அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (25.10.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி – 281

  1. தாயவளே துயவளே
    தனியாதா அன்பாலே
    தரணிதனில் உயிர் தழைக்க
    தன்னையே ஈந்தவளே தாயே

    உன்னில் இருந்து உயிர்த்தேன் அம்மா
    உன்கரம் பற்றியே உயர்ந்தேன் அம்மா
    உனக்கு இணை உலகில் நீயே அம்மா
    உனையன்றி தெய்வம் எனக்கேதம்மா

    கருத் தந்து உருத் தந்து உயிராக்கினாய்
    கருணையோடு எனை வளர்த்து உயர்வாக்கினாய்
    கரும்பாக உனை பிழிந்து என் வாழ்வை இனிப்பாக்கினாய்
    கருப்பான உன் கரத்தால் உழைத்தென்னை சிவப்பாக்கினாய்

    நிலவு நீ காட்டி சோறுட்டினாய்
    நிலத்தில் நடை பழக்கி வழிகாட்டினாய்
    நிழலாய் நீயிருந்து எனை மரமாக்கினாய்
    நிலைத்த உனை அன்பில் எனை குளிப்பாட்டினாய்

    விழி இரண்டின் ஒளியாளே
    வெளி எங்கும் அன்பு ஒளி பாய்ச்சினாய்
    மொழி அதிராமல் பேசியே என்றும் இன்பம்
    பொழிகின்ற மழை மேகமாக தாலாட்டினாய்

    ஈன்ற தாயே இனியவளே அம்மா
    ஈடில்லா உன் உழைப்பாளே
    ஈபிள் கோபுரம் போல் தலை நிமிர்ந்தேன்
    ஈந்த உன் கொடையால் இன்று உலகளந்தேன்

    யாழ். பாஸ்கரன்
    ஓலப்பாளையம்
    கரூர்- 639136
    9789739679
    basgee@gmail.com
    https://noyyal.blogspot.com

  2. கோபுரமாய்…

    அன்னை என்பவள் கண்முன் தெய்வம்
    அவளை வணங்கியே மண்ணில் உய்வோம்,
    முன்னே காணும் முதலாம் கடவுள்
    முறைப்படி பேணிடு தீபச் சுடராய்,
    உன்னை உயர்த்த தன்னுயிர் தருவாள்
    உயர்வில் அவளொரு கோபுர உருவே,
    பின்னர் அவளைத் தவிக்க விடாதே
    பிழையிது தந்திடும் உனக்கே இடரே…!

    செண்பக ஜெகதீசன்…

  3. கவலை நிறைந்த முகத்தோடு
    காலினை நீட்டி அமர்ந்தபடி
    கண்ணினை நிலம் காண இருப்பவளே
    உன் கதையைத் தான் சொல்லிவிடேன்

    கடற்கரையின் ஒரமது என்பதறிந்தே
    உன் மன அலையும் அதனூடே பொங்கியெழ
    சுருக்கங்கள் உடலெங்கும் ஓவியமாய்
    கருத்த நிற காரழகி நீ என்பதறிவேன்

    காற்றுக் கூட உன்னைத் தொடவில்லையா
    கரையடிக்கும் அலையதனை நீ உணரவில்லையா
    வாயைத் திறந்துப் பதில் சொன்னால் வாகாயிருக்கும்
    வாடிய மலராய் அமர்ந்திருந்தால்
    வாழ்வே கசக்கும்

    சுதா மாதவன்

  4. வளம் பெறும் வழி

    ஆணும் பெண்ணும்
    சரி நிகர் சமானம்
    அடையும் இலக்கில்
    அவரவர் உயரம்
    விடுதலை உணர்வு
    விகிதத்தில் இல்லை
    எட்டும் அறிவில்
    இளைத்தவர் இல்லை

    உள்ளத்தின் உள் நோக்கி
    உன் திறன் அறிந்தால்
    உச்சம் எட்டி உன்னதம் பெறலாம்
    அச்சம் தவிர்த்து
    அகிலத்தை வெல்லலாம்
    வெற்றுப் புகழ்ச்சியை
    ஒதுக்கி வைத்து
    உண்மை அறிவை
    உயர்த்தும் கல்வியை
    வளர்த்து வளம் பெறும் வழியறிவாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *