வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-41

0

தி. இரா. மீனா

இங்கு இடம் பெறும் வசனக்காரர்களின் பெயர், வாழ்க்கை குறித்த விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. வசனங்களில் இடம் பெற்றிருக்கும் முத்திரை கொண்டு இவர்கள் அடையாளம் காணப் பெறுகின்றனர்.

ஆனந்த சித்தேஸ்வரா

“மென்மை கடினம் வெப்பம் குளிர்ச்சி அறியும் வரை
அர்ப்பணிப்பை மீறக்கூடாது
அங்கத்திடம் ஒன்றினால் இலிங்கமறிய முடியாது
அழிவற்ற சரணருக்குக் கூழாயினும் பரவாயில்லை
அமுதமானாலும் பரவாயில்லை
ஓடும் பரவாயில்லை செம்பும் பரவாயில்லை,
படுக்கையும் பரவாயில்லை கிழிந்த பாயும் பரவாயில்லை
அரம்பையும் சரி, சாதாரணமானவளும் சரி,
அரசனும் பரவாயில்லை சேவகனும் பரவாயில்லை
ஊரும் சரியே காடும் சரியே
போற்றுதலும் தூற்றுதலும் நன்றே.
இத்துணையும் மீறிய பெரிய மனிதர் செயலை
உலகத்தவர் எங்ஙனம் அறிவர் ஐயனே
ஆனந்த சித்தேஸ்வரனே.”

ஈஸ்வரி வரத சென்னராமா

“பொன் குவியல் ஆயிரம் பெண்கள் பெரிய நாடெனினும்
இவ்வுடல் அழிவது உறுதி ஆசையைத் துறந்து
ஈஸ்வரீய வரத சென்னராமனெனும் இலிங்கத்தில் ஆசை
வைத்தால் எதிர்காலம் நன்றாம் காணீர் அண்ணன்மாரே“

ஏகாந்தவீர சொட்டாளா

“வந்த வழியில் மீண்டும் போகாதவன் இலிங்க ஐக்கியன்
முன்னும் பின்னும் மறந்து ஐயமற்றவன் இலிங்க ஐக்கியன்
குரு ஏகாந்தவீர  சொட்டாளனுள்
தன்னைத் தான் மறந்தவன் இலிங்கமுடன் இணைந்தவன்.”

ஏகோ ராமேஸ்வரலிங்கா

“தான் இன்புற்றால் தன் இலிங்கம் மெச்ச நடப்பது
தான் இன்புற்றால் தன் இலிங்கம் மெச்சப் பேசுவது
நிந்திக்க வேண்டாம் ,பிறரை நிந்திக்க வேண்டாம்
யாருக்கு ஆனாலென்ன? ஆகாவிட்டாலென்ன?
தான் இன்புற்றால் போதும்.
ஏகோராமேஸ்வர இலிங்கத்தின் உண்மையறிந்தால்
முற்றி வளர்ந்த நெற்கதிர் போல் இருக்க வேண்டும் சரணன்”

குருவரத விருபாக்ஷா 

“செல்வமெனில் அனைவரும் வருவர்,
நெருப்பெனில் யாரும் நிற்க மாட்டார் ஐயனே.
உலகு எரிகிறது விஷ நெருப்பினால்.
உருண்டோடுகிறது எண்டிசையும் சுரரின் கூட்டம்
ஹரிபிரம்மன் திருமகள் கலைமகள் கரம்பிடித்து
மருள் கொண்டனர் உமது உண்மையறியாமல்
திருஇருந்தது பக்தருக்கு ,நெருப்பை நீ தரித்துள்ளாய்
நிகர் யாருமிலர் உனக்கு குருவரத  விருபாக்ஷனே.”

ஜங்கமலிங்கப் பிரபு

“உலகிலிருக்கிற கல்லெல்லாம் இலிங்கமெனில் குருவின் தயவேன்
நதியின் நீரெல்லாம் புனிதமெனில் இலிங்கத்தின் தயவேன்
விளைந்த பயிரனைத்தும் பிரசாதமெனில் ஜங்கமனின் தயவேன்
என்பதால் மூவகையின் தயவும் அழிந்தது
காணாய் ஜங்கமலிங்கப் பிரபுவே.”

திரைலோச்சன மனோஹர மாணிகேஸ்வரலிங்கா

“உடல்கள் அழியும் முன்னர் அரவணைத்து
பார்வை மழுங்கும் முன்னர் பார்த்து
மதி மயங்கும் முன்னர் இலிங்கம் இலிங்கமென்பீர்
செல்வம் தொலைந்து போகும் முன்னர்
ஜங்கமருக்கு வழங்கி
திரைலோச்சன மனோஹர மாணிகேஸ்வரனே
நட்பு வைப்பின் மீண்டும் வாராதோ?”

நஞ்சுண்ட சிவா

வேதம் சரித்திரம் சிற்றறிவு வாதம் தந்திரம் இதிகாசம்
நால்வகைப் புராணம் முன்னோர் வசனம் கற்றென்ன?
குருவிடம் நம்பிக்கையில்லை இலிங்கத்தில் ஒழுக்கமில்லை
ஜங்கமனிடம் கவனமில்லை பிரசாதத்தில் முழுமையில்லை
பாதோகத்தில் பரமசுகமில்லை
இந்த ஐவகை ஒழுக்கங்களிலிருந்து தானழிந்து
வேற்றுமையறியாமல் நான் பக்தன், விரக்தியுடையோனெனில்
சிரிக்க மாட்டார்களா உனதடியார்
பரமகுருவே நஞ்சுண்ட சிவனே“

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.