Blog

  • கதை பிறந்த கதை – நிர்மலா ராகவன் நேர்காணல்

    கதை பிறந்த கதை – நிர்மலா ராகவன் நேர்காணல்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    மலேசியத் தமிழ் எழுத்தாளர் நிர்மலா ராகவன், தம் எழுத்துலக அனுபவங்களை நம்முடன் தொடர்ந்து பகிர்ந்துகொள்கிறார். இந்த இரண்டாவது பகுதியில், தமது கதைகளுக்கான கரு எவ்விதம்  கிடைத்தது என எடுத்துரைக்கிறார்.

    ஆணைப் பெண்ணாக மாற்றிய மருத்துவர், பெண்ணாக மாறிய அந்த ஆண் நடந்துகொண்ட விதம், ஒருவரை ஒருவர் கொல்வதற்காக அரிவாள் வாங்கி வைத்துக்கொண்ட கணவன்-மனைவி, வாடகைத் தாய், இன்னோர் ஆணின் விந்தைப் பெற்றுத் தன் கருப்பையில் வைத்த மனைவி, அதைக் கணவன் எதிர்கொண்ட விதம், கற்பழிக்கப்பட்ட பெண், திருமணம் குறித்த இளைஞர்களின் – இளம் பெண்களின் எதிர்பார்ப்புகள், நெற்றிப் பொட்டு இட்டுக்கொண்டு வந்ததற்காகத் தமிழ்ப் பெண்களின் கன்னத்தில் அறைந்த கன்னியாஸ்திரீகள், திருமணம் ஆன ஒரே நாளில் நடந்த விவாகரத்து உள்ளிட்ட பலவற்றையும் விவரித்துள்ளார். அவருடைய கதை பிறந்த கதையை இந்தப் பதிவில் பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 90’s மிட்டாய் கடையின் உள்ளே ஓர் உலா

    90’s மிட்டாய் கடையின் உள்ளே ஓர் உலா

    அண்ணாகண்ணன்

    90’s மிட்டாய் கடை (90’s Mittai Kadai) என்ற பெயரில், சென்னை, தாம்பரத்திற்கு அருகில் உள்ள சிட்லபாக்கத்தில், ஒரு கடை இயங்கி வருகிறது. 1990களில் வழக்கில் இருந்த தின்பண்டங்கள், பொம்மைகள், கருவிகள், எழுதுபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை இங்கே விற்பனைக்கு வைத்துள்ளார்கள்.  இந்தக் கடைக்கு நானும் என் மனைவியும் நேற்று நேரில் சென்று வந்தோம். எங்கள் அனுபவத்தை, இந்தப் பதிவில் பகிர்ந்துள்ளோம்.

    1980களில் 1990களில் பிறந்தவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. உங்கள் இளமைப் பருவத்தை மீண்டும் வாழ்ந்து பார்க்க வேண்டுமா? 90’s மிட்டாய் கடையின் உள்ளே ஒரு முறை சென்று பாருங்கள். நீங்கள் சாப்பிட்ட தின்பண்டங்களும் விளையாடிய பொம்மைகளும் கருவிகளும் பயன்படுத்திய பொருள்களுமாக, உங்களை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்லும்.

    அந்தப் பதிவு, இங்கே.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 15

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 15

    -மேகலா இராமமூர்த்தி

    சீதையின் பேரழகைக் கண்டு திகைத்த சூர்ப்பனகை, தவ வேடத்தில் காட்டுக்கு வந்திருக்கும் இராமன் இப்பெண்ணை உடன் அழைத்துவந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இவளும் என்னைப்போல் இடையில் வந்தவளாகத்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தாள்.

    எனவே இராமனைத் தெருட்டும் பொருட்டு, ”வீரனே! இவள் மாயங்கள் செய்யவல்ல அரக்கியாவாள்; இஃது இவளுடைய உண்மைத் தோற்றமும் அன்று; இவளை உன்னிடமிருந்து விலக்குவாய்!” என்றாள்.

    சூர்ப்பனகையின் மொழிகள் அனைத்தும் அவள் தன்னை மனத்தில் வைத்துச் சொன்ன மொழிகளாகவே இருக்கின்றன. தான்செய்த மாய வேலைகளையெல்லாம் சீதையின்மேல் ஏற்றிக்கூறி எப்படியாவது சீதையை இராமனிடமிருந்து பிரித்துவிட வேண்டும் என்று பெருமுயற்சி செய்கின்றாள் அவள்.

    அதைக் கேட்ட இராமன் அப்போதும் தன் கேலிப் பேச்சை நிறுத்தாமல், “பெண்ணே! உன்னுடைய அறிவு ஒளிமிக்கது; உன்னை யாரும் வஞ்சித்து ஏமாற்றிவிட முடியாது; நீ சொன்னதுபோல் இவள் அரக்கிதான்!” என்று சீதையைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரிக்கின்றான். இராமனின் அபத்தச் செயலின் உச்சம் என்றே இதனைக் குறிப்பிடலாம்.

    ஒள்ளிதுஉன் உணர்வு மின்னே
    உன்னைஆர் ஒளிக்கும் ஈட்டார்
    தெள்ளிய நலத்தினால் உன்
    சிந்தனை தெரிந்தது அம்மா
    கள்ளவல் அரக்கி போலாம்
    இவளும்நீ காண்டி என்னா
    வெள்ளிய முறுவல் முத்தம்
    வெளிப்பட வீரன் நக்கான்.
    (கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2892)

    இராமனின் எள்ளலை அப்போதும் உணராத சூர்ப்பனகை, அதனை உண்மையென்று நம்பி, சீதையைப் பார்த்து, ”எங்கள் இருவருக்கிடையில் நீ வந்ததேன் அரக்கப் பெண்ணே?” என்று அவளிடம் வெகுண்டுரைக்க, அதைக்கேட்ட சீதை அச்சம்கொண்டு இராமனின் அருகணைந்தாள்.

    அரக்கியோடு தான் நிகழ்த்திவரும் விளையாட்டுப் பேச்சு வினையாகிவருவதை அப்போது உணர்ந்த இராமன், அரக்கர்களோடு விளையாட்டாக ஏதேனும் செயலைச் செய்தாலுங்கூடத் தீமையே விளையும் என்று தெளிந்தவனாய்ச் சூர்ப்பனகையோடு நடத்திவந்த உரையாட்டை நிறுத்திவிட்டு, ”பெண்ணே! இங்கிருந்து விரைவில் சென்றுவிடு! உன் செயல்கள் குறித்து என் இளவல் அறிந்தானாகில் உனக்குக் கேடு நேரும்!” என எச்சரித்துவிட்டுச் சீதையோடு பன்னசாலைக்குள் புகுந்தான்.

    ”இந்த அழகி உடனிருக்கும்வரை இவனை அடைய வாய்ப்பில்லை” என்று மனத்துள் எண்ணியபடி, இராமன்மீது கொண்ட தீராக் காமத்தோடு, அங்கிருந்து அகன்றாள் சூர்ப்பனகை.

    காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இயல்புகொண்ட காமநோய், அந்திமாலையில் சூர்ப்பனகையை அதிகமாய் வாட்டத் தொடங்கியது. மன்மதன் கணை அவள் நெஞ்சைத் தொட்டது; காமத் தீயோ அவள் உடலைச் சுட்டது. அத் தீயையை அவிக்கச் சுனையில் மூழ்கினாள்; சுனையும் சூடேறிக் கொதித்தது. இவ்வாறு மாலையும் அதைத் தொடர்ந்துவந்த இரவின் வரவும் அவளை வாட்டியெடுத்தன. ஒருவழியாக இருள்நீங்கிப் பொழுது புலர்ந்தது.

    சூர்ப்பனகையின் மனத்தில் ஒரு திட்டம் உதயமானது. இராமனோடு இருக்கின்ற அழகியைக் கடத்தி ஒளித்துவைத்துவிட்டு, அவள் உருவைத் தான் எடுத்தால் மட்டுமே இராமனின் அன்புக்குப் பாத்திரமாக முடியும்; எனவே அவளை எப்படியாவது அங்கிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும் என்பதே அத்திட்டம்!

    திருமகள் மந்திரத்தைச் செபித்து விரும்பும் வடிவெடுக்கும் ஆற்றலைச் சூர்ப்பனகை பெற்றிருந்ததால் சீதையைப் போல் உருமாறத் திட்டம் தீட்டினாள். அதனைச் செயற்படுத்த விரும்பி, இராமனும் சீதையும் வதிந்த பன்னசாலைக்கு விரைந்தாள். அப்போது இராமன் காலைநேரச் சந்தியா வந்தனங்களைச் செலுத்துவதற்காகக் கோதாவரி நதிக் கரையில் அமர்ந்திருந்தான்.

    ”ஆகா! இந்த அழகியைக் கடத்த இதுவே தக்க சமயம்” என்று முடிவுகட்டிப் பன்னச்சாலையில் இருந்த சீதையைக் கைப்பற்றுவதற்காக அவளைத் தொடர்ந்து சென்றாள் சூர்ப்பனகை. அப்போது அருகில் இருந்த கனிகள் நிறைந்த பழச்சோலையில் சீதைக்குக் காவலாய் மறைவாய் நின்றிருந்த இலக்குவனை அவள் கவனிக்கவில்லை. விரைந்து சீதையைப் பற்ற சூர்ப்பனகை செல்வதுகண்ட இலக்குவன், ”நில்லடி!” என்று அவளை அதட்டிவிட்டு அவள் கூந்தலைப் பற்றினான். அவள் பெண்ணென்பதால் அவள்மீது தன் வில்லைச் செலுத்திக் கொல்லவில்லை.

    அப்போது இலக்குவனையும் சீதையோடு சேர்த்துத் தூக்கிச் செல்ல எத்தனித்தாள் சூர்ப்பனகை. அவளின் அம்முயற்சி வெற்றிபெறாவகையில் அவளைக் கீழே தள்ளி, ”கொடுந்தொழில் புரியாதே” என்று சீறிய இலக்குவன், அவளின் மூக்கையும் காதுகளையும் முலைக்காம்புகளையும் அறுத்தெறிந்த பின்பே அவளை விட்டான்.

    ஊக்கித் தாங்கி விண் படர்வென்
    என்று உருத்து எழுவாளை
    நூக்கி நொய்தினில் வெய்து
    இழையேல் என நுவலா
    மூக்கும் காதும் வெம் முரண்
    முலைக் கண்களும் முறையால்
    போக்கி போக்கிய சினத்தொடும்
    புரி குழல் விட்டான்.
    (கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2922)

    வால்மீகி இராமாயணம், இலக்குவன் சூர்ப்பனகையின் மூக்கும் காதுகளும் மட்டுமே கொய்தான் எனக் கூறுகின்றது.

    ”இலக்குவன் சூர்ப்பனகையின் உறுப்புகளை அறுத்தது முறையான செயலா? பெண்ணொருத்தியை இவ்வாறு தண்டிப்பது சரிதானா?” எனச் சூர்ப்பனகை தண்டிக்கப்பட்ட விதம் குறித்த விமர்சனங்கள் இன்றுவரை தொடர்கின்றன.

    அவைகுறித்து நாமும் சிந்திக்கவேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.

    சூர்ப்பனகை இராமனிடம் காம எண்ணத்தோடு பேசத்தொடங்கியபோதே அவன் அப்பேச்சை வளரவொட்டாமல் தடுத்துத் தனக்கு மணமான விவரத்தையும், தன் மனைவி தன்னுடன் இருக்கும் தகவலையும் அவளுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறு கம்பராமாயணத்தில் காட்சி அமைக்கப்படவில்லை. மாறாக, இராமனோ வேடிக்கை என்ற பெயரில் தொடர்ந்து சூர்ப்பனகையின் காம இச்சையைத் தூண்டிவிடும் வேலையையே செய்கின்றான்.

    ஆசையின் வசப்படும்போது நல்லவர்களே மோசமானவர்களாக மாற வாய்ப்புண்டு. இந்தச் சூர்ப்பனகையோ இயல்பிலேயே மோசமானவளாகத்தான் வால்மீகி, கம்பர் இருவர் படைப்புக்களிலும் சித்திரிக்கப்பட்டிருக்கின்றாள். அவ்வாறிருக்க, இராமன் அவளிடம் நிகழ்த்திய வேடிக்கைப் பேச்சு விபரீதத்தில் முடிந்ததில் வியப்பில்லை.

    ஆக, இந்த விபரீதத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ இராமனே முதன்மைக் காரணமாகின்றான். எனவே அவனை நாம் குற்றவாளியாகவே கருதவேண்டியிருக்கின்றது. அடுத்து, சீதையிடம் காழ்ப்புக்கொண்ட சூர்ப்பனகை, அவளிடம் தன் கைவரிசையைக் காட்டவந்தபோது இலக்குவன் அவளைத் தண்டிக்கின்றான். அவன் அவளைத் தண்டித்தது குற்றமில்லை; ஏனெனில் அவள் செய்ய நினைத்த செயல் தண்டனைக்குரியதே. எனினும் அத்தண்டனை சூர்ப்பனகையை உறுப்பறை செய்வதாக இல்லாமல் அவளை எச்சரித்து விரட்டுவதாக அமைந்திருக்கலாம்!

    சூர்ப்பனகை இராமன் சந்திப்பு, அதைத் தொடர்ந்து நிகழ்ந்தவை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, உயர்ந்த மனிதர்களாக அடையாளப்படுத்தப்படுபவர்களுங்கூடக் குற்றமில்லாப் புனிதர்களாக இருப்பதில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கின்றது.

    இனி, அடுத்து நிகழ்ந்தவற்றைக் காண்போம்!

    உறுப்புகளை இழந்த சூர்ப்பனகை வலியால் துடித்துக் கதறுகின்றாள்; தம் உறவினர்களையெல்லாம் பேர்சொல்லிக் கூவியழைத்து அரற்றுகின்றாள்.

    ”இராவணனே! நீ சிவபிரான் தம் பெருமை பொருந்திய கையை நீட்டி அளித்த ’சந்திரகாசம்’ எனும் வாளைப் பெற்றவன்; வாயுதேவனையும், வருணனையும், அக்கினி தேவனையும், காலதேவனாம் எமனையும், வானத்தையும், நவகோள்களையும் உனக்கு ஏவல் செய்வித்தாய்! அத்தகு பேராற்றல்கொண்ட நீ, ஈண்டு மானுடர் இருவர்க்கு எதிரிடும் ஆற்றலற்றுப் போனாயோ?” என்று புலம்புகின்றாள்.

    காற்றினையும் புனலினையும் கனலினையும்
    கடுங் காலக்
    கூற்றினையும் விண்ணினையும் கோளினையும்
    பணி கொண்டற்கு
    ஆற்றினைநீ ஈண்டு இருவர்
    மானுடவர்க்கு ஆற்றாது
    மாற்றினையோ உன்வலத்தை சிவன்
    தடக்கை வாள்கொண்டாய்.
    (கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2932)

    இராவணன் சிவனிடம் சந்திரகாசம் எனும் வாளைப் பெற்றமைக்கு ஒரு புராணக் கதை சொல்லப்படுவதுண்டு. ஒருமுறை இராவணன் தன் ஆற்றலால் செருக்கடைந்து கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முனைந்தபோது, சிவனார் தம் திருவடிப் பெருவிரலால் மலையை அழுத்தினார். அதனால் இராவணன் மலையடியில் நசுக்குண்டு கதறினான். பின்பு சிவனாருக்கு விருப்பமான சாமவேதம் பாடி அவர் மனத்தை இளகச் செய்தான். அவரும் அவனை மன்னித்து விடுவித்ததோடு, நீண்ட வாழ்நாளையும், சந்திரகாசம் எனும் வாளையும் அவனுக்கு அளித்தார்.

    சூர்ப்பனகை இவ்வாறு புலம்பிக்கொண்டிருந்தபோது கோதாவரிக் கரையில் தன்னுடைய நாட்கடன்களை முடித்துவிட்டுப் பன்னசாலை நோக்கி வந்துகொண்டிருந்தான் இராமன்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17
    Share
  • தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் சேவைகள்

    தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் சேவைகள்

    அண்ணாகண்ணன்

    சென்னை, தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம், என்னென்ன சேவைகளை வழங்கி வருகின்றது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். மிகக் குறைந்த கட்டணத்தில் இங்கே சிகிச்சை பெறலாம். முதல் முறை பதிவு செய்ய, ரூ.20 மட்டுமே கட்டணம். அடுத்தடுத்த முறைகளுக்கு ரூ.10 மட்டுமே கட்டணம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. எல்லோருக்கும் இலவசமாக மருந்துகளை வழங்குகிறார்கள். இதில் வழங்கப்படும் சேவைகள், செயல்படும் நாள், நேரம், கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இந்தப் பதிவில் பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 12

    பரிமேலழகர் உரைத்திறன் – 12

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                  
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    விரும்பிக் கூறிய ‘வேண்டாதவை’

    முன்னுரை

    நூல்களுக்குப் புற அழகு ஓவியர்களாலும் அச்சகத்தாலும் வழங்கப்படும் வண்ணங்களால் அமையலாம். அக அழகு அவ்வாறு கொடுத்து அமையாது. முன்னது கண்ணுக்குரியது. அதனால் அது சாத்தியம். பின்னது புலன்களுக்கு உரியது. அதனால் அது அவர்களால் இயலாது. படைப்பாளனின் உள்ளம் மொழிவழி வெளிப்படும் அழகுக் கோலமே நூலின் அக அழகைத் தீரமானிக்கும். சிலப்பதிகாரம், கம்பராமாயணம், திருக்குறள் முதலிய நூல்கள் புறத்தோற்றத்தில் பெரியன. சிவஞான போதமும் ஆத்திசூடியும் அளவால் மிகச் சிறியன. இவ்விரண்டு தன்மையிலமைந்த நூல்களின் பெருமையை உள்ளடக்கமே தீர்மானிக்கிறது. எத்தனைப் பக்கம் என்பதல்ல அவற்றுக்குப் பெருமை சேர்ப்பது. எவ்வளவு ஆழமான கருத்துக்கள் எப்படிச் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதுதான் பெருமை சேர்க்கும். கருத்தாழமும் அக்கருத்துக்களை வெளிப்படுத்தும் உத்திகளின் பேராற்றலுமே நூல்களின் வெற்றிக்கு மூலதனம். காதல், வீரம் என்னும் இரண்டே பாடுபொருள்களைப் பற்றி இத்தனையாயிரம் பாடல்களைச் சங்கச் சான்றோர்கள் சலிப்படையாமல் பாடியிருப்பதற்கும் நாமும் சலிப்படையாமல் தலைமுறைகள் பல தாண்டியும் படித்து வருகிறோம் என்பதற்கும் சொல்லும் முறைதான் காரணம். அவ்வாறு சொல்லும்போது இருக்க வேண்டிய அழகு, நீக்க வேண்டிய குற்றம் இவைகளைப் பற்றியெல்லாம் தமிழிலக்கணங்கள் விரிவாக ஆராய்கின்றன. குற்றமேதும் இல்லாத நூலை எழுதுபவனைத்தான் ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவன்’ என்பர். அந்தக் குற்றங்களுள் ‘வெற்றெனத் தொடுத்தல்’ என்பதும் ஒன்று. வேண்டாது கூறலும் என்றாலும் பொருந்தும். எத்தகைய பயனும் இல்லாமல் தேவையின்றிச் சில சொற்கள் சில நூல்களில் பயின்று வருவது கண்கூடு. சான்றோர் செய்த நூல்களிலும் இத்தகைய குற்றங்கள் இருக்குமா? இருந்தால் அதனைக் கண்டிக்க இயலுமா? இல்லையாயின் அதற்கான காரணமாகிய அமைதியைக் கண்டறிய  இயலுமா? என்னும் ஐயங்கள் எழுவது இயற்கை. திருக்குறளில் ஒரு சில குறட்பாக்களில் பயின்று வந்துள்ள வேண்டாத சொற்களைப் பற்றி ஆய்கின்ற இக்கட்டுரையில் அதற்கான விளக்கம் ஓரளவு கிடைக்கலாம்.

    ‘வேண்டாத சொற்கள்’ ஒரு விளக்கம்

    “ஐயா நீங்க உங்க வாயால சொல்லாதீங்க!” இத்தகைய வழக்காற்றினைப்  பலரும் செவிமடுத்திருக்கக்கூடும். எல்லாவகையிலும் உயர்ந்தார் ஒருவர் மனம்புழுங்கிச் சில சொல் சொல்லுகிறபோது ‘அவை பலித்துவிடுமோ?’ என்னும் அச்சமும் ‘பலிக்கும்’ என்னும் நம்பிக்கையும் சமுதாயத்தில் நிலவும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று. சமுதாயம் அச்சொற்களை ஒலியின் காரியமாகக் கருதாமல் சத்தியத்தின் வெளிப்பாடாகக் கருதுவதே இத்தகைய மனநிலைக்குக் காரணம். இதனால் என்ன மாற்றம் என்றால், சொல்லுக்குக் கருவியான வாய் பதவியிழப்புக்கு ஆளாகிறது. அதிலிருந்து வருகிற சொற்களுக்கான காப்புரிமை சொல்கிறவருடைய பண்பாடு, ஒழுக்கம், சான்றாண்மைக்குச் சென்றுவிடுகிறது. அந்தத் தொடரில் அழுத்தம் ‘வாய்க்கு’ அன்று. ‘உங்க’ என்னும் சொல்லுக்கு என்பதை நோக்குதல் வேண்டும். அவர் வாயினது சிறப்புக்கு அச்சொற்கள் பொருந்தாமையை நோக்கி மக்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சி வெளிப்பாடு இது. நாம் எதனைக் கவனிப்பதில்லை? ‘வாயால் சொல்லாதீர்கள்’ என்பதை!. வாயைத்தவிர வேறு எக்கருவியால் சொல்ல இயலும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். பேசுவதற்கான கருவி வாய்!. இருந்தாலும் கேட்டு அமைதியடைகிறோம்!.

    இதனை உடன்பாடாகவும் கேட்டிருக்கக்கூடும்!. “நீங்க உங்க வாயால ஒரு சொல் சொல்லுங்கள் அது போதும் எனக்கு” எதிர்மறையை மறுதலித்த நாம் உடன்பாட்டுக்காக ஏங்குகிறோம். இருநிலையிலும் சொல்வார் பெருமையே சொற்களின் காரணமாக உணரப்படும். அல்லவர் வசவினைப் பெறுதலின் நல்லவர் வாழ்த்தினைப் பெறுவது சிறப்பு. ‘அறம் பெருக அல்லவை தேய்வது’ இயல்பல்லவா?  இவ்விரண்டிடங்களிலும் ‘வாய்’ என்பது சொல்லுக்கான கருவி என்னும் நிலையிலிருந்து மாறிச் சொல்வார்தம் பண்புக்கான குறியீடாகிவிடுவதைக் காணலாம். ஒருவன் பண்புகளால் உயர்ந்திருப்பான் எனின் உலக வழக்கு இப்படியும் அமையும் “அவன் வாயில் விழாதே!’ ‘வாயில் விழாதே’ என்றால் ‘வாயில் சென்று விழுதல்’ என்று பொருளன்று. அவரின் எதிர்மறை வசவுக்கு நீ ஆளாகிவிடாதே!’ என்று பொருள்.

    மொழி மக்களுக்கானது. மொழியியல் அறிஞர்களுக்கானதன்று. அது பாமர மக்களின் பண்பாட்டுக் கூறுகளில் தலையாயது. ஓரினத்தின் உயிர் அடையாளம் மொழியே!. அவ்வினத்தின் வழக்கு நிலைகள் பெரும்பாலும் அம்மொழியின் இலக்கிய இலக்கணங்களில் தாக்கத்தை உண்டாக்கும் என்பது தொல்காப்பிய நெறி. அந்த நெறியில் நூல் செய்த திருவள்ளுவர் வேண்டாதன சிலவற்றை விரும்பிக் கூறிய நுட்பத்தை இனி ஆராயலாம்.

    வள்ளுவர் கண்ட வாய்ச்சொல்

    திருவள்ளுவர் இரண்டு வகையான மனிதர்களின் வாய்ச்சொற்களைப் பற்றியும் பேசியிருக்கிறார். உடன்பாட்டு வகையால் அதாவது உயர்பண்புகளின் தொகுப்பாக விளங்கிப் புகழ்பெற்ற சான்றோர்களின் வாய்ச்சொற்களின் சிறப்புக்களைப் பதிவிடுவதைக் காணலாம். எழுத்துக்களின் காரியமாக வெளிப்படுவதால் தமிழில் எழுத்துப் பிறக்கும் இடங்களிலிருந்து சொற்கள் பிறக்கும் இடங்கள் மாறுபடுவதில்லை. அதே நேரத்தில் புற உறுப்புக்களின் தன்மையைச் சொற்களுக்கு அவர் ஏற்றுவதில்லை. விளக்கமாகச் சொன்னால் சொற்களின் இறுதிவாயில் உதடுகள். அவ்வுதடுகளின் இனிமையைச் சொற்களுக்கு ஏற்றியுரைக்கும் இயல்பு திருவள்ளுவருக்கு இல்லை.

    இன்சொல்லுக்கு வரைவிலக்கணம் தந்த வள்ளுவர் உயிரிரக்கம், மனத்துக்கண் மாசின்மை, வீடுபேற்றுக்கு நிமித்த காரணமாகிய செம்பொருள் கண்டார் சொல்வது என்னும் மூன்று பண்புகளின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்பதை,

    “இன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம்
    செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்” (91)

    என்னும் குறட்பாவில் தெளிவுபடுத்தியிருக்கிறார். தற்காலத்தில் வழங்கும் ‘பழகுதற்கு இனியவர்’ என்னும் ‘உதட்டுறவு’ உதிர்க்கும் பாசாங்கு மொழி திருவள்ளுவர் அறியாதது. இந்தக் குறட்பாவுக்குப் பொழிப்புரை தந்த  பரிமேலழகர்,

    “அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் சொல் இன்சொல்லாவன“

    என வரையறைக்குக் கூடுதல் தெளிவு தருகிறார். அன்பு, வஞ்சனையற்ற தன்மை, அறமுணர்தல் ஆகிய முப்பெரும் பண்புகளுக்கும் சொற்களின் மூலாதாரமான தொண்டை, நா முதலிய உறுப்புக்களுக்கும் நிலவும் தொடர்பின்மையைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். இத்தகைய பெருமக்கள் அடிமனத்திலிருந்து வரும் உண்மையான சொற்கள் வாய்வழியாக வெளிப்படுகிறபோது அந்த வாயும் அகப்பண்புகளால் சிறப்படைகிறது என்பதாம். அதனால்தான்,

    “‘வாய்’ என வேண்டாது கூறினார் தீய சொல் பயிலா என்பது அறிவித்தற்கு”

    என்று பரிமேலழகர் நுண்ணியம் காண்கிறார். ‘சொல்’ என்ற அளவிலேயே ‘வாய்’ என்பது பெறப்படுதலின் ‘வாய்ச்சொல்’ என்னும் தொடரில் ‘வாய் என்னும் முன்னொட்டு வேண்டாதது. ஆனால் வேண்டாத அச்சொல்லைப் பெருமக்களின் சிறப்புடைய வாயென்பதைப் பிரித்துக் காட்டலின் திருவள்ளுவர் விரும்பியே எழுதினாராம்! அந்த இடத்தில் ‘வாய்’ என்பது ஒலித்தொகுப்பின் வாயில் அல்லவாம்! பண்புக்கூறுகளின் வாயிலாம். இது பரிமேலழகர் பார்வை!.

    வழுக்கத் தெரியாத வாய்

    ‘நாக்கு தவறிச் சொல்லிவிட்டேன்’, ‘வார்த்தை பிசகிவிட்டது’, ‘அவசரத்தில் சொல்லிவிட்டேன்’, ‘பதற்றத்தில் ‘சொல்லிவிட்டேன்’, ‘கவனிக்காமலேயே சொல்லிவிட்டேன்’ இதுபோன்ற தொடர்களை நம்மில் பலரும் கேட்டிருக்கக் கூடும். இந்தத் தொடர்களை ஊன்றிக் கவனித்தால் நாக்கின் பிறழ்வாகவே சொற்பிழைகள் தோன்றுகின்றன என்னுமாறு அமைந்திருப்பதைக் காணலாம். அடிமனத்தில் உள்ளதுதான் வாய்வழியாக வெளிப்படுகிறது என்பது உளவியல் உண்மை. இந்த உண்மையை உணர்ந்தவர் திருவள்ளுவர்.

    “ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
    வழுக்கியும் வாயாற் சொலல்” (139)

    என்பது ஒரு குறள். இதற்கு,

    “மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள் ஒழுக்கம் உடையவர்க்கு முடியா”

    எனப் பொழிப்புரை தருகிறார் பரிமேலழகர். இந்தப் பொழிப்பிலேயே இந்தப் பத்தியின் தொடக்கக் கருத்துக்களின் சாரத்தைக் காணமுடியும். ‘வழுக்குதல்’ என்பது புறத்தொழில். ‘தரை வழுக்கும்’, ‘வழுக்கு நிலம்’, ‘பாறை வழுக்கியது’, ‘வழுக்கி விழுந்தான்’ என்பன நோக்குக. ஆனால் பரிமேலழகர் வழுக்கியும் என்னும் சொல்லுக்கு ‘மறந்தும்’ என உரை காண்கிறார். ‘மறத்தல்’ நினைவு தடுமாறுதல். நல்ல பண்போ தீய பண்போ அது பழக்கமான, வழக்கமான ஒன்றாகிவிடுமானால் அதனை அவ்வளவு எளிதில் மாற்ற இயலாது. சொற்கள் வாயினது செயலாக மட்டும் இருக்குமானால் இந்தத் தவறு நடக்காது. உரையும் பொருந்தாது. அது மனத்தின் வெளிப்பாடாக, நடத்தையின் வெளிப்பாடாக,  ஒழுக்கத்தின் வெளிப்பாடாக அமைந்தால்தான் இந்த உரை பொருந்தும். மற்றவர்களுக்கெல்லாம் சொற்களுக்கு வாயும் நாக்கும் கருவிகள். ஆனால் சான்றோர்களுக்கு அவை தடங்கள். மூலம் உள்ளம். உள்ளம் தூய்மையாயின் வாக்கு அதனை வெளிப்படுத்தும். ‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே வாய்மையுண்டாகும்’ என்னும் மகாகவியின் தொடர் நோக்குக.  விளக்கவுரையில் பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்,

    “சொலல்’ எனவே அமைந்திருக்க ‘வாயால் என வேண்டாது கூறினார் ‘நல்ல சொற்கள் பயின்றது எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு”

    மிகத்தெளிவாக அமைந்திருக்கும் இந்த விளக்கவுரையில் வாய் என்பது எப்படி வேண்டாத சொல் என்பதையும் விளக்கிவிடுகிறார் பரிமேலழகர். விளக்கி ‘நல்ல சொற்கள் பயின்ற நா, இத்தகைய சொற்களை மறந்தும் கூறாது’ என்னும் தனது கருத்தினைக் குறிப்பாகப் புலப்படுத்தவே ‘வாய்ச்சொல்’ என்று கூறினாராம்! சொல்லுக்குக் கருவியாக வாய் இருப்பினும் அவ்வாயை ஒழுக்கத்தின் தலைவாசலாகக் கருதுகிறார் என்பதாம்!

    இல்லறத்தான் வெல்லுமிடம் இதுதான்!

    ‘துறவறம்’ உயர்ந்தது என்பதனால் ‘இல்லறம்’ தாழ்ந்தது என்பதன்று.  இல்லறத்தின் நோக்கம் துறவறம் என்பதாலும் வாழ்வின் உச்சநிலை ‘வீடுபேறு’ என்பதாலும் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாகிய இல்லறம் தனக்குரிய மதிப்பை என்றும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. திருவள்ளுவர் சில அறங்களைத் துறவறத்திற்கே ஒதுக்கியிருக்கிறார். உலகியல் நோக்கி அத்தகைய அரிய அறங்களை இல்லறத்தான் கடைப்பிடிக்க இயலாது என்பதே அதன் காரணமாகும். உலகியலில் கடுஞ்சொற்களைத் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை இல்லறத்தானுக்கு ஏற்படும். பொய், குறளை, கடுஞ்சொல், பயனிலசொல் என்னும் சொற்குற்றங்கள் நான்கனுள் திருவள்ளுவர் பொய்யை இல்லறத்தானுக்கு விதிவிலக்காக்கி அதனைத் துறவறவியலில் ‘வாய்மை’ என்னும் அதிகாரத்தில் விளக்கிக் காட்டுவார். சொற்குற்றங்களைப் பொறுக்கும் பேராற்றல் துறவியைவிட இல்லறத்தானுக்கே உண்டு என்பது இதனால் பெறப்படும். இதனைத்,

    ‘துறந்தாரின தூய்மை உடையர் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோற்கிற்பவர் (159)

    என்னும் குறுட்பாவில் பதிவு செய்திருக்கிறார் திருவள்ளுவர். “இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற்பவர் துறந்தாரின் தூய்மை உடையார்’ என்னும் இந்தக் குறட்பாவிற்கு,

    “நெறியைக் கடந்தார்வாய் இன்னாச் சொல் பொறுப்பவர், இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார்போலத் தூய்மையுடையார்.”

    எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர், ‘நெறிகடந்தவர் சொல்’ என்னாது ‘நெறிகடந்தவர் வாய்ச்சொல்’ என்னும் குறட்பா தொடர் பற்றி விளக்கவுரையில் கூறுகிறார். துறவிகள் ‘துறப்பினமாதலின்’ அங்கே தர வேறுபாடுகள் இல்லை. அதனால் இத்தகைய நெருடல் இல்லை. இருக்க வாய்ப்பில்லை. உலகியலில் பலதரப்பட்ட மக்களோடு வாழவேண்டிய கடப்பாடு இல்லறத்தானுக்கு உண்டாதலின் ‘நெறிகடந்தவர்தம் வாய்ச்சொல்’ என விதந்தோதுகிறார். நெறி கடப்பதற்கு இங்கே வாய்ப்புண்டு ஆதலின்.

    “வாய் என வேண்டாது கூறினார், தீய சொற்கள் பயின்றது எனத் தாம் வேண்டியதன் இழிபு முடித்தற்கு”

    ‘நெறிகடந்தவனுடைய வாய்ச்சொல்’ என்பதால் நெறிகடந்ததால் பண்பற்ற சொற்கள் என்பது பெறப்படும். நல்ல சொல்லுக்கும் தீய சொல்லுக்கும் வாயே கருவியானாலும், இங்கே நெறிகடந்தவனுடைய இழுக்கம் சொல்வடிவில் வாய்வழியாக வருகிறது என்பதாம். ஒழுக்கமுடையார் வாய்ச்சொல், செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் என்னும் இவற்றுக்கும் இறந்தார் வாய்ச்சொல்லிற்கும் உள்ள வேறுபாட்டினை இதனால் புரிந்து கொள்ள இயலும். முன்னவரின் உயர்வு அவர்தம் சொல்லால் வெளிப்படுவதுபோலப் பின்னவரின் இழிவும் அவருடைய சொல்லால் வெளிப்படுகிறது என்பதாம். மூன்றும் வாய்ச்சொற்களே! நடத்தை வேறுபாடு நாவில்!

    உள்ளமா? நெஞ்சமா? மனமா?

    மூளையைச்  சிந்தனைக்கருவியாகக் கொண்டால் உள்ளம், நெஞ்சம், மனம் ஆகியவற்றை உணர்வுக்கருவிகளாகக் கொள்ளலாம். திருவள்ளுவர் இவற்றோடு ‘அகம்’ என்பதையும் இணைத்துக் கொள்கிறார். ‘அகம் நக’ என்பது குறட்பாத் தொடர். ‘நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்’, ‘மனத்தொடு வாய்மை மொழியின்’, ‘உள்ளத்தால் பொய்யாதொழுகின்’ என்பனவெல்லாம் திருக்குறளில் காணக்கிடக்கின்ற சொற்களே! எனினும் இவற்றுள் நுட்பமான வேறுபாடு நிலவுகிறதோ என்னும் ஐயம் உண்டு. அது பற்றிய ஆராய்ச்சி தனி. இம்மூன்று சொற்களிலும் வினைமுதலாகக் கொள்ளப்படுவது உள்ளமே!, உள்ளுவதால் உள்ளம்!. உள்ளம் உள்ளும்! நெஞ்சத்திற்கும் மனத்திற்கும் அத்தகைய வினைப்பயன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. நெஞ்சத்தின் வினை, மனத்தின் வினை ஆகியவற்றை அறியக்கூடவில்லை. இந்நோக்கு திருக்குறளை மட்டும்  அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. ‘வாய்ச்சொல்’ என்னும் தொடரில் ‘வாய்’ என்பது எவ்வாறு வேண்டாத சொல்லாக நின்றதோ அவ்வாறே ‘உள்ளத்தால்’ என்ற சொல்லும் வேண்டாத சொல்லாக நிற்பதைத் தொடர்ந்து காணலாம்.

    நினைவும் செயலும் ஒன்றே

    திருக்குறள் அடையாளப்படுத்தும் பத்து உடைமைகளில் செம்பாகம் அறத்துப்பாலுக்குரியது. அவற்றுள் ஒழுக்கமுடைமை, அன்புடைமை என்னும் இரண்டு உடைமைகளைச் சொற்களுக்கான மூலாதாரமாகக் கருதுகிறார் திருவள்ளுவர். ‘ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்’லும் ‘ஈரம் அளைஇ செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்லும்’ ஆராயப்பட்டன. அருளை உடைமையாகக் கொண்ட அருளாளர்கள் தீயன எண்ணமாட்டார், தீயன சொல்லமாட்டார், தீயன செய்யமாட்டார் என்பது நியதி.

    “உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக்
    கள்ளத்தால் கள்வேம் எனல்” (282)

    என்னும் குறட்பா தீயன எண்ணல் பற்றிக் கூறுகிறது. இல்லறச் சூழல் காரணமாக மனத்தளவில் (ஒழுக்க நெறிகளில்) வழுவும் நேர்வுகள் உண்டு. துறவறத்தில் அது முற்றிலும் கடியப்படுகிறது. எனவே அருளாளர்கள் தீயனவற்றை உள்ளத்தாலும் நினைக்கமாட்டார்கள் என்பதாம். இந்தக் குறட்பாவிற்குக்,

    “குற்றங்களைத் தம் நெஞ்சால் கருதுதலும் பாவம்! ஆதலால் பிறனொருவன் பொருளை அவன் அறியா  வகையால் வஞ்சித்துக் கொள்வோம் என்று கருதற்க”

    என்னும் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    ‘உள்ளத்தால்’ என வேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையோர் உள்ளம் போலாது சிறப்புடைத்து என்பது கருதியது முடித்தற்கு.”

    என விளக்கவுரையில் உள்ளுதலாகிய வினைக்கேயுரிய உள்ளத்தை ‘உள்ளத்தால் உள்ளலும்’ எனக் கூறியது பற்றிய தனது கருத்தினைப் பதிவு செய்கிறார். மற்றையோர் உள்ளம் ஊழ் காரணமாகத் தீயன எண்ணிவிடுமாம். ஆனால் துறந்தாராகிய அருளாளர் வழுக்கியும் தீயன எண்ணமாட்டாராம். அந்தக் கருத்தினைப் புலப்படுத்தவே (அந்தச் சிறப்புடைய) ‘உள்ளத்தால் உள்ளலும் தீது’ எனச் சொல்லுகிறாராம்!

    அருளிருக்கும் இடத்தில் சினத்துக்கு இடமில்லை!

    துறவிகளுக்கு எதிரி வெகுளி. செல்லிடத்தும் தீது. செல்லாவிடத்தும் அது தீது. அது அவர்தம் இனத்தைச் சுடும். தீய பிறக்கும். இத்தகைய எதிர்மறைச் செயல்களை அது செய்யுமென்றால் ‘வெகுளாமை’ இவற்றுக்கு மறுதலையான செயல்களை செய்ய வேண்டுமென்று திருவள்ளுவர் சொல்ல வேண்டுமல்லவா?  சொல்லுகிறார்.

    “உள்ளிய எல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
    உள்ளான் வெகுளி எனின்” (309)

    வெகுளியை ஒரு பொருளாகக் கொள்ளாத துறவி தான் எண்ணியதையெல்லாம் ஒரே நேரத்தில் உடனே பெறுவான் என்பது குறள். இந்தக் குறட்பாவின் கருத்தினைத்,

    “தவம் செய்யும் அவன் தன் மனத்தால் வெகுளியை ஒரு காலும் நினையான் ஆயின் தான் கருதிய பேறெல்லாம் ஒருங்கே பெறும்”.

    என்னும் பொழிப்புரையால் பெறலாம். விளக்கவுரையில் உள்ளுவதே உள்ளத்தின் தொழிலாய் இருக்கவும் உள்ளத்தால் உள்ளான் எனின் எனத் திருவள்ளுவர் வேண்டாது கூறியதற்குக் காரணம் கூறுகிறார்.

    “உள்ளத்தால் என வேண்டாது கூறிய அதனால் அருளுடை உள்ளம் என்பது முடிந்தது.”

    துறவியின் உள்ளம் தவ உள்ளம். தவத்தைச் செய்து முதிர்ச்சியடைந்த உள்ளம். அந்த உள்ளத்தில் வெகுளி தோன்றாது. வெகுளி தோன்றாத, அருளுடைய அந்த உள்ளத்தைப் பிரித்துக்காட்டுகிறாராம் திருவள்ளுவர்.

    பிரிக்க முடியாததும் கலந்தே நிற்பதும்!

    இணைந்திருந்தாலும் நகமும் சதையும் பிரிக்க முடியும். மலரும் மணமும்  கலந்தே நிற்பதால் பிரிக்க இயலாதது. ‘வாசமில்லா மலரிது’ என்பது திரையிசைப்பாடல் தொடர். ‘மலரும் மணமும் போல’ என்பது உலகியல். கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம். ‘பண்’ பாட்டோடு இணைய வேண்டும். ‘பண்ணோடு பிறந்தது இராகம், குலப்பெண்ணோடு பிறந்தது நாணம்’ என்பது வழக்கு. இந்தப் பின்புலத்தில்தான் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் பெண்ணியப் பண்புகளை நோக்க வேண்டியதிருக்கிறது.

    “பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
    பெண்ணே பெருமை யுடைத்து” 907

    என்னும் குறளுக்கு,

    “(நாண் இன்றித்) (தன்) இல்லாளது ஏவல் தொழிலைச் செய்து நிற்கின்றவனது ஆண் தன்மையின் நாணினை உடைய (அவள்) பெண்தன்மையே மேம்பாடு உடைத்து”

    எனப் பொழிப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். ‘நாணம்’ என்பது பெண்ணுக்குரியது ‘நாண்’ என்பது ஆணுக்குரியது. ‘நாணுடைமை’ என்னும் அதிகாரம் சான்றோர்களுக்குரியது. இது தமக்கு வரும் பழியையும் பிறர்க்கு வரும் பழியையும் ஒப்ப மதிப்பது. உண்மையில் இந்த ‘நாண்’ ஆணுக்குப் பெருமை தரும். அந்த நாணம் பெண்ணுக்குப் பெருமை தரும். அக்காலச் சூழலில் புறத்தொழுக்கம் அறியாத பெண் பழிபாவங்களுக்கு அஞ்சும் நிலை இருந்திருக்க வாய்ப்பில்லை.

    கணவன்வழி மனைவியொழுகுதலே இல்லறம். மனைவி சொல் கேட்டுக் கணவன் ஒழுகுதல் இல்லற நெறியன்று. எனின் இல்லறத்தைக் கொண்டு செலுத்தும் ஆற்றலும் பண்பும் ஆணிடம் நிறைந்திருக்க வேண்டும் என்பது பொருள். இது மாறி நிகழுமாயின் இல்லறம் தடம்புரளும். நாணமில்லா ஆண்மையினும் நாணமுடைய பெண்மை போற்றுதற்குரியதாக ஆகிவிடும். இதனைத்தான் மேற்கண்ட குறட்பாவில் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். அவ்வாறு வலியுறுத்தும்போது, ‘நாணுடைப் பெண்’ எனச் சுட்டுகிறார். இதனால் ‘நாணமில்லாத பெண் இருப்பாளோ?’ என்னும் ஐயம் வருதல் இயல்பு. அதனைக் களைகிறார் பரிமேலழகர். எப்படி?

    “நாணுடைப் பெண் என வேண்டாது கூறியது அவள் ஏவல் செய்வானது நாணின்மை முடித்தற்காதலின் அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது”.

    நாணமில்லாத ஆண்தான் பெண்ணேவல் செய்வான். அதனைக் குறிக்க எண்ணுகிறார். வள்ளுவர் ‘யாப்பு காரணமாக ‘ஆண்மையின்’ என வாளா கூறிப் பெண்ணுக்கு உரிய நாணத்தை அவளுக்கு அடையாக்குகிறார். இருப்பவளுக்குரிய பண்பை வேண்டாது எடுத்துமொழியும் வள்ளுவர் இருக்கக்கூடாத பண்பைப் பெற்றிருக்கின்ற நாணமில்லாத ஆணை அடையாளப்படுத்துகிறாராம். ஆணின் நாணமின்மையைச் சுட்டுதற்குப் பெண்ணின் நாணம் பயன்பட்டிருக்கிறது என்பதாம்!

    நிறைவுரை

    ‘நடந்தான்’ என்றாலே ‘கால்’ என வேண்டுவதில்லை. ‘கேட்டான்’ என்றாலே போதும்! செவி எதற்கு? ‘நோக்கினான்’ போதாதா? ‘கண்களால்’ என்பதைச் சொல்ல வேண்டுமா? ‘கொடுத்தான்’ என்றாலே ‘கைகள்’ நினைவுக்கு வராதா?  ஆனால் திருவள்ளுவர் கூறுகிறார். ‘சொல்லுகிற வாய்’, ‘உள்ளுகிற உள்ளம்’, ‘நாணுடைப் பெண்’ என்றெல்லாம் வேண்டாது கூறினாலும் அவற்றை விரும்பித்தான் கூறியிருக்கிறார். எல்லா வாயும் ஒரே வாய் அல்ல. எல்லா உள்ளமும் ஒரே உள்ளம் அல்ல. இவற்றைப் பிரித்துணர்த்த விரும்பிய திருவள்ளுவரின் உட்கிடக்கை அறிந்து உரையெழுதியதுதான் பரிமேலழகர் உரைத்திறன்!

    (தொடரும்…)

    Share
  • குறளின் கதிர்களாய்…(321)

    குறளின் கதிர்களாய்…(321)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(321)

    யாதானும் நாடாமா லூராமா லென்னொருவன்
    சாந்துணையுங் கல்லாத வாறு.

    – திருக்குறள் – 397 (கல்வி)

    புதுக் கவிதையில்...

    கற்றவனுக்கு
    எந்த நாடும்
    எந்த ஊரும்
    சொந்த நாடாய் ஊராய்
    ஆகிவிடும்..

    அவ்வாறிருக்க,
    அத்துணைச் சிறப்புமிக்கக்
    கல்வியை ஒருவன்
    இறக்கும் காலம் வரைக்
    கற்காமல்
    காலத்தை வீணே
    கழிப்பதும் ஏனோ…!

    குறும்பாவில்...

    கல்வியில் சிறந்தவனுக்கு எந்நாடும்
    எவ்வூரும் தனதாகிவிடுகிறது, அத்தகு கல்வியைச்
    சாகும்வரை யொருவன் கல்லாததேனோ…!

    மரபுக் கவிதையில்...

    கல்விச் செல்வம் கையிருந்தால்
    காணு முலகில் எந்நாடும்
    எல்லா ஊரும் தன்னதுதான்
    என்ற நிலையே வந்திடுமே,
    கல்விச் சிறப்பை அறிந்திருந்தும்
    கருத்தி லதனைக் கொள்ளாதே
    கல்லா தொருவன் சாவுவரை
    காலங் கடத்தல் வீணன்றோ…!

    லிமரைக்கூ..

    சொந்தநாடாய் ஊராயாகுமித் தரையில்
    கற்றவனுக் கென்கையில், ஒருவன் வாழ்வில்
    கல்லாததேனோ சாகின்ற வரையில்…!

    கிராமிய பாணியில்...

    படிக்கணும் படிக்கணும் நல்லாப்படிக்கணும்,
    படிப்புத்தான் சிறப்புண்ணு ஒணர்ந்து
    பாடுபட்டு எல்லாரும் நல்லாப்படிக்கணும்..

    எந்த நாடும் எந்த ஊரும் படிச்சவனுக்குச்
    சொந்த நாடா சொந்த ஊரா ஆயிடுமே,
    அப்புடி மகிமயுள்ள படிப்ப ஒருத்தன்
    படிக்காமச் சாகிறவர சும்மாயிருந்தா
    அதுனால ஒருபயனும் இல்லையே..

    அதால
    படிக்கணும் படிக்கணும் நல்லாப்படிக்கணும்,
    படிப்புத்தான் சிறப்புண்ணு ஒணர்ந்து
    பாடுபட்டு எல்லாரும் நல்லாப்படிக்கணும்…!

    Share
  • மகராசர் காமராசர்

    மகராசர் காமராசர்

    அண்ணாகண்ணன்
     
    பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாள் இன்று. தமக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த அந்த அற்புத மனிதரின் நினைவைப் போற்றுவோம்.
     
    மகராசர் காமராசர் என்ற தலைப்பில் நான் எழுதிய பாடலை, பெங்களூரில் வசிக்கும் எழுத்தாளர் ஷைலஜா, மூன்று மெட்டுகளில் பாடியுள்ளார். அதை இன்று கேட்டு மகிழுங்கள்.
     
     
     
    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
    Share
  • பணத்தால் என்ன பயன்?

    பணத்தால் என்ன பயன்?

    பொ.கருணாகரமூர்த்தி

    அன்புடன் அண்ணா கண்ணன் அவர்களுக்கு,

    பொருட்களை மீள்பயன்படுத்துவது எப்படி என்பது தொடர்பாக தங்கள் தாயாருடன் செய்துகொண்ட பயனுடைய செவ்வியை இன்று பார்த்தேன்.

    நான்  சீருந்துச் சாரதியாக ஊழியம் செய்த காலத்தில் என் வாடிக்கையாளப் பெண்மணியிடம் பெற்றுக்கொண்ட என் அனுபவமொன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். இது ‘பெர்லின் நினைவுகள்’ நூலிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

    இனி என் அனுபவம்:

    🌿

    ஒருமுறை லேசாக ஒரு பக்கம் சாய்ந்தபடி கைத்தடி ஒன்றை ஊன்றிக்கொண்டு வந்த ஒரு வயதான மாது, வண்டியுள் ஏறிய பின்னாலும் காலைச் சரியாக மடித்து வைத்து உட்காரச் சிரமப்பட்டார்.

    ஆசனத்தின் பட்டியைப் பொருத்துவதற்கு அவருக்கு உதவி செய்துவிட்டு பெருகிய அனுதாபத்தில்,

    “ஏதோ ஆக்ஸிடென்ட் ஆயிடிச்சுப் போல…” என்றேன்.

    “ஜா……. என் துர் அதிஸ்டம்.”

    “எப்போ….?”

    “ இப்போ ஆறு மாசந்தான்.”

    “ எப்படி  நடந்துச்சு…? ”

    “ சைக்கிளில்ல என் பாட்டுக்கு வீதியில ஓரமாய்ச் சென்றுகொண்டிருந்தேனா.”

    “…ம்.”

    “ நிறுத்தப்பட்டிருந்த காரொன்றின் பக்கமாகச் சென்றபோது அதற்குள் இருந்து Penner (பேமானி) எதையும் கவனியாமல் திடீரெனக் கதவைத் திறந்தான். நான் வந்த வேகத்தில் அந்தக் கதவு நெற்றிமுகமாக என் முழங்கால் சிரட்டையிலே அடித்ததிலே அது சிதறிப்போச்சு. இப்போது அதை அகற்றிவிட்டு பிளாஸ்டிக் சிரட்டை பொருத்தியிருக்கிறார்கள். ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் கிடந்தேன்.”

    “அடப்பாவமே.”

    இயல்பாகவே நான் யாருடன்தான் கதைத்தாலும் கதைக்கிற விஷயங்களை விடவும், எதைக் கதைக்கக் கூடாதென்பதில் ஜாக்கிரதையாக இருப்பேன். அன்று என் நாக்கில் ஏறியிருந்த ராகுவோ, சனியனோ ஏதோவொன்று “விபத்து நிவாரணம்……. இழப்பீடென்று நிறையப் பணங்கிடைத்திருக்குமே……” என்கிறது.

    அவர் பதினைந்து விநாடிகள் மௌனமாக இருந்தபோதுதான்  ‘வேண்டாத விஷயம்’ ஒன்று தொடப்பட்டது புலர்ந்தது.

    மௌனம் கலைந்த அம்மணி கதைக்கத் தொடங்கினார்.

    “நான் அந்த விஷயத்தில் அதிஷ்டக்காரியாக இருக்கவேணும். வாழ்க்கையில் பணம் இல்லையென்று என் காரியங்கள் ஒன்றும் என்றைக்குமே ஆகாமல் போனதில்லை. எப்போதும் என்னிடம் பணம் நிறைவே இருந்திருக்கிறது, இருக்கிறது. என்றைக்குமே நான் பணத்தைத் தேடி அலைந்தவளுமல்ல. இழப்பீட்டுக் காப்புறுதியிலிருந்து வேறு இப்போது எழுபதினாயிரம் மார்க்குகள் என் வங்கிக் கணக்கில் ஏற்றியிருக்கிறார்கள். காலத்திலேயே செகன்ட் ஹான்ட் பஜாரில்தான் என் உடுப்புகளை வாங்குவேன். அப்படி எளிமையாக வாழ என்னைப் பழக்கப்படுத்திக் கொண்டவள் நான். வயசான காலத்தில் பணத்தை இடுப்பில் சொருகிக்கொண்டு நானென்ன ‘றொக்’ டான்ஸா ஆடமுடியும்…… டாய்லெட் க்ளோவில் குந்துவதே எவ்வளவு சிரமம் தெரியுமா…… எனக்கு வேண்டியதெல்லாம் என் ஆரோக்கியம். என் வயசான காலத்தில் பிறருக்குத் தொந்தரவு தராமல் என் காரியங்களை நானாகவே கவனிக்க முடியும்படியான ஒரு தேகம். அன்றைக்கு இந்தக் காலையே எடுக்கவேண்டியிருந்தது என்றால் இரண்டு இலக்ஷம் மார்க்குகள் அதிகமாகவே கிடைத்திருக்கும். மனிஷருக்கு வேண்டிய காலத்தில்… வேண்டிய வகையில் உதவ முடியாத இலக்ஷங்களெல்லாம் சும்மா வெறும் இலக்கங்கள்தான். இவ்வளவு பணத்தையும் எடுத்துக்கொண்டு என் முழங்காலை பழையபடி எனக்குத் தரக்கூடிய ஒரு மீட்பனை யாராலும் என்னிடம் அழைத்துவர முடியுமா?”

    🌿

    என்னைப்போல் இப்படி எத்தனை பேர்தான் அவர் இரணத்தில் எலுமிச்சை பிழிந்தார்களோ, மனுஷியின் நியாயமான கோபத்தின் முன் நான் வார்த்தைகளாலும் பயன் இழந்தேன். எந்தப் பதில்தான் அவருக்குச் சாமாதானத்தைத் தந்துவிடும்?

    ஆரோக்கியம் எத்தனை பெரிய ஐஸ்வர்யம் என்பது அதை இழக்கும்போதுதானே புரிகிறது. என் கேள்வியின் அபத்தம் மிகையாக உறைத்தது. மௌனமாக இருப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை.

    நன்றி.

    பிரியமுடன் தங்கள்

    பொ.கருணாகரமூர்த்தி

    Share
  • காந்தி ஜெயந்தி – சௌந்திரவல்லி நேர்காணல்

    காந்தி ஜெயந்தி – சௌந்திரவல்லி நேர்காணல்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மறுபயன்பாட்டை ஊக்குவிக்க, என் தாயார் சௌந்திரவல்லி அவர்களுடன் ஒரு நேர்காணல்.

    பல்வேறு பொருள்களை மீண்டும் பயன்படுத்துவது எப்படி? என்ற அடிப்படைக் கேள்வியுடன் அவரைச் சந்தித்தேன். அவர் சொல்வதைக் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அழைப்பிதழ்: இணையவழிப் பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு

    அழைப்பிதழ்: இணையவழிப் பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு

    இணையவழிப் பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு
    AN ONLINE INTERNATIONAL EDUCATIONAL CONFERENCE

    அழைப்பிதழ்

    Invitation

    October 2nd, 3rd, 4th 2020

    நிகழ்ச்சி நிரல்

    நாள் – 02.10.2020 – 04.10.2020

    வெள்ளி – மாலை 5.00-7.30
    சனி – காலை 9.30-11.30, மாலை 5.00-7.30
    ஞாயிறு – காலை 9.30 -11.00, மாலை 6.00-7.30

    OISCA சர்வதேச நிறுவனம் (ஜப்பான்); தமிழ் அநிதம் (அமெரிக்கா); உலகத்தமிழ் மென்பொருள் குடும்பம் (அமெரிக்கா)
    வல்லமை, முத்துக்கமலம் (மின்னிதழ்கள்)
    தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (த),சிவகாசி.
    பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்
    ஸ்ரீஎஸ்.இராசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி(த), சாத்தூர்.
    நாகூர் தமிழ்ச்சங்கம், நாகூர்

    இணைந்து நட த்தும்

    இணையவழிப் பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு

    To join the video meeting, click this link: https://meet.google.com/ybp-kchz-kri

    முழு அழைப்பிதழைக் காண, இந்தச் சுட்டியைச் சொடுக்குக – 

    அழைப்பிதழ் – 01.10. 20 (1)

     

    அனைவரும் வருக! பயன்பெறுக!

     

    Share
  • பழகத் தெரிய வேணும் – 36

    பழகத் தெரிய வேணும் – 36

    நிர்மலா ராகவன்

    அச்சம் என்பது மடமைதான்

    ‘உனக்கு எவ்வளவு தைரியம்!’ என்று சிலரைப் பாராட்டுகிறோம். ‘இவர்களுக்கெல்லாம் பயம் என்பதே கிடையாதா!’ என்ற பிரமிப்பு எழுகிறது.

    ஏன் இல்லாமல்?

    பழக்கமில்லாத ஒரு காரியத்தில் இறங்க நேரிட்டால் எவருக்கும் அச்சம் எழத்தான் செய்யும். அதற்காக எதுவும் செய்யத் துணிவில்லாமல் சும்மா இருக்கமாட்டார்கள் இப்படிப்பட்டவர்கள்.

    பயம் என்பதும் ஓர் உணர்வுதான். எந்த மனிதருக்கும் இயற்கையாகவே அமைந்திருப்பது.

    “அச்சமும் தைரியமும் சகோதரர்கள்” (பழமொழி).

    எதற்கெல்லாம் பயப்படக்கூடாது என்று புரிந்துவிட்டால், அநாவசியமாக எல்லாவற்றிற்கும் பயப்பட வேண்டியதில்லை.

    அச்சத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் தைரியமும், அதன் விளைவாக தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. பயந்துகொண்டே இருந்தால், மகிழ்ச்சி ஏது! அனுதினமும் ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.

    எதற்குப் பயப்படலாம்?

    பயமே கூடாது என்றும் சொல்லிவிட முடியாது. `தீய பழக்கங்களில் ஈடுபட பயம்’ என்பது சரி.

    சட்டத்திற்கு விரோதமான காரியங்களைச் செய்யத் துணிவதும் முட்டாள்தனம்.

    உலகமே ஒரு சின்ன நோய்க்கிருமியால் ஆடிப்போயிருக்கிற தற்போதைய நிலையில், `வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதாவது!’ என்று பலர் கோலாலம்பூரில் உள்ள ஒரு குளத்தில் மீன்பிடிக்கப் போயிருக்கிறார்கள். பதினைந்து கார்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனவாம். ஆக, `உணவுப்பொருட்கள் வாங்க காசில்லை’ என்ற ரகமில்லை.

    இவர்களது இந்த `துணிச்சலான’ செய்கையால் பலருக்கும் நோய் பரவக்கூடும். அதற்கான தண்டனை: தலா 1,000 ரிங்கிட் (20,000 ரூபாய்) அபராதம்.

    ‘என்னமோ தொற்று நோயாம். பரவுகிறதாம். அதற்காக வீட்டிலேயே அடைந்து கிடக்க யாரால் முடியும்!’ என்ற அலுப்புடன் 286 பேர், இரவு விடுதிகளுக்குப் போய் உல்லாசமாக இருக்க முடிவு செய்தார்கள். சுயநலமாக நடந்ததால், தண்டனை.  அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தால், அரசாங்கத்திற்கு லாபம்.

    குழந்தை மாதிரி

    ‘சிறுவர்களுடனேயே பழக நேர்வதால் பெரும்பாலான ஆசிரியைகள் குழந்தைத்தன்மை மாறாது இருக்கிறார்கள்!’ என்று ஒரு தோழி என்னிடம் கூறிச் சிரித்தாள்.

    வயதில் பெரியவர்களைக் கண்டு குழந்தைகள் அஞ்சி, அவர்கள் சொன்னபடி நடக்கலாம்.

    ஆனால், எத்தனை வயதானாலும், உயர் அதிகாரிகளைக் கண்டு பயந்து நடந்தால் என்ன ஆகும்?

    கதை

    எங்கள் பள்ளியில், ஈராண்டுகள் தலைமை ஆசிரியை இருக்கவில்லை. அந்த இடம் மூத்த உதவியாளராக இருந்த நபீசாவின் கையில். அதிகாரத் திமிருடன் எல்லாரையும் ஆட்டிவைத்தாள், உணர்வு ரீதியாக வதைத்தாள்.

    தனக்கு மேலே வேறு ஒருவர் வரப்போகிறார் என்ற செய்தி கேட்டு, பயம் எழுந்தது நபீசாவுக்கு.

    “இப்போது வரவிருக்கும் தலைமை ஆசிரியை புலிமாதிரி!” என்று அச்சுறுத்திவிட்டு, “எனக்கும்தான் உத்தியோக உயர்வு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது,” என்று நம்பத்தகுந்த சில அப்பாவிகளிடம் நைச்சியமாகக் கூறினாள்.

    அவர்களும் பரிதாபப்பட்டு, எல்லா ஆசிரியர்களையும் அழைத்து, “நபீசா இங்கேயே தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருக்கிறோம். ‘எஸ்’ என்று எழுதுங்கள்,” என்றுவிட்டு, ஒரு காகிதத்தைக் கொடுத்தார்கள்.

    எல்லாரும் பயந்து, அதன்படி எழுதிக் கொடுத்தார்கள்.

    ஒருத்தி மட்டும் `நோ’ என்று பெரிதாக எழுதினாள்.

    எரிச்சலுடன், “அவள்தான் நம்மைப் படாதபாடு படுத்துகிறாளே! எதற்காக ஒத்துக்கொண்டீர்கள்?” என்று சிலரைக் கேட்டாள் அவள். (யார் என்று புரிகிறதா?)

    “நாளைக்கே அவள் உயர்பதவி ஏற்று, இங்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான்!” என்ற பதில் கிடைத்தது.

    “ஒரு கரடியை அது இருப்பதைவிடப் பெரிதாகக் காட்டுகிறது அச்சம்,” என்று சரியாகத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    நல்லவேளையாக, நபீசாவின் திட்டம் பலிக்கவில்லை. அவளை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டார்கள்.

    அங்கிருந்த ஆசிரியர்கள் ஆரம்பத்திலேயே, `உன்னைப் பற்றி நிறையக் கேட்டிருக்கிறோம். உன் அதிகாரத்தை எங்களிடம் காட்டலாம் என்று நினைக்காதே,” என்று மிரட்ட, அவள் அடங்கிப் போனாளாம்.

    நம்மை அச்சுறுத்த நினைப்பவர்களின் எண்ணம் பலிக்காவிட்டால் அந்த பயம் அவர்களையே போய்ச் சேர்ந்துவிடும்.

    எங்கள் பள்ளியில் பயத்தால் எல்லாரும் பணிந்துபோனார்கள் – என்னைத் தவிர. அதனால் மேலும் குறுகிப்போனார்கள்.

    சிறப்பான வாழ்க்கை தற்செயலாக அமைவதில்லை. நம் கனவுகளை நனவாக்க நாம் மாறுவதைப் பொறுத்தே அது அமைகிறது. வீண் பயம், கனவுகளைத் தகர்த்துவிடும்.

    கதை

    அரசாங்கத்தின் ஓராண்டுக் கால மேற்பயிற்சி அது – விடுமுறைக் காலங்களுடன்.

    முழுமையாகக் கலந்துகொண்டவர்களுக்கு மாத வருமானத்தைத் தவிர கூடுதலான போனஸ் பணமும் உண்டு, ஆனால் விடுமுறையின்போது அவர்களுக்கு அளிக்கப்படும் வீட்டுப் பாடங்களை முதலிலேயே முடித்துக் கொடுத்துவிட வேண்டும்.

    அதன்படி நடந்து, ‘வெளிநாடு போகப்போகிறேன்,’ என்று எழுதியும் கொடுத்தேன்.

    ‘வெளிநாடு போனவர்களுக்குப் பணம் கிடைக்காது,’ என்று பயிற்சி ஒருங்கிணைப்பாளர் நவாவி முரட்டுத்தனமாக அறிவித்தார்.

    நான் தனிமையில் அவரைச் சந்தித்து, “விதிப்படி, நான் எல்லாம் முறையாகச் செய்திருக்கிறேனே!” என்று விவாதித்தேன்.

    உடலை இறுக்கிக்கொண்டு, “நான் இந்த விதிகளை எழுதவில்லை,” என்றார் நவாவி.

    பயிற்சி முடிவடையும் தறுவாயில், மேலிடத்திலிருந்து ஒருவர் வந்து அதில் கலந்துகொண்ட 450 பேருக்கு உரை நிகழ்த்தினார்.

    “உங்களுக்கு எதிலாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்,” என்றார்.

    நான் சும்மா இருப்பேனா? என் வழக்கைச் சொன்னேன்.

    “இதுபற்றி பிறகு பேசலாம்,” என்று சமாளிக்கப் பார்த்தார்.

    “இல்லை. எனக்கு இப்போதே தெரியவேண்டும்,” என்றேன், பிடிவாதமாக. “நான் எல்லாம் சரியாகச் செய்திருக்கிறேன். பணத்துக்காகக் கேட்கவில்லை. என்னைத் தண்டிப்பதுபோல் பணம் கொடுக்க மறுப்பது என்ன நியாயம்?”

    அவர் பயந்தார். “நீங்கள் சொல்வது சரிதான். எங்கள் தவற்றுக்கு மன்னியுங்கள்,” என்று பின்வாங்கினார். “நீங்கள் என்னிடம் சொன்னதை ஒரு கடிதத்தில் எழுதிக் கொடுங்கள்,” என்று சமரசத்துக்கு வந்தார்.

    ஒரு கேலிப் புன்னகையுடன், நான் மேடையைவிட்டு இறங்குமுன், நவாவி அடைத்த குரலில், “எனக்கு முதலிலேயே தெரியாது,” என்றார்.

    அவரது மன்னிப்பை ஏற்கும் வண்ணமாக, நான் தலையை ஒருமுறை லேசாக மேலும் கீழும் ஆட்டிவிட்டு நடந்தேன்.

    அன்று நான் கதாநாயகியாக உயர்ந்துவிட்டது பிறகுதான் புரிந்தது. நான் பழகியிராத சில பெண்கள், “உங்கள் விலாசத்தைக் கொடுங்கள்,” என்று உறவாடினர்!

    என் நிலையிலிருந்த சிலர், “என்ன எழுதவேண்டும்? சொல்லிக் கொடுங்கள்,” என்று என்னைப் பிடித்துக்கொள்ள, `தைரியம் என்ற குணம் ஏன் இவ்வளவு அரிதாகிவிட்டது?’ என்ற அலுப்புதான் ஏற்பட்டது.

    நான் ஒரு பள்ளியிலிருந்து மாற்றல் கேட்டுப் போகையில், “ஐயோ! எங்களுக்காகச் சண்டை போடுகிறவர் நீங்கள் மட்டும்தான். நீங்களும் போய்விட்டால் நாங்கள் என்ன செய்வது!” என்று ஆசிரியை ஒருத்தி அரற்ற, “Fight your own battles (உங்கள் சண்டைகளை நீங்களே போடுங்கள்),” என்றேன் எரிச்சலுடன்.

    எதற்கெடுத்தாலும் சண்டை போடவேண்டும் என்று எனக்கு மட்டும் ஆசையா?

    சண்டை போடுவதால் நிறைய சக்தி விரயமாகிறது. சில சமயம் பலனளிக்கக்கூடும். விரோதிகளும் பெருகுவர்.

    அதனால் என்ன? உரிய காலத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்தோம் என்ற திருப்தி நிலைக்குமே!

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 10

    எட்டுக் கோணல் பண்டிதன் – 10

    தி. இரா. மீனா

                     அத்தியாயம் பதினைந்து

    ஞானமயப் பரம்பொருள் நீ; எல்லாம் நீயொருவனே. விகற்பமும் ,நினைப்பும் இல்லாமல் சுகமாக இரு என்று  அஷ்டவக்கிரர் ஜனகருக்கு உபதேசிப்பது இந்த அத்தியாயமாகும்.

    1. ஸத்வபுத்தி உண்மை உபதேசத்தால் கிருதார்த்தனாகிறான். மற்றவன் ஆயுள் முழுவதும் தேடி மயங்குகிறான்.

    2. விஷயச் சுவையறுதலே வீடு; விஷயச் சுவையே பந்தம்; ஞானம் இவ்வளவே. இஷ்டப்படி செய்து  கொள்.

    3. இந்த உண்மையறிவு வாய் ஜாலமுடையவனும், மேதாவியும், முயற்சி மிகுந்தவனுமான ஒருவனை ஊமையையும் சோம்பேறியையும் போலாக்குவதால் போக விருப்பினர் இதை விலக்குவார்கள்.

    4. உடல் நீயில்லை; உடலுனக்கில்லை; புசிப்பவனும், புரிபவனும் நீயில்லை. நீ ஞான மயமானவன். என்றும் சாட்சி தேவையற்றவன். சுகமாக வாழ்வாய்.

    5. விருப்பும், வெறுப்பும் மனித இயல்புகள். உனக்கோ என்றும் மனமில்லை. திரிபும், விகற்பமுமற்ற ஞான ஆத்மாவே நீ சுகமாக வாழ்வாய்.

    6. படைப்பனைத்திலும் தன்னையும், தன்னிடம் படைப்பனைத்தையும் கண்டு நான் எனது என்பதற்று சுகமாக இருப்பாய்.

    7. கடலில் அலைகள் போல எதனிடம் இந்த உலகம் இலகுமோ அதுவே நீ. ஐயமில்லை. ஞான வடிவே. தாபமில்லாமல் இரு.

    8. அன்பனே! நம்பு, நம்பு. இங்கே நீ மயங்காதே. மாயைக்கு அப்பாலான ஆத்மாவே, ஞான மயமாம் இறைவனே நீ.

    9. குணங்கள் சூழும் உடலே நிற்கிறது. வருகிறது. போகிறது. ஆத்மாவே போவதும் வருவதுமில்லை. அதைப்பற்றி ஏன் வருந்துகிறாய்?

    10. உடல் பிரளய முடிவு மட்டும் இருக்கட்டும்; இன்றே இன்றே போகட்டும். ஞானமாம் வடிவாம் உனக்கு அதனால் ஆக்கமேது அழிவேது?

    11. வரையறையற்ற பெருங்கடலாகிய உன்னிடம் உலகத் திரை இயல்பாகவே உதிக்கட்டும் அல்லது அடங்கட்டும். அதனால் உனக்குக் கூடுதல், குறைதல் இல்லை.

    12. அன்பனே! ஞானமே உன் வடிவமாகும். இந்த உலகம் உன்னிலும் வேறில்லை. ஆதலால் யாருக்கு எவ்வாறு எங்கே ஏற்பதும், விடுவதுமாம்?

    13. அழிவில்லாமல் அமைதியாக இருக்கின்ற ஒரே ஞானவானாகிய உன்னிடம் பிறப்பெங்கே? வினையெங்கே? அகந்தைதானெங்கே?

    14. எதை நீ கண்டாலும் ஒருவனாகிய நீயே அங்கிருக்கிறாய். பொன்னாலான மேகலை, தோள்வளை, சிலம்பும் பொன்னிலிருந்து வேறாகுமோ?

    15. இது நான்,  இது நானல்ல என்னும் மாறுபாட்டை முழுவதும் ஒழித்து அனைத்தும் ஆத்மாவே எனத் துணிந்து நினைப்பற்றுச் சுகமாக இருப்பாய்.

    16. உன்னை உணராததால்தான் அகிலம் உண்டாகிறது. உண்மையில் நீ ஒருவனே இருக்கிறாய். உனக்கு அயலாக சம்சாரியோ சம்சாரமற்றவனோ ஒருவனுமி்ல்லை.

    17. இந்த உலகமும் மயக்கமே தவிர வேறில்லை என்று துணிந்து வேதனையற்று ஆன்ம விளக்கமாக மட்டுமிருப்பவன் எதுவுமில்லாதது போல அமைதியாக இருப்பான்.

    18. பவசாகரத்தின் கண் ஒருவனே இருந்தான், இருக்கிறான், இருப்பான். உனக்கு பந்தமுமில்லை, முக்தியுமில்லை. செயல் முடித்தவனாகச் சுகமாக இருப்பாய்.

    19. ஞான மயமானவனே! சங்கற்பம், விகற்பங்களால் சித்தம் குழம்பாதே. ஆனந்த வடிவமாகிய தன்னிடம் ஒய்வுற்று சுகமாக இருப்பாய்.

    20. எங்கும் எந்தக் காலத்திலும் தியானத்தை ஒழிப்பாய். சித்தத்தில் ஒன்றையும் வைத்துக் கொள்ளாதே. நீ விடுபட்டவனாக ஆத்மாவாகவே இருக்கிறாய். நினைப்பினால் ஆவது என்ன?

                          அத்தியாயம் பதினாறு

    எல்லாவற்றையும் மறந்தால் ஆத்மானந்தம் கிடைக்கும் என்றும் விருப்பு வெறுப்பற்று நான் என்பது இல்லாமலிருக்க வேண்டும் என்று ஜனகருக்கு அஷ்டவக்கிரர் உபதேசிப்பது இந்த அத்தியாயமாகும்.

    1. பற்பல நூல்களை பலமுறை சொன்னாலும், கேட்டாலும் அனைத்தையும் மறந்தாலன்றித் தன்னிலை இன்பம் உனக்கில்லை.

    2. போகத்தையோ சமாதியையோ நீ சார்ந்திரு. ஆயினும் அன்பனே! ஆசைகளற்ற உள்ளமே அளவில்லாத மகிழ்ச்சியை உனக்குத் தரும்.

    3. விஷயங்களில் உழலுவதால் அனைவரும் துன்பப்படுகின்றனர். இதை யாரும் உணர்வதில்லை. புண்ணியவானொருவன் இந்த உபதேசத்தாலேயே பேரின்பம் பெறுவான்.

    4. கண்ணை இமைத்துத் திறப்பதற்கும் எவனொருவன் வருந்துவானோ சோம்பலில் தலைசிறந்தவனாகிய அவனுக்கே இன்பம். வேறு எவர்க்குமில்லை.

    5. அறம் பொருள் இன்பம் வீடு பற்றி இது செய்தோம் இது செய்யவில்லை என்னும் இரட்டைகளில் இருந்து மனம் விடுபட்டால் அதுவே ஆசையற்ற நிலையாம்.

    6. விஷயத்தை வெறுப்பவன் விரக்தன்; விஷயத்தில் உழல்பவன் காமி். ஏற்றுக் கொள்வதும் விலக்கித் தள்ளுவதும்  இல்லாதவன் விரக்தனுமில்லை. காமியுமில்லை.

    7. விசாரணையற்ற  நிலையைத் தலமாகக் கொண்டு சம்சாரப் புதரின் முளையாகிய ஆசை உள்ளவரையில் மட்டுமே ஏற்றுக் கொள்வதும், விலக்கித் தள்ளுவதும் இருக்கும்.

    8. தொடங்குவதால் ஆசையும், விலக்குவதால் வெறுப்புமே உண்டாகுமென் பதால் அறிஞன் இரட்டைகளற்றுக் குழந்தை போல இருப்பான்.

    9. துன்பத்தைத் தொலைக்கும் ஆசையால் அவாவுடையவன் உலகியலைத் துறக்க விரும்புகிறான். அவா ஒழிந்து விடுதலையடைந்தவன் உலகிலி ருந்தும் துன்பமடைய மாட்டான்.

    10. யாருக்கு முக்தியில் விருப்பமுள்ளதோ, எனது உடல் என்ற விருப்பம் உள்ளதோ அவன் துன்பத்தையே அனுபவிப்பான். அவனால் ஞானியாகவோ, யோகியாகவோ முடியாது.

    11. சிவனே அல்லது ஹரியே அல்லது பிரம்மனே உனக்கு உபதேசம் செய்பவனாக இருந்தாலும் எல்லாவற்றையும் மறந்தாலன்றி நீ சுகமடைய முடியாது.

    கிருதார்த்தன் – ஞானி

    [தொடரும்]

    Share
  • முழுவாழ்வில் நானிருப்பேன்!

    முழுவாழ்வில் நானிருப்பேன்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண்ஆஸ்திரேலியா

    விழுந்தால் விதையாவேன்
    எழுந்தால் மரமாவேன்
    வளைந்தால் வில்லாவேன்
    நிமிர்ந்தால் கணையாவேன் 

    பிடித்தால் காலாவேன்
    எடுத்தால் கோலாவேன்
    வலித்தால் துடுப்பாவேன்
    மாக்கடலில் படகாவேன் 

    காவலில் கதவாவேன் 
    கடும்வெயில் நிழலாவேன்
    முதுமையில்  துணையாவேன்   
    முழுவாழ்வில் நானிருப்பேன் 

    Share
  • படக்கவிதைப் போட்டி – 278

    படக்கவிதைப் போட்டி – 278

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (04.10.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 277இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 277இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    உச்சியிலிருந்து வீழும் அருவிக்குப் போட்டியாய் நீரில் குதித்துக்கொண்டிருக்கும் பயமறியா இளங்கன்றைத் தம் படப்பெட்டிக்குள் அடக்கிவந்திருப்பவர் திரு. எம். மோகன். இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டி 277க்கு அளித்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நனிநன்றி உரியது!

    அச்சம் என்பது சிறிதுமின்றிப் பாறை உச்சியிலிருந்து நீரைநோக்கிப் பாய்கின்ற இளமையின் வேகம் நம்மை மிரளவைக்கின்றது. கூடவே தொடித்தலை விழுத்தண்டினாரின் சங்கப் பாடலையும் நினைவலைகளில் உருளவைக்கின்றது.

    தாம் சிறுவனாய் இருந்தபோது தாழ்ந்திருக்கும் மருதமரக் கிளையிலேறித் ’துடும்’ என்ற ஒலியெழ விரைந்து மடுவில் பாய்ந்ததையும், கரையில் இருந்தவர்கள் அதைக் கண்டு மருண்டதையும் இருமலோடும் இளைப்போடும் தண்டூன்றித் தள்ளாடும் முதுமையில் அசைபோட்டுப் பார்க்கின்றார் இந்தப் புலவர்.

    ”உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
    நீர்நணிப் படிகோ டேறிச் சீர்மிகக்
    கரையவர் மருளத் திரையகம் பிதிர
    நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
    குளித்துமணற் கொண்ட கல்லா விளமை.”
    (புறம் – 243)

    சிறுவர்களின் அறியாமை கலந்த அச்சமின்மைக்குச் சான்றாய் இந்தச் சங்கப் பாடலும் இவ்வாரப் படக்கவிதைக்கான படமும் விளங்குகின்றன.

    இனி, இப்படத்திற்குப் பொருத்தமாய் நம் கவிஞர்கள் வரைந்திருக்கும் கவிதைகளைக் கண்ணுறுவோம், வாருங்கள்!

    ”அருவியில் குளிப்பது நல்லதே; ஆனால் உயரேயிருந்து குதிப்பது ஆபத்து என்பதை அறிந்து செயல்படு!” என்று இவ் இளைஞனுக்கு அன்பாய் அறிவுறுத்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அளவோடு…

    அருவி நீரது குளித்திட மட்டுமே
    அதிலே குதித்தால் அபாயம் உயிர்க்கே,
    பெருமை மிக்கது சாதனை செய்தல்
    பெரிதாம் இழப்பு சிறிய தவறிலே…

    அச்சம் இலாமை அனைத்திலும் நன்றே
    அசட்டுத் தைரியம் அழிப்பாய் இன்றே,
    துச்ச மாக எதையும் எணாமல்
    துணிந்து தெளிந்து செயல்படு நீயே…!

    *****

    ”தண்ணீரின் வேகத்தோடு போட்டிபோட்டுக் குதிக்கும் இளைஞனே! தோழர்களுடன் நீந்துவது சுகமானது. நீச்சலடித்துப் பழகிவிடு! அதில் தங்கப் பதக்கங்கள் வாங்கிக் குவித்துவிடு!” என்று இளைஞனுக்கு உற்சாகமூட்டுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    தண்ணீரின் வேகம் அதிகமா?
    உன் கால்களின் பாய்ச்சல் அதிகமா?
    இரண்டுமே ஒன்றோடொன்று போட்டி
    வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்!

    ஆற்று நீரோ அருவி நீரோ
    கடல் நீரோ கிணற்று நீரோ
    இதில் குளியல்கள்
    என்னவொரு சுகம்
    கிராமத்துப் பொக்கிஷங்கள்!
    உடல் நலம் சிறக்கும் சாதனங்கள்!

    தோழர்களுடன் பாய்ந்தடிக்கும்
    நீச்சல் ஓர் அருமைதான்
    பாடிப்பாடிக் கைகள் அடித்தெழப்
    பாடல் கோடி பிறக்குதாம்!

    இந்தச் சுகம் எதிலுமில்லை!
    இளைஞனே நீ நீச்சலடித்தெழு!
    தங்கப்பதக்கம் வாங்கிவாங்கி
    தாய்நாட்டிற்கே குவித்து விடு!

    *****

    ”தாயின் மடி குடியிருந்து, தந்தையின்தோள் சேர்ந்து, தன் காலில் தான் நின்று பழமைக் கறை களைய இளமையே தாவி வா!” என்று இளைஞனை அழைக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    இளமையே நீ தாவி வா!

    தரையிருந்து வான் எட்டி
    மலை முகடு வழியிறங்கித்
    தாவிக் குதித்தோடிக்
    கடும் பாறைச் சமமாக்கிப்
    பூமிவளம் தான் பெருக்கிக்
    குளிர்விக்கும் நீர்போலத்
    தாயின் மடி குடியிருந்து
    தந்தைதோள் சேர்ந்து
    தன் காலில் தான் நின்று
    தரைமீது நடைபயின்று
    துள்ளிக் குதித்தோடிப்
    பழமைக் கறை களைந்து
    புதுப் புனல் பொங்கு நீராடிட
    இளமையே நீ தாவி வா!

    *****

    இனிய கவிதைகளால் படிப்போர் இதயம் தொட்டிருக்கும் கவிஞர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்.

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது அடுத்து…

    தற்காத்தலே தகவுடைமை!

    பொங்கிப் பொழிந்த கார் மழையால்
    பொங்கி வழியுது பாறையில் பாலருவி
    தேங்கிய சுனை நீரில் வெம்மை தணிக்க
    ஏங்கிய இளமை எட்டித் தாவுது!

    எல்லையில்லாத் துணிவே
    எமனாகலாம் எச்சரிக்கை!
    களிப்புடன் குளிக்க வந்த இடமே
    காவு வாங்கலாம் கவனம்! கவனம்!

    வழுக்குப் பாறை நீரோட்டம்
    வாழ்வை வழிமாற்றிடும் – உடன்
    வந்த நட்புகளுக்கு வழக்கானால்
    வாழ்வே போராட்டம் ஆகிடும்!

    நீராடல் ஒரு கலை நீ நின்றாடு!
    நீள் உலகில் அன்றாட வாழ்வில் வென்றாட
    நீ விழிப்போடு களித்தாடு விழி
    நீர் வழிய வினை செய்யல் ஆகாது!

    நீங்கள் எல்லாம் இந்நாட்டின்
    நிலையுயர்த்தும் இளமை அலை
    நிலையுணர்ந்து கவனாமாய் நீராடு
    நிலை தவறின் இல்லை ஓர் விலை உயிருக்கு!

    தாயுண்டு தந்தையுண்டு தாய்மண்ணும்
    தான் உனை நம்பியுண்டு – பயமறியாத்
    தளிர் இளங்கன்றே தற்காத்தலே தகவுடைமை
    தவறில்லாக் குறள் நெறி கொள் வாழ்வை வெல்!

    ”நீராடல் ஒரு கலையே! அதனை விழிப்போடு களித்தாடு! தற்காத்தலே தகவுடைமை; குறள் நெறி கொள்! வாழ்வை வெல்!” என்று பயமறியா இளங்கன்றுக்கு நயமாக நல்லுரை நவின்றிருக்கும் திரு. யாழ். பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share