Blog

  • எட்டுக் கோணல் பண்டிதன் – 8

    எட்டுக் கோணல் பண்டிதன் – 8

    தி. இரா. மீனா

    இரட்டைகளை விடுவதால் பரஞானம் உண்டாகும் என்றும், ஸம்ஸ்கார நாசமே ஸம்சார நாசமென்றும், அதுவே உண்மை நிலை என்றும் ஜனகருக்கு அஷ்டவக்கிரர் போதிப்பதே இந்த அத்தியாயமாகும்.

                     அத்தியாயம் ஒன்பது

    1. செய்ததும், செய்யாததும் பிற இரட்டைகளும் எப்பொழுது எவருக்கு ஓய்ந்தது என்றிங்கே அறிந்து உதாசீனமுற்று சங்கல்பமற்று தியாகமே சிறந்ததென்றிருப்பாய்.

    2. அன்பனே! யாரோ ஒரு புண்ணியவான் உலகியலை உணர்ந்து வாழ்க்கை வேட்கையும், போகவிருப்பும், அறிதல் வெறுப்பும் அடங்கப் பெறுகிறான்.

    3. இவையனைத்தும் நிலையாதது, சாரமற்றது. இகழ்ந்து தள்ளக் கூடியது என்று நிச்சயித்தவன் சாந்தி அடைகிறான்.

    4. எங்கே மனிதர்களுக்கு இரட்டைகளே இல்லையோ அங்கே கால மென்பதென்ன, வயதாவதென்ன? அவற்றைப் புறக்கணித்தவன் பூரணனாவான்.

    5. மகரிஷிகளும், சாதுக்களும், யோகிகளும் வெவ்வேறு கொள்கை யில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு வெறுப்படைந்தவானால் சாந்தியடைய முடியுமா?

    6. உதாசீனம், சமத்துவமென்னும் யுக்திகளால் ஞான ஸ்வரூபானுப வத்தை உலகச் சுழலிலிருந்து காப்பாற்றுகின்றவன் குருவாவான்.

    7. பஞ்சபூதத் திரிபுகளைப் பூதங்களாகவே காணமுடியும் போது அந்தக் கணத்திலேயே நீ உண்மையில் கட்டறுந்து சொரூபநிலையடைவாய்.

    8. ஸம்ஸ்காரங்களே சம்சாரமென்று அவையனைத்தையும் விட்டு விடு. இந்நிலைதான் உண்மை.

                        அத்தியாயம் பத்து

    நிலையாதவைகளாக உள்ள அறம், பொருள், இன்பங்களை அறவே நீக்கி ஆசைகளற்று ஓய்ந்து சுகமாக இருக்க வேண்டுமென்று ஜனகருக்கு அஷ்டவக்கிரர் உபதேசிப்பது இவ்வத்தியாயமாகும்.

    1. காமப் பகையையும், பொருளாசையையும் விட்டு, இந்த இரண்டிற்கும் முன்னதான தர்மத்தையும் விட்டு அனைத்திலும் உதாசீனம் கொள்வாய்.

    2. நண்பரும், நிலமும், செல்வமும், வீடும், மனைவியும், சுற்றமும், சம்பத்து அனைத்தும் நாலைந்து நாட்களே. இதையோர் கனவென, மாயத் தோற்றமெனப் பார்ப்பாய் .

    3. எங்கெங்கோ ஆசையிருக்கிறதோ அங்கங்கே சம்சாரம் என்றுணர் வாய். திட வைராக்கியமோடு ஆசையற்றுச் சுகமாக இருப்பாய்.

    4. ஆசையே பந்தம்; அதை அறுப்பதே முக்தி. உலகத்தின் மீது பற்று ஒழியும் போதெல்லாம் அவ்வப்போது ஆன்ம இன்பமுண்டாகும்.

    5. நீ ஒருவன். அறிவுமயமானவன். தூய்மையானவன். உலகமோ அசத்தும், ஜடமுமாகும். அவித்தை என்பது ஒன்றுமேயில்லை. ஆனாலும் நீ அதை அறிய விரும்புவதேன்?

    6. பிறவிதோறும் ராஜ்யமும், மக்களும், பெண்களும், உடலும், சுகங்களும் ஆர்வத்தோடிருந்தும் அழிந்து போயின.

    7. அறம், பொருள், இன்பம் எல்லாம் போதும். உலகக் காட்டில் இவற்றால் மனம் அமைதியடையவில்லை.

    8. எத்தனை பிறவிகள்தான் உடலாலும், மனதாலும், வாக்காலும் பாடுபடவில்லை? கருமம் துன்பம்; களைப்பைத் தருவது. ஆதலால் இப்போதாவது ஓய்ந்திருப்பாய்.

                  அத்தியாயம் பதினொன்று

    உலகியல் முழுவதும் பிரகிருதியின் தர்மமென்றும், நினைப்பே துக்கத்தின் காரணமென்றும், அனைத்திற்கும் ஆதாரமாம் ஆத்மாவில் நிலைத்தவனே சாந்தி சுகத்தை அடைந்தவனென்றும் ஜனகருக்கு அஷ்டவக்கிரர் விளக்குவது இவ்வத்தியாயமாகும்.

    1. ஆதலும், அழிவதும் இயற்கையால் என உணர்ந்தவன் ஐயமின்றி துயரமின்றி சுகமாக அமைதியடைவான்.

    2. இறைவனே எல்லாவற்றிற்கும் காரணம் வேறொருவருமில்லை என உணர்ந்தவன் மனதில் ஆசைகள் நீங்கி அமைதியுடையவனாகி எதிலும் ஒட்டமாட்டான்.

    3. செல்வமும், விபத்தும் அந்தந்தக் காலத்தில் விதியால் வருபவை எனத் துணிந்தவன் பொறிகள் நிலைக்கப் பெற்று என்றும் நிறைந்த வனாக ஒன்றையும் விரும்ப மாட்டான். வருந்தவும் மாட்டான்.

    4. இன்ப துன்பங்களும், ஜனன மரணங்களும் விதி வசமெனத் துணிந்து தன்னால் ஆவதொன்றுமில்லை எனக் கவலையில்லாமல் இருப்பவன் பற்றற்றவன்.

    5. நினைப்பாலன்றி வேறெவ்வாறும் துக்கம் இங்கு ஏற்படாதெனத் தெரிந்து கவலையற்று அனைத்திலும் ஆசை தீர்ந்தவனே இன்பமும் அமைதியும் அடைந்தவன்.

    6. உடல் நானல்ல. என்னுடையதுமல்ல.அறிவே நான் எனத் துணிந்த வன் முக்தி அடைந்தவன் எனலாம். செய்ததையும் , செய்யாததையும் அவன் நினைக்க மாட்டான்.

    7.பிரமன் முதல் புழு வரை அனைத்தும் நானே எனத் துணிந்தவன் அடைந்ததிலிருந்தும், அடையாததிலிருந்தும் முற்றிலும் விலகித் திரிபற்றுத் தூய்மையுடையவனாக இருப்பான்.

    8. பல விந்தைகளை உடைய இந்தவுலகம் ஒன்றுமேயில்லாதது என உணர்ந்து ஆத்ம விளக்கமாக இருப்பான்.

     [தொடரும்]

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 21

    கதை வடிவில் பழமொழி நானூறு – 21

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 43

    யானும்மற்(று) இவ்விருந்த எம்முனும் ஆயக்கால்
    வீரம் செயக்கிடந்த(து) இல்லென்று – கூடப்
    படைமாறு கொள்ளப் பகைதூண்டல் அஃதே
    ‘இடைநாயிற்(று) என்பிடு மாறு’.

    பழமொழி – இடை நாயிற்கு என்பு இடுமாறு

    துபாயிலிருந்து கிளம்பி ஒருவழியா இந்தியா வரப்போறோம். கொரோனா தொற்றுவியாதி பிரச்சினையால எங்க எல்லாருக்கும் தற்காலிகமா வேலை இல்ல. நல்ல வேளை. இந்தியன் மென்டாலிடி ஒருத்தருக்கொருத்தர் நல்லா உதவி செய்யறாங்க. ஒரு சர்தார்ஜீ பையா தான் இப்போ எங்க எல்லாரையும் தங்க வச்சி சாப்பாடு போட்டுக்கிட்டிருக்கார். விமானசேவை தொடங்கினவொடனே ஊரப்பாத்துப் போய்ச் சேரணும்.

    க்யா பாயி.. என் வங்காளச் சகோதரன் அழைக்கிறான். ஆமாம் அப்படித்தானே சொல்லணும். நம்ம நாட்ல நம்ம ஊர்ல பாதுகாப்பா இருக்கற வரதான் சாதி சொந்தம் பக்கத்துவீடு பக்கத்து ஊரு இந்தப் பிரச்சினையெல்லாம். நம்ம மாநிலம்விட்டு அயல் மாநிலம் போனாலே நம்ம தமிழ் பேசற எல்லாரும் சொந்தக்காரங்களாத் தெரியுவாங்க.

    அயல் நாட்டுல கேக்கவே வேணாம். எந்த மொழி பேசினாலும் நான் இந்தியர்னு சொன்னாப் போதும் கண்ணுக்கு பங்காளிமாதிரி தான் தெரியுவான். இப்ப இத எல்லாத்தையும் விட்டுட்டு திரும்ப ஊருக்குப் போகணும். அங்க போய் முன்ன மாதிரி இருக்க முடியுமா தெரியல.

    வங்காளச் சகோதரனிடம் புலம்ப ஆரம்பித்தேன்.

    என் ஊருக்குப்போகவே எரிச்சலா வருது. எனக்கு விவரம் தெரியற வர எங்க ஊர்க்கும் பக்கத்து ஊருக்கும் சண்டை. நாள் முழுக்க வேற வேலையே இல்லாத மாதிரி பக்கத்து ஊரப் பத்தி குறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நம்ம சரவணன் அந்த ஊரச் சேந்தவன். உனக்கே தெரியும் நாங்க ரெண்டு பேரும் எவ்ளோ பாசமா இருக்கோம்னு. இப்போ ஊருக்குப் போனா பாத்துக்கக்கூட முடியாது. முடிந்த அளவு புலம்பிவிட்டேன். கொஞ்சம் மனசு லேசானது.

    அவன் அறிவுரை கூற ஆரம்பித்தான். வெளிநாட்டுக்குப் போய் வந்ததால உங்க கிராமத்துல தனி மரியாதை குடுப்பாங்க. அதுமாதிரி தான் அவனுக்கும் அத உபயோகிச்சு இளைஞர்களக்கூட்டி எடுத்துச் சொல்லுங்க. யோசிக்க செய்ய நிறைய விசயங்கள் இருக்கு.  இந்த மாதிரி வயல், வரப்பு கடவுள் இந்த சண்டையிலேயே உங்க காலத்தக் கழிச்சிடாதீங்கனு. நீங்க படிச்சு வந்த மாதிரி இந்த இரண்டு வருசத்துல கண்டிப்பா கொஞ்சம் பசங்க படிச்சு வெளிய வந்திருப்பாங்க இல்ல. உங்களுக்குத்தான் தெரிஞ்சிருக்குமே.

    இல்லை. நானும் அவனும் வந்ததிலேந்து ஊர்ப்பக்கம் போகவேயில்ல. என்னவோ மனசுக்குப் பிடிக்கல. அவங்களுக்கு ஒண்ணும் பணத்துக்கெல்லாம் பிரச்சினையில்ல. வயல், சொத்துநிறையவே இருக்கு. இப்ப வேற வழியே இல்ல. அங்கதான் போயாகணும்.

    அடப்பாவிகளா. ஆச்சரியம் விநய் போசுக்கு. உங்க குடும்பத்தார் வரச்சொல்லி வற்புறுத்தலியா. உனக்கு ஒரு சகோதரி இருக்கறதா வேற சொன்ன. இது ரொம்ப தப்பு. ரெண்டு பேரும் சுயநலமா இருந்திருக்கீங்க. இப்ப போனவுடனே உங்களால ஊருக்கு என்ன செய்ய முடியும்னு யோசனை பண்ணுங்க. பிரச்சினைக்கு தீர்வு காண நினைக்கணுமே தவித்து அதுலேந்து ஓடி ஒளிய நினைக்கக் கூடாது.

    என்னவோ நண்பனின் அறிவுரை சரியெனப்பட்டது. ஊருக்கு வந்ததிலேந்து எல்லாரும் ரொம்ப அமைதியா இருக்கற மாதிரி தோணுது. ரெண்டுநாளுக்குமேல பொறுக்க முடியல. அக்காவிடம் கேட்டேவிட்டேன். என்ன ஆச்சு நம்ம ஊர் மக்களுக்கு எப்ப பாத்தாலும் அங்க வெட்டு இங்க குத்துனு தகவல் சொல்லிக்கிட்டேயிருப்பாங்க. இப்ப யாரும் பேசறதேயில்ல. ஊரடங்கால எல்லாரும் மாறிட்டாங்களோ?

    ஓ அதுவா. அய்யா வேற வழியில்லாம ஊர்ப்பக்கம் காலடி எடுத்து வச்சிருக்கீங்க. இந்த ஊர் மாறி வருசம் ஆச்சு. எப்ப பாத்தாலும் சண்டையிழுத்துக்கிட்டு அலைஞ்ச கிழக்கு ஊர்ப்பண்ணையாரோட அடியாட்களுக்கு நம்ம ஊர் பேக்டரியில நிரந்தர வேலை போட்டுக்குடுத்தவொடனே அந்த ஆள் தனியாநின்னு வாலாட்ட முடியாம அடங்கிட்டாரு. எல்லாம் உன்கூட படிச்சானே நிரஞ்சன். அவனோட ஐடியாதான். நல்ல பையன். ஊருக்கு நல்லதுபண்ணிட்டான்.

    இடை நாயிற்கு என்பு இடுமாறுனு பழமொழி இருக்குல்ல. ஆடுகளத் திருட நினைக்கறவன் முதல்ல அந்த வீட்ல வளக்கற நாய்க்கு எலும்புத்துண்டு போட்டுப் பழக்குவானாம். அது கத்தாம இருக்கறதுக்காக. அதுமாதிரிதான் நிரஞ்சனும் அந்தப்பண்ணையாரோட ஆட்டத்த நிறுத்த அவரோட அடியாட்களுக்கு வேலை போட்டுக்குடுத்து நம்ம பக்கம் சேத்துக்கிட்டான். இப்பவாவது நல்லது பண்ணணும்னு நினைச்சீங்கன்னா அவன் கூட சேந்து ஏதாவது திட்டம் போடுங்க. சொல்லிவிட்டுச் சென்றாள் உள்ளூர்ப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாய்ப்பணிபுரியும் என் சகோதரி.

    பாடல் 44

    அடையப் பயின்றார்சொல் ஆற்றுவராக் கேட்டால்
    உடையதொன் றில்லாமை யொட்டின் – படைபெற்று
    அடைய அமர்த்தகண் பைந்தொடி! அஃதால்
    ‘இடையன் எறிந்த மரம்’.

    பழமொழி – ‘இடையன் எறிந்த மரம்’

    அமுதவல்லி எனும் நான் வேலைக்கான நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வந்திருக்கேன். சென்னை எனக்குப் புதுசுதான். ஆனா இந்தக் கம்பெனியில எப்படியும் வேல வாங்கிரணும். அப்பதான் மிச்சமிருக்கிற கொஞ்ச நஞ்ச மானத்தக் காப்பாத்திக்க முடியும்.

    சரி. முதல்ல நம்மகிட்ட கேக்கப்போற கேள்விகள் என்னதா இருக்கும்னு யோசிப்போம்.

    பக்கத்திலிருந்த நபர் மெதுவா ஆரம்பிக்கிறார். மேடம் எத்தன வேகன்சி இருக்குனு தெரியுமா? உங்களுக்கு இந்தக் கம்பெனி பத்தின விவரத்த யார் சொன்னாங்க.

    நான் ஏதும் சிபாரிசுக்கடிதம் கொண்டு வந்திருக்கேனான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக நாசூக்கா கேக்கறாராமா.

    என் நிலைமை இப்படியா ஆகணும். எத்தன பேருக்கு அப்பா சிபாரிசுக்கடிதம் கொடுத்திருப்பார். எவ்வளவு பேர் அவரால பொழச்சிருப்பாங்க. பட்டியல் ரொம்ப நீளந்தான். ஆனா ஒருத்தருக்குக்கூட இப்ப கண்ணு தெரியலயே.

    அரைமணி நேரத்துக்கப்புறமும் யாரும் வரல. நாங்க ரெண்டுபேர் மட்டுந்தான் உக்காந்திருக்கோம். திரும்பவும் பக்கத்து நபர் பேச முயற்சிக்கிறார். அவருக்கு என்ன பிரச்சினையோ. நான் என் மவுனத்தைக் கலைத்தேன்.

    மொதல்ல உங்களப் பத்தி சொல்லுங்க சார். நீங்க உள்ளூரா. ஏதோ கேக்கறதுக்குன்னே காத்துக்கிட்டு இருந்தமாதிரி பேச ஆரம்பித்து தொடர்ந்து தன் நிலைமையப் புலம்பறார்.  அவரப் பொறுத்தமட்டிலும் உள்ள ஒரு வேகன்சிதான் இருந்திச்சுன்னா நான் விட்டுக்கொடுத்துடுவேன்னு நினைச்சு பொலம்பறார்.

    அப்டிப்பட்ட நிலமையிலா நான் இருக்கேன். அப்பா சேலத்துல பெரிய தொழிலதிபராத்தான் இருந்தாரு. ஆனா வரவன் போறவன்கிட்டயெல்லாம் வாக்கு குடுத்து அவுங்களுக்குத் தேவையானத செஞ்சிக்கிட்டே இருந்ததால தன் தொழில்ல கவனம் செலுத்தல.  பலவித ஏமாற்றங்கள். பொய்ப் புகழ்ச்சிக்கே மயங்கிக்கிட்டு இருந்த அவர கூட இருந்தவங்களே ஏமாத்திட்டாங்க. மொத்த சொத்தும் போச்சு. ஆனாலும் அவர் குணம் மட்டும் மாறவே இல்ல. அப்பறமும் யார் வந்து கேட்டாலும் கடன் வாங்கியாவது செஞ்சுகுடுத்து பெயரக் காப்பாத்திக்கிட்டு இருந்தாரு. கடைசியில கடன் அதிகமாகி மிச்சமிருந்த அம்மாவோட நகைகளையும் வித்து அடைச்சு நடுத்தெருவுக்குவந்துட்டோம். நல்லவேள நான் பிளஸ்2 முடிச்சிட்டதால அந்த தகுதிக்கு ஏத்த வேல தேடிக்கிட்டு பொழைக்கலாம்னு இங்க வந்திருக்கோம். இந்த ஜவுளிக்கடை சேல்ஸ் சூப்பர்வைசர் போஸ்ட் எனக்குக் கிடைச்சா நல்லா இருக்கும்.

    பொறுமையா கேட்டுக்கொண்டிருந்த அந்த பக்கத்து நபர் மனம் மாறிட்டார் போல. ஒருவேள ஒரு காலியிடம்தான் இருந்துதுன்னா நீங்களே சேந்துக்கோங்க. உங்க நிலைமை என்னய விட மோசம். ‘இடையன் எறிந்த மரம்’னு பழமொழி கேள்விப் பட்டிருக்கீங்களா.  அதுதான் உங்கப்பா நிலமையும். இடையன் கொஞ்சம் கொஞ்சமா கிளைய ஒடிச்சே ஒரு மரத்த அழிச்சுடுவானாம். பொருள் முழுக்க கையவிட்டு போனப்புறமும் அது இருக்கறமாதிரியே பந்தா பண்ணிக்கிட்டு எதுக்கு கடன்வாங்கி உதவி செய்யணும். இனிமேலயாவது உங்கப்பாவ கன்ட்ரோலா இருக்கச் சொல்லுங்க. தன் பங்கு அறிவுரையை உதிர்க்கிறார் அந்த நபர்.

    உள்ளேயிருந்து இன்னும் அழைப்பு வரவேயில்லை. இருவரும் காத்திருக்கிறோம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 276

    படக்கவிதைப் போட்டி – 276

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து நம் ஆசிரியர் குழுவினர் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (20.09.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 275இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 275இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நெடிது வளர்ந்துநிற்கும் தென்னை மரங்கள், ”நிமிர்ந்து பாருங்கள் எம்மை” என்று நம்மை அழைப்பதுபோலிருக்கும் இந்தக் கவின்மிகு காட்சியைப் படம்பிடித்து வந்திருப்பவர் திரு. எம். மோகன். இப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ”பெற்றபிள்ளை கைவிட்டாலும் தென்னம்பிள்ளை கைவிடாது” என்பது கிராமங்களில் வாழும் மக்களின் நீங்காத நம்பிக்கை!

    மகாகவி பாரதிகூடத் தம் பாட்டில் பராசக்தியிடம், காணிநிலமும், கேணியும், அதனருகே பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்களும் கேட்டார் என்பதிலிருந்து தென்னையின் அருமைதன்னை நன்குணரமுடிகின்றது.

    கண்ணைக் கவரும் தென்னை மரங்களைத் தம்  எண்ணச் சரங்களால் அலங்கரிக்க வருகின்றார்கள் புலமைமிகு கவிஞர் பெருமக்கள்! அவர்களை வாழ்த்தி வரவேற்போம்!

    *****

    ”பச்சை வயல்களின் ஓரத்திலே பாங்காய் நிற்கும் தென்னைகளை அழிக்காதே; இயற்கை அழகினில் இன்பம்கொள்!” என்று அறிவுறுத்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அழிக்காதே அழகை…

    பச்சை வயல்கள் ஒரத்தில்
    பார்க்க அழகாய்த் தென்னைகள்
    உச்சி மரத்தில் காய்களுடன்
    உயர்ந்தே நிற்கும் காண்பாயே,
    துச்ச மாக எண்ணாதே
    துணைதான் இயற்கை நமக்கேதான்,
    இச்சை கொண்டே அழிக்காதே
    இன்பம் கொள்வாய் அழகினிலே…!

    *****

    ”தன்னலமற்ற எண்ணம் உன்னுடையது; உன்தலை விரித்துக் கிடந்தாலும் அடுத்தவன் தலைக்கு எண்ணெய் தருகிறாய்! உன் நா வறண்டு கிடக்கையில் அடுத்தவன் நாவின் தாகம் தீர்க்கிறாய்” என்று தென்னையின் நல்லியல்புகளைப் பாட்டில் பட்டியலிட்டுள்ள முனைவர் செ.நீதி, தம்முடைய மற்றொரு பாட்டில், ”நீ என்னை மிதித்த போதும்  நான் உன்னை உயரத்தில் தானே வைத்திருந்தேன்?! மிதிவண்டியாகிய என்னைச் சாதாரணமாக நினைத்துவிடாதே! வாகன மாசுகளிலிருந்து இயற்கையைக் காக்கும் ஆத்மா இல்லாத ஆத்மா நான்!” என்று தென்னைகளின் அருகில் தனித்து நின்றிருக்கும் மிதிவண்டியையும் மதியூகியாய்ப் பேச வைத்திருக்கின்றார்.

    தென்னை

    வரிசையாய்நின்று யார் உயரம்? என்று
    வானிடம்கேட்டு நிற்கின்ற தென்னையே!
    உங்கள் உயரத்தை அளவிட முடியாமல்
    வானம் வியந்து முகம் வெளுத்து நிற்கிறது!
    கொடுப்பதில் உனக்கு நிகர் உலகில் இல்லை
    உயரத்தில் உனக்குச் சமம் எதுவுமில்லை!
    வேலை இல்லாதவனுக்கு உன் ஓலை வேலை தருகிறது
    குடில் இல்லாதவனுக்குக் குடிசைத் தருகிறது
    தன்னலமற்ற எண்ணம் உன்னுடையது
    உன்தலை விரித்துக் கிடந்தாலும் பரவாயில்லையென்று
    அடுத்தவன் தலைக்கு எண்ணெய் தருகிறாய்!
    உன் நா வறண்டு கிடக்கையில்
    அடுத்தவன் நாவின் தாகம் தீர்க்கிறாய்
    உன் உடலைக் காயப்படுத்தினாலும்
    சுவையான காயைத் தருகிறாய்
    உன் ஓடும் ஓசைதரும் கருவியாய்ப் பேசுகிறது
    உன் ஏடும் கைவினைப் பொருளாய் அழகைப் பறைசாற்றுகிறது!
    தலையாட்டுப் பொம்மைக்கும்
    தலையாட்டக் கற்றுக் கொடுத்ததும் நீதானோ?
    நீ தருவ தெல்லாம் நன்மை
    இது உலகம் அறிந்த உண்மை!
    கஜா புயல்உன் தலையைப் பிடித்துப் பிய்த்துப் போட்டபோது
    வலியைத் தாங்கித் தாய்போல் நின்றாய்!
    உன் சேயெல்லாம் வீழ்ந்த போது
    தென்னீர் தந்தவனுக்காகக் கண்ணீர்விட்ட மக்கள் எத்தனையோ பேர்!
    ஏழைகளின் வாழ்வாதாரம் நீ!
    ஓங்கி நில்! உலகத்தைத் தாங்கி நில்!
    பல்லாண்டு பல்லாண்டு பலகோடி யாண்டு!

    *****

    மிதிவண்டி!

    ஏய் நண்பனே! நன்றி மறந்தாயே நவீனப் பயணத்தில் ஓடி ஓடி -ஓடிய
    என் பயணத்தை நிறுத்தி விட்டாயே!
    சாலை ஓரத்தில்அனாதையாய் விட்டு விட்டாயே!
    விட்டுச் சென்ற கரங்கள் என்னை அழைத்துச் செல்லுமென்று
    முதியோர் இல்லத்து முதியவனாய் ஏக்கத்தோடு
    காத்துக்கொண்டிருக்கிறேன் கள்வன்கூட என்னை களவாட மறுக்கிறானே!
    அதோ காண்! தென்னையெல்லாம் என்னைப்பற்றி
    ஏதோ சலசலத்துப் பரிகாசம் செய்கிறது அதனால்தான்
    திரும்பி நிற்கிறேன் முகத்தைக்காட்ட வெட்கப்பட்டு!
    நீ என்னை மிதித்த போதும்- நான்
    உன்னை உயரத்தில் தானே வைத்திருந்தேன்!
    பழமையை விட்டுப் புதுமையில்
    பாரதி கண்ட செந்தமிழ்நாட்டைத் தொலைத்து விட்டாயே!
    நீ காணும் பாரதத்தை இதோ பாரய்யா!
    நஞ்சை நிலமெல்லாம் நஞ்சாகிப் போனதய்யா
    புஞ்சை நிலமெல்லாம் புண்ணாகிப் போனதய்யா
    சாலையோர மரங்களெல்லாம் காணாமல் போனதய்யா
    ஒற்றையடிப் பாதையெல்லாம் மறைந்து போனதய்யா
    ஆறுகள் எல்லாம் கழிவாகிப் போனதய்யா
    வாழ்க்கை தடம் மாறிப் போனதய்யா
    தூய்மையான காற்றில் இன்று துர்நாற்றம் வீசுதய்யா
    நாகரிகம் என்ற சொல்லும் துகிலுரிக்கப் பட்டதய்யா
    மிதிவண்டியாகிய என்னைச் சாதரணமாக நினைத்துவிடாதே
    வாகன மாசுகளிலிருந்து இயற்கையைக் காக்கும்
    ஆத்மா இல்லாத ஆத்மா நான்!

    *****

    ”ஒருகாலத்தில் மிதிவண்டி மட்டுமே இருந்த இல்லத்தில் ஆரோக்கியம் மட்டுமே இருந்தது! இன்றோ வாகனங்களின் மிகுதிபோல நோய்களும் மிகுந்துவிட்டன” என்று நியாயமாய்க் கவலையுறும் இயற்கை விவசாயியைக் காண்கின்றோம் திரு. சீ. காந்திமதிநாதனின் கவிதையில்.

    நான் ஒரு இயற்கை விவசாயி அப்பா
    காலநேரத்தைச் சரியாகக் கணக்கிடும் பட்டதாரி விவசாயி அப்பா!

    எதிர்காலத்தில் விவசாயம்தான் அதிக வருமானம்
    பெற்றுத்தரும் தொழிலாக இருக்கும் அப்பா!

    இயற்கையோடு இயைந்த வாழ்க்கை
    எனது வாழ்க்கை முறை அப்பா!

    மிதிவண்டியில் வந்து விவசாயம் காலை மாலை
    விளைச்சல் நிலம்தான் என் உடற்பயிற்சிக் கூடமப்பா!

    ஏன் செய்கின்றோம்
    எதற்குச் செய்கின்றோம்
    எதனால் செய்கின்றோம்
    என்ற சிந்தனை மறந்த நிலையில் தான்
    செய்வினை செய்பவர்களைப் பார்த்துச் சில கேள்விகள்…

    நடையை மறந்து எரிபொருள் வண்டியில் பயணிப்பதால்
    இருமடங்கு செலவை அதிகரிக்கிறீர்கள்!

    ஒன்று எரிபொருளுக்கு…
    மற்றொன்று வைத்தியத்திற்கு!

    ஏன் ஒரு முப்பது நிமிடங்கள் முன்னதாக
    மிதிவண்டியில் செல்ல முடியாதா?
    பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியாதா?

    ஒருகாலத்தில் மிதிவண்டி மட்டுமே இருந்த இல்லத்தில்
    ஆரோக்கியம் மட்டுமே இருந்தது!

    இன்றோ
    இருசக்கர வாகனங்கள் இரண்டு!
    நான்கு சக்கர வாகனங்கள் ஒன்று!
    நோய்களின் எண்ணிக்கையும் ஒன்றுக்கு இரண்டாக!!

    சிந்திப்போம்…
    எது தேவையோ
    அதைத் தேடுவோம்
    அதை நாடுவோம்
    மற்றதை விடுவோம்

    இலவசமாக
    ஏரோபிளேனே கிடைத்தாலும்
    தேவையில்லை எனில்
    வாழ்க்கை பிளானில்
    இல்லை யென்று
    பிளாக் செய்து விடுவோம்!

    *****

    ”பசுமை வரப்பினிலே உடற்பயிற்சிக்கு ஏற்றதென நினைத்து வந்தவரின் மிதிவண்டி இது” என்று அதனை அறிமுகப்படுத்தும் திருமிகு. சுதா மாதவன், ”வாருங்கள்! மிதிவண்டியில் மனமகிழ்ந்து மிதந்துசெல்வோம்” என்று நமையழைக்கிறார்.

    பசுமை வரப்பினிலே
    வரிசையாய் நிற்கும் தென்னை மரத்தருகே
    உடற்பயிற்சிக்கு ஏற்றதென
    நினைத்தவருடைய மிதிவண்டி

    அழகிய சாலை நெடும் பயணம்
    ஆள் அரவமில்லாமல் வெறிச்சோட
    இரு சக்கரங்களை மிதிக்கும் போது
    மனம் பூங்காற்றில் அமைதியுறுமோ?

    எரிபொருள் விலையேற்றம்
    பொதுப் பயண மார்க்கங்கள்
    இயங்காத காலமிது என்பதனால்
    மிதிவண்டிப் பயணத்திலே
    மிதந்து செல்வோம் மனமகிழ்ந்து!

    *****

    ”சூரியனை மறைத்துச் சற்றே தாகம் தீர்த்திட வானுயர்ந்து வளர்ந்த தென்னை நிழலிங்கே, வளரும் புஞ்சையை மட்டுமல்லாது மறந்து போன விவசாயியையும் விவசாயத்தையும் தளராது காத்து நின்றதே!” என்று வியக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    தொலை தூரப் பயணம்
    தொய்வில்லாமல் செல்ல
    சாலையோரம் எங்கும்
    தென்னை மரங்களை நட்டோம்!
    கார்மேகம் வந்து
    மாதம் மும்மாரிப் பொழிந்து
    வளம் எல்லாம் பெறுக
    வசதிகள் வந்து
    காரில் பயணம் செய்வதாய்
    வரும் தினம் கனவு!
    கரங்களாய் நீண்ட கதிர்களால்
    சீதையைச் சிறைபிடித்த ராவணனாய்
    எங்கள் வாழ்வைச்
    சிறைபிடித்த சூரியன்!
    வானரப் படை சூழச்
    சீதையை மீட்க வந்த ராமனாய்
    விண்மீன்கள் படை சூழ
    இரவில் வந்த வெண்ணிலவு
    இதயத்தை குளிரவைத்ததே!
    மெல்ல நகர்ந்திடும் நாடு
    முன்னேற்றப் பாதையில்
    பாதைகள் மாறியது சாலைகளாய்
    இன்னும் மாறாத
    எங்கள் வண்டிச்சக்கரம்
    என்றும் துணையாய் வரும்
    மிதிவண்டிச் சக்கரம்
    வானம் பார்த்த பூமியாய்
    வானம் பார்த்து
    மழை வருமோ என எதிர்பார்த்து
    வாழ்ந்திடும் எங்கள்
    வாழ்க்கை சக்கரம் மாறிடுமோ?
    ஓடிடும் மேகம்
    சூரியனை மறைத்து
    சற்றே தாகம் தீர்த்திட
    வானுயர்ந்து வளர்ந்த
    தென்னை நிழலிங்கே
    வளரும் புஞ்சையைக்
    காத்து நின்றதே
    மறந்து போன
    விவசாயியையும்
    விவசாயத்தையும்
    அது காத்து நின்றதே!

    *****

    தென்னையையும் மிதிவண்டியையும் வைத்து அருமையான கருத்துக்களைக் கவிமுத்துக்களாய்க் கோத்துத் தந்திருக்கும் பாவலர்களின் கவியாற்றலுக்கு என் வந்தனங்களையும் பாராட்டுக்களையும் சாற்றி மகிழ்கின்றேன்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    மிதிவண்டியும் தென்னையும்!

    ஆட்டும் திசையில் ஆடும்
    காட்டும் திசையில் ஏகும்
    நேர்பாதையில் நிமிர்ந்து செல்லும்
    மிதிவண்டியும் தென்னையைப் போலே…

    முதலில் கீழே சறுக்கும்
    மிதித்து ஏறக் கீழ் தள்ளும்
    பழகப்பழகக் கைக்கொள்ளும்
    சீராய் ஏற்றம் கொள்ளும்…

    க(ள்)ல்(ளு)லும் முள்ளும் கவனம்
    நேர்பாதையில் செல்ல முன்னேற்றம்
    வீண் ஆட்டம் போடாது வாழ – வெற்றிக்
    கனியும் கையில் கிட்டும்!

    ”முதலில் கீழே சறுக்கும்; மிதித்து ஏறக் கீழ் தள்ளும்; க(ள்)ல்(ளு)லும் முள்ளும் கவனம்; நேர்பாதையில் செல்ல முன்னேற்றம்” என்று மிதிவண்டிக்கும் தென்னைக்கும் பொருந்துவதாய்த் தம் கவிதையில் இரட்டுற மொழிந்துள்ள (சிலேடை) திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • Q&A: பெயருக்கு முன்பு அடைமொழிகளை இடுவது எப்படி?

    Q&A: பெயருக்கு முன்பு அடைமொழிகளை இடுவது எப்படி?

    அண்ணாகண்ணன்

    நோக்கர் உறுப்பினர் கதீப் மாமூனா லெப்பை அவர்களின் கேள்விக்கு எனது பதில் இங்கே.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அக இலக்கியச் சிறு பாத்திரங்கள் – 14 (தலைவியின் தந்தை)

    அக இலக்கியச் சிறு பாத்திரங்கள் – 14 (தலைவியின் தந்தை)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த் துறைத்தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    சிறுபாத்திர வரிசையில் அடுத்து நிற்கும் தந்தை என்ற உறவுமுறை அகஇலக்கியத்தில் தலைவியின் தந்தை, தலைவனின் தந்தை, தலைவனே தந்தை என்னும் மூன்று நபர்களுக்கு உரியதாக இருப்பதே அப்பாத்திரத்தின் தனிச்சிறப்பாக  உள்ளது. அகஒழுக்கம் பேசும்  தொகை நூல்களில் எங்கும்; தந்தை பாடல் காட்சியில் நேரடியாகப் பேசவே இல்லை. அவர் பேசுவதைத் தோழியும் தலைவியும் எடுத்துச் சொல்வதாக மூன்று பாடல்கள் உள்ளன.

    தந்தையின் பேச்சு

    தன் செல்லமகள் தரையில் நடந்தால் கூடத் தாங்கமாட்டாமல் ‘தரையில் நடக்கிறாயே! உன் கால்கள் சிவந்து விடும்’ என்று அங்கலாய்க்கும் தந்தையின் இயல்பான அன்பின்  ஈர்ப்பைத் தோழி தலைவனிடம்;

    “எந்தையும் நிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப
    எவனில குறுமகள் இயங்குதி என்னும்” (அகம்.- 12)

    என எடுத்துரைத்து ‘உடன்போக்கு வேண்டாம்; பெண்கேட்டு வந்து மணந்து கொள்’ எனத் தூண்டுகிறாள்.

    “இன்தீம் பலவின் ஏர்கெழு செல்வத்து
    எந்தையும் எதிர்ந்தனன் கொடையே” (அகம்.- 282)

    என்று மகள் விரும்பிய தலைவனுக்கே அவளை மணம்செய்து கொடுக்கச் சம்மதித்த தந்தை பற்றியும் தோழியே உரைக்கிறாள். மணம் செய்து கொடுக்க உடன்பட்டமை குறித்துப் பேசும் பிற பாடல்களும் உள (கலி.- 41, 107). மகட்கொடைக்குத் தந்தை ஒருப்பட்டமை பற்றித் தலைவியும் எடுத்துச்சொல்கிறாள் (குறுந்.- 51).

    தந்தை பற்றிப் பேசும் தலைவன் 

    காதல் வயப்பட்ட தலைவன் தன் காதலியின்  இளமைநலமும், செல்வச்  செழிப்பும் பற்றித்  தனக்குள் பேசிக் கொள்ளும் போது;

    “பெருங்கண் ஆயம் உவப்ப தந்தை
    நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்து”ப் (நற்.-140)

    பந்தாடும் பருவத்தையும், செல்வத்தின் அடையாளமாக அவளது தந்தையின் வளமனை முற்றத்தில் இருந்த தேரையும் காட்சிப்படுத்துகிறான்.

    தோழியிடம் உடன்போக்கிற்கு  மறுக்கும்போது;

    “பெரும்பெயர் தந்தை நீடுபுகழ் நெடுநகர்” (நற்.- 162)

    என்று அவளது மாளிகை வாழ்வையும், தந்தையின் நற்பெயரையும் எடுத்துச் சொல்லியே தலைவன் தயங்குகிறான். நகர் என்பது மாளிகையையே குறிக்கும்.

    பாங்கனிடம் தான் விரும்பும் தலைவியின் பெருமை பேசும்போது உண்ண மறுத்து ஓடி ஒளிந்து தாயை அலைக்கழிக்கும் அவள்;

    “செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்” (நற்.- 324)

    வளமான வாழ்க்கை உடையவள் என்று தந்தையின் செல்வம் மிகுந்த மாளிகைக்குச் சிறப்பளிக்கிறான்.

    தலைவியிடம் பேசும் போது; காதலித்த பெண்ணைக் கைப்பிடிக்கத் தமரோடு வந்து பெண்கேட்கும் முறை இருப்பினும்; திட்டவட்டமாகப் பெண் கொடுக்கச் சம்மதிப்பாரெனின்;

    “நுந்தை நும் ஊர் வருதும்
    ஒண்டொடி மடந்தை நின்னை யாம் பெறினே” (ஐங்.- 92)

    என்று தலைவியின் தந்தை மனநிலை அறிய ஆவலுறுகிறான். இதுபோல் அவளது செல்வமிகுந்த வாழ்க்கை முறையைச் சுட்டும் போதும் (கலி.- 57), மாலைப்பொழுதில் அவளைச் சந்திக்கத் திட்டமிடும் போதும் (நற்.- 204), உடன்போக்கின் போது அவளை மகிழ்விக்கும் போதும்  (நற்.- 202, 362; அகம்.- 99) அவளது தந்தையைக் குறித்துப் பேசுகிறான்.

    தந்தை பற்றிப் பேசும் தலைவி

    களவுக்காலத்தில் பிரிந்து இருக்கும் தலைவனை எண்ணி ஆற்றி இருக்கும் தலைவி  ஆற்றோடு பேசும்போது; ‘என் விருப்பத்திற்கு உரிய காதலனின் மலையிலிருந்து உன்னைப் பூவால் மறைத்துக் கொண்டு வருகிறாய். ஆரியரின்;

    “பொன்படு நெடுவரை புரையும் எந்தை
    பல்பூங் கானத்து அல்கி இன்று இவண்” (அகம்.- 398)

    வேங்கை மரநிழலில் தங்கி; மழை பொழியப் பெருகிப் பின்னர் செல்வாயாக’ என்கிறாள். தன் தந்தையின் காடு இமயமலைக் காட்டை ஒத்தது என்னும் பெருமிதம் அவள் பேச்சில் விஞ்சி நிற்கிறது.

    களவுக்காலக் கேண்மையில் தலைவனை நன்கு புரிந்து கொண்டு;

    “கொள்ளாது போகாக் குணன் உடையன் எந்தை தன்” (கலி.- 61)

    ‘மனம் குறைவுறாதபடி வேண்டுவன கொடுத்து; என்னைக் கைப்பற்றாமல் போக மாட்டான்’ என; அவனது நினைத்ததைச் சாதிக்கும் பண்பைப் பற்றித் தோழியிடம் பேசுங்கால் தந்தை மனம் குளிரும் என்ற எதிர்பார்ப்புடன் தலைவி பேசுகிறாள். இதுபோல் தோழியிடம் பகற்குறி குறித்தும் (குறுந். – 269), இரவுக்குறி குறித்தும் (அகம்.- 370), அறத்தொடு நிற்க வற்புறுத்தியும் (கலி.- 111) பேசும்போது தந்தையைக் குறிப்பிடுகிறாள்.

    பரத்தையை நோக்கிப் பேசும் தலைவி;

    “எந்தை எனக்கு ஈத்த இருவளை ஆரபூண்” (பரி.- 20)

    ஆகிய ‘இவை உனக்கு வந்த வழி களவுவழி இல்லையெனில்; உனக்கு இவற்றைத் தந்தவனை எனக்குக் காட்டு’ என்று வினவுகிறாள்.

    தந்தை பற்றிப் பேசும் தோழி

    அறுவடை தொடங்கி விட்டதால் தலைவி தினைப்புனம் காக்க வரமாட்டாள்; அவளைப் பகலில் சந்திக்க இயலாது என்று தலைவனுக்கு உணர்த்தும் தோழி;

    “தந்தை வித்திய மென்தினை” (நற்.- 306)

    என புன்செய் வேளாண்மை தலைவியின் தந்தைக்குரிய தொழில் என்பதை முதன்மைப்படுத்துகிறாள். இதுபோல் பிரிவுக் காலத்தில் தலைவியின் விருப்பம் பற்றியும் (ஐங்.- 6), பகற்குறி பற்றியும் (அகம்.- 80, 308), இரவுக்குறி பற்றியும் (நற்.- 98; அகம்.- 298), தாய்க்குத் தெரிந்தால் ஏற்படும் ஏதம் பற்றியும் (நற்.- 317) பேசும் போதெல்லாம் தலைவியின் தந்தை இடம் பெறுகிறார்.

    தலைவியுடன் தந்தை பற்றிப் பேசும் தோழி தலைவன் சிறைப்புறமாக நிற்கக் குறியிடத்தைத் தேர்வு செய்கிறாள்.

    “பெருநீர் அழுவத்து எந்தை தந்த கொழுமீ”னை (அகம்- 20)

    ‘வற்றலாக உணக்க நாங்கள் கடற்கரை மணல்மேட்டில் உள்ள புன்னைமர நிழலில் இருப்போம்’ என்று கூறும்போது; தலைவியின் தந்தை கடலில் மீன் பிடிக்கும் தொழில்  முதலிடம் பெறுகிறது. இதுபோல் அறத்தொடு நின்றமை குறித்தும் (குறுந்.- 374), தினைப்புனம் காக்கச் சொன்னமை குறித்தும் (நற்.- 134),  பேசும் போது தந்தை மதிப்புடன் சுட்டப்படுகிறார்.

    செவிலியிடம் அறத்தோடு நிற்கும் தோழி;

    “நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி”த்  (குறிஞ்சிப்- அடி- 20)

    தலைவி தலைவனுடன் கொண்ட களவொழுக்கம் பால்வயத்தான் தந்தையின் காவலை மீறி நிகழ்ந்தது என்று கூறிடினும்; தந்தையின் செல்வவளத்தையும், மகளைக் காக்கும் பொறுப்புணர்வையும் சுட்டுவது நோக்கத்தக்கது. செவிலியிடம் தலைவியின் களவொழுக்கத்தை மறைக்கும் போதும் (அகம்.- 158) தந்தைக்கு இடமுண்டு.

    தந்தை பற்றிப் பேசும் தாய்

    மகட்போக்கிய தாயின் வாய்மொழியில்; தன்மகள் நற்பெயர் பெற்ற தந்தையின் அரிய காவலைக் கடந்து; என்னையும் நினைக்காமல்; தோழியரையும் பிரிந்து எவனோ ஒருவனுடன் சென்று விட்டாளே எனும் புலம்பல் வெளிப்படுகிறது.

    “நெடுமொழித் தந்தை அருங்கடி நீவி” (அகம்.- 17)

    என்ற பாடலடி தந்தையின் புகழையும், மகளை அவன் காத்த பொறுப்பையும் ஒருங்கு சொல்கிறது. இதுபோல் அவளை உண்ண வைக்கத் தான் பாடு  பட்டமையை  (அகம்.- 219) உரைக்கும் போதும் ‘தந்தை பங்கிற்கு இதை உண்’ என்று வற்புறுத்தியமை பற்றிக் கூறுகிறாள்.

    உடன்போன மகளைப் பிரிந்த சோகம் தீராத தாய்; தான் தேடிச் சென்ற இடைச்சுரத்தில் இன்னொரு இணையான தலைமக்களைப் பார்த்தவுடன்; தன் மகளை ஒத்த அப்பெண்ணை அவளது காதலனுடன் ஊருக்கு அழைத்து வந்து விருந்து உபசரிக்கிறாள். தன்னைப் பிரிந்தவளின்

    “தந்தை தன் ஊர் இதுவே” (நற்.- 198)

    என்று சொல்லிக் கண்டோரிடம் தந்தையே மகளுக்கு உரிய முகவரி என்பதை அடையாளப்படுத்துகிறாள்.

    பின்புலத்தில் தந்தை

    ஆயத்துடன் விளையாடும் பரதவப் பெண்கள் மீன் வேட்டை முடிந்து வரும் திமில்களைக் காட்டி;

    “எந்தை திமில் இது நுந்தை திமில் என” (நற்.- 331)

    விளையாட்டின் இடையில் தம் தந்தை திமிலையும் பிறர் திமிலையும் அடையாளம் கண்டு சுட்டுவதைக் காண்கிறோம்.

    திருமணத்திற்குப் பின் தன் வீட்டு முற்றத்தில் நிற்கும் பலா மரத்துக் கனிகளைக் குரங்குகள் உண்ணாதபடி அங்கே உரலில் குற்றும் கொடிச்சியின் உலக்கைப்பாட்டு அவளது தந்தையின் மலை பற்றியது.

    “தந்தை மைபடு நெடுவரை பாடினள்” (நற்.- 373)

    என்றே பாடற்பின்புலம் அமைகிறது.

    உவமையில் தந்தை

    வெண்கல் உப்பை விற்கச் செல்லும் போது; சேற்றிலே சிக்கிய வண்டியை அரிதின் முயன்று இழுக்கும் பகடு போல்; மீள இயலாதபடி  அவளது கண்கள் என் உயிரை நோகச் செய்கின்றன எனத் தலைவன்  சித்தரிக்கும் போது;

    “எவ்வம் தீர வாங்கும் தந்தை
    கைபூண் பகட்டின் வருந்தி” (அகம்.- 140)

    அவளைத் தவிர்க்க முடியாத தன் வருத்தத்தைத் தெரிவிக்க; தந்தையின் தொழிலையே  அடிப்படையாகக் கொண்டு  உவமிக்கிறான் தலைவன்.

    தந்தையின் வாழ்விடமும் தொழிலும் இனமும்

    தந்தை பற்றிய குறிப்புகள் அனைத்தும் அவன் வாழும்  நிலம், செய்யும் தொழில், சார்ந்த இனம் ஆகியவற்றைத் தாங்கியுள்ளன.

    “தேன்நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை” (அகம்.- 58)

    என்னும் பின்புலத்தில் குறிஞ்சித்திணை சார்ந்த தந்தை இடம்பெறுகிறான். அவன் குளிர் காலத்தில் வீட்டின் உள்ளே புலித்தோல் படுக்கையில் தூங்குபவனாகக் காணப்படுகிறான் காட்டில் ஆடு மேய்க்கும் தந்தைக்குக் கறவைக்கலம் கொண்டு கொடுக்க வேண்டிய தன் கடமையை  உணர்ந்து தலைவனிடம்;

    “இனத்துளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ” (கலி.- 108) என; ‘உன் நெஞ்சை என் இருப்பிடமாகக் கொள்வது எப்படிச் சாத்தியம் ஆகும்? அப்படிக் கொண்டால் என் தந்தைக்குக் கறவைக்கலம் கொடுப்பது எப்படி?’ என்று வினவும் தலைவியின் தந்தை முல்லைத் திணைமாந்தன் என்பது சொல்லாமலே விளங்குகிறது.

    தன் தந்தைக்கு ஆற்றில் பிடித்த வரால் மீனை வஞ்சி விறகில் சுட்டு ஊட்டும் காட்சியைப் பின்புலமாகக் காட்டும் பாடல்;

    “நாரரி நறவுண்டு இருந்த தந்தைக்கு”ப் (அகம்- 216)

    பாசத்துடன் உணவளித்த பாணர் குலத்துப் பெற்றவன் மகள் உறவைப்  புனைந்துரைக்கிறது.

    இரவுக்குறி நேரும் தோழி;

    “நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்” (நற்.- 323)

    பற்றித் தொடரும் போது அத்தந்தை பரதவன் என்று தெளிவாகிறது.

    உப்பிற்கு மாறாகப் பெற்ற நெல்லைச் சோறாக்கி அயிலைமீன் குழம்பு ஊற்றி உண்ணக் கொடுக்கும் உமட்டியை;

         “………………… ………… ………… தந்தைக்கு
    உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு
    அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து
    கொழுமீன் தடியோடு குறுமகள் கொடுக்கும்” (அகம்.- 60)

    என்று புனையும் பாட்டில் தந்தை மீன்பிடிக்கும் செய்தி முதலில் இடம் பெறினும்; உப்பு விற்ற உமட்டியின் தந்தையை உமணன் என்று சொல்வது ஏற்புடைத்தே.

    மகள் உடன்போன பின்னர் அவளைத்  தேடியலையும் தாய்;

    “கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்” (அகம்.- 145)

    ‘செல்வ வாழ்க்கையும்; நடந்தால் கூட அடி வருந்தும் மென்மையும் கொண்ட மகளைக் கோலால் முதுகில் நையப் புடைத்தேனே’ என்று தன்னையே நொந்து கொள்கிறாள். இங்கே ‘கூழுடைய தந்தை’ என்பதால் அத்தந்தை புன்செய் வேளாண்மை செய்யும் கிழான் என்று குறிப்பாக அறிய முடிகிறது.

    தலைவியின் தந்தைக்குப் பெருமை சேர்க்கும் பண்புகள்

    தலைவியின் தந்தைக்கு  செல்வம் முதல்  பெருமையாகப் பலவிடங்களில் பேசப்படுகிறது. பிறந்த வீட்டில் தலைவி எவ்வளவு ஆடம்பரத்துடன் வாழ்ந்தாள் என்று சொல்லிப் பின்னர்த் தொடரும் போது தந்தையின் பெருமைக்கு செல்வமே காரணம் என உணர இயல்கிறது.

    “தந்தை அல்குபதம் மிகுந்த கடியுடை வியனகர்” (அகம்.- 49)

    என்ற தாயின் மொழி வயிற்றுப்பசிக்கு வாய்ப்பில்லாத செல்வமுடைய தந்தையைத் தான் நமக்கு அறிமுகம் செய்கிறது.

    தன் செல்வத்தைத் தந்தை பலருக்கும் ஈந்தான் என்பதால்;

    “இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும்
    விழுப்பொருள்”

    என அவன் புகழப்படுகிறான் (கலி.- 61).

    தனது பங்காளிகளை எல்லாம் தாங்கும் பெருமை பொருந்திய;

    “முளையணி மூங்கிலிற் கிளையொடும் பொலிந்த
    பெரும்பெயர் எந்தை” (அகம்- 268)

    என்று போற்றப்படுவது இன்னொரு சிறப்பு. மூங்கில் முளைகளைப் போல் பல கிளைகளைக் கொண்ட குடும்பம் நம் கற்பனைக்கு வளம் சேர்க்கிறது.

    பரதவர் குலப் பெண்ணுடைய  தந்தையின் பெருமை; அவன் சுறாமீனைக் கொன்ற வினைத்திறன் என வெளிப்படுகிறது.

    “கடும் சுறா எறிந்த கொடும்தாள் தந்தை” (நற்.- 392)

    என்று அவன் போற்றப்படுகிறான்.

    “அஞ்சாயோ இவள் தந்தை கைவேலே” (ஐங்.- 60)

    என்று மருதநிலத் தலைவனிடம் தோழி கேட்பது பொதுவாகவே எல்லாத் தந்தையரும் ஆயுதத்தோடு இருந்ததைக் காட்டுகிறது.

    தந்தைக்கு இழிவு

    தலைவனோடு தான் கொண்ட  நட்பு தன் வாழ்வின் திசையை மாற்றப் போகிறது என்று புரிந்த பொழுது; உடன்போகுமுன் தன்னால் தந்தையின் நற்பெயருக்கு இழுக்கு நேரப் போகிறது என்று வருந்துகிறாள்.

    “பெரும்பெயர் எந்தை அருங்கடி நீவி”த் (அகம்.-268)

    தானெய்திய கேண்மையால் பழி ஏற்பட்ட கவலையில் சோர்கிறாள்.

    தந்தையின் கடமை

    மகள் பாதுகாப்பைப் பொறுத்த மட்டில் இருவேறு நிலைகளைக் காண இயல்கிறது. வேளாளர் இனத்தந்தை  தன் மகளைக் காத்து நிற்பதொன்றே கடப்பாடுடையவன் எனக் கருதப்பட்டான்.

    “………….. …………… …………  தந்தை
    அருங்கடி காவலர் சோர்பதன் ஒற்றி
    கங்குல் வருதலும் உரியை” (அகம்.- 2)

    என்று தோழி தலைவனை; இரவுப்பொழுதில் எவ்வாறு தந்தையின் காவலர் சோர்ந்து இருக்கும் நேரத்தில் வரவேண்டும் என்று அறிவுறுத்துகிறாள்.

    திணைமாந்தருள் தந்தை தேவைப்படும் பொழுதெல்லாம் மகளை வேளாண்மையில் காவல் தொழிலுக்கு அனுப்புகிறான். புனக்காவலுக்கு நேரமும் வாய்ப்பும் ஒதுக்கி அவளை ஏவல் செய்பவன் தந்தையே.

    “எந்தை வந்து உரைத்தனனாக அன்னையும்” (நற்- 206)

    சேர்ந்து தம்மைப் புனக்காவலுக்கு அனுப்பியதாகத் தான் தோழி தலைவனிடம் உரைக்கிறாள். அறுவடைக்காலத்தில் தலைவி வீட்டில் பாதுகாப்புடன் இருக்க வேண்டி வரும் என்பது தொடரும் செய்தியாகும்.

    வரலாற்றுக் குறிப்புகளில் தந்தை

    அகப்பாடல்களில் பண்டைத்தமிழகத்து வரலாற்றுச்செய்திகள் பல விரவிக் கிடக்கின்றன. அவற்றுள் பெண்டிரின் தந்தையைச் சுட்டி அமையும் குறிப்புகளுள், சேந்தனின் தந்தை அழிசியின் ஆர்க்காடு போன்ற தலைவியின் நலம் என்னும் உவமையால்   பெருமைப்படுத்தப்படும் வேளாளனின் நெல்வளம் பின்புலமாக அமையத் தன் காதலியின் இதழ்ச் சிரிப்பைப் பற்றி நெஞ்சோடு;

    “திதலை எஃகின் சேந்தன் தந்தை
    தேன்கமழ் வியன்தார் இயல்தேர் அழிசி” (நற்.- 190)

    எனப் பேசுகிறான் தலைவன். இதே பின்புலம் இன்னொரு பாடலிலும் (குறுந்.- 258) அமைந்து; அக்காலத்தில் யானை உடைய இக்குறுநில மன்னன் எவ்வளவு சிறப்புப் பெற்றிருந்தான் எனப் புலப்படுத்துகிறது.

    அன்னி மிஞிலியின் வரலாறு அவள் தந்தை மேல் கொண்டிருந்த பாசத்தையும், மனஉறுதியையும், வீரத்தையும் காட்டுகிறது. கோசர் இரக்கமின்றி அவளது தந்தையின் கண்களைப் பிடுங்கி விட்டதால் (அகம்- 262) அவள் வஞ்சம் கொண்டு அவர்களைக் கொன்றாள் என்பதை;

    “……………….. ………….. ……………………… தந்தை
    கண்கவின் அழித்த தன் தப்பல் தெறுவர” (அகம்.- 196)

    என அவள் பழி தீர்த்துக் கொண்டதைப் பார்க்கிறோம்.

    அகுதை என்னும் திணைமாந்தர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மகளின் தந்தை; சோழமன்னன் பருவூர்ப் போரில் சேரபாண்டியரை  வென்றபோது தோற்ற வேந்தரின் யானைகளைக் கவர்ந்தான் (அகம்.- 96)

    “இன்கடும் கள்ளின் அகுதை தந்தை” (குறுந்.- 298)

    என்று கள்ளோடு சேர்த்துப்  புனையும் முறை திணைமாந்தர் சமுதாயத்தின்  அடையாளமாகத் தொகைநூல்களில் காணப்படுகிறது.

    ஐயை எனும் மகளின் தந்தை தித்தன் எனும் வரலாற்றுச் செய்தி;

    “இழையணி பணைத்தோள் ஐயை தந்தை
    மழைவளம் தரூஉம் மாவண் தித்தன்” (அகம்.- 6)

    எனும் பாடலடிகளில் உள்ளது. இது உறந்தையை ஆண்ட குறுநில மன்னன் பற்றியது. இவனை வீழ்த்தித் தான் சோழர் தம் தலைநகரை நிறுவினர்.

    ‘தந்தை’ சிறுபாத்திரம் உணர்த்தும் சமூகக்கொள்கைகள்

    மகள் பாதுகாக்கப்பட வேண்டியவள் என்னும் சமூகக் கொள்கை தந்தை பற்றிய பாடற்குறிப்புக்களால் விளக்கம் பெறுகிறது. அத்தகு காவலை மீறித் தன் காதலியை இரவுக்குறியில் சந்தித்தமை தலைவனுக்குக் குறிப்பிடத்தக்க பெருமிதத்தையும் கொடுக்கிறது.

    “அருங்கடிக் காவலர் இகழ்பதம் நோக்கிப்
    பனிமயங்கு அசைவளி அலைப்ப தந்தை
    நெடுநகர் ஒருசிறை நின்றனென் ஆக” (அகம்- 162)

    என்று தனது தீரச்செயலாகவே; தலைவியைச் சந்தித்த நிகழ்வைத் தலைவன் வருணிக்கிறான். நள்ளிரவில் பனிக்காற்றால் நடுங்கிக் கொண்டு காவலர் சோர்ந்து போகும் நேரத்திற்காகக் காத்து நின்று; தலைவியது தந்தையின் மாளிகைப் புறத்தில் நின்றமையை மனக்குறை ஏதுமின்றிச் சாதனையாகத் தான் தலைவன் கூறுகிறான். பாணர் குலத் தந்தையும் மகள் பாதுகாப்பைத் தலையாய கடனாகக் கொண்டமை;

    “அருங்கடி அயர்ந்தனன் காப்பே எந்தை ” (நற்.- 295)

    என்ற ஔவையாரின் பாடலடியில் புலனாகிறது.

    ஆணாதிக்கச் சமுதாயம் ஆதலால்; ‘தந்தையின் மனை’ என்றே சொல்லப்படுவதைக் காண இயல்கிறது. தலைவி தலைவனோடு செல்லும்போது;

    “……… …………. ………  நுந்தை
    மனைவரை இறந்து வந்தனை” (நற்- 362)

    என்கிறான் தலைவன். ‘தாய்வீடு’ என்ற தொடரைக் காண இயலவில்லை.  குடும்பத்தலைவனாகிய தந்தையே எங்கும் முதன்மை பெறுகிறான். வேளாளர் வளமனை மட்டுமின்றிக் குறிஞ்சித் திணைமாந்தரின் வேங்கைப்பூ உதிர்ந்த முற்றமும்;

    “…………………………. எந்தை வேங்கை
    வீஉக விரிந்த முன்றில்” (நற்.- 232)

    எனத் தந்தையையே முதலுரிமைக்குரியவன் எனச் சொல்வதைக் காண்கிறோம். அன்றைய சமுதாயத்திலிருந்த  ஆணாதிக்கம் தலைவியது ஊரைச் சுட்டும் முறையிலும் புலப்படுகிறது.

    “கவின்பெறு சுடர்நுதல் தந்தை ஊரே” (ஐங்.- 94)

    என்று தலைவன் சொல்வது தலைவிக்குரிய அதிகாரபூர்வமான அடையாளம்; அவளது தந்தை என்ற போக்கில் தான் அமைந்துள்ளது.

    வேளாளன் ‘அந்தணர்க்கு நீரோடு சொரிந்து ஈந்த பின்னர் எஞ்சிய பொருளுடன் சோற்றையும் எல்லோர்க்கும் தரும் பெருமையன்’ என்று தன் காதலியின் தந்தை பற்றிப் பாங்கனிடம் பெருமை பேசும் தலைவன்;

    “நிரைகோல் குறுந்தொடி தந்தை ஊரே” (குறுந்.- 233)

    என்று தலைவியின் ஊரை அவளது தந்தையின் ஊர் என்று சிறப்பிக்கிறான். அந்தணர்க்கு நீர் சொரிந்து ஈவதே முதன்மை பெறும் என்ற  அன்றைய சமுதாயக்  கொள்கை நோக்கத்தக்கது.

    இல்லறத்தில் ஈடுபடும் தலைவியின் குடும்பம் வறுமையில் வாடும்  போது அதைத் தந்தையின் செல்வவளத்துடன்  முரண்படுத்திக் காட்டி;

    “கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
    கொடுத்த தந்தை கொழுஞ்சோறு கொள்ளாள்” (நற்.- 110)

    என்று பாடும் பகுதி கூடத்  ‘தந்தையின்  செல்வத்தைப் புகுந்த வீட்டில் இருந்துகொண்டு வாங்குவது இழுக்கு; கணவனுக்குப் பெருமை சேர்க்காது’ என்ற தலைவியின் கொள்கையைச் சிறப்பிப்பதாக அமைகிறது.

    தன் தந்தை தனக்குச் செய்து கொடுத்த வளையலும் ஆரமும் இன்னொரு பெண்ணை அலங்கரித்து இருப்பதைக் கண்டவுடன் (பரி.- 20) ‘இவை உனக்கு வந்த வழி களவுவழி இல்லையெனில்; உனக்கு இவற்றைத் தந்தவனை எனக்குக் காட்டு’ என்று வினவுகிறாள் தலைவி. திருமணத்தின் போது தந்தை தன் மகளுக்குப் பொன்நகை போட்டு அனுப்பும் வழக்கம் ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது என்பதைத் தலைவி கேட்கும் கேள்வியில்  இருந்து அறிகிறோம்.

    தலைவியின் காதலொழுக்கம் அறிந்து தந்தையும் தமையன்மாரும் தீர விசாரித்துச் சம்மததித்ததைத்  தலைவியிடம் தெரிவிக்கிறாள்  தோழி.

    “பொய்யில் பொதுவர்க்கு அடைசூழ்ந்தார் தந்தையொடு
    ஐயன்மார் எல்லாம் ஒருங்கு” (கலி.- 107)

    என மணம் உறுதி செய்யப்பட்டதைக் கூறும் அவளது சொற்களில்; திருமண நிச்சயதார்த்தம் அடைக்காய் என்று அழைக்கப்படும் பாக்கு வெற்றிலையோடு ஈராயிரம் ஆண்டுக் காலமாக நடைபெறுவதையும், அதைத் தந்தை முன்னின்று நடத்தினார் என்பதையும் புலப்படுத்துகின்றன.

    தலைவியின் தந்தை- அன்றும் இன்றும் 

    தலைவியைக் கண்டு காதல் வயப்படும் தலைவன்;

    “யார் மகள்கொல் இவள் தந்தை வாழியர்” (நற்.- 8)

    என்று வாழ்த்துவது இங்கு தலைவியைப் பெற்றவனையே  குறிக்கிறது. இன்றைய திரைப்படப் பாடற்போக்கும் செவ்விலக்கியத்தை அடியொட்டி அமைந்திருப்பதை இங்கு ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் இடம்பெறும்

    ‘ஊதாக் கலரு ரிப்பன்- உனக்கு யாரு அப்பன்?
    நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்’

    என்ற பாடல் செவ்விலக்கியக் கருத்தை இக்காலத் தமிழில் தருகிறது.

    தொகுப்புரை

    தொகை நூல்களில் எங்கும் தந்தை பாடல் காட்சியில் நேரடியாகப் பேசவே இல்லை. அவர் பேசுவதைத் தோழியும் தலைவியும் எடுத்துச் சொல்கின்றனர். அவரைப் பற்றித் தாயர்,  தலைவி, தலைவன், தோழி ஆகியோர்; தமக்குள்ளும், தத்தம் நெஞ்சோடும், பரத்தையிடமும், கண்டாரிடமும்,  காமம் மிக்க கழிபடர் கிளவியாக ஆற்றோடும் பேசுகின்றனர். பரதவர், குறவர், கிழார், ஆயர், உமணர், பாணர், வேளாளர் என அவரவர் இனத்தோடு குறிப்பாகவோ; அன்றி வெளிப்படையாகவோ சேர்த்தே தந்தையர் சுட்டப்படுகின்றனர். பின்புல வருணனை,  உவமை,  வரலாற்றுக் குறிப்புகள்  ஆகியவற்றிலும் தந்தைக்கு  இடமுளது.

    தலைவிக்குரிய அதிகாரபூர்வமான அடையாளம்; அவளது தந்தை ஆவார். ஆணாதிக்கச் சமுதாயம் ஆதலால்; ‘தந்தையின் மனை’ என்றும்; ‘தந்தை ஊர்’ என்றும் சுட்டினர். மகள் பாதுகாக்கப்பட வேண்டியவள்  என்பது அன்றைய  சமூகக் கொள்கை. திணைமாந்தருள் தந்தை தேவைப்படும் பொழுதெல்லாம் மகளை வேளாண்மையில் காவல் தொழிலுக்கு அனுப்பினான். எல்லாத் தந்தையரும் ஆயுதத்தோடு இருந்தனர்.

    செல்வமும் அதை ஈதலும் கிளை தாங்கலும் தந்தையின் பெருமை ஆகும். பரதவத்  தந்தையின் பெருமை சுறாமீனைக் கொல்லும் வினைத்திறன் ஆகும். தலைவியின் உடன்போக்கு தந்தைக்குப் பழி ஏற்படுத்தியது.

    திருமணத்தின் போது தந்தை தன் மகளுக்குப் பொன்நகை போட்டு அனுப்பும் வழக்கம் ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது. திருமண நிச்சயதார்த்தம் அடைக்காய் என்று அழைக்கப்படும் பாக்கு வெற்றிலையோடு ஈராயிரம் ஆண்டுக் காலமாக நடைபெற்றது. அதைத் தந்தை முன்னின்று நடத்தினார். தந்தையின்  செல்வத்தைப் புகுந்த வீட்டில் இருந்து கொண்டு வாங்குவது இழுக்கு; கணவனுக்குப் பெருமை சேர்க்காது என்ற கொள்கை நிலவியது. அந்தணர்க்கு நீர் சொரிந்து ஈவதே முதன்மை பெறும் என்பது  அன்றைய சமுதாயக்  கொள்கை. இவற்றைத்  தந்தை பாத்திரம் மூலம் அறிகிறோம்.

    தலைவியைக் கண்டு காதல் வயப்படும் தலைவனின்; செவ்விலக்கியப் பாடல் போக்கை இக்காலத் திரைப்படப் பாடலிலும் காண முடிகிறது.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-41

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-41

    தி. இரா. மீனா

    இங்கு இடம் பெறும் வசனக்காரர்களின் பெயர், வாழ்க்கை குறித்த விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. வசனங்களில் இடம் பெற்றிருக்கும் முத்திரை கொண்டு இவர்கள் அடையாளம் காணப் பெறுகின்றனர்.

    ஆனந்த சித்தேஸ்வரா

    “மென்மை கடினம் வெப்பம் குளிர்ச்சி அறியும் வரை
    அர்ப்பணிப்பை மீறக்கூடாது
    அங்கத்திடம் ஒன்றினால் இலிங்கமறிய முடியாது
    அழிவற்ற சரணருக்குக் கூழாயினும் பரவாயில்லை
    அமுதமானாலும் பரவாயில்லை
    ஓடும் பரவாயில்லை செம்பும் பரவாயில்லை,
    படுக்கையும் பரவாயில்லை கிழிந்த பாயும் பரவாயில்லை
    அரம்பையும் சரி, சாதாரணமானவளும் சரி,
    அரசனும் பரவாயில்லை சேவகனும் பரவாயில்லை
    ஊரும் சரியே காடும் சரியே
    போற்றுதலும் தூற்றுதலும் நன்றே.
    இத்துணையும் மீறிய பெரிய மனிதர் செயலை
    உலகத்தவர் எங்ஙனம் அறிவர் ஐயனே
    ஆனந்த சித்தேஸ்வரனே.”

    ஈஸ்வரி வரத சென்னராமா

    “பொன் குவியல் ஆயிரம் பெண்கள் பெரிய நாடெனினும்
    இவ்வுடல் அழிவது உறுதி ஆசையைத் துறந்து
    ஈஸ்வரீய வரத சென்னராமனெனும் இலிங்கத்தில் ஆசை
    வைத்தால் எதிர்காலம் நன்றாம் காணீர் அண்ணன்மாரே“

    ஏகாந்தவீர சொட்டாளா

    “வந்த வழியில் மீண்டும் போகாதவன் இலிங்க ஐக்கியன்
    முன்னும் பின்னும் மறந்து ஐயமற்றவன் இலிங்க ஐக்கியன்
    குரு ஏகாந்தவீர  சொட்டாளனுள்
    தன்னைத் தான் மறந்தவன் இலிங்கமுடன் இணைந்தவன்.”

    ஏகோ ராமேஸ்வரலிங்கா

    “தான் இன்புற்றால் தன் இலிங்கம் மெச்ச நடப்பது
    தான் இன்புற்றால் தன் இலிங்கம் மெச்சப் பேசுவது
    நிந்திக்க வேண்டாம் ,பிறரை நிந்திக்க வேண்டாம்
    யாருக்கு ஆனாலென்ன? ஆகாவிட்டாலென்ன?
    தான் இன்புற்றால் போதும்.
    ஏகோராமேஸ்வர இலிங்கத்தின் உண்மையறிந்தால்
    முற்றி வளர்ந்த நெற்கதிர் போல் இருக்க வேண்டும் சரணன்”

    குருவரத விருபாக்ஷா 

    “செல்வமெனில் அனைவரும் வருவர்,
    நெருப்பெனில் யாரும் நிற்க மாட்டார் ஐயனே.
    உலகு எரிகிறது விஷ நெருப்பினால்.
    உருண்டோடுகிறது எண்டிசையும் சுரரின் கூட்டம்
    ஹரிபிரம்மன் திருமகள் கலைமகள் கரம்பிடித்து
    மருள் கொண்டனர் உமது உண்மையறியாமல்
    திருஇருந்தது பக்தருக்கு ,நெருப்பை நீ தரித்துள்ளாய்
    நிகர் யாருமிலர் உனக்கு குருவரத  விருபாக்ஷனே.”

    ஜங்கமலிங்கப் பிரபு

    “உலகிலிருக்கிற கல்லெல்லாம் இலிங்கமெனில் குருவின் தயவேன்
    நதியின் நீரெல்லாம் புனிதமெனில் இலிங்கத்தின் தயவேன்
    விளைந்த பயிரனைத்தும் பிரசாதமெனில் ஜங்கமனின் தயவேன்
    என்பதால் மூவகையின் தயவும் அழிந்தது
    காணாய் ஜங்கமலிங்கப் பிரபுவே.”

    திரைலோச்சன மனோஹர மாணிகேஸ்வரலிங்கா

    “உடல்கள் அழியும் முன்னர் அரவணைத்து
    பார்வை மழுங்கும் முன்னர் பார்த்து
    மதி மயங்கும் முன்னர் இலிங்கம் இலிங்கமென்பீர்
    செல்வம் தொலைந்து போகும் முன்னர்
    ஜங்கமருக்கு வழங்கி
    திரைலோச்சன மனோஹர மாணிகேஸ்வரனே
    நட்பு வைப்பின் மீண்டும் வாராதோ?”

    நஞ்சுண்ட சிவா

    வேதம் சரித்திரம் சிற்றறிவு வாதம் தந்திரம் இதிகாசம்
    நால்வகைப் புராணம் முன்னோர் வசனம் கற்றென்ன?
    குருவிடம் நம்பிக்கையில்லை இலிங்கத்தில் ஒழுக்கமில்லை
    ஜங்கமனிடம் கவனமில்லை பிரசாதத்தில் முழுமையில்லை
    பாதோகத்தில் பரமசுகமில்லை
    இந்த ஐவகை ஒழுக்கங்களிலிருந்து தானழிந்து
    வேற்றுமையறியாமல் நான் பக்தன், விரக்தியுடையோனெனில்
    சிரிக்க மாட்டார்களா உனதடியார்
    பரமகுருவே நஞ்சுண்ட சிவனே“

    [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 97 (மாதவ)

    சேக்கிழார் பாடல் நயம் – 97 (மாதவ)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    மாதவ   வேடம்  கொண்ட வன்கணான்  மாடம் தோறும் 
    கோதைசூழ் அளக   பாரக்   குழைக்கொடி  ஆட  மீது
    சோதிவெண் கொடிகள் ஆடும்  சுடர்நெடு  மறுகில்  போகி
    சேதியர்   பெருமான்  கோயில்  திருமணி   வாயில்  சேர்ந்தான்.

    பொருள் :

    பெரிய தவவேடந் தாங்கிய அவ் வன்னெஞ்சம்  உடையவன்; மாடங்கள் எங்கேயும் மாலை சுற்றிய கூந்தலையும் குழையினையும் உடைய கொடிகள்ஆட, அவற்றின் மேலே ஒளிவிளங்கும் வெண்கொடிகள் அசைகின்றதற்கு  இடமாகிய விளக்கம் பொருந்திய, நீண்ட வீதியிலே சென்று, சேதிநாட்டு அரசர்பெருமானாராகிய மெய்ப்பொருள் நாயனாரது அரண்மனையின் அழகிய திருவாயிலை யடைந்தான்.

    விளக்கம் :

    வன்கணான் – தவவேடத்தினுள் மறைந்து வஞ்சிக்க எண்ணியது வன்கண்மையாம். திருக்கோவலூரிற் சேர்வான் – புகுந்தனன் – முத்தநாதன் – புகுந்த – அவ்  வன்கண்ணான் – மறுகிற் போகிக் கோயில் வாயில் சோந்தான் – எனத் தொடர்புபடுத்திக் கொள்க.

    மாடந்தோறும்  கோதைசூழ்  அளக  பாரக்   குழைக்கொடி ஆட  மீது  சோதிவெண்  கொடிகள் ஆடும்  சுடர்நெடு மறுகு – ஒவ்வொரு மாடத்திலும் அளகபாரக் கொடியும் அவற்றின் மீதே சோதி வெண்கொடிகளும் ஆடுகின்றன; அவ்வகை மாடங்களே நிறைந்த மறுகு என்க. அரசரது அரண்மனைக்குப் போகும் மறுகாதலானும், அவ்வரசரது தலைநகர் ஆதலானும் எங்கும் மாடங்கள் நிறைந்திருந்தன. இத்தொடர்  அவற்றின் செல்வங்குறித்தது.

    அளகபாரக் கொடி என்றதனால் பெண்களின் ஆடல்பாடலாதி இன்பமும், குழைக்கொடி என்றதனாற் பொன்மணி முதலிய செல்வமுங் குறிக்கப்  பெற்றன.

    சோதி வெண்கொடி – திருவிழா முதலிய தெய்வச் சிறப்புக் குறிக்கப் பெற்றன. இங்கு முத்தநாதன் வந்தது இரவாகும். இரவிலும் விளங்குவது வெண்மை யாதலானும், வெண்மை திருநீற்றின் சோதியாதலானும் சோதி வெண் கொடி என்றார். வெண் சோதிக் கொடி என்று மாற்றுக. அளகபாரக் குழைக் கொடி என்றது ஆடற்பெண்கள். பெண் கொடியும் – வெண்கொடியும் என இரண்டும் கொடிகளாம். பெண்கொடிகள் மாடங்களிலுள்ள ஆடரங்குகளிலாடுவர். வெண்கொடிகள் மாடங்களின் மீது ஆடுவன. “காந்தாரம் இசைபரப்பிக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித், தேந்தாமென் றரங்கேரிச் சேயிழையார் நாடமாடும் திருவையாறே“ என்பது   திருவாக்கு.

    இங்கே ஒருகுறிப்பு : முத்தநாதன்  அரசன் அரண்மனையில்  புகுந்த போது, அங்கே  பக்தியுடன் இசைபாடி, ஆடி மகிழ்வோரைக் காணாமல் மாடந்  தோறும் கொடிகள்  போல் ஆடும் பெண்களைக் கண்டு செல்வது  சிவநெறிக்குப்  புறம்பானது!

    இவ்விரு கொடிகளுள்ளே மாடங்களில் ஆடரங்கிலே ஆடும் கொடிகளின் ஓர்   உறுப்புக் (குழல்) கறுப்பாம். இவை மனத்தினுட் கறுப்பு வைத்துப் புகுந்த முத்தநாதனது களவை அறிந்து அவனை அந்த மாடங்கள்கறுப்புக் கொடிகள் காட்டி “வெளியேறுக“ என்பனபோல அசைந்தன என்பதும், இக்கறுப்புக் கொடிகளின்மீது ஆடும் சோதி வெண் கொடிகள் “உனது உட்கறுப்பின் மேலே விளங்கும் வெண்ணீறும் சடைமுடியுமாகிய திருவேடமே வெற்றிபெறும். வெற்றி எம்முடையதே. இதினும் நீ தோற்பாய்“ என்று அறிவிப்பன போலக் கறுப்புக் கொடிகளைக் கீழ்ப்படுத்தி, மீது சோதியுடன் வெண்கொடி ஆடின் என்பதும் குறிப்புக்களாகத் தன்மை நவிற்சி யணியிலே வைத்து ஆசிரியர் விரித்துக்காட்டிய அழகினைக்   கண்டு களிப்போமாக.

    கறுப்புக்கொடி, உள்வருவோரை வரவேற்காது வெறுத்து வெளிப்போகச் சொல்லும் குறியாக இந்நாளிலும் வழங்கும் வழக்குங் காண்க. இனி, கறுப்பும் வெண்மையுமாயின கொடிகளைத் தன் மனக் கறுப்பும் வெண்ணீறும்போலவே கண்ணாடியிற்போல முத்தநாதன் எங்குந் தன் வண்ணமே கண்டான். அவ்வாறு காண்பவன் தன் மனத்துட் பொதிந்து வஞ்சனையினாலே அகத்தினழகு முகத்திற் றெரியும் என்றபடி முகம் பொலிவிழந்து சென்றானாகவும், மாடங்கள் அவ்வாறில்லாது தன்னை வெற்றிகொண்டன போன்று சுடர்விட்டு அழகுடன் விளங்கக் கண்டுகொண்டு சென்றான் என்பதுமொரு குறிப்பாம். இதனை எட்டாவது பாட்டாக வைத்தோதிய குறிப்பும் காண்க.

    சேதியர் பெருமான் – சேதிநாட்டவரின் தலைவராகிய நாயனார். கோயில் – அரண்மனை. திருமணிவாயில் திரு – அருட்டிரு. மணி – அழகு.மணித் திருவாயில் என்க. மணி கட்டிய வாயில் என்றலுமாம்.

    Share
  • ஆடாதொடை சிகரெட் | சித்தா மூலிகை சிகரெட்

    ஆடாதொடை சிகரெட் | சித்தா மூலிகை சிகரெட்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    புகையிலை சிகரெட்டால் புற்றுநோய் உள்ளிட்ட பல தீங்குகள் ஏற்பட்டு வருகையில், மூலிகை சிகரெட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறார், டேவிட் ராஜா. புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை இதன் மூலம் மீட்டு, புகைப் பழக்கத்தையே கைவிடச் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

    ஆடாதொடை இலைகளைக் கொண்டு இந்த அதிசயத்தை, சித்த மருத்துவரான இவர் மனைவி டாக்டர் கமலா சௌந்திரம் முதலில் நிகழ்த்திக் காட்டி, காப்புரிமை பெற்றார். அதைத் தொடர்ந்து, முள்ளை முள்ளால் எடுப்பது போல், சிகரெட்டைச் சிகரெட்டாலேயே வீழ்த்தும் வகையில், இதற்குப் புது வடிவம் கொடுத்து, வணிக ரீதியில் டேவிட் ராஜா, சந்தைப்படுத்தி வருகிறார்.

    சித்தா மூலிகை சிகரெட்டை உருவாக்கியது எப்படி என்று இந்த நேர்காணலில் நமக்கு விவரிக்கிறார். ஒரு தொழில்முனைவோராக அவரது பயணத்தையும் அவர் எதிர்கொண்ட சவால்களையும் இதில் காணலாம்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • (Peer Reviewed) பொறையாற்றுக் கிழானும் கோமான் பெரியனும்

    (Peer Reviewed) பொறையாற்றுக் கிழானும் கோமான் பெரியனும்

    ச. கண்மணி கணேசன் (ப.நி.)

    சுருக்கக் குறியீட்டு விளக்கம்

    1. புறம். புறநானூறு
    2. அகம். அகநானூறு
    3. நற். நற்றிணை
    4. ஐங். ஐங்குறுநூறு
    5. பதிற். பதிற்றுப்பத்து
    6. சிறு. சிறுபாணாற்றுப்படை       

    0.0   முன்னுரை

    0.1 பொறையாற்றுக் கிழான் என்று புறம். குறிப்பிடும் தலைவனும்; ‘நற்றேர்ப் பெரியன்…பொறையாறு’, ‘கைவண் கோமான்… நற்றேர்ப் பெரியன்’ என்று முறையே நற்றிணையும் அகநானூறும் புகழும் தலைவனும் ஒருவரா? இருவரா? யார்? எவ்விடத்தவர்? என்று காண்பதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

    0.2   ஔவை சு.துரைசாமிப்பிள்ளை  உரையெழுதிக் கழக வெளியீடாகக் கிடைக்கும் புறநானூறு இருவரையும் ஒருவராகக் கொண்டு விளக்கிச் செல்வதே இவ்ஆய்விற்கு அடிப்படைக் காரணமாக அமைகிறது. உ.வே.சாமிநாதையரின் புறநானூற்றுப் பதிப்பு கிழார் வேளாளர் என்றும்; வேளிர் உழுவித்தவர் என்றும்  வேறுபிரித்து உரைப்பினும்; பிடவூர்  கிழான்  மகன் பெருஞ்சாத்தனை உழுவித்தவன் என்று சொல்லும் போது குழப்பம் ஏற்படுகிறது. மு.இராகவையங்கார் ‘வேளிர் வரலாறு’ என்ற தன் நூலில்; வேளிர் வந்தேறிகள் என்று முடிவு கூறியிருப்பினும்  கொண்கானக் கிழானை வேள் என்று உரைப்பது ஆய்விற்கு உரியதாகிறது. ‘கிழார்ப் பெயர் பெற்றோர்’ என்று புலவர் கா.கோவிந்தன் நாற்பத்தோரு கிழார்களைத் தொகுத்து எழுதிய நூல் ‘நால்வருணத்தாருள்ளும் ஆயருள்ளும் தலைமை சான்றவரெல்லாம் கிழார்களே’ என்று கல்வெட்டுகளின் துணை கொண்டு விளக்கும்போது சிக்கல் வளர்கிறது. இப்பெரியோரின் கூற்றுகளுக்கு விளக்கம் கூறுமுகமாகச் சமூகவியல் நோக்கில் பொறையூர்க்  கிழான் பற்றி ஆழமாக ஆராயும் போது; கிழார்  பற்றிய புரிதலும்   தெளிவடைகிறது.

    0.3   புறம்.- 391, நற்.- 131& அகம்.- 100 ஆகிய மூன்று பாடல்கள் மட்டுமே முதல்நிலைத் தரவுகளாக அமைகின்றன. பிற தொகைநூற் பாடல்களும், இக்கால உரையாசிரியர் கூற்றுகளும், நூலாசிரியர் கருத்துக்களும் இரண்டாம்நிலைத் தரவுகள்  ஆகின்றன. சமூகவியல் ஆய்வாகக்  கட்டுரை அமைகிறது. கிழாரையும் வேளிரையும் சுட்டும் முறை ஒப்பீட்டு ஆய்வாக மேற்கொள்ளப்படுகிறது.

    1.0   சுட்டும் முறை

    கோமான் பெரியன்

    “பாடுநர் தொடுத்த கைவண் கோமான்” (அகம்- 100)

    என்று சிறப்பிக்கப்படுவதால் பெரியன் ஒரு வேள் ஆவான். தொகை நூல்களில் ‘கோமான்’ என்ற விளிச்சொல் வேந்தரையும் வேளிரையும் சுட்டவே பயின்று வந்துள்ளது. வேந்தருள் அடங்காத பெரியன் ‘வேள்’ என்றே கருத இடமுள்ளது.  கிழாரை இடப்பெயரோடு மட்டுமே  சேர்த்துச் சுட்டும் முறையே  காணப்படுகிறது.

    1.1   பாண்டிய வேந்தரை;

    “கொற்கைக் கோமான்” (சிறு.- 62; ஐங்.- 188)

    “தென்னர் கோமான்” (அகம்.- 209)

    “தேர்வண் கோமான்” (ஐங்.- 55)

    என்று பொதுவாகவும்; அம்மரபைச் சார்ந்த குடுமி என்னும் மன்னனை;

    “குடுமிக் கோமான்” (புறம்.- 64)

    என்றும் அழைத்திருப்பதைக் காண்கிறோம். துணங்கை ஆடிய  சேரனும், இன்னொரு குட்டுவனும் முறையே;

    “வலம்படு கோமான்” (பதிற்.- 59)

    “கைவண் கோமான் ” (அகம்- 270)

    எனப்படுகின்றனர். அதியமானும் அவனது மகன் எழினியும் ஒன்றுபோல;

    “அதியர் கோமான்” (புறம்.- 91, 392)

    என்றே சுட்டப்படுகின்றனர். அத்துடன் அதியன்;

    “அண்ணல் எம்கோமான்” (புறம்- 95)

    என்றும் அழைக்கப்படுகிறான். வேள்பாரியை மீண்டும் மீண்டும்;

    “பறம்பில் கோமான்” (சிறு.- 91; புறம்.- 158, 201)

    என்றழைப்பதைக் காண்கிறோம். வையைநீரை மேலாண்மை செய்ததால்;

    “பொய்யா யாணர் மையல் கோமான்” (புறம்.- 71)

    என்று மாவன் புகழப்படுகிறான்.  பெயரிலேயே முடிசுமந்திருக்கும் மலையமான் திருமுடிக்காரி;

    “கோவல் கோமான்” (அகம்.- 35) ஆயினன்.

    காவிரியின் சங்கமத்தருகே  இருந்த கழாஅர் முன்றுறைப் பரதவர்க்குத் தலைவனாக இருந்து உழுவித்த மத்தி;

    “பரதவர் கோமான்” (அகம்.- 226) எனப்படுகிறான்.

    மதுரையில் ஓடும் வையைக்கு வடக்கே உள்ள செல்லூரிலிருந்து வேளாண்மை செய்தவன்;

    “செல்லிக் கோமான்” (அகம்.- 216) என்கிறார் புலவர்.

     வேங்கடமலை அருகில் இருந்த வேள்;

    “கள்வர் கோமான் புல்லி” (அகம்.- 61) ஆவான்.

     நல்லியக்கோடன்;

    “கிடங்கில் கோமான்” (சிறு.- 160)

    “குறிஞ்சிக் கோமான்” (சிறு.- 267)

    என்றெல்லாம் அழைக்கப்படுகிறான். மேற்சுட்டிய சான்றுகள் தவிர வேறெங்கும் தொகைநூல்களில்  கோமான் என்ற சொற்பயன்பாடு இல்லை. இவற்றுள் எந்தப்பாடலிலும் எந்த ஒரு கிழாரும் கோமானென்று சுட்டப்படவில்லை

    1.2   தொகை நூல்களும், அவற்றைத் தொகுத்தோரும் கிழார்களைச் சார்ந்த ஊர்ப்பெயர் அல்லது மலை அல்லது ஏதேனும் ஒரு  நாட்டுப்பகுதியின் பெயரைக்  கிழார்க்கு  முன்னொட்டு ஆக்குகின்றனர்.

    கோவூர் கிழார், ஆவூர் மூலங்கிழார், மாங்குடி கிழார் போன்று பாடல் புனைந்தோர், புறநானூற்று அடிக்குறிப்பில் சுட்டப்படும் பெருஞ்சிக்கல் கிழான் (புறம்.- 349), பதிற். பதிகம் (9ம் பத்து) சுட்டும் மையூர் கிழான், தொகை நூல்களைத் தொகுத்தோராகக் கூறப்படும் உப்பூரிகுடி கிழான் மகன் உருத்திரசன்மன் (அகம்.), கூடலூர் கிழார் (ஐங்.) அனைவரும் இடப்பெயருடன் தொடர்புபடுத்தப்பட்டே உள்ளனர்.

    “சிறுகுடி கிழான் பண்ணன்” (புறம்.- 388)

    என்றே பண்ணன் பாடலில் அழைக்கப்படுகிறான்.

    “கொண்பெருங் கானத்துக் கிழவன்” (புறம்.- 155)

    என்று கொண்கானக் கிழான் பாடப்பட்டுள்ளான்.

    “அம்பர் கிழவோன் நல்லருவந்தை” (புறம்.- 385)

    என்று அழைக்கப்படுபவனை அம்பர்கிழான் அருவந்தை என்று ஆவணப்படுத்தி உள்ளனர்.

    “பிடவூர் அறப்பெயர்ச் சாத்தன்” (புறம்.- 395)

    என்று பாடல் குறிப்பிடத்;  தொகுப்பாளர் பிடவூர் கிழான்மகன் என்று  உரைத்துள்ளனர்.

    “கரும்பனூரன்” (புறம்.- 384)

    என்று புலவர் சுட்டுபவனைக்; குறிப்பு எழுதியோர் கரும்பனூர் கிழான் என்கிறார்.

    “வலாஅ ரோனே வாய்வாட் பண்ணன்” (புறம்.- 181)

    எனும் பண்ணன்  வலாரெனும் இடத்துடன் சேர்த்துப் பாடப்படுகிறான்.  தொகுத்தோர் இவனைக் கிழான் என்பர்.

    “ஈர்ந்தையோனே”- (புறம்.- 180)

    என்று அழைக்கப்படுபவன் ஈர்ந்தையூர் கிழான் என்று சொல்லிச் சென்றுள்ளனர் குறிப்பெழுதியோர்.

    “பெரும்பெயர் ஆதி”- (புறம்.- 177)

    என்று பாடலில் அழைக்கப்படுபவன் மல்லிகிழான் காரியாதி என்று உரைத்துள்ளனர் தொகுத்தோர்.

    1.3   ‘பதிக்குரியோர் என்னும் பொருள் கொண்ட கிழார்’ என்றே பிறரும் விளக்கமளிக்கின்றனர் (கா.கோவிந்தன்- கிழார்ப்பெயர் பெற்றோர்- ப.- 21) ஆதலால்; பொறையாற்றுக்கிழானும் கோமான்  பெரியனும் வெவ்வேறானவர் எனத் தெளியலாம்.

    2.0   கோமான் ஆண்ட பகுதி

    பெரியன் மருதமும் நெய்தலும் மயங்கும் பொறையாற்றின் சங்கமத்துறையாகிய  புறந்தை முன்றுறையைச் சார்ந்து கோமானாக இருந்து  ஆண்டான். இப்புறந்தை இன்று ஆற்றின் பெயராகிய பொறையாறு என்றே வழங்குகிறது. பொறையாற்றுக் கிழானும் அதே ஊரைச் சார்ந்தவனாகப் பாடப்படுகிறான்.

    2.1   உலோச்சனார் வருணிக்கும் புறந்தை முன்றுறையில்;  முழங்காத மேகம் சூழ்ந்த இரவில் அலை முழக்கும் அவிந்துள்ளது. கொழுமீன் பிடிக்கும் பரதவர் கருமையான கடலில் மடுத்த அம்பியில் இருள் நீங்க ஏற்றிய விளக்கு; வேந்தன் பாசறையிலுள்ள யானையின் முகபடாம் போல ஒளி வீசுகிறது. விரிந்த பூங்கொத்துக்களுடைய புன்னை மரங்கள் மிகுந்த கானலில் நாரைக்கூட்டத்தின்  ஆரவாரம் கேட்கிறது. குளிர்ச்சியோடு புலரும் இருள்நீங்கா விடியலில் எருமை புதிதாக மலர்ந்த நெய்தல் பூக்களை உண்கிறது. தாழை வேலியை உடைய தோட்டங்கள் உள்ளன.

    “பெருந்திரை முழக்கமொடு இயக்கவிந்து இருந்த
    கொண்டல் இரவின் இருங்கடல் மடுத்த
    கொழுமீன் கொள்பவர் இருள்நீங்கு ஒண்சுடர்……..
    ஓடை ஒண்சுடர் ஒப்பத் தோன்றும் ………
    ……………………………….பெரியன் விரியிணர்ப்
    புன்னையங் கானற் புறந்தை முன்றுறை
    வம்ப நாரை இனன் ஒலித்த…… தண்புலர்
    வைகுறு விடியல் போகிய எருமை
    நெய்தலம் புதுமலர் மாந்தும்
    கைதை அம்படப்பை……… ஊரே” (அகம்.- 100)

    என்ற வருணனையில் எருமையும் படப்பையும், நாரையும் மருதவளமாக அமைய; புன்னை, முழங்காத கடல், மீன் பிடிப்பவர், தாழை வேலி, நெய்தல் புதுமலர் ஆகியவை நெய்தல் வளமாக அமைந்து; அது ஒரு ஆற்றின் சங்கமத்துறை என்று புலப்படுத்துகின்றன.

    2.2 கள்மணம் கமழும் பெருமை உடையது பொறையாறு. திரைத்த முதிர்ந்த அரையை உடைய வளைந்த தாழையில்; சுறாமீன் கொம்பு போல்  இருபுறமும் முள்ளை உடைய இலை முறியும்படி; இறா மீனைத் தின்ற நாரைக்கூட்டம் தங்கும் என்கிறார் உலோச்சனார்.

    “திரைமுதிர் அரைய தடந்தாழ் தாழைச்
    சுறவு மருப்பு அன்ன முள்தோடு ஒசிய
    இறவார் இனக்குருகு இறைகொள இருக்கும்
    ………………………………பெரியன்
    கள்கமழ் பொறையாறு” (நற்றிணை- 131)

    என்ற பாடலிலும் தாழை, இறாமீன் ஆகியவை நெய்தல் வளத்திற்குக் கட்டியம் கூறுவன. குருகுக் கூட்டமும், மலர்களின் தேன் மிகுதியால் கள்மணம் கமழும் பொறையாறும்  மருதவளத்தின் பெருமை சாற்றுவன.

    2.3 இருபாடல்களும் பேசுவது போன்றே; பொறையாற்றுக் கிழானைப் புகழும் புறப்பாடலும் பேசுகிறது.

    “இருநீர்ப் பெருங்கழி நுழைமீன் அருந்தும்
    துதைந்த தூவியம் புதாஅஞ் சேக்கும்
    புதைந்த புன்னைச் செழுநகர் ..….
    ……………………………… வளஞ்சால்
    துளிபதன் அறிந்து பொழிய” (புறம்.- 391)

    கல்லாடனார் பாடியிருக்கும் இப்பாடல் பொறையாற்றுக் கிழானைப் பாடியது என்று தொகுத்தோர் அடிக்குறிப்பில் சொல்லி உள்ளனர். இப்பாடலிலும் கடல், கழி, மீன், புன்னைமரம் அனைத்தும் நெய்தல் வளமாக இருக்க; வயலும் விளைச்சலும் புதா என்னும் நாரையும் மருதவளமாக அமைந்து ஆறு கடலோடு கலக்கும் சங்கமத்  துறைக்குரிய வருணனையாகக் காணப்படுகிறது.

    2.4 பொறையாற்றின் இருப்பிடத்தை வங்கக் கடற்கரையை ஒட்டிய தரங்கம்பாடியை அடுத்து இன்றும் அடையாளம் காண இயல்கிறது (பார்க்க- வரைபடம்- 1). ஆற்றின் பெயர் மாற்றம் பெற்று இருப்பினும் பொறையார் பழைய பேருந்து நிலையம், பொறையார் மீன் சந்தை, பொறையார் காவல் நிலையம்  போன்ற இடங்கள் குறிப்பிடப்பட்டிருப்பது நோக்கத்தக்கது. முற்சுட்டிய பாடல்களில் காணப்படும் மருதம் நெய்தல் ஆகிய இருதிணைகளுக்குரிய வருணனை இந்நிலப்பகுதிக்கு முற்றிலும் பொருத்தமாக உள்ளது.

    வரைபடம்- 1  பொறையாறு

    3.0   பொறையாற்றுக் கிழானின் பணியும் இனமும் 

    3.1 பொறையாற்றுக் கிழான் வயலில் இறங்கி உழுத திணைமாந்தராகிய பொருநரின் தலைவனாக வாழ்ந்து  கொடையிலும்  சிறந்திருந்தான்.

    பொறையாற்றுக் கிழான் முதுகுடிகளை உடைய மூதூர்க்குத்  தலைவனாக இருந்தான்.

    “……………………………… பசித்தென
    ஈங்கு வந்திறுத்த என் இரும்பே ரொக்கல்
    தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி
    நனந்தலை மூதூர் வினவலின்……
    முன்னும் வந்தோன் மருங்கிலன் இன்னும்
    அளியன் ஆகலின் பொருநன் இவன் என
    நின்னுணர்ந்து அறியுநர் என்னுணர்ந்து கூறக்
    காண்கு வந்திசின் பெரும ” (புறம்.- 391)

    எனும் கல்லாடனாரின் பாடற்பகுதியில் முதன்மை பெறும் கருத்து; பொறையாற்றுக் கிழான் முதுகுடியினர் வாழும் ஊரின் தலைவன் என்பதாகும். தொல்தமிழகத்து முதுகுடியினர் யார்யாரென்று மாங்குடி கிழார் தன் பாடலில் தொகுத்துரைத்துள்ளார்.

    “துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
    இந்நான்கல்லது குடியுமில்லை ” (புறம். – 335)

    இம்மேற்கோளில் இடம்பெறும் பறையரில் கிணைப் பொருநரும் அடங்குவர். ஏனெனில் கிணை ஒருவகைப் பறை. அதை முழக்கிக் கலைக்குழுவினரோடு சேர்ந்து சென்று பரிசில் வாழ்க்கை வாழ்ந்தவரைத் தொகை நூல்களில் பல இடங்களில் காண்கிறோம்.

    “அவைபுகு பொருநர் பறையின் ஆனாது” (அகம்- 76),

    “பொருநர்க்காயினும் புலவர்க்காயினும்” (சிறு.- 203)’

    “நலங்கிள்ளி நசைப் பொருநரேம்
    பிறர் பாடிப் பெறல் வேண்டேம்” (புறம்.- 382)’

    “புன்தலைப் பொருநன் அளியன் தானென” (புறம்.- 390)

    என்ற மேற்சுட்டிய மேற்கோள்கள் மட்டுமின்றிப் பொருநராற்றுப்படை என்ற பாட்டும் தமிழகத்துப் பூர்வகுடிகளாகிய பொருநர் எனும் பிரிவினர் பறைக் கலைஞர்  என்று  எடுத்துக்காட்டுகின்றன. இக்கிணைப்பொருநரே கோமான்களிடம் வீரராகவும் பணியாற்றினர். அறுவடை விழாவின் போது பொருநர் கிணைமுழக்கிக் கொண்டாடினர் (பதிற்.- 90) அதனால் கல்லாடனார் தன்னைப் பொருநன் என்று சுட்டிக் கொள்வது அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாகிறது.

    தான் ஒரு பொருநன் என்பதை அறிந்த அம்மூதூர் மக்கள்; முன்னரே ஒருமுறை வந்து பொறையாற்றுக் கிழானிடம் இரந்து பெற்றவனெனினும்; மீண்டும் இரங்குதற்கு உரியன் என்று கருத்துரைத்ததை எடுத்துக்காட்டிப் பாடித்  தன் வறுமையும் பசியும் தீர மீண்டும் வந்ததாகச் சொல்கிறார்.

    கோவூர் கிழாரும் தன்னைப் பொருநன் என்று சுட்டிக் கொள்கிறார்.

    “அன்ன நன்னாட்டுப் பொருநம் யாமே” (புறம்.- 386)

    புறந்தையில் வாழ்ந்த மக்கள் கல்லாடனாரும் தாமும் தம் தலைவனும் ஒரே இனத்தவர் என்று அறிந்தும் புரிந்தும் இருந்ததால் கல்லாடனாரை மீண்டும் பொறையாற்றுக் கிழானிடம் சென்று வேண்டக் கருத்துரைக்கின்றனர் எனச் சொல்வது மிகையாகாது. இதனால் பொறையாற்றுக் கிழான் தமிழ் மண்ணின் பூர்வகுடிகளைச் சேர்ந்த பொருநர்களின் தலைவன்  என்பது ஐயத்திற்கு இடமின்றித் தெளிவாகிறது.

    3.2 மரபுசார் புன்செய் வேளாண்மை செய்த கிழார்கள் தாம் சார்ந்திருந்த வேளிருக்காகவோ அன்றி வேந்தனுக்காகவோ நெல்லைப் பயிர் செய்த உழவர்களை மேலாண்மை செய்து; செல்வத்தில் சுருங்கி இருப்பினும் கொடையில் சிறந்து; விருந்தயர்ந்தனர் என்பதைத் தொகைநூல்களில் பரக்கக் காண இயல்கிறது.

    பொறையாற்றுக் கிழான் நெல் வேளாண்மை செய்தான் என்பதை;

    “வேலி ஆயிரம் விளைக நின் வயலே” (புறம்.- 391)

    என்ற பாடலடி புலப்படுத்துகிறது. அவனது கொடைப்பண்பைக் கல்லாடனார் தேடி வந்தமையினின்று அறிகிறோம்.

    மதுரைக்காஞ்சி கிழாரது வேளாண்மை தொடர்பான செயல்களை வரிசைப்படுத்துகிறது.

    “மென்தொடை வன்கிழார்
    அதரி கொள்பவர் பகடுபூண் தெண்மணி
    இரும்புள் ஓப்பும் இசையே” (அடி.- 93-95)

    என்று தொடருமுன் ஏற்றம் இறைத்தல், பன்றிப்பத்தரால் கயம் வற்றும்படி வயலை நீரால் நிறைத்தல், பகடு கொண்டு கடா விடுதல், பறவைகளிடமிருந்து கதிர்களைக்  காத்தல் முதலிய பல படிநிலைகளுடன் தொடர்புறுத்தியே பேசுகிறது. இதனால் கிழார் வேளாண் தொழிலில் ஈடுபடும் உழவரின் தலைவர் என்னும் கருத்து மேலும் வலுப்படுகிறது.

    பிடவூர் கிழான்மகன் பெருஞ்சாத்தன் உறந்தைக்குக் கிழக்கில் ஆண்ட நெடுங்கை வேண்மானின் பிடவூரைச்  சேர்ந்தவன் என்று  புறநானூறு வெளிப்படையாக எடுத்துச் சொல்கிறது.

    “செல்லா நல்லிசை உறந்தைக் குணாது
    நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்
    அறப்பெயர்ச் சாத்தன்” (புறம்.- 395)

    எனும் செய்தி நெடுங்கை வேளுக்காகக் காவிரி பாயும் மருதநிலத்துப் பிடவூரில் நெல்வேளாண்மை செய்த உழவர் தலைவன் அவன் என்று முடிவு செய்ய ஏதுவாகிறது. அவனிடத்துப்;

    “பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல்” (மேற்.)

    மாந்தியமை பற்றிப் புலவர் மகிழ்ந்துரைப்பதும் குறிப்பிடத்தக்கது.

    சிறுகுடி கிழான் பண்ணன் மழை பொய்த்த போதும் தன் புன்செய் வேளாண்மை மூலம் கிடைத்த உணவைத் தானமாக அளித்ததால் தான் அவனது தலைவனாகிய சோழன் கிள்ளி வளவன் அவனைப்;

    “பசிப்பிணி மருத்துவன்” ” (புறம்.- 173)

    என்கிறான். நெல் விளைய இயலாத வறட்சிக்காலத்தில் மக்களின் பசிப்பிணி நீக்கினான். அதனால்

    “யான் வாழுநாளும் பண்ணன் வாழிய” (புறம்.- 173)

    என்றும் புகழ்கிறான். அவனது வேளாண்மையை விதந்தோதிப் புகழ்கின்றனர் புலவோர். பண்ணனது உழவு வினைக்குரிய எருதுகளையும், ஏற்றத்தையும்; கிணைப்பறை கொட்டி இசைத்துப்

    “………………….பண்ணற் கேட்டிர்………………….
    வினைப்பகடு ஏற்றம் எழீஇக் கிணைதொடா
    நாடொறும் பாடேனாயின்” (புறம்.- 388)

    எனப் பேசியுள்ளார் மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார். பாடலைப் பாடியவர் ஒரு மள்ளர் என்பதும் பண்ணன் வேளாண்மை செய்தமைக்குரிய  ஆதாரமாகும்.

    கரும்பனூர் கிழானிடம்;

    “நிணம் பெருத்த கொழுஞ்சோற்றிடை.…
    நீர்நாண நெய் பெய்து……….
    மென்பாலான் உடனணைஇ
    வஞ்சிக்கோட் டுறங்கு நாரை
    அறைக்கரும்பின் பூவருந்தும்” (புறம்.- 384)

    நிகழ்வு பற்றிப் புலவர் பாடக் காரணமாய் அமைவது அவன் செய்த நன்செய் வேளாண்மை எனில் மிகையாகாது. நெய்யை நீர்போல ஊற்றி நிணம் கலந்த அடிசிலை உண்ணக் கொடுத்தான் என்பதும், நன்செயில் இரை தேறிய நாரை வஞ்சிக்கிளையில் உறங்குமுன் கணுவுள்ள கரும்பின் பூவை உண்டது என்பதும் அவன் நன்செயில் பயிர் செய்தமைக்குச் சான்றாகின்றன. நிலம் வறண்ட காலத்தில் தயங்காது என்னிடம் வந்து வயிறாரப் பாலிற் கரைத்தும் பாகில் பெய்தும் உண்டு செல்க என்று அவன்  சொன்னதைக் கிணைப் பொருநர் ஆவணப்படுத்தி உள்ளனர்.

    “பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
    அளவுபு கலந்து மெல்லிது பருகி ………….
    இருநிலம் கூலம் பாறக் கோடை”யில் (புறம்.- 381)

    இருந்ததாகப் புலவர் பாடுமிடத்து; பாலில் பெய்த உணவு பாலுடன் கூடிய வரகரிசிச் சோறாகும். பாகிற் கொண்ட உணவாவது உழுந்தங்களி ஆகும். இவை மழையின்றி வறண்ட கோடை காலத்தில் கரும்பனூர் கிழானிடம் விருந்தினர் உண்ட புன்செய்ப் பயன்கள்.

    விருந்தயர்ந்த புலவர் அவனது செல்வநிலை பற்றிக் கோமான்களாகிய குறுநில மன்னருடன் ஒப்பிட்டுப் பாடுகிறார் (புறம்- 381). வேளிரிடம் இருக்கும் செல்வம் மக்கள் துய்க்க இயலாத முள்நிறைந்த புதரில் மிகுதியாக ஊழ்க்கும் பழங்களை ஒத்தது என்கிறார். மேலும் அச்செல்வம் அங்கே பொழியும் மழை போன்று பயனின்றிப் போனது எனவும்; அதற்கு மாறுபட்டு இவனிடம் அளவோடு இருக்கும் பொருள் பிறர் பசி தீர்க்கப் பயன்படுகிறது எனவும் விவரிக்கிறார். இங்கு அளவோடு வளமிகுந்த கிழாரின் நிலை; பயன்பாடு கருதி; குறுநில மன்னராகிய வேளிர் நிலையுடன்  முரண்படுத்திக் காட்டப்பட்டுள்ளது.

    மல்லிகிழான் காரியாதியின் கொடைப்பண்பைப் பேசும் ஆவூர்  மூலங்கிழாரும் பனங்குடையில் பன்றிக்கறி சேர்த்த உணவை உண்பதன் மனநிறைவைப் போற்றிப் பாடியுள்ளார்.

    “…………………………… எய்ம்மான் எறிதசைப்
    பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் ளமலை
    வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய
    இரும்பனங் குடையின் மிசையும்”- (புறம். – 177)

    என்ற புகழ்மொழி; இரவலர் குறுநில மன்னரிடம்; அதாவது வேளிரிடம் கண்ணொளி கெடக் காத்து நின்று பெறும் பரிசிலைக் காட்டிலும் காரியாதியின் பன்றிக்கறி விரவிய உணவு உயர்ந்ததென்கிறது. இரந்து செல்வோர் எல்லோரும் ஒப்ப இரும்பனங்குடையில் எய்ப்பன்றித் தசையின் நிணம் மிகுந்த வெள்ளிய சோற்றுக் கட்டியைப் பெற்றனர் என்பது அவனது கொடைத்தன்மையை விளக்குகிறது.

    4.0   வந்தேறியும் பூர்வகுடியினனும்

    4.1 பொறையாற்றுக்கிழான் தமிழகத்துப் பூர்வகுடியினன் ஆவான். இடப்பெயரோடு  சேர்த்தே அழைக்கப்பட்டமைக்குக் கிழார்கள் அவ்விடத்து அழுந்துபட்டிருந்த வாழ்க்கையினை உடையோராய் இருந்தமையே காரணம் என்று சொல்வது ஏற்புடைத்தாகும். கோமான் பெரியன் வந்தேறிகளாகிய வேளிருள் ஒருவன்.

    கோமான் பெரியனுக்காக  உழுதவரை மேலாண்மை செய்தவன் எனினும்; பொறையாற்றுக் கிழானைப் பாடும் போது;

    “வேலி ஆயிரம் விளைக நின் வயலே” (புறம்.- 391)

    என வாழ்த்தக் காரணம்; பெரியனைக் காட்டிலும் பொறையாற்றுக் கிழானுக்கு அம்மண்ணோடு இருக்கும் பிரிக்கவியலாக் குடியுரிமை ஆகும். குறுநில மன்னராகிய வேளிர் வந்தேறிகள் என்பதை மு.இராகவ ஐயங்கார் ஏற்கெனவே ‘வேளிர் வரலாறு’ என்ற நூலில் நிறுவி இருக்கிறார்.

    அங்ஙனமே கொண்கானக் கிழானைப் பாடும் மோசிகீரனார்;

    “நின் கொண்பெருங் கானம்” (புறம்.- 154)

    என்று அழுத்திப் பாடுவதன் காரணம் கொண்கானத்தில் உழுவித்து ஆண்ட வேள்நன்னன் மரபைக் காட்டிலும் கொண்கானக் கிழானுக்குத் தன் குடியுரிமை காரணமாக அம்மண்ணின் மேலுள்ள பிரிக்கவியலா உரிமை என்பதே ஆகும்.

    கோவூர் கிழார் சோழன் நலங்கிள்ளியைப் போற்றிப் பாடும்போது;

    “பூவா வஞ்சியும் தருகுவன் …
    …மாட மதுரையும் தருகுவன்…
    பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள்
    தொன்னிலக் கிழமை சுட்டின்”…(புறம்.- 32)

    எனப் பரிசில் வாழ்க்கை மேற்கொண்ட தமிழகத்துப் பாணரை அழைத்துத் ‘தொன்று தொட்ட உரிமை இம்மண்ணின் மேல் இருக்கும் காரணமாக நாம் வஞ்சியைக் கேட்டாலும்; மதுரையைக் கேட்டாலும் சோழன் தரவல்லவன்’ என்கிறார். இங்கே கிழமை பற்றிப் பேசுவதன் காரணம்; கிழார்கள் தமிழகத்தின் பூர்வகுடிகள் என்பதாம்.

    5.0   மாற்றுக்கருத்துகளும் விளக்கங்களும்

    உ.வே.சாமிநாதையர் பொறையாற்றுக் கிழானைப் பற்றித் தனிப்பட ஏதும் கூறவில்லை எனினும்; பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனை உழுவித்தவன் என்று கூறுவதற்கு விளக்கம் காணவேண்டி உள்ளது. (புறம்.- உ.வே.சாமிநாதையர் (ப.ஆ.)- ப.- 57) இது ஆய்வுலகின் தொடக்க காலத்தில் நிலவிய குழப்பநிலை அன்றி வேறில்லை. அவன் நெடுங்கை வேளுக்காக உழுதோரின் தலைவன் என முன்னர்க் கண்டோம் (பார்க்க- பொறையாற்றுக் கிழானின் பணியும் இனமும்).

    மு.இராகவையங்கார் பொறையாற்றுக் கிழான் பற்றித் தனிப்பட ஏதும் கூறவில்லை எனினும் கொண்கானக் கிழானை வேள் என்று  கூறுவதற்கு விளக்கம் காணவேண்டி உள்ளது (வேளிர் வரலாறு- ப.- 17). கொண்கானத்தை ஆண்ட நன்னன் எனும் வேளிர்குலத் தோன்றலின் செல்வ வளத்தைப் பொன்னோடு சேர்த்துப் பேசும் தொகைநூற் பாடல்கள் (நற்றிணை- 391; பதிற்.- 40) இருக்க; கொண்கானக் கிழான் விதந்து போற்றப் படுவது; இருவரும் வெவ்வேறு இனத்தினர் என்பதாலேயே எனலாம்.

    “திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்
    அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
    சின்னீர் வினவுவர் மாந்தர் அதுபோல்” (புறம்.- 154)

    என்கிறார் மோசி கீரனார். கடல் போல் செல்வம் மிகுந்த மன்னர் அருகில்  இருந்தும் உயிர்க்கு ஆதாரமாகிய குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைக்காக உன்னை உள்ளி வந்தேன் என்று கொண்கானக் கிழானின் கொடைத்தன்மையைப் புலப்படுத்துகின்றார்.

    கொண்கானக் கிழானது குன்று இரு பெருமைகளை உடையது.

    “நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்
    தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும்” (புறம்.- 156)

    என்பது முதலாவது ஆகும். அதாவது இரவலர் ‘எமது எமது’ என்று கூறிட்டுக் கொள்ளப் பின்னர் உண்ண இயலாமல் கிடக்கினும் கிடக்கும் என்பதாம். இரண்டாவது வேந்தரைத் தாமுடற்றும் போரில் திறைகொண்டு பெயர்க்கும் தலைமைத் தன்மையாம்.

    “நிறையருந் தானை வேந்தரைத்
    திறைகொண்டு பெயர்க்கும் செம்மலு முடைத்தே” (மேற்.)

    என்னும் அடிகள் மூலம்; வேந்தர் திறை செலுத்தும் வண்ணம் கொண்கானக் கிழான் தன் தலைவனாகிய வேளுக்காகப் போர் செய்ய வல்லவன்; வீரத்தில் சிறந்தவன் எனும் கருத்து பெறப்படுகிறது. இதனால் கொண்கானக்  கிழானை வேள் என்று சுட்டுவது ஏற்றுக்கொள்ள இயலாதது ஆகிறது. அவன் கொண்கானத்து மன்னருக்காக வேந்தருடன் போரிட்டுத் தோற்கடித்துத் திறை செலுத்த வைத்தவன்.

    புலவர் கா.கோவிந்தன் பொறையாற்றுக் கிழான் பற்றித் தனிப்பட ஏதும் கூறவில்லை. ஆனால் அவர் எடுத்துக் காட்டும் கல்வெட்டுகள் நால்வருணத்தாருள்ளும் ஆயருள்ளும் தலைமை சான்றவரெல்லாம் கிழார் என்று சொல்லத்தக்க வகையில் அமைந்துள்ள காரணம் என்னவென்பது ஆய்வுக்குரியது (கிழார்ப் பெயர் பெற்றோர்- ப. 5&6). தொகை நூல்களில் கிழார் எனும் சொல்லும் அதன் அடியாகப் பிறக்கும் பிற சொல் வடிவங்களும் 84முறை பயின்று வந்துள்ளன (http://tamilconcordance.in/TABLE-sang.html). அனைத்து இடங்களிலும் தலைமை என்னும் பொருளன்றி வேறு பொருள் சொல்ல இயலவில்லை. தலைவர்  என்னும் பொருள் கொண்ட கிழார் என்னும் சொல் காலப்போக்கில் நால்வருணத்தாருள்ளும் ஆயருள்ளும் தலைமை சான்றவரையும் குறிக்கப் பயன்பட்டுள்ளது எனல் தகும்.

    முடிவுரை

    பெரியன் மருதமும் நெய்தலும் மயங்கும் பொறையாற்றின் சங்கமத்துறையாகிய புறந்தை முன்றுறையைச் சார்ந்து கோமானாக இருந்து  ஆண்டான். இப்புறந்தை இன்று ஆற்றின் பெயராகிய பொறையாறு என்றே வழங்குகிறது. பொறையாற்றுக் கிழானும் அதே ஊரைச் சார்ந்தவன் ஆவான். பொறையாற்றுக் கிழான் குறுநிலமன்னன் பெரியனுக்காக உழுத திணைமாந்தராகிய உழவரின் தலைவனாக வாழ்ந்து கொடையிலும் சிறந்திருந்தான். பொறையாற்றுக்கிழான் தமிழகத்துப் பூர்வகுடியினன் ஆவான். இடப்பெயரோடு  சேர்த்தே அழைக்கப்பட்டமைக்குக் கிழார்கள் அவ்விடத்து அழுந்துபட்டிருந்த வாழ்க்கையினை உடையோராய் இருந்தமையே காரணம் என்று சொல்வது ஏற்புடைத்தாகும். கோமான் பெரியன் வந்தேறிகளாகிய வேளிருள் ஒருவன்.

    துணைநூற் பட்டியல்

    1. அகநானூறு- களிற்றியானை நிரை- சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.- முதற் பதிப்பின் மறுபதிப்பு- 2009
    2. அகநானூறு- மணிமிடை பவளம்- சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.- முதற் பதிப்பின் மறுபதிப்பு- 2007
    3. இராகவையங்கார்,மு.- வேளிர் வரலாறு- மதுரைத்தமிழ்ச்சங்கம்,செந்தமிழ்ப்பிரசுரம் 33- 1913
    4. ஐங்குறுநூறு- சைவ சித்தாந்த நூற்பதிப்புக் க., சென்னை.- முதற் பதிப்பின் மறுபதிப்பு- 2009
    5. நற்றிணை- கழக வெளியீடு- 614- சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.- முதற் பதிப்பின் மறுபதிப்பு- 2007
    6. பத்துப்பாட்டு- பாகம் i- கழக வெளியீடு 856- சைவ சித்தாந்த நூற்பதிப்புக் க., சென்னை.- 2007
    7. பத்துப்பாட்டு- பாகம் ii- சைவ சித்தாந்த நூற்பதிப்புக்  கழகம்,சென்னை.- 2008
    1. பதிற்றுப்பத்து- கழக வெளியீடு 523- சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.- முதற் பதிப்பின் மறுபதிப்பு- 2007
    2. புறநானூறு- உ.வே.சாமிநாதையர் (ப.ஆ.)- 3ம் பதிப்பு 1935- லா ஜர்னல் பிரஸ், சென்னை.
    3. புறநானூறு- பாகம் i- கழக வெளியீடு 438- சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.- முதற்பதிப்பின் மறுபதிப்பு- 2007
    4. புறநானூறு- பாகம் ii- கழக வெளியீடு 598- முதற்பதிப்பின் மறுபதிப்பு- 2007
    5. கோவிந்தன்,கா.- கிழார்ப் பெயர் பெற்றோர்- கழக வெளியீடு 684-முதல் பதிப்பு- 1954
    6.  http://tamilconcordance.in/TABLE-sang.html 

    Brief note on author:

    Dr.(Mrs) S. Kanmani Ganesan a lecturer in Tamil published ‘chilappathikaaram kaattum naadum nakaramum’- her Ph.D thesis in 1992. It’s worthy to mention her publication – ‘Murukan Cult In Cilappathikaaram’ in Murukan The Lord Of The Kurinchi Land released by the Institute Of Asian Studies, Chennai. She has also translated the traumatology section of the book- An Introduction To Orthopaedics And Traumatology authored by Dr.M.Natarajan as ‘kaaya aruvaiyiyal maruththuvam’ which was published by the Madurai Kamaraj University; sponsored by the Text Book Society of Tamilnadu, Chennai. The booklet makalir udalnalach chikkalkal was published by her as the proceedings of a symposium sponsored by the UGC, New Delhi. She retired as a principal of an autonomous institution.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

    பொறையாற்றுக் கிழானும் கோமான் பெரியனும் என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி வல்லமை முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற் கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு.

    · ஆய்வு நெறியை முழுமையாகக் கருத்திருத்திப், பழந்தமிழ் வரலாற்றுச் செய்தியொன்றினை எல்லோருக்கும் புரியவேண்டும் என்னும் முயற்சியோடு வடிவமைக்கப்பட்ட கட்டுரை என்பதில் கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்.

    · இலக்கியப் பதிவுகளை மிகக் குறைந்த விழுக்காடே வரலாற்று ஆவணங்களாகக் கருதும் வரலாற்றியல் ஆய்வு நெறியில் சங்க இலக்கியத்தின் நம்பகத்தன்மையை முன்னிறுத்தி  இருவேறு வேந்தர்களை அடையாளப்படுத்துவதில் கட்டுரையாளர் காட்டியுள்ள ஆர்வம் சங்க இலக்கியப் பதிவுகளின் நம்பகத்தன்மையை மேலும்  கூட்டுகிறது.

    · பொருத்தமான வலிமையான தரவுகளைத் ‘தரவிறக்கம்’ செய்வதில் கட்டுரையாளரின் உழைப்பு தென்படுகிறது.

    · தற்கால ஆய்வுக் கட்டுரைகளில் காண முடியாத உ.வே.சா, ஔவை, மு.ரா. கா.கோவிந்தனார் முதலிய சான்றோர்களின் பெயர்களைக் காண்பது ‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகைகிடைத்த குளிர் தருவாக, தரு  நிழலாக, நிழல் கனிந்த கனியாகத் தோன்றுகிறது.

    · “பொய்யா யாணர் மையல் கோமான்” (புறம்.- 71) என்று மாவன் புகழப்படுகிறான்” என்னுந் தொடர் “பொய்யா யாணர் மையல் கோமான் மாவன்” என்று மாவன் புகழப்படுகிறான்” என்றிருப்பதே நெறி!.  முன்னமைந்த நான்கு சொற்களும் மாவனுக்குப் பெயரடைகள் அல்லவா? அவற்றோடு ‘மாவன்’ இருந்தால்தான் அது அகச்சான்று!.

    · “அங்ஙனமே கொண்கானக் கிழானைப் பாடும் மோசிகீரனார்; “நின் கொண்பெருங்கானம்” (புறம்.- 154) என்று அழுத்திப் பாடுவதன் காரணம் (4.0) என்னும் கட்டுரையாசிரியர் “அழுத்தம் எங்கே இருக்கிறது?” என்பதைக் காட்டியிருக்க வேண்டுமல்லவா?

    · ‘வேளிருக்காகவோ  அன்றி வேந்தனுக்காகவோ” (3.2) என்னுந் தொடரில் பிரிநிலை ஓகாரத்தைத் தொடர்ந்து ‘அன்றி’ வருவது நெறியன்று.

    · “கோடை காலம்” என்று எழுதுவது கட்டுரையாசிரியர் அதனை உம்மைத்தொகையாகக் கருதி போலும்! ‘கோடையாகிய காலம்’ என்பதே பொருளாயின் அது இருபெயரொட்டுப் பண்புத்தொகையே. எனவே ஒற்று மிகுத்தே எழுதுதல் வேண்டும். இல்லையாயின். அதனை உம்மைத் தொகையாக விரித்துப் பொருளமைதி கூற வேண்டும்!


    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 9

    பரிமேலழகர் உரைத்திறன் – 9

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    அலங்காரத்திற்காக அல்ல அடைச்சொற்கள்!

    முன்னுரை

    ஒவ்வொரு குறட்பாவையும் எழுத்து, அசை, சீர், அடி என ஆழ்ந்து நோக்கி உரையெழுதுவது பரிமேலழகருக்கு இயல்பு. குறட்பாவின் கிடக்கை நிலைக்கேற்ப ஆற்றொழுக்காக நிரல்பட உரைகாண்பது அவர்க்கு இயல்பன்று. குறட்பாவை முற்றாக நோக்கி, முன்பின்னாக உள்ள அதிகாரக் கருத்துக்களைக் கருத்திற்கொண்டு, மனத்துட் பதிவு செய்திருக்கும் நூற்கருத்துக்கள் முழுவதையும் ஒவ்வொரு முறையும் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தி உரையெழுதுவதே அவர் கையாண்ட உரைநெறி. தனக்குத்தானே முரண்படும் ஓரிடம் கூட அவர் உரையில் இல்லாமல் போனதற்குக் காரணம் இதுதான். அந்த வகையில் உவமத்திற்கு வந்த அடைச்சொற்களைப் பொருளுக்கும் பொருளுக்கு வந்த அடைச்சொற்களை உவமத்திற்கும் பொருத்திக்காட்டும் வியத்தகு ஆற்றலை வெளிப்படுத்தும் திருக்குறள் ஒன்று இக்கட்டுரையில் திறனறியும் குறட்பாவாக இடம்பெறுகிறது. குறட்பாவின் கருத்து முழுமையாகப் புரிந்து கொள்ளப்படல் வேண்டும் என்னும் பரிமேலழகரின் பேரார்வமே இவ்வாறு பொருத்தி உரைகாண்பதற்கான அடிப்படைக் காரணமாகும்.

    முற்றும் நோக்கல் என்றால் என்ன?

    ‘உற்று நோக்கல்’ தெரியும் ‘முற்று நோக்கல்’ தெரியுமா? உற்று நோக்கினாலே அது முற்று நோக்கலில் முடியும்.  சான்றாகப்,

    “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவனடி சேரா தார்” (10)

    என்பது கடவுள் வாழ்த்தாகிய தலையதிகாரத்தின் இறுதிக் குறட்பா. இந்தக் குறட்பாவை மேம்போக்காக நோக்கி உரைகண்டால் ‘இறைவன் திருவடியைச் சேராதவர் பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க மாட்டார்’ என்று மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அது பாட்டின் மையக்கருத்தாக இருக்கலாம்., அப்பாட்டின் முழுமையான கருத்தாகக் கொள்ள முடியாது. காரணம் என்ன? மையக்கருத்து முழமையான கருத்தாகாதா? ஆகாது! எப்படி? பாட்டில் ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்’ என்று செயப்படுபொருளும் வினைமுற்றும் இருக்கின்றனவே தவிர, ‘யார்?’ என்னும் எழுவாய் இருக்கிறதா? இல்லையே!. அடுத்த நிலையில் ‘இறைவனடி சேராதார் நீந்தார்’ என்று எழுவாயும் வினைமுற்றும் இருக்கின்றனவே தவிர எதனை நீந்தார் என்னும் செயப்படுபொருள் இருக்கிறதா? இல்லையே! எனவே எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் இருந்து பொருளுணர்த்த வேண்டிய நிலையில் உள்ள இரண்டு தொடர்களுமே குறட்பாவின் கட்டமைப்பில் குறையுடையனவே!. ‘குறள் வெண்பா’ என்னும் குறுகிய யாப்பே இதற்குக் காரணம். செறிவை முன்னிறுத்திச் செய்யுள் செய்கிறபோது இது தவிர்க்க இயலாதது. உண்மையில் இது ஓர் உத்தியெனினும் அதனைக் கண்டறிந்து எல்லாருக்கும் புரியும் வகையில் வெளிக்கொணர வேண்டியது உரையாசிரியர் கடமை. அந்தக் கடமையைப் பரிமேலழகர் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

    ‘இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவியாகிய பெரிய கடலை நீந்துவர்; அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர்’

    என்னும் இப்பாட்டிற்கான பொழிப்பில் பரிமேலழகர் உரையின் உச்சம் தொடுவதைக் காணலாம். குறட்கருக்கத்தை விட இவரின் உரைச்சுருக்கம் நுட்பமானது. ஆனால் குறளில் பெறமுடியாத விளக்கத்தையும் தெளிவையும் இவர் உரையில் காண முடிகிறது. குறட்பாவையும் அதன் பொருளையும் நன்கு உள்வாங்கிக் கொண்டு எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகியனவற்றை நிரல்படப் பெய்து தெளிவான முழுமையான உரையை எழுதிக்காட்டுவதைக் காணலாம். மேலும் புணையை ‘அதனை’ என்றும் பிறவிப்பெருங்கடலை ‘அதனுள்’ என்றும் சுட்டால் உணர்த்துவார். ‘நீந்தார்’ என்னும் எதிர்மறைக்கு  ‘அழுந்துவர்’ என்னும் மற்றொரு உடன்பாட்டை எதிர்மறையாக்குவார். இந்தக் குறட்பாவும் உரைவிளக்கமும் இங்கே சுட்டப்பட்டதற்குத் திருக்குறள் தொடரமைப்பையும் உவம மற்றும் பொருள் அடைகளையும் நன்கு நோக்கி உரையெழுதும் அவருடைய உரைத்திறனைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும் என்பதற்கேயாம்.

    திறனறியும் குறட்பாவும் பொழிப்புரையும்

    திருக்குறளில் பன்னிரண்டாவதாக அமைந்துள்ள ‘நடுவுநிலைமை’ என்னும் அதிகாரத்துள் எட்டாவது குறட்பாவாக இடம்பெற்றிருப்பது,

    “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
    கோடாமை சான்றோர்க்கு அணி” (118)

    என்னும் குறட்பாவாகும். இதற்குச்,

    1. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் – முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம்போல
    1. அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி – இலக்கணங்களான் அமைந்து ஒரு பக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகு ஆம்.

    அதிகாரக் கருத்துப் பகுப்பு

    பொழிப்புரையின் நுட்பம் காண்பதற்கு முன்பாக இவ்வதிகாரத்தின் பொருட் பாகுபாடுகளை அறிந்து கொள்வது இந்தக் குறட்பாவின் முழுமையான கருத்தினைப் பரிமேலழகர் கண்டறிந்த நெறி புலப்பட உதவக் கூடும்.  திருக்குறள் அதிகாரக் கருத்துக்களைப் பாகுபடுத்துவது பற்றிப் பல கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி ‘நடுவுநிலைமை’ என்னும் இவ்வதிகாரப் பொருண்மை பின்வருமாறு பரிமேலழகரால் வகுத்துக் கொள்ளப்படுகிறது. அதாவது ‘நடுவுநிலைமை’ என்னும் அதிகாரத்தில் நடுவுநிலைமை என்னும் பண்பைத் திருவள்ளுவர் பொதுவாக ஆராயவில்லை என்பதாம்.

    1. நடுநிலைமையது சிறப்பு (1)
    2. நடுவுநிலைமையான் வந்த செல்வம் நன்மை பயத்தல் (2)
    3. ஏனைச் செல்வம் தீமை பயத்தல் (3)
    4. தக்கார் தகவிலர் அறியும் ஆறு (4)
    5. கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா (5)
    6. கோடுதல் கேட்டிற்கு ஏதுவாம் (6)
    7. கோடாதவன் வாழ்வு கேடன்று (7)
    8. அவையத்தார்க்கு வேண்டிய நடுவுநிலைமை (8-9)
    9. வணிகத்தார்க்கு வேண்டிய நடுவுநிலைமை (10)

    இப்பகுப்பாய்வில் இறுதியில் உள்ள அவையத்தார்க்கும் வணிகர்க்குமான நடுவுநிலைமைப் பண்பினைப் பரிமேலழகர் தொகுத்துக் கூறுகிறார். கட்டுரையாளர் பொருள் தெளிவு கருதி வகுத்துரைக்கிறார்.

    பொழிப்புரை நுட்பம்

    • ‘சமன்செய்து’ என்றே குறளிருக்க, தன் கண் வைக்கப்படும் பாரத்தைத் தான் அளக்குமுன் தன்னைச் சரிசெய்து கொள்ள வேண்டும்’ என்னும் நுட்பத்தை உணர்ந்த பரிமேலழகர் ‘முன்னே’ என்னும் சொல்லை வருவித்துக் கொள்கிறார். கொண்டு ‘முன்னே ‘தான் சமனாக நின்று’ என உரையெழுதுகிறார்.
    • தன்னைச் சரிசெய்து கொண்ட பின்பே தன் பணியைச் செம்மையாகச் செய்ய முடியும் என்பதைப் ‘பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும்’ என எழுதுகிறார்.
    • ‘சீர்தூக்கும்’ என்பதற்கு ‘வரையறுக்கும்’ என உரை காண்பதை நோக்க வேண்டும். ‘சீர்’ என்பதற்குச் ‘சிறப்பு’ என்பதுதான் பொருள். ‘சீர் கொண்ட’ என்பது தமிழ்விடுதூது. சீரிடம், சீருடைச் ‘செல்வர்’, சீர்மை என்பன திருக்குறள் கண்ட சீர்கள். ‘சீர் அபிராமி’ என்பது பட்டர் வாக்கு ‘சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்’ என்பது வள்ளலார் வாக்கு. ‘சீரார் பெருந்துறை’ என்பது திருவாசகம். ‘சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர் காள்’ என்பது திருப்பாவை.
    • ‘சமனாக அமைந்து’ என்னும் உவம அடைக்கேற்ப அமைந்து என்பதற்கு ‘இலக்கணங்களால் அமைந்து’ என்னும் பொளுளடையை வருவித்துக் கொள்கிறார்.

    விளக்கவுரை

    “உவமையடையாகிய சமன்செய்தலும் சீர்தூக்கலும் பொருட்கண்ணும்,  பொருளடையாகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர் தூக்கலாவது தொடை விடைகளால் உள்ளவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும் ஒருபால் கோடாமையாவது  அவ்வுள்ளவாற்றை மறையாது பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க” என்று விளக்கவுரையில் பரிமேலழகர் பொருளுக்கே முதன்மை தந்திருப்பதைக் காணலாம்.

    விளக்கவுரை நுட்பம்

    • ‘துலாக்கோல்’ உவமம். ‘சான்றோர்’ பொருள். முன்னது பாரத்தை வரையறுக்கிறது. பின்னவர் எத்திறத்தும் நடுவுநிலைமை மாறாமல் செயல்படுபவர் எனினும் குறட்பாவில் உவமத்திற்குச் சொல்லப்பட்ட சமன் செய்து சீரதூக்கல் இரண்டு அடைகளையும் பொருளுக்கு ஆக்கவில்லை. பொருளுக்குரைத்த அமைதலையும் ஒருபால் கோடாமையையும் உவமத்திற்கு ஆக்கவில்லை. இதனைப் பரிமேலழகர் நோக்கி உரையெழுதுகிறார்.
    • சமன் செய்து, அமைந்து, ஒருபால் கோடாது சீர் தூக்கல் என்பது உவமத்திற்கும் பொருந்தும் பொருளுக்கும் பொருந்தும். அதாவது உவமமாகிய துலாக்கோலிற்கும் பொருளாகிய சான்றோருக்கும் இந்த நான்கு பண்புகளும் இருக்க வேண்டும் என்று பரிமேலழகர் கருதுகிறார். கருதி, “உவமையடை ஆகிய சமன்செய்தலும் சீரதூக்கலும் பொருட்கண்ணும் பொருளடையாகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி” உரையெழுதுகிறார்.
    • இந்த நான்கு பண்புகளையும் உவமத்திற்கு ஒருமுறையும் பொருளுக்கு ஒரு முறையுமாக அடையாக்குவது குறுகிய யாப்பிலக்கணத்தில் கூடாமையை அவர் புரிந்து கொள்கிறார். கொண்டு புறக்கட்டுமானத்தின் போக்கறிந்து அகக்கட்டுமானத்தின் நுண்ணியம் காண்கிறார்.
    • பொருளுக்கான அடையை உவமத்திற்கு ஆக்கியுரைத்த பரிமேலழகர் (அதிகாரப் பொருள் நுட்பம் கருதி) உவம அடையைப் பொருளுக்குப் பொருத்திய பாங்கு பற்றி மட்டுமே உரையெழுதுகிறார். அதாவது துலாக்கோல் பாரத்தை அளக்கும் பண்பு பற்றிப் பரிமேலழகர் விரித்துரைக்காது சான்றோர் நடுவுநிலைமை தவறாது செயல்படுவதையே விரித்துரைப்பதைக் காணமுடிகிறது. உவம விளக்கத்தைக் கைவிட்டுப் பொருள் விளக்கத்தை மட்டும் பரிமேலழகர் தந்திருப்பதற்கு என்ன காரணம்? இவ்வதிகாரத்தின் இறுதிப்பாட்டில் இந்த உவம ஆற்றலைத் திருவள்ளுவர் வெளிப்படுத்துவதைப் பரிமேலழகர் அறிந்து கொள்கிறார். துலாக்கோலின் பணி அளவில் மாறுபடாமை என்பதைப் பிறவும் தமபோல் செயின் என்னும் தொடர் குறிப்பதையும், அத்தொடருக்குக் “கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல் என்னும் (பட்டினப்பாலை) பரிமேலழகர் தரும் விளக்கத்தையும் அறிந்து கொண்டால் திறனறியும் குறட்பாவில் உவம விளக்கம் விடுபட்டதற்கான காரணத்தை அறியலாம்.
    • நடுவுநிலைமை என்பது மனம், மொழி, செயல் என்னும் மூன்றனுக்கும் உரியதாதலின் செயலாகிய வணிகத்தைப் பிரித்தோதி, 118, 119 ஆகிய குறட்பாக்களில் சான்றோர் திறம் கூறப்படுவதைப் பரிமேலழகரே தெளிவுபடுத்திக் காட்டுகிறார். இதனை அதிகாரக் கருத்துப் பகுப்பில் மூன்று பாடல்களையும் ஒருங்கிணைத்தாலும் முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின, ஏனையது வணிகரை நோக்கியது’ என்னும் அவருரையால் அறிய இயலும்.
    • இந்த அதிகாரத்தின் இறுதிப்பகுதி வணிகர்களை நோக்கியது என்பது ‘வாணிகம் செய்வார்க்கு’ என்னும் குறட்பா தொடராலும் பரிமேலழகர் எழுதிக்காட்டும் உரையாலும் புலப்படும். ஆனால் திறனறியும் குறட்பாவில் ‘வணிகர்க்கு அணி’ என்னாது ‘சான்றோர்க்கு அணி’ என்பது குறித்திருப்பது காண்க. சங்கப் புலவர்களைச் ‘சங்கச் சான்றோர்’ என்பது போன்றது இது. ‘சான்றோர்’ என்னும் இச்சொல் பயன்பாடுதான் பரிமேலழகரின் சிந்தனையைத் தூண்டி இறுதிக்கும் முன்னதாக உள்ள இரண்டு பாடல்களையும் (118,119) ‘அவையத்து நோக்கிச் சொல்லப்பட்டன’ என்னும் உரையெழுத காரணமாய் அமைந்தன எனலாம்.

    இன்னாத கனிகளும் இனிய காய்களும்

    திறனறியும் குறட்பாவில் உவம அடைகளையும் பொருளடைகளையும் இருவழியும் புணர்த்தி, உரையெழுதிய பரிமேலழகர் இது போன்ற நெறியை வாய்ப்புக் கிடைக்கிறபொழுதெல்லாம் பின்பற்றியிருக்கிறார் என்பதற்குச் சான்றுகள் பல உள. இனிய சொற்கள் இருக்க, இன்னாத சொற்களைப் பேசுவது  கனியிருக்குங்கால் காயை உண்ணுவதுபோல என்னும் கருத்துப்பட திருக்குறள் ஒன்றிருக்கிறது.

    “இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” 100

    இந்தப் பாட்டைக் கிடக்கைநிலையில் பொருள் கண்டால் மேலே கண்டவாறுதான் அமையும். அமையவே எல்லாக் கனிகளும் இனிமை தருமா? எல்லாக் காய்களும் கேடு தருமா? என்னும் வினா எழும். பரிமேலழகர் உரையெழுதுங்கால் பின்பற்றிய நெறிகளில் அது குறள் வெண்பா என்னும் குறுகிய யாப்பில் எழுதப்பட்டது என்பதை நினைவிற்கொள்வது இன்றியமையாத ஒன்று. வேறு வகையாகச் சொன்னால் குறுகத் தறித்த குறள் என்பதை மறந்து அவர் உரை அமைவதில்லை. குறுகத் தறித்தவைகளை விரிவாக வெளிக்கொணர்ந்ததில் அவருடைய உரைக்குப் பெரும்பங்குண்டு. அந்த வகையில்  இந்தப் பாடடு ‘இனிய உளவாக இன்னாத கூறல் இனிய கனியிருப்ப இன்னாத காய்கவர்ந்தற்று’ என இருத்தல் வேண்டும். யாப்புநிலை கருதியே ஆசிரியர் சுருங்க உரைத்தார் எனக் கருதிப் பின்வருமாறு உரையெழுதுகிறார்.

    “பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக் கண்ணும் சென்றன.  இனிய கனிகள் என்றது ஔவை உண்ட நெல்லிக்கனிபோல் அமிழ்தானவற்றை. இன்னாத காய்கள் என்பது காஞ்சிரங்காய் போல  நஞ்சாவனவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம்”

    பொருளின்கண் சென்ற அடைகளைப் பரிமேலழகர் இவ்வாறு உவமத்திற்குப் புணர்க்காமல் உரையெழுதியிருந்தால் “கனிகள் எல்லாம் இனிமை தரும், காயெல்லாம் கேடு தரும்” என்னும் கருத்துப் பிழையோடு, ‘இனிய கனிகளே நன்மை தரும் இன்னாத காய்களே கேடுதரும்’ என்னும் திருவள்ளுவரின் கருத்து விளக்கமும் புலப்படாமல் போயிருக்கக்கூடும்.

    வில் வணக்கமும் சொல் வணக்கமும்

    உவமத்தை முன்மொழிந்து உவமேயத்தைப் பின்மொழிவதும் உவமேயத்தை முன்மொழிந்து உவமத்தைப் பின்மொழிவதுமாகிய இருநெறிகளைத் திருக்குறளில் காணமுடியும். ‘கூடா நட்பு’ என்னும்  அதிகாரத்தில்,

    “சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க! வில்வணக்கம்
    தீங்கு குறித்தமை யான்” (827)

    என்னும் குறட்பா பின்னதற்குச் சான்றாகிறது. (“என்பிலதனை வெயில்போலக் காயுமே” (77) என்பது முன்னதற்குச் சான்றாகிறது. மேற்கண்ட குறட்பாவில் வணங்கியது சொல்லன்றிச் சொல்பவன் அல்லன். வணங்கியது வில்லன்றி வில்லியல்லன். அவ்விரு வணக்கமும் செய்வார்தம் உள்ளக் குறிப்போடு  பொருந்தியதே தவிர சொல்லின் செயலோ வில்லின் செயலோ அன்று அவ்விருவணக்கமும் போலியானது. கொடுமை நிறைந்தது. வெளியில் புலப்படாதது. வில்லினது வணக்கம் ஏற்றவர்க்குத் தீமை செய்தலைக் குறித்தமையால் பகைவர் மாட்டுப் பிறக்கும் சொல்லினது வணக்கத்தையும் தமக்கு நன்மை செய்தலைக் குறித்தது என்று கருதற்க என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர் வில்லையேந்தியவனின் தீங்கு குறித்த எண்ணத்தை அவனாலாகிய  வில்வணக்கத்தின் மேலேற்றி ‘வில்வணக்கம் தீங்கு குறித்தமையான்” என்று கூறியதனால் அதற்கு ஏற்ப ஒன்னார் சொல்வணக்கம் தீங்கு குறித்ததை அவர்களாலாகிய சொல்வணக்கத்தின் மேலேற்றி (இங்கு சொல் தீங்கு செய்யாது., சொல்லைப் பணிவாகச் சொல்லும் பகைவனே தீங்கு செய்வான்) ‘ஒன்னார்கண் சொல்வணக்கம் கொள்ளற்க!’ என்று மறுத்துக் கூறுகிறார். இந்த விளக்கத்தையெல்லாம்,

    “வில்வணக்கம் வேறாயினும் வணங்குதல் ஒப்புமை பற்றி அதன் குறிப்பை ஏதுவாக்கியும் கூறினார் வில்லியது குறிப்பு அவனினாய  வில்வணக்கத்தின் மேல் நிற்றலான் ஒன்னாரது குறிப்பும் அவரினால் ஆய சொல்வணக்கத்தின் மேலதாயிற்று”.

    ‘வில்வணக்கம் தீங்கு குறித்தது’ என்பது தெளிவு. இது உவமம். ‘சொல்வணக்கம் தீங்கு குறித்ததா?’ என்பதை விளக்குதற்கே இந்த உவமத்தைத் திருவள்ளுவர் பயன்படுத்துகிறார். இரு வணக்கங்களின் நோக்கமும் வேறாயினும் ‘வணங்குதல்’ ஒப்புமை பற்றி உவமித்தார் என நுண்ணியம் காண்கிறார் பரிமேலழகர். வணங்குவதனாலேயே அதன் நோக்கம் தூய்மையானது எனக் கருதற்க என்பதாம்!

    இதுகாறும் தரவுகளின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வில் உவமம், உவமேயம் சார்ந்த குறட்பாக்களில் பரிமலழகரின் உரைகாணும் திறன் புலப்பட்டிருக்கக்கூடும். பொருளுக்கும் உவமத்திற்குமான அடைகளை உற்றுநோக்கி அவற்றின் அடிப்படையில் நூலாசிரியர் சொல்லவரும் கருத்தினை நன்கு உள்வாங்கி அதற்கேற்ப உவம அடைகளையும் பொருளடைகளையும் கையாளும் வியத்தகு திறன் அவர் உரையில் ‘தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்படுவதைக்’ காணலாம்.

    நிறைவுரை

    திறனறியும் குறட்பாவில் “அமைந்து, ஒருபால் கோடாமை’ என்னும் பொருளுக்கான (சான்றோர்க்கான) அடைமொழிகளை உவமமாகிய துலாக்கோலுக்கும் ஆக்கினாலும் பாடல் சான்றோரின் நடுவுநிலைமையாகிய பண்பு பற்றியதென்பதை உணர்ந்து “அமைந்து சமன் செய்து சீர்தூக்கி ஒரு பால் கோடாமை’ என அவர்தம் உயர்பண்பை விளக்கிக் காட்டிய நுண்ணியமே இப்பாட்டில் பரிமேலழகரின் உரைத்திறனாகும். நூலாசிரியரால் புணர்க்கப்படும் அடைச்சொற்கள் பொருளுக்காயினும் உவமத்திற்காயினும் அவை வெற்று அலங்காரத்திற்காகவோ சீர் நிரப்புதற்காகவோ அல்ல என்பதே பரிமேலழகர் உரையால் புலப்படும் உண்மையாகும்.

    (தொடரும்…)

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 20

    கதை வடிவில் பழமொழி நானூறு – 20

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 41

    மாற்றத்தை மாற்றம் உடைத்தலால் மற்றவர்க்(கு)
    ஆற்றும் பகையால் அவர்களைய – வேண்டுமே
    வேற்றுமை யார்க்குமுண் டாகலான் ‘ஆற்றுவான்
    நூற்றுவரைக் கொன்று விடும்’.

    பழமொழி – ‘ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும்’

    என்ன சார். ரொம்பதான் உறவு கொண்ட்டாடுறீங்க. பெங்களூர்ல பத்து வருசம் ‘இருந்துட்டு வந்தவொடனே எங்களயெல்லாம் மறந்துட்டு போயும் போயும் இவன்கூட சுத்திக்கிட்டு திரியிறீங்க. இவன் யாருங்கற உண்ம தெரிஞ்சா கிட்ட கூட போக மாட்டீங்க. வரிசையாக வீடுகள் இருக்கும் எங்கள் பகுதியில் முன்பு என் வலது பக்கத்து வீட்டு மாடியில குடியிருந்தார் வேலு. இப்ப வேற தெருவுக்கு மாத்தி போயிட்டார். அவர்கூட நான் சுத்தரதப்பத்திதான் என் இடது பக்கத்து வீட்டு உரிமையாளர் நளின் குமுறிக் கொண்டிருக்கிறார்.

    அவர் சொல்வது எல்லாம் உண்மதான். இங்க வந்ததுலேந்து நான் வேலு கூடதான் சுத்திக்கிட்டு இருக்கேன். ஆனா நான் தெரியாம இதச் செய்யல. அவர் குணம் என்னனு தெரிஞ்சிக்கிட்டேதான் பழகறேன்.

    முந்தைய விசயங்களை யோசிக்க ஆரம்பித்தேன். வேலுவோட ஹவுஸ் ஓனர் அதான் என் வலது பக்கத்து வீட்டு உரிமையாளர் எவ்ளோ தொல்ல குடுத்திருப்பார் எனக்கு. வேற எந்த வேலையும் இல்லாதமாதிரி வேணுமினே மொட்டைமாடியில இருக்கற வாட்டர் டேங்க் மூடிய எடுத்துவிட்டுடறது, துணி காயப்போடற கொடிய அறுத்து விடரது. குப்பையப் பூரா எங்க வீட்டுப்பக்கமே தள்ளிவிடரது இந்த மாதிரி.  காலையிலேந்து சாயங்காலம் வரை சின்னச்சின்ன விசயத்துக்கும் சண்டை இழுத்துக்கிட்டே இருப்பாரு.

    உங்க வீட்டு தென்ன மரத்திலேந்து தேங்கா விழுந்து எங்க சன்னல் கண்ணாடி உடைய வாய்ப்பிருக்கு, நீங்க உங்க வீட்டு கேட்ட மதிய நேரத்துல சரியா சாத்தாம வைக்கறதால திருடன் உங்க காம்பவுண்ட் வழியா எங்க வீட்டுக்கு வர வாய்ப்பு இருக்கு. இப்டி பல கற்பனைப் புகார்கள். ஒருகட்டத்துல அவர் தொல்ல தாங்க முடியாம. அவர்கூட பாசமான நண்பராப்பழகிடலாம்னு நானும் மனைவியும் முயற்சித்தோம். ஆனா அந்த சிடுமூஞ்சி மனுசன் யார்கூடயும் பழகத் தயாரியில்ல. அடுத்தவங்கள தொல்ல குடுக்கறதுமட்டும் தான் அவருக்கு சந்தோசம் தரும் போல.

    இவர் தொல்ல தாங்க முடியாமதான் சென்னையிலிருக்கிற சொந்தவீட்ட விட்டுட்டு பெங்களூருக்கு மாத்தல் வாங்கிட்டுப்போனேன். இப்ப பத்துவருசம் கழிச்சும் இந்த மனுசன் மாறல.

    கீழ இவர் குடியிருந்துக்கிட்டு மாடி போர்சன வாடகைக்கு விட்டுட்டு  வாடகைக்கு வரவங்கள தொல்ல பண்ணியே கொல்லறார் போல. இப்ப நான் பழகிக்கிட்டு இருக்குற வேலுவும் இவர் வீட்டு மாடியில குடியிருந்தவர் தான். இவருக்கு சரியான ஜோடி.

    எங்கள மாதிரி வாயத் திறக்காம வசவு வாங்கிக்கிட்டு இருக்கல. நல்லா பதிலுக்கு பதில் குடுத்திருக்கார். அவர் காலி பண்ணிப்போனதிலேந்து இப்ப வரை வேற யாரையும் அந்த வீட்டுக்கு வர உடாம வதந்தி பரப்பிக்கிட்டு இருக்காராம்.

    பக்கத்து வீட்டுக்காரர் மூஞ்சியில இப்ப எள்ளும் கொள்ளும் வெடிக்கறதப் பாக்க சந்தோசமா இருக்கு. ஜன்ம சனியத் தூக்கி தலையில வச்சிக்கிட்ட மாதிரி உன்னய வாடகைக்கு வச்சேன்னு கத்துவாராம். இன்னும் அவர் மாடி போர்சன் காலியாவே கிடக்கு.

    எது எப்படியோ. இனிமே என்கிட்ட வாலாட்ட மாட்டார். முடிஞ்சா வேலுகிட்டேந்து தப்பிக்க சமரசமாத்தான் பேசுவார். நிலைமையை நளினிடம் விளக்கினேன். ‘ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும்’ ங்கற பழமொழி மாதிரி எதிரிக்கு எதிரியையே நண்பனா ஆக்கிக்கிட்டிருக்கேன். தம் பகைகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அழிக்க வல்லவன்  தான் ஒருவனாகவே நூறு பேர்களைக் கொல்லும் பேராற்றல் உடையவன், அப்டினு பழமொழி நானூறே சொல்லுதே. சொல்லிவிட்டு சந்தோசமாக நடந்து சென்றேன். வேலுவைத் தேடி.

    பாடல் 42

    பட்ட வகையால் பலரும் வருந்தாமல்
    கட்டுடைத் தாகக் கருதிய நல்லறம்
    முட்டுடைத் தாகி ‘இடைதவிர்ந்து வீழ்தலின்
    நட்டறான் ஆதலே நன்று’.

    பழமொழி – இடை தவிர்ந்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று

    கோவை வ.ஊ.சி மைதானம் அன்று களை கட்டியிருந்தது. பத்து வருடங்களுக்குப் பிறகு சுகந்தனை சந்திக்கப்போகிறேன். பார்க்க எப்படியிருப்பானோ? யோசித்துக்கொண்டே கல்லில் உட்கார்ந்தேன்.

    எதிரில் ஊதினால் பறந்து போகிற மாதிரி ஒல்லியா ஒரு பையன் அவன் அம்மாவுக்குத் துணையா பேல்பூரி விற்றுக்கொண்டு நிற்கிறான். நல்லா எண்ண தேச்சி தலைவாரி பளீரென்ற முகத்துடன்.

    அக்கா பஞ்சு மிட்டாய் வேணுமா, பாப்கான் வேணுமா இன்னோரு சின்னப் பையன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து விற்கிறான். மெதுவா பக்கத்திலிருந்த ஐஸ்காரனிடம் பேச்சு குடுக்க ஆரம்பிச்சேன். இங்க எப்படி இவ்வளவு சின்ன பையங்க வித விதமா வியாபாரம் பண்றாங்க. பத்து வருசத்துக்கு முன்ன இப்டி இல்லயே. என் கேள்விக்கு பதில் சொல்லாமலேயே

    ஏம்மா இந்த ஊருக்குப் புதுசா. அதான் கேக்கற. ஒரு ஐஸ் வாங்கிக்கோயேன் அவன் தொடர்வதற்குள் நான் சுதாரித்துக்கொண்டேன் முன்பின் தெரியாத இவன்கூட நான் ஏன் பேசறேன். கொஞ்சம் தள்ளிப் போய் உட்கார்ந்தேன். அவன் இன்னும் என்னயே பாத்துக்கிட்டிருக்கான். சுகந்தனப் பாத்துட்டுக் கெளம்பிற வேண்டியதுதான். பத்துவருசம் முன்ன பக்கத்திலிருந்த ஹாஸ்டல்ல தங்கி தனியார் கம்பெனியில வேலை பாத்ததால தினமும் இந்த பார்க் வரது வழக்கம். அதனால இந்தச் சின்னச் சின்ன மாறுதல்கள் கூட கண்ணுக்குப் படுது.

    முன்னயெல்லாம் நானும் மாதவியும் கொஞ்சம் கூட யோசிக்காம சுகந்தன் கிட்டேந்து சேவ் பூரி வாங்கி ஒருநாளப் போல சாப்பிட்டிருக்கோம். இப்ப இவ்ளோ நேரம் உக்காந்திருக்கேன். ஒண்ணுமே சாப்பிடத்தோணல. யாரப் பாத்தாலும் சந்தேகம் வேற வருது. வயசாக ஆக மனசு குரங்காகிடும் போல. அல்லது சென்னைவாசி ஆயிட்டதால பிளாட்பார தள்ளுவண்டியிலேந்து வாங்கிச் சாப்பிடறது தப்புனு தோணுதோ. தெரியல.

    யோசித்துக்கொண்டிருக்கும்போதே பக்கத்தில்யாரோ கைகாட்டி அழைப்பது தெரிந்தது. ஆமாம் என்னயத் தான் கூப்பிடறான். சேட்டுக்கடையில வேலை பாக்கற மார்வாடிப் பையன். இந்த நேரத்துல இவன் எதுக்குக் கூப்பிடறானோ. யோசித்துக்கொண்டே போனவுடன் தீதீ சீக்கிரம் கடைக்கு வா. யாரோ வெய்ட் பண்றாங்க.

    கடைக்குள் ஜிப்பா, பைஜாமா அணிந்த ஒரு நபர் உட்கார்ந்திருக்கிறார். சேட்டு அந்த நபருக்கு தேநீர் உபசாரம் செய்து கொண்டிருக்கிறார்.

    வா பொண்ணு. ரொம்ப நேரம் வெயிட் செய்யுது இல்ல. இங்க பாத்தியா யாரு வந்திருக்கான்னு. தானே தொடர்கிறார். இது நிம்பிள் சுகந்தன். உன்னையப் பத்தி நிறைய சொல்லியிருக்கு.

    ஓ அந்த நபர்தான் சுகந்தனா. எழுந்து வணக்கம் சொல்கிறான். பார்க்க என்னைவிட பெரிய தோற்றம். அவன் வெளியே அழைக்கவே நாங்கள் இருவரும் வெளியே வந்தோம். அவன் இப்போ அரசாங்க அதிகாரியாம். அவன் நல்ல நிலைமையில இருக்கறதப் பார்த்தப்புறம்தான் அவங்க அம்மா இறந்தாங்களாம். இப்போ சேட்டின் உறவினர் பெண்ணைத்தான் இவன் கல்யாணம் பண்ணியிருக்கானாம். என்ன ஆச்சரியம். இவன் வாழ்க்கையில் எவ்வளவு மாறுதல்கள்.

    என்ன அக்கா. ரொம்ப யோசிச்சுட்டே நடக்கறீங்க போல. ரெண்டு தடவ கேட்டுட்டேன். இந்த இடத்த அடையாளம் தெரியுதான்னு. சரி பரவாயில்ல. இங்க நில்லுங்க செல்பி எடுத்துக்கலாம்.

    ஆமாம் இந்த இடத்தில்தான் அவன் அம்மா சேவ் பூரி கடை போட்டிருந்தாள். நானும் மாதவியும் தின வாடிக்கையாளர்கள். சுகந்தன் ஒல்லியான சின்னப் பையன். அவன்தான் கலந்துதருவான். ஒருதடவை நாங்கள் போனப்போ அவன் அழுதுகொண்டிருந்தான்.அவன் அம்மா தினமும் பேனாவக் குடு, நோட்டக்குடுனு தொல்ல பண்றாம்மா.சாப்பாட்டுக்கே வழியில்ல. இதுல இவனுக்கு படிப்பு எதுக்கு. சொன்னா அழறான். இவனுக்கு புத்திசொல்லுங்க என்றவுடன் நாங்கள் தீர்மானித்தோம்.

    ஒவ்வொரு வருசமும் பள்ளிக்கட்டணம் புத்தகங்கள் மற்றும் படிப்புக்கான இதர செலவுகளுக்கு நானும் மாதவியும் உதவினோம். அவன் பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்சவொடனே நான் சென்னைக்கு போயிட்டேன். அப்பறம் ஒருவருசம் மாதவிக்கு பணம் அனுப்பி அவனுக்கு உதவி செய்யச் சொன்னேன்.  அவளும் அங்கேயிருந்து கிளம்பினப்புறம் இவன் என்ன ஆனான்னு நாங்க யோசிக்கவேயில்ல. இடை தவிர்ந்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று னு போனவாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில ஒரு பழமொழி கேட்டேன். அதுல ஒருத்தருக்கு உதவ ஆரம்பிச்சப்புறம் பாதியில நிறுத்தக் கூடாது.அப்டி நிறுத்தரத விட தொடக்கத்திலயே உதவ ஆரம்பிக்காம இருக்கறதே

    நல்லதுனு சொன்னார்.

    அப்பதான் எனக்கு சுருக்குனுச்சு. சுகந்தனுக்கு நானும் மாதவியும் ஆச காட்டி மோசம் பண்ணின மாதிரி செஞ்சுட்டோம். பாவம் அவன் படிச்சு முடிச்சானோ என்னவோ? ஒருவழியா அவனக்கண்டு பிடிச்சு பாத்தும் ஆச்சு. நல்லவேள இந்த சேட்டுக்கும் நாங்க இவனுக்கு உதவறது தெரிஞ்சதால நாங்க பாதியில நிறுத்தினப்பறம் அவர் தொடர்ந்து உதவி செஞ்சு அவனப் படிக்க வச்சிருக்கார்.

    அக்கா பேல்பூரி சாப்பிடலாமா. நான் முதலில் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ஒல்லி பையனருகில் நிற்கிறான் சுகந்தன்.

    அக்கா இப்ப இவன்தான் எனக்கு தத்துப்பிள்ளை. உங்கள மாதிரி நான் இவன் படிக்கறதுக்கு உதவிக்கிட்டிருக்கேன்.

    யோசிக்காமல் சட்டெனச் சொன்னேன். என்னய மாதிரி பாதியில நிறுத்திடாதே. கடைசி வர உதவி செய். சிரித்துக்கொண்டே தலையாட்டுகிறான் சுகந்தன்.

    Share
  • பக்குவம் வாழ்வே!

    பக்குவம் வாழ்வே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண், ஸ்திரேலியா

     அணைத்தால் இன்பம்
         அளித்தால் பேரின்பம்
      பொறுத்தால் விடிவு
         பொங்கினால் முடிவு
      வெறுத்தால் காரிருள்
          விரும்பினால் வெளிச்சம்
      நிலைத்தால் நிம்மதி
          குலைத்தால் பாதாளம்!

      சுமந்தால் சுகம்
         அமைந்தால் ஆனந்தம்
      பிறந்தால் மகிழ்வு
         பிரிந்தால் கலக்கம்
      தேடினால் செல்வம்
         வாடினால் முடக்கம்
      ஓடினால் உவகை
          ஓய்ந்தால் படுக்கை!

      ஆசை ஆபத்து
          அவசரம் பேராபத்து
      தேடல் சிறப்பு
          தெரிவு நல்மதிப்பு
      கோபம் அழிப்பு
         குரோதம் நெருப்பு
      பாவம் படுகுழி
         பக்குவம் வாழ்வே!  

    Share
  • குறளின் கதிர்களாய்…(318)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(318)

    ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
    போற்றினும் பொத்துப் படும்.

    – திருக்குறள் -468 (தெரிந்து செயல்வகை)

    புதுக் கவிதையில்...

    நிறைவேறும் வழியை
    நன்றாய் அறிந்தபின்
    தகுந்த வழியில்
    முயற்சி செய்யாமல்
    கண்டபடி
    செய்யும் முயற்சி,
    உதவிக்குப்
    பலர் கூடி
    அழிவு வராமல்
    பாதுகாத்தாலும்
    நிறைவேறாமல் அது
    குறைபட்டு அழிந்திடும்…!

    குறும்பாவில்...

    தகுந்த வழியறிந்து அதன்படி
    முயலாத முயற்சி, பலர்நின்று பாதுகாத்தாலும்
    பலனின்றி நிறைவேறாது அழியும்…!

    மரபுக் கவிதையில்...

    செயலைச் செய்யு முன்னதாக
    செய்யும் வழிமுறை நன்கறிந்தே
    முயற்சி செய்வ தல்லாமல்
    முறையிலா வகையில் முயன்றாலது
    உயர்வை யென்றும் தருவதில்லை,
    உதவியாய்ப் பலபே ரிருந்தாலும்
    முயற்சி யதுவும் நிறைவுறாதே
    முற்று மழிந்திடும் குறைபட்டே…!

    லிமரைக்கூ..

    செயல்படுமுன் அறிந்திடு வழியை
    உதவிக்குப் பலரிருந்தும் தவறான முயற்சி,
    அழிவுறப் பறித்திடும் குழியை…!

    கிராமிய பாணியில்...

    செயல்படணும் செயல்படணும்
    வழிமொறயறிஞ்சி செயல்படணும்,
    மொறயான வழியறிஞ்சி
    மொயற்சி செய்யணும்..

    செய்யும் வழிமொறய
    சரியாத் தெரிஞ்சிக்காம
    செயலுல எறங்க
    மொயற்சி செய்யாத,
    ஒதவிக்குப் பலபேரிருந்தாலும்
    தவறான மொயற்சி
    கொறபட்டு
    அழிவத்தான் தருமே..

    அதால
    செயல்படணும் செயல்படணும்
    வழிமொறயறிஞ்சி செயல்படணும்,
    மொறயான வழியறிஞ்சி
    மொயற்சி செய்யணும்…!

    Share
  • சமஸ்கிருதம், செத்த மொழியா? – மதுமிதா நேர்காணல்

    சமஸ்கிருதம், செத்த மொழியா? – மதுமிதா நேர்காணல்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான மதுமிதா, பல நூல்களின் ஆசிரியர். சமஸ்கிருதத்திலிருந்து சுபாஷிதம் (மகாகவி பர்த்ருஹரியின் கவிதைகள்), மேகதூதம், ருதுசம்ஹாரம் உள்ளிட்ட நூல்களைத் தமிழில் பெயர்த்துள்ளார். சாகித்திய அகாதெமிக்காக, ஒடியக் கவிஞர் பிரதீபா சத்பதியின் கவிதைகளை ‘வசீகரிக்கும் தூசி’ என்ற பெயரில் தமிழில் பெயர்த்துள்ளார். கன்னடத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் சிற்சில நூல்களைத் தமிழுக்குப் பெயர்த்துள்ளார். மொழிகளுடனான அவரது பயணம் குறித்தும் சமஸ்கிருத மொழியின் தனித்தன்மைகள் குறித்தும் தமிழ்-வடமொழிக்கு இடையிலான உறவுகள் குறித்தும் இந்த நேர்காணலில் நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

    சமஸ்கிருதம், செத்த மொழியா?, ஆலயங்களில் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஒலிப்பது ஏன்? சொற்கள் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றனவா? வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்தனவா? மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறீர்களா? இந்திப் படிப்பதால் என்ன பயன்? போன்ற சர்ச்சைக்குரிய பல கேள்விகளுக்கு நயமாகப் பதில் அளித்துள்ளார். இந்த அர்த்தமுள்ள நேர்காணலைக் காணுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share