Blog

  • படக்கவிதைப் போட்டி 280இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 280இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    ஒளிப்பட நிபுணர் திருமிகு. ராமலக்ஷ்மி எடுத்துள்ள இப்படம் வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டுப் படக்கவிதைப் போட்டி 280க்கு வழங்கப்பட்டுள்ளது. ஒளிப்பட நிபுணர்க்கு என் நன்றி!

    மும்மூர்த்திகளெனத் தரையில் அமர்ந்திருக்கும் இம்முதியவர்களின் நிலையைக் காண்கையில் வருத்தம் மேலிடுகின்றது. நடுவிலிருப்பவர் சங்கொலி எழுப்புவது தம் துயரத்தைச் சிறுபொழுதேனும் அச் சங்கொலியில் சங்காரம் செய்யத்தானோ?

    இப்படத்துக்குப் பொருத்தமாய்க் கருத்துக்களை அள்ளிவழங்க நம் கவிஞர்பெருமக்கள் காத்திருக்கின்றார்கள்! அவர்களை வரவேற்போம்!

    *****

    கையில் செல்போன் உடையவர் அறிவிப்பது அன்றைய கலெக்சனையா?
    அருகிருக்கும் ஐயர் சங்கினை ஊதுவது சில்லறை சேர்த்திடவா? பையினைக் கையால் அணைத்திருப்பவர் பார்ப்பது முன்வரும் கிராக்கியையா? என்று வினாக்களை விவரமாகத் தொடுக்கின்றார் திரு. கருணானந்தராஜா.

    யாரிவர்கள்?

    கையினில் செல்போன் உடையவரோடு
    கதைப்பது யாரவரின் சதியா?
    ஐய இதென்ன அவர்அறி விப்பது
    அன்றைய நாளின் கலெக்ஷனையா?
    ஐயரிருந்துவெண் சங்கினை யூதி
    அழைப்பது சில்லறை சேர்த்திடவா?
    பையினைக் கையால் அணைத்திருக்கும் நபர்
    பார்ப்பது முன்வரும் கிராக்கியையா

    கையில் குறைகள் தெரியவில்லை அந்தக்
    கால்களில் சோர்வா புரியவில்லை
    மெய்யினிலே குறை யாதுமில்லை – அவர்
    மேனியுறுதி தளரவில்லை.
    உய்யும் வகைக்கவர் தேர்ந்தெடுத்த – இந்த
    உழைக்கும் வழிக்கென்ன காரணமோ?
    பையன்கள் பெண்கள் அன்னவரின்முது
    மையை நிராகரித் திட்டனரோ!

    தூரத்துரத்தி தெருவினில் விட்டு
    துரோக மிழைத்தவர் பிள்ளைகளோ! – இல்லை
    யாரும் சதமல்லவென்று உணர்ந்து தம்
    ஊரைவிட்டேயிவர் வந்தனரோ!
    வேரைப்பிடுங்கித் தம் பாசமறுத்து
    வெளிக்கிட்டுவிட்ட நிலையிதுவோ – இந்தப்
    பாரினில் யாதும் தம் ஊரெனும் நோக்கில்
    பரதேசி வாழ்வினைத் தேர்ந்தனரோ!

    *****

    ”கண்டதே காட்சி; கேட்பதே செய்தி என்று நம்பி அரசியல் வாணிகப் பாம்புகளின் ஊடக மகுடிகளின் கூச்சலுக்கு மயங்கி மதிகெட்டு நிற்கும் பாம்பாட்டிகளாய் மாறிவிட்டோம்!” என்று இன்றைய மக்களின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    மகுடிக்கு மயங்கிய பாம்பாட்டிகள்

    கண்டதே காட்சி…
    காண்பதே உண்மை…
    கேட்பதே செய்தி …
    – என்று
    சொன்னதை நம்பி
    தீர ஆராயும் திறனேதும் கொள்ளாமல்
    கொண்டதே கோலமென வாழ்ந்ததால்
    வாழ்வியல் செய்திகளை,
    சமூக நிலைமைகளை,
    சரித்திர உண்மைகளை
    மூடி போட்டு மறைத்து வைத்து
    வணிகச் செய்திகளை
    வறட்டு விவாதங்களைப்
    பசப்பு வார்த்தைகளைப்
    படாடோப விளம்பரங்களை
    வெளிச்சம் போட்டுக் காட்டுவதை
    உண்மை என்று வாழ்ந்து
    சொந்த மண்ணிலேயே
    அகதிகளாய் வாழுகின்றோம்
    சொந்தங்களை இழந்துவிட்டு
    அநாதையாய் இருக்கின்றோம்!

    அரசியல் வாணிகப் பாம்புகளின்
    ஊடக மகுடிகளின் கூச்சலுக்கு
    மயங்கி மதிகெட்டு நிற்கும்
    பாம்பாட்டிகளாய் மாறிவிட்டோம்!

    *****

    ”இங்கே அமர்ந்துள்ளவர்கள் சித்தர்களா? பசிப்பிணியாலான பித்தர்களா? குழப்பம் நீங்க விளக்குங்கள்!” என்று வினவுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    சங்கினைத் துணைக் கொண்டு
    கோவில் வாயிலில் அமர்ந்து
    சாப்பாட்டிற்கான உத்தியாகச்
    சரித்திரம் உருவாகிறதா?

    ஆலயத்தினுள் தான் முழங்க வேண்டி
    முன்னோர்கள் வகுத்த வழி
    ஆலயத்திற்கு வெளியே வந்ததன்
    விந்தைதான் என்ன?

    யாசகம் கேட்பதற்குச் சங்கு
    இதுவோ வரிசைகட்ட!
    அமர்ந்துள்ள சித்தர்களா…
    இல்லை பசிப்பிணியாலான பித்தர்களா?

    விளக்குங்கள்
    அதிகரிக்கும் குழப்பங்கள்
    சங்கே நீ முழங்கு
    சங்கே நீயே முழங்கு!

    *****

    ”பெற்ற பிள்ளைகள் பிழைப்புத் தேடி பெற்றவரை விட்டுவிட்டுத் தனம்
    பெறப் பரதேசம் போனதனால் பெற்றவர்கள் பெற்றது இந்தப் பரதேசிக்கோலம்” என்று வேதனையோடு விளம்புகின்றார் திரு. யாழ். பாஸ்கரன்.

    ஆடி அடங்கி ஆட்டம் முடிந்த பின்
    ஆடல் வல்லான் ஆலய வாசலில்
    அடுத்த வேளைச் சோற்றுக்கு
    அடுத்தவர் கையை நோக்கும் அவலம்!

    நீறு அணிந்த பிறை நெற்றி
    நீர்த் திரை மறைக்கும் சிறு விழிகள்
    நிறம் கருத்த நெடு மேனி
    வரம் வேண்டித் தவம் கிடக்கிறது!

    பெற்ற பிள்ளைகள் பிழைப்புத் தேடி
    பெற்றவரை விட்டு விட்டுத் தனம்
    பெறப் பரதேசம் போனதனால்
    பெற்றவர்கள் பெற்றது பரதேசிக்கோலம்!

    உற்ற துணை யாரும் இல்லை
    உறுதுணையாக வரும்
    உறவுகள் ஏதுமில்லை – புது
    உறவு உருவானது புண்ணிய பூமியில்!

    முதுமையின் முடியாமையால்
    முயல்வதற்கு இயலாமையால்
    மூவரும் மூலவரை நோக்கி
    முக்தி வேண்டி பக்தி செய்கிறார்!

    சங்கொலி முழங்கிச்
    சங்கடங்கள் தீர வேண்டுகிறார்
    சங்கரனே சற்று இரங்கிடு!
    சங்குப்பால் குடித்தவர்கள்
    செவியில் இதைச் சேர்த்திடு!

    கோயில் வாயிலில் அமர்ந்திருக்கும் இம் முதியவர்களின் பரிதாப நிலை நம் கவிஞர்களின் பாக்களில் சோக ரசத்தை இழையோட விட்டிருக்கின்றது. எவ்விதச் சுவையையும் அழகாய் வெளிப்படுத்தும் உங்கள் அரிய ஆற்றலைப் பெரிதும் போற்றுகின்றேன் கவிஞர்களே!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    பாடமாக…

    சமூக இடைவெளி
    சற்றுக் கூடுதலாகிவிட்டது,
    பெற்று வளர்த்துப்
    பேணிக்காத்தவர்கள் வயதில்
    பெரியவர்கள் ஆனதும்
    தெருவில் நிற்கிறார்கள் அல்லது

    தேடிச் செல்கிறார்கள்
    முதியோர் இல்லங்களை…

    வேலை செய்ய இயலாதபோது
    வேடங்கள் போட்டு
    ஓடவிடுகிறார்கள் பசியை…

    வழிபாட்டுத் தலங்ளில்
    வழிமறிக்கும் சாமிகளெல்லாம்
    முற்றும் துறந்தவரல்லர்,
    முழுதும் மறக்கப்பட்டவர்கள்…

    இளைஞர்களே
    எண்ணிப் பாருங்கள்!
    முதுமைவரும் உங்களுக்கும்,
    உதறிடாதீர் பெற்றோரை-
    உங்கள் பிள்ளைகள்
    பார்த்த்துக்கொண்டிருக்கிறார்கள்

    பாடமாக…!

    ”வழிபாட்டுத் தலங்களில் வழிமறிக்கும் சாமிகள் எல்லாரும் முற்றும் துறந்தவரல்லர்; முழுதும் மறக்கப்பட்டவர்கள்” என்ற உண்மையை உணர்த்தி, ”முதுமை உங்களுக்கும் வரும் இளையோரே; உதறிடாதீர் பெற்றோரை! உங்கள் பிள்ளைகளுக்கும் அதுவே பாடமாகும்” என்ற வாழ்வியலையும் சேர்த்தே நினைவூட்டியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • ஆங்கிலத்தில் எழுதுவது ஏன்? – ஜெயந்தி சங்கர் நேர்காணல்

    ஆங்கிலத்தில் எழுதுவது ஏன்? – ஜெயந்தி சங்கர் நேர்காணல்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    இனி நான் தமிழில் எழுதப் போவதில்லை. ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப் போகிறேன் என அறிவித்த சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் Dangling Gandhi என்ற நூல் 2019இல் வெளியானது. அது 2020ஆம் ஆண்டுக்கான சர்வதேச புத்தக விருதினை அமெரிக்காவில் வென்றதோடு (International book award by American Book Fest) மேலும் பல்வேறு சர்வதேச விருதுகளையும் (Literary Titan Silver book award by USA based awarding body Literary Titan) வென்றது. முதல் புத்தகத்திலேயே சர்வதேச கவனத்தை ஈர்த்த ஜெயந்தி சங்கரின் Misplaced Heads என்ற ஆங்கில நாவல், 2020ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது.

    இந்த நேர்காணலில் ஜெயந்தி சங்கர், ஆங்கிலத்தில் எழுதுவதற்கான காரணம், தமிழ் எழுத்துலகிற்கும் ஆங்கில எழுத்துலகிற்குமான வேறுபாடு, இந்த இரண்டு மொழிகள் தரும் வசதி, சுதந்திரம், இந்த மொழிகளில் உள்ள புத்தகச் சந்தை, வாசகப் பரப்பு உள்ளிட்ட பலவற்றையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

    விருதுகளில் உள்ள வெளிப்படைத்தன்மை, புதிய வாசகர்கள் ஆங்கிலத்தில் அதிகம் இருப்பது, ஆங்கிலத்தின் முன்னணிப் பதிப்பாளர்கள், ஆங்கில எழுத்துலகில் உள்ள இலக்கிய முகவர்கள் (Literary Agents) எனப் பலவற்றையும் நமக்கு அறியத் தருகிறார். தமிழிலும் மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள் எனக் குறிப்பிடும் இவர், லக்ஷ்மி சரவணக்குமாரின் சிறுகதைகளைச் சிலாகிக்கிறார்.

    இந்த முக்கியத்துவம் வாய்ந்த நேர்காணலைப் பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    #literaryfiction, #danglinggandhi, #shortstories, #jayanthisankar, #book award, #formandcontent, #asian, #southeastasian, #colonial, #imaginations, #characterdriven, #layered, #highlyacclaimed, #variedforms, #diversity, #cultural, #seasonedreading, #2020internationalbookawardwinner, #Americanbookfestwinner2020, #literaryfiction, #MisplacedHeads, #colonialindia, #jayanthisankar, #misplacedheads, #historicalfiction, #postmodern, #novel, #templewomen, #heritage, #heridetory, #dancers, #longdistance, #chatfiction, #reportoire, #eras, #colonial, #singapore, #modern, #trees, #dancer, #devadasis, #devaradiyar, #bharatnatyam, #sadir, #contemporary, #temples, #abolition, #rituals, #chennai, #seasonedreaders, #engrossingread, #oneofitskind, #experimentalfiction, #ZeroDegreePublishing

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 102 (அரசியல்)

    சேக்கிழார் பாடல் நயம் – 102 (அரசியல்)

    திருச்சி  புலவர்  இராமமூர்த்தி

    பாடல் :

    அரசியல்  ஆயத்   தார்க்கும்   அழிவுறும்   காதலார்க்கும்
    விரவிய  செய்கை தன்னை   விளம்புவார்  ‘’ விதியினாலே
    பரவிய  திருநீற்   றன்பு    பாதுகாத்து   உய்ப்பீர் ‘’  என்று
    புரவலர்   மன்றுள்  ஆடும்   பொற்கழல்   நீழல்   புக்கார்.

    உரை :

    தமக்குப் பின் அரசியல் நடத்தும் முறைமையில் வரும் இளவரசர், அமைச்சர் முதலியவர்க்கும், தம்மிடத்துக் காதலால் மனம் வருந்தும் தேவிமார், ஏனைச் சுற்றத்தார் முதலியோர்க்கும், பொருந்திய செய்தியைக் கூறுவாராகி “விதியினாலே பரவப்பெற்ற திருநீற்றினிடத்து வைத்த அன்பினையே சோர்வு வாராது பாதுகாத்து உலகிலே கொண்டு செலுத்தக் கடவீர்“ என்று உறுதி மொழிக் கட்டளையைக் கூறியபின், அரசர், திருமன்றிலே அருட் கூத்தாடு கின்ற பூங்கழலணிந்த எடுத்த திருவடியைச் சிந்தித்திருந்தனர்.

    அடியார் பணி முதலிலும், அரசியலாகிய நாட்டின் காரியம் அதற்குப் பின்னரும், குடும்பப் பொருள் இறுதியிலும் வைக்கற்பாலன என்பது ஆசிரியர் கருத்துமாகும். அரசியல் ஆயத்தாரும் காதலாரும் கொண்டொழுகும்படி அரசர் பணித்ததும் தம் கொள்கையாகிய வேடமே சிந்தித்த லொன்றேயாம் என்பதும் குறிக்க.

    அரசியல் ஆயத்தார் -. அரசும் அங்கமுமாகிய யாவும் இதனுள் அடங்கும். இவற்றின் விரிவு திருக்குறள் முதலிய நீதி நூல்களுட் காண்க.

    அழிவுறுங் காதலார்– தம்மிடத்து வைத்த காதலாற் பரிந்து, தம் நிலைக்கழிந்து, இத்தகைய தலைவரைப் பிரிய நேரிடுகின்றதே யென்று கவலைப்பட்டு அழியும் தேவிமார், மக்கள் முதலிய சுற்றத்தார். ஆயத்தார் – மக்கள் முதலிய சுற்றத்தார் என்றும், காதலார் மந்திரி முதலாயினார் என்று முரைப்பாருமுண்டு.

    விரவிய செய்கை – நடந்த செய்தியையும், இனி நடைபெற வேண்டுவதாய்ப் பொருந்திய செய்தியையும் என்க. விளம்புவார் – எதிர்கால வினையாலணையும் பெயர். சொல்வாராகி. என்று என்பதனோடு முடிந்தது. விதியினாலே – இங்கு நிகழ்ந்த செய்தி விதியின் காரணமாய் விளைந்தது. விதி – “திருவேடத்தை அரனெனத் தொழுக“ என்று ஆகமம் விதித்த விதி. இதனால் இதுவரை நேர்ந்த செய்தி முற்றும் அடங்க ஒரு சொல்லிற் சுருக்கி அறிவித்ததனோடு அமைதியும் கூறியவாறு. நிகழ்ந்தது என்ற வினைமுற்றுத் தொக்கி நின்றது. நியதிப்படி என்றலுமாம். விதியினாலே பரவிய என்று கூட்டி விதிப்படி இதுவரை நான்போற்றி வந்த – என்றுரைத்தலுமாம். நான்- எழுவாய் வருவிக்க. பரவிய – வேதங்களாலே பரவப்பெற்ற  திருநீற்றன்பு பாதுகாத்து உய்ப்பீர் – திருநீறும் ஏனைத் திருவேடமும் எனுமிவற்றில் வைத்த அன்பின் ஒழுக்கத்தைச் சோர்வுபடாமல் காத்து உலகத்திற் செலுத்தி வருவீர்களாக! இதுவே இந்த, முடிவுறும் நிலையில் நான் உங்களுக்குச் சொல்லத்தக்க உறுதிப் பொருள். இஃதொன்றனையே ஆயத்தார், காதலார் என்னும் இருதிறத்தார்க்கும் அரசர் உறுதி கூறியவாறு காண்க. இஃதொன்றினைக் குறிக்கோளாகக் கொண்டொழுகுதலே அனைவர்க்கும் திருவருளின்பம் தரும் என்பது நாயனாரது துணிபாம்.  வேடத்தில்  தலைமை பெற்ற நீற்றினைச் சொல்லவே ஏனைய வேடங்களும் உடன்கொள்ளப் பெறும்.

    என்று – என்று சொல்லி, இவ்வாறு தனது கடமைகள் யாவும் நிறைவேற்றி முடித்துக் கொண்டு, அதன்பின், இறுதியாக. புரவலர் – காத்தலின் வல்லவர் – அரசர். இங்கு இப்பெயராற் கூறியது மேற்கூறிய பற்பலவகைக் கடமைகளையும் பாதுகாக்கும் வழியிற் காத்துநின்றமை குறித்ததாம்.

    மன்றுளாடும் பூங்கழல் – சிற்றம்பலத்திலே அருட்கூத்தாடும் அம்பலவாணனது அழகிய கழலணிந்த திருவடி. ஆடும் கழல்  என்றமையால் எடுத்தபாதம் என்க. இங்கு அரசர் தாம் ஆன்மார்த்தமாய்க் கொண்டு தினமும் பூசித்து வந்த சிற்றம்பலவாணன் திருவடிகளைச் சிந்தித்தார் என்க.

    முன்னர் “தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள் ஆடிய பெருமா னன்பர்க் காவன வாகும்“ (470) என்றதும், வரும் பாட்டில் “அவர்முன் றம்மைக் கண்டவா றெதிரே நின்று காட்சிதந் தருளி“ என்பதும் காண்க. இவ்வாறே கழறிற்றறிவார் நாயனார் சிற்றம்பலவாணனைத் தினமும் பூசித்துத் திருச்சிலம்பொலி கேட்ட சரிதமும் இங்கு நினைவு கூர்க

    இவ்வுடல் விட்டு உயிர் பிரிந்துபோம் பொழுது இறைவனை நினைத்தல் வேண்டும் சாகும்   காலத்து வரும் எண்ணப்படியே ஒருவன் பின்னர் ஆகின்றான் என்பர்.

    “புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைமே லுந்தி, அலமந்த போதா“கிய அப்போது, தனது மரணவேதனையினாலும், அறிவு மயக்கத்தானும், தன்பிரிவு பற்றித் தன் முன்னின்று, தொடர்புடைய பிறர்படுகின்ற துன்பங் காண்பதாலும், பிறவாற்றாலும் இது எளிதிற் கூடுவதன்று. இதுபற்றியே ஒருவன் இறக்குங்காலத்துச் சூழ இருப்பவர் சிந்தனை முகத்திற்றேக்கி அழுதல் முதலியன செய்யாது தேவாரந் திருவாசக முதலிய அருட்பாக்களை ஓதிக்கொண்டிருத்தல் வேண்டுமென்று பெரியோர் கூறுவர். ஆயின் இவ்வாறு ஆவி பிரியும்போது இறைவனை நினைக்கப்பெறுதல் நெடுங்காலம இறைவனை எண்ணி யெண்ணி வேண்டிக்கொண்டதன் பலனாகவே இறைவன் அருளினாற் பெற வேண்டியதொன்றா மல்லது எவரும் அக்காலத்துத் தாமாகச் செய்துகொள்ளத்தக்கதன்று; பிறர்தர வருவது மன்று. இதன் அருமையும் பெருமையும்பற்றியன்றே, கந்தை மிகையாங் கருத்துடையராய், முழுத்துறவுவேந்தராய், இறைவனிடத்துத் தம்பொருட்டு எவ்வரமும்வேண்டாதவராய் உள்ள எமது பரமாசாரிய ஞானமூர்த்திகளாகிய அப்பர் பெருமானும் இவ்வொரு வரத்தினையே பலவிடத்தும் இறைவன்பால் மன்றாடி வேண்டினார்.

    இப்பாடலில்  ‘’விதியினாலே   பரவிய  திருநீற்றன்பு பாதுகாத்து  உய்ப்பீர்!’’  என்று  மெய்ப்பொருள் நாயனார்  கூறியது  மக்களின் மனோநிலையை  அரசன் நன்கறிந்தவன் என்பதைக் காட்டுகின்றது,  திருநீறு பூசிய ஒருவன் அரசரைக்  கொன்றான்  என்பது கேட்ட மக்கள் திருநீறு பூசிய அடியார்கள் பாலும் , அவர்கள் பூசிக்கொண்ட   திருநீற்றின்  பாலும்  குற்றம் கண்டு அத்தகையோர்  அனைவரையும்  வெகுண்டு கொல்லலாம்  என்று எண்ணுகிறான்.  அவ்வாறே  முத்த நாதனை  மக்கள் கொள்ள  முற்பட்டார்கள்.

    ஆம், இந்திரா காந்தியைக்  கொன்றவன்  சீக்கியன் என்பதனால்  மக்கள் சீக்கியரைத் தவறாகக் கருதிப் பல இடங்களில் அவர்களை விரட்டிக் கொன்றனர், அதனால் சீக்கியர்கள் தலைப்பாகையை  எடுத்து, தாடியையும் மழித்துக்  கொண்டார்கள்  என்பதை நாம் நேரில் கண்டோம்;

    அத்துடன்  ராஜீவ் காந்தியை இலங்கைத் தமிழர் குண்டுகளால்  கொன்ற பின்னர் தமிழ்  மக்களையும். தமிழ் நாட்டையும்  சந்தேகக் கண் கொண்டு பார்த்து, குறிப்பாக  இலங்கை மக்கள்  இகழ்ந்தனர்.

    இத்தகைய சூழல் வரக்கூடாது என்று எண்ணிய   மெய்ப்பொருள் நாயனார்  ‘’விதியினாலே  பரவிய   திருநீற்றின்’’  பால்  பற்றுக் கொண்டு அடியார்களை  இகழாது, பாதுகாத்து,   உய்வடையச்  செய்வீர் என்றார்,  இது நாயனாரின் தொலைநோக்குப் பார்வையைப் புலப் படுத்துகிறது. இவ்வண்ணம் செய்யுள் இயற்றிய   சேக்கிழாரின் பாட்டுத்திறமும்  இங்கே  புலனாகின்றது!

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 26

    கதை வடிவில் பழமொழி நானூறு – 26

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 53

    நன்றே ஒருவர்த் துணையுடைமைப் பாப்பிடுக்கண்
    நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் – விண்டோயும்
    குன்றகல் நன்னாட! கூறுங்கால் ‘இல்லையே
    ஒன்றுக்(கு) உதவாத ஒன்று’.

    பழமொழி-  ‘இல்லையே, ஒன்றுக்கும் உதவாத ஒன்று

    ஒருவாரமா மழை கொட்டிக்கிட்டே இருக்கு. கண்டிப்பா அக்கம்பக்கத்து ஊருகள்ல வெள்ளம் வீட்டுக்குள்ள வந்திருக்கும். நம்ம ஏரியாவுலதான் ஏரி, குளம், ஆறு ஒண்ணுமில்லையே. கொஞ்சமா நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கலாம்.  அப்பா சொல்லிக் கொண்டே நடக்கிறார்.

    யாரும் மறந்துகூட டி.வி ய போட்டுராதீங்க. பக்கத்து வீட்ல ஷார்ட்சர்க்யூட் ஆயிடுச்சாம். பொறியியல் பட்டதாரியான சுதன் எனும் என் அன்புச் சகோதரன் அவன் பங்குக்கு அறிவுரை சொல்றான்.

    என்ன வாழ்க்கை. வெளியில கால் வைக்க முடியாது. முழங்கால் அளவு தண்ணி ஓடிக்கிட்டிருக்கு. வீடு முதல் மாடியில இருக்கறதால பால்கனியிலேந்து வெளியில பாக்க முடியுது. அவ்ளோதான். அதுக்குமேல ஒண்ணும் பண்ண முடியல. முடிஞ்சாமட்டும் என்ன பண்ணி கிழிச்சிருக்கப் போறேன். முதுகலை இயற்பியல் படிச்சிருக்கேன்னு பேரு. சரியான வேல எதுவும் இன்னும் கிடைச்ச பாடில்ல. டியூஷன் எடுத்தே வாழ்க்கையைக் கழிச்சுட்டு இருக்கேன். இயற்பியல் எனக்கு விருப்பப்பாடம்னு தேர்ந்தெடுத்துப் படிச்சேன். எப்பவுமே புரிஞ்சு படிச்சாதான் எனக்குப் பிடிக்கும். மார்க் வாங்கறதுக்காக படிக்கற பழக்கம் இல்லாததால கல்லூரியில சீட் கிடைச்சதே பெரும்பாடா ஆயிடுச்சு. ஒருவழியா படிச்சு முடிச்சு வெளியில வந்தப்புறம்தான் உலகமே புரியுது. இங்க எல்லாமே மார்க்கையும் நுழைவுத்தேர்வையும் வைத்துதான் மதிப்பிடறாங்க. அரசாங்க வேலைக்கான நுழைவுத்தேர்வுல எந்தப் பாடத்த முதன்மைப் பாடமா எடுத்துப்படிச்சாதான்  என்ன.  அவங்களோட தேர்வுல வெற்றிபெற்றா போதும். இப்போ வேற வழியில்லாம கோச்சிங் சென்டர் போய் பயிற்சி எடுத்துக்கறேன்.  வர தேர்வுலயாவது வெற்றி பெறணும். தினமும் பக்கத்துல இருக்கற நூலகம் வரை போய் எல்லா செய்தித்தாள்களையும் படிச்சுட்டு வருவேன். இப்போ அதுவும் போச்சு.

    தம்பி தம்பினு பக்கத்து பால்கனி ஆன்ட்டி கூப்பிடறாங்க. கொட்டற மழையில அவங்க கைய அசைக்கறதுதான் தெரியுது. வேற என்ன சொல்லவராங்கனு புரியல. இப்பதான் அந்த ஆன்ட்டி வீட்டயே நல்லா கவனிக்கறேன். எங்க வீட்டுக்கு இடதுபக்கத்துல இருந்தாலும் கொஞ்சம் இடைவெளிவிட்டு அவங்க வீடு இருந்ததால பெரிசா கவனிச்சதில்ல. ஒரு சின்ன பொண்ணு வேற எட்டிப்பாக்குது.

    ஆமாம் என்கிட்டதான் ஏதோ சொல்ல ட்ரை பண்றாங்க. பாத்துக்கிட்டு இருக்கும்போதே ஒரு பெரிய கயிற்றை எடுக்கறாங்க. ஒரு நுனிய அவங்க வீட்டு பால்கனி அழியில கட்டிட்டு மீதமுள்ளதச் சுருட்டி வீசறாங்க. கீழ விழுந்து அது நனையுது. திரும்பவும் என்கிட்ட சைகை காட்டிட்டு சுருட்டி என்னய நோக்கி வீசறாங்க. ஒருவேளை நான் அடுத்த பக்கத்தப் புடிச்சு என் வீட்டு அழியில கட்டணும்னு எதிர்பாக்கறாங்களோ. திரும்பத் திரும்ப எரிந்ததில் மூணாவது தடவை நான் கயிற்றைப் பிடிச்சிட்டேன். அதை எங்க வீட்டு பால்கனி அழியில் கட்டியும் விட்டேன்.

    இப்போ அவங்க தன்வீட்டுப் பக்கத்துல கட்டிய கயிற்றின் நுனியை அவிழ்த்து அதில ஒரு பிளாஸ்டிக் கூடையை நுழைத்து, கயிற்றை மேலையும் கீழையும் அசைத்து அசைத்து அந்தக் கூடையை எங்க வீட்டுப்பக்கம் தள்ளி விடறாங்க.

    ஆர்வ மேலீட்டால் அந்தக் கூடையை கைஎட்டிப் பிடித்து விட்டேன். அதுக்குள்ள ஒரு துண்டுச்சீட்டும் சுடச்சுட கேசரி போட்ட டிபன்பாக்சும்  இருக்கு. அந்த சீட்டுல எங்க வீட்டுல கைக்குழந்தை இருக்கு ஒரு பால் பாக்கெட் இருந்தா போட்டு அனுப்புங்க. தேங்க்ஸ்னு எழுதியிருக்காங்க. நான் நிமிர்ந்து அவங்களப் பாக்கறேன். அதே சிரிச்ச முகத்தோட அந்த ஆன்ட்டி வெயிட் பண்றாங்க.

    அம்மாவிடம் சொல்லி பால்பாக்கெட் போட்டு அந்தக் கூடையை அவர்கள் செய்த முறைப்படியே அசைத்து அனுப்பி வச்சேன்.

    ‘இல்லையே, ஒன்றுக்கும் உதவாத ஒன்றுனு பழமொழிய கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இப்பதான் நேர்ல பாக்கறேன். சும்மா உக்காந்து புலம்பிக்கிட்டு இருக்காம எவ்வளவு அழகா கொடிக்கயிற உபயோகிச்சு வேலைய நடத்திக்கிட்டாங்க சொல்லிக்கொண்டே அம்மா உள்ளே செல்கிறாள்.

    ஆமாம். சரிதான் ஒன்றுக்கும் உதவாத பொருள்னு ஒண்ணு கிடையவே கிடையாது. எனக்குள்  நானே சொல்லிக் கொள்கிறேன். சொல்லிமுடித்தவுடன் எனக்குள் புதுஉற்சாகம் பிறக்கிறது. என்னாலயும் ஏதாவது செய்து சாதிக்க முடியும்னு தோணுது.

    பாடல் 54

    ஆஅம் எனக்கெளி(து) என்றுலகம் ஆண்டவன்
    மேஎம் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
    தோஒம் உடைய தொடங்குவார்க்(கு) ‘இல்லையே
    தாஅம் தரவாரா நோய்’.

    பழமொழி – ‘இல்லையே தாம் தர வாரா நோய்’

    எதற்கெடுத்தாலும் கதை சொல்லும் என் நண்பன் செல்வாவுடன் அவன் சொந்த ஊருக்கு வந்திருக்கேன். இங்கே என்னென்ன கதை சொல்லப்போறானோ. எது எப்படியோ. அவன் சொல்லறதுல உண்மை இருக்கா இல்லயான்னு நாங்க ஆராய்ந்ததே இல்ல. கேக்க சுவாரசியமா இருக்கும். பொழுதும் போகும். ஆனா சில நேரங்கள்ல எப்படா இவன் முடிக்கப்போறான்னு எரிச்சலாவும் இருக்கும். ஆனாலும் இவனுக்குக் கொஞ்சம் கற்பனை அதிகம்தான்.

    நாங்க மொத்தம் ஐந்துபேர் தங்கி இருக்கற அந்த சென்னை வீடு கலகலப்பா இருக்குன்னா அது இவனாலதான். எல்லாரும் வெவ்வேற இடத்துலேந்து வந்திருந்தாலும் வேலபாக்கற தொழிற்சாலை ஒண்ணுங்கறதால சேந்து போக வர முடியுது.

    இப்ப இவன் வற்புறுத்திக் கூப்பிட்டதால நாங்க எல்லாரும் இவன் கிராமத்துக்கு வந்திருக்கோம். பஸ்லேந்து இறங்கினதுலேந்து ஒரே நிசப்தம். நடத்தியே கூட்டிக்கிட்டுப் போறான். இன்னும் எவ்ளோதூரம் நடக்கணுமோ. முன்னாடி காலத்துல இந்த இடமெல்லாம் ஏரியும், குளமுமா இருந்திருக்கும்போல.இப்போ ஒரே பாறையும் மண்ணுமா குண்டும் குழியுமா இருக்கு. பொறுக்க முடியாம செல்வா என்ன அமைதியாவே வறீங்க. என்ன பலத்த யோசனை கேட்டே விட்டேன். கால்வேற வலிக்குது. இன்னும் எவ்ளோதூரம் நடக்கணும்?

    கொஞ்ச தூரந்தான். ஒரு மொட்டக் கல் மண்டபம் தெரியுதுபாருங்க. அதுக்குப் பின்னால அரைகிலோ மீட்டர் தான். சர்வசாதாரணமாய்ச் சொல்லிவிட்டு வீறு நடை போடுகின்றான். எங்களுக்கோ சுத்தமா முடியல. சரி அவன் வாயக்கிளறி டைம்பாஸ் பண்ணலாம்னா அவனும் சத்தமில்லாம நடக்கறான்.

    சரி. அவன் சொன்னதவச்சே ஆரம்பிப்போம். அந்த மொட்ட மண்டபம்னு சொல்றீங்களே செல்வா அது முன்காலத்துல இருந்த அரண்மனை அல்லது கோயிலோட ஒரு பகுதியோ?

    இல்ல இல்ல. அது ஒரு தனி கதை ஆரம்பித்தான் அவன். எங்க ஊர்ல மாயி னு ஒரு நாட்டியக்காரி இருந்திருக்கா. அவ ரொம்ப பேச்சுத்திறமை மிக்கவளாம்.

    அவகூட உல்லாசமா பொழுதுப்போக்கறதுக்காக ஊருக்கு ஒதுக்குப்புறமா இந்த மண்டபத்த கட்டியிருந்திருக்காரு ஜமீன்தார்.

    நேர்லயே காட்டறேன். இங்க பாருங்க. கல் தரையில பல்லாங்குழி, தாயக்கட்டம் பாம்புக்கட்டம் எல்லாம் செதுக்கி வச்சிருக்கு. அவங்க ரெண்டு பேரும் விளையாடி பொழுது போக்குவாங்களாம். ஒவ்வொரு முறை தான் தோக்கும்போதும் தன் சொத்துல ஒருபகுதிய எழுதித்தரதா ஜமீன்தார் வாக்கு குடுத்திருந்திருக்கார். கடைசியில அந்தம்மா சாமர்த்தியமா எல்லாத்தையும் எழுதி வாங்கிருச்சு. ஜமீன்தார் பைத்தியமா இந்த மண்டபத்தச் சுத்தி சுத்தி வந்து செத்துட்டாராம். அதனாலதான் இதத் திரும்ப எடுத்துக்கட்டாம பாழடைய உட்டுட்டாங்க. இப்ப கூட ராத்திரி இந்தப் பக்கமா வந்தா ஜமீன்தார் சிரிக்கறமாதிரி சத்தம் கேக்கும்னு சொல்லுவாங்க. ராத்திரி பத்துமணிக்கு மேல யாரும் இந்தப்பக்கம் வரதில்ல.

    அவன்பாட்டுக்கு சொல்லிக்கொண்டே நடந்துக்கிட்டிருக்கான். எங்களுக்கு அடிவயிறு கலக்குது. இவ்ளோ நாள் இவன் சொன்னதையெல்லாம் கதையாத்தான் கேட்டிருக்கோம். ஆனா இந்த மண்டபத்தப் பாத்ததிலேந்து இது உண்மைக்கதையா இருக்குமோன்னு மனசு நம்புது. எப்டியோ இந்த ஜமீன்தார் ‘இல்லையே தாம் தர வாரா நோய்’னு சொல்லப்படற பழமொழி மாதிரி தப்பா வாக்கு குடுத்து துன்பத்த விலைக்கு வாங்கி இருக்கார்.

    வாங்க தம்பிகளா. செல்வாவின் அப்பா எதிரில் வந்து அழைக்கிறார். ஜமீன்தார் பற்றிய நினைவிலிருந்து மீண்டு அவர் பின்னாலேயே செல்கிறோம்.

    Share
  • ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெறுவது எப்படி? – மாதவன் இளங்கோ நேர்காணல்

    ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெறுவது எப்படி? – மாதவன் இளங்கோ நேர்காணல்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    ஐரோப்பிய நாடுகளில் சமூகப் பாதுகாப்பு என்ற அமைப்பு (Social Security System) உள்ளது. அங்கே குடியுரிமை பெற்றால், உயர்தரத்தில் அமைந்த கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகள் பலவற்றையும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரும் செலவே இல்லாமல் பெறலாம். குழந்தை பிறந்தால் தாய்க்கு உதவித்தொகை, படிக்கும் மாணவருக்கு உதவித்தொகை, வேலையிழந்தால் உதவித்தொகை, திறன்வளர்ப்புப் பயிற்சிகள் எனப் பலவற்றையும் அரசே வழங்குகிறது. தன் குடிமக்கள் அனைவருக்கும் சமவாய்ப்பும் வாழ்க்கைத் தரமும் இருக்க வேண்டும் என்பதில் அரசுகள் முனைப்புடன் இருக்கின்றன. இத்தகைய ஒரு நாட்டில் வாழும் வாய்ப்பினை நாமும் பெற முடியும். அந்த நாடுகளில் பணியாற்றுவது எப்படி? எந்தெந்தத் துறைகளில் வேலைவாய்ப்பு இருக்கிறது? அங்கே குடியுரிமை பெறுவது எப்படி? அதற்கு என்னென்ன வழிகள் உள்ளன? குடியுரிமை பெறுவதால் நமக்குக் கிடைக்கும் பயன்கள் என்னென்ன? இவை அனைத்தையும் நமக்கு விளக்குகிறார், மாதவன் இளங்கோ.

    பெல்ஜியத்தில் குடியுரிமை பெற்று வாழும் மாதவன் இளங்கோ, தலைமைப்பண்புப் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார். இவர், வல்லமை மின்னிதழின் வல்லமையாளர் விருது பெற்றவர். இவருடைய சிறுகதையை வெங்கட் சாமிநாதன் உள்ளிட்ட பெரியோர்கள் பாராட்டியுள்ளனர். அம்மாவின் தேன்குழல் என்ற தலைப்பிலான இவரது சிறுகதைத் தொகுப்பினை அகநாழிகை வெளியிட்டுள்ளது. இந்த மிக முக்கியமான நேர்காணலைப் பாருங்கள்.

    ஐரோப்பியக் குடியுரிமை தொடர்பாக உங்களுக்கு ஏதும் கேள்விகள் இருந்தால், பின்னூட்டத்தில் எழுப்புங்கள். இதன் அடுத்த பகுதியில், மாதவன் இளங்கோ அவற்றுக்குப் பதில் அளிப்பார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 18 (கேளிர்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 18 (கேளிர்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    சிறுபாத்திர வரிசையில் தனிப்பாத்திரங்கள், பிற தலைமைப் பாத்திரங்களையும் துணைப் பாத்திரங்களையும் தன்னுள் அவ்வப்போது  சேர்த்துக் கொள்ளும் தொகைப் பாத்திரங்கள், தம்மளவில் குழுவாக அமையும் பாத்திரங்கள் என  இதுவரை கண்டோம். கேளிர் என்னும் தொகைப்பாத்திரம் சிக்கலான சித்தரிப்பை உடைய தொகைப்பாத்திரமாக அமைந்துள்ளது.

    ‘கேள்’ எனும் ஒருமைப் பெயர்ச் சொல்லுக்கு உரியோர்

    சேரிப்பரத்தை  

    காமக்கிழத்தியின் கோணத்தில் ‘கேள்’ என்னும் உறவுப்பெயர் நட்புடையவர் என்று பொருள்பட்டுச் சேரிப்பரத்தையைக் குறிக்கிறது. ஐங்குறுநூற்றின் மருதப் பாடல்களுள் கிழவனுக்குரைத்த பத்தில் தலைவனைப் பார்த்து அவனுக்குப் புதிதாக வாய்த்த பரத்தையை;

    “நின் கேளே” (பா.- 121-128)

    என்று மீண்டும் மீண்டும் சுட்டி அமைகிறாள் கூற்று நிகழ்த்தும் பெண். உரையாசிரியர் அவளைக் காமக்கிழத்தி என்கிறார்.

    தலைவன்

    தலைவனின் புறத்தொழுக்கம் காரணமாக அவன் தனது ‘கேள்’ இல்லை என்பதைக் காமக்கிழத்தியே;

    “கேளலன் நமக்கு அவன் குறுகன்மின்” (கலி.- 68)

    என்று வாயில் மறுப்பதைக் காண இயல்கிறது.

    திருமணத்திற்கு முன் தன் காதலன் ஏறு தழுவி வெற்றி பெற்றுப் புண்ணோடிருக்க; ஆயர்குலத் தலைவி  எல்லையில்லா மகிழ்ச்சி கலந்த அக்கறையுடன் இறைஞ்சிக்;

    “கொலையேறு சாடிய புண்ணை எம்கேளே” (கலி.- 106)

    என்று பாடியாடிக் குரவை அயர்கிறாள். தன் தலைவனைக் ‘கேள்’ என்றே சுட்டுகிறாள்.

    இல்லறத்தில் பிரிவின் போது ஆற்ற இயலாமல் இரங்கி;

    “எம்கேள் இதனகத்து உள்வழி காட்டீமோ” (கலி.- 144)

    என நிலவோடும் காற்றோடும் கடலோடும் தன் துன்பத்தைச் சொல்லி அரற்றும் மனைவிக்குக் ‘கேள்’ ஆக அமைபவன் கணவனே. தலைவி தலைவனைக் ‘கேள்’ என்று உறவுமுறை கொண்டாடும் பல பாடல்கள் தொகை நூல்களில் உள்ளன (நற்.- 359; ஐங்.- 271; கலி- 5).

    தூக்கத்தின் போது கனவு கண்டு உளறிய தலைவன் பிரிந்து செல்லப் போகிறான் எனப் புரிந்துகொண்ட தலைவி தோழியிடம் மனக்குறையுடன்;

    “இன்தீம் கிளவியாய் வாய்மன்ற நின்கேள்” (கலி.- 24)

    என்று பேசும்போது தலைவன் தோழியின் ‘கேள்’ ஆகிறான்.

    தலைவி

    தலைவனுக்குத் தானே ‘கேள்’ என்று தலைவி கூறுமிடமும் உளது. ஏறுதழுவிக்;

    “கேளாளன் ஆகாமை இல்லை” (கலி.- 101)

    என்பது தலைவியைக் ‘கேள்’ ஆக அவன் ஆளப்போகிறான் என்ற நம்பிக்கையைத் தான் உணர்த்துகிறது.

    கேளிர் என்னும் பன்மைப்பெயர்ச்  சொல்லுக்கு உரியோர்

    கிளைஞரல்லா உறவினரும் நண்பரும்

    குடும்ப உறவினருள் பங்காளிகளைக் கிளை என்று குழுப் பாத்திரமாகச்  சுட்டுவதை முன்னர்க் கண்டோம் (பார்க்க- அகஇலக்கியச் சிறுபாத்திரங்கள்- கிளை) கிளை அல்லாத உறவினரையும் நண்பரையும் கேளிர் என்னும்  தொகைப்பாத்திரத்துள்  அடக்க  இயல்கிறது.

    “கேள் கேடுஊன்றவும் கிளைஞர் ஆரவும்
    கேளல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்” (அகம்.- 93)

    என்று தொடங்கும் பாடல் தலைவன் பொருள் தேடச் சென்ற காரணத்தைச் சொல்கிறது. இங்கு பங்காளிகள் தனியாகக் கிளைஞர் என்று சொல்லப்பட்டிருந்தும்; அதற்கு முன்னரே ‘கேள்’ என்று விதந்தோதி இருப்பது அவரல்லாத உறவினரைக்  குறிக்கிறது என்பது பொருத்தமாகப் படுகிறது. ஏனெனில் அடுத்த அடியில்  ‘கேளல் கேளிர்’ என்று தொடர்ந்து பேசுவது நட்புறவு இல்லாத கேளிரை; அதாவது நொதுமலரைச்  சுட்டுகிறது.  எனவே கேளிர் நண்பரையும் கிளையல்லா உறவினரையும் உள்ளடக்கிய தொகைப்பாத்திரம் ஆகிறது. உரையாசிரியர் கேளிர் என்ற சொல்லுக்கு சுற்றம் என்று சொல்லிச் செல்கின்றனர். ‘தமர்’ என்னும் வழக்கு பலதிறப்பட்ட  சுற்றத்தைச் சுட்டப் பயின்று வருவதை முன்னர்க் கண்டோம் (பார்க்க- அகஇலக்கியச் சிறுபாத்திரங்கள்- தமர்) சுற்றம் என்னும் பொதுப்பொருள் மேற்சுட்டிய பாடலடிக்குப் பொருந்தி வரினும் இரண்டு அடிகளையும் விளக்க முற்படும் போது; கிளையல்லா உறவினரும் நண்பரும் என்று பொருள் கொள்வது ஏற்புடைத்து ஆகிறது. இதே போல கேளிர், நண்பர், நொதுமலர் மூவரையும் விதந்தோதும் பாடல் உளது (அகம்.- 279).

    “எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்” (குறுந்.- 40)

    என்ற தலைவனின் கேள்வியில் கேளிர் உறவினர் ஆவது ஒருதலை.

    மிதமிஞ்சிய காமநோயால் அவதியுறும் தன்னை இடித்துரைப்பவர்களைப் பார்த்து;

    “கேளிர் வாழியோ கேளிர் நாளும் என்” (குறுந்.- 280)

    ‘நெஞ்சம் பிணித்த அஞ்சிலோதியை ஒருநாள் புணர்ந்தால் அதற்கு மேல் அரைநாள் வாழ்க்கையும் வேண்டேன்’ என்ற தலைவன் பேச்சில் இடம் பெறும் கேளிர் நண்பர் கூட்டத்தினர் என்பதில் ஐயமில்லை.

    கேளிர் பேச்சு

    தான் சந்தித்த பெண்ணிடம் இவ்வாறு அடக்கமாட்டாத ஆர்வம் கொள்வது தவறு எனும் நண்பர் கூட்டத்திடம்;

    “இடிக்கும் கேளிர் நும்குறை ஆகம்
    நிறுக்கல் ஆற்றினோ நன்று மற்று இல்ல” (குறு.- 58)

    என்கிறான் தலைவன். ‘என்னை இடித்துரைக்கும் உங்கள் செயலால் என் உடம்பு உருகாமல் நிறுத்த இயலுமானால் அதைக்  காட்டிலும் நற்செயல் வேறேதும் இல்லை’ என்ற மறுமொழியைத் தலைவன் உரைக்கும் காரணம் அவனது நண்பர்கள் அவனிடம் கூறிய அறிவுரையே ஆகும். ஆக கேளிர் பேசியமை பற்றித் தலைவன் உரைக்கிறான். உரையாசிரியர் இப்பாடலில் இடம்பெறும் கேளிர் பாங்கனைக் குறிப்பதாகப் கூறியுள்ளார். பாங்கன் ஒருமைக்குரிய உறவுமுறைப் பெயர்ச்சொல் ஆகும். கேளிர் பன்மைப் பெயர்ச்சொல் ஆதலால்; அப்பொருள் ஏற்புடைத்தன்று. பாங்கன் துணைப்பாத்திரமாகத் தொல்காப்பியரால் குறிப்பிடப்படுகிறான். பாங்கன் கூற்று நிகழ்த்தும் இடங்களையும் அவர் வரையறுத்துள்ளார். ஆனால் கேளிர் கூற்று நிகழ்த்துவது பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை.

    உறவினராகும் கேளிரின் பேச்சு  பற்றிய குறிப்பு செவ்விலக்கியக் காலக் குடும்ப அமைப்பைத் துல்லியமாகக் காட்டுகிறது. பொருள் தேடிச் சென்றவன்; வெற்றிகரமாக வினைமுடித்து  விட்டான்.  இனி வீடு நோக்கிப் பயணத்தைத் தொடங்க வேண்டும். வீட்டை விட்டுக் கிளம்பிய நாளில் இருந்து காட்டைக் கடக்கவும்; அயல்நாட்டில் பாடுபடவும் தான் கடந்த சோதனைகளும் கொண்ட விடாமுயற்சியும் மனதில் தோன்றி மறைகின்றன. அத்தனைக்கும் துணையாகத் தன் கேளிர் கூறிய சொற்களும் அவர்களது அன்பும்  ஊக்கமூட்டியமையை நினைத்துப் பார்க்கிறான். தான் கிளம்பிய போது அவர்கள் அனைவரும் வழியனுப்பிய காட்சி மனக்கண்ணில் ஓடுகிறது.

    “பெறலரும் கேளிர் பின்வந்து விடுப்ப” (அகம்.- 351)

    அது தன் கடமையை முடிக்க எந்த அளவிற்குத் துணைநின்றது என்பதை நெஞ்சோடு உரைக்கிறான். ‘சென்று வா’  என்று விடைகொடுத்த உறவினரின் பேச்சு இங்கே தலைவன் மனதிற்குள் அசைபோடும் அன்பு வெளிப்பாடாக அமைந்து அழகூட்டுகிறது. கேளிர்க்குக்  குடும்ப அமைப்பில் இருந்த முக்கியத்துவத்தைப் பிற பாடல்களிலும் காண இயல்கிறது (அகம்.- 151&173).

    பின்புலத்தில் கேளிர்

    பரத்தமையில் ஈடுபட்ட தலைவன் தன்  வீட்டிற்குத் திரும்புகிறான். தலைவியோ வாயில் மறுத்து உள்ளே வரக்கூடாது என்கிறாள். தோழி இடித்துரைக்கிறாள். அவனை உள்ளே விட்டால் அதற்குப் பின்னர் என்ன ஆகும் என்று தலைவி விளக்கம் கூறுகிறாள்.

    “கள்ளின் கேளிர் ஆர்த்திய உள்ளூர்ப்
    பாளைதந்த பஞ்சியங் குறுங்காய்
    ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
    ஆதி அருமன் மூதூர் அன்ன
    அயவெள் ளாம்பல் அம்பகை நெறித்தழை
    தித்திக் குறங்கின் ஊழ்மாறு அலைப்ப
    வருமே சேயிழை” (குறுந்.- 293)

    என்கிறாள். இங்கே ‘கள்ளின் கேளிர்’ என்று குறிப்பிடப்படுபவர் கள்ளுக்கடைக்கு உரியவரான களியர். ‘கள்ளை இறக்கச் சென்ற சுற்றம்;  பனைமரம் பூத்துக் காய்த்து விட்டதால் அதற்குப் பதிலாக பஞ்சு போல் மிருதுவான நுங்கின் காய்களைப் பறித்துக் கொண்டு வரும்; ஆதி அருமன் என்பானது மூதூரைப் போல; வளமான வெள்ளாம்பலோடு ஒத்துத் தோன்றும் நெருக்கிக் கட்டின தழையுடை தன் தொடையில் மாறி மாறி அலைத்து மோத;  இளவயதினளாகிய அப்பெண் வீடுதேடி வந்து விடுவாளே’ என்று தயங்குகிறாள். இங்கு பனைமரம் பூத்துக் காய்த்து மென்மையான நுங்குடன்  இருப்பது அப்பெண்ணின் இளமை, அழகு, இன்பம்  அனைத்தையும் உள்ளுறுத்தி  அமைகிறது. அவளது ஆடை அலங்காரம் பற்றிய வருணனை தலைவியின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது. இவ்வளவு இளமையும் அழகும் வாய்த்த பெண்ணைத் தலைவன் தவிர்க்க மாட்டான்; அவளும் வீடு தேடி வரத்  தயங்க மாட்டாள். அப்படி வந்து விட்டால் பின்னர் என்ன ஆகும்? என்று வினவுகிறாள். பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில் இல்லறத்தில் ஈடுபடும் பெண்டிர் எதெற்கெல்லாம் பயந்து இருந்தனர் என்பதுடன்; ஆடவரின் புறத்தொழுக்கம் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தியது என்ற அவலம் இப்பாடலில் வெளிப்பட்டுச் சமூகநிலையைக்  காட்டுகிறது.

    உவமையில் கேளிர்

    பொருள்வயிற் பிரிய நினைக்கும் தலைவனிடம் செலவு அழுங்கக் கூறும் தோழி;

    “மேல்நின்று மெய்கூறும் கேளிர்போல் நீசெல்லும்” (கலி.- 3)

    ‘கானமே உன் செலவை விலக்கும்’ என்கிறாள். உனக்கும் மேம்பட்டவராக நின்று இடித்துரைக்கும் நண்பர்  கூட்டம் போல நீ செல்லும் காடு உன்னைத் தடுக்கும் என்ற உவமையில் கேளிர் தலைவனை நெறிப்படுத்தும் மேன்மை மிகுந்த நண்பர் குழுவினர் ஆவர்.

    வேட்கை மிகுந்த தலைவன் தோழியிடம் ஏதோ கூற நினைக்கிறான். ஆனால் வார்த்தை வரவில்லை. அவனது வாய்ச்சொற்களை எதிர்பார்த்துத் தோழி அவனது முகத்தை நோக்கும் போது அவளது பார்வையைக் கூடத் தாங்கமாட்டாமல் நிலத்தை நோக்கினான். இந்த மென்மையான நுட்பமான உணர்வுப் போராட்டத்தை  அழகான உவமை மூலம் தோழி உரைக்கிறாள்.

    “அல்லல் களைதக்க கேளிர் உழைச் சென்று” (கலி.- 61)

    ‘தம் வருத்தத்தைக் களையத்தக்கவர் என்று நினைத்து வாய்விட்டுப் பேசத் தொடங்கிப்; பின்னர் முழுவதுமாக உரைக்க மாட்டாமல் தடுமாறுவது போலத் தலைவன் பலமுறை என்னைப் பார்த்தான்’ என்று புனைகிறாள். இவ்உவமையில் இடம்பெறும் கேளிர் உறவினர் ஆவர். இதுபோல் உவமையில் கேளிர் இடம்பெறும் பிற பாடல்களும் உள (கலி.- 149).

    முடிவுரை

    தலைவன், தலைவி, சேரிப்பரத்தை முதலியோர் ‘கேள்’ என்னும் உறவுமுறைப் பெயர்ச் சொல்லால் குறிப்பிடப்படுகின்றனர். உரையாசிரியர் சுற்றம் என்று குறிப்பிடும் கேளிர் என்னும் பன்மைப் பெயர்ச்சொல் தொகைப் பாத்திரமாகிக் கிளையல்லா உறவினரையும்  நண்பரையும் தன்னுள் அடக்கிக் கொள்ளக் கூடியது. உரையாசிரியர் கேளிர் என்ற சொல்லுக்குப் பாங்கன் என்று பொருள்  கூறுவது ஏற்புடைத்தன்று. பாங்கன் ஒரு துணைப்பாத்திரமாகும். எனினும் நண்பரைக் குறிக்கும் கேளிர் சிறுபாத்திரம் ஆவது குறிப்பிடத்தகுந்தது.  ‘கள்ளின் கேளிர்’ என்று குறிப்பிடப்படுபவர் கள்ளை இறக்கச் சென்ற சுற்றம் ஆகும். பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில் இல்லறத்தில் ஈடுபடும் பெண்டிர் எதெற்கெல்லாம் பயந்து இருந்தனர் என்பதுடன்; ஆடவரின் புறத்தொழுக்கம் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தியது என்ற அவலம் கேளிர் பற்றிய குறிப்பு இடம்பெறும் பாடலில் வெளிப்பட்டுச் சமூக நிலையைக்  காட்டுகிறது. கேளிர்  பற்றிய குறிப்பு செவ்விலக்கியக் காலக் குடும்ப அமைப்பைத் துல்லியமாகக் காட்ட உதவுகிறது. பின்புலத்திலும் உவமைகளிலும் கேளிர் இடம்பெறுவதுண்டு.

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 14

    பரிமேலழகர் உரைத்திறன் – 14

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                  
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    சொன்னதும் சொல்ல நினைத்ததும்

    முன்னுரை

    திருக்குறள் அதிகாரப் பொருண்மைகளைப் பகுத்துக் கொண்டு உரைகூறுவது பரிமேலழகர்க்கேயுரிய உரைநெறியாகும். அந்த வகையில் ‘கடவுள் வாழ்த்து’ என்னும் முதல் அதிகாரத்தின் முதற்பாடலை ‘முதற்கடவுளது உண்மை கூறுவதற்கானது’ என்று எழுதுவார். அதாவது ‘கடவுள் என்று ஒருவர் இருக்கிறார்’ என்னும் உண்மையை முதற்பாடல் சொல்லுவதாகப் பரிமேலழகர் கூறுகிறார். ஆனால் பாட்டின் கட்டமைப்பு அவ்வாறாக இல்லை.

    “எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலையுடையன. அதுபோல உலகம் ஆதிபகவன் என்னும் முதலை உடைத்து”

    என்று கருதுமாறே அமைந்துள்ளது. என்ன சிக்கல்? உவமம் சரி. அந்த உவமத்தைப் பொருளோடு பொருத்தினால் உலகம் முன்னதாகவும் கடவுள் பின்னதாகவும் ஆகும். ஆகவே கடவுள் ‘உலகிற்குக் காரணம்’ என்னும் பொருள் கிட்டாது. பிறகு ஏன் திருவள்ளுவர் இவ்வாறு கூறினார்? உவமத்தை விளக்கிவிடலாம். பொருளில் கடவுளாகிய காரணத்தை விளக்க முடியாது. கடவுளால் உண்டாக்கப்பட்ட உலகை வைத்துத்தான் அதற்கான கருத்தாவை அடையாளப்படுத்த முடியும். கிழக்காற்றில் நீர் வருகிறது என்றால் மேற்கே மழை பெய்திருக்கிறது என்னும் அனுமானம் போல! எனவே பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்.

    “காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் உலகின் மேல் வைத்துக் கூறினார்”.

    இந்த விளக்கத்தில் கடவுள்தான் உலகினைப் படைத்தார் என்றால் கடவுளின் இருப்பை எப்படி நிலைநிறுத்துவது? அதனால் காரிய காரணமாக ஆராய்கிறார். ஆய்ந்து மேற்கண்ட விளக்கத்தைத் தருகிற பரிமேலழகர், அதனாலேயே உலகம் முன்னாக கடவுள் பின்னாக எனக் கருதுதல் வேண்டா. காரணமாகிய கடவுள்தான் முன்னது என்பதைக் கருத்தாகக் கொள்க என விளக்கம் தருகிறார்.

    ‘கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க”

    என்று எழுதுகிறார். இது குறட்பாவின் கிடக்கை நிலைக்கு மாறுபட்டது. இந்தக் கருத்தினை வள்ளுவர் சொல்ல வருகிறார் என்பது பரிமேலழகரின் அனுமானத்தில் வந்த ஆய்வுண்மை. சொல்லப்பட்ட குறட்பாவின் கருத்தினை மட்டும் கருத்திற் கொள்ளாது உண்மையில் அது சொல்ல வருகிற கருத்தினை உணர்ந்து கொள்வதே ஓதுதலின் பயன் என்பது பரிமேலழகர் எண்ணமாகும். இவ்வாறு குறட்பா ஒன்றாகவும் அது உணர்த்த வரும் கருத்து வேறொன்றாகவும் உள்ள பல இடங்களில் சிலவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.

    எமனும் தோற்பான்!

    மரணம் பலவகைப்படும். ‘இயற்கையெய்தினார்’ ‘காலமானார்’ ‘படுகொலை’ ‘பயங்கரக்கொலை’ ‘பரிதாபச் சாவு’ ‘தீக்கிரையானார்’ ‘வெள்ளத்தில் மூழ்கினார்’ ‘விபத்தில் மரணம்’ ‘உயிர் பிரிந்தது’ ‘வீரமரணம்’ என்னும் சொற்களெல்லாம் மரணத்தின் பல சூழல்களையும் தன்மைகளையும் குறிப்பிட்டுக் காட்டும். கொல்லாமையாகிய அறத்தினைப் பின்பற்றி ஒழுகுபவனை உயிர் பறிக்கும் எமன் அண்டமாட்டான் என்பது பின்வரும் திருக்குறளுக்கான பொருள்.

    “கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
    செல்லாது உயிருண்ணும் கூற்று”. (326)

    மேலே சொன்ன சாவுகள் பலவகையாயினும் எமனின் ‘கடமையுணர்வு’ என்ற அளவில் மாறுபாடு ஏதுமில்லை. சாவு எத்தகையதாயினும் அதற்கு விதியைக் காரணமாக்குவது உலகியல். இந்தக் குறளுக்குக்,

    “கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின் மேல் உயிருண்ணும் கூற்றுச் செல்லாது.”

    என்று அழகர் எழுதியிருக்கும் உரையிலும் ‘கூற்றுச் செல்லாது’ என்றுதான் எழுதப்பட்டுள்ளது. ஆனால் ‘கொல்லாமை’ என்பதைக் கொலைக்கு எதிர்நிலையாகக் கருதுகிறாராம் திருவள்ளுவர். அது மேலே சொன்ன மரணங்களுள் கொலைக்கு நிகராம். ஊனுக்குக்காக, உணவுக்காகக் கொல்லப்படுவன அஃறிணை உயிர்களேயானாலும் அவையும் கொலையே என்பதே வள்ளுவர் கருத்தாம். அதனால்தான் அவர் கொல்லாமை என்று பெயர் வைத்தாராம்!. பிற உயிர்களைக் கொல்லாதவனுக்குச் சாவில்லை என்பதுதான் திருக்குறள் சீர்கள் தரும் பொருள். பரிமேலழகர் தனது சிந்தனையால் கொல்லாமை என்னும் சொல் நோக்கி இன்னொரு விளக்கத்தைப் பதிவு செய்கிறார். “உண்பவன் கொலை செய்யாவிட்டால் உண்பவனை எமனும் கொலை செய்யமாட்டான்”

    “இப்பேரறம் செய்தான் தானும் கொல்லப்படான். படானாகவே, அடியிற் கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார் ‘வாழ்நாள் மேல் கூற்று செல்லாது’ என்றார். செல்லாதாகவே ‘காலம் நீட்டிக்கும். நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து”

    உரையறிஞர் எவர் சிந்தனைக்கும் அவ்வளவு எளிதாக பிடிபட இயலாத கருத்து இது. எமனால் கொல்லப்படான் என்றால் அவனுக்கு மரணமில்லை என்பது பொருளன்று. மரணம் ஒத்திவைக்கப்பட்டு, வாழ்நாள் நீட்டிக்கப்பட்டு அக்காலத்துள் ஞானம் பிறக்க, பாவங்களை ஒதுக்கிய நிலையில் உயிர் வீடு பெறும் என்னும் கருத்தைத்தான் இந்தக் குறள் கூறுவதாகப் பரிமேலழகர் கருதுகிறார். மரணம் வராது என்றார் வள்ளுவர். உண்மையில் ஞானத்திற்காக மரணம் வரும் காலம் ஒத்திவைக்கப்படுகிறது என்கிறார் பரிமேலழகர்.

    விலகும் அளவு வேதனையில்லை

    அறத்துப்பாலில் ‘துறவு’ என்னும் அதிகாரம் உலக இன்பங்களைத் துறத்தல் என்பது பற்றிக் கூறுகிறது. துறவறவியலாக இருந்தாலும் பொதுவாகப் பொருளின் மீது வைக்கின்ற பற்றே துன்பத்திற்குக் காரணம் என்பதைக் கூறுகிறது. “ஈட்டல், ஈட்டியவற்றைக் காத்தல் – காத்தவை குறைபடுதல், கெடுதல் ஆகிய அனைத்தும் துன்பம். எனவே இன்பத்திற்காகத் தேடும் பொருள் துன்பத்திற்கு உறைபதியானது” என நாலடியார் கூறுகிறது. திருக்குறளில்,

    “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்” (341)

    என்ற குறட்பா “ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான், அவன் அப்பொருளால் அப்பொருளால் துன்பம் எய்துதல் இல்லை” என்னும் பொருள் தாங்கி நிற்கிறது. மேலே காட்டிய நாலடியாருக்கு விளக்கமாகப் பரிமேலழகர்,

    “ஈண்டுத் துன்பம் என்றது இம்மைக்கண் அவற்றைத் தேடுதலானும் காத்தலானும் இழத்தலானும் வருவனவும் மறுமைக்கண் பாவத்தான் வருவனவும் ஆய இருவகைத் துன்பங்களையும் ஆம்.”

    என்று விளக்கமளித்திருக்கிறார். ‘யாதனின்’, ‘அதனின்’ ஆகிய இரண்டு சொற்களையும் இரண்டு முறை பயன்படுத்திய நுட்பம் நோக்கிய அழகர் அவைகொண்டு ஒரு கருத்தினைப் பதிவிடுகிறார். ‘எல்லாவற்றையும் ஒருசேரத் துறத்தல் இயலுமா?’ என்னும் ஐயத்திற்கு ‘அவ்வாறு துறப்பது தலை. இருப்பினும் பற்று வைத்துள்ள பொருட்களில் ஒவ்வொன்றாகத் துறக்க அவ்வொவ்வொரு பொருளாலும் வரக்கூடிய துன்பம் நீங்கும். இதனைத்தான் இந்தக் குறட்பா தனது கருத்தாகக் கொண்டிருக்கிறது என்கிறார்.

    “எல்லாப் பொருளையும் ஒருங்கே விடுதல் தலைமை; அஃதன்றி ஒரொ ஒன்றாக விடினும் அவற்றான் வரும் துன்பம் இலனாம் என்பது கருத்து.”

    என்பது பரிமேலழகர் கருத்தாக எழுதிக்காட்டும் தொடர். பற்று வைத்த பொருள்களிலிருந்து அதனை நீக்கினால் அவற்றால் வரும் துன்பங்கள் நீங்கும் என்பது திருக்குறள் முற்றும் துறக்க இயலாதவர் ஒவ்வொன்றாகத் துறந்தாலும் அவற்றான் வரும் துன்பங்கள் நீங்கும் என்பது பரிமேலழகர் கண்ட கருத்து. “யாதனின் நீங்கியான் அதனின் நோதல் இல்லை. யாதனின் நீங்கியான் நோதல் அதனின் இல்லை” என்று நிரல்பட ஓதினால் பரிமேலழகரின் நுட்பம் புரியக் கூடும்.

    கெட்டவனை நினைத்தால் நன்மை வருமா?

    ‘கஞ்சா அடித்தே கந்தசாமி செத்தான் தெரியுமா?’ என்று ஒருவர் மற்றொருவருக்கு அறிவுரை கூறினால் அவர் கஞ்சாவிற்கு விளம்பர அலுவலர் அல்லர். கந்தசாமியை உவமமாக்கி உயார்த்துகிறார் என்பதுமன்று. அவர் யாருக்கு அறிவுரை கூறுகிறாரோ அவருக்கு நன்மை தர வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாக இருக்கும், இருக்க வேண்டும். இந்தக் கருத்தியலின் அடிப்படையில் திருவள்ளுவர் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.

    “இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
    மகிழ்ச்சியில் மைந்துறும் போழ்து” (539)

    என்பதே அந்தக் குறட்பா. கடன் வாங்கிக் கந்தசாமி குடிக்கிறபோது ‘குடியால் அழிந்த குப்புசாமியை எண்ணிக்கொள்’ என்பது போல அமைந்த பாடல் இது.

    “அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும்பொழுது முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க”

    என்று பரிமேலழகர் பொழிப்புரை எழுதினார். ‘கெட்டவர்களை எண்ணுக’ எனச் சொல்வது திருவள்ளுவர் நோக்கமன்று. அவர்களை எண்ணினால் மகிழ்ச்சிக்கான காரணங்களால் வரும் ஆணவம் இல்லாது ஒழியும். ஒழியவே அவற்றால் வரும் சோர்வில் மயங்காது தப்பலாம் என்பது கருத்து. மகிழ்ச்சிக்கான காரணங்கள் செல்வம், இன்பம், வீரம் முதலியனவாம். அவற்றால் அழிந்தவர் இரணியன், சூரபதுமன், இராவணன், சச்சந்தன், துரியோதனன் முதலியோர். இவர்கள் எவ்வாறு அழிந்தார்கள் என எண்ணினால் எண்ணுபவர் அந்த மகிழ்ச்சியில் மதிமயங்கார் என்பது கருத்து. இதனைக்,

    “கெட்டாரை உள்ளவே ‘நாமும் அவ்வாறே கெடுதும்’ என்று அதன் கண் மைந்துறார் என்பது கருத்து”

    பிறர் பாட்டை மட்டும் நோக்கப் பரிமேலழகர் பாடியவரின் உள்ளத்தையும் பார்க்கிறார்.

    சோம்பல் மிகக் கெடுதி பாப்பா!

    வினைசெய்யுங்கால் குணங்களின் மாறுபாட்டால் ஏற்படும் சோர்வு பேரழிவை உண்டாக்கும், என்பது அறிந்ததே. அதனால்தான் வள்ளுவர் தொடங்கிப் பாரதி வரைக்கும் அது கண்டிக்கப்படுகிறது. “நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்’ என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடியதும் காண்க. சோம்பலைச் சோம்பலாகவே கருதி அதனைக் கைவிட வேண்டும் என்னும் கருத்தினைப் பின்வரும் குறட்பாவில் வலியுறுத்துகிறார்.

    “மடியை மடியா ஒழுகல் குடியைக்
    குடியாக வேண்டு பவர்” (602)

    இந்தக் குறளுக்குத் “தாம் பிறந்த குடியை மேன்மேல் உயரும் நற்குடியா வேண்டுவார் மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக.” எனப் பொழிப்புரை கூறிய பரிமேலழகர்,

    “நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி நெருப்பை நெருப்பாகவே கருதுக’ என்றாற்போல மடியில் தீயது பிறிதின்மை பற்றிப் பின்னும் அப்பெயர் தன்னானே கூறினார். அங்ஙனம் கருதி அதனைக் கடிந்து முயன்று  ஒழுகவே தாம் உயர்வர். உயரவே குடி உயரும் என்பார் ‘குடியைக் குடியாக வேண்டுபவர்’ என்றார்.”

    என விளக்கமெழுதிக் காட்டுகிறார். இந்தப் பாட்டில் சோம்பலைச் சோம்பலாகக் கருதுக என்றுதான் இருக்கிறது. இது எப்படி ஒரு நீதியுரைத்ததாகும்? சோம்பலைச் சாதாரணமாகக் கருதாது அதனை (அதனால் வரும் கேடுகளை முன்வைத்து) அதுவாகவே கருதிக் களைய வேண்டும். இல்லாவிட்டால் குடி அழியும் என எச்சரிக்கை செய்கிறார்.

    ‘அங்ஙனம் ஒழுகாக்கால் குடி அழியும் என்பது கருத்து’.

    ‘நினைக்க’ என்று வள்ளுவர் கூறுகிறார். ‘நீக்காவிட்டால் நின் குடி அழியும்’ என்னும் அவர் கருத்தினைப் பரிமேலழகர் கண்டறிகிறார்.

    நம்மையறியாரை நாமறிவோம்

    ‘அமைச்சு’ என்னும் தலைப்பில் அமைந்த அதிகாரம் அமைச்சனது தன்மைகளையும் செயல்களையும் கூற வந்தது. அதில் ஆறாவது பாடலாக அமைந்திருப்பது,

    “மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
    யாவுள முன்னிற் பவை?” (636)

    என்னும் குறுட்பாவாகும். இந்த வினா வடிவத்தில் முடிந்திருக்கும் இதன் உள்ளடக்கம் “அறிவுள்ளவனால் இனங்கண்டு அழிக்க முடியாத எதிரிகள் உண்டா? என்பதே. இதற்கான பரிமேலழகர் பொழிப்புரை இப்படி அமைகிறது.

    “(இயற்கையாகிய) நுண்ணறிவை (செயற்கையாகிய) நூலறிவோடு உடையராய அமைச்சர்க்கு மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை யாவையுள?”

    இந்தப் பொழிப்புரையில் இயற்கையறிவு, செயற்கையறிவு என்னும் அறிவு மூலங்களைச் சுட்டும் பரிமேலழகர் குறட்பாவின் கிடக்கை நிலையிலேயே உரைகாண்கிறார். காணவே வினா வடிவத்திலேயே பொருளும் நிறைவடைந்துவிடுகிறது. வினாவைத் தொடுப்பதா படைப்பின் நோக்கம்? வழிகாட்டுவதுதான் படைப்பின் நோக்கம். “முன்னிற்பவை யாவுள?’ என்னும் வினாவிற்கு ‘ஏதுமில்லையாம்’ என முடித்து விடலாம். ஆனால் பரிமேலழகர் இன்னும் ஒருபடி மேலே சிந்திக்கிறார். சிந்தித்து எழுதுகிறார்.

    பகைவர் சூழ்வனவற்றைத் தாம் அறிந்து அழித்து அவர் அறிந்து அழியாதன தாம் சூழ்வர் என்பது கருத்து.

    ஈரறிவும் கலந்தமைந்த அறிவுடைய அமைச்சர்களுக்கு அவற்றினும் மிக்க நுட்பமுடைய சூழ்ச்சிகள் இல்லாமற் போவதற்குக் காரணம் என்ன என்பதைத் தமது தனிநோக்கினால் கண்டறிந்து எழுதுகிறார். பகைவர் செய்வனவற்றை இவருடைய நுண்ணறிவால் அறியக்கூடுமாம். அறிந்து அவற்றை அழிப்பாராம். பகைவர் அறிய முடியாதவற்றையும் அழிக்க முடியாதவற்றையுமே இவர் எண்ணுவாராம். இதுதான் சொல்ல வந்த அமைச்சர் பெருமையாம். இவர் தரும் இந்த விளக்கத்தினால் தம்முடைய அறிவு நுட்பத்தையே முன்னெடுக்கிறாரேயன்றிப் பகைவர் அறிவு பற்றிக் குறைத்து மதிப்பிடவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

    அடுத்தவர்க்கே வேண்டுமெனின் அமைச்சர்க்கு வேண்டாமா?

    மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களின் அடக்கத்தைத் திருவள்ளுவர் பேசியிருக்கிறார். வாயைத் தவிர ஏனைய புலன்கள் அவற்றுக்கான பொறிகளையே குறிக்க, ‘வாய்’ என்னும் புலன் நாவையே  குறிக்கும். வாய் பேசாது. நாக்குத்தான் பேசும். மருத்துவர் ‘வாயைத் திற’ என்றால் இரு தாடைகளைத் திறப்பதைக் குறிக்கும். வாயை மூடு என்றாலும் அந்த நிலையே. ஆனால் ஒருவன் பேசுகிறபோது ‘வாயை மூடு’ என்றாலோ ‘நீ வாயைத் திறக்காதே’ என்றாலோ அப்போது அது தாடைகளைக் குறிக்காது. நாவினைத்தான் குறிக்கும். திருவள்ளுவர் ‘நாகாக்க’ என்றாரேயன்றி ‘வாய்காக்க’ என்றார் அல்லர். ‘நாநலம்’ என்றாரேயன்றி ‘வாய்நலம்’ என்றார் அல்லர். நாக்குத்தான் நலன் உண்டு. வாய்க்கு நாற்றந்தான் உண்டு. நாக்கு நாறாது. வாய்தான் நாறும். ‘நாவினால் ‘சுட்ட வடு’ என்றாரேயன்றி ‘வாயினால் சுட்ட வடு’ என்றார் அல்லர். ஆனால் எதிர்மறையில் ‘வாயுணர்வு மாக்கள்’ என்பார். வாயடக்கம் என்பது நாவடக்கமே.

    “நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
    யாநலத்து உள்ளதூஉம் அன்று” (641)

    என்னும் பாடல் ‘சொல்வன்மை’ என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ளது. இதற்குப் பரிமேலழகர் எழுதியிருக்கும்,

    “அமைச்சர்க்கு இன்றியமையாக் குணம் ஆவது சான்றோரான் ‘நாநலம்’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல் அந்நலம் பிறர்க்கும் பிறநலம் எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கது ஆகலான்.”

    என்னும் பொழிப்புரை குறட்பாவிலிருந்து வெகுதொலைவு விலகிப்போயிருப்பதைக் காணலாம். ‘நாநலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று’ என்று பொதுவாகத்தான் சொல்லப்பட்டுள்ளது. இதுதான் உயிரான உள்ளடக்கம். பரிமேலழகர் இயல், அதிகாரம் ஆகியவற்றையெல்லாம் சீர்தூக்கிச் சொற்களை வருவித்து மிக ஆழமாக உரைகாண்கிறார். இது அமைச்சியலில் இருப்பதால் பொதுவாகச் சொல்லப்பட்ட இப்பாடற் கருத்தினை அமைச்சர்க்கு ஏற்றியுரைக்க விழைகிறார். அதனால்,

    “பிரித்தல் பொருத்தல் முதலிய தொழில் இல்லாதார்க்கும் இஃது இன்றியமையாததாயபின் அத்தொழிலார்க்குக் கூறவேண்டுமோ என்பது கருத்து.”

    அழகரின் இந்தத் தொடரை நோக்காவிட்டால் பொழிப்புரையின் முதற்பகுதி விளங்காது. ஏனென்றால் அது குறட்பாவில் சொல்லப்படாத கருத்து. ஆனால் அதுதான் திருவள்ளுவர் சொல்ல வருகிற கருத்து. அமைச்சுப்பணி இல்லார்க்கே இது இவ்வளவு இன்றியமையாது எனின் அமைச்சுப்பணி உள்ளார்க்குச் சொல்ல வேண்டுவதில்லை. அவருக்கு மிக மிக இன்றியமையாதது என்பதையே திருவள்ளுவர் கருத்தாக்கிச் சொல்கிறாராம்.

    இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா?

    காமத்துப்பாலில் அமைந்துள்ள குறட்பாக்களுக்குத் துறைதழுவி உரையெழுதியவர் பரிமேலழகர். அதாவது திருவள்ளுவரை முற்றிலும் மறைத்துத் தலைமக்கள் கூற்றாகவே காட்சிப்படுத்தும் பேராற்றல் அந்த உரைக்கு உண்டு. ‘ஒத்த அன்புடைய நுமக்கு ஒரு பொழுதும் விடாத முயக்கமே இனியது’ என வரைவுகடாய தோழிக்குச் (தலைவன்) சொல்லியது’ என்னுந் துறையில் அமைந்த பாடல்,

    “வீழும் இருவர்க்கும் இனிதே வளியிடை
    போழப் படாஅ முயக்கு” (1108)

    என்பதாகும். இந்தப் பாடலுக்குத் தலைமகன் கூற்றாகவே உரையெழுதியிருக்கிறார் பரிமேலழகர். அவன் தோழியிடம் இப்படிச் சொல்கிறான்.

    “நீ சொல்லுகின்றது ஒக்கும். ஒரு பொழுதும் நெகிழாமையின் காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம், ஒருவரையொருவர் விழைவார் இருவர்க்கும் இனிதே!”

    திருவள்ளுவரின் திருக்குறளைத் தலைவனுக்காக்கியதே நுண்ணியம். களவொழுக்கத்தில் வந்து சேர்வதும் சேர்ந்து பிரிவதும் துன்பமல்லவா? மணம் செய்து கொண்டால் பிரியாது இருவரும் எப்பொழுதும் முயங்கிக் கிடப்பதை நீ விரும்பவில்லையா? என்பதுபோல் தோழி வினவுகிறாள். அதற்குத் தலைமகன் தோழியின் கூற்றினை அப்படியே உள்வாங்கி “நீ சொல்லுகின்றது ஒக்கும்” அதாவது (நீ சொல்லுவது சரிதான்) என்பதுபோல விடையிறுக்கிறான். பாட்டில் தலைமகன் கூற்று இந்த அளவிற்கே அமைய. இதனால் ‘தலைமகன் கூறவரும் கருத்தென்ன?’ என்பது புலப்படவில்லை. தோழியை வழிமொழிவது அவன் பணியன்று. வரைவுடம்படாது களவொழுக்கத்தை நீட்டிக்கச் செய்வதே அவன் உட்கிடக்கை. அந்த எண்ணத்தைத்தான் பரிமேலழகர் கண்டறிந்து பதிவிடுகிறார் இப்படி.

    “ஈண்டு இருவர் இல்லை. இன்மையான் இஃது ஒவ்வாது என்பது கருத்து”

    ‘நாங்கள் இருவராக இருந்தால் அல்லவா அவ்வாறு இணைய வேண்டும். நாங்கள் ஒருவராகவே நிலைப்பதால் நீ சொல்வது பொருந்தாது’ என்பதைத்தான் இப்படி ‘நீ சொல்லுகின்றது ஒக்கும்’ எனச் சொல்லுகிறானாம்.

    தந்தவள் அவள்! நீக்க வேண்டியவள் நீ!

    தலைவியைச் சந்திக்கும் முன்னர் அவனுக்குக் காதற் துன்பமும் தெரியாது. அது நீக்கும் நெறியான மடலூர்தலும் தெரியாது. ‘இவ்வாற்றாமையும் மடலும் நுமக்கு எவ்வாறு வந்தன?’ என்று தோழி வினவுகிறாள். தலைமகன் பின்வருமாறு விடைதருகிறான்.

    “தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
    மாலை உழக்கும் துயர்” (1135)

    “மாலைப் பொழுதின்கண் அனுபவிக்கும் துயரினையும் அதற்கு மருந்தாய மடலினையும் முன்னர் அறியேன். இது பொழுது எனக்கு மாலைபோலத் தொடர்ந்த சிறுவளையினை உடையாள் தந்தாள்” என்பதே தலைமகனின் விடையாக அமைகிறது. தோழியின் வினாவிற்கு விடைசொல்வது அன்று தலைமகன் நோக்கம். அந்த நோயினால் ஏற்பட்ட துன்பத்தினையும் அது நீங்கக் கைகொள்ளவிருக்கும் மடலூர்தலையும் தவிர்ப்பதற்குத் தோழி உதவ வேண்டும் என்பதே அவன் உள்ளக்கிடக்கை. “நீ அவளிடம் சென்று என் காமத்துயர் சாற்றி, மடலூர்தலுக்கு முன்பாகவே மணவினை நிகழ ஆவன செய்க’ என்று அவன் கருதுவதைத்தான் இந்தப் பாட்டு சொல்கிறதாம்.

    “இவை அவள் தந்தன வாகலின் நின்னால் நீங்கும்” என்பது கருத்து.’

    என்னும் நுட்பமான உரை பரிமேலழகருடையது. ‘யார் தந்தது என நீ கேட்டாய். தந்தவள் பெயர் சொன்னேன். எனவே நீக்கியருள வேண்டியது நின் கடன்’ எனத் தலைமகன் கருத்தினைப் பரிமேலழகர் கண்டறிந்து கூறுகிறார்.

    நிறைவுரை

    திருவள்ளுவர் சொன்னவற்றை மேம்போக்காக நோக்காது அவர்தம் உள்ளத்தின் ஆழம் காண முயன்றவர் பரிமேலழகர். அந்த முயற்சிகளில் ஒன்றுதான் திருவள்ளுவர் சொன்னது ஒன்றாக இருக்க, அவர் சொல்ல நினைத்ததைக் கண்டறிந்து பந்திவைக்கும் பரிமேலழகர் உரைத்திறன். ‘முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை நகைமொக்குள் உள்ளது ஒன்று உண்டு’ (1274) எனத் தலைவன் தலைவியின் முறுவலை ஆராய்ந்ததைப் போலவே பரிமேலழகர் ஆராய்ச்சி அமைந்திருக்கிறது. தலைவன் கண்டது தலைவியின் காதல் பரிமேலழகர் கண்டது திருவள்ளுவரின் கருத்து. திருக்குறளில் ஏறத்தாழ 60 இடங்களில் பயின்று வந்திருக்கும் இத்தகைய உரைப்போக்கு அழகரின் உரைத்திறனில் ஒரு மணிமகுடமாகவே ஒளிர்கிறது.

    (தொடரும்…)

    Share
  • குறளின் கதிர்களாய்…(323)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(323)

    பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென்
    றேதம் பலவுந் தரும்.

    – திருக்குறள் – 275 (கூடாவொழுக்கம்)

    புதுக் கவிதையில்...

    பிறர் தம்மைப்
    பெரிதும் மதித்திடவேண்டி
    பற்றை விட்டுவிட்டோம் எனப்
    பொய் சொல்வோரது
    மறைந்த ஒழுக்கம்,
    இனிது போலத் தோன்றினும்
    அப்போது,
    என்செய்தோம் என்பதறியாதவர்கள்
    பின்னர் வருந்தும் வகையில்
    பலதுன்பம் வந்திடுமே…!

    குறும்பாவில்...

    தற்காலிகமாய் இன்பம்பெற பெருமைக்காய்ப்
    பற்றறுத்தோமெனப் பேசும் பொய்யொழுக்கம் கொண்டோர்க்குப்
    பின்னர் வந்திடும் வருந்தும்நிலையே…!

    மரபுக் கவிதையில்...

    தம்மைப் பிறரெலாம் மதித்திடவே
    தாமே பற்றெலாம் விட்டதாக
    இம்மியும் மெய்யிலாப் பொய்பேசி
    இன்பம் பெற்றிடும் பொய்யொழுக்கம்
    செம்மை தராதவர் வாழ்வினிலே,
    சேர்த்துத் துன்பம் பெற்றிடவே
    தம்மைத் தாமே நொந்துகொள்ளும்
    தன்மைப் பின்னர் பெறுவாரே…!

    லிமரைக்கூ..

    பிறர்மதிக்கப் பேசுவர் பொய்யே,
    பற்றறுத்ததாய்ப் பொய்வாழ்வில் பெறுமின்பம் நிலையாதே
    பின்பெறுவர் துன்பமென்பது மெய்யே…!

    கிராமிய பாணியில்...

    வேண்டாம் வேண்டாம் தீயொழுக்கம்
    வேதன தந்திடும் தீயொழுக்கம்,
    வேணும் வேணும் நல்லொழுக்கம்..

    அடுத்தவன் நம்ம மதிக்கணுண்ணு
    ஆசயெல்லாம் உட்டாச்சிண்ணு பொய்பேசி
    நல்லவன்போல நடிக்கிறவனுக்கு
    அந்த இன்பம் அப்போதைக்குத்தான்,
    அதிகநாள் நெலைக்காது..

    பின்னால
    ஏன் வருதுண்ணு தெரியாமலே
    அவனுக்கு
    எல்லாத் துன்பமும் சேந்துவருமே..

    அதால
    வேண்டாம் வேண்டாம் தீயொழுக்கம்
    வேதன தந்திடும் தீயொழுக்கம்,
    வேணும் வேணும் நல்லொழுக்கம்…!

    Share
  • நம்ம வீட்டுக் கொலு 2020

    நம்ம வீட்டுக் கொலு 2020

    அண்ணாகண்ணன்

    நம்ம வீட்டுக் கொலுவை உங்களுக்கு நித்திலா அறிமுகப்படுத்தி, சிறு பாடலும் பாடுகிறார். வாருங்கள், படிப் படியாய் முன்னேறுவோம்.

    உங்கள் வீட்டுக் கொலுவை வீடியோ படம் எடுத்து வாட்ஸாப் வழியே +91-9841120975 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். Google Drive அனுப்புவோர், annakannan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். நம் யூடியூப் அலைவரிசையில் வெளியிடுவோம். எடுக்கும்போது அதை விளக்கிச் சொல்லுங்கள். உங்கள் செல்பேசியைக் கிடைமட்டமாக (horizontal) வைத்துப் படம் எடுங்கள். தொடங்கும்போது எந்த ஊரிலிருந்து யார் பேசுகிறீர்கள் என்று சொல்லுங்கள். பாடத் தெரிந்தவர்கள் எனில், பாடியும் அனுப்பலாம். ஓம்சக்தி, பராசக்தி! – அண்ணாகண்ணன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • கொலுக் கலசத்தில் எழுந்தருளும் அம்பிகை

    கொலுக் கலசத்தில் எழுந்தருளும் அம்பிகை

    அண்ணாகண்ணன்

    நவராத்திரியின்போது, கொலுப் படிக்கட்டில் பொம்மைகளை வைப்பதற்கு முன், முதலில் கலசம் வைத்து, அதில் அம்பிகையை எழுந்தருளச் செய்வது மரபு. நம் இல்லத்தில் எழுந்தருளி, அருள்பாலிக்கும் அம்பிகையின் திருக்கோலம் இங்கே.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கொலுப் படி கட்டுவது எப்படி?

    கொலுப் படி கட்டுவது எப்படி?

    அண்ணாகண்ணன்

    நவராத்திரிக்காகக்கொலுப் படிக்கட்டு (செட்டு) வாங்கிய பலருக்கும் அதை எப்படிக் கட்டுவது என்று ஒரு குழப்பம் இருக்கலாம். இதோ ஒரு செய்முறை விளக்கம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நலம்தரும் நவராத்திரி

    நலம்தரும் நவராத்திரி

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

    தாயினைத் தெய்வமாக வணங்கும் முறை எமது பாரம்பரியமானதாகும். அதனால்தான்” அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று அன்னைக்கு முதலிடம் அளித்திருப்பதைக் காண்கின்றோம்.” தாய்ச் சொல்லைத் தட்டாதே” என்கின்றோம். பூமியைய் தாய் என்கின்றோம். பொறுமையைத் தாய் என்கின்றோம். கருணையைத் தாய் என்கின்றோம். நதிகளையும் பெண்மையின் நிலையில் கண்டு தாய் என்றே போற்றி நிற்கின்றோம்.

    உலகிலே உயர்ந்து நிற்பது எதுவென்றால், அது தாய்மைதான். தாய்மைக்கு ஈடாக எதுவுமே இல்லை எனலாம். இதனால்தான் தாய்மையைத் தெய்வத்துக்கு ஒப்பிட்டு, சக்தி வழிபாடே தொடங்கியது எனலாம். உலக இயக்கத்துக்கு சக்தியே முதன்மையானது. சக்தி இல்லாவிட்டால் உலக இயக்கமே அற்றுவிடும். இந்த அடிப்படையில் சக்தியை மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டதே நவராத்திரி ஆகும்.

    சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி. ஆனால் சக்திக்கு ஒன்பது ராத்திரிகள். அதுதான் நவராத்திரி. அனைத்து இயக்கங்களுக்கும் ஆதார சக்தியாக அம்பிகை விளங்குவதால் ஒன்பது ராத்திரிகள் அமைந்துவிட்டன என்றுதான் எண்ண முடிகிறது.

    நவராத்திரி எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது என்று பார்க்கும் பொழுது – பாரத காலம்இராமாயண காலம் வந்து நிற்கிறது. நீண்ட காலமாகவே நவராத்திரி கைக்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.

    நவராத்திரி என்பது வருஷத்தில் நான்கு முறை வருவதைக் காண்கிறோம். தைமாதத்தில் வருவது மஹா நவராத்திரிபங்குனியில் வருவது வஸந்த நவராத்திரிஆனியில் வருவது ஆஷாட நவராத்திரிபுரட்டாசியில் வருவது சாரதா நவராத்திரி. இந்த சாரதா நவராத்திரியையே இந்தியாவில் தமிழகத்திலும் இலங்கையிலும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள் என்பது நோக்கத்தக்கதாகும்.

    நவம் என்றால் ஒன்பது என்பது எண்ணிக்கையாகும். அது எண்ணிக்கை மட்டுமல்ல – புத்துணர்ச்சி என்னும் கருத்தும் இதில் அடங்கி நிற்கிறது எனலாம். கலைகளைப் போற்றி நின்று கொண்டாடும் வழிபாட்டு விழாவாக நவராத்திரி அமைகிறது எனலாம். கலைகளை முன்னிறுத்தி அனுட்டிக்கும் பொழுது அங்கு புத்துணர்வு மேலிடுவது இயல்பான ஒன்றல்லவாஇதனால் நவராத்திரி புத்துணர்வினை நல்கி புதுத்தெம்பு பெருகி வாழ்வில் மகிழ்வினை நல்கிட உதவும் விரதமாய், கொண்டாட்டமாய் அமைகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

    எங்களின் சமயம் எங்களுடன் இணைந்தே வருகிறது. ஆனபடியால்தான் வளர்ந்துகொண்டே வருகிறதே அல்லாமல் தளர்வுண்டு போகாதிருக்கிறது எனலாம். காரணம் சமயத்தை வாழ்வியல் ஆக்கிக்கொண்டதே முக்கிய நிலை எனலாம். கடவுளையே உறவு முறையில் அழைத்து கடவுளுக்கே குடும்பமும் வைத்து வாழ்வியயோடு இணைத்து நிற்கும் சமயத்தை உலகில் எங்குமே காண முடியாது. அதனால் வாழ்வுக்கு வாழ்வியலுக்கு எவை எல்லாம் இன்றியமையாதனவோ அவற்றையெல்லாம் இறையுடன் இணைத்து அவற்றுக்குப் பெருமையும் பெறுமதியும் காட்டி நிற்பதுதான் எங்கள் சமயத்தின் உன்னதம் எனலாம்.

    அந்த வகையில் நலம் தரும் நவராத்திரியும் வந்து அமைகிறது. வாழ்வினில் செம்மையாக வாழ எவையெல்லாம் எமக்குத் தேவை என்பதைத் தொட்டு நிற்பதுதான் நலம் தரும் நவராத்திரி.

    ஆரோக்கியம் வேண்டும். பொருள் வேண்டும். நல்லறிவு வேண்டும். ஆரோக்கியம் என்னும் பொழுது வீரம் வருகிறது. பொருள் என்னும் பொழுது செல்வம் வருகிறது. அறிவு எனும் பொழுது கல்வி வருகிறது. கல்வியும் செல்வமும் வீரமும் வேண்டிப் பிரார்த்தித்து நிற்பதுதான் நவராத்திரியாய் மலர்கிறது. வீரத்துடனும்  செல்வத்துடனும் அறிவு அதாவது கல்வியானது இணைய வேண்டும். அப்படி இணைந்தால்தான் வீரமும் செல்வமும் ஒழுங்கான முறையில் பயனை அளிக்கும். அப்படி அமையும் பொழுது அங்கே வெற்றி என்னும் வெளிச்சம் பிரகாசமாய் வந்து நிற்கும். இதுதான் உண்மை. இதுதான் நிச்சயம். இதனை உணர்த்துவதாய் அமைவதுதான் நவராத்திரி. இந்த வெற்றியையே விஜயதசமி என்று கொண்டாடி மகிழ்கிறோம்..

    வீரத்தைத் துர்க்கையாகவும்செல்வத்தை இலக்குமியாகவும்கல்வியை சரஸ்வதியாகவும் எங்கள் சமயம் காட்டுகிறது. இங்கே காட்டப்படும் மூன்றுமே பெண்களாய் அதாவது சக்தியாய் இருப்பது நோக்கத்தக்கதாகும்.

    பெண்மை என்றால் தாய்மை. பெண்மை என்றால் பொறுமை. பெண்மை அடங்கினால் மென்மை. பெண்மை பொங்கினால் வெம்மை. பெண்மைக்குள்ளே எல்லாமே அடக்கம். பெண்மைதான் இயக்கம். அதனால்தான் கல்வியைசெல்வத்தைவீரத்தை வழங்கும் கடவுளர்களாகப் பெண்மை உருவாக்கப்பபட்டது. கல்வியைசெல்வத்தைவீரத்தை இலகுவாகப் பெற்றுவிட முடியாது. முயற்சி வேண்டும். அதற்கு அளவில்லாப் பொறுமை வேண்டும். விடாத துணிவு வேண்டும். இவை அத்தனையும் பெண்மை என்னும் சக்தியிடம்தான் நிறைவுற்று இருக்கிறது. எனவேதான் முச்சக்திகளை மூன்று முக்கிய வாழ்வியல் முறைகளுக்கும் தெய்வமாக்கினார்கள் எங்கள் முன்னோர்கள்.

    அறிவுடன் செல்வமும் வீரமும் இணைந்து நின்றால் நிச்சயம் அங்கே வெற்றிதான். அறிவினை விட்ட செல்வமோவீரமோ வெற்றி என்னும் இலக்கினை அடையாது. பயனற்றே போய்விடும். இதனையே புராணங்கள் காட்டி நிற்கின்றன.

    வாரணம் பொருத மார்பு – வரையினை எடுத்த தோள்கள் – சங்கரன் கொடுத்த வாள்அத்தனையும் இருந்தும் மாவீரன் என்னும் பெயர்பெற்ற செல்வாக்குடன் திகழ்ந்த இராவணன் ஏன் வீழ்ந்தான்படைபலம் நிறைந்துஅரண்மனைச் செல்வாக்குடன் அரசாட்சியில் இருந்த துரியோதனன் ஏன் வீழ்ந்தான்உரமும்  வரமும் பெற்ற சூரன் ஏன் வீழ்ந்தான்அறிவுடன் செல்வமும் வீரமும் அணையாது நின்றதே காரணம் என்று காப்பியங்கள் புராணங்கள் காட்டி நிற்கின்றன.

    இறைச் சக்தியால் நாமெல்லாம் இயங்குகிறோம். இறைச்சக்தியே எமக்கு இயக்கச் சக்தியாகும். அந்தச் சக்தியே அறிவை, செல்வத்தை, ஆற்றலை அளிக்கிறது. அந்த அளவிட முடியாத சக்தி அளித்த ஆற்றலை அந்தச் சக்தியின் ஆசியுடன் வாழ்வில் கையாண்டால் வாழ்க்கை வளமாகும். வாழ்க்கை வையத்துள் வசந்தமாக அமையும். இப்படி வாழ்வியலோடு இணைந்த சக்தியாய் அமைவதுதான் நவராத்திரி ஆகும்.

    கோவிலுக்குப் போய் கொண்டாடாமல் கோயிலுக்குப் போய் வழிபடாமல், வீட்டிலேயே இருந்து பாடிப் பரவி கைக்கொள்ளும் நிலையில் நவராத்திரி அமைந்திருக்கிறது.

    கும்பம் வைத்து, கொலு வைத்து, கூடியிருந்து மலைமகளைஅலைமகளை, கலைமகளைப், பாடிப் பரவும் விழாவாக நவராத்திரி அமையப் பெற்றிருக்கிறது.

    ஏனைய விரதங்களைப் போல் அல்லாமல், நவராத்திரி விரதம் கலைகளின் சங்கமமாய் அமைந்திருக்கிறது என்பதால் அனைவராலும் தவறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது எனலாம்.

    நவராத்திரியில் கொலு வைப்பது என்பது மிகவும் முக்கியமானதாகும். கொலு வைத்தல் என்பது அழகுக்கோ அல்லது ஆடம்பரத்துக்கோ அல்ல. அந்தக் கொலு கூட வாழ்வியலின் தத்துவமேயாகும். ஒன்பது படிகள் வைத்துக் கொலு அமைக்கப்படுகிறது. ஒன்பது என்பது வெறும் எண்ணிக்கை அல்ல. அதிலும் அர்த்தம் நிறைந்திருக்கிறது. முதற்படியில் ஓரறிவு உயிரினப் பொம்மைகள்இரண்டாவது படியில் இரண்டறிவு உயிரினப் பொம்மைகள் மூன்றாவது, நான்காவதுஐந்தாவது படியில் அந்த எண்ணிக்கை சார்ந்த உயிரின அடையாளங்கள்,  ஆறாவது படியில் மனித உருவப் பொம்மைகள், ஏழாவது படியில் மனிதனுக்கு அப்பாற்பட்ட ரிஷிகளின் பொம்மைகள்எட்டாவது படியில் தேவர்கள்நவக்கிரகங்கள்ஒன்பதாவது படியில் இறைவனது பொம்மைகள் என்று கொலு வைப்பது வழக்கமாகும். இங்கு கொலு வைக்கப்பட்ட முறையான உயிர்களின் வளர்ச்சி நிலையினைக் காட்டுவதாக அமைகிறது எனலாம். மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில்  காட்டிய “புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகி, கல்லாய், மனிதராய், முனிவராய் தேவராய்…. ” என்பது நினைவுக்கு வருகிறதல்லவா?

    வணங்கும் கோவில்வாழும் வீடுகற்கும் பள்ளிக்கூடம், தொழில்புரியும் தொழிற்கூடம்பணிமனைகள்அத்தனையும் கொண்டாடி மகிழும் விழாவாக விளங்குவது நவராத்திரி ஒன்றே எனலாம். பக்தியுடன் கூடிய பாட்டும் பக்தியுடன் கூடிய நடனங்களும்பக்தியுடன் கூடிய ஒன்று கூடலும் இணையும் நிலை காணப்படுவதால் நலம் தரும் நவராத்திரி என்பது பொருத்தமாய் அமைகிறது அல்லவா?

    தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும்
    தளர்வு அறியா மனம் தரும் நெஞ்சில் வஞ்சம்
    இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும்
    அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள்
    அபிராமி கடைக் கண்களே!

    Share
  • என் நண்பர் குஷ்வந்த் சிங் – நிர்மலா ராகவன் நேர்காணல் – பகுதி 2

    என் நண்பர் குஷ்வந்த் சிங் – நிர்மலா ராகவன் நேர்காணல் – பகுதி 2

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    குஷ்வந்த் சிங் ஜோக்ஸ் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வந்துள்ளது. மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ள குஷ்வந்த் சிங் ரசித்த ஜோக்ஸ் பல உண்டு. அதில் சர்தார்ஜி ஜோக் ஒன்றும் உண்டு.

    ஒரு பெண் தன் உடைகளை எல்லாம் கழற்றி எறிந்துவிட்டு, என்ன வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்கிறார். சர்தார்ஜி உடனே அவளது காரை எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறார். இதைக் கேட்ட அவரது நண்பரான இன்னொரு சர்தார்ஜி, நீ செய்தது சரிதான். அவளது உடைகள் உனக்குச் சரியாக இருக்காதே என்றாராம். கெட்டிக்கார சர்தார்ஜிகள்.

    நேற்று இரவு முழுவதும் உங்களையே நினைத்துக்கொண்டிருந்தேன் எனக் குஷ்வந்த் சிங், நிர்மலாவிடம் சொன்னது ஏன்? குஷ்வந்த் சிங்கின் Indecent habit எது? நிர்மலாவைப் பற்றிக் குஷ்வந்த் சிங் என்ன எழுதினார்? தில்லியில் குஷ்வந்த் சிங்கின் வீட்டுக்கு நிர்மலா சென்றபோது, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் வி.எஸ்.நைபால் அங்கே இருந்தார். அவர் நிர்மலாவிடம் கேட்ட கேள்வி என்ன? இவற்றுக்கான விடைகளை அறிய, இந்த நேர்காணலைப் பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கருவூர் கன்னலின் ‘மழை’ நாவல் – நனைந்தவனின் அனுபவப் பதிவு

    கருவூர் கன்னலின் ‘மழை’ நாவல் – நனைந்தவனின் அனுபவப் பதிவு

    ச. சுப்பிரமணியன்

    முன்னுரை

    பெரும்பாலும் இலக்கணத்திலும் கவிதைகளிலும் தோய்ந்தாலும் வாய்ப்புக் கிட்டுகிற நேரங்களில் சிறுகதை, நாவல் முதலிய படைப்புகளையும் சுவைப்பது எனக்கியல்பு.  கருவூர் கன்னல் அவர்களின் ‘மழை’ என்னும் ஒரு சிறிய நாவலைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. சிறுகதை, குறுநாவல், நாவல் என்னும் ஆய்வுகளுக்குள் நான் கவனம் செலுத்துவதில்லை. அது வடிவ ஆராய்ச்சியாளர்க்கு உரியது. இலக்கியம்,  அனுபவத்தின் மொழிவழிப் பதிவு.  அதன் உடனடி நோக்கம் அது சுவைக்கப்பட வேண்டும் என்பதே.  படைப்பைப் படிப்பதும் சுவைப்பதும் சுவையனுபவங்களைப் பிறருக்குச் சொல்லி மகிழ்வதும் வாழ்வின் நெருடல்களைத் தற்காலிகமாகவேனும் சமப்படுத்தும் என்பது என் கருத்து. அதன் அடிப்படையில் ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் நோக்கத்தில் அந்த நாவலைப் படித்துணர்ந்த என் அனுபவங்களை இந்தக் கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன்.

    இலக்கியத்தில் நான் ஒரு பழைமைவாதி என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பழைமைவாதிகள் புதுமைகளை இனங்கண்டு தரங்கண்டு வரவேற்பதைப் போல புதுமைவாதிகள் செய்யவில்லையே என்னும் ஏக்கமும் எனக்குண்டு. இதனை ஓர் ஆய்வுக் கட்டுரையாகக் கருத வேண்டியதில்லை. ஒரு படிப்பாளியின் அல்லது வாசகனின்  அனுபவ வெளிப்பாடாகவே கருத வேண்டும். ஆய்வுக் கட்டுரைக்கும் அனுபவப் பதிவுக்கும் நிரம்ப வேறுபாடு உண்டு இந்தக் குழப்பத்தை நான் முதலிலேயே தீர்த்துவிட வேண்டியது என் கடமையல்லவா?

    இலக்கிய வடிவங்களும்  சுவையும்

    இலக்கிய வடிவங்களுக்கும் பொருண்மைக்கும் தொடர்புண்டு. ஆனால் இலக்கிய வடிவங்களுக்கும் சுவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வைரமுத்தின் கவிதையையும் சுவைக்கலாம். சிறுகதையையும் சுவைக்கலாம். நாவல்களையும் சுவைக்கலாம். கடடுரைகளையும் சுவைக்கலாம். வடிவங்களைப் பற்றிய ஆராய்ச்சி, ஆய்வுலகத்திற்கு மட்டுமே பயன்தரும். இலக்கிய நுகர்ச்சி என்பது எல்லாருக்கும் பயன்தரும்.  ஆய்வில் ஆய்வாளர் திறன் மட்டுமே வெளிப்படும்.  இலக்கியச் சுவையுணர்வில் உணர்வார் உள்ளம் மகிழும். முன்னது வரையறைக்கு உட்பட்டது. பின்னது வரையறைக்கு உட்படாதது. எனவேதான் கவிதையையும் இலக்கணத்தையும் மட்டுமே சுவைக்கின்ற என்னைப் போன்றவர்கள் இதுபோன்ற கதைகளையும் சுவைக்க முடிகின்றது.  ஆய்வுகளுக்கு மூலதனம் மூளை. இலக்கியச் சுவைத்தளம் இதயம் மட்டுமே! மூளை  உள்ளவர்கள் இலக்கியங்களை ஆராயலாம். இதயம் உள்ளவர்கள் மட்டுமே இலக்கியங்களை அனுபவிக்க இயலும்!

    கால மாறுபாடுகளும் பொருண்மைகளும் இலக்கிய வடிவங்களைத் தீர்மானிக்கின்றன. ‘சிலப்பதிகாரம்’ என்னும் நெடுங்கதை, கவிதையில் எழுப்பட்டுள்ளது. எனினும் அது பாரதியின் நெஞ்சை அள்ளியது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ சென்று படியாத  தமிழ் உள்ளங்களே இல்லை. எனவே இலக்கியச் சுவைக்கு வடிவங்கள் காரணமாக அமைவதில்லை என்பது தெரியவரும். சிக்கல்கள், அவற்றைக் களையும் முயற்சிகளில் படைப்பாளனின் சித்திரிப்பு, பாத்திரப் படைப்புகள், கள வண்ணனைகள், அரிய தத்துவங்களை எளிய மொழியில் பொருத்தமான பாத்திரங்களின் வழியே பதிவு செய்தல், கதை சொல்லும் நேர்த்தி, கருத்துகளின் வெளிப்பாட்டு உத்தி முதலியனவே ஓர் இலக்கியம் பிறரை ஈர்ப்பதற்கும் காலங்கடந்து நிலைப்பதற்கும் காரணமாகும். அந்த வகையில்  ‘மழை’ என்னும் சிறு படைப்பின் மூலம்  நாவல் இலக்கியத்திற்குத் தன்னாலான சிறு தொண்டினைக் கருவூர் கன்னல் செய்திருக்கிறார். என்பதையே நான் இந்த நாவலுக்குத் தரும் அறிமுக உரையாகத் தந்துவிடுகிறேன்.

    நாவல்களும் நானும்

    இந்தப் பத்தியில் கண்டுள்ள கருத்துகள் எனக்கு மட்டுமே பொருந்தும். பிறர் அறிந்துகொள்ள மட்டுமே. பொதுக் கருத்து ஆகாது. என்பதை நான் முன்னமேயே சொல்லிவிட வேண்டும்.  தமிழில் ‘வித்வான்’ படிப்பு என்னை நாவல், சிறுகதை, புதுக்கவிதை முதலிய களங்களில் இருந்து காப்பாற்றியது என்றே சொல்லவேண்டும். அதற்குக் காரணம் ‘அறம்பொருள் வீடு அடைதல் நூற்பயனே’ என்னும் நூற்பாவை என்னுடைய ஆசிரியப் பெருமக்கள் நினைவுபடுத்தாத பொழுதில்லை.

    பின்னால் நான் முதுகலைத் தேர்வு பாடத் திட்டத்திற்காக நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களைப் படிக்க நேர்ந்தது. தமிழின் தொடக்கக் கால நாவல்கள், கு.ப.இராசகோபாலன், மாதவையா, அறிஞர் மு.வ., கல்கி, அகிலன், ஜெகசிற்பியன், சாண்டில்யன், மணிவண்ணன், கி.ராசேந்திரன், மணியன், இராஜம்  கிருஷ்ணன் முதலியோர் நாவல்களைப் நான் படித்து முடித்திருந்தேன். என்னை மறந்தும் நான் ‘பட்டுக்கோட்டை’ பக்கம்  தலைவைத்துப் படுத்ததில்லை. என்ன அதிசயம்? படித்த நாவல்களிலும்  ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை எள்ளின் முனையளவும் எனக்கு இலக்கியச் சுகத்தையோ தத்துவ விசாரணையையோ நீதிக் கருத்துகளையோ அறியத் தந்ததாக எனக்கு நினைவில்லை.

    கருத்துரை நாவல்களாக அமைந்த அறிஞர் மு.வ. நாவல்களுக்கும் அவருடைய  கட்டுரைகளுக்கும் என்னால் பெரிய வேறுபாட்டை உணர முடியவில்லை. ஆனால் ஒரு கருத்துப் பதிவில் இருக்க வேண்டிய உயர் பண்பாட்டை நான் அவரிடமே கற்றுக்கொண்டேன். ஆற்றொழுக்கான  நடையும், இனிய தமிழும் மரபார்ந்த உணர்ச்சி வெளிப்பாடுகளும் பண்பாடும் நிறைந்த நா.பார்த்தசாரதியின் நாவலாகிய ‘குறிஞ்சி மலர்’ என்னைக் கொஞ்சம் அசைத்தது. அந்த நாவலின் ஒவ்வோர் அத்தியாயத்திலும் அவர் தரும் முத்தாய்ப்பான சில கருத்து வரிகள் எனக்குள் பெருஞ் சிந்தனையைத் தோற்றுவித்தன. பாத்திரங்களை இலக்கியத் தமிழில் பேசவைத்த ஒரு செயற்கைத் தன்மையைத் தவிர வேறு எந்தத் தவறும் அதில் அவர் செய்திருப்பதாக நான் எண்ணவில்லை. அரவிந்தனும் பூரணியும் திருப்பரங்குன்றத்துக்கு அழகு சேர்த்தனர். அரவிந்தன் மரணத்தோடு முடியும் அந்த நாவல் ஒரு காப்பியத்தைப் படித்த நிறைவினைத் தந்தது.

    எல்லாம் முடிந்தது தமிழ் நாவல் பற்றிய கருத்துரையை 35 மதிப்பெண் கட்டுரை வினாவில் வினவியிருந்தார்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தார். அந்த எட்டுப் பக்கக் கட்டுரையில் ஒரு பக்கம் ‘குறிஞ்சி மலருக்கு’ ஒதுக்கிய நான் ஒரே ஒரு வரியைத்தான் சாண்டில்யனுக்கு ஒதுக்கியிருந்தேன். அந்த ஒரு வரியில் நான் எழுதியது என்ன தெரியுமா? ‘சாண்டில்யன் வரலாற்று நாவல்களில் வரலாறும் இல்லை! நாவலும் இல்லை’ என்பதுதான். தேர்வு மையத்திற்கு வெளியே வந்த என் நண்பர்கள் நான் ‘தேரமாட்டேன்’ என்றுதான் சென்னார்கள். இது என் அனுபவம். இந்த  அனுபவமே எல்லாருக்கும் வரவேண்டும் என நான் சொல்லமாட்டேன். எதிர்பார்க்கவும் மாட்டேன்!. என் நாவல் அனுபவங்களை நான் தனியாகச் சொல்ல வேண்டும்.

    ‘படைப்பு, படைப்பாளன் கையில் இல்லை’ என்பது தவறு என்பதைத் திரு ஜெயகாந்தன் ‘அக்னி பிரவேசம்’ சிறுகதையை வாசகர்களின் கருத்துகளுக்கு இணங்கிச் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று எழுதிய பிறகு உணர்ந்துகொண்டேன். அது பின்னாளில் ‘கங்கை எங்கே போகிறாள்? என்றும் விரிந்தது. நான் மலைத்துப் போய் நிற்கும் ஒரே நாவல் கல்கியின் ‘பொன்னியின் செல்வனே!’ இவ்வளவு களங்களை அவர் எப்படித் தன் மனத்தில் சுமந்திருந்தார்? இவ்வளவு பாத்திரங்களை எப்படி அவரால் சித்திரிக்க முடிந்தது? கதைப்பின்னலில் எள்ளின் முனையளவும் நெருடல் அல்லது சிக்கல் என்பதே இல்லாமல் எப்படி அவரால் கதை சொல்ல முடிந்தது? இன்னும் பல வினாக்கள்  இருக்கின்றன. அவற்றையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால்…………?  ‘மழை’ யில் நனைவதை மறந்துவிடக் கூடும்.

    உண்மையில் என்னுடைய முதுகலை படிப்பிற்குப் பின்னால் இந்த என்னுடைய எழுபதுகளில்தாம் நான் நாவல்களைப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். சிலர் சொல்வதைப்போல நான் வாசிப்பதில் சுகம் காண்பவன் அல்லன். கற்பதில் களிப்படைபவன் . என் கல்லூரி வாழ்க்கை முடிந்து காலனின் உறுதியான கைகளில் தள்ளாடும் இநத இறுதி நேரத்திலும் இலக்கியம் என்பது ஒரு பயன் நோக்கியதே என்னும் கருத்தினை மாற்றிக்கொள்ளும் எந்தச் சூழலும் எனக்கு வாய்க்கவில்லை  பயனில்லாத படிப்பு எதற்கு?

    ‘மழை’ — கதைச்சுருக்கம்

    மழை வெள்ளத்தில் மூழ்கிய சென்னை ஆதித்யா அடுக்ககத்தில் வாழ்ந்த பலதரப்பட்ட மக்கள் அல்லோலகல்லோலப்பட்டனர். கனிமொழியும் செம்மலரும் முன்னாள் கல்லூரித் தோழிகள் கணிப்பொறித் துறையில் பணியாற்றும் அவரிருவரும் இன்று அறைத்தோழிகள். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் சென்னை நகரமே வெள்ளத்தில்.

    தன் வீடு தேடிவந்த ஆயிஷா, அவர் மகள் பர்வீன் ஆகியோரை உபசரித்த கனிமொழி, பர்வீனை ஒரு வீட்டில் விட்டுவிட்டு வெளியில் சென்று, அவசரத் தேவைக்கான பொருட்களை வாங்கி வந்தனர். அலுவலகம் சென்று திரும்பிய நிலையில் கிண்டியில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட செம்மலர், கோழிக்கடை கோவிந்தன் உதவியோடு அடுக்ககத்தை அடைகிறாள். அடுக்ககத்தின் உரிமையாளர் மோகன்லால், அவர் மனைவி கமலாதேவி. செம்மலர் அறைக்குள்.

    அந்த நேரத்தில் அடுக்ககத்தின் மற்றொரு பகுதியில் குடியிருந்த இராமகிருட்டிண அய்யங்காரும் அவர் மனைவி ஆண்டாளும் வெள்ளத்தில் மிதந்த தம் வீட்டைவிடடு வெளியேறிச் செம்மலர் வீட்டுக்கு வந்தனர். ஏற்கெனவே ஆயிஷா தன் வீட்டுக்கு வருமாறு பலமுறை வற்புறுத்தியதால் ஆசாரம் மிகுந்த அய்யங்கார், இஸ்லாமியப் பெண்ணான ஆயிஷா வீட்டில் தங்கினார். அதனைப் பெரும்பேறாகக் கருதிய ஆயிஷா, அவர்களுக்கு வேண்டிய எல்லாப் பணிவிடைகளையும் செய்து தந்ததோடு அவர்களுக்குத் தனியறையும் ஒதுக்கித் தந்தாள். கடுமையான வெள்ளத்திற்கிடையே மானுட வாழ்க்கை கலககலத்துக்கொண்டிருந்தது.

    இளமாறன் கணிப்பொறித் துறையில் ஒரு மென்பொருள் வல்லுனன். பொதுநலன் நாடும் மனப்பக்குவம் உடையவன். வெள்ளத்தில் பலருக்கும் பலவகையில் உதவி வந்தவன். மோகன்லாலின் சித்தப்பாவும் சித்தியும் தியாகராயநகர் வெள்ளத்தில்  சிக்கிக் கொண்டிருப்பதை அறிந்த மோகன்லால், அவர்களைக் காப்பாற்றப் புறப்படுகிறார். அவரோடு இணைந்துகொள்ளும் இளமாறன், தியாகராய நகர் சென்று அவர்களைக் காப்பாற்றிக் கொண்டுவருகிறார்கள். ஆதித்யா அடுக்ககத்திற்கு வரும் வெள்ள வழியில் இளமாறனும் மோகன்லால் சித்தப்பா மகள் சுநந்தாவும் உணர்ச்சிக்கு ஆளாகிவிடுகிறார்கள். அந்த உணர்வுகளுடனேயே பிரிகிறார்கள்.

    செங்கற்பட்டு ஆட்களைக் கொண்டு மோகன்லால் சித்தப்பா வீட்டைத் தூய்மை செய்துவிட்டு மனத்தில் சுநந்தாவைச் சுமந்து கொண்டு ஆதித்யா அடுக்ககம் திரும்பும் இளமாறன், நேராக கமலாதேவியின் வீட்டுக்குச் செல்கிறான். அங்கே தனியாக இருக்கும் சுநந்தாவுடன் பாலியல் விருப்ப உறவில் அவளுடைய இசைவுடன் ஈடுபடுகிறான். அந்த உறவை வெகு சாதாரணமாகக் கையாளும்  சுநந்தாவை ஆசிரியர் அறிமுகம் செய்கிறார்.

    செம்மலர், கனிமொழி, சுநந்தா ஆகியவர்களோடு உரையாடும் கமலாதேவி, தன் மும்பை வாழ்க்கை வரலாற்றைச் சொல்லுகிறாள். ஆசிரியர் கதையின் இரண்டாவது பகுதி இங்கே தொடங்குவதாகக் கொள்ளலாம். கமலாதேவியின் தாய், பாலியல் தொழிலாளி. பன்னாட்டு அளவில் அந்தத் தொழிலை பல உயர்ந்த செல்வந்தர்களோடும் அரசியல் தலைவர்களோடும் நாளொதுக்கி, மணியொதுக்கிச் செய்து வருபவர்.  செழித்து வாழ்பவர். மும்பையில் வெள்ளம்  வந்த காலத்தில் மக்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணிய துடிப்பில் தான் ஐந்து கோடி ரூபாய் தருவதாக வாக்களித்தது, நேரலையில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அறிவித்த பிறகுதான் அந்தத் தொகையை எப்படித் திரட்டுவது என்ற கவலை அவளுக்கு வந்தது. ஆனால் அடுத்த நொடியே அந்தக் கவலையைத் துரத்திப் பணத்துக்காகத் தன் தாயின் தொழிலைத் தொடர முடிவு செய்தாள். தாயும் அதற்கு உதவி செய்தாள்.

    “அப்பன் வருவான் அவன்பின் மகன் வருவான்
    தப்புமுறை என்று நீ தப்பாதே” (விறலிவிடுதூது 223)

    என்பது பழந்தமிழ்த் தூது இலக்கியத்தில் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது. இதற்கு இருபத்தோராம் நூற்றாண்டு எடுத்துக்காட்டாகச் சித்திரிக்கப்பட்டிருப்பவள் இலட்சுமிதேவி. கமலாதேவியின் தாய். தன் வாடிக்கையாளர் பட்டியலை மகள் கையில் கொடுத்து, அவள் தொழிலுக்குத் தேவையான  அறிவுரையுடன் கூடிய உதவி செய்கிறாள். கமலாதேவி அனுப்பிய கடிதங்களுக்கு அடுத்த சில நாள்களிலேயே அவளுடன் இருக்க நாள்கேட்டு, நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்தன.

    அவற்றுள் ஒன்று ரிஷிகேஷத்தில் இருக்கும் ஆத்மானந்தா என்னும் போலித் துறவி, கமலாதேவியும் அவள் கணவரும் இணைவதை நேரில் பார்த்து ரசிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் தருவதாக வாக்களிக்கிறான்.

    இதற்கிடையே  தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தரவேண்டும் என்பதற்காக இலட்சுமிதேவி, தன்மகளை அழைத்துக்கொண்டு மும்பையின் மிகப் பெரிய வைர மற்றும் தங்க வணிக வளாக உரிமையாளரான சங்கர்லால் கடைக்குச் செல்கிறார்.  இருபத்தைந்து இலட்ச ரூபாய் நெக்லேசை எடுத்துக்கொண்டு கிரடிட் கார்டு மூலம் பணம் கொடுக்கிறாள். தன் திட்டப்படி இலட்சுமி தேவி தனது போனை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுகிறாள்.

    இலட்சுமிதேவி எதிர்பாரத்தபடியே சங்கர்லாலின் மகன் அதாவது கடையில் கமலாதேவியைக் கண்டு மனத்தைப் பறிகொடுத்த  மோகன்லால், கடையில் ‘மறந்து’ விட்டுவிட்டு வந்த  போனை எடுத்துக்கொண்டு இலட்சுமி தேவியின் விட்டுக்கு வருகிறான். வெள்ள நிவாரண நிதிக்கான தனது திட்டத்தை (ஆத்மானந்தா விருப்பத்தை) எடுத்துச் சொன்ன கமலாதேவி அவனுடன் மிகவும் நெருக்கமாகிறாள். கமலாதேவியின் விருப்பத்தை நிறைவேற்ற மோகன்லால் இசைகிறான்.

    அவளுடைய சிந்தனையால் உழன்ற மோகன்லால், ஒருநாள்  கமலாதேவியின் வீட்டுக்கு வந்து அவளுடன் உறவுகொணடு மோதிரம் ஒன்றனையும் அவள் விரலில் அணிவிக்க, சில நாள்களில் சங்கர்லாலின் மருமகள் ஆகிறாள் கமலாதேவி!. மகன் மோகன்லாலும் மகள் கமலாதேவியும் வசதியாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர, அவற்றுள் ஒன்றான ஆதித்யா அடுக்ககமே நாவலின் வெள்ளத்தில் சிக்கிய முன்களக் கதைத்தளமாகிறது.

    சுநந்தா ஒரு நாள், இளமாறனைச் சந்தித்து உடலுறவு கொண்டு மகிழ்கிறாள். ஒரு பெண் தன் உடம்பை எப்படிச் செலவழிக்க வேண்டும் என முடிவு செய்யும் உரிமை அவளுக்கு மட்டுமே உண்டு என்பதையும் அவள் அதனை எப்படி வேண்டுமானாலும் செலவழித்துக் கொள்ளலாம் என்பதையும் தெளிவாக உணர்த்தித் திருமணம் என்னும் சிறைக்குள் அடைபடுவதைத் தான் விரும்பவில்லை எனச் சொல்லி விடைபெற்றுக் கொள்கிறாள். அவளோடு கூடிய வாழ்வை எதிர்பார்த்திருந்த இளமாறனுக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும் உடன்  தன் பணியிடத்தைச் சென்னையிலிருந்து பெங்களூருக்கு மாற்றிக்கொண்டு அங்கே தன் பெற்றோர்களையும் வரச்சொல்லி ஒரு வீட்டில் இருந்து வருகிறான்.

    இளமாறன் தன் அலுவலகப் பணியாளரான கீர்த்தி பண்டிட்டால் கவரப்படுகிறான்.  அவனுடைய வீட்டிற்கே அவள் செல்கிறாள்.  இருவரும் தங்கள் பழைய வரலாற்றைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இளமாறன் வீட்டிற்குச் செல்வதைக் கீர்த்தி வழக்கமாகக் கொண்டிருந்தாள். விடுமுறையில் டெல்லி சென்றிருந்த கீர்த்தி திரும்பி வந்தபோது, விமான நிலையம் சென்று அவளை அழைத்து வந்தான் இளமாறன்.

    ஒரு நாள் மாலை சோழதேவன ஹள்ளி அம்மன் ஆலயத்திற்கு கீர்த்தியும் இளமாறனும் செல்கிறார்கள். அங்கே கீர்த்தி, தன் டெல்லி கல்லூரி வாழ்க்கையில் கண்ட வாழ்க்கை அனுபவத்தைச் சொல்கிறாள்.

    “காஷ்மீர் அகதிக் குடும்பத்தைச் சார்ந்த ஆசிரியப் பெற்றோர்களுக்குப் பிறந்த அவள், டெல்லி நேரு பல்கலைக்கழகத்தின் பிடெக் மாணவி. அவளோடு படித்த மாணவர்களில் தமிழகத்தின் திருவாரூரைப் பூர்வீகமாகக் கொண்ட இராமநாதன் ஐஏஎஸ் என்பவரின் மகன் வைத்தியநாதனும் ஒருவன். கீர்த்தியின் அழகில் மயங்கிய வைத்தியநாதன், அவள் அம்மா ஒரு இசையாசிரியை என்பதைக் கேள்விப்பட்டுக்கொண்டு இசை கற்றுக்கொள்ளும் பேரில் கீர்த்தியின் வீட்டுக்கு வருகிறான்.  தன் தந்தையின் ஐஏஎஸ் பதவியினால், கீர்த்தியின் குடும்பத்திற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து தந்து அவளையும் தன் வலையில் சிக்க வைத்து விடுகிறான். காலம் இருவரையும் திருமணம் ஆகாமலேயே படுக்கையறையில் ஒன்று சேர்க்கிறது.

    ஒருநாள் காலை. கீர்த்தியைத் தன் வீட்டுக்கு வருமாறு வைத்தியநாதனின் போன் அலறியது. கீர்த்தி சென்றாள். ஆனால் அங்கே வைத்தியநாதன் இல்லை. அவன் வெளியூர் போயிருந்தான். அவனுடைய தந்தை இராமநாதன் தனித்திருந்தார். திருவாரூரிலிருந்து தனது அந்தரங்க உதவிக்காகவும் அனைத்துக்காகவும் அழைத்துக் கொண்டுவந்த விதவையோடு காலம் கழித்த அவர், கீர்த்தியைத் தனது இச்சைக்கிணங்க வற்புறுத்துகிறார். மறுத்த நிலையிலும் அவளைச் சீரழிக்கிறான் இராமநாதன். அந்தச் சூழ்நிலை தந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத கீர்த்தி, கசப்பான அனுபவங்களுடன் தன் பெற்றோரோடு பெங்களூர் மாற்றம் பெற்று வாழ்ந்து வருகிறாள். கீர்த்தி தனது இந்த கடந்த கால வரலாற்றைக் கூறியபின் இருவரும் திரும்புகிறார்கள்.

    மற்றொரு நாள் இளமாறனின் நினைவால் அவனைச் சந்திக்க வரச்சொல்லும் கீர்த்தி, தான் தன் தோழியின் திருமணத்திற்காகத் திருச்சியை அடுத்த குணசீலம் என்னும் கோவில் ஊருக்குச் சென்றதாகவும் அங்கே வைத்தியநாதனை மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டுக் கிடந்ததாகவும் அவனைச் சென்னை மருத்துவமனையில் சேர்க்க உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறாள்  அவளுடைய மனிதநேயத்தைக் கண்டு இளமாறன் உருகுகிறான். இதற்கிடையே வைத்தியநாதனின் தந்தை இராமநாதன், மிசெளரி ஏரியில் தவறி விழுந்து, இறந்து போன சேதி கிடைக்கிறது.

    குளியலறையில் தவறி விழுந்த இராமகிருட்டிண அய்யங்கார் அப்போலாவில் அனுமதிக்கப்பட்டும் தேறாது உயிரிழக்கிறார். அவர் உயிரிழந்த அடுத்த நொடியே மீனாட்சியின் ஆவியும் பிரிகிறது.  அய்யங்காரின் பையன் முகுந்தன், அமெரிக்காவில் ஒரு கிறிஸ்தவப் பெண்ணை மணந்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகிப் பெற்றோரை மறந்துவிடுகிறான். இந்த வேதனை, அய்யங்காரைப் பெரிதும  பாதித்தது. தந்தையை கிறிஸ்தவ மதம் மாறினால் கல்லறைத் தோட்டத்தில் புதைப்பதாகச் சொன்னதும் அய்யங்கார் அதிர்ந்து போனார். இதனைத் தொடர்ந்தே அவருக்கு இறுதி வந்தது.

    கனிமொழியின் கணவன் தாயுமானவனும் செம்மலரின் காதலன் கனிக்கண்ணனும் இறுதிச் சடங்கில் இசுரத் அலியுடன் இணைந்துகொள்கிறாரகள். கமலாதேவியின் தகவலால் கீர்த்தியுடன் இளமாறனும் வந்து சேர்கிறான்.  செம்மலர் கொள்ளிச் சட்டியை ஏந்திக்கொண்டு ஊர்வலத்திற்கு முன்னால் செல்கிறாள். மறுநாள் அறையைக் காலி செய்து இளமாறனும் கீர்த்தியும் திருச்சி செல்லும் விமானத்தில் ஏறி அமர, கதை நிறைவடைகிறது.

    கட்டுமானச் சிறப்பு

    மனித நேயம், இலட்சிய வேட்கை என்னும் இரண்டு கருக்களை மையமாக வைத்து இந்தக் கதையைப் பின்னியிருக்கிறார் ஆசிரியர். இவ்விரண்டு கருக்களையும் கதைப்பின்னலின் ஊடுபாவாக்கி அவர் செய்து காட்டியிருக்கும் சித்திரிப்பில் எந்த இடத்திலும்  மிகையில்லை. சென்னையைத் தாக்கிய புயல் மழையில் அனைத்துச் சமயத்தினரும் இனத்தினரும் வேறுபாடு கருதாத மனிதநேய வெளிப்பாடுகளாயினும், பாலியல் தொழிலையே மையமாக்கிக் கொண்ட கமலாதேவியின் தாயார் இலட்சுமிதேவி தன் மகளுக்கு ஒரு சிறப்பான  வாழ்க்கையை அமைத்துத் தந்த இலட்சியப் போராகட்டும் எந்த இடத்திலும் இப்படியும் நடக்குமா என்னும் ஐயம் வராமற் போனதற்குக் காரணம்  யதார்த்தத்தின் இருண்ட பக்கங்களின்மேல் ஆசிரியர் தெளிவான மொழியில் வெளிச்சம் பாய்ச்சியிருப்பதே.

    இராமகிருட்டிண அய்யங்காரின் முன்னோர்கள் இராமனுக்குக் கோயில் கட்டுவதற்காக அயோத்தி சென்றதும் அவர்கள் இராமர் கோயில் இருப்பிடம் தெரியாமல் தடுமாற, அங்குள்ள இஸ்லாமியப் பெருமக்கள் எல்லா வகையிலும் உதவிக் கருட சேவையிலும் பங்கு கொண்டதாகச் சித்திரித்துக் காட்டும் உலகப் பார்வை, கதைக் களத்தைக் கொடைக்கானல் ஆக்குகிறது. தமிழறிஞர் சீனிவாசன், சென்னை வெள்ளத்தில் மூழ்கியது கதை நகர்வுக்குத் துணை புரிகிறது என்றால், கீர்த்தி பண்ட்டிட்டை ஏமாற்றிய வைத்தியநாதனின் தந்தை இராமநாதன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது, கதையின் வேகத்திற்குத் துணை புரிகிறது. விதியின் கைகளில் வசமாகச் சிக்கிய வைத்தியநாதன், குணசீலம் கோவிலில் சங்கிலிகளுக்குள் சிறைபட்டிருந்தது கதாசிரியரையும் மீறிய இயற்கை நிகழ்வாகவே நான் காணுகிறேன். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பாலியல் வல்லுறவுகளை அறைக்குள்ளேயே அரங்கேற்றி,  யோக்கியர்களைப் போல வெளியில் நடமாடும் இத்தகையோர் இருக்க வேண்டிய இடம் குணசீலம் அல்லது ஏர்வாடி என்பதே இந்தக் காட்சியைப் படிப்பவரின் சிந்தனைக்குள் நிற்கும் செய்தியாகும்.

    திருப்பதி வேங்கடவனுக்கும் ஷேக்சின்ன மௌலானா சாகிப்பின் நாதசுரத்திற்கும் உள்ள ஒற்றுமையையும் சித்திரிக்கிறார். தந்தைக்கும் மகனுக்கும் பலிகடாவான கீர்த்தி பண்டிட்டை அவளுடைய தாய் நீராட்டிப் புனிதம் செய்தபோது, ஜெயகாந்தனின் ‘அக்னி பிரவேசம்’ நினைவுக்கு வராமல் போகாது. சித்திராபதியாகிய தாய், தன் மகள் மாதவியைப் பாலியல் தொழிலுக்கே தகுதியானவள் என்று நினைத்த காலத்திலிருந்து கமலாதேவியின் தாய் இலட்சுமிதேவி வேறுபடுகிறாள்.  தன் மகளை நெறிசார்ந்த இல்லறத்திற்கு ஆயத்தப்படுத்தும் இலட்சுமிதேவி, தன் எதிர்கால மருமகன் மோகன்லால் என்னும் உறுதியில் திருமணத்திற்கு முந்தைய உறவிற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை என்பது மிக நாசுக்காகச் சொல்லப்பட்டுள்ளது.

    இராமகிருட்டிண அய்யங்காரரின் மூதாதையர்களின் சைவ வெறுப்பும் இராமர் கோவில் கட்டுதற்குக் கனவில் வந்த சேதியும் அதற்காகச் சரயு நதி ஓரத்தில் கோவில் கட்டிய விவரமும் கற்பனையாக இருந்தாலும் இன்றைய இந்தியச் சூழலில் மதநல்லிணக்கத்திற்கு உரமாகிறது. செம்மலர் என்னும் நாத்திகர் வீட்டில் பிஸ்கட் பாக்கெட் வாங்கிக்கொண்டு பழுத்த ஆத்திகர் அய்யங்கார் வெளியில் வருகிறார். ’ஒரு புதிய அனுபவத்தோடு அய்யங்கார் வெளியில் வந்தார்” (22) என மிக நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். இதே  மாதிரியான சித்திரிப்பை “ஆபத்திற்குப் பாவமில்ல என்று சொல்லிக்கொண்டே அய்யங்கார் மனைவி, ஆயிசா வீட்டிற்குள் வந்து சேர்ந்தாள் (23) என்றெல்லாம் காணப்படும் சித்திரிப்புகள் ஒரு நாவல் சமுதாயத்தை எப்படி எதிரொளிக்க (Reflection) வேண்டும் என்பதைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

    சென்னை மழை மற்றும் வெள்ளம், புயல் சூழலில்  செம்மலர், கனிமொழி, ஆயிஷா, பர்வீன், இஷ்ரத் அலி, இராம கிருட்டிண அய்யங்கார், மீனாட்சி, ஆயிஷா வீட்டில் தனிஅறை, வழிபாடு என்றெல்லாம் அமைந்த முரண்கள் கதாசிரியரின்  அடிமனத்தை வெளிக்காட்டுகின்றன. மரணம்தான் மக்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதில்லை. மழையும் ஒன்று சேர்க்கலாம் என்னும் கருத்தியல், கலை வண்ணமாகியிருக்கிறது  கமலாதேவியின் தாய் இலட்சுமியின் டைரி இந்த நாட்டுப் புனிதர்களின் பெயர்ப்பட்டியலைத் தாங்கி நிற்பதும் ஆத்மானந்தா போன்ற போலிச் சாமியார்கள் விதிவிலக்காக அமையாது எல்லாச் சமய அமைப்புகளிலும் ஊடுருவியிருக்கிறார்கள் என்பதும் மிகத் துணிச்சலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் சமயவாதிகள் பலரின் இருப்பிடத்தை நோக்குங்கால், முற்றும் துறப்பது துறவு என்பதை விட்டு முற்றிலும் விலகி, முற்றும் துய்ப்பதே துறவு என்னும் இடம் நோக்கி நடப்பதாகவே தெரிகிறது. 

    கன்னல் கதையில் பிரச்சாரம் இருப்பதுபோல் தோன்றக்கூடும். அறிஞர் மு.வ. அவர்களின் கருத்துரை, நாவல்களைப் பயின்றாருக்கு இது தோன்றாது. புதுமைப்பித்தன் அணுகிய முறையில்தான் கன்னல் அணுகியிருக்கிறார். ஜெயகாந்தன் கொஞ்சம் வேறுபடுவார். அவர் என்ன செய்வார் என்றால் சிக்கலான சூழ்நிலை வருவதற்கான காரண காரரிய விளக்கங்களில் வாசகர்களை மயங்கச் செய்துவிடுவார். சொல்லப் போனால் அதுதான்  ஜெயகாந்தனின் வலிமையே.

    மழையில் குளிர்ந்த மனித நேயம்

    மனிதநேயம் – ஆயிசா வீட்டுச் சமையலை அய்யங்காரும் ஆண்டாளும் உண்பது, ஆயிசா போட்டுத் தரும் காபியை அவர்கள் அருந்துவது (20) அய்யங்கார் மனைவி ஆண்டாளுக்குச் செம்மலர், மேரி பிஸ்கட் பாக்கட்டை அய்யங்காரிடம் தந்து ஆண்டாளிடம் கொடுக்கச் சொல்லும் பாச உணர்வு (21)  ஆண்டாளுக்கும் அய்யங்காருக்கும் ஆயிஷா வீட்டில் நடக்கும் சைவச் சமையல் (28) மோகன்லால் தந்த ஊறுகாயை அய்யங்கார் வாங்கி நன்றிப் பெருக்கால் கண்கலங்கி நின்றது (30) பெண்களுக்கு நாப்கினும் குழநதைகளுக்குப் பாலும் வழங்கும் இஸ்லாமியச் சகோதரர்களின் மனிதநேயம் (31 அய்யங்கார் குடும்பத்திற்கு ஓட்சு கஞ்சி வைத்துக்கொண்டு வந்து கொடுத்த கமலாதேவியைச் சீதாலட்சுமியாக நோக்கும் அய்யங்கார் (36) எனச் சென்னையை மழையால் நனைத்துப் பார்த்ததைவிட மனிதநேயத்தால் குளிரவைத்துப் பார்த்திருக்கிறார் ஆசிரியர்.

    கவிதை தவிர்த்த படைப்புகளில் உவமங்கள்

    கவிதைகளில்தாம் உவமங்களைச் சுவைப்பது வழக்கம். ஆனால் கல்கி, அறிஞர் மு.வ., பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, நா.பார்த்தசாரதி முதலியோர் தமது படைப்புகளின் ஆசிரியர் கூற்றாகவோ பாத்திரங்கள் வழியாகவோ பல நேரங்களில் மிகச் சிறந்த உவமங்களைக் கூறிக் கருத்து விளக்கம் செய்திருக்கிறார்கள். இங்கே ஒரு கருத்தினைப் பதிவு செய்ய விரும்புகிறேன். எந்த ஒரு புதிய சிந்தனையையும் கருத்தியலாகப் பதிவு செய்கிறபோது உடனே மறுத்துவிடுகிற போக்கு இங்கு அதிகம். சான்றாக ஒன்று சொல்கிறேன்.

    கவிதைகளைத் தவிர வேறு எந்தப் படைப்புகளின் உவமங்கள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனவா? படைப்புகள் எல்லாம் பொருண்மைக்கேற்ப அமைந்த மாறுபட்ட வடிவங்கள்தாமே? கவிதையென்றால் உவமத்தைக் கவனிக்கிற நாம் சிறுகதைகளில் கவனித்தோமா? நாவல்களில் கவனித்தோமா? கட்டுரைகளில் கவனித்தோமா? இதனைக் கண்ணுறுகிற ஒருவர் என்ன செய்ய வேண்டும்? ஒன்று இதனைச் சரியென்று ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையாயின் சான்றுடன் இந்த ஆய்வு இந்தக் கதையில், இந்த நாவலில் உள்ள உவமங்களை ஆய்கிறது என்று எடுத்துக்காட்ட வேண்டும். செய்வாரா? செய்யமாட்டார். உடனே மறுப்பதற்கு எத்தனிப்பார். அதிலே அடியும் இருக்காது நுனியும் இருக்காது. நாம் சொல்ல வந்தது என்ன? ஒரு படைப்பை அதன் வடிவம் நோக்காது, முழுமையாக உள்வாங்கிச் செரித்துக் கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும் என்பதுதான்!

    ‘மழையில்’ உவமங்கள்

    சென்ற பத்தியில் குறிப்பிட்டவாறு கவிதை தவிர்த்த ஏனைய சிறுகதை, நாவல் முதலிய படைப்புகளில் உவமங்கள் நோக்கப்படாமைக்குக் கதை படிக்கும் வேகத்தில் உவமங்கள் கவனத்தை ஈர்க்காது போவதுதான் காரணம். கல்கியின் பொன்னியின் செல்வனில் அவர் காடடியிருக்கும் உவமங்கள் தனித்த சுவைக்கும் தனி ஆய்வுக்கும் உரியவையாகும். அந்த அடிப்படையில் திறனாய்வுக்கு உட்படும் இந்த ‘மழை’ என்னும் நாவலில் பல்துறை சார்ந்த உவமங்களைக் காண முடிகிறது.

    • குருவாயூர் கோயில் யானையைப் போல அடையாறு அமைதியாகப் படுததுக் கிடந்தது (3)
    • திருமணமாகும் வரை காத்திருக்கும் இளம்பெண் போல் கூவம் இரு கரைகளுக்குள்ளும் ஒடிக் கொண்டிருந்தது (4)
    • சோழர் காலத்தில் செய்த திருபுரந்தான் உமாமகேசுவரி சிலையைப் போல (5)
    • முதலாம் தீர்த்தங்கரரைப் போல் அமர்ந்தாள் (6)
    • வெள்ளக் கடலுக்குள் நிற்கும் கப்பல் போல் ஆதித்யா அடுக்ககம் (14)
    • “பணம் தந்தால் நடிகைகள் எப்படி வேண்டுமானாலும் நடிப்பார்கள் என நினைக்கும் தயாரிப்பாளர்களைப் போல (65)
    • தப்பு தப்பா எழுதிய காகிதத்தைக் கசக்கித் தூக்கி எறிவது போல (67)
    • ஒபாமா மனைவி மிட்செல்லைப் போல (69)
    • மிதிலையில் சீதையை இராமன் பார்த்தது போல (69)
    • இளமைக்காலக் கமலஹாசனைப் போல (70)
    • முழுநிலா முக்கால் அம்மணத்தில் நிற்பது போல (70)
    • நாள்தோறும் தலைவரைச் சந்திக்கச் செல்லும் தொண்டன் ஒருநாள் போகாதிருந்தால் அவன் மனம் என்ன பாடுபடுமோ அதுபோன்ற (94)

    என்றெல்லாம் ‘தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்படும் உவமங்கள்’ கதைப்பாத்திரங்களை உணர்ந்துகொள்ளச் செய்கின்றன. அழகியல் உணர்வை மனத்தில் தூண்டுகின்றன. கதைப்போக்கை விளக்கம் செய்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாகப் படைப்பாளனின் நுண்ணோக்கைப் புலப்படுத்துகின்றன.

    உரைநடை, கவிதையான கதை

    செதுக்குவது என்பது வேறு, சிதைப்பது என்பது வேறு. எந்த நிலையிலும் எதனைப் பற்றிய திறனாய்வும் அந்தப் படைப்பைச் சிதைத்துவிடக் கூடாது. ‘மழை’ ஆசிரியர், இயல்பாகவே கவிஞர். கவிஞர்கள் நாவல் எழுதுவது புதியதன்று. அதில் எந்த அளவு வெற்றி பெறுகிறார்கள் அதாவது அவர்கள் எழுதிய நாவல்கள் வாசகர்களை எந்த அளவுக்கு ஈரத்திருக்கின்றன என்பதைப் பொறுத்தே அமையும். மேத்தா, கண்ணதாசன், கலைஞர், வைரமுத்து முதலியோர் இந்த அலைவரிசையில் வருகிறார்கள். இவர்களைப் பற்றிய திறனாய்வு இங்கு முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் இவர்கள் அத்தனை பேரின் படைப்புகளிலும் உரைநடை அவ்வப்போது கவிதையாகும். இது தனி ஆய்வுக்கு உரியது. கன்னல் அவர்களின் இந்தப் படைப்பிலும் உரைநடை, கவிதையான இடங்கள் பல. .

    • பொழுது விடிந்தது என்பதை, அடக்குமுறையை எதிர்த்துச் சூரியன் கிழக்குத் திசையில் நெருப்பு வைத்துக் கொண்டிருந்தான் (4)
    • இடுப்போடு கமுக்கமாகப் பேசிக்கொணடிருந்த கூந்தல் (5)
    • (நுட்பம்) அவள் அணிந்திருந்த சிவப்பு கையில்லாப் பனியன், இரதியைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துக்கொண்டிருந்தது (6)
    • செம்மலரின் பொன்மேனியில் இருந்து காணாமல் போயிருந்த உடைகள், போதையில் பேசிக்கொண்டிருந்தன (7)
    • மன்மதன் மயக்கம் போட்டுக் கிடந்தான் (7)
    • ஓய்வெடுக்காமல் மழை தூறிக்கொண்டே இருந்தது (13)
    • மின்சாரம் ஆடைகளை அவிழ்த்துப் போட்டு அம்மணமாய் நின்றுகொண்டிருந்தது. (15)
    • கனிமொழி கதவாகவே மாறியிருந்தாள் (16)
    • கொசுக்கள் காபரே ஆடிக்கொண்டிருந்தன (19)
    • ஆயிசா ; 24, வயது எல்லோரா (25)
    • குழந்தை, சொர்க்கத்தைக் காட்டிக்கொண்டிருந்தது (25)
    • விண்மீன்கள், நிலவிடம் ஒவ்வொன்றாய் விடைபெற்றுக் கொண்டிருந்தன (76)
    • சிரிப்புகள் கைகுலுக்கிக் கொண்டன (90)
    • ஏரிக் கரையோரம் விழுதுகளைப் பரப்பிக்கொண்டு நிற்கும் ஆலமரம். ஆலமரத்தை பேச்சுக்கழைக்கும் ஓர் அரசமரமும் வேப்ப மரமும் இணைந்து நின்று கொண்டிருந்தன. (96)
    • அவள் லோகிப், தூக்குக் கயிற்றை என் மேல் தூக்கி வீசியது! (98)
    • மயக்க மருந்து செலுத்தாமலே நான் மயக்கமடைந்து கொண்டிருந்தேன் (98)

    நூற்றிருபது பக்கமுடைய இந்த நாவலில் இத்தகைய கவிதை நடை   அழகாக இருக்கலாம். படிப்பவரைப் பரவசப்படுத்தச் செய்யலாம்.  ஆனால் இது  படைப்பாளரின் ஆற்றலை வியந்து நோக்குதற்குரிய காரணிகளில் ஒன்றாக அமையுமே தவிர, கதையில் மூழ்கித் திளைப்பதற்கு உதவுமா? என்றால் ‘உதவும்’ என்று உறுதியாகக் கூற முடியாது. காரணம் இதைப் படைப்பாளரின் திறமைகளில் ஒன்றாகத்தான் நினைக்க முடியும் நாவலோடு ஒன்றுதற்கு உதவுகிறதா என்பதைச் சிந்திக்க  வேண்டியிருக்கிறது. ‘குழந்தை, சொர்க்கத்தைக் காட்டிக்கொண்டிருந்தது’ (25) என்பது போன்ற ஒரு சில இடங்களில் மிகச் சிறப்பாக அமைந்துவிடுகிற இந்த நடை, எல்லா  இடங்களிலும் அதே அனுபவத்தைக் கொடுப்பதாக என்னால் கருத முடியவில்லை. அதனால்தான் இது போன்ற படைப்புகளை மேலே நான் சுட்டிய கவிஞர்கள் எழுதிய நாவலோடுதான் ஒப்பிட முடியும். எந்த நிலையிலும் ஜெயகாந்தன் முதலியோர் எழுதிய நாவல்களோடு அதாவது அந்த நடையோடு ஒப்பிட இயலாது.

    தடுமாற்றமும்  நெருடல்களும்

    படைப்பாளர், தொழிலால் தமிழாசிரியர். கொள்கையால் தனித்தமிழ் பேணுபவர். நாவல் படைக்க வேண்டும் என்னும் ஆர்வம் கொண்டவர். நாவல்களின் வெற்றிக்குக் காட்சிச் சித்திரிப்பும் பாத்திரப் படைப்புகளுமே தலையாய காரணங்களாக ஆசிரியர் சொல்லுவது பழைய நெறி. மேற்கண்ட இருவகை உத்திகளாலும் நகரக்கூடிய கதைகள், வாசகர்களை ஈர்க்கும். ஆசிரியர் கூற்று  தவிர்க்கப்பட்டுப் பாத்திரங்களின் பேச்சே முதன்மை பெற வேண்டும். அந்தப் பேச்சு பாத்திரங்களின் இயல்புநிலை மாறாமல் அமைந்திருக்க வேண்டும்.  இது ஒரு குழப்பமான நிலை. பாத்திரங்களுக்காகப் படைப்பாளர் தம் உரிமையை இழக்க வேண்டிய  நிலை. தள்ளுவண்டிக்காரனைச் சங்கத்தமிழ் பேசச் சொல்வது செயற்கையின் உச்சம்! இம்முறையில் வெற்றி பெற்றவர் எண்ணிக்கை மிகக் குறைவே!

    ஆய்வுக் கட்டுரையில் காட்ட வேண்டிய தனித்தமிழ் அணுகுமுறையைப் படைப்பிலக்கியத்தில் காட்ட முடியாது. காட்டினால் வெற்றி பெற இயலாது.  

    நூலாசிரியர் பல இடங்களில் தனித்தமிழைக் கையாளுகிறார். தற்சமம், தற்பவத்தையும் கையாளுகிறார். ஆங்கிலத்தை அப்படியே கையாளுகிறார். ஆங்கிலத்தைத் தமிழ் எழுத்துகளாலும் சொல்கிறார். நூலாசிரியருக்குத் தனித்தமிழ் பற்றிருக்கலாம் ஆனால் கணிப்பொறிப் பொறியாளர் கனிமொழிக்கும் இருக்க வேண்டியது கட்டாயமில்லை. கனிமொழி கணிப்பொறியாளர். கன்னலைப் போலத் தமிழாசிரியர் அல்லர். “கழுத்தில் நேற்று அணிந்திருந்த தொடரியை அணியவில்லையா?” (8) என்று செம்மலரை நோக்கிக் கேட்பது, செயற்கையான சித்திரிப்பு.  இப்படித் தனித்தமிழில்தான் எழுதுவேன் என்றால் நாவல் முழுமையும் அந்தப் பாங்குப் பின்பற்றப்பட்டுள்ளதா என்றால் அதுவுமில்லை (VIBRATOR).  ‘வைப்புரேட்டர்’ (13) பணியைச் செய்யவிடாமல், மழை பெய்துகொண்டிருந்தது என்று எழுதுகிறார். (SWEATER) ‘சொட்டரும்’ போர்வையும் அணிவித்தாள் என்று எழுதுகிறார். “சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்ற ஒரு கார் ஏசன்சியையும் (AGENCY) நடத்த ஏற்பாடு செய்தார்”  என எழுதுகிறார்.

    மனிதன் குறையோடுதான் பிறக்கிறான். இலக்கிய கர்த்தா ஒரு மனிதன். எனவே அவனது படைப்புகளில் குறையே இல்லாதிருப்பது அரிது. ‘இன்மை அரிதே வெளிறு’ என்பார் திருவள்ளுவர்.

    ஒரு  மராட்டியப் பெண், சிலப்பதிகாரக் காலத்திற்குச் சென்று அன்றைய சமுதாய நிலைப்பாட்டில் பெண் ஓர் ஏலப்பொருளாக இருந்ததைத் (61) தனது செயலுக்கு வலு சேர்ப்பதற்காகப் பேசுவது எரணத்திற்குப் (LOGIC) பொருந்துவதாக இருந்தாலும் செயற்கையாக இருப்பதோடு கதைக்குத் தேவையற்றதுமாகும். இதுபோன்ற கட்டமைப்புகளை நாவல் வடிவம் ஏற்றுக்கொள்வதில்லை. காரணம் அதற்குப் பின்னாலே ‘புதுமைப்பித்தன்’ அதன் வேறு வடிவத்தைப் பொன்னகரத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். அதனை ஆசிரியர் காட்டி, தன் கணவனுக்காக அம்மாளு அப்படிச் செய்தாள்’ என்கிறாள். மாதவியின் வாழ்க்கையையோ,  அவள் முச்சந்தியில் நிறுத்தப்பட்ட அக்காலச் சூழ்நிலையையோ எந்தவகையிலும் புதுமைப்பித்தனுக்கும் ஜெயகாந்தனுக்கும் கன்னலுக்கும் பொருத்திப் பார்க்க முடியாது. ஒரு பக்கம், புராணம், இதிகாசம் என்பதையெல்லாம் ஆபாசக் குப்பைகள் என்னும் கருத்தியலை முன்னிறுத்துவது, மறுபக்கம் தங்கள் படைப்புகளில் வாழ்வியல் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் பாத்திரங்களை அந்தப் புராண இதிகாசங்களோடு இணைத்துக் காட்டி விளக்கமளிப்பது. இவையெல்லாம் படைப்பில் சத்தியத்தை எதிர்நோக்கும் ஒரு சாதாரண படிப்பாளிக்குக் குழப்பத்தையே உண்டாக்கும்.

    மேலும் ‘காமம் சான்ற கடைக்கோட் காலை’ என்னும் தொல்காப்பிய நூற்பாவின் இருப்பிடத்தைப் பேராசிரியப் பெருமக்களே இன்னும் தேடிக்கொண்டிருக்கிற நிலையில் கீர்த்தி பண்டிட் (93) அதனைச் சொல்லி விளக்குவது நம்புமாறு இல்லை.

    அதுபோலவே “சிந்தை செல்லா சேண நெடுந்தொலைவு” என்னும் சிலப்பதிகாரத் தொடர்களைக் கீர்த்தி பணடிட் சொல்வதாக எழுதுவது பொருந்தாது (95). நான் கிடாரியைத் துரத்திக் கொண்டு போய் அதன் மேல் ஏறிக் கொண்டிருந்த எருமைக் கிடாவையே பார்த்துக் கொண்டிருந்தேன் (98)  என்பது தரங்கெட்ட சித்திரிப்பு. நிறைதமிழ் ஆய்ந்த படைப்பாளர், ஒருக்கனித்து (4) என எழுதுவது நெறியா? மேலும் ‘சிவப்புக் கையில்லா பனியன்’ என்று எழுதுவது சரியா?  கையில்லாத சிவப்பு பனியன் (6) என்று எழுதுவது சரியா? ‘கமுக்கமாக’ என்னும் சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துவது சலிப்பை உணடாக்குகிறது

    நிறைவுரை

    பாலியல் தொழிலைப் பகிரங்கமாக்குவதும் போலி அரசியல் மற்றும் சமுதாயவாதிகளின் முகத்திரையைக் கிழித்தெறிவதும் பெண்கள் குடிப்பதும் போதைக்கு அடிமையாவதும் ஒருத்தி அம்மணத்தை இன்னொருத்தி பார்க்க விழைவதும் மகன் பாழ்படுத்தியவளையே தந்தையும் அனுபவிக்க  எண்ணுவதும் அறம் தூங்குவதில்லை என்பதும் ஆண்பெண் சேர்க்கையைப் பார்த்துத் துறவிகள் (?) ரசிப்பதும் திருமணத்திற்கு முன்பே பாலுறவு கொள்வதும் கொண்ட அப்பாலுறவை  ஏதோ சிற்றுண்டியை உண்பதுபோல எண்ணிக் கடந்துபோவதும் எள்ளின் முனையளவும் மிகையானவை அல்ல. எல்லா இடத்திலும் நடப்பதல்ல என்பர் சிலர். எங்காவது நடந்துகொண்டுதான் இருக்கிறது வெளிச்சம் போட்டுக் காட்டுவது படைப்பாளர் நோக்கமல்ல. யதார்த்தத்தை விட்டு விலகினால் இலக்கியம் சிறக்காது! இவற்றை யதார்த்தம் இல்லையென்றால் ஆயிசா வீட்டில் ஆண்டாள் உண்டது யதார்த்தம் இல்லையென்றாகிவிடும். சீரழிந்த கீர்த்தியும் இளமாறனும் மணப்பது செயற்கையாகிவிடும். ஆசாரம் பார்க்கும் அய்யங்கார்,  இசுரத் அலியால் அடைக்கலம் பெற்றிருக்க இயலாது. படைப்பு என்பது கற்பனையில், நடப்பியலில் எங்கோ தோன்றுவதுதான், நடப்பதுதான். அதனைப் புனைவால் பொருளாக்கித் தருவதுதான் படைப்பிலக்கியம். அதில் கன்னல் பெற்றிருக்கும் வெற்றி பிரம்மாண்டமாக இல்லாதிருக்கலாம். ஆனால் வெற்றி பெற்றிருக்கிறார்.

    ===========================================

    பின்குறிப்பு ‘கன்னல்’ (நூலாசிரியர்)  ஓர் சுருக்க அறிமுகம்

    முறையாகத் தமிழ் பயின்று முனைவர்ப் பட்டம் பெற்றவர். 35 ஆண்டுக்காலம் பள்ளிக் கல்வி மற்றும் மேநிலைக்கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகளையும் பேரனையும் மருத்துவர்களாகக் காணும் பேறு பெற்றவர். பழகுதற்கு மட்டும் இனியவராகும் பாசாங்குப் பேர்வழி அல்லர். பண்பாலும் உயர்ந்தவர். கருவூரை அடுத்த காணியாளம்பட்டி என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர்.  செந்தமிழில் உள்ளம் தோய்ந்தவர். அவ்வூரில் செயல்படுத்தப்படும் அரசின் எந்தத் திட்டங்கள் ஆனாலும் தன் சொத்துகளின் மீது தனக்கிருந்த சொந்தங்களை முறித்துக்கொண்டு வாரி வழங்கும் வள்ளல்.  படைப்பாளர்களுக்கு மொழிதான் சேவை செய்யும். இவருக்கு வைரமுத்து அவர்களைப் போல வடிவங்களும் ஏவல் கேட்கும்.

    ‘இரவு நதிக்கரை ஓரம்’,’ ‘இரு வேறு உலகம்’, ‘வேடிக்கை மனிதர்கள்’, ‘ஓர் ஊரின் கதை’, ‘காணாமல் போன கவிதை’, ‘மழை’ என்பன அவருடைய நாவல்களில். சில. ‘பாரதிதாசன் பாடல்களில் பழந்தமிழ் இலக்கியச் செல்வாக்கு’, ‘திருக்குறளில் அன்பு நட்பு காதல் ஓர் அறிமுகம்’ – ‘தமிழினத்தின் தொன்மையும் தமிழ் மொழியின் தொன்மையும்’ ‘கவிதை ஓர் அறிமுகம்’ ‘வள்ளுவர் வழங்கும் வெற்றிக்குச் சில வழிகள்’ ‘வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்’  என்னும் சில ஆய்வுநூல்களின் ஆசிரியர். ‘முல்லை’, ‘புயலைத் தாக்கும் பூக்கள்’, ‘நிலாப் பறவைகள்’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களை மரபிழைகளால் பின்னியவர்.

    இவர் கவிதை மாதிரி எழுதிக்கொண்டு கவிஞர் எனச் சொல்லிக்கொணடவர் அல்லர். கவிஞராய்ப் பிறந்ததால் கவிதை எழுதியவர். இவருடைய படைப்புகளோடு நான் கொண்ட உறவினைவிட இவரோடு கொண்ட நெருக்கம் மிக மிகக் குறைவு. அதனால் சண்டை சச்சரவு என்று ஏதுமில்லை. பெற வேண்டிய பெருமையைப் பெறாது ‘மலையகத்து நெல்லியாக’ மறைந்திருக்கும் இத்தகைய மாபெரும் படைப்பாளர்களின் சிந்தனைகளை அறிமுகம் செய்யும் ஒரே குறிக்கோளோடு எழுதப்பட்ட மதிப்பீடு இது! நூலாசிரியர் எனக்குத் தெரிந்தவர்தான். ஆனால் இந்த மதிப்பீடு நட்புக்கு அப்பாற்பட்டது.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 38

    பழகத் தெரிய வேணும் – 38

    நிர்மலா ராகவன்

    அன்பைக் காட்டும் வழி: சுதந்திரம் அளிப்பது

    குழந்தைப் பருவத்திலிருந்து மனிதனுக்கு இரு முரணான குணங்கள் இயற்கையிலேயே அமைந்திருக்கின்றன.

    உண்பது, தன் துணியை தானே மடித்து வைத்துக்கொள்வது போன்ற விஷயங்களைத் தாங்களே செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், எதையாவது கண்டு பயந்தாலோ, கீழே விழுந்துவிட்டாலோ, ஓடி வந்து தாயைக் கட்டிக்கொள்வார்கள்.

    சிறுவர்களாக இருக்கும்போது மட்டுமல்ல, எல்லா வயதிலும் சுதந்திரமும் வேண்டும், பாதுகாப்பும் வேண்டும்.

    `என் உரிமை!’ என்று முழக்கமிடும் பதின்ம வயதினர் `சுதந்திரம்’ என்று எண்ணுவது தான்தோன்றித்தனமாக நடப்பது.

    அவர்களுக்குச் சகல வசதிகளும் அளித்து, செலவழிக்கப் பணமும் கொடுக்க வேண்டிய பெற்றோர், `இது எப்படி சுதந்திரம் ஆகும்?’ என்று அலுத்துக்கொள்வதில் நியாயம் இருக்கிறது.

    ஒருவர் தன் வாழ்க்கையைத் தானே அமைத்துக்கொள்வதுதான் சுதந்திரம். அது பிறர் அளிப்பதல்ல; சுய முயற்சியால் பெறுவது.

    சில குடும்பங்களில், வயதில் மூத்தவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அங்கு இளையவர்களுக்கு பேச்சு சுதந்திரம் கிடையாது. வேறு விதமாக யோசிப்பதே குற்றம் என்பதுபோல் வளர்க்கப்படுவார்கள்.

    பெண்களுக்கோ! கேட்கவே வேண்டாம்.

    கதை

    கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாள் காவேரி. திருமணமாகி, இரு குழந்தைகளுக்குப் பின் மேற்படிப்பைத் தொடர்ந்து, பட்டங்களும் பெற்றாள்.

    ஆரம்பப் பள்ளி ஒன்றில் அவளை அழைத்தார்கள், தலைமைப் பதவியை ஏற்க.

    மாமியாரோ, `நீ வேலைக்குப் போய்விட்டால், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள என்னால் முடியாது,’ என்று திட்டவட்டமாகக் கூறினாள்.

    பெரியவர்களை எதிர்த்துப் பழக்கமில்லாத காவேரி அடிபணிந்தாள்.

    பல ஆண்டுகள் கழிந்தபின், தனக்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்காமல் போய்விட்ட வருத்தம் எழுந்தது. `குழந்தைகளையாவது நல்ல விதமாக வளர்க்க முடிந்ததே!’ என்ற சிறு ஆறுதல் கொண்டாள்.

    அவள் துணிந்திருந்தால், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள பணிப்பெண்ணை அமர்த்தி இருக்கலாம். இல்லையேல், தனிக்குடித்தனம் போயிருக்கலாம்.

    நம் திறமைக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. ஆனால், பலருக்கும் தானே சிந்திப்பதைவிட, பிறரைத் தொடர்வது எளிது.

    அப்படி அவள் தனிக்குடித்தனம் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

    `பெரியவர்களை விட்டுவிட்டு, உனக்கு அப்படி என்னடி வாழ்க்கை?’ என்று ஆசாரமான அவள் குடும்பத்தாரே பழித்திருப்பார்கள்.

    `பிறர் என்ன சொல்வார்களோ!’ என்று சுயமாகச் சிந்திக்கவே பயந்தால், வாழ்வில் மகிழ்ச்சியோ, பிடிப்போ இல்லாமல் போய்விடுமே!

    தான் விரும்பியதைப் பிறருக்காக விட்டுக் கொடுத்து, தன் திறமையை முழுவதாக வெளிப்படுத்த முடியவில்லையே என்ற ஏக்கமும் கையாலாகாத உணர்வும் மேலிட வாழ்கிறவர்கள் எத்தனை பேர்!

    (நாடு தழுவிய நிலையிலும் இதேதான். நம் கருத்து பிடிக்காவிட்டாலும், `பிழைத்துப் போ!’ என்று நம்மைத் தண்டிக்காது விட்டால், அதுவே சுதந்திரம் என்று மகிழ வேண்டியதுதான்).

    காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்ட பழக்க வழக்கங்களையோ, எண்ணங்களையோ ஏற்றுக்கொள்ளாது, தன்னம்பிக்கையுடன் நடக்க முயலும் எவருக்கும் கஷ்டங்கள் தவிர்க்க முடியாதவை. அவற்றுக்குப் பொறுப்பேற்கத் தயாராக இருக்கவேண்டும். அதற்கான துணிச்சல் அவசியம்.

    கதை

    அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன்.

    அப்போது விரிவுரையாளராக இருந்த மிஸ் சுந்தரவல்லி, “உங்களிடம் படித்த மாணவிகளில் சிறப்பானவள் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்?” என்று என் பள்ளித் தமிழ் ஆசிரியை திருமதி கோமளாம்பாளிடம் விசாரித்திருக்கிறாள். (அது தனியார் பள்ளியான கமலாபாய் பெண்கள் பள்ளி. பெங்களூரில்).

    “பத்து வருடங்களுக்கு ஒரு முறைதான் நிர்மலா போன்ற ஒரு மாணவி கிடைப்பாள்!” என்ற பதில் கிடைத்ததாம்.

    மிஸ் சுந்தரவல்லியே இதை என்னிடம் கூறி, “பரீட்சைகளில் நீ அப்படி ஒன்றும் சிறப்பாக எழுதுவதில்லையே! ஏம்மா? தலைவலியா?” என்று போலிப் பரிவுடன் ஒவ்வொரு முறையும் விசாரித்தபோது, எனக்குப் பதிலளிக்கத் தெரியவில்லை.

    பல வருடங்களுக்குப் பின் புரிந்தது, அவ்விரு ஆசிரியைகளுக்கும் இடையே இருந்த வேறுபாடு.

    பள்ளிக்கூடத்தில் எனக்குள் இயற்கையாகவே அமைந்திருந்த எண்ணச் சுதந்திரம் தடை செய்யப்படவில்லை. மாறாக, அது வளரும் விதத்தில் ஊக்கம் அளிக்கப்பட்டது.

    `நான் சொல்லியது மட்டுமல்லாது, பரீட்சைத்தாளில் சுயமாகக் கருத்து சொல்வதற்கு இவளுக்கு என்ன திமிர் இருக்கவேண்டும்!’ என்று ஆத்திரப்பட்டிருப்பாள் மிஸ் சுந்தரவல்லி.

    (பட்டப் பரீட்சையில் நானும், இன்னொரு பெண்ணும் மட்டுமே தமிழில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தோம்).

    கல்வி கற்பதன் நோக்கமே ஒருவர் எதையும் கூர்ந்து கவனித்து, ஆராய்ந்து, ஒரு முடிவுக்கு வருவதுதான்.

    இது புரியாது, சுயமாகச் சிந்திப்பவர்களை மரியாதை கெட்டவர்கள், கர்வம் கொண்டவர்கள் என்பதுபோல் தண்டித்தால், அது என்ன கல்வி?

    பெண் எழுத்தாளர்களும் சுதந்திரமும்

    ஆண்கள் எப்படி எழுதினாலும் ஏற்கலாம். ஆனால், தமிழ்ப் பெண்களின் எழுத்து ஒரு வரையறைக்குள்தான் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி.

    (ஆங்கிலத்தில் எழுதும் பெண்களுக்குப் பூரண எழுத்துச் சுதந்திரம் உண்டு. அவர்களது உள்ளுணர்வை விவரித்தால் அது தவறாகக் கருதப்படுவதில்லை).

    கற்பனை விரியும்போது, அதைத் தணிக்கை செய்யாது, அப்படியே எழுத்தில் வடிக்கும்போதுதான் நிறைவு ஏற்படுகிறது.

    `இது சரியா?’

    `இப்படி எழுதினால், என் பெயர் கெடுமோ?’

    இவ்வாறு கலக்கத்துடன் யோசித்து, ஒவ்வொரு வரியையும் திருத்திக்கொண்டே இருந்தால், நாம் எழுதுவதில் முழு மனத்துடன் ஆழ்ந்துபோக முடியுமா? கதையில்தான் என்ன சுவை இருக்கும்?

    கதைகளில், பெண்கள் முறை தவறி நடக்கிறார்கள் என்பதுபோல் எழுதினால், அந்த எழுத்தாளினியின் நடத்தையில் சந்தேகம் எழுப்புவார்கள்.

    படைத்தவரின் கைவண்ணத்தைவிட்டு, ஒரு கலைஞரையே வேண்டாத விமரிசனத்திற்கு உள்ளாக்குவது பொறாமையால்தான் என்று தெளிந்தால் போதும். துணிச்சல் அதிகரிக்கும்.

    அத்தகையவர்களுக்குப் பயந்து, பிறர் மதிக்கவேண்டும் என்றே ஒவ்வொரு செயலையும் புரிவது, அல்லது ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேசுவது என்று பழகிக்கொண்டால், முன்னேறுவது எப்படி?

    என்னைச் சில பெண்கள் கேட்டிருக்கிறார்கள், “ஆண்களின் சில போக்கைக் கேலி செய்து நீங்கள் (ஆங்கிலத்தில்) எழுதுகிறீர்களே! உங்கள் கணவர் கோபிப்பதில்லையா?” என்று.

    எரிச்சலுடன், “நான் – எழுத்தாளர்! எனக்குத் தோன்றுவதை, எனக்குச் சரியென்று படும் விதத்தில் எழுதுகிறேன்,” என்று பதிலளிப்பேன்.

    அன்பும், காதலும்

    வளர்ந்த பிள்ளைகளோ, தம்பதியரோ, ஒருவர் தான் சொல்கிறபடியே நடக்கவேண்டும் என்று அவரைக் கெட்டியாகப் பிடித்திராது அவர் போக்கில் விட்டால், அப்படி அளிக்கும் சுதந்திரத்தையே அன்பு என்பேன்.

    `ஐ லவ் யூ’ என்று வாய்வார்த்தையாகச் சொல்பவர்கள் எத்தனை பேர் இதைக் கடைப்பிடிக்கிறார்கள்?

    Share