Blog

  • பரிமேலழகர் உரைத் திறன் – 8

    பரிமேலழகர் உரைத் திறன் – 8

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    “மோப்பக்  குழையும்  அனிச்சமும்  நோக்கக் குழையும்  விருந்தும்”

    முன்னுரை

    திருக்குறளில் ‘ஒன்று மற்றொன்றை விடச் சிறந்தது, ஒன்று மற்றொன்றைவிடத் தாழ்ந்தது’ என்பன போன்ற பதிவுகள் வரும். ஆனால் அவை எப்படிச் சிறந்தது? எப்படித் தாழ்ந்தது? என்பதற்கான காரணத்தைத் திருவள்ளுவர் கூறமாட்டார். அவற்றிற்கான காரணங்களைக் கண்டறிவது கற்பார் கடன். அல்லது உரையாசிரியர் பணி. இது ஓர் உரை நெறி. இந்நெறியில் பரிமேலழகர்  உரை தனித்தன்மை பெற்றது. “பெண்ணின் பெருந்தக்க யாவுள?” என்னும் திருவள்ளுவரின் வினாவிற்கு விடையிறுத்த பரிமேலழகர், “கற்புடையாள்போல் அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் யாவுள?” (54) என்றார் என எழுதுவதையும், “செல்லா இடத்து சினம் பயப்பது இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே! ஏனையது இம்மைக்கண் பழியும் மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீய பிற இல்லை என்றார்” (3020) என எழுதுவதும் காண்க. இந்த வகையில் எதிர்பாராச் சூழலில் இல்லத்திற்கு வரும் விருந்தின் இயல்பு  அனிச்சப்பூவினும் மென்மையானது என்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து கூறும் பரிமேலழகரின் உரைத்திறன் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.

    திறனறியப்படும் குறளும் உரையும்

    திருக்குறள் அறத்துப்பாலில் ஒன்பதாவது அதிகாரத்தின் பத்தாவது இறுதிப் பாடலாக அமைந்தது,

    “மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து” (90)

    என்னும் குறட்பாவாகும். இதற்கு,

    • அனிச்சம் மோப்பக் குழையும் — அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது
    • விருந்து முகந்திரிந்து நோக்கக் குழையும் – விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர் எனப் பரிமேலழகர் பொழிப்புரை எழுதியிருக்கிறார்.

    பொழிப்புரையின் நுட்பம் காண்பதற்கு முன்பாக இவ்வதிகாரத்தின் பொருட் பாகுபாடுகளை அறிந்து கொள்வது இந்தக் குறட்பாவின் மையக்கருத்தினைப் பரிமேலழகர் கண்டறிந்த நெறி புலப்பட உதவக் கூடும்.

    அதிகாரக் கருத்துப் பகுப்பு

    ஒவ்வொரு அதிகாரத்து உட்பொருளையும் பாகுபடுத்திக் கொள்ள பரிமேலழகர் பெரிதும் முயன்றிருக்கிறார். இந்தப் பகுப்புத்தான் திருக்குறளுக்கான புத்துரைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்குகின்ற உரைத்தளவாடங்கள் ஆகும். பரிமேலழகர் வகுத்துக் காட்டும் பகுப்புமுறையைப் புறந்தள்ளித் திருக்குறளுக்கு உரைசொல்லப் புகுந்தால் ஒவ்வொரு அதிகாரத்திலும் அதிகாரத் தலைப்புக்குப் பொருத்தமில்லாத குறட்பாக்கள் இருப்பதைக் காட்டிவிட இயலும். ‘கடவுள் வாழ்த்து’ என்ற அதிகாரத் தலைப்பிற்கும் “இறைவனடி சேராதார் பிறவிக்கடலை நீந்தார்” என்பதற்கும் என்ன தொடர்பு? ‘ஒழுக்கமுடைமை’ என்ற அதிகாரத் தலைப்பிற்கும் “மறப்பினும் ஓத்துக் கொளலாகும், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் என்பதற்கும்” என்ன தொடர்பு?” என்று ஆயிரம் வினாக்களைத் தொடுத்துவிட முடியும். “ஒரு தலைப்பின் கீழ் அதுபற்றிய பன்முகப் பரிமாணங்களைத் திருவள்ளுவர் ஆராய்ந்திருக்கிறார்” என்பதுதான் பரிமேலழகரின் உரைப்பணியின் தொடக்க நிலையாகும்.

    1. விருந்தோம்பலின் சிறப்பு (1-2)
    2. விருந்தோம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் (3-5)
    3. விருந்தோம்புவார் மறுமைக்கண் எய்தும் பயன் (6)
    4. இருமைப் பயனுக்கான காரணம் (7)
    5. விருந்தோம்பாவழிப் படும் குற்றம் (8-9)
    6. விருந்தோம்புவார்க்கு வேண்டிய இன்முகம் (10)

    எனப் பகுத்துக் காட்டி, விருந்தோம்பலின் பன்முகப் பரிமாணத்தை எடுத்து விளக்கியதால்தான், ‘இத்தகைய சிறப்புக்கள் உடைய விருந்தினை ஓம்புவார்க்கு இருக்க வேண்டிய எளிய ஆனால் தலையாய இயல்பு இன்முகமே’ என்பதை அவரால் இறுதிக் குறட்பாவிற்கான விளக்கமாக்க முடிந்தது.

    பொழிப்புரை நுட்பம்

    • ‘அனிச்சம் குழையும்’ என உடன்பாட்டில் குறளிருக்க ‘மோந்துழியன்றிக் குழையாது’ என எதிர்மறை வாய்பாட்டில் உரை காண்கிறார். அதிகாரம் விருந்தோம்பல். விருந்தினர் மனம் குழைவதே பரிமேலழகரின் கருத்தில் நின்றதாதலின் உடன்பாட்டு உவமத்தை எதிர்மறை வாய்பாட்டிலும் பொருளை உடன்பாட்டிலும் வெளிப்படுத்துகிறார். ‘(காண்டல் தொடுதல் அன்றி,) மோந்தால்தான் அனிச்சம் குழையும்., திரிபு நோக்கினாலேயே விருந்து குழையும்’ என்பது கருத்து.
    • ‘திரிதல்’ என்பது இலக்கணத்துள் மூவகை விகாரங்களுள் ஒன்று. இயல்புதான் திரியும். விருந்தோம்புதற்குரியார், விருந்து வருவது கண்டு மகிழ்வதற்கு மாறாக தமது இசைவின்மையை (விருப்பமின்மையை), முகத்தால் மாறுபட நோக்கின், வந்தவர் மனம் குழைந்துவிடுமாம். நுட்பம் என்னவென்றால் இயல்பாக இருப்பதைச் செயற்கையாக மாற்றிக்கொள்வதைக் ‘கண்டுழி’ “முகம் வேறுபட்டு நோக்குதல்” என்னும் சொல்லாட்சிகளால் பரிமேலழகர் உணரவைப்பதுதான்.

    விளக்கவுரை

    ‘அனிச்சம்’ ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் எனப்து கூறப்பட்டது.

    விளக்கவுரையில் கண்ட உரை நுட்பம்

    • திருக்குறளில் ‘அனிச்சம்’, ‘குவளை’ ஆகிய இரண்டு பூக்கள், முறையே மென்மைக்கும் கண்ணுக்கும் ஒப்புமையாகக் கூறப்பட்டுள்ளன. ‘வாழி அனிச்சமே’ (1111) (மென்மையால்), ‘அனிச்சப்பூ’ கால்களையாள்’ (1115) (மென்மை கருதாது) ‘அனிச்சமும்’ (1120) (மென்மைக்காக எடுக்கப்பட்ட) என்னும் இடங்களிலெல்லாம் ‘அனிச்சம்’ என்னும் சொல் தலைமகன் தலைமகள் நலத்தைப் புகழ்வது ஆதலின் பூவை நேரடியாகக் குறித்தது. இக்குறட்பா ஆசிரியர் கூற்றாக அமைந்ததாதலின் ‘அனிச்சம்’ என்னும் மரத்தின் பெயர் மலருக்கு ஆகுபெயர் ஆயிற்று. அதாவது தலைவன் மரத்தைப் பற்றிப் பேசாது மலரைப் பற்றித்தான் பேசுவான் என்பது குறிப்பு. பாட்டில் ‘குழையும்’ என்ற வினையால் ‘அனிச்சம்’ ஆகுபெயராயிற்று, குழைவது மரத்திற்கின்மையின். தலைமகன் கூற்றில் அனிச்சம் ஆகுபெயராகாததற்கு அவன் கருத்தில் அனிச்சப் பூ மட்டுமே நின்றதனான் என்க.
    • மேம்போக்காக இந்தப் பாடலைக் கண்ணுறுவார் இதனை எடுத்துக்காட்டுவமமாகவே கொள்ளக் கூடும். மோந்தால் அனிச்சம் குழையும் (மாறுபட்ட) நோக்கினால் விருந்து குழையும்’ என்னும் பாட்டின் கிடக்கை நிலையும் அவ்வாறு கொள்ளுமாறு அமைந்திருப்பதும் உண்மை. ஆனால் பரிமேலழகரின் சிந்தனையாற்றலால் பாட்டில் வெளிப்படும் நுண்ணியம் இறுதியில் விளக்கப்படும்.
    • மென்மைக்கு எடுத்துக்காட்டு அனிச்சப்பூ. ‘பூ’ என்னும் சொல்லுக்கே ‘மென்மை’ என்பது பொருள். ‘பூந்தென்றல்’, ‘பூங்கோதை’, ‘பூங்கதவு’ என்பன காண்க. அனிச்சம் பூக்களில் மென்மையானது. அதனினும் விருந்தினர்கள் மென்மையானவர்கள் என்றுதான் வள்ளுவர் சொல்ல வருகிறார் என்பது பரிமேலழகர் அனுமானம். பாட்டில் அதற்கான காரணம் வெளிப்பட இல்லை. அக்காரணத்தை ‘மோப்ப’, ‘நோக்க’ என்னும் இரு சொற்களைக் கொண்டு கண்டறிய முற்படுகிறார். முற்பட்டு ‘மோத்தல்’ என்பது ‘காண்டல், தொடுதல், மோத்தல் என்னும் நிரலில் மூன்றாவதாகவும் ‘நோக்குதல்’ என்பது அவற்றின் தொடக்க வினையாகவும் அமைந்திருப்பதை அறிகிறார். கண்ணால் காணுகிறபொழுது அனிச்சம் வாடாது. விரல்களினால் தீண்டுகிறபோதும் வாடாது. மூக்கினால் மோந்தால்தான் அது வாடும். தொலைவில் வரும் விருந்தினர்களைக் காண்பது ஒரு வினை. அவர்களை இன்சொல்லால் வரவேற்பது அடுத்த வினை. அவர்களை அறுசுவை உண்டியளித்து ஓம்புதல் அவற்றின் தொடர்வினை. ஓம்புபவர் தொலைவில் வரும் விருந்தினர்களைத் தம் பார்வையால் மாறுபட்டு நோக்கினாலேயே மனம் வாடுவர். எனவே மூன்றாம் நிலையில் வாடும் அனிச்சப் பூவினும் முதல் நிலையிலேயே வாடிவிடும் விருந்தினர் மென்மையானவர் என்னும் உண்மையைப் பதிவு செய்கிறார் பரிமேலழகர். இதனைச் “சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்முகமும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள் முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின் தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம்” என்னும் பகுதி உணர்த்துவது காண்க.
    • அதிகார உள்ளடக்கக் கருத்துப் பகுப்பில் பெரிதும் நம்பிக்கை கொண்ட பரிமேலழகர் விருந்தோம்புவார்க்கு முதற்கண் வேண்டுவது இன்முகம் என்பதை வலியுறுத்தவே இக்குறள் இறுதியாக வைக்கப்பட்டுள்ளது எனக் கருதுகிறார். கருதி, “இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது” எனக் குறட்பாவின் மையக்கருத்தினைப் புலப்படுத்துகிறார்.

    விருந்து பற்றிய விளக்கம்

    இல்லறத்தான் ஓம்புகின்ற அறங்களுள் விருந்து சிறந்தது. ‘விருந்து’ என்னும் சொல் விருந்தினரைக் குறித்தாலும் இவ்வறம் பற்றிய அனைத்துச் சிந்தனைகளும் ஓம்புவாரையே களமாகக் கொண்டுள்ளன என்பதைக் கருத்திற் கொள்ளல் வேண்டும். அதாவது விருந்தோம்பலில் ஓம்புகிறவனே தலைமகன், அறம் செய்வானும் அதற்கான அனைத்துப் பயன்களையும் அனுபவிப்பவன் அவனேயாதலின். தேனும் மீனும் கொடுத்து ஓம்பிய குகனைப் (தெய்வத்தை ஓம்பிய அடியவன்) பற்றியே இராமாயணம் பேசுகிறது. குசேலனை ஓம்பிய கண்ணனைப் (மானுட நண்பனை ஓம்பிய இறைவன்) பற்றியே குசேலோபாக்கியானம் பேசுகிறது. சிவனடியாரை மழையிரவில் ஓம்பிய இளையான்குடி மாறனாரையே (சிவனை ஓம்பிய சிவனடியார்) பெரியபுராணம் பேசுகிறது. விருந்தோம்பலில் ஓம்புகிறவன் (அறம்) செய்பவனாகவும் விருந்து செயப்படுபொருளாகவும் அமைந்துவிடுவதே இதற்குக் காரணம்.  விருந்தோம்பலாகிய அறத்தில் பயன் செய்பவனுக்கே என்பது குறிப்பு. ஓம்புகிறவன் உயர்ந்தவன் என்பது தத்துவம். இந்தப் பின்புலத்தில் பரிமேலழகர் உரையருமையை நோக்கினால் அதன் நுட்பம் புரியக்கூடும்.

    பரிமேலழகரின் உரையருமை

    • ‘விருந்தோம்பல்’ என்னும் பொருண்மை திருக்குறளின் ஒன்பதாவது அதிகாரத்தில் ஆராயப்படினும் ஐந்தாவது அதிகாரத்தின் 43 ஆவது குறட்பாவிலிருந்தே இது பற்றிய சிந்தனையைப் பரிமேலழகர் தொடங்கிவிடுகிறார். இதனை “இருவகை விருந்தினரையும் புறந்தருதல். தென்புலத்தார் முதலிய ஐம்புலத்துள் முன்னைய இரண்டும் (தென்புலத்தார், தெய்வம்) கட்புலனாகாதன நினைந்து செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் (ஒக்கல், தான்) பிறர்க்கு ஈதல் அன்மையானும் இடைநின்ற விருந்தோம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்களுக்கு முதலாயிற்று.” என்னும் அதிகாரப் பொருண்மை விளக்கத்தினால் உணர முடியும்.
    • ‘அறிந்து வருவது’, ‘அறியாது வருவது’ என்னும் இருவகையில் எவ்வகையாயினும் எதிர்பாராமல் வருவதே ‘விருந்து’ எனப்படும். ‘விருந்தே புதுமை’ என்பதற்கு அதுதான் பொருள்! அவ்வெதிர்பாராச் சூழலில் வருகின்ற விருந்தினை ஓம்புங்கால் இன்முகமே தலையாயது என்பதனையே திறனறியும் குறட்பாவின் (90) மையக்கருத்தாகப் பரிமேலழகர் கொள்கிறார். விருந்தோம்புவார்க்குரிய முகமலர்ச்சியே இவ்வதிகாரத்தில் கண்ட அனைத்துப் பயன்களையும் தரும் என்பது குறிப்பு. மேற்கண்ட விளக்கங்களையெல்லாம் உள்ளடக்கி “விருந்து என்பது புதுமை. அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது.  அவர் இரு வகையர். பண்டு அறிவுண்மையின் ‘குறித்து’ வந்தாரும் அஃது இன்மையின் ‘குறியாது’ வந்தாரும் என.” என்னும் விளக்கத்தாலும் இவ்வைந்து அறங்களுள் விருந்தோம்பலையே இல்லறத்தின் தலையாய அறமாக விதந்தோதிய திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கை அறிந்த நுட்பத்தானும் உணர்க.

    ஒரே அலைவரிசையில் “திருவள்ளுவர் – பரிமேலழகர் — பாவேந்தர் “

    குறிப்பிட்ட குறட்பாவிற்குரிய பரிமேலழகர் உரைத்திறனை மட்டும் எதிர்பார்க்கின்ற சிலர் இந்தப் பகுதியில் இவ்வளவு விளக்கமும் எடுத்துக்காட்டுக்களும் சான்றுகளும் தேவையா என எண்ணக் கூடும். பழந்தமிழ்  உரையாசிரியப் பெருமக்களின் ஒரு பொருள் பற்றிய சிந்தனை, பல தளங்களிலும் வேர்கொண்டிருந்தது என்பது ஓர் இன்றியமையாக் குறிப்பு. ‘விருந்தோம்பல்’ என்பது தமிழர்களின் தலைசான்ற பண்பாட்டுக் குறிப்பு. உலக நீதி உரைக்க வந்த திருவள்ளுவரே “இன்மையுள் இன்மை விருந்தொரால்” (153) என்றும், “உடைமையுள் இன்மை விருந்தோம்பா மடமை” (89) என்றும் இருவகை வாய்பாட்டில் நுட்பமாக இத்தமிழ்ப் பண்பாட்டை ஆராய்ந்திருக்கிறார்.

    கணவனைப் பிரிந்துறைந்த நாளில் தான் இழந்த அறங்ளை நிரல்படுத்திய கண்ணகி விருந்தோம்ப இயலாமையைச் சுட்டி வருந்துவதை இளங்கோடிவகள்  “தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடல் இழந்த என்னை” (சிலம்பு. கொலைக்களக்காதை – 73) என்னும் வரிகளில் கண்ணகி வாய்மொழியாகவே பதிவு செய்திருக்கிறார் என்பதும் அசோகவனத்தில் தனிமைச் சிறையில் வாடிய சீதை வனத்தில் இராமனின் நிலையெண்ணி வருந்தியபோது, ‘விருந்து கண்டபோது என்னுறுமோ என விம்மும்” (கம்ப…சுந்தரகாண்டம் – 5083) எனக் கம்பர் பதிவு செய்திருப்பதும் பலராலும் அறியப்பட்டவையே.

    விருந்தோம்பலாகிய மரபுவழிப் பண்பாட்டைத் திருவள்ளுவர் வழி நின்று விளக்கியவர் பரிமேலழகர் என்பது மேற்சொன்ன விளக்கங்களால் புலப்படக் கூடும். திருவள்ளுவரையும் பரிமேலழகரையும் முற்றும் உள்வாங்கிய பாவேந்தர் தமக்கே உரிய தமிழ்ப் பண்பாட்டு உணர்ச்சியுடன் எழுதிய ‘குடும்பவிளக்கு’ என்னும் அரிய காப்பியத்தில் ‘விருந்தோம்பல்’ என்பதை இரண்டாவது பகுதியாக  வைத்திருக்கிறார். அது மட்டுமன்று. குடும்பத்தலைவியாகிய தங்கம் விருந்து வரக் கண்டபோது அடைந்த மகிழ்ச்சியைச்,

    “சுடுவெயிலில் காயவைத்த சோளம் துழவி
    உடல் நிமிர்ந்தாள்., கண்கள் உவந்தாள். —  நடைவீட்டைத்
    தாண்டி வரும்விருந்தைத் தான்கண்டாள்! கையேந்திப்
    பூண்ட மகிழ்வாள் புகழேந்தி – வேண்டி
    வருக!  அம் மாவருக! ஐயா வருக!
    வருக! பாப்பா தம்பி என்று – பெருகன்பால்
    பொன்துலங்கு மேனி புதுமெருகு கொள்ள, முகம்
    அன்றலர்ந்த செந்தாமரையாக – நன்றே
    வரவேற்றாள்” (பாரதிதாசன் குடும்பவிளக்கு “விருந்தோம்பல்”)

    என வெளிப்படுத்துவதில் பரிமேலழகருக்கு உரையெழுதுகிறார். மாவரசர், மலர்க்குழலி, நாவரசு நகைமுத்தும் வந்திருக்கிறார்கள் எனக் கேட்டவுடன் மகிழ்ந்த தங்கத்தின் மாமன், மாமி மகிழ்ந்து மருமகள் தங்கத்திடம் விருந்தோம்பலின் சிறப்பைக் கூறுவதில் திருவள்ளுவர், பரிமேலழகர் வார்த்தெடுத்த தமிழ் மரபுப் பாவேந்தரிடம் குடிகொண்ட பாங்கினை வெளிப்படுத்துவதாக உள்ளது.

    “வீட்டுக்கு வந்த விருந்தோம்பு! நாட்டிலுறு
    நற்றமிழர் சேர்த்த புகழ் ஞாலத்தில் என்னவெனில்
    ‘உற்ற விருந்தை உயிரென்று — பெற்றுவத்தல்’
    மோந்தால் குழையும் அனிச்சம்பூ முகமாற்றம்
    வாய்ந்தால் குழையும் வருவிருந்தென்று – ஆய்ந்த திரு
    வள்ளுவனார் சொன்னார்! அதனைநீ எப்போதும்
    உள்ளத்து வைப்பாய்! ஒரு போதும் – தள்ளாதே!
    ஆண்டு பல முயன்றே ஆக்குவை ஊண் எனினும்
    ஈண்டு விருந்தினர்க்கும் இட்டுவத்தல் வேண்டுமன்றோ?
    வந்தாரின் ‘தேவை, வழக்கம்’ இவையறிய
    நந்தா விளக்குன்றன் நல்லறிவே! செந்திருவே!
    இட்டுப்பார்! உண்டவர்கள் இன்புற்றிருக்கையிலே
    தொட்டுப்பார் உன் நெஞ்சைத் தோன்றுமின்பம்!
    கரும்பென்பார் பெண்ணைக் கவிஞரெலாம் வந்த
    விருந்தோம்பும் மேன்மையினால் அன்றோ?”

    (பாரதிதாசன் குடும்பவிளக்கு “விருந்தோம்பல்”)

    தமிழிலக்கியத்தில் விருந்தோம்பல் என்னும் தலைப்பில் சிந்தித்து எழுதப்படும் படைப்பு எதுவாக இருந்தாலும் அது பாவேந்தர் சித்திரித்துக் காட்டிய குடும்ப விளக்குக்குப் பிறகுதான் என்பதை இந்தப் பகுதி காட்டும். வள்ளுவரை மனக்கோயிலில் வைத்துக் கொண்டாடும் பாவேந்தர் பரிமேலழகரின் உரைநயத்தையும் ஆழத்தையும் உள்வாங்கியே இந்தப் பகுதியை எழுதியிருக்கிறார் என்பதைக் கற்பார் உணரக்கூடும். “தொல்லோர் சிறப்பின்’ என்ற தொடருக்கு “நற்றமிழர் ஞாலத்தில் சேர்த்த புகழ்” என்று கவிதையில் உரையெழுதுகிறார் பாவேந்தர். விருந்து கண்டவுடன் தங்கத்தின் மேனி பூரித்தது என்பதைப் “பொன்துலங்கு மேனி புதுமெருகு கொள்ள, முகம் அன்றலர்நத செந்தாமரையாக” என்று வண்ணனை செய்கிறார். உரைத்திறன் அறியும் இந்தக் குறட்பாவை  முற்றாக எடுத்தாள்கிறார்.  எல்லாவற்றையும் விட திருக்குறளில் சொல்லாத ஆனால் பரிமேலழகர் சொன்ன (சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும் என்னும் முதல் நிலை தவிர்த்து) நண்ணியபழி இன்சொல்லும், உடன்பட்டவழி நன்றாற்றலும் என்ற விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதனவாகிய மற்ற இரண்டு கடமைகளையும் இல்லறக் காட்சிகளாகவே சித்திரித்துக் காட்டியுள்ளார். இதனால் பரிமேலழகர் உரை பாவேந்தரை எப்படிப் பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். திருவள்ளுவர் இல்லறத்தின் தலையறமாக விருந்தோம்பலை விதந்தோத, அதற்குப் பரிமேலழகர் ஆழ்ந்த உரையெழுதினார். குறளையும் பரிமேலழகர் உரையையும் செரித்துக் கொண்ட மரபுவழிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அதனைக் குடும்ப விளக்கில் எல்லாருக்குமாகச் சித்திரித்துக் காட்டினார். “வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட மரபு” என்றால் இப்படித்தான் இருக்கும்!

    நிறைவுரை

    பொருட்பகுப்பில் தெளிவு கொண்ட பரிமேலழகர் விருந்தினர்க்கு உவமமாக்கிய அனிச்சத்தின் திறமறிகிறார். அறிந்து ‘அனிச்சத்தை விருந்துக்கு ஒப்பாக்கவில்லை’ என்னும் உண்மை உணர்கிறார். உணர்ந்து ‘ஒப்பு நிலை மாற்றி உறழ்வு நிலையில்’ உரை காண்கிறார். கண்டு ‘அனிச்சமும் விருந்தினரும் ஒப்பு’ என்னும் கருத்தியலைப் பின்னுக்குத் தள்ளுகிறார். தள்ளி, மூன்றாம் நிலையில் வாடுகின்ற அனிச்சத்தினும் முதல் நிலையிலேயே வாடிவிடும் விருந்தினரின் மென்மையின் உயர்ச்சியை வேறுபடுத்தி விளக்குகிறார். இந்த விளக்கத்தால் பெரும்பாலோர்க்கு எடுத்துக்காட்டுவமமாகத் தோன்றும் இந்தப் பா வேற்றுமையணியாக தனது உண்மை உருவத்தைக் காட்டி நிற்கிறது. இதுவே இக்குறட்பாவில் பரிமேலழகர் உரைத்திறனாகும்.

    (தொடரும்…)

    Share
  • பிறந்த வாழ்வு பெருமையில் மூழ்கும்

    பிறந்த வாழ்வு பெருமையில் மூழ்கும்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, 
    மெல்பேண், ஸ்திரேலியா

    நாலும் தெரியாது இரண்டும் தெரியாது 
    காலம் பறிபோகும் கணக்கும் புரியாது 
    ஆழந் தெரியாது அகலம் விளங்காது
    காலை விடும்வேளை கணக்கு மழிந்துவிடும்

    உறவும் தெரியாது பகையும் தெரியாது
    வரவும் தெரியாது செலவும் புரியாது
    குறைவும் தெரியாது நிறைவும் தெரியாது
    முடிவு வரும்வேளை முழுதும் இருளாகும்

    பக்தி உணராது புத்தி தெளியாது
    சக்தி எதுவென்று சலனம் மிகுவாகும்
    சித்தம் நிலைகுலைந்து செய்கை சிதைந்தோட
    கத்தி முனையாகக் காலன் வருவானே

    பிறந்த பிறப்பை பேறாய் எண்ணு
    குறைந்த செயலைக் குழியிட்டு மூடு
    நிறைந்த மனத்தை நித்தமும் தேடு
    பிறந்த வாழ்வு பெருமையில் மூழ்கும்

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 18

    கதை வடிவில் பழமொழி நானூறு – 18

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 38

    எமரிது செய்க எமக்கென்று வேந்தன்
    தமரைத் தலைவைத்த காலைத் – தமரவற்கு
    வேலின்வா யாயினும் வீழார் மறுத்துரைப்பின்
    ‘ஆல்என்னிற் பூல்என்னு மாறு’.

    ‘ஆல் என்னிற் பூலென்னுமாறு’

    என்னடா ஊர்லேந்து வந்ததுலேந்து நானும் பாக்கறேன் அது முன்ன உக்காந்து ஜபம் பண்ணிக்கிட்டே  இருக்கயே. என்ன ஆச்சு. வேலையில எதுவும் பிரச்சினையா. சம்பளம் எல்லாம் ஒழுங்காவருதில்ல. பாட்டி எல்லாம் சரியாப் போயிட்டிருக்கு. நான் லேப்டாப்ல வீடியோ கான்பிரன்சிங் அட்டெண்ட் பண்றேன். அப்புறமா பேசலாம். குரல் கொடுத்துவிட்டு மீண்டும் கலந்தாலோசிப்பில் மூழ்கினேன். எல்லாம் ஒரு வழியா முடிச்சாச்சு. நாளைக்கு ரிப்போர்ட் ரெடி பண்ணி அனுப்ப வேண்டியதுதான். அப்புறம் ஐயாக்கு ஜாலிதான். யோசித்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் பாட்டியின் குரல்.

    டேய் சூடா கொழக்கட்ட பண்றேன். வந்து சாப்பிட்டு வேலயப் பாரு.

    வந்ததே அதுக்காகத்தானே. சாப்பிடற வேலய ஒழுங்காப் பாக்கலாம். நாளையிலேந்து ரெண்டுநாள் பாட்டிக்கு என்னன்ன சமைக்கணும்னு சொல்லி செய்யவச்சு சாப்பிட்டுட்டுப் போகணும். தீர்மானித்தேன். எந்தப்பொருளும் அதுக்கேத்த இடத்துல இருந்தா ரொம்ப அழகா தெரியுமில்லயா. அதுமாதிரிதான் இந்த கிராமத்து சாப்பாடும். இத நகரத்து ஓட்டல்களில் உக்காந்து சாப்பிட்டா ருசிக்காது.

    சரி சரி சாப்பிடும்போது ரொம்ப யோசிக்காத. இன்னும் ரெண்டு போட்டு சாப்பிடு.பாட்டி விரட்ட மனம் ஒருநிலைக்கு வந்தது.

    ஆமா நீ இங்க என்னவேலையா வந்திருக்க. வெளிய எங்கேயாவது போகணுமா? பாட்டி கேட்கிறாள்.

    உனக்கு நான் சொன்னாப் புரியுமான்னு தெரியல. இருந்தாலும் சொல்றேன். ஆரம்பித்தேன். எங்க கம்பெனியிலேந்து மூணு என்ஜினியர்கள் வந்திருக்கோம். நம்ம மேற்குத் தொடர்ச்சி மலைப் பக்கம் காற்றாடிகள் சுத்திக்கிட்டிருக்கு இல்லயா. அதோட பாகங்களத் தயாரிக்கறதுதான் எங்க கம்பெனி வேல. அதுல ஏதாவது புதுவித மாற்றம் செய்ய முடியுமானு ஆராய்ச்சி செய்யறதுக்காக எங்கள அனுப்பியிருக்காங்க. நாங்க ஒரு மாசம் தங்கி புது மாதிரி வடிவங்கள உருவாக்கி மத்ததோட ஒப்பிட்டுப் பாக்கணும். மொதல்ல கேக்க நல்லாத்தான் இருந்திச்சு. ஆனா செய்ய ஆரம்பிச்சவொடனே ரொம்ப சங்கடமா இருக்கும்னு தோணுது. ஒவ்வொரு முறையும் மாதிரி வடிவம் செஞ்சு எடுத்துக்கிட்டுவர சென்னைக்குத்தான் போயாகணும். அலைச்சல் அதிகமாகும். இங்க இருக்கற நேரமும் பொழுது போகறதுக்கு சினிமா தியேட்டர் கூட இல்ல. இதத்தான் மூணுபேரும் சேந்து பேசி முடிவெடுத்தோம்.

    நாளைக்கு எங்க கம்பெனிக்கு ஒரு மெயில் அனுப்பிடுவோம். இடத்தைப் பார்வையிட்டோம். நாம செய்ய நினைத்த ஆராய்ச்சிக்கு இது ஏற்ற இடமில்லனு. அப்புறம் அவங்க வேற இடம் தேட ஆரம்பிப்பாங்க. அதுக்குள்ள புது கம்பெனியில வேலைக்குப் போட்டிருக்கேன். அதுலேந்து தகவல் வந்தா அதுல சேந்திடுவேன். அந்தவேலை ஒரு அறைக்குள்ள உக்காந்து கம்ப்யூட்டர் உபயோகிச்சு செய்ய வேண்டிய வேலை. அலைச்சல் இல்லபாரு.

    நான் பேசப்பேச பாட்டிக்குக் கோபம் தலைக்கேறியது. இதத்தான் எங்க ஊர்ல ‘ஆல்’ என்று சொல்லப் ‘பூல்’ என்று மறுத்துச் சொல்றதுனு சொல்லுவாங்க.  இதோட பொருள் நம்பி அரசன் ஒரு வேலையை ஒப்படைச்ச பின்னாடி வேல் முனையில வீழ்ந்தாவது அதனை நிறைவேற்றணும். அதை விட்டுட்டு செய்யமாட்டேன்னு மறுத்துக் காரணம் சொல்றது ‘ஆல்’ என்று சொல்லப் ‘பூல்’ என்று மறுத்துச் சொல்றதுக்குச் சமானமாம்.

    இவ்வளவு படிச்ச பசங்க நீங்க. இப்டி பண்ணலாமா. தப்பில்லயா. கேட்டுக்கொண்டே பாட்டி வேலையைத் தொடர்கிறாள். நான் யோசிக்க ஆரம்பிக்கின்றேன்.

    பாடல் 38

    விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும்
    வருந்தும் பசிகளையார் வம்பர்க்(கு) உதவல்,
    இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! ‘ஆற்றக்
    கரும்பனை அன்ன துடைத்து’.

    ‘ஆற்றக் கரும்பனை அன்னது உடைத்து’

    வாங்க வாங்க உக்காருங்க. என்ன சாப்பிடறீங்க காபி, டீ.

    யாரை இப்படி மரியாதையாக உபசரிக்கிறாள் அம்மா. உள்ளறையில் கதை எழுதிக்கொண்டிருந்த நான் எழுந்து வெளியில் வந்தேன். ஐம்பது வயது மதிக்கத்தக்க நபரும் அவருடன் கல்லூரி மாணவன் போன்று விளங்கும் பையனும் சோபாவில் அமர்ந்திருந்தார்கள்.

    மரியாதைக்கு வணக்கம் சொல்லிவிட்டு மேல் பனியனுடன் அமர்ந்தால் நாகரிகம் அல்ல என நினைத்து சட்டை போட்டுக்கொள்ள உள்ளறைக்குச் சென்றேன்.

    சமையலறையில் அம்மா அக்காவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

    உங்க தோப்புக்கார சித்தப்பா இந்தப் பையனத்தான் படிக்க வைக்கிறாராமா. ஏதோ என்ஜினியரிங் படிக்கிறான் போல. அநாதைப் பையனாம். கூட வந்திருக்கிறவர் அவன் கல்லூரிப் பேராசிரியராம்.

    உங்க சித்தப்பா நம்ம அப்பாவப் பத்தி ரொம்ப பெருமையா சொல்லியிருப்பார்போல. அதனால மரியாதைக்கு இந்தப் பையனும் அவன் பேராசிரியரும் நம்மளப் பாத்து நன்றி சொல்லிட்டுப் போலாம்னு வந்திருக்காங்க. அந்தப் பையனுக்கு உங்க அப்பா போட்டோ ஒண்ணு வேணுமாம். ஏதும் இருந்தாப் பாரேன்.

    தம்பிகிட்ட இருக்கு. நான் எடுத்துக்கிட்டு வரேன். அடுத்த அறையான என் அறைக்குள்

    நுழைந்த அக்காவைத் தடுத்து நிறுத்தினேன். தீர்மானத்துக்கு வந்தவனாய் போட்ட சட்டையைக் கழட்டிவிட்டு மீண்டும் கதை எழுதுவதைத் தொடர்ந்தேன்.

    ஒருவழியாக அவர்கள் இருவரையும் பேசி அனுப்பிய அம்மா ஏண்டா என்ன ஆச்சு உனக்கு மட்டு மரியாத கிடையாதா. நீ பாட்டுக்கு உள்ளுக்குள்ளயே உக்காந்துட்ட. அவங்க என்ன நினைச்சுப்பாங்க…..தொடர்ந்து புலம்பிக்கொண்டே சமையலறை நோக்கிச் சென்றாள்.

    என் மனம் யோசிக்க ஆரம்பித்தது. அப்பா இறந்து எட்டு வருடம் ஆகி விட்டது.  தன்னய அப்பா சொந்தப் பையன் போல வளர்த்து படிக்க வச்சதா சித்தப்பா சொல்லிட்டுத் திரியுவாரு. நல்லா படிச்சு நல்ல வேலையில டில்லியில் இருக்கார். போதாததுக்கு தான் சேத்துவச்சதுல ஒரு பனந்தோப்பு வேற வாங்கிப் போட்டிருக்கார். எதுக்குமே அவர்கிட்ட பண உதவி எதிர்பாக்காமதான் அம்மா எங்க ரெண்டு பேரையும் படிக்க வச்சாங்க. ஆனா ஒரு புத்தகக்கடை வைக்கணும்னு நான் பண உதவி கேட்டப்போ நீயே சம்பாதிச்சு வச்சுக்கோனு சொல்லிட்டார். இப்ப என்னடான்னா யாரோ ஒரு பையனுக்கு உதவி செய்யறாராம்.

    ஆற்றக்கரும்பனை அன்னது உடைத்துங்கற பழமொழி சரியாத்தான் இருக்கு. தன்னய வளத்தவனுக்கு பலன் கொடுக்காம நீண்டகாலத்துக்கப்புறம் யாரோ புதியவனுக்கு பலன்குடுக்கற பனை மரம் மாதிரிதான் இந்த சித்தப்பாமாதிரி ஆளுங்க. இவங்களப்பத்தி நினைக்கறதே நேரவிரயம் தான்.

    அம்மாவும் அக்காவும் பேசுவதைப் பொருட்படுத்தாமல் என் கதையில் மூழ்கினேன்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(317)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(317)

    ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
    போகா றகலாக் கடை.

    -திருக்குறள் – 478 (வலியறிதல்)

    புதுக் கவிதையில்...

    செல்வம்
    செலவாகும் வழி பெரிதாகாமல்
    சிறிதாகவே வைத்திருந்தால்,
    அரசர்க்கு
    அச்செல்வம் வரும்வழி
    சிறிதானாலும்
    அதனால் பெருந்தீமை
    ஏதும் வந்திடாதே…!

    குறும்பாவில்...

    பெரிதாகாமல் பார்த்துக்கொண்டால்
    பொருள் செலவாகும் வழி, தீதில்லை
    சேரும்வழி சின்னதானாலும் மன்னர்க்கு…!

    மரபுக் கவிதையில்...

    சேர்த்து வைக்கும் செல்வமதைச்
    செலவு செய்யும் வழியதனைப்
    பார்த்தால் பெரிதாய் ஆகாமல்,
    பக்கம் நிலைக்கும் பொருளதுவே,
    மார்க்க மிதனைச் செயல்படுத்தும்
    மன்னர் தமக்குத் தீதில்லை
    சேர்க்கும் பொருளின் வரவுவழி
    சின்ன தாகப் போயினுமே…!

    லிமரைக்கூ..

    கவனம்கொண்டு செலவுவழி மீதே
    பெரிதாகாமல் பார்த்திடும் அரசனுக்கு, வரவுவழி
    சிறிதானாலும் வருவதில்லை தீதே…!

    கிராமிய பாணியில்...

    கொறச்சிக்க கொறச்சிக்க
    செலவயெல்லாம் கொறச்சிக்க,
    வரவுக்குள்ள செலவுசெஞ்சா
    வந்திடுமே வலிம ஒனக்கு..

    செலவு செய்யிற வழியெல்லாம்
    பெருசாகாம
    பாத்துக்கிற ராசாவுக்கு
    வரவுவழி
    சிறுசாப் போனாலும்,
    வராது ஒருநாளும்
    வாழ்க்கயில கெடுதியே..

    அதால
    கொறச்சிக்க கொறச்சிக்க
    செலவயெல்லாம் கொறச்சிக்க,
    வரவுக்குள்ள செலவுசெஞ்சா
    வந்திடுமே வலிம ஒனக்கு…!

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 11

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 11

    -மேகலா இராமமூர்த்தி

    இராமன் காட்டுக்குச் செல்கையில் தங்கியிருந்த பொழிலிலேயே பரதனும் சத்ருக்கனனும் சேனையொடு தங்கினர். இராமன் நடந்ததே சென்றதறிந்து தேரில் வந்துகொண்டிருந்த பரதனும் அதனை நீத்துக் கால்நடையாகவே பயணப்படலானான்.

    கங்கையின் வடகரையை அடைந்தான் பரதன். அவனுடைய படையரவத்தைக் கேட்டான் கங்கையின் தென்கரையில் நின்றிருந்த கூற்றினையொத்த ஆற்றலானும், நாவாயோட்டும் வேட்டுவனும், இராமனை ஏற்கனவே சந்தித்து அவன்பால் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவனுமான குகன். இராமனை அழிக்கவே இந்தச் சேனை வருகின்றதோ என்ற ஐயத்தினால் சீற்றம் எழவே, அவன் கண்கள் கனலைக் கக்கின; நாசியிலிருந்து புகை கிளம்பிற்று!

    ”வலிமை நிரம்பிய உலகில் வாழுகின்ற, கூரிய நகத்தையுடைய புலிகளெல்லாம் ஒரே இடத்தில் வந்துசேர்ந்தன எனும்படியாக ஒலியெழுப்பும் இந்தப் படையானது என்னைப் பொறுத்தவரை வெறும் எலிப்படை; நான் இந்த எலிகளைக் கிலிகொண்டு ஓடச்செய்து அழித்தொழிக்கும் அரவு” என்று சேனையைக் கண்டு உவகைகொண்டான் குகன்.

    எலி எலாம் இப் படை அரவம் யான் என
    ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான்
    வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர்ப்
    புலி எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே.
    (கம்ப: கங்கைகாண் படலம் –  2400)

    எலிக்கு நாகம் பகை என்பதால்தான் இங்கே எதிராளிகளை எலிப்படை என்றும் தன்னை அரவம் என்றும் கூறிக்கொள்கின்றான் குகன்.

    இதே உவமையை நாம் வள்ளுவத்திலும் காணலாம்.

    ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
    நாகம் உயிர்ப்பக் கெடும்.
    (படைமாட்சி – 763)

    எலியாய பகை திரண்டு கடல் போல ஒலித்தாலும் நாகத்திற்கு அதனால் என்ன ஏதம் வரும்? அந்நாகம் உயிர்த்த அளவில் அப்படையானது தானே கெடும். எனவே படையின் பெருக்கத்தைவிட அதன் போர்த்திறனே அதற்கு மாட்சிதரும் என்கிறார் வள்ளுவர் இக்குறளில்!

    குறளின் கருத்துக்கள் கம்பராமாயணத்தில் பல இடங்களில் பொருத்தமுற எடுத்தாளப்பெற்றுள்ளன; அவற்றில் இதுவும் ஒன்று!

    குகன் மனநிலை இவ்வாறிருக்க, அக்கரையில் பரதன் அருகில் நின்றிருந்த சுமந்திரனோ எதிர்க்கரையில் நின்ற குகனைப் பார்த்துவிட்டுப் பரதனிடம், “இவன் உன் அண்ணனாகிய இராமனிடம் கரைகாணாக் காதல் கொண்டவன்; இராமனை வரவேற்கச் செல்லும் உன்னை எதிர்பார்த்தே அங்கே நிற்கின்றான்” என்று கூறுகின்றான். குகனின் சீற்றத் தோற்றம் வெகுதொலைவில் நின்றதனால் சுமந்திரன் கண்களுக்குப் புலப்படவில்லை போலும்!

    சுமந்திரன் மொழிகேட்ட பரதன், குகனை உடனே காணும் ஆவலில் விரைந்து புறப்படச் சத்ருக்கனனும் உடன்சென்றான். போருக்குத் தொடைதட்டிக் காத்துக்கொண்டிருந்த குகன், தொலைவில் வந்துகொண்டிருந்த பரதனைக் கண்டதும் திடுக்குற்றான்.

    மரவுரியணிந்து புழுதிபடிந்த அவன் மேனியும், ஒளியிழந்த மதிபோன்ற வதனமும், கல்லும் கனியும் வகையில் துயரம் தோய்ந்த தோற்றமும் குகனின் நெஞ்சில் பெருங் கலக்கத்தை விளைவிக்க, அவன் கையிலிருந்த வில் அவனையறியாமல் தரையில் நழுவி வீழ்ந்தது.

    வற்கலையின் உடையானை
         மாசு அடைந்த மெய்யானை
    நற்கலை இல் மதி என்ன
         நகை இழந்த முகத்தானை
    கல் கனியக் கனிகின்ற துயரானைக்
         கண்ணுற்றான்
    வில் கையினின்று இடை வீழ
         விம்முற்று நின்று ஒழிந்தான். (கம்ப: கங்கைகாண் படலம் – 2419)

    பரதனைத் தானே கண்டு உண்மை அறிய விரும்பிய குகன், நாவாயில் ஏறித் தமியனாய்க் கங்கையின் வடகரையை அடைகின்றான். அண்ணனுக்கு அரசாட்சியை அளிப்பதன் பொருட்டே பரதன் கானகம் வந்துள்ளான் என்பதையறிந்து நெகிழ்கின்றான்; அவனைத் தொழுகின்றான்!

    ”தாய்கேட்ட வரங்களின்படித் தந்தை உனக்களித்த ஆட்சியை ஏற்காமல், அது தீவினையால் வந்தது என்று அதனை உதறிவிட்டு வந்திருக்கும் உன் செயலைக் காண்கையில், ஆயிரம் இராமர்கள் இருந்தால்கூட அவர்கள் உன் ஒருவனுக்கு ஈடாகமாட்டார்கள்!” எனப் பரதனைப் புகழ்கின்றான் குகன்.

    தாய் உரைகொண்டு தாதை உதவிய
         தரணிதன்னை
    தீவினை என்ன நீத்து
         சிந்தனை முகத்தில் தேக்கி
    போயினை என்றபோழ்து புகழினோய்
         தன்மை கண்டால்
    ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ
         தெரியின் அம்மா.  (கம்ப: கங்கைகாண் படலம் – 2425)

    வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பரதனைப் பிறர் வாயிலாகப் புகழ்வதைக் கம்பர் தம் காப்பியத்தில் தொடர்ந்து செய்வதைக் காணமுடிகின்றது.

    முன்பு கோசலை ”உங்கள் அனைவரை விடவும் நிறைகுணத்தன்; நின்னினும் நல்லன்” என்று பரதனை இராமனிடமே புகழ்ந்ததைக் கண்டோம். இங்கோ ஆயிரம் இராமர்கள் வந்தால்கூட அவர்கள் ஒரு பரதனுக்கு ஈடாகமாட்டார்கள் என்று குகன் புகழ்வதைக் காண்கின்றோம். இப் பாராட்டுரைகள் பரதனின் தன்னேரிலா உயர்குணங்களுக்கு ஏற்புடையவையே என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    தன்னோடு புறப்பட்ட குகனையும் அழைத்துக்கொண்டு இராமனைக் காணச் செல்கிறான் பரதன். வழியில் பரத்துவாசர் ஆசிரமத்தில் ஓரிரவைக் கழித்துவிட்டு மறுநாள் மீண்டும் பயணத்தைத் தொடங்கி இராமன் தன் இளவலோடும் மனைவி சீதையோடும் தங்கியிருக்கும் சித்திரகூடத்தை அடைந்தான்.

    குகனைப் போலவே சேனையொடு பரதன் வருவதைக் கண்ட இலக்குவனும் பரதன் இராமனைத் தாக்கவே படைகொண்டு வந்திருப்பதாக எண்ணிச் சினந்தான்.

    ’பரதனோடு வரும் படைகளைக் கலக்குவேன்; அவனை நரகுக்கு அனுப்புவேன்” என்று சூளுரைத்துக் கொண்டிருந்த இலக்குவனை நோக்கிய இராமன், ”பொறு இலக்குவா! என்மீது கொண்ட அன்பின் மிகுதியால் பரதனின் இயல்பறியாது இயம்புகின்றனை! தந்தையின் விருப்பப்படி என்னை அழைத்துப்போகவே அவன் வந்திருக்கக் கூடும்! வேறுவிதமாக நாம் எண்ணுவது பிழை!” என்றான்.

    தொழுத கையொடும், அழுத கண்ணொடும் அருகில்வந்த பரதனைக் கண்ட இராமன், ”அயோத்தியில் தந்தை நலந்தானே?” என்று கேட்கவும், ”என் தாய் கேட்ட வரமெனும் சத்தியத்தை மண்ணில் நிலைநிறுத்தி, நித்திய வாசம் செய்ய விண்ணுலகு ஏகினன் தந்தை!” என்று பரதன் துயரொடு செப்பிய மொழிகேட்டு, ” இனி வாய்மைக்கு ஆருளர் மற்று?” என்று அழுதபடி மண்ணில் வீழ்ந்தான் இராமன்.

    இராமனின் கையறுநிலை கண்டு, பரதனோடு வந்த குலகுருவான வசிட்டர் அவனுக்கு வாழ்வின் நிலையாமையை விளக்குகின்றார்.

    ”பிறத்தலும் பிறந்த உயிர்கள் பின்னாளில் இறத்தலும் வாழ்வின் இயற்கையே என்பதை மறைகளின் எல்லையை உணர்ந்த நீ மறந்தனையோ?

    மானுட வாழ்க்கையானது சில காலம் ஒளிவிடும் விளக்குப் போன்றது. அந்த விளக்கு எரிவதற்குத் தேவையான நெய்யாகவும், திரியாகவும், தீயாகவும் இருப்பவை மனிதனுடைய நல்வினைப்பயனும் (புண்ணியம்), காலமும் (வயது), ஊழும் ஆகும். (நெய்யும் திரியுமாகிய) நல்வினைப்பயனும், காலமும் முடிந்துபோனால் வாழ்க்கையெனும் விளக்கும் அவிந்துபோவதில் ஐயமில்லை.

    நல்வினையும் விதியும் முடிந்தபொழுது உயிர்வாழ்க்கை
    முடிந்துபோகும்; காலத் திரியானது விதி எனும் நெருப்பில் எரிந்து போகும்; புண்ணியம் அனுபவித்து வற்றும்; உயிர் உடலைப் பிரியும்; இஃது இயற்கை
    நியதி” என்றார் வசிட்டர்.

    புண்ணிய நறுநெயில் பொருஇல் காலம்ஆம்
    திண்ணிய திரியினில் விதி என் தீயினில்
    எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால்
    அண்ணலே அவிவதற்கு ஐயம் யாவதோ.
    (கம்ப: திருவடிசூட்டு படலம் – 2538)

    ”ஆதலால் உன் துயரை மாற்று; மேலுலகு எய்திய தந்தைக்குச் செய்யவேண்டிய நீர்க்கடன்களை ஆற்று” என்று இராமனை ஏவினார்.

    அழகிய உவமைகளால் மனித வாழ்வின் இயல்பைக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் விளக்கியிருக்கும் பாங்கு மனங்கவர்கின்றது.

    சிட்டரான வசிட்டரின் மொழிகளால் தெளிவுபெற்ற இராமன், தந்தைக்கு நீர்க்கடன்கள் ஆற்றலானான்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

     

    Share
  • திருவள்ளுவர் யார்? – 8

    திருவள்ளுவர் யார்? – 8

    புதுக்கோட்டை பத்மநாபன்

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவனடி சேரா தார்

    என்பது இந்த அதிகாரத்தின் கடைசிக் குறட்பா.

    பகவானின் திருவடியை அடைந்தவர்களே பிறவிப் பெருங்கடலை நீந்தி, பிறவியில்லாப் பெருவாழ்வான மோக்ஷத்தை அடைவார்கள் என்பது இக்குறட்பாவின் கருத்து.

    “विष्णोर्यत्परमं पदं” (ரிக்-1-22-6) என்று திருமாலின் உலகையே மோக்ஷலோகம் என்று ரிக்வேதம் முழங்குகிறது. “विज्ञानसारथिर्यस्तु मनः प्रग्रहवान्नरः।सोऽध्वनःपारमाप्नोति तद्विष्णोःपरमं पदम्॥” (எவனொருவன் புத்தியை ஸாரதியாகவும் மனதைக் கடிவாளமாகவும் கொண்டு இந்திரியங்கள் என்ற குதிரைகள் பூட்டப்பட்ட இந்த உடல் என்னும் தேரைச் செலுத்துகிறானோ அவன் இந்த ஸம்ஸாரக் கடற்பயணத்தின் அக்கரையிலிருக்கும் விஷ்ணுவின் அந்தப் பரமபதத்தை அடைகிறான்) என்று கடோபநிஷத்தும் (கட-1-3-9) விஷ்ணுவின் பரமபதமே ஸம்ஸாரக் கடலைக் கடந்தவர்கள் சென்றடையும் இடம் என்று சொல்கிறது.

    “ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्पराः।अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते॥तेषामहं समुद्धर्ता मृत्युसंसार सागरात्।भवामि न चिरात्पार्थ मय्यावेशितचेतसाम्॥” (பார்த்தா! எவர்கள் எல்லாக் கர்மங்களையும் என்னிடம் அர்ப்பணம் செய்து, என்னை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, மற்றொன்றை மனதில் நினைக்காத யோகத்தினால் என்னைத் தியானித்து உபாஸனை செய்கிறார்களோ, அவர்களை ஜனன மரணங்களாகிய ஸம்ஸாரக் கடலிலிருந்து உடனே கரை சேர்த்துவிடுவேன். கீதை-12-6,7) என்று கீதையில் பகவானும் சொல்கிறான்.

    (“மாஅயோயே மாஅயோயே மறுபிறப்பறுக்கும் மாசில் சேவடி மணிதிகழ் உருவின் மாஅயோயே” (பரிபாடல்-3), “நாறிணர்த்துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்” (பரிபாடல்-15) என்ற சங்க இலக்கிய வரிகள் திருமாலின் மாசில்லாத திருவடியே பிறவியில்லாப் பெருவாழ்வான மோக்ஷத்தை அளிக்கும் என்றும் திருமால் ஒருவனே வீடுபேற்றை அளிக்கமுடியும் என்றும் கம்பீரமாக முழங்குகின்றன. ஆகவே பரம வைதிகரும் சங்கத் தமிழருமான திருவள்ளுவர் இக்குறட்பாவில் இறைவன் என்ற சொல்லால் திருமாலையே குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகிறது.

    இங்கு நாம் எடுத்துக் காட்டிய கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள பத்துக் குறட்பாக்களிலும் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தக் கருத்துகள் நிறைந்து இருப்பதை நாம் காண முடியும். நற்றாள் தொழாஅர், மாணடி சேர்ந்தார், அடி சேர்ந்தார்க்கு, தாள் சேர்ந்தார்க்கு, தாளை வணங்காத் தலை, அடி சேராதார் என்ற சொற்றொடர்களால் பகவானது திருவடியைப் பற்றியே பேசுகிறார் திருவள்ளுவர்.

    பகவானது திருவடியில் சரணாகதி செய்வது என்பது, ஸ்ரீவைஷ்ணவ ஸிந்தாந்தக் கோட்பாடுகளில் முக்கியமான ஒன்று. ஸ்ரீவைஷ்ணவத்தில் பகவானின் மற்ற அங்கங்களைவிட அவனது திருவடிக்கே பெருமை அதிகம். இக்கருத்தையே “நின்னின் சிறந்த நின் தாள் இணையவை” (பரிபாடல்-4) என்று சங்க இலக்கியமும் கூறுகின்றது. மேலும் பாஞ்சராத்ர ஸ்ரீவைஷ்ணவ ஆகமத்தின் தத்துவமே இந்த பத்துக் குறட்பாக்களிலும் காணப்படுகிறது.

    பாஞ்சராத்ரம் மிகத் தொன்மையான ஆகமம் என்பதைக் கல்வெட்டு ஆதாரங்கள், வரலாற்று ஆவணங்கள் இவற்றின் மூலம் அறிய முடிகிறது. பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களிலும் பாஞ்சராத்ரத்தின் கூறுகள் காணப்படுவதால் அதன் தொன்மையைத் தெளிவாக அறிய முடிகிறது. பரம், வ்யூஹம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி என்று ஐந்து நிலைகள் பகவானுக்கு இருப்பதாகப் பாஞ்சராத்ரம் கூறுகிறது. இந்த ஐந்து நிலைகளையும் இந்தப் பத்துக் குறட்பாக்களிலும் காட்டுகிறார் திருவள்ளுவர்.

    “தனக்குவமை இல்லாதான்”, “கோளில் பொறியில்”, “பிறவிப்பெருங்கடல்” என்ற குறட்பாக்கள் மூலம் பகவானின் பரநிலையையும், “அகரமுதல”, “கற்றதனால் ஆயபயன்” என்ற குறட்பாக்களால் வியூக நிலையையும், “வேண்டுதல் வேண்டாமை”, “இருள்சேர் இருவினையும்”, “பொறிவாயில்” என்ற குறட்பாக்களில் விபவ நிலையையும், “அற ஆழி அந்தணன்” என்ற குறட்பா மூலம் அர்ச்சை நிலையையும், “மலர்மிசை ஏகினான்” என்ற குறட்பா மூலம் அந்தர்யாமி நிலையையும் காட்டுகிறார்.இது தவிர முற்றும் துறந்த தவ யோகிகள் சென்றடையும் மோக்ஷலோகம் தாமரைக்கண்ணனான செங்கண்மாலின் உலகமே என்று “தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக்கண்ணான் உலகு” என்ற குறட்பாவின் மூலம் மிகத்  தெளிவாகக் குறிப்பிடுகின்றார் திருவள்ளுவர்.

    இக்குறட்பாவில் பகவானைத் “தாமரைக்கண்ணான்” என்று குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. “தாமரைக்கண்ணன்” என்பது திருமாலுக்குரிய சிறப்பான திருநாமங்களில் ஒன்று. மேலும் இக்குறட்பாவின் மூலம் சிற்றின்பத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் மோக்ஷலோகமான செங்கண்மால் உலகை அடைய முடியாது என்பதையும் நிரதிசய இன்பமான மோக்ஷ இன்பத்தை விழைபவர்கள் உலகியல் இன்பங்களிலிருந்து முற்றிலும் விடுபட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்திவிட்டார்.  ஒரு பெண்பித்துப் பிடித்தவனின் கூற்றாக இக்குறளை அமைத்திருக்கிறார்.

    நிரதிசய இன்பமான மோக்ஷம் என்பது திருமாலின் உலகுதான் என்பது திருவள்ளுவருக்குத் தெரிந்திருந்ததால்தான் மோக்ஷத்தைப் பற்றிய பேச்சு வருமிடத்தில் “தாமரைக்கண்ணான் உலகு” என்ற சொற்றொடர் மூலம் செங்கண்மால் உலகைக் காட்டுகிறார். மோக்ஷத்திற்கு சிற்றின்பம் எதிர்தட்டானது என்பதைக் காட்டவே இக்குறட்பாவைக் காமத்துப்பாலில் வைத்தார். உலகியல் ஆசைகளில் மூழ்கியிருப்பவனுக்கு மோக்ஷத்தின் அருமை தெரியாதென்பதும் மோக்ஷத்தை விரும்புவோர் உலகியல் ஆசைகளை அறவே விடவேண்டும் என்பதும்தான் இந்தக் குறட்பா நமக்குத் தரும் செய்தி.

    பிறவித் தளையிலிருந்து விடுதலை என்று சொல்லக்கூடிய மோக்ஷம் என்பதைத் திருமால் தான் கொடுக்க முடியும் என்ற சங்கத் தமிழரின் கோட்பாட்டை அப்படியே வழிமொழிந்திருக்கிறார் திருவள்ளுவர்.

    நிறைவுப் பகுதி 

    திருவள்ளுவர் தனது நூலில் குறிப்பிடும் தெய்வங்கள் எல்லாமே வைதிக தெய்வங்கள்தான். அந்தத் தெய்வங்களுள் அவர் மனதில் நிறைந்து நின்ற தெய்வங்கள் திருமாலும் திருமகளும்தான். சங்கத் தமிழரின் மரபுப்படி தனது நூலில் திருமாலையே பரம்பொருளாக முழங்கியிருக்கும் திருவள்ளுவர், பெரிய பிராட்டியாரான திருமகளின் அனுக்ரஹம் பற்றியும் சில குறட்பாக்களில் குறிப்பிடுகிறார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற பொழுது அவர் அப்பழுக்கற்ற சிறந்த ஸ்ரீவைஷ்ணவர் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

    தனது நூலில் வேதம், வைதிக கர்மங்கள், வேதம் ஓதும் அந்தணர்கள், இவற்றின் சிறப்பையெல்லாம் தெளிவாக எடுத்துரைக்கும் திருவள்ளுவர் ஸ்ரீவைஷ்ணவக் கோட்பாடுகளையும் ஆங்காங்கே காட்டுவதால் அவர் ஒரு ஸனாதன வைதிக நெறியைப் பின்பற்றும் ஸ்ரீவைஷ்ணவ அந்தணர் தான் என்பதே அவரது நூலிலிருந்து வெளிப்படுகிறது. ஆகவே அவருக்கு ஒரு உருவம் கொடுக்க வேண்டுமென்றால், நெற்றியிலும் உடலிலும் பன்னிரண்டு திருமண்காப்புகள், தூய மெல்லிய வெண்ணிற ஆடை, கழுத்தில் தாமரை, துளசி மணிமாலைகள், மார்பில் யஜ்ஞோபவீதம் (பூணூல்) இவற்றுடன் கூடிய ஒரு உருவத்தைத்தான் கொடுக்க முடியும். அவ்வுருவம் தான் அவருடைய நூலில் சொல்லப்பட்ட கருத்துகளுக்குப் பொருத்தமான உருவமாக இருக்கும். வேறு எந்த உருவத்தைக் கொடுத்தாலும் அது அவரது நூலில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களுக்கு முரணாகத்தான் இருக்கும்.

    ஆகவே திருவள்ளுவர் ஸனாதன வைதிக மதத்தைப் பின்பற்றும் ஒரு ஸ்ரீவைஷ்ணவ அந்தணர்தான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஒருவனுடைய குலத்தை அவனது வாய்ச்சொல்லே காட்டிவிடும் (குறள்-959) என்று திருவள்ளுவரே கூறியிருப்பதால் அவரது சொல்லான திருக்குறளே இதற்குச் சான்று. திருக்குறளுக்குப் பண்டைக் காலத்தில் பல உரைகள் இருந்தாலும் பரிமேலழகரின் உரைதான் சிறந்ததாகக் கொள்ளப்பட்டது. திருவள்ளுவர் வைணவராகவும் திருக்குறள் வைணவ நூலாகவும் இருந்ததால் தான் பரம வைணவரான பரிமேலழகர் அதற்கு உரை எழுதினார். வைணவ ஆசார்யர்களில் பலர் தங்களது தத்துவ விரிவுரைகளில் திருக்குறளை மேற்கோள் காட்டியிருக்கின்றனர்.

    காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோயில் அர்ச்சகராக இருந்தவர் பரிமேலழகர். திருவள்ளுவரின் திருவுள்ளத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு திருக்குறளுக்கு உரை எழுதியவர் அவர். ஆனால் அவரது உரை, சிலருக்குப் பிடிக்காது. ஏனெனில் உண்மையைச் சொன்னால் சிலருக்குப் பிடிக்காது என்பது உண்மைதானே? ஆரியச் சார்போடு உரை எழுதிவிட்டார் என்று அவரைச் சாடுவார்கள். “ஆரியன்” என்றால் “உயர்ந்தவன்”, ”அறிவாளி” என்று பொருள். திருவள்ளுவரும் பரிமேலழகரும் ஆரியர்களே.

    “ஆய்வு” என்ற பெயரில் தங்கள் எண்ணத்துக்கு முரண்பாடான குறட்பாக்களையெல்லாம் இடைச்செருகல் என்பார்கள் சிலர். திருக்குறள் மேல் தங்களின் எண்ணம் என்னும் வண்ணத்தைப் பூச அந்நூலில் உள்ள சொற்களுக்கு நேர்மையற்ற முறையில் வலிந்து பொருள்கொண்டு இன்றும் எத்தனையோ பேர் புதிது புதிதாக உரை எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தங்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும்படியாக இவர்கள் உரை எழுதிவிட்டதால் திருக்குறள் இவர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் நூலாகிவிடாது. திருவள்ளுவரும் இவர்களைச் சேர்ந்தவர் ஆகிவிடமாட்டார்.

    மேலும் மாட்டுக்கறி, ஆட்டுக்கறி முதலிய புலால் வகைகளை உண்ணுதல், விதவிதமான மதுபானங்களை அருந்துதல், சுயஒழுக்கம் இல்லாமல் வைப்பாட்டிகளோடும் விலைமாதரோடும் இன்பம் துய்த்தல், பெண்களின் சுதந்திரத்துக்குக் கற்பு, ஒழுக்கம் இவையெல்லாம் தடையாக உள்ளவை என்று பிரசாரம் செய்தல், அடுத்தவன் மனைவியை ஒருவன் விரும்புவதும், ஒருவனின் மனைவி வேறொருவனை விரும்புவதும் தவறில்லை என்று பிரசாரம் செய்தல், இறை நம்பிக்கை இல்லாமல் ஸனாதன மதத்தில் உள்ள தெய்வங்களை இழிவுபடுத்துதல்- இவையே இன்று “பகுத்தறிவு”வாதிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்களின் பண்புநலன்கள்.

    இந்தப் “பகுத்தறிவு”வாதிகள் கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, ஒழுக்கமுடைமை, பிறனில்விழையாமை, கற்பு, இறை நம்பிக்கை முதலிய நல்லறங்களைப் போதிக்கும் திருக்குறளையும் திருவள்ளுவரையும் உரிமை கொண்டாடுவதற்கு என்ன யோக்யதை இருக்கிறது? திருக்குறளையும் திருவள்ளுவரையும் பற்றிப் பேசுவதற்குக் கூட இவர்களுக்குத் தகுதி இல்லை. இவர்களின் பண்புகளுக்கும், திருக்குறளின் கொள்கைக்கும் ஏதாவது ஸம்பந்தம் உண்டா? இன்று, பசுவதை செய்து மாட்டுக்கறி தின்பதை ஆதரிப்பவர்களும், குடிகாரர்களும், கூத்தியருடன் கும்மாளம் அடிப்பவர்களும், ஸநாதன மதத்தின் தெய்வங்களை இழித்துரைப்பவர்களும் “திருவள்ளுவர்“ எங்கள் தமிழ் இனத்துக்கே தலைவர்”, ”எங்கள் பாட்டன்”, ”எங்கள் பூட்டன்”, “எங்கள் ஐயன்” என்றெல்லாம் சொல்லித் திருவள்ளுவரைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு திரிகிறார்களே, இவர்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட வெட்கம் இல்லையா?

    ஆகவே இந்தப் “பகுத்தறிவு”வாதிகளும், இவர்களது கொள்கைளையும் நடைமுறைகளையும் பின்பற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாடுவது என்பது மிகவும் வெட்கக்கேடான விஷயம் என்பதோடு திருவள்ளுவரையும் திருக்குறளையும் அசிங்கப்படுத்தும் விஷயமும் ஆகும். திருவள்ளுவரை வைத்து இவர்கள் செய்வது ஈனத்தனமான அரசியல் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? திருவள்ளுவரையும் திருக்குறளையும் பெருமைப்படுத்த விரும்புவோர் திருக்குறளில் சொல்லப்பட்ட அறங்களைத் தங்கள் வாழ்வில் முடிந்த அளவு பின்பற்ற முயல வேண்டும். அது ஒன்று தான் திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும்.

    -முற்றும்-

    Share
  • பழகத் தெரிய வேணும் – 32

    பழகத் தெரிய வேணும் – 32

    நிர்மலா ராகவன்

    என் செல்லமே!

    “குழந்தைகளுக்குச் செல்லம் கொடுக்கலாமா, மாமி?” ஓர் இளம் தாய் என் அம்மாவைக் கேட்டாள்.

    பதில்: “படிப்பிலே மட்டும் கூடாது”.

    எது எதற்கோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், சரியான முறையில் ஒரு குழந்தையை எப்படி வளர்ப்பது என்பது பலருக்கும் தெரிவதில்லை.

    ஒரு குழந்தையைப்போல் இன்னொன்றை நடத்தமுடியாது. இது இன்னொரு குழப்பம்.

    அன்பைக் கொட்டி வளர்க்கப்படும் குழந்தை நல்லவனாக வளர்வான் என்றால், எத்தனை அன்பு என்ற கேள்வி எழுகிறது.

    சில குடும்பங்களில் மூத்த குழந்தை செல்லமாக வளரும். ஒரு தலைமுறைக்கு முன்புதான் வீட்டில் குழந்தை தவழ்ந்திருக்கும். அதனால், இது வரவேற்கத்தக்க அனுபவமாகிவிடுகிறது.

    “என் மூத்த பிள்ளைக்குப் பத்து விரல்களிலும் தங்க மோதிரம் போட்டு அருமையாக வளர்த்தேம்மா. இப்படிக் கெட்டுவிட்டானே!” என்று ஒரு முதியவர் என்னிடம் சொல்லிப் புலம்பினார்.

    “அதனால்தான்!” என்றேன், அசுவாரசியமாக.

    சிறு வயதிலிருந்தே அந்தப் பையன் என்ன செய்தாலும் யாரும் கண்டிக்கவில்லை. அத்துடன், அவன் கேட்டபோதெல்லாம் பணம் கிடைத்தது. அதனால், மனம் போனபடி வளர்ந்து, பதின்ம வயது முடிவதற்குள் எல்லாவித தீய பழக்கங்களும் வந்தடைந்தன.

    ‘அளவுக்கு மிஞ்சினால்’ என்று சொல்லிவைத்திருப்பது அமுதத்திற்கு மட்டுமல்ல.

    ஆனால், குழந்தைகளே அப்படிக் கவனிக்கப்பட்டால்தான் பிறருக்குத் தன்மேல் அன்பு என்று தவறாக நினைப்பார்கள். கண்டிக்கும் உறவினர்கள் வேண்டாதவர்கள் ஆகிவிடுவார்கள்.

    அவர்களுக்குத்தான் அறியாமை என்றால், பெரியவர்களுக்கு புத்தி எங்கே போயிற்று?

    கதை

    சிறு வயதில் காரமாக ஏதாவது சாப்பிடுகையில், குடிக்க நீர் வேண்டுமென்று அலறுவேன்.

    ஓரிரு முறை அம்மா கொண்டுவந்து கொடுத்தாள். அதன்பின், “முதலிலேயே எடுத்து வைச்சுக்கறதுக்கென்ன?” என்றுவிட்டாள்.

    எங்கள் குடும்ப வழக்கப்படி, பாதி சாப்பிடும்போது கண்டிப்பாக எழுந்திருக்கக் கூடாது. ஒவ்வொருமுறையும் எனக்கும் முன்னேற்பாடாக குடிநீர் எடுத்து வைத்துக்கொள்ளவும் தோன்றாது.

    இப்படியே பலமுறை ஆனபிறகு, நான் சாப்பிடும்போது இடையில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டேன்.

    அம்மா காட்டியது ஆக்ககரமான கட்டொழுங்கு. மறைமுகமாக, `எல்லாவற்றிற்கும் பிறரை நம்பிக்கொண்டு இருக்காதே!’ என்று போதித்திருக்கிறாள்.

    வேறு சிலர் தாம் வளர்க்கும் குழந்தைகள் எந்த ஒன்றிற்கும் தம்மை எதிர்பார்ப்பது பெருமைக்குரிய விஷயம் என்று நினைக்கிறார்கள், அது எங்கு கொண்டுவிடும் என்று உணராது.

    கதை

    “ஒரு வயசிலிருந்தே பாபு  எங்கிட்டதான் இருக்கான். அவன் அம்மா இங்கே வந்திருந்தபோது, அவகூட போகமாட்டேன்னு என்னைக் கெட்டியாப் பிடிச்சுண்டான்,” என்று பெருமை பேசுவாள் பாட்டி.

    அந்த வயதுக் குழந்தைக்கு அவ்வளவெல்லாம் தெரியுமா என்பது சந்தேகம்தான்.

    பாபுவின் தாய் அகாலமாக இறந்தது பாட்டிக்கு சௌகரியமாகப் போயிற்று. தனக்குத் தோன்றியபடி வளர்த்தாள். அவன் கேட்டதெல்லாம் கிடைத்தது.

    என்ன தவறு செய்தாலும், `குழந்தைதானே!’ என்ற மன்னிப்பு கிடைத்துவிடும். அதுவே அசட்டுத்துணிச்சலுக்கு வழிகோலியது.

    அரை மணிக்கு ஒருமுறை கேட்டு, காப்பி குடித்தான். ஆனால், சுறுசுறுப்பு கிடையாது. அவனுடன் சோம்பலும் வளர்ந்தது. சற்றே பெரியவனாக ஆனதும், அவனால் செய்யக்கூடிய எளிய வேலைகளைக்கூட பாட்டிதான் செய்யவேண்டும்.

    “கெஞ்சறான். பாவமா இருக்கு!” என்பாள் பாட்டி.

    தான் பார்ப்பவர்கள் எல்லாரும் தன்னை அப்படி நடத்தமாட்டார்கள் என்று புரிந்தபோது, பாபுவிற்குத் தன்னிரக்கம் மிகுந்தது.

    ‘ஏனோ என்னை யாருக்குமே பிடிக்கவில்லை,’ என்று அழுவான்.

    ‘செல்லமான வளர்ப்பு’ என்ற பெயரில் தன்னைப் பிறரது ஏளனத்திற்கு ஆளாகும்படிச் செய்த பாட்டியின்மேல் வெறுப்புதான் எழுந்தது.

    தான் எங்கு தவறிழைத்தோம் என்று அந்த பாட்டிக்குப் புரியவில்லை. `எவ்வளவு அருமையா வளர்த்தேன்!’ என்று புலம்பினாள்.

    பாபுவைப்போல் வளர்க்கப்படும் குழந்தைகளால் சிறிய மனப்பளுவைக்கூடத் தாங்கமுடியாமல் போய்விடும். எப்போதும் யாரையாவது சார்ந்து இருந்தால்தான் தைரியமாக உணர்வார்கள். இதனாலேயே நிறைய வாய்ப்புகளை இழக்க நேரிடலாம்.

    எவருக்கும் சில சமயங்களில் பிறரை நாட வேண்டியிருக்கும். அதற்காக, எப்போதும் பிறரை நாடுவது ஏமாற்றத்தில்தான் கொண்டுவிடும்.

    கதை

    ஆயிஷா எங்கள் பக்கத்து வீட்டுப்பெண். ஆறு அண்ணன்மார்களுக்குப்பிறகு பிறந்த குழந்தை. தன்னைக் கொஞ்சிய தந்தையிடம் அவளும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவாள்.

    மூத்தவர்கள் உள்பட, குடும்பத்தில் அனைவரும் அவளைத் தாங்கினார்கள். மகாராணிபோலவே நடந்துகொண்டாள். ஒரு அண்ணனை மரியாதையின்றி பேசுவதையும், அவன் பொறுத்துப்போவதையும் பார்த்திருக்கிறேன்.

    பிடிவாதம், சோம்பல் என்று பல வேண்டாத குணங்கள் வந்தபோதும், யாருக்கும் அவளை தரக்குறைவாக நினைக்கத் தோன்றவில்லை.

    ஆண்களிடம் எப்படிக் குழைந்து நடப்பது என்று புரிந்திருந்ததால் அப்பாவி ஒருவனை மயக்குவது ஆயிஷாவுக்குக்  கடினமாக இருக்கவில்லை.

    ‘பாவம்!’ என்று நாங்கள் அவனுக்காகப் பரிதாபப்பட்டோம்!

    ‘நான் உனக்காக எதுவும் செய்யமாட்டேன். எப்போதும் நீதான் விட்டுக்கொடுக்க வேண்டும்,’ என்று தம்பதியரில் ஒருவர் மட்டும் அதிகாரமாக நடந்தால், தாம்பத்தியம் எப்படி மகிழ்ச்சியாக இருக்கும்?

    கதை

    இடம்: பள்ளிக்கூட ஆசிரியர்களின் அறை.

    வம்புக்கான நேரம். (பெண்கள் பொது அறிவு பெறுதல், ஒருவருடன் ஒருவர் பழகக் கற்பது என்றுகூட வைத்துக்கொள்ளலாம்)

    பிரசவமானதும் பத்தியச் சாப்பாடு, உடல் நோவு, ஓய்வே இல்லாமல் சிசுவைக் கவனிக்க வேண்டியிருப்பது என்று நாங்கள் எதிர்மறையாகவே அடுக்கியபோது, மிஸஸ் சிங் மட்டும் மாற்றுக்கருத்து தெரிவித்தாள்:

    “பிள்ளை பெற்றபிறகு எல்லாரும் என்னை மிகுந்த கரிசனத்துடன் நடத்துவார்கள். எனக்குப் பிடித்த விஷயம் அது!” என்று அவள் கூற, உடன் இருந்தவர்கள் எல்லாரும் சிரித்தோம்.

    சிறு வயதிலேயே தாயை இழந்தவள் அவள். தந்தை மறுமணம் செய்துகொண்டு, அவளை ஏதோ காப்பகத்தில் விட்டுவிட்டார். மாதாமாதம் பணம் கட்டுவதோடு அவருடைய பொறுப்பு முடிந்தது என்று எண்ணியிருந்திருப்பார்.

    அவள் வளர்ந்தபோது, அத்தியாவசியத் தேவைகள் கிடைத்தன. ஆனால், அன்புடன் கவனிக்க ஒருவரும் இல்லையே என்ற ஏக்கம் அவளுக்குள் இருந்திருக்கிறது.

    கரிசனமான கணவன்

    அன்பான கணவன் — அவ்வப்போது

    மனைவியின் உடல்நலம் கெட்டிருக்கும்போது அவள்மீது பரிவு காட்டி, `ஐயோ! உனக்கு ஏதாவது ஆகிவிட்டால், என் கதி!’ என்று கணவன் கலங்குவது அவளுக்குப் பெருமையை அளிக்கலாம்.

    ஆனால், பிற சமயங்களில் அதிகாரமாக, இல்லை, அலட்சியமாக நடத்தும் அவன் அப்போது மட்டும் அன்பாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டால், அவள் நிரந்தர நோயாளியாகிவிடும் அபாயமும் உண்டு.

    பணமே பலம்

    ‘குழந்தைக்காகச் செலவிட நேரம் கிடைக்கவில்லை,’ என்ற குற்ற உணர்ச்சியைப் போக்கிக்கொள்ள பணத்தால் ஈடு செய்கிறார்கள் பல பெற்றோர்.

    இதனால் குழந்தை புரிந்துகொள்வது: என்ன தவறு செய்தாலும் பணத்தால் ஈடுகட்டிவிடலாம்.

    தேவைக்கு அதிகமாகப் பணம் கொடுப்பதோ அவனுக்காகச் செலவழிப்பதோ அன்பில்லை. அது நம் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வழி.

    அன்புடன் கண்டிப்பும் சேர்ந்திருந்தால்தான் ஒரு குழந்தை சுயநலம் ஒன்றே குறிக்கோளாக இல்லாது, பிறர் மதிக்க வளரும்.

    ‘என் குழந்தை ஒரு நாள் பெரியவனாக ஆவான். அப்போது, அவனுக்கு இந்தக் குணங்கள் வேண்டியிருக்கும்’ என்று சற்றே யோசித்தால், நல்ல பழக்கங்களை விதைக்கமுடியுமே!

    அப்படி வளர்த்தவர்களை அவன் என்றும் மறக்கமாட்டான். நன்றியுடன் நினைவுகூர்வான்.

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 6

    எட்டுக் கோணல் பண்டிதன் – 6

    தி. இரா. மீனா

                         அத்தியாயம் மூன்று

    இந்த அத்தியாயத்தில் ஷ்டவக்கிரர் அகப்பற்றையும், புறப் பற்றையும் நிந்தித்து ஞானியின் இயல்பை ஜனகருக்கு விளக்குகிறார்.

    1. அழிவில்லாத ஒன்றாகிய ஆத்மாவை உண்மையில் உணர்ந்த ஆத்ம ஞானியும் தீரனுமாகிய உனக்குப் பொருள் தேடுவதில் எப்படி மகிழ்ச்சி உண்டாக முடியும் ?
    2. கிளிஞ்சல் என்று அறியாததால் வெளித் தோற்றத்தில் ஆசை ஏற்படுவது போல, ஆத்மாவை உணராத போது மோகத்தால் காணும் விஷயங்களில் விருப்பமுண்டாகும்.
    3. கடலில் அலைகள் போல எதனிடம் இந்த உலகம் விளங்குமோ அதுவே நான் என்று அறிந்த பிறகும் ஏழை போல நீ பதறுவது எதற்காக?
    4. ஒருவன் அழகான தூய அறிவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பினும், தனது அதிகமான சிற்றின்பப் பற்று இயல்பால் மாசுடையவன் ஆகிறான்.
    5. தன்னிடம் படைப்பு அனைத்தையும், படைப்பனைத்திலும் தன்னையும் காணும் முனிவனுக்கு, நான் அல்லது என்னுடையது என்ற மமகாரத் தொடர்பிருப்பது மிகுந்த அதிசயமே.
    6. அத்வைத உயர்நிலையை நாடும் யோகி, காமவயப்பட்டுக் காதல் கொண்டு சீரழிதல் விந்தையானதாகும்.
    7. ஒருவன், பலம் மிகக் குறைந்து முடிவு காலத்தை நெருங்கியிருந்தும் ஞானப் பகையானது என்றறிந்த காமத்தை விரும்புவது விந்தையே.
    8. விவேகம் கொண்டும், இம்மை மறுமைகளில் விருப்பமற்றும் உள்ள யோகிக்கு முக்தியின்பால் பயமேற்படுதல் விந்தையே.
    9. ஆத்மாவையே என்றும் காண்பவனாக உள்ள தீரன் உபசரிக்கப்பட்டாலும், துன்புறுத்தப்பட்டாலும் மகிழ்ச்சியும் கோபமும் அடைவதில்லை.
    10. இயங்கும் தன்னுடலைப் பிறர் உடலெனக் காண்பவன் புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் குழம்புவதில்லை.
    11. மாயமயமாக இந்த உலகத்தை மகிழ்ச்சியின்றிப் பார்க்கும் அறிவுடையோன் தன்னை இறப்பு நெருங்கும் போது அச்சமடைவானோ?
    12. ஆத்மஞான நிறைவு கொண்டு, ஆசை- நிராசைகளிலிருந்து விடுபட்டு, பற்றற்ற மனமுடையவனாக வாழ்பவனுக்கு யார் நிகராக முடியும் ?
    13. தனது இயல்பினாலேயே தோன்றுவதேயன்றி வேறொன்றுமில்லை என்றுணர்ந்த அறிவுடையவன், தான் ஏற்றுக்கொள்ளுவதற்கும், ஒதுக்குவதற்கும் உரிய பொருளாக எதையும் காண்பதில்லை.
    14. இருமையும், மனவெழுச்சியும்,உள்ளத்தில் அழுக்கும் இல்லாதவனுக்குத் தானாக ஏற்படும் அனுபவத்தால் இன்பமுமில்லை, துன்பமுமில்லை.

                அத்தியாயம் நான்கு

    இந்த அத்தியாயம் ஜனகர், தானுணர்ந்த ஞானநிலையின் பெருமையை ஷ்டவக்கிரரிடம் சொல்வதாக அமைகிறது.

    1. விஷய அனுபவங்களுடன் செயல்படும் ஆத்மஞானியை, சம்சார பந்தத்தைச் சுமக்கும் பாமரருடன் ஒப்பிடுதல் பொருந்தாது.
    2. இந்திரன் முதலான தேவர்கள் தீனர்களாக எந்த நிலையை அடைய விரும்புவார்களோ அந்த நிலையைத் தன் பயிற்சியால் அடைந்த போதிலும் ஒரு யோகி அதனால் மகிழ்ச்சி அடைவதில்லை.
    3. பாவ, புண்ணியங்களின் தன்மை ஞானியின் உள்ளத்தைத் தீண்டுவதில்லை, வானத்தில் புகை படிந்தது போலக் காணப்பட்டாலும், படியாதது போல.
    4. இந்தவுலகம் முழுவதும் ஆத்மாவே என்றுணர்ந்து சுதந்திரமாக வாழ்பவரைத் தடை செய்யும் தகுதி யாருக்கிருக்கிறது?
    5. பிரமன் முதல் புழு வரையுள்ள நான்கு வகை படைப்புக் கூட்டத்தில் விருப்பு வெறுப்புகளை விலக்குகிற திறமுடையவன் மெய்யறிவு ஞானி ஒருவனே.
    6. உலகிறையாகிய இரண்டில்லாப் பொருளே தானென்று யாரோ ஒருவன் உணர்கிறான். அவன் சித்தம் போல வாழ்பவன். அவனுக்கு எந்தப் பயமுமில்லை.

    தீரன் – வடமொழியில் இச்சொல்லுக்கு புலன் செயல்பாடுகளுக்கோ, வாழ்க்கையின் பல்வகையான போக்குகளுக்கோ ஆட்படாமல்  உறுதியாகவும் தெளிவாகவும் செயல்படக் கூடிய யோகி என்பது பொருள்.

    [தொடரும்]

    Share
  • படக்கவிதைப் போட்டி – 274

    படக்கவிதைப் போட்டி – 274

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    அண்ணாகண்ணன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஆசிரியர் குழுவினர் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (06.09.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 273இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 273இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    மரக்கிளையில் அழகாக அமர்ந்திருக்கும் மஞ்சள் வண்ணத் தேன்சிட்டைப் படம்பிடித்து வந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டு இப்படம் படக்கவிதைப் போட்டி 273க்கு வழங்கப்பட்டிருக்கின்றது. ஒளிப்பதிவாளருக்கு என் நன்றி!

    காணத் தெவிட்டாத இந்தத் தேன்சிட்டை நம் வீட்டருகில் காணவேண்டுமானால் நிறைய மரம் செடிகொடிகள் நம் வீட்டைச் சுற்றி இருக்கவேண்டும்.

    இத்தொல்லுலகில் பல்லுயிர்களுக்கும் அடைக்கலம் தரும் அன்னையாகத் திகழ்பவை மரங்களே. எனவே மரங்களை அழியாமல் காப்பதன் வாயிலாக இந்தச் சின்னஞ்சிறு வன்ன (அழகிய) குருவிகளையும் நாம் காக்கமுடியும்!

    கண்கவர் சிட்டைப் படத்தில் நோக்கியதால், கவிபாட, பல்வேறு கற்பனைகளை மனத்தில் தேக்கிவைத்துக் காத்திருக்கும் கவிஞர்களே வருக! உம் கற்பனைகளைக் கட்டவிழ்த்து விடுக!

    *****

    ”எல்லைகள் தாண்டியே தொல்லையில்லாப் பயணம் செய்கிறாய்! உடைமைகள் மீது ஆசைகொள்ளும் மடமை உனக்கில்லை” என்று சிட்டுக்குருவியின் சுதந்தர வாழ்வை விதந்தோதுகின்றார் திரு. காந்திமதிநாதன்.

    சுதந்திர பறவை

    எங்கு வேண்டுமானாலும்
    எப்பொழுது வேண்டுமானாலும்
    எல்லைகள் தாண்டியே பயணம்

    உடைமை கொண்டாட்டமில்லை
    மடமை கொண்டாடுவதில்லை

    ஆசைகள் பிறப்பதில்லை
    யாரையும் பின்பற்றுவதில்லை

    என்னை வழிநடத்துபவன் என்
    என்னுள்ளே இருப்பதால்
    சூழ்ச்சி வலையில்
    வீழ்ச்சிக்கு வழியில்லை

    என்னைக் கேட்டுத்தான்
    எல்லாமே நடக்கணும்
    சர்வாதிகார சிந்தனை
    சந்நதிக்கே இல்லையப்பா

    மானிடா
    உங்களுக்குள்ளே
    எத்தனை எத்தனை பிரிவுகள்

    பிரிவுகளுக்குள்ளே
    எத்தனை எத்தனை
    உட்பிரிவுகள்

    வளர்கிறோமே
    வாதாடுவாய்

    சாதனைகள்
    பட்டியலிடுவாய்

    ஒரே கேள்வி

    நிம்மதியாக
    வாழ்கிறாயா?

    *****

    ”மரக்கிளையில் கூடுகட்டி மறைவாக வாழ்ந்தாலும் இரக்கமற்ற மனிதனால் அதற்கும் ஆபத்து வந்துவிடுவதைக் கலக்கத்தோடு பார்த்திருக்கும் பறவை இது” என்று பறவை வாழ்வின் பரிதாபநிலையை விளக்குகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அவன் செயல்…

    சிறகில்
    சுதந்திரத்தைக் கட்டிப்
    பறக்கும் பறவைக்கு
    வசப்பட்டுவிடுகிறது
    வானம்..

    மண்ணில்தான்
    மாறுபாடாகிறது மனிதனால்..

    உயர்ந்த மரக்கிளையில்
    ஓவியமாய்க் கூடுகட்டி
    இனத்துடன்
    ஒற்றுமையாய் வாழ்ந்தாலும்
    இடர்ப்பாடு வந்துவிடுகிறது
    இவனால்-
    மரத்தையே வெட்டிவிடுகிறானே
    அடியோடு..

    கலக்கத்துடன்
    பார்த்துக்கொண்டிருக்கிறது
    பறவை யொன்று…!

    *****

    ”துணையைப் பிரிந்த தாபமோ? குருவிக்கூட்டம் தள்ளிவைத்ததால் வந்த கோபமோ? எதுவாக இருந்தாலும் தன்னம்பிக்கை தளராதே!” என்று சிட்டுக்குத் துணிவூட்டுகின்றார் திரு. கோ. சிவகுமார்.

    தன்னம்பிக்கை

    தன் துணை
    தனிமைப்படுத்தியதின்
    தாபமோ!

    தன் கூட்டம்
    தள்ளி வைத்ததின்
    கோபமோ!

    தன்னந்தனியாய்
    தண்ணீருக்கான
    தேடலோ!

    தனியொரு பறவையாய்த்
    தடித்த மரக்கிளையில்
    தவிக்க விட்டது
    தலைவிதியென்று
    தளராதே குருவியே!

    தன்னம்பிக்கையையும்
    தைரியத்தையும்
    தடைகளைத்
    தகர்த்திடும் ஆயுதங்களாக்கு!

    தவிக்க விட்ட
    சொந்தங்கள்
    தன்னால் வரும்
    உன் பின்னால்!

    *****

    ”ஆட்டம் காட்டும் கிளை அமர்ந்தும் வாட்டம் முகத்தில் காட்டிவைத்து
    அழுது பொழுதைப் போக்காமல் நிலையாய் நிற்கும் உறுதி சொன்னாய்” என்று சிட்டுக்குருவி தனக்குச் சொன்ன நல்ல சேதியை நமக்கும் சொல்லியிருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    சிட்டுக்குருவிகள் சொல்லும் சேதி

    காலை எழுந்து கடமையைச் செய்ய
    மாடத்தில் தினமும் கூவிடுவாய்
    மாலை நேரமாய் வீடுவந்து
    சொந்தம் கூடி வாழச் சொல்லிடுவாய்

    சோம்பித் திரிந்து வாடிடாமல்
    உழைப்பைக் கொண்டே உலகைச் சுற்றி
    உண்மைக் களிப்பைப் பெற்று வாழும்
    சிறப்பைத் தினமும் காட்டிடுவாய்

    படைப்பின் நியதிகள் மீறிடாமல்
    அடைந்து கிடந்து தேங்கிடாமல்
    சிறகை விரித்துப் பறந்து செல்லும்
    விடுதலை வேட்கை விதைத்திடுவாய்

    ஆட்டம் காட்டும் கிளை அமர்ந்தும்
    வாட்டம் முகத்தில் காட்டி வைத்து
    அழுது பொழுதைப் போக்காமல்
    நிலையாய் நிற்கும் உறுதி சொன்னாய்

    சின்னச்சின்ன குருவி நீயும்
    சொல்லும் சேதிகள் ஏராளம்
    எண்ணத்தில் அவற்றை நிலையிருத்தி
    முன்னேற்றம் நாங்களும் கண்டிடுவோம்…

    *****

    குருவியின் படத்துக்குப் பொருத்தமாய்க் கருத்து அருவிகளைப் பாயவிட்டிருக்கும் கவிஞர்களை நேயத்தோடு பாராட்டுகின்றேன்.

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தெரிவுசெய்திருப்பது அடுத்து…

    மஞ்சள் வெல்வெட்டில்
    கருப்புநிறக் கருகுமணி உன் கண்கள்!
    பேனாவின் கூர்மை கொண்ட உன் அலகு!
    பதிய வைத்த கால்களுடன்
    மரக்கிளையில் நீ ஊஞ்சலாடும் அழகு
    நளினத்தின் நளினம்!

    இயந்திர நகர நரக வாழ்க்கையில்
    உன்றன் குரலை மறந்திருந்தோம்!
    ஊரடங்கில் உன்றன் குரல்
    கேட்கக் கேட்க எத்தனை இனிமை!
    அமைதியினிடையில் ஆனந்தம் தந்ததே…
    இறுகிய மனத்தூடே இனிமை தந்ததே…
    உன்னிசையைத் தந்து கொண்டேயிரு
    நாங்கள் குதூகலிக்க!
    மஞ்சள் மைனாவே
    மறவாதே எங்களை!!

    ”மஞ்சள் வெல்வெட்டில் கருகுமணிகளாய் மின்னும் கண்களோடும், பேனாவின் கூர்மைகொண்ட அலகோடும் மரக்கிளையில் நீ ஊஞ்சலாடும் அழகே அழகு! உன்னிசையைக் கேட்டுமகிழும் இன்பத்தை நித்தமும் எமக்குத் தா” என்று மஞ்சள் சிட்டைக் கொஞ்சி அழைக்கும் இந்தக் கவிதையின் ஆசிரியர் திருமிகு. சுதா மாதவனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • திருவள்ளுவர் யார்? – 7

    திருவள்ளுவர் யார்? – 7

    புதுக்கோட்டை பத்மநாபன்

    “பொறிவாயில் ஐந்தவித்தான்”

    “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறி நின்றார் நீடு வாழ்வார்”

    என்பது அடுத்த குறட்பா.

    ஐம்பொறிகளை அடக்கிய இறைவனின் பொய்யில்லாத ஒழுக்கத்தைப் பின்பற்றி நடப்பவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள் என்பது இக்குறட்பாவின் கருத்து.

    விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் “ஜிதேந்த்ரிய:” என்ற ஒரு நாமமுண்டு. அதற்கு ‘புலன்களை வென்றவன்’ என்று பொருள். பகவான் மனிதனாக அவதாரம் செய்தாலும் சராசரி மனிதனுக்குள்ள புலன் விஷயங்கள் அவனிடம் நெருங்குவதில்லை. ராமாவதாரத்தில் அவன் வாழ்ந்து காட்டிய நெறிமுறைப்படியும் கிருஷ்ணாவதாரத்தில் அவன் உபதேசித்த நெறிமுறைப்படியும் வாழ்பவன் இவ்வுலகில் நீண்டகாலம் வாழ்வான் என்பதே திருவள்ளுவர் இங்கு கூற வரும் கருத்து.

    ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’ என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. ’பொறி’ என்ற சொல்லுக்கு ‘தீப்பொறி’, ‘அழகு’ என்ற பொருள்களும் உண்டு. ப்ரளய காலத்தில் தீப்பொறிகளை உமிழ்கின்ற அல்லது அழகான தனது திருவாயில் (‘திருப்பவழச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ’ என்று கோதையார் அனுபவித்த கோலத்திருவாயன்றோ அது!) ஐந்தின் மடங்கான தத்துவங்களை எல்லாம் உள்ளடக்கிய ப்ரபஞ்சத்தை அவித்துக்கொள்ளும் அல்லது விழுங்கிவிடும் திருமால் என்ற பொருளும் உண்டு. தனது அடியார்களின் புலன் விஷயமான உணர்வுகளை அறவே அழித்துவிடுபவன் என்றும் பொருள் கொள்ளலாம். இதைத்தான் “ஐந்து இருள் அறநீக்கி நான்கினுள் துடைத்து தம் ஒன்றாற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுதேத்தி, நின் புகழ் விரித்தனர்” (பரிபாடல்-4) என்று சங்க இலக்கியமும் கூறுகிறது. ஆகவே இந்தக்குறட்பாவும் திருமாலைப் பற்றியே பேசுகிறது என்பது தெளிவாகிறது.

    “தனக்குவமை இல்லாதான்”

    அடுத்த குறட்பாவில் பகவானைத் “தனக்குவமை இல்லாதான்” என்று அழைக்கிறார் திருவள்ளுவர். “न ते विष्णो जायमानो न जातो देव महिम्नःपरमन्तमाप” (ந தே விஷ்ணோ ஜாயமானோ ந ஜாதோ தேவ மஹிம்ந பரமந்த மாப-ரிக் வேதம்-7-99-2) என்று ரிக்வேதம் பகவானைத் துதிக்கிறது. “பகவானே! விஷ்ணோ! பிறக்கின்றவனும் பிறந்தவனும் உன் பெருமையின் மேல்எல்லையை அறியவில்லை” என்பது இந்த ரிக்வேத வாக்யத்திற்குப் பொருள்.

    விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ‘அனுத்தம’, ‘அதுல:’ என்று இரண்டு நாமங்கள் வருகின்றன. ‘அநுத்தமன்’ என்றால் ‘தனக்குமேல் உயர்ந்தவன் இல்லாதவன்’ என்று பொருள். ‘அதுலன்’ என்றால் ‘தனக்கு ஸமமானவன் எவனும் இல்லை’ என்று பொருள். “न त्वत्समोऽस्त्यभ्यधिकःकुतोऽन्यो लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव”(ந த்வத் ஸமோஸ்த்யப்4யதி4க:குதோந்யோ லோகத்ரயேப்யப்ரதிம ப்ரபா4வ -கீதை-11-43) என்று கீதையிலும் சொல்லப்பட்டது. “மூவுலகிலும் உனக்கு ஸமமானவன் இல்லாதபோது உயர்ந்தோர் எங்கிருப்பர்” என்பது இந்த கீதை வசனத்தின் பொருள்.

    “இன்னோர் அனையை இனையயால் என அன்னோர் யாம் இவண் காணாமையின்” (பரிபாடல்-1) என்றும் “நின்னைப்புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ முன்னை மரபின் முதுமொழி முதல்வ” (பரிபாடல்-3) என்றும் எம்பெருமான் விஷயமாகச் சங்க இலக்கியம் பேசுகின்றது. அதனால் திருவள்ளுவர் குறிப்பிடும் தனக்குவமை இல்லாதான் திருமால்தான் என்பதில் ஐயமில்லை.

    “அற ஆழி அந்தணன்”

    அடுத்த குறட்பாவில் பகவானை “அற ஆழி அந்தணன்” என்று குறிப்பிடுகிறார். இதன் மூலம் பகவானின் அஸாதாரண அடையாளமான ஆழிப்படையை நினைவுபடுத்துகிறார் திருவள்ளுவர். பகவான் தன் கையில் வைத்திருக்கும் ஸுதர்ஶனச் சக்கரத்தால் உலகில் தர்மத்தைக் குலைக்கும் துஷ்டர்களை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டுகிறார். உலகில் தர்மத்தை நிலைநாட்டவே சக்கரத்தைத் தனது கையில் தரித்திருக்கிறான் பகவான். அதனாலேயே “அறஆழி” என்று குறிப்பிட்டார்.

    “चतुर्भिस्साकं नवतिञ्च नामभिश्चक्रं न वृत्तं व्यतीनवीविपत्” (தனது ஸுதர்ஶனச் சக்கரத்தைச் சுழற்றுவதுபோல், தொண்ணூற்று நான்கு அவயவங்களைக் கொண்ட காலச் சக்கரத்தையும் விஷ்ணு தன் கையில் வைத்துக்கொண்டு சுழற்றுகிறார்) என்று ரிக்வேதம் (ரிக்-1-155-6) கூறுகிறது. இதனால் ஸுதர்ஶனமே காலச் சக்கரமாகவும் இருக்கிறது என்பது தெளிவாகிறது. “மாநிலம் இயலா முதல்முறை அமையத்து நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய வாய்மொழி மகனொடு மலர்ந்த தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே”(பரிபாடல்-3) என்று எல்லா உலகத்தின் பாதுகாப்பும் பகவானது திருச்சக்கரத்தின் நிழலில் தான் உள்ளது என்று சங்க இலக்கியமும் கூறுகிறது.

    உலகில் அந்தணர்களையும் அவர்களது தர்மமான வைதிக நெறியையும் ஒரு மன்னன் பாதுகாக்க வேண்டும் என்று ‘ஆபயன் குன்றும்’ ‘அந்தணர் நூற்கும்’ என்ற குறட்பாக்கள் மூலம் திருவள்ளுவரே கூறுகிறார். வேத வைதிக நெறியான அந்தணரின் அறம் தான் உலகில் உள்ள மற்றவர்களின் அறங்களுக்கும் அடிப்படையாக உள்ளது. உலகில் அந்தணருக்கும் அவர்களது அறத்திற்கும் நலிவு ஏற்படுகின்ற பொழுது அதர்மம் தலைதூக்கி விடுகிறது. பகவான் அந்த அறத்தை நிலைநாட்டி உலகத்தைக் காக்கவே தனது அவதார காலங்களில் அந்தணர் வடிவிலும் தோன்றியிருக்கிறான். அதனால்தான் ‘அந்தணன்’ என்று பகவானைக் குறிப்பிட்டார் திருவள்ளுவர். அதனால் இக்குறட்பாவும் திருமாலைப் பற்றியே பேசுகிறது என்பது தெளிவாகிறது. 

    எண்குணத்தான்

    அடுத்த குறட்பாவில் பகவானை எண்குணத்தான் என்ற சொல்லால் அழைக்கிறார் திருவள்ளுவர். சாந்தோக்ய உபநிஷத்தில் “एष आत्माऽपहतपाप्मा विजरो विमृत्युर्विशोको विजिघत्सोऽपिपास्सत्यकामः सत्यसंकल्पः” (பாபமற்றவன், கிழத்தன்மையற்றவன், மரணமற்றவன், ஶோகமில்லாதவன், பசியற்றவன் தாக மற்றவன், உண்மையான எல்லா இன்பங்களையும் உடையவன், வீணாகாத ஸங்கல்பத்தை உடையவன்) என்று பரமாத்மாவுக்கு எட்டு குணங்கள் இயல்பாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதை குணாஷ்டகம் என்று கூறுவர். முக்தி பெற்ற நிலையில் தான் ஜீவாத்மாவுக்கு இக்குணங்கள் ஏற்படுகின்றன.

    கோரர் என்ற ரிஷி, ஒரு க்ருஷ்ண பக்தர். ஸ்ரீ கிருஷ்ணனைப் பரமாத்மா எனப் புரிந்துகொண்டு தன் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீகிருஷ்ண உணர்வில் ஈடுபட்டிருந்ததால் அவரது இறுதிக் காலத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணனைக் காணும் பேறு பெற்றதுடன் மேற்படி எட்டு குணங்களை அடைந்து முக்தரானார் என்ற விஷயம் மேற்படி உபநிஷத்திலேயே சொல்லப்படுகிறது. பகவான் அநந்த கல்யாண குணங்களை உடையவன். அவனது குணங்களை எண்ண முடியாது. முக்தி பெறும் ஜீவாத்மாக்கள் பகவானிடமுள்ள பல்வேறு குணங்களில் குறிப்பாக எட்டு குணங்களை மட்டும் அடையும் தகுதி பெறுகிறார்கள் என்பதை உணர்த்தவே மேற்படி எட்டு குணங்களை மட்டும் உபநிஷத் எடுத்துக் காட்டுகிறது. அதுவே குணாஷ்டகம் என்று ப்ரஸித்தி பெற்றுவிட்டது. முக்தி பெற்றோருக்குத் தனது எட்டு குணங்களை மட்டும் அநுக்ரஹிப்பவன் என்பதால் தான் பகவான் “எண்குணத்தான்” என்றும் ப்ரஸித்தியடைந்தான்.

    பரமாத்மாவின் இந்த எட்டு குணங்களை மட்டும்தான் முக்தி பெற்ற நிலையில் ஒரு ஜீவாத்மா பெற முடியுமேயொழிய பகவானின் மற்ற குணங்களைப் பெற முடியாது. அதனால் முக்தி பெற்ற நிலையில் ஒரு ஜீவாத்மா, பரமாத்மாவோடு எல்லா வகையிலும் ஸாம்யத்தை அடைந்து விட முடியாது. இதுவே வேதாந்தத்தின் முடிவு. பரம வைதிகரான திருவள்ளுவர் அதை மனதிற் கொண்டுதான் பகவானை எண்குணத்தான் என்கிறார்.

    பகவானது குணங்களை எண்ணினால் எண்ணிக்கொண்டே இருக்கலாம். அதற்கு முடிவில்லை. அதனாலும் எண்குணத்தான் என்பது பொருத்தம்தான். ‘எண்பதத்தான்’(குறள்-548) ‘எண்பதத்தால்’ (குறள்-991) என்ற இடங்களில் போல பகவானின் ஸௌலப்ய குணத்தைக் குறிப்பிடுவதற்காகக் கூட ‘எண்குணத்தான்’ என்று சொல்லலாம். இவ்விடத்துக்கு உரை செய்த பரிமேலழகர் எண்வகைப்பட்ட குணங்களை உடையானது என்று பொதுவாகச் சொல்லிச் செல்கிறாரேயொழிய அந்த குணங்கள் எவை என்னும் விஷயத்தில் தன் கருத்தாக எதையும் குறிப்பிடவில்லை.

    இது குறித்துப் பலருடைய கருத்தை வெளிப்படுத்துமிடத்தில் ஶைவ ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளதையும் குறிப்பிடுகிறார் பரிமேலழகர். ஶைவாகமத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று தான் கூறுகிறாரேயொழிய, திருவள்ளுவர் ஶைவாகமத்தைப் பின்பற்றியே எண் குணத்தான் என்று கூறினார் என்று அவர் சொல்லவில்லை. ஏனெனில் ஶைவாகமம், ஶைவ ஸித்தாந்தம் இவையெல்லாம் திருவள்ளுவர் காலத்தில் தமிழ்நாட்டில் இல்லை.

    திருவள்ளுவர் சங்கத் தமிழர்களின் மரபில் வந்தவர். சங்கத் தமிழர்கள் இடம் சார்ந்து பல தெய்வங்களை வழிபட்டிருந்தாலும் வைதிக தெய்வமான திருமாலையே பரம்பொருளாகக் கருதி வழிபாடு செய்தனர். வேறொரு தெய்வத்தை அவர்கள் பரம்பொருளாகக் கருதவில்லை. இதற்கு சங்க இலக்கியங்களே சான்றாக உள்ளன. சங்க இலக்கியங்கள் முழுவதிலும் திருமாலின் அவதாரச் செய்திகளும் பரத்வமும் தான் பேசப்படுகின்றன.

    ருத்ரனைக் குறித்த சில குறிப்புகள் சில இடங்களில் வருகின்றனவேயொழிய ஶைவாகமம் ஶைவ ஸித்தாந்தம் இவற்றில் கூறப்படும் ஶிவனைப் பற்றிய ஒரு சிறு குறிப்புக் கூடச் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. ஶிவன். ஶைவம் என்ற சொற்களே சங்க இலக்கியங்களில் இல்லை. சங்கத் தமிழர்கள் வேத வைதிக நெறியையும் அதைப் பின்பற்றும் அந்தணர்களையும் ஆதரித்துப் போற்றியவர்கள் என்பதைச் சங்க இலக்கியங்களிலிருந்து நாம் அறிய முடிகிறது. அந்த வகையில் இந்தக் குறட்பாவில் சொல்லப்படும் எண்குணத்தான் என்பது தமிழர்களின் வைதிக தெய்வமான திருமாலைத்தான் குறிக்கும் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

    தொடரும்…

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 12 (சேரிமக்கள்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 12 (சேரிமக்கள்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    சிறுபாத்திர வரிசையில் அடுத்து இடம்பெறுவது சேரிமக்கள்  என்னும்   தொகைப்பாத்திரம் ஆகும். ‘சேரிமக்கள்’ என்னும் தொடர் ஒரு பாடலிலும் இல்லை. பாடல் காட்சியில் சேரி மக்கள் நேரில் இடம் பெறவுமில்லை. ‘சேரி’ என்னும் இடவாகு பெயர் சேரிமக்கள் அனைவரையும் குறிப்பாகச் சுட்டுகிறது. தொல்காப்பியரின் ‘பாடல் சான்ற புலனெறி வழக்கி’ல்  சேரிமக்கள் கூற்றிற்கு உரியவராக   இடம் பெறவில்லை. அகப்பாடல்களில் தோழி,   தலைமக்கள் ஆகியோர்  கூற்றில் அவர்கள் பேசியவராக இடம் பெறுகின்றனர்.

    இடவாகுபெயர்ச் சிறுபாத்திரம்
    செவிலித் தாயிடம் அறத்தோடு நிற்கும் தோழி;
    “……………………………. அலர்வாய்
    அம்மென் சேரி கேட்பினும் கேட்க” (அகம்.- 110)

    என்கிறாள். ‘வேண்டுமாயின் அலர் தூற்றும் சேரிமக்களிடம் சென்று கேட்டுக்கொள்; நாங்கள் கடலில் ஆடி; சிற்றில் இழைத்து; சிறுசோறு சமைத்து ஆயத்தோடு விளையாடிய போது; அவன் தான் விருந்துண்ண வரட்டுமா? என்று கேட்டான். இது இழிந்த மீனுணவு; உன்னால் உண்ணலாகாது என்று தான் பதிலிறுத்தோம்…’ எனத் தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் விதமாகப் பேசும் தோழி சேரியை நமக்கு அலர் தூற்றும் மக்கட்கூட்டமாகத் தான் அறிமுகப் படுத்துகிறாள்.

    “கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி
    அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய”த் (அகம்.- 347)

    தலைவன் பிரிந்து செல்கிறான் என்று தோழியிடம் வருந்துகிறாள் தலைவி. ‘சேரிமக்கள் பழி கூற; அது கமுக்கமான அம்பலாகத் தொடர்ந்து; ஊர்மக்களால் ஆரவாரமிக்க அலராவதை நாம் மட்டுமே எதிர்கொள்ளும்படி; நம்மைத் தவிக்கவிட்டு நீங்குகிறான்’ என்கிறாள். இங்கும் சேரி இடவாகு பெயராயிற்று.

    தலைவியின் பண்பைத் துலக்கும் சேரி

    தலைவியின் பாத்திரப் படைப்பைத் துலங்க வைக்க சேரி என்னும் இடவாகு பெயர்ச் சிறுபாத்திரம் பயன்பட்டுள்ளது.

    “சேரியும் மறைத்தாள் என்தோழி” (கலி.- 44)

    எனத் ‘தன் துன்பத்தைச் சேரிமக்கள்  அறியாவண்ணம் பொறுத்துக் கொண்டு மறைத்து வாழ்ந்த தலைவி; தலைவனுக்கு அவப்பெயர் வராமல் காத்தவள் என்னும் பெருமைக்கு உரியவள்’ என்பது தோழி கூற்றாக இடம்பெறும் தலைவி பற்றிய புகழ்மொழி ஆகும். இங்கும் சேரி இடவாகு பெயராக அங்கு வாழ்ந்த மக்களைக் குறிக்கிறது.

    இடப்பெயராகும் சேரி

    பல பாடல்களில் சேரி  இடப்பெயராக அமைந்துள்ளது.

    “ஊரும் சேரியும் ஓராங்கு அலர்எழ”த்  (அகம்.- 383)

    தன் மகள் சென்று விட்டாளே எனச் செவிலித்தாய் புலம்புமிடத்து; சேரி இடப்பெயராகவே பயின்று வருகிறது.

    “வருகதில் அம்ம எம் சேரி” (அகம்.- 276)

    என்று பரத்தை கூறுமிடத்தும்; ‘குதிரையின் மேல் ஏறி எம் சேரிக்கு வந்து தன் தாரும் கண்ணியும் காட்டினான்’ என்று பரத்தை தலைவர்க்குப் பாங்காயினோரிடம் கூறும் போதும் சேரி இடப்பெயரே.

    “கலிமா கடைஇ வந்து எம் சேரி
    தாரும் கண்ணியும் காட்டி” யதால் (நற்.- 150)

    நான் அவனிடம் மயங்கினேன் என்கிறாள் பரத்தை.

    சேரியின் தன்மைகள் 

    சேரி ஊர்ப்புறத்தில் இருந்தது. ஊரை ஒட்டி அமையாத சேரிகள். ஒன்றுக்கு மேற்பட்டனவாய்ச் சேர்ந்து சீறூர் எனப்பட்டன. சேரி புல் வேய்ந்த  குடிசைகளுடன் வளம் மிகுந்ததாகத் தலைவருடன் இருந்தது.

    “ஊர் அலரெழச் சேரி கல்லென” (குறுந். – 262)

    எனும் போதும்; இரவுக்குறி வந்து நீங்கும் தலைவனை எதிர்ப்படும் தோழி;

    “ஊரும் சேரியும் உடனியைந்து அலர் எழ” (அகம்.- 220)

    எனச் சூழலை உணர்த்தும் போதும்; ஊரும் சேரியும் அடுத்தடுத்து இருந்தமை உறுதிப்படுகிறது.

              “…… நல்லூர்……
    ……தமர்தம் அறியாச் சேரியும் உடைத்தே” (நற்.- 331)

    எனத் தலைவனை இரவுக்குறிக்கு ஊக்கும் தோழி ‘இவ்வூரைச் சார்ந்த சேரியில் இரவில்  இவர் நம் உறவினர் என்று கூட  அடையாளம் காண இயலாது; ஆகையால் அயலானாகிய நீ தயங்காமல் வா’ என்கிறாள். இங்கும் ஊரும் சேரியும் அடுத்தடுத்து இருந்தமை தெளிவாகிறது.

    “உறைக்கிணற்றுப் புறச்சேரி” (பட்டி.- அடி- 76)

    என்ற தொடர் இங்கு ஒப்புநோக்கத் தக்கது.

    “ஊரலம் சேரி சீறூர்” (நற்.- 77)

    எனத் தலைவன் தன் நெஞ்சோடு கூறும் போது; ஊரளவு பெரிதாக இல்லாமல் ஒன்றோடொன்று சேர்ந்த சேரிகள் சீறூர் என்று சொல்லத்தக்க அளவு நிலவின என அறிகிறோம். அதனால் தான்;

    “நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
    கொள்ளீரோ எனச் சேரிதொறும்” (அகம்.- 390)

    பண்டமாற்றுக்குக் குரல் கொடுக்கும் உமட்டி சிற்றூரின் ஒவ்வொரு சேரியிலும் ஓங்கிக் கூவியதாகத் தலைவன் பாங்கனிடம் விவரிக்கிறான்.

    “புலாலம் சேரி புல்வேய் குரம்பை” (அகம். 200)

    என்று சுட்டுவதில் சேரி புல்வேய்ந்த குடிசைகளுடன் இருந்தமை தெரிகிறது.

    “மல்லல் எம் சேரி கல்லெனத் தோன்றி
    அம்பல் மூதூர் அலரெழ” (நற்.- 249)

    என்ற தலைவியின் கூற்றில் சேரியின் வளம் முதன்மை பெற்றுக் கௌவை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    சேரியின் தலைவரும் இருந்தனர். அகப்பாடல் தலைவி தன்னை;

         “சேரி கிழவன் மகளேன் யான்” (கலி.- 91)

    என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறாள்.

    இரவுக்குறியை மறுக்கும் தோழி;

    “அம்பல் சேரி அலர் ஆங்கட்டே” (ஐங்.- 279)

    எனச் சேரிமக்களின் தன்மையை நறுக்குத் தெறித்தாற் போல உணர்த்துகிறாள். ‘தம்முள் முகிழ்த்த பழிச்சொல்லை யாவரும் அறியச் சென்று தூற்றும் மக்கள் வாழுமிடம்’ என்ற இவ்விமர்சனம் ஊர்மக்களுக்கும் பொருந்துவதே.

    சேரியின் வகைகள் காட்டும் சமூகநிலை

    வாழும் மக்கள் அடிப்படையில் பரதவர் சேரி, பரத்தையர் சேரி, கூத்தர் சேரி, பாணர் சேரி, மறவர் சேரி எனச் சேரிகளைத் தொகைநூல்கள் வகைப்படுத்துகின்றன.

    “வாலிழை மகளிர் சேரி” (நற்.- 380)

    என்ற பயன்பாடு பரத்தையர் சேரி இருந்தமையை உணர்த்துகின்றது.

    “ஒள்ளிழை மகளிர் சேரி” (அகம்.- 146);

    அதே பரத்தையர் சேரியை மாற்றுச் சொற்களால் உரைக்கிறது.

    “புன்னை ஓங்கிய புலாலம் சேரி” (குறுந்.- 351);

    “புன்னையம் சேரி” (குறுந்.- 320)

    என்றெல்லாம் பரதவர் சேரி பாடப்பெற்றுள்ளது. அங்கு சங்கு வளையல் செய்வோரின் குடியிருப்பு;

    “இலங்குவளை இருஞ்சேரி” (மது.- அடி- 136)

    எனப் பெயர் பெறுகிறது.  வையை வெள்ளம்

    “ஆடுவோர் சேரி அடைந்தென”ப் (பரி.-7)

    பாடப்படுவதால் கூத்தர் சேரி இருந்தமை அறிகிறோம். பாணர் சேரியை;

    “மீன் சீவும் பாண்சேரி” (புறம்.- 348& மது.- அடி- 269)

    என்கிறது செவ்விலக்கியம். பொருநர் என்று ஆங்காங்கு சுட்டப்படும் வீரர் வாழ்ந்த சேரி;

    “மறம்கொள் சேரி” (மது.- அடி- 594)

    ஆயிற்று.   வயலில் பணிசெய்யும் உழவராகிய  திணைமாந்தரும் பிறரும் ஊரில் வாழச்; சேரியில் பிற தொழில் செய்பவர் வாழ்ந்தமை அறிகிறோம். வேளாண்மை செய்வோர் ஊர்மன்றங்களில் எல்லாம் விழாக் காலங்களில் குரவை அயர்ந்ததாகப் பாடும் தொகைநூல்கள்; சேரியில் துணங்கைக்  கூத்து நிகழ்ந்ததாகப் பாடுவது; ஊர்மக்களுக்கும் சேரிமக்களுக்கும் இடையில் இருந்த கலாச்சார வேறுபாட்டைச் சுட்டுவதாக அமைகிறது.

    “துணங்கை அம்தழூஉவின் மணம்கமழ் சேரி” (மது.- 329);

    “மன்றுதொறும் நின்ற குரவை
    சேரிதொறும் உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ” (அகம்.-390) போன்ற தரவுகள் ஒப்பீட்டு ஆய்விற்குரியன.

    முடிவுரை 

    சேரிகள் ஊர்ப்புறத்தில் இருந்தன. ஊரை ஒட்டி அமையாத சேரிகள் ஒன்றுக்கு மேற்பட்டனவாய்ச் சேர்ந்து சீறூர் எனப்பட்டன. சேரி புல் வேய்ந்த  குடிசைகளுடன் வளம் மிகுந்ததாகத் தலைவருடன் இருந்தது. பல பாடல்களில் சேரி  இடப்பெயராக அமைந்துள்ளது. வயலில் பணிசெய்யும் உழவராகிய  திணைமாந்தரும் பிறரும் ஊரில் வாழச்; சேரியில் பிற தொழில் செய்யும் பரதவரும், பாணரும், பொருநரும், ஆடல் கலைஞரும், பரத்தையரும் வாழ்ந்தனர். வாழும் மக்கள் அடிப்படையில் சேரிகளைத் தொகை இலக்கியம் வகைப்படுத்துகிறது.  ஊர்மன்றங்களில் எல்லாம் விழாக் காலங்களில் குரவை அயர; சேரியில்  துணங்கைக் கூத்து நிகழ்ந்தமை; ஊர்மக்களுக்கும் சேரிமக்களுக்கும் இடையில் இருந்த கலாச்சார வேறுபாட்டைச் சுட்டுவதாக அமைகிறது. சேரிமக்கள்  என்னும்  தொகைப்பாத்திரம் தலைவியின் பண்பைத் துலங்க வைக்கும் இடவாகு பெயர்ச் சிறுபாத்திரமாகவும்; அலர் தூற்றும் மக்கட்கூட்டமாகவும் இடம்பெறுகிறது.

    Share
  • மயக்கம் எனது தாயகம்

    மயக்கம் எனது தாயகம்

    பாஸ்கர் சேஷாத்ரி

    காலையில் எழுந்து அழகான பெண்கள் முகத்தைப் பார்

    தாயோ, மகளோ, மனைவியோ யாராக இருப்பினும் சரி

    ஒரு குழந்தையின் சிறு கைப்பிடியில்

    உன் ஆள்காட்டி விரலைச் செருகு

    அதன் கட்டில் சில விநாடிகள் இரு.

    சிரிப்பை ரசி

    விரலை எடுக்கமாட்டாய்.

    ஓங்கி வளர்ந்த மரத்தைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடு

    பூவைக் கிள்ளாமல் விரல் ஸ்பரிசத்தில் மேலும் மலரச்செய்.

    பச்சைத் தண்ணீரில் தலை நனையக் குளி.

    வானம் பார்த்துக் கண்களை விரி.

    முடிந்தால் ஒரு பூனைக்குட்டியை மடியில் கிடத்தி அதன் ரோமம் தடவு.

    வசதியிருப்பின் திண்ணையில் அடங்கு.

    உன் கண்கள் தானாய் மூடிக்கொண்டால்

    என்னைக் குறை சொல்லாதே.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-39

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-39

    தி. இரா. மீனா

    ஹெண்டத மாரய்யா

    கள் விற்கும் தொழிலைச் செய்து வந்த இவர் சரணராக மாறியவர். ’தர்மேஸ்வரலிங்கா’ இவரது முத்திரையாகும்.

    “மண்ணெனும் குடத்தின்  நடுவே
    பொன்னெனும் கள் உற்பத்தியானது
    பெண்ணெனும் வட்டிலில் பருக போதை தலைக்கேறியது.
    இந்த போதையில் மூழ்கியவர்களை
    எப்படி மிக உயர்ந்தவர்களென்பது?
    பக்தி பற்றற்றவன் என்பது இப்பக்கமே எஞ்சியது
    தர்மேஸ்வரலிங்கத்தை எட்டவில்லை“

    ஹொடே ஹூல்ல பங்கண்ணா

    புல் விற்கும் காயகம் இவரது.’ கும்பேஸ்வரலிங்க ’இவரது முத்திரையாகும்.

    1. “கட்டையை நெருப்பில் வைக்க
    ’நான் இருக்கிறேன், வேண்டாமென’
    உள்ளிருந்த நெருப்பு உரைத்ததோ?
    தான் உள்ளிருந்து உணவானது புறமிருந்த கட்டைக்கு
    இங்ஙனம், பிறருக்குத் தன்னுள் இடந்தராதவனுக்குப் பதிலில்லை
    கும்பேஸ்வர இலிங்கத்துள்ளிருக்கும்
    ஜெகந்நாதவனை அறிந்தவருக்கு“

    2. “கூலி வேலை செய்தும் விவசாயம் செய்தும்
    தூய மனத்துடன் குரு, இலிங்கம் ஜங்கமனுக்குக்
    காயகம் ஆற்றுவோனின் நிலை எப்படிப்பட்டதெனில்;
    தானாற்றும் செயலைப் பிறரிடம் செய்ய வைக்கமாட்டான்,
    தான் பெற்றது பிரசாதம், பிறர் பெற்றது
    உணவெனச் சொல்ல மாட்டான்.
    எஞ்சிய உணவுக்கும் பிரசாதத்துக்கும்
    வேற்றுமை பார்க்க மாட்டான்; இரண்டும் சமமென்பான்.
    இத்தகைய பிரசாதி கொடுக்கும் பிரசாதம் தூய்மையானது.
    அது இலிங்கமெனும் உடலில் நிலைத்த பிரசாதம்
    இங்ஙனம் வேற்றுமை காட்டாத அருவத்தின் பிரசாதியை
    கும்பேஸ்வர இலிங்கத்திலுள்ள ஜெகந்நாதன் சாட்சியாக
    நமோ நமோ என்பேன்!“

    ஹேமகல்ல ஹம்ப்பா

    ’ பரமகுரு படுவிடு சித்தமல்லி நாத பிரபுவே ’ இவரது முத்திரையாகும்.

    1. “உணவின் தேவையில்லாதவனுக்கு
    உழவின் தொடர்புண்டோ?
    வானில் பறப்பவனுக்கு
    பூமியில் நடமாடும் ஆசையேன்?
    வைரக் கவசமணிந்தவனுக்கு
    அம்பின் பயமுண்டோ ஐயனே?
    மாயமற்றவனுக்கு மாயையின் தயவேன்?
    பரமகுரு படுவிடி சித்தமல்லிநாதனுள் இணைந்தவனுக்கு
    பிறதெய்வங்களின் தயவேன்? “

    2. “நடக்க முடியாதவனுக்கு அழகிய மனைவி வாய்த்தால்
    அவர்தம் இல்லறம் நடப்பதெங்ஙனம் ஐயனே?
    பேச்சு வராதவருக்கு அரசுப் பட்டம் கிடைத்தால்
    குடிமக்கள் பரிவாரம் அரசு நடத்த முடியுமா ஐயனே?
    அஞ்ஞான குணத்தின் மாயாவி போகும் வரையில்
    மெய்ஞ்ஞான சம்சாரமுண்டோ ஐயனே?
    சம்சாரகுணம் உள்ளவரையில் பரமாத்மாவின் எண்ணமிகுமோ
    சம்சார மாயை உயிராயிருப்பவருக்கு
    தூய சம்சாரமுண்டோ ஐயனே?
    பரமகுரு படுவிடி சித்தமல்லிநாதப் பிரபுவே ”

    3. “படகு பாய்மரம் நம்பியோர்
    கடல் ஆறு தாண்டமாட்டார்களா ஐயனே?
    வில் வாளேந்தி போர்க்களம் புகுந்தோர்
    போரினை வெல்ல மாட்டார்களா ஐயனே?
    குருவை நம்பியோர் பிறப்பை வெல்லமாட்டார்களா ஐயனே?
    பரமகுரு படுவிடி சித்தமல்லிநாதப் பிரபுவே.”

    கரஸ்தல மல்லிகார்ஜூனதேவா

    ’பரமகுரு சாந்தமல்லிகார்ஜூனா ’இவரது முத்திரையாகும்.

    1. “அகத்தில் தெளிவில்லாதவனுக்கு
    புறத்தில் செயலிருந்து பயனென்ன?
    பார்வையற்றவனின் வாழ்வு போலாம் அது.
    புறத்தில் செயலின்றி அகத்தில் தெளிவிருந்து என்ன பயன்?
    அது சூன்யத்தின் தீபம் போலாம்
    அகத்தின் தெளிவு, புறத்தின் செயல்
    இவ்விரண்டும் இணையவேண்டும்.
    அது எங்ஙனமெனில் அகத்தில் தெளிவு புறத்தில் செயலுள்ளவனே
    பக்தனாம் மகேஸ்வரனாம் பிரசாதியாம்
    பிராணலிங்கியாம் ஐக்கியமான அடியவனாம்
    நம் பரமகுரு சாந்த மல்லிகார்ஜூனன் தானாம்.”

    2. “கடலிலுள்ள ஆலங்கட்டியைச் செதுக்கி
    தூணாக்கி வீடு கட்டிக் கொண்டு
    குடித்தனம் செய்ய முடியுமா ஐயனே?
    நெருப்பினுள்ளிருக்கும் கற்பூரத்தின் குடுவையுள்
    நறுமணம் நிரப்பி பசையாக்கி
    மகிழ முடியுமா ஐயனே?
    காற்றிலுள்ள மணம்பிடித்து
    மாலைகட்டித் தலையில் சூட முடியுமா ஐயனே?
    பாலையின் கானல் நீரைக் குடத்திலேந்தி
    சுமந்து வந்து சமைத்துண்ண முடியுமா ஐயனே?
    உமது மேன்மையறிந்து நிறைமனதுடன் பரவசமாகி
    தன்னை மறந்த பரசிவயோகிக்கு
    மறுபிறவி மீண்டுமுண்டோ?
    பரமகுரு சாந்தமல்லிகார்ஜூனனே?”

    [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 95 (அரசியல்)

    சேக்கிழார் பாடல் நயம் – 95 (அரசியல்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    அரசியல்   நெறியின்    வந்த    அறநெறி    வழாமல்     புல்லி
    வரைநெடுந்   தோளால்   வென்று   மாற்றலர்  முனைக்கண்   மாற்றி
    உரைதிறம்       பாத நீதி      ஓங்குநீர்     மையினின்      மிக்கார்
    திரைசெய்நீர்ச்   சடையான்   அன்பர்   வேடமே  சிந்தை  செய்வார்

    பொருள்:

    அரசியல் நெறியிலே வந்த அற வழிகளில் வழுவாமற் பாதுகாத்து, மலைபோ லுயர்ந்த தமது தோள்வலிமையாற் பகைவர்களைப் போரில் வென்று மாற்றி, முன்னோர் மொழிந்தவற்றி னின்றும் சிறிதும் பிறழாது ஓங்குகின்ற நீதிநிலையிலே சிறந்தவராகியும், அலைபொருந்திய கங்கையைச் சடையிலே தரித்த இறைவனது அடியார் வேடத்தினையே சிந்தையுட் கொண்டவராகி  வாழ்ந்தார்.

    விளக்கம்:

    அரசியல் நெறியில் வந்த அறநெறி – அரசியல் செல்லும் வழியினைப்பற்றி அறநூல்களில் விதித்த ஒழுக்கம். இதுபற்றித் திருவள்ளுவர் திருக்குறளுட் கூறியனவும், பிறவும் இங்கு வைத்துக் காண்க.

    அரசியல் நெறியின் அறநெறியல்லாதனவும் வருவது உலகத்திற் காணப்படுதலின், அரசியல்நெறி யென்றதனோ டமையாது அதில் வந்த அறநெறி என்றார்.

    “கொடுங்கோன் மன்னர்வாழுநாட்டிற்,
    கடும்புலி வாழுங் காடு நன்றே“,

    “ஆறலைக்கும் வேடு அலன் வேந்தும்   அலன்“

    என்பன  போன்ற  நீதிநூல் உரைகள் காண்க.

    “அறம் பொருளின்பமான அறநெறி வழாமற் புல்லி“ என முன்பாடலில் கூறியதனையும் இங்கு வைத்துக் காண்க.

    கருணையே உருவமாகிய நமது அப்பர் பெருமானைச் சமண்சமயச் சார்பில் நின்றவனாகி, அலைத்துச், செயல் புரிந்த அரசனைப்

    “பெருகுசினக் கொடுங்கோலன்“  என்றும்  “பூபாலர் செயன்மேற்கொள் புலைத்தொழிலோன்“ என்றும்,  மூர்த்தி நாயனாரது திருப்பணிக்கு முட்டுப்பாடு செய்த வடுகக்கருநாட மன்னனைக் “கொடுங் கோன்மை செய்வான்“ என்றும்,

    அரசியல்  அறத்தில் நின்ற  அமைச்சர் பெருமானாகிய சேக்கிழார்   கூறியதும்   இங்கே  காணத்   தக்கவை.

    “மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்“

    என்றபடி, மேலல்லாராகியும் மேல்நாட்டார் என்ற பேரால் இந்நாளில் அறியப்பட்ட இத்தாலியர், உருசியர், சர்மானியர், ஸ்பெயினர் முதலிய பல நாட்டவரும் அரசியல்  என்ற பெயரால்   செய்யும் பற்பல கொடுங் கோன்மைக் கொலைச் செயல்களையும் இங்கு வைத்து உண்மை காணலாம்.

    அடுத்து, ‘வரை நெடுந் தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி’ என்ற தொடரை  மாற்றலர் முனைகள் வென்று மாற்றி என்று மாற்றிக்   கொள்க.

    இங்கே ‘’தோள்’’  என்பது , படை முதலிய அங்கங்களுக்கே யன்றித், தம் தோள் வலிமைக்கு குறியாய் நின்றது. அடுத்து வரைநெடுந்தோள் என்பது மலைபோலுயர்ந்து நீண்டதோள். மலைபோலிருத்தலாவது சலியா திருத்தலும், உயர்ந்து பெருமை கொண்டிருத்தலும் முதலியன. “தோள்வலி கூறுவோர்க்கே“ என்ற விடத்துச் சங்கோத்தர விருத்தியிலே நம்  மாதவச் சிவஞானசுவாமிகள் மிக விளக்கமாகக் கூறியதை  இங்கே எண்ணலாம்.

    அறநெறி வழாமற் புல்லி நின்ற இவ்வரசர்   ‘’மாற்றலர் முனைகள் வென்று மாற்றுதற்குக்‘’  காரணம் யாதெனின், தமது நாட்டினைக் கைப்பற்றுதற்கு அறநெறி தவறிப்பிற அரசர் படையெடுப்பின் தற்காத்துக் கொள்ளுதற் பொருட்டும்,  அவசியமாயின இடத்துப் பிற அரசரை அறநெறி நிறுத்துதற் பொருட்டும் போர் நிகழும்   ஆதலின் வென்று மாற்றுதல் வேண்டற் பாலதாயிற்றென்க. வென்று என்றதைத் தற்காப்பினும், மாற்றி என்றதைப் பிறரது அறம் பிறழ்தலை மாற்றுதலினும் என்று கொள்க.

    ‘’வென்று’’ என்பது, இவ்வரலாற்றில் வரும்  பின் நிகழ்ச்சியின் முற்குறிப்பாம்.

    அடுத்து, ‘’உரை திறம்பாத நீதி’’ என்ற தொடர், அரசியலறத்தினைப்பற்றி முன்னோர் உரைத்த உரைகளினின்றும் பிறழாதவகை செலுத்திய நீதி. இதுவும்  இவ்வரலாற்றின் முடிபினைப் பற்றிய முற்குறிப்பென்பதைக் காணலாம்  இதற்குச் சத்திய நெறியினின்றும் திறம்பாத எனவும், சொன்ன சொல்  தவறாத எனவும் பொருள் கொள்ளலாம்.

    ‘’திரை செய் நீர் – அலை பொருந்திய கங்கை.

    அன்பர் வேடமே சிந்தை செய்வர் – வேடமே – சிவனடியார்களது திருவேடத்தினையே கருதி வழிபட்டனர். குலம், குணம் முதலிய பிறிதொன்றினையும்  சிந்திக்காமல்  அடியார் சிவவேடமே  சிந்தித்தார் இதுவும்  இவர் வரலாற்று  நிகழ்ச்சிக்குக்  காரணமாகிய  முற்குறிப்பாம்.

    -வேடமொன்றினையே யன்றிப் பிறவற்றைச் சிந்தித்தல், இவர் மெய்யடியார், இவர் பொய்யடியார் – எனப் பலவகையாலும் வேறுபாடுபடுத்தும் நிலைவரு மாதலின் அது வாராமற் காக்கும் ஒழுக்கத்தில் நின்றமையானும், -இவ்வரலாற்றில்  இவர், பின்னர்த், தம்மை அடர்த்தானைப் பகைவன் என்று காணாதுஅவன் தாங்கிய  வேடத்தினையே மெய்ப்பொருளெனத் தொழுதன ராதலானும்,

    -அதுவே மெய்ப்பொருள் என்று கொண்டதே இவரது வாழ்க்கை  உண்மையாதலானும், வேடமே  என்று தேற்றம் பெறக்  கூறினார்.

    -மேலும் அரசாங்கத்திற்குரியதாய் விதித்த வேடந் தாங்கி வந்தோனை, அவ்வேடத்தினை நோக்கி இயல்பில் அவன்பால் அரசாங்கத்திற்குரிய வணக்கம் செலுத்துவோமே யன்றி, அவனது குணம் குலம் முதலியவற்றைக் கண்ட பின்னர் வணங்கும் வழக்கின்மைபோல, அடியவர் வேடமே சிந்தித்து வழி படுதற்குரியது என்ற கொள்கை  குறித்ததுமாம்.

    ‘’அரசியல் நெறியில் வந்த அறநெறி வழாமற் புல்லி’’ என்றதனாலும் இவர் சைவச் சார்புடையரேனும் தமது அரசின்கீழ் வாழும் எல்லா வகையி னரையும் கோட்டமின்றிக் காத்து வந்தார் என்க. “கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது“ என்பது அப்பர் பெருமான் தேவாரம்.

    நமது ஆங்கில அரசர் தாம் கிறித்துவமதச் சார்புடையரேனும் பிற எல்லாச் சமயங்களையும் காவல் புரிந்துவரும் அறநெறி முறையும் இங்கு வைத்துக் காண்க என்கிறார்.

    **(ஆனாலும்    இவ்வுரையாசிரியரே,தம் காலத்தில்   வ.உ.சிதம்பரனாருக்கு  ஆங்கில  அரசு புரிந்த  கொடுமையை எதிர்த்து  வழக்காடி வென்ற  வழக்கறிஞர்  என்பதையும்  நினைத்துப் பார்க்க வேண்டும்! வ.உ. சிதம்பரனார்  மேல்   பொய்வழக்கிட்டு அவரைச்  சிறையில் தள்ள முயன்றோரை எதிர்த்து வழக்காடி வெற்றி பெற்றவர், இந்நூலின் உரையாசிரியர் சிவத்திரு.சி.கே. சுப்பிரமணிய முதலியார் ஆவார்!  அதனை நன்றியோடு நினைந்த வ.உ. சிதம்பரனார்  தம்  மூன்றாம்  மகனுக்கு   சுப்பிரமணியம் என்றே  பெயரிட்டார்) **

    அடுத்து, ‘’மாற்றலர் முனைக்கண் மாற்றி’’ என்றதனாற் பகைவரால் வரும்பயத்தை வாராமற் காக்கும் அரசர் கடமை குறிக்கப்பெற்றது எனவும், அது புறக் காவலினையும். நீதி ஓங்கும் நீர்மை என்றது அகக் கரணத்தாற் செய்யும் உட்காவலினையுங் குறிக்கும் எனவும், வேடமே சிந்தை செய்வார் என்றது அவர் தம் உயிர்க்குச் செய்துகொண்ட காவலினைக் குறிப்பதென்றும் கூறுவாருமுளர்.

    Share