காதலிதன் நலம் பாராட்டல்!

 

புவனேஷ்வர்

 

சித்திரமொன்று ஜீவனுயிர் பெற்று

முத்தொளி யன்னநீ வந்தாய் – ஒரு

செந்திரு வன்னாயுன் சோதிமு கங்கண்டு

சிந்தை திறை கொடுத்தேன்;

 

நிசித்திரள் மேகமுன் ஒண்குழலாமதில்

வசித்திடும் முழுநிலவுன் ஒளிவதனம்;

அந்தநிலா தேய்ந்தழிந்து பின்வளரும் காண் – என்றும்

தேயாத திலகமிட்ட திங்களடி நீ.

 

நினைக்கின்றேன் உன்னை நான் என்

நினைவினில் வாழ்கின் றாய்நீ;

பனிக்காலப் போர்வை போலும்

இனிக்கின்ற இதம் நீ என்னில்;

 

காதல் வாழ்கவென்று கூத்திடுவோம் காண் – உயர்

காதல் நலமெனவே களி நடமிடுவோம்;

காதலது நல்லின்பம், காதலி தெய்வம் – அதில்

ஊறு சுவை உண்டு அது உயிர்கட்கமுதாம்;

 

Share

Comments

5 responses to “காதலிதன் நலம் பாராட்டல்!”

  1. தனுசு

    /காதலி தெய்வம் – அதில்
    ஊறு சுவை உண்டு அது உயிர்கட்கமுதாம்;

    காதலின் நலமும், காதலியின் நலமும் நன்று.- யாரிடமோ சிக்கி விட்டது போல் தெரிகிறது.

  2. புவனேஷ்வர்

    நண்பர் கவிஞர் தனுசு at his naughty best! 🙂 

    நான் சிக்கிட்டேனா? ஹீ ஹீ…. இல்லை இல்லை, இன்னும் இல்லை 🙂 😉

    காதலுக்கு காதலி அவசியம் இல்லை. யாரும் வருவதற்கு முன்னரே வரப் போகும் மனைவியை காதலிக்கலாம் அல்லவோ? அப்படியும் இருக்கலாமே 😉 😉

    பழங்காலத்தில் குரு என்று ஒருத்தர் இருந்தார், அவரிடம் ஹ்ருதயத்தை அப்படியே அர்ப்பணம் பண்ணி, egoவைக் கரைக்க இயன்றது. பெண்களுக்கோ கணவனிடம் அப்படி ஒரு அர்ப்பணிப்பு, இன்றும் தொடரும் இயல்பு. 

    ஆண்கள் பாடு தான் இந்து திண்டாட்டம். குரு என்று யாரை வரிப்பது? எல்லாருக்கும் இயல்வதில்லையே. அனால் கூடவே பகவானே பார்த்து (இன்னாருக்கு இன்னார் என்று எழுதி) கொடுத்த மனைவி இருக்கிறாளே? அவளக்கு அர்ப்பணம் பண்ணி விடுவது தானே? நமக்குத் தேவை “நான்” என்ற அஹங்காரம் ஒழிய வேண்டும். அதற்கு பிரபு சம்மிதமாக குரு ரூபத்தில் தான் பகவான் வர வேண்டும் என்பதில்லையே? காந்தா சம்மிதமாக மனைவி ரூபத்திலும் அதே பகவான் தான் இருக்கிறார் என்ற உணர்வு வந்து விட்டாலே, எவனும் தனது மனைவியை போற்றிடுவான். கணவன் மதித்து நடந்தால், கொஞ்சம் rude ஆன பெண்ணாக இருந்தால் கூட அன்பாக ஆகி விடுவாள் எனபது நம்பிக்கை. முன் கை நீண்டால் முழங்கை நீளுமல்லவோ?

    (மனசாட்சி telling, ஒரு வேலை ரொம்ப பேசறேனோ?) 😛

    எல்லாவற்றுக்கும் மேல், தங்கள் மேலாம் வருகைக்கும், அன்பான பின்னூட்டத்துக்கும் நன்றி, நண்பரே.

    பணிவன்புடன்,
    புவனேஷ்வர் 

  3. சச்சிதானந்தம்

    //நிசித்திரள் மேகமுன் ஒண்குழலாமதில்

    வசித்திடும் முழுநிலவுன் ஒளிவதனம்;//

    நல்ல வரிகள்.

    காதலி-தன் நலம் பாராட்டுதலா? அல்லது காதல்-இதன் நலம் பாராட்டுதலா? 🙂

  4. புவனேஷ்வர்

    காதலி தன் நலம் பாராட்டல் என்ற நினைப்புடனே தான் எழுதினேன். இதற்கு இப்படி ஒரு கோணம் இருப்பதே இப்போது தான் உறைத்தது 🙂 நன்றி, சச்சிதானந்தம் அவர்களே!
    தங்கள் வருகைக்கும் அருமையான insightful பின்னூட்டத்துக்கும் நன்றிகள், ஐயா 🙂

    …..புவனேஷ்வர்

  5. sathiyamani

    அப்பா புவனேஷ்வர், கற்று கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வும் வகுப்பே, ஒவ்வொரு வித்தையும் அறிவே, ஒவ்வொரு கர்த்தாவும் குருவே, காணும் ஒவ்வொன்றிலும் கடவுளும் குருவும் நிதர்சனம். இருவரும் ஒன்றே. அனைத்தும் கற்றவனும் கிடையாது.அசத்தனும் கிடையாது. காதல் கற்பனையில் வரலாம்.விற்பனையில் வரக்கூடாது.வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *