Blog

  • வளைந்த மூங்கிலை நிமிர்த்துவது எப்படி?

    வளைந்த மூங்கிலை நிமிர்த்துவது எப்படி?

    அண்ணாகண்ணன்

    பொதுவாக மூங்கில் சற்றே வளைந்திருக்கும். ஆனால், கூரை வேய, பந்தல் கட்ட, இன்னும் பல்வேறு தேவைகளுக்கும் நேராக நிமிந்த மூங்கிலே தேவை. வளைந்த மூங்கிலை எப்படி நிமிர்த்துவது? இதோ கதிர்வேலு விளக்குகிறார்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருமூலர் திருக்கோவில்

    திருமூலர் திருக்கோவில்

    அண்ணாகண்ணன்

    சென்னை, தாம்பரம், தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில் திருமூலர் திருக்கோவிலை இன்று கண்டு, பெருமகிழ்ச்சி அடைந்தேன். அதற்குள் ஒரு சிறு உலா சென்று வந்தேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆசிரியர் அ.மா.சாமி

    ஆசிரியர் அ.மா.சாமி

    அண்ணாகண்ணன்

    ராணி ஆசிரியராக அ.மா.சாமி அவர்கள் இருந்தபோது, 2001-03 காலக்கட்டத்தில், அவருடன் உதவி ஆசிரியராகப் பணியாற்றினேன். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, தினந்தோறும் அவரைச் சந்தித்து, இதழ்ப் பணிகளை முன்னெடுத்தேன். அவருடனான என் அனுபவங்கள் சிலவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன். ஆசிரியர் அ.மா.சாமி அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

    படத்துக்கு நன்றி: https://www.jeyamohan.in

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வழிவாணிபன் மியான் ஹுசைனின் ஜூஹூ அனுபவம்

    வழிவாணிபன் மியான் ஹுசைனின் ஜூஹூ அனுபவம்

    மூல ஆசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி: மலையாளம்
    தமிழில்: முனைவர் நா.தீபாசரவணன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை

    மும்பையின் பரபரப்பான நகரத்தில் வழிவாணிபக்காரனான மியான் ஹுசைன், வெயில் காலமானதால் தனது வியாபாரத்தை மாலையுடன் நிறுத்திவிட்டு தனது இருப்பிடமான சிஞ்ச் போக்கலிக்குத் திரும்பினார். வழக்கமாக இரவு பத்து மணிக்குத் தான் வீட்டுக்குத் திரும்புவார். குழந்தைகள் அதற்குள் தூங்கி இருப்பார்கள். மியான் ஹுசைன் உறங்குவதற்குள் நடுநிசி ஆகிவிடும். குளித்து முடித்து வருகின்ற அவருக்கு உணவுப் பரிமாறுவதோடு நிலோஃபரின் வேலை முடிந்தது. அவள் மக்களுக்கு அருகில் சென்று சுருண்டுவிடுவாள். மியான் ஹுசைன் சாப்பிட்ட உடனே தனக்கு விருப்பமான கிராமஃபோனுக்கு அருகில் போவார்.

    சொல்லவில்லையா……………………. அவர் ஒரு சங்கீதா ரசிகர். தன்னைவிட அவர் விரும்புவது கிராமஃபோனைத்தான் என்று நிலோஃபர் கூறுவாள். அவர் அதை மறுக்கமாட்டார்.

    “அப்பா”,  ஹௌசான் வெளியில் கைநீட்டிக்கொண்டு சொன்னான்.

    ”உனக்கெப்பவும் அப்பாவோட நெனப்புதா” நிலோஃபர் ரொட்டிக்காக மாவு பிசைவதற்கிடையில் கொஞ்சம் சலிப்புடன் முனகினாள்.

    ஹௌசான், அம்மாவைக் கவனிக்காமல் மீண்டும் அப்பா என்று கூறினான். அவன் சும்மா சொல்றானென்று நிலோஃபர் நினைத்தாள். ஆனால் கொஞ்ச நேரத்துக்குள் மியான் ஹுசைனின் சத்தம், காதுகளில் முழங்கியது. குண்டுவெடிப்போ, கலவரமோ நிகழ்ந்திருக்கும் என்ற குழப்பத்தில் அவள் குதித்து எழுந்தாள்.

    ”ஏ………………..என்னாச்சு?” அவள் வேகமாகக் கேட்டாள்.

    ஒன்னுமில்ல எனக்கு ஜூஹூ வரை போற ஒரு வேலை இருக்கு” மியான் ஹுசைன் கூறினான்.

    ”ஜூஹூவில் என்ன?” நிலோஃபர் கேட்டாள்.

    ஆனால் அவர் பதில் கூறவில்லை. அவருடைய முகம் உற்சாகப்பூர்வமாக இருந்தது. நிலோஃபரின் கன்னத்தில் தட்டினார். அவன் பிரமிப்புடன் பார்க்கவே ஒரு கசல் பாடிக்கொண்டே வியர்வை நாற்றமுடைய ஆடையை மாற்றினார். அவசரமாகக் குளித்து வந்தார். விசேஷ நாட்களில் மட்டும் அணியும் சில்க் ஜிப்பாவைக் கையில் எடுத்தார். அதை அணிந்த பிறகு, மசூதித் தெருவிலிருந்து வாங்கிய பர்ஃப்யூம் எடுத்து, கழுத்திலும் இரு கைகளுக்கிடையிலும் தொட்டுத் தேய்த்தார். அறை முழுக்க மணம் வீசியது.

    ”நில்லுங்க! ஜூஹூவில் என்னான்னு எங்கிட்ட சொல்லக் கூடாதா?” நிலோஃபர், ஹௌசானைத் தூக்கிக்கொண்டு அவருக்குப் பின்னால் சென்றாள்.

    அவர் திரும்பி நின்றார். மும்பை நகரத்தில் நல்ல செல்வாக்குடன் இருக்கின்ற பரம்பரையில் பிறந்தது போன்ற முகபாவம் அவரது கண்களில் தெரிந்தது.

    ”ஜூஹூவில் என்னான்னு தானே தெரியணும். சொல்றேன்….. குலாம் அலி பாடறாரு”. மியான் ஹுசைன் கர்வத்தோடு கூறினான். தொடர்ந்து ஜூஹூவை லட்சியமிட்டு நடந்தார்.

    ஹோட்டல் அறையில் ஜன்னல் வழியாக இரவு, ஜூஹூவைப் பார்த்து குலாம் அலி ஆச்சர்யத்துடன் கூறினார். “யெஹ் ஜஹத் பஹூத் அஜிப் ஹே”.

    அதைச் சரியென்று கூறும் விதமாக கடல் அலை ஒன்று வந்தது. கடற்கரை, மக்கள் கூட்டத்தில் நிரம்பியது. சிறுவர்கள் கொக்கோ கோலாவினுடையவும், பெப்சியினுடையவும் காலியான டின்களைக் கடலில் வீசி எறிந்து விளையாடினர். அவை அலைகளில் உயர்ந்தும் தாழ்ந்தும் சென்றன. பேல்பூரியும் பழவகைகளும் குளிர்பானங்களும் விற்கிறவர்கள் மக்களைக் கவரும் விதமாகச் சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். தீப ஒளிகளுக்கு அப்புறம் காலத்தோடு கட்டப்பட்ட வானம். அதற்குக் கீழே மியான் ஹுசைன் உல்லாசமாய் நடந்தார்.

    ஹோட்டல் கேட்டில் காக்கி யூனிஃபோம் அணிந்த காவல்காரன், மியான் ஹுசைனைச் சந்தேகத்துடன் உற்றுப் பார்த்தார். மியான் ஹுசைனோ ஒரு சிறு புன்சிரிப்புடன் ஜிப்பாவின் ஜோப்பிலிருந்து டிக்கெட்டெடுத்து நீட்டினார். அவன் சந்தேகம் தீர்ந்தது.

    ”மாஃபி மாங்கதா ஹூம். சாஹ்ப்” காவல்காரன் சலாம் வைத்தான்.

    ”டீக் ஹே” மியான் ஹுசைன் முன்னோக்கி நகர்ந்தார். அறையில் உட்கார்ந்து பேடா சாப்பிடுவதற்கிடையில் குலாம் அலி தெளிவான ஒரு சிரிப்புடன் கூறினார்: “ஹமேம் மும்பய் கி ஹர் சீஸ் பஸந்த் ஹே”

    விநாயக் பாஹெ, கட்கோப்பில் ஒரு ஆடை ஆலையில் வேலை செய்யும் வேலைக்காரனும் ஹோட்டலின் கேட்டருகே ஒரே நேரத்தில் வந்தனர். விநாயக் பாஹெவின் கையில் சாம்னா பத்திரிகையின் ஒரு கோப்பி இருந்தது. நெற்றியில் குங்குமம். கொஞ்சம் பெரிய மீசை, சீக்கிரம் கோபம் கொள்ளக் கூடியவனே தான் என்கிறதை அழைத்துச் சொல்லும் விதமாக கண்களில் ஒரு பொலிவு தெரிந்தது.

    ”ஏய்!………….எங்கே போறீங்க” காவல்காரன் அவனை உற்றுப் பார்த்தான். ஹோட்டலின் வாடிக்கையாளராக எந்தத் தகுதியும் இல்லை என்ற வியூகத்தில் வந்து தன்னுடைய கடமையை நிறைவேற்றினான்.

    விநாயக் பாஹெ நின்றார். அவருடைய கண்களில் கோபம் மின்னியது.

    ”சால, உனக்கு இவ்வளவு துணிச்சலா?”

    விநாயக் பாஹெ தனது வலது கையை உயர்த்தினான். காவல்காரன் பின்னால் நகர்ந்தான். விநாயக் பாஹெ நேராக நடந்தார். காவல்காரனுக்கு தான் உடனே என்ன செய்ய வேண்டுமென்று தீர்மானிக்க முடியவில்லை. அதற்குள் வரிசை வரிசையாகப் பத்துக்கும் மேலான வாகனங்கள் கேட்டிற்கு அருகில் வந்தன. அவற்றிலிருந்து இறங்கியவர்கள், கேட் வழியாக உள்ளே கூட்டமாகச் சென்றனர். விநாயக் பாஹெவும் அக்கூட்டத்தில் சேர்ந்தார்.

    மியான் ஹுசைன் உற்சாகத்துடன் தனது இருக்கையிலிருந்து கொஞ்சம் முன்னால் தள்ளி உட்கார்ந்தார். ஆடிட்டோரியத்தில் கைத்தட்டல் அடங்கியது. குலாம் அலி காட்சி அளித்தார். இரு பக்கத்திலும் தபேலாவும், ஆர்மோனியமும். ஆடிட்டோரியத்தில் நிசப்தம் நிறைந்தது. குலாம் அலி பாடத் தொடங்கினார்.

    ஜூஹூவில் காற்று வீசியது. மியான் ஹுசைனுக்குத் தனது மனது நிறைந்தது. நரம்பு மண்டலம் முழுவதும் உற்சாகம் அடையும் விதமான ஒரு மகிழ்ச்சியை அனுபவித்தார். தான் சிம்ச்போக்கலியில் வசிக்கின்ற வழிவாணிபக்காரன் என்பதை அவர் மறந்தார். கண்களை மூடி அவர் விண்மீன்களைக் கண்டார். விண்மீன்களுக்கிடையில் குலாம் அலியின் குரல் கடந்து சென்றது.

    ”போதும் நிறுத்து!” விநாயக் பாஹெ, ஆடிட்டோரியத்தில் கடந்து வந்து சத்தம் போட்டுக் கத்தினான்.

    மியான் ஹுசைன் நடுங்கினான். விநாயக் பாஹெவும் உடன் இருந்தவர்களும் என்னவெல்லாமோ சத்தமாகக் கூறிக்கொண்டு மேடைக்கு நேராகக் குதித்தனர். ஆடிட்டோரியத்தில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர்களும் யாரும் அவர்களைத் தடுக்கவில்லை. பார்வையாளர்கள் பலரும் செய்வதறியாது எழுந்தனர்.

    விநாயக் பாஹெ ஒரு மைக்கைக் கைப்பற்றினான்.

    ”உங்க யாருக்கும் வெட்கமா இல்ல? பாகிஸ்தானிலிருந்து வந்த ஒருத்தனோட பாட்டக் கேட்டு மதிமறந்து உட்கார்றதுக்கு? அவங்க நம்ம ஆட்கள காஷ்மீரில் கொலை பண்ணீட்டு இருக்காங்க. நீங்க ஒரு பாகிஸ்தானியோட பாட்டக் கேட்டு வாஹ்……………..வாஹ்னு சொல்லறீங்க. இங்க இருக்கற சாப்பாட்டையும் சாப்பிட்டு வெட்கமானமில்லாத கூட்டம்.

    மியான் ஹுசைனுக்கு அதைக் கேட்கச் சகிக்கவில்லை.

    ”பாகிஸ்தான் நம்மோட எதிரியாய் இருக்கலாம். ஆனா சங்கீதம் யாருடைய எதிரியும் அல்ல”

    ”நீ யாரடா, பன்னியோட மகனே!” விநாயக் பாஹெ அவன் மீது விழுந்தான்.

    பின்னால் வேறு சிலரும்.

    மியான் ஹுசைன் அவர்கள் உருவாக்கின வளையத்தில் அகப்பட்டார். அடியும் உதையும் வாங்கி அவரின் உடல் நசுங்கியது. வாய்க்குள் இரத்தத்தின் சுவை அனுபவப்பட்டது. கெட்ட வார்த்தைகள் செவிக்குள் நுழைந்தன. எவர் எவரோ அவரின் முகத்தில் துப்பினர். ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் அவர் கீழே விழுந்தார். வினாயக் பாஹெ அவரை மீண்டும் உதைத்தான். போடா நாயே! பாகிஸ்தானுக்கு. குலாம் அலி தனது அறையில் நிம்மதியில்லாமல் நடந்தார்.

    ”சூர் சப்கா ப்யாரா ஹோதா ஹை. யஹ் சீமா நஹி பெச்சான் தா” குலாம் அலி தனக்குத் தானே கூறிக்கொண்டார். மற்றுள்ளவர்கள் நிசப்தமாக நின்றனர்.

    ”தில் சே நிகலி ஆவாஸ் தோ துஷ்மனி பி பூலா தேதா ஹெ” யாரோ ஏதோ கூறத் துணிந்தனர். குலாம் அலி கையுயர்த்தி அவனை விலக்கினார்.

    ”குதா நெ இன்சான் பனாயா, ஒளர் ஹம் பேத் பாவ் கர்தா ஹெ” குலாம் அலி கோபத்தோடு ஜன்னலுக்கருகில் நடந்தார். வெளியில் ஜூஹூ. இரவில் கடல் விளக்குகள். வானம். மியான் ஹுசைன் ஒரு கை கடல் தண்ணி எடுத்து முகத்தைக் கழுவினார். “இன்ஷா அல்லா!” ஜூஹூவின் வெப்பம் தணிந்த தூசு படர்ந்த பாதை வழியாக அவர் இழுத்து இழுத்து நடந்தார்.

    கொஞ்ச தூரம் சென்ற பிறகு தான் பின்னால் ஒரு அசைவைக் கவனித்தார். அலைந்து திரிகின்ற ஒரு நாய். மியான் ஹுசைன் நின்றதும் கொஞ்சம் தள்ளி அவரைப் பார்த்துக் கொண்டு அதுவும் நடந்தது. அவர் நின்று அதற்கு நேராகத் திரும்பினார்.

     ”எதுக்கடா நீ என் பின்னால வர்றே?. போ………………………பாகிஸ்தானுக்குப் போ………………………”

    சர்வசக்தியும் உபயோகித்து நாயை எட்டி உதைத்தார். அது மூண்டுகொண்டே புழுதியில் தெறித்து வீழ்ந்தது. மியான் ஹுசைன் தடுமாறி நடந்து மீண்டும் அதனருகில் சென்றான். மறுபடியும் எட்டி உதைத்தார்.

    ”சொல்றது கேட்கலயா? போடா பாகிஸ்தானுக்கு”.

    சத்தமிட்ட மியான் ஹுசைனின் குரல் அழுவது போலாயிற்று. வேதனை தாங்காமல் அவர் நிலத்தில் விழுந்தார். நாய் மெதுவாக எழுந்து, அவருடைய காலுக்கடியில் சென்று அமர்ந்தது.

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 24

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 24

    மீனாட்சி பாலகணேஷ்

    (பந்தாடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பெண்குழந்தைகளின் விளையாட்டுகளென இன்னும் பல உள்ளன. பிள்ளைத்தமிழ் நூல்கள் விரித்துரைப்பதென்பன சிலவே! அவற்றுள் கடைசியாக நாம் காணப்போவது பந்தாடல் பருவம்.

    பத்துப்பருவங்களுக்குள் பிள்ளைப்பருவ நிகழ்வுகளைப் பாடும் வழக்கினின்று வழுவாது பாடவேண்டி, அனைத்து விளையாட்டுகளையும் ஒரு பாடலிலேயே அம்மானைப் பருவத்தில் கூறிவிடுவதும் உண்டு! பக்தி, கலைநயம், கற்பனை அனைத்தும் கலந்தோடும் பிள்ளைத்தமிழ்ப் பருவப் பாடல்கள் இலக்கியச்சுவையிலும் மிகச் சிறந்தவையாகும்.

    பாடல்களைக் காணுமுன் பந்தாடுதல் பற்றிய மற்ற இலக்கியக் குறிப்புகளைக் கண்டு மகிழலாமே!

    பந்தாடுவது பெண்களுக்கு ஒரு இன்பமான பொழுதுபோக்கு; அருமையான விளையாட்டு! சங்ககாலத்திலிருந்தே  ‘பந்தாடுதல்’ பெண்களுடன் மட்டுமே இணைத்துப் பேசப்பட்டு வந்துள்ளது.

    மதுரை மாநகரின் கோட்டைவாயிலில் மன்னர்கள் பெண்கள் விளையாடும் பந்தையும் பாவையையும் கட்டித் தொங்கும்படிச் செய்திருந்தார்களாம். இதன்பொருள், ‘எம்மை வெல்லும் ஆண்மையாளர் எவரும் இல்லை! பகைவர்களை நாங்கள் பந்தும் பாவையும் விளையாடும் பெண்களைப் போன்று எண்ணுகிறோம். வீரம் மிகுந்தோர் யாராவது இருந்தால் இவற்றை வந்து அறுக்கலாம்,’ என்பதாகும் என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது!

                ‘வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
             பொருநர்த் தோய்த்த போரருவாயில்1 என்பன பாடல் வரிகள்.

    நெட்டி, பஞ்சு, பட்டுநூல், மயில்பீலி, மயிர் இவற்றால் பின்னி பந்துகளைச்செய்து சோலைகளிலும் மாடங்களிலும் விளையாடிக் களித்தனர். இவர்கள் விரைந்து பந்துவிளையாடும்போது குதிரையின் குளம்படிச் சத்தம்போல ஒலியெழுந்ததாம்; சிலம்பும் மேகலையும் கைவளைகளும் ஒலிக்கப் பெண்கள் பந்தாடினார்களாம்! எத்துணை பாடல்கள்! வருணனைகள் – சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும்!

    சீவகசிந்தாமணியின் விமலையார் இலம்பகப்பாடல் ஒன்று பந்தடிக்கும் லயத்துடன் ஒத்திருப்பதைப் படித்து ரசிக்கலாமா?

    இராசமாபுரத்து வீதிகளின் அழகைக்காணச் சீவகன் சென்று கொண்டிருக்கிறான்; விமலை எனும் அழகியபெண் பந்தாடிக்கொண்டிருந்தாள். அவள் எவ்வாறு பந்தடித்து விளையாடினாள் எனச் சீவக சிந்தாமணி விளக்கும் விளையாட்டின் வழிமுறைகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன!

    விமலை தனது உள்ளங்கையில் பொருந்தும்படி ஐந்து பந்துகளை வைத்துக்கொண்டு மேலே வீசியாடுகிறாள். ஒரு மலர்மாலையைச் சுற்றிமொய்க்கும் வண்டுகளைப்போல் அவை அவளைச்சுற்றிக் கீழேவந்து உடனே அவள் கைகளால் அடிக்கப்பட்டு மேலெழும்பிச் செல்லுகின்றனவாம். திரும்பக் கீழே விழுவதில்லை! பந்துகளின் போக்கையே பார்த்துக் கொண்டிருக்கும்அவளுடைய கண்களில் அழகான பிம்பமாகத் திரிகின்றனவாம்!

             அங்கையந்த லத்தகத்த ஐந்துபந்த மர்ந்தவை
             மங்கையாட மாலைசூழும் வண்டுபோல வந்துடன்
             பொங்கிமீதெ ழுந்துபோய்ப்பி றழ்ந்துபாய்தல் இன்றியே
             செங்கயற்கண் புருவம்தம் முளுருவம்செய்யத் திரியுமே2!

    மேலே அடிக்கப்பட்ட பந்துகள் சில அவளுடைய முல்லைமாலையில் மறைந்தன; பின்பு அவள் கையை வந்தடைந்தன.  கருங்கூந்தலைத் தாண்டிப்பறந்த பந்துகள் முகத்தருகே வந்தனவாம்; தலையில் மறைந்தவை மார்பில் மாலையருகே வந்துசேர்ந்தன. சில கைவிரலில் அமர்ந்தன. இவ்வாறு பந்துகள் எங்கே என்று காண்பவர் வியக்கும்படி அவற்றை வீசியும், அடித்தும் வேகமாக ஆடினாள் விமலை. இப்படியெல்லாம் ஆடினால் என்னவாகும்? மார்பில் பூசிய குங்குமமும் பொற்சுண்ணமும் நெற்றிச்சந்தனமும் வியர்வையில் கரைந்து கொங்கைகளிடையே வழிந்தோடியது வானவில் போன்று இருந்ததாம். ஆடியாடி அவளும் சிறிது தளர்ச்சி அடைந்துவிட்டாள் போல இருக்கிறதே! அவள் கையிலிருந்து ஒருபந்து நழுவி, மார்பிலணிந்த முல்லைமாலையைத் தொட்டுக்கொண்டு வீதியில் வந்துகொண்டிருந்த சீவகன்முன்பு போய் விழுந்ததாம். பின்பு என்னவாயிற்று? கண்ணோடு கண்ணிணை கலந்து திருமணத்தில் முடிந்தது என்கிறது சீவக சிந்தாமணி! இங்கு இதைச் சொன்னது விமலையார் பந்தாடும் அழகை விவரிக்க மட்டுமே!!
    —————————
    அம்பிகையும், மற்றப்பெண்களைப்போல் பந்தாடுவதில் விருப்பமுள்ளவள் என்பது தேவாரத்தில் காணும் வர்ணனைகளால் விளங்குகிறது. ‘பந்தணை விரலி’ எனச் சம்பந்தப்பெருமான் அம்பிகையைப் பற்றிக் கூறியுள்ளார். சுந்தரரும் கூட, ‘பந்தும் கிளியும் ஆகியனவற்றை எப்போதும் கரங்களில் வைத்திருப்பவளான அம்பிகையின் சிந்தைகவர்ந்த நாதனாகிய இறைவன் வாழும் ஒற்றியூர்,’ என ஈசனையும் அவன் வாழும் ஊரையும் சிறப்பிக்கிறார்.

             பந்தும் கிளியும் பயிலும் பாவை
             சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்
             எந்தம் அடிகள் இறைவர்க் கிடம்போல்
             உந்தும் திரைவாய் ஒற்றி யூரே3 (சுந்தரர் தேவாரம்- திருவொற்றியூர்)

    கைலாயத்திலிருந்த பார்வதிதேவிக்கு ஒரு சமயம் பந்துவிளையாடும் ஆசை ஏற்பட்டது; உற்சாகமாக அவளும் தோழியருடன் நீண்டநேரம் பந்து விளையாடுகிறாள். நேரம் சென்றதே தெரியவில்லை. இவள் விளையாடுவதற்காக சூரியனும் மறையாமல் வெளிச்சம் தருகிறான். மறைந்தால் விளையாட்டு தடைப்பட்டுவிடுமே; அதனால் அம்பிகை தன்னிடம் கோபித்துக்கொண்டால் என்னசெய்வது என்று ஒருபுறம் பயம்வேறு! இதனால் மாலை மயங்காது போயிற்று; முனிவர்கள் எல்லாரும் சந்தியாவந்தனம் செய்யமுடியாமல் திண்டாடினார்கள்.

    சிவபிரானிடம் சென்று அவர்கள் முறையிட, அவர், சூரியனைக் கடிந்துகொண்டு, நேரம்காலம் கருதாமல் விளையாட்டில் ஈடுபட்ட அம்பிகையைப் பசுவாகும்படி சபித்தார். மனம்வருந்திய பார்வதி சாபவிமோசனத்தை வேண்டுகிறாள். சிவன் பந்தினைக் காலால் எற்ற அது பூமியில் ஒரு சரக்கொன்றை மரத்தடியே விழுகின்றது. அந்த மரத்தினடியே உள்ள சிவலிங்கத்திற்குப் பசுவான அம்பிகை பால்சொரிந்து அபிஷேகம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்கிறார் பெருமான். ‘பந்து அணைந்த தலம்’ ஆதலால் ‘பந்தணைநல்லூர்’ என இத்தலம் வழங்கப்படுகிறது. காலப்போக்கில் ‘பந்தநல்லூரு’ம் ஆகிவிட்டது! அப்பந்தும் அச்சிவலிங்கத்தின் சடையில் விழுந்து கலந்தது.

    திருமால் பசுவான தன் தங்கையைக் காக்க இடையனாக பூமிக்கு வருகிறார். நாள்தோறும் பசுக்களை மேய்த்து வருகிறார். ஒருநாள் பார்வதியான அப்பசு புற்றிலிருந்த சிவலிங்கத்தைக் கண்டு பாலை முழுவதும் அதன்மீது சொரிந்து வழிபடுகிறது. அப்பூசையால் மகிழ்ந்த சிவபிரான் அந்த லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு பார்வதிக்குக் காட்சிதந்து அவளை அணைத்துக் கொள்கிறார். பசுவடிவு நீங்கிய அவளும் மேலும் வடக்குநோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டாள். தவத்தால் மகிழ்ந்த சிவபிரான், முனிவர்கள் – தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பராசக்தியைத் திருமணம் செய்து கொண்டார். கல்யாணசுந்தரர், பசுபதீஸ்வரர் (பசுவின் பதியாக வந்தவர்) எனும் பெயரையும் பெற்றார். அச்சிவனது சிரசில் பந்தணைந்த அடையாளம் இன்றும் காணப்படுகின்றது.

    இது அம்பிகையின் பந்தாடும் ஆசைபற்றிய அருமையான ஒரு புராணக்கதை. சீவகசிந்தாமணியில் பெண்கள் பந்து விளையாடும் முறையைப் பார்த்தோம். ஆகவே இது மிகவும் நுட்பமாக, கைவேகத்தையும், கண்- கை- கால் ஆகியவற்றின் இணைந்த செயல்பாட்டையும் விவேகத்தையும் கொண்டு விளையாடப்படும் ஆட்டம் என அறியலாம். நாள்தோறும் நன்கு பயிற்சி செய்யவும் வேண்டும்.

                ____________________________

    இத்தனை அழகும் நயமும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த விளையாட்டிற்கு மற்றவற்றைப்போல் பாடல்கள் இல்லையோ என எண்ணவேண்டா. சிலப்பதிகாரத்தில் பெண்கள் பாடியாடுவதாக சில பாடல்களைக் காணலாம். கண்ணகிக்குக் கோவிலெடுத்து வழிபடும்போது பெண்கள் மூவேந்தர்களின் புகழையும் பாடி ஆடிக் களிக்கிறார்கள். பந்திற்குக் ‘கந்துகம்’ எனவொரு அழகான பெயருமுண்டு. பெண்கள் பந்தடிக்கும்போது பாண்டியமன்னர்களின் புகழைக்கூறி ‘கந்துகவரி’யைப் பாடுகிறார்கள்.

    “பொற்கொடி போன்றபெண்ணே! நமது அழகான பொன்மாலைகளும் மின்னல்போல ஒளிவீசும் மேகலைகளும் அசைந்தாடும்படி, ‘எங்கள் பாண்டியமன்னன் நீடூழி வாழ்க! தேவர்களின் ஆரத்தை மார்பிலணிந்தவன் வாழ்க!’ எனக்கூறிப் பந்தடிப்போமாக!” என்று ஒருத்தி பாடுகிறாளாம்.

    “விரைந்து வரும் இப்பந்து நமது கையில் இருந்ததும் இல்லை! நீண்ட நிலத்திலிருந்து அந்தரத்தே எழுந்ததும் இல்லை பாராய்! என்று உலகத்தோர் கூறும்வண்ணம் பாண்டியமன்னன் வாழ்க எனப்பாடிப் பந்தடிப்போம்!” என இன்னொருத்தி பாடுகிறாள்.

    துன்னிவந்து கைத்தலத்து இருந்ததில்லை நீணிலம்
    தன்னினின்றும் அந்தரத்து எழுந்ததில்லை தானெனத்
    தென்னன்வாழ்க வாழ்கவென்று சென்றுபந் தடித்துமே
    தேவரார மார்பன்வாழ்க வென்றுபந் தடித்துமே4.

    இது அவர்கள் வெகு விரைவாக இப்பந்தாட்டத்தை ஆடுவதனைக் குறிக்கின்றது. பந்தைத் தூக்கி எறிந்து பிடித்து விளையாடும் விளையாட்டல்ல இப்பந்தாட்டம்! பந்தடித்தல் என்று ஒருத்தியே  பந்துகளை மேலே வீசி அவை கீழேவிழுமுன் ஓடியோடிப்பிடித்து உயரப்பந்தடித்து விளையாடும் விறுவிறுப்பான பந்தாட்டம் இதுவாகும்! நல்ல உடற்பயிற்சியும் கூட!

                _____________________________

    கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை எனும் காப்பியம் உதயணன் எனும் மன்னனின் பிரதாபங்களைக் கூறுவது.

    இதில் ‘பந்தடி கண்டது’ எனும் காதையில் பந்துகளைச் செய்யும் முறை விரிவாக விளக்கப்படுகிறது.

    தொழில் நுணுக்கம் அறிவோரால் செய்யப்பட்ட பந்துகள் நெட்டியும் பஞ்சும் இடையிடையே வரிந்து கட்டிய  உலண்டு நூலும் சேர்த்து அழுத்தி அவையிவற்றை அமைவாக உருட்டிக்கட்டி, மேலே மயிற்பீலியும் மயிருங்கொண்டு நன்றாகப் பின்னி, அவற்றின்மேல் நூலாலும் கயிற்றாலும் நுண்ணியதாகச் சுற்றி அழகாகக் கையிற்கொண்டு அழுத்தி, அதன்மேல் பாம்புத்தோல் போலவும் மயில் தோகையின் கண் போலவும் அழகிய நீர் நுரை போலவும் தோன்றும்படி தைத்துப் பிடித்த மென்மையினையுடையனவும் பல்வேறு தொழில் திறம் அமைந்தனவுமாகிய பந்துகளை வைத்து (விளையாடினர்).

                       கிடையும் பூளையு மிடைவரி யுலண்டும்
                                அடையப் பிடித்தவை யமைதியிற் றிரட்டிப்
                                பீலியு மயிரும் வாலிதின் வலந்து
                      நூலினுங் கயிற்றினு நுண்ணிதிற் சுற்றிக்
                                கோல மாகக் கொண்டனர் பிடித்துப்
                                பாம்பின் றோலும் பீலிக் கண்ணும்
                        பூம்புன னுரையும் புரையக் குத்திப்
                                பற்றிய நொய்ம்மையிற் பல்வினைப் பந்துகள்5.

    பெருங்கதையின் வத்தவ காண்டத்தில் பந்தடி கண்ட காதையில் வாசவதத்தையும் பதுமாவதியும் தங்கள் தோழியரின் பந்துவிளையாடும் போட்டியைக் காண்கின்றனர். வயந்தகனும் உதயணனும் மறைந்து நின்று பந்தடி காணுகின்றனர். தோழியர்கள் இராசனை, காஞ்சனமாலை, அயிராபதி, விச்சுவலேகை, ஆரியை ஆகியோரின் ஒப்பற்ற பந்தாட்டம் விளக்கமாகக் கூறப்படுதலைக் காணலாம். இத்தகைய விரிவான வேகமான, வியக்கவைக்கும் ஆட்டமிதுவா என பிரமிக்க வைக்கும் விளக்கங்களைக் கண்டு மகிழலாம்.

    இனி பிள்ளைத்தமிழைக் காணச் செல்லலாமா? முன்பே கூறியதுபோல, நல்லதுக்குடி கிருட்டிணையர் இயற்றியுள்ளதில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் ஒன்றே பெண்குழந்தையின் பந்தாடல் பருவத்தைப் பத்துப்பாடல்களில் அழகுற விவரிக்கின்றது.

    சிவகாமசுந்தரி அன்னை  வெள்ளிமலையாகிய கைலாயத்தில் பிரம்மாண்டமான மலைகளாகிய பந்துகளைக் கையில் எடுத்து விறுவிறுப்பாகப் பந்தாடி மகிழ்கிறாள். அப்போது அவளுடைய சிவந்த தாமரை மலரடிகளின் குதிகால் பந்துகள் அசைந்தாடுகின்றன; பந்தினையொத்த திருமுழந்தாள் அசைந்தாடுகிறது. பந்துபோன்ற வடிவில் முடியப்பட்ட உச்சிக்கொண்டை உடன் ஆடுகின்றது. குங்குமம் பூசிய கொங்கைகள் பந்தாடுகின்றன; இருவிழிகளும் பந்துகள் செல்லும் பாதையையே நோக்குவதனால் அவையும் அதே வேகத்தில் சுழன்றாடுகின்றனவாம்.

    நமது உள்ளங்களையும் உவகையில் பந்தாடச் செய்கின்ற பாடல்!

                செந்தாமரைப் பதம் பந்து அசைந்தாட
                       வரும் திருமுழந்தாள் பந்துமே
             திண்புவி பதிந்தாட இனிய பந்துக்
                       கொண்டை சென்றுடன் பந்தாடவே
             நந்தாத குங்குமக் கொங்கை
                       பந்தாட இருநயனங்கள் ஆடவே
             ……………………………………………..
             பந்தாட வேதண்ட மூதண்ட கூட
                       நற்பந்து விளையாடி அருளே!
             பங்கயச் சிவகாம சுந்தரி என்
                       அம்மையே! பந்து விளையாடி அருளே6!     

    அன்னை பராசக்தி தனது ஆணைப்படி இவ்வுலகில் அனைத்தையும் நடத்துவிக்கிறாள் எனப் பெரியோர் கூறுவர்! பிள்ளைத்தமிழ் நூல்களில் அன்னை பராசக்தி சிறுவீடுகட்டி விளையாடுவதெனக் கூறுவது, அன்னையானவள் இந்த உலகங்களைப் படைப்பதனையும், அம்மானை, பந்து, கழங்கு முதலியன விளையாடுவது அவற்றைத் தனது ஆணைப்படி காத்து இயக்குவதனையும், சிவனெனும் பித்தன் அச்சிற்றிலை அழிப்பது, உலகங்களை அழிப்பதனையும், இச்செயல்கள் தொடர்ந்து இடைவிடாது சுழற்சியாக நடந்துகொண்டே இருப்பதையும் உட்பொருளாக விளக்கும்.

    இப்பருவத்தின் பத்துப்பாடல்களும் ஒவ்வொரு நயத்தை விளக்கும். மூன்றாம்பாடல் பலவிதமான விதங்களில் தோன்றும் உயிரினங்களான முட்டையினின்று விளைபவை, கருப்பையினின்று பிறப்பவை, வியர்வையினின்று தோன்றுவன எனும் தத்துவன (நுண்ணுயிரிகள்!), ஊர்வன, பறப்பன, நடப்பன, கிடப்பன, இருப்பன ஆகிய வெவ்வேறு உயிர்களைப் படைத்தும், அடுத்தடுத்த பிறவிகளில் வெவ்வேறாக மாறிமாறிப் பிறப்பதற்கும் ஆகிய நிலைமையுடைய உயிர்க்கூட்டங்களை பந்தென அடித்து விளையாடுபவளான உமையம்மையே!

                ………………………………………………
             தத்துவன ஊர்வன தவழ்ந்திடுவ நிற்பன
                       தனித்தனி பறப்பனவுமே
             ………………………………………..
             பத்திபெறு பல்லுயிர்ப் பந்தடித்து ஆடும்
                       உமைபந்து விளையாடியருளே7 என வேண்டுவதாக அமைந்த பாடல்.
    வேறொரு பாடலில் இசை சங்கீதத்துடன் பந்தடித்தருளுக என்பார்.

    மற்றொன்றில், அணிந்துள்ள அணிமணிகள் செய்யும் தாளத்துடன் இணைந்து பந்தடித்தருளுக என வேண்டுவார்.

    வேறொன்றில் எங்கள் பந்தபாசங்கள் தீரும்வண்ணம் பந்தடித்தருளுக என்பார்.

    ஆக, இறைவியின் பந்தாடும் செயலானது உயிர்களின் பந்தபாசத்தை நீக்குவதும், ஐந்தொழில் புரிவதும் ஆகியவற்றினை அவள் எளிதாகக் காலந்தோறும் பந்தாடும் விளையாட்டாகவே செய்துவருவதனை உணர்த்துகின்றது.

    இந்தப் பந்தாட்டத்தில்தான் என்னவெல்லாம் கற்பனைகள். கருத்துக்கினிய புனைகதைகள், காட்சிகள்! காலங்கள்தோறும் பலவகைப்பட்ட விளையாடல்களின் உள்ளங்கவர் காட்சிகளைப் பிள்ளைத்தமிழ் எனும் ஒப்பரும் ஒரு பிரபந்தத்தின் இனிய பாடல்களாக்கி அளித்த அருமைத் தமிழின் பெருமை தனித்துவமானது அன்றோ?

    இத்துணை நாட்கள் பிள்ளைத்தமிழின் நயமான பருவங்களையும் அவை தொடர்பான பாடல்களையும் கண்டுகளித்தோம்.

    விரைவில் இதுபோன்ற வேறொரு தொடருடன் சந்திப்போம்.

    வணக்கம்.

    (நிறைந்தது).

                            ________________________________

     பார்வை நூல்கள்:

    1. நக்கீரர் – திருமுருகாற்றுப்படை.
    2. திருத்தக்க தேவர்- சீவக சிந்தாமணி – விமலையார் இலம்பகம்.
    3. சுந்தரமூர்த்தி நாயனார் – திருவொற்றியூர் தேவாரம்.
    4. இளங்கோவடிகள்- சிலப்பதிகாரம் – கந்துக வரி.
    5. கொங்குவேளிர் – பெருங்கதை – வத்தவகாண்டம்- பந்தடி கண்டது.
    6. 7. நல்லதுக்குடி கிருட்டிணையர் – தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்.
    Share
  • பழகத் தெரிய வேணும் – 37

    பழகத் தெரிய வேணும் – 37

    நிர்மலா ராகவன்

    தானே தன்னை அறிய

    “ஓயாம என்ன விஷமம்?” என்று குழந்தைகளை அதட்டியோ, அடித்தோ செய்கிறவர்கள் குழந்தைகளின் மனதைப் புரிந்துகொள்ளாதவர்கள்.

    பெரியவர்களுக்குத் தவறு என்றுபடுவது எது என்று குழந்தைகளுக்குப் புரியாது. இன்னும் அதிகமாகச் `சோதித்து’க்கொண்டே இருப்பார்கள்.

    சில நடிக நடிகையர் திரைப்படங்களில் தம் இயற்கையிலிருந்து மாறுபட்டு நடிக்கிறார்களே, அவர்களைக் கேளுங்கள், இத்திறமை எப்படி சாத்தியமாகிறது என்று.

    `பிறரது சரீரத்திற்குள் புகுந்துகொள்வதால்,’ என்று பதில் வரும். நம்மை இன்னொருவராகப் பாவித்தால், அவரது எண்ண ஓட்டம் புரியும். அதாவது, அவருடைய கண்ணால் நாம் பார்க்கவேண்டும், அவருடைய காதால் கேட்கவேண்டும்.

    தலைவர்களும், பிறரது துன்பத்தைத் துடைக்க விரும்புகிறவர்களும், எழுத்தாளர்களும் கற்க வேண்டிய தன்மை இது.

    நாம் சந்திக்கும் பலதரப்பட்ட மனிதர்களின் உணர்ச்சிகள் மட்டுமின்றி, அனுபவங்கள், கண்ணோட்டம் எல்லாமே தெளிவாகும். அப்போதுதான் பிறரைப் பழிக்கத்தோன்றாது.

    (எச்சரிக்கை: நீண்ட மாதங்கள் தொடர்ந்து இப்படி நடந்தால், அவர்களாகவே மாறிவிடும் அபாயமும் உண்டு. சுயநிலைக்குத் திரும்ப சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.

    தொழுநோயைப்பற்றி நிறைய ஆராய்ச்சியுடன் ஒரு தொடர்கதை எழுதிக்கொண்டிருந்தபோது, நான் அவர்களுடைய உணர்ச்சிகளை என்னுடையதாக ஆக்கிக்கொள்ள, உடல்நிலை சீர்கெட்டு, மூச்சே விட முடியாது போய்விட்டது. நள்ளிரவில் மருத்துவரிடம் போக வேண்டிய நிலை ஏற்பட்டது).

    கதை

    பரீட்சையில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வாங்கிய என் மாணவன், “இன்று அப்பாவிடம் பிரம்படி வாங்கப்போகிறேன்,” என்று நடுங்கியவாறு கூறினான்.

    வயதுக்கு மீறிய வளர்த்தியுடன் இருந்த அவனது சகா, “திருப்பி அடித்துவிட்டுப் போயேன்!” என்றான் அலட்சியமாக.

    இந்த உரையாடலைச் செவிமடுத்தபடி இருந்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

    வெகு நேரம் யோசித்தபின் ஒன்று புரிந்தது. காரணமில்லாது அவனை அடிக்கடி அடித்து நொறுக்கும் அப்பா. மனம் வெறுத்து, அவரை எப்படித் தடுப்பது என்று அப்படி யோசித்திருக்கலாம்.

    வேறொரு சமயம், அவனை அழைத்துக் கேட்டபோது, வாரம் முழுவதும் அவன் எப்படி இருக்கிறான் என்றுகூட பாராது, சனிக்கிழமையன்று, காரணமேயின்றி பிரம்பும் கையுமாக அவனை வீட்டுக்குள் துரத்தித் துரத்தி அடிக்க வருவார் என்று ஒப்புக்கொண்டான்.

    “தான் குடும்பத் தலைவன். அதனால், பெரிய அதிகாரம் என்று காட்டிக்கொள்வதாக அப்பாவுக்கு எண்ணம்!” என்று அவன் வெறுப்புடன் கூறியபோது, என் அதிர்ச்சி அதிகரித்தது.

    பையனுக்கு அப்பாவைப் புரிந்த அளவுக்கு அவரால் மகனைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

    அப்பா என்றால் அடக்குவதுதானா, அன்பு செலுத்த வேண்டாமா என்று அவன் யோசித்திருக்கிறான்.

    `நல்ல வேளை, நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லையே!’ என்ற நிம்மதியும், `அவன் நிலையில் நான் இருந்தால், இதைவிட மோசமாக இருந்திருப்பேனோ, என்னவோ!’ என்ற நினைப்பும் ஒருங்கே எழுந்தன.

    ஒருவரது நலனைப்பற்றிய உண்மையான அக்கறை இருந்தால், `நீ என்ன, இவ்வளவு கேவலமாக நடக்கிறாயே!’ என்ற எண்ணம் உதிக்காது.

    பிறரது துன்பங்களை நம்முடையதுபோல் பாவித்து, அவர்களை அப்படியே ஏற்றால்தானே நம்முடன் நெருங்குவார்கள்?

    அதன்பின், தம்மைப்பற்றி, வலிய வந்து சொல்லிக்கொள்வார்கள், நாம் கேளாமலேயே.

    சிலர் அவலமான தம் கதையைப் பிறரிடம் சொல்லிக்கொள்ள விரும்பி மெல்ல ஆரம்பிப்பார்கள்.

    `எனக்கே எத்தனையோ கஷ்டங்கள்! உங்களுடையதை வேறு கேட்கணுமா?’ என்பதுபோல் மற்றவர் அசிரத்தை காட்டினால், வாயை இறுக மூடிக்கொள்வார்கள்.

    கதை

    “நீங்க இன்னிக்குப் பேசப்போறதா கேள்விப்பட்டேன். ஒங்களைப் பாக்கத்தான் வந்தேன்,” என்று ஒருவர் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

    அப்போது சிற்றுண்டி நேரம். சற்றுத் தொலைவில் இருந்த நாற்காலிகளில் அமர்ந்துகொண்டோம்.

    மிகுந்த தயக்கத்துடன், இளமையில் தாம் `எப்படி எப்படியோ’ இருந்ததாகவும் அதனால் திருமணமே செய்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

    “ஆண்கள் தமக்கு வரும் மனைவி யோக்கியமானவளாக இருக்கவேண்டும் என்று நினைப்பதுபோல்தானே பெண்களும் விரும்புவார்கள்? அதனால், `கெட்டுப்போன’ ஒரு பெண்ணையே மணக்க உறுதி பூண்டிருக்கிறேன்!” என்று கூறினார்.

    “அப்படி ஒரு பெண்ணை எப்படித் தேடுவது?” என்று அயர்ந்தவருக்கு நாற்பது வயதுக்குமேல் இருக்கும்.

    அவர் புண்ணியத்தால் எனக்கு ஒரு நல்ல கதை கிடைத்தது.

    பல வருடங்களுக்குப்பின், அவரை ஒரு பெண்ணுடன் பார்த்தேன்.

    “கல்யாணம் ஆயிடுத்தா?” என்று ஆவலுடன் விசாரித்தேன்.

    “இல்லே. ஆனா, ஆயிடுச்சுன்னு எல்லார்கிட்டேயும் சொல்லிட்டிருக்கேன்,” என்ற பதில் வர, நான் புன்னகைத்தேன்.

    நாம் பேசுவதைப் பிறர் கேட்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் உண்டு. அதுபோல்தானே மற்றவருக்கும் இருக்கும் என்று யோசித்தால் தானே சகிப்புத்தன்மை வளரும்.

    தம்மைவிட வித்தியாசமானவர்களைச் சிலரால் ஏற்க முடியாது.

    “இந்தியாவில் சாதி வித்தியாசம் நிறைய பார்ப்பார்களாமே, உண்மையா?” என் சக ஆசிரியைகள் என்னைச் சூழ்ந்து உட்கார்ந்துகொண்டு கேட்டார்கள்.

    “எந்த நாட்டில் இந்தமாதிரியான குணம் கிடையாது? சொல்லுங்கள் பார்க்கலாம்!” என்று சவால் விட்டேன்.

    என் பதில் அவர்களை யோசிக்கவைத்தது.

    மலேசியா போன்ற நாடுகளில் இன வேறுபாடு, பிற நாடுகளில் மொழி, மதம் அல்லது நிறத்தால் உயர்வு-தாழ்வு என்கிற நிலை.

    மொத்தத்தில், மனிதனுக்கு அன்பு செலுத்துவதைவிட வெறுப்பது எளிதாக இருக்கிறது.

    கதை

    என் சக ஆசிரியை மலர் ஓயாது சீனர்களை `மஞ்சத்தோல்’ என்று பழிப்பாள். எல்லா மாணவர்களுக்கும் அவளைக் கண்டால் வெறுப்பு.

    “எங்கள் வகுப்பு மாணவர்கள் மலர் டீச்சரைப் படாதபாடு படுத்துவார்கள்!” என்று ஒரு மாணவி என்னிடம் கூறிச் சிரித்தபோது, நான் அலட்சியமாக, “அவள் racist! (இனவெறி பிடித்தவள்)” என்று தெரிவித்தேன். (அதே மாணவர்கள் என்னிடம் மிக மரியாதையாக நடந்துகொள்வார்கள்).

    மலர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவள். ஆனால், இந்தியனில்லை. நெற்றியில் குங்குமத்துடன் விபூதி, தன்னை பக்தி நிறைந்தவள் என்று காட்டிக்கொள்வதுபோல். எல்லாரும் தன்னைப்போல் இருக்கவேண்டும் என்று (இயலாத) ஒரு கருத்தைக் கொண்டவள்.

    மலரை `பக்திமான்’ என்று மகாத்மா காந்தி ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார். ஏனெனில், “எவருக்குப் பிறர் அனுபவிக்கும் துன்பங்கள் புரிகிறதோ, அவரே ஆன்மிகவாதி!” என்ற கருத்து கொண்டவர் ஆயிற்றே!

    துணுக்கு

    பூவுலகில் தன் காலம் முடிந்தவுடன், நற்குணவானான ஒரு மனிதன் சொர்க்கத்திற்குப் போனான். அது காலியாக இருந்தது. வேறு பக்கத்திலிருப்பவர்கள் சிரித்தபடி மகிழ்ச்சியாக இருந்தார்கள். அங்கோ ஒரே கும்பல்.

    “என்னையும் அங்கே அனுப்பிவிடுங்கள்,” என்று இவன் கோரிக்கை விட, “நீ இருக்க வேண்டிய இடம் அதுவல்ல. அது நரகம். அங்கிருப்பவர்கள் எப்போதும் ஆத்திரம் கொண்டு, பிறரது துயரத்தால் மகிழ்ச்சியும் லாபமும் அடைந்தவர்கள்,” என்ற பதில் கிடைத்தது.

    ஆத்திரத்திற்கு எதிர்ப்பதம் என்ன தெரியுமா?

    அமைதி என்கிறீர்களா?

    இல்லை. அடுத்தவரைப் புரிந்துகொள்வது. அவரை நம் இதயத்தால் தொடுவது.

    பிறருடைய இடத்தில் நம்மை வைத்துப் பார்த்தோமானால், எவரையும் ஏற்க முடியும்.

    தன்னைத்தானே புரிந்துகொள்ள ஒருவருக்கு இதைவிடச் சிறந்த வழி கிடையாது.

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 11

    எட்டுக் கோணல் பண்டிதன் – 11

    தி. இரா. மீனா

                     அத்தியாயம் பதினேழு

    ஆனந்த நிலையையும் ,உயிரியல்பையும் ஜனகருக்கு அஷ்டவக்கிரர் விளக்குவது இந்த அத்தியாயமாகும்.

    1. மனநிறைவும், இந்திரிய அமைதியும் பெற்று தனிமையில் எவன் என்றும் இன்பமடைவானோ அவனே ஞானப் பயனையும், யோகப் பயிற்சியின் பயனையும் அடைந்தவனாவான்.

    2. தன்னிடமே பிரமாண்டத் தொடரெல்லாம் நிறைந்துள்ளபடியால், உண்மை உணர்ந்தவன் இவ்வுலகில் எந்தக் காலத்திலும் துன்பமடைய மாட்டான்.

    3. ஈச்சம் குருத்தை உண்டு இன்பமடையும் யானையை வேப்பிலை மகிழ் விப்பதில்லை. அது போலத் தன்னுள்ளே மகிழ்ச்சியடைபவனை உலகவிஷயங்கள் எவையும் என்றும் மகிழ்ச்சி அடையவைப்பதில்லை.

    4. அனுபவித்த போகங்களில் வாதனையற்றிருப்பவனும், அனுபவிக்காத வற்றில் உதாசீனமாக இருப்பவனும் ஆகிய ஒருவன் உலகத்தில் கிடைப்பதற்கு அரியவனாவான்.

    5. இந்த உலகில் போக விருப்பினரையும், மோட்ச விருப்பினரையும் காண லாம். போகம், மோட்சம் இரண்டையும் விரும்பாத பெரியவர்கள் மிக அரியவர்களாவார்கள்.

    6. அறம், பொருள், இன்பம், வீடு, வாழ்வு, சாவு முதலிய எல்லாவற்றிலும் பெரியவருக்கு வேண்டல் வெறுத்தல் எதுவுமில்லை.

    7. அவனுக்கு உலகம் தொலைவதில் விருப்பமில்லை. அது இருப்பதில் வெறுப்புமில்லை. அவ்வாறானவன் விரும்பியவாறு வாழ்ந்து இன்ப வடிவாகயிருக்கிறான்.

    8. இவ்வாறு மனதொழிந்தவன் பார்த்தும், கேட்டும், முகர்ந்தும் அருந்தியும் சுகமாக இருப்பான்.

    9. சம்சாரக் கடல் வறண்டவனது பார்வை குறியற்றும், செயல் உத்தேசமற்றும். பொறிகள் வேகமற்றும் இருக்கும். விருப்பும், வெறுப்பும் அவனுக்கில்லை.

    10. அவன் விழிப்பதும், உறங்குவதுமில்லை; இமைப்பதும், திறப்பதுமில்லை; விடுபட்டோனிடம் வெளிப்படும் பரநிலை அது!

    11. எல்லாவிடத்திலும் அவன் தன்னிலை நிற்பவனாக, தூய்மையான உள்ளமுடையவனாய் இருப்பான். துன்பம்  நீங்கிய முக்தனாக எங்கும் பிரகாசிப்பான்.

    12. பார்த்தும், கேட்டும், தொட்டும், முகர்ந்தும், உண்டும், ஏற்றும், புகன்றும், சென்றும், விருப்பு, வெறுப்புகளிலிருந்து விடுபட்ட முக்தனே பெரியவன்.

    13. அனைத்திலும் சுவையற்ற முக்தன் எதையும் தூற்றுவதில்லை, புகழ்வ தில்லை, மகிழ்வதில்லை, கோபிப்பதில்லை, கொடுக்கல் வாங்கல் அவனிடமில்லை.

    14. காதலறும் பெண்ணைக் கண்டும், அணுகி வரும் சாவைக் கண்டும் உள்ளம் கலங்காது தன்னிலை நிற்கும் பெரியோன் முக்தனேயாவான்.

    15. அனைத்திலும் சமதிருஷ்டி உடைய தீரனுக்கு இன்பத்திலும் துன்பத்திலும், ஆணிலும், பெண்ணிலும், ஐஸ்வர்யத்திலும், ஆபத்திலும் எந்த விஷேஷமுமில்லை.

    16. உலகச் சுழலற்றவனிடம் வருந்துதலில்லை, இரக்கமுமில்லை; செருக்கில்லை, தாழ்வுமில்லை, வியத்தலில்லை, குழப்பமுமில்லை.

    17. முக்தன் விஷயங்களை வெறுக்க மாட்டான் விரும்பவுமாட்டான். என்றும் பற்றற்ற உள்ளத்தோடு நேர்ந்ததையும், நேராததையும் ஏற்றுக் கொள்வான்.

    18. அகத்தே ஒன்றுமில்லாதவன். நன்மை, தீமையென்ற வித்தியாசங்களை உணர மாட்டான். அவன் தனிப் பரநிலை பொருந்தியவன் போலும்.

    19. நான், எனது அற்று உண்மையில் எதுவுமில்லையெனத் துணிந்து, உள்ளே ஆசையற்றவன், செய்தும் செய்யாதவனே.

    20. அகந்தை நழுவியவன் மனம், ஒளி, மயக்கம், கனவு, அழியாமை ஆகியவையற்ற ஒன்றில் நிலையுற்றவனாவான்.

                       அத்தியாயம் பதினெட்டு

    எல்லாவற்றையும் துறந்து, தன்னிலையில் சும்மா இருப்பதுவே சுகமென்றும், பிற சாதனைகள் சிறுவருக்கேயென்றும், தன்னிலை நின்றவனுக்கு எக்கடமையும், இரட்டையும், விகற்பமுமில்லையென்றும், ஜீவன் முக்தனது இயல்பு விசித்திரமானது, தீனர்களாம் பாமரருக் கும், தீரனாம் அவனுக்கும் வெகுதூரமென்றும், ஞானியை ஞானியே அறிய முடியுமென்றும், வாழ்விலும், சாவிலும், தனிமையிலும், ஜனக் கூட்டத்திலும் மெய்ப் பொருளில் நிலைத்தவனாக இருப்பான் என்றும் அஷ்டவக்கிரர் ஜனகருக்குக் கூறுவது இவ்வத்தியாயமாகும்.

    இ்ந்த அத்தியாயத்தில் மொத்தம்  நூறு சுலோகங்கள் உள்ளன. அவை மேலும் மூன்று தொடர்களில் இடம் பெறும்.

    1. ஞானம் ஏற்படுகின்ற இன்பமே வடிவாகிய அமைதியொளியைப் போற்றுவோம்.

    2. உலகப் பொருட்கள் எல்லாவற்றையும் பெற்று போகங்கள் செழிக்கப் பெறலாமெனினும், எல்லாவற்றையும் துறந்தாலன்றி சுகமானவனாதல் இயலாது.

    3. கடமையாம் கடுவெயிலின் அனலால் உள்ளம் பொசுங்கியவனுக்குச் சாந்தியை விட்டு சுகமெங்கேயுள்ளது.

    4. இப்படைப்பு கற்பனை மட்டுமே; உண்மையிலொன்றுமில்லை. இருப்பையும், இருப்பின்மையையும் உணரும் தன்மையுடையவர்களுக்கு இன்மையென்றுமில்லை.

    5. விகற்பமும், வருத்தமும், மாறுதலும் மாசுமற்ற தனது நிலை தொலைவிலுமில்லை, அருகிலுமில்லை. அது என்றும் அடையப்பட்டதேயாகும்.

    6. மயக்கம் விலகித் தன்னையே மீண்டும் பெற்றோர் பார்வை மூட்ட மின்றி துன்பமில்லாமல் இருப்பார்கள்.

    7. அனைத்தும் கற்பனையே; ஆத்மாவோ கட்டற்ற பழம்பொருள் என்று ணர்ந்த தீரன் சிறுவரைப் போல என்ன பழகுவது ?

    8. தான் பிரம்மம் என்றும், இருப்பும் இன்மையும் கற்பனைகளென்றும் துணிந்து அவாவற்றவன் எதையறிவது? எதைச் சொல்வது? எதைச் செய்வது?

    9. அனைத்தும் ஆத்மாவேயெனத் தீர்ந்து மோனத்திலிருக்கும் யோகிக்கு அது நான், இது நானல்ல என்னும் விகற்பங்கள் ஒழிந்தன.

    10. அமைதியற்ற யோகிக்கு  விஷேஷமில்லை. சாதாரணமுமில்லை; மேதையில்லை; மடமையுமில்லை; சுகமில்லை, துக்கமுமில்லை.

     [தொடரும்]

    Share
  • நடை (சிறுகதை)

    நடை (சிறுகதை)

    வசுராஜ்

    மொட்டை மாடியில் நடக்க ஆரம்பித்தேன். மாலை வானம் எஸ்.பி.பி. அவர்களை நினைவுபடுத்தும் “வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கொரு சேதி தரும்” தந்து கொண்டு தானிருக்கு. என்ன நிறங்கள்!

    இந்த நிறங்களுக்கு இறைவன் எதைக் கொண்டு வண்ணம் சேர்க்கிறான்? எந்தத் தூரிகையால் தீட்டுகிறான்? அட எனக்கே கவிதை வரும் போல் இருந்தது. தலைக்குப் பக்கத்தில் விமானம் தரையிறங்கத் தாழ்ந்து பறந்தது. (விமான நிலையம் வெகு அருகே) எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத காட்சி. விமானம் தரையிறங்குவது ஒரு ராட்சசக் கழுகு மிக லாகவமாகத் தரையைத் தொடுவது போல இருக்கும். விமானம் கண்ணை விட்டு அகன்றதும் கீழே எட்டிப் பார்த்தேன்.

    எதிரில் சின்னச் சின்னத் தகரத் தடுப்புகள். பக்கத்தில் உள்ள அடுக்குமாடிப் பணியாளர்களின் தங்குமிடம் புறாக் கூண்டுகள் போலிருந்தது. வேலை நேரம் முடிந்து வட மாநிலப் பசங்க வந்து கொண்டிருந்தார்கள். ஒரே சிரிப்பும் சந்தோஷமுமாய் வந்தார்கள். பாவம் வாழ்க்கையின் கஷ்டங்களைச் சிரித்தே தாங்கிக்கொள்ளப் பழகிவிட்டார்கள் போலும். நான் நடக்க ஆரம்பித்தேன். பக்கத்து வீட்டுக் குழந்தை சிரித்துக்கொண்டே தத்தக்கா பித்தக்கான்னு  நடந்து கொண்டிருந்தது. பாட்டி, குழந்தை கூட ஓடிக்கொண்டிருந்தாள்.

    இந்தக் கொரானா காலத்தில் எல்லா மொட்டை மாடியிலும் தலைகள். எல்லாருக்கும் வெளிக் காற்றை சுவாசிக்க ஆசை. சூரியன் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழிறங்க ஆரம்பித்துவிட்டான். கொஞ்ச நேரத்தில் காணாமல் போய்விடுவான். நண்பா, காலையில் பார்க்கலாம் என்று மனத்துக்குள் விடை கொடுத்தேன். சீருடைப் பள்ளிக் குழந்தைகள் போல் காகங்கள் வரிசையாக நின்றபடி ஒன்றுக்கொன்று ஏதோ பேசிக்கொண்டன. உற்றுக் கேட்டேன்.

    “என்ன இன்னிக்கு நல்லா சாப்பாடு கிடைச்சுதா மகனே?”

    அம்மா. இன்னிக்கு 4ஆவது மாடி பாய் வீட்டு பிரியாணி சூப்பரா இருந்தது. நான் உன்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தேன். நீ வரவேயில்லை. அதுனால நானும் நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணும் சாப்பிட்டோம்” என்றது.

    அம்மா காக்கா “எனக்குத் தெரியுண்டா, உனக்கு அவ மேல ஒரு கண். என்னைக் கூப்பிட்டெல்லாம் இருக்க மாட்ட. அவளப் பார்த்தா தான் உனக்குத்  தலகால் புரியாதே. நான் 2ஆவது மாடி மாமி வீட்டுத் தயிர் சாதம் சாப்பிட்டேன்” என்றது.

    இன்னொரு பெரிய காக்கா வந்து “எல்லாரும் வந்தாச்சா? அவங்க அவங்க வீட்டுக்குப் போகலாமா”ன்னு கேட்டது. அது தான் கூட்டத்துக்குத் தலைவர் போல.

    நம்ம பிரியாணிக் காக்கா மெதுவாக “எங்க பக்கத்து வீட்டுப் பொண்ணு வரலை”ன்னு சொல்லிச்சு. அம்மா காக்கா, ஒற்றைக் கண்ணால் முறைத்தது. பையனுக்குக் கண்ணுல புது ஒளி. தோழி வந்துவிட்டாள். “எல்லாரும் வந்தாச்சு” உற்சாகமாய்ச் சொன்னது. தனித் தனி பேட்ச்சா கிளம்பிப் போச்சு எல்லாம்.

    ஐ. எனக்குக் காக்கா பாஷை புரியுது.   போன ஜென்மத்துல காக்காவாப் பொறந்திருப்பேனோ!

    கீழே எட்டிப் பார்த்தேன். சப்பாத்தி, உருளை மசாலா ரெடியாகிக் கொண்டிருந்தது. இன்னும் 15 நிமிடம் நடந்து விட்டுக் கீழே இறங்க வேண்டியது தான் என்று நினைத்தேன். கிழக்கே நிலாப் பெண் தகதகவெனப் புறப்பட ஆரம்பித்தாள். இயற்கை தான் என்ன அழகு. ஓ! இன்னிக்கு பௌர்ணமி. நிலாவுடன் பேசிக் கொண்டே கொஞ்ச நேரம் நடந்தேன். இப்போது கடற்கரையில் இருந்தால் நல்லா இருக்கும். இப்போ தான் பீச்சக் கூட பூட்டிட்டாங்களே!

    கீழே எட்டிப் பார்த்தேன். வரிசையாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் ஒன்றிரண்டு பெண்களும் இருந்தார்கள். குடும்பத்தோடு வேலைக்கு வந்திருப்பார்களோ. பாவம் இதில் பெண்களும் எப்படித் தங்குகிறார்களோ.  பக்கத்தில் Movable toilet & bathroom இருக்கு. அதில் பெண்கள் குளிப்பார்களோ. ஆண்கள் எல்லாம் தெருவிலேயே தான் குளிப்பார்கள். அதில் ஒரு பையனும் பெண்ணும்  கண்ணால் பேசிக் கொள்வது போல் தெரிந்தது. தெரு விளக்கும் நிலா வெளிச்சமும் இருந்ததால் ஓரளவு தெரிந்தது.

    நம்ம பிரியாணிக் காக்கா மாதிரி தானா இவர்களும். நல்லா இருக்கட்டும் 2 ஜோடியும் என மனதிற்குள் வாழ்த்தினேன். மனுசனும் ஒரு விதத்தில் காக்கா தானோ, இல்லை,  அவற்றிடமிருந்து நாம் தான் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டுமோ? சப்பாத்தி பசியைத் தூண்டியது. போய் தோசை பண்ணலாம் என நினைத்துக் கொண்டே கீழிறங்கினேன்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 279

    படக்கவிதைப் போட்டி – 279

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (11.10.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 278இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 278இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பொய்க்கால் குதிரையில் சவாரி செய்யும் தலையாட்டி பொம்மைகளை அழகாகப் படம்பிடித்து வந்திருக்கின்றார் படக்கலை வல்லுநர் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து இந்தப் படம் தெரிவுசெய்யப்பட்டுப் படக்கவிதைப் போட்டிக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. படக்கலை வல்லுநருக்கு என் நன்றி!

    சாய்த்துத் தள்ளினாலும் கீழே விழாமல் நேராக நிற்கும் வகையில் அற்புதமாய் உருவாக்கப்படும் இந்தத் தலையாட்டி பொம்மைகள், தஞ்சைத் தரணியின் கலைப் பாரம்பரியத்தையும் அப்பகுதியைச் சேர்ந்த கலைஞர்களின் தொழில்நுட்பத் திறனையும் பாருக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

    இப்பொம்மைகளுக்கான வரவேற்பு தற்காலத்தில் மக்களிடம் குறைந்துவருவது வேதனைக்குரியது. இந்த அரிய கலையை நாம் ஊக்குவிக்காவிட்டால் தலையாட்டி பொம்மைகள் வணிகம் தள்ளாட்டத்தைச் சந்திப்பதோடு இக்கலையும் நசிந்துபோகும். அந்நிலை ஏற்படாவண்ணம் இக்கலையையும் கலைஞர்களையும் காப்போம்!

    இனி, இந்தப் பொம்மைகள் குறித்து நம் கவிஞர்களின் கருத்து என்ன என்று அறிந்து வருவோம்!

    *****

    ”கிராமக் கலைகளெல்லாம் வளர்ச்சிகுன்றி அழிவதைத் தடுத்து அவற்றை வளர்ப்பீர் உலகத்தீரே!” என்று நற்கலைகள் வாழ வேண்டுகோள் விடுக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நலியும் கலைகள்…

    ஆடும் கலையின் பொம்மைகள்
    ஆட்டம் நின்ற நினைவுகள்,
    கூடும் கூட்டம் போனதுவே
    குறைந்து விட்ட கலையாலே..

    வளர்ந்த கிராமக் கலையெல்லாம்
    வளர்ச்சி குன்றி அழிகிறதே,
    உளத்தில் கொள்வீர் உலகுளோரே
    உண்மைக் கலைகள் வளர்ப்பீரே…!

    *****

    ”கடைத்தெருவில் நிறக்குமிழிப் புட்டிகளுக்குக் கிட்டிய ஆதரவு இந்தப் பொம்மைகளுக்குக் கிட்டாததால் அவை ஓர் ஓரமாய்த் தலையாட்டிக்கொண்டிருக்கின்றன” எனத் தலையாட்டி பொம்மைகளின் நிலையைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் திருமிகு. விஜயகுமாரி.  

    பொம்மை

    கடைத்தெருவில்
    போன வருடச்
    சாயலில்லை.
    கூடிப்போயிருந்தது
    வண்ணமும் விலையும்!
    விற்றுத் தீர்ந்தது
    நிறக்குமிழிப் புட்டிகள்.
    சர்வ லட்சணப்
    பட்டாடை உடுத்தி
    வெட்கத்துடன்
    பொய்க்கால் பூட்டிச்
    சலிக்காமல்
    காற்றின் வாசிப்பில்
    ஒரு ஓரமாய்த்
    தலையாட்டிக்கொண்டிருந்தனர்
    ஒரு ஜோடி
    தஞ்சைத்
    தலையாட்டி பொம்மைகள்!

    *****

    ”தலையாட்டி பொம்மைகள் மெய்க்கால்களில் ஆடும் பொய்க்கால் ஆட்டம் தமிழகத்தின் பெருமையைப் பறைசாற்றும்” என்று அழுத்தமாய் உரைக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    மெய்க்கால்களில் பொய்க்கால் ஆட்டமா?
    பொய்க்கால் இணைத்த மெய்க்கால் ஆட்டமா?
    ஒருகால் இருகால் பொய்க்காலாட்டமா?
    எக்காலும் ஆடும் மெய்க்காலாட்டமா?

    பாரம்பரிய நடனத்தின் சிறப்பாட்டம்
    பார்த்து வியக்கும் ஒயிலாட்டம்
    கிராமியக் கலைகளில் வியப்பாட்டம்
    வண்ண வர்ண நிறத்தில் மகிழாட்டம்

    திருவிழாக் காலங்களில் களையாட்டம்
    தெருக்கூத்து நடுவினிலும் இவ்வாட்டம்
    தமிழகப் பெருமையை இது பறைசாற்றும்
    அழிவிலா கலைகளில் இதன் அரங்கேற்றம்
    என்றும் நெகிழ்வூட்டும்!

    *****

    ”பொய்க்கால் வாக்குறுதி அரசியல்வாதிகள் ஆடும் ஆட்டத்தில்
    ஆட்டம் காணப்போவது எதிர்காலத் தலைமுறையே” என்று பொம்மைகளின் பொய்க்கால் ஆட்டத்தை வைத்து நாட்டின் மெய்யான நிலையைப் புலப்படுத்தியுள்ளார் திரு. சீ. காந்திமதிநாதன்.

    பொய்க்கால் அரசியல்வாதிக் குதிரைகள்!

    தேர்தல் நேரத்தில்
    பொய்யான வாக்குறுதிகள்!
    ஆட்சி அதிகாரத்தில்
    அதிகப்படியான ஊழல்கள்!

    மக்கள் வரிப்பணத்தில்
    உருப்படாத திட்டங்கள்!

    பொய்க்கால் குதிரைகள்
    ஆட்டம் கண்டு இரசிக்கலாம்

    பொய்க்கால் வாக்குறுதி
    அரசியல் வாதிகள்
    ஆடும் ஆட்டத்தில்
    ஆட்டம் காணப் போவது
    எதிர்காலத் தலைமுறையே!

    தொலைநோக்குச்
    சிந்தனை இல்லை!

    நீர்நிலைகள் தான்
    உயிர் நிலைகள்
    காக்கும் வகையில்
    செயல் திட்டங்கள் இல்லை!

    உழைக்கும் கரங்கள்
    பிழைக்கும் வகைகள்
    பிழையான திட்டத்தில்
    திசை மாறும் பயணத்தில்

    வரவினைப் பெருக்கும்
    வகையேதும் அறியாது
    பற்றாக்குறை நிதியில்
    அரசாங்கம் பயணித்தால்
    பொருளாதார வளர்ச்சி
    நிரந்தரத் தளர்ச்சி!

    பொய்க்காலைத்
    தூக்கி எறியுங்கள்!
    உண்மை நிலையை
    உணர்த்தி விடுங்கள்!

    நொண்டிக் கொண்டு
    திணறிக் கொண்டு
    அரசு பயணிக்கிறதென்று

    உள்ள நிலையை
    உண்மை நிலையை
    உரைக்கும் கலையை
    உரைக்காது
    பொய்க்கால் குதிரைகள்
    போல் வேண்டாம்
    வெளி ஆட்டம்!

    *****

    ”தொல்கலைகள் யாவுமிங்கு தொலைந்தழிந்தே போனதனால்
    தொட்டதெல்லாம் பொன்னாக்கும் தோழர் வாழ்வு கெட்டழிந்து போனது!
    இந்நிலை மாறுமா?” என்று வேதனையோடு வினவுகின்றார் திரு. யாழ். பாஸ்கரன்.

    வண்ண வண்ண உடுப்புப் பூட்டி
    சின்னச் சின்ன ந(கை)டை போட்டு
    மின்ன மின்ன பொய்க் கால் குதிரையேறி வரும்
    கண்ணழகு இராசனுக்கும் இராசாத்திக்கும் வணக்கம்!

    மழலையர்க்கு மரப்பாச்சி
    மங்கையர்க்குப் புனைபாவை
    மனைவியர்க்குத் தலையாட்டி அவள்
    மன்னவர்க்குக் கைப்பாவை என

    மணிக் கையாலே மண்ணெடுத்து
    மந்திரத்து உழைப்பாலே
    மனிதன் படைத்துவிட்டான்
    மயக்கவைக்கும் பொம்மைகளை!

    பாவைக் கூத்தினிலே அவனுக்குப்
    பாராளும் மன்னர் வேடம்!
    பசியின் கூத்தில் அவனுக்குப்
    பட்டினியால் வாடும் பரதேசிக்கோலம்!

    படைத்தவன் வாழ்கையின்று
    பச்சை மண்பானையாய் உடைந்து போனது!
    பார்த்திருந்த விழிப் பாவைகள்
    பழுது பட்டு நிறக்குருடாய் ஆனது!

    தொல்கலைகள் யாவுமிங்கு
    தொலைந்தழிந்தே போனதனால்
    தொட்டதெல்லாம் பொன்னாக்கும்
    தோழர் வாழ்வு கெட்டழிந்து போனது
    இந்நிலை மாறுமா?

    *****
    தலையாட்டும் பொம்மைகளை வைத்துத் தலைசிறந்த கருத்துக்களைக் கவிதைகளாய் உதிர்த்திருக்கும் கவித் தோழர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    தலையாட்டி பொம்மைகள்!

    மந்தை ஆடுகளாய்
    மதியில்லா மாடுகளாய்
    சுயம் கெட்டுச்
    சூழ்நிலையைப் பாழ்செய்து – நல்
    சூத்திரங்கள் அழித்துவிட்டு
    எடுப்பார் கைப்பிள்ளையென
    ஏவல்கள் செய்திருந்து
    விதியை தினம் நொந்து
    வீண் பொழுது போக்கிவிட்டுத்
    தன்னம்பிக்கை ஏதுமின்றித்
    தலையாட்டி பொம்மைகளாய் – பிறர்
    தாளத்திற்கு ஆடிவிட்டு
    வேரறுந்த விருட்சமென
    வீணாகி வீழ்ந்துள்ளோம்…

    அறிவுக் கண் திறந்து
    அறப்பொருளைத் தானுணர்ந்து
    உண்மையை உணர்ந்தறியும்
    உன்னத ஞானம் தரும்
    நற்கல்வி தேடிக் கற்று
    எல்லோரும் மன்னரென்ற
    மக்களாட்சித் தத்துவத்தின்
    மாண்பதனை மீட்டெடுப்போம்!

    ”தன்னம்பிக்கை ஏதுமின்றிப் பிறர் தாளத்திற்கு ஆடும் தலையாட்டி பொம்மைகளாய் வாழ்வதை விடுத்து, நற்கல்வி பயின்று எல்லோரும் மன்னரென்ற மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை மீட்டெடுப்போம்” என்று சுந்தரமொழிகளில் சூளுரைத்திருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • மண்ணெண்ணெய் ஒரு மருந்து

    மண்ணெண்ணெய் ஒரு மருந்து

    அண்ணாகண்ணன்

    எரிபொருளாகவே பெரும்பாலும் பயன்படும் மண்ணெண்ணெய்க்கு வேறு பயன்களும் உண்டு. இதைக் காயங்களுக்கு மருந்தாக என் தாயார் சௌந்திரவல்லி, 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தி வருகிறார். மண்ணெண்ணெயின் இந்த இன்னொரு முகம் குறித்து, அவருடன் ஒரு நேர்காணல்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • விமானப் பயணச் சீட்டுகளுக்கான ரீபண்டு – உச்சநீதிமன்றத் தீர்ப்பு

    விமானப் பயணச் சீட்டுகளுக்கான ரீபண்டு – உச்சநீதிமன்றத் தீர்ப்பு

    ‘கலைமாமணி’ வீ.கே.டி. பாலன்

    (தமிழ்நாடு சுற்றுலா – பயண மற்றும் விருந்தோம்பல் சங்கத் தலைவர்)

    2020 ஜனவரி மாதத்தில் கொரோனா பரவ ஆரம்பித்து விட்டது.
    கொரோனா பரவலைத் தொடர்ந்து பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதம் வரையிலான பயணத்தை ரத்து செய்து முன் பதிவு செய்யப்பட்ட பணத்தைப் பயணியர் திருப்பிக் கேட்க ஆரம்பித்துவிட்டனர். விமான நிறுவனங்களோ, நாங்கள் விமான சேவையை இன்னும் நிறுத்தவில்லை, ஆகவே, கட்டாயம் நீங்கள் பயணத்தைத் தொடர வேண்டும். நீங்கள் பயணத்தை ரத்து செய்தால், உங்கள் பயணச் சீட்டுக்கான பணத்தை நாங்கள் தர முடியாது என அறிவித்துவிட்டார்கள். இந்நிலையில் 15,000 கோடி ரூபாய் வரையிலான, பயணிகளின் மற்றும் பயண முகவர்களின் பணம், விமான நிறுவனங்களில் முடங்கிப் போனது.

    இந்த ஆபத்தான சூழ்நிலையில் இந்தப் பணம் திருப்பிக் கிடைக்காவிட்டால் பல நிறுவனங்களை மூட வேண்டி வரும். வாடிக்கையாளர்கள் நெருக்கடி, போலீஸ், வக்கீல், பஞ்சாயத்து என்று முகம் கொடுக்க நேரிடும். முற்றிலும் தொழில் முடங்கிவிடும். இதனை எப்படிச் சீர்ப்படுத்துவது எனும் நோக்கத்தில் (tttha) தமிழ்நாடு சுற்றுலா – பயண மற்றும் விருந்தோம்பல் சங்கத்தின் தலைவராகிய நான் முதல் அடியை எடுத்து வைத்தேன்.

    மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு 08-02-2020 அன்று நிலைமையின் விபரீதத்தை உணர்த்தும் விதமாகக் கடிதம் எழுதினோம்.

    விமானப் போக்குவரத்து ஆலோசனைக் குழுவில் (Civil Aviation Advisory Committee) இடம்பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாடினோம்.

    இந்தியாவின் பழமையானதும் பெரிய சங்கமுமான டிராவல் ஏஜன்ட் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் (Travel agents Association of India) தலைவரான திருமதி ஜோதி மயால் அவர்களது ஆதரவையும் மற்றுமொரு தேசிய சங்கமான டிராவல் ஏஜெண்ட் பெடரேஷன் ஆப் இந்தியாவின் (Travel agents Federation of India) தலைவர் லுல்லு அவர்களின் மேலான ஆதரவையும் பெற்றுச் செயலில் இறங்கினோம்.

    இதன் அடிப்படையில் டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன் ( Director general of Civil Aviation ) விமான நிறுவனங்களை அழைத்துப் பேசியதன் விளைவாக, கடன் இருப்பில் (credit cell) பணத்தை வைத்திருப்பதாகவும் அதிலிருந்து பயண முகவர்கள் ஒரு வருட காலத்துக்குள் பயணச் சீட்டுகளாகப் பெற்றுக்கொள்ளலாம் என முடிவு செய்தார்கள்.

    இது சரியான தீர்வாகாது என நாங்கள் சொல்லிவிட்டோம்.

    அதையடுத்து பிரவசி, அபாய், டாஃபி ஆகியோர் உச்சநீதிமன்றத்தை நாடினார்கள். நாங்களும் தாய் அமைப்பும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை எங்களுக்குச் சாதகமான கருத்தை உச்சநீதிமன்றத்தில் சொல்ல வைத்தோம்.

    அதனடிப்படையில், 2020 மார்ச் 25ஆம் தேதியில் இருந்து 2020 மே24 வரையிலும் உள்ள காலக்கட்டத்தில் விமானச் சீட்டு பெற்றிருந்தாலோ அல்லது முன்பதிவு செய்திருந்தாலோ உடனடியாக அதற்கான பணம் கொடுக்கப்பட வேண்டும்.

    கடன் கூடு (Credit shell) ஒன்றை வைத்து அதில் வரவு வைத்துக்கொள்ள வேண்டும்.  விமான பயணச்சீட்டை உரிய பயணிக்கோ, வேறு எவருக்குமோ பயன்படுத்தலாம்.  2020 ஜூன் வரையிலும் 0.5% மேலதிகமாக விமான நிறுவனங்கள் கொடுக்க வேண்டும்.  31-03-2021 வரையிலும் 0.75% மாதாமாதம் கொடுக்க வேண்டும்.

    மேற்கூறியவை அனைத்தும் உள்ளூர் மற்றும் சர்வதேசப் பயணச் சீட்டுகளுக்கும் பொருந்தும்
    என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    பயணச் சீட்டுக்கான பணம் கிடைத்துவிட்டது என்ற நிம்மதி பயணிகளுக்கும், பயண முகவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

    இந்தத் தீர்ப்பு வரக் காரணமான மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம், என் ஜி ஓ பிரவசி, அபாய், டாஃபி, தாய், தமிழக அரசு, மற்றும் எமது செய்திகளை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகளுக்கும் பதிப்பித்த பத்திரிகைகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

    Share
  • சிரிப்பு யோகா – ஹாஹோ சிரிப்பானந்தா நேர்காணல்

    சிரிப்பு யோகா – ஹாஹோ சிரிப்பானந்தா நேர்காணல்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    சிரிப்பு யோகா பயிற்றுநர் ஹாஹோ சிரிப்பானந்தா, தமிழில் சிரிப்பு யோகாவை அறிமுகப்படுத்தி நிலைநிறுத்தியவர். சிரிப்பு யோகா என்றால் என்ன? அதை எப்படிச் செய்ய வேண்டும்? அதை யார் யார், எங்கெங்கே செய்யலாம்? இதயம் பலவீனமானவர்கள், ஆஸ்துமா உள்ளவர்கள், திக்குவாய் உள்ளவர்கள், முதியவர்கள்… இன்ன பிறரும் சிரிப்பு யோகா செய்யலாமா? சிரிப்பு யோகா தருகின்ற பயன்கள் என்னென்ன? உள்ளிட்ட நமது பல்வேறு கேள்விகளுக்கும் அழகாக, அட்டகாசமான சிரிப்புடன் பதில் அளித்துள்ளார். இதைப் பார்த்தால் மனசு லேசாகி, நீங்கள் வாய்விட்டுச் சிரிப்பீர்கள் என்பது உறுதி.

    சிறப்பு மிகுந்த சிரிப்பு யோகா, இதோ.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 100 (மறைத்தவன்)

    சேக்கிழார் பாடல் நயம் – 100 (மறைத்தவன்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    மறைத்தவன்    புகுந்த   போதே   மனமங்கு   வைத்த  தத்தன்
    இறைப்பொழு   தின்கண்   கூடி   வாளினால்   எறிய   லுற்றான்
    நிறைத்த  செங்குருதி   சோர   வீழ்கின்றார்  நீண்ட   கையால்
    தறைப்படும்   அளவில்   ‘’தத்தா   நமர்’’எனத்   தடுத்து  வீழ்ந்தார்!

    பொருள்

    மறைத்தவன் உள்ளே புகுந்த போதே,அங்கே மனம் வைத்துப் பார்த்திருந்த வனாகிய தத்தன் மிக விரைவில் அவ்விடத்திற் கூடி வாளினாலே அவனை வெட்ட முற்பட்டான்; மிகவும் இரத்தம் பெருகுதலால் விழுகின்ற வராகிய நாயனார், தாம் தரையில் வீழ்கின்ற அந்த அளவுக்குள் தமது நீண்ட கையினால் “தத்தா! நமரேகாண்“ என்று சொல்லி அவன்  செய்கையைத் தடுத்து வீழ்ந்தார்.

    விளக்கம்

    முத்தநாதன் அரண்மனை   வாயிலில்  காவலர்களால் தடுக்கப்பெற்றான். சிவனடியார் வேடத்தை நோக்கிப்  பலரும்  வழிவிட்டனர்.  எல்லாத் தடைகளையும்  கடந்து உள்ளே  சென்ற முத்தநாதனை அந்தப்புர வாயிலில் நின்ற அணுக்கத்  தொண்டனாகிய தத்தன்  என்பவன் தடுத்து  நிறுத்தினான்.

    ‘’அந்தப்புரத்தினுள்  சமயமறிந்து  அனுமதி பெற்று அதன்பின் செல்ல வேண்டும், இப்போது எங்கள்  இறைவனாகிய  அரசன்,   அரசியுடன்  படுத்து உறங்கும்  நேரம் இது!’’  என்று அவனைத்  தடுத்தான்.

    தத்தன்  தடுத்தபோதே  விரைவாக  அவனிடம்,  ‘’நீயும்  இங்கேயே நில்!  யான்  அரசர்க்கு உறுதிப்பொருளைக்  கூறப் போகிறேன்’’, (இறுதிப்   பொருள் என்பது தொனிப்பொருள்!) என்று கூறி  அவனையும்  கடந்து அந்தப்புரத்தினுள்ள  முத்தநாதன் சென்றான்!  அங்கே பொன்னாலான கட்டிலில் படுக்கைமேல் அனைவரையும் காக்கும் அரசராகிய  நாயனார் துயின்று கொண்டிருந்தார்; அவரருகே நறுமணம்  கமழும்கூந்தலையுடைய அரசமாதேவி இருப்பதைக் கண்டான்!   கண்டபின்னும் முத்தநாதன்  சிறிதும்  கூசாமல்   நெருங்கிச் சென்றான். அப்போது, ‘யாரோபடுக்கை யறையினுள்  நுழைகிறார்கள்’ என்பதைப்  பயிர்ப்பினால் அறிந்து கொண்ட அரசியார் துணுக்குற்று விரைவாக அமளியிலிருந்து இறங்கினார். வண்டுகள்  மொய்க்கும் மாலையணிந்து  உறங்கிய அரசரைத் துயிலுணர்த்தி எழுப்பினார்!

    அருகேசென்ற முத்தநாதனைக்  கண்ட  அரசர், “இவர் நம்   சிவபிரானின்  தொண்டரல்லவா?’’ என்று எண்ணிக் கரங்குவித்த படியே இறங்கி, விரைந்து முத்தநாதன் எதிரே நின்று தம் கொள்கையின்படி மிகப்பணிந்து வணங்கினார். அப்போது ‘’ஆகமநூல்  கொண்டு  வந்தேன்! இதனை  உமக்கு  உரைக்கும்போது  நாமிருவரும் வேறிடத்தில்  தனித்து  இருக்க வேண்டும்.’’ என்றவுடன் ‘’நீங்கள் சிரமப்படவேண்டாம்; இங்கேயே எனக்குஉறுதியைக் கூறுக!‘’ என்று அரசியாரை அப்புறப்  படுத்திய பின் முத்தநாதனை உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தினார். தானும் தரையில் அமர்ந்து மிகவும் போற்றி, வீழ்ந்துவணங்கி  அவ்வாறே தலைதாழ்த்தி, ‘’இனி அந்தநூலை எனக்கு  உரைத்தருள  வேண்டும்’’ என்றார்.

    அரசன் கீழே அமர்ந்துவணங்கிய போது, மேலேஅமர்ந்திருந்த முத்தநாதன் தன் மடியில் அப்புத்தகக் கட்டினை வைத்து, மெல்லப் பிரிப்பவன்போல, அவர் மிகப் பணிந்து வணங்கும்போதே, கையில்  மறைத்து வைத்திருந்த கத்தியை  எடுத்து, தான்  எண்ணிக்கொண்டு வந்த  கொல்லும்  செயலைச்செய்து  விட்டான்! அரசர் அடியாரின்  மெய்யான  தவ வேடமே உறுதிப்பொருள்!’’  என்று  கூறி  குத்தப்பட்ட போதும் குத்தியவனைத் தொழுதார்! அவ்வகையில் தம் கொள்கையில் தவறாது  நின்று வென்றார்!

    மறைத்தவன்புகுந்தபோதே மனம்அங்கு வைத்த தத்தன் என்ற தொடரில் மறைத்தவன் என்ற சொல், மறைகளிற் சொல்லிய தவத்திருவேடம் தாங்கியவன் என்றும், தவவேடத்திற்குள்ளே தன்னை மறைத்துக் கொண்டவன் என்றும், “நின்றிடு நீயும்“ என்றும் தன்னையும் மறுத்துப் புகுந்தவன் எனவும் பலவாறு பொருள்பட அமைத்த அழகு நினைக்கத்  தக்கது!

    இவையே.  தத்தன்  மனம் அங்கு வைக்கக் காரணமாயின. அங்கு மனம் வைத்த என மாற்றுக. மனம் வைத்தல் – அதுவே கருத்தாக மனத்துட் கொள்ளுதல். “பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணை“ என்பது திருத்தொண்டத்தொகை.

    இறைப்பொழுது , என்பது  கணப்பொழுது – நொடி – மாத்திரையைக்  குறிக்கும். . இது தனது காவற் கடமை செய்வதில் தத்தனுக் கிருந்த தீவிரத்தை  உணர்த்துகின்றது.

    நிறைத்த செங்குருதி சோர வீழ்கின்றார் என்ற தொடர், முத்தநாதன் பத்திரம் வாங்கிச்செய்த செயலால் நாயனாரது திருமேனியினின்றும் நிறையக் குருதி சோர்ந்து, அதனால், அவர் வீழ்கின்றாராக.என்பதைக் குறித்தது.  குருதி – செம்புண்ணீர். சோர – சோர்தலால்; குருதி சோர்தல் – இரத்தம் வடிதல். உடலினின்றும் இரத்தம் பெருக வெளிவருவது மிக்க அயர்ச்சிக்கும், இறுதியில் இறப்புக்கும் காரணமாம் என்பது உடல் நூற்றுணிபு. Death due to Hemorrage and loss of blood என்பர் நவீன மருத்துவர். இரத்தம் உயிர் நிலைப்பதற்கு ஆதரவாம்; அதன் கழிவு உயிர் போதற்குக் காரணமாம் என்பர். இரத்தத்தை Life blood என்ற ஆங்கில வழக்கும் காண்க.

    வீழ்கின்றார் – உபதேசங் கேட்கத் தாம் இருநிலத்திருந்தவர் அவ்வாறிருக்க மாட்டாதவராகிக், குருதி சோர்தலால் தரையிலே வீழ்வாராயினவர். நிகழ்கால வினையாலணையும் பெயர். வீழ்கின்றாராகிய நாயனார் (தடுத்து) வீழ்ந்தார் என்ற வினைமுற்றுக்கொண்டு முடிந்தது. வீழத் தொடங்கிய அவர் வீழ்தலாகிய அச்செயல் முற்றுமுன், தத்தனைக் கையால்   தடுத்துவிட்டு அதன் பின் வீழ்ந்தார். வீழ்தலின் தொடக்கத்துக்கும் முடிவுக்கும்  இடையில் தடுக்கும் சொல்லும் செயலும் நிகழ்ந்தன. குருதி சோர வீழ்கின்ற அந்நிலையினும் அவரது மனம், மொழி, மெய்என்ற முக்கரணங்களினுடைய, நினைக்கவுமரிய, உண்மை நிலையினை இவை காட்டியவாறு கண்டுகொள்க.

    நீண்ட கை – கை நீண்டிருத்தல், அரசுச் செல்வமுணர்த்தும் உறுப்பிலக்கணமெனவும், அது வள்ளற்றன்மை குறிக்கும் எனவும் கூறுவர். ஆஜானுபாகு – என்பது வடநூல் வழக்கு. பெருங் கொடையாளியைப்பற்றிப் பேசுவோர் “அவனுக்குக் கை நீளம்“ என்று கூறுவதும் ஒரு பழமொழி யாயிற்று.நீண்டகை என்பது இங்குக் குறைவறக் கொடுத்து வந்தகொடையிற் சிறந்த கை என்க. இங்கு நாயனார் திருவேடத்தாரின் குறிப்பின்படி தம் உயிரினையே ஒப்புக் கொடுத்ததுமன்றி, அவ்வஞ்சகனுக்குப் உயிர்ப்  பிச்சையுங் கொடுத்தலின் இவரது மிக்க வள்ளற்றன்மையின் மிக்கது முண்டோ?  அதுபற்றி நீண்டகை என இங்குச் சிறப்பித்தவாறு.

    தத்தா! நமர் – “தத்தனே! நீ இவரை வேற்றவர் என்று கருதி வாளினால் எறியலுற்றாய். அற்றன்று. இவர் நம்மவரே“ என்று வாக்கினாற் கூறினார். ஆதலின் நீ உன் செயலினைத் தவிர்தி என்பது குறிப்பு. அதனைக் கையினாற் செய்து முடித்தார் என்க. என – வாக்கினாற் சொல்லிக் கையாற்றடுத்து என்று கூட்டுக.

    தத்தா நமர் – நமர் – நம்மவர் என்றது நமர் என நின்றது. இது பழஞ் சாசன வெட்டுக்களிற் கண்ட தொடர். இராசராசச் சோழர் எடுத்த தஞ்சை இராசராசேச்சரத்திருக்கோயிலில் அமைத்த நாயன்மார் படிமங்கள் பலவற்றில் இந்நாயனார் திருவுருவமும் ஒன்றாம். இதனில் “தத்தா நமரே காண் என்ற மெய்ப்பொருள் நாயனார்“ என்று பெயர் பொறித்துள்ளார். இச்சொற்றொடரை வகைநூலாரும் “தத்தா நமரே! எனச் சொல்லி“ என்று எடுத்தாண்டுள்ளார். இதனையே ஆசிரியர் இங்குத் தலைப்பெய்து வைத்தனர்.சரித்திரத்தின் முந்தைய  தரவுகளை ஆசிரியர் போற்றும் அரியமுறை காண்க. நாயனார் இங்குச் செய்த அரிய செயல் “கொல்லாமை“, “எவ்வுயிர்க்குந் தீங்கு செய்யாமை“, “அஹிம்சை“ என்ற பொது அறத்தின் பாற்படும் என்று ஆராய்ச்சி செய்வாருமுண்டு. வேதங்களில் விதித்த “தர்மம் சர“, “அஹிம்சா பரமோ தர்ம:“ என்ற அறங்கள் வேறு; இங்கே குறித்தவை சாமானிய உலக நீதியாகிய பசு தருமங்கள். “கொல்லாவிரதம்“,

    “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயஞ் செய்துவிடல்“

    “கொல்லாவிரதம்“,  முதலியனவாக நமது பெரியோர்கள் விதித்தனவும். “ஒரு கன்னத்தில் ஒருவன் அடித்தால் மற்றொரு கன்னத்தைக் காட்டு“ முதலியனவாகப் பிறநாடுகளிலும் பிறரும் உரைத்த உபதேசங்களும் இவ்வாறே வேறாவன.

    இங்கு நாயனார் “தத்தா! நமர்“ எனத் தடுத்ததின் கொள்கை வேறு. இவைகள் ஒன்றாக மயங்கி உணரற் பாலனவல்ல. இங்கு நாயனார் செயலுக்கு அடிப்படையாய் நின்றது “திருவேடமே மெய்ப்பொருள்“ என்றும், “திருவேடத்தார் கருத்தறிந்து ஏவல் செய்தல்“ என்றும், கொண்ட கொள்கையைக் காத்தலாகிய பதி தருமம். இந்நாயனார்பால் முன்எதிர்த்துப் போர்செய்த இந்த முத்தநாதன் தனதுயானை முதலிய சேனைகளைப் “பன்முறை இழந்து தோற்றுப் பரிபவப்பட்டுப் போனான்“ என்பதையும், அந்தப் போர்களில் எத்தனை பேர் உயிர் துறந்தனர் என்பதனையும் இங்கு நினைவு கூர்ந்தால் நாயனார் கொண்ட அறத்தின் உண்மைநிலை புலப்படும். திருவேடந்தாங்காது வந்திருப்பின் முத்தநாதன் நிலை எவ்வாறிருந்திருக்கும் என்பதைச் சிந்திப்பின் இவற்றின் வேறுபாடு நன்கு புலனாகும்.

    சாமானிய உலக நீதிகளின் மேம்பட்டு, உலகிறந்தசிவபுவனத்திற் சஞ்சரித்து, வெளிப்பார்வைக்கு மட்டும் உலகர்போல, உண்டுடுத்து, அரசர் முதல் ஆள்வரை பல நிலைகளிலும் வாழ்ந்து, உலகை வாழ்வித்த எந்தம் பெருமக்களின் வாழ்க்கை நிலையினை உலக நீதிகளான அற விதிகளைக் கொண்டு அளத்தல் நம்மை உண்மை நெறியினின்றும் வழுக்கி விடுவதனோடு அபசாரத்திற்கும் இடம் தரும்.

    இப்பாடலில் ‘’தான் நினைந்த அப்பரிசே செய்தான்‘’ என்ற தொடர், ‘’கொன்றான்’’  என்பது  போன்ற தீய, மனம் நடுங்கும் சொற்களைச்   சிறந்த  நூலாசிரியர்கள் கூறார் என்பதைக்  காட்டியது

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 24

    கதை வடிவில் பழமொழி நானூறு – 24

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 49

    நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப்
    புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்தல் – புல்லார்
    புடைத்தறுகண் அஞ்சுவான் ‘இல்லுள்வில் லேற்றி
    இடைக்கலத்து எய்து விடல்’.

     பழமொழி – இல்லுள்வில்லேற்றி இடைக்கலத்து எய்து விடல்‘.

    நேற்றுதான் நான் மும்பையிலிருந்து வந்தேன். ஆனா அதுக்குள்ள எனக்கு எத்தன நண்பர்கள் கிடைச்சிட்டாங்க. யோசித்துக்கொண்டே மாமா வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கிறேன்.

    இந்த ஊர்ல எல்லாரும் மனசுல வஞ்சகமில்லாம பழகறாங்க அப்போதுதான் வெளியில் வந்த அத்தையிடம் சொல்வதைக் கேட்டு என்னடா மருமகனே! எங்க ஊர் உனக்குப் பிடிச்சிருக்கா. சாயங்காலமா ஆத்துப்பக்கம் நடந்துட்டு வா. அந்த நல்ல காத்த சுவாசிச்சா உடம்புல ஒரு வியாதி அண்டாது. இதெல்லாம் சொன்னாப் புரியாது. அனுபவிச்சுப் பாக்கணும். மாமா செல்லமுத்து சொல்லிவிட்டு விறுவிறுவென்று எங்கோ போய்விட்டார்.

    சரி. கேட்டுத்தான் பார்ப்போமே எனக் காலார நடந்து ஆத்துப் பக்கம் வருவதற்குள் எத்தனை காட்சிகள். வழியில் சில சிறுவர்கள் தென்னை மரம் ஏற முயற்சிப்பதைப் பார்த்து நானும் ஆசைப் பட்டதில்முட்டி பேந்ததுதான் மிச்சம்.

    என்ன தம்பி பட்டணத்துக்காரரா. டவுசர் கிழிஞ்சுடும். இதப்போட்டுக்கிட்டு ஏற முடியாது. தலைப்பாகை கட்டிய பெரியவரின் வார்னிங்கையும் மீறி ஏறுவது போல் பாவனை செய்து போட்டோ எடுப்பதற்குள் கீழே விழுந்ததில் சின்ன சிராய்ப்பு.

    அண்ணே ஆத்துல போயி காலக் கழுவிக்கிடுங்க. எங்க ஆத்து மீன் நக்கினா புண்ணு வராது. என் குட்டி நண்பனின் வைத்திய அறிவுரையைச் செவிமடுத்து ஆத்தங்கரைக்குப் போனேன்.

    அங்கிருந்த இருவர் பேசிக்கொள்கிறார்கள். நம்ம வேலாயுதம் மகன் பேச்சக் கேக்க நீ ஏன் வரல. என்ன அருமையாப் பேசினாந்தெரியுமா. கூட்டத்துல ஒரே விசில், கைதட்டல் தான். மைக்க எடுத்தா வார்த்த அருவியா கொட்டுதே. நல்ல பய. பெரிய ஆளா வருவான். பேசிக்கொண்டே இருவரும் சென்றதால் முழுவதும் கேக்க முடியவில்லை.

    என்ன அண்ணே. கீழ விழுந்திட்டீங்க போல. கொஞ்சநேரம் இந்த மண்ணுல கிட்டிப்புல் விளையாண்டுட்டுப் போலாமா. என் குட்டி நண்பர்கள் குழு என்னை அழைக்கிறது.

    ஆமா. இந்த ஊர்ல வேலாயுதம் மகன்னு சொல்றாங்களே அவர் அரசியல் தலைவரோ?

    அட அத விடுங்கண்ணே. அந்தண்ணன் பேச்சப் பேசாதீங்க அவர வெத்து டப்பானு எங்கப்பா சொல்லுவாங்க. இப்ப வெளையாட வாங்கண்ணே நேரமாகுது.

    அவர்கள் கையைப் பிடித்து இழுத்தும் எனக்கு வேலாயுதம் மகனைப் பற்றியே நினைப்பு. வீட்டுக்குப் போனவுடன் முதல் வேலயா அத்தைகிட்ட கேட்டேன்.

    அட அவனா நாலுந்தெரிஞ்சவங்க முன்ன பொத்திக்கிட்டு நிப்பான். வெவரந்தெரியாத அப்பாவிங்களாப் பாத்து கூட்டங்கூட்டி எல்லாந்தெரிஞ்சாமாதிரி வீண் பேச்சு பேசுவான்.

    கேட்டுக்கொண்டே உள்ளே வந்த மாமா. இல்லுள்வில்லேற்றி இடைக்கலத்து எய்து விடல்‘.னு பழமொழி சொல்றார். பகைவரைப் பாத்து பயந்தவன் வீட்டுக்குள்ளயே உக்காந்துட்டு இருக்கற பானை, சட்டி மேலயெல்லாம் அம்பு உடுவானாம். அதுமாதிரிதான் இவன் கதையும்னு.

    பரவாயில்ல இங்க வந்த இரண்டு நாள்ல பல விசயங்களக் கத்துக்கிட்டேன். .

    பாடல் 50

    சுடப்பட்டு உயிருய்ந்த சோழன் மகனும்
    பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் – கடைக்கால்
    செயிரறு செங்கோல் செலீஇயினான் ‘இல்லை
    உயிருடையார் எய்தா வினை.’

    பழமொழி- இல்லை உயிருடையார் எய்தா வினை.

    அன்னிக்கு நடந்தத நினைச்சா இப்ப சிரிப்புதான் வருது. ஆனா அது சிரிக்கக் கூடிய விசயமா. அந்த நிகழ்ச்சிதான் என்னோட வாழ்க்கைய முழுமையா மாத்திரிச்சு.

    இல்லாட்டி நான் இப்ப இங்க பேராசிரியா இந்தப் பசங்க முன்ன நின்னு சிரிச்சிட்டிருக்க முடியுமா. அங்க தெரியற புளிய மரத்துல பேயாத்தான் தொங்கிட்டிருப்பேன். மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

    சின்னப் பசங்க மனசுக்குள்ள என்ன இருக்குனு தெரிஞ்சிக்கவே முடியறதில்லனு  சொல்ற ஒவ்வொருத்தரும் தான் அந்தப் பருவத்தக் கடந்து வந்தப்போ ஏற்பட்ட அனுபவங்கள நினைச்சுப் பாக்கணும். பெரும்பாலும் அனுபவ முதிர்ச்சி பெற்றவுடனே ஏதோ தாங்க பொறந்ததுலேந்து ரொம்ப தெளிவா இருந்தா மாதிரியே பாதிபேர் நினைச்சிக்கிறாங்க. எல்லாரும் ஏதோ ஒருவிதத்துல அவமானப்பட்டிருப்போம், ஏமாற்றப் பட்டிருப்போம், வேதனைப் பட்டிருப்போம் இந்த மாதிரி நிறைய அனுபவங்கள்தான் நம்மள சமநிலைப் படுத்துது.

    பொத்தி பொத்தி வச்சு வளர்த்த பசங்க பிற்காலத்துல சமூகத்த எதிர்நோக்கத் தயங்குவாங்க. சின்னச்சின்னத் தடங்கல்கள் கூட அவங்களுக்கு வெறுப்பக் கொடுக்கும். எனக்கு மட்டும் ஏன் இப்படினு நினைச்சு கடைசியில கோழைகளா மூலையில தள்ளப்படுவாங்க.

    பதினெட்டு வயசு வரை இந்தப் பிரச்சினை இருக்கறது சகசம்தான். அதுக்குப்பறமும் நீடிச்சிதுன்னாதான் கஷ்டம். சரி நான் இப்போ என் முன்னால வந்து உட்காரப்போற மாணவனுக்கு அறிவுரை சொல்லணும். வரலாற்றுப் பேராசிரியரான என்னையும் நம்பி அவன் அம்மா அப்பா என்கிட்ட கூட்டிக்கிட்டு வராங்க. நான் என்ன சொல்லணும்னு யோசிக்கறத உட்டுட்டு இப்டி ஏன் குழம்பறேன். இருந்தாலும் என் மனசு என் அனுபவத்தையே அசை போடுது.

    அன்றைக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வந்த தினம். எல்லாரும் சந்தோசமா இருந்தாங்க. எனக்கு மட்டும் மனசுக்குள்ள பெரிய உறுத்தல். எல்லாப் பாடத்துலயும் தொண்ணூறு மதிப்பெண்களுக்குமேல எடுத்த நான் வரலாறு புவியியல் பாடத்துல மட்டும் அறுபத்தைந்து மதிப்பெண் எடுத்திருக்கேன். யாருமே எதுவுமேசொல்லாத போதும் அதெப்படி அவ்வளவு கேவலமாவா நான் எழுதினேன்னு மனசு உறுத்திக்கிட்டே இருந்துச்சு. நான் நல்லாத்தான் எழுதியிருந்தேன். மதிப்பெண் தான் சரியா வரலனு சொன்னா யாராவது நம்பப் போறாங்களா என்ன. பேசாம வயல் பக்கம் போயி கிணத்துல உழுந்துடலாம் அப்பறம் யாரையும் பாக்க வேண்டி வராதுபாருனு நினைச்ச மனதுக்குக் கட்டுப்பட்டு நடக்க ஆரம்பிச்சேன். வயக்காட்டுக்குள்ள இருக்கற மொட்டக்கிணறுக்குள்ள  குதிச்சிரணும். இருட்ட ஆரம்பிக்கும்போது போயிடணும். மனசுக்குள்ள தீர்மானித்துக்கொண்டே அந்திப்பொழுதில் நடக்க ஆரம்பிச்சவுடனே என் நண்பன் மாசிலாமணியும் சேர்ந்துகொண்டான்.

    டேய் இந்நேரத்துக்கு எங்கடா போற. எனக்கும் போரடிக்குது. நானும் வரேன். தனியாப் போகாதடா நாய் இருக்கும். அவன் தொடர்ந்து பேசிக்கொண்டே வர பொறுக்க முடியாம அவனை விரட்டுவதற்காக உண்மையச் சொல்லவேண்டியதாப்போச்சு..

    அவ்வளவுதான்.  டேய் லூசு.  இந்த மார்க்குக்கெல்லாம் கெணத்துல குதிப்பாங்களாடா. அப்பறம் பேயாத்தான் அலையுவ. பேசாம எங்கூட வா. நாம நேரா சோஷியல் டீச்சர் வீட்டுக்குப் போய் மார்க்கச் சொல்லலாம். அவர் திட்டினா நீ நேரா கிணத்துக்குப்போயிடு. நான் ஒண்ணும் சொல்லமாட்டேன். சொல்லிவிட்டு அவன் என் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றான்.

    ஏதோ மனசுக்குச் சரியெனப் படவே ரெண்டு பேரும் ஆசிரியர் வீட்டுக்குப் போனோம்.

    அவரிடம் மார்க் சொல்லுவதற்கு முன்பே முந்திரிக்கொட்டை மாதிரி என் நண்பன் உளறிவிட்டான். அவர் பதட்டத்தை வெளிக்காட்டாமல் அறிவுரையை ஆரம்பித்தார்.

    தம்பி இந்த மதிப்பெண் எல்லாம் நம்ம வாழ்க்கையை அளக்காது. இது இல்லன்னா அடுத்த தடவ முயற்சி செய்யலாம். ஆனா அதுக்கு நாம உயிரோட இருக்கணும். அப்டி இருந்தாத்தான் நினைச்சதச் சாதிக்க முடியும். ‘இல்லை உயிருடையார் எய்தா வினை.’னு பழமொழியே இருக்குல்ல. கரிகாற்பெருவளத்தானப் பத்தி படிச்சிருப்பீங்க. அவர உதாரணமா வச்சிக்கிட்டு உங்கள வாழ்க்கையில உயர்த்திக்குங்க. இன்னும் பல விசயங்கள படிச்சு தெரிஞ்சுக்கிங்க. இப்ப மனசப் போட்டுக் குழப்பிக்காம சந்தோசமா வீட்டுக்குப் போங்க. என அனுப்பி வைத்தார்.

    அப்புறம் மனதில் பதிந்த அந்த வடுதான் என்னை வரலாற்றுப் பேராசிரியர் ஆக்கி விட்டிருக்கு போல. சரிதான். இதையே வரப்போகும் பையனுக்குச் சொல்லிவிடலாம் தீர்மானித்துக்கொண்டேன்.

    Share