Blog

  • பெல்ஜியத்தில் ஒரு தாரகை, அம்ருத சாய்

    பெல்ஜியத்தில் ஒரு தாரகை, அம்ருத சாய்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    பெல்ஜியத்தில் வாழும் எழுத்தாளர் மாதவன் இளங்கோ – தேவிப்பிரியா தம்பதியரின் மகன் அம்ருத சாய், பல துறைகளில் ஒரு தாரகையாக உருவாகி வருகிறார். 11 வயதுடைய இவர், தமிழ், ஆங்கிலத்துடன் டச்சு மொழியிலும் வல்லவர். அம்ருத பாலி என்ற கற்பனை உலகத்தைப் படைத்து, அதற்கு அரசனாக விளங்குகிறார். இதன் அடிப்படையில், ஆறு பாகங்கள் உள்ள ஒரு பெரிய நாவலை ஆங்கிலத்தில் எழுதி வருகிறார். ஒவ்வொரு நாளும் 100 பக்கங்கள் படித்து வருகிறார். இரண்டு யூடியூப் சானல்களை நடத்தி வருகிறார். கீபோர்டு, பியானோ, மேற்கத்திய இசை ஆகியவற்றைப் பயின்று வருகிறார். கேமிங் விளையாட்டுகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். நிரலாக்க மொழிகளையும் கற்று வருகிறார். இவ்வளவு துறைகளைக் கற்கும் போதும், ஒவ்வொன்றுக்கும் நேரம் ஒதுக்கி, சிறப்பாக மேலாண்மை செய்து வருகிறார். தமிழுக்கும் இந்தியாவுக்கும் பெல்ஜியத்துக்கும் மட்டுமில்லை, உலகிற்கே ஒரு தாரகையாக இவர் உருவாகி வருகிறார். இந்த நேர்காணலில் அம்ருத சாய், தனது பல்வேறு ஆக்கங்களையும் முயற்சிகளையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மழலைக் குரலில் விரியும் அவரது புதிய உலகத்தை இங்கே கண்டு மகிழுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 17

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 17

    -மேகலா இராமமூர்த்தி

    ”இராமனை எளிய மானுடன் என எண்ணவேண்டா” என்று அகம்பனன் சொன்ன அறிவுரையை அகத்திலே கொள்ளாது புறந்தள்ளினான் கரன். அரக்கர் சேனைக்கும் இராமனுக்கும் போர் மூண்டது. கரனின் படைத்தலைவர்கள் ஆவேசமாகப் போரிட்டு மாண்டனர். அடுத்து முத்தலைக் குரிசிலான திரிசிரனின் படையினர் இராமனை அஞ்சாது எதிர்த்து வெஞ்சமர் புரிந்தனர்.

    அழகிய இறகுகளையுடைய குளவி தன்னிடம் அடைக்கலமாய்ச் சேர்ந்த புழுக்களைத் தன் வடிவமாய்ச் செய்யும் தன்மைபோல அருள்வள்ளலான இராமன், அவ் வஞ்சத்து அரக்கரை வளைத்துக் கொண்டு தன்னுடைய சிறந்த அம்புகளின் தூய்மையால் அவர்களைத் தேவராக்கினான்.

    அஞ்சிறை அறுபதம்
         அடைந்த கீடத்தைத்
    தஞ்சு எனத் தன் மயம்
         ஆக்கும் தன்மைபோல்
    வஞ்சகத்து அரக்கரை வளைத்து
         வள்ளல்தான்
    செஞ் சரத் தூய்மையால்,
         தேவர் ஆக்கினான். (கம்ப: கரன்வதைப் படலம் – 3096)

    குளவியால் கொட்டப்பட்டுப் புழுக்களும் குளவியாதல் போல, அரக்கரும் உயர்குணத்தோனான இராமனின் சரத்தால் உயிர்நீத்துத் தேவராயினர் என்று அரக்கர் இறந்துபட்ட நிகழ்வுக்கு ஏற்றந்தந்து சுவைபட விவரிக்கின்றார் கம்பர்.

    அடுத்து இராமனும் திரிசிரனும் நேருக்கு நேர் போர் புரிந்தனர். தான் ஒருவன் போர் செய்தலே இருநூறு பேர் போர் செய்வதுபோலத் தோன்றும்படி பெரும் மாயையின் துணையொடு கடும்போர் செய்த திரிசிரன் எனும் அந்த முத்தலை அரக்கனின் இரு தலைகளை ஒன்றன்பின் ஒன்றாக இராமனின் கணைகள் உருட்டித் தள்ள, மீதமிருந்த ஒரு தலையோடு ஆகாயத்தில் மாயப்போர் புரிந்தான் திரிசிரன்.

    இராமனின் சரங்கள் அவன் தாள்களையும் தோள்களையும் அப்போது துணித்தன. தன் உடலுறுப்புக்களை இழந்தபோதும் திரிசிரனின் போர்வெறி அடங்கவில்லை. தன் வாயினை அகலத்திறந்து இராமனை விழுங்கப் பார்த்தான் அவன். அவ்வேளையில் இராமனின் சரம் அவன் ஒற்றைத் தலையையும் கொய்தெறிந்தது. அதைக்கண்ட அரக்கர் சேனை அச்சங்கொண்டு ஓடத் தொடங்கியது. அதனால் கடுங்கோபம் கொண்ட கரனின் இளவலான தூடணன்,

    ”பழிப்புக்கு இடமான பயத்தை உளத்திலே கொண்டு உயிர்வாழ்கின்ற இழிந்த மனிதரை அழகான வளையணிந்த வனிதையரும் மதியாது பழிப்பர்; மனத் துணிவு எனும் கவசமே நிலையானது; அதுவன்றி அச்சமெனும் குணம் அரிய உயிர்க்குத் துணையாமோ?” என்று அவர்களை நோக்கி இடித்துரைத்தான்.

    வச்சைஆம் எனும் பயம் மனத்துஉண்டு என வாழும்
    கொச்சை மாந்தரைக் கோல்வளை மகளிரும் கூசார்
    நிச்சயம்எனும் கவசம்தான் நிலைநிற்பது அன்றி
    அச்சம்என்னும் ஈது ஆர்உயிர்க்கு அருந் துணை ஆமோ.
    (கம்ப: கரன் வதைப் படலம் – 3113)

    அடுத்து, தூடணனுக்கும் இராமனுக்கும் கடும்போர் நடைபெற்றது. இராமன் எய்த பகழி, தூடணனின் தலையை அவன் உடலிலிருந்து அகற்றியது. அதனைத் தொடர்ந்து இராமனும் கழலணிந்த வீரனாம் கரனும் பொருதனர். இறுதியில் இராமனின் கரம் விடுத்த சரத்தால் கரனும் மரணத்தைச் சந்தித்தான்.

    இராமன் தமியனாய் நின்று அரக்கர் சேனையை முற்றாய் அழித்தமை கண்டு உவகைக் கலுழ்ச்சியுற்றனர் இலக்குவனும் சீதையும்!

    சூர்ப்பனகையின் நிலையோ அதற்கு நேர்மாறாயிருந்தது. அவள் தம் சோதரர்கள் போரில் அழிந்துபட்டதைக் கண்டு துடித்தாள்; வயிற்றிலடித்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.

    இராமன் மீது நான்கொண்ட ஆசை என் மூக்கோடு முடியவில்லை; என் வாக்கினால் உங்கள் வாழ்க்கையையும் அல்லவா போக்கினேன்? பாவியேன் நான்!” என்று மாண்டுகிடந்த சோதரர்களின் உடலங்களைக் கண்டு புலம்பியவள், நிகழ்ந்தவற்றை அறிவிக்க இராவணனைத் தேடிச்சென்றாள்.

    ஆக்கினேன் மனத்து ஆசை அவ்ஆசை என்
    மூக்கினோடு முடிய முடிந்திலேன்
    வாக்கினால் உங்கள் வாழ்வையும் நாளையும்
    போக்கினேன் கொடியேன் என்று போயினாள்.
    (கம்ப: கரன்வதைப் படலம் – 3162)

    இனிதான் நாம் இராமாயணத்தின் எதிர்நிலைத் தலைவனும் இணையற்ற பெருவீரனுமான இராவணனை இராமகாதையில் சந்திக்கப் போகின்றோம்!

    இலங்கை அரண்மனையில் தேவதச்சனான விசுவகர்மா தன் சிற்ப நூலறிவு அனைத்தும் சிறப்பாய்ப் புலப்படும் வகையில் அமைத்த ஒப்பற்ற மணிமண்டபத்தில் இராவணன் கம்பீரமாய் வீற்றிருக்கின்றான்.

    தேவர்களுள் புலியின் தோலை உடுத்த சிவனும், பொன்னாடை புனைந்த திருமாலும், பூவில் தோன்றிய பிரமனும்கூட இராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றவர் அல்லர்; தேவரின் நிலையே ஈதெனில் பிறரின் நிலைகுறித்து நவிலவும் வேண்டுமோ? சிறுத்த இடையும் பருத்த முலையும் மூங்கிலிளந்தோள்களும் செவ்வரி ஓடிய கண்களும் கொண்டு ஆடவரை அழகால் வெல்லும் மாதராரின் நெடிய ஊடலைத் தீர்க்கும்பொருட்டுக்கூட வணங்காத முடியை உடையவன் இராவணன் என்று அவனுடைய வீரத்தையும் மிடுக்கான இயல்பையும் பாங்குற ஒரு பாட்டில் விளக்குகின்றார் கம்பர்.

    புலியின் அதள் உடையானும் பொன்னாடை
         புனைந்தானும் பூவினானும்
    நலியும் வலத்தார் அல்லர் தேவரின் இங்கு
         யாவர் இனி நாட்டல் ஆவார்
    மெலியும் இடை தடிக்கும் முலை வேய் இளந்
    தோள் சேயரிக் கண் வென்றி மாதர்
    வலிய நெடும் புலவியினும் வணங்காத
         மகுட நிரை வயங்க மன்னோ. (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3166)

    ஊடற்காலத்து, தம் மனைவியரின் ஊடலைத் தணிக்க ஆடவர்கள் அவர்களிடம் பணிந்து நடந்துகொள்ளுதல் பிழையில்லை என்பது தொல்காப்பியப் பொருளதிகாரம் உரைக்கும் பொருள்பொதிந்த கருத்து.

    மனைவி உயர்வுங் கிழவோன் பணிவும்
    நினையுங் காலைப் புலவியுள் உரிய.
    (தொல்: பொருளியல் – 223)

    ஆனால் இராவணனோ ஊடற்காலத்தில்கூடத் தம் உரிமை மகளிரிடம் அடிபணிந்து நடந்துகொள்ள மாட்டான் என்று கம்பர் குறிப்பிடுவதன் வாயிலாய் எப்படிப்பட்ட சூழலிலும் யாரிடமும் அவன் தலைவணங்க விரும்புவதில்லை எனும் அவனது உறுதியான உளஇயல்பை நாம் தெளிவாய் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

    இராவணனின் எழிலார் மணிமண்டபத்தில் தும்புரு எனும் வீணை வல்லானும், நாரத முனிவனும் வீணை மீட்டி இராவணனின் புகழை ஓதி அவனை மகிழ்வித்துக்கொண்டிருக்க, சுந்தர வடிவுகொண்ட அந்தரமகளிரும் அங்கே பணிப்பெண்களாய்த் தொண்டுபுரிந்துகொண்டிருக்க, மாந்தர்தம் உயிரைக் கவரும் கணிச்சிக் கூர்ம்படை கடுந்திறலானான எமனும் தன் சூலாயுதத்தைத் துறந்து, மேலாடையால் வாய்பொத்தி, பேரிகைகள் முழங்கும் நேரத்திலெல்லாம் நாழிகைக் கணக்கை அளவிட்டு இராவணனிடம் உரைத்துக் கொண்டிருந்தான்.

    இப்படித் தேவர்களெல்லாரும் இராவணனுக்கு ஏவலராய் அவன் அரண்மனையில் சேவகம் செய்துகொண்டிருந்த வேளையில், மூன்றுலகாளும் இராவணனின் தங்கையான சூர்ப்பனகை, மூக்கறுந்த கோலத்துடனும் அழுகை ஓலத்துடனும் அரண்மனையின் வடக்கு வாயிலில் வந்து தோன்றினாள்.

    அவளின் நிலைகண்ட இலங்கை மக்கள் காரணமறியாது கலங்க, விரைந்து அரண்மனைக்குள் நுழைந்தவள், குன்றின் அடியில் வந்துபடிந்த கருமேகமென இராவணனின் காலடியில் வீழ்ந்து புரண்டாள்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

    Share
  • கேதார கெளரி விரதம் உணர்த்தும் வாழ்வியல் தத்துவம்

    கேதார கெளரி விரதம் உணர்த்தும் வாழ்வியல் தத்துவம்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண்,  ஆஸ்திரேலியா

    விரதம் என்றால் என்னபசித்திருப்பது.  தனித்திருப்பதுவிழித்திருப்பது. அதே வேளை மனத்தை ஒரு நிலைப்படுத்தி ஒரே நோக்கோடு இருப்பது. இரண்டுமே வாழ்வில் நன்மைக்கு வழிவகுக்கும் என்பதால் இரண்டுமே பொருந்தும்.

    விரதங்கள் என்று பார்க்கும் பொழுது எங்கள் சமயமானது நாளுக்கான விரதம். வாரத்துக்கான விரதம்மாதத்துக்கான விரதம் என்று வருடம் முழுவதுக்குமே விரதங்கள் பல அமையுமாறு வழி வகுத்து விட்டிருக்கிறது. வருடம் முழுவதும் தெய்வீக சிந்தனையுடன் மனத்தை வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை எனலாம்.

    இன்பமும் துன்பமும் கலந்ததுதான் இந்த உலக வாழ்க்கையாகும். நம்முடைய முன்வினைப் பயன்களே இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணமாய் அமைகிறது என்பதுதான் சமயத்தின் நிலையாகும். இப்படியான வினைகளிலிருந்து விடுபட்டு இன்பங்களைப் பெருக்கிக்கொள்ள அமைந்த வழிதான் விரதங்கள் எனலாம்.

    இறைவனை எப்பொழுதுமே சிந்தையில் நிறுத்திக் கொள்ளுவது என்பது ஞானிகளுக்கு எளிதானதாகும். இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு இது அவ்வளவு எளிதன்று. எனவேதான் ஒரு குறிப்பிட்ட நாட்களை நிர்ணயித்துக் காட்டிய பாதைதான் விரதங்களாக வந்து அமைந்திருக்கின்றன என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    சிவனைக் குறிக்க கார்த்திகைச் சோமவார விரதம் கார்த்திகை உமா மகேஸ்வர விரதம்மார்கழி திருவாதிரை விரதம்தைமாத சூல விரதம்மாசிமாத மகா சிவராத்திரி விரதம்பங்குனி உத்தரத் திருக்கல்யாண விரதம்வைகாசிமாத அஷ்டமி ரிஷப விரதம்ஐப்பசி மாத கேதார கெளரி விரதம் என்று வகுக்கப்பட்டிருக்கிறது. நவராத்திரி நிறைவு பெறும் விஜயதசமி அன்று கேதார கெளரி விரதம் ஆரம்பமாகி இருபத்தொரு நாட்கள் அனுடிக்கப்பட்டு வருகிறது. நவராத்திரி நிறைவில் ஆரம்பித்து தீபாவளி அன்று இவ்விரதம் நிறைவுறுகிறது. நவராத்திரியில் பெண்மை போற்றப்படுகிறது. கெளரவிரதத்திலும் பெண்மை போற்றப்படுகிறது. தீபாவளிக்கும் அடிப்படையின் பெண்மையான சக்தி என்பதும் நோக்கத்தக்கதேயாகும். மூன்றுமே சக்தியுடன் இணைந்து பெண்மைக்கு, தாய்மைக்கு முக்கியத்தைக் கொடுக்கிறது என்பது வாழ்வியலுடன் இணைகிறது அல்லவா?

    சிவனும் பார்வதியும் கயிலாயத்தில் இருக்கும் பொழுது தரிசனம் செய்வதற்கு பிருங்கு முனிவர் அங்கு வருகிறார். வந்தவர் சிவனை மட்டுமே வலம்வந்து வணங்கி நிற்கிறார். பிருங்கு முனிவர் சிவனைமட்டுமே வணங்கியது எதற்காக என்று பார்வதி, சிவனிடம் வினவுகிறார். உலகத்தின் இயக்கத்தையே உணர்ந்த சிவன், பார்வதியின் உள்ளக் கிடக்கையினை அவரின் வினாவினால் உணந்துகொண்டார். அன்பும் சிவமும் இரண்டல்ல ஒன்றேதான் என்பது போல – “சிவனும் சக்தியும் இரண்டல்ல ஒன்றேதான்” என்று எண்ணினார். இறைவன் நினைப்பு பார்வதிதேவியிடம் பதிந்தது. பார்வதி தேவியார் இறைவனைக் குறித்து இருபத்தொரு நாட்கள் விரதம் இருந்தார். பார்வதியின் விரதத்தைக் கண்ணுற்ற சிவன் அவர்முன் தோன்றி “உனக்கு வேண்டியதைக் கேள்” என்றார்.  “இந்த உலகில் ஆண்களும் பெண்களும் சமம் என்பதை உணர்த்தஉலகின் முதல்வனான நீங்கள் உங்களில் பாதியை எனக்குத் தரவேண்டும்”  என்று வேண்டிக்கொண்டார். இறைவனும் தன்னுடம்பில் பாதியை அன்னை பார்வதிக்கு கொடுத்து “சிவனும் சக்தியும் ஒன்றே” என்னும் நிலையினை ஆக்கினார்.

    இங்கே கேதார கெளரி விரதம் பற்றிய நிலை கதைவடிவில் புராணமாய் வழங்கி வருகிறது. இங்கே சிறந்ததோர் வாழ்வியல் தத்துவம் வெளிப்பட்டு நிற்பதுதான் மிகவும் முக்கியம் எனலாம்.

    மனித வாழ்வில் இல்லற வாழ்க்கை என்பது அன்பின் அடிப்படையில் அமைதல் மிக மிக அவசியமாகும். அன்பு என்பதுதான் இல்லறத்தின் ஆணி வேராகும்.அன்பு மலரும் இல்லறம்தான் நல்லறமாக மலரமுடியும். பெண்கள் என்பவர்கள் சக்தியின் வடிவமாவர். ஆணுக்கு வாழ்க்கையில் அருந்துணையே பெண்தான். இதனால்த்தான் வள்ளுவம் “வாழ்க்கைத்துணை” என்னும் தேடற்கரிய பெயரினைச் சூட்டியது எனலாம். வாழ்க்கையின் துணையான பெண்தான் இல்லறத்தின் உயிர்நாடியாகிறாள். அந்தப் பெண்மைக்கு முக்கியத்துவம் நல்குவதுதான் “கேதார கெளரி விரதம்” ஆகும்.

    சுமங்கலியாய் வாழ்வதையே இல்லறத்தில் இருக்கும் எல்லாப் பெண்களும் பெருமையாய் பெருவரமாய் எண்ணுகிறார்கள். அந்தப் பெருவரத்தை அவர்களுக்குப் பெற்றுத்தரும் விரதமாக “கேதார கெளரி விரதம்” அமைவதுதான் வாழ்வியலின் மிகச்சிறந்த நிலை எனலாம்.

    ஜோதிடவியல் வழியில் சூரியனும் சந்திரனும் மிகவும் முக்கியமான கிரகங்களாகும். இரண்டுமே மனித வாழ்வியலோடு இணைந்தே நிற்கின்றன.

    சூரியனை தந்தைக் கிரகமென்றும் சந்திரனை தாய்க்கிரகமென்றும்சூரியனுக்கு உரிய தேவதையாக பரமேஸ்வரனையும் சந்திரனுக்குரிய தேவதையாக கெளரியையும் காட்டும் நிலை ஜோதிடத்தில் இருக்கிறது.

    கேதார கெளரி விரதம் இடம்பெறும் காலத்தில் சூரியன் தனது வலிமையை இழந்து காணப்படுகிறது. அவ்வேளை சந்திரன் இணையும் நிலையில் அதாவது  அமைவாசையில் நல்லதொரு சங்கமம் நிகழ்கிறது. தந்தையான சூரியனும் தாயான சந்திரனும் இணையும் காலம் கேதார கெளைரி விரதம் பூர்த்தியாகும் நாளாக அமைவதும் “ஆணான சிவனும் பெண்ணான பார்வதியும்” இணைவதும் மிகவும் பொருத்தமாய் அமைகிறது என்று ஜோதிட நிலை காட்டுகிறது.

    எந்த நிலையில் பார்த்தாலும் ஆணும் பெண்ணும் இணையும் அற்புத நிகழ்வு கேதார கெளரி விரதத்தின் வாழ்வியல் முறை என்றே எடுத்துக் கொள்ளலாம்.

    இல்லறத்தின் உயிர்நாடியே இந்த இணைப்பு அல்லவாஅந்த இணைப்பை நல்கிடும் “கேதார கெளரி விரதம்” நல்லதோர் வாழ்வியல் தத்துவமாக மலர்ந்து நிற்கிறது மனங்கொள்ளத்தக்கதாகும்.

    மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
    எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
    கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
    பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

    Share
  • உலகளாவிய தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்

    உலகளாவிய தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்

    சங்கரி

    சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் முன்னெடுப்பில், UNWINDING and other Contemporary Tamil Short stories என்ற 474 பக்கங்கள் கொண்ட பெருந்தொகுப்பு 43 சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளைக் கொண்டதாக 2019 ஜூலை மாதத்தில் எமரால்டு பதிப்பகத்தாரால் பிரசுரிக்கப் பெற்றது.

    இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், பிரிட்டன், ச்றிலங்கா ஆகிய 10 நாடுகளிலிருந்து அ. முத்துலிங்கம், இரா. முருகன், மாலன், நாகூர் ரூமி, சித்ரன், சத்யானந்தன், சத்யராஜ்குமார் உள்ளிட்டோரின்  37 படைப்பாளிகளின் ஆக்கங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. சிலருடைய, ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் கொண்ட இந்நூலுக்குத் தொகுப்பாசிரியர் ஜெயந்தி சங்கர் மட்டுமின்றி வேறு மொழிபெயர்ப்பாளர்கள் சிலரும் மொழியாக்கத்தில் பங்காற்றியுள்ளனர்.

    தமிழில் ஏராளமான அரிய படைப்பாளிகளிடமிருந்து சிறந்த படைப்புகள் வந்தபடியேதான் இருக்கின்றன. பிற மொழி, இன வாசகர்கள், தமிழ்ச் சிறுகதை உலகில் நிலவி வரும் போக்குகள் குறித்துச் சரியாக அறியவில்லை. அவ்வளவு ஏன், தமிழரில் கூட தமிழில் வாசிக்காமல் ஆங்கிலத்தில் வாசிப்பவர் நிறையப் பேர் இருக்கிறார்கள், அல்லவா? தேர்ந்தெடுக்கப்பெற்ற தமிழ்ச் சிறுகதைகள் ஆங்கிலத்தில் முன்னரும் சில தடவைகள் தொகுப்பாகப்  பிரசுரம் கண்டுள்ளன. எனினும், திரும்பத் திரும்பத் தமிழகத்தைச் சேர்ந்த முன்னோடிப் படைப்பாளிகள் சிலரின் ஆக்கங்கள் மட்டுமே இடம்பெற்று வந்துள்ளன. இதன் காரணமாக ஒருவித இடைவெளி எப்போதுமே நிலவி வந்துள்ளது. தமிழ் வாசிக்காத தமிழர்களாகட்டும் பிற மொழியினராகட்டும் திரும்பத் திரும்ப அதே பத்திருபது பேர் தான் தமிழில் சமகாலத்தில் எழுதி வருகிறார்கள் என்பது போன்ற புரிதலுக்கு வழிவகுத்து வந்ததாகப் பல்லாண்டுகளுக்கு முன்னர் ஜெயந்தி சங்கர் உணர்ந்தார். அதன் நீட்சியாகவே இந்நூல் பிறந்துள்ளது. இதுபோன்ற தொகுப்பு முயற்சிகள், அந்த மாதிரியான இடைவெளிகளை இட்டு நிரப்ப வல்லவை.  அவ்வகையில் இந்நூல் ஒரு முன்னோடி எனலாம். இந்தப் புத்தகத்துக்காக, ஒருநூறு பதிப்பாளர்களையாவது ஜெயந்தி சங்கர் அணுகியிருப்பார். இதனைப் பதிப்பித்த எமரால்டு பதிப்பகத்தார் பாராட்டுக்கு உரியவர்கள்.

    வயது, நாடு, அனுபவம் போன்றவற்றைக் கடந்து. புதிதாக எழுதத் தொடங்கியவர்களின் சிறுகதைகளும் தொகுப்புக்காக பரிசீலிக்கப்பட்டன.

    இந்த நூல் நான்காண்டுக் கால முழு உழைப்பைக் கோரியுள்ளது. உலகளாவிய நவீன தமிழிலக்கிய மொழியாக்க நூல் வரலாற்றில் இந்நூல் ஒரு மைல்கல் என்று நாம் துணிந்து கூறலாம்.

    2010ஆம் ஆண்டு வாக்கில் இந்தத் தொகுப்பு நூல் திட்டத்தைப் பற்றி தொகுப்பாசிரியர், எழுத்தாளர் பாவண்ணன் அவர்களிடம் பேசினார். பதிப்பாளர் முடிவாகாமல் இது போன்ற வேலையைத் தொடங்காமல் இருப்பதே நல்லது என்று ஆத்மார்த்தமாக அவர் அறிவுறுத்தியதை அடுத்து இத்திட்டத்தை அப்படியே நிறுத்தி வைத்துள்ளார்.

    தனது இலக்கிய நோக்கத்தைக் குறித்துப் புரிந்துகொண்டவர்களையும், அதற்குத் தங்கள் வசதிக்கேற்பவும் அறிவுக்கேற்பவும் அர்த்தங்கள் கற்பித்தவர்களும் என்று பலரையும் அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது.  உப்புப் பெறாத  காரணங்களுக்காக இறுதிக் கட்டத்தில் மூன்று பேர் தங்களது படைப்புகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

    தமிழ்ச் சிறுகதை மரபின் நூற்றாண்டுக் காலக் கொண்டாட்டத்தை ஒட்டி இந்நூல் பிரசுரம் காணும் என்று திட்டமிட்டு மீண்டும் 2016இல் இதனைக் கையில் எடுத்தார். அப்போதுதான் உலகளாவிய தொகுப்புநூல் என்று விவரித்ததை அடுத்து, மாலன் அவர்கள் மேலும் சிலரைப் பரிந்துரைத்தார். தம் கதையைத் தாமே மொழியாக்கம் செய்தளித்தார். ஏழெட்டு நாடுகளிலிருந்து சிறுகதைகள் என்றிருந்த திட்டம், பதினொரு நாடுகளிலிருந்து சிறுகதைகள் என்ற நிலைக்கு வளர்ந்தது. ஆனால், ஒருவரது சிறுகதை, ஆங்கிலத்துக்குக் கொண்டு வரக்கூடியதாக இருக்கவில்லை. ஆகவே, 10 நாடுகளிலிருந்து சிறுகதைகள் தொகுக்கப்பட்டன.

    நீங்கள் ஒருவரே மொழியாக்கம் செய்வது மிகப் பெரிய பணி, மேலும் மொழிபெயர்ப்பாளர்களின் பங்களிப்பு உங்கள் வேலைப் பளுவை குறைக்கும் என்று அக்கறையோடு அறிவுறுத்தினார் எழுத்தாளர் சத்யானந்தன். அதற்கேற்ப படைப்பாளிகள் சிலர்,  தாங்களே மொழியாக்கம் செய்தனர். இன்னும் சிலர் தங்களுக்கு நன்றாகத் தெரிந்த மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு மொழியாக்கம் செய்தளித்தார். மூலப் பிரதியையும் மொழியாக்கத்தை ஒப்பிட்டுச் சரிபார்த்து, தொடர்ந்து படைப்பாளியோடு மின்னஞ்சலில் உரையாடி, பிரதியைச் சீர்ப்படுத்துவதில் ஈராண்டுகள் உருண்டன.

    உரிய பதிப்பாளர் தேடவே ஈராண்டுகளுக்குப் போராடினார் ஜெயந்தி சங்கர். சிக்ஸ்த்  சென்ஸ் பதிப்பகத்தில் இளைஞர் கார்த்திகேயன் முதலில் தொகுப்பின் மதிப்புணர்ந்து தானே வெளியிடமுடியுமா என்று யோசித்து, கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் ஓடியது. டாக்டர் ரூமி அவர்கள்தான் தமது சிறுகதை மொழியாக்கம் செய்து கொடுத்ததோடு கார்த்திகேயனிடம் அறிமுகமும் செய்து வைத்தார். சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தின் கார்த்திகேயன், தனிப்பட்ட விஷயங்களுக்காகத் தமது பதிப்புப் பணியைச் சற்றே தாமதிக்க எண்ணியதால், அவரே எமரால்ட் பதிப்பகத்தின் ஒளிவண்ணன் அவர்களிடம் தொகுப்பைப் பரிந்துரைத்தார். அவ்வகையில் கார்த்திகேயனுக்கு இந்நூல் மிகக் கடமைப்பட்டுள்ளது.

    நூலாசிரியர் குறிப்பு:

    2015 முதல் முழுவீச்சில் ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதிவரும் ஜெயந்தி சங்கர் தற்போது ஆங்கிலத்தில் தனது முதல் நாவலை வெளியிட்டுள்ள நிலையில் இரண்டாவது ஆங்கில நாவலுக்கான பணியையும் தொடங்கிவிட்டார். தனது Dangling Gandhi என்ற இவரது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில்  ஆங்கிலச் சிறுகதைகளைச் சங்கரி என்ற தனது இல்லப்பெயரில் தானே மொழியாக்கம் செய்துள்ளார்.  இந்த மொழியாக்க நூல், இனிமேல் தான் அச்சாகவிருக்கின்றது. இதுவரை பல்வேறு விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பெற்றுள்ள Dangling Gandhi நூல், American book fest வழங்கும் 2020 International Book Award, Literary Titan award ஆகிய அனைத்துலக விருதுகளையும் வென்றுள்ளது. இவரது ஆக்கங்கள் வேற்றுமொழியில், குறிப்பாக ஆங்கிலம், ரஷ்யம், இந்தி, ஃபிரெஞ்சில் மொழிபெயர்ப்பு கண்டு வருகின்றன. ஆனந்தவிகடன் நம்பிக்கை விருது உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் முக்கிய விருதுகளும் பெற்றுள்ள இவரது ஒவ்வொரு நூலும் ஏதோவொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அண்மைக் காலமாக ஓவிய முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 1995 முதலே இலக்கியவுலகில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 19 (பாகன்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 19 (பாகன்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை 

    தலைவன் வேண்டும் இடமெங்கும் அவனை அழைத்துச் செல்லும் தேர்ப்பாகன்  அகப்பாடல்களில் நேரில் இடம்  பெறும் பாத்திரம் ஆவான்.  பாகனுக்குக் கூற்று நிகழ்த்தும் தகுதியை அகஇலக்கணம் வழங்கவில்லை ஆயினும்;  அவனிடம் பேசும் பாத்திரங்கள் பலர். பாகன் பேசியதாகப் பிற பாத்திரம் கூறும் ஒரே ஒரு பாடல் உள்ளது.

    பாகனே வலவன்

    பாகன் வலவன் என்றும் அழைக்கப்படுகிறான். வேகமாகக் குதிரையைச் செலுத்துவாயாக என்னும் பொருள்பட;

    “கடுமா கடவுமதி பாக” (குறுந்.- 250)

    எனத் தலைவியை விரைந்து காணவேண்டும் என்ற அவாவினால் தலைவன் உரைக்கிறான். அதே அவாவினால்;

    “ஏமதி வலவ தேரே” (நற்.- 21; ஐங்.- 485)

    என்றும் ஏவுகிறான்.

    பாகனைச் சுட்டிப் பேசுவோர்

    தலைவன், தோழி, தலைவி, காமக்கிழத்தி ஆகியோர் கூற்றில்  பாகன் இடம் பெறுகிறான்.

    தோழி கூற்று

    கணவன் பிரிந்து சென்றுள்ளானே என்று மனமழிந்த தலைவியைத் தேற்றும் தோழி ‘காட்டில் இன்துணை இரலை மடப்பிணை கண்டவுடன் உன்னை நினைத்துத் தேரைத் திருப்பச் சொல்லிப் பாகனை ஏவி வந்து விடுவான்’ என்கிறாள் (அகம்.- 74). மான் இணை தலைவனுக்குத் தலைவியின் நினைப்பைக் கொடுக்க ஏதுவாக அமையுமென்கிறாள்.

    இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் பிரிந்து செல்லும் தலைவனிடம் ‘நீ மீண்டு வருவதற்குள் இவள் இறந்து விடுவாள்; ஆதலால் உடன் மணம் புரிந்து கொள்ள ஏற்பாடு செய்’ எனச் சூழ்நிலையை அறிவுறுத்தும் போது;

    “இனமணி நெடுந்தேர் பாகன் இயக்கச் செலீஇய” (நற்.- 19)

    என்று பாகனை வைத்து ஓட்டும் பெரிய தேரோடு செல்வம் மிகுந்தவனாக இருப்பதைக் குறிப்பாகத் தலைவனிடம் வலியுறுத்துகிறாள்.

    களவுக்காலத்தில் தலைவன் தலைவியைச் சந்திக்க வரும்போது  தோழி; ‘உன் பாகனோடு சேர்ந்து எம் ஊரில் இரவுப் பொழுதில் தங்கி விருந்தயர்க’ என்கிறாள் (அகம்.- 340) இரவுக்குறியில் யாருமறியா வண்ணம் ஓசையின்றித் தேரில் வந்த தலைவன் இப்போது மணிக்குரல் கேட்கப் பாகன் ஓட்டும் தேரில் வருவதால் அவன் மணந்து கொள்ள வருகிறான் என்பது திண்ணம் என்கிறாள் தோழி (நற்.- 78). செவிலியிடம் அறத்தொடு நிற்கும் போதும் (அகம்.- 190); அன்னை காவல் கொண்ட காரணத்தைக் கூறும் போதும் (அகம்.- 20); ஊரலர் எழுவது திண்ணம் என்று உரைக்கும் போதும் (குறுந்.- 311) பாகன் ஓட்டிய தேர் தோழியால்  காரணமாகக் கூறப்படுகிறது.

    தலைவன் கூற்று

    கற்பு வாழ்க்கையில் கால உணர்வோடு தன் மனைவியைச் சேர வேண்டும் என நினைக்கும் தலைவன் தேரோட்டியை விரையச் சொல்கிறான் (ஐங்.- 482, 483, 484; அகம்.- 204, 224, 244).

    “செல்க பாகநின் செய்வினை நெடுந்தேர்” (நற்.- 221)

    என்று துரிதப்படுத்துகிறான். தூங்கிக் கொண்டிருக்கும் புதல்வன் அருகில் இருந்து கொண்டு; தன்னைப் பார்த்தவுடன் மகன் அழைப்பதைப் போல ‘வந்தீக எந்தை’ என்று குரல் கொடுக்கும் மனைவியின் அழகை ரசிக்க விரும்புவதாகக் காரணமும் கூறுகிறான். பாகன் விரைந்து தேரைச்  செலுத்தினால் தலைவியின் நெற்றிப் பசப்பு நீங்கிவிடும் என்கிறான் (அகம்.- 354). போகும் வழியில் தேரின் வேகம் கண்டு இரிந்தோடிய மான்கூட்டத்தில் தன் குட்டியோடு களரின்கண் சென்ற பிணைமானைத் தேடும் கலைமானைப் பாகனுக்குக் காட்டித் தன் தவிப்பைக்  குறிப்பாகப் புலப்படுத்துகிறான் (நற்.- 242).

    தலைவி கூற்று

    புறத்தொழுகும் தலைவனைப் பிற மகளிரின் இருப்பிடத்திற்குத் தேரில் ஏற்றிச் செல்வதால் கோபம் கொள்ளும் தலைவி;

    “வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும்
    நீட்டித்தாய் என்று கடாஅம் கடுந்திண்டேர்” (கலி.- 66)

    எனத் தலைவனோடு பாகனையும் சேர்த்துச் சாடுகிறாள். ‘உன் விருப்பத்திற்கு உரிய பெண்களிடம் நீ செல்வதைப் பாகனும் விரும்பியதால்;  தேரை இங்கே நீண்ட நேரம் நிறுத்தாமல் செலுத்துவதற்கே  ஆயத்தமாகிறான்’ என்று குறைப்பட்டுக் கொள்ளும் தலைவியின் மேல் இரக்கம் தான் பிறக்கிறது.

    பரத்தையின் இல்லம் நாடிச் சென்று கொண்டிருந்த தன் கணவனின் தேரை  வழிமறித்த தளர்நடைப் புதல்வனைக் கண்டவுடன்; ‘நிறுத்து பாகனே’ என்று சொல்லி இறங்கி மகனைத் தழுவிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்  கணவன் என மகிழ்ந்துரைக்கிறாள் தலைவி (அகம்.- 66).

    காமக்கிழத்தி கூற்று

    புறத்தொழுகும் தலைவன் பிற மகளிரோடு  இன்புறத் துணை செய்பவன் என்னும் பழி பாகன் மேலும் விழுகிறது. பாணனை வசைபாடும் போது பாகனும் வசை பெறுகிறான். தலைவன் எந்தப் பெண்ணைத் தேடிச் சென்று இருக்கிறான் என்று அறிய; சேரிதோறும் சென்று வினவித் துன்புறும் காமக்கிழத்தி;

    “தேரோடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ”  (கலி.- 68)

    என்று தன் இயலாமையை வெளிப்படுத்துகிறாள்.

    பாகன் பேசியமை 

    ஒரே ஒரு பாடலில் பாகன் பேசியதாகக் காமக்கிழத்தி கூறுகிறாள். தலைவன்  மணம் செய்யும் மனை என்று கருதிக் காமக்கிழத்தி மனையில் புகுந்து ‘பொலிக’ என்று ஆரவாரித்தான் பாகன். புலைத்தொழிலை உடைய பாணனைக் குறை கூறுவோமா; அன்றி பாகனைக் குறை கூறுவோமா என்று அங்கலாய்க்கிறாள் அவள். தேரைத் தொட்டுச் சூளுற்றுப் பாகன் பரத்தையரைக் கொண்டுவந்து விட்டதாகவும் கூறுகிறாள்.

    “தேரொடும் தேற்றிய பாகன் வந்து ஈயான்கொல்” (கலி.- 71)

    என்ற காமக்கிழத்தியின் நக்கலான பேச்சு ‘அப்பெண்டிர்க்கு நின்னை ஒழியப் பிறர் இல்லை என்பதை நினைத்துப் பார்’ எனப் பாகன் உரைத்தமையைக் கூறித் தொடர்கிறது.

    பாகனின் சிறப்புகள்

    பாகனைச் சுட்டிப் பேசும் தலைவன் அவனை நூலறிவு மிக்கவன் என்றும்; மதிநுட்பம் உடையவன் என்றும்; வினை வல்லவன் என்றும் சிறப்பிக்கிறான். பாகனின் திறமை அவனது கைவன்மையில் இருக்கிறது என்னும் பொருள்பட;

    “கைவல் பாகன் பையென இயக்க” (அகம்.- 230)

    எனத் தன் நெஞ்சோடு பேசுகிறான் தலைவன். திறமைமிக்க பாகன் ஆகையால் அவன் மெல்லெனச் செலுத்தியும் விரைந்து தலைவியைச் சேர முடிந்தது என்கிறான். பாகனின் அறிவுமிகுதி;

    “மதியுடை வலவ” (ஐங்.- 487)

    என்று அழைக்கப்படுவதால் தெரிகிறது. தேர்ப்பாகனுக்கு அக்காலத்தில் நூலறிவும் தேவைப்பட்டு இருந்தது.

    “நூலறி வலவ கடவுமதி” (அகம்.- 114)

    என்னும் அடிக்கு உரையாசிரியர் பொருள் கூறும் போது பரிநூல் அறிந்தவன் என்று பொருள் கூறுகிறார். தேர்ப்பாகன் குதிரைகளைப் பற்றி நன்கு பயின்று இருந்தான் என்பது பொருளாகும்.

    பாகனுக்குரிய புகழ்மொழி

    பாகனைப் பாராட்டும் தலைவன் தனக்கு மனைவியைத் தந்தவனே அவன் தான் என்கிறான். தலைவி பிரிவுத்துன்பத்தில் உயிரை விடுமுன் வீட்டிற்கு அழைத்து வந்தமையை மனதார நன்றியுடன் நினைத்துப் பேசுகிறான். நீண்டவழிப் பாதையில் சென்றால் காலதாமதம் ஆகுமென்று பருக்கைகளை உடைய மேட்டுநிலமாகிய கரம்பையில் புதுவழி உண்டாக்கி ஓட்டி விரைவில் தன்னை மனைசேர்த்த பாகனை;

    “முரம்புகண் உடைய ஏகிக் கரம்பைப்
    புதுவழிப் படுத்த மதியுடை வலவோய்
    இன்று தந்தனை தேரோ
    நோயுழந்து உறைவியை நல்கலானே” (குறுந்.- 400)

    என்று புகழ்ந்து அமைகிறான் தலைவன்.

    பாகன் தலைவன் நெருக்கம் 

    பாகனுக்கும் தலைவனுக்கும் இடையில் இருந்த உறவு அவனை விருந்தினனாக ஏற்று உபசரிக்கும் அளவிற்கு நெருக்கமாக இருந்தது. ‘காற்றைப் பூட்டி ஓட்டினாயா? அல்லது குதிரைக்குப் பதிலாக உன் மனதைப் பூட்டி ஓட்டினாயா?’ என்ற கேள்விகளுடன் தேரை விட்டு இறங்கிய தலைவன் அவனை மார்புறத் தழுவி வீட்டிற்குள் விருந்தினனாக ஏற்றுச் சென்றமையை;

    “உரைமதி வாழியோ வலவ எனத்தன்
    வரைமருள் மார்பின் நளிப்பனன் முயங்கி
    மனைக்கொண்டு புக்கனன் நெடுந்தகை
    விருந்தேர் பெற்றனள் திருந்திழையோளே” (அகம்.- 384)

    எனும் பாடல் காட்சிப்படுத்துகிறது.

    தன் அந்தரங்கத்தைக் கூடப் பாகனிடம் பகிர்ந்து கொள்கிறான் தலைவன். காட்டைத் தாண்டி வரும்போது பேச்சுத் துணையாக அமைபவன் பாகன் மட்டுமே ஆவான் ஆதலால்; அவனிடம் முன்னர் நிகழ்ந்தவற்றை நினைவு கூர்கிறான். மழை பெய்ததும் ‘தவளைகளின்  ஒலியால் தேரின் மணியொலியைத் தலைவி அறியவியலாது; ஆதலால் நீவிர் போய்த் தெரிவிப்பீர்’ என்று இளையரை விடுத்ததையும்; அவர்கள் சென்று அறிவித்ததையும்; உடனே அவள் நீராடிப் புனைந்து கொண்டதையும்; அந்நேரத்தில் தான் சென்று சேர்ந்ததையும்; அணைத்து மகிழ்ந்ததையும் பாகனிடம் பகிர்ந்து கொள்வது இருவருக்கும் இடையில் இருந்த நெருக்கத்தைக் காட்டுகிறது (நற்.- 42).

    பிரிவுணர்த்திய போது தனக்கு விடைகூற இயலாது பூங்கொத்தைத் தளிரோடு சேர்த்துப் பிதிர்த்த அறிவு மயக்கம் உற்ற தன் மனைவி பற்றியும்  (நற்.- 106); அவள் மேல் தான் கொண்ட காதல் வேட்கை பற்றியும்  தேர்ப்பாகனிடம் வெளிப்படுத்தத் தயங்கவில்லை (அகம்.- 154).

    பாகன் தொழில் செய்யும் முறை

    திணைமாந்தருள் கிணைப்பொருநர் ‘வார்’ என்று பொருள்படும் ‘வள்பு’ எனும் சொல்லோடு சேர்த்துச் சொல்லப்படுவது போல்; பாகனும் பலவிடங்களில் குதிரையை இழுத்துப் பிடிக்கும் வள்பு எனும் வாருடன் தொடர்புறுத்தப்படுகிறான் (ஐங்.- 486).

    போர் முடிந்து தேரில் எறிய தலைவன் சிறிது நேரத்தில் சற்றும்   எதிர்பாராத வகையில் ‘இறங்குக’ என்ற சொல் கேட்டு மருண்டான். அவ்வளவு வேகமாகத் தன்னை இல்லம் கொண்டுவந்து சேர்த்த அவனை;

    “… ………… ………… வள்பு ஆய்ந்து
    இயக்குமதி வாழியோ கையுடை வலவ” (அகம்.- 344)

    என்று தோலாலான கடிவாளத்தை இழுத்துச் செலுத்திய அவனது கைவன்மையை வாயாரப் புகழ்கிறான்.

    பாகன் குதிரையைச் செலுத்தும் முறையுடன் வள்பு மட்டுமின்றி தாற்றுக்கோல், அதன் நுனியில் இருக்கும் முள் முதலியவை தொடர்புறுத்திப் பேசப்படுகின்றன.

    “முள்ளிட்டு ஊர்மதி வலவ” (ஐங்.- 481)

    என்று குதிரையின் வேகத்தைக் கூட்ட ‘தாற்றுக்கோலின் நுனிமுள்ளால் தூண்டு’ என்று கட்டளை இடுவதையும் காண்கிறோம்.

    நான்கு குதிரைகள் பூட்டிய தேரைப் பாகன் ஓட்டியமை;

    “நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர்” (அகம்.- 104)

    என்னும் அடியால் புலனாகிறது.

    தேரினை அதன் உறுதிவாய்ந்த உருளை நிலத்தில் பதிந்து உருண்டு வரச் செலுத்துவாயாக என்பதை;

    “வள்வாய் ஆழி உள்ளுறுபுருளக்
    கடவுக காண்குவம் பாக” (அகம்.- 54)

    என்னும் தலைவன் கூற்று பாணனின் தொழில் நுட்பத்தை அடியொட்டியது.

    “…… ….. ……. … உளையணி
    உலகு கடப்பன்ன புள்ளியல் கலிமா
    வகையமை வனப்பின்” (அகம்.- 64)

    என்பதால் உலகையே கடப்பது போன்ற தன்மையுடைய குதிரை பறவை பறப்பது போல் தேரிழுப்பதைப் பற்றிப் பாகனோடு சொல்லாடுகிறான் தலைவன். தாழ்ந்த நிலம் நோக்கிப் பாயும் வெள்ளம் போலக் குதிரைகள் பாய்ந்து சென்றிழுக்கும் தேரைத் தோழி காட்சிப்படுத்துகிறாள் (அகம்.- 400)

    கழியைக் கடக்குங்கால்  சுறாமீன்  குதிரையைத் தாக்கப்;  போக்கு தடைப்பட்டமையால் நேர்ந்த தலைமக்கள் சந்திப்பு  குறித்துத் தோழி செவிலியிடம் அறத்தொடு நிற்கும் போது;

    “வயச்சுறா எறிந்தென வலவன் அழிப்ப” (அகம்.- 190)

    எனக் கூறுகிறாள். பாகனின் பணியில் நேரும் சிக்கல்; வேறு ஒரு குதிரையைக் கொண்டு வந்து சேர்த்த பிறகே தீருமாதலால் தலைமக்கள் நட்பு வளர ஏதுவானது என்கிறாள்.

    பாகனால் இன்புறும் இளையர்

    தலைவன் தேருக்குப் பின்னே ஓடிவரும் இளையர் இன்புறுவதும் பாகனின் திறமையில் பொருந்தி உள்ளது; ஏனெனில் அவர்களுக்கும் வினைமுடித்து வீடுதிரும்பும் காலம் விரைவில் வாய்ப்பது பாகனின் செயல்திறனைப் பொறுத்ததே.

    “வென்வேல் இளையர் இன்புற வலவன்
    வள்பு வலித்து ஊரின் அல்லது முள்ளுறின்” (அகம்.- 104)

    என்று தோழி கூறுகிறாள்.

    ஈரநெஞ்சு கொண்ட தலைவனும்  பாகனும்

    காட்டுவழியில் தேரைச் செலுத்தி வரும்போது தேரின் மணியொலியோ; குதிரையின் குளம்பொலியோ கேட்காதவண்ணம் செலுத்துவாயாக என்று பாகனை வேண்டும் தலைவன்; மான் முதலிய அஃறிணை உயிர்களின் நடுநாள்  புணர்ச்சிக்கு இடையூறு செய்யக்கூடாது என்னும் கொள்கை உடையவன் ஆதலால்;

    “இடிமறந்து ஏமதி வலவ” (அகம்.- 134)

    என்கிறான். பாகனும் நெய்தல் நிலத்தில் தேரோட்டும் போது தன் தேர்ச் சக்கரத்தில் நண்டுகள் சிக்கி விடாதபடி பார்த்து ஓட்டியமை;

    “ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
    வலவன் வள்பு ஆய்ந்து ஊர” (நற்.- 11)

    என்று புனைந்து உரைக்கப்படுகிறது.

    பாகன் பாத்திரம் புலப்படுத்தும் தமிழ்ச் சமுகநிலை

    வினைமுற்றி மீளும் தலைவன் பல பாடல்களிலும் வேந்தனுக்காகவோ அன்றி மன்னனுக்காகவோ போரில் பங்கேற்றுத் திரும்புபவனாக உள்ளான். அப்போர் விளைநிலமாகிய நாட்டை மன்னனிடம் திறைப்பொருளாகப் பெற்ற பிறகு முடிவு அடைவதைக் காண்கிறோம்.

    வேந்தன் பகை தணிந்தமை கூறிக் கிளம்பச் சொல்கிறான் தலைவன்

    “இருநிலம் குறையக் கொட்டிப் பரிந்தின்று
    ஆதி போகிய அசைவில் நோன்தாள்
    மன்னர் மதிக்கும் மாண்வினைப் புரவி
    கொய்ம்மயிர் எருத்தில் மெய்ம்மணி ஆர்ப்பப்
    பூண்கதில் பாக நின் தேரே……………………
    உறுபகை தணிந்தனன் உரவுவாள் வேந்தே” (நற்.- 81)

    என்று பாகனை ஏவும்போது தனது தேரையும் குதிரையையும் அறிமுகம் செய்கிறான் தலைவன். ‘அகன்ற நிலம் குழியும்படித் தன் கால்களால் கொட்டி நடந்து; விரைந்து ஆதி என்னும் நெறிப்படி நேராக ஓடுகின்ற குதிரையின் கொய்ம்மயிர் உடைய பிடரியில் கட்டிய மணிகள் ஒலிக்கத் தேரில் பூட்டுக’ என்கிறான். தனது குதிரை மன்னனும் விரும்பத் தக்கது என்று விதந்து கூறுவதால் அவன் மன்னனைச் சார்ந்திருக்கும் தலைவன் என்பதில் ஐயமில்லை.

    மன்னர் திறை கொடுத்ததால் பகை நீங்கி; வேந்தனும் மன்னரும் நட்பினராகி விட்டனர் என்ற நிலையைக் கூறி;

    “ஊர்க பாக” (அகம்.- 44)

    என ஏவுவதையும் காண்கிறோம்.

    தான் சார்ந்த வேந்தன் மன்னனிடம் இருந்து நன்செய் நிலங்களைத் திறையாகப் பெற்றமையால் வினை முடிந்தது என்று கூறித் தன் மனையை நோக்கி விரையச் சொல்கிறான் இன்னொரு தலைவன்.

    “நாடு திறை கொண்டனம் ஆயின் பாக” (அகம்.- 334)

    எனக் கூறிக் கிளப்புகிறான்.

    புராணப் பாகன்

    பரிபாடலில் சிவபெருமான் தன் காளை வாகனத்தை ஓட்டும் பாகனாகச் சித்தரிக்கப்படுகிறார்.

    “செவ்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழி ” (பா.- 23)

    எனத் திரிபுரம் எரித்த புராணக்கதை புனையப்பட்டுள்ளது.

    முடிவுரை

    பாகன் வலவன் என்றும் அழைக்கப்படுகிறான். தலைவன், தோழி, தலைவி, காமக்கிழத்தி ஆகியோர் கூற்றில் பாகன் இடம் பெறுகிறான். ஒரே ஒரு பாடலில் பாகன் பேசியதாகக் காமக்கிழத்தி கூறுகிறாள். குதிரைகள் பற்றிய நூலறிவு உள்ள பாகன் தோலாலான கடிவாளத்தை இழுத்து; முள் முனை உள்ள தாற்றுக்கோலால் தீண்டி; நான்கு குதிரைகள் பூட்டிய தேரைக் காற்றுப்  போலவும்; பள்ளம் நோக்கிப் பாயும் வெள்ளம் போலவும் செலுத்திய கைவன்மை மிக்கவன் ஆவான். மதிநுட்பம் மிக்க பாகன்; தேவைப்படும் போது புதுவழி உண்டாக்கித் தலைவனுக்கு உதவினான். தலைவன் தன்னுடைய அந்தரங்கத்தைக் கூடப் பாகனுடன் பகிர்ந்து அவனை விருந்தாக ஏற்றுப் போற்றினான். புறத்தொழுகும் தலைவனுக்கும் பாகன் உதவி; வசை பெறுகிறான். தேர் கழியைக் கடக்குங்கால்  சுறாமீன்  குதிரையைத் தாக்கப்;  போக்கு தடைப்படுவது பாகனுக்கு ஏற்படும் பெரிய சிக்கல் ஆகும். தலைவன் தேருக்குப் பின்னே ஓடிவரும் இளையர் இன்புறுவதும் பாகனின் திறமையில் பொருந்தி இருந்தது. அஃறிணை உயிர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்னும் கொள்கை தலைவனிடமும் பாகனிடமும் இருந்தது. வேந்தனுக்காகவோ அன்றி மன்னனுக்காகவோ போரில் பங்கேற்றுத் திரும்புபவனின் தேர்ப்பாகன் என்ற பாத்திரத்தின் பங்கேற்பு மூலம் அன்றைய தமிழ்ச் சமூகநிலையும் புலனாகிறது.. போரானது விளைநிலமாகிய நாட்டை மன்னனிடம் திறைப்பொருளாகப் பெற்ற பிறகு முடிவு அடைவதைக் காண்கிறோம். சிவபெருமான் தன் காளை வாகனத்தை ஓட்டும் பாகனாவார்.

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 15

    பரிமேலழகர் உரைத்திறன் – 15

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                  
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

     வள்ளுவர் சொன்ன கதையும் பரிமேலழகர் எழுதிய உரையும்

    முன்னுரை

    தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள் என்னும் முத்திறத்தன. அதில் யாப்பு, அணி என்பனவற்றைக் கூட்டிய வழக்கு பிற்காலத்தது. எனின் யாப்பு பொருளுக்குள்ளேயே அடங்கும், அது செய்யுள் கட்டுமானம் பற்றயதாதலின். செய்யுளின் உள்ளடக்க உத்தியைத் தொல்காப்பியத்தின் பொருளியல் விளக்குகிறது. எனவே அணி என்பது தமிழ்நெறியாகாது. ‘செய்யுளுக்கு அணி’ என்பது பெண்ணுக்கு அணிகலன் என்பதுபோலப் புற அழகைக் கூட்டுமேயன்றி அகத்துக்கு அழகுதராது. தமிழ்க்கவிதைகளின் வெற்றி அவற்றின் யாப்பில் இல்லை. பொருளில்தான் அடங்கியுள்ளது. யாப்பினால் ஒரு கவிதையோ காப்பியமோ வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. அது புலவர்களின் திறங்கூறலாம்.

    “வெண்பாவிற்புகழேந்தி பரணிக்கோர்
    சயங்கொண்டான் விருத்தமென்னும்
    ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா
    அந்தாதிக் கொட்டக் கூத்தன்
    கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
    வசைபாடக் காள மேகம்
    பண்பாகப் பகர்சந்தம் படிக்காச
    லாலொருவர் பகரொ ணாதே.”

    பலபட்டடைச் சொக்கநாதப் புலவரும் மூன்று புலவர்களைத் தவிர மற்றவருக்கான பெருமையை அவர்தம் கவிதைகளின் பொருண்மைக்கு ஏற்றியுரைப்பதைக் காணலாம். எனவே செய்யுளணி என்பது மிகவும் பிற்காலத்தது. தண்டியலங்காரம் செய்த ‘தமிழ்வினை’ அது. உவமம் அணியாகாது என்பதும் அதனைத் தவிர வேறு எதனையும் தமிழ்க்கவிதைகள் செறித்துக் கொள்வதில்லை என்பதும் தனி ஆய்வுக்குரியது. பொருட்பகுதியான உவமத்தைப் பின்னாலே வந்தவர்கள் அணியாக வரித்துக் கொண்டது அவர் விருப்பம் ஆயிற்று. ஆகவே பொதுமக்களாலும் பிறராலும் அவ்வணிகள் புறக்கணிக்கப்பட்டன. அல்லது அணியை முன்னிறுத்தி எழுதப்படும் இலக்கியங்கள் தோல்வி கண்டன. திருவள்ளுவர் காலத்திலோ தொல்காப்பியர் காலத்திலோ அணியிலக்கணச் சிந்தனை தமிழில் இருந்ததற்கான அடையாளம் ஏதுமில்லை. ஆனால் திருக்குறளுக்குத் தாம் எழுதிய உரையில் பரிமேலழகர் பல இடங்களில் அணியிலக்கணத்தைப் பொருத்திக் காட்டுவதைக் காணலாம். அந்த அடிப்படையில் பிறிதுமொழிதல் அணி பற்றிய அழகரின் விளக்கம் விரிவாகவும் ஆய்வதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    பழமொழிகளும் சமுதாயமும்

    சமுதாயத்தின் சாயலே இலக்கியம். அதாவது சமுதாயச் சிந்தனைகளின் நிழல் படியாத இலக்கியம் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும்.  சமுதாயச் சிந்தனைகள் என்னும் தொடர் மக்கள் வழக்காறுகளையும் உள்ளடக்கியதே. மொழி மக்களுக்கானது. ‘வழக்கும் செய்யுளும்’ என்பது தொல்காப்பியம். மக்கள் வழக்கில் ஒரு முறை காணப்படுகிறது. அந்த முறை என்னவென்றால் கசப்பான கருத்துக்களையோ இன்றியமையாக் கருத்துக்களையோ நேரடியாகக் கூறின் கேட்பார் மனம் புண்படும் எனக் கருதிக் குறிப்பாகச் சொல்லுவது. பிறரைக் காட்டிச் சொல்லுவது. உவமங்களால் சொல்லுவது என இது பலதிறத்தவாகும். சான்றாகக் ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பது. இது நெல் மணியைக் காணாதவனுக்குப் பொருந்துமா? ஒரு செயலைச் செய்து முடிக்கும் காலச் சூழல் நிலையாக இருக்காது., தொடராது. எனவே அந்தச் சூழல் அமைகிற அந்தக் குறித்த குறைந்த காலத்திலேயே அதனை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் இந்தப் பழமொழி உணர்த்துகிறது. அன்றிக் காற்றைப் பற்றியும் தூற்றுவதைப் பற்றியும் கூறுவதாகாது. ‘கள்ளன் பெண்சாதி கைம்பெண்’ என்பது ஒரு பழமொழி. ‘மற்றவர் பெண்சாதி கைம்பெண் ஆகமாட்டார்களா?’ என்றால் இல்லை. கள்ளன் திருடுவதையே தொழிலாகக் கொண்டிருப்பதால் கொலை எப்போதும் நிகழலாம். அவன் மனைவிக்கு மங்கல வாழ்க்கை நிலையில்லை. திருடச் சென்ற கணவன் உயிரோடு திரும்புவான் என்பதற்கு உறுதியில்லை. எனவேதான் மனைவியாகவே இருந்தாலும் கள்ளனுக்கு வாழ்க்கைப்பட்டால் விதவையாகவே வாழ வேண்டும்’ என்பதை உணர்த்துகிறது.

    பழமொழியே பிறிது மொழிதலணி

    பிறிது மொழிதல் அணி பற்றிய தண்டியலங்காரக் கருத்து இப்படி அமைந்திருக்கிறது.

    “கருதிய பொருள் ஒத்தது புலப்படுத்தற்கு
    ஒத்தது ஒன்று உரைப்பின் அஃது ஒட்டென மொழிப” (தண்டி-52)

    “கருதிய பொருளை மறைத்து, ஆனால் அதனை வெளிப்படுத்தற்குப் பொருத்தமான பிறிதொன்றனைச் சொல்வது ஒட்டு என்னும் அலங்காரமாம்” என்னும் உரை இந்த அணி விளக்கத்திற்கு மட்டுமன்று முந்தைய பத்தியில் கூறப்பட்டிருக்கும் பழமொழிக்கான பொருளுணர்த்தும் பாங்கிற்கும் பொருந்துவதைக் காணலாம். தண்டியலங்கார உரையாசிரியர் இதனை ‘உவமப்போலி’ எனவும் ‘பிறிது மொழிதல்’ எனவும் ‘நுவலா நுவற்சி’ எனவும்  ‘புனைவிலிப் புகழ்ச்சி’ எனவும் அணியின் பிறபெயர்களைக் கூறுகிறார். ‘சுருக்கணி என்பது வீரசோழியம்’ சொல்ல வேண்டியதைப் பிறிதொன்றால் விளக்குவது ஆதலின் பிறிது மொழிதல் ஆயிற்று. ‘சொல்லாமல் சொல்வது’ என்பதால் நுவலா நுவற்சி ஆயிற்று.

    ஆனால் உவமப்போலி என்பது அகப்பொருள் பொருள் புலப்பாட்டு உத்தி. இதனை ‘உள்ளுறை உவமம்’ என்பதும் வழக்கு. இது அகப்பொருளுக்கே உரியது. பிறிது மொழிதல் அணியோ புறப்பொருளுக்கு உரியது. அகத்தில் உவமப்போலியாக இருப்பது புறத்தில் பிறிதுமொழிதல் அணியாகுமா என்பதற்கும் போதிய விளக்கம் பெறுமாறு இல்லை. புறத்திணையில் கருத்துக்களை வெளிப்படுத்துகிற முறையாக புறநிலை வாழ்த்து, வாயுறை வாழத்து, செவியறியுறூஉ என்பன போலப் பல உள்ளன. எனவே பிறிதுமொழிதல் அணியை ‘உவமப்போலி’ என்பது பொருந்தாதாயினும் உள்ளுறை உவமத்தில் பொருளுணரும் பாங்கும் பிறிதுமொழிதலணியில் பொருளுணரும் பாங்கும் ஓரளவு ஒத்திருப்பதால் இதனை ஏற்கலாம்.

    பிறிதுமொழிதல், ஒட்டு, நுவலாநுவற்சி, உள்ளுறை உவமம், இறைச்சி ஆகியவையெல்லாம் ‘பழமொழி’ என்னும் மக்கள் வழக்கின் இலக்கிய இலக்கண உருவாக்கங்களே என்பது தள்ளிவிடக் கூடிய கருத்தன்று.

    திருக்குறளில் பிறிது மொழிதல்

    திருக்குறளில் இவ்வாறு பிறிது மொழிதலணியாகக் கருதக்கூடிய பாடல்கள் அமைந்ததற்கு அணியிலக்கணச் சிந்தனை காரணமன்று. முந்தைய பத்திகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கியல் சார்ந்த சிந்தனைகளும் பழமொழிப்  பயன்பாடுகளுமே எனலாம். கடுஞ்சொல்லை விலக்கி இன்சொல்லை முன்னெடுக்கும் திருவள்ளுவர்க்கு இது இயல்பாகவும் இருந்திருக்க முடியும்.  அதனால்தான் ஒட்டுமொத்த திருக்குறள் நூலில் அதாவது ஆயிரத்து முந்நூற்று முப்பது பாடல்களில் வெறும் எட்டு பாடல்களில் மட்டுமே இத்தகைய பதிவுகள் காணக்கிடக்கின்றன. அவையும் பொருட்பாலில் மட்டுமே அமைந்துள்ளதும் நோக்கத்தக்கது.

    எதற்கும் அளவுண்டு எளியர்க்கும் வலிவுண்டு

    ‘நாலாறு கூடினால் பாலாறு’ என்பது பழமொழி. துன்பத்தைப் பாரம் என்பது வழக்கு. ‘மனப்பாரம்’, ‘தலைப்பாரம்’ என்னும் வழக்கு நோக்குக. பாரம் அதிகமானால் மனம் உடையும். பொருள் அளவு மிக, வண்டியின் அச்சும் முறியும். இந்த உள்ளடக்கத்தையும் எடுத்துக்காட்டையும் பொருட்பாலில் வலிமைமிகுந்த மன்னனைப் பார்த்து வள்ளுவர் கூறுகிறார்.

    “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
    சால மிகுத்துப் பெயின்” (475)

    என்று. இந்தக் குறட்பாவிற்கு உரையெழுதிய பரிமேலழகர் “பீலியேற்றிய சகடமும் அச்சு முறியும். அப்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின்” என்னும் பொழிப்புரையில் ‘பொறுக்கும் அளவின்றி’ என்னும் தொடர் பயின்றிருப்பது காண்க.

    “எளியர் என்று பலரோடு பகைகொள்வான், தான் வலியனே ஆயினும் அவர் தொக்க வழி வலியழியும், என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம்.”

    என்று எழுதிக் காட்டுகிறார். எளியவர்க்கு வலிமை குறைவே. ஆனால் அவ்வெளிமையே கூட்டணி அமைத்துக் கொண்டால் எளிமை வலிமையாகும். வலிமை எளிமையாகும். இன்றையக் காலக்கட்டத்து அரசியல் நுட்பத்தை அன்றே திருவள்ளுவர் கண்டுணர்ந்து எழுதியிருப்பதைக் காணலாம். இந்தப் பாடலில் திருவள்ளுவர் மயிற்பீலி மென்மையானது என்பதைச் சொல்லவோ அதனை அளவுக்கதிகமாக ஏற்றினால் வண்டியின் அச்சு முரிந்துவிடும் என்பதைச் சொல்லவோ வரவில்லை. இவையெல்லாம் அந்தக் காலத்துச் சமுதாயத்து நடைமுறைகள். அனைவரும் அறிந்த உண்மை. சாதாரண மனிதனுக்குத் தெரிந்த வழக்கியல் உண்மையை வைத்து நாட்டை ஆளும் மன்னனுக்கு அவன்தன் வலிமையின் அளவுணர்த்தும் அறிவுரை என்பதைப் பரிமேலழகர் விளக்கிக் காட்டுகிறார்.

    எதற்கும் எல்லையுண்டு

    ‘கரும்பு இனிக்குதென்று வேரோடும் பிடுங்காதே’, ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பன சிற்றூர் வழக்கு. ‘கொடுக்கிறான் என்பதற்காகத்  தொந்தரவு செய்யாதே’ என்பதைச் சொல்லவந்தவர், சொல்ல வேண்டியதை மறைத்து வேறு வாய்பாட்டில் சொல்லிய பழமொழிகள் இவை. இவை போன்ற பொருள் தரும் பழமொழிக் கருத்தினைத் திருவள்ளுவர்,

    “நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்தூக்கின்
    உயிர்க்கு இறுதியாகி விடும்” (476)

    என்னும் குறட்பாவில் பதிவு செய்திருக்கிறார். “ஒரு மரக்கோட்டினது நுனிக்கண்ணே ஏறி நின்றார் தம் ஊக்கத்தால் அவ்வளவினைக் கடந்து மேலும் ஏற ஊக்குவாராயின் உயிர்க்கு இறுதியாகிவிடும்” என்று பொழிப்புரை தரும் பரிமேலழகர்,

    “பகைமேல் செல்வான் தொடங்கித் தன்னால் செல்லலாம் அளவும் சென்று நின்றான். பின் அவ்வளவின் நில்லாது மன எழுச்சியான் மேலும் செல்லுமாயின், அவ்வெழுச்சி வினை முடிவிற்கு ஏதுவாகாது அவன் உயிர் முடிவிற்கு ஏதுவாம்” என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இதுவும் மேலை அலங்காரமாம்.”

    முந்தைய பாட்டில் தனியொரு பகைவன் எளியன் என்று எண்ணாதே அவனையொத்தார் இணைந்து கொண்டால் தனியொரு வல்லாளன் வலிமை குறைந்தவனாக்கப்படுவான் என்பதைக் கூறிய திருவள்ளுவர் இந்தப் பாடலில் உன் ஊக்கம் பெரிது என்பதற்காகவும் எதிர்ப்பார் யாரும் இல்லை என்பதற்காகவும் அளவு கடந்து போகாதே என்னும் உண்மையைக் கூறுகிறார். ஊக்கம் வினைமுடிக்க உதவ வேண்டும். ஆனால் மனவெழுச்சியால் முந்துறுகிற பொழுது அந்த ஊக்கமே அவனைக் கொன்று விடுகிறது. ‘வினை முடிவிற்கு ஏதுவாகாது உயிர் முடிவிற்கு ஏதுவாம்’ என்னும் சுருங்கச் சொல்லி விளக்கும் அழகரின் உரைத்திறன் சொல்லி மாளாது.

    முதலைக்கு முடிவு தரையில்

    ‘சேற்றிலே புதைந்த யானையைக் காக்கை கொத்தும்’ என்பது பழமொழி! பகைவலிமை அறிந்து செயல்பட வேண்டிய அரசனுக்கு வழிசொன்ன திருவள்ளுவர் கள நிலவரத்தை ‘இடனறிதல்’ என்னும் சொல்லால் அறிவுறுத்துகிறார்.

    “நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
    நீங்கின் அதனைப் பிற” (495)

    என்னும் குறட்பாவிற்கு “முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின் பிறவற்றையெல்லாம் தான் வெல்லா நிற்கும். அப்புனலின் நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லா நிற்கும்” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் எழுதிக்காட்டும் விளக்கவுரை அவருடைய நுண்ணியத்தைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

    “மேற்செல்லும் அரசன் பகைவன் நிற்றலாற்றா இடமறிந்து செல்வராயின் அவர்  தமக்கு எளியராவரன்றித் தாம் நிற்கலாற்றர் இடத்துச் செல்வராயின் அவர்க்கு எளியராவர் என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரமாம்.”

    “எதிரி நிற்கமுடியாத இடத்தில் தான் நின்று கொண்டு அவன் நிற்க முடியாத இடத்தில் அவனை எதிர்ப்பதே வெற்றி தரும் போர்முறை. மாறாக தான் நிற்கமுடியாத இடத்தில் தான் நின்று கொண்டு உறுதியான இடத்தில் நிற்கும் எதிரியை எதிர்த்தால் நமக்கு எளியராய் இருந்திருக்க வேண்டிய எதிரிக்கு நாம் எளியவர் ஆகிவிடுவோம்” என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர். முதலைக்கு இறுதி தரையில் என்பதை அறிந்து கொண்டு அதனைத் தாக்கியழிப்பதைப்போலப் பகைவர்களை அழிக்க வேண்டுமாம் என்பது வரலாறு. இதனை உள்வாங்கி எழுதும் அழகரின் விளக்கவுரை பலமுறை படித்து இன்புற்று வியக்கத்தக்கதாம்.

    கப்பலுக்குக் கடலே வீதி! தேருக்குத் தெருவே வீதி!

    ‘ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும்’ என்பதும் ‘ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்’ என்பதும் தமிழகப் பழமொழிகள். இவையொத்தன இன்னும் இருக்கலாம். இதன் சாரத்தை இலக்கிய மதிப்பீட்டுக்கும் பொருட்பாலின் பொருளடர்த்திக்கும் பயன்படுத்திக் கொள்ளும் திருவள்ளுவரின் சதுரப்பாடு பின்வரும் குறட்பாவில் அறியப்படுகிறது.

    “கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
    நாவாயும் ஓடா நிலத்து” (496)

    “நிலத்தின்கண் ஓடும் கால்வலிய நெடுந்தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா. இனி அக்கடலின்கண் ஓடும் நாவாய்கள் தாமும் அந்நிலத்தின்கண் ஓடமாட்டா” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    ‘மேற்சென்றார் பகைவர் இடங்களை அறிந்து அவற்றிற்கு ஏற்ற கருவிகளான் வினை செய்க என்பது தோன்ற நின்றமையின் இதுவும் மேலை அலங்காரமாம்.

    என விளக்கவுரை எழுதியிருக்கிறார். பொழிப்புரையிலேயே அவருடைய நுண்ணியம் வெளிப்படுவதை அறியலாம். கடலோடும் நாவாய் என்பதைக் கொண்டு ‘நிலத்தோடும் தேர்’ என்று எழுதுகிறார். ஓடுதற்குரிய வலிய கால்கள் இருந்தாலும் அவையின்றி நீந்தும் நாவாய் ஆகாது. இதுபோலவே பாய்மரம், பாய், சுக்கான் முதலிய கடல் நீந்தும் கருவிகள் இருந்தாலும் நாவாய் தரையோடும் தேராகாது. ‘ஏற்ற கருவிகளால் வினைசெய்க’ என்பதுதான் திருவள்ளுவர் சொல்லவரும் கருத்து. ‘கப்பலுக்குக் கடலே வீதி’ என்பதும் ‘தேருக்குத் தெருவே வீதி’ என்பதும் தெரியாத பொருளல்ல. தெரிந்த பொருளைக் காட்சிப்படுத்தியதன் நுட்பத்தை உணர்ந்துகொண்டு பரிமேலழகர் எழுதும் பாட்டுக்கு அப்பாற்பட்டு நிற்கும் ஆழமான பொருளை அதிகாரப் பொருண்மைக்கேற்ப இயைபுபடுத்தி உரைக்கும் உரைத்திறன் உணர்க.

    நரிக்கதை சொன்ன நாயனார்

    பாட்டி சுட்ட வடையைக் கவ்விக் கொண்ட காக்கையை நரி ஏமாற்றிய கதையைப் பள்ளியில் படித்தவர்கள் நாம். ஆனால் நரியை அதன் சூழல்பற்றி மதயானையை வெல்லும் என்ற அதன் திறனைப் பாடியிருக்கிறார். இங்கே நரியைப் பாடுவது திருவள்ளுவர் நோக்கமன்று. யானையின் தோல்வியைப் பாடுவதுதான் அவர் நோக்கம். அவர் பாடுகிறார்.

    “காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா
    வேலாள் முகத்த களிறு” (500)

    இந்தப் பாட்டிற்குப் “பாகர்க்கு அடங்காவுமாய் வேலாள்களைக் கோத்த கோட்டவுமாய களிறுகளை அவை கால் ஆழும் இயல்பிற்றாய சேற்று நிலத்துப் பட்டுழி நரி கொல்லும்” என்று பொழிப்புரை எழுதும் பரிமேலழகர் அந்தப் போர்க்களக் காட்சியை அப்படியே சித்திரித்துக் காட்டுகிறார்.

    பரிமேலழகர் சித்திரித்துக் காட்டும் காட்சி வள்ளுவருடையது. சித்திரிப்பு அழகருடையது. களிற்றின் முகத்தில் ஆட்கள் தொங்குகிறார்கள். எப்படி? அவர்கள் அந்த யானையை எதிர்த்தபோது கையில் வேலைத் தாங்கிய வீரர்கள். அவர்கள் வேலொடு நின்றபோது எதிர்சென்று குத்தித் தூக்கிய யானையின் தந்தத்தில் அவர்கள் தொங்குகிறார்களாம். அத்தகைய வல்லமை உள்ள களிறு.  இது யானையின் ஒரு வகை வீரம். இன்னொரு வீரத்தை ஒரு சொல்லால் திருவள்ளுவர் குறிக்கிறார். அந்தச் சொல் ‘கண்’ என்பது. கண் என்றால் மூங்கில். பாகன் கையில் வைத்திருக்கும் கோல் மூங்கிலால் ஆனது. முகப்பு இரும்பால் நங்கூரம்போல் இருக்கும். எனவே அது அந்தக் கோலுக்கு ஆகி வந்தது ஆகுபெயர். பிறகு அந்தக் கோலைத் தாங்கிய பாகனுக்கு ஆகிவந்ததும் ஆகுபெயர். அதாவது ஒரு பொருளின் இயற்பெயர் மற்றொரு பொருளைக் குறித்து அதுவும் இன்னொரு பொருளைக் குறிக்குமானால் அது இருமடியாகுபெயர். எனவே ‘கண் அஞ்சா களிறு’ என்றால் மூங்கிலால் செய்யப்பட்ட அங்குசத்தைக் கையில் தாங்கிய பாகனுக்கும் அடங்காது என்பது இன்னொரு வீரம். கண்ணஞ்சா களிறு என்றும், வேலாள் முகத்த களிறு என்றும் தனித்தனியும் கூட்டலாம். கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு என ஒரு தொடராகவும் ஆக்கலாம். இவ்வளவு விளக்கமாகப் பரிமேலழகர் சொன்னதற்குக் காரணம் சுருங்கக் கூறிய வள்ளுவரின் களக்காட்சியைச் சித்திரிக்கவும் யானையின் வலிமை கூறவுமே. இத்தகைய யானை அதாவது வட்டமான பெரிய அடிகளையுடைய யானை சேற்று நிலத்தில் சிக்கிக்கொண்டால் அதனின் மிக எளிமையான நரியால் வெல்லப்படும் என்பதாம்.

    “ஆண்மையும் பெருமையும் உடையாரும் தமக்கு ஏலா நிலத்துச் செல்லின் அவற்றால் பயனின்றி மிகவும் எளியரால் அழிவர் என்பது தோன்ற நின்றமையின் இதுவும் அவ்வலங்காரமாம்.”

    பிறிதுமொழிதல் அணியைப் பொருத்தவரையிலும் பள்ளிக்கல்வியில் மாணவர்கள் அறிவது அணியிலக்கணம் என்ற அளவிலேயே. தமிழாசிரியப் பெருமக்களும் அமைதியடைவார்கள். திருக்குறளில் பிறிதுமொழிதலணி வாய்பாட்டில் சொல்லப்பட்டுள்ள அரசியல் நுட்பங்களை அறிந்த மாணவரை நாம் இனிதான் தேடிக் கண்டறிய வேண்டும்.

    வேங்கையைக் கண்டால் வேழத்திற்கும் வேர்க்கும்!

    ‘வெறுங்கை என்பது மூடத்தனம்! விரல்கள் பத்தும் மூலதனம்’ என்பது ஒரு கவிதை வரி. ‘கீழே விழுவதெல்லாம் எழுந்திருப்பதற்காகவே’ என்பது அறிஞர் வாக்கு. ‘சுமக்கும் வரைதான் பாரம். கடக்கும் வரைதான் தூரம்’, ‘கிழக்கு இல்லையெனின் மேற்கு ஏது? தோல்வி இல்லாவிடின் வெற்றி ஏது’ என்பனவெல்லாம் சிந்தனையாளர்களின் கருத்துரைகள். இந்த ஆற்றல் யானைக்குக் கிடையாது. அது தன் பருத்த உடம்பை நம்பும். நீண்ட இரு தந்தங்களை நம்பும். என்ன ஆகும்? அதற்கு இருக்கும் அவ்விரண்டும் இல்லாத புலி சீறினால் பதுங்கும். காரணம் ஊக்கம் இன்மை. நரியிடம் தோற்ற யானை இப்பொழுது புலியிடம் நடுங்குவதை வள்ளுவர் காட்சிப்படுத்துகிறார்.

    “பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
    வெரூஉம் புலிதாக் குறின்” (599)

    இந்தக் குறட்பாவிற்கு “எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும் யானை தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும்” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும் யானை ஊக்கமின்மையான் அஃதுடைய அதற்கு (புலிக்கு) அஞ்சும் என்ற இது. “பகைவரின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கமிலராயின், அஃதுடைய அரசர்க்கு அஞ்சுவர்” என்பது தோன்ற நின்றமையின், பிறிதுமொழிதல்.”

    என்னும் விளக்கவுரையில் திருவள்ளுவரின் அரசியல் நுட்பங்களை நிரல்படுத்துவதைக் காணலாம். மெய்வலியும் கருவிச்சிறப்பும் காவற்சாகாடு உகைத்தற்கு உதவினும் ‘ஊக்கம்’ தலையாயது. அதனால்தான் திருவள்ளுவர் ‘ஊக்கமுடைமை’ என்பதையும் ‘ஆள்வினை உடைமை’ என்பதையும் பொருட்பாலில் பாடியிருக்கிறார். எல்லாவகையிலும் ஆற்றல் உள்ளவர்கள் தாம் தோற்கமாட்டோம் என எண்ணுவது அரசியலில் இயல்பு. திருவள்ளுவர் அத்தகையோரை எச்சரிக்கும் வகையில் கூறும் அறிவுரைகளை நயமாகக் கூறுகிறார். வழக்கில் சொன்னால் ‘நாசுக்காகக்’ கூறுகிறார் எனலாம்.

    ஆயிரம் கோழைகளும் ஒரு வீரனும்

    ‘ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்’ என்பது பழமொழி. காக்கைகள் ஆயிரம் என எண்ணிக்கையால் ஆயிரம் இருந்தாலும் உயிரற்ற ஒரு கல் அவை அத்தனையையும் துரத்துதற்குப் போதுமானவை. இந்தப் பழமொழியை வைத்து முன்றுரையறையனார் எழுதுகிறார்.

    “மறுமனத்தான் அல்லாத மாநலத்த வேந்தன்
    உறுமனத்தன ஆகி ஒழுகின் – தெறுமனத்தார்
    பாயிரம் கூறிப் படை தொக்கால் என் செய்ப?
    ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்” பழமொழி (165)

    அறிவுடைமை, நீதிநெறி பின்பற்றுதலாகிய ஒற்றுமைத் துணையும் படை, பொருள் முதலிய வேற்றுமைத் துணையும் உடைய மன்னன் தோன்றிய அளவிலேயே பகைவர் அழிவர் என்பது பாட்டின் கருத்தாக அமைந்திருக்கிறது.

    “ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
    நாகம் உயிர்ப்பக் கெடும்” 763

    என்னும் குறட்பாவிற்கு “எலியாய பகை கடல்போல ஒலித்தால் நாகத்திற்கு என்ன ஏதம் வரும்? அந்நாகம் உயிர்த்த துணையானே அது தானே கெடும்” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “வீரர் அல்லாதார் பலர் திரண்டு ஆர்த்தால் அவற்கு வீரன் அஞ்சான்: அவன் கிளர்ந்த துணையானே அவர்தாம் கெடுவர் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம்.”

    என்று விளக்கவுரை தருகிறார். விளக்கவுரையின் இறுதியில் ‘வீரரல்லாதார் பலரினும் வீரனொருவனே ஆடல் நன்று’ என்பதாம் எனப் பொருள் முடிவு கூறுவார். இந்தக் குறட்பாவின் உருவகத்தால் ஈர்க்கப்பட்ட கம்பர் தமது காப்பியத்தில் ‘எலியெலாம் இப்படை அரவம் யானென’ (2312) எனப் பயன்படுத்தியிருப்பது காண்க. ‘எலிக்குப் பாம்பு பகை’ என்பது உலகியல் சார்ந்த உண்மையே. நாகம் விடும் மூச்சுக்கே எலிக்கூட்டம் பறந்துவிடும் என்பதனால் ஆண்மை கொண்ட வீரன் ஒருவனுக்கு ஆண்மையற்ற ஆயிரம் வீரரும் ஈடாகார் என விளக்குகிறார். தனியொரு வீரனைப் பற்றி இவ்வாறு திருக்குறள் சொல்லுதற்கான காரணத்தைக் குறிப்பிடுகிறார் பரிமேலழகர். அங்கங்களுள் படை சிறந்தது என்பதும் அது தன்னுள்ளும் மூலப்படை சிறந்தது என்பதும், அது தன்னுள்ளும் வீரன் சிறந்தான் என்பதும் கூறப்பட்டன என்னும் அவர்தம் விளக்கவுரையே பேருரையாக அமைகிறது.

    செடியை மரமாக நோக்கிய திருவள்ளுவர்

    ‘நகத்தால் கிள்ள வேண்டியதைக் கோடாரிக் கொண்டு வெட்டுகிறான்’ என்பதும் “வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு” என்பதும் தமிழகத்தில் பெருவழக்கு.

    “இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
    கைகொல்லும் காழ்த்தவிடத்து” 879

    என்னும் குறட்பாவிற்குக் “களைய வேண்டுவதாய முள் மரத்தை இளைதாய நிலைமைக்கண் களைக. அன்றியே முதிர்ந்த நிலைமைக்கண் களையலுறின் களைவார் கையினை அதுதான் களையும்” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “களையப் படுவதாய தம் பகையை அது மெலிதாய காலத்தே களைக. அன்றியே வலிதாய காலத்துக் களையலுறின் நம்மை அதுதான் களையும் என்பது தோன்ற நின்றமையின் இது பிறிது மொழிதல்”

    என்னும் விளக்கவுரையைத் தருகிறார். ‘முள்ளை முள்ளிலே களைந்துவிடு, அதுவளர்ந்தபின் களைய எண்ணினால் எண்ணுகிற உன்கையை அது காயப்படுத்திவிடும் என்பதன்று திருவள்ளுவர் கூறநினைத்தது. ‘கேடுசெய்யும் பகைவர்கள் இவர்கள் என்று அடையாளம் கண்டபின் அவர்களை விட்டுவைப்பது தமக்கே கேடாக முடியும். இது அரசியல் கொள்கை. எனவே அவர்கள் வலிமை குன்றியிருக்கும்போதே அழிப்பதே நெறி. இல்லையாயின் அவர்கள் நம்மால் களைய முடியாத அளவுக்கு வலிமை பெற்று நம்மை அழித்து விடுவார்கள் என்பதாம். ‘இளைதாக’ என்பதற்கேற்ப ‘மெலிதாக’ என்றும் கைகொல்லும் என்பதற்குக் ‘களைவார் கையை’ என எழுவாய் வருவித்தும் எழுதும் பரிமேலழகர் நுண்ணியத்தையும் செடியாக இருக்கிறபோதே அதனை மரமாகக் கண்டு ‘முள்மரம்’ என்று காட்சிப்படுத்திய திருவள்ளுவர் படைப்பாற்றலையும் ஒருசேர எண்ணி மகிழலாம்.

    நிறைவுரை

    அணியிலக்கணச் சிந்தனையில்லாத காலத்தில் திருக்குறள் உருவாக்கம் செய்யப்பட்டது என்னும் கருத்தியலை ஏற்றுக் கொண்டாலே இந்தக் கட்டுரையின் அருமை புரியும். அடுத்து மக்கள் வாழ்க்கையையும் வழக்கையும் இலக்கியப் பதிவுகளில் கொண்டு வரும் முயற்சி திருவள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதையும் அறிதல் வேண்டும். அரசு பற்றிய தனது சிந்தனைகளில் ‘ஆலமரத்தடிக் கதைகளைத்’ திருவள்ளுவர் சொல்லியதற்கு வேறு என்ன காரணம் இருந்திருக்க முடியும்?. ‘வலியறிதலில்’ இரண்டும், ‘இடனறிதலில்’ மூன்றும், ‘உட்பகை’, ‘ஊக்கமுடைமை’, ‘படைமாட்சி’ என்னும் அதிகாரங்களில் அதிகாரத்திற்கு ஒன்றுமாக எட்டுப்பாடல்களில் திருவள்ளுவர் சொல்லியிருக்கும் இயற்கை உண்மைகளுக்குப் பரிமேலழகர் தனது பொருளறிவு (அர்த்த சாஸ்திரம்) சான்ற உரையைத் தந்திருக்கிறார். ‘பழமொழிகளையே திருவள்ளுவர் பாடலாக்கியிருக்கலாம்’ என்பது அனுமானமாகலாம். ஆனால் அதற்குப் பரிமேலழகர் சொல்லியிருக்கும் கருத்துரை அனுமானமன்று. ஆழ்ந்த அரசியல் கருத்துக்கள். கருத்துக்குத்தான் கதை சொல்வார்கள். பரிமேலழகர் கதைக்குக் கருத்துரை தந்திருப்பதுதான் அவருடைய உரைத்திறன்.

    (தொடரும்…)

    Share
  • கண்ணையாவின் கை (சிறுகதை)

    கண்ணையாவின் கை (சிறுகதை)

    பாஸ்கர் சேஷாத்ரி

    கண்ணையா பற்றி நிறைய பேருக்குத் தெரிந்து இருக்காது. அந்தக் காலத்து ஆசாமி. நான் படித்த பீ எஸ் ஹை ஸ்கூல் பெல் மேன். எழுபதுகளில் நான் படித்த காலத்தில் அவர் தான் என் நிஜ ஹீரோ. வாத்தியார்கள் எல்லாம் அப்புறம் தான். அவருக்கு அப்போதே சுமார் அம்பது வயதுக்கு மேல். நீல நிற தொளதொளவென்று அரைக்கை சட்டை. மடித்துக் கட்டிய வேட்டி. சவரம் செய்யாத முகம். வெள்ளை வெளேர் தலைமுடி. முகத்தில் எப்போதும் குங்குமப் பொட்டு. இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டுமானால் இன்றைய என்னைப் போலவே கொஞ்சம் கூன் போடுவார். அது அந்தக் கனமான மணியைத் தினமும் தூக்கியதால் கூட இருக்கலாம்.

    நான் அவரைப் பல கோணங்களில் ரசித்து இருக்கிறேன். அவர் அந்த பள்ளி மாடியில் இடது ஓரம் நின்று சரியாக நேரம் பார்த்து மணி அடிக்கும் லாவகம் இருக்கிறதே, அதற்கு நூறு மதிப்பெண் கொடுக்கலாம். முதலில் ஓர் ஆரம்ப தொனியில் ரீங்கார பாணியில் தொடங்கி அதையே இசைப் பாடல் போல மெல்லக் கோத்து அப்படியே ஓர் இசை அமைப்பாளர் போல அதனை அவர் நடத்தும் பாங்கு எனக்குப் பெரிய ஒரு மெய்சிலிர்ப்பு. எல்லோரும் மணி அடித்தவுடன் ஓடினாலும் எனக்கு அவர் பிம்பம் தான் தெரியும். கூட்டத்தின் இடுக்கில் அவரைப் பார்த்துக்கொண்டே நிற்பேன்.

    ஆரம்ப காலத்தில் அந்தப் பள்ளியில் ஒரு தண்டவாளத் துண்டு ஓரிடத்தில் தொங்கும். அதற்கென பிரத்யகேமாய் ஒரு தடிமனான கம்பி. அதுவும் ரீங்காரம் தான். அதையும் கண்ணையா அடித்து அதன் அதிர்வைக் கைகளால் உணர்ந்து அவர் என்னைத் துரத்திய காலமும் உண்டு. தண்டவாளம் வழக்கொழிந்து, பின்னர் இந்த வெண்கல மணி வந்தது. வீட்டுப் பாத்திரம் போலப் பளிச்சென அது இருக்கும். வயது கூடக்கூட சின்ன விஷயங்களின் ஈர்ப்பு போகும் என்பார்கள். ஆனால் அது எனக்குக் கூடவே செய்தது.

    பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு சனிக்கிழமை, அரை நாள் விடுமுறை. கண்ணையாவைப் பார்த்து ஒரு முறை மணி அடிக்க வேண்டும் என்றேன். போ அப்பால என்றார். நான் நகரவில்லை. கொஞ்ச நேரம் கழித்து இன்னுமா நிக்கற என்றார். நான் அந்த மணியைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து என்ன உனக்கு மணியை அடிக்கணுமா எனக் கேட்டார். வேகமாகத் தலையை ஆட்டினேன். நான் சொல்றப்ப வரையா என்றார். ம் என்றேன்.

    சொன்னபடி ஒரு மணிக்கு வா என்றார். நான் மணியைக் கொடுக்க மாட்டேன். நான் அடிக்கும்போது நீ என் கையைப் பிடிச்சுக்கோ என்றார். கையைப் பிடி என்றார். அவர் அடிக்க அடிக்க, எனக்கு உடல் சிலிர்த்துப் போனது. அதே ரீங்காரம். அதே பாணி இசை. அதே கணீர் சப்தம். அந்த நிறைவான இசை.

    போதுமா என்றார். பதில் சொல்ல முடியவில்லை. அவர் கையைப் பற்றின அந்த ஸ்பரிசம் நெடு நேரம் போகவில்லை. பள்ளியில் சேர்ந்த நாளில் பலப்பம் கொடுத்துச் சொல்லிக் கொடுத்த ஆசானாக அவர் அன்று மாறிப் போனார். நேற்று அதே மாதிரியான மணியின் நாதத்தைக் கேட்டபோது என் கையைப் பார்த்தேன். இன்னும் கண்ணையா என் கையைப் பிடித்துக்கொண்டிருப்பது போல இருந்தது.

    Share
  • குறளின் கதிர்களாய்…(324)

    குறளின் கதிர்களாய்…(324)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(324)

    ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
    தீதுண்டோ மன்னு முயிர்க்கு.

    – திருக்குறள் – 190 (புறங்கூறாமை)

    புதுக் கவிதையில்...

    புறங்கூறல் பொருட்டு
    பிறரிடமுள்ள குற்றங்களை
    அறிந்து ஆராய்தல் போலத்
    தம்மிடமுள்ள குற்றங்களையும்
    கண்டு தெளிந்தால்
    நிலை நின்று வாழும்
    உயிர் வாழ்க்கைக்குத்
    தீது ஏதுமில்லை…!

    குறும்பாவில்...

    புறங்கூறிட பிறர் குற்றங்களைக்
    கண்டறிதல்போல் தம்குற்றங்களைக் கண்டுதெளிந்தால்,
    நிலைபெறும் வாழ்வில் தீதிலையே…!

    மரபுக் கவிதையில்...

    அறமிலாச் செய்கையாம் புறங்கூறிட
    அடுத்தவர் குற்றம் அறிந்திடல்போல்
    கறையாம் தமது குற்றங்களைக்
    கண்டே தெளிந்து விட்டதனால்
    குறைகள் தவிர்த்து வாழ்ந்தாலே
    குவலயம் தன்னில் வாழ்வதுதான்
    நிறைவுடன் சிறிதும் தீதின்றி
    நிலைபெற ஏதும் தடையிலையே…!

    லிமரைக்கூ..

    பிறர்குற்றம் காணல் தீது,
    அதுபோல் தன்குற்றம் கண்டு தெளிபவர்க்கு
    நிலைபெறும் வாழ்விலிடர் ஏது…!

    கிராமிய பாணியில்...

    பேசாத பேசாத
    பொறஞ்சொல்லு பேசாத,
    அதுக்குப் பாக்காதே பாக்காதே
    அடுத்தவன் குத்தம் பாக்காதே..

    பொறஞ்சொல்லு பேசுறதுக்கு
    அடுத்தவன் குத்தத்த
    ஆராஞ்சி பாக்கறதுபோல
    அவனவன்
    தங்குத்தத்தயும் ஆராஞ்சி பாத்துத்
    தெளிவானா
    ஒலகத்துல நெலச்சி வாழக்
    கெடுதி ஒண்ணும் வராதே..

    அதால
    பேசாத பேசாத
    பொறஞ்சொல்லு பேசாத,
    அதுக்குப் பாக்காதே பாக்காதே
    அடுத்தவன் குத்தம் பாக்காதே…!

    Share
  • கொலு 2020 – ஐஷ்வர்யா அகத்திலிருந்து

    கொலு 2020 – ஐஷ்வர்யா அகத்திலிருந்து

    சென்னை, மேற்கு மாம்பலத்தில் வசிக்கும், ஐந்தாம் வகுப்பு மாணவி ஐஷ்வர்யா, தங்கள் வீட்டுக் கொலுவை நமக்கு நயமுற, அழகுற எடுத்துரைக்கிறார். பொம்மைகளை நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியது மட்டுமின்றி, சில பொம்மைகளைத் தாமே உருவாக்கியும் இருக்கிறார். பெருமாள் ஊர்வலம், தசாவதாரம், கல்யாணம், செட்டியார், ஐயப்பன், வீடு, பூங்கா.. என அணி அணியாகப் பொம்மைகள், இந்தக் கொலுவை அலங்கரிக்கின்றன. 30 ஆண்டுகளுக்கு முந்தைய பொம்மைகளையும் பாரம்பரியமாக வைத்து வருகிறார்கள். இந்தப் பதிவின் இறுதியில் இனிய பாடலையும் பாடி மகிழ்விக்கிறார். விழிக்கும் செவிக்கும் விருந்து படைக்கும் குமாரி ஐஷ்வர்யாவும் அவர் குடும்பத்தினரும், அன்னையின் அருளால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுக! பொன்மழை எந்நாளும் பொழிக!

     

    உங்கள் வீட்டுக் கொலுவையும் இவ்வாறு பதிவு செய்து அனுப்புங்கள். நம் யூடியூப் அலைவரிசையின் வழியே அவற்றை உலகின் முன் படைப்போம்.

    உங்கள் வீட்டுக் கொலுவை வீடியோ படம் எடுத்து வாட்ஸாப் வழியே +91-9841120975 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். Google Drive அனுப்புவோர், annakannan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். நம் யூடியூப் அலைவரிசையில் வெளியிடுவோம். எடுக்கும்போது அதை விளக்கிச் சொல்லுங்கள். உங்கள் செல்பேசியைக் கிடைமட்டமாக (horizontal) வைத்துப் படம் எடுங்கள். தொடங்கும்போது எந்த ஊரிலிருந்து யார் பேசுகிறீர்கள் என்று சொல்லுங்கள். பாடத் தெரிந்தவர்கள் எனில், பாடியும் அனுப்பலாம். ஓம்சக்தி, பராசக்தி! – அண்ணாகண்ணன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கொலு 2020 – சுதா மாதவன் வீட்டிலிருந்து

    கொலு 2020 – சுதா மாதவன் வீட்டிலிருந்து

    சென்னையில் வசிக்கும் சுதா மாதவன் தம் வீட்டில் வைத்துள்ள கொலுவை நமக்காகப் பதிவு செய்து அனுப்பியுள்ளார். ஒவ்வொரு பொம்மையின் பின்புலத்தையும் வயதையும் பெருமைகளையும் அவர் எடுத்துரைக்கும் விதம் அழகு. அதிலும் 32 ஆண்டுகள் வயதுடைய பொம்மைகளைப் பார்க்கையில், அந்தக் காலத்தையே கண்முன் காண்கின்றோம். மேலும், மாற்றுத் திறனாளிகளாக உள்ள குழந்தைகள் உருவாக்கிய கலைப் படைப்பும் நம்மை ஈர்க்கின்றது. இந்த அழகிய, எளிய, சீரிய கொலுவைக் கண்டு மகிழுங்கள்.

     

    சகஸ்ரா அஜய் பாடல்

    2020 நவராத்திரியை முன்னிட்டு, சுதா மாதவன் அவர்களின் பெயர்த்தி சகஸ்ரா அஜய் குரலில் இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள். இவரது ஆற்றல் மேலும் வளர்ந்து, மேன்மைகள் சிறக்க, தேவி பராசக்தி அருள் புரிக.

     

    உங்கள் வீட்டுக் கொலுவையும் இவ்வாறு பதிவு செய்து அனுப்புங்கள். நம் யூடியூப் அலைவரிசையின் வழியே அவற்றை உலகின் முன் படைப்போம்.

    உங்கள் வீட்டுக் கொலுவை வீடியோ படம் எடுத்து வாட்ஸாப் வழியே +91-9841120975 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். Google Drive அனுப்புவோர், annakannan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். நம் யூடியூப் அலைவரிசையில் வெளியிடுவோம். எடுக்கும்போது அதை விளக்கிச் சொல்லுங்கள். உங்கள் செல்பேசியைக் கிடைமட்டமாக (horizontal) வைத்துப் படம் எடுங்கள். தொடங்கும்போது எந்த ஊரிலிருந்து யார் பேசுகிறீர்கள் என்று சொல்லுங்கள். பாடத் தெரிந்தவர்கள் எனில், பாடியும் அனுப்பலாம். ஓம்சக்தி, பராசக்தி! – அண்ணாகண்ணன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கதை பிறந்த கதை – 2: நிர்மலா ராகவன் நேர்காணல்

    கதை பிறந்த கதை – 2: நிர்மலா ராகவன் நேர்காணல்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    மலேசிய எழுத்தாளர் நிர்மலா ராகவன், தமது எழுத்துலக அனுபவங்களைத் தொடர்ந்து பகிர்கின்றார். கதைகளுக்கான கரு எங்கிருந்து கிடைக்கிறது? கதைகளில் உண்மையும் கற்பனையும் எவ்வாறு கலக்கின்றன? எந்த விகிதத்தில் கலக்கின்றன? எவ்வளவு காலம் கழித்து ஒரு சம்பவம் கதையாகிறது? உள்ளிட்ட பலவற்றைச் சில எடுத்துக்காட்டுகளுடன் நமக்கு விளக்குகிறார்.

    கருவில் குழந்தை இருக்கும்போது, அதன் தாயின் மீது விதவிதமான ஆண்கள் பலரும் கட்டைக் குரலில் பேசியபடி வந்து, படுத்து அமுக்குகிறார்கள். கருவில் இருக்கும் குழந்தைக்கும் உடலெங்கும் வலிக்கிறது. வலி தாங்காமல் அது புரண்டு படுக்கிறது. தாயும் குழந்தையைத் திட்டுகிறாள். அந்தக் குழந்தை, எதிர்காலத்தில் என்னவாக ஆகிறது? வித்தியாசமான கருவில் அமைந்த தனது கதைகள் குறித்து நிர்மலா ராகவன் விவரிக்கிறார்.

    மேலும், யோக முத்திரைகள் சிலவற்றை நமக்காகப் பிடித்துக் காட்டியுள்ளார். மயக்கமா? குழப்பமா? மனதிலே நடுக்கமா? இந்த யோக முத்திரையைப் பிடித்தால் போதும். உங்கள் குழப்பம் தீர்ந்து, தெளிவு கிடைக்கும். இது என்ன முத்திரை என்று கற்க, இந்த நேர்காணலைப் பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிவராமன் (சிறுகதை)

    சிவராமன் (சிறுகதை)

    பாஸ்கர் சேஷாத்ரி

    சில விஷயங்களைப் பேச வேண்டும் என்றான்.

    எங்கே போலாம் எனக் கேட்டேன்

    நாளைக்கு மீட் பண்ணலாம் என்றான்

    வேணாம். நான் முட்டி வலி டாக்டரைப் பார்க்கணும். இன்னிக்கே வேணும்னா பார்க்கலாம் என்றேன் .

    கொஞ்சம் யோசித்து, சரி ஆறு மணிக்கு பழைய வுட்லண்ட்ஸ் வா என்றான்.

    முன்னை விட ரொம்ப மெலிந்து இருந்தான் அவன் தோள் பையைச் சரி செய்துகொண்டே நடந்து வந்தான்.

    என்னாச்சு உன் ஸ்கூட்டர்.

    கை காட்டி காண்பித்தான்.

    சீக்கிரம் விக்கணும். பழையபடி ஒரு டிவிஎஸ் பிப்டி செகண்ட் ஹாண்ட்ல வாங்கணும்.

    ஏன்டா அவனவன் பெரிய வண்டி வாங்குவான் . நீ என்ன இப்படி சொல்ற?

    என் நிலைக்கு எல்லாமே சொகுசு தான்.

    புரியல என்றேன்

    என்னாச்சு என்றேன்.

    நல்ல வேலை, உனக்கென்ன?

    இப்ப எல்லாம் போச்சு

    என்ன?

    தப்பு பண்ணிட்டேன்டா . ஏதோ ஆசைப்பட்டு லஞ்சம் வாங்கிட்டு இன்னிக்கு கேஸ் நடக்குது விஜிலன்ஸ்ல மாட்டிண்டேன். இப்ப சர்விஸ்ல இல்லை. சாலரி இல்லை. இன்னும் ஒரு வருஷம் தான் சர்விஸ்.. சபலம் பெரிய கொடுமை .

    பணம் எதனா வேண்டுமா.

    ஆமாண்டா.

    எங்கிட்ட ரெண்டாயிரம் இருக்கு, வச்சுக்க.

    எனக்கு இரண்டு லட்சம் வேண்டும்.

    டேய், என்னடா கேக்குற? கேஸ் நடத்தவா?

    இல்லை நான்தான் பணம் வாங்கியது உண்மைன்னு சொல்லிட்டேன்.

    இந்த பணம் நான் சீட்டு சேர்த்த பணம்.

    வந்தவங்க எல்லாத்தையும் அள்ளிண்டு போயிட்டாங்க…

    சீட்டு போட்டவங்க பிரஷர் தாங்க முடியல.

    சாரி என்றேன்.

    சரி, கிளம்பறேன் என்றான்.

    என்னடா அவ்வளவு அவசரம்.

    இல்லடா உடனே பணம் புரட்டணும்

    நான் கிளம்பறேன்.

    நிறைய பேசணும்னு சொன்ன?

    இதைத் தாண்டி வேறேதும் முக்கியம் இல்லை இப்ப.

    அப்ப ரெண்டாயிரம்.

    வேணாண்டா.

    என்னடா இவ்வளவு நேர்மையா இருக்கற நீ எப்படிறா கைநீட்டின?

    பதில் சொல்லவில்லை . ஒரு கணம் பலவீனம் இப்ப அனுபவிக்கிறேன்.

    எவ்வளவுடா வாங்கின.

    மூனு லட்சம்.

    தோளைத் தட்டி நான் கிளம்பறேன் என்றான்

    அப்ப கேஸ்.

    என்னைக் கைது செய்யறதுக்கு ரெண்டு வாரம் தான் இருக்கு. நேரம் இல்லை. பை என்றான்.

    எனக்குப் பேச்சு வரவில்லை.

    சிவா என்றேன். குரல் எழும்பவில்லை. அவன் கிளம்பிவிட்டான்.

    ஒரு காபி குடிக்கலாம் என்றேன்.

    அடுத்த வாட்டி என்றான்.

    காலை ஒரு சேனலில், தேனாம்பேட்டை அருகே குடிநீர் லாரி மோதி நேற்று இரவு எட்டு மணியளவில் சிவராம் என்ற அரசு ஊழியர் மரணம் என்று செய்தி வந்தது.

    முதலில் வந்த சிந்தனை –

    நல்ல வேளை பணம் ஏதும் கொடுக்கல.

    பின்னால் வந்த இன்னொன்று.

    ஒரு வேளை நாளை அவனைச் சந்தித்து இருக்கலாமோ?

    Share
  • பழகத் தெரிய வேணும் – 39

    பழகத் தெரிய வேணும் – 39

    நிர்மலா ராகவன்

    ஓயாமல் உதவுவது உதவியா, உபத்திரவமா?

    `உலகில் தீயன என்பதே கிடையாது,’ என்று வளர்க்கப்பட்டதால் அரசிளங்குமரனான சித்தார்த்தர் பிணியையும். மரணத்தையும் கண்டபோது, குடும்ப வாழ்வையே வெறுத்துப்போனார் என்று தெளிவுபடுத்துகிறது கௌதம புத்தரின் சரிதம்.

    பல பெற்றோர் ஏன் குழந்தைகளை அப்படி வளர்க்கிறார்கள்?

    அவர்களைப் பொறுத்தவரை, அது அன்பைக் காட்டும் வழி.

    `என்னுடையகுழந்தை!’ என்று உரிமை கொண்டாடும் மனப்பான்மை இன்னொரு காரணம்.

    `யாரும் புத்தி சொல்லாமல், நான் நிறைய தப்பு செய்துட்டேன். நீயும் அப்படிக் கஷ்டப்படக்கூடாது,’ என்பார்கள், கரிசனத்துடன்.

    அப்படி வளர்க்கப்பட்ட குழந்தைகள் மகிழ்ச்சியோ, பயனோ அடைகிறார்களா என்பது வேறு விஷயம்.

    ஓயாமல் உதவுவது உதவியா?

    கதை

    திருமணமாகி பல ஆண்டுகள் கழித்துப் பிறந்த பெண் காஞ்சனா.

    அவள் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, அருமை பெருமையாக வளர்த்த மகள் இரவில் நெடுநேரம் வீட்டுப்பாடம் செய்து, உடலைக் கெடுத்துக்கொள்கிறாளே என்ற ஆதங்கம் அவள் பெற்றோருக்கு.

    “காஞ்சனாவோட அப்பா பள்ளிக்கூடத்துக்குப் போய், `எங்க குழந்தைக்கு அதிகமா வீட்டுப்பாடம் கொடுக்காதீங்க!’ என்று சொல்லிட்டு வந்தார்,” என்று அவளுடைய தாய் என்னிடம் கூறியபோது, அப்பெண்ணின்மேல் பரிதாபம்தான் எழுந்தது.

    உடன் படிக்கும் மாணவிகள் கேலி செய்ய மாட்டார்களா?

    தெரிந்தோ, தெரியாமலோ, சில பெற்றோரே குழந்தைகள் பிறருடன் பழகத் தெரியாமலிருக்க இவ்வாறு வழிவகுத்து விடுகின்றனர்.

    குழந்தை விழுந்துவிடுமே!

    நடக்கப் பழகும் குழந்தை விழாமல் இருக்காது. விழத்தான் செய்யும். இயற்கையே அதற்குப் பாதுகாப்புக் கவசம் அளிக்கிறது, மூளையில்.

    தளர்நடை போடும் குழந்தையின் பின்னாலேயே பதட்டத்துடன் நடக்காது, கண்டும் காணாததுபோல் இருந்தால், அவனும் அதைப் பெரிதுபண்ண மாட்டான். `விழுந்தால் எழுந்திருக்க வேண்டும்!’ என்று புரிந்துகொள்வான்.

    கதை

    டெய்ஸி எங்கு போனாலும் அவளைக் கண்காணிக்க ஒரு காவலரை அமர்த்தியிருந்தார் அவளுடைய தந்தை.

    அவருக்கு உத்தியோக ரீதியில் எதிரிகள் அதிகம். அவர்களால் மகளுக்குக் கெடுதல் நிகழ்ந்துவிடுமோ என்று பயத்தின் விளைவு அது.

    தன்னையொத்த தோழிகள் அனுபவித்த சுதந்திரம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று நொந்துபோனாள் அப்பெண். தந்தைமீது தாளாத கோபம் வந்தது. ஆனால், உண்மை நிலவரமும் புரிந்திருந்ததால், அவரை எதிர்க்க முடியவில்லை.

    அவளுடைய நல்ல காலமோ, கெட்ட காலமோ, தந்தை உத்தியோக நிமித்தம் குடும்பத்துடன் வேறு ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. படித்துகொண்டிருந்த இருபது வயது மகள் தனியாக விடப்பட்டாள்.

    இம்மாதிரி வளர்ந்த இளம்பெண்களுக்கு நல்லவர், கெட்டவர் என்ற வித்தியாசம் புரியாது.

    உலகம் புரியாது வளர்க்கப்பட்டவர்களுடன் நண்பரைப்போல் பழகி, பணத்தையோ, வேறு எதையெல்லாமோ பிடுங்க எத்தனைபேர் காத்திருப்பர்!

    பொறுப்பான பெற்றோர் என்ன செய்திருக்க வேண்டும்?

    அந்தந்த வயதுக்குத் தேவையான அறிவுரையைக் கூறி, அப்படியே தவறிழைத்தாலும் அதை எப்படி நிவர்த்தி செய்வது என்று சொல்லிக்கொடுத்திருக்கலாம்.

    வீட்டைவிட்டு ஓடிப்போன பெண்

    ஸிதி (SITI) என்ற பெண் என்னிடம் சொன்னது இது. பாட்டியிடம் வளர்ந்தவள் அவள்.

    வெளிநாட்டில் வேலை பார்க்கச் சென்ற அவளுடைய தாய் தவறான முறையில் பணம் சம்பாதிப்பதை அறிந்த பாட்டி, பேத்தியும் அப்படிக் கெட்டுவிடக்கூடாது என்று மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டாள்.

    பள்ளிக்கூடம் சென்று திரும்பியவுடன் ஸிதி அவளுடைய அறையில் வைத்துப் பூட்டப்பட்டாள்.

    “பைத்தியம் பிடித்துவிடும்போல் இருந்தது. அதனால், என்னுடன் படித்த பையனை எங்கள் வீட்டுக்கு வரச்சொல்வேன்,” என்றாள், களங்கமில்லாது.

    “அப்போது பாட்டி உன்னை வெளியில் விடுவார்களா?” என்று கேட்டேன்.

    “இல்லை. அவன் என் குளியலறையிலிருந்த ஓட்டைப் பிரித்துக் கீழே இறங்குவான்!”

    “என்ன செய்வீர்கள்?”

    “சும்மா பேசிக்கொண்டிருப்போம். அவ்வளவுதான்!”

    பேச்சுச் சப்தம் பாட்டிக்குக் கேட்டிருக்காதா!

    `வயதான காலத்தில் இந்தப் பெண்ணை என்னால் பார்த்துக்கொள்ள முடியவில்லை,” என்று காவல்துறையினரிடம் முறையிட்டிருக்கிறாள்.

    அவ்வளவுதான். வீட்டைவிட்டு `ஓடிப்போன’ இளம்பெண்களுக்காக இயங்கும் இல்லத்தில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டாள் ஸிதி. அங்கு பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுமிகள் இருந்தார்கள்.

    நான் மேலும் துருவியபோது, நண்பனுடன் உடலுறவெல்லாம் கிடையாது என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

    `பெரிதாக எந்த தவறும் செய்யாது, சிறைபோல் ஓரிடத்தில் அடைபட்டுக்கிடக்கிறாள், பாவம்!’ என்ற வருத்தமும் எழுந்தது. இவள் எங்கே ஓடிப்போனாள்!

    பிற பெண்கள் அவளைப்போல் இருக்கவில்லை. கண்டிப்பாரின்றி, அல்லது தாளமுடியாத கண்டிப்பால், அவர்கள் தம் `சுதந்திர’ப்போக்கைப் பெருமையுடன் விவரிக்க, இவளும் தவறான பாதையில் நடக்கக்கூடும்.

    எல்லா ஆண்களுக்கும் ஒரே ஒரு எண்ணம்தான்

    `எல்லா ஆண்களும் கெட்டவர்கள். அவர்கள் மனதில் ஒரே ஒரு எண்ணம்தான் எப்போதும். யாரையும் நம்பாதே!’ என்று போதித்து வளர்க்கப்படும் பெண்ணுக்கு எந்த வயதிலும் பயம்தான்.

    இதைப்பற்றி அறிய, நான் நம்பகமான என் நண்பரிடம் கேட்டேன்.

    ‘Most men. Not all!” என்றார். (அனேக ஆண்கள் அப்படித்தான். எல்லாரும் கிடையாது).

    பையன்களுக்கும் இதுபோன்ற போதனைகள் உண்டு.

    கதை

    பதினெட்டு வயதில்,  முதன்முதலாகப் பெண்களுடன் சேர்ந்து கல்வி பயிலும் அனுபவம் அந்தப் பையன்களுக்குப் புதிது.

    “எங்களுக்குப் பதினாறு வயதானபோது, பள்ளி ஆசிரியைகள் எங்களை என்னமோ `காமாந்தகாரர்கள்’ என்பதுபோல் பயத்துடன் பார்த்தார்கள். எங்களுக்கு ஒரே ஆத்திரம்,” என்று என் மகளுடன் படித்த மாணவர்கள் கூறினார்கள்.

    `பெண்களுடன் எப்படிப் பழகுவது?’ என்று குழம்பியிருந்த அவர்களுக்கு உறவினர் பையன்களுடன் பழகியிருந்த தோழிகள் தைரியம் அளித்தனர்.

    அவ்வப்போது, அவர்களைப்பற்றி அறிந்திருந்த நான், “தீபாவளிக்கு உன் நண்பர்களை அழை,” என்று நான் மகளிடம் கூற, “அவர்களெல்லாம் பெண்கள் வீட்டுக்கு வரமாட்டார்களே!” என்றாள், சிரித்தபடி.

    “அம்மா அழைக்கச் சொன்னாள் என்று சொல்,” என்று சொல்லிக்கொடுத்தேன்.

    நான் பேயா?

    நாலைந்து பையன்கள் வந்தார்கள். என்னைப் பார்த்ததும் ஒரே நடுக்கம். வரவேற்றுவிட்டு, வேகமாக உள்ளே போய்விட்டேன்.

    ஒரு பையன், “நான் ஒரு பொண்ணோட வீட்டிலே இருக்கேன்னு தெரிஞ்சா, எங்க பாட்டி உயிரை விட்டுடுவாங்க.” என்று சொன்னது காதில் கேட்டது.

    “ஒங்கம்மாவுக்கு நாங்க வர்றது தெரியுமா?” என்றது இன்னொரு குரல்.

    அவர்கள் சென்றபின், “வீட்டுக்கு யார் வந்தாலும், உட்கார்ந்து பேசுவியே?” என்று மகள் சந்தேகம் கேட்டாள்.

    “அந்த பையன்களின் முகத்தைப் பார்த்தாயா? என்னைப் பார்த்ததும், பேயைக் கண்டதுபோல் நடுங்கிவிட்டார்கள்!” என்று சிரித்தேன்.

    `பாதுகாப்பு’ என்ற பெயரில் அநாவசியமான பயங்களைப் புகுத்தி வளர்ப்பதும் தவறுதான்.

    எப்போது நின்று பேசலாம், எப்போது ஓடவேண்டும் என்று அந்தந்த வயதில் சொல்லிக்கொடுக்காவிட்டால், மிரட்சிதான் எழும்.

    பெரியவர்களாக ஆனதும், பெண்களைக் கேலி செய்து, தம் பலத்தை, அதிகாரமாக நிலைநாட்டிக்கொள்கிறவர்கள் முன்பு தாம் அடைந்த பயத்தைப் பிறர்பால் செலுத்த முனைகிறவர்களோ?

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 13

    எட்டுக் கோணல் பண்டிதன் – 13

    தி. இரா. மீனா

                 அத்தியாயம் பதினெட்டின் தொடர்ச்சி

    41. தனக்குள் அமைதி அடைகிற தீரனுக்கு உண்மை ஒடுக்கம் என்றும் இயல்பாக இருக்கும். கட்டுப்பாடற்றவருக்கு அது இயல்பாகாது.

    42. இருப்பை ஒருவன் நினைக்கிறான். மற்றொருவன் ஒன்றுமில்லையெனக் கருதுகிறான். இன்னொருவன் இரு பாவனைகளுமில்லாமல் கலக்கமின்றி இருக்கிறான்.

    43. மதிகெட்டவர்கள் மயக்கத்தால் இரண்டில்லாத தூய ஆத்மாவை மனதால் உணராமல் செயல்படுவதால் ஆயுள் முழுவதும் அவர்களுக்கு அமைதியில்லை.

    44. மனிதர்களின் புத்தி பிடிப்பற்றிருப்பதில்லை. முக்தனது புத்தி எக்காலத்திலும் சிறிதும் பிடிப்பில்லாமல் ஆசைகளற்று இருக்கும்.

    45. மிரட்சியுடையவர் அடைக்கலம் தேடி, வாழ்வு வேண்டி குகையில் நுழைந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.

    46. சம்ஸ்கார வாதனையற்ற சிங்கத்தைக் கண்டு யானைகள் ஒசையில் லாமல் ஒட்டமெடுக்கின்றன. ஓட முடியாவிட்டால் கெஞ்சிப் பணிகின்றன.

    47. உள்ளம் பொருந்தியவன் சந்தேகமடைய மாட்டான். மோட்ச நூலைப் பேணிக் காக்க மாட்டான்.கண்டும், கேட்டும், தொட்டும், முகர்ந்தும், உண்டும் சுகமாக இருப்பான்.

    48. பொருளின் லட்சணத்தைக் கேட்ட அளவில் புத்தி தெளிந்து மீண்டும் கலங்காதவன் ஆசாரம், அநாச்சாரம், உதாசீனம் முதலிய எதையும் காண மாட்டான்.

    49. அவன் களங்கமில்லாதவனாக நல்லதோ கெட்டதோ எப்பொழுது எதைச் செய்ய நேருகிறதோ அப்பொழுது அதைச் செய்வான். அவன் செயல் குழந்தையினது போன்றது.

    50. சுதந்திரத்தால் சுகம் அடையலாம். சுதந்திரத்தால் பரம் அடையலாம். சுதந்திரத்தால் விடுதலை அடையலாம். சுதந்திரத்தால் பரமபதம் அடைய லாம்.

    51. ஆன்மாவாகிய தான் புரிபவனும், புசிப்பவனும் அல்லன் என்று ஒருவன் என்று உணர்கிறானோ அன்றே மனநினைவனைத்தும் அழிந்து போகிறது.

    52. கட்டற்றதாக இருந்தாலும் தீரனுடைய இயல்பு நிலை அழகானது. உள்ளத்தில் ஆசை கொண்ட சாதாரணனது செய்கை அவனுக்கு அமைதியைத் தராது.

    53. கற்பனை நீங்கி பந்தமில்லாத சுதந்திர மதியுடையவர்களான தீரர் உயர்ந்த நிலையிலுமிருப்பார். குகைகளிலும் இருப்பார்கள்.

    54. அந்தணரையும், தேவதையையும், இடத்தையும், பெண்ணையும், அரசனையும், அன்பரையும் காண்பதும் வழிபடுவதும் தீரனுக்கு எந்தத் துன்பத்தையும் தராது.

    55. பணியாளர், மக்கள், பெண்கள், பேரர், உறவினர் முதலியவர்கள் கேலி செய்து அவமதித்தாலும் யோகி சிறிதும் வருந்துவதில்லை.

    56. அவன் மகிழ்ந்தாலும் மகிழ்ந்தவனில்லை; வருந்தினாலும் வருந்தியவனில்லை; அவனது விந்தையான நிலையை அவனைப் போன்றவர்களே அறிவார்கள்.

    57. செய்தாக வேண்டுமென்பதே சம்சாரம். பூரண வடிவம் உடையவராக, வடிவமற்றவராக திரிபில்லாமலும், தாபமில்லாமலும் உள்ள ஞானிகள் கடமையைக் காணமாட்டார்கள்.

    58. சாதாரணன் ஒன்றும் செய்யா விட்டாலும் குழப்பம் காரணமாக எல்லாவற்றையும் கண்டு கலக்கம் அடைவான். தேர்ந்தவன் கடமைகளைச் செய்யும் போதும் கலங்குவதில்லை.

    59. உள்ளம் அமைதியுடையவன் படுத்தாலும், வந்தாலும், போனாலும், பகர்ந்தாலும், நுகர்ந்தாலும் சுகமாகவேயிருப்பான்.

    60. உலகம் போல விவரித்தாலும், தனதியல்பால் இன்னலற்றவனாக இருப்பவன் துன்பமற்று ஒளிர்பவனாக இருக்கிறான்.

    61. சாதாரணனுக்கு வினைத்தீர்வு கூட ஒரு வினையாக இருக்கிறது. தீரனுக்கு வினை கூட வினை நீக்கத்தின் பயனைத் தரும்.

    62. விஷயங்களிடம் வெறுப்பை அஞ்ஞானியிடம் காணலாம். உடலின் மீது அவாவற்றவனுக்கு ஆசையேது? வைராக்கியமேது?

    63. அஞ்ஞானியின் நோக்கு எப்போதும் நினைப்பு, மறப்புக்களில் அழுந்தியிருக்கும். சாதாரணனுடைய நோக்கோ விஷயங்களை நினைத்தும், நினைக்காத தன்மையுடையதாகும்.

    64. எந்த முயற்சியிலும் விருப்பமில்லாமல் குழந்தை போல இருக்கும் தூயவனாகிய மௌனி செயல்படும் போதும் பற்றடைவதில்லை.

    65. பார்த்தும், கேட்டும், பரிட்சித்தும், முகர்ந்தும், உண்டும், உள்ளத்தில் ஆசையற்றவனாக, நிலைமை எல்லாவற்றிலும் நடுநிலைமையாளனாக இருக்கும் ஆத்மஞானியே புண்ணியசாலி.

    66. வானம்போல என்றும் திரிபற்ற தீரனுக்கு உலகச் சுழலேது? தோற்ற மேது? அடைவேது? அதன் சாதனமேது?

    67. விஷயங்களை நீத்து வரையற்ற பரத்தில் இயற்கை நிலையுடையவன் தற்சுவை நிறைவுடையவனாகச் சிறப்படைவான்.

    68. இதுபற்றி பலவாறு உரைத்து என்ன பயன்? உண்மை உணர்ந்த பெரியவர்கள் போகத்தையோ, முக்தியையோ தேட மாட்டார்கள். எப்போதும் எதனிடமும் மகிழ்ச்சியடையவதில்லை.

    69. பெயரளவில் வெளித் தோன்றும் தத்துவம் முதலாக துவைத உலகைத் துறந்து தூய அறிவுடையவருக்கு கடமையொன்று எஞ்சியிருக்குமா?

    70. மயக்கத்தில் தோன்றிய இவையெல்லாம் ஒன்றுமில்லை என நிச்சயித்து குறியில்லாமல் சுடருகின்ற தூயவன் இயல்பாகவே அமைதியடைகிறான்.

    [தொடரும்]

    Share
  • படக்கவிதைப் போட்டி – 281

    படக்கவிதைப் போட்டி – 281

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (25.10.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share