வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-39

0

தி. இரா. மீனா

ஹெண்டத மாரய்யா

கள் விற்கும் தொழிலைச் செய்து வந்த இவர் சரணராக மாறியவர். ’தர்மேஸ்வரலிங்கா’ இவரது முத்திரையாகும்.

“மண்ணெனும் குடத்தின்  நடுவே
பொன்னெனும் கள் உற்பத்தியானது
பெண்ணெனும் வட்டிலில் பருக போதை தலைக்கேறியது.
இந்த போதையில் மூழ்கியவர்களை
எப்படி மிக உயர்ந்தவர்களென்பது?
பக்தி பற்றற்றவன் என்பது இப்பக்கமே எஞ்சியது
தர்மேஸ்வரலிங்கத்தை எட்டவில்லை“

ஹொடே ஹூல்ல பங்கண்ணா

புல் விற்கும் காயகம் இவரது.’ கும்பேஸ்வரலிங்க ’இவரது முத்திரையாகும்.

1. “கட்டையை நெருப்பில் வைக்க
’நான் இருக்கிறேன், வேண்டாமென’
உள்ளிருந்த நெருப்பு உரைத்ததோ?
தான் உள்ளிருந்து உணவானது புறமிருந்த கட்டைக்கு
இங்ஙனம், பிறருக்குத் தன்னுள் இடந்தராதவனுக்குப் பதிலில்லை
கும்பேஸ்வர இலிங்கத்துள்ளிருக்கும்
ஜெகந்நாதவனை அறிந்தவருக்கு“

2. “கூலி வேலை செய்தும் விவசாயம் செய்தும்
தூய மனத்துடன் குரு, இலிங்கம் ஜங்கமனுக்குக்
காயகம் ஆற்றுவோனின் நிலை எப்படிப்பட்டதெனில்;
தானாற்றும் செயலைப் பிறரிடம் செய்ய வைக்கமாட்டான்,
தான் பெற்றது பிரசாதம், பிறர் பெற்றது
உணவெனச் சொல்ல மாட்டான்.
எஞ்சிய உணவுக்கும் பிரசாதத்துக்கும்
வேற்றுமை பார்க்க மாட்டான்; இரண்டும் சமமென்பான்.
இத்தகைய பிரசாதி கொடுக்கும் பிரசாதம் தூய்மையானது.
அது இலிங்கமெனும் உடலில் நிலைத்த பிரசாதம்
இங்ஙனம் வேற்றுமை காட்டாத அருவத்தின் பிரசாதியை
கும்பேஸ்வர இலிங்கத்திலுள்ள ஜெகந்நாதன் சாட்சியாக
நமோ நமோ என்பேன்!“

ஹேமகல்ல ஹம்ப்பா

’ பரமகுரு படுவிடு சித்தமல்லி நாத பிரபுவே ’ இவரது முத்திரையாகும்.

1. “உணவின் தேவையில்லாதவனுக்கு
உழவின் தொடர்புண்டோ?
வானில் பறப்பவனுக்கு
பூமியில் நடமாடும் ஆசையேன்?
வைரக் கவசமணிந்தவனுக்கு
அம்பின் பயமுண்டோ ஐயனே?
மாயமற்றவனுக்கு மாயையின் தயவேன்?
பரமகுரு படுவிடி சித்தமல்லிநாதனுள் இணைந்தவனுக்கு
பிறதெய்வங்களின் தயவேன்? “

2. “நடக்க முடியாதவனுக்கு அழகிய மனைவி வாய்த்தால்
அவர்தம் இல்லறம் நடப்பதெங்ஙனம் ஐயனே?
பேச்சு வராதவருக்கு அரசுப் பட்டம் கிடைத்தால்
குடிமக்கள் பரிவாரம் அரசு நடத்த முடியுமா ஐயனே?
அஞ்ஞான குணத்தின் மாயாவி போகும் வரையில்
மெய்ஞ்ஞான சம்சாரமுண்டோ ஐயனே?
சம்சாரகுணம் உள்ளவரையில் பரமாத்மாவின் எண்ணமிகுமோ
சம்சார மாயை உயிராயிருப்பவருக்கு
தூய சம்சாரமுண்டோ ஐயனே?
பரமகுரு படுவிடி சித்தமல்லிநாதப் பிரபுவே ”

3. “படகு பாய்மரம் நம்பியோர்
கடல் ஆறு தாண்டமாட்டார்களா ஐயனே?
வில் வாளேந்தி போர்க்களம் புகுந்தோர்
போரினை வெல்ல மாட்டார்களா ஐயனே?
குருவை நம்பியோர் பிறப்பை வெல்லமாட்டார்களா ஐயனே?
பரமகுரு படுவிடி சித்தமல்லிநாதப் பிரபுவே.”

கரஸ்தல மல்லிகார்ஜூனதேவா

’பரமகுரு சாந்தமல்லிகார்ஜூனா ’இவரது முத்திரையாகும்.

1. “அகத்தில் தெளிவில்லாதவனுக்கு
புறத்தில் செயலிருந்து பயனென்ன?
பார்வையற்றவனின் வாழ்வு போலாம் அது.
புறத்தில் செயலின்றி அகத்தில் தெளிவிருந்து என்ன பயன்?
அது சூன்யத்தின் தீபம் போலாம்
அகத்தின் தெளிவு, புறத்தின் செயல்
இவ்விரண்டும் இணையவேண்டும்.
அது எங்ஙனமெனில் அகத்தில் தெளிவு புறத்தில் செயலுள்ளவனே
பக்தனாம் மகேஸ்வரனாம் பிரசாதியாம்
பிராணலிங்கியாம் ஐக்கியமான அடியவனாம்
நம் பரமகுரு சாந்த மல்லிகார்ஜூனன் தானாம்.”

2. “கடலிலுள்ள ஆலங்கட்டியைச் செதுக்கி
தூணாக்கி வீடு கட்டிக் கொண்டு
குடித்தனம் செய்ய முடியுமா ஐயனே?
நெருப்பினுள்ளிருக்கும் கற்பூரத்தின் குடுவையுள்
நறுமணம் நிரப்பி பசையாக்கி
மகிழ முடியுமா ஐயனே?
காற்றிலுள்ள மணம்பிடித்து
மாலைகட்டித் தலையில் சூட முடியுமா ஐயனே?
பாலையின் கானல் நீரைக் குடத்திலேந்தி
சுமந்து வந்து சமைத்துண்ண முடியுமா ஐயனே?
உமது மேன்மையறிந்து நிறைமனதுடன் பரவசமாகி
தன்னை மறந்த பரசிவயோகிக்கு
மறுபிறவி மீண்டுமுண்டோ?
பரமகுரு சாந்தமல்லிகார்ஜூனனே?”

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.