத் எழுதிய உத்தமன் அலெக்சாண்டர்!.., ராமன் வரும் வரை காத்திரு, தேமொழியின் பிக்கோலிம் புளுகு, மலர் சபாவின் நான் அறிந்த சிலம்பு, புவனேஷ்வரின் மகாபாரத முத்துகள், இவள் பாரதியின் சிறுகை அளாவிய கூழ், நாகேஸ்வரி அண்ணாமலையின் கென்யா பயணம், இஸ்ரேல் பயணம், சு.கோதண்டராமன் எழுதி வரும் பாரதியின் வேத முகம், ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ! உள்ளிட்ட தொடர்கள், நல்ல வரவேற்பைப் பெற்றன.

    சி.ஜெயபாரதனின் அணுவியல் – அறிவியல் கட்டுரைகள், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள், காதல் நாற்பது, பவளசங்கரியின் வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! , சுபாஷிணி ட்ரெம்மலின் அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!, இன்னம்பூரானின் கனம் கோர்ட்டார் அவர்களே, சாகர் பொன்னியின் செல்வனின் அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை, சங்கர் ராமனின் நம்பிக்கை.. அதானே எல்லாம்!, செல்வனின் நாகரிக மனிதனின் உணவுகளும், காட்டுமிராண்டி வாழ்க்கைமுறையும்! கவியரசு கண்ணதாசன் குறித்த காவிரி மைந்தனின் தொடரும் சக்திதாசனின் இங்கிலாந்திலிருந்து ஒரு மடல், சச்சிதானந்தம் எழுதும் அறுமுகநூறு, பரம்பொருள் பாமாலை, கே.எஸ்.சுதாகரின் அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும், செண்பக ஜெகதீசனின் குறளின் கதிர்கள், மேகலா இராமமூர்த்தி எழுதிய புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள், விசாலம் அவர்களின் இசையும் கோயிலும் உள்ளிட்ட தொடர்கள் மிகுந்த தரமும் நேர்த்தியும் கொண்டவையாய் அமைந்தன.

    மின்னூல்கள் பகுதியில் தேமொழியின் முயற்சியில், குன்றக்குடி அடிகளாரின் வாழ்க்கை நலம் என்ற 60 பகுதிகள் கொண்ட நூல், முழுமையாக இடம் பெற்றுள்ளது.

    போட்டிகள்

    இந்த ஓராண்டில் வல்லமை 4 போட்டிகளை நடத்தியுள்ளது.

    வல்லமை – ஐக்கியா டிரஸ்டு சிறுகதைப் போட்டி

    ஐக்கியா டிரஸ்டுடன் இணைந்து வல்லமை நடத்திய சிறுகதைப் போட்டியின் மே, ஜூன் மாதங்களிலும் தொடர, வெங்கட் சாமிநாதன் மாதந்தோறும் தேர்ந்தெடுத்த சிறுகதைகளிலிருந்து சிறந்த மூன்று சிறுகதைகளை நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்து அளித்தார். இதன் முடிவுகள் ஆகஸ்டில் வெளியாகின. முன்னர் அறிவித்தவாறு, வல்லமைச் சிறுகதைகள் என்ற தலைப்பில் இவற்றைத் தாரிணிப் பதிப்பகம் நூலாக வெளியிட்டது. இந்தப் போட்டியை எம்முடன் இணைந்து நடத்திய வையவன் அவர்களுக்கு நன்றி.


    புத்தக மதிப்புரைப் போட்டி

    தமிழில் புத்தக மதிப்புரைகளுக்கான போட்டி என்பது அரிதானது. அந்த வகையில் இந்தப் போட்டியை 11.10.2013 அன்று வல்லமையில் நாம் அறிவித்த போது, இதற்கு முன் இத்தகைய போட்டி நடந்ததில்லை என்ற எண்ணத்தில் இருந்தோம். ஆனால், அந்தரவெளிகள் குழுமத்திலும் (18.08.2010) முகநூலில் இயங்கும் டீக்கடைக் குழுமத்திலும் (02.02.2014) புத்தக மதிப்புரைக்கான சிறு முயற்சிகள் நடந்துள்ளன. இவையல்லாமல், தமிழின் எந்த நூலுக்கும் விமர்சனம் எழுதலாம் என்ற கூடுதல் சுதந்திரத்துடன், விரிந்த தளத்தில் பொதுவான புத்தக மதிப்புரைப் போட்டியை நடத்தியதில் வல்லமை முன்னோடியாக விளங்குகிறது. இந்தப் போட்டியை வல்லமையுடன் இணைந்து நடத்துவதில் உறுதியாக இருந்த கவிதாயினி மதுமிதா அவர்களுக்கும் சிறந்த மதிப்புரைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த மூத்த விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

    அறிவியல் தமிழ்ப் பேச்சுப் போட்டி

    வல்லமை வளர்தமிழ் மையமும் – மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து முதல் இணையவழி சர்வதேச அறிவியல் தமிழ்ப் பேச்சுப் போட்டியை (First International Peer Reviewed Scientific Tamil Oration Competition For School Students) நடத்தின; கோவை, மேட்டுப்பாளையம் அருகில் அன்னூரில் அமைந்துள்ள கே.ஜி. சர்வதேசப் பள்ளி மாணவர்கள் 5 பேரின் அறிவியல் தமிழ்ச் சொற்பொழிவை ஒளிப்பதிந்து, யூடியூபில் ஏற்றினோம். 100 நாள்கள் அவற்றைப் பார்த்து மதிப்பிட அவகாசம் அளித்தோம். வல்லமைக் குழுவினர் அவற்றை மதிப்பிட்டு, நான் விரும்பும் வடிவியல் கருவி என்ற தலைப்பில் உரையாற்றிய சுமதியை முதல் பரிசுக்கு உரியவராகத் தேர்ந்தெடுத்தோம். இந்தத் திட்டத்தை அறிவித்த மருத்துவர் செம்மல் அவர்களுக்கும் கே.ஜி.சர்வதேசப் பள்ளி நிர்வாகி மகேஷ் துளசி அவர்களுக்கும் நம் நன்றிகள்.

    Vallamai_oratory_competitio

    கடித இலக்கியப் போட்டி

    அன்புள்ள மணிமொழிக்கு என்ற தலைப்பில், முனைவர் தேமொழி அறிவித்த கடித இலக்கியப் போட்டி, பெரும் வரவேற்பைப் பெற்றது. 2013ஆம் ஆண்டு மறைந்த அவர்தம் சகோதரி மணிமொழியின் நினைவாக நடத்தப் பெற்ற இந்தப் போட்டியில் 60க்கும் மேலான கடிதங்கள் வந்து சேர்ந்தன. பல புதிய கோணங்களில், நெகிழ்வூட்டும் தருணங்களுடன் இக்கடிதங்கள் அமைந்தன. முதலில் மூன்று பரிசுகள் என அறிவித்தோம். அடுத்து, கூடுதலாக மூன்று ஆறுதல் பரிசுகளைத் தேமொழி அளிக்க முன்வந்தார். நடுவர் பொறுப்பேற்ற இசைக்கவி ரமணன் அவர்கள், தம் பொறுப்பில் கூடுதலாக ஆறு பேருக்குச் சிறப்புப் பரிசுகளை அறிவிக்க, மொத்தம் 12 பேர் பரிசு பெற்றனர். இது, கடித இலக்கியத்திற்கு அழுத்தமான பங்களிப்பாகவும் அமைந்தது. அந்த வகையில் இந்தப் போட்டியை வல்லமையுடன் இணைந்து நடத்த முன் வந்த தேமொழி அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.

     
    வல்லமை.காம் ISSN: 2348 – 5531

    வல்லமை.காம், பன்னாட்டுத் தரநிலைத் தொடரியல் எண்ணைப் பெற்றுள்ளது. (International Standard Serial Number – ISSN: 2348 – 5531). இந்த எண்ணைப் பெற்றுள்ள மின்னிதழ்களில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகளுக்குக் கல்வித் துறையில் மதிப்பும் மதிப்பெண்ணும் உண்டு. கல்லூரி / பல்கலைக்கழகம் / ஆராய்ச்சி நிறுவனங்களில் உள்ள கல்வியாளர்கள், இத்தகைய இதழ்களில் ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தால், ஒவ்வொரு கட்டுரைக்கும் பல்கலைக்கழக மானியக் குழு மதிப்பெண் வழங்குகிறது. இது, அவர்களின் பணி வாய்ப்புக்கும் பதவி உயர்வுக்கும் உதவும். இத்தகைய கல்விப் புல முக்கியத்துவத்தை வல்லமை மின்னிதழ் பெற்றுள்ளது. எனவே, ஆராய்ச்சியாளர்கள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அழைக்கிறோம்.

    ஃபேஸ்புக் & வாட்ஸ் அப் குழுமம்

    கூகுள் குழுமத்தைத் தொடர்ந்து, ஃபேஸ்புக்கிலும் வல்லமை புதிய குழுமத்தைத் தொடங்கியுள்ளது. https://www.facebook.com/groups/682321115112693/; வாட்ஸ் அப், செல்பேசி வலைப்பின்னலிலும் Vallamai – Tamil Minds என்ற புதிய குழுமத்தைத் தொடங்கியுள்ளது. வல்லமை அன்பர்கள், இவற்றில் இணைந்து கலந்துரையாடுமாறு அழைக்கிறோம்.

    ஆசிரியர் குழுவில் மேகலா, தேமொழி

    வல்லமை ஆசிரியர் குழுவில் அமெரிக்காவில் வசிக்கும் தமிழாசிரியர் மேகலா இராமமூர்த்தி, முனைவர் தேமொழி ஆகியோர் இணைந்துள்ளார்கள். மேகலா, திருக்குறள், புறநானூறு, பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட பலவற்றில் வாசிப்பும் நேசிப்பும் கொண்டவர். முனைவர் தேமொழி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்காவில் வசித்து, திட்ட ஆய்வாளராகவும் பணி புரிந்தவர்; கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு ஆகியவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். சிறப்புகள் வாய்ந்த இந்த இருவரையும் வல்லமை ஆசிரியர் குழு சார்பில் இனிதே வரவேற்கிறேன். ஏற்கெனவே நம் ஆசிரியர் குழுவில் இணைந்துள்ள பெருவை பார்த்தசாரதி, பர்வதவர்த்தினி ஆகிய இருவரும் தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார்கள். இவர்களின் துணையுடன் வல்லமை மேலும் ஒளிரும்.

    கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி!

    வல்லமை இதழின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, ‘என் பார்வையில் கண்ணதாசன்’ என்ற கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளோம். கண்ணதாசனை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவரது பங்களிப்பு என்ன? உங்களுக்கு அவரிடம் பிடித்தவை என்னென்ன? உங்கள் வாழ்க்கையில் அவரது பாடல்கள், எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன? இப்படியாக, எந்தக் கோணத்திலும் உங்கள் கட்டுரைகள் அமையலாம். மொத்தப் பரிசு, ரூ.4250. கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் (பம்மல்) சார்பாகக் காவிரி மைந்தன் மற்றும் கிரி ஐங்கரன், இதனை வல்லமையுடன் இணைந்து நடத்துகிறார்கள். வாசகர்கள் இதிலும் துடிப்புடன் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.

    புதிய தொடர்கள்

    வல்லமையின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தில் ‘இசைக்கவியின் இதயம்’ என்ற புதிய பகுதி பிறக்கிறது. இதில் இசைக்கவி இரமணன் அவர்களின் எண்ணங்களில் உதிக்கும் பல்வண்ணக் கிரணங்களின் ஒளி வீச்சினை நாம் தரிசிக்கலாம். இவர், பாரதி, இசை, இலக்கியம், பக்தி, யோகம், ஞானம்.. எனப் பல துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடும் ஆற்றலும் அர்ப்பணிப்பும் கொண்டவர். இவற்றையெல்லாம் ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பாக, இந்தப் புதிய பகுதி அமைகிறது. இது தவிர, கே.ரவியின் கவிதைகள், சு.ரவியின் கவிதை ஓவியங்கள், கேஷவ் ஓவியங்கள் எனப் பலவும் தொடர்ந்து வல்லமையை அலங்கரித்து வருகின்றன.

    புதிய முயற்சிகளுக்கு வல்லமை, சிறந்த களமாக உருவாகி வருகிறது. கருத்துச் சுதந்திரமும் இயல்பான நட்புறவும் ஆரோக்கியமான பின்னூட்டங்களும் இதனைத் தரமான மின்னிதழாக வளர்த்தெடுத்துள்ளன. இதனை இன்னும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல, அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.

    புதிய திட்டங்கள்

    வல்லமை வளர்தமிழ் மையத்தை அறக்கட்டளையாகப் பதிந்து, மேலும் அதிகப் பணிகளை ஆற்றத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு நேரம், நிதி, வளங்கள், தன்னார்வலர்களின் உழைப்பு.. எனப் பலவும் தேவை. எனவே, உங்களால் எந்த வகையில் எங்களுக்கு உதவ முடியும் எனத் தெரிவித்தால், அடுத்தடுத்துத் திட்டமிட வசதியாய் இருக்கும்.

    வல்லமையின் பணிச் சுமை அதிகரித்து வருவதால், புதிய தன்னார்வலர்களை வரவேற்கிறோம். இதழியல் ஆர்வமுள்ள மாணவர்களையும் இல்லத்தரசிகளையும் ஓய்வுபெற்ற ஆர்வலர்களையும் எழுத்தார்வமும் படைப்பூக்கமும் கொண்ட திறனாளர்களையும் ஆவலுடன் அழைக்கிறோம். நுட்பியல் திறனுள்ள அன்பர்கள் ஒத்துழைத்தால், வல்லமைக்கு என ஆண்டிராய்டு குறுஞ்செயலிகளை உருவாக்கலாம்.

    நன்றிகள்

    வல்லமையின் இந்த வளர்ச்சியில் பலருக்கும் பங்கு உண்டு. அர்ப்பணிப்பு மிகுந்த திருமதி பவளசங்கரி தலைமையிலான ஆசிரியர் குழு, எங்கள் ஆலோசகர்கள், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள மேலாளர் சீனிவாசன், ஏற்கெனவே நம் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய காயத்ரி பாலசுப்பிரமணியன், கவிநயா உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். வல்லமைக்குச் சிறப்பான படைப்புகளை அளித்து வரும் படைப்பாளர்கள், ஓவியர்கள், இவற்றைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்கள், கூகுள் – ஃபேஸ்புக் – ஃபிளிக்கர் – வாட்ஸ் அப் குழுமங்களில் துடிப்பாக இயங்கி வரும் அன்பர்கள் யாவருக்கும் நன்றிகள். தொடர்ந்து இணைந்திருங்கள், இன்னும் வளர்வோம்.

    Share
  • திருமால் திருப்புகழ் (85)

     
    கிரேசி மோகன்

    Indra Garvabhangam, acrylic on canvas, 2005 Keshav
    Indra Garvabhangam,
    acrylic on canvas, 2005
    Keshav

     

    கண்ணன் திருப்புகழ்….
    ——————————————
    ’’கண்ணன் அந்தாதி’’(வெண்பா)….
    ———————————————————-

    Govinda pattabhishekam series. #krishnafortoday Keshav
    Govinda pattabhishekam series. #krishnafortoday
    Keshav

    வாய்ப்பூதான் வாடிடுமோ, வாழ்வி(ல்)ஆழ் வாராகும்
    வாய்ப்பெனெக்குத் தந்திட வாசுதேவா, -நோய்ப்பாயில்,
    கூற்றன்கைப் பாவையாய், தோற்றுக் கிடப்பேனோ,
    ஏற்றம் தரவா ,எனக்கு….(31)

    எனக்கே எனெக்கென்(று) எவருளார் என்று,
    தனக்கே தனக்குள் தவித்தால், -உனக்குள்,
    உவமை இலாத, ஒருத்தனைக் காண்பாய்
    அவனே, அரியென்(று) அறிந்து….(32)

    அறிந்தேன், அறியாமை அந்தஅரி மாயை,
    அறிந்தேன் அவனேதான் ஆன்மன், -அறிந்தேன்
    கருந்தேகக் கண்ணனவன், கண்,காணல், காட்சி
    ஒருங்கிணைந்து தோன்று(ம்)அரி ஓம்….(33)

    ஓமனக் குட்டனே, கோமண கோவிந்தா,
    கோமணம் கட்டிய கோபாலா, -நாமணக்கும்,
    ஆரா அமுதனே, அய்யா குருவாயூர்
    சீராளா, சீனிவா ஸா….(34)

    வாஸனாதி கர்மங்கள், பூசிமகிழ் பூர்வநெஞ்சே,
    தேசம்நூற் றெட்டுடைய தேவனை, -யோசனையில்,
    வைத்து வழிபட்டுக் கைத்தலத்தால் கும்பிடப்
    பொய்த்திடு(ம்)ஐம் பூதப், புதிர்….(35)

    ——————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2006_03_01_archive.html

     

    Share
  • அன்புள்ள மணிசார்

    இசைக்கவி ரமணன்

    isai1968. நாங்கள் தி.நகரிலிருந்து நங்கைநல்லூருக்குக் குடிபெயர்ந்தோம். எனக்கு அப்போது 14 வயது. இந்த மாற்றம் எனக்குப் பெரிதும் வருத்தத்தைத் தந்தது. தி.நகரிலிருந்து யாராவது நங்கைநல்லூருக்குச் செல்வார்களா? என் அத்தைக்கு என்னமோ அந்தப் பெயர் வாயில் வந்ததே இல்லை. ‘இப்ப எதுக்குடா பத்னாவன் (பத்மனாபன்! அப்பாவை அழைக்கும் பெயர்) நெல்லிக்குப்பத்துல போயி வீட்டப் பாத்திருக்கான்?’ என்பாள். ‘ஐயோ! அத்தை அது நெல்லிக்குப்பம் இல்ல,’ என்றால், ’தெரியும்டா நங்காவரம்தானே? அங்க எதுக்குப் போறாங்குறேன்?’ என்பாள்.

    வீட்டில் வில்வமரம், கொய்யா, சீதாப்பழ மரம், பாக்கு மரம், அத்திமரம், மாமரம், தென்னை, புன்னை; அடுத்த தெரு பாண்டி பஜார்; பொடிநடையாய் நடந்தால் எங்கள் ராமகிருஷ்ணா மிஷன் நார்த் ப்ரான்ச்; இரண்டு நிமிடங்களில் எத்தனையோ கிரிக்கெட் மேட்சுகள் நடக்கும் ‘நியூ க்ரெளண்டு’; ஐந்து நிமிட நடையில் பஸ் ஸ்டாண்டு. இதையெல்லாம் விட்டுவிட்டு, பேர் தெரியாத, ஆனானப்பட்ட அத்தைக்கே வாயில் பேர் சரியாய் வராத ஊருக்குப் போய்த்தான் ஆகவேண்டுமா என்று எனக்கு ஒரே வருத்தம். அதுவும் பாலு, அனந்து, எல்லப்பன் என்கின்ற பாண்டியன், தம்பி மணி, மொகம்மது ரவூஃப், தெலுங்கு பாபு இவர்களை விட்டுவிட்டால் அப்புறம் உலகத்தில் நண்பர்கள் கிடைப்பார்களோ? அந்த கிராமத்தில் பட்டாசு கிடைக்குமோ? என்றெல்லாம் துக்கம் தொண்டையை அடைத்தது.

    அப்பாவுக்கு ஒரே சிரிப்பு. ’எல்லா எடத்திலியும் எல்லாம் கெடெக்குண்டா! இதைவிட ஒனக்கு நெறெய்ய ஃப்ரெண்ட்ஸ் நங்கைநல்லூரில கெடெப்பா பாத்துண்டே இரு,’ என்றார். நான் சமாதானமாகவில்லை.

    நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நங்கைநல்லூர் என்பது மாசுபடாத சொர்க்கமாகத்தான் இருந்தது. அதற்குக் காரணங்கள்:

    · அடுக்கு மாடிக் குடியிருப்புகள் வரவில்லை

    · கிணற்றில் தண்ணீரை மொண்டு எடுக்கலாம்

    · நிறைய வெட்ட வெளிகள் இருந்தன

    · கண்ணுக்கு விருந்தான ஏரிகள் உண்டு. கார்த்திகை மாதத்தில் அலைபுரளும்! கொக்குகளும், நீர்க்கோழிகளும், உள்ளான்களும் அதிகம் காணப்படும்

    · குளக்கரையில் கணேஷ் டூரிங் டாக்கீசில் 30 பைசா கொடுத்து மணல்குவித்து உட்கார்ந்து, நாலணாவுக்கு அவித்த கடலை வாங்கிக்கொண்டு, நாலு இண்டெர்வெல் கடந்து, இருமலர்கள், இதாலியன் ஜாப் என்று இரண்டு சினிமாக்கள் பார்க்கலாம்

    · என் வயதொத்த தாவணி போட்ட பெண்கள் தாராளமாகத் தென்பட்டார்கள்

    · கோயில்கள் புதிது புதிதாய் முளைத்தவண்ணம் இருந்தன

    · லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு உட்கார்ந்து, அரட்டை அடிக்க எத்தனையோ வாராவதிகள் இருந்தன

    · மரங்கள், ஆமாம், மரங்கள் இருந்தன. குளத்தில் தண்ணீர் இருந்தது. இன்று நீங்கள் பார்க்கும் சிவலிங்கம் அன்று குளத்திலேயே காணப்பட்டது

    · எல்லோருக்கும் நிறைய நடக்கும் பழக்கம் இருந்தது. எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் நேரம் இருந்தது

    · அடிக்கடிப் பலர் வீட்டில் பலவித காரணங்களுக்காக உணவருந்த அழைப்பார்கள்

    · தொலைக்காட்சி, செல் ஃபோன் இன்னும் வந்தபாடில்லை

    · என் பள்ளித் தோழனும், அந்த வயதிலேயே அறுமுகன் அந்தாதி, கெளமார சதகம் போன்ற கவிதைகள் எழுதி அப்போதே ‘டேய் புலவா’ என்னும் பட்டம் வாங்கிய ஹரிகிருஷ்ணன் அங்கெங்கோதான் ஓர் ஏரிக்கரையில் கருங்கொக்காக இருந்தான்

    வெகு சீக்கிரம் கிரிக்கெட் தோழர்கள் கிடைத்தார்கள். சின்ன முகுந்தன், பெரிய முகுந்தன், பிரசாத், சாரதி, வெள்ளை ரகு, செகப்பு ரகு, கணேசன், பன் ஸ்ரீதர், ஜெயதேவ், கிட்டு, நரசிம்மன், ராஜகோபால், ராமசந்திரன் என்று எத்தனையோ பேர் உடனடியாக நண்பர்களானார்கள். அப்பா ஆனா ஊனா வீடு மாற்றிக்கொண்டே இருந்ததில் நண்பர்கள் வட்டம் பெருகியது.

    இப்போது குருவாயூரப்பன் கோயில் இருக்கும் இடம் முன்பு காலியாக இருந்தது. அதுதான் எங்கள் சிட்னி கிரிக்கெட் கிரெளண்டு. விக்கெட் கீப்பருக்குப் பின்னே ஒரு கிணறும், கீதப்பிரியன் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த வர்த்தமானன் வீடும் இருக்கும். பந்து அந்த வீட்டுக்குள் நுழைந்தால் – அடிக்கடி நுழையும் – ஜெயின் கல்லூரியில் வேலைபார்த்துக்கொண்டிருந்த அண்ணன் செல்வராஜைக் கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சித்தான் மீட்க முடியும். அதைத்தாண்டினால் ரோடு, அதற்குப் பின்னே வடமொழி ஆசிரியர் ராம்தாஸ் வாழும் வீடு. வலதுபுறம், ஒரு கால்வாய், ரோடு. எதிர்ப்புறம், அதேபோல். இடதுபுறம், ஒருமேடு, அதன் சரிவில் பள்ளம். அதுதான் எங்கள் ஸ்க்வேர்லெக். இங்கிருந்து பந்தை அடித்தால் அங்கே இருப்பவன் அதைக் கேட்ச் பிடித்தானா இல்லையா என்பதை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. மேட்டெல்லாம் போட்டு விளையாடியிருக்கிறோம். குருவாயூரப்பன் வந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு விட்டார்.

    மறந்துவிட்டேனே, மிட் ஆன் அருகே ஒரு தோட்டக் கிணறு அதற்குப் பக்கவாட்டில் ஒரு சிமெண்ட் மேடை இருந்தது. பிள்ளையார் கோயிலைப் பார்த்தபடி எதற்காக ஒரு மேடை என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள், Nallur Entertainers நாடகம் போடுகிறார்கள் என்று அழைப்பு வந்தது. ரேடியோ, டூரிங் டாக்கீஸ் தவிர வேறு புதிதாய் எது வந்தாலும் எல்லோரும் ஆர்வமாகப் பார்க்கும் காலம் அது. எனவே நானும் போனேன்.

    மேடையில் ஒருவர். ஹார்மோனியத்தை வைத்துக்கொண்டு “வரப்போகும் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல்,” என்று அறிவித்துவிட்டு அவரே பாடுகிறார்:

    உன்னோடு வந்தாலோ உறவாடச் சொல்லும்
    உன்னின்று பிரிந்தாலோ துயர்வந்து கொல்லும் துயர்வந்து கொல்லும்

    கண்ணோடு கண்வைத்து உரையாடத் துடித்தேன்
    உன்கூந்தல் நிழல்கீழே துயில்கொள்ள நினைத்தேன்
    பொன்னோடு பொருள்யாவும் கொண்டோடி வந்தால்
    விழிதாழ்த்தி தலைசாய்த்து வழிநோக்கிச் சென்றாய்…

    என்று தொடர்ந்தார்.

    தமிழ்த்திரைப்படங்களில் கேட்டிராத மெட்டு. இந்திக் கவிதையை மொழிபெயர்த்தது போல வார்த்தைகள். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டால், நிறுத்திவிட்டுக் கண்டிக்கிறார். உதடு நிறையக் காதலும், கண்களில் எப்போதும் ஒரு கோபத்தின் தறுவாயிலும் இருக்கும் இவர் யார்?

    மறுபடி அவரே, ஒரு சித்திரக் குள்ளனாக வேடமணிந்து கோமாளி வித்தை காட்டுகிறார்.

    அவரே, கைகளை இழந்த மேஜராக வருகிறார். அப்பாவி போலப் பின்னால் நின்றுகொண்டிருந்த ஓர் இளைஞர் தன்னுடைய கைகளை அவருடைய கைகளின் இடத்தில் வைத்து, இவர் பேச்சுக்கு ஏற்றபடி அசைவுகள் காட்டி, சிகரெட் பற்றவைக்கும்போது அது கீழே விழ, இருவரும் லாகவமாக அதைத் தரையிலிருந்து எடுத்துக்காட்டி அசத்தினார்கள். அந்த இளைஞர் சற்று நேரத்திற்கெல்லாம் பல நடிகர்களின் குரலில் பேசி அனைவரையும் கவர்ந்தார்.

    கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவரே இன்னொரு நண்பருடன் வந்து மூர்மார்க்கெட் மருந்து வியாபாரியாக வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்தார்.

    இருங்கள், இன்னும் முடியவில்லை! ஒரு சின்ன நாடகம். அதில், முட்டைக்கண்ணும், மூக்குக் கண்ணாடியும் ‘சோ’ போன்ற குரலோடும் ஒருவர்; கைகொடுத்த அதே இளைஞர்; இவர்களுடன் மீண்டும் இவர்! அதிலும் அந்த இளைஞர் டாக்சி டிரைவராக வந்து சென்னைத் தமிழ் பேசி அனைவரையும் கவர்ந்தார். இவர்தான் நாடகத்தை இயக்கியுமிருக்கிறார்!

    யாரிந்த சகலகலா வல்லவர்?

    சில நாட்களில், அந்த தாடி இளைஞரின் தொடர்பு கிடைத்தது. அவன்தான் தாடி பாபு. அவனும், பிச்சையும், ராமச்சந்திரனும் இறந்துவிட்டார்கள். அவர்களை நினைக்கும்போது, அவர்கள் மேலே எனக்காகக் காத்திருக்கிறார்கள் போல் தோன்றுகிறது.

    ‘சோ’தான் கவிமாமணி வீரராகவன். இன்றுவரை தொடர்கிறது எங்கள் இனிய நட்பு.

    பாபுவுக்கு என்னை உடனே பிடித்துவிட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அவனுக்கு எல்லோரையும் உடனேMani பிடித்துவிடும். யாருடனும் அவனுக்கு விரோதம் கிடையாது. யாருக்கும் கடன் வாங்கியாவது உதவி செய்யத் துடிப்பான் அவன். காதல் களவாணி! அவன்தான் என்னை, 29 ஆவது தெருவில், வாணி நர்சரி பள்ளிக்கு அடுத்த வீட்டில் குடியிருந்த அந்த சகலகலா வல்லவரிடம் அழைத்துச் சென்றான்.

    அது மாலை நேரம். அவர் மொட்டை மாடியில், தென்னங் கீற்றுகளின் வழியே சற்றே தேன் தடவியது போல் மினுக்கிக் கொண்டிருந்த நிலவைப் பார்த்தபடி, இரண்டு கைகளையும் பின்னுக்கு ஊன்றியபடி உட்கார்ந்திருந்தார்.

    பாபு, “சார்! இதுதான் ரமணன். என் நண்பன். நல்லாப் பாடுவான்.” என்றான் துணிச்சலாக! ‘டேய்! பாடேண்டா” என்றான். நான் ‘தொடுவதென்ன தென்றலோ மலர்களோ?’ என்னும் பாட்டைப் பாடினேன். அப்போது நான் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேனே தவிர, பாடல்கள் இன்னும் வந்தானபடியில்லை.

    அவருக்கு என்னமோ, “காமதேனு பால் கறந்தாளோ? அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ?” என்னும் வரிகள் பிடிக்கவில்லை. “என்ன ஆபாசமாக இருக்கிறதே!” என்றார். ஆனாலும், ‘You have a good voice,’ என்பதை புன்னகை இல்லாமல், குரலில் மென்மை வராமல் பார்த்துக்கொண்டு சொன்னார்!

    ஓர் அதிகாரியின் முன்பு உட்கார்ந்திருக்கிறோம் என்ற உணர்வு மேலிட, என்னை அறியாமல் அவரைப் பணிந்தேன். அவரால் கவரப்பட்டேன்.

    ‘பாபு! யார்றா இது?’ என்று வெளியே வரும்போது கேட்டேன்.

    ‘அவர்தாண்டா ஆர். எஸ். மணி,” என்று நாங்கள் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி கொண்டான் அவன். அதுதான் பாபு.

    ஓசையுடன் ஓடிவந்த வெள்ளம் எங்கே போச்சுதம்மா?
    ஆசையுடன் ஆடிவந்த உள்ளம் என்ன ஆச்சுதம்மா?
    உள்ளம் என்ன ஆச்சுதம்மா?

    நல்லூர் இலக்கிய வட்டம் உருவாகிவிட்டது. ஹரிகிருஷ்ணன், வீரராகவன், பா. கிருஷ்ணன், கீதப்பிரியன், சுகுமார், குணசேகரன் போன்ற நண்பர்களோடு சேர்ந்துகொண்டு மாதா மாதம் கவியரங்கம் நடத்தி வந்தோம். வித்வான் திரு டி.என்.எஸ். வரதன் அவர்கள்தான் முதல் கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கினார். ராஜேஸ்வரி மாண்டிஸோரி பள்ளிதான் கவியரங்கக் கூடம். அ. ம. ஜெயின் கல்லூரியின் தமிழாசிரியர் நாகநந்தி என்னும் திரு. தி. வேணுகோபால் அடிக்கடி வந்து எங்கள் ‘மத்தாப்புக் கவிதைகளை’க் கடுமையாக விமர்சிப்பார்.

    ஒருமுறை கடற்கரைக் கவியரங்கப் புகழ் “முல்லைச்சரம்” பொன்னடியான் அவர்கள் தலைமை. அதில் தயக்கத்துடன் கலந்துகொண்ட மணிசார் ஓசையுடன் ஓடிவந்த என்று பாடிய பாட்டு, கவியரங்கத்தின் இயல்பையே மாற்றிவிட்டது. பொன்னடியான் தழுதழுத்துப்போய், “என்னங்க! இசை நெஞ்சைத் தொட்டிருச்சே!” என்று அவரும் பாட்டில் இறங்கிவிட்டார்.

    ஆர். எஸ். மணி அவர்களை ’மணி சார்’ என்றுதான் நாங்கள் அழைப்போம். அன்றிலிருந்து இன்றுவரை அப்படித்தான்.

    அவர் வீட்டுக்கு அன்றாடம் அல்லது, அன்றாடம் இரண்டு முறை செல்வது என்பது எனக்கு வழக்கமாகிவிட்டது. இறுக்கமான சூழ்நிலைகளுக்கு மாற்றாகவும், இதயத்தில் புகுந்த இனிய தென்றல் காற்றாகவும் அவர் எனக்கு இருந்தார். வெறும் உற்சாகம் மட்டுமே இருந்த எங்களை ஊக்குவித்த அதே நேரத்தில், நாங்கள் எங்களை விடாமல் வளர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை அவர் எங்களுக்கு போதித்தார். என்னுடைய அறியாமை அவருக்குக் கவலையை ஏற்படுத்தியிருக்கும். “You must learn a lot of good things in life, Ramanan,” என்பார் நாகரிகமாக.

    அவருக்கு எதையும் சிரத்தையாக, நேர்த்தியாக, முழுமையாகச் செய்யவேண்டும். ஒரு புத்தகத்தை அவர் எடுப்பதிலேயே, பச்சைக் குழந்தையை ஏந்தும் தாயின் பாசமும், பொறுப்பும், எச்சரிக்கையும் காணப்படும். காலையில் அரக்கப்பரக்க அவர் அலுவலகத்திற்குக் கிளம்பும்போதும் அவர் என்னுடன் பேசிக்கொண்டிருப்பார். மிக நேர்த்தியாக மீசையைக் கத்திரித்தபடியே, ஒரு மாலை அவள் வந்தாள்! இரு கண்ணில் மது தந்தாள்! நான் மயங்கினேன் நான் மயங்கினேன்’ என்று பாடுவார்.

    கெளரி, ஆனந்த், அருணா, அரவிந்த் எல்லோருமே அப்போது சின்னக் குழந்தைகள்; செல்லக் குழந்தைகள். 20 வயதிலேயே திருமணமாகிவிட்டது. படிப்பில், விளையாட்டில், கலைகளில் பன்முக ஆற்றல் கொண்டிருந்தார் அவர். மேலாக, மிகவும் வசீகரமான தோற்றமும் கொண்டிருந்தார். நாங்கள் ‘பிரேமா மாமி’ என்று அன்புடன் அழைக்கும் அவர் மனைவியிடம் அவர் பரிபூரண விசுவாசத்தோடு இருந்தது பாபு போன்ற, யாரையும் எப்போது வேண்டுமானாலும் காதலிக்கத் தயாராய் இருந்த நண்பர்களுக்கு நம்ப முடியாத ஆச்சரியமாகத்தான் இருந்தது.

    பிரேமா மாமி அற்புதமாகச் சமைப்பார். விரும்பி விரும்பிப் பரிமாறுவார். மாமியின் வரிபோட்ட ரொட்டியும் அன்றைய நாள் கீரை கலந்த ஸப்ஜியும் சுடச் சுட அவருக்குப் படைக்கப்படும். மிகவும் சூடான வெந்நீரில்தான் அவர் குளிப்பார். புத்தகங்களுக்கு அட்டைப்படம் போடுவது போன்ற உபரி வேலைகளிலும் ஈடுபட்டிருந்த அவர், தனது ஐ.சி.எஃப். தொழிற்சாலைக்கு ஒரு போதும் நிதானமாகக் கிளம்பி நான் பார்த்ததில்லை. அத்தனை அவசரத்திலும், உணவு சுடச்சுடத்தான் உண்பார். பிறகு சைக்கிளில் பரங்கிமலை ரயில்நிலையம் வரை பறப்பார். அங்கிருந்து ரயில் பிடித்து, தினசரி நெடும்பயணம்தான்.

    மாலை அவர் வீடு திரும்பும்போதோ, அல்லது அப்போதுதான் திரும்பியிருக்கும்போதோ, நான் அவருக்காக அங்கே காத்திருப்பேன், ஒரு சின்னக் கவிதையோடு.

    ஒருநாள் சைக்கிள் ரிக்‌ஷாவில் வந்து இறங்குகிறார். என்ன ஆச்சோ ஏதாச்சோ என்று மாமி பதட்டத்துடன் வெளியே வந்தால், இவர் பெரிதாக ஒரு இசைக் கருவியோடு வந்து இறங்குகிறார். ‘என்னன்னா இது?’ என்கிறார் மாமி. ‘இது பியானோ அக்கார்டியண்டி,’ என்கிறார். ‘இதை எதுக்கு இப்ப வாங்கிண்டு வந்தேள்?’ என்று கேட்கக் கூடாத ஒரு கேள்வியை ஆயிரமாவது முறை, தவிர்க்க முடியாமல் கேட்கிறார் மாமி. நெற்றியில் எத்தனை முறை ஒதுக்கிவிட்டாலும் வந்துவந்து புரளும் கேசத்தைக் கோபமுடன் சிலுப்பிக்கொண்டு, “I want to know what it is” என்றார்.

    பற்பல விஷயங்களில் அவருக்கு ஆர்வம். ஆர்வத்தோடு நிற்கமாட்டார். அது என்ன என்று அதில் இறங்கி ஆராய்வார். அப்புறம் போதும் என்று நிறுத்திவிடுவார். எதையுமே அவருக்காகத்தான் அவர் செய்துபார்த்துக்கொண்டார். இப்படித்தான் ஸ்வப்ரானோ, தப்லா, மெளத் ஆர்கன் போன்ற பல கருவிகளை வாங்கிப் பழகிக்கொண்டார்.

    திடீரென்று ஒருநாள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினார். அந்த MSR 116 என்னும் வண்டியை நாங்கள் மறப்பதற்கில்லை. நாங்கள் ஒவ்வொருவருமே அதில் அவரோடு பயணம் செய்திருக்கிறோம். ஒரு நாள் காலையில் அவர் வீட்டுக்குச் சென்றால், அந்த மோட்டார் சைக்கிள் குற்றுயிரும் குலைவுயிருமாக இருந்தது. என்ன ஆயிற்று என்று பார்த்தால் மணிசார் அதை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து, அந்தந்த பாகங்களை சின்னச் சின்னச் சட்டிகளில் அழகாக வைத்திருந்தார். என்ன என்று பார்த்தேன். “I want to know what it is” என்று அவருடைய பார்வை சொன்னது! என்னையும் அதில் ஈடுபடுத்த அவர் மேற்கொண்ட முயற்சிதான் முழுத்தோல்வியில் முடிந்தது!

    அந்த வீடு அவருடைய மாமனார் திரு. சுவாமிநாதனுடையது. அவருக்குக் காது கொஞ்சம் மந்தம். மனைவியை இழந்தவர். அதில் ஒரு பகுதியை வாடகைக்கு விடும் முன்னர், நுழைந்தவுடன் இடப்புறம் இருக்கும் அறையில்தான் மணிசார் இருப்பார். ஒரு மாலைப்பொழுது. தனது அக்கார்டியனோடு அவர் என்னமோ முயன்றுகொண்டிருந்தார். ஒரு மெட்டை வாசித்து, ‘ரமணன்! இதுக்கு ஒரு பாட்டெழுதேன்,’ என்றார் விளையாட்டாக. உடனே நானும்,

    வா! மாலையும் போய்விடும் வா!
    மையலும் இழுத்திட மைவிழி சிவந்திட
    மங்கை என்னிடம் வா!

    என்று ஒரு பெண் பாடுவதுபோல் பாடல் சொன்னேன். ஏதோ அத்தோடு முடிந்தது அந்த விளையாட்டு என்று நினைத்தேன். அவரும் அப்படி நினைத்திருக்கலாம். ஆனால், எங்கள் நட்புக்கே ஆதாரம்போல், அவர் மெட்டுச் சொல்லி சூழ்நிலையைச் சொல்ல, நான் பாடல் புனைவதும், நான் வரிகளைச் சொல்ல அவர் மெட்டுப் போடுவதும் வழக்கமாகிவிட்டது!

    ஒரு நாள்
    மலராகப் பிறக்கவேண்டும்
    உன் கூந்தலில்
    சிலநேரம் இருக்கவேண்டும்
    ஒருநாள்
    தென்றலாய்ப் பிறக்கவேண்டும்
    உன் மடியினில்
    குழந்தைபோல் தவழ வேண்டும்!

    என்பதுதான் நான் எழுதி அவர் மெட்டமைத்த என் முதல் காதல் பாடல்.
    இன்றைக்கும் பலருக்கும் பிடித்த பாடல் அது.

    இருந்ததுவும் ஓரிதயம் அதைக் கவர்ந்து சென்றாய்
    இமைவிளிம்பில் ஒரு பார்வையில் உன் நெஞ்சைத் தந்தாய்
    உன் மடியில்
    கண்மூடி
    என் பாடல் காற்றில் மிதந்திடவே
    ஒருநாள்!

    என்னும் வரிகளுக்கு அவர் அமைத்த மெட்டும் அதை அவர் பாடிய விதமும் மறக்க முடியாதவை.

    நடுநடுவே அவர் தனது பாடல்களையும் படைத்துக்கொண்டிருந்தார்.
    முந்தானை காற்றினில் அலையடிக்க
    பின்னாலே என்மனம் படபடக்க என்னும் பாடலும்

    ஏரிக்கரையிலே பாடுகின்றான்
    என்றன் உள்ளம் மயங்குது என்னும் பாடலும் எனக்கு மிகவும் பிடித்தவை.

    ஒரு கிருஷ்ண ஜெயந்தியன்று வீட்டில் யாருமில்லை. நான் பல பாடல்களை எழுதி அவரிடம் மெட்டமைக்கத் தந்தேன். ‘என்னடா இது?’ என்றாரேயொழிய எல்லாவற்றுக்கும் மெட்டமைத்தார்.

    கண்ணனைக் கண்டாயோ
    மேகமே என்றாலோ
    காணவில்லை என்றே
    கண்ணீரில் ஆடுதம்மா!

    மற்றும்,
    வாசலில் கோலம் போடுங்கடி
    வந்திடுவான் நம் கண்ணன்

    மேலும்,

    கோபம் என்னடா? கண்ணா
    கோபம் என்னடா?
    கொஞ்சினாலும் தீர்ந்திடாத
    கோபம் என்னடா?

    கொஞ்சலிலே கொஞ்சமேனும் குறைத்துவிட்டேனா? நீ
    கொஞ்சும்போது கேட்பதற்குத் தவறிவிட்டேனா?
    பஞ்சு மடியில் உன்னைச் சாய்க்க மறந்துவிட்டேனா? இந்தப்
    பாவை உந்தன் மனதிலிருந்து இறங்கிவிட்டேனா?

    போன்ற என் பாடல்களுக்கு அவர் அமைத்த மெட்டுக்கள் மிகவும் பொருத்தமானவை, இனிமையானவை. இந்தப் பாடல்களை ஒரு குறுந்தகடாகக் கொண்டுவர வேண்டும் என்னும் அவர் விருப்பத்தை நான் எப்படியாவது நிறைவேற்ற வேண்டும்.

    நாங்கள் அவரைச் சுற்றி உட்கார்ந்திருப்போம். அவர் கலில் ஜிப்ரானின் Tears and Laughter, வால்ட் விட்மனின் கவிதைகள், தாகூரின் கீதாஞ்சலி, கீட்ஸ், ஷெல்லி இவர்களின் கவிதைகளை நிதானமாகப் படித்துக் காட்டுவார். Jerome K Jerome’s Three Men in a Boat, Woodhouse’s Leave it to Psmith இவற்றை அவர் படித்துக் காட்டியதும், நான் கண்ணீர் வடிய விழுந்து விழுந்து சிரித்ததும் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

    அவருக்கு, உச்சரிப்பு சரியாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அவரால் தாங்க முடியாது. நீங்கள் ரொம்பத்தான் கொண்டாடும் என்னுடைய உச்சரிப்பில் பிழைகள் இருப்பதை அண்மையிலும் அவர் சுட்டிக்காட்டினார்! கீதப்பிரியன் குளம் என்றாலும் குலம் என்றாலும் ஒரே விதமாகவே சொல்வதை அவனுக்குச் சுட்டிக்காட்டி அவனைத் திருத்த டேப் ரிகார்டரில் அவன் குரலைப் பதியவைத்துப் போட்டுக்காட்டி அவர் எடுத்துக்கொண்ட முயற்சி மகத்தானது!

    “With the beaded bubbles winking at the brim,” என்பான் கீட்ஸ். அவருக்குக் காப்பி அப்படி இருக்கவேண்டும்! சூடாக, நுரையோடு, விளிம்பில் கண்சிமிட்டும் குமிழ்களோடு! பிரேமா மாமியின் காப்பி பிரசித்தியானது. நான் அன்றாடம் அவரைச் சென்று பார்க்கக் காரணம் மணிசாரின் கலையா? மாமியின் கைவண்ணமா? என்ற பட்டி மன்றத்திற்குத் தீர்ப்பு வழங்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார் சாலமன் பாப்பையா!

    ஒரு மன்னனின் ரசனை, தோரணை, பாங்கு, நடத்தை அவரிடம் இருந்தது. ஆனால், இறுக்கமான நடுத்தர வர்க்கச் சூழ்நிலையில்தான் அவர் வாழ வேண்டியிருந்தது. இருந்தும், he was truly regal!

    என்னைப் பொருத்தமட்டில், அவர் எத்தனையோ கலைகளில் வல்லவராக – மூன்று மொழிகளில் கவிஞராக, பாடகராக, இசையமைப்பாளராக, நடிகராக, எழுத்தாளராக, இயக்குநராக, ஜோதிடராக, மேஜிக் செய்பவராக, களிமண்ணில் பதுமை செய்பவராக, ஏழு இசைக்கருவிகள் வாசிப்பவராக – இருந்தாலும், அவருடைய ஒப்பற்ற தன்மை அவரது ஓவியத் திறமையில்தான் தரிசனமாகிறது என்று தோன்றுகிறது. அவருடைய முழு இயல்பு, அவருடைய பிரத்யேகமான ராஜ கம்பீரத்தோடு, அவருடைய உயிரின் இயல்பான அழகியலோடு அவருடைய ஒவ்வொரு ஓவியத்திலும் வெளிப்படும். அவர் பழகாத பாணியே இல்லை.

    அவருடைய இந்த உயிர்த்திறமையை ஊர் அறியவில்லை என்பதில் எனக்கு வருத்தமுண்டு.

    எனக்கு ஆங்கிலத்தில் விருப்பம் ஏற்பட்டதற்கு அவரும் அவருடைய “Idle Tears” என்னும் கவிதைகளும் காரணம். பிற்பாடு நான் அதை “விழியோரம் துளி ஈரம்” என்று மொழிபெயர்த்தேன். ஹரி அற்புதமான முன்னுரை எழுதினான். என்னை அவர் Patton திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றார். ஓர் ஆங்கிலப் படத்தை எப்படிப் பார்க்கவேண்டும், ஒரு திரைப்படத்தில் எதையெதையெல்லாம் கவனிக்கவேண்டும் என்று அண்ணன்போல் சொல்லித் தந்தார்.

    நாங்கள் வானொலியின் ‘இளைய பாரதம்’ நிகழ்ச்சியிலும் தொழிலாளர் நிகழ்ச்சியிலும் பங்குகொண்டோம். பிறகு, என் உறவினர் ஒருவரின் அழைப்பின் பேரில் Sundaram Fasteners நிறுவனத்தின் ஆயுத பூஜை நிகழ்ச்சியில் பங்குகொண்டோம். மணி சாரும், பாபுவும் நடித்த அந்த மேஜர் காட்சி அரங்கிலிருந்த ஆயிரம் பேர்களை அசத்திவிட்டது! மணிசாரும் நானும் நடித்த மூர்மார்க்கெட் மருந்து வியாபாரி நிகழ்ச்சியும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிறகு, பாபு, வீரராகவன், நான் எங்கள் மூன்று பேரையும் வைத்து, மணிசார் ஒரு pantomime நிகழ்ச்சி அமைத்திருந்தார். நாங்கள் நடிப்பு மட்டும். குரலும், பொருத்தமான சில ஓசைகளும் பின்னணியிலிருந்து மணிசார். தூளென்றால் அப்படி ஒரு தூள் கிளப்பினோம்! தேங்காய் சீனிவாசனும் சுருளிராஜனும் சண்டை போட்டுக்கொள்வதுபோல் நான் ஒரு வசனம் எழுதி அதை பாபுவும் நானும் நடித்தோம். பிறகு நான் ‘வியட்நாம் வீடு’ திரைப்படத்திலிருந்து சிவாஜி ஓய்வுபெற்று வீட்டுக்கு வந்து பேசும் வசனத்தை அவர்குரலில் நடித்துக் காட்டினேன். இதற்கெல்லாம் அவர் எங்களுக்குக் கடுமையாகப் பாடம் எடுத்தார், எங்கே நிற்க வேண்டும், எப்படித் திரும்பவேண்டும், குரல் அளவு, உடல்மொழி எல்லாம் கற்றுத் தந்தார். சாக் பீசால் கோடு கிழித்தால் கிழித்ததுதான். தாண்டினால் கிழித்துப் போட்டுவிடுவார்! கோபம் வந்தால் (அடிக்கடி வரும்!) குரல் இன்னும் ‘கேய்ங்’ என்று ஆகி, இங்கிலீஷ் வேறு வந்து சேரும்.

    எல்லோருக்கும் மகிழ்ச்சி. நாங்கள் எழும்பூரில் இம்பாலாவில் சாப்பிட்டுவிட்டு, மசாலா பால் அருந்தி, அவரோடு பீடாவும் போட்டுக்கொண்டு ஏதோ திரைப்படத்தில் நடித்து வெள்ளிவிழா கொண்டாடிய குதூகலத்தோடு நடந்துகொண்டிருந்தோம்.

    குருவாயூரப்பன் கோயில் எழப்போகிறது. கூரை போட்டு, சுவாமி படத்தை வைத்து, பிராரம்பமாக ஒரு பாலாலயத்தை எழுப்பினார்கள். அதில் தொடர்ந்து பஜனைகள் நடத்த ஏற்பாடாயிற்று. சம்பிரதாய பஜனைகள் நடந்த வண்ணமிருந்தன. நான் தப்லா தட்டிக்கொண்டிருந்தேன். அப்பாதான் மேல்சாந்தி, அதாவது பிரதான பூஜாரி. ’ஏண்டா! நீங்க வந்து பாடுங்கோளேன்,’ என்றார். மணி சாரிடம் சொன்னேன். சிரத்தையின் உருவாரமான அவர், சம்பிரதாய முறைப்படி என்னென்ன தெய்வங்களை எந்த வரிசையில் பாடுவார்களோ அதே முறையில், அதே வரிசையில் நாம் பாடல்களை அமைப்போம் என்றார்! பாடல்களை எழுதினேன்; நாமாவளிகள் பிறந்தன. அருமையாக மெட்டமைத்தார். சின்னச் சின்னக் குழந்தைகளையும் கூட வைத்துக்கொண்டு, அவர் பாட, குழந்தைகளும், ஏன் பெரியவர்களும் சேர்ந்து தங்களை மறந்து பாட, நான் மணி சார் கொடுத்த தப்லாவை வாசிக்க, அற்புதமாக அமைந்தது நாம சங்கீர்த்தனம். பாராட்டிப் பேசிய அப்பா, “சாகித்யகர்த்தாவுக்கு (அடியேன்தான்) பாட வராது,” என்பதைத் தவறாமல் பதிவு செய்தார்.

    என் அக்கா லலிதா கனடாவில் இருந்தாள். என்னை அங்கே வந்துவிடச் சொன்னாள். மணி சாரிடம் பேசினேன். நானும் வரவா என்றார். ஒரே குஷிதான். இருவரும் விண்ணப்பித்தோம். அவருக்குக் கிடைத்தது, எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    1974 ஆகஸ்டு மாதம் அவர் கனடாவுக்குச் சென்றார். கொஞ்ச நாள் அவர் மாம்பலத்திற்கு வீடு மாற்றிச் சென்றதையே தாங்க முடியாத எனக்கு இது பேரிழப்பாக இருந்தது. அண்ணனாகவும், நண்பராகவும் இருந்து என்னை வழிநடத்திக்கொண்டிருந்த ஒரு பெரும் துணையை விதி திடீரென்று பறித்துக்கொண்டுவிட்டது போலத் தோன்றியது. மணிசார், கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தார். ஆனாலும், மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. என்னமோ அவர் செல்வதற்காகக் காத்திருந்தது போல, என் வாழ்க்கைச் சூழ்நிலைகள் மிகவும் இறுக்கமாகிவிட்டன.

    ஏறத்தாழ 47 ஆண்டுகளாக என்மீது சற்றும் குறையாத நேசம் பாராட்டி வரும் ஹரியின் ஆதுரத்தால்தான் நான் ஒரு வேதனையான கால கட்டத்தைக் கடந்தேன் என்றால் அது மிகையாகாது.

    1977 பிப்ரவரி மாதம், நாங்கள் நங்கநல்லூரை (ஹரி! ஸ்பெல்லிங் சரியா?) விட்டு பெசண்டு நகருக்குக் குடிபெயர்ந்தோம். ஐந்து நிமிட நடையில் கடற்கரை. கடலைப் பார்த்தபோது, தாகூரின் வாசகம் நினைவுக்கு வந்தது:
    “The language of eternal questions.”

    இந்த வாசகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவரே மணிசார்தான்.

    1979ல் ஒரு முறை மணிசார் இந்தியா வந்தார். அவர் என்னை வீடியோ எடுத்ததை அண்மையில் ரமணன் யார் என்னும் பதிவில் இட்டிருந்தார். பின்பு, 1986 ல் ஒரு முறை வந்தார். அப்போது நான் ஒரு “குரு” விடம் ஈடுபட்டு மயக்கத்தில் இருந்தேன். அவரையும் சந்தித்தார் மணிசார். பாடினார். எனக்கு அன்புடன் பரிசுகள் தந்தார். அக்கறையுடன் விசாரித்தார்.

    1989ல் நான் விசாகப்பட்டினம் சென்றுவிட்டேன். அங்கே இந்து நாளிதழை நிறுவும் வேலையில் ஈடுபட்டிருந்தேன்; ஒவ்வொரு நாளும் 16 மணி நேரங்கள் வேலை செய்வேன். ஆயினும் ஒவ்வொரு காலையும் நான்கு மணிக்கு தியானம் செய்யத் தவறாமல் அமர்ந்தேன். கடும் பணியும், ஆன்மிகப் பயணத்தில் வாங்கிய அடிகளும், என்மீது திணிக்கப்பட்ட சில விபரீதமான பரிசோதனைகளின் விளைவாலும், ஒரு விபத்தாலும் என் முதுகு விண்டுவிட்டது. சென்னை அப்பொல்லோவில் அறுவை சிகிச்சை. அதனால் பெரும் பயன் ஏதும் விளையவில்லை.

    அலைந்தலைந்து இறுதியில் 1994 ல் என் குருவின் திருவடி அடைந்தேன். அதன் பிறகு, என் வாழ்க்கை சீரானது. 27 ஆண்டுகள் பணி புரிந்தபின்பு, இன்னும் 10 ஆண்டுகளைத் தவிர கையில் வேறு எதுவும் இல்லாத போது, குருநாதரின் சம்மதத்துடன், வேலையை விட்டு 2005 ல் விலகினேன்.

    இதைத் தொடர்ந்து கனடாவுக்குப் பயணம் சென்றேன். அங்கே என் அக்கா வீட்டிலிருந்து ஐந்து நிமிடங்கள் நடந்தால் மணிசார் வீடு! எப்படி இருந்திருக்கும் எனக்கு?! அவருக்கும் அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சி!

    பிரேமா மாமி, பாத்திரங்களைக் கழுவியபடி, கண்ணில் நீர் மல்க, “ரமணா! அந்தக் காலம் மாதிரி வருமாப்பா?” என்றார், நான் பாடினேன்:

    இதுவொரு காலம் அதுவொரு காலம்
    அடியில் மணலாய்க் கரைகிறதே
    அதுதான் உண்மைக் காலம்!

    நினைவும் கனவும் புகையென நீளும்
    நெஞ்சில் எங்கோ கனல்கிறதே
    அதுதான் உண்மையில் வாழும்!

    எத்தனை முறைகள் நாம் விழுந்தோமோ
    அத்தனை முறையும் எழுந்தோம்
    அதைநாம் ஏனோ மறந்தோம்!
    அதனால்தானே துவண்டோம்!

    எத்தனை அடைந்தோம் எத்தனை இழந்தோம்
    என்பதில் ஏதும் இல்லை! இங்கு
    ஏதும் மீதம் இல்லை, இதை
    இதயம் மறந்தால் தொல்லை

    காலம் நடக்கும் காயம் வலிக்கும், ஒரு
    மாலைப் பொழுதில் நினைக்கும்போது
    மனதினில் எல்லாம் இனிக்கும்! சின்ன
    மலராய் நம் முகம் சிரிக்கும்!

    மாமி ஆசை ஆசையாகச் சமைத்துப் போட்டார்கள்!

