பிச்சினிக்காடு இளங்கோ
சந்தமென்றும் சிந்துஎன்றும்

சங்கதிகள் தெரியாமல்

சத்தமிட்டுப் பேசுகிறான் பேச்சு-அது

சரக்கில்லா வெத்துவேட்டு ஆச்சு
பந்தமென்றும் சொந்தமென்றும்

பங்கமிலா நண்பரென்றும்

கொண்டாடும் மனநிலையை விட்டு-அவன்

குண்டரெனக் காட்டுகிறான் மட்டு

 

வண்டாடும் சோலையிலும்

செண்டாடும் மாலையிலும்

கொண்டாடும் புள்ளினமாய் மாறு- அதில்

திண்டாடும் மனநிலையே வேறு

 

சிந்தனைத்தேன் ஊறுவதை

சிந்தித்தே மாறுவதை

சந்தனம்போல் கமழவைத்துக் காட்டு- அதுவே

சந்ததியை மகிழவைக்கும் பாட்டு

 

போதிமரம் சேதிதரும்

சோதியென நீதிதரும்

வேதமெனும் மந்திரம்போல் பாடு- சூது

பேதமெனும் தந்திரத்தைச் சாடு

 

மானுடத்தைப் பாடுகிற

மாந்தரினம் தேடுகிற

ஞானமது பாட்டினிலே வேண்டும்-தமிழ்த்

தேனமது பருகிடவே மீண்டும்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *