Blog

  • நவராத்திரி கொண்டாட்டம்!…

     சு.கோபாலன்  

     

    நவராத்திரி கொண்டாட்டம்

     

    மூன்று தேவியராம் துர்கா லட்சுமி சரஸ்வதி தெய்வங்களை

    மூன்று நாட்கள் ஒவ்வொரு தேவிக்கும் முறை வைத்து

    ஒன்பது நாட்கள் மொத்தமாய் மெத்த சிரத்தையுடன் வழிபடுவது

    என்பது நவராத்திரி எனப்படும் மங்கலமான கொண்டாட்டமாம்.

     

    சக்திக்கு உரிய தெய்வமாம் துர்க்கையை முதல் மூன்று நாட்கள்

    பக்தியுடன் பணிந்து வழிபட்டு வல்லமை அருளிட வேண்டுவோம்

    பொருள் செல்வத்தின் தெய்வமாம் லட்சுமியை அடுத்த மூன்று நாட்கள்

    அவளருள் செல்வம் அளித்திட வேண்டி  பணிந்து வணங்குவோம்

     

    குறையாச் செல்வமாம் கல்விக்குரிய சரஸ்வதியை இறுதி மூன்று நாட்கள்

    நிறைவாய் அச்செல்வம் நமக்கருளிட இறைஞ்சி அவளடி தொழுவோம்.

     வண்ண வண்ண பொம்மைகளை ஒற்றை எண்ணில் அமைத்த படிகளில்

    கண்ணைக் கவரும் வண்ணம் கொலுவைத்து விளக்கேற்றி தேவி துதிபாடி

    மஞ்சள் குங்குமம் மற்ற மங்கலப் பொருட்களை வரும் மங்கையருக்களித்து

    நெஞ்சம் மகிழ்ச்சியால் நிறைய நவராத்திரி கொண்டாடுவரே இல்லத்தரசிகள்

     

    புத்தகங்கள் அறிவொளி தரும் தெய்வங்களென அவற்றுக்கும்(9ம் நாள்)பூசை செய்வது

    எத்தகைய உயர்ந்த பண்பாடு என்பதில் பெருமை கொள்வோம்.

    வாழ்வு தரும் கருவிகள், ஆயுதங்கள் இயந்திரங்களுக்கும்(9ம் நாள்)பூசை செய்வது

    தாழ்வு வாராது நம்மைக் காத்திட தேவியரை உளமாற வேண்டிடுவோம்!

     

    முற்றும் வாழ்க்கைக்கு ஆதாரமான செல்வங்களை பெற்றிட அலைமகளையும் (லட்சுமி)

    பெற்ற செல்வத்தைக் காத்திடும் வல்லமை தைரியம் பெற்றிட மலைமகளையும் (துர்கை)

    உற்ற முறையில் செல்வத்தை  பயன்படுத்த நன்மதி பெற கலைமகளையும் (சரஸ்வதி)

    ஏற்ற முறையில் நவராத்திரியில் போற்றி வணங்கி வழிபடுவோமே!

    கொடுமை மிக்க மஹிஷாசுரன் எனும் எருமை உருவம் கொண்ட

    அசுரனோடு ஒன்பது நாட்கள்

    கடுமையாய்ப் போரிட்ட சிம்ம வாகினி (துர்கை) பத்தாம் நாள்(விஜய தசமி)

    அசுரனை அழித்து வெற்றி பெற்றாள்

    வடநாட்டிலே

    இராமனின் கதைகளைப் பக்தியுடன் ஆனந்தமாய்ப் பாடி ஆடி நடித்து

    ‘இராம லீலா’ என்று ஒன்பது நாட்கள் கொண்டாடி மகிழ்வரே!

    பத்தாம் நாள்(தசரா) இராமன் இராவணனனைப் போரில் வென்றதைக் கொண்டாட

    பத்துத்தலை இராவணன்,கும்பகர்ணன் மேகனாதன் உருவங்களை எரிப்பரே

     

    பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் பலவிதமாய்க் கொண்டாடினாலும்

    நல்லவை முன் தீயவை இறுதியில் அழியும் என்பதே செய்தியாகும்.

    Share
  • முப்பெரும் தேவியர்…

    செண்பக ஜெகதீசன்

    parvati-lakshmi-and-saraswati-PX89_l

     

    வென்றிட வீரம் தருபவளே

    வேத வெற்பின் மலைமகளே,

    என்றும் செல்வம் நிலைத்திருக்க

    எல்லாம் தந்திடும் அலைமகளே,

    குன்றிடாக் கல்வி கலைகளுடன்

    கொடுத்திடும் தாயே கலைமகளே,

    என்றுமே வாழ்த்துவம் உங்களையே

    ஏற்றம் வாழ்வில் பெற்றிடவே…!

     

     

     

    படத்திற்கு நன்றி: http://www.dollsofindia.com/library/devis/

    Share
  • கல்லூரி முதல்வர் படுகொலை

    என்ன செய்தியைச் சொல்கின்றன அந்த முகங்கள்?
    எஸ்.வி. வேணுகோபாலன்

    News_45799

    அந்த முகங்களை நாளிதழில் பார்க்கையில் அதிர்ச்சியாக இருந்தது. புகைப்படத்தின்கீழ் எந்தக் குறிப்பும் போடாமல் இருந்திருந்தால் எந்த மாதிரியும் புரிந்து கொள்ளலாம் அவர்களை. எதையோ பறிகொடுத்த முகம். யாரையோ இழந்துவிட்ட முகம். எங்கோ தோற்றுப்போய் வந்து நிற்கும் முகம். பசி அல்லது பட்டினி அல்லது களைப்பு. ஓயாத ஒரு வேலையின் களைப்பு.

    அதிகபட்சம், இரண்டு நாள் உறக்கமற்ற இரவுகளைக் கடந்தது போன்ற களைப்பை மீறி, ஒரு படுகொலையைச் செய்துவிட்டு உட்கார்ந்திருக்கும் எந்தச் சுவடும் அதில் தென்படவில்லை. கடந்த காலத்தைப் பற்றியோ, எதிர்காலம் குறித்தோ எந்தச் சிந்தனையும் இல்லாத அந்த முகங்களில் நிகழ்கால வாழ்க்கையை எப்படியாவது அல்லது எப்படியேனும் வாழ்ந்துவிட்டுப் போகிற முகங்களுக்கான ஒரு புதிய மாதிரிப் படிமம் தெரிந்தது. அதிர்ச்சி அளிக்கும் அந்தக் காட்சியை வெறிக்கும் எந்தக் கண்களும் அடுத்த வேலையில் உடனே போய் மறந்துவிட முடியாது அந்த முகங்களை.

    ஏரோநாட்டிக் என்ஜினீயரிங் (ஆகாய விமானங்கள் குறித்த பொறியியல் படிப்பு) மாணவர் ஒருவர்.தகவல் தொடர்பு படிப்பவர் அடுத்தவர். சிவில் பொறியியல் வகுப்பில் இருப்பவர் மூன்றாமவர். கல்லூரியில் ரேகிங் கூடாது என்பது உள்பட ஒழுக்க விதிகளில் மிகவும் கண்டிப்பானவர் கொலையுண்ட கல்லூரி முதல்வர் சுரேஷ் என்பது ஒரு தகவல். சக மாணவர் ஒருவரை பேருந்து இருக்கை தொடர்பான தள்ளு முள்ளு சண்டைக்காக கல்லூரிக்குள்ளும் வெளியேயும் அடித்தார் என்பதற்காக முதலில் குறிப்பிட்ட மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது அடுத்த தகவல். அவரோடு மற்ற இரண்டு மாணவர்களும் சேர்ந்து இந்த வெறிச் செயலில் ஈடுபட்டதாக நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

    கல்லூரி வளாகங்களில் பரஸ்பரம் மாணவரிடையே வாக்குவாதங்கள், மோதல்கள், அடிதடி, வெட்டு, குத்து என்பவை புதியவை அல்லதான். ஒழுக்க விதிகளோடு முரண்படும் மாணவர்கள்-கடுமையாக நடந்து கொள்ளும் கல்லூரி நிர்வாகங்கள் இவையும் புதிதான விஷயமல்ல தான். ஆனால் கண்ணுக்குப் புலனாகாது நுட்பமாக இவற்றின் தன்மையில் தீவிரமான, வேதனை தரத் தக்க, மீளுதல் இல்லாத வகையிலான மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

    இவை கல்லூரி அளவில் மட்டுமல்ல, நமது சமூக வெளியில் வெவ்வேறு தளங்களில் இப்படி நடப்பதை அன்றாடம் செய்தித்தாள் படிக்கும் யாரும் உற்று கவனித்தால் புரிந்து கொள்ளமுடியும். ஒற்றை திசையிலான இறுக்கமான எண்ணப் போக்கு நமது காலத்தின் அடையாளமாக உருப்பெற்று வருகிறது. இதைச் சிந்தனை என்று சொல்வது கூட பிழையானது. சிந்தித்தால் இத்தனை விபத்துக்கள் நடைபெறாது.

    தான் எதை எப்படிப் புரிந்து கொள்கிறோமோ அப்படியே அதனை அடுத்தவர் ஏற்க வேண்டும் என்ற எண்ணப் போக்கு. தன்னை மீறித்தான் அடுத்த சங்கதி என்ற எண்ணப் போக்கு. நட்பு, நேயம், உறவுமுறை எல்லாவித சேர்க்கைக்கும் இது முன் நிபந்தனை. இந்த விதிகள் கடுமையானவை. மாற்றத்திற்கு உட்பட இயலாதவை. இளம் வயதிலிருந்து, சொல்லப் போனால் குழந்தைப் பருவத்திலிருந்தே கூட இத்தகைய எண்ணப் போக்கு சூழலின் உரமும், வரமும் பெற்று செழித்து வளருகிறது. எல்லாக் காலத்திலும் அச்சுறுத்தும் எதிர்வினையின் கவசத்தை மேலே போட்டுக் கொண்டே வளரும் இந்த எண்ணப் போக்கு மேலும் இறுகி கெட்டிப்பட்டுவிடுகிறது.

    அன்பிற்கும், கவனம் மறுக்கப்படுவதற்குமான இடைவெளி மிகக் குறுகியது. நீ என்னாவாகவும் இரு, எப்படியும் நடந்து கொள் என்று விட்டுவிடுவது குழந்தையின்பால் உள்ள அன்பினால் வழங்கப்படும் சலுகை அல்ல. கவனம் செலுத்த மறுக்கும் புறக்கணிப்பின் நரக திசை அது. பள்ளிக்கூட நாட்களில் திருத்த இயலாதிருந்த மாணவரை ஒரு முறை கண்மண் தெரியாமல் அடித்துவிட்டுப் பிறகு அவனது சூழல் என்ன? ஏது? என்று கரிசனத்தோடு நேரே சென்று கண்டறிந்து அந்த மாணவரோடு போராடி, அன்பினால் வென்று மகத்தான வெற்றியை அந்த மாணவர் எதிர்காலத்தில் பெற முடிந்த தமது வாழ்க்கை அனுபவத்தை கல்வியாளர் எஸ்.எஸ்.இராசகோபாலன் பகிர்ந்து கொள்வதுண்டு.

    எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட மாணவர் ஒருவரை தலைமை ஆசிரியர் என்ற முறையில் அழைத்து அவரிடம் ஒரு மரக்கன்றை நடச் சொல்லி அந்தச் செடி போலவே மாணவரும் தழைக்கக் கண்ட எடுத்துக்காட்டு புதுவை கல்வியாளர் ஜே கிருஷ்ணமூர்த்தி அனுபவத்தில் இருக்கிறது. அவ்வளவு எளிதான பயிற்சி அல்ல இது. இப்போது களத்தில் நாம் காணும் சிக்கலான நிலைமை கோருவது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பை.

    பெற்றோரும், ஆசிரியரும், அண்டை அயலாரும் மட்டுமல்ல. அனைவருமே எச்சரிக்கை கொள்ள வேண்டிய சிக்கலான நடப்புகளைக் கடந்து கொண்டிருக்கிறோம் நாம். கடன் கேட்டால் தரவில்லை என்று சொந்த சகோதரியை வெட்டிக் கொல்கிறார் ஒருவர். காதலித்து மணந்தவள் தன்னை வேலைக்குப் போகக் கூடாதா? என்று கேட்டதற்கு அவள் கதையை முடித்துவிடுகிறார் இன்னொருவர். பேருந்து பயணத்தில், ரயில்களில், கடைவீதியில், சாலையில் எங்கேயும் எப்போதும் அற்ப விஷயங்களுக்காகக் கொதிக்கக் காத்திருக்கிறது நமது இரத்தம். மிகப் பெரிய சமூகத் தீமைகளைஏறெடுத்துப் பார்க்காமல் திரும்பிக் கொள்ளும் முகங்கள், சின்னச் சின்ன விஷயங்களுக்காகக் கத்தியைக் கையிலெடுக்கத் தயாராக இருப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

    நமது உணவுப் பழக்கம் நம்மை அறம் சார்ந்த அணுகுமுறைக்கு அனுமதிப்பதில்லை. சைவ, அசைவ உணவுமுறை அல்ல இங்கே குறிப்பிடுவது. வேக உணவு. நார்ச் சத்து குறைவான உணவு. உப்பும், உறைப்பும் கூடுதலாகச் சேர்க்கப் பட்ட உணவு. இயற்கையின் கொடையான காய், கனிகள் மறுக்கப்பட்ட உணவு. உரையாடல்களே அற்ற நமது அன்றாட வாழ்க்கை. பள்ளிக்கூட நாட்களிலேயே பழக்கத்திற்கு வந்து சேரும் மது. போதைதான் நமது எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஓர் இளைப்பாறுதல் என்ற புதிய பண்பாட்டுத் திசை.

    அதற்கு அடுத்தடுத்த கட்ட போதைப் பொருள்கள். அவற்றுக்கான நிதி ஆதாரத்திற்காக என்னவும் செய்யப் பழக்கும் சேர்க்கை அனுபவங்கள். இவற்றின் முடிச்சிலிருந்து விடுவித்துக் கொள்ள இயலாத ஒரு கட்டத்தில் எந்தக் குற்றங்களுக்கும் தயாராகும் உளவியல் போக்கு. இந்த சாபம் இப்போது பிடித்தாட்டுகிறது நமது இளவட்டங்களை. பொறியியல் படிப்பின் தற்போதைய விலை என்ன? என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தப் பொறுப்பைத் தீர்மானிப்பது யார் ?என்பது பெரிய கேள்வி. படிக்கப் போன இடத்தில் தனது முக்கிய கடமை என்ன? என்பதும், அங்கே இருக்கும் சட்டதிட்டங்களில் கேள்வி இருந்தால் அதை ஜனநாயகமாக தட்டிக் கேட்க இடமுண்டா என்பது அடுத்த பிரச்சனை.

    அப்படியே ஆனாலும், வந்த நோக்கத்திற்குப் புறம்பாகத் தம்மையும் அழித்துக் கொண்டு அடுத்தவர் வாழ்க்கையிலும் விளையாடும் அளவு வெறிச் செயலுக்கு மாணவப் பருவத்தில் எப்படி தூண்டுதல் கிடைக்கிறது என்பது கவனம் கோருகிற அடுத்த முக்கிய கேள்வி. வேலையற்ற திண்டாட்டம், பாலியல் குற்றங்கள், போதை போன்றவை எப்படி முதலாளித்துவ சமூகத்தின் இன்றியமையாத தேவைகள் என்று நமது சமூக அறிவியலாளர்கள் விவரிக்கின்றனரோ, அப்படியே புதிய தாராளமய காலம் வேறு தேவைகளை அதுவே உற்பத்தி செய்கிறது. ஊழலை உருவாக்கும்போதே அந்தப் புழக்கத்தில் பெருகும் பணம் எத்தனை புதிய சமூகத் தீமைகளை உருவாக்கித் தரும் என்பதை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.

    பெரும் ஏற்றத்தாழ்வின் ஊடாட்டத்தில் தத்தளிக்கும் ஒரு சமூகம் எப்படி அந்த பிரதிபலிப்புகளின் எதிர்வினைகள் அற்று ஒன்றுமறியாத மாதிரி மனிதர்களை நடத்த முடியும்? இந்தக் கொடிய கரங்களின் பிடியில் நடுத்தர வயதுக்காரர்களே எல்லை மீறும்போது, துடிப்பான வாலிப வயதில் வந்து நிற்போரை நடப்புக் காலம் எத்தனை ஆட்டுவிக்கும் என்பதன் ஒரு அதிர்ச்சிக் கூறு தான் தூத்துக்குடி மாவட்டத்தின் பொறியியல் கல்லூரி விஷயத்தில் நாம் இப்போது எதிர்கொண்டிருப்பது.

    தனி விஷயமாக இதைப் பார்ப்பதும், விசாரிப்பதும், உண்மையைக் கண்டறிவதும், தண்டிப்பதும் சட்டம் பார்த்துக் கொள்ளும். ஆனால் தலை குனிந்து நிற்கும் சமூகம் அதைக் கடந்தும் மிகுந்த கவலையோடு, அக்கறையோடு, எச்சரிக்கையோடு விவாதங்களை நடத்த வேண்டுவது காலத்தின் கரைதலாகும். தனது பொறுப்பை நிறைவேற்றுவதன்றி கொலையுண்டு கிடக்கத் தக்க தவறு எதையும் செய்ததாகத் தெரியாத கல்லூரி முதல்வரின் முகமும் நாளிதழில் இருக்கிறது. அந்த முகத்திற்கும் சமூகம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

    நன்றி: தீக்கதிர்: அக்டோபர் 12

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 16

    தேமொழி

    சகலகலா வாணி

     

    sagalakalaa vani

     

    சகலகலா வாணியே 
    ராகம்:  கேதாரம்
    தாளம் : ஆதி
    பாடல்: சுத்தானந்த பாரதி

    பல்லவி:
    சகல கலா வாணியே- சரணம் தாயே
    சங்கீத வீணா பாணியே
    (சகலகலா வாணியே)

    அனுபல்லவி:
    இகமும் பரமும் நல்ல சுகமளிக்கும் கல்வி
    எங்களுக் கருள்வாய்- மங்களச் செல்வியே
    (சகலகலா வாணியே)

    சரணம்:
    அறம் பொருள் இன்பமும் ஆற்றலும் ஆயுளும்
    ஆத்ம ஞானமும் பூத்துப் புகழ் சிறந்தே
    திறம் பெற்ற தீரராய், திருவுடை வீரராய்
    தேச நலம் புரியும் திவ்ய வரம் தருவாய்
    (சகலகலா வாணியே)

    முதுபெரும் புலவரும் முனிவரும் போற்றிய
    முப்பெரும்  அறிவுடன் இப்பொது விளங்கிடும்
    புதுப்புதுக் கலைகளும் பொருள்களும் அறிந்திங்கே
    பூரணராக வாழும் புண்ணியம் அருளுவாய்
    (சகலகலா வாணியே)

     

    சரசவாணியே! சகலகலாவல்லியே!

    வீணையேந்திய சகலகலா வாணியே
    வேதங்களின் விழுப்பொருள் நாயகியே
    வெண்டாமரையிலுறையும் அன்னையே
    வேண்டுவதெல்லாம் அறிவோய் நீயே!

    நூல்வடிவாய் நின்ற நாயகியே
    பால்வடியும் கவிமாலையானவளே
    கல்மனமும் கனிந்துருகும் காதலாலே
    சொல்வனமாய் திகழும் உன்னருளாலே!
    – பவள சங்கரி

    கமலமே  உந்தன் வெண்ணிறமே
    அமரவே  என்  உள்ளமே
    உயருமே  உவகை கொள்ளுமே!

    வீணையே உன் வடிவு விந்தையே
    ஆணையாய்  உன் ஒலியிலே
    இருப்பவள் தன்னையே
    அருள்தரச்சொல்லுவையே!
    – ஷைலஜா

    வெள்ளைக் கலையுடுத்தி வீணையுடன் வீற்றிருப்பாய்
    வெல்லும் திறமளித்து வீழ்ச்சியில்லா வாழ்வளிப்பாய்
    வெம்மை நிறைந்தொளிரும் பொன்சுடரே சாரதையே
    வேண்டும் வரம் பெறவே கரம் குவித்தோம் பதமருள்வாய்

    வாணி நாமகளே பாரதியே பாமகளே
    வாக்கின் எழிலரசி  வணங்குகிறோம் கலைமகளே
    வேத நாதன் தொழும் ஞானத் திருமகளே
    வெற்றி முரசொலிக்க‌  விரைவாய் வந்தருள்வாய்
    – பார்வதி இராமச்சந்திரன்

    நான்முகன் நாயகியே வேதவல்லி உன்னை
    நாத மழையில் நித்தம் நனைத்திடுவேன்
    நாயகன் மனம்மகிழ் நாதஸ்வரூபிணி

    அருள்வாய் வரங்கள் தயங்காது நீயினி
    பார் முழுதும் உன்னை பூஜிக்கும் நாளிது
    விஜய தசமியிலே வேண்டிடும் சேயிது
    – ஜெயஸ்ரீ

     

    பாடல் வரிகளை வழங்கிய சுத்தானந்த பாரதிக்கும், எனது தோழியருக்கும் நன்றி.

