கடந்த வருடத்தில் நனைந்த பொழுதுகள்

சக்தி சக்திதாசன்
ஓடியே போய் விட்டது 2023. எம் கைகளில் 2024 எனும் குழந்தையைத் திணித்து விட்டுத் தான் போய்.சரித்திரப் புத்தகத்தினுள் புதைந்து விட்டது.
நடந்து முடிந்த விடயங்கள் நடந்தவையேதான். அவற்றைத் திருப்பிப் புரட்டிப் பார்க்கலாமே தவிர மாற்றியமைக்க முடியாது.
” நடந்ததை எண்ணிக் கவலைப்பட்டால் அவன் மூடன் ” எனும் வரிகள் கவியரசரின் பாடல் ஒன்றிலே வரும்.
பின்
ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும் ?
ஒவ்
வொரு திருப்பத்திலும் ஒரு பாடல் எமக்கு போதிக்கப்படுகிறது.
சிலவற்றில் இன்பத்தை நுகர்கிறோம் சிலவற்றில் துன்பத்தில் துடிக்கிறோம்
அவையிரண்டும் எமக்கு அனுபவப் பாடங்களே !
அப்பாடங்களின் மூலம் நாம் கற்றுக் கொண்டது என்ன ?
அதுவே இந்தத் திரும்பிப் பார்த்தலின் நோக்கமாகிறது.
2023 ம் ஆண்டு பிறக்கும்போதும் நான் சென்னையிலே தான் அதன் பிறப்பினைத் தரிசித்தேன்.
2023 சர்வதேசரீதியில் பல நிகழ்வுகளைத் தோற்றுவித்திருக்கிறது.
2023 இல் இடம்பெற்ற நிகழ்வுகளின் தாக்கம் என் பிரத்தியேக வாழ்க்கை , என்னைத் தனது தத்துப்பிள்ளையாக ஏற்றுக்கொண்ட ஐக்கிய இராச்சியம், நான் தமிழ்த்தாகம் தீர்க்கவும், ஆன்மீக விளக்கங்களுக்காகவும் தேடியோடும் இந்தியா , என் தாய்மண்ணான இலங்கை எனும் வகையில் எவற்றை ஏற்படுத்தியுள்ளது என்று பார்த்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலே இது.
குழந்தைப் பருவம், வாலிபம், நடுத்தர வயது எனும் பருவங்களைக் கடந்து இன்று முதுமையின் வாசலினுள் நுழைந்த எனக்கு 2023 போதித்தது என்ன ?
அறுபத்தியேழு எனும் இந்த அகவையில் நான் கற்றுக் கொண்டவைகள் இருபதில் தெரிந்திருந்தால் ?
இன்றிருக்கும் எழுத்தாளன் சக்தி சக்திதாசன் என்பவன் இருந்திருப்பானா என்பது சந்தேகமே !
என் வாழ்க்கைப் பாதையின் வளைவுகளும், நெளிவுகளும் எனக்குக் கற்றுக் கொடுத்தவைகளை எதற்காகவும் இழக்கத் தயாராக இல்லை.
2023ம் ஆரம்பத்தை தமிழகத்தில் சந்தித்த வேளையில் என்னை நான் அறிந்து கொள்ளும் பயணத்தில் என்னைத் தொலைத்தேன்.
நாம் வாழ்வில் சந்திக்கும் யாவருமே எமக்கு எதையோ கற்றுக் கொடுத்து விட்டுத்தான் செல்கிறார்கள்.
அக்கற்பித்தல்களுள் புதைந்திருக்கும் நேர்மறையான புரிதல்களை இனங் கண்டு கொள்வதே எமது சவாலாகிறது.
தமிழகத்தின் ஆன்மீக வாசல்கள் என்னைத் தியானம் எனும் தீயில் புடம் போடும் வகைக்கு இட்டுச் சென்றது.
என்னை நானே அறிந்து கொள்ளும் பயணத்தில் ஒரு புதுப் பரிணாமத்துக்குள் புகுவித்தது.
இந்தப் புதுப்புரிதல்களின் அடிப்படையில் எனக்குள் நான் என்னைத் தேடும் படலத்தின் அடுத்தபடியே 2023 எனக்குத் தந்த மாற்றம்.
இங்கிலாந்து எனும் எனது வளர்ப்பு அன்னை பூமியில் 2013 விளவித்த மாற்றங்கள் பல.
19 வயது வாலிபனாக இங்கிலாந்து நாட்டிற்குள் காலடி வைத்தபோது அந்நாட்டின் முடியாட்சியை அலங்கரித்த இரண்டாம் எலிசபேத் மகாராணியை இழந்து ஒரு வருடப் பூர்த்தியைக் கண்டது 2023.
மகாராணியை இழந்த இங்கிலாந்தின் மன்னராக உத்தியோகபூர்வமாக முடிசூடிக் கொண்டார் மன்னர் மூன்றாவது சார்ள்ஸ்.
ஒரு நாட்டின் ராஜ வைபவமான முடிசூட்டுவிழாவை வாழ்வில் கண்டுகளிக்கும் சந்தர்ப்பத்தை அளித்தது 2023.
பொருளாதரப் பிரச்சனை இங்கிலாந்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாரிய தாக்கத்தைக் கொடுத்தது.
ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது ஆசியப் பின்னனியைக் கொண்ட பிரதமர் ரிஷி சுனாக் அவர்களின் தலைமைக்குச் சவாலாக பல பிரச்சனைகள் உருவெடுத்தன.
பொருளாதரா சிக்கல்களினால் ஊதியத்தில் முன்னேற்றம் காணாத தேசிய சுகாதாரத்துறை ஊழியர்கள் டாக்டர்கள் அடங்கலாக வேலை நிறுத்தங்களில் குதித்தனர்.
தொடரும் யூக்கிரேன், ரஷ்ய யுத்தத்தில் யூக்கிரேனுக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்த பிரித்தானியாவை இஸ்ரேல், பாலஸ்தீனிய யுத்தம் மேலும் சிக்கலுக்குள் தள்ளியது.
பாலஸ்தீனிய தீவிரவாதிகள் இஸ்ரேலிய பொதுமக்கள் மீது அக்டோபர் 7 ம் தேதி மேற்கொண்ட மிலேச்சத்தமமான தாக்குதலின் பிரபலிப்பாக இஸ்ரேல் தொடங்கிய காஸா மீதான தாக்குதலின் நியாயத்தை ஏற்றுக்கொண்டாலும் உயிர்ச்சேதங்களின் அளவினைக் கண்டிக்க வேண்டிய தேவை இங்கிலாந்துப் பிரதமரை சங்கடமான நிலையில் தள்ளியுள்ளது.
இங்கிலாந்து.பொதுமக்கள் மத்தியில் இஸ்ரேல் மீதான விமர்சனங்களைச் சமாளிக்க வேண்டிய தேவையும் இங்கிலாந்துப் பிரதமருக்கு உண்டு.
பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாய் வழியாக சட்டத்துக்குப் புறம்பாக அகதிகள் என்று கூறிக்கொண்டு உள்நுழையும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இப்பிரச்சனையை வெள்நாட்டிலிருந்து குடியேறிய சந்ததி வழியான பிரித்தானிய பிரதமர் எவ்வாறு கையாள்கிறார் என்பது அவருக்கு மட்டுமல்ல அவரது கட்சியின் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் வல்லமை படைத்தது.
பிறக்கும் இந்த்ஜ 2024 இங்கிலாந்து நாட்டின் தேர்தல் ஆண்டாகும் என்பது அனைத்து அரசியல் அவதானிகளினதும் கருத்தாகும்.
வாழ்வாதாரம், வெளிநாட்டவரின் குடியேற்றம், சர்வதேச அரசியல் நிலவரம் என இவையனைத்தையும் இங்கிலாந்துப் பிரதமர் எவ்வகையில் கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமையும்.
பொதுவாகவே 2024ம் ஆண்டில் இங்கிலாந்து அரசுக் கட்டிலில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சி பலமான தோல்விக்கு உள்ளாகும் என்றே பலரது கருத்தும் இருக்கிறது.
அடுத்து இந்தியாவுக்கும் 2024 ம் ஆண்டு அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு யார் இந்தொயாவின் பொருளாதார உயர்ச்சியை சரியான திசையில் எடுத்துச் செல்லப்போகிறார்கள் என்பதை நிர்ணயிக்கப் போகிறது.
2015ம் ஆண்டினைப் போலவே 2023ம் ஆண்டும் தமிழகத்தைத் தண்ணீரில் தத்தளிக்க வைத்தது.
2015ல் கற்றுக்கொண்ட பாடம் 2023ல் உபயோகமாகிற்றா என்பது கேள்விக்குறியே !
2023ல் இலங்கையில் நான் பயின்ற பாடசாலையான யாழ் பரியோவான் கல்லூரி தனது 200வது பிறந்தநாளைக் கொண்டாடியது.
இவ்விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த ஆயிரக்கணக்கான பழைய மாணவர்களுள் நானும் ஒருவனாக இருந்தேன் என்பது எனது உள்ளத்தைத் தாலாட்டுகிறது.
இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமலே மீண்டும் கிடப்பில் போடப்பட்டதைப் போல ஒரு உணர்வு.
இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்குவது ஒரு பாரிய அரசியல் பிரச்சனை என்பதையும் இதைத் தீர்க்க வேண்டிய கடப்பாடு தமக்கு உள்ளது என்பதை சர்வதேச நாடுகள் கவனத்தில் கொண்டுள்ளனவா ? எனும் கேள்வி பூதாகரமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.
ஆக மொத்தம் ஈழத் தமிழர்கள் பிரச்சனை ஒரு விடையில்லா வினாவாகத்தான் 2024க்குள் பிரவேசிக்கிறது என்பதே உண்மை.
அடுத்து சர்வதேச கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளான அமேரிக்கா , இந்தியா, ரஷ்யா , சீனா எடுக்கப்போகும் சர்வதேச அரசியல் நகர்வுகளை எதிர்நோக்கியபடி ஒரு அச்சம் கலந்த உணர்வுடன் உலக மக்கள் இந்தப் புதுவருடத்தினுள் நுழைகின்றனரோ எனும் சந்தேகம் எழுகிறது.
பொதுவாகவே ஒரு நாடகம் பார்ப்பது போன்றே இனிவரும் வருட நிகழ்வுகளை எதிர்கொள்வதே இன்றைய தேவை.
இனம், மதம், நாடு, மொழி எனும் பாகுபாடுகளைக் கடந்த ஆன்மா எனும் நிலைப்பாட்டில் கிடைக்கும் ஆன்மீகப் புரிதல்களின் அவசியத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.
வருட முடிவு, வருட ஆரம்பம் என்பன சாதாரண நிகழ்வுகளே !
வருட முடிவோ அன்றி வருட ஆரம்பமோ எமது வாழ்வின் போக்குகளை மாற்றப் போவதில்லை.
வருடமொன்றின் முடிவிலும், அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலும் எமது எண்ணங்ளைக் கட்டுப்படுத்தி நேர்மறையான இலக்குகளை நோக்கிச் செலுத்தக்கூடிய ஆற்றலை வளர்த்துக் கொள்ளக்கூடிய மனோதைரியத்தைக் கொண்டிருக்கிறோமா என்பதுவே முக்கியம்.
கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளில் நனைவது தவறல்ல.
வெறுமையாக நனைந்ததைத் தவறுதலாக மூழ்கி விட்டோம் என்றெண்ணி அதனுள் அமிழ்ந்து போவதே தவறாகும்.
அனைவருக்கும் எனது அன்பான புத்தாண்டு வாழ்த்துகள்.