    மணிசாரும், அவருடைய என் மகனுக்கு இணையான மகனான ஆனந்தும், என்னைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். எங்கள் நயாகராப் பயணம் மறக்க முடியாதது. என்னுடைய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றுக்கும் வந்திருந்து மணிசார் ஒளிப்பதிவு செய்தார். நான் பாரதியைப் பற்றி டொரொண்டோவில் பேசியதை 11 பகுதிகளாக யூட்யூபில் பதிவு செய்திருந்தார். புகைப்படங்கள் எடுத்தார். எனக்காக நிறைய நேரமும் பொருளும் செலவழித்தார். எனக்கு மாதா மாதம் பணம் அனுப்பினார்.

    ”கண்ணனால் பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது,” என்று பாரதி கண்ணனுக்குச் சொன்னதை நான் மணி சாருக்கு இன்றும் சொல்லலாம்.

    2007 ல் என் மனைவி அனுவுடன் மீண்டும் கனடா சென்றேன். அப்போதும் இதே கதைதான். ஆனால், அவர் உடல்நலம் குன்றியிருந்தது.

    மீண்டும் அவர் இந்தியா வந்து, என்னுடன் விசாகப்பட்டினத்தில் வெகுசில நாட்கள் தங்கினார். அவரை குருஜிக்கு அறிமுகம் செய்துவைத்து மகிழ்ந்தேன். மீண்டும் அவர் வந்தபோது, நான் சென்னைக்குக் குடிபெயர்ந்திருந்தேன். இங்கே வந்து நோய்வாய்ப்பட்டார்.

    2013 ஆகஸ்டு மாதம் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஒரு கண்ணில் பார்வை அறவே மங்கியிருந்தது. இருந்தும், என்னைக் கண்ட மகிழ்ச்சியில், எழுந்துவிட்டார்! நான் பராசக்தி கவிதைகளைச் சொன்னேன்; அவர் ஒளிப்பதிவு செய்தார். அந்த சிரமத்தால் தொடர்ந்து நான்கைந்து நாட்கள் படுத்த படுக்கையாயிருந்தார். அன்புமிக்க ஆனந்த் அவர் எனக்குச் செய்த சேவைகளையெல்லாம் இரட்டிப்பு மடங்கு செய்தான்.

    என்னடா அவர் உடல்நிலை இப்படி ஆகிவிட்டதே என்று வருந்திக்கொண்டிருந்தால், ‘ரமணன் யார்?’ என்று ஒரு பதிவைத் தொடங்கி 10 கட்டுரைகள் இட்டார். படங்கள், வீடியோக்களைப் பதிவு செய்துவைத்தார். எத்தனை ஆண்டுகள் சேமித்து வைத்திருந்தார்! என்ன சிரத்தை! என்ன அன்பு!

    எதற்காக?

    காரணத்தைத் தேடினால் அன்பைப் புரிந்துகொள்ளவே முடியாது. எல்லாவற்றுக்கும் எதற்குத்தான் இப்படிக் காரணத்தைத் தேடி அலைந்து காரியத்தைக் கோட்டை விடுகிறோமோ தெரியவில்லை!

    45 ஆண்டு கால நட்பு. ஒரே சொல்லில் அவரை விவரிக்கலாம், நேர்மை. Fiercely honest, scrupulously honest. Brutally frank. தன்னிலும் சரி, பிறரிலும் சரி, அவர் பொய்மையை சம்மதிப்பதோ சகிப்பதோ இல்லை. அதனால் அவருக்கு நண்பர்கள் குறைவு.

    அவரால், அவருடைய நண்பனாக நான் கருதப்படுவதில் எனக்குப் பெருமை உண்டு. அதைக் காப்பாற்றிக்கொள்ள நான் நேர்மையாக இருக்கவேண்டும் என்னும் பொறுப்புணர்ச்சியும் உண்டு!

    கிடங்காய்க் கிடந்த என் இதயத்தை, ஒரு கலையரங்கமாக வடிவமைத்ததில் அவருடைய கரங்களுக்கும் பெரும்பங்கு உண்டு. இன்று அந்த அரங்கில் அழகியல் ஆட்சி நடத்துகின்றது என்றால், அதற்கு ஆரம்ப நாட்களில் அவர் செய்த சேவைதான் காரணம் என்பதைக் கடவுள் முன்னிலையில் நன்றியுடன் சொல்வேன்.

    உண்மைதான். என்னைவிட 17 வயது வயதில் மூத்தவர் அவர். இன்று வரை, அவர்தான் எனக்குத் தொண்டு புரிந்து வந்திருக்கிறார் என்பதை சங்கடத்துடனேயே இங்கே பதிவு செய்கிறேன். என்னால் அவருக்குத் தொந்திரவுகள் உண்டே தவிர, உபகாரம் எதுவும் கிடையாது.

    ஒரு தந்தையைப் போல, தமையனைப் போல, என் நலனில் அவருக்கு அக்கறை; என் வளர்ச்சியில் அவருக்கு ஆனந்தம்; என் மனநிலையில் அவருக்கு கவனம்.

    அறிவார்ந்த அந்த அன்புக் கண்கள் என் மனசாட்சியில் எப்போதும் ஒளிவீசியபடி என்னை மனிதனாக வைத்திருக்கும்.

    அவருடைய நேர்மை எனக்கிருந்தால், நான் இறைவனின் சபையில் தலைநிமிர்ந்து நுழைவேன்!

    இன்று அவருக்கு 76 வயதாகிறது.

    ஆயிரம் பிறைகள் காண்க! ஆரோக்கியமாக வாழ்க!
    ஆன்மாவில் திளைத்து மகிழ்க! ஆழத்தே அமைதி பெறுக!
    பாயிரம் பாடி உம்மைப் பலவாறு போற்றுகின்றேன்
    பனித்த என் கண்களோடு பாதத்தில் வீழுகின்றேன்!

    Share
  • இசைக்கவியின் இதயம்!

    அன்பினிய நண்பர்களே,

    வல்லமையின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தில் ‘இசைக்கவியின் இதயம்’ என்ற புதிய பகுதி பிறக்கிறது. இதில் இசைக்கவி இரமணன் அவர்களின் எண்ணங்களில் உதிக்கும் பல்வண்ணக் கிரணங்களின் ஒளி வீச்சினை நாம் தரிசிக்கலாம். இவர், பாரதி, இசை, இலக்கியம், பக்தி, யோகம், ஞானம்.. எனப் பல துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடும் ஆற்றலும் அர்ப்பணிப்பும் கொண்டவர். இவற்றையெல்லாம் ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பாக, இந்தப் புதிய பகுதி அமைகிறது. இரமணன் அவர்களின் இனிய குரலில், நம் வல்லமையில் ஏற்கெனவே ஒலிபரப்பாகியுள்ள பாடல்களின் தொகுப்பையும் இந்தப் பகுதியில் காணலாம். இசைக்கவியின் இதயம் மிகப் பெரியது; அதில் நம் எல்லோருக்கும் இடம் உண்டு. வாருங்கள், இசைக்கவி இரமணன் அவர்களின் தொடரை இனி தொடர்ந்து சுவைப்போம். இதோ, தவம் புரிய அழைக்கும் அவருடைய முதல் பகுதி…

     நிர்வாக ஆசிரியர்

    1800026_10152014436087919_583660219_o

    பாரதியும் தவமும்


    தவம் என்பது, கவனம் அனைத்தும் ஒருமுனையில் குவிவது. ஊசி முனையில், சின்னஞ் சிறிய பனித்துளியாய் உயிர் ததும்புவது போல; வெயில்நாளில் வேல்முனையில் துளி வெண்ணையாக உணர்வு நின்று உருகுவதைப் போல; இடைவிடாத வேட்கை ஓர் இடைவிடாத விசைப்பில் கனல்வதைப் போல.

    bharathi9பாரத நாட்டின் அடிநாதம் ஆன்மிகம். அதன் உயிரூட்டம் தவம். யோகம், ஞானம், வைராக்கியம், பக்தி இவையெல்லாம் தவமின்றிக் கனிவதில்லை. அந்தத் தவம், மனிதப் பண்பில்லாமல் கனிவதில்லை. மனிதப் பிறவியை ஓர் அரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, தன்னுள்ளே தெய்வதத்தை நிறுவிக் கொள்ளவும் தவம் தேவை. உடம்பில் இருந்துகொண்டும் வரம்புகளை மீறிய ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளவும் தவம் தேவை. சக மனிதனிடம் எதிர்பார்ப்பில்லாத அன்பு பாராட்டவும் தவம் தேவை. அனைத்துயிர்களிடமும் சமமான நேயம் பழகவும் தவம் தேவை. அனைத்தும் யாமே என்னும் உன்னத நிலையை எய்தவும் தவம் தேவை.

    ஒரு மனிதன், தன் மனதினுள்ளே எந்தச் சிக்கலும் பூசலுமின்றி, ஒரு சாதாரணமான, இனிய. எளிய மனிதனாக வாழவும் தவம் தேவைப்படுகிறது.

    காட்டில் சென்று ஆற்றப்படுவது மட்டுமில்லை தவம். விதிவசத்தால் விளைந்த சூழ்நிலைகள் நம்மை வைத்திருக்கும் இடம், நமக்கு வழங்கியிருக்கும் அடையாளம் இவற்றுக்கேற்பத் தோன்றும் கடமைகளைப் பற்றின்றிச் செய்வதும் தவம்தான்.

    தனியே இருப்பதில்லை தவம். கூட்டத்தில் தனித்திருக்கும் திறமை தவம். நீரில், நிழல்போல் நனையாமல் நீந்தும் லாகவம் தவம். எல்லாவற்றிலும் பங்குகொண்டு எதனாலும் தொடப்படாத வானமாய் விளங்கும் திறமை தவம்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னால் உலகிற்கு நன்மை விளையவேண்டும் என்ற எண்ணமுள்ளவனுக்கு அது ஈடேறத் தவம் தேவைப்படுகிறது.

    ஆக, ஒரு சாதாரண மனிதன் ஆச்சரியமான ஆற்றல் பெறுவதற்கும், அந்த ஆற்றல்களைப் பொருட்படுத்தாமல் அவன் சாதாரண மனிதனாகவே விளங்குவதற்கும், ஒரு மனிதனால் பலருக்கும் நன்மை விளைவதற்கும். ஒரு மனிதன் அனைத்துக்கும் அறுதியான ஆன்மிக இலக்கை அடைவதற்கும் தவமே தேவை.

    தவத்தின் சிறப்பு என்னவென்றால், தான் உலகை விட்டு நீங்கும்போது, அந்தத் தவத்தை உலக நன்மைக்காக விட்டுச்செல்வதே! பற்பல அறிவியல் கண்டுபிடிப்புகளும், கலைகளும், கவிதைகளும் காலம் தாண்டி வாழ்ந்து உலகிற்கு ஒளிவழங்கக் காரணம், அவை தவத்தின் விளைவு என்பதுதான்!

    எனவே, பாரதி நமக்குக் கவிதைகள் மூலமாக விட்டுச் சென்றிருப்பது அவனது தவத்தைத்தான். அவனது ஒவ்வோர் எழுத்தும் ஒளியுடன், கனலுடன், ஒரு விசைப்புடன் விளங்கக் காரணம் அவை அவனது ஆன்ற தவத்தின் விளைவே என்பதுதான். ஒரு சராசரி மனிதனின் அத்தனை அம்சங்களும் அவனிடத்தில் காணப்பட்டதால் நமக்கு அவனோடு ஓர் அணுக்கம் ஏற்படுகிறது. ஒரு மகாமனிதனின் அபாரமான வீச்சுக்கள் அவனிடம் அனாயசமாக விளங்குவதைக் காணும்போது நமக்கு வியப்பும் திகைப்பும் விஞ்சுகிறது.

    கர்ம யோகத்தில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தவன் பாரதி. கீதையை மொழிபெயர்க்கும்போது, `செய்கையில் கீர்த்தியே யோகம்` என்றான். கடமையே தவம் என்ற கருத்துள்ளவன், அந்தக் கடமை என்ன என்பதையும் தெளிவுறவே தெரிவிக்கிறான்:

    கடமை யாவன தன்னைக் கட்டுதல்
    பிறர்துயர் தீர்த்தல் பிறர்நலம் வேணுதல்
    உலகெலாம் போற்றும் ஒருவனைப் போற்றுதல்

    என்றுசொல்லி, இந்த நான்முகம் கொண்ட கடமையின் பயனாய் விளைவதே அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பேறு என்றும் தெளிவுபடுத்துகிறான். தனது வாழ்நாள் முழுதும் இந்தக் கடமைகளில் அவன் சலியாது ஈடுபட்டிருந்து, அதன் மூலம், பயன்களைத் தாண்டிய ஒரு செம்மாந்த மனப்பான்மையை, பிரபஞ்சம் அளாவிய பார்வையை அவன் பெற்றிருந்ததால் தன் மனதிற்குச் சொல்வதுபோல் மனிதர்களுக்கு ஓர் அறைகூவல் விடுக்கிறான்:

    செய்கதவம் செய்கதவம் நெஞ்சே! தவம்செய்தால்
    எய்த விரும்பியதை எய்தலாம்! வையகத்தில்
    அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார்
    இன்புற்று வாழ்தல் இயல்பு (வினாயகர் நான்மணி மாலை)

    அவன் எய்த விரும்பியது அன்பே! எய்தியதும் அன்பே! அதுவே மனித நேயமாக அவன் சொல்முழுதும் வெளிப்படுகின்றது. தவம் என்பது ஒன்றைப் பெறுவதற்கு மட்டுமல்ல. பெற்றதைப் பேணுவதற்கும் தவமே தேவை. ஒரு குழந்தையைப் பெறுவதோடு தாய்மை முடிந்துவிடுகிறதா என்ன? தனது குழந்தையைப் பேணி வளர்ப்பதற்கான துவக்கமே அல்லவா அது? எனவேதான் அன்பிற் சிறந்த தவமில்லை என்கிறான்.

    துறவு பூண்டு ஒதுங்கி வாழ்ந்து இயற்றப்படும் தவம் மேன்மையானதே. அதில் எந்தவிதமான ஐயமும் வேண்டாம். ஆனால், அதனினும் பெரிது, ஆண்டவனைப் போற்றும் தொண்டர்கள் செய்யும் தவம் என்கிறான்.

    துறந்தார் திறமை பெரிததினும் பெரிதாகும் இங்குக்
    குறைந்தாரைக் காத்து எளியார்க்கு உணவீந்து
    அறந்தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்டமெல்லாம்
    சிறந்தாளு நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே!

    தொண்டர்களின் இயல்பு தொண்டு செய்தலே. தங்களால் இயன்ற தொண்டில் எப்போதும் ஈடுபட்டிருப்பவர்கள் தொண்டர்கள். நம்மைவிடக் கீழான நிலையில் இருப்பவர்களைக் காத்தல், இல்லார்க்கு உணவீதல், அறவழியில் வாழ்பவர்கள் நீடூழி வாழ்கவென வாழ்த்தி அண்டமெல்லாம் ஆள்பவன் ஆண்டவன். அடியார்கள், இவையே ஆண்டவனின் குணங்கள் என்று கருதுவதால் அவர்களுக்கு அதே இயல்புகள் வந்தனவோ, இல்லை அந்த இயல்புகள் தம்மிடத்தில் காணப்படுவதால் அவற்றை ஆண்டவனிடம் காண்கிறார்களோ யாரறிவார்? இந்த இயல்புகளால் அவர்கள் செய்யும் தவம் சிறப்படைகிறது என்கிறான் பாரதி.

    தவம் என்பதை ஓர் உரிமையாகக் கருதிவிட முடியாது. அதனால்தான், யார் வேண்டுமானாலும் தவம் செய்யலாமா என்ற கேள்விக்கு `ஆம்` என்று விடைகூற இயலவில்லை. ஒருவனுடைய குண இயல்பில், தவம் செய்யவேண்டும் என்ற வேட்கை இருக்க வேண்டும். அல்லாதவன் அதில் புகுவது, செயற்கையாய்த் துவங்கி, பொய்யாய் நீண்டு, ஆணவ வீம்பாய் முடியும்.

    `புத்தி என்பது கர்ம வினையை அனுசரித்தே இயங்குகிறது` என்பது யோக சூத்திரங்களைத் தொகுத்தளித்த பதஞ்சலி முனியின் கூற்று. செய்த வினையின் விளைவு, மனிதனின் புத்தியில் உட்கார்ந்துகொண்டு அவனை இங்குமங்கும் செலுத்துகிறது. இதனால்தானோ என்னவோ, திருவள்ளுவர்,

    தவமும் தவமுடையார்க் கேயாம் அவமதனை
    அஃதிலார் மேற்கொள் வது

    என்றார். இதை, பாரதி உள்வாங்கிக் கொண்டு சொல்லும் அழகே அழகு:

    இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம்
    செயலிங்கு சித்த விருப்பினைப் பின்பற்றும்; சீர்மிகவே
    பயிலுநல் லன்பை இயல்பெனக் கொள்ளுதிர் பாரிலுள்ளீர்
    முயலு வினைகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே!
    (மொய்ம்பு = வலிமை, தோள்)

    இயல்பு என்பது அதுவாய் நம்மில் இருப்பது என்றுதான் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அன்பு போன்ற ஆன்ற பண்புகள் பயின்று பயின்றுதான் இயல்பாகிறது. பழக்கம் வழக்கமாகி, பண்பாகி, இயற்கை அல்லது இயல்பாகி விடுகிறது. சாதாரண பழக்கங்களுக்கும் அசாதாரணப் பண்புகளுக்கும் இது பொருந்தும் என்று சரியாக அறிந்துவைத்திருந்தபடியால்தான், பாரதி `பயிலுநல் லன்பை இயல்பெனக் கொள்ளுதிர்` என்கிறான். அன்பு என்பது பயின்றுகொண்டே இருக்க வேண்டிய ஒப்பற்ற பண்பு. அறிவைப் போல அதற்கும் அந்தம் கிடையாது.

    சரி. அன்பைவிடச் சிறந்த தவமில்லை என்றான். தவத்தைக் கடமையென்றான். கடமையைத் தவமென்றான். துறவைக் காட்டிலும் தொண்டே பெரிய தவமென்றான். தனது இயல்பில் தவவேட்கை இல்லாதவர்கள் அன்பைத் தவமாய்ப் பயிலுங்கள் என்கிறான். ஏனெனில் அன்பிற் சிறந்த தவமில்லையே!

    செய்வது தவம், பெறுவது வரம் என்பது பொதுவான கருத்து. எனவே முதலில் `செய்க தவம்` என்றான். இப்போது அதைத் தாண்டி, தவத்தைத் தருக என்று ஞானாசிரியனும் பரம குருவுமான முருகனிடம் வேண்டுகிறான்:

    தருவாய் நலமும் தகவும் புகழும்
    தவமும் திறமும் தனமும் கனமும் (முருகன் பாட்டு)
    (தகவு = தகுதி, பெருமை,அருள், நடுவுநிலை,வலி, அறிவு,தெளிவு, கற்பு,நல்லொழுக்கம்)

    எப்படி, உருக்கம் என்பது வேண்டிப் பெறப்படுகிறதோ, அப்படியே, தவம் என்பதும் பெறக்கூடிய ஒன்று என்னும் அரிய சேதியைப் போகிற போக்கில் பதிவு செய்கிறான் பாரதி.

    தனது கண்ணம்மாவைத் தவத்தின் உச்சத்தில் கிடைக்கும் விளைவாக, ஒப்புயர்வற்ற பயனாகக் கருதுகிறான்.

    பீடத்திலேறிக்கொண்டாள் – மனப்
    பீடத்திலேறிக்கொண்டாள்

    நாடித் தவம்புரிந்து – பீடுற்ற முனிவரர்
    கேடற்ற தென்றுகண்டு – கூடக் கருதுமொளி
    மாடத்தி லேறிஞானக் – கூடத்தில் விளையாடி
    ஓடத் திரிந்துகன்னி – வேடத் திரதியைப்போல்
    ஈடற்ற கற்பனைகள் – காடுற்ற சிந்தனைகள்
    மூடிக் கிடக்கு நெஞ்சின் – ஊடுற்ற தையமரர்
    தேடித் தவிக்குமின்ப வீடொத்தினிமைசெய்து
    வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி)

    இந்த வரிகள், பாரதியின் அரிய யோக நிலையை விளக்குவதாகவே படுகிறது. சித்தத்தில் எதனைப் பதியம் போடுகிறோமோ, சித்தம் அதன்மயமாகிறது என்பார்கள் பெரியோர். இங்கே பாரதி `மனப்பீடம்` என்பது சித்தமே. அந்தச் சித்தத்தில் யாரை வைத்தான்? கண்ணம்மாவை! அதுவும் அவளாகவே சித்தத்தில் ஏறிக்கொண்டாளாம்! யாரிந்தக் கண்ணம்மா? காளி! கண்ணனும் காளியும் ஒன்றுதானே? அந்தக் கண்ணம்மா என்னும் கண்ணனாகிய காளி சித்தத்தில் ஏறிக்கொண்டு சப்பணம் போட்டு அமர்ந்துகொண்டபின் எல்லாம் எளிதாகிவிட்டது. என்னவெல்லாம்?

    தவத்தினை எளிதாப் புரிந்தனள், யோகத்tumblr_mqminyR2bz1s461fro1_1280
    தனிநிலை எளிதெனப் புரிந்தாள்
    சிவத்தினை இனிதாப் புரிந்தாள், மூடச்
    சித்தமும் தெளிவுறச் செய்தாள்
    பவத்தினை வெறுப்ப அருளினள், நானாம்
    பான்மைகொன் றவள்மயம் புரிந்தாள்
    அவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள்
    அநந்தமா வாழ்கவிங் கவளே (மஹாசக்தி பஞ்சகம்)

    செய்யப்படுவதல்ல தவம். அது நிகழவேண்டும். மனப்பீடத்தில் காளி ஏறிக்கொண்டால் அது தானாக நிகழும். அவளே வேண்டும் என்ற வேட்கை இருந்தால் அவள் தானே பீடத்தில் ஏறிக்கொள்கிறாள். அப்போது தவம் எளிதாகிறது. தன்னில் தான் தனித்து விளங்கும் யோகநிலை எளிதாகிறது. முரட்டுச் சிவம் முறுவல் பூக்கிறது. அவளைத் தவிர வேறேதும் இல்லாததால் சித்தம் தெளிவாகிறது. சித்தம் தெளிவானால் அங்கே காளிதான் தென்படுகிறாள். அவளே சித்தத்தின் ஒவ்வொரு மூலையையும் ஆக்கிரமித்துக்கொண்டு நிற்கிறாள். அப்போது அவளோடு நேருக்கு நேரே பேசிக்கொள்ள முடிகிறது:

    யோகந்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ என்றேன்
    யோகமேதவம் தவமேயோகமென உரைத்தாள் (அழகுத் தெய்வம்)

    யோகம் என்னும் சொல்லுக்கு வேர்ச்சொல் `யுஜ்` என்பது. அதாவது, இணைதல். மானுடம் தெய்வதமாவது. இந்தத் தெளிவுடன் தவத்தில் அமர்ந்தால் யோகம் எளிதாகிறது. அல்லது, இந்த நோக்கத்துடன் யோகம் பயின்றால் தவம் எளிதாகிறது. எத்தனை அரிய சேதியை எவ்வளவு எளிதாக, அவளிடமே கேட்டுப் பெற்றதாகத் தெரிவிக்கிறான் பாருங்கள்!

    தவத்தின் உச்சம் என்ன? தான் தவம் செய்கிறோம் என்னும் உணர்வு நீங்குதலே. முழு உணர்வோடு, நோக்கம், இலக்கு பற்றிய தெளிவோடுதான் தவத்தில் இறங்கவேண்டும். பிறகு, அதில் தன்னைத் தொலைத்துவிட வேண்டும். ஏனெனில், சாதனை செய்கிறோம் என்னும் உணர்வே வெற்றிக்குத் தடை! மேலும், சாதனை என்பது சித்தசுத்திக்காகவே. மோட்சத்திற்கு நேரடி சாதனை கிடையாது. சித்தம் சுத்தமடைந்து, இறுதி இலக்கான சிவம் என்னும் சிந்தனையில் அப்படியே காத்துக் கிடப்பதே செய்ய வேண்டியது; செய்ய முடிவது. இங்கே, பாரதியின் சித்தம் சுத்தமாகிவிட்டது, அதாவது சக்திமயமாகிவிட்டது. அப்போது என்ன தோன்றும்?

    தவமொன்றும் இல்லையொரு சாதனையும் இல்லையடா
    சிவமொன்றே உள்ளதெனச் சிந்தைசெய்தாற் போதுமடா
    (பரசிவ வெள்ளம்)

    சரணாகதிக்கு அடிப்படை பக்தி. அதே பக்தி, சித்தசுத்தியின் முடிவிலும் தேவைப்படுகிறது! பாரதியின் வீச்சு, நினைக்க நினைக்க வியப்பாக இருக்கிறது!

    பாரதிக்கு ஆதாரம் பாரத நாட்டின் தவவலிமையே. அவன் பாரத நாட்டைக் கொண்டாடும் போதிலெல்லாம் மறவாமல் தவத்தைக் குறிப்பிடுகிறான்:

    யாகத்திலே தவ வேகத்திலே – தனி
    யோகத்திலே பல போகத்திலே
    ஆகத்திலே தெய்வ பக்திகொண்டார்தம்
    அருளினிலே உயர் நாடு (பாரத நாடு)

    யாகம் என்பது தவத்திற்கு முற்பட்ட, அல்லது கீழ்ப்பட்ட நிலைதான். ஆபத்தில்லாத யோகம் என்பது, தவத்தின் வழியே பெறப்படும் யோகம்தான். போகம் என்பது தவத்தின் மூலமே நியாயமாகிறது. சரி, அதென்ன தவ வேகத்திலே? தவம் என்றால் நிதானம் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறோம்! தவம் என்பது, ஒரு சக்தி விசைப்பு, மின்சாரம் போல! எதைநோக்கியும் செல்லாமல் இருந்த இடத்திலேயே விசைத்துக் கொண்டிருக்கும் ஒரு வினோதமான வேகமே தவம். ‘Resultless dynamism.’

    பாரத நாடு தவத்தலம். உலகில், வேறெந்த நாடும் நாகரிகத்தின் அரிச்சுவடியைப் பயின்றுகொண்டிருந்த வேளையில், நம் நாடு தவத்தின் உச்சங்களைக் கண்டது. இறைவனுக்குச் சமமான ஆற்றல் பொருந்திய மாமுனிவர்கள் பலர், சாதாரண மனிதர்கள் போலவே நடமாடிய நாடிது. எல்லோரும் வேறெதுவும் செய்யாமல் தவத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார்களா? நாட்டை நடத்திச் செல்லும் வீரமிக்க அரசர்கள் இல்லையா? கடமையே தவம் என்ற கருத்தை உலகிற்கு வழங்கிய நம் நாட்டில் வீரர்களுக்குப் பஞ்சமேது?

    மாரத வீரர் மலிந்த நன்னாடு
    மாமுனிவோர் பலர் வாழ்ந்தபொன்னாடு (எங்கள் நாடு)

    `புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு` என்பது போல் `வீரர் மலிந்த நன்னாடு` என்று கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட வீரர்களில் பலர், மாமுனிவோர்களாகத் திகழ்ந்தார்கள். நாடாளும் அரசர்களும் காடாளும் முனிவர்களும் ஒரேபோல் வீரர்களா? ஆம்! நாடாண்டது மட்டுமல்ல. உரிய நேரத்தில், பொறுப்பைத் தக்கவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, விரும்பி ஏழ்மையைத் தழுவி, தவமியற்றக் காட்டுக்குச் சென்ற எத்தனையோ அரசர்களை உலகம் இந்த நாட்டில்தான் கண்டிருக்கிறது. மேலும், பற்றைத் துறக்கப் பெரும் வீரம் வேண்டும்! எனவேதான் ஞானியரை `தீரர்` என்று நாம் அழைக்கிறோம்.

    எனவே, சித்தம் எப்படியோ அப்படித்தான் இந்த உலகமும். சித்தம் சிவமயமானால் உலகம் சிவமயமாய்த் தோன்றும். சித்தம் உறுதிப்பாடோடிருந்தால், கடலும் கூடக் குளம்படி நீராய்க் குறுகும். இதுதான், ஆரிய ராணியாகிய பாரத மாதா தனக்குச் சொன்ன வாசகம் என்கிறான் பாரதி:

    சித்த மயமிவ் வுலகம் உறுதிநம்
    சித்தத்தில் ஓங்கிவிட்டால் – துன்பம்
    அத்தனையும் வெல்லலாம் என்று சொன்னசொல்
    ஆரிய ராணியின் சொல் (பாரத மாதா)

    அப்படி, சித்தத்தில் உறுதி கொண்ட துறவியரை எல்லோரும் வணங்கும் பாரத மாதாவே வணங்குகிறாளாம்!

    கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்
    கைதொழுவாள் எங்கள் தாய் (எங்கள் தாய்)

    ஆகவே, சித்தத்தில் ஒளியிருந்தால் உலகம் ஒளிமயமாகவே தோன்றும். சித்தத்தில் மேன்மையான எழிலிருந்தால், காண்பதெல்லாம் எழிற்கொள்ளையாகவே தோன்றும். உலகம் என்கின்ற காட்சியே சித்தம் அதைப் பிரதிபலிப்பதால் காணப்படுகிறது. அந்தச் சித்தம் மேன்மையான பண்புகளால் நிறைந்திருந்தால், நகர்க என்றால் மலை நகரும். விலகு என்றால் கடல் விலகும். விழி திறந்தாலே இருள் விடியும்! இதை எவ்வளவு அழகாகச் சொல்கிறான் பாரதி!

    பொழுது புலர்ந்தது யாம்செய் தவத்தால்images
    புன்மை இருட்கணம் போயின யாவும்
    எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
    எழுந்து விளங்கிய தறிவெனும் இரவி
    (பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி)

    இந்த வரிகளை, பாரதமாதா திருப்பள்ளி எழுச்சியில் அவன் வைத்ததுதான் எத்தனை சிறப்பு! நமக்கு விழிப்பு ஏற்பட்டால்தான் நாடு செழிக்கும். சுப்ரபாதம் என்பது கடவுளை எழுப்புவதற்காக அல்ல. கடவுள் உறங்குபவரும் அல்ல. அவர் உறங்கினால், சுப்ரபாதம் எங்கே? பாடுவார் எங்கே? ஆசை மண்டிக்கிடக்கும் நம்முள்ளத்தில் இறையுணர்வைத் தட்டி எழுப்புவதற்காக ஏற்பட்டதே திருப்பள்ளியெழுச்சி.

    தமிழும் தமிழ் இனமும் இதுநாள் வரை வாழ்ந்திருக்கக் காரணம் என்னவாம்? அதைத் தமிழ்த்தாயின் வாயிலாகவே சொல்கிறான் பாரதி:

    தந்தை அருள்வலியாலும் – முன்பு
    சான்ற புலவர் தவவலியாலும்
    இந்தக் கணமட்டுங் காலன் – எனை
    ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்

    ஆனால், மேன்மைக் கலைகள் மேற்கில் மெத்த வளர்கின்றன என்றும் மெல்லத் தமிழினிச் சாகும் என்றும் கேட்டுத் துடிக்கிறாள் `சீரிளமைத் திறம்` கொண்ட தமிழ்த்தாய். ஆனால், இந்தப் பழிதீரும், நான் பார்மீதில் சாகாதிருப்பேன் காண்பீர் என்கிறாள். எதை ஆதாரமாகக் கருதி அப்படிச் சொல்கிறாளாம்? அதே அருள், அதே தவம்தான்!

    தந்தை அருள்வலியாலும் – முன்பு
    சான்ற புலவர் தவவலியாலும்
    இந்தப் பெரும்பழி தீரும் – புகழ்
    ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன் (தமிழச் சாதி)

    புலவர் தவவலிமை என்னும் கொள்கை வேறெந்த நாட்டிலும் உண்டோ? சொல்லேர் உழவர் பகைகொள்ளற்க என்னும் திருவள்ளுவரின் வாக்கு இங்கே நினைவுகூரத் தக்கது.

    `வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல் வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றி,` என்று பாரதி அந்த மராட்டியச் சிங்கத்தை வெகுவாகப் போற்றிப் பாடுகிறான். சத்ரபதி சிவாஜி என்னும் கனல்பறக்கும் ஒரு கவிதையில் இந்த நாட்டின் மேன்மையைப் பற்றி சிவாஜி சொல்வதாக அவன் அமைத்திருக்கும் வரிகள் பாரதியின் பாரத நேசம் எத்தனை அறிவார்ந்தது, ஆழமானது என்று நமக்குக் காண்பிக்கின்றன:

    இன்னரு பொழில்களும் இணையிலா வளங்களும்
    உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு
    பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க
    மைந்நிற முகில்கள் வழங்குபொன்னாடு
    தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர்
    ஆவலோ டடையும் அரும்புகழ் பூமி!
    வானவர் விழையு மாட்சியர் தேசம்!
    பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ
    நீரதன் புதல்வர்; இந் நினைவகற்றாதீர்!

    இமயத் தொடர்களை, தேவர்களின் ஆன்மாக்கள் என்றான் காளிதாசன். தேவர்கள் வாழ்வதே இங்குதான் என்கிறான் பாரதி. தவத்திற்கு இதுதான் தகுந்த இடம் என்பதால் முனிவர்கள் நாடிப் பிறக்கும் நாடிது என்கிறான்! வானவர்களும், தங்களது நிலையில் உயரவேண்டும் என்றால், அது பாரதத்தின் மூலமே என்று பறைசாற்றுகின்றான். இவையெல்லாம் வெறும் புகழ்ச்சியில்லை. ஆழமான அரியதான, நாம் அறவே மறந்துபோன உண்மைகள்.

    அதெல்லாம் சரி, இந்த முழக்கம் போர்க்களத்தில் எதற்கு? நமது வாழ்வின் ஆதாரமான பண்பாட்டுக்கு ஆபத்து வரும்போது எவரும் அதைக்காக்கத் தமது உயிரைக் கொடுக்கச் சித்தமாக இருக்க வேண்டும். இங்கே அப்படியோர் ஆபத்தான கட்டத்தில்தான் மன்னன் சிவாஜி தனது மக்களைத் தட்டியெழுப்பி, ஒவ்வொருவரையும் உயிரைத் துச்சமாக மதிக்கச் செய்து, பாரதத்தை மிலேச்சர்களிடமிருந்து காக்கும் அரிய பணியில் ஈடுபடும் வீரர்களாகத் தயார்செய்கிறான்.

    சரி, இது தவத்தில் சேருமா என்றால் இதைவிடச் சிறந்த தவம் இல்லை என்கிறான். `அன்பிற் சிறந்த தவம் இல்லை` என்றவன்தான்,

    …நெஞ்சக்குருதியை நிலத்திடை வடித்து
    வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம் யாம்!
    தவத்தினில் இதுபோற் தவம்பிறிதில்லை (சத்ரபதி சிவாஜி)

    இவ்விதம், அன்பிற் சிறந்த தவமில்லை, கடமையே தவம், தவமே கடமை, தொண்டர் செயுந்தவமே சிறந்த தவம், என்றெல்லாம் விதவிதமாகத் தவத்தின் பரிமாணங்களை நமக்கு விரிவாகப் பல இடங்களில் காட்டுகிறான் பாரதி.

    வாருங்கள் தவம் புரிவோம்!

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி!

    அன்பு நண்பர்களே,

    நம் வல்லமை இதழின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, ‘என் பார்வையில் கண்ணதாசன்’ என்ற கட்டுரைப் போட்டியை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்.

    kana1நம் அன்றாட வாழ்வின், சுக, துக்கங்கள் அனைத்திலும் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் நம் உடன் பயணிப்பவை; அவரது இலக்கியப் படைப்புகள், தனித்த புகழ் வாய்ந்தவை. அவரது அர்த்தமுள்ள இந்து மதம், இன்றும் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தின் சமூக. அரசியல் களத்திலும் கண்ணதாசன், தீவிரமாகப் பங்கேற்றார். கண்ணதாசனை நினைக்குந்தோறும் நமக்கு எவ்வளவோ எண்ணங்கள் தோன்றும். கண்ணதாசனை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவரது பங்களிப்பு என்ன? உங்களுக்கு அவரிடம் பிடித்தவை என்னென்ன? உங்கள் வாழ்க்கையில் அவரது பாடல்கள், எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன? இப்படியாக, எந்தக் கோணத்திலும் உங்கள் கட்டுரைகள் அமையலாம். என் பார்வையில் கண்ணதாசன் என்ற பொதுத் தலைப்பில் அவற்றைத் தெளிவான கட்டுரையாக நம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். பரிசுகளையும் வெல்லுங்கள்.

    கண்ணதாசன் மீது ஆழ்ந்த பற்றும் அன்பும் கொண்ட கவிஞர் காவிரி மைந்தன் அவர்கள், இப்போட்டியை வல்லமையுடன் இணைந்து நடத்துகிறார். வழமை போல இந்தப் போட்டியிலும் நம் வாசகர்கள் திரளாகக் கலந்துகொண்டு வெற்றியடையச் செய்வீர்கள் என்று நம்புகிறோம். போட்டி குறித்த விவரங்கள் இதோ:

    வல்லமை இதழ் நடத்தும், கவியரசு கண்ணதாசன் கட்டுரைப் போட்டி
    இணைந்து வழங்குபவர்கள்: கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் (பம்மல்) சார்பாகக் காவிரிமைந்தன் மற்றும் கிரி ஐங்கரன்

    தலைப்பு – “என் பார்வையில் கண்ணதாசன்”

    கட்டுரைகள் பெறப்படவிருக்கும் காலம் – 16.05.2014 முதல் 15.06.2014 வரை..M.-RAVI-KAVIRI

    வல்லமைக்குப் புதியவர்கள் உள்பட, எவரும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

    கட்டுரை 1000 வார்த்தைகளுக்குள் அமைய வேண்டும்.

    கட்டுரைகள் – முழுக்க முழுக்கப் படைப்பாளரின் சொந்தப் படைப்பாக, இதுவரை வேறெந்தத் தளத்திலோ. அச்சிதழிலோ வெளியிடப்படாத படைப்பாக அமைதல் வேண்டும்

    நடுவர் பொறுப்பேற்று கட்டுரைகளை நமக்காகத் தேர்வு செய்யும் பொறுப்பினை முனைவர் வ.வே.சுப்பிரமணியன் (கவிஞர் வ.வே.சு.) அவர்கள் ஏற்றிருக்கிறார்.

    ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

    பரிசுத் தொகை குறித்த விவரம்:

    முதல் மூன்று பரிசுகள் தலா ரூ.1000 வீதம்

    இரண்டாம் பரிசு ரூ.750

    மூன்றாம் பரிசு ரூ.500

    10247260_435875026549812_5280102860535261571_nபரிசு பெறுபவர், இந்தியாவுக்கு வெளியில் இருந்தால், அவரது இந்திய முகவரிக்குப் பரிசுத் தொகை அனுப்பப்படும்.

    போட்டிக்கு வரும் கட்டுரைகளிலிருந்து நடுவர் மற்றும் வல்லமை ஆசிரியர் குழு பரிந்துரைக்கும் கட்டுரைகள், புத்தகமாக வெளியிடப்படும்.

    உங்கள் கட்டுரைகளை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

    தலைமுறை தலைமுறையாகத் தமிழ்ச் சமூகத்தின் மீது அழுத்தமான தாக்கம் செலுத்தி வரும் கண்ணதாசனைக் கொண்டாட, இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்தப் போட்டியில் அனைவரும் பங்கேற்றிட அன்போடு அழைக்கிறோம்.

    Share
  • உனக்குள் ஒருவன்.. அவனே நீ!

    மாதவன் இளங்கோ  

    கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தையநாள் இரவு விருந்திற்கு பெல்கிய நண்பன் ஒருவனை வீட்டிற்கு அழைத்திருந்தேன்.

    அன்று வழக்கத்துக்கு மாறாக குளிர் சற்று குறைவாகவே (குறைவு என்றால் ‘6 டிகிரி செல்சியஸ்’!!!) இருந்தது. அதனால் உணவருந்திவிட்டு மேலுறைகளையும் கையுறைகளையும் அணிந்துகொண்டு, வாயிலும் மூக்கிலும் புகைவிட்டபடி பேசிக்கொண்டே கால்நடையாக லூவன் நகர வீதிகளில் நடந்து சென்றோம்.

    அவன் ஒரு கடைந்தெடுத்த ‘Introvert’. (ஆனால், அவ்வாறு இருப்பதில் தவறொன்றும் இல்லை.) அவனோடு தனியாக பேசும்போதெல்லாம் என்னுடனேயே நான் பேசிக்கொண்டிருப்பது போலவே உணர்வேன். என் மற்ற நண்பர்களும் இதையேதான் சொன்னார்கள். அந்த அளவிற்கு ஒரு அமைதியான மனிதன்; நல்ல நண்பனும்கூட. வெளிநாட்டவர்களில் (உண்மையில் நான்தானே இங்கு வெளிநாட்டவன்?) இதுபோன்ற மனிதர்களை காண்பது அரிது. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள் அவர்கள். இல்லையென்றால், ஆறு மாதங்களுக்கு முன்பாகவே விருந்தை திட்டமிட்டு அவர்களை அழைக்க வேண்டும். இப்படி இருக்க, நான் அழைத்தேன் என்ற காரணத்திற்காக கிறிஸ்துமஸிற்கு முந்தைய நாள் இன்னொருவர் வீட்டிற்கு வேறு யாராவது வருவார்களா? (அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் அழைப்புவிடுத்தேன் – அதுவும் முகநூலில்) 

    அப்படிப்பட்ட ஒரு மனிதனிடம்தான் அன்று பேசிக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்தேன். அந்தத்தெருவே காதை செவிடாக்கும் அமைதியில் மூழ்கியிருந்தது. என்னுடைய குரல் மற்றும் எங்கள் இருவரின் காலணிகள் எழுப்பிய ஓசைகளைத் தவிர வேறு எதுவுமே கேட்காத அளவிற்கு ஒரு நிசப்தம். இதில் இருட்டு வேறு சேர்ந்துகொண்டால் எப்படி இருக்கும்? நாங்கள் நடந்து சென்றுகொண்டிருந்த தெருவில் விளக்குகளும் அப்படியொன்றும் பிரகாசமாக இல்லை. மேலும், குளிர்காலத்தில் இங்கெல்லாம் மாலை நான்கு மணிக்கே இருட்டத் தொடங்கிவிடும் என்றால், இரவு ஒன்பது மணிக்கு எப்படியிருக்கும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அப்படியொரு சூழலில் என்னுடைய குரலே எனக்கு சிறிது அச்சமூட்டியது. இதற்காகவாவது இவன் கொஞ்சம் பேசலாம் என்று நினைத்த அடுத்த வினாடி, “உங்களுக்கு எதற்கும் பயமே கிடையாதா? நீங்கள் அலுவலகத்திலும், வாழ்க்கையிலும் எப்படி எல்லாவற்றையும்  ஒரு அசட்டுத் துணிச்சலோடு எதிர்கொள்கிறீர்கள்?” என்று நான் பேசிக்கொண்டிருப்பதற்குத் தொடர்பே இல்லாத இந்தக் கேள்வியை வேகவேகமாகக் கேட்டான்.

    அவன் தரத்திற்கு அது வேகம் மட்டுமல்ல; சற்று நீண்ட கேள்வியும்கூட. அப்போதுதான் அவன் மனநிலை எனக்குப் புரிய ஆரம்பித்தது. அவனுக்குக் கண்டிப்பாக உதவவேண்டும் என்றும் தோன்றியது. அவன் கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் எனக்குள்ளே நான் சில கேள்விகளைக் கேட்டு கொண்டிருந்தேன். ஓரிரு மணித்துளிகள் நான் அவனாகவே மாறிவிட்டுப் பின்னர் அவனிடம் மெதுவாக, “ ஏனென்றால், முன்பெல்லாம் நான் ஒரு மகா கோழையாக இருந்தேன்!” என்று கூறினேன். 

    “வாட்???” என்று கண்களை விரித்துக் கேட்டான்.

     ஆமாம். ஆனால், அந்தக் கோழைத்தனத்தில் இருந்து பிறந்ததுதான் இப்போது இருக்கும் இந்த தைரியம்.” என்றேன்.

    “எனக்குப் புரியவில்லை!” என்றான்.

    அப்போது அந்தத் தெருமுனையில் ஒரு வீடு விளக்கு வெள்ளத்தில் நிரம்பிக்கிடப்பதைக் கண்டேன். எனக்கு ஒரே அதிசயம், ஏனென்றால் அந்த வீடு கிட்டத்தட்ட நம்ம ஊர் கல்யாண வீடு போலக் காட்சியளித்தது.  இரண்டே வித்தியாசங்கள் – ‘வாழைமரங்கள் இல்லை’, ‘மணமக்களுக்குப்  பதிலாக சாண்டா கிளாசுக்கு ஒரு சிறிய கட்-அவுட் வைத்திருந்தார்கள்’ அவ்வளவுதான்.  

    குறிப்பு: அப்போது நான் எடுத்த புகைப்படத்தைக்கூட இங்கே பதிவேற்றியுள்ளேன். நீங்களே பாருங்களேன்.

     Christmas leuven city

    இஸரன்மோலென் தெரு, லூவன் நகரம், பெல்கியம்

    ஜொலித்துக்கொண்டிருந்த அந்த வீட்டைக் கண்டபோது, என் மனதில் பளீரென உதித்த ஒரு கேள்வியை என் நண்பனிடம் கேட்டேன் – “இங்கே இந்த மின்விளக்குகள் சிந்திக்கொண்டிருக்கும் ஒளியை இவ்வளவு அழகாய்க் காட்டுவது எது?”  

    “அந்த அலங்கார விளக்குகள் தாம்!” என்றான்.

    “இல்லை, ‘இருட்டு’!” என்றேன்.

    “எப்படி?” என்றான்.

    “வேண்டுமானால் அலங்கார விளக்குகளை பகலில் போட்டுப்பாரேன். இன்னும் சொல்லப்போனால், அதோ அந்த நிலவு அழகாய்த் தெரிவது கூட அந்த அகண்ட ‘இருண்ட’ வானத்தினால்தான்.” என்று கூறிவிட்டு இன்னொரு கேள்வியொன்றை கேட்டேன்.

    “”நம் ஷூக்களின் சத்தத்தை உனக்குக் கேட்க வைத்துக்கொண்டிருப்பது எது?”

    “காது” என்றான்.

    “இல்லை. இந்த நிசப்தம்!” என்றேன். 

    அவன் புருவங்கள் சற்றுச் சுருங்கி குழப்பரேகைகள் படர்வதைக் கண்டுவிட்டு தொடர்ந்தேன்.

    “சரி, இதைக்கூறு. இந்தக் குளிரை எதனால் உணர்கிறாய்?” என்றேன்.

    என் மனைவி மட்டும் அக்கணம் அங்கே இருந்திருந்தால், “ஆரம்பிச்சிட்டீங்களா? அடிக்கற குளிருல அவசியம் இந்த cross examination தேவையா?” என்று கேட்டிருப்பாள்.

    ஆனால், பாவம் அவன் சிறிதுநேரம் தீவிரமாகச் சிந்தித்துவிட்டு,”நீங்களே சொல்லுங்கள்!” என்றான்.

    அப்போது நான் அவனுக்கு அளித்த ஒரு short but soporific lecture session ஐத்தான் இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன். 

    ஒளியின் அழகை இருட்டால்தான் காண்பிக்க முடியும். வெப்பத்தின் அருமையை குளிரால்தான் உணர்த்த முடியும். இசையின் இனிமையையும், நுட்பத்தையும் அமைதியால் மட்டுமே அடையாளம் காட்ட முடியும்.

    விளக்குகள் வீசும் ஒளியின் அழகை பகல் காட்டாதது போல, வெப்பத்தின் அருமையை  வெயில் உணர்த்தாதது போல, இசையின் இனிமையை இரைச்சல் நிறைந்த சூழல் உணர்த்தாதது போல –  

    நான் துணிவானவன் என்பதுபோல் காட்டிக்கொண்டிருந்த நாட்களில் அந்தத் துணிவு, எனது துணிவை உணர்த்தவேயில்லை. நான் எப்போது எனக்குள் இருந்த கோழைத்தனத்தை முழுவதுமாக உணர்ந்தேனோ, அந்தக்கணம்தான் எனக்குள் இருந்த தீரனைப் பிரசவித்தேன்.          

    ஒன்றடுத்தொன்றாய் பல முட்கள் என் கால்களைப் பதம் பார்த்து வலியில் துடித்த காலங்கள் உண்டு. எத்தனையோ முட்கள் குத்திக் கிழித்து வலியை உண்டு பண்ணியிருந்தாலும், என் பாதத்தின் வலிமையை உணர்த்திய அந்தக் கடைசி வலிக்குத்தான் நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

    அந்தக் கடைசி வலியை உணர்ந்த நாளன்று –

    இருட்டின் நடுவே ஒளியைக் கண்டதுபோல், என் வலிகளினூடே வலிமையைக் கண்டேன்!

    அமைதியிலிருந்து எழும்பிய இசையை உணர்ந்தது போல, என் கோழைத்தனத்தில் புதைந்து கிடந்த துணிவைக் கண்டெடுத்தேன்!     

    அதைக் கண்ட நாள் முதலாய், அச்சமில்லை! அசட்டு துணிச்சல்! அசாத்திய தைரியம்! எல்லாவற்றிகும் மேலாக நாம் பிறந்த மண்! ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்ற திருநாவுக்கரசரும், ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்று முழங்கிய மீசைக்காரரும் பிறந்த மண்ணல்லவா?

    எவற்றையெல்லாம் நம்முடைய பலவீனமாக நாம் நினைக்கிறோமோ, அவையெல்லாம்தான் நம் பலத்தை நமக்கு அடையாளம் காட்டும் சாதனங்கள். இருட்டு ஒளியை காட்டுவது போல. நிசப்தம் சப்தத்தைக் காட்டுவது போல.

    எனவே, உன் பலவீனங்களாக நீ நினைப்பதை வரிசைப்படுத்து. அவற்றை உணரு. அவற்றை முழுமையாக உணர்ந்ததால் உன்னில் ஏற்படும் மாற்றங்களும், அந்த பலவீனங்களுமே உன் பலத்தை உனக்கு அடையாளம் காட்டும்! அதற்குப் பிறகு நீ வேண்டினாலும் அது உன்னைவிட்டுப் போகாது! கைவிடுவது கடினம்.

    அந்த அளவிற்கு, உனக்கு நேரெதிரான ஆளாக உன்னையே அது மாற்றிக்காட்டும். அது தான் ‘உண்மையான நீயும்கூட’!     

    இப்படி ஒரு விரிவுரையை வழங்கியவுடனே சிறிதும் யோசிக்காமல் சட்டெனச் சொன்னான் நண்பன், “எனக்கு பலவீனமே பயம்தான்!”

    அவன் கண்களைப் பார்த்தேன். தெளிவு தெரிந்தது. துணிவும் பிறந்திருப்பதாக உணர்ந்தேன். குறைந்தபட்சம் அவன் சிந்தையில் தெளிவாவது நிச்சயம் பிறந்திருக்கும்.

    எனக்கு எதிரே நின்ற அவன் மாறியிருந்தான், அவனுக்கு நேரெதிரான மனிதனாய் – அவனாய்!

    அவனுக்கு இனி அச்சமில்லை!

    இந்த வரிகள் உங்களுக்குள் இன்று ஒரு சிறு கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தால், நீங்கள் இன்று முதல் உங்களுக்குள் இருக்கும் வேறோர் மனிதனையும் அவன்  உலகத்தையும் காணப்போகிறீர்கள் என்று அர்த்தம்.

    வல்லமை மின்னிதழ் வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.  வல்லமை அணியினருக்கும், வாசகர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் இந்த மாற்றத்தோடு ஐந்தாம் ஆண்டு  இனிதே தொடங்கட்டும்.

    வல்லமைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

     

    Share
  • சித்திரைத் திருவிழா

    — ஜெயஸ்ரீ ஷங்கர்

     

    சித்திரைத் திருவிழா

    Tamil-Daily-News-Paper_46213495732

    சித்திரை வந்ததும் நமது சிந்தையில் தோன்றுவது, மதுரையில் நிகழும் திருவிழாக் கோலம்தான். வாழ்வில் ஒரே ஒரு முறை அங்கு சென்று அந்தச் சித்திரை மாதத்து திருவிழாக்களில் கலந்து கொண்டு, அந்த வரலாற்றுச் சிறப்பினை உணர்ந்து அனுபவிப்பது ஒருவர் பெற்ற பேறு என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வழக்கு உண்டு, மதுரையில் பிறந்தாலே முக்தி என்று. சிதம்பரத்தில் வாழ்ந்தால் முக்தி என்றும் ஒரு வழக்கு உண்டு. அது எத்தனை நிஜம் என்று தெரியாத போதிலும், மதுரையோ, திருவண்ணாமலையோ , சிதம்பரமோ, அந்தக் கோவிலின் சாநித்தியம் சொல்லி விடும். அந்தத் திருவிழாக்களில் பக்தர்களின் அலைமோதும் ஆர்ப்பரிக்கும் கூட்டம்.

    மதுரைச் சித்திரைத்திருவிழாவில், பெரிய பெரிய தேர்கள் நான்மாடக் கூடலின் நான்கு வீதிகளிலும் ஆடியாடி உலா வரும் காட்சியும், கிருஷ்ண பொம்மைகள் பூச்சொரியும் காட்சியும், திருவிளையாடல் காட்சிகள் ஒவ்வொரு நாளாக நடைபெற்று, தினம் தினம் திருவிழாவாக பிரம்மாண்டமாக இன்று வரை நடைபெற்று வருவதைக் காணும் போது , நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்று வரை ஒவ்வொரு வருடமும் அந்தப் புண்ணிய பூமியின் திருவிழாக் கோலத்தைக் கண்டே வளர்ந்தவள் என்ற ஒரு ஏகாந்தம் மனதில் நிறைய உண்டு. திருக்கல்யாணமாகட்டும் , நவராத்திரி உற்ச்சவமாகட்டும் மதுரையில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    வழி நெடுக தண்ணீர் பந்தல் என்ற பெயரில் பெரிய பெரிய அளவில் நீர் மோர், பானகம், என்று அந்த அடிக்கும் வெய்யிலுக்கு தாக சாந்திக்காக அங்குள்ளவர்கள் வாரி வாரி வழுங்கும் நிகழ்ச்சி மனதைக் குளிரச் செய்யும். பனையோலை விசிறிகளைப் பரிசாகத் தருவர் பலர். மதுரை மீனாக்ஷி திருக்கல்யாணத்தில் மஞ்சள் தாலிச் சரடும், விரளி மஞ்சளும், தாழம்பூ, குங்குமமும், வந்தவர்களுக்கெல்லாம் கருணையோடு அள்ளித் தந்து ஆசீர்வாதம் செய்வாள் அன்னை மீனாக்ஷி. அன்னையின் திருக் கல்யாணம் முடிந்த கையோடு கள்ளழகர் புறப்பாடு. இந்த வெகு விமரிசையான புறப்பாட்டில், அத்தனை மண்டபப் படிகளும் கடந்து ராமராயர் மண்டபம் சேர்ந்து அழகர் பச்சைப் பட்டுடுத்திக் கொண்டு, தங்கக் குதிரையில் குலுங்கிக் குலுங்கி ஆடி வந்து, வைகையாற்றில் இறங்கும் அற்புதக் காட்சியைக் காண கண் இரண்டு போதாது.

    வருடத்திற்கு வருடம் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதை கண்கூடாகக் காணலாம். பக்தர்கள் வெள்ளம், அலையலையாக கிட்டத் தட்ட 18 கிலோமீட்டர் தூரம் நடந்தே அழகர் கோவிலிலிருந்து மதுரை வைகை ஆற்றங்கரை வரையில் வந்து அழகரின் ‘ஆற்றில் இறங்கும் “வைபவத்தைப் பார்த்து விட்டுத் திரும்பும் பக்தர்கள். விடிய விடிய மக்கள் திரள் திரளாக நடந்து வரும் அழகு, வழியெங்கிலும் அன்னதானம் நடைபெறும். எந்த ஒரு பக்தரும் பசியோ தாகமோ அறியாத வண்ணம், வித விதமான சித்ரான்னங்களும், நீர்மோர், பானகம் என்று சிறிது கூட முகம் சுளிக்காமல் வாரி வழங்கும் மதுரை மக்கள். எங்கிருந்து, எப்படி இத்தனை மனித அலைகள் வந்து கொண்டே இருக்கிறது என்று எண்ணும் போது ஆச்சரியம் மேலிடும். சித்திரா பௌர்ணமி அன்று அன்னதானம் அளித்தாலும், கள்ளழகர் தரிசனம் கண்டாலும் பல கோடி புண்ணியம், அந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அமையும் என்ற மதுரை வாழ் மக்களின் நம்பிக்கை கண்கூடாக காட்சி தரும் நன்னாள் அது, விஞ்ஞானம் எத்தனை வளர்ச்சி அடைந்தாலும் என்ன..? இந்த மெய்ஞானத்தின் முன்னே விஞ்ஞானம் பொய்த்துப் போவது போல ஒரு அபார ஆன்மீக நம்பிக்கை உருவாவதை காண முடிகிறது.

    காலின் சதங்கை, தலையில் கிரீடம், சிவப்பில் ஆடைகள், தண்ணீர் பையை முதுகில் கட்டிக் கொண்டு, காண்பவர் முகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தபடி வருவோரை அழகராகவே எண்ணி வழிபடுவது வழக்கம். எத்தனை நம்பிக்கைகள் காலத்தால் சிறிதும் சிதையாமல் காக்கப் பட்டு வந்துள்ளது என்பதற்கு, நான் கூட சாட்சி தான். எனது குழந்தைப் பருவத்திலிருந்து (அதற்கும் பல காலங்கள் முன்பிருந்து வருவதை எனது பாட்டி கதை கதையாகச் சொல்லுவார் ) தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த வரலாற்றுத் திருவிழாக்கள் இந்த பூலோகம் உள்ள காலம் வரையில் ஆன்மீக பக்தர்களுக்கு மதுரை போன்ற திருத்தலங்கள் ஒரு வரப்பிரசாதம் தான்.

     

     

     

     

    Share
  • பெண்கள் நிலை , தேர்வு முடிவுகளில் முதலிடம் – சமூகத்தில் எந்த இடம் ?

    — எஸ் வி வேணுகோபாலன்

    toppersகடந்த ஆண்டு சென்னை பள்ளியொன்றில் மகாகவி பாரதி குறித்த சிறு உரையாடலுக்குப் போயிருந்த அனுபவம் மறக்க இயலாதது. எட்டாம் வகுப்பு பிள்ளைகள் – ஆண், பெண் இரு பாலருமாக 27 பேர் கொண்ட வகுப்பு அது. இருபது நிமிட உரையை அடுத்து கேள்வி பதில்கள் என்பதாக அமைத்துக் கொண்டோம் பாரதி குறித்த எங்களது தேடலை. பாரதி அறிமுகம், அவரது பன்முகத் தன்மை குறித்தெல்லாம் நேரடி செய்திகளாக அல்லாமல் வெவ்வேறு நிகழ்வுகளோடு கலந்து சுவாரசிய கதியில் போய்க் கொண்டிருந்தது விவாதம். எத்தனை எத்தனை அறிவார்ந்த கேள்விகள். தனது வகுப்பு குழந்தைகளுக்குத் தமிழிலும், பாரதியிடத்தும், பொது அறிவிலும், வரலாற்றுச் செய்திகளிலும் இவ்வளவு ஈடுபாடா என்று தமிழ் ஆசிரியை பெருமிதத்தோடு வியந்து நின்றார். முத்தாய்ப்பான கேள்வி இன்னும் காத்திருந்தது. ஒரு சிறுமி அழகாகக் கேட்டார், “சார், முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி என்றுதானே சொன்னீங்க. அப்ப பாரம்பரிய வைத்தியத்துக்கு என்ன பேரு?” என்றார். “பாட்டி வைத்தியம்” என்றேன் நான். “அப்ப அவுங்கள எல்லாம் சமூகம் டாக்டரா அங்கீகரிக்காதோ ?” என்றார். அசந்து நின்றேன்.

    துணிவு, அறிவு, நுட்பம், பார்வை என பலவகையிலும் தங்களைப் பெண்கள் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்தபோது தொடர்ந்து இவ்வாண்டும் பெண்களே முதலிடம், அதிக சதவீதம் என ஊடகங்கள் அறிவித்தன. இப்படி கரையை நோக்கி ஓங்கரித்தும், ஆர்ப்பரித்தும் பெருத்த ஓசையோடு வரும் மிக உயரமான கடல் அலைகள் பல நேரம் மிக சாதாரணமாகத் தேய்ந்து அதிக கவனம் பெறாது கரையை பெயருக்குத் தொட்டுவிட்டுக் கடலுக்குள் திரும்புவதைப் பார்க்கிறோம். அதிக சதவீதத் தேர்ச்சி பெற்ற மாணவியர், முதலிடம் பெற்ற பெண் குழந்தைகள் பின்னர் சமூகத்தில் எங்கே காணாமலே போய்விடுகின்றனர்? அல்லது எப்படி காணாமல் ஆக்கப் படுகின்றனர்?

    அடிப்படையில் பாலின வேறுபாட்டில் ஊன்றப் பட்டிருக்கும் சமூகத்தில் குழந்தை வளர்ப்பிலிருந்து, சமூகப் பார்வையின் நிழல் படிப்பிலும், திருமண நேரத்திலும், பிந்தைய வாழ்க்கைப் பாதையிலும் படரத் தான் செய்கிறது. தங்களது சொந்தத் தேடல்களை, விருப்பங்களை, கேள்விகளை மனித இனத்தில் சரிபாதி அடுத்த பாதியிடம் ஒப்புக் கொடுக்க நேருவது எத்தனை பெரிய வன்முறை என்பது ஒரு கணம் சிந்தித்தால்தான் புரியும்.

    உயர் படிப்புக்குப் போகும் பெண்களில் கூட (இந்த வாக்கியத்திலே செய்வினை செயப்பாட்டுவினை மயக்கம் ஒன்று இருக்கிறது – உயர் படிப்புக்கு அனுமதிக்கப் படும் என்று இருக்க வேண்டும்) கணிசமான பகுதியினர் வேலைக்கான உத்தரவுகளை வாங்கி இந்தப் பக்கம் வைத்துவிட்டு நண்பர்களிடம் தங்களது திருமண அழைப்பிதழை வழங்குபவர்களாக மாற வேண்டியிருக்கிறது.

    ‘நீ என் குழந்தைகளின் தாய், அதை நான் மறுத்துவிடுவேனாகில் நீ வெளியேற வேண்டி இருக்கும்’ என்கிறது வங்காளி மொழிபெயர்ப்புக் கவிதை ஒன்று. எந்த விதத்திலும் நிராகரிக்கப் படக் கூடாதவளாக ஒரு பெண் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எப்போதிலிருந்து என்று கேட்கக் கூடாது. எல் கே ஜியிலிருந்தே இந்த உணர்வு ஊட்டப்படுகிறது. சொல்லப் போனால் அதற்கும் முன்பிருந்தே!

    மாலனின் தப்புக் கணக்கு என்கிற அருமையான சிறுகதையை மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் இயக்கத்தில் கதை நேரம் தொடரில் குறும்படமாகப் பார்த்திருப்பீர்கள். பள்ளியில் ஒரு கணக்கைத் தனது சொந்தப் புரிதலில் வித்தியாசமாக அணுகிப் போட்டிருப்பாள் அந்தச் சிறுமி. மதிப்பெண்கள் மறுக்கப் பட்டிருக்கும். நியாயம் கேட்கப் புறப்படும் தாத்தாவுடைய பயணத்தின் கடைசி மோதல் தனது மகனோடு நடக்கும். ‘அவ ஒரு பெண் குழந்தை. சுயமா எதையும் யோசிக்க அனுமதி கிடையாது. நாளைக்கு வளர்ந்த பிறகு ஏராளமான பிரச்சனை ஏற்படும். என்ன சொல்லிக் கொடுக்கிறாங்களோ அதைத் தான் அவ கேட்டுச் செய்யணும்’ என்று குழந்தையின் தந்தை பேசும் வசனம் அந்தக் குறும்படத்தின் மிக நுட்பமான இடம். விவாதக் களம்.

    கால காலமான இந்தப் பண்பாக்கம் இயல்பான செய்தியாக மரபணுக்கள் வழி கடத்தப் படுகிறது. மத உணர்வுகளால் நிறுவப் படுகிறது. ஆதிக்கப் போக்கினால் அமலாக்கத்தில் இருக்கிறது. ஆனாலும் நவீன சமூகத்தின் வளர்ச்சியில் மேம்போக்கான மாற்றங்கள் நிகழ்வதன் வேகம் இந்த அடிப்படை நீரோட்டத்தை உணர இயலாதபடி அத்தனை நேர்த்தியாக சமூகத்தின் தோற்றத்தைத் திருத்திக் காட்டுகிறது.

    அண்ணன் தம்பிகள் எப்போது வீடு திரும்பினாலும் கேள்வி கேட்காத குடும்பம், ஒரு பெண் அப்படி நினைத்தபடி நடந்து கொள்ள இயலாது என்பதைப் பேசும் பாலபாரதி கவிதை ஒன்று, அப்படியெல்லாம் வாதம் செய்யும் பெண்ணுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்றும், ‘இவளை’ யார் தலையிலாவது கட்டித் தள்ளிவிட வேண்டும் என்றும் குடும்ப அங்கத்தினர்கள் பேசுவதை எடுத்துச் சொல்கிறது.

    தான் எழுதிய கதைகளைத் தனது வாழ்நாளில் அச்சில் பார்க்காது மறைந்துபோன ரங்கநாயகி என்ற எழுத்தாளர் பற்றிய பேரா. கே பாரதி அவர்களது சிறப்பான கட்டுரை (தி இந்து: பெண் இன்று: மே 11), தலை சிறந்த எழுத்தாளர் வரிசையில் இடம் பெற்றிருக்க வேண்டிய பெண்மணி என்று அவரைப் போற்றுகிறது. ஆனால் சமூகம் அந்த வாய்ப்பை இழந்துவிட்டது. இரா.நடராசன் அவர்களது புகழ் பெற்ற ஆயிஷா கதையின் கடைசியில், அந்தத் தேடல் மிக்க சிறுமி எழுப்பிய கேள்விகளின் வரிசையில் ஏன் பெண் விஞ்ஞானிகள் அதிகம் உருவாகவில்லை என்பது முக்கியமான ஒன்று. குடும்பம், சமூகம் என்கிற நிறுவனங்கள் பெண்கள் சுதந்திர சிந்தனையாளர்களாக உருவாவதை அனுமதிப்பதில்லை. இவற்றின் தேவை, நோக்கம், அடிப்படை கட்டுமானம் அப்படி.

    அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்ற காலத்திலேயே சமூகம் நிற்கிறதா என்று கேட்கலாம். இல்லை, நிச்சயமாக இல்லை! எண்பதுகளில் வந்த மிர்ச் மசாலா என்ற அருமையான இந்தி திரைப்படத்தில், தனது பெண் குழந்தை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப் பட்டதைப் பார்த்து மிகவும் கோபம் கொள்ளும் கிராமத் தலைவன் தன்னுடைய மனைவியிடம், உனக்கு எத்தனை துணிச்சல், நெஞ்சுரம் இருந்தால் இந்த வேலையைச் செய்திருப்பாய் என்று மிரட்டும் இடம் ஒன்று வரும். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்று அறியப்படும் சாவித்திரி பாய் ஃபுலே வீதியில் பெண் குழந்தைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்கையில் அவர் மீது மனிதக் கழிவுகள் வீசப்பட்டது என்று படித்திருக்கிறோம். நாகரிக சமூகம் அந்த இடத்தைப் பெருமளவு (பெருமளவு என்றுதான் சொல்ல முடியும்!) கடந்து வந்திருக்கிறது. என்றாலும், எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மிடியத்தாலும், அதற்கு அடுத்தடுத்த கட்டங்களை எட்டிப் பிடிக்கும் தன்மைக்குப் பெண்களை சமூக வெளி அனுமதிக்கிறதா என்பதுதான் கேள்வி.

    ஊடக விவாதங்கள், நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளில் பெண் சுதந்திரம், பாலின சமத்துவம் குறித்த புரிதல்களில் உள்ள சிக்கல், மாற மறுக்கும் சமூக போக்கு இவற்றைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். கவுரவக் கொலைகளின் பின்னணியில் தெறிக்கும் வன்மம் சாதிய விஷயத்திற்கும், பெண் அடிமைத்தனத்திற்கும் ஒருசேர இடம் அளித்திருப்பதைப் பார்க்க முடியும்.

    celebration of topperமாநகரங்களின் கடை வீதிகளில், தொழில் நுட்பத் துறையில், அலுவலகங்களில் பெண்கள் நிறைந்திருப்பது என்பது ஒன்று. அதிகாரப் பகிர்வில், தம்மைக் குறித்த முடிவுகளை எடுப்பதில், ஜனநாயக அமைப்பின் பொறுப்புகளை எடுத்துக் கொள்வதில் பெண் எங்கே இருக்கிறார் என்ற கேள்வி வேறு! எதிர்பாராத விருந்து, தவிர்க்க முடியாத குடும்ப நிகழ்வு, சமாளிக்க இயலாத மருத்துவச் செலவு, செய்தே தீர வேண்டிய அன்றாட வேலைப் பளு இவற்றை கால காலமாக வழி வழி வம்சாவழியாக நிர்வகிக்கத் தெரிந்திருக்கும் பெண்களுக்கு அரசியல், சமூக, பொருளாதார பெருவெளியில் செயலாற்றத் தெரியாதா?

    மரபார்ந்த பார்வையை வெவ்வேறு உத்திகளில் தொடர வைக்கும் ஊடகங்கள், மாற்றங்களுக்கான தூண்டுதல் தவிர்க்கப்படும் பாட திட்டங்கள், இளமைப் பருவத்திலிருந்தே சமத்துவமற்ற வளர்ப்பு முறை, வீட்டினுள்ளும், வெளியேயும் நடமாடும் பண்பாட்டுக் காவலர்களாக பழைய கண்ணோட்டத்தைக் கட்டிக் காப்பாற்றும் மனிதத் திரள் போன்ற அம்சங்கள் நவீன உலகின் புதிய அம்சங்களை வாரிச் சுருட்டி விழுங்கிக் கொண்டே அடிப்படை விதிகளை மாறாது பார்த்துக் கொள்கின்றன.

    பெண்களுக்கிடையே ஒட்டுமொத்த விடுதலைக்கான முழக்கம் எழுப்புகையில் சாதிய, மத வேறுபாடுகளின் மடியில் கோலோச்சும் சக்திகள் அப்படியான கலகக் குரல்களை ஒன்று சேரவிடாது பார்த்துக் கொள்வதில் கடுமையாக செயல்படுகின்றன. பெண்கள் சுதந்திரமாக வலம் வருவதை இன்று பாதுகாப்பற்றதாக உருமாறி நிற்கும் பொதுவெளி சாத்தியமற்றதாக அறிவிக்கிறது. பெண்களின் உடல் மீதும், உளவியல் மீதும் தொடுக்கப்படும் தாக்குதலுக்கான பழி அனைத்தும் பெண்கள் மீதே சுமத்தப்படும் விஷமத்தனம், இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே என்று சொல்லாமல் சொல்கிறது.

    பள்ளித் தேர்வு முடிவுகள் வருகையில் முதல் பக்கத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும் சிரிப்பும், கொண்டாட்டமுமாகக் காட்சி அளிக்கும் பெண் குழந்தைகள் காட்சி முடிந்து திரை விழுந்தபிறகு காணாமல் போய்விடும் தன்மை மாற்றப் படவேண்டும். சரி நிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே என்று ஆண்களோடு பெண்களும் முன்னெழுந்து வரும் நிலைக்கான போராட்டம் வெகு தொலைவு செல்லவேண்டியிருக்கிறது. அதற்கான குரல் குடும்ப ஜனநாயகத்திலிருந்து புறப்பட வேண்டி இருக்கிறது. முற்போக்காளர்களது தீர்மானமான செயல்பாட்டைக் கோருகிறது.

     
    நன்றி: தீக்கதிர்: மே 15, 2014

    Share
  • ஏதாயினும் சொல்

     கே. ரவி

     

    ஏதாயினும் சொல் ஏனிந்த மெளனம்goddess-saraswati-hindu-goddess-learning
    எங்கெங்கும் பொழியட்டும் பூமழையே
    காதோரம் வந்து சி றகடிக்கும் காற்றில்
    ஒலிக்கட்டும் ஒருமுறை உன்குரலே
    (ஏதாயினும்)

    நீதானே எந்தன் கவிதையின் ஊற்று
    தினமொரு தீபமென் சிந்தையில் ஏற்று
    (ஏதாயினும்)

    ஆதாரம் நீயே அனுபவச் சுவையே
    ஆவியில் அமுதம் நிறைப்பவளே
    ஆகாயமெல்லாம் எதிரொலிக்கும் – நீ
    ஆணையிட்டால் உடன் அதுபலிக்கும்
    (ஏதாயினும்)

    பாதாதி கேசம் பாட வல்லேன் அல்லேன்
    பாவனை சுகத்தில் மூழ்குகிறேன்
    பாராமுகம் எதற்குத் திரைவிலக்கு – இன்னும்
    பாராமுகம் எதற்குத் திரைவிலக்கு – இசைப்
    பாடலொன்றே நம் சுடர்விளக்கு
    (ஏதாயினும்)

    படத்திற்கு நன்றி:

    http://www.hindudevotionalblog.com/2011/09/goddess-saraswati-hindu-goddess-of.html

     

    Share
  • என்ன தான் இருக்கிறது வேதத்தில்? – 6

     

    – சு.கோதண்டராமன்

    வேதத்தில் என்ன இல்லை?

     

     

     

    vedas

    வேத ரிஷிகள் காலத்தில் கோவில் கிடையாது; விக்ரஹாராதனை கிடையாது; ஸந்யாஸம் கிடையாது. அத்வைத த்வைத விசிஷ்டாத்வைதப் பிரிவுகள் கிடையா; பக்தி மாத்திரந்தானுண்டு. கோவிலும் மடமும் பெளத்தமதப் பழக்கத்தால் வெளி நாடுகளிலிருந்து நமக்குக் கிடைத்த பேறுகளென்று சரித்திரக்காரர் சொல்லுகிறார்கள். ஆனால் இப்போது ஹிந்துமதப் பயிற்சிகளுள்ளே கோவிலும் சிலையும் நெடுந்தூரம் ஆழ்ந்து போய்விட்டன. ஆதலால், இப்போது ஹிந்து மதத்திலிருந்து கோவிலைப் பிரிக்க முடியாது. – பாரதி

    வேதத்தில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கு முன் அதில் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பல அதில் இல்லை என்பதை அறிந்து கொள்வோம். ஆம், இன்றைய இந்து சமயத்தின் அடையாளங்களாகக் கருதப்படும் வழக்கங்களில் பெரும்பாலானவை ரிக் வேதத்தில் காணப்படவில்லை.

    அவை வேத விரோதமானது என்று நிரூபிப்பது நம் நோக்கம் அல்ல. வைதிக சமயம் பல தாக்கங்களுக்கு உட்பட்டு வெளித் தோற்றத்தில் மாறி வந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டால்தான் இத்தனை மாற்றங்களையும் ஏற்றுக் கொண்ட அந்த அடிப்படை என்ன என்பதை ஆராய முடியும்.

    விநாயகர்

    முதலில் பிள்ளையாரிலிருந்து ஆரம்பிப்போம். ரிக் வேதத்திலும் மற்ற வேதங்களிலும் விநாயகரைப் பற்றிய குறிப்பு இல்லை.

    அது எப்படி இல்லாமல் போகும்?

    கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே
    கவிம் கவீனாம் உபமஸ்ரவஸ்தமம்
    ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பத
    ஆநஸ் ஸ்ருண்வன் ஊதிபிஸ் ஸீதஸாதனம்

    என்ற விநாயகர் துதி வேத மந்திரம் தானே [ரிக் 2.23.1] என்று வைதிகர்கள் பாயக் கூடும்.

    இந்த மந்திரம் ரிக் வேதத்தில் பிரம்மணஸ்பதி மற்றும் பிருஹஸ்பதி என்ற தலைப்பில் வரும் 19 பாடல்களில், முதலாவது பாடல். இந்தப் பாடலில் எங்கும் கணபதியின் பிற பெயர்களோ, அவரது தோற்றம் பற்றிய குறிப்புகளோ காணப்படவில்லை. அந்தப் பாடலின் மீதி வரிகளிலோ, அந்த சூக்தத்தின் மற்றைய பாடல்களிலோ கணபதி என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் பிரம்மணஸ்பதி என்ற சொல் பல முறை குறிக்கப்படுகிறது. பிரம்மணஸ்பதி தான் விநாயகர் என்று கூறுவதற்கான எந்தத் தடயமும் இல்லை. சாயணர் காலத்தில் விநாயகர் வழிபாடு பரவி இருந்தும், இது விநாயகரைக் குறிப்பதாக சாயணர் கூறவில்லை.

    கணேச சூக்தம் என்ற பெயரில் ஒரு தோத்திரம் உள்ளது. இது 15 மந்திரங்கள் கொண்ட ஒரு தொகுப்பு. இதில் எதுவும் விநாயகருக்கு உரியது இல்லை. இதன் முதல் 9 மந்திரங்கள் ரிக் வேதத்தின் 8வது மண்டலம் 81வது சூக்தத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இவை இந்திரனைக் குறித்தவை. அடுத்த 2 மந்திரங்கள் முன் சொன்ன 2வது மண்டலம் 23வது சூக்தத்தில் உள்ளவை. பிரம்மணஸ்பதியைப் போற்றுபவை. மற்ற 4 மந்திரங்கள் ரிக் வேதம் 10.112 இல் 9வது, 10வது பாடல்களாக உள்ளன. இவையும் இந்திரனைத் துதிப்பவையே.

    ஒரு புதிய தெய்வம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பது பற்றிக் கவலைப்படாமல், அந்தத் தெய்வத்திற்கு ஏதேனும் ஒரு வேதப் பாடலைப் பயன்படுத்துவது வழக்கம் என்பதற்கு இது ஒரு உதாரணம். இன்று நாம் சடங்குகளில் பயன்படுத்தும் மந்திரங்கள் அந்தச் சடங்கோடு தொடர்புடைய பொருள் கொண்டவை அல்ல. (இது பற்றிப் பின்னர் வரும் ஒரு தலைப்பில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.)

    சிவன்

    வேதத்தில் சிவ வழிபாடு இல்லை. சிவ என்ற சொல் இருக்கிறது. மங்களகரமான என்ற பொருளில் இது பல தேவர்களுக்கு அடைமொழியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ருத்ரன் இருக்கிறார். ஆனால் ருத்ரனும் சிவனும் பிற்காலத்தில் ஒன்றாக்கப்பட்டார்களே அன்றி வேதம் கூறும் ருத்ரனுக்கு இன்றைய சிவனுக்குரிய அம்சங்கள் இல்லை.

    ரிக் வேதத்தில் ருத்திரனைப் பற்றிய குறிப்புகளைப் பார்த்தால், பல இடங்களில் மருத் என்னும் தெய்வத்தின் தந்தை ருத்திரன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. [உ-ம் ரிக் 1.85.1] சில இடங்களில் மருத்துகளே ருத்திரர்கள் என்று கூறப்பட்டுள்ளது. [உ-ம் ரிக் 1.39.4,] இன்னும் சில இடங்களில் ருத்திரன் அக்னியின் மறுபெயராகக் கருதப்படுகிறார். [உ-ம் ரிக் 1.72.4,] சில இடங்களில் ருத்திரன் அஸ்வினி தேவர்களோடு ஒன்றாகக் கருதப்படுகிறார். [உ-ம் ரிக் 1.158.1] அவ்வகையில், காற்றாகவும், தீயாகவும், அஸ்வினி தேவர்களாகவும் இன்னும் பிறவாகவும் விளங்கும் பரம் பொருளைச் சில இடங்களில் ருத்திரன் என்று வேதம் அழைக்கிறது என்று தான் சொல்ல முடியும்.

    ஒரே ஒற்றுமை சொல்ல வேண்டும் என்றால், ரிக் வேதத்தில் பல இடங்களில் நலம் தரும் மருந்துகளுடன் வந்து நோய் நீக்குபவராக ருத்திரன் கூறப்படுகிறார் [உ-ம் ரிக் 1.43.4, 2.33.4]. இது சிவனை வைத்தியநாதன் என்று இன்று நாம் வழங்குவதுடன் ஒக்கிறது.

    யஜுர் வேதத்தின் ருத்ரம் (4வது காண்டம் 5வது பிரபாடகம்) இன்று சிவ வழிபாட்டில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் மந்திரம். அதில் கூறப்படும் ருத்திரனின் பண்புகளில் சில சிவனுடைய பண்புகளுடன் ஒத்திருந்தாலும், ஒவ்வாதவையும் பல உள்ளன.

    கோபமே வடிவானவர் என்பது ருத்திரனுக்கும் சிவனுக்கும் பொதுவான அம்சம். சிவன் யானைத் தோலையும் புலித் தோலையும் அணிந்தவர் என்று இன்று நாம் வழங்குவதற்கு இயைய யஜுர் 4.5.10.10 மிருகத் தோலை அணிந்தவர் ருத்திரன் என்று கூறுகிறது. யஜுர் 1.8.6.9 ருத்திரனை த்ரயம்பகன் (முக்கண்ணன்) என்கிறது.

    இனி, முரண்பாடுகளைப் பார்ப்போம். பப்லுசாய என்பதற்கு எருதின் மேல் இருப்பவர் என்றும் ஸோம என்பதற்கு உமையோடு கூடியவர் என்றும் தற்போது பொருள் கூறப்படுகிறது. ஆனால் சாயணர் பப்லுசாய என்பதைப் ‘பழுப்பு நிறத்தவர்’ என்று எழுதுகிறார். ஸோம என்ற சொல்லுக்கு ஸோமக் கொடி என்னும் தாவரம் என்று பொருள் தருகிறார். தற்போது வழங்கும் இவ்விரண்டு பொருள்களும் சாயணருக்குப் பிந்திய காலத்தில் ஏற்பட்டதாக இருக்கலாம். மாதொரு பாகன் என்ற கருத்தை வேதத்தில் காண முடியவில்லை. அம்பிகா ருத்திரனின் சகோதரியாகக் கூறப்படுகிறார் [யஜுர் 1.8.6.6].

    தற்போதைய வழக்கு, சிவனை நீலகண்டன், சடையன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் ருத்திரன் கழுத்து கறுத்தவர், கழுத்து வெளுத்தவர் என்று இருவகையாகவும் கூறப்பட்டுள்ளார் (நீலகண்டர், சிதிகண்டர் – யஜுர் 4.5.5.1). அதே போல, சடையர் என்றும் மொட்டைத் தலையர் என்றும் கூறப்பட்டுள்ளார் (கபர்தினர், வ்யுப்தகேசர் – யஜுர் 4.5.5.1).

    மேலும், வேதத்தில் ருத்திரன் என்ற பெயர் ஒருமையிலும் வருகிறது, ருத்திரர்கள் என்று பன்மையிலும் பேசப்படுகிறது. தேவர்கள் நிலத்தில் 11, நீரில் 11, ஆகாயத்தில் 11 பேர் உள்ளனர் என்று ரிக் 1.139.11 கூறுவதை யஜுர் 1.4.10.1 மற்றும் யஜுர் 1.4.11.1 ருத்திரர்களாக எடுத்துக் கொள்கிறது. ஆயிரக் கணக்கில் உள்ளவர்கள் என்று யஜுர் 4.5.11.1 கூறுகிறது. வசுக்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள் என்று மூன்று தெய்வக் கூட்டங்கள் பல இடங்களில் சேர்த்தே சொல்லப் படுகின்றன (உதாரணம் – யஜுர் 1.1.11.16).

    இந்த மந்திரங்களிலிருந்து ருத்திரனின் தன்மை இத்தகையது என்று நிர்ணயிக்க முடியாத நிலையில், வேத தெய்வமான ருத்திரனின் மாற்றுருவமே சிவன் என்று சொல்வதை விட, சிவன் என்னும் கருத்து உருவாகிய பின், அவருடைய வழிபாட்டுக்கு, ருத்ரனைக் குறித்த வேத மந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்று கூறுவதே பொருந்தும்.

    திருமால்

    வேதத்தில் திருமால் இருக்கிறாரா? விஷ்ணு என்ற சொல் இருக்கிறது. அது எங்கும் வியாபித்த சூரியனைக் குறிப்பதாகத் தான் உள்ளதே அன்றி இன்று நாம் வணங்கும் திருமாலைக் குறிக்கவில்லை. விஷ்ணு மூன்று அடி வைத்தது அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. அது சூரியனின் (காலை, பகல், மாலை ஆகிய) மூன்று நிலைகளைக் குறிப்பதாகத் தான் சாயணர் கூறுகிறார். நாராயணன் என்ற பெயர் ரிக் வேதத்தில் இல்லை.

    தைத்திரிய ஆரண்யகத்தில் வரும் நாராயண சூக்தத்தில் விஷ்ணுவும் நாராயணனும் ஒன்று என்பதற்கான குறிப்பு இல்லை.

    இன்று திருமால் வழிபாட்டில் பெருமளவு பயன்படுத்தப்படும் புருஷ சூக்தத்தில் விஷ்ணு என்ற பெயரும் நாராயணன் என்ற பெயரும் இல்லை. இவை பிற்காலத்தில் ஒன்றாக்கப்பட்டவை.

    பிற தெய்வங்கள்

    இன்று பெரும்பாலான மக்கள் முருகன், லட்சுமி முதலான தெய்வங்களையும், மாரியம்மன், ஐயனார் முதலான கிராமத் தெய்வங்களையும் வணங்குகிறார்கள். இவர்களுக்கு வேத மந்திரம் சொல்லி பூஜை செய்யப்படுவதையும் காண்கிறோம். இந்த தெய்வங்கள் எதுவும் வேத இலக்கியத்தின் அடிப்படை நூலான ரிக் வேதத்தில் இல்லை.

    கோயில்கள் இல்லை, விக்கிரக ஆராதனை இல்லை. இன்று எந்த அர்ச்சனை செய்தாலும் ஒவ்வொரு பெயருக்கு முன்னாலும் ஓம் என்று சேர்த்துச் சொல்கிறோமே, அந்த ஓங்காரம் ரிக் வேதத்தில் இல்லவே இல்லை. அதைப் பற்றி பின்னர் வந்த உபநிடதங்கள் தாம் வானளாவப் புகழ்கின்றன.

    அபிஷேகங்கள், அலங்காரங்கள், உற்சவங்கள் இல்லை. பஞ்ச பூதக் கோட்பாடு இல்லை. அஹிம்ஸைக் கொள்கை, கர்மாக் கொள்கை, மறு பிறப்பு, மோட்சம், சொர்க்கம், நரகம், பித்ரு லோகம், வைதரணி நதி எதுவும் இல்லை.

    பிரம்மசர்யம் முதலான ஆசிரமங்கள் இல்லை. பிராமண க்ஷத்ரிய முதலான வர்ணப் பிரிவுகள் பற்றிய குறிப்பு இல்லை. ரிக் வேதத்தில் வரும் பிரம்ம என்ற சொல் நான் முகக் கடவுளைக் குறிப்பது அல்ல. உபநிஷத்துகள் கூறும் உருவமற்ற குணமற்ற பரம்பொருளையும் குறிப்பது அல்ல. பிரம்ம என்ற சொல் பிரார்த்தனை மந்திரம் என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரார்த்தனை சொல்பவர் ப்ரஹ்மணர் என்றும் ப்ராஹ்மணர் என்றும் கூறப்பட்டுள்ளார். இது வர்ணத்தையோ ஜாதியையோ குறிப்பதல்ல.

    இவை எல்லாம் காலப் போக்கில் இந்து சமயத்தில் ஏற்பட்டு அதனை வளர்த்தவை.

    இந்து சமயத்தின் வேர் வேதங்கள். அந்த வேதங்களுக்குள்ளே ஆணி வேரான ரிக் வேதமே பழமையானது; மற்ற வேதங்களுக்கும், பிராமணம், ஆரண்யகம், உபநிடதங்களுக்கு எல்லாம் ரிக் ஸம்ஹிதையே அடிப்படை என்கிறோமே, அது எந்த அடிப்படையில்? பிற்காலத்தில் பல மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வழி வகுத்த அதன் தனித்தன்மை என்ன? மாற்றங்கள் ஏற்பட்ட பின்னும் வேதமே அடிப்படை என்கிறோமே அப்படிக் கூறுமளவுக்கு வேதத்தின் எந்தக் கருத்து இன்று வரை மாறாமல் இருந்து மாற்றங்களை எல்லாம் வரவேற்று சமயத்தை வளர்த்து வருகிறது?
    பாமரன் புதுக் கோணத்தில் பார்க்க முயன்றான். வேதத்தின் மையக் கருத்து என்ன என்று தெரிந்து கொண்டால் அதற்கு மாறானவற்றை இடைச் செருகலாகக் கருதி அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மற்ற பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தலாம், மையக் கருத்தைத் தெரிந்து கொண்டு விட்டால் அதோடு தொடர்பு படுத்தி இது வரை புரியாத பல மந்திரங்களை அறிந்து கொள்ள முடியும் என நம்பினான்.

    மையக் கருத்தை எப்படிக் கண்டு பிடிப்பது? எந்தக் கருத்து திரும்பத் திரும்பப் பேசப்படுகிறதோ, வலியுறுத்தப்படுகிறதோ அதுவே மையக் கருத்தாகக் கொள்ளலாம். அடிக்கடி வரும் சொற்களை மட்டும் தனியாகப் பிரித்து சிறப்பான கவனம் செலுத்திப் பார்க்க முயன்றான். அப்படி அடிக்கடி வரும் சொற்கள் யாவை? தேவ, யக்ஞ, ருதம் என்ற மூன்று சொற்களே ரிக் வேதத்தில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட சொற்கள். இவற்றின் விளக்கத்தை அடுத்தடுத்த அத்தியாயங்களில் காணலாம்.

    படம் உதவி:
    http://www.allabouthinduism.info/tag/rig-veda/
    http://www.allabouthinduism.info/wp-content/uploads/2013/07/veda.jpg

     

     

    Share
  • தயாரிப்பாளர்

    -பிச்சினிக்காடு இளங்கோ

    அவர் ஒரு
    தயாரிப்பாளர்!

    இவர் ஒரு                                                                                                 Bookseller
    தயாரிப்பாளர்!

    நீங்கள் ஒரு
    தயாரிப்பாளர்!

    அவரவர் திறமைக்கேற்பத்
    தயாரிப்பு நடக்கிறது!

    அவரவர் விருப்பப்படியும்
    தயாரிக்கப்படுகிறது!

    தயாரிப்பு
    யாருக்காக?
    என்ற கேள்வியும்
    எழுகிறது!

    ’யாருக்காகவும்’
    என்ற பதிலும்
    இருக்கிறது!

    சந்தைக்கும்
    வந்துவிடுகிறது!

    வாங்குவோரும்
    உண்டு!

    வாங்கிப் பார்ப்பவரும்
    உண்டு!

    பரவலாக
    விற்பனையை
    விரும்பும் நீங்கள்
    அந்தக் கடைக்காரருக்கும்
    அது தெரிந்திருப்பது
    அவசியம்!

    மக்கள் மனதில்
    நிற்க விழையும் நீங்கள்
    அந்தக் கடைக்காரருக்கும்
    தெரிந்தவராகுங்கள்!

    அவர் கடையின்
    சரக்குப் பட்டியலில்
    உங்கள் சரக்கும்
    இருப்பது நல்லது!

    பட்டியலில் இருந்தால்
    வரலாற்றில் இருப்பதாய் பொருள்!

     பார்த்துவையுங்கள்
    அந்தப்
    பட்டியல்காரர்களை!

    வாசிப்போர் மனத்தில்
    இருந்தாலும்
    வரலாற்றிலும் இருப்பது
    அவசியம்!!

     

    Share
  • வாழ்க்கை நலம் – அணிந்துரை

    சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ. சிவஞானம்

    அணிந்துரை

    தவத்திரு குன்றக்குடி அடிகளார், தாம் கொண்ட கோலத்திற்கேற்ப தலைசிறந்த ஆன்ம ஞானி. தெய்வ பக்தியோடு, தேச பக்தியும் கொண்டவராதலால் ஆன்மிகத்தோடு அறிவியலையும் கலந்து சிந்திக்க அவரால் முடிகிறது. பற்றுக்கள் பலவற்றை விட்டு துறவியான அடிகள், தமிழ்ப்பற்றை மட்டும் துறக்காதவராகி, தமிழர் வாழ்வில் எங்கும் எதிலும் தமிழே தலைமை தாங்க வேண்டுமென்ற கொள்கையுடையவராகி, அதற்காகப் பாடுபட்டும் வருகிறார்.

    அடிகளார் பல்வேறு காலங்களில் பல்வேறு அரங்குகளில் வெளியிட்ட கருத்துக்கள் இந்நூல் வடிவம் பெற்று தமிழர் கைக்கு வருகிறது. அடிகளார் ‘மெய்யறிவு’ நிலையில் மட்டுமல்லாமல், விஞ்ஞான அறிவிலும் தமிழ் தலைசிறந்து விளங்க வேண்டுமென விரும்புகிறார். அதனை பல்வேறு கோணங்களில் நின்று வெளியிட்டு தமிழர்களுக்கு வழிகாட்டுகிறார்.

    அறிவியற் கலைகளைப் பயிற்றுவிக்கும் கோயில்களான பல்கலைக் கழகங்களிலே இன்னமும் தமிழுக்கு இடமில்லை. அதாவது, தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களிலே அனைத்துப் பாடங்களிலும் தமிழில் போதிக்குங்கால், தமிழில் அறிவியல் நூல்கள் பெருகும். இந்தக் கொள்கையிலே நாங்கள் ஒன்றுபட்டவர்கள். இதனைச் சாதிக்க அரசின் துணை தேவைப்படுகிறது.

    அடிகளாரும், நானும் அத்துறையில் ஒன்றபட இறையருள் கூட்டுவிக்குமாக!

    நூலை விரிவாகப் படிக்கப் படிக்க எனது அறிவு விரிவடைகிறது. ஒவ்வொரு தமிழரும் எனது நிலையை அடைய இந்நூல் பயன்படுமாக!

    கலைவாணி புத்தகாலயத்தின் உரிமையாளர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் நன்றாகப் பதிப்பித்துள்ளார்.

    அடிகளாருக்கு என் மனமுவந்த நன்றி. பதிப்பகத்தாருக்கு என் பாராட்டு.

    ம. பொ. சிவஞானம்
    சென்னை – 18

    28-12-1992

     

    “வாழ்க்கை நலம்”
    தவத்திரு குன்றக்குடி அடிகளார்
    கலைவாணி புத்தகாலயம்
    சென்னை -17, முதற்பதிப்பு 1992

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    Project Madurai:  http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0467.html

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share