புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

அலங்காரத்திற்காக அல்ல அடைச்சொற்கள்!

முன்னுரை

ஒவ்வொரு குறட்பாவையும் எழுத்து, அசை, சீர், அடி என ஆழ்ந்து நோக்கி உரையெழுதுவது பரிமேலழகருக்கு இயல்பு. குறட்பாவின் கிடக்கை நிலைக்கேற்ப ஆற்றொழுக்காக நிரல்பட உரைகாண்பது அவர்க்கு இயல்பன்று. குறட்பாவை முற்றாக நோக்கி, முன்பின்னாக உள்ள அதிகாரக் கருத்துக்களைக் கருத்திற்கொண்டு, மனத்துட் பதிவு செய்திருக்கும் நூற்கருத்துக்கள் முழுவதையும் ஒவ்வொரு முறையும் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தி உரையெழுதுவதே அவர் கையாண்ட உரைநெறி. தனக்குத்தானே முரண்படும் ஓரிடம் கூட அவர் உரையில் இல்லாமல் போனதற்குக் காரணம் இதுதான். அந்த வகையில் உவமத்திற்கு வந்த அடைச்சொற்களைப் பொருளுக்கும் பொருளுக்கு வந்த அடைச்சொற்களை உவமத்திற்கும் பொருத்திக்காட்டும் வியத்தகு ஆற்றலை வெளிப்படுத்தும் திருக்குறள் ஒன்று இக்கட்டுரையில் திறனறியும் குறட்பாவாக இடம்பெறுகிறது. குறட்பாவின் கருத்து முழுமையாகப் புரிந்து கொள்ளப்படல் வேண்டும் என்னும் பரிமேலழகரின் பேரார்வமே இவ்வாறு பொருத்தி உரைகாண்பதற்கான அடிப்படைக் காரணமாகும்.

முற்றும் நோக்கல் என்றால் என்ன?

‘உற்று நோக்கல்’ தெரியும் ‘முற்று நோக்கல்’ தெரியுமா? உற்று நோக்கினாலே அது முற்று நோக்கலில் முடியும்.  சான்றாகப்,

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்” (10)

என்பது கடவுள் வாழ்த்தாகிய தலையதிகாரத்தின் இறுதிக் குறட்பா. இந்தக் குறட்பாவை மேம்போக்காக நோக்கி உரைகண்டால் ‘இறைவன் திருவடியைச் சேராதவர் பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க மாட்டார்’ என்று மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அது பாட்டின் மையக்கருத்தாக இருக்கலாம்., அப்பாட்டின் முழுமையான கருத்தாகக் கொள்ள முடியாது. காரணம் என்ன? மையக்கருத்து முழமையான கருத்தாகாதா? ஆகாது! எப்படி? பாட்டில் ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்’ என்று செயப்படுபொருளும் வினைமுற்றும் இருக்கின்றனவே தவிர, ‘யார்?’ என்னும் எழுவாய் இருக்கிறதா? இல்லையே!. அடுத்த நிலையில் ‘இறைவனடி சேராதார் நீந்தார்’ என்று எழுவாயும் வினைமுற்றும் இருக்கின்றனவே தவிர எதனை நீந்தார் என்னும் செயப்படுபொருள் இருக்கிறதா? இல்லையே! எனவே எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் இருந்து பொருளுணர்த்த வேண்டிய நிலையில் உள்ள இரண்டு தொடர்களுமே குறட்பாவின் கட்டமைப்பில் குறையுடையனவே!. ‘குறள் வெண்பா’ என்னும் குறுகிய யாப்பே இதற்குக் காரணம். செறிவை முன்னிறுத்திச் செய்யுள் செய்கிறபோது இது தவிர்க்க இயலாதது. உண்மையில் இது ஓர் உத்தியெனினும் அதனைக் கண்டறிந்து எல்லாருக்கும் புரியும் வகையில் வெளிக்கொணர வேண்டியது உரையாசிரியர் கடமை. அந்தக் கடமையைப் பரிமேலழகர் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

‘இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவியாகிய பெரிய கடலை நீந்துவர்; அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர்’

என்னும் இப்பாட்டிற்கான பொழிப்பில் பரிமேலழகர் உரையின் உச்சம் தொடுவதைக் காணலாம். குறட்கருக்கத்தை விட இவரின் உரைச்சுருக்கம் நுட்பமானது. ஆனால் குறளில் பெறமுடியாத விளக்கத்தையும் தெளிவையும் இவர் உரையில் காண முடிகிறது. குறட்பாவையும் அதன் பொருளையும் நன்கு உள்வாங்கிக் கொண்டு எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகியனவற்றை நிரல்படப் பெய்து தெளிவான முழுமையான உரையை எழுதிக்காட்டுவதைக் காணலாம். மேலும் புணையை ‘அதனை’ என்றும் பிறவிப்பெருங்கடலை ‘அதனுள்’ என்றும் சுட்டால் உணர்த்துவார். ‘நீந்தார்’ என்னும் எதிர்மறைக்கு  ‘அழுந்துவர்’ என்னும் மற்றொரு உடன்பாட்டை எதிர்மறையாக்குவார். இந்தக் குறட்பாவும் உரைவிளக்கமும் இங்கே சுட்டப்பட்டதற்குத் திருக்குறள் தொடரமைப்பையும் உவம மற்றும் பொருள் அடைகளையும் நன்கு நோக்கி உரையெழுதும் அவருடைய உரைத்திறனைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும் என்பதற்கேயாம்.

திறனறியும் குறட்பாவும் பொழிப்புரையும்

திருக்குறளில் பன்னிரண்டாவதாக அமைந்துள்ள ‘நடுவுநிலைமை’ என்னும் அதிகாரத்துள் எட்டாவது குறட்பாவாக இடம்பெற்றிருப்பது,

“சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி” (118)

என்னும் குறட்பாவாகும். இதற்குச்,

  1. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் – முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம்போல
  1. அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி – இலக்கணங்களான் அமைந்து ஒரு பக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகு ஆம்.

அதிகாரக் கருத்துப் பகுப்பு

பொழிப்புரையின் நுட்பம் காண்பதற்கு முன்பாக இவ்வதிகாரத்தின் பொருட் பாகுபாடுகளை அறிந்து கொள்வது இந்தக் குறட்பாவின் முழுமையான கருத்தினைப் பரிமேலழகர் கண்டறிந்த நெறி புலப்பட உதவக் கூடும்.  திருக்குறள் அதிகாரக் கருத்துக்களைப் பாகுபடுத்துவது பற்றிப் பல கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி ‘நடுவுநிலைமை’ என்னும் இவ்வதிகாரப் பொருண்மை பின்வருமாறு பரிமேலழகரால் வகுத்துக் கொள்ளப்படுகிறது. அதாவது ‘நடுவுநிலைமை’ என்னும் அதிகாரத்தில் நடுவுநிலைமை என்னும் பண்பைத் திருவள்ளுவர் பொதுவாக ஆராயவில்லை என்பதாம்.

  1. நடுநிலைமையது சிறப்பு (1)
  2. நடுவுநிலைமையான் வந்த செல்வம் நன்மை பயத்தல் (2)
  3. ஏனைச் செல்வம் தீமை பயத்தல் (3)
  4. தக்கார் தகவிலர் அறியும் ஆறு (4)
  5. கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா (5)
  6. கோடுதல் கேட்டிற்கு ஏதுவாம் (6)
  7. கோடாதவன் வாழ்வு கேடன்று (7)
  8. அவையத்தார்க்கு வேண்டிய நடுவுநிலைமை (8-9)
  9. வணிகத்தார்க்கு வேண்டிய நடுவுநிலைமை (10)

இப்பகுப்பாய்வில் இறுதியில் உள்ள அவையத்தார்க்கும் வணிகர்க்குமான நடுவுநிலைமைப் பண்பினைப் பரிமேலழகர் தொகுத்துக் கூறுகிறார். கட்டுரையாளர் பொருள் தெளிவு கருதி வகுத்துரைக்கிறார்.

பொழிப்புரை நுட்பம்

  • ‘சமன்செய்து’ என்றே குறளிருக்க, தன் கண் வைக்கப்படும் பாரத்தைத் தான் அளக்குமுன் தன்னைச் சரிசெய்து கொள்ள வேண்டும்’ என்னும் நுட்பத்தை உணர்ந்த பரிமேலழகர் ‘முன்னே’ என்னும் சொல்லை வருவித்துக் கொள்கிறார். கொண்டு ‘முன்னே ‘தான் சமனாக நின்று’ என உரையெழுதுகிறார்.
  • தன்னைச் சரிசெய்து கொண்ட பின்பே தன் பணியைச் செம்மையாகச் செய்ய முடியும் என்பதைப் ‘பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும்’ என எழுதுகிறார்.
  • ‘சீர்தூக்கும்’ என்பதற்கு ‘வரையறுக்கும்’ என உரை காண்பதை நோக்க வேண்டும். ‘சீர்’ என்பதற்குச் ‘சிறப்பு’ என்பதுதான் பொருள். ‘சீர் கொண்ட’ என்பது தமிழ்விடுதூது. சீரிடம், சீருடைச் ‘செல்வர்’, சீர்மை என்பன திருக்குறள் கண்ட சீர்கள். ‘சீர் அபிராமி’ என்பது பட்டர் வாக்கு ‘சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்’ என்பது வள்ளலார் வாக்கு. ‘சீரார் பெருந்துறை’ என்பது திருவாசகம். ‘சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர் காள்’ என்பது திருப்பாவை.
  • ‘சமனாக அமைந்து’ என்னும் உவம அடைக்கேற்ப அமைந்து என்பதற்கு ‘இலக்கணங்களால் அமைந்து’ என்னும் பொளுளடையை வருவித்துக் கொள்கிறார்.

விளக்கவுரை

“உவமையடையாகிய சமன்செய்தலும் சீர்தூக்கலும் பொருட்கண்ணும்,  பொருளடையாகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர் தூக்கலாவது தொடை விடைகளால் உள்ளவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும் ஒருபால் கோடாமையாவது  அவ்வுள்ளவாற்றை மறையாது பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க” என்று விளக்கவுரையில் பரிமேலழகர் பொருளுக்கே முதன்மை தந்திருப்பதைக் காணலாம்.

விளக்கவுரை நுட்பம்

  • ‘துலாக்கோல்’ உவமம். ‘சான்றோர்’ பொருள். முன்னது பாரத்தை வரையறுக்கிறது. பின்னவர் எத்திறத்தும் நடுவுநிலைமை மாறாமல் செயல்படுபவர் எனினும் குறட்பாவில் உவமத்திற்குச் சொல்லப்பட்ட சமன் செய்து சீரதூக்கல் இரண்டு அடைகளையும் பொருளுக்கு ஆக்கவில்லை. பொருளுக்குரைத்த அமைதலையும் ஒருபால் கோடாமையையும் உவமத்திற்கு ஆக்கவில்லை. இதனைப் பரிமேலழகர் நோக்கி உரையெழுதுகிறார்.
  • சமன் செய்து, அமைந்து, ஒருபால் கோடாது சீர் தூக்கல் என்பது உவமத்திற்கும் பொருந்தும் பொருளுக்கும் பொருந்தும். அதாவது உவமமாகிய துலாக்கோலிற்கும் பொருளாகிய சான்றோருக்கும் இந்த நான்கு பண்புகளும் இருக்க வேண்டும் என்று பரிமேலழகர் கருதுகிறார். கருதி, “உவமையடை ஆகிய சமன்செய்தலும் சீரதூக்கலும் பொருட்கண்ணும் பொருளடையாகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி” உரையெழுதுகிறார்.
  • இந்த நான்கு பண்புகளையும் உவமத்திற்கு ஒருமுறையும் பொருளுக்கு ஒரு முறையுமாக அடையாக்குவது குறுகிய யாப்பிலக்கணத்தில் கூடாமையை அவர் புரிந்து கொள்கிறார். கொண்டு புறக்கட்டுமானத்தின் போக்கறிந்து அகக்கட்டுமானத்தின் நுண்ணியம் காண்கிறார்.
  • பொருளுக்கான அடையை உவமத்திற்கு ஆக்கியுரைத்த பரிமேலழகர் (அதிகாரப் பொருள் நுட்பம் கருதி) உவம அடையைப் பொருளுக்குப் பொருத்திய பாங்கு பற்றி மட்டுமே உரையெழுதுகிறார். அதாவது துலாக்கோல் பாரத்தை அளக்கும் பண்பு பற்றிப் பரிமேலழகர் விரித்துரைக்காது சான்றோர் நடுவுநிலைமை தவறாது செயல்படுவதையே விரித்துரைப்பதைக் காணமுடிகிறது. உவம விளக்கத்தைக் கைவிட்டுப் பொருள் விளக்கத்தை மட்டும் பரிமேலழகர் தந்திருப்பதற்கு என்ன காரணம்? இவ்வதிகாரத்தின் இறுதிப்பாட்டில் இந்த உவம ஆற்றலைத் திருவள்ளுவர் வெளிப்படுத்துவதைப் பரிமேலழகர் அறிந்து கொள்கிறார். துலாக்கோலின் பணி அளவில் மாறுபடாமை என்பதைப் பிறவும் தமபோல் செயின் என்னும் தொடர் குறிப்பதையும், அத்தொடருக்குக் “கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல் என்னும் (பட்டினப்பாலை) பரிமேலழகர் தரும் விளக்கத்தையும் அறிந்து கொண்டால் திறனறியும் குறட்பாவில் உவம விளக்கம் விடுபட்டதற்கான காரணத்தை அறியலாம்.
  • நடுவுநிலைமை என்பது மனம், மொழி, செயல் என்னும் மூன்றனுக்கும் உரியதாதலின் செயலாகிய வணிகத்தைப் பிரித்தோதி, 118, 119 ஆகிய குறட்பாக்களில் சான்றோர் திறம் கூறப்படுவதைப் பரிமேலழகரே தெளிவுபடுத்திக் காட்டுகிறார். இதனை அதிகாரக் கருத்துப் பகுப்பில் மூன்று பாடல்களையும் ஒருங்கிணைத்தாலும் முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின, ஏனையது வணிகரை நோக்கியது’ என்னும் அவருரையால் அறிய இயலும்.
  • இந்த அதிகாரத்தின் இறுதிப்பகுதி வணிகர்களை நோக்கியது என்பது ‘வாணிகம் செய்வார்க்கு’ என்னும் குறட்பா தொடராலும் பரிமேலழகர் எழுதிக்காட்டும் உரையாலும் புலப்படும். ஆனால் திறனறியும் குறட்பாவில் ‘வணிகர்க்கு அணி’ என்னாது ‘சான்றோர்க்கு அணி’ என்பது குறித்திருப்பது காண்க. சங்கப் புலவர்களைச் ‘சங்கச் சான்றோர்’ என்பது போன்றது இது. ‘சான்றோர்’ என்னும் இச்சொல் பயன்பாடுதான் பரிமேலழகரின் சிந்தனையைத் தூண்டி இறுதிக்கும் முன்னதாக உள்ள இரண்டு பாடல்களையும் (118,119) ‘அவையத்து நோக்கிச் சொல்லப்பட்டன’ என்னும் உரையெழுத காரணமாய் அமைந்தன எனலாம்.

இன்னாத கனிகளும் இனிய காய்களும்

திறனறியும் குறட்பாவில் உவம அடைகளையும் பொருளடைகளையும் இருவழியும் புணர்த்தி, உரையெழுதிய பரிமேலழகர் இது போன்ற நெறியை வாய்ப்புக் கிடைக்கிறபொழுதெல்லாம் பின்பற்றியிருக்கிறார் என்பதற்குச் சான்றுகள் பல உள. இனிய சொற்கள் இருக்க, இன்னாத சொற்களைப் பேசுவது  கனியிருக்குங்கால் காயை உண்ணுவதுபோல என்னும் கருத்துப்பட திருக்குறள் ஒன்றிருக்கிறது.

“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” 100

இந்தப் பாட்டைக் கிடக்கைநிலையில் பொருள் கண்டால் மேலே கண்டவாறுதான் அமையும். அமையவே எல்லாக் கனிகளும் இனிமை தருமா? எல்லாக் காய்களும் கேடு தருமா? என்னும் வினா எழும். பரிமேலழகர் உரையெழுதுங்கால் பின்பற்றிய நெறிகளில் அது குறள் வெண்பா என்னும் குறுகிய யாப்பில் எழுதப்பட்டது என்பதை நினைவிற்கொள்வது இன்றியமையாத ஒன்று. வேறு வகையாகச் சொன்னால் குறுகத் தறித்த குறள் என்பதை மறந்து அவர் உரை அமைவதில்லை. குறுகத் தறித்தவைகளை விரிவாக வெளிக்கொணர்ந்ததில் அவருடைய உரைக்குப் பெரும்பங்குண்டு. அந்த வகையில்  இந்தப் பாடடு ‘இனிய உளவாக இன்னாத கூறல் இனிய கனியிருப்ப இன்னாத காய்கவர்ந்தற்று’ என இருத்தல் வேண்டும். யாப்புநிலை கருதியே ஆசிரியர் சுருங்க உரைத்தார் எனக் கருதிப் பின்வருமாறு உரையெழுதுகிறார்.

“பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக் கண்ணும் சென்றன.  இனிய கனிகள் என்றது ஔவை உண்ட நெல்லிக்கனிபோல் அமிழ்தானவற்றை. இன்னாத காய்கள் என்பது காஞ்சிரங்காய் போல  நஞ்சாவனவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம்”

பொருளின்கண் சென்ற அடைகளைப் பரிமேலழகர் இவ்வாறு உவமத்திற்குப் புணர்க்காமல் உரையெழுதியிருந்தால் “கனிகள் எல்லாம் இனிமை தரும், காயெல்லாம் கேடு தரும்” என்னும் கருத்துப் பிழையோடு, ‘இனிய கனிகளே நன்மை தரும் இன்னாத காய்களே கேடுதரும்’ என்னும் திருவள்ளுவரின் கருத்து விளக்கமும் புலப்படாமல் போயிருக்கக்கூடும்.

வில் வணக்கமும் சொல் வணக்கமும்

உவமத்தை முன்மொழிந்து உவமேயத்தைப் பின்மொழிவதும் உவமேயத்தை முன்மொழிந்து உவமத்தைப் பின்மொழிவதுமாகிய இருநெறிகளைத் திருக்குறளில் காணமுடியும். ‘கூடா நட்பு’ என்னும்  அதிகாரத்தில்,

“சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க! வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்” (827)

என்னும் குறட்பா பின்னதற்குச் சான்றாகிறது. (“என்பிலதனை வெயில்போலக் காயுமே” (77) என்பது முன்னதற்குச் சான்றாகிறது. மேற்கண்ட குறட்பாவில் வணங்கியது சொல்லன்றிச் சொல்பவன் அல்லன். வணங்கியது வில்லன்றி வில்லியல்லன். அவ்விரு வணக்கமும் செய்வார்தம் உள்ளக் குறிப்போடு  பொருந்தியதே தவிர சொல்லின் செயலோ வில்லின் செயலோ அன்று அவ்விருவணக்கமும் போலியானது. கொடுமை நிறைந்தது. வெளியில் புலப்படாதது. வில்லினது வணக்கம் ஏற்றவர்க்குத் தீமை செய்தலைக் குறித்தமையால் பகைவர் மாட்டுப் பிறக்கும் சொல்லினது வணக்கத்தையும் தமக்கு நன்மை செய்தலைக் குறித்தது என்று கருதற்க என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர் வில்லையேந்தியவனின் தீங்கு குறித்த எண்ணத்தை அவனாலாகிய  வில்வணக்கத்தின் மேலேற்றி ‘வில்வணக்கம் தீங்கு குறித்தமையான்” என்று கூறியதனால் அதற்கு ஏற்ப ஒன்னார் சொல்வணக்கம் தீங்கு குறித்ததை அவர்களாலாகிய சொல்வணக்கத்தின் மேலேற்றி (இங்கு சொல் தீங்கு செய்யாது., சொல்லைப் பணிவாகச் சொல்லும் பகைவனே தீங்கு செய்வான்) ‘ஒன்னார்கண் சொல்வணக்கம் கொள்ளற்க!’ என்று மறுத்துக் கூறுகிறார். இந்த விளக்கத்தையெல்லாம்,

“வில்வணக்கம் வேறாயினும் வணங்குதல் ஒப்புமை பற்றி அதன் குறிப்பை ஏதுவாக்கியும் கூறினார் வில்லியது குறிப்பு அவனினாய  வில்வணக்கத்தின் மேல் நிற்றலான் ஒன்னாரது குறிப்பும் அவரினால் ஆய சொல்வணக்கத்தின் மேலதாயிற்று”.

‘வில்வணக்கம் தீங்கு குறித்தது’ என்பது தெளிவு. இது உவமம். ‘சொல்வணக்கம் தீங்கு குறித்ததா?’ என்பதை விளக்குதற்கே இந்த உவமத்தைத் திருவள்ளுவர் பயன்படுத்துகிறார். இரு வணக்கங்களின் நோக்கமும் வேறாயினும் ‘வணங்குதல்’ ஒப்புமை பற்றி உவமித்தார் என நுண்ணியம் காண்கிறார் பரிமேலழகர். வணங்குவதனாலேயே அதன் நோக்கம் தூய்மையானது எனக் கருதற்க என்பதாம்!

இதுகாறும் தரவுகளின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வில் உவமம், உவமேயம் சார்ந்த குறட்பாக்களில் பரிமலழகரின் உரைகாணும் திறன் புலப்பட்டிருக்கக்கூடும். பொருளுக்கும் உவமத்திற்குமான அடைகளை உற்றுநோக்கி அவற்றின் அடிப்படையில் நூலாசிரியர் சொல்லவரும் கருத்தினை நன்கு உள்வாங்கி அதற்கேற்ப உவம அடைகளையும் பொருளடைகளையும் கையாளும் வியத்தகு திறன் அவர் உரையில் ‘தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்படுவதைக்’ காணலாம்.

நிறைவுரை

திறனறியும் குறட்பாவில் “அமைந்து, ஒருபால் கோடாமை’ என்னும் பொருளுக்கான (சான்றோர்க்கான) அடைமொழிகளை உவமமாகிய துலாக்கோலுக்கும் ஆக்கினாலும் பாடல் சான்றோரின் நடுவுநிலைமையாகிய பண்பு பற்றியதென்பதை உணர்ந்து “அமைந்து சமன் செய்து சீர்தூக்கி ஒரு பால் கோடாமை’ என அவர்தம் உயர்பண்பை விளக்கிக் காட்டிய நுண்ணியமே இப்பாட்டில் பரிமேலழகரின் உரைத்திறனாகும். நூலாசிரியரால் புணர்க்கப்படும் அடைச்சொற்கள் பொருளுக்காயினும் உவமத்திற்காயினும் அவை வெற்று அலங்காரத்திற்காகவோ சீர் நிரப்புதற்காகவோ அல்ல என்பதே பரிமேலழகர் உரையால் புலப்படும் உண்மையாகும்.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *