Pazhamozhi Naanooru

நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல் 38

எமரிது செய்க எமக்கென்று வேந்தன்
தமரைத் தலைவைத்த காலைத் – தமரவற்கு
வேலின்வா யாயினும் வீழார் மறுத்துரைப்பின்
‘ஆல்என்னிற் பூல்என்னு மாறு’.

‘ஆல் என்னிற் பூலென்னுமாறு’

என்னடா ஊர்லேந்து வந்ததுலேந்து நானும் பாக்கறேன் அது முன்ன உக்காந்து ஜபம் பண்ணிக்கிட்டே  இருக்கயே. என்ன ஆச்சு. வேலையில எதுவும் பிரச்சினையா. சம்பளம் எல்லாம் ஒழுங்காவருதில்ல. பாட்டி எல்லாம் சரியாப் போயிட்டிருக்கு. நான் லேப்டாப்ல வீடியோ கான்பிரன்சிங் அட்டெண்ட் பண்றேன். அப்புறமா பேசலாம். குரல் கொடுத்துவிட்டு மீண்டும் கலந்தாலோசிப்பில் மூழ்கினேன். எல்லாம் ஒரு வழியா முடிச்சாச்சு. நாளைக்கு ரிப்போர்ட் ரெடி பண்ணி அனுப்ப வேண்டியதுதான். அப்புறம் ஐயாக்கு ஜாலிதான். யோசித்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் பாட்டியின் குரல்.

டேய் சூடா கொழக்கட்ட பண்றேன். வந்து சாப்பிட்டு வேலயப் பாரு.

வந்ததே அதுக்காகத்தானே. சாப்பிடற வேலய ஒழுங்காப் பாக்கலாம். நாளையிலேந்து ரெண்டுநாள் பாட்டிக்கு என்னன்ன சமைக்கணும்னு சொல்லி செய்யவச்சு சாப்பிட்டுட்டுப் போகணும். தீர்மானித்தேன். எந்தப்பொருளும் அதுக்கேத்த இடத்துல இருந்தா ரொம்ப அழகா தெரியுமில்லயா. அதுமாதிரிதான் இந்த கிராமத்து சாப்பாடும். இத நகரத்து ஓட்டல்களில் உக்காந்து சாப்பிட்டா ருசிக்காது.

சரி சரி சாப்பிடும்போது ரொம்ப யோசிக்காத. இன்னும் ரெண்டு போட்டு சாப்பிடு.பாட்டி விரட்ட மனம் ஒருநிலைக்கு வந்தது.

ஆமா நீ இங்க என்னவேலையா வந்திருக்க. வெளிய எங்கேயாவது போகணுமா? பாட்டி கேட்கிறாள்.

உனக்கு நான் சொன்னாப் புரியுமான்னு தெரியல. இருந்தாலும் சொல்றேன். ஆரம்பித்தேன். எங்க கம்பெனியிலேந்து மூணு என்ஜினியர்கள் வந்திருக்கோம். நம்ம மேற்குத் தொடர்ச்சி மலைப் பக்கம் காற்றாடிகள் சுத்திக்கிட்டிருக்கு இல்லயா. அதோட பாகங்களத் தயாரிக்கறதுதான் எங்க கம்பெனி வேல. அதுல ஏதாவது புதுவித மாற்றம் செய்ய முடியுமானு ஆராய்ச்சி செய்யறதுக்காக எங்கள அனுப்பியிருக்காங்க. நாங்க ஒரு மாசம் தங்கி புது மாதிரி வடிவங்கள உருவாக்கி மத்ததோட ஒப்பிட்டுப் பாக்கணும். மொதல்ல கேக்க நல்லாத்தான் இருந்திச்சு. ஆனா செய்ய ஆரம்பிச்சவொடனே ரொம்ப சங்கடமா இருக்கும்னு தோணுது. ஒவ்வொரு முறையும் மாதிரி வடிவம் செஞ்சு எடுத்துக்கிட்டுவர சென்னைக்குத்தான் போயாகணும். அலைச்சல் அதிகமாகும். இங்க இருக்கற நேரமும் பொழுது போகறதுக்கு சினிமா தியேட்டர் கூட இல்ல. இதத்தான் மூணுபேரும் சேந்து பேசி முடிவெடுத்தோம்.

நாளைக்கு எங்க கம்பெனிக்கு ஒரு மெயில் அனுப்பிடுவோம். இடத்தைப் பார்வையிட்டோம். நாம செய்ய நினைத்த ஆராய்ச்சிக்கு இது ஏற்ற இடமில்லனு. அப்புறம் அவங்க வேற இடம் தேட ஆரம்பிப்பாங்க. அதுக்குள்ள புது கம்பெனியில வேலைக்குப் போட்டிருக்கேன். அதுலேந்து தகவல் வந்தா அதுல சேந்திடுவேன். அந்தவேலை ஒரு அறைக்குள்ள உக்காந்து கம்ப்யூட்டர் உபயோகிச்சு செய்ய வேண்டிய வேலை. அலைச்சல் இல்லபாரு.

நான் பேசப்பேச பாட்டிக்குக் கோபம் தலைக்கேறியது. இதத்தான் எங்க ஊர்ல ‘ஆல்’ என்று சொல்லப் ‘பூல்’ என்று மறுத்துச் சொல்றதுனு சொல்லுவாங்க.  இதோட பொருள் நம்பி அரசன் ஒரு வேலையை ஒப்படைச்ச பின்னாடி வேல் முனையில வீழ்ந்தாவது அதனை நிறைவேற்றணும். அதை விட்டுட்டு செய்யமாட்டேன்னு மறுத்துக் காரணம் சொல்றது ‘ஆல்’ என்று சொல்லப் ‘பூல்’ என்று மறுத்துச் சொல்றதுக்குச் சமானமாம்.

இவ்வளவு படிச்ச பசங்க நீங்க. இப்டி பண்ணலாமா. தப்பில்லயா. கேட்டுக்கொண்டே பாட்டி வேலையைத் தொடர்கிறாள். நான் யோசிக்க ஆரம்பிக்கின்றேன்.

பாடல் 38

விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும்
வருந்தும் பசிகளையார் வம்பர்க்(கு) உதவல்,
இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! ‘ஆற்றக்
கரும்பனை அன்ன துடைத்து’.

‘ஆற்றக் கரும்பனை அன்னது உடைத்து’

வாங்க வாங்க உக்காருங்க. என்ன சாப்பிடறீங்க காபி, டீ.

யாரை இப்படி மரியாதையாக உபசரிக்கிறாள் அம்மா. உள்ளறையில் கதை எழுதிக்கொண்டிருந்த நான் எழுந்து வெளியில் வந்தேன். ஐம்பது வயது மதிக்கத்தக்க நபரும் அவருடன் கல்லூரி மாணவன் போன்று விளங்கும் பையனும் சோபாவில் அமர்ந்திருந்தார்கள்.

மரியாதைக்கு வணக்கம் சொல்லிவிட்டு மேல் பனியனுடன் அமர்ந்தால் நாகரிகம் அல்ல என நினைத்து சட்டை போட்டுக்கொள்ள உள்ளறைக்குச் சென்றேன்.

சமையலறையில் அம்மா அக்காவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

உங்க தோப்புக்கார சித்தப்பா இந்தப் பையனத்தான் படிக்க வைக்கிறாராமா. ஏதோ என்ஜினியரிங் படிக்கிறான் போல. அநாதைப் பையனாம். கூட வந்திருக்கிறவர் அவன் கல்லூரிப் பேராசிரியராம்.

உங்க சித்தப்பா நம்ம அப்பாவப் பத்தி ரொம்ப பெருமையா சொல்லியிருப்பார்போல. அதனால மரியாதைக்கு இந்தப் பையனும் அவன் பேராசிரியரும் நம்மளப் பாத்து நன்றி சொல்லிட்டுப் போலாம்னு வந்திருக்காங்க. அந்தப் பையனுக்கு உங்க அப்பா போட்டோ ஒண்ணு வேணுமாம். ஏதும் இருந்தாப் பாரேன்.

தம்பிகிட்ட இருக்கு. நான் எடுத்துக்கிட்டு வரேன். அடுத்த அறையான என் அறைக்குள்

நுழைந்த அக்காவைத் தடுத்து நிறுத்தினேன். தீர்மானத்துக்கு வந்தவனாய் போட்ட சட்டையைக் கழட்டிவிட்டு மீண்டும் கதை எழுதுவதைத் தொடர்ந்தேன்.

ஒருவழியாக அவர்கள் இருவரையும் பேசி அனுப்பிய அம்மா ஏண்டா என்ன ஆச்சு உனக்கு மட்டு மரியாத கிடையாதா. நீ பாட்டுக்கு உள்ளுக்குள்ளயே உக்காந்துட்ட. அவங்க என்ன நினைச்சுப்பாங்க…..தொடர்ந்து புலம்பிக்கொண்டே சமையலறை நோக்கிச் சென்றாள்.

என் மனம் யோசிக்க ஆரம்பித்தது. அப்பா இறந்து எட்டு வருடம் ஆகி விட்டது.  தன்னய அப்பா சொந்தப் பையன் போல வளர்த்து படிக்க வச்சதா சித்தப்பா சொல்லிட்டுத் திரியுவாரு. நல்லா படிச்சு நல்ல வேலையில டில்லியில் இருக்கார். போதாததுக்கு தான் சேத்துவச்சதுல ஒரு பனந்தோப்பு வேற வாங்கிப் போட்டிருக்கார். எதுக்குமே அவர்கிட்ட பண உதவி எதிர்பாக்காமதான் அம்மா எங்க ரெண்டு பேரையும் படிக்க வச்சாங்க. ஆனா ஒரு புத்தகக்கடை வைக்கணும்னு நான் பண உதவி கேட்டப்போ நீயே சம்பாதிச்சு வச்சுக்கோனு சொல்லிட்டார். இப்ப என்னடான்னா யாரோ ஒரு பையனுக்கு உதவி செய்யறாராம்.

ஆற்றக்கரும்பனை அன்னது உடைத்துங்கற பழமொழி சரியாத்தான் இருக்கு. தன்னய வளத்தவனுக்கு பலன் கொடுக்காம நீண்டகாலத்துக்கப்புறம் யாரோ புதியவனுக்கு பலன்குடுக்கற பனை மரம் மாதிரிதான் இந்த சித்தப்பாமாதிரி ஆளுங்க. இவங்களப்பத்தி நினைக்கறதே நேரவிரயம் தான்.

அம்மாவும் அக்காவும் பேசுவதைப் பொருட்படுத்தாமல் என் கதையில் மூழ்கினேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.