    படத்தைப் பற்றியக் குறிப்பு:
    சரியாக கால் நூற்றாண்டிற்கு முன் வரைந்த கோட்டோவியம் இது.  மாசுபடிந்து, களையிழந்து இருந்த படத்தை ஒளிவருடி, எண்ணிம வடிவில் கணினியின் உள்ளிழுத்து, பிரகாசத்தை அதிகரித்து, குறைகளை வெளிறச் செய்து, பிரதி எடுத்து, வரிகளை மீண்டும் செப்பனிட்ட படம். பெரும்பாலும் மாதிரி பார்த்து வரையும் என் பழக்கத்தைத் தவிர்த்து, மாதிரியின்றி, மனதில் பதித்திருந்த பல படங்களில் கண்ட சரஸ்வதியின்  படத்தை மனக்கண் முன் கொண்டுவந்து வரைந்த ஓவியம் என்பதால் என் மனதிற்கு நிறைவு தந்த ஓவியங்களில் ஒன்று.

     

     

     

     

     

     

    Share
  • சந்தனம்போல் கமழவைத்துக் காட்டு

     

    பிச்சினிக்காடு இளங்கோ
    சந்தமென்றும் சிந்துஎன்றும்

    சங்கதிகள் தெரியாமல்

    சத்தமிட்டுப் பேசுகிறான் பேச்சு-அது

    சரக்கில்லா வெத்துவேட்டு ஆச்சு
    பந்தமென்றும் சொந்தமென்றும்

    பங்கமிலா நண்பரென்றும்

    கொண்டாடும் மனநிலையை விட்டு-அவன்

    குண்டரெனக் காட்டுகிறான் மட்டு

     

    வண்டாடும் சோலையிலும்

    செண்டாடும் மாலையிலும்

    கொண்டாடும் புள்ளினமாய் மாறு- அதில்

    திண்டாடும் மனநிலையே வேறு

     

    சிந்தனைத்தேன் ஊறுவதை

    சிந்தித்தே மாறுவதை

    சந்தனம்போல் கமழவைத்துக் காட்டு- அதுவே

    சந்ததியை மகிழவைக்கும் பாட்டு

     

    போதிமரம் சேதிதரும்

    சோதியென நீதிதரும்

    வேதமெனும் மந்திரம்போல் பாடு- சூது

    பேதமெனும் தந்திரத்தைச் சாடு

     

    மானுடத்தைப் பாடுகிற

    மாந்தரினம் தேடுகிற

    ஞானமது பாட்டினிலே வேண்டும்-தமிழ்த்

    தேனமது பருகிடவே மீண்டும்

     

    Share
  • சுழற்சி

    மாதவன் இளங்கோ

    சென்னை வடபழனியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் இருந்த அந்த வீடு, கிட்டத்தட்ட ஒரு வருடம் நான்கு நாட்களுக்கு முன்பு அது இருந்த அதே நிலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

    இது நிச்சயம் என்னுடைய கதை அல்ல. நான் மேலே குறிப்பிட்ட அந்த வீட்டில், ஒரு வருட காலமாக வசித்து வந்த கார்த்திக் – திவ்யா தம்பதியினரின் கதை.

    அன்று அந்த வீட்டின் ஒரு மூலையில் புத்தகக் குவியல், மறு மூலையில் பாத்திரக் குவியல், இன்னொரு மூலையில் இருந்த திவானின் மீது கண்ணாடிப் பொருட்கள் என்று வகைப்படுத்தி வைத்துக்கொண்டிருந்தனர் கார்த்திக்கும், திவ்யாவும்.

    இது தவிர, பலதரப்பட்ட கடைகளின் பிளாஸ்டிக் உறைகள் –

    உடைந்துபோன பென்சில், தலை வேறு முண்டம் வேறாகக் கிடக்கும் மைதீர்ந்த பேனாக்கள், ஸ்கெட்ச் போன்ற எழுதுபொருட்கள் –

    கம்பிவடங்கள், தேய்ந்து போன குறுந்தகடுகள், தொலைந்து போய் விட்டதாய் அவர்கள் நினைத்துக்கொண்டிருந்த உடைந்து போன தொலையியக்கி ஒன்று, என்றைக்கோ உயிரை விட்டிருந்த மின்கலங்கள் போன்ற மின் கழிவுகள் –

    வெவ்வேறு அளவிலான அட்டைப்பெட்டிகள், நைந்து போன கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள், அறிமுக அட்டைகள், தொலைபேசி கட்டண ரசீதுகள், கடன் அட்டை கணக்கு அறிக்கை போன்ற காகிதக் குப்பைகள் –

    இப்படி அனைத்து வகையான எண்ணிலடங்கா குப்பைகள் அந்த வீடெங்கும் இறைந்து கிடந்தன.

    என்றோ படித்து முடித்துவிட்டுப் பரண் மேல் போட்டு வைத்திருந்த  புத்தகங்களை எடுத்து தூசுதட்டி, புத்தகக் குவியலின் மீது எறிந்து கொண்டு இருந்தான் கார்த்திக். அவன் ஒவ்வொரு முறை எறிந்த போதும் புத்தகக் குவியலைச் சுற்றி இருந்த தூசிப்படலம் சீற்றத்துடன் மேலெழுந்து, சில நொடிகளில் வலுக்குன்றி மெதுவாய் அடங்கியது. ஒரு சில கனத்த புத்தகங்களை எறிந்தபோது உருவான தூசிச்சுனாமி அவன் நாசிவரை சென்று சீண்டிப் பார்த்தது.

    “ஏன் இப்படி புக்ஸ எல்லாம் தூக்கிப் போட்டுட்டே இருக்க?” என்று மூக்கை விரல்களால் பொத்தியபடி கேட்டுக்கொண்டே சமயலறையில் இருந்த இரண்டு ஒட்டா தவாக்களை கொண்டு வந்து பாத்திரப் பகுதியில் வைத்தாள் திவ்யா.

    அன்றைக்கு மட்டும் முப்பத்து மூன்றாவது முறையாக தும்மிவிட்டு, “அதுக்கென்ன பா. பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வந்து எல்லாம் ப்ராபரா எடுத்து பேக் பண்ணிடுவாங்க. நாம கேடகரைஸ் மட்டும் பண்ணா போதும்” என்றான் கார்த்திக்.

    “அதுக்காக புக்ஸ போயி யாராவது தூக்கிப் போடுவாங்களா?”

    “ஏன் சாமி கண்ண குத்துமா?” என்று கடவுளை வம்புக்கு இழுத்தான் கார்த்திக்.

    “இல்ல. சரஸ்வதி சபிச்சுடுவா. அடுத்த பிறவியில உனக்குப் படிப்பே வராது.” என்று புன்னகைத்துக் கொண்டே குழந்தைத்தனமாக அச்சுறுத்தினாள் திவ்யா.

    “அது சரி. அடுத்த பிறவிக்கு பயந்துகிட்டு மேல கீழனு ஏறி எறங்கிட்டு இருந்தா, இந்தப் பிறவியில என் முதுகு என்ன ஆகறது?”

    “ஆளவிடு சாமி. உன் லெக்சர் செஷன ஆரம்பிச்சிடாத.” என்று நொந்துகொண்டவளிடம் அங்கே தூசிபடிந்து கிடந்த ‘உடைந்த நிலாக்கள்’ என்ற புத்தகத்தை எடுத்துக் காட்டினான் கார்த்திக்.

    “ஹே, திவி, இந்த புக் உனக்கு நியாபகம் இருக்கா?”

    “ஒ, யா. நாம இங்க வந்த பர்ஸ்ட் டே வாங்கினதுன்னு நெனெக்கிறேன்.”

    “எஸ். அன்னைக்கு நைட் நாம ரெண்டு பேரும் சேர்ந்து இத படிச்சோம்.”

    “யா. அப்ப நீ பொயெடிகா சொன்னது கூட எனக்கு நியாபகம் இருக்கு. ‘உடைந்த நிலாக்களைப் பற்றி வாசிக்கும் உடையாத நிலாக்கள்’”.

    காதலை எதிர்த்த தம் குடும்பங்களைத் துறந்து, திருமணம் செய்து கொண்ட அந்த நிலாக்களின் நினைவுகள் ஒரு வருடம் பின்னோக்கிப் பயணித்தது.

    “நாம பர்ஸ்ட் என்ன வாங்கினோம்னு நியாபகம் இருக்கா திவி உனக்கு?”

    “ஐ திங்க் ஃபேன். அந்த டைம்ல பயங்கர வெயில். சோ, பர்ஸ்ட் ஃபேன் வாங்கிட்டு, அந்த எலக்ட்ரிகல்ஸ் கடைலயே லைட்செல்லாம் வாங்கிட்டு வந்து நாம ரெண்டு பேரும் சேர்ந்து பிக்ஸ் பண்ணோம்.”

    அவள் குறிப்பிட்ட அன்றைய தினம் அந்த வீட்டில் இருந்தவற்றை மிக எளிதாகப் பட்டியலிட்டு விடலாம்.

    இரண்டு பெட்டிகள். ஒரு பை.

    இரண்டு தலையணைகள். ஒரு மெத்தை. அதுவும் கூட தரையில்தான் கிடந்தது.

    மெத்தைக்கு அருகே இரண்டு தண்ணீர் பாட்டில்கள்.

    உடைந்த நிலாக்கள் புத்தகம், அதைப் படித்துக்கொண்டிருந்த அந்த இருவர். கொஞ்சம் சிரிப்பு. நிறைய சோகம்.

    அன்று மட்டும் திவ்யா அவளின் பெற்றோரையும், தம்பியையும் நினைத்து ஒரு பத்து முறையாவது அழுதிருப்பாள். அன்று மட்டுமல்ல, அவள் அழுவதும், அவன் அவளை அணைத்துத் தேற்றுவதும் நாள்தோறும் நடந்துகொண்டுதானிருந்தது.

    காதலில் வெற்றி கிட்டினாலும் கிட்டத்தட்ட வெற்றிடத்தில் ஆரம்பித்த அவர்களின் வாழ்க்கையில், சிறிது சிறிதாகப் பொருட்களும், மனிதர்களின் அன்பும் வந்து குவிந்து கொண்டிருந்தன.

    முதலில் சமையலறை நிரம்பியது. அடுத்ததாகப் படுக்கையறை, பின்னர் வரவேற்பறை என்று படிப்படியாக ஒவ்வொரு அறையிலும் பொருட்கள் பல்கிப் பெருகியது.

    முதலில் கல்லூரி நண்பர்கள் வந்தார்கள், பின்பு உடன் பணிபுரிபவர்கள் வந்து வாழ்த்தினார்கள். அவனது சகோதரி வந்தாள்; அவளது சகோதரன் வந்தான். இருவரது சித்தி சித்தப்பாவும், அத்தை மாமாவும் வந்தார்கள். அவ்வளவு ஏன், அவளது பாட்டி கூட வந்துவிட்டாள்.

    ஆனாலும் அவளின் அழுகை நின்றபாடில்லை. அவனுக்கும் தேற்றுவது சலிக்கவில்லை. அவளுடைய அழுகைக்கான காரணத்தைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

    ஒரு புரோகிதன் இன்னொரு புரோகிதனின் மகளை மணக்கலாம். ஒரு நாவிதன் இன்னொரு நாவிதனின் மகளை மணக்கலாம். ஒரு வைசியன் இன்னொரு வைசியனின் மகளை மணக்கலாம். ஆனால் ஒரு மென்பொருள் வல்லுநரான அவன், இன்னொரு மென்பொருள் வல்லுநரின் மகளான அவளை விரும்பியது தவறாம். ஏனென்றால் அவன் சத்ரியன் மகனாம். இன்னும் சொல்லப்போனால், அவளே கூட ஒரு மென்பொருள் வல்லுநர் தான். இந்தப் பாழாய்ப்போன சமூகத்தின்  தர்க்கம் எங்கோ இடிக்கத்தான் செய்கிறது.

    திருப்பதி, மதுரை, வேளாங்கண்ணி போன்ற வெளியூர்களுக்கும், உள்ளூரிலேயே இருக்கும் மயிலாப்பூர், திருவல்லிகேணி போன்ற இடங்களுக்கும் அவர்கள் சென்று வந்ததனால், கடவுளர் படங்களால் பூஜையறை (பூஜை அலமாரி என்று தான் சொல்லவேண்டும்) நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பொம்மை, சிலையென்று வேறு வாங்கியதில், கிட்டத்தட்ட நவராத்திரி கொலு வைக்குமளவிற்கு அவை பெருகிவிட்டதால் இட நெருக்கடியின் காரணமாகப் பரணுக்கு புலம்பெயர்ந்துவிட்டன.

    அந்த இளம் தம்பதியினர் உதகை, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஊர்களுக்குச் சென்றதாகத் தெரியவில்லை.

    இரவு நேரங்களில் பலமுறை தாம்பரத்திலிருக்கும் அவளது வீட்டிற்கு மிக அருகே சென்று காருக்குள் இருந்தபடியே, உயர்த்தப்பட்ட ஜன்னலினூடே அவளது தாயைப் பார்த்துவிட்டு வந்து, அதைப்பற்றி இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்தப் பேச்சுகளுக்கிடையே அவளுடைய அழுகைச் சத்தம் அடிக்கடி எட்டிப் பார்க்கும்.

    ஒருநாள் கார்த்திக்கின் தாயும் தந்தையும் வந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் இவர்களுக்கு அப்படியொரு திகைப்பு; அப்படியொரு களிப்பு. அவள் விதம்விதமாய்ச் சமைத்தாள். இருவரும் அவர்களோடு சிரித்தார்கள்; மகிழ்ச்சியில் திளைத்தார்கள்; கொண்டாடினார்கள்.

    ஆனாலும், அவளின் அழுகை ஓய்ந்தபாடில்லை. அழும் நேரம் மட்டும் மாறியிருந்தது. அவன் அலுவலகத்திற்குச் சென்றவுடன் தனியாய் இருக்கும்போது மட்டும் குமுறினாள். அவனாவது நிம்மதியாய் இருக்கட்டுமே என்று நினைத்திருக்கலாம். பூஜை அலமாரியின் முன்பு நின்று மேலே (முதலில்) குறிப்பிட்ட ஊர்களின் பெயர்களைச் சொல்லி அங்கு வருவதாய் வேண்டி வேண்டி அழுதாள்.

    யாரேனும் வந்தால் அதீத மகிழ்ச்சியும், யாருமில்லாத நேரத்தில் அதீத துக்கமும் என்று அவளுடைய மனநிலை மாறி மாறிச் சுழன்று கொண்டே இருந்தது.

    கடைசியில் வந்தே விட்டார்கள் – அவளின் பெற்றோர்கள். அவள் அழுதாள். அவர்கள் தேற்றினார்கள். அவன் ஆனந்தத்திலும் அமைதியாய் கைகட்டி நின்றான். அவள் மீண்டும் அழுதாள். அவளது இத்தனை நாள் சிரிப்பின் ஆழத்தில் புதைந்து கிடந்தது என்னவோ துக்கத்தின் ஈரம் மட்டுமே. ஆனால், அன்றைய நாள் அழுகையின் ஆழத்தில் ஆனந்தமே புன்னகைத்தது. அவளது ஒவ்வொரு அழுகையின்போதும் துளித் துளியாய் வெளியேறிய துக்கத்தின் ஈரம், அன்று முழுவதுமாய் வெளியேறி விட்டது போலும்.

    கடந்த ஒரு வருடத்தில் பொருட்களின் எண்ணிக்கையும் மனிதர்களின் வரவும் அதிகரித்து விட்டிருந்தபடியால், மனதிற்கு நிறைய பிடித்திருந்தாலும் அந்த வீடு அவர்களுக்குப்  போதுமானதாய் இல்லை. அதனால் வேளச்சேரியில் அதை விட சற்றுப் பெரிய அளவிலான அடுக்கு வீடொன்றை வாடகைக்கு எடுத்து, அங்கு செல்வதற்காகத்தான் அன்றைக்கு அவ்வளவு பரபரப்பாகத் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

    நள்ளிரவு வரை பொருட்களை வகைப்படுத்தி வைத்துவிட்டு அவளின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டார்கள்.

    அடுத்தநாள் இருவரும் வந்தார்கள், கூடவே அவளுடைய தந்தை, தம்பி மற்றும் அவனுடைய நண்பனும் வந்திருந்தார்கள். அவர்கள் வந்த சில நிமிடங்களிலேயே ‘பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ வந்து எல்லா பொருட்களையும் அட்டைப்பெட்டிகளுக்குள் அடுக்கி வைத்து, அதன் மேல் வகை விவரத்துணுக்குகளை ஒட்டி, ஒவ்வொன்றாய் வெளியே எடுத்துக்கொண்டு போனார்கள். நம்பவே மாட்டீர்கள், ஐம்பது நிமிடங்களில் அனைத்தையும் நேர்த்தியாக முடித்து வீட்டைக் காலி செய்துவிட்டார்கள்.

    “என்ன இவ்ளோ சீக்கிரம் பேக் பண்ணி கொண்டுபோயிட்டாங்க?” என்று வியந்தாள் திவ்யா.

    “அதுக்குத்தான் ப்ரோபெஷனல்ஸ் வேணுங்கறது. சரி, மத்தவங்கல்லாம் போகட்டும். நாம கடைசியா ஒருமுறை செக் பண்ணிட்டு பைக்ல  போய்டலாம்” என்று கூறி மற்ற அனைவரையும் அனுப்பிவைத்துவிட்டு, இருவரும் சோகம் ததும்பிய முகத்தோடு வீட்டைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

    நான் மேலே குறிப்பிட்டிருந்த குப்பைப் பட்டியலில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை இன்னும் இங்கேயும் அங்கேயும் இறைந்து கிடந்தன. வீட்டைக் காலி செய்த பின்பு எக்காரணத்தைக் கொண்டும் வீட்டைப் பெருக்கவோ, கழுவித் துடைக்கவோ கூடாது என்று கண்டிப்பான உத்தரவைப் போட்டிருந்தார் வீட்டு உரிமையாளர்.

    “ரொம்ப ராசியான வீடு கார்த்திக். போறதுக்கே மனசே இல்ல. எவ்ளோ நல்ல விஷயமெல்லாம் நடந்திருக்கு இந்த வீட்ல…” என்றாள் திவ்யா.

    “என்ன பண்றது. யாராவது வந்தா தங்கக் கூட இடமில்லையே.”

    “இந்த ஒரு வருஷத்துல நாம நெனெச்செ பாக்காதது எல்லாம் நடந்துடுச்சி கார்த்திக். நம்ம மேரேஜ். நீ செத்தாலும் உன்ன பாக்க வரமாட்டேன்னு சொன்ன என் அப்பா இன்னைக்கு நாம வீடு காலி பண்றதுக்கு வந்து ஹெல்ப் பண்ணிட்டு இருக்கார். நாம இந்த வீட்டுக்கு வந்தப்ப எவ்ளோ காலியா இருந்திச்சி. இன்னைக்கு ஒரு டெம்போவே பத்தாத அளவுக்கு நிரம்பிடிச்சி. இவ்ளோவும் யாரோட ஹெல்பும் இல்லாம பண்ணியிருக்கோம். உன்னோட ஹார்டு வொர்க் கார்த்திக். எவ்ளோ பெயின். எவ்ளோ சந்தோசம்.”

    “லைபே அப்படித்தான் திவி. சந்தோஷம், துக்கம், அப்ஸ் அண்ட் டவுன்ஸ், நல்லது, கெட்டதுனு சுத்திட்டே தான் இருக்கும். இப்படி மாறி மாறி வந்து நான் இருக்கேன்னு உணரவெக்கும். இதோ இந்த ஃபேன்-லர்ந்து வர்ற காத்து வெதருக்கு ஏத்த மாதிரி சூடாவும், சில்லுனும் மாறி மாறி வீசி ஃபேன் இருக்கறத உணர்த்தறது மாதிரி.”

    “ப்பா… தத்துவம் பா. ரொம்ப புக்ஸ் படிக்காதன்னு சொன்னா கேக்கறியா? இன்னைக்கு டெம்போல பாதி எடத்த உன் புக்ஸ்தான் அடைச்சிருக்கு. ” என்று கூறிவிட்டு ஹாலுக்குள் நுழைந்தவள் சடாரெனத் திரும்பி, “கார்த்திக், ஃபேனை மறந்துட்டோமே?” என்று கேட்டாள்.

    “ப்ரீயா விடு திவி. ஒரு வருஷம் இருந்திருக்கோம். ஃபேன், லைட்டெல்லாம் இங்கயே விட்டுடலாம். ஓனர் வேற தங்கமான மனுஷன்.” என்றான்.

    “போப்பா. நாம மொத மொதல்ல வாங்கினதே இந்த ஃபேன் தான். அத பிக்ஸ் பண்ண ஸ்டூல் கூட கிடையாது அன்னைக்கி. இப்போ பாரு. எல்லாம் இந்த பேன் வந்த ராசி. அதுக்கு பதிலா ஓனருக்கு எதாச்சும் காஸ்ட்லியா கிப்ட் வாங்கிக் கொடுத்திடலாம். ப்ளீஸ்…” என்று கெஞ்சினாள்.

    “ஒகே ஒகே. சென்டி போடாத. கழட்டி எடுத்திட்டுப் போய்டலாம்” என்று கூறிவிட்டு சுவிட்சை தட்டினான்.

    கார்த்திக் மின்னோட்டத்தை நிறுத்திய அடுத்த நொடி –

    அவளின் சுக துக்கங்களில் அவளுக்கே தெரியாமல் பங்கெடுத்து, ஒவ்வொருமுறை அவள் அழுதபோதும் அவளது கண்ணீரின் ஈரம் தாங்கிய அந்த அறையின் காற்றை, சுழற்றி சுழற்றி வேகமூட்டி புறந்தள்ளி, அவளது தாயிடம் கொண்டுபோய் சேர்க்கச் சிறு உதவிபுரிந்த என்னை இங்கேயே விட்டுவிட்டு போய்விடுவாளோ?‘ என்று அதுவரை எண்ணி ஏங்கிச் சுழன்றுகொண்டு இருந்த நான், குதூகலத்துடன் என்னுடைய சுழற்சியை படிப்படியாகக்  குறைத்துக் கொண்டு, அவர்களோடு புறப்படத் தயாரானேன்.

    Share
  • காதலிதன் நலம் பாராட்டல்!

     

    புவனேஷ்வர்

     

    சித்திரமொன்று ஜீவனுயிர் பெற்று

    முத்தொளி யன்னநீ வந்தாய் – ஒரு

    செந்திரு வன்னாயுன் சோதிமு கங்கண்டு

    சிந்தை திறை கொடுத்தேன்;

     

    நிசித்திரள் மேகமுன் ஒண்குழலாமதில்

    வசித்திடும் முழுநிலவுன் ஒளிவதனம்;

    அந்தநிலா தேய்ந்தழிந்து பின்வளரும் காண் – என்றும்

    தேயாத திலகமிட்ட திங்களடி நீ.

     

    நினைக்கின்றேன் உன்னை நான் என்

    நினைவினில் வாழ்கின் றாய்நீ;

    பனிக்காலப் போர்வை போலும்

    இனிக்கின்ற இதம் நீ என்னில்;

     

    காதல் வாழ்கவென்று கூத்திடுவோம் காண் – உயர்

    காதல் நலமெனவே களி நடமிடுவோம்;

    காதலது நல்லின்பம், காதலி தெய்வம் – அதில்

    ஊறு சுவை உண்டு அது உயிர்கட்கமுதாம்;

     

    Share
  • உன்னாலே……

    தனுசு

    நெரிசல் மிகுந்த சாலையில்
    உன்னோடு
    ஒரு
    நடைபயணம் போகிறேன்

     

    அங்கே பார்
    அத்தனை பேரின் கண்களும்
    உன் மீதும் என் மீதும்
    என் ஆண்மைக்கே கம்பீரம் சேர்த்தது
    நம் ஜோடிப்பொருத்தம்

     

    பட்டால் நெய்த வனப்பும்
    சுட்டு இழுக்கும் உன் இளைப்பும்
    சொல்லாமல் சொல்கிறது
    நீ ஒரு
    தொட்டால் மலரும் பூவின் ஜாதியென்று

     

    உன்னை முதன் முதலில்
    ஒரு திருமணத்தில் பார்த்தேன்
    பின்
    என் நண்பனுக்குப் பெண் தேட
    இணையம் வந்தபோது
    துணையாக உன்னையும் கண்டேன்
    பின்
    வணிகவளாகத்தில் பார்த்தேன்

     

    அன்றிலிருந்து
    கனவும்
    கடமையும் நீயானாய்
    தினமும்
    தரிசனம் நீயானாய்

     

    ஆனால்
    நான் மட்டும்
    நானாயில்லை
    உன் நினைவே எனை ஆண்டதன்றி வேறில்லை

     

    உனக்காக நின்றேன்
    பெற்றோரிடம் போராட்ட வீரனாக
    சகோதரியிடம் சிபாரிசுக்காக

     

    முயற்சியும் பலன் தந்தது
    என் நம்பிக்கையும் வென்றது
    இன்று
    நீ
    என்னிடம்
    இனி
    நீ
    எனக்கே
    எனக்கு மட்டும்

     

    அன்று
    நீயே அறியாமல்
    உன்னை பார்க்க வந்தேன் அடிக்கடி
    இன்று
    எனக்கு நீ சொந்தமானதால்
    நான் உயர்ந்தேன்
    வாழ்க்கையில் இன்னும் ஒரு படி

     

    அன்று
    ஆதாமையும் ஏவாளையும் சேர்க்க
    ஒரு ஆப்பிளை படைத்தான் இறைவன்
    இன்று
    எனக்காக
    ஆப்பிளாகவே
    படைத்தான் உன்னை

     

    இதோ
    என்னை யாரோ அழைக்கிறார்
    அவருக்கு
    உன் மூலமே பதில் சொல்கிறேன்
    ஹலோ…
    ஹலோ…

     

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 5ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    பொது

    உடை கோவணம், உண்டு உறங்கப் புறந்திண்ணை, உண்டு உணவிங்கு

    அடை காய் இலை உண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந்துணைக்கே
    விடை ஏறும் ஈசர் திருநாமம் உண்டு, இந்த மேதினியில்
    வடகோடு உயர்ந்தென்ன, தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே. 1.

    இந்த பூவுலகில் வாழ்வதற்கு வழியா இல்லை? உடுக்க கெளபீனம், படுத்து உறங்குவதற்கு வீட்டின் வாயிற்புறத் திண்ணை, பசிக்கிறதா கவலை இல்லை உண்பதற்கு இலைகள், காய்கள் இவைகள் உண்டு, தாகமெடுத்தால் அருந்துதற்குத் தண்ணீர் உண்டு, உற்ற துணையாக ரிஷப வாகனம் மீது அமர்ந்திருந்து அருள் பாலிக்கும் சிவபெருமானின் ஐந்தெழுத்துத் திருமந்திரமுண்டு, ஆதலினாலே இவ்வுலகில் எனக்கு என்ன கவலை. அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் பிறைச் சந்திரனுடைய வடகோடு உயர்ந்தால் என்ன, தென்கோடு தாழ்ந்தால்தான் எனக்கென்ன கவலை. (மூன்றாம் பிறையின் வடகோடு உயர்ந்து, தென்கோடு தாழ்ந்திருந்தால் மழைக்கு அறிகுறி. இப்படி உடுக்க, இருக்க, உண்ண, அருந்த, எண்ண எல்லாம் இலவசமாய்க் கிடைக்கும்போது சந்திரன் காட்டும் குறிகளின்படி மழை பெய்தால் என்ன, பெய்யாவிட்டால்தான் என்ன, நன்மைகள் விளைந்தாலென்ன, தீமைகள் விளைந்தால் என்ன).

    இதே பாடல் வரிகளை மகாகவி பாரதியும் தன் சுயசரிதையில் “தேம்பாமை” எனும் துணை தலைப்பில் சொல்லும் கருத்தும் கவனிக்கத் தக்கது:–

    “வடகோடிங் குயர்ந்தென்னே, சாய்ந்தா லென்னே,
    வான் பிறைக்குத் தென் கோடு” பார்மீதிங்கே
    விடமுண்டுஞ் சாகாமலிருக்கக் கற்றால்
    வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
    திடங் கொண்டு வாழ்ந்திடுவோம், தேம்பல் வேண்டாம்
    தேம்புவதில் பயனில்லை, தேம்பித் தேம்பி
    இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
    எதற்குமினி அஞ்சாதீர் புவியிலுள்ளீர்.”

    இந்த வரிகளையும் பட்டினத்தாரின் மேற்சொன்ன வரிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

    வீடு நமக்குத் திருவாலங்காடு, விமலர் தந்த
    ஓடு நமக்கு உண்டு வற்றாத பாத்திரம் ஓங்கு செல்வ
    நாடு நமக்கு உண்டு கேட்டதெல்லாம் தர நன்னெஞ்சமே
    ஈடு நமக்குச் சொலவோ ஒருவரும் இங்கில்லையே. 2.

    என் நெஞ்சே கேள்! நமக்கு வீடு திருவாலங்காடு எனும் புண்ணியத் தலமாகும் (காரைக்கால் அம்மையாருக்குக் கையிலையில் இருந்து சிவபெருமான் அருள் புரிந்தத் தலம் என்பதால்), சிவனடியார்களுக்கே உரிய பிட்சா பாத்திரமாக சிவன் அளித்த ஓடு இருக்கிறது, அது அட்சய பாத்திரம் அன்றோ! எடுக்க எடுக்க உணவளிக்கும் பாத்திரமாகிய அதுவும் இருக்கிறது, இந்த பரந்து விரிந்த நாடும் மக்களும் இருக்கிறார்கள் நமக்குத் தேவையானவற்றைக் கேட்டதும் அள்ளிக் கொடுக்க, அப்படிப்பட்ட எமக்கு இங்கு ஈடு இணை யார் இருக்கிறார்கள் சொல் பார்ப்போம். “மேலே ஆகாயம், கீழே பூமி” என்றொரு சொல் வழக்கு உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு எதற்கென்று கவலைப்பட வேண்டும்?

    நாடிக்கொண்டு ஈசரை நாட்டம் உற்றாயில்லை, நாதரடி
    தேடிக்கொண்டாடித் தெளிந்தாயில்லை, செகமாயை வந்து
    மூடிக்கொண்டோமென்றும் காமாயுதங்கள் முனிந்த என்றும்
    பீடிப்பையோ நெஞ்சமே உனைப்போல் இல்லை பித்தர்களே. 3.

    ஓ என் மனமே! இறைவனின் கருணையை நாடிக் கண்டுகொள்ளவில்லை, அவன் பாதாரவிந்தங்களைத் தேடி அடைந்தாயில்லை, அவன் அருள் கருணையை உணர்ந்தாயில்லை, இது குறித்தெல்லாம் சிறிதும் கவலை கொள்ளாமல், உலக மாயா விவகாரங்களில் மயங்கி வீழ்ந்து, அவை தரக்கூடிய தொல்லைகளால் மனம் வருந்தி வாடுகிறேன் என்றும் சொல்லி வருந்துவாயேல், உன்னைப் போல பைத்தியக்காரர்கள் உலகில் வேறு எவரும் இல்லை என்பதை உணர்ந்து கொள்.

    கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
    பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
    மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்புமியான்
    செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே. 4.

    ஐயனே! இறைவா! எனது கைகள் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்க, விழிகளோ வேறெதையோ பார்த்துக் கொண்டிருக்க, மனமோ வேறெதையோ எண்ணிக் கொண்டிருக்க, வஞ்சனையை மாற்றி மாற்றிப் பேசுகின்ற நா வேறெதையோ பேசிக் கொண்டிருக்க, புலால் நாற்றம் வீசும் இந்த உடலானது எதையெதையோ அனுபவிக்க, செவிகள் எதையெதையோ கேட்டுக் கொண்டிருக்க பூஜை செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு நான் மலரை எடுத்து உன் சிலையில் அல்லது படத்தின் மீது போட்டால், இறைவா, அதை நீ எங்ஙனம் ஏற்றுக் கொள்வாய் வினைதீர்க்கும் அருள் கொண்ட இறைவா சொல்.

    கண்ணுண்டு காணக், கருத்துண்டு நோக்கக் கசிந்துருகிப்
    பண்ணுண்டு பாடச் செவியுண்டு கேட்கப் பல்பச்சிலையால்
    எண்ணுண்டு சாத்த எதிர்நிற்க ஈசன் இருக்கையிலே
    மண்ணுண்டு போகுதையோ கெடுவீர் இந்த மானிடமே. 5.

    இறைவனின் தெய்வீகக் காட்சியைக் காண அவன் அளித்துள்ள இரு கண்கள் இருக்கின்றன; அவனுடைய கருணை உள்ளத்தை எண்ணி உருக நல்ல மனம் இருக்கிறது; அவனை எண்ணி உருகிப் பாட அவன் புகழ்பாடும் பாமாலைகள் பல உள்ளன; அவற்றைக் கேட்டு இன்புற்று அவனை வணங்க இரு செவிகள் உள்ளன; ஈசன் திருவடிகளைப் போற்றி பச்சிலைகளால் அர்ச்சிக்கப் பல மந்திரங்கள்உண்டு; இப்படிப் பல விதங்களால் அவன் அருளால் அவனடி தொழ வழிமுறைகள் இருக்கும்போது, இவற்றுக்காகவே இப்புவியில் பிறவியெடுத்த மானுடப் பிறவியில் உடலை வீணாக மண்ணுக்குத் தின்னக் கொடுக்கின்றோமே, கெடுக இந்த மானுடப் பிறவி.

    சொல்லினும் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்
    அல்லினும் மாசற்ற ஆகாயம் தன்னிலும் மாய்ந்து விட்டோர்
    இல்லிலும் அன்பரிடத்திலும் ஈசன் இருக்கும் இடம்
    கல்லினும் செம்பிலுமோ இருப்பான் எங்கள் கண்ணுதலே? 6.

    நெற்றியொற்றைக் கண்ணனான சிவபெருமான், அவன் புகழ்பாடும் சொற்களிலும், அந்த மந்திரச்சொற்களின் முடிவான பலன்களிலும், வேதங்களின் சாரத்திலும், இருளிலும், தெளிந்த வெட்டவெளி ஆகாயத்திலும், சிவனோடு ஐக்கியமாகிவிட்ட அன்பர்கள் இல்லங்களிலும், சிவனடியார்களிடத்திலும் இருக்கின்ற ஈசனை அங்கெல்லாம் சென்று பார்க்காமல், கல்லில் வடித்த சிலைகளிலும், செம்பில் வார்த்த சிலா வடிவங்களிலுமா இருப்பான். அன்பர் உள்ளங்களே அவன் வாழும் இடம் என்பதை உணர்தல் வெண்டும்.

    வினைப்போகமே ஒரு தேகம் கண்டாய் வினைதான் ஒழிந்தால்
    தினைப் போதளவு நில்லாது கண்டாய் சிவன் பாதம் நினை
    நினைப்போரை மேவு நினையாளர் நீங்கி இந்நெறியினின்றால்
    உனைப்போல் ஒருவர் உண்டோ மனமே எனக்கு உற்றவரே. 7.

    இந்த மானுடப் பிறவியே நாம் செய்த முற்பிறவி வினைகளினால்தான் என்பதை உணர்ந்திருக்கிறோம்; அவ்வினைகள் நீங்கிவிட்டால் இந்த உடல் ஒரு நொடிப்போதும் இப்பூவுலகில் இல்லாமல் நீங்கிவிடும் என்பதும் உணர்ந்திருக்கிறோம்; ஆனபடியால் எம்பிரான் ஈசனின் பாதாரவிந்தங்களை எப்போதும் மனதால் நினை; அப்படி சிவ சிந்தனையில் திளைத்திருப்போரின் துணையையும் எப்போதும் நாடு; இறை சிந்தனை இல்லாமல் அவனின்றும் நீங்கி நிற்பார்தம் உறவினை நீக்கிவிடு; இப்படி நீக்குவன நீக்கி, சேர்வன சேர்ந்து வாழ்ந்தால் அவனைப் போல இறைவனருள் பெற்றவர் வேறு எவரும் இலர் என்பதை உணர்ந்து கொள்.

    பட்டைக்கிழித்துப் பருவூசிதன்னைப் பரிந்தெடுத்து
    முட்டச்சுருட்டியென் மொய்குழலாள் கையில் முன்கொடுத்துக்
    கட்டியிருந்த கனமாயக்காரிதன் காமமெல்லாம்
    விட்டுப்பிரிய என்றோ இங்ஙனே சிவன் மீண்டதுவே. 8.

    வாழ்கின்ற வரையில் பட்டும் பீதாம்பரமும் அணிந்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தாலும், முடிவில் காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே எனும் உண்மையை எனக்கு உணர்த்துவதற்காக வன்றோ அந்த ஈசன் என்பால் கருணை வைத்து என்னைப் பற்றியிருந்த காமக் குரோத ஆசைகள் எல்லாம் விட்டொழிக்க எண்ணியன்றோ என்னை ஆட்கொண்டிருக்கிறான். பட்டாடை அணிந்து கோலாகலமாக வாழ்ந்த நாளைக் குறிக்கும் வகையில் ஒரு பட்டுத்துணியை எடுத்துக் கிழித்து, போகும்போது இதுகூட உன் கூட வராது என்பதைக் குறிக்கும் வகையில் அதில் ஓர் பெரிய ஊசியையும் வைத்து நன்கு சுருட்டி அதனை அடர்ந்த கூந்தல் வாய்ந்த என் மனையாட்டியின் கையில் கொடுத்து, வாழ்வின் இரகசியத்தைப் புரியவைத்த அவன் கருணையை என்னவென்று சொல்வேன்.

    சூதுற்ற கொங்கையு மானார் கலவியும் சூழ் பொருளும்
    போதுற்ற பூசலுக்கு என் செயலாம் செய்த புண்ணியத்தால்
    தீதற்ற மன்னவன் சிந்தையினின்று தெளிவதற்கோ
    காதற்ற ஊசியைத் தந்துவிட்டான் என்றன் கைதனிலே. 9.

    பருத்த கொங்கைகளையுடைய மனையாளும், மானின் விழிகளையொத்த இன்பம் தரும் மாதருடன் கொண்ட போகங்களும், உலக இன்பங்களை நுகர்தற் பொருட்டு சேர்த்து வைத்த செல்வங்களும், வாழ் நாள் முடிந்து போகுங்காலை இவைகளால் ஐம்பொறிகளும் படும் பாட்டுக்கு என்ன செய்யப் போகிறோம். ஏதோ முற்பிறவிப் பயனால் அன்பே உருக்கொண்ட இறைவன் ஈசன் நம் மனம் தெளிந்து வாழ்வின் உண்மைகளை உணர்ந்து கொள்ளவென்றோ காதற்ற ஊசியொன்றை என் கைகளிலே கொடுத்துப் உணர வைத்தான்.

    வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப்
    போதுற்று எப்போதும் புகலும் நெஞ்ச்சே இந்தப் பூதலத்தில்
    தீதுற்ற செல்வம் என், தேடிப் புதைத்த திரவியம் என்
    காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே. 10.

    நெஞ்சே கேள்! திண் தோள் தகையாளரும், திரு அண்ணாமலையில் வீற்றிருப்பவருமான சிவபெருமானுடைய திருவடிகளே கதியென சரணம் அடைந்திடுவாய். எப்போதும் அவரையே துதி செய்திடுவாய். இப்பூவுலகில் செல்வத்தால் உருவாகும் தீமைகள் எத்தனை, பாடுபட்டுத் தேடி பணத்தைப் புதைத்து வைத்த செல்வம் தான் எத்தனை, இவை அனைத்தும் இவ்வுலக வாழ்வை நீங்கி போகும் காலை கூடவே எவை வரும், காதற்ற ஊசிகூட உன் கூட வராது என்பதை உணர்ந்து கொள்.

    (இன்னும் உண்டு)

    Share
  • சீதாயணம் படக்கதை -2

     

    சி. ஜெயபாரதன்

     

    Scene -2

     

    Scene -3

     

    Share
  • “மின்னி’ மீனாட்சி ஆனாள்!

    விசாலம்

     

    கொலுவே உன்னை வரவேற்கிறேன்.

    கொலுசு சத்தம் என் வீட்டில் கேட்க

    “மின்னி’ யாக இருந்த என்னவள் இன்று

    மீனாட்சியாக மாறியிருக்கிறாள்.

    தலைவிரிக்கோலம் மாறி இருக்க

    தலையில் பின்னலுடன் பூச்சூடியிருக்கிறாள்.

    கண்களை மறைக்கும் முடிகள் இன்று

    கறுப்பு கிளிப்பில் நுழைந்தன.

    வெறிச்சென்று இருக்கும் அவள் நெற்றி

    வெம்பிப் போகும் என் மனம்

    இன்று காண்கிறேன் மங்கல குங்குமம்

    இனிக்கும் மனத்துடன் நிறைவு பெறுகிறேன்.

    வந்தது ஜீன்ஸ், டீ ஷர்ட்டுக்கு  முடிவு .

    வருடத்தில் ஒரு முறை புடவை ஏறியது.

    மொட்டைக்கையும் வாச்சும் மறைய.

    மொழமொழ கையில் வளைகள் குலுங்கின

    பாத்ரூமில் மாட்டும் தாலி இன்று

    பார்யாள் கழுத்தில் பளபளத்தது.

    என் கனவுக்கன்னியை இன்று காண்கிறேன்

    என் கனவை நினைவாக்கிய கொலுவை வாழ்த்துகிறேன்.

    Share
  • வார ராசிபலன்!…14-10-13 – 20-10-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

     

    மேஷம்: குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடப்பதால் பெண்கள் மனதில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்கள் உங்கள் வாகனம் உங்கள் வசமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தேவையற்ற செலவும், மன உளைச்சலும் இராது.வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் யாருடனும் கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். சுய தொழில் புரிபவர்கள் இயன்றவரை புதிய கடன் வாங்குதலைத் தள்ளிப் போடுங்கள். கலைஞர்கள் அளவாகப் பேசி, காரியங்களை முடிக்கும் திறனை வளர்த்துக் கொண்டால், எதிலும் வெற்றி கிட்டும். பதற்றம், எரிச்சல் ஆகியவற்றால் உங்கள் பணியின் வேகம் மட்டுப்பட இடம் கொடுக்க வேண்டாம்.

    ரிஷபம்: சக கலைஞர்களிடையே பிரச்னை எழும் வாய்ப்பிருப்பதால், எதையும் நன்கு யோசித்து பேசினால், உறவுகள் உறுதியாக இருக்கும். இந்த வாரம் நீங்கள் நல்லது செய்தாலும், பிள்ளைகளிடமருந்து பாராட்டைப் பெறுவது கடினமே. பணிவாகப் பேசுங்கள். உங்கள் கருத்துக்களை பிறர் அப்படியே ஏற்றுக் கொள்வர். பணியில் ஏற்படும் வேண்டாத இடமாற்றம் சிலரை நெருக்கடியான சூழலுக்குத் தள்ளி விடும். எதிர்பாராத செலவுகளால் பெண்களின் திட்டங்களில் தொய்வு ஏற்படலாம். மாணவர்கள் கவனமாக செயல்படவில்லை என்றால், சிலரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எனவே எதிலும் கவனமாக செயல்படுவது அவசியம்.

    மிதுனம்: அலுவலகத்தில் இருப்போர்கள் அவசரப் பிரச்னைகளின் பொருட்டு அங்கும் இங்கும் அல்லாட வேண்டியிருக்கும். பெண்கள் அவ்வப்போது தலை காட்டும் தேவையற்ற சஞ்சலத்தை மாற்ற மனதுக்கு பிடித்த பொழுது போக்கில் ஈடுபடுங்கள். உங்களின் தொழில் வளத்தை மேன்மை படுத்தும் பொருட்டு அதிக பணம் செலவழிக்க வேண்டியிருந்தாலும்,அதற்கேற்ற லாபம் கிடைக்கும். கலைஞர்கள் தங்கள் கோபத்தை கட்டுப் படுத்தி வைத்தால், பிரச்னைகளுக்கான தீர்வை எளிதில் கண்டு விடலாம். இந்த வாரம் பெற்றோர்கள் பிள்ளைகளின் மன அழுத்தம் அதிகரிக்க இடம் கொடாமல் நடந்து கொள்வது நல்லது.

    கடகம்: வியாபாரிகள் எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி காண்பீர்கள். மாணவர்கள் இயன்ற வரை சக மாணவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்த்து விட்டால் எப்போதும் நிலைமை சீராக இருக்கும். இந்த வாரம் கலைஞர்கள் அதிக போட்டிகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் ஏற்றவாறு தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகள் லாபகரமாய் அமைய கூட்டு முயற்சி கை கொடுக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நம்பிக்கையான பணியாளர்களை சந்தேகப்பட்டு சிக்கலை வரவழைத்துக் கொள்ள வேண்டாம். பெண்கள் உறவுகளின் போக்கினை அறிந்து முக்கிய முடிவுகளை எடுப்பதே புத்திசாலித் தனம்.

    சிம்மம்: பெண்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களையும், கடமைகளையும் நல்லபடியாக முடித்து நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்வார்கள். முதியவர்களுக்கு ரத்த அழுத்தம் தொடர்பான தொல்லைகள் அவ்வப்போது வந்து போகும். உங்களின் நிர்வாகத் திறன் பெருகுவதால் புதிய பொறுப்புகளும், அதற்கேற்ற வசதிகளும் வந்து சேரும். மாணவர்கள் சிறு சிறு பிரச்னைகளுக்கெல்லாம் குழப்பம் அடைவதைத் தவிர்த்துவிடவும். உங்கள் கருத்துக்கு நல்ல மதிப்பிருக்க, இனிமையாகப் பேசுங்கள். பணியில் இருப்பவர்கள் உடனிருப்பவர்களின் குற்றம் குறைகளை பெரிதுபடுத்திக் கொள்ள வேண்டாம். வேலைகள் எளிதில் முடியும்.

    கன்னி: மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு செயல் படும் காரியங்களில் கவனமாக இருப்பது அவசியம். கலைஞர்கள் கிடைத்த ஒப்பந்தங் களை குறித்த காலத்தில் முடிப்பதில் கருத்தாக இருந்தால், உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும் .சொந்தங் களையும், உடனிருப்பவர்களையும் அரவணைத்து நடத்திச் செல்லும் பெண்களுக்கு நல்ல ஒத்துழைப்போடு நல்ல பெயரும் வந்து சேரும். இந்த வாரம் கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்கு நீங்குவதால், மீண்டும் இல்லத்தில் மகிழ்ச்சி மலரும். மாணவர்கள் தெளிவான மன நிலையுடன், பாடங்களை ஆர்வத்துடன் படித்து நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.

    துலாம்: வியாபாரிகள் விருத்திக்காக மேற் கொள்ளும் முயற்சிகளுக்கேற்ப உங்கள் லாபமும்,நட்பு வட்டமும் கூடும். இந்த வாரம் கலைஞர்களுக்கு பிரபலங்களைச் சந்திப்பதுடன் அவர்களுடன் விருந்து, விழா என்று மகிழும் வாய்ப்பு பல உண்டு. மாணவர்கள் சின்ன சின்ன முயற்சிகளுக்கு கூட, அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். பெண்கள் முக்கியமான முடிவுகளை குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்துச் செய்வது நல்லது. எந்த விஷயத்திலும் அறிமுகமில்லாத நபர்களை சட்டென்று நம்பிவிட வேண்டாம். சுயதொழில் புரிபவர்கள் மேற்கொள்ளும் பயணங்கள் லாபகரமாகவும், வெற்றிகரமாகவும் அமைவதால், நம்பிக்கையோடு செயலாற்றுவார்கள்.

    விருச்சிகம்: மாணவர்கள் தேவையில்லாமல் எவரிடமும் பகைமை பாராட்ட வேண்டாம். இந்த வாரம் பணத் தட்டுப்பாடால், உறவுகளிடையே அவ்வப்போது பூசல்கள் உருவாகலாம். பெண்கள் நினைத்த வாறு காரியங்களை சாதித்துக் கொள்ள, பொறுமையைக் கடை பிடியுங்கள். வியாபாரிகள் விரிவாக்கத்திற்காக திட்டமிடும் போது நிறை குறைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்பட்டால் முழு பலனை அடையலாம். பலரும் பயனடையும் திட்டங்களுக்காக பொது வாழ்வில் உள்ளவர்கள் சில தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும்.கலைஞர்கள் வீண் கவலை உங்கள் வேகத்தைக் குறைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    தனுசு: நல்ல பெயரை வாங்க, மாணவர்கள் நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள். நண்பர்களோடு ஏற்படும் கருத்து மோதல்களை மனம் விட்டு பேசித் தீர்த்துக் கொண்டால், நட்பு பிரியாமலிருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொண்டால் அவர்களால் எந்த தொந்தரவும் இராது.பணியில் இருப்பவர்கள் ரகசிய த்தைக் காப்பாற்றுவதில் கவனமாக இருந்தால், மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். பொது வாழ்வில் இருப்போர்கள் நடு நிலையாக செயல்படுபவர்களை உங்கள் அருகில் வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். வியாபார வட்டத்தில் சில சங்கடங்கள் தோன்றினாலும், அனைத்தையும் நல்லவரின் உதவியுடன் சமாளித்து விடு வீர்கள்.

    மகரம்: இந்த வாரம் கலைஞர்கள் பிரச்னைக்குரிய விஷயங்களில் பட்டும் படாமலும் நடந்து கொண்டால், மன உளைச்சலை தவிர்த்து விடலாம். அதிக அலைச்சல், தூக்கம் கெடுதல் ஆகியவை அன்றாட வாழ்வை பாதிக்காமல் பார்த்துக் கொண்டால், பணியில் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் தங்கள் வேலையில் ஈடுபட முடியும். மாணவர்கள் சலிப்புக்கு இடம் தராமல், பணியில் கவனம் செலுத்துவது அவசியம். பெண்கள் பண ஓட்டத்திற்கு ஏற்றவாறு செலவுகளை சுருக்கிக் கொண்டால், கடன் வாங்கும் சூழலைத் தவிர்த்து விடலாம். வாய்ப்பும், அதிர்ஷ்டமும் உங்களை தேடிவர வியாபாரிகள் சுறுப்பாகவும், சாமர்த்தியமாகவும் செயல்படுவது நல்லது.

    கும்பம்: சக கலைஞர்களுடன் ஆலோசனை செய்து புதிய நிகழ்ச்சிகளை துவக்கினால், கலைஞர்களுக்கு வேண்டிய பாராட்டும், புகழும் வந்து சேரும். பெற்றுத் தருவார். பாராமுகமாய் இருந்த உறவும், நட்பும் உங்களை தேடி வரும் போது உறவுகளை மீண்டும் புதிப்பித்துக் கொண்டால்,பெண்கள் பல நன்மைகளைப் பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் காட்டும் உங்கள் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உங்களுக்கு உரிய பாராட்டைப் பெற்றுத் தரும். பெற்றோர்கள் பிள்ளைகளின் நண்பர்கள் யார் யார் என்று அறிந்து வைத்துக் கொள்ளுதல் அவசியம். இந்த வாரம் வியாபாரிகள் மறைமுகப் போட்டிகளை சமாளித்தே வெற்றி வாகை சூட வேண்டியிருக்கும்.

    மீனம்: பெண்கள் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டுமானால், ஆரோக்கி யத் தில் கவனம் செலுத்துவது அவசியம். இந்த வாரம் மனை விற்பனை விஷயமாக சிலர் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கும். வியாபாரிகள் புதியவர்களை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதில் கவனமாக இருந்தால், இழப்புகளைக் குறைத்துக் கொள்ளலாம். கலைஞர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுபவரிடமிருந்து விலகி இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து நடந்து கொண் டால், நீங்கள் இனிமையான நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்ளலாம். பெற்றோர்கள் பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    Share
  • குறவன் பாட்டு – 14

    சச்சிதானந்தம்

    ஆலமரமும் அழகுக் குறத்தியும்

     

    சிறுகுறும் பறவைகள் சிலநூறு வாழ்ந்திடும்,

    சிற்றிலை ஆல்பெற்ற விழுதினைப் பற்றியே,

    நற்குணக் குறத்தியும் உடலெற்றி ஆடிடும்,

    அற்புதக் காட்சியைப் பறவைகள் கண்டன!                             106

     

    பறவைகளின் தவம்  

     

    பல்வகைப் பறவைகள் காற்றினில் பண்பாடும்,

    நன்மலர்ச் சோலையில் குறத்தியைக் கண்டதும்,

    இன்குரல் பறவைகள் தம்குரல் மறந்ததால்,

    கண்ணிமைப் பொழுதிற்கு மௌனமாய் நின்றன!                       107

     

    புள்ளினங்களும் புள்ளி மானினங்களும் நூறுவகைப்

    பூவினங்களும் பூவில் தேனெடுக்கும் பொன்

    வண்டினங்களும் குறத்தியைக் கண்டினங் கண்டு

    தம்மினம் சேரத் தவம்செய் தனவே!                                                     108

     

    அணில்களும் அன்புக் குறத்தியும்

     

    சருகைத் தவிர்த்துக்காலைத் தரையில் பதித்து,

    இருகை எடுத்து இடையில் பதித்து,

    வருகை புரியும் குறத்தியை அறிந்து,

    சிறுகை குவித்து அணில்கள் ஆடும்!                                                                                          109

     

    அணில்களுக் கெல்லாம் அன்னை போலக்,

    கனிகள் கொட்டைகள் உண்ணக் கொடுத்து,

    மடியில் வைத்து தடவிக் கொடுத்து,

    விடியல் போல வண்ணம் கொண்டாள்!                                                                                   110

     

    களிறுகளும் மாஞ்சோலையும்

     

    மாவின் அடிமரத்தை உரித்துத் தின்று

    மேலே உயர்ந்திருக்கும் கிளைகள் உலுக்க,

    துதிக்கை தனை உயர்த்தி யானை இழுக்க,

    கனிகளும் உதிர்ந்தன, கிளைகளும் முறிந்தன!                          111

     

    கிளையைச் சுற்றிய துதிக்கை கண்டு

    கருநாகம் என்று எண்ணிப் பதறி

    மரத்தில் வாழும் குயில்கள் இரண்டு

    வானில் உயரக் கூவிப் பறந்தன !                                                                                                112

     

    யானை சென்ற பின்னர் அந்த

    சோலைப் பக்கம் வந்தாள் குறத்தி

    தன்மனக் குறிப்பை உணர்ந்து  மரங்கள்,

    கனிகள் உதிர்த்தன என்றே நினைத்தாள்!                                                                 113

     

    மாதுளை கொறித்துச் சலித்த குறத்தி,

    மாம்பழம் சுவைக்கும் ஆசை துரத்தி,

    சோலை மஞ்சள் மாங்கனி கடித்து,

    செம்மஞ்சள் வானம்போல இதழ்கள் கொண்டாள்!                                                           114

     

    பூங்குரல் குறத்தி மாங்கனி எடுத்துத்

    தின்றது போக மீதிப் பழங்களைத்

    தன்னுடன் எடுத்துச் சென்றாள் கூடையில், முன்பே

    எடுத்த கனிகளினோடும் மலர்களி னோடும்!                                                                         115

     

    நெல்லிக்கனி சேகரித்தல்

     

    செல்லும் வழியில் நெல்லிக்கனிமரம், கண்டே

    உள்ளம் துள்ளிக் குதித்து, மாங்கனி எடுத்து

    கல்லெனத் தொடுத்து நெல்லியை அடித்து,

    சிதறிய கனிகளை எடுத்துக் கடித்தாள்!                                                                                      116

     

    செவ்விதழும் சிற்றிடையும் கொண்டிருக்கும் குறத்தி,

    அவ்விதழால் பற்றியொரு நெல்லிக்கனி கடிக்கும்,

    நவ்வியத்தைக் காண்பதற்குக் காத்திருக்கும் குயில்கள்,

    பவ்வியமாய் அவளருகில் வந்தமர்ந்து கூவும்!                                                                 117

    Share
  • புத்தக மதிப்புரை போட்டி!

    பவள சங்கரி

    வாசிப்பினை நேசிப்போம்!
    வாசிப்பினை சுவாசிப்போம்!

    நல்ல புத்தகம், நல்ல நண்பனைப் போன்றது . நேரம் பொன்னானது. அப்படிப்பட்ட நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யும் முக்கியமான விசயங்களில் நூல் வாசிப்பிற்கே முதல் இடம் என்றால் அது மிகையாகாது! நம் பொழுதை வெட்டியாகக் கழிக்காமல் வெல்லக்கட்டியாகச் சுவைக்கச் செய்யும் வல்லமை வாசிப்பிற்கு மட்டுமே உண்டு. வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கும் தேவையான சக்தியை நமக்குக் கொடுப்பதில் நல்ல புத்தக வாசிப்பிற்கு பெரும்பங்கு உண்டு. ஒரு இசைக்கருவியை மீட்டுவது மட்டுமே கலை அல்ல. நல்ல வாசிப்பும் ஒரு அற்புதமான கலைதான்! வாசிப்பு நம் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்த வல்லது. பதவியும் பட்டமும் பெறுவதற்காக மட்டுமல்லாமல் ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை நமக்கு நல்ல வாசிப்பு மட்டுமே வழங்க முடியும். தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய கடைசி நிமிடங்களில் கூட புத்தகம் வாசிப்பதை நிறுத்தவில்லை பகத்சிங்! ஆம், தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய சில நிமிடங்களுக்கு முன்னால், லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’என்ற நூலை வாசித்த பிறகுதான் தூக்குக் கயிற்றை முத்தமிடப் போனான் பகத்சிங்.

    ஒரு முறைக்கு பலமுறை திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டும் புத்தகங்கள், படித்தவுடன் பச்சென்று மனதில் ஒட்டிக்கொள்ளும் புத்தகங்கள், படித்தவுடன் ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிற நூல், இப்படி ஆக்கப்பூர்வமாக நம் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது நல்ல நூல்களின் வாசிப்பு. சில நேரங்களில் உணர்வுப்பூர்வமாக நம்மை ஒன்றிணைத்தும்விடுகிறது. வாழ்க்கையில் உள்ள கோடிக்கணக்கான சுவாரசியங்களும், அதிசயங்களும் ஒரு ஆசிரியரின் பார்வையில் IMG_2588எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதைவிட ஒரு படி மேலாக அந்த வாசகனுக்கும் ஏற்படுத்துகிறது என்பதே சத்தியம். ஆனால் அந்த வாசகன் அதை எந்த அளவிற்கு உள்வாங்கி வாசிக்கிறான்.. அல்ல..அல்ல… நேசிக்கிறான் .. அல்ல.. சுவாசிக்கிறான் என்பதை வைத்தே அதன் அளவுகோல் நிர்ணயமாகிறது! தாம் இறந்த பின்புகூட தம் சடலத்தின் மீது மலர் செண்டுகள் வைக்க வேண்டாம், மகத்தான புத்தகங்களை வையுங்கள் என்று கேட்டுக்கொண்ட புண்ணியவான் பண்டித நேரு அவர்கள். புற்று நோயால் பாதிப்படைந்து, தன் இறுதி நாளை எண்ணிக்கொண்டிருந்த சமயம், அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நேரத்தில், தமக்கு ஒரு நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்டாராம், அறிஞர் அண்ணா. காரணம் தெரியாமல் விழித்தவர்களிடம் தாம் வாசித்துக் கொண்டிருக்கும் நூலின் மீதமுள்ள சில பக்கங்களை முழுவதுமாக வாசித்து முடிக்க வேண்டும் என்றாராம்! இப்படிப்பட்ட அற்புதமான வாசிப்பை ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று பகிர்ந்து கொள்வதுதானே முறை? வாசிப்பு எனும் தியானத்தை நேசிப்போம்! அதைச் சுவையாக அறிமுகமும் செய்து பரிசுகளையும் வெல்வோம்! வாருங்கள் நண்பர்களே! எழுத்தாளர்களையும், பதிப்பகத்தார்களையும், நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசித்து மதிப்புரை வழங்குபவர்களையும் கௌரவிக்கும் விதமாகவே இப்போட்டி நடத்தப்படுகிறது. அனைவரும் கலந்துகொண்டு இப்போட்டியைச் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். இப்போட்டியை நடத்துவதற்கான பரிந்துரையும், பரிசுத் தொகையும் வழங்க, தானே முன்வந்து அறிவித்திருக்கும் கவிதாயினி திருமதி மதுமிதா அவர்களுக்கு நம் மனமார்ந்த பாராட்டுதல்களும், வாழ்த்துகளும். தமிழ் எழுத்துலகை அரை நூற்றாண்டுக் காலமாகக் கவனித்து எழுதி வரும் மூத்த விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்கள் மாதம் ஒருவரைத் தேர்ந்தெடுக்க இசைந்துள்ளார். அவருக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    போட்டிக்கான விதி முறைகள்:

    ஒருவர் எத்தனை மதிப்புரைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

    போட்டிக்கு அனுப்பும் மதிப்புரைகள், இதற்கு முன் அச்சிலோ, இணையத்திலோ வேறு எங்கும் வெளியாகாத ஆக்கமாக இருக்க வேண்டும்.

    மதிப்புரைக்குத் தேர்ந்தெடுத்த நூலின் ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பு, நூல் வெளியான ஆண்டு, பக்க எண்ணிக்கை, விலை, பதிப்பக முகவரி ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். நூலின் அட்டைப்படத்தைப் புகைப்படம் எடுத்து அனுப்புதல் நலம்.

    மதிப்புரைகளுக்குப் பக்க எண்ணிக்கை இல்லை.

    மாதந்தோறும் தேர்வான 12 மதிப்புரைகளிலிருந்து, ஆண்டின் இறுதியில் சிறந்த மூன்று ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.

    பரிசு பெறுவோர், அயல்நாட்டில் வசிப்பவர் எனில், தம் இந்திய முகவரியை அளிக்க வேண்டும்.

    மூல நூல் எந்த மொழியில் இருந்தாலும் அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதாக இருக்க வேண்டியது அவசியம். மதிப்புரையும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.

    மதிப்புரைகள் தெளிவான நடையில், யுனிகோடில் இருப்பது அவசியம்.

    மாதம் ஒருவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு ரூ. 100 பரிசாக வழங்கப்படும். ஐயா வெங்கட் சாமிநாதன் அவர்கள் மாதம் ஒருவரைத் தேர்ந்தெடுப்பார். ஆண்டின் இறுதியில் அதிலிருந்து சிறந்த மூன்று படைப்புகளைத் தேர்ந்தெடுத்து முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.

    முதல் பரிசு 1000
    இரண்டாம் பரிசு 500
    மூன்றாம் பரிசு 300

    அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து வருகிற மதிப்புரைகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும். ஒவ்வொரு மாத இறுதியிலும் அதிலிருந்து ஒரு படைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.100 பரிசாக வழங்கப்படும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுக்குரிய படைப்பின் விவரம் மாதாமாதம் அறிவிக்கப்படும். ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.

    திரளாக வந்து போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாழ்த்துகள் நண்பர்களே!

    உங்கள் படைப்புகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 15

    தேமொழி

    கெளதம புத்தர்

    Gold Buddha

     

    மின்பலகையில் ‘ஸ்கெட்ச் புக் எக்ஸ்ப்ரெஸ்’ (SketchBook Express apps for Tablets) என்ற ஓவியம் வரையும் மென்பொருள் கொண்டு என் முதல் முயற்சியாக உருவாக்கிய எண்ணிம கெளதம புத்தர் ஓவியம்.

    SketchBook Express for Tablets – https://play.google.com/store/apps/details?id=com.adsk.sketchbookhdexpress&hl=en

     

     

     

     

     

    Share