Blog

  • Jaswant Singh Cherished Memories

    Jaswant Singh Cherished Memories

    Maranvanpulavu K Sachithananthan
    Siva Senai, Jaffna, Sri Lanka

    Sri Lankan Tamils express their heartfelt condolences to the bereaved family and the Bharatiya Janata Party on the death of the former Minister of Foreign Affairs Jaswant Singh.

    He was a friend of the Sri Lankan Tamils. He cared for their welfare. He along with Prime Minister Atal Bihari Vajpayee were keen to restore the dignity and respect of Tamils.

    In spite of the ban on the LTTE, Prime Minister Vajpayee wanted his personal envoy to meet Prabhakaran at Vanni. During May 2000, I was asked to get the consent from Prabhakaran to meet his personal envoy. Brajesh Mishra, National Security Advisor, Jana Krishnamoorthy Minister of Justice asked me to reach Prabhakaran to get concurrence for a meeting with the envoy of the Indian PM.

    I sought the help and support of Kavignar Kasi Anandan and Pazha Nedumaran. Prabhakaran gave his consent. I told this to Brajesh Mishra.

    On June 6th, Foreign Minister Jaswant Singh went to Colombo to meet President Chandrika. It was an unscheduled visit. President Chandrika declined support.

    I was asked to convey this to Prabhakaran.

    These are cherishable memories for Sri Lankan Tamils of Mr. Jaswant Singh. Your memory shall always be with us.


    புரட்டாதி 12, 2051 (திங்கள்) 28.09.2020

    யசுவந்தர் சிங்கர் (ஜஸ்வந்த் சிங்) காலமானார்.

    சம காலத்தவர், ஈழத் தமிழர் பால் அளப்பரிய ஈடுபாடு கொண்டவர். ஈழத் தமிழருக்காகப் பல நற்பணிகள் ஆற்றியவர். 2000 ஆனியில் (யூன்) அவரின் கொழும்புப் பயணம், ஈழத் தமிழருக்கான பயணம்.

    அவர் கொழும்புக்குப் பயணமாகுமுன் என்னைப் பிரபாகரனிடம் பேசுமாறு பணித்தவர் பிரதமர் வாச்பாய். நீதி அமைச்சர் சனா கிருட்டிணமூரத்தி. பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரசேசு மிர்சா.

    2000 மே மாதம் 28ஆம் நாள் நீதி அமைச்சர் சனா கிருட்டிணமூரத்தி அழைத்துத் தில்லி சென்றேன். பிரதமரின் தூதர் இலங்கை வன்னி சென்று பிரபாகரைனச் சந்திக்கப் பிரபாகரனின் ஒப்புதல் பெறுமாறு என்னிடம் கேட்டார்.

    கவிஞர் காசி ஆனந்தன், மாவீரர் பழ. நெடுமாறன் உதவினர். யூன் 4ஆம் நாள் அளவில் பிரபாகரனின் ஒப்புதலைப் பெற்றுக் கொடுத்தேன்.

    அப்போதைய குடியரசுத் தலைவர் சந்திரிகாவின் ஒப்புதலைப் பெற யூன் 6 அளவில் இந்திய வெளிநாட்டமைச்சராக இருந்த யசுவந்தர் கொழும்பு சென்றார். திடீர்ப் பயணம் என ஊடகங்கள் தெரிவித்தன.

    சந்திரிகா ஒப்பவில்லை. யசுவந்தர் வெறுங்கையுடன் திரும்பினார்.

    செய்தியை என்னிடம் சொன்ன அமைச்சர் சனா கிருட்டிணமூரத்தி, பிரபாகரனிடமும் தெரிவிக்கச் சொன்னார்.

    ஒரே பணி. பிரபாகரனிடம் என் பணி. சந்திரிகாவிடம் யசுவந்தர் பணி.

    ஈழத் தமிழர் மீது அளவற்ற ஈடுபாடு கொண்ட யசுவந்தர் மறைந்தார். அவரை இழந்து வாடும் இல்லத்தாருக்கும் பாரதீய சனதாக் கட்சியினருக்கும் ஈழத் தமிழரின் நெஞ்சார்ந்த இரங்கல்.

    Share
  • நிர்மலா ராகவன் எழுத்துலக அனுபவங்கள் – 1

    நிர்மலா ராகவன் எழுத்துலக அனுபவங்கள் – 1

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    மலேசியத் தமிழ் எழுத்தாளர் நிர்மலா ராகவன், தமிழில் 25 நூல்களையும் ஆங்கிலத்தில் 6 நூல்களையும் எழுதியவர். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை எனப் பல துறைகளிலும் அமைந்த இந்த நூல்கள் பலவும், பரிசுகளையும் பாராட்டுகளையும் வென்றவை. கணவரிடம் அடி வாங்கி, பாதுகாப்பு இல்லத்தில் தங்கியோர், ஓடிப் போன பெண்கள், தொழுநோயாளிகள், குண்டர் குழுவில் இருந்தோர்… எனப் பலரையும் நேரில் சந்தித்து அவர்களின் வாழ்க்கையைக் கேட்டுக் கதைகளாக எழுதியவர். எழுதுவதற்கான கருக்களைத் தேர்ந்தெடுப்பது, அதற்காகக் கள ஆய்வு செய்வது, பாத்திரங்களாகவே மாறுவது, கூடு விட்டுக் கூடு பாய்வது… என விரியும் தமது அனுபவங்களை இந்த அமர்வில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 16 (ஐயர்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 16 (ஐயர்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    சிறுபாத்திர வரிசையில் தந்தையை அடுத்து நிற்பவர் ‘ஐயர்’. இத்தொகைப் பாத்திரம் எந்தப்  பாடல் காட்சியிலும் நேரடியாக  இடம் பெறவுமில்லை; எங்கும் பேசவுமில்லை; பேசியதாகக் கூறப்படவுமில்லை. ஆனால் தலைவன், தலைவி, தோழி,  மூவரின் பேச்சிலும் ஐயரைப் பற்றிய குறிப்புகள்  உள்ளன.

    ‘ஐயர்’- பொருள் பரப்பும் விரிவும்

    ஐயர் எனும் சொல் இன்று தமிழகத்தில் ஒரு  சமூகத்தைக் குறிக்கும் சொல் ஆகும். செவ்விலக்கியக் காலத்தில் அண்ணன்களுக்கு உரிய உறவுமுறைப் பெயராக இருந்து; பின்னர் அண்ணன்மாரோடு கிளையையும் சேர்த்துச் சுட்டுவதாக விரிந்து; தொடர்ந்து தலைமைத்தன்மை உடையோர்க்குப் பொருந்துவதானது. இப்படிச் சில படிநிலைகளைத் தாண்டித் தந்தையைக் குறிக்கவும் எடுத்தாளப்பட்டுள்ளது. இன்றும் தந்தையைக் குறிக்கும் உறவுமுறைச் சொல்லாகச் சில சமூகங்களில் ஐயா என்னும் விளிமுறை வழங்கி வருகிறது.

    தம் + ஐயன் = தமையன்

    தமையன் என்பவன் அண்ணன் ஆகையால்;  ஐயன் அண்ணன் ஆவான்.  பன்மைப்பொருள் பெறும்  போது இச்சொல் ஐயர் ஆகும். இச்சொற்பிரிப்பு முறையை ஒத்துக் கொள்ள ஏதுவாக; நச்சினார்க்கினியரும் அவரை ஏற்றுத் தொடர்ந்த இளவழகனாரும்;

    “என் ஐயர்க்கு உய்த்துரைத்தாள் யாய்” (கலி.- 39)

    என்ற பாடலடியில் இடம்பெறும் ‘ஐயர்’ அண்ணன்மார் என்கின்றனர்.

    அகநானூற்றுக்கு இணைந்து உரையெழுதிய ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் ரா. வேஙகடாசலம் பிள்ளையும்;

    “மால் இருள் நடுநாள் போகித் தன் ஐயர்
    காலை தந்த கணைகோட்டு வாளைக்கு” (அகம்.- 126)

    என்ற அடிகள் இடம்பெறும் பாடலுக்குக்  ‘காவிரியின் மடுவில் நிலை கொள்ளாத நீரிடத்து இரவில் சென்று காலையில் தமையன்மார் கொண்டுவரும் கோடுகளை உடைய வாளைமீனுக்குப் பண்டமாற்றாகப் பாண்மகள் நெல்லை வாங்க மறுத்து; முத்துக்கள் பதித்த அணிகலனை வாங்கினாள்’ என்று பொருள் கூறியுள்ளனர். பின்புலமாக  ஐயரின் செயல் இடம்பெறும் இப்பாடல் பாணர் குலப்பெண்ணின் இயல்பான ஆசையை அழகாகக் கூறியுள்ளது.

    கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த வேளாண்மைச் சமுதாயத்தில் இச்சொல்லின் பொருள் விரிந்து  மாற்றமடைந்தது. உடன்பிறந்த அண்ணன்மார் மட்டுமின்றி ஒன்றுவிட்ட அண்ணன்கள், தந்தையின் உடன்பிறந்தோர் அனைவரையும் குறிக்கும் பொதுச்சொல்  ஆகியது. தந்தையின் பெருமை தன் பங்காளிகளாகிய கிளையைத் தாங்கும் வாழ்க்கை முறையில் உள்ளதாகவே அகப்பாடல்கள் சுட்டுவதை முன்னர்க் கண்டோம். (அகஇலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 கிளை). கிளையையும் ஐயரையும் வேறுபடுத்தும் கூறு எது என்று சிந்திக்கும் போது; ஆண் முதன்மைச் சமுதாயத்தில் சொத்தைப் பங்கீடு செய்யும் உரிமையுள்ள பங்காளிகளை மட்டுமே கிளை என்னும் உறவைமுறை குறிக்க; ஐயர் தலைவியின் உடன்பிறந்த சகோதரர்களையும்  சேர்த்துச் சுட்டப் பயன்படும் பெயராக உள்ளது.

    குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணைகளில் எத்திணையாயினும் பங்காளிகளோடு சேர்ந்து தொழில் செய்தமையைக் கிளை என்னும் சிறுபாத்திரம் மூலம் அறிகிறோம். புன்செயில் தினை விதைக்கும் நடைமுறையைச் சொல்லும்;

    “இருங்கல் அடுக்கத்து என் ஐயர் உழுத” (நற்.- 122)

    என்ற கூற்று; வேளாண்மையில் கூடிப்  பாடுபட்டவர் உடன்பிறந்தோரும் கிளையும் சேர்ந்த தொகுதி என்று எண்ண இடமளிக்கிறது. கடலில் மீன்பிடிக்கும் வேட்டையைப் புனையும் போதும்;

    “பன்மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே” (குறுந்.- 123);

    என்ற பரதவப்பெண்ணின் கூற்றில் அதே உறவுத் தொகுதியைப் பொருத்தி வைத்து எண்ணுவதைத் தவிர்க்க முடியவில்லை. குறமகளை எண்ணி மாந்தளிரிடம் பேசும் தலைவன்;

    “கணமா தொலைச்சித் தன் ஐயர் தந்த” (ஐங்.- 365)

    ‘நிணவூனை உணக்குகிறாள்’ என்று சொல்லும் தலைவியின் செய்கையோடு தொடர்புறுபவர்  அவளது தமையரும் கிளையும் ஆவர் என்றே எண்ண வைக்கிறது.

    வெற்றிகரமாக அறத்தொடு நின்று காரியம் சாதித்த தோழி பொதுவனாகிய ஆயர் குலத்தலைவனுக்கு மணமுடிக்க அடை சூழ்ந்தார் யார்யாரென்று தலைவிக்கு எடுத்துக்கூறும் போது; தந்தையும்;

    “ஐயன்மார் எல்லாம் ஒருங்கு” (கலி.- 107)

    என்கிறாள். இங்கு தமையரோடு தந்தையும் கிளையும் சேர்ந்து பாக்கு வெற்றிலை மாற்றிக் கொண்ட சுபநிகழ்ச்சியே வருணிக்கப்படுகிறது.

    தலைமைத் தன்மைக்கு உரிய பெயர்ச்சொல் ஆதலால்; அறிவுடையோரைக்  குறிப்பதற்கும் ஐயர் என்ற சொல்  பயன்பட்டமை;

    “ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை” (குறிஞ்சி.- அடி- 17)

    என்ற தோழி கூற்றால் தெரிகிறது. அணிகலன் கெட்டால் திருத்தி விடலாம்; சால்பு முதலிய மக்கட்பண்புகள் கெட்டால் அதை நீக்கிப் புகழை நிறுவுதல் குற்றமில்லாத அறிவுடையோர்க்கும் அரிது என்பது அவள் வலியுறுத்தும் கருத்து ஆகும். இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் உடன்போக்கைத் தவிர வழியே இல்லை என்ற சூழல் உருவாகும் போது;

    “………… …………. …….நின் ஐயர்

    புலிமருள் செம்மல் நோக்கி” (அகம்.- 259)

    நீ அஞ்சிப் பின்வாங்காதே; துணிந்து தலைவனோடு சென்று வா எனத் தூண்டும் தோழி; ஐயரின் ‘செம்மல்’ என்று செறிவாகக் கூறுவது; புலியை ஒத்த அச்சம் தரும் தலைமைப் பண்பைக் குறிக்கிறது.

    தான் பிடித்து வந்த பல மீன் தொகுதிகளைத் தந்தை தமையர்க்குக் காட்டுவர் என்ற நிகழ்வுப் புனைவில்;

    ”பல்மீன் கூட்டம் என் ஐயர்க் காட்டிய
    எந்தையும் செல்லுமார் இரவே” (அகம்.- 240)

    என்று இரவுக்குறியின் ஏதத்தைச் சொல்லும் போது; ஐயரும் தந்தையும் வேறுபிரித்துக் காட்டப்பட்டுள்ளனர். ஆனால் தந்தை களிற்றின் முகத்தைப் பிளந்த அம்போடு கொலைத்தொழில் தவிர வேறேதும் தெரியாத ஏவலருடன் விலங்கின் பின் சென்று விட்டதைத்  தோழி கூறும் போது “ஐயும்” (நற்.- 389) என்னும் உறவு தந்தையைக் குறிக்கிறது.

    காலப்போக்கில் ஏற்பட்ட பொருள் மாற்றம்

    முருகனைச் சுட்ட ஐயன் என்ற சொல்லைத் தோழி எடுத்தாள்கிறாள்.

    “ஐயனை ஏத்துவாம் போல” (கலி.- 43)

    வள்ளைப் பாட்டில் தலைவனைப் பாடித் தலைவியின் ஆற்றாமையைப் போக்கியது பற்றித் தோழி சிறைப்புறமாக இருந்த தலைவனுக்கு உணர்த்தும் போது ‘ஐயன்’ முருகன் ஆகிறான். ஏழாம் நூற்றாண்டளவில் துறவிகளைக் குறிப்பதற்கு ஐயர் என்ற பெயர்ச்சொல் வழங்கியது. முருகப்பெருமானின் பன்னிரு கைகளில் ஒன்று;

    “விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது”  ( அடி- 107- திரு.).

    திருமுருகாற்றுப்படை ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது; அதனால் தான் அதைப் பாடியவர் நக்கீர தேவ நாயனார் என்று அழைக்கப்படுகிறார். இங்கு முருகனின் ஒரு கை துறவிகளுக்கு அருள் பாலித்தது என்றே பொருள் கிடைக்கிறது. தீமுறை வழிபாடு செய்யும் இருடிகளை;

    “ஐயர் அவிர் அழல் எடுப்பரோ”  (கலி.- 130)

    என்று பாடியிருப்பதால் ‘ஐயர்’ வேதியரைக் குறிக்கத் தொடங்கியமையும் காண இயல்கிறது. வையை வெள்ளத்தில் நறவு கலந்ததால்;

    “ஐயர் வாய் பூசுறார் ஆறு” (பரி.- 24)

    என அந்நீரை வைத்து வாயைத் தூய்மைப்படுத்த இயலாத பார்ப்பனர் பற்றிப் பேசுவதையும் காண்கிறோம். கலித்தொகையும்  பரிபாடலும்  பிற தொகை நூல்களைக் காட்டிலும்  காலத்தால் பிற்பட்டவை  என்பதற்கு இந்தப் பொருள் மாற்றம் தக்க சான்றாகிறது.

    தலைவன் கூற்றில் ஐயர்

    கடக்கவியலாக் காமநோயால் தலைவியை மீண்டும் ஒருமுறை துய்க்க விரும்பும் தலைவனிடம் பாங்கன்; அதனால் ஏற்படும் இன்னல் என்ன என்பதைக் கூறி மட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறான். தலைவனுக்கும் அவளது ஐயர் பற்றி நன்கு தெரியும். அவர்கள் வில்லேந்திச் சீழ்க்கை ஒலியுடன் வேட்டையாடும் போது; தன் இனத்தைப் பிரிந்த பெண்மானுக்கு எதிரிலேயே அதன் இணையாகிய கலைமானை அம்பால் வீழ்த்துவர். அத்தகைய ஈரமில்லாத வாழ்க்கை முறையுடைய வேட்டுவர் இனத்தைச் சேர்ந்தவள் தலைவி. ஆனாலும் அவளது கண்ணழகு அவளை மறக்கவொட்டாமல் தடுக்கிறது. அந்தக் கண்களின் செவ்வரிகள்; அவளது ஐயர் தாம் கொன்ற கலைமானின் உடலினின்று  அம்பைப் பிடுங்கி எடுக்கும்போது; அதில் படர்ந்திருக்கும் குருதிச் சிவப்பினை ஒத்தவை; தலைவனின் மனக்கண்ணை விட்டு அகலாதவை.

    “புன்கண் மடமான் நேர்படத் தன் ஐயர்
    சிலைமான் கடுவிசைக் கலைநிறத்து அழுத்தி” (குறு.- 272)

    என்று தோழனிடம் தன் காதலின் வேதனையைக் கூறும் தலைவன் ‘ஐயர்’ என்று சுட்டுவது தலைவியின் தமையன்மாரையும் கிளையையும் உளப்படுத்தும் கூட்டத்தை  ஆகும்.

    தலைவனின் கூற்றை ஆழ்ந்து நோக்கும் போது இன்றைய செய்தித் தாள்கள் சித்தரிக்கும் கௌரவக் கொலைகள் நம் மனக்கண்ணில் தோன்றித் திடுக்கிட வைப்பதைத் தவிர்க்க முடியவில்லை. இனத்தைப் பிரிந்த பெண்மானுக்கு எதிரிலேயே ஆண்மானைக் கொல்வது; தலைவி தன் சுற்றத்தை விட்டுத் தலைவனுடன் சென்றால்; அவனும் அந்த ஆண்மானைப் போல் அவர்களது அம்புக்கு இரையாக வேண்டியிருக்கும் என்ற மறைபொருளைச் சொல்லாமல் சொல்கிறது. அதுமட்டுமன்று; பாய்ந்த அம்பைப் பிடுங்கும் கொடுமையில்; தலைவியின் கண் முன்னர் தலைவன் சித்ரவதைப்பட்டு உயிரை விட வேண்டிய சூழலும் ஏற்படும் என்ற உறுதியான எதிர்பார்ப்பை உள்ளுறையாகக்  கொண்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டு காலமாகத் தமிழ்ச் சமூகத்தில் நடக்கும் காதல் திருமணம் தொடர்பான நடப்புகள் சற்றும் மாறுபடவில்லை என்ற உண்மை இப்பாடலில் பொதிந்துள்ளது. ஆயிரமாயிரம் ஆண்டுகள்  ஆனாலும் பண்பாட்டு வரையறைகளும் வாழ்க்கை முறையும் எளிதில் மாறுவதில்லை. அவ்வளவு சீக்கிரம்  மாறுபாட்டுக்கு  மனிதமனம் ஒப்புவதும்  இல்லை.

    தலைவி கூற்றில் ஐயர்

    குறமகள் மலைப்புறத்தில் விதைத்த தினை முற்றியமை பற்றிப் பேசும் போது;

    “இருங்கல் அடுக்கத்து என் ஐயர் உழுத” (அகம்.- 302)

    என்று உழவுத்தொழிலை இணைந்து செய்யும் உறவுக் கூட்டத்தைக் குறிப்பிடுகிறாள்.

    தோழி கூற்றில் ஐயர்

    மணவாழ்வில் கணவனின் புறத்தொழுக்கத்தால் நொந்து மன அழுத்தத்திற்கு ஆளான பரதவப்பெண் தன் மனஇறுக்கம் தளரத் திருமணத்திற்கு முன்னர் தான் வைத்து விளையாடிய பாவையை எடுத்துக் கொண்டு  தோழியைக் கழிக்கரைச் சோலைக்கு அழைக்கிறாள். அவளது ஐயரோ மீன் வேட்டையும் சுறாக்களைக் கொல்லுதலும் தவிர வேறேதும் அறியாத சினமிகுந்தவர் ஆவர்.

    “கல்லாக் கதவர் தம் ஐயர் ஆகவும்” (நற்.- 127)

    எனத்; தலைவியின் தமையன்மார்க்கு விபரம் தெரிந்தால் நேரவிருக்கும் முட்டல் மோதல் இங்கு பட்டும்படாமல் எடுத்துரைக்கப்படுகிறது. தலைவன் தவறே செய்யாதவன் போல வாயில் வேண்டி நிற்கிறான். தோழி கழியில் ஆர்ந்த நாரை இறகை உலர்த்தும் போது; சிதறித் தெறிக்கும் நீர்த்துளி நடுக்கத்தை ஏற்படுத்தும் நெய்தல் பின்புலத்தைச் சொல்லி; அவனது பொய்யால் மனம் நடுக்குறுவதை உள்ளுறைத்து உரைக்கிறாள். ஐயர் சினம் பற்றிய பேச்சு தலைவனை மெல்ல மிரட்டும் தொனியில் அமைந்துள்ளமை இப்பாடலின் சிறப்பம்சமாக உள்ளது.

    கொழுநன் தொழலும் ஐயர் வளமும்

    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தலைவி தலைவனுக்குக் கற்புக்கடம் பூண்ட வரலாறு தோழிக்குத் தெரியும். சிறுகுடி மக்கள் அலருக்குக் காரணம் உள்ளது. அதைத் தலைவியின் ஐயர்க்குப் பூடகமாகச் சொல்ல முனையும் தோழி அறத்தொடு நிற்கிறாள்.

    “தாம் பிழையார் கேள்வர் தொழுது எழால் தம் ஐயரும்
    தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்”   (கலி.- 39)

    என்று சாமர்த்தியமாகக் காய் நகர்த்துகிறாள்.  குறமகளிர் தம் தலைவரைத் தப்பாமல் தொழுது வணங்க; அவரது அண்ணன்மார் குறி வைத்து எய்யும் அம்பு தப்பாது என்கிறாள். அவளது நோக்கம்; தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்பதே. தலைவியைப் பெண்கேட்டு வருகிறான் கானகல் நாடன் மகனாகிய தலைவன். தான் காப்பாற்றிய குறமகளுடன் இயற்கைப் புணர்ச்சி நடந்தேற; அறிவன், பெற்றோர், சுற்றம், ஊர்ப்பெரியோர் அனைவரையும் அழைத்துக் கொண்டு வரும் அவனிடம் மறுக்காமல் மகட்கொடை நேர வேண்டும் தலைவியின் ஐயர்.  அதைச் சாதிக்க; ஒரு சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கும் உத்தியாகத்; தலைவி அவனைக் கணவனாக வாய்க்கப் பெற்றுத் தொழுதால் சிறுகுடியில் மழை பொழிய வைக்கும் திறனுடையவள் ஆவாள் என்கிறாள் தோழி.  இக் கூற்றும் கொள்கையும் தோழியின்  சொல்வன்மை என்று விளக்கப்பட்டது அந்தக் காலம். இதைப் பெண்மொழி என்று பெயர் சூட்டி ஆராய்வது இந்தக் காலம்.

    “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது  எழுவாள்
    பெய் எனப் பெய்யும் மழை”

    என்று திருவள்ளுவர் பாடிய பொருளின் வேர் தொகை இலக்கியத்தில் தான் இருக்கிறது. அதுவும் ஆணாதிக்கவாதிகளின் கொள்கையாக இல்லை. பெண்மை தன் காரியத்தைச் சாதிக்கக் கையாண்ட உத்தியாகக் காணப்படுகிறது. எந்த அளவுக்குப் பெண்கள் இந்த உத்தியைப் பயன்படுத்தி உள்ளனர் என்பது; திருவள்ளுவர் போன்றோர் அதை நம்பிக்கையோடு பாடியுள்ளனர் என்பதிலிருந்து தெரிகிறது.

    முடிவுரை

    ஐயர் எனும் சொல் செவ்விலக்கியக் காலத்தில் அண்ணன்களுக்கு உரிய உறவுமுறைப் பெயராக இருந்து; பின்னர் அண்ணன்மாரோடு கிளையையும் சேர்த்துச் சுட்டுவதாக விரிந்து; தொடர்ந்து தலைமைத்தன்மை உடையோர்க்குப் பொருந்துவதாகித் தந்தையைக் குறிக்கவும் எடுத்தாளப்பட்டுள்ளது. முருகனையும், துறவிகளையும், வேதியரையும் ஐயர் என்று அழைப்பதைத் திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, பரிபாடல் ஆகிய நூல்களில் காண இயல்வதால் அவை காலத்தால் பிற்பட்டவை என்று துணியலாம்.  ஆண் முதன்மைச் சமுதாயத்தில் கிளை என்பது தந்தையுடன் சொத்தைப் பங்கீடு செய்யும் உரிமையுள்ள பங்காளிகளை மட்டுமே குறிக்கும் உறவுமுறையாக இருக்க; ஐயர் தலைவியின் உடன்பிறந்த சகோதரர்களையும் சேர்த்துச் சுட்டப் பயன்படும் பெயராக உள்ளது. தலைவி, தோழி, மூவரின் பேச்சிலும் ஐயரைப் பற்றிய குறிப்புகள்  உள்ளன.  ‘தலைவி தலைவனைத் தொழுதால் தான் அவளது ஐயர் எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றி பெறுவர்’ என்பது போன்ற சாதுர்யமான பேச்சு செவ்விலக்கியக் காலத்தில்  பெண்களாலேயே தம் வசதிக்காக உருவாக்கப்பட்டது என்பதற்குத் தொகை இலக்கியம் சான்றாகிறது.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 23

    கதை வடிவில் பழமொழி நானூறு – 23

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 47

    பெரியநட் டார்க்கும் பகைவர்க்கும் சென்று
    திரிவின்றித் தீர்ந்தார்போல் சொல்லி அவருள்
    ஒருவரோ டொன்றி ஒருப்படா தாரே
    ‘இருதலைக் கொள்ளியென் பார்’.

    பழமொழி – இருதலைக் கொள்ளியென் பார்

    இன்னிக்கு இண்டர்வியூவுக்கு வந்த வந்தவங்கள்ல எனக்கு ரேஷம் குமார ரொம்பப் பிடிச்சிருந்தது.  நீங்க என்ன சொல்றீங்க என்னிடம் கேட்கிறார் மும்பையிலிருந்து வந்திருக்கும் என் மேலதிகாரி.

    தனியார் விமான நிறுவனத்தில் மானேஜர் பதவியில் இருக்கும் நான்யோசிக்கத் தொடங்கினேன். அன்றைக்கு வந்த ஐந்து பேரும் எப்படி கேள்விகளுக்குப் பதில் அளித்தார்கள் என்று. படிப்புத் தகுதியை வைத்துப் பார்த்தால் அனைவருக்கும் சமமே. அனுபவத்தை வைத்துதான் மதிப்பிட வேண்டும். முதலாமவர் பன்னாட்டு விமானசேவையில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். அதுவும் தில்லி விமான நிலையத்தில்.  அடுத்த இரண்டுபேருக்கும் எந்த அனுபவமும் இல்லை. நான்காமவர் டிராவல்சில் விமான டிக்கெட் கொடுக்கும் பணியில் இருந்தவர். ஐந்தாமவர்தான் ரேஷம்குமார் உள்நாட்டு விமானசேவையில் அனுபவம் உள்ளவர். அவருக்கு எல்லாவித தகுதியும் பயிற்சியும் அனுபவமும் இருப்பதாகத் தோன்றினாலும் ஏதோ ஒன்று மனதை உறுத்தியது.

    வந்திருக்கும் அதிகாரியோ முதலாமவரையும் ஐந்தாமவரையும் பரிந்துரைக்கிறேன். இருவரில் உங்களுக்கு ஏற்ற ஒருவரை நீங்களே தேர்வு செய்துகொள்ளுங்கள் என்றுவிட்டார்.

    எங்களது விமான நிறுவனம் இப்போது தான் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. திருச்சியிலிருந்து மும்பைக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான குறைந்த பட்ச ஆட்கள் எடுக்கும் நிகழ்வுதான் தற்போது நடைபெறுகிறது. இப்போதைக்கு என்னைத் தவிர ஒருவரை மட்டும் நியமிக்க வேண்டும். அதற்குத்தான் இத்தனை யோசனை.  அவர்கள் இருவரையும் இரண்டாம் முறை அழைத்து நேர்முகத்தேர்வு நடத்த முடிவு எடுத்தேன்.

    இம்முறை கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லும் விதத்தைக் கவனிக்க வேண்டும். தீர்மானத்துடன் அமர்ந்தேன்.  பன்னாட்டு விமான சேவையில் அனுபவம் மிக்க விஷால் தன் அனுபவங்களைச் சுருக்கமாகப் பகிரத் தொடங்கினார். முதல் நேர்முகத்தேர்வில் சொன்ன அதே தகவல்களைத் தான் மீண்டும் சொல்கிறார். கடைசியில் அவர் முடிக்கும்போது எந்தவித நெருக்கடியையும் என்னால் சமாளிக்க முடியும் என்றார். ஆனால் ரேஷம் குமாரோ சந்தர்ப்பவாதிபோல் பேசுவதாகப் படுகிறது. எங்களது  எதிரி விமான நிறுவனத்தில்தான் அவர் ஆறு வருடங்கள் வேலை பார்த்து இருக்கிறார். தொழில் முறையில் எதிரி என்றாலும் தேவையான பயிற்சியும், வேலையும் ஒரேமாதிரிதானே.  முந்தைய நிறுவனத்தை விட்டு ஏன் வந்தீர்கள் என்ற என் வினாவிற்கு விஷால் புதிய அனுபவத்தைத் தேடிஎன  சமயோசிதமாய் பதிலளித்தார். ஆனால் குமாரோ பழைய கம்பெனியில் பலவித தவறுகள் நடப்பதாகவும் அதில் கூட வேலை செய்பவர்கள் திறமையற்றவர்கள் எனவும் அதனால் தன்னால் முன்னேற முடியவில்லை என்றும் கூறுகிறார். இந்தப் பதில்தான் முன்பும் எனக்கு உறுத்தியது.

    தெளிவுபடுத்துவதற்காக எந்த மாதிரி தவறுகள் நடந்தன எனக் கேட்கிறேன். பயணிகளுக்கு போர்டிங் பாஸ் குடுப்பதற்காக ஒவ்வொரு கார்டிலும் இருக்கையின் எண் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டுவது வழக்கம். இது தினமும் நடக்கும் வாடிக்கையான நிகழ்வுதான்.  விமானத்தின் இருக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப கார்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு தேதி பொறிக்கப்பட்ட சீல் குத்தப்பட்டு கவுண்டரில் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும். ஒருவேளை பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பின் விமானம் வெளிக்கிளம்பியவுடன் கவுண்டரில் மீதமிருக்கும் கார்டுகளைக் கிழித்து எறிந்து விட வேண்டும். அப்படிச்செய்யாது விட்டதால் அடுத்த நாள் புது கார்டுகளுடன் அவை கலந்து இருநபர்கள் ஒரே இருக்கை எண்ணைப் பெற நேரிட்ட சம்பவங்கள் நிறைய நிகழ்ந்துள்ளன. அத்தகைய நாளில் விமான இருக்கைகள் ஏதேனும் காலியாக இருந்தால் பயணியை அங்கு அமரச்செய்து தப்பித்துக் கொண்டிருக்கிறோம். இருக்கை காலியாக இல்லாத நாட்களில் நிறுவனத்திற்கு பெரும் நட்டமும் பிரச்சினைகளும் ஏற்பட்டதுண்டு.

    மேலும் விமானம் வந்திறங்கியவுடன் வெளியே செல்லும் பயணிகளின் கார்டுகளின் பின்புறம்  ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரின் எண்ணும் அவருடைய உடைமையில் போடப்பட்டிருக்கும் பட்டியின் எண்ணும் ஒத்து உள்ளதா எனச் சரியாகப் பரிசோதித்து அனுப்பாததால் பல நாட்கள் பயணிகள் அவசரத்தில் ஒரே நிறம் கொண்ட வேறு ஒருவரின் பையை எடுத்துச்சென்று விடுவர்.  இப்படி கவனக்குறைவினால் ஏற்படும் தவறுகள் அந்த நிறுவனத்தில் மிக அதிகம்.

    அவர் பேசப்பேச நான் யோசித்தேன். எங்களை மகிழ்விக்கும் விதத்தில் தொழில்எதிரியின் திறமைக்குறைவை இவர் சுட்டிக்காட்டுகிறார்.  ஒருவேளை எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தபின் மீண்டும் பழைய நிறுவனத்தில் பெறும் பதவி தறுவதாக ஆசை காட்டினால் அங்கு அமர்ந்துகொண்டு நம்மைப் பற்றிப் பேச இவர் தயங்கமாட்டார் என மனதில் தோன்றியது.

    ஏனோ மனதில் ‘இருதலைக் கொள்ளி என்பார்’ எனும் பழமொழி நினைவுக்குவருகிறது. பகையுள்ள இருவரிடத்தும் நண்பர் போல் பழகி ஒருவருடனும் மனம் ஒருமைப்பட்டு விளங்காதவர் மிகவும் கெட்டவர்கள் என தீர்மானத்துடன் எழுந்தேன் விஷாலை நியமிப்பது எனும் முடிவுடன்..

    பாடல் 48

    இஞ்சி அடைத்துவைத்(து) ஏமாந்(து) இருப்பினும்
    அஞ்சி அகப்படுவார் ஆற்றாதார் – அஞ்சி
    இருள்புக் கிருப்பினும் மெய்யே வெரூஉம்புள்
    ‘இருளின் இருந்தும் வெளி’.

    பழமொழி – இருளின் இருந்தும் வெளி

    என்ன ஆகிவிட்டது பிரியான்ஷி ஆண்ட்டிக்கும் கரிமா ஆண்டிக்கும். ஒருத்தருக்கொருத்தர்  நாலு நாளா முறைச்சிட்டிருக்காங்க. என்னையப் பொறுத்தவரை ரெண்டுபேரும் நல்லவங்கதான். என்னை அவர்களின் பெண் மாதிரிதான் நடத்துவாங்க. தப்பு ஒண்ணுமில்ல. நேரம் பாத்து கேட்டுடணும்.

    டிசம்பர் மாதத்தில் குளிர்காய்வதற்காக வெயிலில் அமர்ந்த போது ரெண்டுபேரும்தான் வற்புறுத்தி எனக்கு ஸ்வெட்டர் பின்ன சொல்லிக்கொடுத்தாங்க. அப்போ எவ்ளொ நல்லா இருந்துச்சு. காலை பதினொரு மணிக்கே வேலையெல்லாம் முடிச்சிட்டு சொசைட்டி பார்க் புல்வெளியில உட்கார்ந்து கரிமா ஆண்டி கொண்டு வரும் வேர்க்கடலையத் தொலி உரிச்சு சாப்பிட்டுக்கிட்டே ஸ்வெட்டர் பின்னுவோம். சிலநாள் பச்சைப் பட்டாணி கொண்டு வந்து உரிச்சு எடுத்துட்டுப் போவாங்க.சில நாள் வெந்தயக் கீரை இலைகளைப் பிரிக்கும் பணி. இப்டி தினமும் பீகாரைச் சேர்ந்த கரிமா ஆண்டியும் ராஜஸ்தானைச் சேர்ந்த பிரியான்ஷி ஆண்டியும் இவ்ளோ வருசம் ஒற்றுமையாத்தான் இருந்தாங்க. இப்போ சமீபத்துல மே மாசத்திலேந்துனு நினைக்கறேன் என்ன ஆச்சோ. எதப் பேசினாலும் ரெண்டுபேரும் எதிரும்புதிரும் தான்,

    என்னவா இருக்கும் யோசித்துக்கொண்டே டில்லியில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நான் கீழே உலாத்திக்கொண்டு இருக்கிறேன். எதிரில் என் வயதொத்த மராட்டியப் பெண் நித்திகா வருகிறாள்.

    பரஸ்பர நலம் விசாரிப்புக்குப் பின் அவளே ஆரம்பித்தாள் நக்கலாக . ஆமாம் உன் ரெண்டு வளர்ப்புத்தாய்களுக்கும் இடையில பிரச்சினை போல. சொசையிட்டியே பேசிக்குது. போனவாரம் எ பிளாக்ல நடந்த சத்திய நாராயண பூசையிலும் ரெண்டு பேரும் தனித்தனியே உக்காந்திருந்தாங்களாம்.

    இருக்கலாம் நான் போகல. இது என் பதில்.

    இன்னிக்கு சாயங்காலம் என் வீட்ல சுந்தரகாண்ட் வச்சிருக்கேன். என் பையன் பிறந்த நாளுக்காக. அவசியம் நீ கலந்துக்கோ. அதச் சொல்லத்தான் வந்தேன். அவங்க ரெண்டுபேரையும் சேத்து கூட்டிட்டு வா. உன்னால மட்டுந்தான் முடியும். அவங்களுக்கு நான் தனித்தனியா போன்ல சொல்லிட்டேன். மறந்துராத மூணு பேரும் சேந்து வரணும். அவங்க ரெண்டு பேரும் சேந்துதான் ஆரத்தி பாட்டு பாடணும். உன் பொறுப்பு புரிஞ்சுதா. அவள் போய்விட்டாள்.

    நல்ல சந்தர்ப்பம் என நினைத்து கீழ்த்தளத்தில் இருக்கும் கரீமா ஆண்டி வீட்டுக்குப் போனேன். முன்ன மாதிரியில்ல அவங்க முகம். ஏதோ குழப்ப ரேகை. ஆமா சுசீலா நீ போட்டிருக்கிற சிவப்பு வளையல் ராஜஸ்தானி குடுத்ததுதானே.

    என்ன ஆச்சரியம். கரிமா ஆண்ட்டிக்கு.  பெயரைச் சொல்லாமல் ராஜஸ்தானி என்கிறாள். அந்த வளையல்களை என் கையிலிருந்து கழற்றி வெளியிலிருந்த வாழை மரத்தடியில் வைத்து விட்டாள். அப்பறம்தான் அவளுக்கு நிம்மதி.

    இந்த பாரு சுசீலா உங்க தமிழ்நாட்ல எப்படியோ தெரியாது ராஜஸ்தான்காரங்க ரொம்ப வசியம் பண்ணுவாங்க. அவங்க குடுக்கற குங்குமம், வளையல் எதையும் இனிமே வாங்காத புரிஞ்சுதா. வீட்ல ஏதும் வாங்கி வச்சிருந்தன்னா வாழ மரத்தடியில வச்சிடு. தானம் குடுக்கறேன்னு அவங்க பாவத்தயெல்லாம் மத்தவங்கமேல ஏத்தி உட்டுருவாங்களாம்.

    நான் ஏன் பிரியான்ஷிகிட்ட பேசலைனு உனக்குத் தெரியாது. இப்போ சீதளா மாதாக்கு பண்டிகை வந்திச்சுல்ல அப்போ அந்த அம்மனுக்கு சாதம் படைச்சு அத அக்கம்பக்கத்து கன்னிப்பெண்களுக்கு சாப்பிடக்குடுத்தாங்க. இது எல்லா வருசமும் அந்த அம்மா செய்யறதுதான்.. ஆனா இந்த வருசம்தான் எனக்கு இந்த உண்ம தெரிஞ்சது. அவங்கவீட்டு வாசல் சுவத்துல குங்குமத்தால ஸ்வஸ்திக் வரைஞ்சு வச்சி பிரசாதத்த மத்த பிள்ளைகளுக்குக் கொடுத்துட்டா அவங்க வீட்ல யாருக்கும் அம்மை நோய் வராதாம். அத அந்த அம்மாவே பேச்சு வாக்ல சொல்லிச்சு. அப்பறம் தான் நான் நம்ம டாலி கிட்ட விசாரிச்சேன். அவதான் ராஜஸ்தான் மக்களப் பத்தி நிறையகதை சொன்னா.

    இவ்ளோ நாள் நான் அந்த அம்மாவ நம்பி நிறைய வாங்கி சாப்பிட்டிருக்கேன். எனக்கு என்னவெல்லாம் வசியம் வச்சுச்சோ.  இப்பயெல்லாம் என்னால பத்து சப்பாத்தி தொடர்ந்து இட முடியல தெரியுமா. மாவு பிசிஞ்சா விரல் எல்லாம் மடங்கி நிக்குது. முன்ன மாதிரி சக்தியேயில்ல.

    ஓ இவ்வளவுதானா. டாலி ஊர்வம்புக்காரினு கேள்விப்பட்டிருக்கேன். இவங்கசண்டையில அந்தஅம்மா டைம்பாஸ் பண்ணுது போல.

    நான் ஆரம்பித்தேன். ஆண்ட்டி எங்க ஊர்ல இருளின் இருந்தும் வெளி னு ஒரு பழமொழி சொல்லுவாங்க.  பயம் உள்ளவங்க நெசமான ராத்திரி நேரத்து இருட்டுல கோட்டைக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டு இருந்தாலும் பாதுகாப்பா இருக்கோம்னு நம்பாம எதிரி நம்மள அழிச்சிருவானோனு பயப்படுவாங்களாம்.

    உங்களுக்குதான் டாலி ஆண்ட்டி பத்தி தெரியுமில்ல. அப்பறம் எதுக்கு அவங்க பேச்ச நம்பறீங்க. இப்ப நீங்க ராஜஸ்தானப் பத்தி சொன்னதெல்லாம் அவங்களோட நம்பிக்கை.  அதுமாதிரி வேற யாரோ உங்க பீஹார்காரங்களப் பத்தியோ அல்லது எங்க தமிழ் நாட்டுக்காரங்களப் பத்தியோ தப்பா சொல்லிக்கிட்டு அலையலாம். அதுக்கெல்லாம் பயந்தா எப்படி. ஒவ்வொரு இடத்திலயும் ஒவ்வொரு வழிபாடு. அதுமாதிரி அவங்களுக்கு சீதளாதேவி வழிபாடு. உங்களுக்கு வயசானதால ரொட்டிமாவு பிசிய முடியல கை வலிக்குது.  எல்லாத்தையும் ஒண்ணா யோசிச்சு குழப்பிக்கிறீங்க. இன்னிக்கு சாயங்காலம் நித்திகா வீட்டு கீர்த்தன்ல ரெண்டுபேரும் ஒண்ணா உக்காந்து ஜய் ஜகதீசஹரே னு ஆரத்தி பாட்டு பாடுங்க. நான் டோலக் அடிக்கறேன். எல்லாம் சரியாயிடும். சொல்லிவிட்டு நடந்தேன்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 99 (பேறெனக்கு)

    சேக்கிழார் பாடல் நயம் – 99 (பேறெனக்கு)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல் :

    ‘’பேறெனக்கு  இதன்மே  லுண்டோ? பிரானருள்   செய்த இந்த
    மாறில்ஆ   கமத்தை   வாசித்  தருள்செய   வேண்டும் ‘’  என்ன
    ‘’நாறுபூங்   கோதை   மாது   தவிரவே   நானும்  நீயும் 
    வேறிடத்து   இருக்க  வேண்டும் ‘’  என்றவன்  விளம்ப   வேந்தன் ,

    பொருள் :

    “எனக்கு இதனின் மேலாம் பேறு வேறுண்டோ? இறைவன் அருளிச்செய்த இந்த மாறில்லாத ஆகமத்தை வாசித்து அருளிச் செய்யவேண்டும்“ என்று அரசர் சொல்ல,“வாசனையுடைய பூமாலை யணிந்த தேவியாரும் இவ்விடத்தி  னின்றும்  நீங்கவே, நானும் நீயும் தனியாகிய இடத்தில் இருத்தல்வேண்டும்“ என்று அவன் சொல்ல, அரசர்,

    விளக்கம் :

    ‘’பேறு எனக்கு இதன்மேல் உண்டோ? ‘’  என்றதொடர், ஆகம ஞான உபதேசத்தின் மிக்க பேறு இல்லை, எல்லா நலன்களிலும் மிக்கதாகிய வீடுபேற்றைத் தருதலான் எனப்  பொருள்தரும். இங்கு இவன் செய்யும் செயல் பாதகமேயாயினும், அது நாயனார் கொண்ட அன்பின் திறத்தாலே அப்பயனையே விளைத்து,

    “அருட்கழல்  ந ழல்சேரக் கொண்டவாறு   இடையறாமற் கும்பிடுங் கொள்கை“

    யையே பயந்ததும் காண்க.

    ‘’மாறில் ஆகமம்’’  என்ற  தொடர்,   எதிரும் இணையும் இல்லாத ஆகமம் என்ற  பொருளைக்காட்டும்  தமக்குள் ஒன்றற் கொன்று  மாறுபடாத வேதங்கள் தாமும் இறைவனருளியனவே, ஆயினும் அவை உயிர்களின் பக்குவபேத நோக்கிப் பல தெய்வங்களையும் பேசும். அவை வெளித்தோற்றத்தில் மாறுபடுபவனவாகக் காணப்படினும் ஞானாசாரியார்களால் ஒப்புக் காணத்தக்கன. ஆயின் ஆகமங்களோ அவ்வாறன்றி எவ்வாற்றானும் தமக்குள் மாறுபடாதனவும், முழுமையும் உண்மையேயாகி உண்மை  நிலையிற்  சிறிதும் மாறுபடாதனவுமாம்.

    இதனைக் கம்பர்  தம்  இராமாயணத்தில்

    கல்லிடைப்  பிறந்து   போந்து   கடலிடைக்   கலந்த   நீத்தம்
    எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்ன
    தொல்லையில் ஒன்றே ஆகி துறை-தொறும் பரந்த சூழ்ச்சி
    பல் பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே

    நன்கு விளக்குகிறார்.

    “வாசித்து அருள் செயவேண்டும்”  என்ற தொடர்,  முன்னர் அவன் இயம்பக் கொடுவந்தேன் என்றமையால் அவ்வாறே வாசித்துப் பொருள் கூறி உபதேசித்தருள்புரிக என்றார்.

    ‘’நாறுபூங் கோதை மாது தவிரவே‘’ என்றதொடர் மாது இங்கு நின்று நீங்கவே. என்றும் பொருள்தந்தது!  மேலும் ‘‘இம்மாது இனி நாறு பூங்கோதை அணித்தலைத் தவிர்க்கவே’’  என்ற  அபசகுனப் பொருளையும்  தந்தது!

    ‘’நானும்நீயும் வேறிடத்து இருக்கவேண்டும்’’ என்ற  தொடர்,  நான் தூயஉலகிலும் ,  நீ  தீயஉலகிலும்   வெவ்வேறு   உலகில்  இருக்க வேண்டும் என்ற பொருளைத் தந்தது.

    ‘’பேறெனக் கிதன்மே லுண்டோ’’ என்றதொடர்   இப்போது நீ எண்ணிய வஞ்சனையை முடித்துவிடப் போகின்றாயாதலின், இது வரை நாயன்மாரை வழிபட்டு வந்தபேறு எனக்கு இனிமேல் உளதாகுமோ? இல்லை!  எனவும்; நாறுபூங் கோதை மாது தவிர – மாது கோதை தவிர – அதாவது நாயனார் அருட்கழனீழல் சேரப்போகின்றமையால் இவ்வுலக நிலையிலே பூமாலை சூடும் தன்மை (சுமங்கலித்துவம்) தேவி தவிர்வாராக எனவும்; நானும் நீயும் வேறிடத்திருக்க வேண்டும் – இச்செயலின் பின், நான்(முத்தநாதன்) சிவனடியார்பால் அபசாரப்பட்ட பெரும் பாவத்திற்காக எரிவாய் நரகத்திற் புகவும், நீ இறைவ னருட்கழ னீழலாகிய பேரின்பத்திற் புகவும் ஆக, இங்கு ஓரிடத்திலிருந்த நாமிருவேமும் இனி வெவ்வேறான இடங்களில் இருக்க வேண்டும் எனவும், இப்பாட்டு முழுமையும் முற்குறிப்பு எனும் தொனிப்பொருள்  தருகிறது  உணரத்தக்கது. வேறிடம் – வெவ்வேறிடம்.

    Share
  • “சங்க காலத்தில் போரும் வாழ்வும்” – நூல் அறிமுகம்

    “சங்க காலத்தில் போரும் வாழ்வும்” – நூல் அறிமுகம்

    நூல் அறிமுகம்  –  “சங்க காலத்தில் போரும் வாழ்வும்”

    ஆசிரியர்-   முனைவர் ஜவஹர் பிரேமலதா (வல்லமைக் குழும உறுப்பினர்)
     நாள்-    29 & 30. 09. 2020

     பிற விவரங்களை அழைப்பிதழில் காண்க.
    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 11

    பரிமேலழகர் உரைத்திறன் – 11

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                                                         
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘சொல்லும் பொருளும், உணர்த்தும் பொருளும்’

    முன்னுரை

    எழுத்தால் அமைவது சொல். அது பொருளையுணர்த்துவதைத் தனது பணியாகக் கொள்ளும். பொருளுணர்த்துவதும் நேரடியாக உணர்த்துவது,  குறிப்பாக உணர்த்துவது என இருவகைப்படும். அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியில் சொற்கள் வேறுபட்ட நிலையில் பொருளுணர்த்தும் பாங்கினைத் தொல்காப்பியப் பொருளியல் ஆராய்கிறது. ‘பொருளியல்’ என்பதற்குச் சொற்பொருள் விளக்கம் தந்த ஆசிரியர் நச்சினார்க்கினியர், “இவ்வோத்துப் பொருளிலக்கணம் உணர்த்தினமையின் பொருளியலென்னும் பெயர்த்தாயிற்று. ஏனை ஓத்துக்களும் பொருளிலக்கணமன்றே உணர்த்தின. ‘இதற்கிது பெயராயவாறு என்னை?’யெனின், சொல்லதிகாரத்தில் கூறிய சொற்களை மரபியலின் இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத் திரிபில் சொல்லென்பராதலின் அவை ஈண்டு தம் பொருளை வேறுபட்டிசைப்பினும் பொருளாம் எனவும், இப்பொருளாதிகாரத்து முன்னர்க் கூறிய பொருள்களிற் பிறழ்ந்திசைப்பனவும் பொருளாமெனவும் அமைத்துச் சொல்லுணர்த்தும் பொருளும் தொடர்மொழி உணர்த்தும் பொருளும் ஒருங்கே கூறலின் பொருளியல் என்றார்.” என்னும் கருத்து இங்கே சிந்திக்கத்தக்கது. ‘வேறுபட்டிசைப்பினும் பொருளாம்” என்பதுபோலத் திருக்குறளில் சொற்கள் கருத்து விளக்கத்திற்காக வெளிப்படையாகப் பொருளுணர்த்துவதன்றிக் குறிப்பாகப் பொருளுணர்த்தும் பாங்கினைப் பரிமேலழகர் உரைவழி நின்று இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

    சொற்கள் பொருளுணர்த்தும் முறை

    எழுத்துக்களால் ஆகியிருந்தாலும் சொற்கள் பொருளுணர்த்துங்கால் பல நிலைகளைக் காண முடிகிறது. ‘ஆ’ என்பது எழுத்திலும் ஓரெழுத்து ஒரு மொழியிலும் ஆகாரமே. அது அகரத்தின் நீட்சியாகி நெடிலாக அமைந்தாலும் ‘ஆ’ என்பது பெயர்ப் பொருளைச் சுட்டியும் வியப்பிடைச் சொல்லாக உணர்த்தியும் பொருளுணர்த்தி நிற்பதை அறிய முடியும். எனவே எழுத்துக்கள் எழுத்துக்களாகவே இருக்கலாம். ஆனால் சொல் ஒரே முறையில் ஒரு பொருளைத்தான் உணர்த்த வேண்டும் என்பதில்லை.

    • ‘மாணடி சேர்ந்தார்’ (3) என்பது ஒரு திருக்குறள் தொடர். இதற்கு ‘இறைவனுடைய திருவடியைச் சேர்தல்’ என்று பொருள் கொண்டால் பாட்டின் மையக்கருத்துக்கு அது முரணாகும். பரிமேலழகர் தன் புலமையாற்றலால் ‘சேர்தல் – ‘இடைவிடாது நினைத்தல்’ என உரையெழுதுகிறார்.
    • ‘ஓஒ இனிதே’ (1176) என்று, தலைமகள் அழுகின்ற தன் கண்களைத் தனக்குக் காதல் நோயைக் கொடுத்த பாவத்திற்காக ‘நன்றாக அழு’ எனச் சபிப்பதாகத் திருவள்ளுவர் கற்பனை செய்கிறார். ஓகாரம் தம்முள் இணைந்து தேமாவாக நின்றாலும் பரிமேலழகர் ’ஓ’ என்பது மிகுதி பொருட்கண் வந்த குறிப்புச்சொல்’ என்னும் உரையெழுதி அதன் பொருளுணர்த்தும் ஆற்றலை வெளிப்படுத்துவதைக் காணலாம்

    ‘சொல்’ என்றால் நிகழ்த்துதல்

    ‘புதல்வரைப் பெறுதல்’ என்னும் அதிகாரத்தில் ஒரு குறட்பா. அவையத்து முந்தி இருப்பச் செய்கிறான் தந்தை. அத்தந்தைக்கு மகன் என்ன கைம்மாறு செய்ய வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் சுட்டுகிறார். அந்த மகனைப் பார்க்கிறவர்கள் ‘இவன் தந்தை இவனை மகனாகப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ?’ என்று சொல்ல வேண்டுமாம்!.

    “மகன்தந்தைக் காற்றும் உதவி ‘இவன்தந்தை
    என்னோற்றான் கொல்? எனும் சொல்” (70)

    கல்வியுடையன் ஆக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது, தன் அறிவும் ஒழுக்கமும் கண்டார், இவன் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தான்கொல்லோ? என்று சொல்லும் சொல்லை நிகழ்த்துதல். இதுதான் பாட்டின் பொருள். ஆனால் இந்தப் பொருளைத் தருகிற அளவில் பாட்டில் சொற்கள் அமைந்திருக்கிறதா என்றால் உறுதியாக இல்லை. ‘என்ன தவம் செய்தானோ என்ற சொல்” என்ற அளவிலேயே குறட்பா நிறைவுற்றிருப்பதைக் காணலாம்.

    பரிமேலழகர் உரைத்திறன்

    குறட்பாவில் ‘தந்தைக்கு’ என வாளா இருக்க, பரிமேலழகரோ ‘கல்வியுடையவனாக்கிய தந்தை’ என எழுதுகிறார். ‘கல்வியைத் தந்த’ என்று கூட அவர் எழுதவில்லை. காரணம் கல்வி பிறிதின் கிழமையாகிய பொருளன்று அன்று. உயிருக்கு உடம்புபோன்ற தற்கிழமை. அழியாத உடைமை. அதனால்தான் வெகு நுட்பமாகக் ‘கல்வியுடையவனாக்கிய’ என்று எழுதுகிறார். எழுதிச் ‘சொல்’ என்று வள்ளுவர் கூறுகிறாரே, சொல் தானாக வருமா? சொன்னால்தானே சொல்வரும்? சரி. தானாகச் சொல்வார்களா? அரசியல் வாதியா காசுகொடுத்துச் சொல்லச் சொல்லுதற்கு? சொல் காரியம். எது காரணம்? சொல் வருமாறு ஒழுகுதல் காரணம். காரணமின்றிக் காரியம் இல்லை. குறட்பாவில் காரியம் மட்டுமே உள்ளது. பரிமேலழகர் காரணத்தைக் கண்டறிந்து கூறுகிறார். எப்படி?

    ‘சொல்’ நிகழ்த்துதலாகிய தன் (சொல்லுக்கான) காரணம் தோன்ற நின்றது. நிகழ்த்துதல் – அங்ஙனம் தோன்ற ஒழுகல்”

    என்று எழுதிக் காட்டுகிறார். பொழிப்புரையில் ‘தன் அறிவும் ஒழுக்கமும் கண்டார்’ என விளக்கமாக எழுதித், தந்தையளித்த கல்வியின் பயன் அவ்விரண்டுமே என்பதனை நுட்பமாகக் காட்டுகிறார். இந்த விளக்கவுரையில் ‘சொல்’ என்பது சான்றோர் புகழும் சொல்லாக இருந்தாலும் அச்சொல்லுக்குப் பின்னாலே உள்ள மகனின் நடத்தையாகிய காரணத்தைத் தோற்றுவிக்கிறது என்பது பரிமேலழகர் கருத்து. எனவே ‘சொல்’ என்பது சான்றோர் சொல்வது. ஒழுகுதலாகிய காரணம் என்பது சொல் உணர்த்துவது!

    கொள்ளுவது நன்றா? கொடுப்பது தீதா?

    ‘ஏற்பது இகழ்ச்சி’ என்பது ஆத்திசூடி. ‘இலன் என்னும் எவ்வம்’ என்பது திருக்குறள். ஆனால் இவற்றுக்கு முரண்படுவதுபோல் திருக்குறள் ஒன்று அமைந்திருக்கிறது.

    “நல்லாறு எனினும் கொளல் தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று”  (222)

    என்னும் குறட்பா “ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது ஈந்தார்க்கு அவ்வுலகம் இல்லையென்பார் உளராயினும் ஈதலே நன்று” என்னும் பொருள்பட அமைந்திருக்கிறது. அதிகாரம் ‘ஈகை’ யாதலின் அதற்கு மறுதலையான இரத்தலாகிய கொளலைப் பொய்யாக உயர்த்திச் சொல்லவேண்டிய நிலை ஆசிரியருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பரிமேலழகர் புரிந்து கொள்கிறார். கொண்டு, ஏற்பது வீட்டு நெறிக்கு வழிகாட்டும் என்பாரும் இலர். ஈதல் வீடுபேற்றிற்குத் தடையாகும் என்பாரும் இலர் என்னும் தெளிவை முன்னிறுத்த விழைகிறார். ஆனால் குறட்பா அமைப்பு அவ்வாறு பொருள் கொள்ளுமாறு இல்லையே என எண்ணுகிறார். எண்ணி, ‘எனினும்’ என இருவழியும் வந்த சொல்லை உற்று நோக்கி அந்த உம்மையை எதிர்மறையாக்கி விளக்கமளிக்கிறார். எப்படி? இப்படி!

    “எனினும் என்பது இருவழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது”

    இந்த விளக்கத்தில் ‘எனினும்’ என்னும் சொல் ‘இல்லையென்று சொன்னாலும்’ என்னும் சொற்பொருளைக் கொண்டிருந்தாலும் ‘இன்மை’ என்னும் பொருளையே உணர்த்துகிறது என்பதைப் பரிமேலழகர் உரையால் புரிந்து கொள்ள இயலும்.

    ‘சினம்’ என்னும் நெருப்பு

    ‘ஆறுவது சினம்’ என்பது முதுமொழி!. ‘கோபத்தை அடக்கா வேந்தன்’ என்பது விவேக சிந்தாமணி! இத்தகைய மொழிகள் சினம் மனிதன் கைக்கொள்ள வேண்டாத பொருள் என்பதை உணர்த்துகின்றன. திருவள்ளுவர் வெகுள்தல் என்னும் இந்தப் பண்பை எதிர்மறையால் ‘வெகுளாமை’ என அதிகாரப் பகுப்புச் செய்வார். இந்த எதிர்மறையே அப்பண்பு கூடாத பண்பு என்பதைக் குறிப்பாய்ப் புலப்படுத்தும். இந்த அதிகாரத்தில் உள்ளதொரு குறட்பா,

    “சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
    ஏமப் புணையைச் சுடும்” (306)

    என்னுமாறு அமைந்திருக்கிறது. இந்தக் குறட்பாவிற்குச் சினம் என்னும் நெருப்பு தனக்கு இடமானவரையேயன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புணையைச் சுடும்’ எனப் பொழிப்புரை கண்ட பரிமேலழகர்,

    ‘சினமென்னும் நெருப்பு’ என்ற விதப்பு, ‘உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே! இந்நெருப்பு தான் சேராத இடத்தையும் சுடும் என்னும் வேற்றுமை தோன்ற நின்றது”

    என்று விளக்கவுரையில் எழுதுகிறார். இயல்பான நெருப்புக்கும் சினமாகிய நெருப்புக்கும் என்ன வேறுபாடு என்றால் பற்றுகிற இடத்தினை மட்டும் எரிப்பது இயல்பான நெருப்பு! தன்னைக் கொண்டவனை மட்டுமன்றி அவனுக்கு நல்வழி காட்டுகின்ற இனமாகிய நண்பர்களையும் எரித்தழிப்பது சினம் என்னும் நெருப்பு.  ‘சினநெருப்பு’ என்னாமல் ‘சினம் என்னும் நெருப்பு’ என்னும் விரியுருவகத்தால் (முகத்தாமரை – உருவகம். ‘முகம் என்னும் தாமரை’ – விரியுருவகம்) கூறியது விதப்பு. இந்த விதப்பினைப் பயன்படுத்திப் பரிமேலழகர் தனது உரையாற்றலைக் காட்டுகிறார். சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்பது சொற்பொருள்  இயல்பான நெருப்புக்கும் சினமென்னும் நெருப்புக்கும் உள்ள வேறுபாட்டை உணரச்செய்வது சொல் உணர்த்தும் பொருள்!.

    அறிவுச் செல்வமும் அறியாமை வறட்சியும்

    செல்வம் பலவகைப்படினும் பெரும்பாலும் பொருட் செல்வத்தையே அது குறிப்பதாகக் கொள்வது ஒரு நடப்பியல் உண்மை. ‘அவன் செல்வன்’ என்றால் அவன் வாங்கிய பட்டங்கள் யாருடைய நினைவுக்கும் வராது. அதுபோல அவன் ‘வறியன்’ என்றால் அவனுடைய வயிறும் பசியுமே நினைவுக்கு வருமேயன்றி அவனுடைய அறியாமையோ அதனால் பெற்ற அவமானமோ நினைவுக்கு வராது. ஆனால் பரிமேலழகருக்கு வரும்!

    “இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
    சிலர் பலர் நோலாதவர்” (270)

    என்னும் குறட்பா ‘தவம்’ என்னும் அதிகாரத்து இறுதியாக அமைந்திருப்பது. இந்தக் குறட்பா இவ்வுலகில் செல்வம் உடையார் சிலராகவும் வறுமையால் துன்புறுவோர் பலராகவும் இருப்பதற்குக் காரணம் தவம் செய்வார் சிலராகவும் அது செய்யாதார் பலராகவும் இருப்பதே காரணம் என்ற கருத்தினை முன்னெடுக்கிறது.  இதனை,

    “உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், தவம் செய்வார் சிலராக அது செய்யார் பலராதல்”

    என்னும் பரிமேலழகர் பொழிப்புரையாலும் புரிந்து கொள்ள இயலும். ‘இலர்’ ‘உளர்’ என்பவற்றிற்கான செயப்படுபொருட்கள் குறட்பாவில் இல்லை. பரிமேலழகர் அவற்றைச் ‘செல்வம்’ எனக் கருத்தாகக் கொண்டு உரையெழுதுகிறார். அடுத்துச் ‘சிலர் நோற்பார்’ என்பதைக் கொண்டு அதற்கியைய (குறட்பாவில் குறிக்கப்படாத) செல்வர் சிலராகவும் என உரையெழுதுகிறார். தொடர்ந்து செல்வத்தை அறிவோடு பொருத்தி ‘நுண்ணுணர்வு உடைமையே செல்வம் நுண்ணுணர்வு இல்லாமை வறுமை’ என்னும் கூடுதல் விளக்கத்தையும் தருகிறார். இந்த விளக்கத்தில் அவர் வளத்தையும் வறுமையையும் பொருட்செல்வத்தோடு மட்டும் பொருத்திப் பார்க்காமல் அறிவின் உண்மை இன்மைகளோடு பொருத்திப் பார்க்கிறார். இவ்வாறு அவர் பார்ப்பதற்குத் துணை நின்றது அவருடைய பன்னூல் புலமை.

    “செல்வம் நல்குரவு என்பன அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன. என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்  (நாலடியார் 251)”

    பரிமேலழகர் உரையால் ‘வளப்பம்’ என்பது பொருளை மட்டும் குறிக்காது. அறிவுடைமையையும் குறிக்கும் ‘வறுமை’ என்பது பொருளில்லாமையை மட்டும் குறிக்காது. அறிவின்மையையும் குறிக்கும் என்பது புலனாகிறதல்லவா? செல்வம் பொருளைக் குறிப்பது சொற்பொருள். அது அறிவுடைமையும் குறிப்பது உணர்த்தும் பொருள். ‘வறுமை’ பொருளின்மையைக் குறிப்பது சொற்பொருள். அது அறிவின்மையைக் குறிப்பது உணர்த்தும் பொருள். இவ்விருவகைப் பொருளையும் கண்டறிந்து கூறும் பரிமேலழகரின் தொடர் “செல்வம் நல்குரவு என்பன அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன” என்பதாகும்!.

    உண்மை பிறத்தல்! இன்மை இறத்தல்!

    “நேற்றிருந்தவர்கள் இன்றில்லை” என்பது வழக்கு. இந்த வழக்கில் நிலைமையாகிய உணர்வு வெளிப்படுவது என்பது உண்மையே. ஆனால் என்றோ தோன்றியது நேற்றுவரை இருந்திருக்கிறதே என்ற உண்மையும் இருக்கிறது என்பதைப் பலரும் அறியார். நிலையாமை என்பது தோன்றிய கணமே மறைவது. அதாவது ‘தோன்றுதல் – மறைதல்’ என்பதே நிலையாமையேயன்றித் தோன்றுதல்; இருத்தல் – மறைதல் என்பது நிலையாமை ஆகாது. ‘கணந்தோறும் பிறந்திறப்பது’ என்பதும் அது. பிறந்த நொடியே இறப்பது. எனவே நேற்று (வரை) இருந்தவர்கள் இன்றில்லை என்பது நிலையாமையின் முழுப்பொருண்மையாகாது. அதனால்,

    “நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும்
    பெருமை யுடைத்திவ் வுலகு” (336)

    என்னும் குறட்பாவிற்கு உரையெழுதிய பரிமேலழகர் அவ்வழக்கினையும் உட்கொண்டு,

    “ஒருவன் நெருநல் உளனாயினான் அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து இவ்வுலகு”

    என்று பொழிப்புரை எழுதுகிறார். இதில் ‘நேற்று’ என்பதை வழக்கிலிருந்து எடுத்துக் கொள்கிறார். ‘இருந்தான்’ என்பதை மாற்றி ‘உளன் ஆயினான்’ அதாவது ‘தோன்றினான்’ என்னும் தன் கருத்தினை இணைத்துக் கொண்டு உரையெழுதுவதைக் காணலாம். உலகியல் வழக்கு ‘நேற்றுவரை இருந்தான்’ என இருக்க, பரிமேலழகர் ‘நேற்று தோன்றியவன்’ என விளக்கமளிக்கிறார் ‘உளன்’ என்பதற்கு ‘உண்மை’ (உளதாம் தன்மை) என்றும், ‘இலன்’ என்பதற்கு ‘இல்லை’ (இலதாம் தன்மை) என்றும் உரை காண்கிறார். கண்டு “உளன் ஆயினான் இலனாயினான்” என நூலாசிரியரின் நுண்ணியம் கண்டு உரையெழுதுகிறார்.

    “ஈண்டு உண்மை பிறத்தலையும் இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன”

    பரிமேலழகர் உரையால் நேற்று பிறந்தவன் (உளன் ஆயினான்) இன்று இல்லையாயினான் (இலனாயினான்) என்னும் நிலையாமையின் ஆழம் புரிகிறது. பாட்டில் இதற்கான சொல் இல்லையாயினும், ‘உளன்’ ‘இலன்’ என்னும் இரண்டு சொற்களோடு ஆக்கச் சொல்லை வருவித்துக் கொண்டு ‘பிறத்தல் மற்றும் இறத்தல்’ என உணர்த்துகிறார். உண்மை என்பது ‘உளது’ என்னும் பொருளைத் தருவது. அது சொற்பொருள். அது ‘பிறப்பு’ என்னும் பொருளைத் தருவது உணர்த்தும் பொருள். இன்மை என்பது ‘இலது’ என்னும் பொருளைத் தருவது. அது இறத்தல் என்னும் பொருளைத் தருவது உணர்த்தும் பொருள்!

    பிரிவதற்காகவே பிறந்த உறவு

    ‘சேர்ந்தே இருப்பது புலமையும் வறுமையும்’ என்னும் திரைப்பட உரையாடல் பலருக்கும் நினைவிருக்கலாம். சில அரசியல் கட்சியினர் கலைவதற்காகவே கூடுவதையும் அறிந்திருக்கலாம். ‘பிரிவதற்காகவே வந்த உறவு’ பற்றித் திருவள்ளுவர் சிந்தித்திருக்கிறார். உயிர்வழி நீங்கிய வழிக் கிடக்கும் உடம்பு பற்றிப் ( பரிமேலழகர் உரை – 340) பேசுகிறார். வழக்கில் பயன்படுத்தப்படும் பல தொடர்கள் எதிர்மறைப் பொருளைத் தருவதைப் பலரும் உணர்வதில்லை. சான்றாக அன்பால் பிணைந்தவர்களை வாழ்த்துங்கால் ‘உடம்பும் உயிரும் போல’, ‘மலரும் மணமும் போல’, ‘நகமும் சதையும் போல’ என்றெல்லாம் சொல்வார்கள்.  இவர்கள் உடம்போடு சேர்ந்து பிறக்கும் உயிர் இறுதிவரை உடம்பினைவிட்டுப் பிரியாது என்னும் மயக்கத்தில் கூறுவதை ஓர்ந்திலர். இந்த மயக்கம் குறள் கண்ட தலைமக்களுக்கும் இருந்திருக்கிறது.

    “உடம்பொடு உயிரிடை என்ன? மற்று அன்ன
    மடந்தையொடு எம்மிடை நட்பு” (1122)

    என்னும் தலைவன் மொழிகேட்டு நம்பிய தலைவியைத் திருக்குறள் காட்டுகிறது. உண்மையில் இது பொருந்துமா என்பதைக்,

    “குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
    உடம்போடு உயிரிடை நட்பு” (338)

    என்னும் குறட்பாவில் திருவள்ளுவர் ஆராய்கிறார். அக்குறட்பாவை ஆராய்ந்த பரிமேலழகர்,

    “முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்து புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு”

    என்னும் பொழிப்புரையைத் தருகிறார். இந்தப் பொழிப்புரையில் உடம்பை முட்டையாகவும் உயிரைப் பறவையாகவும் உருவகம் செய்த திருக்குறளின் திறனைப் பாராட்டுகிறார். ‘ஒரு குறிப்பிட்ட காலம் வரை முட்டையும் பறவையும் ஒன்றாக இருந்ததைச் சுட்டிப் புள்ளுப் பருவம் வந்துழித் தனித்தறியாத முட்டையைத் தனித்துவிட்டுப் புள் பறந்துவிடும் என்னும் நுண்ணியம் காட்டுகிறார். ‘உடம்போடு உயிர்’ என்பதைப் ‘பிரியாத நிலை’ என்று கருதுவார்க்கு (உவமம் கொண்டு) அதன் ‘பிரிநிலையை’ விளக்குகிறார் பரிமேலழகர். ‘நட்பு’ என உடம்புக்கும் உயிருக்குமான உறவைச் சுட்டும் திருவள்ளுவர் அதற்குக் காட்டிய உவமம் முட்டையும் புள்ளுமாகும் என்பதை நோக்கி உரையெழுதுகிறார். பிரிந்து போகக் கூடியதை உவமமாகக் காட்டியதால் ‘நட்பு’ என்பதும் பிரிந்து போகக் கூடியதே என்பதைக் குறிப்பாகக் காட்டியது என்று விளக்கமளிக்கிறார்.

    “‘நட்பு’ என்றது குறிப்பு மொழியால் ஈண்டு நட்பின்றிப் போதல் உணர்த்தி நின்றது”

    இங்கே குறிப்பு மொழி என்றால் என்ன? ‘நட்புத்தான்! அது எது போல என்றால் முட்டையும் புள்ளையும் போல’ என்றாம்!. “பழகுதற்கு இனியவர், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தணியாத நட்பை என்மீது காட்டியவர், கருத்து வேறுபாடுகள் நட்பு முரிவதற்கான காரணங்கள் ஆகா” என்னும் இன்றைய நடப்பியல் சமுதாயத்துப் பசப்பு மொழிகளையெல்லாம் இந்தப் பாட்டிற்குப் பரிமேலழகர் தரும் அரிய விளக்கவுரை தவிடுபொடியாக்கிவிடுகிறது. அவர் எழுதுகிறார்.

    “சேதனமாய் அருவாய் நித்தமாய உயிரும், அசேதனமாய் உருவாய் அநித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின், வினைவயத்தால் கூடியதல்லது நட்பில என்பது அறிக”

    எனச் செவியில் அறைவதைக் காணலாம். உயிருணர்ச்சியாகிய நட்பு உள்ளங்களின் இடப்பெயர்ச்சியால் தோன்றுவது என்பது இதனால் புலனாம். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் பிரியாதது போலவும் உண்மையில் பிரியக்கூடியதே என்பதையும் ‘நட்பு’ என்னும் சொல் சுட்டுகிறதாம். ‘நட்பு’ என்பது உணர்ச்சியால் பிரியாத உறவு என்பது சொற்பொருள். அது பிரியக்கூடிய உறவே என்பது சொல் உணர்த்தும் பொருள்!.

    நிறைவுரை

    மூலநூலாசிரியனின் உள்ளங் காண முயல்வதும் தாம் கண்டவற்றைச் சான்றுகளோடு முன்மொழிவதுமே உரையாசிரியர் கடன். அந்த வகையில் திருக்குறள் உரையாசிரியர்களில் முன்னிற்பவர் பரிமேலழகர். நூலைப்  பன்முறை நோக்கி ஆசிரியரின் உள்ளமறிந்து அதற்கேற்ப உரைகாண்பதற்குச் சொற்களையும் அவை பொருளுணர்த்தும் முறைகளையும் நன்கு உள்வாங்கி உரையெழுதுகிறார். சொல்லுக்குரிய நேரடிப் பொருளால் குறட்பொருள் சிறக்காது என்னும் நிலையில் அதனின்றும் விலகிச், சொல் உணர்த்தும் பொருளைக் கண்டறிந்து காட்டும் அவர் உரைத்திறன் புலப்படக் கூடும்.

    (தொடரும்…)

    Share
  • மரங்கள் உருவாக்கினது யார்? (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மரங்கள் உருவாக்கினது யார்? (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூலநூலாசிரியர்: சி. வி. பாலகிருஷ்ணன்
    மொழி :மலையாளம்
    தமிழில்: முனைவர் நா. தீபாசரவணன்
    உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணாமகளிர்கலைஅறிவியல்கல்லூரி, கோவை.

    என்னுடைய மகன் பச்சுவுக்கும், எங்களுடைய வயல்தோப்பில் உள்ள வீட்டிற்கு விருந்து வந்த குர்யாச்சனின் மகன் ரோபினுக்கும் இடையே ஒரு சின்ன விவாதம். மரங்களை உருவாக்கினது யார்? அதுதான் விவாதப் பொருள்.

    அவர்கள் கொஞ்ச நேரமாக மரங்களுக்கிடையில்தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நானும்  குர்யாச்சனும் ஆளில்லாத வயல் வெளியில் உள்ள கூரையின் கீழிருந்து சிறிது மது அருந்திக் கொண்டிருந்தோம்.

    குர்யாச்சன் பள்ளிக்கூடம் படிக்கும் போதிலிருந்தே எனது நண்பன். நாங்கள் இப்போது பல கடமைக் கதவுகளைக் கடந்து நடுத்தரவயதை அடைந்திருக்கிறோம். குர்யாச்சன் இரண்டு நாட்கள் நிம்மதியாக என்னுடன் செலவழிக்கலாம் என நினைத்துதான் சோஃபியாவையும் மக்களையும் அழைத்து வந்திருந்தார். வயல் வெளிக் கூரைக்கு அப்புறமுள்ள பலா மரத்தின் கீழ் அவர்கள் பயணித்து வந்த மாருதி சென் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் தள்ளி வெட்டவெளியில் கொஞ்சம் கூட அவமான எண்ணம் தோன்றாத என்னுடைய பழைய ஜீப். மாருதி ஸென்னை விட இந்த கிராமப்பகுதிக்கு நல்லது என்னுடைய ஜீப்தான். சந்தேகமே இல்லை. குர்யாச்சன் வந்த உடனே கூறிவிட்டார்.

    தாமதிக்காமல் நான் கொழுகொழுத்த ரெண்டு கோழிகளைப் பிடித்தேன். பத்மஜாவும், சோஃபியாவும் சேர்ந்து அதை சரிசெய்துகொண்டிருந்தனர். மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு ஸ்மால் குடித்துவிட்டு நானும் குர்யாச்சனும் வயற் கூரையில் அமர்ந்திருந்தோம்.  எங்களுக்கு அசைபோட நிறைய ஞாபகங்கள்.

    குர்யாச்சனின் மக்கள் ரோபினும், பெற்றியும் பிறந்ததும் வளர்வதும் எல்லாம் நகரத்தில் அவர்களுக்கு பச்சுவையும் குட்டனையும் விளையாடக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நான்கு பேரும் வயல்வரப்புகளில் உல்லாசமாய் காணப்பட்டனர்.

    “நாமும் ஒரு காலத்தில் அவங்கள போலவே சின்னப் புள்ளகளா இருந்தது தானே?”  குர்யாச்சன் நினைவுகளுடன் கூறினான்.

    “ஆமா பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு நான் அவனின் நினைவுகளைப் பகிர்ந்தேன்.

    “அன்று பறவகளைப்போல இருந்தோம் ஒரு வானம் முழுவதும் நமக்கு சொந்தம்”

    “வித்தியாசமானக் கனவுகள்”

    “ஓராண்டு சொன்னாலும் அவை தீராது”

    “மரணம்னா என்னன்னு அப்போ தெரியாது”

    ”மனசில ஒரு கெட்ட நெனப்பும் இருக்கல”

    “யோசிச்சுப்பாத்தா ஒரு சொர்கமே நஷ்டம். இல்லையா?”

    ”அதேதா……………”

    குர்யாச்சன் கவலை மறப்பதற்காகக் டம்ளரைக் கையில் எடுத்தான். நானும்.

    அப்போதுதான் பச்சுவும் ரோபினும் ஓடிவந்தனர். அவர்களுக்குப் பின்னால் பெற்றியும் குட்டனும் இருந்தனர்.

    “என்னடா? வெளையாடி போதும்னு ஆயிடுச்சா?”

    குர்யாச்சன் அன்போடு மகனிடம் கேட்டான். அவன் மூச்சு வாங்கிகொண்டு அவனுக்கருகில் நின்றான்.

    “டாடீ, மரங்கள உருவாக்கினது யார்? நம்மோட ஏசு இல்லையா? பச்சு என்னுடையத் தோளைப் பிடித்தான்.

    “நம்மளோட சிவன் தானே அப்பா மரங்களை உருவாக்கினது”

    ”இல்ல எங்களோட ஏசு தான்”

     ரோபின் பச்சுவின் நேராகத் திரும்பிக் கூறினான்.

    “இல்ல எங்களோட சிவன் தா” பச்சு வேகமாக எதிர்த்தான்.

    “மரங்களை யாரும் உருவாக்கல. அது தானாக மண்ணிலிருந்து முளைத்து வருது”. நானொரு நடுநிலமையானவன் என்ற முறையில் அப்படியொரு முடிவைக் கூறினேன். ஆனால் அதை குர்யாச்சனின் மகனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    “தானா முளச்சு வந்ததொண்ணுமில்ல. எங்களோட தேவன் உருவாக்கனதுதா……….”

    அவன் தன்னுடைய முடிவிற்கு அப்பாவின் துணை தேடினான். குர்யாச்சன் மிகவும் குழப்பத்திலாழ்ந்தார்.

    “இல்ல சிவன் உருவாக்கனது தான். இல்லையாப்பா பச்சு கேட்டான். நானும் கவலைக்குள்ளானேன். குர்யாச்சன் என்னைப் பார்த்தார். எனக்கொரு யுக்தித் தோன்றியது.

    “நிறைய மரங்களை தேவன் படைத்தார். பிறகு நிறைய மரங்களை சிவனும்” நான் கூறினேன்.

    “முதலில் யாரு?” என்னோட முடிவில் பதறிய ரோபின் ஆராய்ந்தான்.

    “சிவன். இதிலென்ன சந்தேகம்? ”பச்சு உடனே கூறினான்

    “இல்ல…………….. ஏசு தான்” ரோபின் கத்தினான்.

    “யாராவது இருக்கட்டும். மரங்களை உருவாச்சில்ல அது போதும்”

    குர்யாச்சன் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதம் கூறினார். மக்களுக்கு முழு திருப்தி ஆகவில்லை. இருந்தாலும் அவர்கள் எங்களை எங்கப் போக்கிற்கு விட்டுவிட்டு மறுபடியும் விளையாட செல்லத் தயாராயினர்.

    செல்லும் வழியில் இடதுபுறமுள்ள மூன்றாண்டுகள் வளர்ந்த மாமரத்தைச் சுட்டிக்காண்பித்து பச்சு கூறினான்.

    “அது சிவன்”

    மாருதி ஸென்னிற்கு மேல் நிழல் படர்த்தி நிற்கும் பலாமரத்திற்கு நேராக விரல் காண்பித்து ரோபின் கூறினான்.

    “அது ஏசு”

    பிறகு பெற்றியினுடையவும், குட்டனுடையவும் சுற்று. நான் நினைத்து நினைத்து சிரித்தேன். குர்யாச்சன் கையில் டம்ளருடன் கொஞ்சம் முன்னால் நகர்ந்து உட்கார்ந்தார்.

    “இல்ல தெரியாமத்தா கேட்கறே உண்மைல மரங்கள உருவாக்கனது யார்?”

    Share
  • Invitation: Online Open Defence of the Ph.D thesis of Rani. R

    Invitation: Online Open Defence of the Ph.D thesis of Rani. R

    Dr. Hepsy Rose Mary. A
    Asst. Professor  &  Head , Department of Tamil
    University of Kerala, Kariavattom Campus
    Thiruvananthapuram, Kerala State.
    South India. PIN 695 581.
    e-mail   hepsy.rosemary@gmail.com

    Dear Madam/Sir,

    I am happy to invite you to the Open Defence of Smt. Rani. R. who submitted her thesis on the topic “Stylistic Study on Aingurunooru” under my guidance. The Open Defense is to be conducted in online mode, on Tuesday, 29th  September, 2020 at 11 am in the Dept. of Tamil, University of Kerala, Kariavattom.

    Dr. S. VelayuthanAssociate ProfessorDepartment of Tamil, Periyar University, Salem, Tamil Nadu will be the Chairman of the Board of Adjudicators for holding the Open Defence and presided over by Prof.  R. Jayachandran, Hon. Dean, Faculty of Oriental Studies, University of Kerala.

    Your esteemed online or offline participation is earnestly solicited.

    Kindly click on the following to join the meeting at 11 am on 29th September.

    Link : https://live.hpc-ku.in/TamilDepartment.PhD.Opendefence.Rani.R

    Share
  • குறளின் கதிர்களாய்…(320)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(320)

    செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்க
    ளவியினும் வாழினு மென்.

    – திருக்குறள் – 420 (கேள்வி)

    புதுக் கவிதையில்...

    காதால் நுகரப்படும்
    கேள்விச் செல்வத்தை
    நுகராமல் விட்டுவிட்டு,
    வாயால்
    உண்ணும் உணவு வகைகளின்
    சுவை தேடி நுகரும்
    மாக்கள்
    மாண்டாலென்ன,
    உயிரோடிருந்தால் என்ன..
    ஒன்றுதான் எல்லாம்…!

    குறும்பாவில்...

    செவியால் கேள்விச்செல்வம் நுகராமல்
    வாய்க்கு ருசியாய் உணவுநாடி நுகர்வோர்,
    வாழ்ந்தாலும் செத்தாலும் ஒன்றுதான்…!

    மரபுக் கவிதையில்...

    கற்றோ ருரைக்கும் செவிச்செல்வம்
    காதால் கேட்டே நுகராமல்,
    பெற்றே யுணவு பலவகையாய்
    பேணிக் காக்க உடலதையே
    முற்றும் வாய்க்கே ருசிதேடி
    முழுது மவற்றைச் சுவைத்துண்ணும்
    வெற்று மனித மாக்களவர்
    வாழ்வும் சாவும் வேறிலையே…!

    லிமரைக்கூ..

    செவிச்செல்வம் நுகர்ந்திடக் காது,
    உணராததை வாயால் உணவுச்சுவையுணரும் மாக்கள்
    வாழ்வுசாவில் பயன்தான் ஏது…!

    கிராமிய பாணியில்...

    செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
    கேட்டு அறிவதே பெருஞ்செல்வம்,
    படிச்சவுங்க சொல்லுறதக்
    கேட்டு அறிவதே பெருஞ்செல்வம்..

    படிச்சறிஞ்சவன் சொல்லுறதக்
    காதாலக் கேட்டுப் பயனடையாம,
    திங்கிறதுக்கு ஒணவு
    வகவகயாத் தேடித் தின்னு
    வாய்க்கு ருசி பாக்கிறவன்
    இருந்தா என்ன,
    செத்தாத்தான் என்ன..

    தெரிஞ்சிக்கோ,
    செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
    கேட்டு அறிவதே பெருஞ்செல்வம்,
    படிச்சவுங்க சொல்லுறதக்
    கேட்டு அறிவதே பெருஞ்செல்வம்…!

    Share
  • ஐயா, பாலு ஐயா!

    ஐயா, பாலு ஐயா!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா
     
       ஏழு சுரங்களும் ஏக்கமுடன் தவிக்கிறது
       பாலுவே நீயும் பாட  வருவாயா?
       தாளலயம் அத்தனையும் தவிக்கிறதே பாலு
       நீயெழுந்து வாராயோ நெஞ்சமெலாம் அழுகிறதே!
     
      மூச்சுவிடாது பாடியே சாதனையைக் காட்டினாய்
      மூச்சுவிட்டு அஞ்சலியைப் பாடவைத்தாய் பாலுவே
      காற்றுக்கூட  கலங்கியே அழுகிறதே பாலுவே
      கட்டழகுச் சிரிப்புமுகம் காண்பதுதான் எப்போது?
     
      சுந்தரத் தெலுங்கு சொக்க வைக்கும் தமிழென்று
      இந்திய மாநிலத்தில் இருக்கின்ற மொழியெல்லாம்
      வந்தமைந்த உன்னிசையால் வாரியே வழங்கினையே
      பாலுவே உன்னிசையை  நிறுத்துவிட்ட  தேனையா!
     
      பாலுநீ பாடவேண்டும் பலபேரும் கேட்கவேண்டும்
      வாழவைக்கும் இசைவழங்க வரவேண்டும் எனநினைத்தோம்
      ஆழநிறை காதலுடன் பார்த்திருந்தோம் பாலுவே
      அழவிட்டு போனதேனோ அலமந்து நிற்கின்றோம்! 
     
      உன்னிசையைக் கேட்பதற்கு உலகமே காத்திருக்க
      உன்பிரிவைக் கேட்டவுடன் உணர்விழந்தே நிற்கின்றோம்
      மண்ணகத்தில் இசைகொடுக்க வந்துநின்றாய் வரமாக
      எண்ணமெலாம் உன்நினைப்பே நிறைந்திருக்கே பாலுவையா!
     
      பாடும் நிலவாகப் பவனிவந்தாய் பாலுவே
      பாடல்தர விரைவாக வந்திடுவாய் எனநினைத்தோம்
      ஆடிவரும் தென்றலிலும் ஐயாவுன் குரலிருக்கும்
      ஆடலின்றி, பாடலின்றி ஐயாநீ போனதேனோ!
     
      கற்பனையும் அழுகிறது கவிதைநலம் அழுகிறது
      காந்தக் குரலோனோ காலனுனைக் கவர்ந்தானே
      கலையுலகம் அழுகிறது கலைஞரெலாம் கதறுகிறார்
      கண்ணீரை உந்தனுக்குக் காணிக்கை ஆக்குகிறோம்!
     
      அரங்கமெலாம் வெறுமையாய் ஆகியதே பாலுவே
      அரங்கதிரும் உந்தனிசை அடங்கியதே பாலுவே
      அழவைக்கப் பாடினாய் ஆடிவைக்கப் பாடினாய்
      அனைவருமே ஆடிநிற்க அழவிட்டுப் போனதேனோ!
    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 14

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 14

    -மேகலா இராமமூர்த்தி

    இராமனைக் கண்டு காமம் மீதூரப் பெற்ற சூர்ப்பனகை, என்னுடைய இயல்பான கோர பயங்கர வடிவத்தோடும், கோணல் பற்களோடும், எல்லா உயிரினங்களையும் உண்டுசெரித்த பெரிய வயிற்றோடும் இவ் அழகன்முன் சென்று நின்றால் என்னை இவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆதலால், கொவ்வைச் செவ்வாயும், குயில்போன்ற கொஞ்சு மொழிகளும் மயிலொத்த சாயலும் உடையவளாய் ஒயிலாகச் சென்றால் நம்மை ஏற்றுக்கொள்வான் என்றெண்ணினாள். தன் விருப்பம் நிறைவேறும் பொருட்டுத் திருமகளைத் தியானித்து அவளுடைய மூலமந்திரத்தை உள்ளத்தில் செபித்தாள். என்ன ஆச்சரியம்! வியத்தகுமுறையில் அவள் தோற்றம் மாற்றம் கண்டது. காண்போரை மயக்கும் பேரழகுப் பதுமையாய் அவள் நின்ற கோலத்தின் புதுமையை என்னென்பது!

    அப்பேரெழில் உருவொடு அவள் நடைபயின்ற அழகை மெல்லோசையில் கம்பர் வருணிப்பதோ அவளினும் அழகாயிருக்கின்றது!

    செம்பஞ்சும், ஒளிர்விடும் செழித்த தளிர்களும் வருந்தும்படி, சிறந்த அழகமைந்த தாமரைநிகர் சீறடிகள் உடையவளாய், அழகியசொல் பேசுகின்ற இள மயில்போலவும், அன்னம்போலவும், வஞ்சிக்கொடிபோலவும், நஞ்சனைய வஞ்சமகளாகிய சூர்ப்பனகை இராமனைச் சந்திக்க நடைபயின்று வந்தாள் என்கிறார் கம்பர்.

    பஞ்சிஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க
    செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியள் ஆகி
    அஞ்சொல்இள மஞ்ஞைஎன அன்னம்என மின்னும்
    வஞ்சிஎன நஞ்சம்என வஞ்சமகள் வந்தாள்
    . (கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2859)

    மயில் அவளுடைய சாயலுக்கும், அன்னம் அவளுடைய நடையழகுக்கும் உவமைகள் ஆயின. இங்கே பல உவமைகள் இவ்வாறு மாலை தொடுத்ததுபோல் தொடர்ந்து வருவதால் இப்பாடலை மாலையுவமை அணிக்குச் சான்றுகாட்டலாம்.

    கம்பர் படைத்த இராமாயணத்தில்தான் கோரவடிவு கொண்ட சூர்ப்பனகை அழகிய பெண்ணாய் உருமாறி, ‘காமவல்லி’ என்று பெயர்மாறி இராமனைச் சந்திக்கச் செல்கின்றாள். ஆனால் வால்மீகி சூர்ப்பனகையை அரக்கி வடிவிலேயே இராமனைச் சந்திக்க வைக்கின்றார். அவள் இராமன்மீது கழிகாமம் கொண்டு பேசுகின்றாள். இராமன் அவள் மனப்போக்கை உணர்ந்துகொண்டாலும் தொடக்கத்தில் அவளைக் கடிந்துகொள்ளாமல் அவளுக்கு ஏற்றவகையிலேயே உரையாடுகின்றான். ஒருகட்டத்தில் விளையாட்டு வினையாக மாறத்தொடங்கவே, அவளைத் தண்டிக்குமாறு இளவல் இலக்குவனை ஏவுகின்றான். அவனும் சூர்ப்பனகையை உறுப்பறை (உறுப்புக்களைச் சிதைத்தல்) செய்கின்றான்.

    இனிக் கம்பராமாயணத்தில் சூர்ப்பனகை இராமன் சந்திப்பு எவ்வாறு அமைந்திருக்கின்றது என்று காண்போம்.

    பேரெழில் உருவொடு இராமனருகே சென்றாள் சூர்ப்பனகை. அவளைக் கண்ட இராமன், ”எவ்வுலகிலும் காண்டற்கரிதான அழகமைந்த இப்பெண்மணி யார்?” என்று வியப்போடு நோக்குகின்றான்.

    மான்விழிகொண்ட மயிலாய் வந்த சூர்ப்பனகை இராமனை வணங்கிவிட்டுச் சற்றே நாணங்கொண்டவளாய் ஒதுங்கிநிற்கிறாள்.

    ”நின்வரவு தீதில் வரவாகுக!” என்று அவளை வரவேற்ற இராமன், ”உன் ஊரென்ன? பெயரென்ன? உறவினர் யார்?” என்று வினாக் கணைகளைத் தொடுக்கின்றான் அடுத்தடுத்து!

    ”நான் தாமரைப் பூவைத் தன் இருப்பிடமாகக் கொண்ட பிரமனுடைய புதல்வன் புலத்தியரின் மகனான விச்சிரவசின் மகள்; முப்புரங்களை எரித்தழித்த, காளைமீது ஊர்ந்துசெல்கின்ற சிவபிரானின் நண்பனான குபேரனின் தங்கை; எட்டுத்திசைகளிலுமுள்ள யானைகளின் வலி தொலைத்தவனும், கயிலை மலையைத் தன் கையால் எடுத்தவனும், மூவுலகுக்கும் காவலனாகத் திகழ்பவனுமான இராவணனின் தங்கையும் ஆவேன்; என் பெயர் காமவல்லி” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

    பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி முப்புரங்கள் செற்ற
    சேவலோன் துணைவன் ஆன செங்கையோன் தங்கை திக்கின்
    மாஎலாம் தொலைத்து வெள்ளிமலை எடுத்து உலகம் மூன்றும்
    காவலோன் பின்னை காமவல்லி ஆம் கன்னி என்றாள்.
    (கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2867)

    பிரமனுடைய மகன் புலத்தியன்; புலத்தியனின் மகன் விச்சிரவசு; அவனுடைய மகள் சூர்ப்பனகை. ஒருவரை மணஞ்செய்துகொள்ள வேண்டும் எனும் விருப்பமுடையோர் தம்முடைய மூன்று தலைமுறைகளையும் கூறி அறிமுகம் செய்துகொள்வது அக்கால வழக்கம். அவ்வகையில் தன்னை இராமனிடம் அறிமுகம் செய்துகொண்டதன் மூலம் தன் மண(ன)க்குறிப்பையும் சூர்ப்பனகை வெளியிட்டாள் என்று கொள்ளலாம்.

    இலங்கையை முதலில் ஆண்டுகொண்டிருந்தவன் குபேரனே. இராவணன் அவனைத் துரத்திவிட்டு, இலங்கையைத் தனதாக்கிக் கொண்டான். அதன்பின்னர்ச் சிவனைக் குறித்துத் தவம்செய்து அவருடைய நண்பனானான் குபேரன். கொடுத்துச் சிவந்த கரங்களை உடையவன் எனும் பொருளில் அவனைச் ’செங்கையோன்’ என்கிறாள் சூர்ப்பனகை.

    ”அரக்கன் இராவணனின் தங்கையெனில் இவ்வழகிய உருவை நீ பெற்றது யாங்ஙனம்?” எனச் சூர்ப்பனகையை ஐயுற்றுக் கேட்கின்றான் இராமன்.

    உடனே சுதாரித்துக்கொண்ட சூர்ப்பனகை, ”மாயங்கள் செய்வதில் வல்ல அரக்கர்களோடு நான் கூட்டுறவு வைத்துக் கொள்வதில்லை. இவ்வழகிய வடிவம் தவஞ்செய்து நான் தேவர்களிடம் பெற்ற வரத்தால் கிடைத்ததாகும்” என்று பொய்யுரைத்தாள்.

    மெல்ல மெல்ல இராமன்மீது தான் கொண்டிருக்கும் மண விருப்பத்தை உரைக்கத் தொடங்கினாள் சூர்ப்பனகை. ”நீதிநெறி அறியா அரக்கி இவள்! ஏதோ தீய நோக்கத்துடனேயே இங்கே வந்திருக்கின்றாள்” என்பதை இராமனின் உள்ளம் அப்போது உணர்ந்தது. எனினும், அவளுடனான உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், அதனைத் தொடர்வதிலேயே ஆர்வம் கொண்டவனாய் இராமனைக் கம்பர் சித்திரித்திருக்கக் காண்கிறோம்.  இச்சித்திரிப்பு, பிற பெண்டிரை நயவாத அவன் பேராண்மைக்குப் பெருமை சேர்ப்பதாய் இல்லை.

    இனி அவர்களுடைய உரையாடலின் தொடர்ச்சியையும் செவிமடுப்போம்!

    சூர்ப்பனகையின் வரலாற்றை அறிந்த இராமன், ”அழகியே! நீயோ (புலத்தியர் மரபில் வந்த) அந்தணர்குலப் பாவை; நானோ அரச மரபில் வந்தவன். எனவே நாம் மணத்தல் முறையன்று!” என்றான் கேலியாக.

    சூர்ப்பனகையும் விடவில்லை! ”என் தந்தை அந்தண மரபில் வந்தாலும் தாய் சாலகடங்கர் எனும் அரச மரபில் வந்தவள்; எனவே, என்னை நீ கந்தர்வ மணம் புரிந்துகொண்டால் விண்ணுலக தேவரும் மண்ணுலக அரக்கரும் உனக்கு ஏவல் செய்வர்!” என்றாள்.

    பயனற்ற இவ் உரையாடல் தேவையின்றி நீண்டுகொண்டிருந்த வேளையில் பன்னசாலையின் உள்ளிருந்த சீதை அன்னநடையிட்டு வெளியில் வந்தாள்.

    அவளைக் கண்ட சூர்ப்பனகை இராமன்மீது பதித்திருந்த தன் பார்வையை விலக்கிச் சீதையையே வெகுநேரம் வியப்போடு உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள். ”அழகுக்கு ஒரு வரையறை இல்லை எனும்படியாக அல்லவா இவள் விளங்குகின்றாள்! இவளைக் கண்ட கண்கள் வேறொரு பொருளில் செல்லா! கண்கள் மட்டுமா? கருத்தும் அப்படித்தான்! பெண்ணாகப் பிறந்த என் நிலையே இப்படியென்றால் ஆடவரின் நிலை என்னவோ?” என்று சிந்தித்துத் திகைத்தாள்!

    பண்புஉற நெடிதுநோக்கி படைக்குநர் சிறுமைஅல்லால்
    எண்பிறங்கு அழகிற்கு எல்லை இல்லைஆம் என்றுநின்றாள்
    கண்பிற பொருளில் செல்லா கருத்துஎனின் அஃதே கண்ட
    பெண் பிறந்தேனுக்கு என்றால் என்படும் பிறருக்கு என்றாள்.
    (கம்ப: சூர்ப்பனகைப் படலம் – 2888)

    ”பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ?!” என்று கவியரசு கண்ணதாசன் ’மாலையிட்ட மங்கை’யை வருணித்துப் பாட்டெழுதியது இப்பாடலின் தாக்கத்தினால்தானோ?

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

     

     

    Share
  • நான் கண்ட மாணாக்கர்கள் – நிர்மலா ராகவன் நேர்காணல்

    நான் கண்ட மாணாக்கர்கள் – நிர்மலா ராகவன் நேர்காணல்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    எழுத்தாளர் நிர்மலா ராகவன், மலேசியாவில் 30 ஆண்டுகளில் 30 ஆயிரம் மாணவர்களுக்கு இயற்பியல் கற்பித்தவர். மலாய், சீனர், இந்தியர் எனப் பல்லின மாணவர்களின் உள்ளம் கவர்ந்தவர். கற்றல் திறன் குறைந்தவர்களுக்கும் வறுமையில் வாடியவர்களுக்கும் இனக் காழ்ப்பை எதிர்கொண்டவர்களுக்கும் துணை நின்று பாதுகாத்தவர். இந்த நேர்காணலில் தாம் சந்தித்த மாணவர்கள் சிலரைப் பற்றி நம்முடன் உரையாடுகிறார்.

    படம் வரைவது தவிர வேறு எதுவுமே தெரியாத மாணவர்கள், தேர்வு என்றால் படிக்க வேண்டுமா என்று கேட்ட மாணவர், வகுப்பில் தூங்கிய மாணவர், பொம்மையே பார்க்காத மாணவர், F.U.C.K. என்று ஆய்வுக்கூடத்தில் எழுதிய மாணவர், தெருவில் நின்று தங்கள் உடலை 50 காசுக்கு விற்ற மாணவியர், இந்த வகுப்புக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக என் அனுதாபங்கள் என்று சொன்ன மாணவர் எனப் பலரை இந்தப் பதிவில் நீங்கள் காணலாம். ஆட்டிசம் பாதிப்புள்ள மாணவரை வகுப்பில் மானிட்டராய் நியமித்தது, பட்டன் போடாத / ஜிப் போடாத மாணவர்களுக்கு ஊக்கு வாங்கிக் கொடுத்தது, ஒரு வகுப்பை ஒரே மாதத்தில் ஆங்கிலம் பேச வைத்தது, சீன மாணவியருக்கு நடனம் சொல்லிக் கொடுத்தது… எனப் பல அனுபவங்கள் இதில் உண்டு.

    இந்த சுவாரசியமான நேர்காணலைப் பார்த்து மகிழுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அக இலக்கியச் சிறு பாத்திரங்கள்- 15 (தலைவனின் தந்தை)

    அக இலக்கியச் சிறு பாத்திரங்கள்- 15 (தலைவனின் தந்தை)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த் துறைத்தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    அகப்பாடலில் தலைவனின் தந்தை நேரடியாகப் பாடல் காட்சியில்  இடம்பெறவுமில்லை. எங்கும் பேசவுமில்லை. பேசியதாகக் கூறப்படவும் இல்லை. ஆனால் தலைவன், செவிலி, தோழி  ஆகியோர் கூற்றுகளில் தலைவனின் தந்தை பேசப்படுவதால் சிறுபாத்திரத் தகுதி பெறுகிறான்.

    தம்முள் ஒத்த இரு தந்தையர்

    தம்முள் முகிழ்த்த காதலை எண்ணி வியக்கும் தலைவன்;

    “எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்” (குறுந்.- 40)

    என்று தலைவியை நோக்கி வினவும் போது; இரண்டு தந்தைகளும் ஒப்பவே பேசப்படுகின்றனர். காதலர் கோணத்தில் தந்தையரிடையே ஏற்றத்தாழ்வு இல்லை.

    செவிலி கூற்றில் தலைவனின் தந்தை 

    மகளின் இல்லறச் சிறப்பைக் காணவந்த செவிலி;

    “அகன்பெருஞ் சிறப்பின் தந்தை பெயரன்” (ஐங். – 403)

    சிறுதேர் உருட்டுவது கண்டு தலைவன் மகிழ்ந்தான் என்று சொல்லும் போது ‘தந்தை’ தலைவனைப் பெற்றவனைக் குறிக்கிறது. மிகுந்த புகழுக்கும்  பெருமைக்கும் உரியவனாகத் தலைவனின் தந்தை போற்றப்படுகிறான். மரபு வழாமல் தன் மகனுக்குத் தந்தையின் பெயர் வைத்து மகிழ்ந்தமையும் குறிப்பாகத் தெரிகிறது.

    தோழி கூற்றில் தலைவனின் தந்தை

    “நன்மனை வதுவை அயர இவள்
    பின்னிருங் கூந்தல் மலர் அணிந்தோயே
    இனிது செய்தனையால் நுந்தை வாழியர்” (ஐங்.- 294)

    என்று; தலைவன் அறத்தை நிலைநாட்டியவுடன் அவனது தந்தை வாழ்த்தப் பெறுகிறான். தலைவியைக் கைவிடாத அறமாகிய மணவினை அவனைப் பெற்று வளர்த்த தந்தையின் பெருமைக்குரிய சிறப்பாகிறது.

    தலைவன் கூற்றில் தந்தை

    திருமணத்திற்குப் பின்னர் புறத்தொழுகியதால் ஊடல் கொண்ட தன் மனைவியிடம் வாயில் வேண்டும்போது தலைவன்; மிகுந்த நம்பிக்கையுடன் தன் மகனை அள்ளி அணைத்து;

    “மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம்” (கலி.- 81)

    என்று சூழ்நிலையைச் சமாளிக்கத்  தன்னுடைய தந்தையின் மேன்மையையும் அவரது பெயர் தாங்கிய மகனையும் ஒருங்கே துணைக்கு அழைக்கிறான்

    தானே தந்தையாகும் தலைவனின் பெருமையும் இழிவும்

    தலைமைப் பாத்திரமாகிய தலைவன் மகனைப் பெற்ற பின்னர்; இயல்பாகவே தந்தை எனும் தகுதி பெற்று அவ்வாறே அழைக்கப்படுவது மட்டுமின்றி; அறவழிப்பட்டுத் திருமணத்திற்கு ஒத்துழைக்கும் போது;   தோழி கூற்றில்  தந்தை என்னும் பெருமைக்கு உரியவன் ஆகிறான்.

    “புதல்வன் கவைஇயினன் தந்தை” (ஐங்.- 409);

    என்று தலைமக்களது துயிலும் நிலை பற்றிச் செவிலி வருணிக்கும் போது தலைவனே ‘தந்தை’ என்று மகிழ்ச்சி பொங்கச் சுட்டப்படுகிறான். பெண் மகவு  பெற்ற தலைவன் அகஇலக்கியம் எங்கும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரைவிடை வைத்துப் பொருள் தேடச் சென்று மீண்டவன்   தலைவியை மணம்பேசிப் பூச்சூடிய போது தோழி மனம் நிறைந்து அவனைப்  போற்றி;

    “இனிது செய்தனையால் எந்தை  வாழிய” (அகம்.- 104)

    எனத் திருமணத்திற்கு முன்னரே தலைவனுக்குத் தந்தைப் பதவி கொடுக்கிறாள். மகப்பேற்றுக்குப் பின்னர் வினைவயிற் பிரிந்த தலைவன் மீண்டுவரத்;    தூங்கிக் கொண்டிருக்கும் மகன் பேசுவது போலத் தான் பேசும் தலைவி;

    “வந்தீக எந்தை” (நற்.- 221)

    என்று தந்தை மகன் உறவுக்கே முதலிடம் நல்குகிறாள். ‘வாருங்கள் தந்தையே’ என்று அவள் அழைத்து மகிழ்வது அவர்களது இல்லறத்திற்கு உயிரோட்டமாக இருக்கும் மகப்பேறு பற்றிய கொள்கை விளக்கம் எனில் மிகையாகாது.

    கணவன் புறத்தொழுக்கத்தில் ஈடுபட; அவனது  பரத்தமை தலைவியால் இகழப்படும் போது அங்கதச் சுவையுடன்;

    “வாழியர் எந்தை” (அகம்.- 46);

    என்று நையாண்டி செய்யப்படுகிறான். ‘இவன் மனிதனே இல்லை’ என்னும் வசை பெறும் (கலி.- 84) இல்லத்தலைவனாகிய அவன் காதுபடவே அவனது செய்கையை மகனிடம் பேசுவது போல்; ‘உன் தந்தை’ என்று சுட்டி;  விமர்சனம் செய்கிறாள் தலைவி. (கலி.- 80, 82, 85, 86). தன் கணவன் என்று சொல்லாமல் ‘உன் தந்தை’ என்று பேசும் காரணம்; இல்லறத்தின் நிலைத் தன்மைக்கு மகப்பேற்றின் அடிப்படைத்  தேவையைக் கூறாமல் கூறுகிறது.

    “அடக்கமில் போழ்தின்கண் தந்தை காமுற்ற” (கலி.- 82)

    பிற பெண்கள் பற்றிக் குழவிப் பருவத்து மகனிடமே பேசுகிறாள்.

    “மாதர் மென்நோக்கின் மகளிரை நுந்தை போல்” (கலி.- 86)

    நாடாதே என்ற அறிவுரையைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் பருவமோ பக்குவமோ இல்லாதவனிடம்  அவள் புலம்புவது; ஏதும் செய்யலாகாத  அவளது கையற்ற நிலையையும் ஆற்றாமையையும் தெளிவாக்குகிறது. இயல்பான நிகழ்வுக்குத் தானாகக்  காரணம் கற்பித்துத் தலைவி  கூச்சலிடும் போதும் தலைவன் தந்தை என்னும் தகுதிப்பெயர் பெறுகிறான். சேடியோடு வெளியே அனுப்பிய மகனைக் கொஞ்சிப் பரத்தை அவனுக்கு மோதிரம் அணிவித்து அனுப்ப;

    “செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பில்” (கலி.- 84)

    ‘செய்த புணர்குறி போல்; மகனின் கையில் சுறாவின் ஏற்றைக் குழித்த மோதிரம் அணிவித்து அனுப்புவது; என் கணவனைத் தன் வசப்படுத்தக் கொள்வேன் என்று விடும் சவாலின் குறியீடு ஆகும்’ என்று சேடியிடம் பொருமும் போது தலைவியின் மிதமிஞ்சிய மனஅழுத்தம் தான் வெளிப்படுகிறது. விளையாடச் சென்ற மகனைத் தலைவனின் புறத்தொழுக்கத்திற்குக் காரணமான பெண்கள் ஆசையுடன் எடுத்துத் தழுவ; வீடு திரும்பும் மகனின் உடலில் அவரது அணிகலன்கள் பதிந்திருக்கும் தடத்தைப் பார்த்துப் புலம்பும் போது; நிலைவாயிலைப் பற்றிக்கொண்டு தலைவன் நின்ற கோலம்;

    “தந்தையும் வந்து நிலை” (கலி.- 83)

    என்றே பதிவு பெறுகிறது.

    தொன்மக் குறிப்பில் தலைவரின் தந்தை

    மகாபாரதப் போரில் அசுவத்தாமன் தன் தந்தை துரோணாச்சாரியரைக் கொன்ற சிகண்டியைத் தானே முயன்று தலையைத் திருகிக் கொன்று சினம் தீர்த்துக் கொண்ட தொன்மக் குறிப்பு;

    “தாளின் கடந்து அட்டுத் தந்தையைக் கொன்றானை” (கலி.- 101)

    எனக் காளையைச் சிறப்பிக்கப் பயன்பட்டுள்ளது.

    மடலேறும் தலைவன் காமன் தன்னைத் துன்புறுத்துவது பற்றிப் பேசுங்கால்; இன்னொரு தொன்மத் தந்தையாகத்  திருமாலைச் சுட்டி;

    “நெடியோன் மகன்நயந்து தந்தாங்கு” (கலி.- 140)

    என நெடியோனைத் தந்தை ஆக்குகிறான்.

    ‘தந்தை’ சிறுபாத்திரம் உணர்த்தும் சமூகக் கொள்கை

    தந்தையின் பெயர் தன் மகனுக்கு உரியது எனும் பாரம்பரியம்; ‘தந்தை பெயரன்’ எனும் உறவுமுறைப் பெயரில் தொன்றுதொட்டுத் தமிழ்ச் சமூகக் கொள்கையாக நிலவி வருவதைத் தொகை நூல்கள் ஆவணப்படுத்தியுள்ளன. பெண் பிள்ளை பெற்ற தலைவனுக்கு அகஇலக்கியத்தில் இடம் காணப்படாமை  தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய ஆண் முதன்மைப் போக்கை வெளிப்படுத்துகிறது.

    முடிவுரை

    காதலர் நோக்கில் தம் தந்தையரிடையே ஏற்றத்தாழ்வு இல்லை. செவிலியும் தோழியும்; தலைவனும் தன் தந்தையைப் பெருமைக்கு உரியவராகப் பேசுகின்றனர். தலைமைப் பாத்திரமாகிய தலைவன் மகனைப் பெற்ற பின்னர்; இயல்பாகவே தந்தை எனும் தகுதி பெறுகிறான். அறவழிப்பட்டுத்  திருமணத்திற்கு ஒத்துழைக்கும் போதே;  தந்தை என்னும் பெருமைக்குரியவன் ஆகிறான். பரத்தமை தலைவனை இழிந்த தந்தை ஆக்குகிறது.  தலைவனது தந்தை பெயர் அவனது மகனுக்கு உரியது என்பது தமிழர் பாரம்பரியம். பெண் குழந்தை பெற்றதாகப் பேச்சே எழாமல் இருப்பது ஆண் முதன்மைச் சமுதாயக் கொள்கையைக் காட்டுகிறது. துரோணாச்சாரியாரும் நெடியோனும் தொன்மம் சார்ந்த தந்தையராக அகஇலக்கியத்தில் இடம் பெறுகின்றனர்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 35

    பழகத் தெரிய வேணும் – 35

    நிர்மலா ராகவன்

    மகிழ்ச்சி எங்கே?

    `சிலபேருக்குதான் வாழ்க்கை நன்றாக அமைகிறது!’ என்று ஏக்கப் பெருமூச்சு விடுகிறவர்கள் பலர்.
    வாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது.

    பிறரால்தான் மகிழ்ச்சியா?

    `உனக்கு எப்போது குழப்பமோ, வருத்தமோ ஏற்படும்?’ என்று என் சக ஆசிரியை ஃபாத்திமாவிடம் கேட்டேன்.

    “தெரிந்தவர்கள் யாராவது என்னைப் பார்த்துவிட்டு, சிரிக்காமல் போனால் வருத்தமாக இருக்கும்,” என்றாள்.

    நம்மைக் கடந்து செல்பவர்கள் ஆழ்ந்த சிந்தனையிலோ, ஏதாவது குழப்பத்திலோ இருக்கலாம். இது புரியாது, அவர்களுக்கு நாம் ஒரு பொருட்டாகப் படவில்லையே என்ற வருத்தம் எழுவது எதற்கு?

    நம் மகிழ்ச்சிக்குப் பிறரை எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் எழும்.

    செல்வத்தால் மகிழ்ச்சி?

    பெரும் செல்வந்தர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால், சிலருக்கு அது ஒரு பொழுதுபோக்கு, வெறும் விளையாட்டு என்றே தோன்றுகிறது. பிறரை வெல்லவேண்டும் என்ற ஓயாத துடிப்பு வேறு.

    எத்தனை கோடிச் செல்வம் இருந்தாலும் பேராசை அடங்குவதில்லையே, பொருளீட்டுவதால் மகிழ்ச்சி எப்படிக் கிட்டும்?

    இலக்கு

    வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமானால் ஓர் இலக்கு அவசியம். அது பெரிதாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. `நாளை என்ன செய்யலாம்?’ என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிக்கொண்டு, உபயோகமான காரியம் எதையாவது யோசித்துவைத்தாலே போதும்.

    நமக்குப் பிடித்த காரியத்தைச் செய்யாது, பிறருக்காக விட்டுக்கொடுத்தால், நம் மகிழ்ச்சி பறிபோய்விடும்.

    பெண் எழுத்தாளர்களின் சங்கடம்

    பெண்கள் எழுத்துத்துறையில் ஈடுபட்டு, `எங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு,’ என்பதுபோல் எழுதினால், ஆண்களின் கண்டனத்துக்கு ஆளாகிறார்கள்.

    “நீங்க எழுதறமாதிரி, ஆண்களைக் குறை சொல்லலாமோ, கூடாதோன்னு பயந்துக்கிட்டிருந்தேன்,” என்று ஒரு பெண்மணி தயங்கியபடி என்னிடம் தெரிவித்தாள்.

    “தப்பு செய்யறதிலே ஆண் என்ன, பெண் என்ன? நான் ரெண்டு பேரைப்பத்தியும் எழுதறேனே!” என்றேன்.

    உண்மையாக நடந்த ஆண்களின் உரையாடல் (ஆங்கிலத்தில்):

    “நிர்மலா ராகவன்னு ஒரு காரக்டர். உங்களுக்குத் தெரியுமா?”

    “கேள்விப்பட்டதேயில்லை!” பதில் கூறியது என் கணவர்.

    “அவங்க எழுத்தைப் படிக்கும்போது கோபம் வருது. ஆனா, அதிலே உண்மை இருக்கு. அதனாலதான் எரிச்சலா இருக்கு”.

    இப்படியெல்லாம் விமரிசனத்துக்கு ஆளாகப் பயந்தே பல பெண்கள் தம் ஒவ்வொரு எழுத்தையும் தாமே தணிக்கை செய்துகொள்கிறார்கள். நிறைவு எப்படிக் கிட்டும்?

    “நிறைய கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்காதே. எல்லாம் கடவுளின் சித்தப்படி நடக்கிறது என்று புரிந்துகொள்,” என்று எழுத்தின்மூலம் என்னைக் கண்டித்தாள் விரிவுரையாளர், கொடீஜா (KODIJAH), ஒரு மேற்பயிற்சியின்போது.

    கற்பனைத்திறன் வளர, நம்மைச் சுற்றி நடப்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். `ஏன்?’ `எப்படி?’ என்ற கேள்விகளைக் கேட்டாகவேண்டும். அவளுக்கு அது தெரியவில்லை.

    அத்துடன், பிறர் எப்படி நடக்கவேண்டும் என்று குறை கூறிக்கொண்டிருப்பது வீண். நமக்கு நேரம் அதிகமில்லையே! நம் வாழ்க்கையை ஒழுங்காக வாழ்ந்தால் போதாதா?

    கதை

    என் ஒரே மகனைச் சிறுவயதிலேயே பறிகொடுத்த துக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். ஈராண்டுகள் கழிந்தபின்னரும் துக்கம் குறையவில்லை.

    எப்போதும்போல் ஏதாவது புதினத்தைப் படிக்கலாம் என்றால், அதில் `மரணம்’ என்று ஒரு வார்த்தை கண்ணில் பட்டால் போதும், கண்ணில் நீர் வழியும்.

    துக்கம் தொண்டையை அடைக்க, பாடவும் முடியவில்லை. வெறி பிடித்தவள்போல், காலால் தரையில் அழுந்தத் தட்ட, ஓரளவு சமாதானம் ஆகியது.

    என் பெற்றோரைப் பார்க்க மலேசியாவிலிருந்து இந்தியா சென்றபோது, முதலிலேயே நிச்சயித்துக்கொண்டேன், மீண்டும் நாட்டியம் பயிலவேண்டும் என்று.

    சிறு வயதிலேயே மூன்று ஆண்டுகள் முறையாகக் கற்றிருந்தாலும், வெளியில் ஆட என் தந்தை அனுமதிக்கவில்லை. (அந்தக் காலத்தில், ஆடத் தெரிந்தவர்களை சினிமாவில் நடிக்க அழைப்பார்கள். குடும்ப கௌரவம் என்ன ஆவது?).

    சாயந்திர வேளைகளில், என் பெற்றோர் காய்கறி வாங்க வெளியில் போவது வழக்கம். அப்போது, திருட்டுத்தனமாக ஆடி மகிழ்வேன்.

    மூச்சிறைக்க வந்து, நான் கதவைத் திறக்கும்போது, அம்மா சந்தேகத்துடன் பார்ப்பாள். “ஆடிண்டு இருந்தியா?”

    சிறு குழந்தைபோல், “இல்லியே!” என்று பொய் சொல்ல வேண்டியிருக்கும். ஆனாலும், என் முகமலர்ச்சி காட்டிக்கொடுத்துவிடும்.

    பள்ளியில் ஆண்டுவிழாவில் ஆட என்னைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்பாவுக்குத் தெரியாமல் ஒத்திகைக்குப் போனால், பிரச்னை வராது என்று நினைத்தோம்.

    விழா முடிந்து, வீடு திரும்பியபோது, “இன்னிக்கு என்ன, லிப் ஸ்டிக்?” என்று அப்பா கேட்டபோது, “சொல்லமாட்டேன், போ!” என்று சிரித்தேன். அப்பாவும் சிரித்தார். அவருக்கும் தெரிந்திருக்கிறது!

    ஆனால், 41 வயதில், `மீண்டும் ஆடக் கற்கப்போகிறேன்,’ என்று நான் அறிவித்தபோது, யாரும் தடை சொல்லவில்லை.

    பிடித்த காரியத்தில் மீண்டும் ஈடுபட்டதால், இழந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் திரும்பின.

    மணவாழ்க்கையால் கட்டுப்பாடு

    திருமணமானபின் கணவனும் புக்ககத்தினரும் எப்படி நடத்துவார்களோ, மகளின் மகிழ்ச்சி பறிபோய்விடுமோ என்று அஞ்சியே பல பெற்றோர் பெண்களைச் செல்லமாக வளர்ப்பார்கள்.

    கதை

    என்னுடன் கல்லூரியில் படித்த ரோகிணியின் திருமணத்திற்குப் போயிருந்தேன்.

    “ரோகிணியின் சிநேகிதி,” என்று அவள் தாய் மாமியாரிடம் அறிமுகப்படுத்தினாள்.

    அந்த அம்மாளோ, உதட்டைச் சுழித்தபடி, முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

    வீடு திரும்பியதும், “ஏம்மா அப்படிப் பண்ணினா?” என்று என் தாயிடம் கேட்டேன்.

    மருமகள் தன் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும், `சிநேகிதி’ என்று யாராவது அவளுடன் சேர்ந்துவிட்டால், அவள் பலம் பெற்றுவிடுவாளோ என்ற பயமாம்!

    அப்படிப்பட்ட சூழ்நிலையில், ரோகிணி பிறர் சொற்படிதான் நடக்கவேண்டியிருக்கும்.

    ஆக்ககரமான எண்ணங்கள் புத்துணர்ச்சி ஊட்டவல்லவை. ஆனால், அவைகளை நனவாக்க தகுந்த சூழ்நிலையும் அவசியம் அல்லவா?

    புத்திசாலியான ரோகிணியின் கண்களில் ஒளி மங்கிப்போக, `வாழ்க்கை ஏதோ நடக்கிறது,’ என்று சலித்தபடி இனி நாட்களை ஓட்ட வேண்டியிருக்குமோ என்ற பரிதாபம் எழுந்தது.

    பிறருடைய அறிவுரையை எப்போதும் பின்பற்றி நடக்க வேண்டும் என்றால், ஒவ்வொருவருக்கும் தனியாக மூளை எதற்கு?

    நன்மை பிறருக்கு, மகிழ்ச்சி நமக்கு

    நாம் மகிழ்ச்சியாக இருந்தால், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. அதற்காக நம்மால் இயன்றதைச் செய்ய முயல்வோம். அதனால் நம் மகிழ்ச்சி இன்னும் கூடுகிறது.

    இறந்தபின், எனது உடலின் ஆறு பாகங்களைத் தானம் செய்வதாக எழுதிக் கொடுத்ததும், `இவை பிறருக்குச் சேர வேண்டியவை,’ என்ற பிரக்ஞை எழுந்தது. `இந்த உடலைக் கவனமாகப் பராமரிக்க வேண்டும்,’ என்ற உறுதியும் ஏற்பட்டது.

    வாழ்க்கையில் இன்பத்தை மட்டுமே எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். துயரத்திலிருந்தும் கற்கலாமே!

    Share