எட்டுக் கோணல் பண்டிதன் – 13

0

தி. இரா. மீனா

             அத்தியாயம் பதினெட்டின் தொடர்ச்சி

41. தனக்குள் அமைதி அடைகிற தீரனுக்கு உண்மை ஒடுக்கம் என்றும் இயல்பாக இருக்கும். கட்டுப்பாடற்றவருக்கு அது இயல்பாகாது.

42. இருப்பை ஒருவன் நினைக்கிறான். மற்றொருவன் ஒன்றுமில்லையெனக் கருதுகிறான். இன்னொருவன் இரு பாவனைகளுமில்லாமல் கலக்கமின்றி இருக்கிறான்.

43. மதிகெட்டவர்கள் மயக்கத்தால் இரண்டில்லாத தூய ஆத்மாவை மனதால் உணராமல் செயல்படுவதால் ஆயுள் முழுவதும் அவர்களுக்கு அமைதியில்லை.

44. மனிதர்களின் புத்தி பிடிப்பற்றிருப்பதில்லை. முக்தனது புத்தி எக்காலத்திலும் சிறிதும் பிடிப்பில்லாமல் ஆசைகளற்று இருக்கும்.

45. மிரட்சியுடையவர் அடைக்கலம் தேடி, வாழ்வு வேண்டி குகையில் நுழைந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.

46. சம்ஸ்கார வாதனையற்ற சிங்கத்தைக் கண்டு யானைகள் ஒசையில் லாமல் ஒட்டமெடுக்கின்றன. ஓட முடியாவிட்டால் கெஞ்சிப் பணிகின்றன.

47. உள்ளம் பொருந்தியவன் சந்தேகமடைய மாட்டான். மோட்ச நூலைப் பேணிக் காக்க மாட்டான்.கண்டும், கேட்டும், தொட்டும், முகர்ந்தும், உண்டும் சுகமாக இருப்பான்.

48. பொருளின் லட்சணத்தைக் கேட்ட அளவில் புத்தி தெளிந்து மீண்டும் கலங்காதவன் ஆசாரம், அநாச்சாரம், உதாசீனம் முதலிய எதையும் காண மாட்டான்.

49. அவன் களங்கமில்லாதவனாக நல்லதோ கெட்டதோ எப்பொழுது எதைச் செய்ய நேருகிறதோ அப்பொழுது அதைச் செய்வான். அவன் செயல் குழந்தையினது போன்றது.

50. சுதந்திரத்தால் சுகம் அடையலாம். சுதந்திரத்தால் பரம் அடையலாம். சுதந்திரத்தால் விடுதலை அடையலாம். சுதந்திரத்தால் பரமபதம் அடைய லாம்.

51. ஆன்மாவாகிய தான் புரிபவனும், புசிப்பவனும் அல்லன் என்று ஒருவன் என்று உணர்கிறானோ அன்றே மனநினைவனைத்தும் அழிந்து போகிறது.

52. கட்டற்றதாக இருந்தாலும் தீரனுடைய இயல்பு நிலை அழகானது. உள்ளத்தில் ஆசை கொண்ட சாதாரணனது செய்கை அவனுக்கு அமைதியைத் தராது.

53. கற்பனை நீங்கி பந்தமில்லாத சுதந்திர மதியுடையவர்களான தீரர் உயர்ந்த நிலையிலுமிருப்பார். குகைகளிலும் இருப்பார்கள்.

54. அந்தணரையும், தேவதையையும், இடத்தையும், பெண்ணையும், அரசனையும், அன்பரையும் காண்பதும் வழிபடுவதும் தீரனுக்கு எந்தத் துன்பத்தையும் தராது.

55. பணியாளர், மக்கள், பெண்கள், பேரர், உறவினர் முதலியவர்கள் கேலி செய்து அவமதித்தாலும் யோகி சிறிதும் வருந்துவதில்லை.

56. அவன் மகிழ்ந்தாலும் மகிழ்ந்தவனில்லை; வருந்தினாலும் வருந்தியவனில்லை; அவனது விந்தையான நிலையை அவனைப் போன்றவர்களே அறிவார்கள்.

57. செய்தாக வேண்டுமென்பதே சம்சாரம். பூரண வடிவம் உடையவராக, வடிவமற்றவராக திரிபில்லாமலும், தாபமில்லாமலும் உள்ள ஞானிகள் கடமையைக் காணமாட்டார்கள்.

58. சாதாரணன் ஒன்றும் செய்யா விட்டாலும் குழப்பம் காரணமாக எல்லாவற்றையும் கண்டு கலக்கம் அடைவான். தேர்ந்தவன் கடமைகளைச் செய்யும் போதும் கலங்குவதில்லை.

59. உள்ளம் அமைதியுடையவன் படுத்தாலும், வந்தாலும், போனாலும், பகர்ந்தாலும், நுகர்ந்தாலும் சுகமாகவேயிருப்பான்.

60. உலகம் போல விவரித்தாலும், தனதியல்பால் இன்னலற்றவனாக இருப்பவன் துன்பமற்று ஒளிர்பவனாக இருக்கிறான்.

61. சாதாரணனுக்கு வினைத்தீர்வு கூட ஒரு வினையாக இருக்கிறது. தீரனுக்கு வினை கூட வினை நீக்கத்தின் பயனைத் தரும்.

62. விஷயங்களிடம் வெறுப்பை அஞ்ஞானியிடம் காணலாம். உடலின் மீது அவாவற்றவனுக்கு ஆசையேது? வைராக்கியமேது?

63. அஞ்ஞானியின் நோக்கு எப்போதும் நினைப்பு, மறப்புக்களில் அழுந்தியிருக்கும். சாதாரணனுடைய நோக்கோ விஷயங்களை நினைத்தும், நினைக்காத தன்மையுடையதாகும்.

64. எந்த முயற்சியிலும் விருப்பமில்லாமல் குழந்தை போல இருக்கும் தூயவனாகிய மௌனி செயல்படும் போதும் பற்றடைவதில்லை.

65. பார்த்தும், கேட்டும், பரிட்சித்தும், முகர்ந்தும், உண்டும், உள்ளத்தில் ஆசையற்றவனாக, நிலைமை எல்லாவற்றிலும் நடுநிலைமையாளனாக இருக்கும் ஆத்மஞானியே புண்ணியசாலி.

66. வானம்போல என்றும் திரிபற்ற தீரனுக்கு உலகச் சுழலேது? தோற்ற மேது? அடைவேது? அதன் சாதனமேது?

67. விஷயங்களை நீத்து வரையற்ற பரத்தில் இயற்கை நிலையுடையவன் தற்சுவை நிறைவுடையவனாகச் சிறப்படைவான்.

68. இதுபற்றி பலவாறு உரைத்து என்ன பயன்? உண்மை உணர்ந்த பெரியவர்கள் போகத்தையோ, முக்தியையோ தேட மாட்டார்கள். எப்போதும் எதனிடமும் மகிழ்ச்சியடையவதில்லை.

69. பெயரளவில் வெளித் தோன்றும் தத்துவம் முதலாக துவைத உலகைத் துறந்து தூய அறிவுடையவருக்கு கடமையொன்று எஞ்சியிருக்குமா?

70. மயக்கத்தில் தோன்றிய இவையெல்லாம் ஒன்றுமில்லை என நிச்சயித்து குறியில்லாமல் சுடருகின்ற தூயவன் இயல்பாகவே அமைதியடைகிறான்.

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *