சந்தனம்போல் கமழவைத்துக் காட்டு
பிச்சினிக்காடு இளங்கோ
சந்தமென்றும் சிந்துஎன்றும்
சங்கதிகள் தெரியாமல்
சத்தமிட்டுப் பேசுகிறான் பேச்சு-அது
சரக்கில்லா வெத்துவேட்டு ஆச்சு
பந்தமென்றும் சொந்தமென்றும்
பங்கமிலா நண்பரென்றும்
கொண்டாடும் மனநிலையை விட்டு-அவன்
குண்டரெனக் காட்டுகிறான் மட்டு
வண்டாடும் சோலையிலும்
செண்டாடும் மாலையிலும்
கொண்டாடும் புள்ளினமாய் மாறு- அதில்
திண்டாடும் மனநிலையே வேறு
சிந்தனைத்தேன் ஊறுவதை
சிந்தித்தே மாறுவதை
சந்தனம்போல் கமழவைத்துக் காட்டு- அதுவே
சந்ததியை மகிழவைக்கும் பாட்டு
போதிமரம் சேதிதரும்
சோதியென நீதிதரும்
வேதமெனும் மந்திரம்போல் பாடு- சூது
பேதமெனும் தந்திரத்தைச் சாடு
மானுடத்தைப் பாடுகிற
மாந்தரினம் தேடுகிற
ஞானமது பாட்டினிலே வேண்டும்-தமிழ்த்
தேனமது பருகிடவே மீண்டும்