குறளின் கதிர்களாய்…(480)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(480)
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.
–திருக்குறள் –61(புதல்வரைப் பெறுதல்)
புதுக் கவிதையில்…
புவன வாழ்வில்
பெறத்தகுந்த பேறுகளில்
அறியவேண்டியவற்றை அறியும்
அறிவு படைத்த
நன்மக்களாம் செல்வத்தைப்
பெறுவதைத் தவிர
மற்றவற்றை ஒருவன்
பெறத்தக்க பேறுகளாய் யாம்
மதிப்பதில்லை…!
குறும்பாவில்…
பெறத்தகுந்த பேறுகளில் அறிவுடை
நன்மக்களைப் பெறுவதைத் தவிர மற்றவற்றைப்
நல்ல பேறுகளாய் மதிப்பதில்லை…!
மரபுக் கவிதையில்…
பெற்றிடும் பேறுகள் பலவற்றுள்
பெருமையும் சிறப்பதும் கொண்டதுதான்
வற்றிடா அறிவினைக் கொண்டவராய்
வளர்ந்திடும் செல்வமாம் நன்மக்கள்
பெற்றதால் வந்திடும் பெருமையதே
பேணியே காத்திடும் அருமையிதே,
மற்றவை அனைத்துமே பேறென்ற
மதிப்பினை யுடையவை யல்லவாமே…!
லிமரைக்கூ…
பேறுகளில் மிகச்சிறந்த பேறு
அறிவுடை நன்மக்களைப் பெறுதலே, இதைவிடச்
சிறந்ததாய் இல்லை வேறு…!
கிராமிய பாணியில்…
செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
ஒலக வாழ்க்கயில பெருஞ்செல்வம்,
நல்ல அறிவுள்ள புள்ளயள
பெத்தெடுக்கிறதே பெருஞ்செல்வம்..
மனுச வாழ்கயில கெடைக்கிற
பேறுலயெல்லாம் பெரும்பேறு
அறியவேண்டியத அறியிற
அறிவு உள்ள நல்ல
புள்ளயள பெத்தெடுக்கிறதுதான்,
அதவிட ஒசத்தியா மதிப்புள்ள
பேறெதுவுமே இல்ல..
அதால
செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
ஒலக வாழ்க்கயில பெருஞ்செல்வம்,
நல்ல அறிவுள்ள புள்ளயள
பெத்தெடுக்கிறதே பெருஞ்செல்வம்…!