Blog

  • வாலிக்குச் சமர்ப்பணம்

    வாலிக்குச் சமர்ப்பணம்

    ஆ. கிஷோர்குமார்

    வாலி
    தமிழ்ப் பயிரை வாடாமல் காத்த வேலி…
    இவன் எழுத்துகள் தமிழ்க் கரும்பைச் சுவைப்பவர்களுக்குக் கூலி…
    திரையுலகு சூடிக்கொண்ட மாலி
    இலக்கிய மேதாவிலாசத்தின் சீலி..

    திருவரங்கத்தின் வித்து..
    திரையுலகத்தின் சொத்து…

    எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்கும்
    எனும் வரிகளால் தமிழினைத் தேர் வைத்துத் தோளில் சுமந்தவன்..

    காசுக்கு எழுதியபோதும் விருது கண்டவன்..
    தேசுக்கு எழுதியபோதும் விருது கண்டவன்..

    இவன் காதல் எழுத்துகள், படிப்பவரைப் புணர தூண்டின..
    பக்தி இலக்கியமோ, படைத்தவனை உணரத் தூண்டின…

    இருவிரல் இடுக்கில் பேனா கொண்டு
    இளமைத் தமிழை பிரசவித்தவன்…

    இந்த வாலிபக் கவிஞனுக்கு வயதான போதும்
    இவன் நெற்றியும் சுருங்கவில்லை
    வெற்றியும் சுருங்கவில்லை..

    எவனோ ஒருவன் எதிர்க்கேள்வி கேட்டானாம்
    வாலி என்ற பெயரிருக்க வால் எங்கே? என.
    கணத்தில் உரைத்தான் கவிஞனிவன்..
    வாலின்றி வாலியாக முடியாதா?
    காலின்றிக் கடிகாரம் ஓடாதா! என…

    எதிர்ப்பட்ட எதிர்ப்புகளை
    எதுகை மோனையால் தகர்த்தவன்…
    அசையும் சீரும் இவன் எழுத்துகளின்
    அசையாச் சொத்துகள்..

    புவனம் இருக்கும் வரை இவன்
    புகழ் இருக்கும்..

    வாலி! வாழி…..!

    Share
  • படக்கவிதைப் போட்டி – 282

    படக்கவிதைப் போட்டி – 282

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (01.11.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • பழகத் தெரிய வேணும் – 40

    பழகத் தெரிய வேணும் – 40

    நிர்மலா ராகவன்

    மனிதனானவன் வைரமாகலாம்

    இருக்கும் நிலையிலேயே இருந்தால், அது மகிழ்வை அளிக்கிறதோ, இல்லையோ, அதனால் ஒருவித பத்திரமான உணர்வு உண்டாகிவிடுகிறது. வேறு பல சௌகரியங்களையும் விட்டுக்கொடுத்தாகவேண்டும். அதனாலேயே, `எதற்காக மாறுவது?’ என்று பலரும் பொறுத்துப்போகிறார்கள்.

    கதை

    ஒரு முறை கப்பலில் போகும்போது அந்தத் தமிழரைச் சந்தித்தேன்.

    தன் பெற்றோரால் மனைவி ரொம்பக் கஷ்டப்படுகிறாள், எப்போதும் பயந்தே நடக்க வேண்டியிருக்கிறது, ஆனால் தனியே பிரிந்து போகவும் பயம் என்றெல்லாம் நான் கேட்காமலேயே தெரிவித்தார்.

    `இப்படிப் பண்ணியிருக்கலாமே’ என்று காலம் கடந்து வருந்துவது என்ன பயனைத் தரும்?

    சில வருடங்கள் கழித்து நான் அவரை மனைவியுடன் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். நான் முகமன் கூறியபோது, “நீங்கள் என்னை யாரோ என்று நினைத்துப் பேசுகிறீர்கள். நான் உங்களைப் பார்த்ததே இல்லையே!” என்றார்!

    தான் செய்த எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் கண்டனம் என்ற நிலையில் அவரது மனைவியின் உற்சாகம் வடிந்துபோக, தன் இயலாத்தனத்தை அவர்மேல் ஆத்திரம், சந்தேகம் என்று மாற்றியிருப்பாள் என்றுதான் நினைக்கத் தோன்றியது.

    மாறினால் மேலும் பல துன்பங்களை அனுபவிக்க நேருமோ என்ற பயத்தால் பொறுக்க முடியாத நிலையைச் சகித்துக்கொண்டு இருக்கிறார்கள் பலரும்.

    வளர்ச்சியால் துன்பம்தான்

    எவ்வித மாற்றமானாலும், அது எளிதாகக் கிடைப்பதில்லை. பதின்ம வயதில் உடல் வளரும்போது பொறுக்க முடியாத நோவெடுக்கும், இல்லையா? நம் மனநிலையை மாற்றிக்கொள்வதும் அப்படித்தான்.

    மேற்படிப்பு அல்லது உத்தியோக நிமித்தம் அயல்நாடு செல்பவர்கள் ஆரம்பத்தில் அதிர்ச்சிக்கு உள்ளாவது தவிர்க்க முடியாத ஒன்று. அப்போது மாறுவதைத் தவிர வேறு வழியில்லை.

    `நீங்க ரொம்ப மாறிட்டீங்க!’ என்று ஆச்சரியத்துடனோ, வருத்தத்துடனோ கூறுபவர் ஒன்று புரிந்துகொள்வதில்லை.

    வாழ்க்கையின் சுழலில் பல புதிய அனுபவங்கள் ஏற்படக்கூடும். அப்போது பிறரைப்பற்றி கொண்டிருந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டு, வித்தியாசமானவர்களையும் ஏற்றால்தான் முன்னேறமுடியும்.

    `ஐயே! இவர்கள் என்ன இப்படி இருக்கிறார்களே!’ என்று நினைத்தால், நம்மிலிருந்து மாறுபட்ட பிறரை நண்பர்களாக ஏற்க முடியாது.

    மனிதனும் வைரமும்

    “பட்டை தீட்டினால்தான் வைரம் ஜொலிக்கிறது. மனிதனும் பல இடர்களைக் கடந்தால்தான் வெற்றி பெற முடியும்” (சீனப் பழமொழி).

    முதுகலைப் பட்டப்படிப்புக்காக அமெரிக்கா போன பலருள் ஒருத்தி லீலா.

    தாய்நாட்டில் கிடைத்த சௌகரியங்களும் மதிப்பும் பிற இடங்களிலும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை விளைவித்தது. அங்குள்ள மொழி உச்சரிப்பு, உணவு, கலாசாரம் எல்லாமே புதிதாக இருக்க, கலவரம் உண்டாகியது.

    வெளிநாட்டுக்குப்போய் திரும்புகிறவர்கள் தாங்கள் பேசும் விதத்தையும் ஆடைகளையும் மாற்றிக்கொள்வதை வளர்ச்சி என்று காட்டிக்கொள்வதைப்போல் அவளால் இருக்க முடியவில்லை. அத்தகைய மாற்றம் அர்த்தமற்றது என்று தோன்றிப்போயிற்று.

    திரும்பிப்போவதும் நடக்காத காரியம். உபகாரச்சம்பளம் பெற்று, எத்தனை பேருடைய பொறாமைக்கு ஆளாகி, வந்திருக்கிறாள்!

    `நேரமில்லை என்று சொல்லாதே. தூக்கத்தைக் குறை,’ என்று பல்கலைக்கழக வழிகாட்டி கூற, இரண்டு மணி நேரமாகக் குறைந்தது உறங்கும் நேரம்.

    `எனக்கு ஏன் இத்தனை கஷ்டங்கள்?’ என்ற வருத்தம் அடிக்கடி எழ, `சுயபச்சாதாபம் கூடாது!’ என்று தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டாள் லீலா.

    அதன்பின், இசை, உபயோகமான விஷயங்களைக்கொண்ட புத்தகங்களைப் படிப்பது என்று தனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடத் தொடங்கினாள்.

    அவளைப்போல், பழகிப்போன எண்ணங்களையும், செயல்களையும் சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்பவரே வாழ்வில் வெற்றி பெற முடியும்.

    தமது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் துணிச்சல் வெகு சிலருக்குத்தான் அமைந்திருக்கிறது. அத்துணிச்சல் இல்லாதவர்களே பிறரிடம் ஆத்திரப்படுகிறார்கள்.

    அசையாது நிற்க அஞ்சு

    `நான் தவறே செய்யமாட்டேன்!’ என்று யாராவது சொன்னால் அவர்கள் கடவுள் இல்லை. புதிதாக எதையும் முயன்றிருக்கமாட்டார்கள். அவ்வாறு ஒரே இடத்தில் அசையாது நிற்கத்தான் அஞ்சவேண்டும்.

    போகும் வழியில், நம் மனதைக் காயப்படுத்தவென்றே சிலர் இருப்பார்கள். சிறிது காலம் வலிக்கும். எல்லாரையும், எப்போதும் மகிழ்வித்துக்கொண்டே இருக்க முடியாது என்று தெளிந்து, அவர்களைக் கடக்க வேண்டியதுதான்.

    சில சமயம், நாம் செய்தது நன்றாக இல்லை என்று ஒப்புக்கொள்வதற்கு மனோதிடம் வேண்டும். முன்னேற வேறு வழி?

    ஒரு கதை எழுதி அனுப்பிவிட்டு, அது ஏற்றுக்கொள்ளப்படவில்லையே என்று மனம் தளர்வதால் என்ன பயன்?

    என் கதை ஒன்று வெளிவந்ததும், அப்பத்திரிகை ஆசிரியரை ஒருவர் கேட்டிருந்தார்: “நீங்கள் பிரபலமானவர்களின் கதைகளைத்தான் பிரசுரிப்பீர்களா?”

    அதற்கான பதில்: “பிரபலமானவர்களும் ஒரு காலத்தில் ஆரம்ப எழுத்தாளர்களாகத்தான் இருந்திருப்பார்கள். அவர்களுடைய தளராத உழைப்பால் முன்னேறி இருக்கிறார்கள்”.

    `நான் பல வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன்,’ என்றாற்போல் ஒருவர் சிறந்த எழுத்தாளர் என்று ஆகிவிடுமா?

    முன்னேறிக்கொண்டே இருக்க அவர் என்னென்ன வழிகளைக் கடைப்பிடிக்கிறார் என்பது முக்கியம்.

    ஒரு காரியத்தைத் தொடங்கவே பயம். அல்லது, செய்துகொண்டிருக்கும்போதே, `இதை நல்லவிதமாகச் செய்து முடிப்பேனா!’ என்ற அவநம்பிக்கை. இதெல்லாம் பலவீனமானவர்களின் குணம்.

    எது பலம்?

    பலம் என்பது தேக பலம் அல்லது உரத்த குரல் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களே பிறரை வதைக்கிறார்கள். உண்மையில், அவர்கள் பயந்தவர்கள். பிறர் அவர்களுக்குப் பயப்படாது எதிர்த்து நின்றால், `பலசாலிகள்’ பயந்துவிடுவார்கள்.

    கதை

    “எனக்குத் தைரியமே கிடையாது. என் தாயால்தான் நான் இப்படி ஆகிவிட்டேன். நான் எது செய்தாலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பாள்!” என்று புலம்புவாள் மார்கரெட். நன்கு படித்து, உத்தியோகத்தில் அமர்ந்துவிட்ட பின்பும், கடந்தகாலத்திலேயே நிலைத்துவிட்டவள் இவள்.

    என்றோ நடந்ததையே எண்ணி, பிறர்மேல் கொண்ட ஆத்திரம் அடங்காமலேயே இருந்தால் அது அவர்களைப் பாதிப்பதில்லை, நம்மைத்தான் வருத்தும் என்பது மார்கரெட்டுக்குப் புரியவில்லை.

    அதன்பின், `தாயைப்போல் அதிகாரமாக நடப்பவர்கள்’ என்று அவள் கருதிய யாரையும் அவளால் ஏற்க முடியவில்லை. வலுச்சண்டை பிடிப்பாள்.

    கடந்தது கடந்ததாகவே இருக்கட்டுமே!

    எப்போதோ கிடைத்த வெற்றியால் பெருமிதமும், தோல்வியடையும்போது அயர்ச்சியும் அடைந்து, கடந்ததைப்பற்றியே எந்நேரமும் நினைப்பவர்கள் பலர்.

    மாறாக, `உபயோகமாக இன்னும் என்ன செய்யலாம்?’ என்று யோசிப்பவர்களே அடுத்தடுத்து வெற்றி பெறுகிறார்கள்.

    எந்த ஒரு வாழ்விலும் இடர்களோ, துயரமோ இல்லாது இருக்காது. அவர்கள் அதிலேயே மூழ்கிவிடுகிறார்களா, இல்லை, மீண்டு எழுகிறார்களா என்பதைப் பொறுத்துத்தான் வெற்றி- தோல்வி அடங்கியிருக்கிறது.

    கீழேயே கிடக்காது மீண்டும் எழும்போது, முன்பு இருந்ததைவிடச் சற்று மேலே சென்றிருப்போம்!

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 20 (பார்ப்பான்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 20 (பார்ப்பான்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    தொல்காப்பியம் பார்ப்பான் என்னும் பாத்திரம் கூற்று நிகழ்த்தக்  கூடிய இடங்களை வரையறுத்துக் கொடுத்துள்ளது. ஆனால் தொகை இலக்கியங்களில் பார்ப்பான் கூற்று நிகழ்த்தவில்லை. அகஇலக்கணம் துணைப்பாத்திரம் என்று வரையறுக்கும் பார்ப்பான்;  சிறுபாத்திரமாகவே நமக்குக் கிடைத்திருக்கும் தொகை இலக்கியத்தில் காணப்படுகிறான்.

    தொடர்புடைய பின்புலப்பாத்திரங்கள்

    தொகைநூல்களில் பார்ப்பனக் குறுமகன்,  வேளாப்பார்ப்பான், ஓதும் பார்ப்பார், தூதுசெல்லும் பார்ப்பான், பார்ப்பனமகளிர் எனப் பலர்  காட்சிப்  படுத்தப்படுகின்றனர். அனைவரும் பின்புலத்தில் இடம்பெறுகின்றனர்.  சிறுபாத்திரத்தகுதி பெறுபவர்  பார்ப்பனமகனும் முடமுது பார்ப்பானும்  மட்டுமே ஆவர்.

    வழிச்செல்வோன் ஆகிய பார்ப்பனமகன்

    தலைவனின் காதல் மிகுதியைப் புலப்படுத்த வழிப்போக்கனாகிய பார்ப்பனமகன் பாத்திரம் உதவுகிறது. அத்துடன் அந்தணர் மந்திரத்தைப் பற்றிக் கேள்வி கேட்கும் தொல்தமிழரின் மனப்போக்கும் தெரிகிறது.

    செம்பூ முருக்கின் நல்நார் களைந்து
    தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
    படிவ உண்டிப் பார்ப்பன மகனே
    எழுதாக் கற்பின் நின்சொல் உள்ளும்
    பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
    மருந்தும் உண்டோ மயலோ இதுவே“ (குறு.- 156)

    என்கிறான் தலைவன். பார்ப்பனமகனே என மும்முறை அழைத்து ‘நீ  போற்றும் எழுதப்படாத வேதத்தில் பிரிந்தவரைச் சேர்க்கும் மருந்தாகிய சொல்; அதாவது மந்திரம் ஏதாவது உள்ளதா? இது தான் மையலின் தன்மையா?’ எனக் கேட்பதாக அமைகிறது பாடல். உலகியலில் பார்ப்பனன் பதிலுரைக்கக் கூடியவன் எனினும்; நாடகவழக்கில் அவன் பேசவில்லை.

    குறுந்தொகையைத் தொகுத்தோரும் உரை எழுதியோரும் இவனைப் பாங்கன் என்கின்றனர்.  செம்பூ பூக்கும் முருக்கின் தண்டில் நாரைக் களைந்து எடுத்துக் கமண்டலத்தைத் தொங்க விட்டுக்; கையில் தண்டேந்தி  வரும் பார்ப்பனனைத் தலைவனின் தோழனாக; அதாவது அவனது வாழிடம் சார்ந்தவனாகக் கருத இடமில்லை. கொளுவும் உரையும் அவனைப் பாங்கன் எனக் கூறினும்; நீர்க்கமண்டலமும் தியானம் செய்யப் பயன்படும் தண்டும் கைக்கொண்டு செல்பவன் உள்ளூர்க்காரனாக இருக்க இயலாது; வழிப்போக்கனாகத் தான் இருக்க இயலும். அத்துடன் வேதமந்திரம் பற்றிய மென்மையான  நையாண்டியும் இப்பாடலில் இடம் பெற்றுள்ளது.

    குஷ்டரோகியான முடமுது பார்ப்பான்

    தலைவி தலைவனை இரவில் சந்திக்கக் காத்திருப்பதில் ஆபத்து மிகுதி என்று எடுத்துக் கூற முனையும் தோழி; அவன் சிறைப்புறமாக நின்றுகொண்டு இருந்தபோது; தலைவியிடம் பேசுகிறாள். நாடகக் காட்சியை வருணிப்பவள் போல முன்னர் நடந்ததை எடுத்துச் சொல்லும் நிகழ்ச்சி; ஒரு கிழட்டு நொண்டிப் பார்ப்பான் பற்றியது. அந்தக் காலத்துப் பாலியல் சீண்டல்.

    ஊர் உலகமெல்லாம் தூங்கிக் கொண்டிருந்த நள்ளிரவு. அழகிய துகிலைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டு தலைவன் குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்தாள் தோழி. அப்போது அங்கு வந்து சேர்ந்தான் மழித்த தலையுடன் குஷ்ட நோயால் காலும் கையும் குறைப்பட்ட வயோதிகப் பார்ப்பான். அவனை இன்னும் தெளிவாக அடையாளம் காட்ட முனைந்த தோழி ‘நீ கூடப் பலகாலும்  நம் சேரியை விட்டு எங்கும் போகாமல் ஒளித்துத் திரியும் அவனைப் பேணிப் புரக்கச் சொன்னாய் அல்லவா? அவனே தான்’ என்கிறாள். ‘இது மகளிர் வெளிப்போதரும் காலம் அல்லவே! நீர் யார்?’ என்று ஐயத்துடன் குனிந்து பார்த்துக் கேட்டவன் ‘இளம்பெண்ணே நீ தம்பலம் தின்கிறாயா?’ என்று வைக்கோலைக் கண்ட கிழட்டு எருது போலப் பக்கலில் இருந்து அகலாமல் நின்று; பாக்குப்பையைக் குலைத்து ‘எடுத்துக் கொள்’ என்றான். தோழியோ வாய்திறவாமல் நிற்க; ‘சிறுமியே உன்னை அகப்படுத்திக் கொண்டேன். மற்றும் பிசாசுகளுக்குள் ஒருவனாகிய என்னை நீ வருத்தினால்; இவ்வூரில் நீ பெறும் பலிப்பொருளைப் பெறாதபடி நானே எடுத்துக் கொள்வேன்’ என்று பலபடப் பேசி நின்றான். பார்ப்பான் மனதில்; தான் பிசாசோ என்ற ஐயம் எழுவதைப் புரிந்து கொண்ட தோழி ஒரு கைப்பிடி மண்ணை அள்ளி வீசினாள். பார்ப்பான் கதறிக் கொண்டு ஊரெல்லாம் கேட்கக் கூப்பாடு போட்டான். புலிக்கு விரித்த வலையில் நரி அகப்பட்டதைப் போலத் தலைவனுக்காகக் காத்திருந்த வேளையில் இப்படி வருத்தம் நேர்ந்தது என்று விலாவாரியாகக் கூறுவதன் மூலம் இரவுக்குறி வேண்டாம் என்கிறாள் தோழி. இங்கு பார்ப்பான் நேரில் இடம் பெறவில்லை. தோழி பேச்சில் இடம் பெறுகிறான்; அவ்வளவே.

    தூது செல்லும் பார்ப்பான்

    எத்தகைய பாதுகாப்பற்ற சூழலில் பார்ப்பார் தூது சென்றனர் என்பதை விளக்கிச் சொல்லும் பாடல் ஒன்று; பொருள்வேட்கை கொண்ட நெஞ்சை மறுத்து ஆற்றும் தலைவன் முன்பொரு முறை காட்டுவழியில் கண்ட அவலக்காட்சியை நினைவு கூர்வதாக அமைந்துள்ளது.

    உப்பு வணிகரது கழுதைக்கூட்டம் போல் காட்சி அளிக்கும் பாறைகள் மிகுந்து; வெண்மையான பரற்கற்கள் கண்கூச ஒளிவீசும் வெய்யில். கவர்த்த பாதை மயக்கத்தைக் கொடுக்கும் காடு. அவ்வழியே ஒரு ஏழைப்பார்ப்பான் வெள்ளிய  தூது ஓலையை மடித்து எடுத்துக்கொண்டு செல்கிறான். உண்ணாமையால் அவனது விலாவில் இருக்கும் எலும்புகள் எல்லாம் எண்ணும்படி உள்ளன. ஆனாலும் அவன் கையில் உள்ள பொருளில் பொன் இருந்தாலும் இருக்கும்; என்ற எண்ணத்தில் தம் கைப்படையால் உடன் கொன்று வீழ்த்திக்; குருதி படிந்த அம்பினை ஏந்தியவராய் ஆராய்கின்றனர் கொலைத்தொழில் வல்ல மழவர். அதன் பின்னர் உடுக்கவியலாக் கந்தையை உடுத்திருக்கும் அவனது வறுமையைப் பார்த்துத் தம் கையை நொடித்துக் கொண்டு சென்றனர்.

    “….. ……. ….. ……. ……. ……உமணர்
    கணநிரை அன்ன பல்காற் குறும்பொறைத்
    தூது ஒய்பார்ப்பான் மடிவெள்ஓலை
    படைஉடைக் கையர் வருதிற நோக்கி
    உண்ணா மருங்குல் இன்னோன் கையது
    பொன் ஆகுதலும் உண்டு எனக் கொன்னே
    தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்
    திறனில் சிதாஅர் வறுமை நோக்கிச்
    செங்கோல் அம்பினர் கைநொடியாப் பெயர” (அகம்.- 337)

    அத்தோடு அந்த அவலம் முடியவில்லை. உயிரைவிட்ட பார்ப்பானின் சடலத்திற்கு நேர்ந்த கதி வாசகர் நெஞ்சை உலுக்கும் மருட்கையைத் தோற்றுவிக்கிறது. நீள ஒழுகிய குருதியுடன் தொங்கிக் கிடந்த குடலைக் கடித்துக் கொண்டு ஆண் நரி ஒன்று கள்ளி நிழலில் கூக்குரலிட்ட்டது. இப்பாடல் காட்டுவழியின் ஏதத்தை விளக்க எழுதப்பட்டதெனினும்; அக்காலச் சமூகஅவலத்தைப் புனைந்துள்ளது. வாழ்வாதாரத்திற்காக வந்தேறிய பார்ப்பனரின் வறுமை நிலையை எடுத்தோதுகிறது. தூதைத் தொழிலாகக் கொண்ட பார்ப்பனர் எதிர்நோக்கிய கொடுமைகளின் எல்லை என்ன என்று புரிகிறது.

    பார்ப்பனக் குறுமகன்

    பெண் கேட்டு வருகிறான் தலைவன்; தோழிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. செய்தியைத் தலைவிக்கு உரைக்கிறாள். அவளது பேச்சு நுட்பமான பல செய்திகளைத் தாங்கி அமைகிறது.

    “அன்னாய் வாழி வேண்டு அன்னை நம்மூர்ப்
    பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
    குடுமித் தலைய மன்ற
    நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே” (ஐங்.- 202)

    முதலில் தலைவன் வந்த மகிழ்ச்சியைப் புலப்படுத்துகிறாள். அது குறிப்பிட்ட பொருளை நேரடியாகச் சொல்லாது; பொதுவான வாழ்த்தாக அமைகிறது. ஏனெனில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தலைவிக்குத் தோழி வாழ்த்துக் கூறினாலே; அது தலைவன் வரவைப் புரிய வைத்து விடும். அடுத்த செய்தி; தலைவன் தன் செல்வச் செழிப்பு வெளிப்படையாகத் தெரியும்படி வந்திருக்கிறான்; அதாவது அலங்கரித்த குதிரை பூட்டிய தேரில் வந்துள்ளான். தேரும் குதிரையும் அவர்கட்குப் புதிதில்லை எனினும்; குதிரையின் தலை அலங்காரம் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாய் இருந்தது. இதுநாள் வரை சோர்ந்திருந்த மனம் புத்துணர்ச்சி பெற்றதால் அக்குதிரையின் தலையில் சூட்டியிருந்த தலையாட்டம் அவளுக்கு அவ்வூர்ப் பார்ப்பனச் சிறுவரின் குடுமியை நினைவூட்டியது. இரண்டையும் ஒப்புமைப்படுத்தி உவமிக்கிறாள். பண்டு தமிழகத்தில் பார்ப்பனச்சிறுவரின் குடுமிக்கட்டு தனித்தன்மை பெற்று இருந்தமை இதனால்  புலப்படுகிறது.

    பார்ப்பன மகளிர்

    தன் பணிமுடிந்து மீண்டுவரும் தலைவன் வழியில் தேர்ப்பாகனோடு பேசிக்கொண்டு வருகிறான். செம்புலப் பின்னணியில் முல்லை பூத்த கார்காலத்து மாலை. ஊரை நெருங்கி ஆயிற்று. கதிரவன் மறைய; மேய்ச்சல் முடிந்து ஆடுகள்  கழுத்து மணிகள் ஒலிக்கத் திரும்பும் பொழுது. ‘மாலை வழிபாட்டிற்கெனத் தீமுறை செய்து ஓதும் கணவரைப் பிரியாதிருத்தலால்; பார்ப்பன மகளிர் விரிந்த முல்லைப்பூக்களைச் சூடி மகிழ்ந்து இருப்பர். தலைவியோ என்னைப் பிரிந்து இருப்பதால்; வருத்தத்தோடு  நானில்லாத மனையை நோக்கி இருப்பாள். விரைந்து தேரைச் செலுத்துவாயாக’ என்கிறான்.

    “கானமுல்லைக் கயவாய் அலரி
    பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அயர”த் (நற்.- 321)

    தனித்திருக்கும் துன்பத்தைத் தாங்கித் தலைவி தவித்து இருப்பாள் எனக் காலப்பின்புலத்தையும் இடப்பின்புலத்தையும் சிறக்க எடுத்துக் காட்டப் பார்ப்பன மகளிர் பயன்பட்டுள்ளனர். கவிச்சுவை   கூட்டப் பார்ப்பன மகளிர் நிலையோடு தலைவியின் நிலை முரண்படுத்திக் காட்டப்படுகிறது.

    ஓதும் பார்ப்பார்

    புறத்தொழுகிய தலைவன் திரும்பியபோது  தலைவி எப்படி ஆற்றி இருந்தாள் எனக் கூறும் தோழி;

    “பகைவர் புல்லார்க; பார்ப்பார்  ஓதுக
    என வேட்டோளே யாயே” (ஐங்.- 4)

    என்கிறாள். தலைவியின் சமூகமுன்னேற்றச் சிந்தனை அக்கால அரசியல் நிலையைத் தாங்கி நிற்கிறது. திணைமாந்தர் பிரிவைச் சேர்ந்த ஊரனின் மனைவியாகிய அவள் ‘பகைவர் புன்செய்ப் பயனை உண்ணட்டும்’ என்று விரும்புவது; நெல்வேளாண்மை செய்த வேளிரைச் சார்ந்த அவளது வாழ்வைப் புலப்படுத்துகிறது. ஊரோடு சேர்த்து அழைக்கப்படும் கிழார்கள் வேளிருக்காக நெல்வேளாண்மை செய்தனர் என்றும் தெளிவாகிறது. எனவே தான் பகைவர்கள் புன்செய்ப் பயனை உண்ணட்டும் என்கிறாள். புன்செய் உணவைக் காட்டிலும் நெல் உயர்ந்ததாகக் கருதப்பட்ட நாகரிக மாற்றமும் இந்தப் பாடலடியில் பொதிந்துள்ளது.  ‘பார்ப்பார் ஓதுக’ என்ற  அவளது விருப்பம் வைதீகம் அக்காலத் தமிழ்ச் சமுதாயத்தில் மேன்மையானது என ஏற்றுக்கொள்ளப்  பட்டமைக்கு உரிய சான்றாகிறது.

    வேளாப் பார்ப்பான்

    வேள்வி தவிர்ந்த பிற தொழில் செய்யும் பார்ப்பாரே வேளாப் பார்ப்பார் ஆவர்.

    “வேளாப் பார்ப்பார் வாளரம் துமித்த
    வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன
    தளைபிணி அவிழாச் சுரிமுகப் பகன்றை” (அகம்.- 24)

    என்ற பாடலடிகளில் பகன்றைப் பூக்களின் தோற்றத்திற்கு வளைகள் அறுத்து மீந்த சங்கின் தலைப்பகுதி உவமையாக அமைகிறது. அச்சங்கை அறுத்தவர் வேளாப் பார்ப்பார் ஆவர். சங்கினை அறுத்து மங்கல வளை செய்யும் தொழிலில் பார்ப்பார் ஈடுபட்டு இருந்தமை இப்பாடலடி மூலம் வெளிப்படுகிறது.

    “இலங்கு வளை  இருஞ்சேரி” (மது.- 136)

    பற்றிப் பிற இலக்கியங்களும் பேசுவதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. பார்ப்பார் கூடி வாழ்ந்த சேரி இருந்ததா என்பது தனி  ஆய்விற்கு உரியதாகிறது.

    முடிவுரை

    அகஇலக்கணம் துணைப்பாத்திரம் என்று வரையறுக்கும் பார்ப்பான்;  சிறுபாத்திரமாகவே நமக்குக் கிடைத்திருக்கும் தொகை இலக்கியத்தில் காணப்படுகிறான். தொகைநூல்களில் பார்ப்பனக் குறுமகன், வேளாப்பார்ப்பான், ஓதும் பார்ப்பார், தூதுசெல்லும் பார்ப்பான், பார்ப்பனமகளிர் எனப் பலர்  காட்சிப்  படுத்தப்படுகின்றனர். தோழி பேச்சில் இடம்பெறும் முதுபார்ப்பானும் தலைவன் பேச்சில் இடம்பெறும் பார்ப்பன இளைஞனும் சிறுபாத்திரம் ஆகின்றனர்.

    காலப்பின்புலத்தையும் இடப்பின்புலத்தையும் சிறக்க எடுத்துக் காட்டப் பார்ப்பன மகளிர் பயன்பட்டுள்ளனர். கவிச்சுவை கூட்டப் பார்ப்பன மகளிர் நிலையோடு தலைவியின் நிலை முரண்படுத்திக் காட்டப்படுகிறது.

    வைதீகம் தொகைநூற்காலத் தமிழ்ச்சமுதாயத்தில் மேன்மையானது என ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தது. வாழ்வாதாரத்திற்காக வந்தேறிய பார்ப்பனரின் வறுமை நிலை; தூதைத் தொழிலாகக் கொண்ட பார்ப்பனர் எதிர்நோக்கிய கொடுமைகளின் சித்தரிப்பில் புரிகிறது. பண்டு தமிழகத்தில் பார்ப்பனச்சிறுவரின் குடுமிக்கட்டு தனித்தன்மை பெற்று இருந்தது. சங்கினை அறுத்து மங்கல வளை செய்யும் தொழிலில் வேளாப்பார்ப்பார் ஈடுபட்டு இருந்தனர். பார்ப்பார் கூடி வாழ்ந்த சேரி இருந்ததா என்பது தனி  ஆய்விற்கு உரியதாகிறது.

    ஊரோடு சேர்த்து அழைக்கப்படும் கிழார்கள் வேளிருக்காக நெல்வேளாண்மை செய்தனர். புன்செய் உணவைக் காட்டிலும் நெல் உயர்ந்ததாகக் கருதப்பட்ட நாகரிக மாற்றம் தொகைநூற் காலத்தில் ஏற்பட்டு இருந்தது.

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 14

    எட்டுக் கோணல் பண்டிதன் – 14

    தி. இரா. மீனா

                 அத்தியாயம் பதினெட்டின் தொடர்ச்சி

    71. ஒளி வடிவமாகக் காண்கின்ற பொருளேதும் காணாதவனுக்கு விதியேது, விரக்தியேது, துறவேது, அடக்கமேது?

    72. எல்லையில்லாத பொருளாகச், சுடர் விடுபவனாக படைப்பையே காணாதவனுக்குக் கட்டுப்பாடேது விடுதலையேது, சுகமேது, துக்கமேது ?

    73. அறிவு மட்டுமே தோன்றும் படைப்பின் மாயை பலவாக உள்ளது. இதையுணர்ந்த ஞானி நான், எனது என்றில்லாமல், ஆசைகளற்று இருப்பான்.

    74. அழிவும், தாபமும் அற்று தன்னையே காண்கின்ற  மௌனிக்கு அறிவேது உலகமேது,உடலேது, நான் எனது என்பதேது?

    75. மனதை அடக்கும் தன்மையை அஞ்ஞானி கைவிட்டால் அக்கணமே அவன் தவறுகள் செய்து வீண் வார்த்தைகள் பேச நேரும்.

    76. சாதாரணன் உண்மைப் பொருளைக் கேள்விப்பட்டாலும் மடமை ஒழிவ தில்லை; முயற்சியால் வெளித் தோற்றத்தில் மாறுபாடில்லாதவன் போலவும், உள்ளே சபலமானவனாகவும் இருப்பான்.

    77. ஞானத்தால் செயல் நீங்கியவன், உலக நோக்கில் செயல்கள் புரிந்தாலும் எதையும் சொல்லவோ செய்யவோ அவனுக்கு அவசியம் ஏற்படுவதில்லை.

    78. எப்போதும் விகாரமில்லாமல், தாபமில்லாமல் வாழும் தீரனுக்கு இருளேது, ஒளியேது, சிறிதேனும் அழிவேது?

    79. இவன் தன்மை இது என்று சொல்ல முடியாத உயர்வான யோகிக்கு தீரமேது, விவேகமேது, தாபமின்மை தானேது?

    80. விண்ணுலகமில்லை, நரகமில்லை, ஜீவன் முக்தியில்லை.மிகப் பேசு வதேன்? யோக  நோக்கில் எதுவுமேயில்லை.

    81. தீரனது குளிர்ச்சியான சித்தம் அம்ருதம் பெருகுவதாகும். அவன் எதையும் விரும்ப மாட்டான்; அடையவில்லையே என்றும் வருந்த மாட்டான்.

    82. ஆசையில்லாதவன்  அமைதியுள்ளவனைப் புகழ மாட்டான்; தீயவனை இகழவும் மாட்டான். இன்ப, துன்பங்களில் சமனாய், செய்தற்குரிய எதையும் காணமாட்டான்.

    83. தீரன் உலகியலை வெறுக்க மாட்டான்; ஆத்மாவைக் காணவும் விரும்ப மாட்டான். மகிழ்தல், சினமடைதல் ஆகிய எதுவுமற்றவன். அவன் இறந்த வனுமில்லை, பிழைத்திருப்பவனுமில்லை.

    84. ஞானி மக்கள் வீடு முதலியவற்றில் நட்பற்றவனாக, விஷயங்களில் ஆசையற்றவனாக தனது உடலில் கவனமற்றவனாக எதையும் விரும்பாதவனாக இருப்பான்.

    85. இருப்பதைக் கொண்டு பிழைப்பவனும், நாடெங்கும் யதேச்சையாக  நடப்பவனும், அஸ்தமித்த இடத்தில் படுப்பவனாகிய  தீரனுக்கு எங்கும்  சந்தோஷமே.

    86. பூமியில் இளைப்பாறி, உலகியலனைத்தையும் மறந்தவனுக்கு உடல் விழுந்தாலும், எழுந்தாலும் அதுபற்றிக் கவலையில்லை.

    87. ஒன்றுமில்லாதவனாக, இரட்டையற்றவனாக, சந்தேகம் நீங்கியவனாக, எதிலும் ஆசையில்லாதவனாக தானாகத் தனித்து மகிழ்ச்சி அடைபவன் ஞானி.

    88. கர்வமின்றி,  மண்ணும், கல்லும், பொன்னும் சமமாகக் கருதும் ஆசை யற்றவனாக ஞானி விளங்குவான்.

    89. எதிலுமே விருப்பமில்லாதவனுக்கு மனதில் வருத்தமிருக்காது. விடு தலையுடன் நிறைவாக வாழ்கின்றவருக்கு யாரை நிகராகச் சொல்ல முடியும்?

    90. அறிந்தும் அறியாதவன், பார்த்தும் பார்க்காதவன், பேசியும் பேசாதவன் — ஞானியைத் தவிர வேறு யார்?

    91. பிச்சைக்காரனானாலும் அரசனானானாலும் ஆசையின்றி, நல்லது கெட்டது என்னும் எண்ணமற்றவனே சிறந்தவன்.

    92. கள்ளமிலாமல் நேர்மையாக வாழ்கின்ற யோகிக்குச் சுதந்திரமேது, ஒடுக்கமேது, தத்துவ நிச்சயம் தானேது ?

    93. தன்னுள்ளே இளைப்பாறி, நிறைவடைந்து, ஆசைகளற்று, துன்பமற்றவன உள்ளே அனுபவிக்குமதை எப்படி ஒருவருக்குச் சொல்ல முடியும்?

    94. தீரன் தூக்கத்திலும் , கனவிலும், விழிப்பிலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறான்.

    95. ஞானி நினைவுற்றாலும் நினைவற்றவன்; புலன்களோடு செயல் பட்டாலும் புலனற்றவன்; புத்திசாலியானாலும் புத்தியற்றவன்; அகந்தையோடிருந் தாலும் அகந்தையற்றவன்.

    96. அவன் சுகியிமில்லை; துக்கியுமில்லை; பற்றவற்றவனுமில்லை; பற்றுள்ளவனுமல்ல; எதுவுமாகாதவன்.

    97. தீரன் குழப்பத்தில் குழம்ப மாட்டான்; சமாதியில் ஒடுங்க மாட்டான்; ஜடத் தன்மையிலும் ஜடமாக மாட்டான். மேதமை மிகுந்தாலும் பண்டித னாக மாட்டான்.

    98. உள்ளபடி தன்னிலை நின்ற முக்தன் செய்ததிலிருந்தும், செய்ய வேண்டி யதிலிருந்தும் விடுபட மாட்டான். ஆசைகளற்று எங்கும் சமனாகிய நிலையிலிருப்பான். அவன் செய்யாததையோ, செய்ததையோ நினைக்க மாட்டான்.

    99. வணங்கினால் மகிழ்வதும், வைதால் கோபமும் அடைய மாட்டான். சாவு கண்டு பதற மாட்டான்; வாழ்விலும் களிப்படைய மாட்டான்.

    100. புத்தி அமைதியுடையவன்  ஜனக்கூட்டத்திற்கோ, காட்டிற்கோ ஓட் மாட்டான். எங்கும் சமமாக உள்ளபடியே இருப்பான்.

    [பதினெட்டாம் அத்தியாயம் நூறு சுலோகங்களைக் கொண்டு மிகப் பெரியதாக அமைந்ததாகும்.]

    [தொடரும்]

    Share
  • படக்கவிதைப் போட்டி 281இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 281இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    சிந்தனையில் ஆழ்ந்தபடி எதையோ வெறித்து நோக்கிக் கொண்டிருக்கும் பெண்மணியின் சிற்பத்தை பாரீஸ் சென்று அற்புதமாய்ப் படம்பிடித்து வந்துள்ளார் திரு. நித்தி ஆனந்த். வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து இப்படத்தைத் தேர்வுசெய்து வழங்கியிருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன்.

    ”மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்றார் கவிமணி. ஆனால், மாதவம் செய்து பிறந்த அந்த மங்கையர்க்கு இந்தச் சமூகம் இழைக்கும் இன்னல்களும் இடும்பைகளும் கொஞ்சமில்லை. பெண்களின் நிலை இவ்வாறு இருப்பதற்குத் தீர்வென்ன என்றுதான் இந்தப் பெண்மணியும் ஆழ்ந்து சிந்திக்கின்றாரோ?

    ஒன்றைமட்டும் அழுத்தமாய்ச் சொல்லமுடியும்…”பெண்களைப் போற்றும் நாடும் வீடும் சிறப்பது திண்ணம்!”

    இனி, இந்தச் சிற்பமங்கை குறித்து நம் கவிஞர்களின் கருத்து என்ன என்பதை அறிந்துவருவோம்!

    *****

    ”நம் கண்முன் இருக்கும் தெய்வமாம் அன்னையை வணங்கி மண்ணில் உய்வோம்” என்ற நல்வழியைக் கவிதையில் சொல்லியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கோபுரமாய்…

    அன்னை என்பவள் கண்முன் தெய்வம்
    அவளை வணங்கியே மண்ணில் உய்வோம்,
    முன்னே காணும் முதலாம் கடவுள்
    முறைப்படி பேணிடு தீபச் சுடராய்,
    உன்னை உயர்த்த தன்னுயிர் தருவாள்
    உயர்வில் அவளொரு கோபுர உருவே,
    பின்னர் அவளைத் தவிக்க விடாதே
    பிழையிது தந்திடும் உனக்கே இடரே…!

    *****

    ”காரழகியே! வாடிய மலராய் அமர்ந்திராமல் வாயைத் திறந்து உன் கதையைச் சொல்லிவிடு!” என்று கவலையாய் அமர்ந்திருக்கும் காரிகையை அக்கறையோடு விசாரிக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    கவலை நிறைந்த முகத்தோடு
    காலினை நீட்டி அமர்ந்தபடி
    கண்ணினை நிலம் காண இருப்பவளே
    உன் கதையைத் தான் சொல்லிவிடேன்?

    கடற்கரையின் ஓரமது என்பதறிந்தே
    உன் மன அலையும் அதனூடே பொங்கியெழச்
    சுருக்கங்கள் உடலெங்கும் ஓவியமாய்க்
    கருத்த நிறக் காரழகி நீ என்பதறிவேன்

    காற்று கூட உன்னைத் தொடவில்லையா?
    கரையடிக்கும் அலையதனை நீ உணரவில்லையா?
    வாயைத் திறந்துப் பதில் சொன்னால் வாகாயிருக்கும்
    வாடிய மலராய் அமர்ந்திருந்தால்
    வாழ்வே கசக்கும்!

    *****

    ”ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்! உள்ளத்தின் உள்நோக்கி உன்திறன் அறிந்தால் உச்சம் எட்டி உன்னதம் பெறலாம்!” என்று இம் மங்கைக்கு ஊக்கமூட்டுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    வளம் பெறும் வழி

    ஆணும் பெண்ணும்
    சரி நிகர் சமானம்
    அடையும் இலக்கில்
    அவரவர் உயரம்
    விடுதலை உணர்வு
    விகிதத்தில் இல்லை
    எட்டும் அறிவில்
    இளைத்தவர் இல்லை!

    உள்ளத்தின் உள் நோக்கி
    உன் திறன் அறிந்தால்
    உச்சம் எட்டி உன்னதம் பெறலாம்!
    அச்சம் தவிர்த்து
    அகிலத்தை வெல்லலாம்
    வெற்றுப் புகழ்ச்சியை
    ஒதுக்கி வைத்து
    உண்மை அறிவை
    உயர்த்தும் கல்வியை
    வளர்த்து வளம்பெறும் வழியறிவாய்!

    சிற்பப் பெண்ணுக்குச் சிந்தனையைத் தூண்டும் சிறந்த கவிதைகளைப் படையலிட்டிருக்கும் நம் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பது…

    தாயவளே தூயவளே!
    தணியாத அன்பாலே
    தரணிதனில் உயிர் தழைக்கத்
    தன்னையே ஈந்தவளே தாயே!

    உன்னில் இருந்து உயிர்த்தேன் அம்மா!
    உன்கரம் பற்றியே உயர்ந்தேன் அம்மா!
    உனக்கு இணை உலகில் நீயே அம்மா!
    உனையன்றி தெய்வம் எனக்கேதம்மா!

    கருத் தந்து உருத் தந்து உயிராக்கினாய்!
    கருணையோடு எனை வளர்த்து உயர்வாக்கினாய்!
    கரும்பாக உனைப்பிழிந்து என் வாழ்வை இனிப்பாக்கினாய்!
    கருப்பான உன் கரத்தால் உழைத்தென்னைச் சிவப்பாக்கினாய்!

    நிலவு நீ காட்டிச் சோறூட்டினாய்!
    நிலத்தில் நடைபழக்கி வழிகாட்டினாய்!
    நிழலாய் நீயிருந்து எனை மரமாக்கினாய்!
    நிலைத்த உன்அன்பில் எனைக் குளிப்பாட்டினாய்!

    விழி இரண்டின் ஒளியாலே
    வெளிஎங்கும் அன்பு ஒளி பாய்ச்சினாய்!
    மொழி அதிராமல் பேசியே என்றும் இன்பம்
    பொழிகின்ற மழை மேகமாகத் தாலாட்டினாய்!

    ஈன்ற தாயே இனியவளே அம்மா!
    ஈடில்லா உன் உழைப்பாலே
    ஈபிள் கோபுரம் போல் தலைநிமிர்ந்தேன்!
    ஈந்த உன் கொடையால் இன்று உலகளந்தேன்!

    ”கருத் தந்து உருத் தந்து உயிராக்கினாய்; கருணையோடு எனைவளர்த்து உயர்வாக்கினாய்; கரும்பாக உனைப்பிழிந்து என் வாழ்வை இனிப்பாக்கினாய்; ஈடில்லா உன் உழைப்பாலே ஈபிள் கோபுரம்போல் நான் தலைநிமிர்ந்தேன்!” என்று அன்னையின் உழைப்பை, கைம்மாறு கருதாத அவள் ஈகத்தை எளிய வரிகளில் உணர்வுபூர்வமாய் விளக்கியிருக்கும் திரு. யாழ். பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

     

    Share
  • இங்கிலாந்தில் இலையுதிர்காலம்

    இங்கிலாந்தில் இலையுதிர்காலம்

    அண்ணாகண்ணன்

    இங்கிலாந்தில் வசிக்கும் நண்பர் சக்தி சக்திதாசன், என் வேண்டுகோளை ஏற்று, இங்கிலாந்தின் இலையுதிர்காலக் காட்சிகளை நம் அலைவரிசைக்காகப் படம் எடுத்து அனுப்பியுள்ளார். அவருடைய இனிய வர்ணனை, நாம் அதை நேரில் காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இருந்த இடத்திலிருந்தே இங்கிலாந்தின் வனப்பைக் காண்போம், வாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இந்து சமய அறநிலையத்துறையின் வலைத்தளத்தில் Church என்ற சொல் உள்ளதா?

    இந்து சமய அறநிலையத்துறையின் வலைத்தளத்தில் Church என்ற சொல் உள்ளதா?

    இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் முத்தாரம்மன் கோவில், மாரியம்மன் கோவில் ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பாக Mutharamman Church, Mariamman Church என வருகின்றது. இது மதமாற்ற முயற்சி, இந்து சமய அடையாளங்களை அபகரிக்கும் முயற்சி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் உண்மைத் தன்மை என்ன என்பதை இந்தப் பதிவில் சான்றுகளுடன் பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மீள்பயன்பாடு – சுதா மாதவன் குறிப்புகள்

    மீள்பயன்பாடு – சுதா மாதவன் குறிப்புகள்

    இதோ தீபாவளி நெருங்கிவிட்டது. கம்பி மத்தாப்பைக் கொளுத்திய பிறகு அந்தக் கம்பியைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா? உங்கள் எரிவாயு உருளையை (சிலிண்டரை) என்றைக்குப் பயன்படுத்தத் தொடங்கினீர்கள்? அது எவ்வளவு நாளைக்கு வருகிறது என்று உங்களால் துல்லியமாகச் சொல்ல முடியுமா? இன்னும் பல பயனுள்ள குறிப்புகளை நமக்கு வழங்குகிறார், சுதா மாதவன்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சி.சு.செல்லப்பா என்னும் விமர்சன ஆளுமை

    சி.சு.செல்லப்பா என்னும் விமர்சன ஆளுமை

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
    ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.

    தமிழில் நவீன இலக்கியம் நிலை பெற வேண்டும் என்று போராடிய இலக்கிய ஆளுமைகளில் சி.சு.செவும் ஒருவர். இவர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்புகள் என்று தீவிரமாகச் செயல்பட்ட காந்தியவாதி. விமர்சனம் வளர வேண்டும் என்ற எண்ணம் சி.சு.செ மனதில் ஆழப் பதிந்துவிட்டது. இதற்குக் காரணம் “இலக்கியத் தரம் என்று ஒன்று இருக்கிறது; அதற்கான குணங்கள் வேறு. வாசகப் பெருக்கம் அதற்கு உதவாது; வியாபாரத்துக்கு உதவலாம் “என்று அன்றைய தமிழ் எழுத்தில் ஒரு புதிய விவாதத்தைத் தொடங்கி வைத்தார் க.நா.சு.

    இது ஒரு தொடக்கமே. சொல்ல வேண்டியதைச் சொல்லியாச்சு என்று க.நா.சு விட்டுவிடவில்லை. தொடர்ந்து சுதேசமித்திரனில் இடம் கிடைத்தவரை எழுதி தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தியதேயாகும்.

    செல்லப்பாவும் விமர்சன வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவர்கள் எழுத்தைக் கண்டனம் செய்வோர் எண்ணிக்கையில் பிராபல்யத்தில் அதிகம் என்பதாலும் இது ஒரு இயக்கமாகத் தொடர்ந்ததாலும் தமிழில் இந்தப் புதிய பார்வை வேரூன்றியது. சுதேசமித்திரன் கிளப்பிவிட்ட சர்ச்சை அங்கு தொடராவிட்டாலும் ‘சரஸ்வதி’ பத்திரிகை அவருக்கு இடமளித்தது.

    பிறகு விமர்சனம் சார்பு இல்லாமல் வெளிவர வேண்டும் என்ற எண்ணத்தில் சி.சு.செ எழுத்தைத் தொடங்கினார். பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானார். இவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இதனை, “அதைத் தொடர்ந்து 1959-இல் செல்லப்பா இனி மற்ற பத்திரிகைகளை நம்பிப் பயனில்லை என்று  இதற்கென ‘எழுத்து’ என ஒரு தனி பத்திரிகையை வெளிக்கொணர்ந்தார். செல்லப்பாவே பின்னர் இரண்டு மூன்று இடங்களில் சொன்னது போல, இலக்கியத் தரம் என்ற ஒன்றை விமர்சனம் இல்லாது ஸ்தாபித்துவிடமுடியாது, தரமற்றது தானே அழியும், தரமானது என்றோ ஒரு நாள் தன்னைத் தானே ஸ்தாபித்துக்கொள்ளும், கால வெள்ளம் இதையெல்லாம் சரிசெய்துவிடும் என்று நம்பி இருப்பது சரியில்லை என்று சொல்லிச் சொல்லி முதலில் இதில் நம்பிக்கையில்லாத செல்லப்பாவையும் விமரிசனத்தில் தீவிரமாக ஈடுபடச் செய்தது க.நா.சு. குளவி கொட்டக் கொட்ட செல்லப்பாவும் குளவியானார்” என்று வெங்கட் சாமிநாதன் கூறியுள்ளார். மேலும்

    க.நா.சு.வும் ‘இலக்கிய வட்டம்’ என்று ஒரு தனி பத்திரிகை தொடங்கினார். ‘சரஸ்வதி’பத்திரிகையில் தொடங்கியது எழுத்திலும் இலக்கிய வட்டத்திலும் தொடர்ந்தது. மிக ஆச்சரியமும் மகிழ்வும் தரும் ஒரு விளைவு, அன்று வரை வெளித்தெரியாத, எழுதுவதற்கு வாய்ப்பில்லாத, ஒரு புதிய தலைமுறை, புதிய எழுச்சியுடன், பார்வையுடன் எழுந்தது. தமிழ் எழுத்தில், கவிதை, விமர்சனம்,, நாவல், சிறுகதை என பல இலக்கிய வடிவங்களிலும் ஒரு புதிய தலைமுறை, பெரும் கூட்டமாக என்றுதான் சொல்ல வேண்டும், தெரிய வந்தனர். க.நா.சுவும் அவரைத் தொடர்ந்து சி.சு.செல்லப்பாவும் பின்னர் அவர்களைத் தொடர்ந்து இன்னும் பலரும் இப்புதிய குரலை எழுப்பாதிருந்தால், இது சாத்தியப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான். ஒரு சிறு வட்டத்துக்குள்ளாவது விமர்சனம் என்று தமிழுக்கு பழக்கமில்லாத ஒரு புதுத் துறை வேர்கொண்டது. அதன் முதல் விதை க.நா.சு விதைத்ததுதான். அந்த முதல் நாற்றங்காலுக்குச்  சொந்தக் காரர்கள், முதன்மையாக க.நா.சு.வும் சி.சு.செல்லாப்பாவும் தான். தங்கள் படைப்பு ஈடுபாட்டைச் சற்று ஒதுக்கி, சக எழுத்தாளர்களின் பகையையும் பொருட்படுத்தாது, விமர்சனத்தில் ஈடுபட்டது,“நமக்கு ஏன் வம்பு?” என்னும் பாரம்பரியத் தமிழ் மரபார்ந்த சிந்தனைக்கு எதிரான செயல் இது. எனக்குத் தெரிந்து இரண்டாயிரம் வருஷ நீட்சி கொண்ட ஒரு மரபுக்கு எதிரான செயல் இது என்று வெ.சா கூறினார்.

    “அந்த இதழின் (எழுத்து) வழியாக செல்லப்பா நவீனத் தமிழ் இலக்கியத்திற்காக எவ்வளவு தூரம் ஓடியோடி உழைத்திருக்கிறார். எவ்வளவு கனவு கண்டிருக்கிறார். எத்தனை எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறார் என்ற உண்மை துல்லியமாகப் புலப்பட்டது. தன் விருப்பத்தின் வழியே மட்டுமே அவர் பயணம் செய்திருக்கிறார். தமிழ் இலக்கியத்தைச் சமகால உலக இலக்கியத்திற்குச் சமமானதாக உருமாற்ற வேண்டும் என்ற வேட்கை அவருக்குள் தீவிரமாக இருந்திருக்கிறது.

    குறிப்பாகத் தமிழ் விமர்சனத் துறையை ஆங்கில இலக்கியத்தின் நவீன விமர்சனத் துறைக்கு நிகரானதாக உருவாக்கவேண்டும் என்பதில் கூடுதலாகவே அக்கறை கொண்டிருக்கிறார். அதே வேளையில் தனது கருத்துகளோடு உடன்படாத பல முக்கியப் படைப்புகளையும் அவர் பிரசுரம் செய்திருக்கிறார்” என்று எஸ்.ராமகிருஷ்ணனும் எடுத்துக் கூறியுள்ளார்.

    எழுத்து பத்திரிகை மூலம் பல புதியவர்கள் எழுத வந்தனர். அதில் நானும் ஒருவன் என்று வெ.சா கூறியுள்ளார். “செல்லப்பா தான் என்னை எழுத்துக்கும் ‘எழுத்து’ பத்திரிகைக்கும் இழுத்து வந்தவர் என்று சொல்ல வேண்டும். முதலில் எனக்குத் தெரியவந்த அதிகம் பல பத்திரிகைகளிலும் நான் படித்து உற்சாகம் பெற்றது க.நா.சு.வால் தான். ஆனால் நான் ‘எழுத்து’ பத்திரிகையில் எழுதத் தொடங்கிய சமயம் க.நா.சு.வுக்கு எழுத்து பத்திரிகையுடனும் சி.சு.செல்லப்பாவின் விமர்சனத்துடனும் அபிப்ராய பேதங்கள் கொண்டிருந்த சமயம். அந்தச் சமயத்தில் க.நா.சு தொடங்கிய விமர்சன எழுத்துக்குப் பெரும் பங்களிப்பைப் புதிய தலைமுறையிலிருந்து பலரை அறிமுகப்படுத்தியது ‘எழுத்து’ பத்திரிகை தான். முக்கியமாக விமர்சனத்திற்கும் புதுக்கவிதைக்கும் ‘எழுத்து’ மூலம் சேர்ந்த புதிய தலைமுறை வளம் மிக முக்கியமானது. அந்த வளம் புதிய தலைமுறையிலிருந்து புதியவர்களிடமிருந்து வருதல் மிக விசேஷமானது” என்கிறார் வெ.சா.

    தமிழில் விமர்சனக் கலை வளர வேண்டுமென்றால் அதனைப் பற்றிய கோட்பாட்டு அறிவு தேவையென்பதை விரைவில் உணர்ந்து கொண்டார். இதற்கு மேலைய விமர்சன நூல்களைக் கடும் முயற்சியில் படிக்கத் தொடங்கினார். இதனை, “பத்திரிகை நடத்த ஆரம்பித்தபோது ரொம்பப் பிரமாதமாக நடத்தினார்  முதலில் அவருக்கு விமர்சனத்தில் அவ்வளவு பழக்கம் கிடையாது. பெரிய பெரிய நூல் நிலையங்களுக்குப் போய், பணம் கொடுத்து சந்தாதாரராக ஆகிக்கொள்ளும் வசதிகள் எல்லாம் அவருக்கு இருக்கவில்லை. பிரிட்டிஷ் லைப்ரரி, அமெரிக்கன் லைப்ரரிகளில் அதிகச் செலவு இல்லாமல் புத்தகங்களை எடுத்துக்கொள்ள முடியும். அந்த நூல் நிலையத்தைக் கவர்ச்சிகரமாக அவர்கள் நடத்திக்கொண்டிருந்த காலத்தில் அந்த இரண்டு நூல் நிலையத்துக்கும் மாறி மாறிப் போய் விமர்சனம் சம்பந்தமான புத்தகங்களை ஒன்று விடாமல் படித்துவந்தார். நான் எப்போது போய்ப் பார்த்தாலும் விமர்சனம் சம்பந்தமான புத்தகங்கள்தான் அவர் கையில் இருக்கும். அந்தச் சமயத்தில் நாவலோ சிறுகதைகளோ அவர் படித்து நான் பார்த்ததில்லை. விமர்சனம் சம்பந்தமாக அவர் அப்படிப் படித்து வந்தவற்றின் பாதிப்பை எழுத்துவில் வெளிவந்த கட்டுரைகளில் பார்க்க முடிந்தது என்று சுந்தரராமசாமி கூறியுள்ளார்.

    “மேலை இலக்கியத்தில் எதை அறிமுகம் செய்யவேண்டும், அதை எப்படி அறிமுகம் செய்ய வேண்டும், விமர்சனம் என்பதன் முக்கியத்துவம் என்ன? கோட்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என்று துல்லியமான எண்ணங்கள் செல்லப்பாவிடம் இருந்தன. அத்தோடு எவரையும் எதிர்பாராமல் தன் எழுத்தின் திசையில் போராடிச் செல்லும் மனவுறுதியும் அவரிடமிருந்தது” என்று வெளி ரங்கராஜனும் கூறியுள்ளார்.

    இவ்வாறு தனி மனிதராகவும் எழுத்து இதழின் மூலமாகவும் அயராத உழைப்பினாலும் மன உறுதியாலும் நவீன தமிழ் இலக்கியத்தை விமர்சனத்தை நிலை நிறுத்திய சி.சு.செ அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதை “செல்லப்பாவின் பங்களிப்பு மகத்தானது. அவரது படைப்புகள் மறுவாசிப்புக்கு உள்ளாகவே வேண்டும் என்பதோடு அவரது இலக்கியப் பணிகள் முழுமையாக சமகால வாசகர்களின் பார்வையில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

    சி.சு.செல்லப்பா எழுத்தையும் இலக்கியத்தையும் நம்பி வாழ்ந்த ஒரு ஆளுமையின் அடையாளம். தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய முன்னோடிக் கலைஞன். இன்றும் அவருக்கு உரிய இடமும் கௌரவமும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. வாசகனைத் தேடிச் சென்ற எழுத்தாளனின் பாதை இன்று தூர்ந்து போயே கிடக்கிறது.

    விமர்சகராக அவர் உருவாக்கிய கருத்துக்கள் பிரிட்டிஷ் விமர்சன மரபின் பாதிப்பைப் பெற்றவை. தமிழில் விமர்சன மரபைத் தோற்றுவிக்க முயன்ற புலவர்களும் இந்த மரபில்தான் நம்பிக்கை வைத்தார்கள். அவர்கள் தாங்கள் உருவாக்கிய அளவுகோலைப் பண்டைய இலக்கியத்தைப் பார்க்க எடுத்துச் சென்றபோது செல்லப்பா ஏறத்தாழ அதே அளவுகோலைப் புதுமை இலக்கியத்துக்கு கொண்டுவந்தார். இந்த அளவில் அவரை ஒரு நவீனப் புலவர் என்று அழைக்கலாம் என்று வெளி ரெங்கராஜன் எடுத்துக் கூறியுள்ளார்.

    சி.சு.செல்லப்பா விமர்சனக் கோட்பாடுகளை வெளிப்படுத்தும் படைப்பியல் என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார். மேலும் தமிழில் சிறுகதை பிறக்கிறது, என் சிறுகதைப் பாணி, பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப் பாணி, இலக்கியச் சுவை, ஏரிக்கரை முதலிய விமர்சன நூல்களை எழுதியுள்ளார். க.நா.சுவால் தூண்டப்பட்டாலும் அவரது விமர்சன முறையிலிருந்து விலகி தனக்கான பாதையை அமைத்துக் கொண்டு புதுப்பாதையில் பயணித்த ஒற்றை ஆளுமை சி.சு.செ.

    எந்தச் சார்பும் இல்லாமல் மனதில் பட்டதை அறிவில் புகுத்தி ஒப்பனைகள் இல்லாமல் தனது எண்ணங்களை வெளிப்படுத்திய சி.சு.செ இலக்கியக் கடலில் திசை தெறியாமல் தத்தளித்த பல புதிய படைப்பாளிகளுக்கு உரமாக, கலக்கரை விளக்காக விளங்கினார். அவரின் அடிச்சுவட்டில் என்று தமிழ் விமர்சனத்துறை பயணித்துக் கொண்டிருப்பதைச் சிந்திக்க வேண்டியதும் சி.சு.செவைக் கொண்டாட வேண்டியதும் அவசியம்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 103 (தொண்டனார்க்கு)

    சேக்கிழார் பாடல் நயம் – 103 (தொண்டனார்க்கு)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல் :

    தொண்டனார்க்கு   இமயப்    பாவை   துணைவனார்   அவர்முன்  தம்மைக்
    கண்டவாறு      எதிரே   நின்று   காட்சிதந்து    அருளி,  மிக்க
    அண்டவா   னவர்கட்கு    எட்டா  அருட்கழல்    நீழல்   சேர
    கொண்டவாறு   இடையறாமல்   கும்பிடும்  கொள்கை  ஈந்தார்.  

    பொருள் :

    சிந்தை செய்த தொண்டனாருக்குப் பார்வதியம்மையார் கொழுநராகிய சிவபெருமான் அவர் முன் பன்னாளும் தம்மைக் கருத்தினில்வைத்துக் கண்டிருந்த வண்ணமே வெளிப்பட அவர் எதிரிலே வந்து காட்சி கொடுத்து அருள்புரிந்து, மிகுந்த தேவர்களுக்கும் எட்டாத தமது அருளாகிய சீபாதநீழல் சேரும்படி அருள் கொடுத்து, இடையறாமற் கும்பிட்டிருக்கும் பேற்றினையும் ஈந்தருளினார்.

    விளக்கம் :

    தொண்டனார் என்ற சீர், இறைவனது  தொண்டராகவே தம்மை  வைத்துச்  சிந்தை செய்தார் ஆகலின். முன்பு ‘கொற்றவன்’ என்றும் ‘புரவலர்’ என்றும் அந்தந்த  நிலைக்கேற்பக்  குறித்த சேக்கிழார்,  இங்குத்   ‘தொண்டனார்’ என்று வழங்கிய அழகும் தகுதியும் காண்க.  தொண்டனார் என்றதற்கேற்ப  இறைவன்  கழல் நிழலிலே   இடையறாமல்  இருந்து கும்பிடும்   சிறப்பை   ஈந்ததும்  காண்க.

    இமயப்பாவை துணைவனார் என்ற தொடர், சிவகாம வல்லியாருடன் வெளிப்பட்டுத் தந்த காட்சியை  விரித்துக் கூறியதைக்   காட்டியது.

    அவர்முன்  தம்மைக்  கண்டவாறு என்ற  தொடர், முன்பு பலகாலமும் சிந்தித்தும், வந்தித்தும்  அகத்தே கண்ட படியே, தில்லையம்பல  வாணரையே  தம் ஆத்மார்த்த  நாயகராக வணங்கியவர்  ஆதலின், அந்த அம்பலவரே  அம்மையுடன் எழுந்தருளிய  சிறப்பைக் காட்டியது. இக்காரணம்  பற்றியே   இங்கே  இடப வாகனம் கூறாது  விட்டார்.

    எதிரே  நின்று  காட்சி  தந்தருளி , என்ற தொடர் முன் உள்ளப் புண்டரிகத்து  உள்ளிருந்து காட்சி தந்தருளினவர், இப்போது அகம்புறம் என்பதின்றி யாங்கணும் விரிந்து நின்று காணுமாறு காட்சி யளித்தருளி. அவ்வாறு – காட்சி தந்தருளியவாறு. “விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்,

    மறைய நின்றுளன் மாமணிச் சோதி யான்
    உறவு கோல்  நட்டு  உணர்வு கயிற்றினான்,
    முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே,

    “நெஞ்சுண்டென் நினைவாகி நின்றான் றன்னை“

    “இவனென்னைப்  பன்னாள்  அழைப்பொழி யான்  என்று எதிர்ப்படுமே“

    முதலிய திருவாக்குக்கள்  இதனை  விளக்குகின்றன,

    மிக்க  அண்ட   வானவர்கட்கு  எட்டா  அருள் கழல் ‘’ என்ற தொடர்  மக்கள், தேவர், நரகர் என்னும் மூவகை உயர்திணையிலும் புலமை, ஆயுள், தவம், ஒளி முதலிய பலவற்றாலும் மிகுந்த தேவர்களுக்கும் எட்டமுடியாத கழலைக்  குறித்தது

    அண்ட வானவர் – அண்டங்களாகிய மேலுலகங்களை ஆட்சி புரியும் வானவர்கள். பிரமன் – விட்ணு – இந்திரன் முதலியோர்.

    “ஆரேனுந் தன்னடியார்க்  கணியான்   தன்னை,
    அமரர்களுக்கு   அறிவரிய அளவில்  லானை’’   முதலியவை காண்க.

    கழல் நிழல் – திருவடி வியாபகத்தின் நிறைவே நீழல் எனப்பெறும். பிறவித் துன்பமாகிய வெயிலுக்கு மறைவு தந்து ஆற்றுவிக்கும் நிழல். வெயிலின் வெப்பம்  மாற்றும் நிழல்போலத் துன்பம்  நீக்கி,  இன்பமான குளிர்ச்சி  தருவதனாலே நிழல் என்று  உருவகப்படுத்திப் பேசப்பெறும்.

    “தண்ணிழலாம்பதி“ என்பது சிவஞானபோதச் சூத்திரம்.

    “சுழலார் துயர்வெயில்  சுட்டிடும் போது  அடித்
    தொண்டர் துன்னு, நிழலாவன…..ஐயாற னடித்தலமே“

    என்ற திருவிருத்தத்தில் அப்பர் பெருமான் இவ்வுருவகத்தை முற்றும்  விரித்தருள்வது காண்க. நீண்ட  நிழல், நீழல்  எனப்பட்டது.

    நீழல் சேரக்கொண்டு – திருவருள் வியாபகத்தில் அவர் கலந்திருக்க ஏற்றுக்கொண்டு “முத்தி, நான்ற மலர்ப்பதத்தே நாடு“ என்றபடி ஆடுங் கழலே முத்திநிலையாம். அதனையே அவர் வந்தித்தார்; அதனையே சிந்தித்தார்; ஆதலின் இறைவன் அதனையே அவர் சேரக்கொண்டார் என்க.       

    இடையறாமல் கும்பிடும் கொள்கை – இதுவே சைவ சித்தாந்தத்தின்படி, முத்தியினதிலக்கணமாம். முத்தி நிலையினும் உயிர் இறைவனுக்கு அடிமையேயாகி அவனைக் கும்பிட்டு இன்புற்றிருக்கும் என்பது. “மறக்குமாறிலாத வென்னை“என்ற ஆளுடைய பிள்ளையார் திருத்துருத்தித் தேவாரமும்,

    “பண்டு திருவடி மறவாப் பான்மையோர்“ என்ற ஆளுடைய பிள்ளையார் புராணமும் காண்க. இடைவிடாது. சிந்தித்துக்கொண்டிருத்தல்.

    “குஞ்சித்த சேவடியுங் கும்பிட்டேயிருப்பர்“ (சிவஞானசித்தியார்)

    கொள்கை – கும்பிடுதலை உட்கொண்ட நிலை.

    இப்பாடலில் மெய்ப்பொருள்  நாயனார்  தம் செயலால்  கிறைவனின் திருவருளை முற்றவும் பெற்றமையாலே அவர் இறைவியோடு எழுந்தருளி தம் மலரடி நிழலில் என்றென்றும், இடையறாமல்  இருந்து கும்பிடும் சிறந்த  நிலையைப்  பெற்றார்! என்பது  நமக்கு   ஊக்கமும், நம்பிக்கையும் தருகிறது. மெய்ப் பொருள்  நாயனார்  அருள்  வரலாறு  இத்துடன் நிறைகிறது.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 27

    கதை வடிவில் பழமொழி நானூறு – 27

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 55

    வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும்
    செங்கோலன் அல்லாக்கால் செய்வதென் – பொங்கு
    படுதிரைச் சேர்ப்ப! மற்று, இல்லையே, யானை
    தொடுவுண்ணின் மூடுங் கலம்’

    பழமொழி -‘இல்லையே, யானை தொடு வுண்ணின் மூடுங்கலம்’

    சாய் சாய்… என தேநீர் விற்றுக்கொண்டு வரும் சிறுவனைப் பரிதாபமாகப் பார்த்தேன். அங்கிள் என என்னைச் சுரண்டி கூப்பிடும் அவனால் அந்தப் பாத்திரத்தைக் கூட சரியா புடிக்க முடியல. பேப்பர் கப்புகள கக்கத்துல இடுக்கிக்கிட்டு நிக்கறான். எங்கிட்ட வாங்கிக்கோ. அஞ்சு ரூபாதான். இஞ்சி டீ. இரயிலுக்குள்ள இதையே பத்து ரூபா சொல்லுவான். தூய ஹிந்தியில் வாதாடுகிறான்.

    சும்மா குடுத்த பத்துரூபா நோட்ட வாங்கிக்க மறுத்த அவன் நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. உழைக்கணும்னு நினைக்கறான். அதனாலென்ன. இரண்டு டீ வாங்கிக்கொண்டு பத்துரூபாய்த் தாளை நீட்டினேன்.

    நியூடில்லி இரயில்நிலையம் முதல் பிளாட்பாரத்திலிருந்து சென்னை செல்லவிருக்கும்  தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இரயில் இன்னும் சிறிதுநேரத்தில் புறப்படும். அறிவிப்பைத் தொடர்ந்து பெட்டிக்குள் ஏறினேன். என்னுடையது சைட் பர்த் என்பதால் பெட்டியை இருக்கைக்கு அடியில் நுழைத்துவிட்டு சீட்டில் அமர்ந்தேன். எதிர்சீட்டில் ஆள் இல்லை. அக்கம்பக்கம் நோட்டம்விட ஆரம்பித்தேன்.

    இராணுவஉடையில் நான்கைந்து வீரர்கள் எனக்குப் பின்னாலிருந்த பகுதியில் அமர்ந்திருக்கிறார்கள். மற்றபடி எல்லாரும் குடும்பம் குடும்பமா வந்திருக்காங்க போல. எனக்கு முன்னால் இருந்த ஆறு பெர்த்தையும் வடஇந்தியக் குடும்பம் ஆக்கிரமித்திருந்தது. எந்த மாநிலமோ. இரண்டு ஜோடிகளும் பதினைந்து பதினாறு வயது மதிக்கத்தக்க இரு பெண்குழந்தைகளும் அமர்ந்திருக்கிறார்கள். எந்த குடும்பமா இருந்தா என்ன. எப்படியும் சென்னை போறதுக்குள்ள கண்டுபிடிச்சிடலாம்.

    நீண்ட தொலைவு இரயில் பயணங்களில் நாம கேக்கணும்னே  இல்ல. வந்து ஏறும்போது எல்லாரையும் சந்தேகத்தோடயே பாப்பாங்க. அப்பறம் நேரம் போகப்போக சாதாரணமா பேச ஆரம்பிப்பாங்க. ஒரு இரவு தூங்கி எழுந்தவொடனே ரொம்பவே சுமுகமா பழகிடுவாங்க. இதுதான் இந்த இருபது வருச இரயில் பயணத்துல நான் கத்துக்கிட்ட அனுபவம். ஆனா இப்பயெல்லாம் சின்னப் பசங்க மொபைல விட்டு முகத்த திருப்பறதேயில்ல.

    அந்த வட இந்திய ஜோடிகளை கவனிக்க ஆரம்பிச்சேன். இளஞ்சோடி மகனும் மருமகளும் போல. அந்தப்பொண்ணு புடவைத்தலைப்பால முகத்தை மூடிக்கிட்டே அமர்ந்திருக்காங்க. எதிரில இருப்பவர் மாமனாராத்தான் இருக்கணும். ஒருவேளை பீஹார்காரங்களோ.

    எதேச்சையாக அந்தப் பெரியவரும் என்னயப் பாக்கறார். ஒருசிறு புன்முறுவலுடன் தலையசைக்கிறார். நானும் பதிலுக்கு தலையசைத்து வணக்கம் சொல்கிறேன். இரயில் கிளம்பிவிட்டது. பிளாட்பாரத்தில் அவசரமா ஓடிவந்த ஒரு தமிழ்க்குடும்பம் இரயிலப் பிடிக்கமுடியாம நின்னுட்டாங்க. எந்த டிராபிக்ல மாட்டினாங்களோ. தமிழ்க்குடும்பங்கள் பொதுவா தெற்கு தில்லியில்தான் அதிகமா வசிப்பாங்க. உள்ளே நெய்மணம் தூக்குது. வீட்டில காய்ச்சின நெய் போல. அதுக்குள்ள யாரோ சாப்பாட்டுப்பொட்டலத்த திறந்துட்டாங்க. இதுவே சென்னையிலிருந்து கிளம்புற இரயிலா இருந்தா இலையோட சேர்ந்த இட்லிசட்னி வாசனை வரும். யோசனையுடன் கண்ணை மூடினேன். பழைய ஞாபகங்கள் அலைமோதின.

    சின்ன வயசில கும்பகோணத்துல இருந்தோம். எங்கப்பா அங்க ஒரு ஹோட்டல் நடத்திட்டிருந்தாரு. மொத்த குடும்பமும் அதுக்காக உழைக்கும். அம்மாவும் பாட்டியும் வீட்டிலயே ஆட்டு உரலில இட்லிமாவும் வடைமாவும் அரைச்சு எடுத்துட்டுப் போவாங்க. மணி அய்யர்தான் எங்க ஹோட்டல் சரக்கு மாஸ்டர். ஒத்த ஆளா நின்னு மளமளனு காரியம் பாப்பார். சுடச்சுட இட்லி வடை இலையில பார்சல் பண்ணி ஆபீஸ் போறவங்களுக்குக் குடுப்பாரு. உக்காந்து சாப்பிட நேரமில்லாதவங்க அதை வாங்கிட்டுப்போவாங்க. எனக்கு விவரம் தெரிஞ்சு பதினைந்து வயசு வரை நல்லா ஓடிட்டு இருந்துது. திடீர்னு அப்பாவுக்கு கெட்ட நண்பர்கள் சேர்க்கை அதிகமாயிடுச்சு. தண்ணி அடிக்க ஆரம்பிச்சார். அப்பறம் சீட்டுவிளையாடற பழக்கம் வேற வந்திருச்சு. தினமும் வியாபாரத்தக் கவனிக்காம ஊர்சுத்திட்டு தன்னோட நண்பர்களையும் கூட்டிக்கிட்டு வந்து காசுவாங்காம சாப்பாடு குடுக்க ஆரம்பிச்சார்.

    பாவம் மணி அய்யர். அம்மா, பாட்டி மேல இரக்கப்பட்டு சம்பளம் இல்லாமகூட பலமாசம் வேலை பாத்தாராம். அப்பறம் நகைகள அடகு வச்சு, பாத்திரங்கள வித்து கொஞ்சநாள் நடத்திட்டு வந்தாங்க. அதுவும் முடியாம ஹோட்டல வித்துட்டு துணி தச்சிக்குடுத்து சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டாங்க அம்மா. நோய்வந்து அப்பாவும் போய்ச்சேந்துட்டார்.

    அரசுபள்ளியில பணம் கட்டவேண்டியதில்லங்கறதால என்னால படிக்க முடிஞ்சது. அப்பறமும் பலபேர் தயவால கல்லூரிப்படிப்ப முடிச்சிட்டு அரசு உத்தியோகத்துல சேந்தேன். ரிடையர்மென்ட்கு இன்னும் ரெண்டு வருசம்தான் இருக்கு.

    யாரோ என்னைத் தொட்டு எழுப்புகிறார்கள். எதிரில் அந்த வட இந்திய மனிதர் கையில் பூரியுடன் நிக்கறார். பாயி…என அழைத்து தாங்கள் மதுராவிலிருந்து வருவதாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அங்கே பெரிய ஓட்டல் வைத்து நடத்துபவராம். இப்போ சென்னையில் ஆரம்பிக்கறதுக்காக போய்க்கிட்டிருக்காராம். என்னயப் பாத்தவொடனே சொல்லணும்னு தோணிச்சாம். சுத்த பசு நெய்யால செஞ்ச பூரி சாப்பிட்டுப் பாருங்கனு என்கிட்ட குடுக்கறார். இது அவரோட ஹோட்டல்ல குடுக்கற ஸ்பெஷலாம். வாங்கிக்கொண்டு வாழ்த்துக்கள் சொன்னேன். என் அப்பா கூட முன்னால் ஹோட்டல் நடத்தியவர்தான் என அறிமுகப்படுத்தியவுடன் அவர் பார்த்தீர்களா அதனாலதான் உங்களப் பாத்தவொடனே சொல்லணும்னு தோணிச்சு என்று சந்தோஷப்படுகிறார். அவருடைய நோக்கில் என் அப்பா ஏதோ பெரும் சாதனை படைத்தது போலவும் தாமும் அவ்வாறே வெற்றிபெறுவோம் எனவும் நினைக்கிறார் போல.

    இருக்கட்டும். எனக்கு மட்டும்தானே தெரியும் ‘இல்லையே, யானை தொடு வுண்ணின் மூடுங்கலம்’ங்கற பழமொழி. யானையே தொட்டு உண்ணத் தொடங்கிட்டா அதற்கு மூடி மறைத்து வைக்க தகுதியான பாத்திரம்னு ஒண்ணு கிடையாதில்லையா. அதுமாதிரிதான் எங்கப்பா பண்ணின வேலையும்.

    அந்த மனிதர் தன் குடும்பத்தார் கிட்ட என்னயப் பத்திசொல்லிட்டார்போல. எல்லாரும் என்னயத் திரும்பிப்பாக்கறாங்க.

    உலகம் எவ்வளவு வித்தியாசமானது. எல்லா உண்மையையும் எப்பவும் சொல்லணும்னு இல்ல. இந்தக் குடும்பத்துக்கு இப்ப என்னால நம்பிக்கை கிடைச்சிருக்கு. அதனோட பிரதிபலிப்பா அவங்க எல்லார் முகத்திலயும் சந்தோசம். சென்னையில் கால்வைக்கும்போது அவங்க சந்தோசமா நம்பிக்கையோட இறங்குவாங்க. கண்டிப்பா நல்லா உழைச்சு முன்னுக்கு வருவாங்க. கைபேசியில் என் மகள் அழைக்கிறாள். அவளுடன் பேசத்தொடங்குகிறேன்.

    பாடல் 56

    உற்றான் உறாஅன் எனல்வேண்டா ஒண்பொருளைக்
    கற்றானை நோக்கியே கைவிடுக்க – கற்றான்
    கிழவனுரை கேட்கும் கேளான் எனினும்
    ‘இழவன்று எருதுண்ட உப்பு’.

    பழமொழி – ‘இழவன்று எருதுண்ட உப்பு’

    வாங்க மாமா. உக்காருங்கோ. ஊர்ல எல்லாரும் சௌக்கியமா? காபி சாப்பிட்டேளா விசாரிக்கிறாள் விசாலம். ஆமாம். பின்ன நான் வராம எப்படி. இந்த ஆத்துல நடந்த ஒவ்வொரு விசேசத்துக்கும் மொதல்ல நான்தான் ஆஜராவேன். கல்யாணம், காதுகுத்து, பிறந்தநாள்னு எவ்வளவு விசேசம் எடுத்து நடத்தியிருப்பேன். இப்ப கொஞ்சம் வயசாயிடுத்து அதனால வேத்துமனுசனா முந்தினநாள் வந்து இறங்கறேன். இருந்தாலும் பழக்கதோசம். எல்லாத்தையும் ஒருதடவை பாத்துடறேன். நீ ஒண்ணும் கவலப்படாத. சொல்லிவிட்டு என் கேள்விகள ஆரம்பிச்சேன்.

    என்னம்மா வாத்தியக்காரன் நாதஸ்வரம் எல்லாத்துக்கும் சொல்லியாச்சா. சீர்வரிசை தட்டு தாம்பாளம் எல்லாம் ரெடிபண்ணியாச்சா. ஆட்கள் வர ஆரம்பிச்சாச்சு. சாயங்காலம் மாப்பிள்ளை அழைப்பு.  இன்னும் பன்னீர் சந்தனக்கிண்ணம் வெளியில வைக்கலயேமா.

    நான் சொல்லறத காதுலயே வாங்கிக்காம விசாலம் யாருக்கோ காபி உபசாரம் பண்ணிண்டிருக்கா. எம் முன்னால உக்காந்துண்டிருக்கற பொண்ணரசி என்னயவே பாக்கறா. மரகழண்ட கேசு தானே பேசிக்கறதுனு நினைப்பாளோ. இருக்கட்டும். ஸ்டூல் மேல இருந்த வெற்றிலை சீவலை வாயில போட்டுக்கறேன்.

    சாயங்கால டிபன் என்ன?. வாழக்காய் பஜ்ஜியும், கேசரியும் தானே. அதுல ஒண்ணும் மாறுதல் இல்லயே. நான் பாட்டுக்கு பேசிண்டே போறேன். யாரும் பதில் சொல்ல மாட்டேங்கறீளே. என்ன ஆயிடுத்து இங்க. அதுக்குமேல பொறுமையில்லாம…. வயசானதால யாரும் மதிக்கமாட்டேங்கறா. போல,  விசாலம் என் மூத்த அக்கா பொண்ணுதான்.  என்னயவிட ரெண்டு வயசு சின்னவள். அவள் பேத்திக்குதான் நாளைக்கு கல்யாணம். புலம்பிண்டே வாசப்பக்கம் வந்துட்டேன். விசாலம் பேச்சுக்கே மரியாத இருக்கோ என்னமோ அப்பறம்தானே என் பேச்சக் கேக்கறதுக்கு. இருந்தாலும் வாய் சும்மா இருக்கமாட்டேங்கறது.

    ஏண்டாப்பா. பந்தக்காலக் கண்ணுலயே காணலயேடா. வாசப்பக்கம் ஓலப்பந்தல் போடுவேளா மாட்டேளா. வாழ மரம் எங்கடா?. அதுக்குப்பதில சீரியல் பல்ப மாட்டறேளா. பேஷ் பேஷ்.

    வேல செஞ்சிண்டு நிக்கற நாலு பசங்களையும் யாரோ ஒருத்தன் திட்டிண்டு இருக்கான்.

    வெரசலா லைட் அலங்காரம் பண்ணுடே. ஒரு வீட்டுக்கே இத்தன நேரம் எடுத்தா பெறகு கம்பெனிய இழுத்துமூடிட்டு படுத்து ஒறங்க வேண்டியதுதான். கத்திவிட்டு தள்ளிநின்னு துணிய கொசுவம் மடிச்சிண்டு நிக்கற பிள்ளையாண்டான் கிட்டப் போறான்.

    ஏல துணிய சுருக்குமடிச்சு ஒரு ஆர்ச் போடத் தெரியல. உன்னயெல்லாம் வச்சி  நாளமுன்னயும்…..  என்னவேல செஞ்சு கிழிக்கப் போறேன். உங்க நாலு பேரையும் சொந்தக்காரம்னு நெனச்சி வேலைக்குச் சேத்தது என் தப்பு.

    சொல்லிட்டு என்னையே பாக்கறான்.

    சாமிக்கு எந்த ஊரு. உள்ளூர்ல பாத்ததில்லயே.

    அப்பாடா வந்ததுக்கு ஒருத்தனாவது பேசறானேன்னு நினைச்சு பேச்சு குடுத்தேன். எனக்கு இந்த ஊருதாம்பா. குழந்தேளுக்கெல்லாம் கல்யாணம் பண்ணிக்குடுக்கற வர இந்தக் கோவில்ல தான் வேல பாத்துண்டிருந்தேன்.  பதினஞ்சு வருசமா இந்தப் பக்கமே வரல. எம்புள்ள என்னய பாம்பே கூட்டிண்டு போயிட்டான். அங்கதான் இருக்கேன். இப்போ இந்தக் கல்யாணத்த சாக்கு வச்சுண்டு இங்க வந்தேன். எம்புள்ளயும் வந்திருக்கான். அவனுக்குக் கொஞ்சம் டவுண்ல வேலை இருக்குனு என்னய இறக்கி உட்டுட்டுப் போயிட்டான்.

    நீர்யாரு? பந்தல் போடறவரா? இன்னும் வேலயே ஆரம்பிக்கலயே அதான் கேக்கறேன்.

    சாமி. நீங்க பழைய காலத்திலயே இருக்கீங்க. இப்ப யாரும் பந்தல் போட மாட்டாக. தெருவுல பாத்தீரா. தார் ரோடு போட்டிருக்கு. அதனால குழி தோண்டக்கூடாது. இப்பயெல்லாம் கல்யாணம் நடத்திக்குடுக்கறதுக்குன்னு கம்பெனிகள் வந்திருச்சு. அந்தக் கம்பெனி அலங்காரத்துலேந்து சமயல், பூமாலை வரை எல்லாமே செஞ்சு குடுத்துடும். வாசல்ல பன்னீர் சந்தனம்னு சொன்னீகளே அது கூட அவங்களே செஞ்சி போடுவாங்க. இன்னும் ஒருமணிநேரத்துக்குள்ளார  எல்லாத்தையும் வண்டியில கொணாந்து இறக்கி வச்சிருவாக. ஆட்களயும் அவுகளே கூட்டியாந்துருவாக.. பொண்ணுவீட்டு, மாப்பிள்ள வீட்டு சாதிசனத்துக்கு ஒரு சோலியுமில்ல. டென்சன் ஆவாம சந்தோசமா கல்யாணம் அட்டெண்ட் பண்ணுங்க. சொல்லிட்டு ஆர்ச் போடறவன்கிட்ட திரும்பப் போய் கத்திண்டிருக்கான்.

    ஓய் இம்புட்டு நேரம் நீர் இவாள்கிட்ட பேசிண்டிருந்தத நான் கேட்டேன். அந்தப் பிள்ளையாண்டானுக்குதான் வேல சரியாத் தெரியலயே அப்பறம் எதுக்கு கட்டாயப் படுத்தறீர். சொந்தக்காரன்னு நினைச்சு நீர் வேலை குடுத்திருக்கீர். இப்ப உமக்கும் டென்சன். அவனாலயும் வேலை செய்யமுடியல. இதத்தான் முன்ன ‘இழவன்று எருதுண்ட உப்பு’னு பழமொழியா சொல்லுவா. ஒருவேலயப் படிச்சவனுக்கே அந்த வேலயக் குடுக்கணும். எருது உப்பைத் தின்னாலும், அதிக உரமுடையதா உரியவனுக்கு நல்லா உழைக்கும் அதுபோல படிச்சவனும் உழைப்பான் அப்டிங்கறது அதோட அர்த்தம். இனிமேலாவது உம்ம சொந்தக்காரன்னு பாக்காம வேலைய செய்யத் தெரிஞ்சவனுக்கே அந்த வேலையைப் போட்டுக்குடும். அவாளும் சந்தோசமா இருப்பா. நீரும் நிம்மதியா இருக்கலாம்னு சொல்லிட்டுத் திரும்பறச்சே பக்கத்தாத்து கிட்டு அதான் என் பால்ய சினேகிதனப் பாத்தேன். கம்பு ஊனிண்டு நிக்கறான். கொஞ்சநேரம் பழையகதைகளப் பேசலாம். ஆசையோட அவாத்துக்குப் போறேன்.

    Share
  • கடன் (சிறுகதை)

    கடன் (சிறுகதை)

    பாஸ்கர் சேஷாத்ரி

    அப்படி எதிர்க்க திண்ணைல உக்காருங்க தம்பி.

    வேணாம் சார். நிக்கறேன்

    பேரு என்ன சொன்னப்பா

    வாசு

    என்ன படிச்சீங்க

    பிளஸ் டூ பைல் சார்.

    ஏன் மேலே எழுதலயா

    இல்ல, எனக்கு நாட்டம் போச்சு

    இங்க உனக்கு இந்த வீட்ல தான் வேல, எதை சொன்னாலும் செய்யணும்

    சரி சார். சம்பளம் என்னான்னு கணக்காளர் சொல்வாரு

    பின்னாடி சின்ன ரூம் இருக்கு. அங்கே தங்கிக்கோ.

    சரி சார்.

    ஓய்வா இருக்கும்போது என்னவேணா செய்யலாமா?

    ம், என்ன செய்வ

    செடி வளர்ப்பேன் சார். கொஞ்ச நாள் லீவுக்கு கிராமத்துக்குப் போனேன். அப்ப கத்துண்டேன்

    செய்பா

    நான் கொஞ்சம் கவிதை எழுதுவேன்.

    அப்படியா அடி சக்கை. எனக்கும் கண்ணதாசன் பிடிக்கும்

    நான் மில்டன் ரசிகன்

    அவரு யாரு.

    அவரும் பெரிய கவிஞர் சார். இங்கிலீஷ்ல எழுதுவாரு

    என்னப்பா ஏதோ சொல்ற

    ஒண்ணுமில்லை சார். மூணு வருஷம் கான்வன்ட்ல படிச்சேன்.

    அப்ப எப்படிப்பா இந்த வேலைக்கு .

    அதெல்லாம் ஒன்னுமில்ல சார். எல்லா வேலையும் ஒன்னுதான்.

    உனக்கு எப்படி அக்கௌன்ட்ஸ் சாரதியை தெரியும் .

    அவர் பையன் என்னோட கிளாஸ் மேட்.

    அவர் தான் என்னை அடிக்க்ஷன் செண்டர் கூட்டிண்டு போனார்

    உனக்கு இந்த வேலை ரொம்ப சின்னதுன்னு நினைக்கிறேன் .

    இல்ல சார். எனக்கு இது வேணும். எனக்குன்னு ஒரு தண்டனையா பாக்கிறேன். என்னை வருத்திக்க இது ஒரு நல்ல வழியா பாக்கிறேன். எனக்குச் சாப்பாடும் தங்க இடமும் போதும். வேலை கொடுங்க அது போதும்.

    இல்ல தம்பி. எனக்கு உன்கிட்ட வேலை வாங்க நிறைய தயக்கம் இருக்கு.

    நான் உண்மையைப் பேசிட்டேன். எனக்கு வாய்ப்பு இல்லேன்னா நேர்மைக்கு மதிப்பு இல்லைன்னு ஆயிடும்.

    பாத்தியா, இது போல எல்லாம் என்னால் பெரிசா யோசிக்க முடியல. நான் உன்கிட்ட வேலைக்கு வந்தாபோல உணர்வு வருது.

    சார் எனக்கு உண்மை பேசவே பிடிக்கிறது. பொய் எதற்கும் சொல்ல பிடிக்கல. அதனால் தான் என் பழைய கதையைக் கூட சொன்னேன்.

    சரி நாளைலந்து வாப்பா. நீ நல்லவன் தான். ஆனாலும் எதனா சிக்கல் வருமோனு பயமா இருக்கு.

    நீங்க தயங்க வேண்டாம். எனக்கு வாய்ப்பு கொடுங்க.

    சரி. சாரதி கிட்ட சொல்லு . ஒன்னு தெரியுமா? நீ சின்ன பையன். தெரியாது. உன் அப்பா என்னிடம் நிறைய கடன் வாங்கி வட்டிகூட கட்டாம தூக்குல தொங்கினான்.

    எனக்குத் தெரியும் சார். சாரதி அங்கிள் சொன்னாரு.

    அதெப்படிப்பா. என்கிட்டே வாங்கின கடனுக்கு, என்கிட்டே வேலை செஞ்சு, என் கடனை அடைக்கிறது ஒத்து வரலையே?

    இல்ல சார் . நான் எங்கனா வேலை செஞ்சி கடனை அடைக்கிறது ரொம்ப தாமதம் ஆகும். இங்கன இருந்தா நீங்க பிடிச்சிண்டு கொடுக்கலாம்.

    தம்பி நான் பெர்ய நேர்மையெல்லாம் இல்ல. வட்டி வியாபாரம். எனக்குக் குறி வேற.

    இருக்கலாம். கடன் அடஞ்சவுடன் நானும் போயிடுவேன் சார்.

    சரி நான் கிளம்பறேன். சரி சேர்ந்துடு. துணி மணி இருக்கா?

    இருக்கு.

    அரை டிராயர்லாம் போடகூடாது. பஜாருக்குப் போகும்போது யாராவது வட்டிக்குக் கேட்டால் சொல்லிவிடு.

    அதை மட்டும் சொல்லமாட்டேன் சார்.

    Share
  • ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெறுவது எப்படி? – 2

    ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெறுவது எப்படி? – 2

    Zoom சந்திப்பு : அண்ணாகண்ணன் 

    குடியுரிமை பெற மிக எளிய வழி எது? தங்கக் கடவுச்சீட்டு (Golden Passport) என்றால் என்ன? இரட்டைக் குடியுரிமை பெற முடியுமா? ஐரோப்பாவில் பிறந்தாலே குடியுரிமை உண்டா? வீடு வாங்குவதன் மூலமாகக் குடியுரிமை பெற முடியுமா?  ஊழியர் ஒருவர், தன்னைச் சார்ந்துள்ளோர் (Dependant) என யார் யாரை அழைக்கலாம்? யாரை அழைக்க இயலாது? ஐரோப்பாவில் எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும்? அதிகக் குழந்தைகள் பெற்றவர்களுக்கு அதிகப் பயன்கள் உள்ளன எனில், மக்கள் ஏன் அதிகக் குழந்தைகள் பெறுவதில்லை? இப்படிப் பல கேள்விகளுக்குப் பெல்ஜியத்திலிருந்து மாதவன் இளங்கோ விரிவாகப் பதில் அளித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெறுவது தொடர்பான உரையாடலின் இந்த இரண்டாம் பகுதியைப் பாருங்கள்.

    ஐரோப்பியக் குடியுரிமை தொடர்பாக உங்களுக்கு ஏதும் கேள்விகள் இருந்தால், பின்னூட்டத்தில் எழுப்புங்கள். மாதவன் இளங்கோ அவற்றுக்குப் பதில் அளிப்பார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நூற்றாண்டு காணும் காந்தியவாதி, டி. டி. திருமலை

    நூற்றாண்டு காணும் காந்தியவாதி, டி. டி. திருமலை

    தி. விப்ரநாராயணன்

    (டி. டி. திருமலை அவர்களின் மகன்)

    ஒரு கட்டடத்தின் வெளியே வெள்ளை வேட்டியும் வெள்ளை கதர் ஜிப்பாவும் அணிந்துகொண்டு உயரமான, சிவப்பான, அறுபது வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர், அலுவலக சாமான்களின் நடுவே அமர்ந்திருந்தார். அந்தத் தெரு வழியாகப் போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லோரும் அவரை விசாரிக்கிறார்கள். எல்லோருக்கும் சிரித்துக்கொண்டே “அலுவலகத்தைக் காலி செய்யவேண்டுமென்று கட்டடச் சொந்தக்காரர் பல தடவை சொல்லியும் நான் காலி செய்யவில்லை. அதனால்தான் இந்த நிலை” என்று சொன்னார். இப்படி இரண்டு நாட்கள் வெளியிலேயே இருந்தார். பிறகு அவரின் நண்பர்கள் அந்த இடத்தின் சொந்தக்காரரிடம் பேசி அவர் அலுவலகத்தை அங்குத் தொடர்ந்து நடத்த அனுமதி பெற்றுத் தந்தனர். பிறகு சில நாட்கள் கழித்து,  தக்கர் பாபா வளாகத்திற்கு மாற்றிக்கொண்டார். இவர் வேறு யாருமல்ல. காந்தியவாதி திரு டி. டி. திருமலை அவர்கள்.

    பிறப்பு

    ஸ்ரீவில்லிபுத்தூரில் 1921ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் நாள், தோத்தாத்திரி தெய்வநாயகம்  அய்யங்கார் – ஜானகி அம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

    குடும்பப் பின்னணி

    வைணவ வைதீகக் குடும்பம். நிரம்ப சொத்துகள் — தோப்புகள், சொந்த வீடுகள் / அறுவடை காலங்களில் நெல் வண்டிகள் தெரு முழுவதும் நிற்குமாம். தான தர்மங்களுக்கு அள்ளிக் கொடுப்பாராம். இவர் குடும்பம், திருப்பதி ஜீயர் பரம்பரைக் குடும்பம். தோத்தாத்திரி அய்யங்காரைத் தவிர்த்து அவர் மூதாதையர்களுக்கும் திருப்பதி கோவிலுக்கும் தொடர்பு இருந்து வந்திருக்கிறது. நான்கு ஆண்டுகள் கழித்துப் பிறந்ததால் இவரைத் திருமலைப் பட்டு என்றுதான் அழைப்பார்களாம்.

    அதனால்தான் இவருக்கு  ஐந்தாவது வயதில் உபநயனம், திருப்பதியில் நடந்திருக்கிறது.

    இவருடன் கூடப் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். இவர்கள் இவருக்குப் பின் பத்து ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர்கள். மூத்த தங்கை நடனத்திலும் இசையிலும் சிறந்தவளாக விளங்கினாள். எட்டு வயதிலேயே மேடைகளில் நடனம் ஆடவும் பாட்டுப் பாடவும் தொடங்கிவிட்டாள். அதனால் நடன ஆசிரியர்களும் பிரபல வித்வான்களும் வீட்டிற்கு வந்து தங்குவார்களாம். இருவருக்கும் 14 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது

    திருமலையின் கல்வி

    பத்தாம் வயதில்தான் இவர் கல்வி பயிலத் தொடங்கினார். அவ்வூரிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின் திருநெல்வேலியில் இருக்கும் இந்து கல்லூரியில் நான்கு ஆண்டுகள் படித்தார்.

    ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது காந்தியின்  சத்திய சோதனை நூலைப் படித்து, போட்டியில் பரிசு பெற்றுள்ளார். ஆறாம் வயதில் ராஜபாளையத்திற்குக் காந்தி வந்தபோது, இவருக்கு இவர் அப்பா, கதர்ச் சட்டை அணிவித்தாராம். அதிலிருந்து கதர் தொடக்கமாயிற்றாம்.

    பத்தாம் வகுப்பு படிக்கும்போது நேருவைப் பார்க்க ராஜபாளையம் போனதற்காக, நான்கணா அபராதம் கட்டினாராம். அதனால் பள்ளிப் பிராயத்திலேயே தேசிய உணர்வு அரும்பியிருக்கிறது.

    1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேர்ந்து, சிறை சென்றிருக்கிறார்; ஆனால் அவர் அப்பா அவரைச் சிறையிலிருந்து அழைத்து வந்துவிட்டார். இருப்பினும் எட்டு மாதம் மறைவாக இருந்து ரகசியமாகத் துண்டு பிரசுரங்களை அச்சடித்து வழங்கியிருக்கிறார்; அதனால் பட்டப் படிப்பு  தடைபட்டது.

    1942ஆம் ஆண்டு பிற்பகுதியில் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. இவருடைய மனைவியின் பெயர் சீதா. அவ்வூரைச் சேர்ந்தவர். ஒரே தெருவில் வாழ்ந்தவர்கள். இவர்களுக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் என மொத்தம் ஆறு குழந்தைகள்.

    இதற்குப் பின்  ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து,  அக்கட்சியின் தலைவராக இருந்த ரா.கிருஷ்ணசாமி நாயுடு அவர்களின் தலைமையின்கீழ் பணியாற்றிருக்கிறார். அப்பொழுதும் தேசிய உணர்வை மாணவர்களிடையே பரப்ப, பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்றிருக்கிறார்.

    நகராட்சியில் துணைத் தலைவராக ஆறு வருடங்கள்  இருந்து ஊருக்கு வேண்டிய வசதிகளைச் செய்திருக்கிறார். குடிதண்ணீர் வசதிக்காக மந்திரிகளைப் பார்த்து ஆவன செய்திருக்கிறார்.

    கலை இலக்கியம்

    கல்லுரியில் படிக்கும்போது ஆஷாடபூதி என்ற ஆங்கில நாடகத்தில் நடித்து, நீதிபதி மகராஜன் அவர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறார். இவரும் பேராசிரியர் அ.சீ.ரா.வும் நண்பர்கள். அ.சீ.ரா., இவருக்கு ஆங்கிலப் பேராசிரியராக இருந்தார். தாமிரபரணி நதிக்கரையில் பாடமும் இலக்கிய விமர்சனமும் நடக்கும். அங்கே மகராஜன் அவர்களும் வருவாராம். இதன் மூலம் திருமலை அவர்களுக்கும் நீதிபதி அவர்களுக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படுத்தியவர்கள், இவர்கள் இருவரும் தான். அதன்  விளைவாக ஸ்ரீவில்லிபுத்தூரில் கலை இலக்கியக் கழகம் ஒன்றை நிறுவி அங்குள்ள பெரிய நூலகமான பென்னிங்டன் நூலகத்தில் கூட்டம்  நடத்தினார். மகராஜன் அவர்களின் பங்கு அளப்பரியது. ஊர்மக்கள் இவரது ஆர்வத்தைப் பாராட்டினர். மதிப்பு உயந்தது. மகராஜன் மூலம், ரசிகமணி டி.கே.சி. அவர்களின் உறவு 1946இல் கிடைத்தது. அவரை இலக்கியக் கழகத்தில் பேச வைத்தார். ரசிகமணி அவர்களுக்குத் திருமலை அவர்களிடம் தனி மதிப்பு ஏற்பட்டு, அவர் இறக்கும் வரை தொடர்ந்தது. அவர் நூற்றாண்டு விழாவின்போது ஒரு மலர் தயாரித்து வெளியிட்டார்.

    அ.சீ.ரா. மகராஜன், டி.கே.சி அவர்களின் மூலம்தான் தனக்கு வாழ்க்கையின் பொருள் புரிந்ததாகவும், அவை காந்திஜியைப் புரிந்துகொள்வதற்குப் பெரிதும் உதவின என்றும் சொல்லுவார். மூவரும் இவருக்கு ஆசான்கள்.

    குடும்ப நிலை

    சமுதாயத்தில் மதிப்பு வளர்ந்தது, சொத்துகள் கரைந்தன. எல்லாம் தர்மத்தினால். ஆண்டாள் புத்தகாலயம் என்ற ஒன்றை நடத்தினார். புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமிக்கவர்கள், இலவசமாகவே புத்தகங்களை எடுத்துச் செல்வார்கள். குடும்பம் நடுத்தெருவிற்கு வந்துவிட்டது. ஆனால் அவரோ அவர் அப்பாவோ அதைப் பற்றி கவலைப்படவில்லை. சந்தோஷமாக ஏற்றுக்கொண்டனர். இப்பண்புதான் எதற்கும் கலங்காத நிலையைக் கற்பித்தது. பிள்ளைகள், மனைவி ஆகியோரை மாமனாரிடம் ஒப்படைத்துவிட்டு வேலை தேடச் சென்றுவிட்டார். 1953இல் இது நடந்தது. பம்பாய் சென்றார்; வேலை கிடைக்கவில்லை, 1944இல் தினமணியில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1954 முதல் 1955 வரை பூதான இயக்கத்திலும், 1956-57இல் பாரத் சேவக் சமாஜ அமைப்பாளராகவும் பணியாற்றினார். பின்னர் மதுரை காந்தி நினைவு நிதியில் தத்துவப் பிரசாரக் வேலை பார்த்தார்.

    இந்தக் காலம் பொன்னானது. மதுரையில் காந்தி மன்றம், பள்ளி – கல்லூரிகளில் காந்தியச் சிந்தனை வகுப்புகள் நடத்துவது, மாணவர்களுக்காகப் பயிலரங்கம் – கருத்தரங்கம் நடத்துவது, மாணவர்களுக்குக் காந்தி பற்றிய செய்திகளைச் சொல்லுதல்  முதலியன இவரது பணிகளாக இருந்தன. அதனால் இவரைச் சுற்றி எப்பொழுதும் இளைஞர் படை இருக்கும். அதில் கிடைத்தவர்கள் தான் இவர் வாரிசாக இன்று தொண்டாற்றிவரும் குழந்தைசாமி அவர்களும் அண்ணாமலை அவர்களும். காந்தி ஜயந்தி விழாவில்  சாலமன் பாப்பையா, குமரி அனந்தன், நா. பாலுசாமி, சிற்சபேசன், மேலும் பிரபல கல்லூரிப் பேராசிரியர்கள் காந்தியத் தலைவர்கள் பங்கு கொள்வார்கள்.

    1967-70 காந்தி நூற்றாண்டு விழா, கமிட்டிப் பொறுப்பாளராக இருந்து தென் மாநிலங்களைக் கவனித்தார். அஞ்சல் மூலம் காந்தி  என்ற புதுத் திட்டத்தைத் தொடங்கினார். காந்தி அமைதி நிலையச் செயலாளராக மதுரையிலும் சென்னையிலும் பொறுப்பேற்று காந்திஜியின் வாழ்க்கையயும் தத்துவங்களையும் மாணவர்களிடையேயும் பொதுமக்களிடமும்  எடுத்துரைத்தார்.

    காந்தி அமைதி நிறுவனத்தில் 60 வயது வரை பணியாற்றினார். பின்னர் அப்பொழுது அமைச்சராயிருந்த ஆர்.வெங்கட்ராமன் அவர்களின் அறிவுரையின்படி காந்தி கல்வி நிலையத்தைத் தொடங்கி இறுதி வரை வளர்த்தார்.

    1993இல் ஆகஸ்டு 11 ஆம் நாள் அவர் மறைந்தார்.

    ஜே.கிருஷ்ணமூர்த்தி

    படிப்பு முடிந்ததுமே பிரம்ம ஞான சபையுடன் இவருக்குத் தொடர்பு எற்பட்டது. அந்த நூல்களைப் படிப்பார். ஜே கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சொற்பொழிவைத் தொடர்ந்து கேட்பார். அவருக்கும் திருமலை அவர்களுக்கும் நட்பு ஏற்பட்டது. அவர் வாழ்த்தினைப் பெற்றார்.

    ஜெயப்பிரகாஷ் நாராயண்

    சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களின் மீது மிகுந்த மரியாதையும் பக்தியும் உண்டு. அவரை மாணவர்கள் மகாநாட்டிற்கு அழைத்து வந்தார்.

    பொருளாதார நிபுணரும், காந்தியின் சீடருமான ஜே சி குமரப்பா அவர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

    கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன், க அருணாசலம், அவினாசலிங்கம் செட்டியார், நா மகாலிங்கம், கே எஸ் சுவாமிநாதன், காகா கலேல்கர் போன்றோரையும் அறிமுகப்படுத்தியுள்ளார். ஆர் ஆர் திவாகர், இவரின் மானசீக குரு.

    காந்திதான் அவருக்கு உயிர், அவரைப் பற்றி எடுத்துச் சொல்வதில் வல்லவர். வீடு வீடாக மதுரையிலும் சென்னையிலும் செல்வார். அப்பொழுது கதரைப் பற்றிப் பேசுவார். காந்திய நூல்களை விற்பார். உடன் அவர் உதவியாளர்கள் வருவர்.

    ஒருமுறை, ஒரு பணக்கார வக்கீலிடம் சென்றிருக்கிறார். அவரிடம் காந்தி என்று தொடங்கினாராம். உடனே அவர் கோபப்பட்டு எழுந்து, ’செல்லுங்கள். நன்கொடை எதுவும் கிடையாது’ என்றாராம். இவர், ‘நீங்கள் நன்கொடை தரவேண்டாம். நான் சொல்வதைக் கேளுங்கள்’ என்றாராம். காந்தியைப் பற்றிப் பேசாது, வாழ்வதன் பயனைப் பற்றிப் பேசினாராம். இவர் பேச்சில் மயங்கி, நூறு ரூபாய் நன்கொடை தந்தாராம்.

    மற்றொரு சம்பவம் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியரிடம், ‘உங்கள் மாணவர்களிடம் காந்தியைப் பற்றிப் பேச வேண்டும். பேச அனுமதி தாருங்கள்’ என்றாராம்.

    அவர் ’அதெல்லாம் முடியாது’ என்றாராம்.

    பின் ’உங்கள் ஆசிரியர்களுக்காகவாவது’ என்றாராம்.

    அதுவும் ’முடியாது’ என்றாராம்.

    உங்களுக்காகவாவது என்றவுடன் அவர் சிரித்துவிட்டாராம். பின்னர் மாணவர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து பேசச் சொன்னாராம்.

    மக்கள் மனத்தைக் கவர்வதில் சமர்த்தர். எல்லாம் தன்னலத்திற்கில்லை, காந்திக்காக.

    சொற்பொழிவுகள்

    எல்லாத் தரப்பட்ட மனிதர்களிடையேயும் பேசியிருக்கிறார். 45 ஆண்டுகள் சொற்பொழிவு செய்திருக்கிறார். ஆவேசமாகப் பேசுவார், அன்பாகப் பொருள்பட நகைச்சுவையாகப் பேசுவார். இவர் நகைச்சுவையைக் கேட்கவே, மக்களும் மாணவர்களும் இளைஞர்களும் வருவர்.  ரௌத்ரம் பழகு என்பதற்கிணங்க தலைவர்களிடத்தும் தவறுகள் இருந்தால் துணிச்சலுடன் சாடுவார், அவரிடம் பொய்யில்லை. வறுமையிருந்தும் நேர்மையுண்டு. ஆங்கிலத்திலும் நன்றாகப் பேசுவார்.

    திருச்சி, சென்னை வானொலி நிலையங்களில் பேசியிருக்கிறார்.

    அவர் எழுதிய நூல்கள்

    காந்தி என்ற வாழ்க்கை வரலாற்று நூல், பல பதிப்புகள் வந்தன.

    வினோபா, காந்தியின் ஆத்ம நண்பர். இவருக்கும் ஆத்ம நண்பர். அதற்காக அவர் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.

    பல இதழ்களில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

    உலக இதய ஒலி என்ற மும்மாத இலக்கிய இதழ் ஒன்றை நடத்தினார். 1970 இலிருந்து 20 ஆண்டுகள் நொண்டி நொண்டி நடந்து வந்தது. அ சீ ரா அவர்களும், மகராஜன் அவர்களும்  ஊக்குவிக்க இவ்விதழ் வெளிவந்தது. அ சீ ராவின் ஒரு நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை என்ற கட்டுரை இதில் வெளிவந்தது. பின்னர் இது நூலாக வந்தது. மகராஜன், டி கே சி, நா பா, அகிலன், வல்லிக் கண்ணன், ல சண்முகசுந்தரம், துறைவன் மற்றும் பிரபல எழுத்தாளர்களின் கட்டுரைகள் இதில் இடம் பெற்றன.

    இதில் இடம்பெற்றுள்ள தலையங்கங்கள் சிறப்பு வாய்ந்தவை. அவர் நினைவாக அமுத கலசம் என்ற தலையங்கத் தொகுதியைக் காந்தி கல்வி நிலையம் வெளியிட்டது.

    காந்திஜியின் வாழ்வும் வாக்கும், Voice of Gandhiji,  Joy of living  என்ற இதழ்களையும் நடத்திவந்தார்.

    வட்டத்தொட்டி

    ரசிகமணி டிகேசி  வட்டத்தொட்டி  உறுப்பினராக இருந்தார். அங்கு நடக்கும் இலக்கிய விமர்சனங்களை எல்லாம் ரசித்தார்.  உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு நண்பர்கள். கல்கி, மீ. ப. சோமு, ராஜாஜி, பி ஸ்ரீ, சுந்தா, போன்ற பிரபலங்களுடைய தொடர்பு கிட்டியது. சென்னையில் அதே வட்டத்தொட்டியை  ஜஸ்டிஸ் மகராஜன் ஆரம்பித்தார். மகராஜன் அவர்களுடன்  இலக்கியம் பற்றி இரவெல்லாம் பேசுவார்.  டி கே சி யின் முதன்மை ரசிகர் ல  சண்முகசுந்தரம் அவர்களுடன் நிகழ்ந்த இலக்கிய உரையாடல் பிரமிக்கத்தக்கதாக இருக்கும்.

    குடும்ப நிலை

    1953இலிருந்து 1980 வரை தடுமாற்றம்தான். ஆனால் அவர் அதைப் பற்றிக் கவலைப்படமாட்டார், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, சென்னை முதலிய இடங்களில் வாழ்க்கை அவர் மனைவியால்தான் நடைபெற்றது. அவருடைய கொள்கைப் பிடிப்புக்கு உறுதுணையாயிருந்தது அவர் மனைவிதான், விருந்தினர்களை அழைத்து வருவார், பணம் இருக்காது. கடன் வாங்கித்தான் பிழைப்பு நடக்கும். மேலும், பின்தங்கியோரைத் தம் வீட்டில் தங்க வைத்துப் படிக்க வைப்பார். எப்பொழுதும் சிலர் வீட்டிற்குச் சாப்பிட வருவார்கள். எப்பொழுதும் பூஜ்யமாகவே இருக்க வேண்டும் என்பார், சொத்தோ பணமோ சேர்க்கும் எண்ணம் வரக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பார். அவருடைய உதவியாளர்களும் அப்படியே கடைப்பிடித்து வந்தனர்.

    எத்தனையோ குடும்பங்களைச் சேர்த்து வைத்திருக்கிறார். மண முறிவுகளைத் தவிர்த்திருக்கிறார். மன அழுத்தம் உள்ள இளைஞர்கள், பெரியவர்கள் முதலியோருக்கு ஆலோசனை வழங்கிச் சரிசெய்திருக்கிறார்.

    இவர் பணியைப் பாராட்டிச் சமுதாயம் ‘’காந்திய மாமணி‘ ’என்ற பட்டத்தைக் கொடுத்தது. வைணவக் குடும்பத்தில் பிறந்து, ஆச்சார அனுஷ்டானங்களைத் தவிர்த்து, அண்ணல் வழியில் சென்று, ஹரிஜன முன்னேற்றத்திற்காகவும் கதரின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட என் தந்தையார் T. D. திருமலை அவர்களுக்கு இன்றிலிருந்து நூற்றாண்டு விழா தொடங்குகிறது என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    Share