Blog

  • படக்கவிதைப் போட்டி 283இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 283இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    ஓவியமா? செதுக்கிய சிற்பமா? என்று நம்மை மலைக்கவைக்கின்ற இந்தக் காட்சியை அழகாய் ஒளிப்படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து வழங்கப்பட்டிருக்கின்றது இப்படம்; ஒளிப்பட நிபுணர்க்கு என் நன்றி!

    “வையத்திலே பெண்ணொருத்தி மையமாக வீற்றிருக்க,
    திண்ணென்ற மூட்டையொன்று அவள்பின்னே சாய்ந்திருக்க,
    காளைகளைப் பூட்டிக்கொண்டு காளையிவன் கிளம்பியது
    வணிகத்துக்கோ வேறெதற்கோ விளம்பிடுவீர் வையத்தீரே!”

    வையம் என்ற சொல்லுக்கு உலகம் என்ற பொருளோடு வண்டி என்ற பொருளுமுண்டு!

    இந்தக் காட்சிக்குப் பொருத்தமாய்க் கவிதை தீட்டக் கவிஞர்களை அழைக்கின்றேன் அன்போடு! வருக… உம் கவிதைகளைத் தருக!

    *****

    ”கட்டைமரத்தில் செய்த இவ்வண்டி கண்ணுக்கழகாக இருந்தாலும், அந்நாளில் காணக்கிடைத்த  உண்மை வண்டிகள் இந்நாளில் மறைந்துவிட்டனவே!” என்ற தம் ஏக்கத்தைக் கவிதையில் வெளிப்படுத்தியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கலையை ரசிப்போம்…

    கண்ணுக் கழகாய்க் கட்டைவண்டி
    கட்டை மரத்தில் செய்துவிட்டார்,
    வண்ணம் பலவும் பூசியேதான்
    வனப்பு மிக்கதாய் ஆக்கிவிட்டார்,
    உண்மை வண்டிபோ லிருந்தாலும்
    உண்மையில் வண்டிகள் மறைந்தனவே,
    எண்ணிப் பார்ப்போம் அந்தநாளை
    எழுதிய கலைஞனை வாழ்த்திவிட்டே…!

    *****

    ”வசதிகள் வாய்ப்புகள் வண்டிகள் எல்லாம் சகதியில் வாழ்வோருக்கு வாய்க்கவில்லை; ஏழைகள் பாழைகள் வசதிகள் பெற்றிட ஏதும் செய்திட நாம் முனைவதில்லை” என்று ஓடப்பர்களின் அவலநிலையெண்ணிக் கவலுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    மூக்கணாங்கயிறு!

    உழைக்கும் மக்கள் பிழைத்து வாழும்
    வழிகள் ஏதும் கிடைக்கவில்லை
    அழைக்கும் திசையில் அலையும் நிலைமை
    மாற்றம் ஏதும் கிட்டவில்லை!

    வசதிகள் வாய்ப்புகள் வண்டிகள் எல்லாம்
    சகதியில் வாழ்வோருக்கு வாய்க்கவில்லை
    திகதிகள் மாதங்கள் ஆண்டுகள் மாறினும்
    அகதியாய் வாழ்வதில் மாற்றமில்லை!

    ஏழைகள் பாழைகள் வசதிகள் பெற்றிட
    ஏதும் செய்திட நாம் முனைவதில்லை
    ஊழலில் கொழுத்தோர் ஏறி முன்னேற
    இழுமாடுகள் போலே மாறிவிட்டோம்
    வாக்குகள் விற்று நல்லோரை வீழ்த்தி
    மூக்கணாங்கயிற்றை அவரிடம் கொடுத்துவிட்டோம்
    அமிழ்தம் கிட்ட வாய்ப்புகள் இருந்தும்
    கழுநீர்ப் பானையில் சுவைக்கின்றோம்!

    *****

    வண்டியைக் கண்டதும் தம் உளத்தில் ஊறிய வெவ்வேறான எண்ணங்களைத் தம் கவிதைகளில் வனப்புற வெளிப்படுத்தியுள்ளார்கள் கவிஞர்கள். அவர்களைப் பாராட்டுகின்றேன்!  

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

    இரட்டைக் காளைப் பூட்டி விட்ட எங்க மாட்டு வண்டி
    இறுக்கிப் பிடிச்சக் கயிற்றோட வண்டிக்கார அண்ணே
    ஆடியாடி உடம்பை அசைக்கும் எங்க பாசக்கார அண்ணி
    எல்லாச் சுமையும் சுமக்கத்தானே எங்க மாட்டு வண்டி!

    சல்சல்லுனு பறக்கப் போற எங்க வண்டியப் பாரு
    சீறிப் பாயும் சிங்கமாகக் கிளம்பப் போறான் பாரு
    தாவித்தாவிப் புழுதி கிளப்பத் தயாராயிட்டான் பாரு
    மொத்தத்திலே நம்ம விமானம் இது என்பதைக் கூறு!

    கிராமத்துக்கே பெருமை சேர்க்க இந்த மாட்டுவண்டி
    குடும்பத்தோடு குதூகலமாய் நாம் போகப்போற வண்டி
    மனசு முழுக்க சந்தோசத்தை வாரிக் கொடுக்கும் வண்டி
    வாங்க நாமும் பயணம் செய்வோம்
    நம்ம மாட்டு வண்டி!
    அட நம்ம இரட்டை மாட்டு வண்டி!
    வாழ்க்கைத் தத்துவம் சொல்லுற வண்டி!

    ”கிராமத்துக்கேப் பெருமை சேர்க்க இந்த மாட்டுவண்டி; குடும்பத்தோடு குதூகலமாய் நாம் போகப் போற வண்டி” என்று கிராமத்து மாட்டுவண்டிப் பயணத்தை நினைவுகூரும் திருமிகு. சுதா மாதவன், ”நம்ம இரட்டை மாட்டுவண்டி; வாழ்க்கைத் தத்துவம் சொல்லுற வண்டி” என்று முத்தாய்ப்பாய்த் தம் கவிதையை முடித்திருக்கின்றார். அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • உண்மை என்ன: தமிழ்நாடு வடிவத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடம் உள்ளதா?

    உண்மை என்ன: தமிழ்நாடு வடிவத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடம் உள்ளதா?

    அண்ணாகண்ணன்

    தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடங்கள், தமிழ்நாடு என்ற எழுத்துகளின் வடிவத்தில் உள்ளதாக இன்று ஒரு படத்தைப் பார்த்தேன். அது உண்மையா? இதோ ஓர் அலசல்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • விரலழுத்த மருத்துவம் – நிர்மலா ராகவன் நேர்காணல்

    விரலழுத்த மருத்துவம் – நிர்மலா ராகவன் நேர்காணல்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    விரலழுத்த மருத்துவம் (Reflexology) என்பது 3,000 ஆண்டுகளுக்கு முன்னர், எகிப்து நாட்டு மருத்துவ முறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது என மருத்துவர் ஒருவரின் கல்லறையில் காணப்படும் சித்திரங்களிலிருந்து அறிய முடிகிறது. வாய்வழியாக அதைப் பரப்பியிருக்க வேண்டும். இந்தியாவிலும் சீனாவிலும் புத்தருடைய பாதங்களில் இம்முறை வைத்தியம் காணப்படுகிறது.

    மருத்துவர்கள் மட்டுமில்லாமல் இதை யார் வேண்டுமானாலும் எளிதாகக் கற்கலாம், நோயாளிகளுக்கு மட்டும்தான் இம்முறை பயன்படும் என்பதில்லை, உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க, பிறருக்கும் உதவி செய்ய முடியும் என்று டாக்டர் வில்லியம் பிட்ஸ்ஜெரால்டு (Dr.William Fitzgerald) என்பவர் 20ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார்.

    கை அல்லது கால் விரல் ஒன்றின் நுனியை இரு விரல்களால் அழுத்தினால், அதனுடன் தொடர்புள்ள வேறொரு பாகத்தில் சில விநாடிகள் சொரணை போய்விடும் – மயக்க மருந்து கொடுத்தாற்போல்.

    இதே உத்தியைப் பயன்படுத்தி, உடலில் எந்தப் பாகத்தில் சிக்கல் இருக்கிறது என்று கண்டறியலாம். அதே போல், அந்தச் சிக்கலை ஒரு குறிப்பிட்ட பாகத்தில் அழுத்துவதன் மூலம் சரி செய்யலாம். எந்தெந்தப் பாகத்தில் விரல்களால் அழுத்தினால் எந்தெந்தச் சிக்கல்களைச் சரி செய்யலாம் என்பதை இந்த அமர்வில் நிர்மலா ராகவன் விளக்குகிறார். அத்துடன் படுப்பதற்கான நிலைகள், சவாசனம் செய்யும் முறை, நீண்ட நேர விமானப் பயணத்தில் தூங்குவதற்கான வழிமுறை ஆகியவற்றையும் எடுத்துரைக்கிறார். விரலழுத்த மருத்துவத்தை மற்றவர்களுக்குச் செய்த பிறகு நமக்கு அது தொற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

    பயனுள்ள இந்த நேர்காணலைப் பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தீபாவளிப் புறப்பாடு (சிறுகதை)

    தீபாவளிப் புறப்பாடு (சிறுகதை)

    வசுராஜ்

    “இன்னிக்குக் காலையில நரி முகத்துல முழிச்சேனா? இல்லையே எப்போதும் போல் எனதருமை மனைவி பிரேமா முகத்துல தான முழிச்சேன்? காலையில சுடச்சுட ஸ்டிராங் காபி கைக்கு வந்தது.

    எப்போதும் “போட்டு வைச்சா எடுத்துக் குடிக்கக் கூடத் தெரியாதா? மகாராஜாவுக்குக் கைல கொண்டு கொடுக்கணுமா?” என்ற கேள்வி வரும். மேசையில் உள்ள காபிக் கப்பை கிரிக்கெட்ல  ஜெயிச்சுக்  கிடைச்ச கோப்பையை  எடுப்பது போல் பவ்யமாக எடுத்து வந்து பால்கனியில் உட்கார்ந்து குடிப்பேன். சூடு குறைவாக  இருக்கும் அல்லது சர்க்கரை அதிகமாக இருக்கும். இன்னிக்கு எல்லாம் மிகச் சரியாய் இருந்ததுடன்  கைக்கே வந்துவிட்டது. உள்ளுக்குள் அலாரம் அடித்தது  ‘ஏதோ பெரிய செலவு வரப் போகிறது.’  சரி, நல்ல காபியை ரசித்துக் குடிப்போம்’ எனக் குடித்து முடித்தேன்.

    “வெந்நீர் போட்டிருக்கேன், குளிச்சுட்டு வரீங்களா?” என் மனைவி.

    எட்டி வானத்தைப் பார்த்தேன். மேகமெல்லாம் இல்லை. குளிச்சுட்டு சுவாமி கும்பிட்டுவிட்டு வந்தால் மேசையில் சுடச்சுடப் பொங்கல், கொத்சு.  சந்தேகமே இல்லை, ஏதோ ஒரு மர்மம் இருக்கு. சாப்பிட உட்கார்ந்தேன்.

    “பிரமாதம், இன்னிக்கு என்ன விசேஷம்? இதைப் பண்ணின கைக்கு வளையல் தான் போடணும்”.

    அடுத்த நிமிஷம் “அடடா ஓட்ட வாய் ராமநாதா” என்று எனக்குள் திட்டினேன்.

    அவளைப் பார்த்தேன். மோகனப் புன்னகை.

    “இன்னிக்கு தீபாவளிக்குப் பொருள் வாங்க, தி.நகருக்குப் போகலாமா?” ஆர்வமாய்க் கேட்டாள்.       

    “ராமநாதா (நான்தான்) இதை இதைத் தான எதிர்பார்த்த?”  எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

    “இந்தக் கொரோனா காலத்துல  தி.நகருக்குப் போய்த்தான் வாங்கணுமா? ஆன்லைன்ல பார்க்கலாமே” என்றேன்.

    “நேர போய்ப் பார்த்து தொட்டுப் பார்த்து வாங்கினால் தான் திருப்தியாய் இருக்கும். இவ்வளவு நாள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தாச்சு.  இப்ப தீபாவளிக்காவது  நேரில் போய் வாங்கலாம். தீபாவளி நெருங்க நெருங்கக் கூட்டம் அதிகமாயிடும். இன்னிக்கு என்னோட ராசிக்கு நாள் நல்லா இருக்காம்.  டிவியில சொன்னாங்க” என்றாள்.

    “என்னோட ராசிக்கு இன்னிக்கு சந்திராஷ்டமம்னு சொல்லி இருப்பாங்களோ” என மனத்தில் நினைத்துக்கொண்டேன். சாப்பிட்ட பொங்கல், தொண்டை வரை இருந்ததால் செஞ்சோற்றுக் கடன் கருதி “சரி போகலாம்” எனத் தலையாட்டினேன்.

    அடுத்த  15 நிமிடத்தில் பிங்க் புடவை, பிங்க் மாஸ்க்குடன் தயாராகி நின்றாள்.

    “இவங்களை நம்பி எத்தனை பேருக்குப்  பிழைப்பு நடக்குது, நம்ம பிழைப்பு தான் தலையாட்டி பொம்மையாகி விட்டது” நானும் கிளம்பி காரை எடுத்தேன்.

    சாலை முழுவதும் மக்கள் கூட்டத்தைப் பார்த்த போது, கொரானாவுக்குத் தடுப்பு மருந்து தயாராகி விட்டதோ எனச் சந்தேகம் வந்தது.  ஒரு வழியாக வந்து சேர்ந்து,  மனைவியைத் துணிக் கடையில்  இறக்கி விட்டுவிட்டு, பனகல் பார்க் பக்கம் காரை நிறுத்திவிட்டு அந்தக் கடைக்குப் போனேன். பட்டுப் புடவைப்  பக்கம் தான் இருப்பாள் என்ற உறுதியான  நம்பிக்கையுடன் அந்தப் பக்கம் போனேன். நல்ல கூட்டம். தள்ளி பிங்க் புடவை, பிங்க் மாஸ்கில் தெரிந்தாள்.

    பக்கத்தில் போனால் இதை எடுக்கவா,  அதை எடுக்கவா அல்லது ரெண்டையும் எடுக்கவா எனக் கேட்பாள்.  நம்ம நாக்குல தான் சனி பகவான் குடி கொண்டிருக்காரே,  தாராளமாய் எடுத்துக்கோயேன்னு சொல்லிடுவோம். அவளாவே  எடுத்தால் ஒரு புடவையோட  நிறுத்த சான்ஸ் இருக்கு. இந்தக் கூட்டத்தில் யாரும், விளம்பரத்தில் திரும்பத் திரும்பச் சொல்லும் போதுமான இடைவெளி கடைப்பிடிக்கவில்லை. இங்கேயே உட்கார்ந்துக்கலாம்  எனக் காலியாக இருந்த இருக்கையில் உட்கார்ந்தேன்.

    என்னைப் போலவே அப்பாவிக் கணவன்மார்கள் உட்கார்ந்திருந்தார்கள். என் மனைவி என்னைப் பார்த்துவிட்டாள். நான் எடுத்தாச்சான்னு சைகையில் கேட்டேன். அவள் பக்கத்தில் நிற்பவரைப் பார்த்தாள். அட, அந்த மீசைக்காரன் எதுக்கு என் பெண்டாட்டிக்கு இவ்வளவு பக்கத்தில் நிக்கறான்? விவஸ்தை இல்லாதவன் என மனத்துக்குள் திட்டினேன். பக்கத்தில் போகலாமா  என யோசித்தேன். வழி எங்கும் கூட்டம். இவர்களைக் கடந்து போகணுமே! அதிலும் சிலர் மாஸ்க்கை இறக்கிவிட்டுப் பேசிக் கொண்டிருந்தனர்.  என் மனைவி தைரியசாலி. அவளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். திரும்பவும் முடிச்சாச்சா எனச் சைகையில் கேட்டேன். அவள் பக்கத்தில் இருப்பவரிடம் என்னைச் சுட்டிக் காட்டி ஏதோ சொன்னாள். “எங்க வீட்டுக்காரர்  அங்க தான் நிக்கறார். ஜாக்கிரதை, தள்ளி நில்லுன்னு  சொல்லியிருப்பா. நாமதான் வீரனாச்சே“ எனக் கொஞ்சமாக இருந்த மீசையை முறுக்கிக்கொண்டேன்.

    “என்னங்க, இங்க எதுவும் சரிப்படலை. போகலாமா?” என் பக்கத்தில் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் என் மனைவி, அதே பிங்க் புடவை, பிங்க் மாஸ்க். “அடப்பாவி,  அது யாரு?ன்னு வடிவேலு ஸ்டைலில் மனத்துக்குள் கேட்டுக்கொண்டேன். அந்த பிங்க் புடவை, பிங்க் மாஸ்க் பக்கத்தில் உள்ளவர் என்னை நோக்கி வருவது போல் தெரிந்தது. “வா, சீக்கிரம் போகலாம். இந்தக் கூட்டத்தைப் பார்த்தால் எனக்குக் கொரானா வந்துடும் போல இருக்குன்னு மளமளவென வெளியேறினேன்.

    வெளியே வந்ததும் “புடவை ஆன்லைன்ல  வாங்கிக்கலாம். வளையல் வாங்கணும்னு சொன்னயே, வேணா வாங்கிக்கோ!” என்றேன். நான்தான் சொன்னேனே  சனி பகவான் என் நாக்குல இருக்கார்னு.

    என் மனைவி “நீங்க நிஜமாவே தெய்வம்க” என்றாள்.

    “கடவுளே! வளையல் கடையில எதுவும் இவளுக்குப் பிடிக்காமப் போகணும். அந்த மீசைக்காரர் வராம இருக்கணும்” என வேண்டிக்கொண்டே அவளைப் பின் தொடர்ந்தேன்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 105 (வாரி)

    சேக்கிழார் பாடல் நயம் – 105 (வாரி)

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    பாடல் :

    வாரி   சொரியும்  கடல்முத்தும்  வயல்மென்  கரும்பிற்  படுமுத்தும்
    வேரால் விளையும்  குளிர்முத்தும்  வேழ  மருப்பின்  ஒளிர்முத்தும்
    மூரல்  எனச்சொல்  வெண்முத்த  நகையார்  தெரிந்து  முறைகோக்கும்
    சேரர்  திருநாட்  டூர்களின்முன்   சிறந்த  மூதூர்  செங்குன்றூர்.

    பொருள் :

    கடலில் மிகவும்  எடுத்தெறியம்  வண்ணம்   விளைகின்ற ஒளி வீசும் முத்துக்களையும், வயலில்  விளைகின்ற கரும்பிலே படுகின்ற முத்துக்களையும், மூங்கில்களில் விளைகின்ற குளிர்ச்சியுடைய முத்துக்களையும், யானைத்  தந்தங்களில் களிற் பிறக்கும் விளக்கமுடைய முத்துக்களையும் இம்முத்துக்களே இவர்களது பல்வரிசைகள் என்று சொல்லத்தக்க வெண்முத்துப் போன்ற நகையினை யுடைய பெண்கள், வகை தெரிந்து முறைப்படக் கோக்கின்ற சிறப்புடைய, சேரர்களது திருநாட்டிலே உள்ள பல ஊர்களிலும் முன்வைத்து எண்ணும்படி சிறந்த பழமையான ஊரே    திருச்செங்குன்றூர்.

    விளக்கம்:

    முன்பாட்டிற் சொல்லிய கடல், நிலம் ,மலை  வளங்களிலே சிறந்த வளத்தினை அவ்வந்நிலங்களில் முறைப்பட  வைத்து வளப்படுத்திக் காட்டுகிற  அழகைக்  காண்க. முத்துக்கள் பற்பல இடங்களிற் பிறக்கு மென்பது நூல் துணிபு. முன்குறித்த இம் மூன்றிடங்களினும் வரும் ஏனைய வளங்கள் தவிர, முத்து என்பதொருவளனே இங்கு இம் மூன்றிடங்களினும் விளையவும்,  அவை ஊர்களின் வந்து உடன் பெருகிமல்கவும் உள்ள சிறப்புக் கூறுகின்றது காண்க. திரைசெய் கடலின் வளனுக்கு இங்கு வாரி சொரியும் கதிர்முத்தும் என்றும், திருந்து நிலனின் செழுவளனுக்கு வயல்மென் கரும்பிற் படுமுத்தும் என்றும், வரையின் வளனுக்கு வேரல் விளையுங் குளிர்முத்தும் வேழமருப்பின் ஒளிர்முத்தும் என்றும் முறையே வகுத்துக் காட்டினார்.

    முத்து என்றதொரு வளனை  மட்டுமே  காட்ட.  இதுபோலவே பிறவும் காண்க எனக் கூறியதாயிற்று. மலை நாடாதலின் அச்சிறப்பு நோக்கி அதற்கு வேரல்  முத்தும் வேழ முத்தும் என இரட்டிப்பு வளன் கூறினார். வேரல் – மூங்கில். வேழம் – யானை. இவ்விரண்டும் குறிஞ்சிநிலக் கருப்பொருள்கள். இவற்றின் வரும் முத்துக்கள் அப்பொருள்களில்  உண்டாகும்  வளன்களாம்.

    வாரி சொரியும் கதிர் முத்தும் – சொரியும் – மிகுதி காட்டிற்று. திருமறைக்காடு, கொற்கை முதலிய  முத்துக் குளிக்கும் கடற்றுறைகளில் அவ்வப்பருவக்  காலங்களில் இவை மிகுதியாய்ச் சொரியும் காட்சி காணத்தக்கது.

    “உப்பளத்தின், முன்றில் தோறுஞ் சிறுமடவார் முத்தங் கொழிக்கு மறைக்காட்டு“   முதலியவை காண்க.

    வயல் மென் கரும்பிற் படும் முத்து – திருந்து நிலனின் செழுவளன் என்றதற்கேற்ப, அவ்வாறு திருந்திய வயல்களில்  விளைவித்த கரும்பு திருந்த விளைந்து மனிதர் கைப்படும் முத்து. படுதல் – விளைதல், கைப்படுதல் என இருபொருளுங்கொள்ள நின்றது. வயலின் விளைகின்ற கரும்புகள்  அத்தனையிலும் காண்பரிதாகிக் குறித்த சிலவற்றில் மட்டும் விளைவதாம். அவைதானும் மனிதர் கைப்படுதல் மிக அரிதாம். ஆதலிற் படும் என்றார்.

    வேரல் விளையும் குளிர் முத்தும் வேழமருப்பின் ஒளிர் முத்தும் – ஒரோர் காலத்தன்றி இவை மனிதர் கையில் அங்கங்குக் கிடைப்பரிதாய் மலைகளில் உதிர்க்கப்பட்டு மழை வெள்ளத்தின் வழி, ஆறுகளில் அடித்துக்கொண்டுவரப் பெறும் நாட்டு வளன்கள். கதிர் முத்து, படு முத்து, குளிர் முத்து, ஒளிர் முத்து என்ற நால்வகை அடைமொழிகளின் வேறுபாடு அவ்வம் முத்துக்களுக்குரிய சிறப்பியல்புகள் குறித்து நின்றது. கடன் முத்தம் சலசம் எனப்படும். நீரிற் பிறப்பதால் நீரோட்டம் என்ற கதிர்ப் பரப்பு உடையது. இவை இப்பி சங்குகளிற் பிறப்பன. கரும்பிற்படும் முத்தம் இறுகிக் கடினமானது.

    “கருஞ்சகட மிளகவளர் கரும்பிரிய வகம்பாயுங்\ கழுமலமே“ என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமுங் காண்க. மூங்கின் முத்துக் குளிர்ந்த கிரணங்களும், யானை முத்துத் தொகுதியாய்க் கூடிய ஒளியும் உடையன என்பர். இவற்றின் விரிவுகள் திருவிளையாடற் புராணம் மாணிக்கம் விற்ற படலத்துள்ளும் பின்னும் இவைகட்குரிய கலைஞான நூல்களுள்ளும் கண்டு கொள்க.

    முன்பாட்டினும் இப்பாட்டினும் கடலினின்றும் நாடு சென்று, அங்கு நின்று மலையேறிச் செல்லும் பொருள் வைப்பு முறையும் காண்க. உயிர்களை, அவை வீழ்ந்து நின்ற கடலாழத்தினின்றும் ஏற்றி மலையுச்சியிற் சேர்த்தி வைக்கும் நாடு என்பது உட்குறிப்புப் போலும். இது பற்றியே வரும்பாட்டில்

    “உலகேறும் பெறுமை யுடையதுதான்“என்றதும் காண்க. “திருத்தொண்டத் தொகையாலுலகு விளங்க வரும், பேறு தனக்குக் காரணராம்“ (501) என முடித்துக் காட்டியபடி, இந்நாயனார் உலகிற்கு  உதவிய பேறு இந்நாட்டின் நன்மைக்குப் பொருத்தமுடைத்து எனப் பொருந்தக் காட்டிய குறிப்பும் காண்க. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனக் கூறும் வைப்பு முறையை  மாற்றி நெய்தலை முதலாக வைத்துக் கூறியதற்கும் இதுவே கருத்துப் போலும்.திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்தும் பிற இடங்களிலும் காண்க.  அன்றியும், இந்நாடு மழுவீசியதாற், கடலினின்றும் போந்துபெற்ற நாடாதலின் அப்பிறப்பிடத்தின் சிறப்பும் பண்பும் தோன்ற நெய்தலை முதலிற் கூறினார் என்றலுமாம். சிருட்டி முறையிலும் நீரினின்றே நிலனுண்டாவதா மென்பர்.

    தீதிலாத் திருத்தொண்டத் தொகை (35) என்ற இடத்துப்பார்க்க. வளன் பலவற்றுள்ளும் முத்துக்களை எடுத்துக் கூறிச் சிறப்புரைத்ததும் அக்குறிப்பினைப் பற்றியதேயாம். என்னை? முத்து – விடுபடுவது என்ற பொருள் தருதலானும், முத்தியும் அக்காரணம்பற்றியே அப்பெயர் பெறுதலானும், இங்கு இந்நாடு நெய்தல் நிலம், மருதநிலம், குறிஞ்சி நிலம்,   எங்கணும் உயிர்களுக்கு வீடுபேற்றினையே காட்டும் முத்திப்பொருள் தருவதாம் எனப் பொருத்திக் கூறியபடி. திருமணம் காண வந்தார்க்கெல்லாம் முத்திப் பேறளித்த எமது ஆளுடைய பிள்ளையாருக்குத் திருமண அணிகலன் முற்றும் முத்துக்களாற் செய்து குறியிட்டுக் காட்டிய ஆசிரியர் திறமுங் காண்க.. அச்சிறப்பினை இங்கு வைத்து இதன் உள்ளுறை

    சிறப்பையும் அணிநலனையுங் கண்டு களிக்க. உயிர்களின் நால்வகைத் தோற்றமும், அவை பெறும் நால்வகைப்பேறும் குறிக்க நால்வகை முத்துக் கூறினார் என்றலுமாம்,முல்லையும் உடன் கொள்ளப்படுமென்று முன்னர்க்குறித்தற் கேற்பக் குறிஞ்சிக்கு இரண்டு முத்துக்கள் கூறிய பொருத்தமுங்காண்க.

    மூரல் எனச்சொல் வெண்முத்த நகையார் – இம்முத்துக்கள் இவர்களின் மூரலேயாம் என்று உவமிக்கப் பெறுகின்ற பல்வரிசையினையுடைய பெண்கள். மூரல் – புன்முறுவல். பற்கள் முத்துப்போல்வன என்றுவமிப்பது வழக்கு. முத்துக்கள் பல்போல்வன என்ற  சிறப்பும் காண்க. நகை -ஆகுபெயராய்ப் பல்வரிசையை உணர்திற்று.

    அறிவில்லாத பொருள்கள் ஆகிய கடல், கரும்பு, மூங்கில், யானைக் கோடு இவை தாமும் அந்நாட்டில் முத்துடையனவாயின், அறிவும் உயிரும் உள்ள பெண்களும் முத்துடையவர்களேயாம் என்றார். அம்முத்துக்கள் எவையும் எமது மூரலுக்கு ஒப்பாகா என அவைகளைக் கண்டு அவர் நகைக்கின்றனர் என்ற நயமுங் காண்க.

    தெரிந்து முறைகோக்கும் – ஒளி – வடிவு – கனம் – கதிர் என்பனவற்றின் வேற்றுமை ஒற்றுமைகளைத் தெரிந்து எம்முறையில் முறைப்படுத்திக் கோத்தால் அழகும், அதிக மதிப்பும் பெறுமோ அம்முறையிற் கோக்கின்ற, இப்பாட்டாலே அந்நாட்டுக் கருப்பொருள் உரிப்பொருள்களின்சிறப்பும், நீர்வளம், நிலவளம், பொருள்வளம், மக்கட்சிறப்பு, தொழில் முதலிய பலவும் அழகுபெற ஆசிரியர் முறைகோத்து அமைத்தது கண்டு மகிழ்க.

    Share
  • தமிழ்த்தீ!

    தமிழ்த்தீ!

    ஏறன் சிவா 

    சோலைதரும் எழிலென்றும் அங்கே தோன்றித்
    துள்ளிவந்து குளுமைதரும் தென்றல் என்றும்
    ஆலைதரும் அடிக்கரும்புச் சாறே என்றும்
    அமுதென்றும் அறமென்றும் நல்லன் பென்றும்
    பாலைதரும் கள்ளென்றும் பறவை பேசும்
    பனியொத்த ஒலியென்றும் இசைப்பாட் டென்றும்
    கோலமிகு மொழியென்றும் தமிழைக் கொஞ்சிக்
    குலைத்ததெல்லாம் போதுமினித் தீயே என்போம்!

    கனியென்றும் சுளையென்றும் அதிலெ டுத்த
    களிப்பூட்டும் கனிச்சாறே என்றும் நல்ல
    அணியென்றும் அணிதந்த அழகே என்றும்
    அரும்பென்றும் மலரென்றும் அதன்தேன் என்றும்
    பனியென்றும் பனிபோன்ற குளுமை என்றும்
    பஞ்சென்றும் பஞ்சொத்த மென்மை என்றும்
    இனியென்றும் தமிழ்த்தாயை இவ்வா றெல்லாம்
    இயம்பாதீர் தீயென்றும் இயம்பு வீரே!

    இறைமுகத்தை எல்லோரும் அறிவார்! உன்றன்
    எழில்முகத்தை எல்லோரும் அறிவார்! தூய
    அறமுகத்தை அகமுகத்தை அறிவார்! நல்ல
    அன்பொத்தத் தாய்முகத்தை அறிவார்! உன்றன்
    கறையில்லா கனிமுகத்தைக் கண்ட போதும்
    கடுகளவும் காணவில்லை பகைவர் உன்றன்
    புறமுகமாய்ப் பொங்கியெழும் தீ முகத்தை
    புறப்படுவாய் அம்முகமும் காட்டு வாயே!

    மென்காற்றும் ஒருநாளில் புயலாய் மாறும்
    மேல்வானும் சினம்வந்தால் இடியாய்ச் சீறும்
    அன்பினையே தந்தவளாய் இருந்தாய் போதும்
    அடங்காத சினத்தீயை இங்கே காட்டி
    முன்னைக்கும் முன்பிருந்த வளமை யோடு
    முடிதாழா முடிசூடும் நிலைய டைந்து
    தென்மொழியே பெருந்தீயாய்ப் பரவ வேண்டும்
    தமிழென்றால் தீயென்றும் காட்டல் வேண்டும்!

    Share
  • நீலவால் பஞ்சுருட்டான்

    நீலவால் பஞ்சுருட்டான்

    இன்று காலை இந்தப் பறவையைப் பார்த்தேன். கூரிய அலகுடன் தலையைத் திருப்பிக்கொண்டே இருந்தது. முதலில் மீன்கொத்தியைப் போன்று இருந்தது. பிறகுதான் தெரிந்தது, இதன் பெயர், நீலவால் பஞ்சுருட்டான். இது, ஒருவகைப் ஈப்பிடிப்பான் பறவை. குளம் குட்டை போன்றவற்றின் கரைகளில் காணப்படும். நான் பார்த்தபோது இது, மூங்கில் கழியில் அமர்ந்திருந்தது.

     

    படத்திற்கு நன்றி – By A.Savin (Wikimedia Commons · WikiPhotoSpace) – சொந்த முயற்சி, FAL, https://commons.wikimedia.org/w/index.php?curid=89642206

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பரிக்கா (சிறுகதை)

    பரிக்கா (சிறுகதை)

    பாஸ்கர் சேஷாத்ரி

    சார், நீங்க இவங்களுக்கு என்ன வேணும்?

    தம்பி சார்.

    பேரு?

    வரது சார்

    அவங்க பேரு?

    பிரமிளா

    என்ன வயசு?

    நாற்பது சார்

    தீப்பிடிச்சப்ப நீங்க எங்க இருந்தீங்க?

    ஆபிஸ்ல , நைட் ஷிபிட்

    யார் சொன்னாங்க?

    அவங்க ஹஸ்பன்ட்.

    எங்க அவரு?

    படுத்துண்டு இருக்கார்

    வாஹ்ட்

    சாரி சார் போதை சார்

    ஓ அதான் இஷுயுவா.

    எப்படி பேசினாருன்னு புரியல. ஆனா பிரச்சினைன்னு புரிஞ்சுண்டு வந்துட்டேன்

    எங்க வேலை செய்யறீங்க?

    பிரேக்ஸ் இந்தியா சார்.

    நீங்க போய் உக்காருங்க.

    நான் போய் அவங்களைப் பாக்கலாமா?

    வாட் டூ யு மீன், இது போலீஸ் கேஸ்

    உங்க முகத்துக்காக நான் கொஞ்சம் பேசினேன்

    உங்களுக்கு அந்த க்ராவிடி தெரியாது .

    தெரியும் சார். முதலுதவி கொஞ்சம் தெரியும்

    சார் டோன்ட் ஜோக் ஹியர். சிஸ்டர்ஸ் உடம்பைத் தொடக்கூட முடியல. கையோடு எல்லாம் வரது

    ஐயோ நாராயணா.

    ரிலாக்ஸ் சார். வாசல்ல அவுட் போஸ்டுல ஒரு புகார் கொடுத்துட்டு வாங்க. கையில எதாவது டாகுமென்ட் இருக்கா.

    டிரைவிங் லைசென்ஸ்.

    நோ யூஸ்.

    நீங்க போங்க . அவங்க என்ன செய்யணும்னு சொல்லுவாங்க

    சார் வெளிய இருந்து பாக்கலாமா?

    ஒன்னும் தெரியாது.

    குழந்தைங்க எல்லாம் சின்னப் பசங்க சார்

    சார் நான் இப்ப தியேட்டருக்குப் போறேன். டோன்ட் ஹோல்ட் மீ. எண்பது சதம் தீக்காயங்கள்.

    சார். ஒரு நிமிஷம் சார்.

    வாணி இவரைக் கூட்டிட்டுப் போங்க . உடனே கூட்டிட்டு வாங்க .

    சார் அங்க போய் ஏதும் பேசாதீங்க.

    உள்ளே பேன் காற்றில் வெள்ளைத் துணி லேசாக அசைந்தது .

    பரிக்கா.

    சார் பேசாதீங்க

    ஒரு நிமிஷம் மா.

    பரிக்கா.

    மெல்ல தொட்டவுடன் உடல் கூழாய்க் கையில் ஒட்டிக்கொண்டது .

    சார். நான் டாக்டரைக் கூப்பிடுவேன், கிளம்புங்க .

    பரிக்கா. அவள் உடம்பெல்லாம் வெள்ளைத் துணி. முகமெல்லாம் கட்டு. அங்கெங்கே கறுப்பு தேய்ந்த முகம் . அறை முழுக்க மண்ணெண்ணெய் வாசம்

    பரிக்கா.

    சட்டென அவள் கண்கள் திறந்தன. இமைகளைத் திருப்பவில்லை. திறந்த நோக்கில் பார்வை.

    வரது எனக் கூப்பிட்டது போல இருந்தது.

    உதடுகள் அசைந்தன.

    வார்த்தைகள் வெளியே வரவில்லை . .

    சார் கிளம்புங்க.

    போம்மா நான் பாத்துக்கிறேன் .

    பரி.

    அவள் பதில் பேசவில்லை .

    சார், அவங்க செத்துட்டாங்க

    சும்மா இரும்மா.

    பல்ஸ் இல்லை.

    அவங்க என்ன தான் பாக்கறாங்க.

    இல்ல சார்.

    பேசினாங்க மா

    தெரியும். அப்புறம்தான் உயிர் போச்சு.

    ம்மா, அவங்க என்ன கூப்பிட்டது காதுல விழுந்ததா?

    தெர்ல சார், போலாம்.

    கொதிக்கற பால் பட்டவுடன் எரிச்சல், சிகரட் சூடே தாங்க முடியல, எப்படிக்கா நீ?

    சார் உங்களை டாக்டர் கூப்பிடறாரு.

    வேணாம்பா, அவங்க என்கிட்டே பேசிட்டாங்க.

    என்னை வரதுன்னு கூட்டாங்க. உதடு அசஞ்சுது பா

    டாக்டர் அவர் வரமாட்டேன்கறாரு .

    வரது , ஷி டைட் எனிவே பீஸ்புல்லி.

    சொன்னங்க வாணி.

    சரி நம்ப பார்மாலிடீஸ் பாக்கலாம். ஆனாகூட அவங்க பேசினது த்ரில் வரது .

    ஆமா சார். கொஞ்சம் மனசு ஆறுதலா இருக்கு சார்.

    வாணி ரிப்போர்ட் எல்லாம் ரெடி பண்ணு. அடாப்சி செக் பண்ணு.

    எல்லாம் ரெடி சார்

    சார் டைம் ஆப் டெத் என்ன சார் போட?

    அவரு எப்ப உள்ள போனாரு

    பதினொன்றரை சார்.

    சரி அப்ப நிஜ டைம் ஒம்போதரைன்னு போடாம, பதினொன்னு இருபதுன்னு போடுங்க. டூ இட் ரைட்.

    சரி சார்.

    வரது தேநீர்க் கோப்பையைக் கைமாற்றிக்கொண்டு இருந்தான்.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 21 (புதல்வன்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 21 (புதல்வன்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    அகப்பாடல்களில் நேரில் இடம்பெறும்; வயதில் சிறிய பாத்திரம் புதல்வனாவான். அவன் பேசுவதும் கேட்பதும் நாடக வழக்கில் எங்கும் இல்லை. செவிலி, தலைவி,  தலைவன், காதற்பரத்தை, தோழி அனைவரது கூற்றிலும் இன்பமிகு இல்லறத்தின் அடையாளம் ஆகின்ற  பாத்திரமாக அமைகிறான்.

    செவிலி ஏத்தும் புதல்வன்

    செவிலிகூற்றுப் பத்தின் பாடல்கள் புதல்வனால் தலைவியின் இல்லறம் பெருமை பெறுவது பற்றிப் பேசுகின்றன. கணவனுடனும் தன் மகனுடனும் சேர்ந்து தலைவி துயில்கின்ற நிலையையும்; புதல்வன் சிறுதேர் உருட்டும் தளர்நடை பார்த்துத் தலைவன் மனம் மகிழ்வதையும் எடுத்துக்கூறுவதுடன்; மகளைப் ‘புதல்வன் தாய்’ என்று அழைக்கிறாள் (ஐங்.- 401-403, 405, 408, 409, 410).

    காதற்பரத்தையின் கூற்றில் புதல்வன்

    தலைவி மேல் சினம் கொள்ளும் போது கூட அவள் புதல்வனைப் பெற்றுத் தந்த பெருமைக்குரியவள் என்னும் கருத்துப்பட;

     “புதல்வன் தாய்” (குறு.- 8& ஐங்.- 90)

    என்று சுட்டுகிறாள் காதற்பரத்தை. இது அன்றைய ஆண் முதன்மைச் சமுதாயத்தின் கொள்கை அடிப்படையில் அமைந்த அழைப்பு முறை ஆகும். ஏனெனில் ‘புதல்வி தாய்’ என்ற பெருமை தொகையிலக்கியத்தில் எந்தத் தாய்க்கும் வழங்கப்படவில்லை.

    தோழியின் கூற்றில் புதல்வன் 

    புதல்வனை ‘மாமகன்’ என்றழைத்து அவன் தலைவியைத் தழுவிக்  கொண்டு அழும் இன்குரல் பற்றிப் பேசுகிறாள் தோழி. தலைவன் வினை முடித்து மீண்டு வந்து விட்டான் ஆதலால்;

    “கவவுக்கொள் இன்குரல் கேட்டொறும்
    அவவுக்கொள் மனத்தேம் ஆகி”ப் (நற்.- 212)

    பிரிந்து ஆற்றி இருந்த சோதனைக்காலம் முடிவுற்றது என்கிறாள்.

    தலைவன் கூற்றில் புதல்வன்

    தூங்குகின்ற பூங்கண் புதல்வன் அருகே நின்று கொண்டு;

     “வந்தீக எந்தை” (நற்.- 221)

    என்று குரல் கொடுத்துத் தன் வருகையை மகிழ்ச்சியோடு தலைவி  எதிர்கொள்வாள் எனத் தலைவன் பேசுகிறான்.

    தன் மனைவியைப் ‘புதல்வன் தாய்’ என்று அழைத்து அவள்
    சினத்தைத் தவிர்க்க முயலும் தலைவனை; ‘மாயப் பொய்மொழி’
    பேசுபவனாகத் தலைவி ஏசுகிறாள் (அகம்.- 6)

    தலைவி பேச்சில் புதல்வன்

    வினைவயிற் பிரிந்த தலைவனைப் பற்றிப் பேசும் தலைவி;

    “………………………………….. மறந்தனன்
    பொன் போல் புதல்வனோடு என் நீத்தோனே” (ஐங்.- 265)

    என்று தானும் மகனும் சேர்ந்திருக்கத்; தலைவன் மகனோடு சேர்ந்து இருக்கும் இன்பத்தைக் கருதாமல்; தனித்துப் பிரிந்து சென்று இருப்பதைக் கூறுகிறாள்.

    புறத்தொழுகிப் பின்னர்  வாயில் வேண்டி வந்து நிற்கும் கணவனிடம் ‘எம் புதல்வனைத் தொடாதே’ என்று சண்டை இடுகிறாள் (கலி.- 79).

    புதல்வன் பாத்திரத்தின் பருவம்

    பிறந்த குழவி முதல்; விளையாடும் பருவம் வரையிலான புதல்வர் மட்டுமே அக இலக்கியத்தில் சிறுபாத்திரத் தகுதி பெறுகின்றனர்.

    சுற்றத்தார் சூழ ஓம்புகின்ற சூல் உடையளாய்க் குடி விளங்கப் புதல்வனை ஈன்று; பாயலில்  படுத்திருந்தாள் காதல் மனைவி. நோய்த்தொற்றோ கிருமித்தாக்கமோ நிகழா வண்ணம் ஐயவி அரைத்து வீட்டில் நிலை கதவு எல்லாம் தடவி இருந்தனர். ‘இதுகாறும் மங்கைப் பருவத்தினளாய் இருந்தவள்; இனித் திதலை அல்குல் (stretch marks) உடைய மடந்தை எனும் முதுபெண்டு ஆயினள்’ எனத் தன் கையிலிருந்த குவளை மலரால் அவளது வயிற்றைத் தடவிக் கிண்டல் செய்கிறான் தலைவன். அவள் நாணம் கொண்டு கைகளால் கண்களை மூடி மகிழ்ந்தாள். அத்தருணத்தைத் தலைவன் நினைத்துப் பார்க்கிறான். அருகில் இருந்த பாணனிடம் சொல்லி நோகிறான். ஏனெனில் இப்போது அவள் இவனது புறத்தொழுக்கத்தால் ஊடி இருக்கிறாள் (நற்.- 370). இப்பாடல் அன்று பிறந்த புதல்வனைப் பற்றிப் பேசுகிறது.

    முந்தைய நாள் பிறந்த புதல்வன் பற்றிய குறிப்பு இயற்கைப் புனைவில்  உவமையாக இடம் பெற்றுள்ளது. வாழை குலை தள்ளி உள்ளது. அக் குலையின் கொழுமடல் பூவினை காந்தள் பூ பொருந்திக் காட்சி அளித்தது. இது புதல்வனை ஈன்ற மடந்தை தன் கைகளால் முலை வாயுறுப்பது போலத் தோன்றியதாம் (நற்.- 355) குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கும்படி மருத்துவர்கள் ஆலோசனை கூறுவது இந்தக் காலம்; இரண்டு தலைமுறைக்கு முன்னர் வரை அப்படிக் கொடுக்கக் கூடாது எனும் கொள்கை தான் பாட்டி வைத்திய நடைமுறையில் இருந்தது. பிறந்த குழந்தைக்கு சேனை என்று சொல்லும் சர்க்கரை நீர்; அதில் ஒரு அரிசியளவு  மெலிதாக வெட்டிய பூண்டுத்துண்டு ஊறிக் கொண்டு இருக்கும்; அதை வடிகட்டித் தான் கொடுப்பர். குழந்தை வயிற்றுள் இருக்கும் காட்டுப்பீ ‘பசேர்’ என்று வெளியேறும். முழுவதாக வெளியேற பத்து அல்லது பன்னிரண்டு  மணி நேரம் வரை ஆகும். அதன் பிறகு தான் தாய்ப்பால் கொடுப்பர். இந்தப் பாடல் முதன்முதலில்  தாய்ப்பால் அருந்தும் புதல்வன் பற்றிப் பேசுகிறது.

    ஈன்று நான்கு நாட்களான புதல்வனை அடையாளம் காட்டுபவள்; கருவுயிர்த்த நான்காம் நாள் முதல் தலைவழி நீராட்டுப் பெறும் தலைவி ஆவாள். மகப்பெற்ற தாய்க்கு முதல் தலைமுழுக்காட்டைப் பக்குவமாகச்  செய்வது இன்று வரை தமிழரிடம்  நிலைத்திருக்கும் வழக்கம் ஆகும்.

    “புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
    ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
    பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
    சீர்கெழு மடந்தை ஈரிமை பொருந்த” (நற்.- 40)

    என்ற வருணனை உடல்வலியும் அசதியும் நீங்க; தலைவழிக் குளியல் முடித்து சுகமான தூக்கம் கண்களைத் தழுவும் தலைவியைக் காட்சிப்  படுத்துகிறது. பெரும்பாலும் நான்காம் நாள் இயலவில்லை எனில்; ஏழாம் நாள் இக்குளியல் நிகழும். இன்று ஐயவி அரைத்துப் பூசும் வழக்கம் ஒழிந்து விட்டது எனினும்; மகவுயிர்த்த பெண்ணைப் பற்றிய புனைந்துரை இன்று வழக்கில் இருக்கும் சில சொலவடைகளை நினைவூட்டுகிறது. ‘பசுநெய் போன்ற மென்மையான உடலை உடையவள்’ என்று இப்பாடல் கூறுவது ‘பச்ச ஒடம்புக்காரி’ என்ற பாமரமொழியை உணர்த்துகிறது. அத்தகைய அவளது உடல்நலம் தனிப்படக் கவனிக்கப்பட வேண்டியது எனும் கருத்தை வலியுறுத்த; ‘பிள்ளப் பெத்த ஒடம்பும் மண்ணெடுத்த கெடங்கும் ஒன்னு’ எனச் சொல்லும் தாயர் கூற்றையும் நினைவூட்டுகிறது.

    ஈன்று அணிமைப் பருவத்தினளாய தலைவி தன்னை நெருங்கிய கணவனிடம்;

    “புதல்வனை ஈன்ற எம் மேனி
    முயங்கன்மோ தெய்ய நின் மார்பு சிதைப்பதுவே” (ஐங்.- 65)

    என்று அவனை விலக்குகிறாள். தலைவன் பரத்தமைக்காகத் தன் மார்பினை மலராலும் சாந்தாலும் அணிகலனாலும் புனைந்திருக்கும் அழகு பாலமுதம் பட்டுக் கெட்டு விடும் என்று அவனது ஒழுக்கத்தைச் சாடும் நுட்பம்; ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்து மகளிர் உயிரில் கலந்து; நாகரிகமாக உருவெடுத்த பண்பாட்டை வரையத் துணை செய்கிறது.

    தத்தித் தத்தி நடக்கும் தன் மகனின் அழகை ரசித்து இன்புறும் தாயான தலைவி; அந்த இன்பத்தைக் காணாமல் புறத்தொழுகிய கணவனைக் குற்றம் கூறாத காதல் மனத்தினளாய்த்; தன் உடனிருந்து அனுபவிக்க இயலாதபடி பரத்தை அவனைத் தடை செய்கிறாள் என்னும் பொருள்பட;

    “தளர்நடைப் புதல்வனை உள்ளி நின்
    வளமனை வருதலும் வௌவியோளே”
    என்று பரத்தையைக் குற்றம் கூறுகிறாள்.
    தந்தையின் மார்பில் தனயன் ஏறி இறங்கி விளையாடும்
    பருவத்து இன்பமயமான காட்சி காட்டுவழி வருணனையில்
    உவமையாகவும் இடம் பெற்றுள்ளது (அகம்.- 197).

    பால்குடி மறவாத மகனைச் சேடியோடு வெளியே புத்தேளிர் கோட்டம் அனுப்பினாள் தலைவி. சென்ற இடத்தில் புதல்வனுக்குத் தாய்  ஆகும் தகுதி வாய்ந்த பெண்கள்; அதாவது தலைவனின் பரத்தமைக்குத் துணை நிற்பவர் அவனைக் கண்டு கொஞ்சியதால்; வீடுதிரும்ப நேரமாகி விட்டது. தலைவிக்கோ இக்கட்டான நிலைமை; காலத்தில் தோன்றிய கொண்மூப் போல்; பால் கட்டி வீங்கிய நிலையில் ‘தவ நெடிது ஆயினை; புக்க வழி எல்லாம் கூறு’ என்று நிற்கவைத்துக் கேட்கிறாள். (கலி.- 82)

    அதை அடுத்த நிலையாக; ‘விளையாடும் பருவத்துப் புதல்வனோடு உன்னைப் பிரியமாட்டேன்’ என விளையாட்டுத் தேரைப் பொய்த்தேர் என்று  பொருள்படச் சுட்டி  நம்பிக்கை கொடுக்கும் தலைவன்;

    “பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்” (நற்.- 166)

    என மகனை முதன்மைப்படுத்திப் பேசுகிறான். குழந்தைக்கு விளையாட்டுக் காட்டுவதைப் ‘பொய்த்தல்’ என்றே பண்டைத் தமிழர் கூறியுள்ளனர்.  (நற்.- 161& அகம்.- 54)

    குறிஞ்சிநிலத்தில் யானைக்கன்றுடன் ஓடி விளையாடும் புதல்வன்;

    “குறியிறைப் புதல்வன்” (குறு.- 394)

    என்று அழைக்கப்படுகிறான். குறுகிய முன்கையை உடையவனாக இருப்பது அவனது இளம் பிராயத்தை உணர்த்துகிறது.

    புதல்வனுக்குரிய தகுதியும் பெருமையும்

    தன் பாட்டனின் பெயருக்கு உரியவன் என்ற பெருமை புதல்வனுக்கே உரித்தாக இருந்தமை;

    “முதல்வன் பெரும்பெயர் முறையுளிப் பெற்ற….
    அரும்பெறல் புதல்வனை” (கலி.- 75);

    “சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே” (நற்.- 40)

    என்றெல்லாம் போற்றப்படுவதால் அறிகிறோம்.பொன் போன்றவன், உயிர் போன்றவன், ஆலமர் செல்வன் போன்றவன், மாநிதிக் கிழவனாகிய குபேரன் போன்றவன், மாமகன் என்றெல்லாம் புதல்வன் புகழ் மொழிகளால் சுட்டப்படுவதை இக்  கட்டுரை நெடுகிலும் காணலாம். புதல்வனைப் பெற்ற தாய் குடிக்கு விளக்காகக் கருதப்படுவதுடன் எல்லா நலன்களும் பெற்ற ‘நன்னராட்டி’ (அகம்.- 176& 184) எனும் புகழ்மொழிக்கு உரியவர் ஆகின்றாள்.

    இல்லறம் நிலைக்க வைக்கும்  புதல்வன்  

    நல்லொழுக்கம் மிகுந்த கணவன் செவிலி கையிலிருந்த புதல்வனை நோக்கி; அவன் மேல் பாசம் பொங்கத்; தலைவியை நேருக்கு நேராக அணைக்க இயலாது; முதுகுப்புறத்தில் நின்று தழுவினானாம் (அகம்.- 26)

    புறத்தொழுக்கத்தில் ஈடுபட்டிருந்த கணவனின் கொடுமையை மறக்கவும் ஊடலைத் தீர்க்கவும் புதல்வனே ஏற்ற துணையாக அமைகிறான் (கலி.- 70, 81& குறுந்.- 359). ‘ஆலமர் செல்வன் போல வந்த என் உயிரனைய புதல்வனை நெருங்காதீர்; உம் ஆடையில் பரத்தையர் தலைமுடியில் இருந்து சிந்திய மயிர்ச் சாந்தின் துகள்கள் ஒட்டி உள்ளன’ என்று ஊடிய மனைவியின் சொற்களை உதறிவிட்டு; ‘எந்தை பெயரனை யாம் கொள்வேம்’ என மகனைக் கொஞ்சியதால் ஊடல் தீர்ந்த வரலாற்றைத் தலைவி  கூறுகிறாள்.

    புதுமணம் புரியத் தேரில் செல்லும் தலைவன் தன் மனையைக் கடக்கிறான். அவனது ஒழுக்கம் சீர்கெட்டு இருந்தது. ஒரு பரத்தையின் இருப்பிடத்திலிருந்து இன்னொரு பெண்ணை நாடிச் சென்ற அவனைத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மகன் பார்த்து அழுதான். பாகனிடம் தேரை நிறுத்தச் சொல்லிப் ‘பூங்கண் புதல்வனைத்’ தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைகிறான் தந்தையானவன். மனைவியோ கணவன் போக்கைத் தடுத்தமைக்காக மகனை நொந்து கடிகிறாள். தன் கணவனது மனமும் விழைவும் நன்கு அறிந்தவள் ஆதலால்; அவன் மேலுள்ள கோபத்தை மகன் மேல் காட்ட முனைகிறாள். அந்த வேளையில் பரத்தை வீட்டிலிருந்து மணமுழவு ஒலிக்கிறது. ஆனாலும் அழுது அடம் பண்ணிய மகனைப் பிரிய மனமின்றி ‘மாநிதிக் கிழவனும் ஆவான்’ என்று மகனைக் கொஞ்சி அன்றைய புதுமணத்தைத் தவிர்க்கிறான் தலைவன். புதல்வனால் நேர்ந்த நன்மை இதுவென்று தோழியிடம் கூறுகிறாள் தலைவி (அகம்.- 66).

    ஊடல் தணியாது; தலைவனை வீட்டினுள் விட மறுக்கும் தலைவியிடம் பின்விளைவைப் பேசும் தோழி; ‘இனி எப்படிப் புதல்வனுக்குப் பாலூட்டுவாய்?’ என்று வினவுகிறாள் (அகம்.- 316). கணவனைப் பிரிந்த வாழ்வில் வளமாக உண்ணப் போவதுமில்லை; தனிமை மனநலம் தரப்போவதும்  இல்லை. எனவே புதல்வனுக்குப் பாலூட்ட தலைவனின் தவறை மன்னித்து இல்லறம் பேணுவாயாக என்கிறாள். வினைவயிற் பிரிவைத் தடுக்கவும் ‘புதல்வன் பாலுக்கு அழுவான்’ என்ற காரணமே காட்டப்படுகிறது (ஐங்.- 424).

    எந்தக் கேள்வியும் கேட்காமல் கணவனை வீட்டினுள் அனுமதிக்கும் தலைவியும் புதல்வனைப் பயந்தவளே. தன்னை வியந்த தோழியிடம்; ‘விருந்தெதிர் கொள்ள வேண்டும்; அவன் கூறிய பொய்ச்சூள் அவனைப் பாதித்துவிடக் கூடாது’ என்றெல்லாம் காரணம் கூறினாலும்  அவன் மகனைக் கட்டியணைத்துப் பாசத்தைப் பொழிவதைத் தான் முத்தாய்ப்பாக உரைக்கிறாள் (கலி.- 75). இரண்டு தலைமுறைக்கு முன்னர் வரை மணமுடிந்து ஓரிரு மாதங்களிலேயே ‘உண்டாயிட்டாளா?’ என்ற கேள்வி பார்ப்பவர் வாயிலிருந்து எல்லாம் எழுந்த காரணம்; நிலையான இல்லறத்திற்கு மகப்பேறு வலுவான அஸ்திவாரமாக அமைந்தமை எனலாம்.

    புதல்வனைப் பேணல்

    அன்றாடம் புதல்வனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளால் தாயின் உடையும் தோளும்; நெய்யும் குய்யும் ஆடி; மையோடு மாசுபட்டிருக்கும்.  பாலூட்டப்  புனிறு நாறும் (நற்.- 380). அன்றாடம் எண்ணெய் தேய்த்தல்;  குளிப்பாட்டுதல்; மணப்புகைத் தூபம் காட்டி ஈரம் போக்கல்; மையிட்டு அழகு படுத்திக்; கண்ணேறு கழிக்க முன்னேற்பாடு செய்தல் பாலூட்டுதல்  அனைத்தையும் கிரமப்படி இப்பாடல் சொல்கிறது. இன்று வரை தமிழகத்தில் தாய்மார் குழந்தையைப் பேணும் முறை இதுவே.

    புதல்வன் தோற்றம்

    புலிப்பல் தாலி அணிந்தவனாகப் புதல்வன் சித்தரிக்கப்படுகிறான் (குறுந்.- 161). பொலந்தொடியும் ‘பொன்னுடைத் தாலி’யும்  அணிந்தவன்

    எனச் சுட்டப்படுகிறான் (அகம்.- 16, 54). பெருமுது செல்வரின் புதல்வர் பொன் ஆபரணங்கள் அணிந்தவராகவும்;  ‘அரிபெய் கிண்கிணி ஆர்ப்பத் தெருவில் தேருடன் நடை’ பயில்வதாகவும்; குரும்பை மணிப்பூணும்; பெருஞ்செய் கிண்கிணியும் அணிந்த புதல்வன் பாலார் துவர்வாயுடன் தன் தந்தையின் மார்பில் ஏறி இறங்குவதாகவும் பாடப்பெறுகின்றனர். (நற்.- 58, 250, 269). மழலை பேச முயலுங்கால் வாயிலிருந்து ஒழுகும் எச்சிலால் கழுத்தணி நனைய; தலையணி பிறைநெற்றியில் உருள ‘கிளர்மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும் தளர்நடை’ பற்றிப் பேசும் பாடல்கள் பல (கலி.- 80& 81).

    தெய்வத்திற்குரிய மழு ஆயுதம் குழந்தையின் கழுத்தணியில் கோத்துச் சூட்டப்பட்டது. காற்சதங்கை, அரைப் பொன்வடம், பவளவடம், பொற்றொடி, வெட்டாத வாளும் மழுவும் நெருக்கிக் கட்டி இடபம் பொறித்த பவளக் கழுத்தணி, முத்தும் மணியும் நீலமும் சேர்த்துக் கட்டிய மூன்று வடத் தலைமாலை என்று பாதாதிகேசம் வரை அணிகலன் பூட்டிய புதல்வனைப் பாராட்டிப் பாலூட்டித்; தன் கணவன் செய்யும் பரத்தமைக் கொடுமைக்கு மாற்றுத் தேடுகிறாள் தாயானவள். (கலி.- 85) தமிழர் இக்கலன்களைப் ‘பிள்ளைப் பண்டம்’ என்று இன்றும் குறிப்பிடுகின்றனர்.

    பிறந்த முடியுடன் இருக்கும் புதல்வனின் தலை ‘புல்லுளைக் குடுமி’ கொண்டதாகச் சுட்டப்படுகிறது. மார்போடு அணைத்த மகனின் குடுமியில் ஒரு ஜோடி நீர்ப்பூம் பிணையலைச் சூட்டி; அழகுபடுத்தி இருந்தாள் தாய்.

    “ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
    தூநீர் பயந்த துணையமை பிணையல்”

    என இக்காட்சி வருணிக்கப்பட்டுள்ளது. புதல்வனின் ‘புன்தலை’ அவனது பிள்ளைமைப் பருவத்து அடையாளமாகப் பலமுறை பேசப்படுகிறது (அகம்.- 5, 176, 245). இப்புல்லுளை களைவதைத் தான் இன்றும் ‘பிறந்தமுடி எடுத்தல்’ என்றும்; ‘தலைமொட்டை’ என்றும் சொல்லிக் குடும்ப விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.

    புதல்வனும் புதல்வியும்

    மகனைப் பெற்ற தாயருக்கு அத்துணை சிறப்புக்களும் கொடுக்கப் படுவதை இதுகாறும் கண்டோம். மகளைப் பெற்ற தாயர் பற்றி நம் மனதில் கேள்வி எழுகிறது. பெண்குழந்தைகளைக் கண்டுகொள்ளவே இல்லையா? என்றும் ஐயம் எழுகிறது. மகளைப் பாசத்துடன் வளர்த்த தந்தையை  தந்தை பற்றிய கட்டுரையில் ஏற்கனவே கண்டோம். பெற்ற மகள் மங்கைப் பருவத்தை எட்ட; அவளுக்கு இளைய தம்பி ஒருவனைத் தாய் நெஞ்சோடு அணைத்துத் துயிலும் கோலம் அந்த மங்கையின் வாய்மொழியாகவே இடம் பெற்றுள்ளது. இரவுக்குறியில் சந்திக்கத் திட்டமிடும் காதல் ஜோடி; நினைத்தது நடக்கவில்லை. காரணம் என்ன என்பதை அவன் வேலிக்கு அப்பால் நிற்கும் போது தலைவி தோழியிடம் பேசுவது போல அவன் காதுபடப் பேசுகிறாள். இரவு முழுவதும் தாய் தூங்கவே இல்லை; தம்பியை அணைத்துத் தூங்க வைத்து; மகளை ‘அன்னாய் அன்னாய்’ என்று குரல் கொடுத்து அழைத்து ‘அவள் தூங்கி விட்டாளா’ என்று சோதித்துக் கொண்டே இருந்தாள். பதின்மவயது மகளைக் கண்காணிக்கும் தாயிடம் இருந்து தப்ப இயலாத தலைவியின் நிலை இது (குறு.- 161).

    புதல்வனை மையப்படுத்தும் சுவையான காட்சிகள்

    பரத்தமை பூண்டவன் தலைவனாக இருக்க; அதற்குத் துணை நின்ற பெண்கள் அனைவரும் பரத்தையர் அல்லர் என்று உணர்த்தும் பாடலுக்குப் புதல்வனே மையப்பொருள் ஆகிறான்.

    தேரோடும் தெருவில் புதல்வன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அவ்வழியாக வந்த பெண் தலைவனின் காமக்கிழத்தி; இக்காலத் தமிழில் ஆசைநாயகி. தன் அன்பிற்கு உரியவனின் புதல்வனை அடையாளம் கண்டு கொண்ட அவள் அடக்க முடியாத ஆசையுடன் அவனைத் தன் மார்போடு அணைக்கிறாள். தலைவி ஏற்கனவே தலைவனின் நடவடிக்கை தெரிந்தவள் ஆதலால்; இச்சூழல் அப்பெண்ணை நேரில் பார்க்க ஏதுவாகத்  தலைவிக்கு அமைந்தது. தலைவியைப் பார்த்தவுடன் நாணம் கொண்டு தலை கவிழ்ந்த அவளிடம் ‘நீயும் இவன்  தாயே’ என்று சொல்லிச்சூழலைச்  சமாளித்தாள் தலைவி. தலைவனோ தன் களவை மறைத்துப் பொய் கூறுவதை நிறுத்தவில்லை. நடந்ததைக் கூறி; நடப்பவற்றை மறைக்க இயலாது என்று அவனுக்கு உணர்த்திய மனைவி அக் காமக்கிழத்தி பற்றி ‘அவளும் அருந்ததி போன்ற கற்பினை உடையவள்’ என்று சான்று அளிக்கிறாள் (அகம்.- 16). அப்போது தலைவன் முகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்து ரசிக்கலாம். குடும்பத்திற்குள் உரிமை மனைவியின் நிலைமை பற்றித் தனிப்பட உளவியல் ஆய்வும், பெண்ணிய ஆய்வும் நிகழ்த்தலாம்.

    கணவனைப் பிற பெண்களிடம் இழந்த மனைவி ஒருத்தி தீராத மனவுளைச்சலில் பொருமுகிறாள். அவளது புதல்வன் தன் கணவனின் சாயலைக் கொண்ட அழகன். கால்களில் கிண்கிணி ஒலிக்கப் போர்யானை போல் நடைபயிலும் கம்பீரம் மிகுந்தவனாம். இடுப்பில் தூக்கிவைத்துக் கொள்ளும் பருவத்தினனாகிய அவனிடம் ‘உன் தந்தையைப் போல் பகைவரை வென்று வெற்றி பெறுவாய்; ஆனால் நீ அவனைப் போல் பெண்கள் விஷயத்தில் எளியனாக இருக்காதே. நுகத்துப் பகலாணி போல ஒருபக்கம் சாயாத அவனது செங்கோல் தன்மையைப் போற்று; ஆனால் காதல் மனைவி இருக்கப் பிற பெண்களை நாடாதே. அவனைப் போல் ஈந்து புகழ் பெறுவாய்; ஆனால் அன்பு மனைவியை அழ வைக்காதே’ என்றெல்லாம் பாடம் சொல்கிறாள். தாயின் சொற்களைப் புரிந்து கேட்கும் பருவமடையாத புதல்வனின் முகத்திலும் நடையிலும் தன் நோய்க்கு மருந்தைத் தேடுகிறாள். ஒருபுறம் நகையைத் தோற்றுவித்தாலும்; இன்னொரு புறம் ஆழ்ந்து நோக்கும் போது அவளது நிலை அவலத்தைத் தோற்றுவிக்கிறது. (கலி.- 86)

    எல்லாவற்றுக்கும் மேலாக மிகுந்த சிறப்பும் தனித்தன்மையும் உடைய புதல்வன் ஒருவனைத் தலைவி அடையாளம் காட்டுகிறாள். இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் தன்னை மணந்து கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்கத் தெரியாத தலைவன். தலைவியின் தமரோ எருமைப்பெடையைச் சீதனமாக நிறுத்தி வேற்றவர்க்கு மணம் பேசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். என்ன செய்ய வேண்டும்? என்ன சொல்ல வேண்டும்? வெற்றிகரமாகத் தன்னை மணப்பது எப்படி என்றெல்லாம் தோழி அவனுக்குப் பாடமெடுத்து அறத்தொடு நிற்க வற்புறுத்துகிறாள். அவன் கட்டிளம் காளை தான்; தலைவி மேல் காதல் மிகுந்தவன் தான். காரியக்காரனாக இல்லாமல்; விஷயம் கைமீறிப் போவதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் அவன்; பெண்கேட்கத் தன் பெற்றோரை வற்புறுத்தாமல் வாளா இருக்கிறான். அவனுக்கு ‘ஓரிப் புதல்வன்’ என்று பட்டம் கட்டுகிறாள் தலைவி. இதுகூடத் தெரியவில்லையே என்ற போக்கில் புலம்பும்  தலைவி அவனை மணந்து கொண்டு நடத்தவிருக்கும் இல்லறம் பற்றிக் கற்பனை செய்யும்போதே நகைச்சுவை தூள் கிளப்புகிறது.

    முடிவுரை

    செவிலி, தலைவி, தலைவன், காதற்பரத்தை, தோழி அனைவரது கூற்றிலும் இன்பமிகு இல்லறத்தின் அடையாளம் ஆகின்ற பாத்திரமாகப் புதல்வன் அமைகிறான். பிறந்த குழவி முதல்; விளையாடும் பருவம் வரையிலான புதல்வர் மட்டுமே அக இலக்கியத்தில் சிறுபாத்திரத் தகுதி பெறுகின்றனர். பாதாதிகேசம் வரை பொன் ஆபரணங்களும் புலிப்பல் தாலியும் அணிந்தவனாகவும் பிறந்த முடியுடனும் புதல்வன் சித்தரிக்கப்  படுகிறான். தெய்வத்தின் படைகள் புதல்வன் கழுத்தில் காப்பாகச் சூட்டப்  பட்டிருந்தன. அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் தாய்மார் குழந்தை பேணும் முறையில் பெருத்த மாற்றம் இல்லை. அன்றைய சமுதாயத்தில் இல்லறம் நிலைபெறப் புதல்வன் காரணமாக இருந்தான். தன் பாட்டனின் பெயருக்கு உரியவன் என்ற பெருமை புதல்வனுக்கே உரித்தாக இருந்தது. புதல்வனைப் பயந்த தாயே குடிக்கு விளக்காக; எல்லா நலன்களும் பெற்றவள் எனும் புகழ்மொழிக்கு உரியவளாக இருந்தாள். மகப்பேறு, குழந்தை வளர்ப்பு நடைமுறைகள் இன்று உள்ளது போன்றே தொகை இலக்கியத்தில் பேசப்படுகின்றன. செவ்விலக்கியக் காலச் சமுதாயம் ஆண் முதன்மைச் சமுதாயம் ஆதலால் புதல்வனைப் பெற்றவள் ‘புதல்வன் தாய்’ என்றே சுட்டப்படுகிறாள்.

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 17

    பரிமேலழகர் உரைத்திறன் – 17

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    திருக்குறளில் ‘நோக்கு’

    முன்னுரை

    ‘நோக்கம்’ என்ற சொல்லை அனைவரும் அறிவர். ‘பார்வை’ என்ற சொல்லும் ‘காட்சி’ என்பதும் அவ்வாறு பழக்கமானதே. ஆனால் ‘நோக்கு’ என்ற சொல் அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நோக்கம் என்னும் சொல்லின் திரிந்த வடிவம் ‘நோக்கு’ எனவும் சிலர் கருதியிருக்கக் கூடும்.  கண்ணின் வினை ‘பார்வை’ என்றால் மனத்தோடு கூடிய கண்ணின் வினைக்கு நோக்கம் என்று பெயர். திருவள்ளுவர் முன்னதைப் ‘பொதுநோக்கு’ என்பார். பின்னதை ‘நோக்கு’ என்பார். இன்னும் தெளிவாகச் சொன்னால் உள்ளக்குறிப்பினைக் கண் வெளிப்படுத்துவதற்கே நோக்கம் என்று பெயர். ஆனால் நோக்கு என்பது ‘பார்வை’, ‘நோக்கம்’ என்பவற்றினின்றும் மாறுபட்டது. இவற்றுக்கும் ‘நோக்கு’ என்பதற்கும் எள்ளின் முனையளவும் தொடர்பு கிடையாது. இந்த நோக்கு திருக்குறளில் அமைந்திருக்கும் பாங்கினை உரையாசிரியர் பரிமேலழகர் வெளிப்படுத்துமாற்றை ஆராய்வதையே இக்கட்டுரை தனது தலையாய நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    நோக்கு என்றால் என்ன?

    உண்மையில் இந்த ‘நோக்கு’ என்பது மக்கள் வழக்கில் உள்ளதே. திருமண வீட்டில் விருந்துண்டவன் சொல்வான் “விருந்து சாப்பிடுகிற மாதிரி இல்லையே?”  இளைஞர் வட்டத்தில் ஒரு பேச்சு கேட்டிருக்கலாம் “படம் பாக்குற மாதிரி இல்லையே?” விருந்து உண்கிற மாதிரி இருக்க வேண்டும். படம் பார்க்கிற மாதிரி இருக்க வேண்டும். ஊன்றிக் கவனித்தால் ‘விருந்து’ என்பதும் ‘படம்’ என்பதும் சில அம்சங்களை உள்ளடக்கி இருக்கவில்லையே என்னும் ஏக்கம் அந்தத் தொடர்களில் அமைந்திருப்பதைக் காணலாம். இந்த அம்சங்கள் செயப்படுபொருளில் அமைந்திருக்க வேண்டும். சரியா? கவிஞன் படைக்கிறான். இந்த அம்சங்கள் படைப்பில் இருக்க வேண்டும். இதுபோல்தான் நோக்கு என்பதும். ‘நோக்கு’ என்பது நோக்குகிற வினையைக் குறிக்கும். அந்த வினைக்கு உகந்ததாக அதற்கான செயப்படுபொருள் அமைந்திருக்க வேண்டும். ஒருவன் ஒரு கவிதையைப் ‘பார்த்தான்’ என்பதற்கும் ‘படித்தான்’ என்பதற்கும் ‘நோக்கினான்’ என்பதற்கும் வேறுபாடு உண்டு. நோக்கிற்கான கூறுகள் இருந்தால்தான் அது நோக்கிற்குரியது. அந்தக் கூறு காலங்கடந்தும் எண்ணி வியப்பதாயும் வியந்து திளைப்பதாயும் அமைதல் வேண்டும். இதிலிருந்து ‘நோக்கு’ என்பது கவிதையில் அமைந்திருக்கும் கூறுகளின் தொகுதி என்பது பெறப்படும். இது ஒரு செய்யுளின் அல்லது கவிதையின் மாத்திரை முதலாக அடி ஈறாக அமைந்திருக்கும். எப்படி அடுத்த பத்தியில்.

    தொல்காப்பியம் கூறும் நோக்கு

    பொருளதிகாரச் செய்யுளியலில் செய்யுளின் உறுப்புக்களாக முப்பத்திரண்டு கூறுகளை ‘மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ’ (தொல் 1259) என நிரல்படுத்தும் தொல்காப்பியம் “நோக்கே” என்று இதனைக் குறிப்பிடுகிறது. இது மேற்குறிப்பிட்ட நூற்பாவில் முற்பகுதியான இருபத்தாறு சிறந்த கூறுகளில் ஒன்று. நூற்பாவின் பிற்பகுதியில் கூறப்படும் அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எட்டும் முன்னர்க் கூறிய இருபத்தாறுக்கு இணையானவை அல்ல என்பது இளம்பூரணர் கருத்து.

    “மாத்திரை முதலா அடிநிலை காறும்
    நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே” (1306)

    என்னும் நூற்பாவில் நோக்கு என்பதற்கான விளக்கமும் பொருள் வரையறையும் பெறப்படுகிறது. இந்த நூற்பாவிற்கு உரையாசிரியப் பெருமக்கள் எழுதிய குறிப்புரைகளைக் காண்பது பொருள் தெளிவுக்கு உதவக்கூடும்.

    நோக்கிற்கான இளம்பூரணர் விளக்கம்

    தொல்காப்பியத்திற்கு உரைத்தடம் காட்டிய ஆசிரியர் இளம்பூரணர் மேற்கண்ட நூற்பாவிற்குப் பின்வருமாறு உரையெழுதுகிறார்.

    “மாத்திரை முதலா அடிநிலையளவும் நோக்குதலாகிய கருவி நோக்கென்று சொல்லப்படும். காரணம் எனினும் கருவியெனினும் ஒக்கும். நோக்குதற்காரணம் என்பதால் உண்டற்தொழில் என்றாற்போலக் கொள்க” அதாவது யாதானும் ஒன்றைத் தொடுக்கும் காலத்துக் கருதிய பொருளை முடிக்குங் காலும் பிறிது நோக்காது அது தன்னையே நோக்கி நிற்கும் நிலை.”

    உரையாசிரியர் இட்ட தடத்தைப் பின்வந்த உரையாசிரியர்கள் சிறிதளவு செப்பமிட்டார்களே தவிர அடிப்படையில் பொருள் மாற்றம் ஏதும் செய்ய  இயலவில்லை என்பதை அவர்தம் உரைகளால் அறிந்து கொள்ள முடியும்.

    பேராசிரியர் கருத்து

    “ஆறுதலையிட்ட அந்நாலைந்து’ எனவும் ‘எட்டு’ எனவும் இருவகையான தோன்றக் கூறியது ஏனையது போலாமல் எட்டுறுப்பும் ஓரொரு செய்யுட்கு ஒரோ ஒன்றேயும் வரும் என்பது அறிவித்தற்கும் அவைதாம் அச்செய்யுள் பல தொடர்ந்த வழியே பெரும்பான்மையும் உறுப்பு என்பது அறிவித்தற்கும் அவ்வாறு கூறினான் என்க. எனவே ஒழிந்த உறுப்பு இருபத்தாறும் ஒன்று ஒன்றனை இன்றியமையாவென்பது பெற்றாம். “நோக்கென்பது மாத்திரை முதலாகிய உறுப்புக்களைக் கேட்டோர்க்கு நோக்குப்படச் செய்தல்” எனப் பொதுநூற்பாவில் எழுதிய பேராசிரியர்,

    “மாத்திரையும் எழுத்தும் அசைநிலையும் சீரும் முதலாகக் கொண்ட  அடி நிரம்பும் துணையும் நோக்குடையவாகச் செய்தல் வன்மையாற் பெறப்படுவது நோக்கென்னும் உறுப்பாவது. ………………..…….. நோக்கிப் பயன்கொள்ளும் கருவியை நோக்குதற் காரணம் என்றான் என்பது”

    என்று நோக்கு என்பதற்குப் பொருள் விளக்கம் தருகிறார். நச்சினார்க்கினியர் கருத்து பின்வருமாறு அமைந்திருக்கிறது.

    நச்சினார்க்கினியர் கருத்து

    இலக்கியத்தை இலக்கணமாக்கி, இலக்கணத்தை இலக்கியமாக்கி உரையெழுதி உரைக்கோபுரத்தின் உச்சந்தொட்ட உரைக்கடல் நச்சினார்க்கினியர் இந்த நோக்கு பற்றித் தம் கருத்தினைப் பதிவு செய்திருக்கிறார்.

    “நோக்கென்றது மாத்திரை முதலிய உறுப்புக்களையுடைத்தாய்க் கேட்போர்க்கு நோக்குதல்படச் செய்தவை. நோக்குதல் – பயன்போடல் என்று பொருள் வரையறை எழுதி,

    “மாத்திரை முதலிய அடிநிரம்பும் துணையும் கேட்டோர் மீண்டும் நோக்கிப் பயன்கோடலையுடையதாகச் செய்யும் கருவி, நோக்கென்று  பெயர் கூறப்படும் என்றவாறு”

    என ‘நோக்கு’ பற்றிய மேற்கண்ட நூற்பாவிற்குப் பொழிப்புரை தருகிறார். நோக்கு பற்றி ஏனைய உரையாசிரியர்களினும் நச்சினார்க்கினியர் கருத்து பெரிதும் ஆராயத்தக்கதும் தகுதி மிக்கதுமாம். அவர் எழுதிய உரைகளில் இந்த உறுப்பைப் பயன்படுத்தாமல் உரைகண்ட வரலாறே இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம்.

    உரையாசிரியர்கள் பார்வையில்

    உரையாசிரியர் இளம்பூரணர் நோக்கிற்கான பொருள் வரையறை தந்து அதனை “ஒரு நோக்காக ஓடுதல், பல நோக்காக ஓடுதல், இடையிட்டு  நோக்குதல்” என மூவகை எனப் பகுத்தும் காட்டுகிறார். காட்டி, நாலடியாரிலிருந்து இரண்டு பாடல்களை (1, 172) முதலிரண்டிற்கும் “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு’ எனத் தொடங்கும் திருமுருகாற்றுப்படையை இடையிட்டு நோக்குதலுக்கும் எடுத்துக்காட்டி விளக்கம் தருகிறார். பேராசிரியரும் பின்னர் வந்த நச்சினார்க்கினியரும் “முல்லை வைந்துனை தோன்ற” எனத் தொடங்கும் (அகம். 4) பாடலை எடுத்துக்காட்டி விளக்குகின்றனர். நச்சினார்க்கினியர் சீவகசிந்தாமணி குணமாலை இலம்பக வரிகளை மேற்கோள் காட்டி கூடுதல் விளக்கம் தருகிறார்.

    நோக்கு என்ற சொல்லின் இலக்கியப் பயன்பாடு

    கூறாமை நோக்கி, முகம் நோக்கி, இருநோக்கு, சிறுநோக்கம்,  நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள், ‘யான் நோக்குங்காலை’ குறிக்கொண்டு நோக்காமை, செற்றார்போல் நோக்கும் யான் நோக்க பொதுநோக்கு, கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் என்பன திருக்குறளில் உள்ள ‘குறிப்பறிதல்’ என்னும் இரண்டு அதிகாரங்களுள் பயின்று வரும் சொற்களாகும். ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என்பது கம்பராமாயணம். ‘நோக்கரிய நோக்கே’ என்பது திருவாசகம். ‘நோக்க நோக்க களியாட்டம்’ என்பது பாரதி வாக்கு. ‘நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்’ என்பது பாவேந்தர் வரி. எண்ணற்ற பயன்பாடுகள் உள. காட்டப் புகின் கட்டுரை அளவு விஞ்சும்.

    நோக்கு எனபது பற்றிய கட்டுரையாளர் விளக்கம்

    முன்னுரையில் குறிப்பிட்டதுபோல ‘நோக்கு’ என்பது படைப்பில் இருக்க வேண்டிய அரிய கூறுகள். அது மாத்திரையிலிருந்து தொடங்கும். சான்றாக அளபெடை பற்றிப் பலரும் அறிவர். ஆனால் அந்த அளபெடையை ஒரு நோக்கத்திற்காகத்தான் பயன்படுத்தியிருக்கிறார் திருவள்ளுவர். இது பற்றிய விரிவு அடுத்த கட்டுரையில். குறட்பாவில் பயன்படுத்தபட்டுள்ள ஒவ்வொரு மாத்திரையும் அசையும் சீரும் அடியும் ஒரு காரணம் பற்றியனவாகவே இருக்கின்றன. இந்தக் காரணங்களே அவற்றை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன. எனவே ஒரு நூல் பன்முறை படிக்கப்படுகிறது என்றால் படிப்பதற்கான காரணங்கள் அங்கே அமைந்திருக்கின்றன என்பதை அறிதல் வேண்டும். இந்தக் காரணங்களையே ‘நோக்கு’ என்னும் சொல் குறிக்கிறது. ‘நோக்குதற் காரணம்’ என்பது அதுதான். இனிக் குறிப்பிட்ட குறட்பாவில் ‘நோக்கு’ அமைந்துள்ள சிறப்பினைக் கண்டு மகிழலாம்.

    குறட்பா – பொழிப்பு –  விளக்கம்

    திருக்குறள் கட்டுமானம் முழுமையும் நோக்கிற்குரியதாகவே இருக்கிறது என்பது பரிமேலழகர் கருத்து. அவர் கருத்து இதுதான் என்பதை அவர் எழுதிய உரை நன்கு புலப்படுத்தும். பரிமேலழகரின் உரைநுண்ணியத்திற்கு ஈடு கொடுக்கும் அளவுக்குக் குறள் அமைந்திருக்கிறது. இது வள்ளுவத்தைத் தாழ்த்துவதோ குறைத்து மதிப்பிடுவதோ ஆகாது. ஏனைய உரைகளைக் கற்றார் பரிமேலழகர் உரையினைக் கற்கும் பொழுது உள்ளத்தில் ஏற்படும் உணர்வே இது. ‘பரிமேலழகர் நோக்கியதை மற்றவர் ஏன் நோக்கவில்லை?’ என்ற எண்ணம் தோன்றுவதை யாரே தடுக்க இயலும்? வேறு வாய்பாட்டில் சொன்னால் திருக்குறளில் அமைந்துள்ள நோக்கினைக் கண்டறிந்து கூறுவதில் பரிமேலழகர் முன்களப் பணியாளராகவே திகழ்கிறார் எனலாம். இவ்வாறு பரிமேலழகரின் தனித்த உரைநோக்கிற்கு உரிய குறட்பாக்களில்,

    “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
    ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்” (415)

    என்னும் குறட்பாவும் ஒன்று. இதற்கு,

    “வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்று கோல் போல உதவும். காவற்சாகாடு உகைப்பார்க்கு  ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்.”

    (இதனைக் காவற்சாகாடு உகைப்பாற்கு ஒழுக்கமுடையார் வாய்ச்சொற்கள் “வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்று கோல் போல உதவும் எனப் பொருள் உவமம் என்ற நிலையில் படிக்கலாம். இந்தப்  பொழிப்புரையைத் தொடர்ந்து,

    “அவாய் நிலையான் வந்த உவமையடையால் பொருளடை வருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல்போல உதவுதல் தளர்ந்துழி அதனை நீக்குதல். ‘கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின் அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பது தோன்ற ‘ஒழுக்கமுடையார்  ‘வாய்’ என்பது தீச்சொல் அறியாமையாகிய சிறப்பு உணர நின்றது. அவற்றைக் கேட்க என்பது குறிப்பெச்சம்”

    என்று விளக்கவுரை தந்திருக்கிறார்.

    நோக்கு அமைந்திருக்கும் இடம்

    ஒழுக்கமுடையார் சொல், வழுக்குநிலத்தில் ஊற்றுக்கோல் போல் என்பது மட்டுமே குறட்பாவில் உள்ளது. குறட்பாவை ஊன்றிப் படித்தால் இது புலனாகும்.  ஒழுக்கமுடையார் சொல் யாருக்குப் பயன்படும் என்பதற்குப் பாட்டில் குறிப்பில்லை. ஊற்றுக்கோலின் பயன்பாடு வழுக்கு நிலத்திற்கா? அந்நிலத்தில் நடப்பர்க்கா என்பதற்கும் விடையில்லை. ஊற்றுக்கோல் என்ன செய்யும் என்பதற்கும் தெளிவில்லை. வாயிலிருந்து வருவதே சொல்லாயிருக்க ‘வாய்ச்சொல்’ எனக் கூறியது ஏன் என்பதற்கான விடையும் காணவேண்டியதிருக்கிறது. சொல்லை ஊற்றுக்கோலோடு ஒப்பிடுவதால் மட்டும் குறட்பாவின் கருத்து நிறைவடைந்துவிடுமா (ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் ஊற்றுக்கோல் அற்று என்றுதானே உள்ளது)? என்பதும் புரியவில்லை. ஆனால் நமக்குப் புரியவில்லை என்பதற்காக இல்லை என்று சொல்லிவிட இயலுமா? இந்தக் கூறுகளை (நோக்கினை) உள்ளடக்கித்தான் திருவள்ளுவர் குறட்பா எழுதியிருக்கிறார். அவற்றைத்தான் பரிமேலழகர் கண்டறிந்து கூறுகிறார். பரிமேலழகரின் உரை நோக்கிற்கான காரணங்கள் குறட்பாவில் ஆழ்ந்து பரவியிருக்கின்றன. அவை ஒவ்வொன்றினையும் முற்றாக அறிந்து கொள்வதன் மூலம் திருக்குறளின் குறட்பாக்கள் நோக்கு என்னும் உறுப்பால் கட்டியமைக்கப்பட்டிருக்கும் பாங்கு புலனாகலாம்.

    ஏழு சீர்களில் பரிமேலழகர் கண்டறிந்த நோக்கு

    இந்தப் பாட்டில் நோக்கு அமைந்திருக்கும் பாங்கினை இனிக் காணலாம். அதாவது இந்தச் சொல்லை இந்த இடத்தில் பெய்ததற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்து கண்டறியுமாறு அந்தச் சொல் அமைந்திருப்பதுதான் நோக்கு.  ஏழு சீர்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பரிமேலழகர் பிரித்து நோக்கித்  திருக்குறளில் ‘நோக்கு’ அமைந்திருக்கும் சிறப்பினை எடுத்துக் காட்டுகிறார். பொழிப்புரை, விளக்கவுரை என்னும் இரண்டின் அடிப்படையிலும் இதனை நிரலாகக் காணலாம்.

    1. ‘இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே’ என்றுதான் பாட்டில் இருக்கிறது. ஆனால் பரிமேலழகர் “ வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்று கோல் போல உதவும்” என்று உரையெழுதுகிறார். வழுக்கல் நிலத்துக்கும் ஊற்றுக்கோலுக்கும் தொடர்பில்லை. வழுக்கல் நிலத்தில் இயங்குவார்க்கும் ஊற்றுக்கோலுக்குமே தொடர்பு.  இயங்குவார்க்குத்தான் ஊற்றுக்கோல் உதவுமே தவிர நிலத்திற்கு உதவாது. பாட்டில் இல்லாத இந்தத் தெளிவினைப் பரிமேலழகர் கண்டறிந்து கூறுகிறார். இனி, ‘இயங்குவார்க்கு ஊற்றுக்கோல்’ என்றால் பொருள் புலப்படாது. ‘இயங்குவார்க்கு ஊற்றுக்கோல் என்ன செய்யும்? ‘உதவும்’. ஊன்றப் பயன்படுவதால் அது உதவி.
    1. இனி ‘ஊற்றுக்கோல் அற்றே’ என்றே பாட்டில் அமைந்துள்ளது. ‘அது அவர்க்கு உதவுவதுபோல என்று இல்லை. பரிமேலழகர் ‘உதவுதல்போல’ என்று நோக்கி உரையெழுதுகிறார். ‘ஊற்றுக்கோல் உதவுதல் அற்றே’ என்று கொள்ள வேண்டுமாம்.
    1. ‘ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்’ என்பதற்குக் காவற்சாகாடு உகைப்பார்க்கு (அரசனுக்கு) ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்’ என்று உரை காண்கிறார் பரிமேலழகர். அதாவது வழுக்கல் நிலத்து இயங்குவார்க்கு ஊற்றுக்கோல் உதவும் என்றால் ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் யாருக்கு உதவும் என்பதற்குத் திருக்குறளில் விடையில்லை.  அதாவது ஊற்றுக்கோல் யாருக்கு உதவும் என்பதும் பாட்டில் இல்லை. ஒழுக்கமுடையவர் வாய்ச்சொல் யாருக்கு உதவும் என்பதும் பாட்டில் இல்லை. ‘இயங்குவார்க்கு’ என்ற அடைச்சொல்லை அவாவி உவமத் தொடர் அமைந்திருப்பது போலவே, காவற்சாகாடு உகைத்தார்க்கு என்னும் அடைச்சொல்லை உவமேயத்திற்கு அதாவது பொருளிற்கு வருவித்துக் கொள்கிறார் பரிமேலழகர். நிலமாளும் அரசனுக்கு உதவும் என்பது கருத்து. அதனை வருவித்து உரையெழுதுகிறார். இதனை,

    “அவாய் நிலையான் வந்த உவமையடையால் பொருளடை வருவிக்கப்பட்டது.”

    என்னுந் தொடரால் விளக்கிக் காட்டுகிறார். உவமத்தில் அது அவாய் நிலையாம். பொருளில் அதனை வருவித்துக் கொள்கிறாராம். என்ன நுட்பம்?

    1. ஊற்றுக்கோல் வழுக்காமல் காக்கும். சரி. ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் காவாற்சாகாடு உகைத்தார்க்கு உதவுவது யாங்ஙனம்? இதற்கும் பரிமேலழகர் எழுதிக்காட்டுகிறார். அரசபாரம் தாங்காது மனம் தளர்ச்சியடைந்தவழி அத்தளர்ச்சியை ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் போக்குமாம். இதனை “உதவுதல் தளர்ந்துழி (வறுமையினால் அல்லது அறியாமையினால் துன்பமுற்றபோது) அதனை நீக்குதல்” என்ற தொடரால் விளக்குகிறார்.
    2. ‘ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் என்பது குறட்பாவில் பயின்றுள்ள தொடர். இந்தத் தொடரில் இரண்டு சொற்கள் பரிமேலழகரின் நோக்கிற்குக் காரணமாகிறது. ஒன்று ‘ஒழுக்கமுடையார்’ என்ற சொல். இரண்டு வாய்ச்சொல். கேள்வி என்ற அதிகாரத்தில் வருகின்ற இந்தப் பாட்டில் ஒழுக்கத்திற்குத் திருவள்ளுவர் முக்கியத்துவம் கொடுப்பானேன் என்னும் தன் வினாவிற்குப் பரிமேலழகரே விடைசொல்லுகிறார். எப்படி? இப்படி!

    ‘கல்வியுடையரேனும் ஒழுக்கமிலாதார் அறிவிலராகலின் அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பது தோன்ற ‘ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்’ என்றார்”.

    1. இரண்டாவது ‘வாய்ச்சொல்.’ சொல் என்ற அளவே போதுமானதாயிருக்க வாய்ச்சொல் என வேண்டாது கூறியது ஏன்? என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு அதற்கும் விடையிறுக்கிறார்.

    “‘வாய்’ என்பது தீச்சொல் அறியாமையாகிய சிறப்பு உணர நின்றது”.

    என்று எழுதுகிறார். சொல் என்னும் கருவி எவர்வழியாகச் செயல்படவேண்டும் என்பதில் பரிமேலழகரின் நோக்கு வியப்பளிப்பதாக உள்ளது. இவ்வளவு நோக்கிற்கும் திருக்குறள் இடந்தருகிறது.

    பரிமேலழகரின் மீயுயர் நோக்கு

    1. இந்தப் பாட்டு ‘கேள்வி என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. கேள்வி என்பதற்குச் சொற்பொருள் விளக்கம் தந்த பரிமேலழகர் “கேட்கப்படும் நூற்பொருளைக் கற்றறிந்தார் கூறக் கேட்டல்” என்று விளக்கம் தருகிறார். அதாவது கேள்வி என்பது தொழிற்பெயர். அதனை வியங்கோள் பொருளில் பயன்படுத்தியே இந்த அதிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பாட்டில் கேட்க என்று பொருள்படும்படியான சொல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இதனை நோக்குகிறார் பரிமேலழகர். வழுக்கல் நிலத்தில் இயங்குவார்க்கு ஊன்றுகோல் உதவுவது போலத் தளர்ச்சி வந்துழி காவற்சாகாடு உகைப்போர்க்கு ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் உதவும்! அதனால் அவர் சொல்லைக் கேட்கவேண்டும்’ என்று இருந்தாலேயே பொருண்மை நிறைவுறும் எனக் கருதுகிறார் பரிமேலழகர். அவர் எழுதுகிறார்,

    அவற்றைக் கேட்க என்பது குறிப்பெச்சம்”

    பாட்டில் சொல்லாவிட்டாலும் அதிகாரம் கேள்வியாதலின் அத்தகைகய பயன்தரும் சொற்களை நாட்டை ஆளுகிற மன்னன் கேட்டுச் செலுத்துவதே செங்கோல் சிறக்கும் நெறியாகும்’ என விளக்கமளிக்கிறார் பரிமேலழகர்.

    நிறைவுரை

    ‘உறுப்பு இருபத்தாறும் ஒன்று ஒன்றனை இன்றியமையாவென்பது பெற்றாம்.’ என்னும் பேராசிரியர் கருத்தும் ‘கேட்போர்க்கு நோக்குதல்படச் செய்தவை’ என்னும் நச்சினார்க்கினியர் விளக்கமும் நோக்கு என்பதன் பொருளைத் தெளிவாக வரையறுத்துக் காட்டுகின்றன. பொதுவாக ‘நோக்கு’ என்பது பார்ப்பவர் வினையாக இருக்கும். இங்கே அது படைப்பிலுள்ள கூறுகளைக் குறிப்பதாக அமையும். இந்தக் கூறுகளே அதற்குப் பெருஞ்சிறப்பைத் தந்து அவ்விலக்கியம் நீடித்து நிலைப்பதற்குக் காரணமாக அமையும். திருக்குறளில் நோக்கு அமையாத குறளே இல்லை என்பதும் அதில் பரிமேலழகர் அறியாத நோக்கும் இல்லை என்பதும் அவ்விரண்டனையும் கற்பார் அடையும் வியப்பு!. ‘பானை சோற்றுக்குப் பதச்சோறாக’ மேற்கண்ட குறளில் அமைந்துள்ள நோக்கினைப் பரிமேலழகர்வழி ஆராய்ந்து கண்டதன் மூலம் அவர் உரைத்திறம் உணரலாம்!

    (தொடரும்…..)

    Share
  • குறளின் கதிர்களாய்…(326)

    குறளின் கதிர்களாய்…(326)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(326)

    அவ்விய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவிவியான்
    கேடும் நினைக்கப் படும்.

    -திருக்குறள்  – 169 (அழுக்காறாமை)

    புதுக் கவிதையில்...

    பொறாமை நிறைந்த நெஞ்சம்
    கொண்டவனிடம்
    பெருஞ் செல்வமும்,
    பொறாமை குணமற்ற
    நல்லவனிடம்
    வறுமையும்
    வருவது அரிது..

    அவ்வாறு வந்தால்,
    அது
    எவ்வாறு நேர்ந்ததென்று
    காரணம் ஆராயப்படும்…!

    குறும்பாவில்...

    அழுக்காறுடையோனிடம் அதிக செல்வமும்,
    அதில்லா நல்லவனிடம் வாட்டும் வறுமையுமிருந்தால்
    அதன் காரணம் ஆராய்ந்தறியத்தக்தாகும்…!

    மரபுக் கவிதையில்...

    அடுத்தவர் மீதே அழுக்காறை
    அகத்தே கொண்ட மனிதனிடம்
    எடுத்திட அளவிலா செல்வமது
    எப்படி வந்து சேர்ந்ததென்றும்,
    கெடுக்கும் பொறாமை நினைவில்லாக்
    கேடிலா நல்லான் நலிந்திடவே
    அடுத்திடும் வறுமையின் காரணமும்
    ஆராய்ந் தறிந்திட வேண்டுமன்றோ…!

    லிமரைக்கூ..

    பொறாமையுடையோனின் செல்வ இருப்பு,
    அதில்லா நல்லவனுக்கு வந்திடும் வறுமைக்கும்
    காரணமறிதல் அனைவரின் விருப்பு…!

    கிராமிய பாணியில்...

    வேண்டாம் வேண்டாம்
    பொறாமக் கொணம் வேண்டாம்,
    குடியக் கெடுக்கும்
    பொறாமக் கொணம் வேண்டாம்..

    நெஞ்சில பொறாம கொண்டவங்கிட்ட
    நெறஞ்ச செல்வம் சேருறதும்,
    பொறாம கொணமில்லா நல்லவன்
    வறுமயில வாடுறதும்
    எப்பவும் நடக்கிறதில்ல..

    அப்புடி நடந்தா
    அதுக்கான காரணத்தக்
    கட்டாயம் கண்டறியவேணும்..

    அதால
    வேண்டாம் வேண்டாம்
    பொறாமக் கொணம் வேண்டாம்,
    குடியக் கெடுக்கும்
    பொறாமக் கொணம்
    வேண்டவே வேண்டாம்…!

    Share
  • ‘வாழ்நாள் சாதனையாளர்’ சுபாஷிணி திருமலை

    ‘வாழ்நாள் சாதனையாளர்’ சுபாஷிணி திருமலை

    அண்ணாகண்ணன்

    எழுத்தாளர் சுபாஷிணி திருமலை அவர்களுக்குத் திருவள்ளுவர் நற்பணி மன்றம், வாழ்நாள் சாதனையாளர் விருதினை 08.11.2020 அன்று வழங்குகிறது. வல்லமை மின்னிதழில் நூற்றுக்கும் மேலான படைப்புகளை வழங்கிய, 14 நூல்களை இயற்றிய சுபாஷிணி அவர்களுடனான என் அனுபவங்கள், நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நலவாழ்வுக்கு யோக முத்திரைகள் – 2

    நலவாழ்வுக்கு யோக முத்திரைகள் – 2

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    சக்தி வாய்ந்த யோக முத்திரைகளின் இரண்டாம் பாகம் இங்கே. உடலின் ஒவ்வோர் உறுப்புகளுக்கும் உரிய தனித் தனி முத்திரைகளைப் பார்த்து வருகிறோம். இந்த அமர்வில், இதய நலனுக்கான முத்திரைகள், வயிறு, செரிமானம், வயிற்றின் உள் உறுப்புகள் அனைத்திற்குமான முத்திரைகள், மலச்சிக்கலைப் போக்கும் முத்திரை உள்ளிட்ட பலவற்றையும் நிர்மலா ராகவன் விவரித்துள்ளார்.

    பணம் வருவதற்கான முத்திரையைத் தொடர்ந்து, நினைத்தது நடப்பதற்கான முத்திரையையும் போட்டியில் வெல்வதற்கான முத்திரையையும் செய்து காட்டியுள்ளார். பூமியிலிருந்து சக்தியைப் பெறுவதற்கான முத்திரை, கால்கள் வலிமை பெறுவதற்கான முத்திரை, தியான முத்திரை, உடலைத் தளர்த்தும் முத்திரை, மன அமைதி தரும் முத்திரை, மன்னிப்புக் கேட்பதற்கான முத்திரை ஆகியவற்றையும் விளக்கியுள்ளார்.

    நெற்றியில் பொட்டுவைப்பதற்குப் பின்னுள்ள காரணத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். அசைவ உணவு உண்ணும்போது எட்ட முடியாத தியான நிலைகளைச் சைவ உணவு உண்ணும்போது எட்ட முடிந்ததை உதாரணத்துடன் கூறியுள்ளார். மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் தலைவலி, வயிற்றுவலியைப் போக்குவதற்கான மருந்தையும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நேர்காணலைப் பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 283

    படக்கவிதைப் போட்டி – 283

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (08.11.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 18

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 18

    -மேகலா இராமமூர்த்தி

    தங்கையின் அவலநிலை கண்ட தமையன் இராவணன், சினத்தால் உதடுகளை அதுக்கினான்; பிலமொத்த அவன் பத்து வாய்களிலிருந்தும் வெம்புகை வெளிப்பட, மீசைகள் பொசுங்கிவிடும்படிப் பெருமூச்சுக் கிளம்ப, “யாருடைய செயல் இது?” என்றான் இடிமுழக்கக் குரலில்.

    மடித்த பில வாய்கள்தொறும்
         வந்து புகை முந்த
    துடித்த தொடர் மீசைகள்
         சுறுக்கொள உயிர்ப்ப
    கடித்த கதிர் வாள் எயிறு
         மின் கஞல மேகத்து
    இடித்த உரும் ஒத்து உரறி
        யாவர் செயல் என்றான்.  (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3212)

    ”மானிடர் இருவரின் செயல் இது” எனச் சூர்ப்பனகை புகல, அதைக்கேட்டு அலட்சியமாக நகைத்தான் இராவணன்.

    ”ஆம் அண்ணா! நான் சொல்வது மெய்தான்! அரக்கர்களைத் துச்சமென மதிப்பவர்கள் அவர்கள்; தயரதனின் மைந்தர்கள்; இராமன், இலக்குவன் என்பன அவர்தம் பெயர்கள்” என்றாள் சூர்ப்பனகை.

    அதைக் கேட்ட இராவணன், ”இந்த அவமானத்தை எனக்கு ஏற்படுத்தியிருக்கும் மானிடர்கள் இன்னும் உளர்; அவர்களின் உயிரும் அழிக்கப்படாமல் உளது; என் கையில் வாளும் உளது; நஞ்சினையுண்ட சிவனார் வழங்கிய வாணாளும் உளது; என் தோளும் உள; நானும் உளேன்!” என்றான் விரக்தியுடன்.

    ”தன் வாளும், தோளும் இருந்தும் மானிடரிடம் அரக்கர்குடித் தோற்கும்படி ஆனதே!” எனும் இராவணனின் கழிவிரக்கம் இப்பாடலில் கம்பரால் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

    மூளும் உளது ஆய பழி
         என்வயின் முடித்தோர்
    ஆளும் உளதாம் அவரது ஆர்
        உயிரும் உண்டாம்
    வாளும் உளது ஓத விடம்
         உண்டவன் வழங்கும்
    நாளும் உள தோளும் உள
         நானும் உளென் அன்றோ. (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3223)

    சூர்ப்பனகையை நோக்கிய இராவணன், ”கரன் முதலிய நம் நிருதர் குழாம் இம்மானுடர்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லையா?” என்றான் சினத்துடன்.

    ”அதை ஏன் கேட்கிறீர்கள் அண்ணா? எனக்கு நேர்ந்த அவலத்தை அறிந்ததுமே கரனும் தூடணனும் விரைந்தெழுந்து, என்பொருட்டு இராமனொடு போர்புரியவே செய்தனர். ஆனால் என்ன பயன்? மூன்று நாழிகைப் போழ்தில் (1 நாழிகை = 24 நிமிடங்கள்; 3 நாழிகை = 72 நிமிடங்கள்) அவர்கள் அனைவரையும் எமனுலகுக்கு அனுப்பிவிட்டான் அந்தத் தாமரைக்கண்ணன் இராமன் என்றாள் சூர்ப்பனகை.

    தன் சோதரர்கள் மாண்டுவிட்ட துயரச்செய்தியைச் சொல்லும்போதுகூட இராமனைக் கமலக்கண்ணன் என்று சூர்ப்பனகை வருணிப்பது இராமனின் அழகில் அவள் கொண்டுவிட்ட அளப்பரிய ஈடுபாட்டைக் குறிப்பால் உணர்த்துகின்றது.

    சொல் என்று என் வாயில் கேட்டார்
         தொடர்ந்து எழு சேனையோடும்
    கல் என்ற ஒலியில் சென்றார்
         கரன் முதல் காளை வீரர்
    எல் ஒன்று கமலச் செங் கண் இராமன்
         என்று இசைத்த ஏந்தல்
    வில் ஒன்றில் கடிகை மூன்றில்
         ஏறினர் விண்ணில் என்றாள். (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3227)

    இச்செய்தி இராவணனின் சீற்றத்தை மேலும் ஊற்றமுறச்செய்தது. எனினும், தங்கையின் அங்கங்களை அம்மானிடர் அரியும் அளவுக்கு அவள்செய்த குற்றமென்ன என்று அறியும் நோக்கில், ”அது போகட்டும்! உன் அங்கங்களை அம்மானிடர் பங்கம் செய்யும் அளவுக்கு நீ செய்த குற்றமென்ன?” என்றான் அக் கொற்றவன்.

    தன்பேரில் அண்ணன் பழிசொல்லா வண்ணமும், அண்ணனுக்கு நன்மை செய்யப்போய்த் தான் அவலமுற்றதுபோலவும் சாமர்த்தியமாக அந்நிகழ்வை விளக்கத் தொடங்கினாள் சூர்ப்பனகை.

    ”அண்ணா! அவர்களோடு பெண்ணொருத்தி இருக்கின்றாள். அவள் பெயர் சீதை! அவளை நான் எப்படி வருணிப்பேன்?! திருமகள் இருக்கிறாளே…அவள் இவளுக்குச் சேடியாக இருக்கக்கூடத் தகுதியற்றவள். மேகமொத்த கூந்தலும் பவளம்போன்ற விரல்களும் அமுதத்தில் தோய்த்தெடுத்த மொழிகளும் கடலன்ன அகன்ற விழிகளும்…அடடா! அவள் அழகின் அரசி!

    காமனை ஈசன் தன் நெற்றிக்கண்ணைக் காட்டி எரித்துவிட்டதாகச் சொல்லுகிறார்களே…அது பொய்! இந்த வாச நறுங்குழலாளின் அழகைக்கண்டு ஆசைகொண்டு காமநோய் பிடித்தே அவன் தேய்ந்து உருவழிந்திருக்க வேண்டும்” என்றாள் சொலல்வல்லளான சூர்ப்பனகை.  

    காமன் உருவமற்ற அநங்கனாக ஆனதற்குச் சூர்ப்பனகை படைத்துமொழியும் காரணமும் இரசிக்கும்படியாகத்தான் இருக்கின்றது!

    ஈசனார் கண்ணின் வெந்தான்
         என்னும் ஈது இழுதைச் சொல் இவ்
    வாசம் நாறு ஓதியாளைக் கண்டனன்
         வவ்வல் ஆற்றான்
    பேசல் ஆம் தகைமைத்து அல்லாப் பெரும்
         பிணி பிணிப்ப நீண்ட
    ஆசையால் அழிந்து தேய்ந்தான்
         அனங்கன் அவ் உருவம் அம்மா. (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3234)

    மேலும் தொடர்ந்தவள்…”அண்ணா! அவள் தோளழகைச் சொல்லுவேனா? வாளைமீன் போன்ற அவள் கண்ணழகைச் சொல்லுவேனா? எதைச் சொல்லுவேன்? நீதான் அவளை நாளையே காணப்போகிறாயே…அப்போது நேரில் பார்த்துத் தெரிந்துகொள்!” என்றுரைத்து, இராவணன் உள்ளத்தில் சீதைபால் காமத்தையும் அவளை உடனே அவன் காணச்செல்ல வேண்டும் எனும் தன் எதிர்பார்ப்பையும் புலப்படுத்துகின்றாள்.

    பார்ப்பதோடு அல்லாமல் இராவணன் அவளைக் கவர்ந்துவந்து தனக்குரியவளாக ஆக்கிக்கொள்ளவேண்டும் எனும் உட்கிடையும் சூர்ப்பனகைக்கு இருந்தது; அதனால்தான், ”சிவபெருமான் தன்தேவியை இடப்பாகத்தில் வைத்தான்; திருமால் பொன்மகளாகிய திருவைத் தன் மார்பில் வைத்தான்; பிரம்மதேவன் தன்தேவியை நாவில் குடியேற்றினான். விண்ணளவு உயர்ந்த தோள்களை உடைய வீரனே! மின்னலை வென்ற நுண்ணிடையாளான சீதையை நீ அடைந்தால் அவளை எங்கே இருத்தி வாழ்வாய்?” என்று கேட்கிறாள்.

    பாகத்தில் ஒருவன் வைத்தான்
         பங்கயத்து இருந்த பொன்னை
    ஆகத்தில் ஒருவன் வைத்தான்
         அந்தணன் நாவில் வைத்தான்
    மேகத்தில் பிறந்த மின்னை வென்ற
         நுண் இடையினாளை
    மாகத் தோள் வீர பெற்றால்
         எங்ஙனம் வைத்து வாழ்தி (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3239)

      எங்ஙனம் வைத்து வாழ்தி என்பது, ”எவ்விடத்தில் நீ அவளை வைத்து வாழப்போகிறாய்?” என்ற பொருளேயல்லாமல், ”நீ எங்கே அவளோடு வாழப்போகிறாய்?” என்ற எதிர்மறையான மற்றொரு குறிப்புப்பொருளையும் உணர்த்தும்வகையில் கம்பநாடன் இத்தொடரை அமைத்திருப்பது நயமுடைத்து!

    இந்தப் பாடலைத்தான்,

    “பரமசிவன் சக்தியை
    ஓர் பாதியில் வைத்தான்; அந்தப்
    பரமகுரு ரெண்டு பக்கம்
    தேவியை வைத்தான்
    பாற்கடலில் மாதவனோ
    பக்கத்தில் வைத்தான்
    ராஜாபத்மநாபன் ராணியைத் தன்
    நெஞ்சினில் வைத்தான்!” என்று ’வியட்நாம் வீடு’ படப் பாடலாக, எளிய நடையில் மாற்றியிருப்பார் கண்ணதாசன்.

    இவ்வாறு 14 பாடல்களில் சீதையின் அழகைக் கேசாதிபாதம் வருணித்து இராவணனின் மனத்தில் காமத்தீயை மூட்டுகின்றாள் சூர்ப்பனகை.

    சீதையைப் பற்றிச் சூர்ப்பனகை சொல்லக்கேட்ட இராவணன், தங்கைக்கு நேர்ந்த அவலத்தை மறந்தான்; கர தூடணர்களின் அழிவை மறந்தான்; அரக்க குலத்துக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை மறந்தான்; ஆனால், மங்கை சீதையை மட்டும் மறக்கவியலாது அவள் நினைவிலேயே மூழ்கிப்போனான்!

    ”மெல்லிடை கொண்ட சீதை என்னும் பெயரும், என் மனமும் ஒன்றோடொன்று பொருந்திப் போய்விட்டால் சீதை என்ற ஒன்றின் பெயரை நீக்கி மற்றொன்றை எண்ணுதற்கு எனக்கு இன்னொரு மனமும் இருக்கின்றதா? இல்லை! சீதையை மறப்பதற்கு வழியேதும் உளதா? அதுவும் இல்லையே! ஒருவர் எவ்வளவுதான் கல்வியில் வல்லவராயினும், நன்மை தீமை பற்றி அறியும் ஞானம் அவர்க்கு இல்லையெனில் (பொருந்தா) காமத்தை வெல்லுதல் இயலுமோ? இயலாதே!” என்று தனக்குத்தானே சிந்தனையில் மூழ்கினான் இராவணன்.

    சிற்றிடைச் சீதை என்னும்
         நாமமும் சிந்தைதானும்
    உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று
         ஒழித்து ஒன்றை உன்ன
    மற்றொரு மனமும் உண்டோ மறக்கல்
         ஆம் வழி மற்று யாதோ
    கற்றவர் ஞானம் இன்றேல்
         காமத்தைக் கடத்தல் ஆமோ. (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3247)

    சீதையை நினைத்துக் கலங்கும் தன் மனத்தை எண்ணி இன்னொரு மனமிருந்தால், அவளை மறந்து, வேறு செயல்களில் ஈடுபடலாமே என்று நினைக்கிறான் இலங்கைவேந்தன் இராவணன்.

    கவிச்சக்கரவர்த்தி கம்பனின் இப்பாடலாலும் கவரப்பெற்ற கவியரசு கண்ணதாசன், ’வசந்த மாளிகை’ எனும் பாடத்தில் காதல் தோல்வியில் கதாநாயகன் கலங்கும்போது,

    ”இரண்டு மனம் வேண்டும்
    இறைவனிடம் கேட்டேன்
    நினைத்து வாட ஒன்று
    மறந்து வாழ ஒன்று” எனும் பாடலாக இதனை மீளுருவாக்கம் செய்தார்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவைகம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

    Share