சச்சிதானந்தம்

ஆலமரமும் அழகுக் குறத்தியும்

 

சிறுகுறும் பறவைகள் சிலநூறு வாழ்ந்திடும்,

சிற்றிலை ஆல்பெற்ற விழுதினைப் பற்றியே,

நற்குணக் குறத்தியும் உடலெற்றி ஆடிடும்,

அற்புதக் காட்சியைப் பறவைகள் கண்டன!                             106

 

பறவைகளின் தவம்  

 

பல்வகைப் பறவைகள் காற்றினில் பண்பாடும்,

நன்மலர்ச் சோலையில் குறத்தியைக் கண்டதும்,

இன்குரல் பறவைகள் தம்குரல் மறந்ததால்,

கண்ணிமைப் பொழுதிற்கு மௌனமாய் நின்றன!                       107

 

புள்ளினங்களும் புள்ளி மானினங்களும் நூறுவகைப்

பூவினங்களும் பூவில் தேனெடுக்கும் பொன்

வண்டினங்களும் குறத்தியைக் கண்டினங் கண்டு

தம்மினம் சேரத் தவம்செய் தனவே!                                                     108

 

அணில்களும் அன்புக் குறத்தியும்

 

சருகைத் தவிர்த்துக்காலைத் தரையில் பதித்து,

இருகை எடுத்து இடையில் பதித்து,

வருகை புரியும் குறத்தியை அறிந்து,

சிறுகை குவித்து அணில்கள் ஆடும்!                                                                                          109

 

அணில்களுக் கெல்லாம் அன்னை போலக்,

கனிகள் கொட்டைகள் உண்ணக் கொடுத்து,

மடியில் வைத்து தடவிக் கொடுத்து,

விடியல் போல வண்ணம் கொண்டாள்!                                                                                   110

 

களிறுகளும் மாஞ்சோலையும்

 

மாவின் அடிமரத்தை உரித்துத் தின்று

மேலே உயர்ந்திருக்கும் கிளைகள் உலுக்க,

துதிக்கை தனை உயர்த்தி யானை இழுக்க,

கனிகளும் உதிர்ந்தன, கிளைகளும் முறிந்தன!                          111

 

கிளையைச் சுற்றிய துதிக்கை கண்டு

கருநாகம் என்று எண்ணிப் பதறி

மரத்தில் வாழும் குயில்கள் இரண்டு

வானில் உயரக் கூவிப் பறந்தன !                                                                                                112

 

யானை சென்ற பின்னர் அந்த

சோலைப் பக்கம் வந்தாள் குறத்தி

தன்மனக் குறிப்பை உணர்ந்து  மரங்கள்,

கனிகள் உதிர்த்தன என்றே நினைத்தாள்!                                                                 113

 

மாதுளை கொறித்துச் சலித்த குறத்தி,

மாம்பழம் சுவைக்கும் ஆசை துரத்தி,

சோலை மஞ்சள் மாங்கனி கடித்து,

செம்மஞ்சள் வானம்போல இதழ்கள் கொண்டாள்!                                                           114

 

பூங்குரல் குறத்தி மாங்கனி எடுத்துத்

தின்றது போக மீதிப் பழங்களைத்

தன்னுடன் எடுத்துச் சென்றாள் கூடையில், முன்பே

எடுத்த கனிகளினோடும் மலர்களி னோடும்!                                                                         115

 

நெல்லிக்கனி சேகரித்தல்

 

செல்லும் வழியில் நெல்லிக்கனிமரம், கண்டே

உள்ளம் துள்ளிக் குதித்து, மாங்கனி எடுத்து

கல்லெனத் தொடுத்து நெல்லியை அடித்து,

சிதறிய கனிகளை எடுத்துக் கடித்தாள்!                                                                                      116

 

செவ்விதழும் சிற்றிடையும் கொண்டிருக்கும் குறத்தி,

அவ்விதழால் பற்றியொரு நெல்லிக்கனி கடிக்கும்,

நவ்வியத்தைக் காண்பதற்குக் காத்திருக்கும் குயில்கள்,

பவ்வியமாய் அவளருகில் வந்தமர்ந்து கூவும்!                                                                 117

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “குறவன் பாட்டு – 14

  1. Ah you are gifted!

    //மாதுளை கொறித்துச் சலித்த குறத்தி,
    மாம்பழம் சுவைக்கும் ஆசை துரத்தி// and 

    //செவ்விதழும் சிற்றிடையும் கொண்டிருக்கும் குறத்தி,
    அவ்விதழால் பற்றியொரு நெல்லிக்கனி கடிக்கும்,
    நவ்வியத்தைக் காண்பதற்குக் காத்திருக்கும் குயில்கள்,
    பவ்வியமாய் அவளருகில் வந்தமர்ந்து கூவும்!          
    // Stand out!

  2. //சருகைத் தவிர்த்துக்காலைத் தரையில் பதித்து,
    இருகை எடுத்து இடையில் பதித்து,
    வருகை புரியும் குறத்தியை அறிந்து,
    சிறுகை குவித்து அணில்கள் ஆடும்!//

    ஆகா, நன்று.    

  3. //புள்ளினங்களும் புள்ளி மானினங்களும் நூறுவகைப்
    பூவினங்களும் பூவில் தேனெடுக்கும் பொன்
    வண்டினங்களும் குறத்தியைக் கண்டினங் கண்டு
    தம்மினம் சேரத் தவம்செய் தனவே! //

    //அணில்களுக் கெல்லாம் அன்னை போலக்,
    கனிகள் கொட்டைகள் உண்ணக் கொடுத்து,//

    //மாதுளை கொறித்துச் சலித்த குறத்தி,
    மாம்பழம் சுவைக்கும் ஆசை துரத்தி,///

    //சருகைத் தவிர்த்துக்காலைத் தரையில் பதித்து,
    இருகை எடுத்து இடையில் பதித்து,
    வருகை புரியும் குறத்தியை அறிந்து,
    சிறுகை குவித்து அணில்கள் ஆடும்!//

    என்னிரு கையும் குவித்து போற்றுகிறேன்
    பிரம்மாதம் பிரம்மாதம்

  4. குறத்தி
    கனியெடுத்துக் கனியடித்ததில்,
    கிடைத்தது நல்ல
    கவிதைக் கனி…!

  5. கவிதையைப் படித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ள நண்பர்கள் திரு.புவனேஷ்வர், திரு.தனுசு, திரு.செண்பக ஜெகதீசன் மற்றும் திரு.கோதண்டராமன் ஐயா அனைவருக்கும் என் பணிவான நன்றிகள்.

  6. குறத்தியின் வருகைக்குப் பின் ’குறவன் பாட்டின்’ விறுவிறுப்புக் கூடிவிட்டதே! சிற்றிடைக் குறத்தியின் செய்கைகளை ரசித்தபடி நாங்களும் அவளைப் பின்தொடர்கின்றோம். பாராட்டுக்கள் சச்சிதானந்தம்!!

  7. @@மேகலா இராமமூர்த்தி

    // குறத்தியின் வருகைக்குப் பின் ’குறவன் பாட்டின்’ விறுவிறுப்புக் கூடிவிட்டதே! சிற்றிடைக் குறத்தியின் செய்கைகளை ரசித்தபடி நாங்களும் அவளைப் பின்தொடர்கின்றோம்//

    தங்களது பாராட்டுகளுக்கும் வாசிப்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *