Blog

  • கற்பூரத்தின் இன்னொரு பயன்

    கற்பூரத்தின் இன்னொரு பயன்

    அண்ணாகண்ணன்

    தீபாவளி இனிப்புகள், பலகாரங்களை எறும்பு வராமல் காப்பது, அவ்வளவு எளிதில்லை. அப்படியே எறும்பு வந்துவிட்டால், அவற்றை அப்புறப்படுத்துவது, ஒரு பெரிய வேலை. இந்நிலையில், எறும்புகள், பூச்சிகள் வராமல் உணவுப் பொருள்களைக் காப்பதற்குக் கற்பூரம் பயன்படும் என இன்று தெரிந்துகொண்டேன். இது குறித்து என் மனைவி ஹேமமாலினி உடன் ஒரு நேர்காணல்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 22 (மறுகிற் பெண்டிர்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 22 (மறுகிற் பெண்டிர்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    அகஇலக்கியத்தில் ஊர்ப்பெண்டிர், சீறூர்ப் பெண்டிர், அயலில் பெண்டிர், சேரிப்பெண்டிர், முதுபெண்டிர், முதுவாய்ப் பெண்டிர், நல்கூர் பெண்டிர்,  அரியல் பெண்டிர், கெடுமகப் பெண்டிர், ஆளில் பெண்டிர், மறுகிற் பெண்டிர் என பலதரப்பட்ட பெண்டிர் இடம் பெற்றுள்ளனர். சேரிப் பெண்டிர் சிறுபாத்திரத் தகுதி பெற்றமை பற்றி முன்னர்க் கண்டோம். இக்கட்டுரையில் மறுகிற் பெண்டிர் பற்றிக் காண்போம்.

    தெருப்பெண்டிர்

    மறுகு என்பது தெருவைக் குறிக்கிறது. தலைவி வசிக்கும் தெருவில் தாமும் வசிக்கும் பெண்கள் மட்டுமே ‘மறுகிற் பெண்டிர்’ என்ற தொடரால் சுட்டப்படுகின்றனர். ஒரே ஒரு பாடலில் மட்டும் இடம்பெறும் இத்தொகைப் பாத்திரம் பேசியமை பற்றித் தோழி உரைப்பதால்; சிறுபாத்திரத் தகுதி உடையதாகிறது.

    அம்பல் என்னும் அகஇலக்கியக் கலைச்சொல்லுக்கு விளக்கம் தரும் பாத்திரமாக அமைவதே இதன் சிறப்பாகும்.

    “சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
    மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
    மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்றச்
    சிறுகோல் வலந்தனள் அன்னை” (நற்.- 149)

    தெருவில் பெண்கள் சிலரும் பலருமாகக்  கூடிக்கூடிப் பேசுகின்றனர். ஒருவருக்கு ஒருவர் கடைக்கண்ணால் ஜாடை காட்டுகின்றனர். இன்னார்… இப்படி… என்று எல்லோர்க்கும் கேட்கும்படி வாய்விட்டுப் பேசாமல் கிசுகிசுக்கின்றனர். அப்படிப் பேசும் போது இயல்பாக அமையும்  அவரது உடல்மொழி பற்றிய புனைவு  தொகைஇலக்கியத்தின் நடப்பியல் பாங்கைத் தெளிவுறுத்துகிறது. மூக்கின் உச்சியைச் சுட்டுவிரல் சேர்வது கட்புல உருக்காட்சியாக அமைந்து அழகூட்டுகிறது.

    அம்பலுக்கும் அலருக்கும் இடையிலுள்ள  நுட்பமான வேறுபாடும் இதே பாடலில் விளக்கம் பெறுகிறது. அன்னை மகளைக் கோலால் அடிக்கும் கொடுமையைச் சகிக்க முடியாத தோழி; தலைவனோடு  உடன்போக்கை  வற்புறுத்தி;

    “நடுநாள் வருஉம் இயல்தேர்க் கொண்கனொடு
    செலவயர்ந் திசினால் யானே
    அலர் சுமந்து ஒழிக இவ் அழுங்கல் ஊரே” (மேலது).

    எனத் தூண்டுகிறாள். ‘அவனுடன் சென்றுவிட்டால் அதன் பிறகு இவ்ஊர்மக்கள் எல்லோரும் வாய்விட்டு வெளிப்படையாகப் பேசுவர். அந்த ஆரவாரம் மிக்க அலரோடு  அவர்கள் ஒழியட்டும்’ என்கிறாள் தோழி.

    முடிவுரை

    ஒரு பெண்ணின் களவுக்காதல் பற்றிக் கௌவை(பழி) தோன்றினும்; அதை அம்பலாக மட்டுமே பரிமாறிக் கொள்கின்றனர் மறுகிற்பெண்டிர்.  அக்காதலில் மெய்யுறு புணர்ச்சி நிகழ்ந்ததாகத் தெரியும் போதும்; உடன்போக்கு மூலம் கற்புவாழ்வாக மாறும் போதும் அலர் தூற்றுகின்றனர்.

    Share
  • இலண்டனில் காலை நடை

    இலண்டனில் காலை நடை

    அண்ணாகண்ணன்

    இலண்டனில் வசிக்கும் என் தங்கை ஜனனி, எனது வேண்டுகோளை ஏற்று, தனது நடைப் பயிற்சியின்போது எடுத்த காட்சிகளை அனுப்பியிருக்கிறார். இலையுதிர்காலத்து வசீகரமும் இலண்டனின் வனப்பும் பசுமையும் பச்சைக் கிளிகளின் பாடலும் நமக்கு மகிழ்வையும் மனத்துக்கு அமைதியையும் அளிக்கின்றன. பார்த்து மகிழுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 18

    பரிமேலழகர் உரைத்திறன் – 18

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    மனங்கோணா மறுப்பு

    முன்னுரை

    உள்ளங்களின் எண்ணிக்கையும் கருத்து வேறுபாடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. அவை ஒன்றே போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தல் ஆகாது. இலக்கிய உரை பற்றிய சிந்தனைகளில் உள்ளங்களின் எண்ணிக்கை மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டதால் இலக்கிய உரைவளர்ச்சி தடைபட்டதுதான் கண்ட பயன். அறிவும் புலமையும் சார்ந்த அறிஞர்கள் தம் சிந்தனைக்கேற்ப உரைமாற்றம் காண்பது ஏற்கத்தக்கதே. பரிமேலழகரைப் பொருத்தவரையில் அரசியல் கொள்கை, குறுகிய மனப்பான்மை, குறைந்த புலமை, உரைப்பொருள் தவிர வேறுபிற காரணிகள் இவற்றின் அடிப்படையில் மறுப்புக்கு ஆளானவர். பரிமேலழகரின் உரையை மறுப்போர்கள் அவர்தம் உரைமறுப்புக் கோட்பாடுகளையும் உரைமறுப்புத்திறனையும் வகைகளையும் உணர்ந்திருந்தால் இத்தகைய நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். முன்னோர் கண்ட உரைகளை அவர் மறுக்கும் முறைகளே ஒரு ஆய்வுப்பட்டத்திற்கு உரிய பொருளாம். ‘அடிப்பது தெரியாமல் அடிக்க வேண்டும்’ என்றாற்போல மறுப்பது தெரியாமல் மறுக்க வேண்டும் என்ற கொள்கையையும் பரிமேலழகர் பின்பற்றியிருக்கிறார் என்பதை நிறுவுவதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    சொல்லக் கூடாததும் செய்ய வேண்டியதும்

    ‘ஈகை’ என்னும் அதிகாரத்தில் நல்ல குடி பிறந்தவனிடத்தில் இருக்கின்ற இரண்டு பண்புநலன்களைக் கூறுவதாக ஒரு பாட்டு இருக்கிறது.

    “‘இலன்’ என்னும் எவ்வம் உரையாமை, ஈதல்
    குலன் உடையான் கண்ணே உள” (223)

    இந்தப் பாட்டுக்குப் பரிமேலழகர்,

    “யான் வறியன் என்று (இரப்பான்) சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும் அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும் இவையிரண்டும் உளவாவன குடிப்பிறந்தான் கண்ணே”

    என்று பொழிப்புரை எழுதி,

    “மேல் ‘தீது’ என ஒழிதற்கும் ‘நன்று’ என்றது செய்தற்கும் உரியவனை உணர்த்தியவாறு. இனி, ‘இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்’ என்பதற்கு, ‘அவ்விளிவரவை (ஒருவன் தனக்குச்) சொல்வதற்கு முன்னே (அவன் குறிப்பறிந்து கொடுத்தல்)’ எனவும், அதனைப் பின்னும் பிறன் ஒருவன் பால் சென்று அவன்) உரையாவகையால் கொடுத்தல்’ எனவும், ‘(யான் இது பொழுது) பொருளுடையேனல்லேன்’ எனக் ‘கரப்பார் சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல்’ எனவும் உரைப்பாருமுளர். அவர் ‘ஈதல்’ என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பார்”

    என்று விளக்கவுரையும் தந்திருக்கிறார்.

    பரிமேலழகர் உரை விளக்கத்திற்கு விளக்கம்

    “நல்ல குடியில் பிறந்தவனிடத்தில் இருக்கின்ற இரண்டு பண்புகளாவன, ஒன்று தான் எந்த நிலையிலும் தனது இளிவரவைப் பிறரிடம் சொல்லாத தன்மை. இரண்டு அவ்வாறு தன்னிடம் வந்து தமது இளிவரவைச் சொல்லி இரப்பார்க்கு இல்லையென்னாது கொடுக்கும் இயல்பு.”

    பரிமேலழகர் உரை அமைந்த காரணம்

    இந்தத் தொடரின் பல நேர்வுகளில் சொல்லியவாறு பரிமேலழகர் எந்தக் குறட்பாவையும் தனி அலகாகக் கொள்வதில்லை. அதாவது ஒரு குறட்பா (இன்றைக்குப் பேராசிரியர்கள் உட்பட பலரும் கருதியுரைப்பதுபோல்) தனிப்பட்ட நீதியினைக் கூறுவதாகக் கருதிலர். குறட்பாவின் பொருளமைதியை அதிகாரம், அதிகாரத்தின் பொருண்மை, பகுப்பின் முழுமை, குறட்பா இடம்பெறும் இயல், பால் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நோக்கி உரையெழுதுவதைக் குறித்திருந்தோம். இந்தக் குறட்பாவையும் அங்ஙனம் நோக்கித்தான் உரையெழுதுகிறார். இந்தப் பாட்டுக்கு முந்தைய பாடல்,

    “நல்லாறு எனினும் கொளல் தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று” (222)

    இந்தப் பாட்டில் ‘கொளல்’, ‘ஈதல்’ என்னும் தொழில் இடம்பெற்றிருக்கின்றதேயன்றி எழுவாய் இல்லை என்பதை அறியலாம். அதாவது யார் கொள்ளுவது தீது? யார் ஈதல் நன்று? என்னும் வினாவிற்குப் பாட்டில் விடையில்லை. பொதுப்படையான நீதியுரைப்பதாகவே அமைந்திருக்கிறது. ஈகையாகிய உயர்பண்பு பொதுப்படையாக அமைய வாய்ப்பில்லை. இதனை அவர் எழுதிய விளக்கவுரையில்,

    “மேல் தீது என ஒழிதற்கும் நன்று என்றது செய்தற்கும் உரியவனை உணர்த்தியவாறு”.

    எனத் தெளிவுபடுத்துகிறார். ‘உரியவன்’ என்னும் சொல் பொதுமைப்பண்பு கொண்டதன்று. எனவே இந்தப் பாடலுக்கான வினைமுதல் அல்லது எழுவாய் அடுத்த பாட்டில் அமைந்திருப்பதை அவர் நோக்கியிருக்கிறார். அதனால் அடுத்த பாட்டுக்கு உரையெழுதுகிறபோது பாட்டின் அமைப்பைப் பற்றி ஆராயமுடிகிறது. முதல் பாட்டில் எழுவாய் இல்லாமல் எழுதிய திருவள்ளுவர் அடுத்தபாட்டில் எழுவாயோடு (குலனுடையான்) எழுதுகிறார். பரிமேலழகர் இதனை (இரண்டுக்கான தொடர்பை)த் தம் புலமையாற்றலால் கண்டறிகிறார்.

    எஞ்சிய உரைகளும் பரிமேலழகர் பார்வையும்

    ஒரே குறட்பாவிற்குக் கற்பார் புலமைக்கும் சிந்தனையாற்றலுக்கும் ஏற்பப்  பல உரைகளைக் காண முடியும். ஆனால் ஒரே உரையாசிரியர், பிற உரையாசிரியர் கூறும் உரைக்கருத்துக்களை முன்மொழிந்து கற்பார் முன் வைப்பது என்பது அரியது. அரியவற்றுள் அரியனவற்றை இயல்பாகச் செய்துகாட்டும் அழகர் இதனையும் செய்துகாட்டியிருக்கிறார். ‘இலன் என்னும் எவ்வம் உரையாமை, ஈதல்” என்பதற்குக் குலனுடையானுக்கு இருக்கும் இருவேறு சிறப்பியல்புகள் என உரைகண்ட தன் கருத்துக்கு மாற்றாக உரையாசிரியர்கள் பிறர் கூறும் கருத்துக்களை அவர் முன்மொழிகிறார். அழகர் முன்மொழியும் பிறருடைய கருத்துக்களையும் அவர் உரைகொண்ட பாங்கினையும் தொடர்ந்து காணலாம். இனி ‘இலன் என்னும் எவ்வம் உரையாமை’ என்பதற்கு,

    1. ‘(ஒருவன் தனக்குச்) சொல்வதற்கு முன்னே (அவன் குறிப்பறிந்து) கொடுத்தல் எனவும்’ கண்ட உரையினை முன்மொழிகிறார். இந்த உரையால் ‘எவ்வம் உரையாமை’ என்பதற்கு இரப்பவன் இளிவரவைச் சொல்லுதற்கு முன்பாக’ என்பது பெறப்படுகிறது. படவே ‘உரையாமை’ என்பது இரப்பவனுக்கு ஆகிறது.
    2. ‘அதனைப் பின்னும் பிறன் ஒருவன் பால் சென்று அவன்) உரையாவகையால் கொடுத்தல் எனவும் கண்ட உரையினை அடுத்ததாக முன்மொழிகிறார். இதிலும் ‘உரையாமை’ என்பது இரப்பவனுக்கே ஆகி வருகிறது. வரினும் பொருள் பெற்றவன் அதன் பற்றாக்குறை கருதி மற்றொருவனிடம் சென்று (போதவில்லை என்று) ‘உரையாமை’ என்ற பொருளைத் தருகிறது. கொடுக்கின்ற அளவு நோக்கிய அவன் வருத்தத்தைக் குறிப்பதாக இது அமைந்திருக்கிறது என்பதை அறிதல் வேண்டும்.
    3. (யான் இது பொழுது) பொருளுடையேனல்லேன் எனக் கரப்பார் சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும் கண்ட உரையினையும் முன்மொழிகிறார். முன்னிரண்டு உரைகளில் உரையாமை என்பது இரப்பவனுக்கு ஆக, இந்த உரையில் அது ஈதலைச் செய்பவனுக்கு ஆகி வருகிறது. முந்தைய இரண்டு உரைகளிலும் ‘உரையாமை’ என்பதை மற்ற இரு உரையாசிரியர்களும் தொழிற்பெயராகக் கொள்ள இவ்வாசிரியர் இதனை வினையெச்சமாகக் கொண்டு உரையெழுதியுள்ளார்.

     பரிமேலழகரின் பண்பாட்டு முதிர்ச்சி

    ‘என்னுடைய பார்வை இது’ என்பதில் உறுதியாயிருக்கும் பரிமேலழகர் தவறு கண்ட இடத்துச் சுட்டிக்காட்டத் தயங்கினாரல்லர். ஆனால் இந்தக் குறட்பாவுக்கான உரைவேற்றுமைகளை மனமுவந்து முன்மொழிகிறார். ‘‘இப்படியும் சொல்லுகிறார்கள்’ எனப் பிற உரைகளுக்குப் பாசத்தோடு பரிந்துரைக் கடிதம் தருகிறார். அந்தக் கடிதத்தில் ‘அவர்கள் ஏன் அப்படி உரைசொன்னார்கள்?’ என்பதற்கான காரணத்தையும் விளக்குகிறார். அவர்தம் புலமைத்திறத்தை மெச்சுகிறார். எப்படி? உரையாமை என்பதற்குப் பொருள் காண்பதில் தொழிற்பெயராகவும் வினையெச்சமாகவும் உரைகண்ட சான்றோர்கள். ‘ஈதல்’ என்பதை தொழிற்பெயராகக் கருதாது பொருட்பன்மையாகவே கருதி உரையெழுதியிருக்கின்றனர். இவ்வாறு பொருட்பன்மையாகக் கருதலாம் என்பதுதான் பரிமேலழகர் கருத்தும். ஆனால் அவர் அதனைப் பொருட்பன்மையாகக் கருதாதற்குக் காரணம் பின்னர் உரைக்கப்படும்.

    பொருட்பன்மை என்றால் என்ன?

    ‘உரையாமை’, ‘ஈதல்’ ஆகிய இரண்டனையும் பரிமேலழகர் எதிர்மறை மற்றும் உடன்பாட்டுத் தொழிற்பெயர்களாகக்  கொண்டு உரையெழுதினார்.  அவர் சுட்டிய ஏனைய உரைகளில் ‘ஈதல்’ என்பது பொருட்பன்மையாக்கி உரைக்கப்பட்டிக்கிறது என்று அவர் கூட்டுகிறார். நம் உள்ள வினா ‘பொருட்பன்மை என்றால் என்ன?’ என்பதுதான். ஈதல் என்பது தொழில். அது ஒருதன்மைத்து ஆகாது. பலவகையாக விரியும். தானம் என்பதும் அது. தானம் பல வகைப்படும். ஈதல் தொழில் ஒன்றாயினும் இரப்பவர்க்குக் கொடுக்கப்படும் பொருட்களால் பலவாகும். அன்னதானம், கன்னிகாதானம், சொர்ணதானம், பூதானம், கோதானம், வித்யாதானம் என்பதனைக் காண்க. எனவே பிறர் உரைகளில் இந்த ‘ஈதல்’ என்பது பால்பகா அஃறிணைப் பன்மைப் பெயராகக் கொண்டு ‘உள’ என்னும் பன்மை வினைமுற்றைக் கொண்டு முடிந்தது. ‘உரையாமை’ என்பதற்குப் பிறரெல்லாம் கண்ட உரைகள் மேலே சுட்டப்பட்டன. ‘ஈதல்’ என்பதற்கான விளக்கம் இங்கே குறிக்கப்பட்டு,

    ‘அவர் ‘ஈதல்’ என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பார்’

    என்னும் பரிமேலழகரின் விளக்கத்திற்கான காரணம் தரப்பட்டது.

    பரிமேலழகர் மறுக்கிறாரா? ஏற்கிறாரா?

    ‘ஈதல்’ என்பதனைத் தொழிற்பெயராக்கி உரைக்கும் பரிலேழகர் அதனைப் பன்மைப் பொருட்பெயராக உரைப்பார் கருத்துக்களை முன்னெடுக்கிறார். ஆனால் அவற்றை ஏற்றுக் கொள்கிறாரா என்பது தெளிவாகவில்லை. பல இடங்களில் ‘உரைப்பாரும் உளர். இன்ன காரணத்தினால் அதனை ஏற்கவில்லை’ என்பார். முரண்பாடுகளைச் சுட்டி ‘அஃது உரையன்மை அறிக’ என்பார். ‘அதிகாரப் பொருளோடு இயையாமையின் உரையன்று’ என்பார் இவற்றுள் எதனையும் குறிப்பிடாது வாளாச் சுட்டிக் கற்பாருக்கு ஒரு சிக்கலையும் உண்டாக்கி விடுகிறார். பிறர் உரைகளைப் பரிமேலழகர் சுட்டுவதனின்றும் அவற்றை மதித்துப் போற்றுகிறார். சரி. இவர் ஏன் அவ்வாறு உரையெழுதவில்லை? அல்லது இவர் ஏன் இவ்வாறு (உரையாமையை எதிர்மறைத் தொழிற்பெயராகவும் ஈதலை உடன்பாட்டுத் தொழிற்பெயராகவும் கொண்டு) உரையெழுதியிருக்கிறார் என்ற வினா தோன்றுகிறது.

    பரிமேலழகரின் உரை நுட்பம்

    பரிமேலழகரின் உரை விளக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் முந்தைய குறட்பாவின் (222) கருத்தினை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

    “நல்லாறு எனினும் கொளல் தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று” (222)

    என்பது அந்தக் குறட்பா.

    “ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது. ஈந்தார்க்கு அவ்வுலகம் எய்துதல் இல்லை என்பார் உளராயினும் ஈதலே நன்று”

    என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    ‘எனினும்’ என்பது இருவழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது. பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களில் ஈதல் சிறந்ததென்பது பெற்றாம். நல்லது கூறுவார் தீயதும் உடன் கூறினார்.

    என்ற விளக்கவுரையையும் தந்திருக்கிறார்.

    உரை மதிப்பீடு

    தன்னுரை தருகிறார். பிறர் உரைகளைச் சுட்டுகிறார். பிறர் உரைக்கான காரணத்தையும் பதிவு செய்கிறார். அவற்றை மறுக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை. அதனால் ஆய்வுச் சிந்தனைக்கு அழகர் வழிவிடுகிறார். பரிமேலழகர் உரையெழுதுங்கால் இரண்டு உண்மைகளைக் கருத்திற் கொள்கிறார்.

    1. அதிகாரத் தலைப்பு
    2. அதிகாரப் பொருண்மை.

    அதிகாரத் தலைப்பு ஈகை என்பது. ‘ஈகை’ என்பது கொடுப்பவனைச் சார்ந்தது. இரப்பவனுக்கும் ஈகைக்கும் தொடர்பேதும் இல்லை. ‘ஈகை’ என்பது தொழிற்பெயர். அந்தத் தொழில் கொடுப்பவனுக்கே உரியதன்றிப் பெறுபவனுக்குப் பொருந்தாது. அதிகாரத்தின் எந்த இடத்திலும் இரப்பவனைப் பற்றிய குறிப்பேதும் இல்லை. அதிகாரப் பொருண்மை பகுப்பிலும் இது எதிரொளிக்கிறது.

    1. ஈகையின் இலக்கணம் (1)
    2. ஈதலின் சிறப்பு (2-7)
    3. ஈயாமையின் குற்றம் (8-10)

    இந்தச் சிந்தனை பிற உரையாசிரியப் பெருமக்களிடம் இருந்திருக்குமாயின் ‘உரையாமை’ என்பதை இரப்பவனுக்கு ஏற்றி இடர்ப்பட்டிருக்க மாட்டார்கள். ஏனெனில் ‘உரையாமை’ என்பது கொடுப்பவனுக்குரியது. அதிகாரம் அவனைப் பற்றியே பேசுகிறதாதலின். ‘ஏற்பது இகழ்ச்சி’ என்பது ஔவை மொழியாலும் ‘இரவச்சம்’ என்னும் நாயனார் அதிகாரத்தாலும் பெறப்படும். காட்டப்பட்ட உரைகளில் மூன்றாவது உரையிலும் ‘உரையாமை’ என்பதைக் கொடுப்பவனுக்கே உரித்தாக்கியுரைத்திருப்பதையும் காண்க. எனவே ‘உரையாமை’ என்பதை இரப்பவனுக்கு ஆக்கி உரைப்பது அதிகாரத்தின் குறட்பாக்களின் பொருண்மையோடும் மையக்கருத்தோடும் பொருந்தவில்லை என்பதைப் பரிமேலழகர் உணர்கிறார்.

    இரண்டாவதாக முன்பே சுட்டியபடி ‘நல்லாறு எனினும்’ எனத் தொடங்கும் குறட்பாவில் வினைமுதல் இல்லை. ‘தீச்செயல்’ ஒன்றும் ‘நற்செயல்’ ஒன்றும் என இரண்டு செயல்கள் குறிக்கப்படுகின்றனவேயன்றி அவை யாருக்கு உரியது என்பது தெளிவாகவில்லை. செய்யக் கூடாத செயலைத் தவிர்க்க வேண்டியவன் யார்? என்பதற்கும் ‘செய்ய வேண்டிய செயலைச் செய்பவன் யார்? என்பதற்கும் குறட்பாவில் (222) விளக்கமில்லை. ‘மாட்டேறு’ என்பது அழகர் அறிந்த உரை உத்தியாதலின் முந்தைய குறட்பாவையும் இந்தக் குறட்பாவையும் மாட்டேற்றி குறட்பாக்களின் கருத்துக்களை ஒன்றிணைத்துக் காட்டுகிறார். ‘உரையாமை’ என்பதையும் ‘ஈகை’ என்பதனையும் இனம் பற்றியும் ஒருவனுக்கே உரிய குணம் பற்றியும் தொழிற்பெயராகவே கொண்டு தமது கருத்தினைக் குறிப்பால் புலப்பட வைக்கிறார்.

    மனங்கோணா மறுப்பும் தெளிவும்

    பரிமேலழகரைத் தவிர மற்றவர்கள் ‘உரையாமையை’ இரவலனுக்கு ஆக்கியதால் ஈகை செய்வானுக்கு இருக்கக் கூடாத பண்பும் இருக்க வேண்டிய பண்பும் வெளிப்படவில்லை. இதனால் ‘நல்லாறு எனினும் ‘கொளல் தீது’ என்னும் நீதி ‘கேட்பாரின்றித்’ தவிக்கிறது. ஈதலைப் பொருட்பன்மையாகக் கருதி உரைத்ததால் குறட்பாவுக்குக் கூடுதல் பொருட்சிறப்பு வந்ததாகக் கருத முடியவில்லை. மாறாகப் பரிமேலழகரின் உரையால் முந்தைய குறட்பாவின் வினைமுதல் தெளிவாகிறது. ‘எல்லாரும் ஈகை செய்ய இயலாது. குலனுடையானுக்குரிய ஒழுக்கம் அது’ என்னும் தெளிவு கிட்டுகிறது. அவ்வொழுக்கமும் இருபகுதிகளை உள்ளடக்கியது என்பதும் புலனாகிறது. பிறருடைய உரைகளை மதித்துப் போற்றும் பரிமேலழகர் ‘தானாஅட்டித் தனது நிறுத்தல்’ என்னும் உத்தியை மிகவும் இலாவகமாகப் பயன்படுத்திப் பிற சான்றோர்களின் கருத்துக்களைச் சுட்டுவதோடு அமைகிறார். அவர் உரைநெறி பற்றிய தமது கருத்துக்களைத் தவிர்த்துவிடுகிறார். விளைவு? தம்மைப் பற்றிய பரிமேலழகர் கருத்து என்ன என்பது அறியாமலேயே அவ்வுரைகள் அமைதியாகின்றன.

    நிறைவுரை

    மாற்றுரை காணும் நேர்வுகளில் (583, 1001, 1116) ‘உரைப்பினும் அமையும்’ என்று ஏற்றுக் கொள்கிற பரிமேலழகர் இங்கே அவ்வாறு குறிக்காதது நோக்குதற்குரியது. அவ்வுரைகளால் குறட்பாவின் பொருண்மைப்பகுதி முழுமை பெற்றதாக அவரால் கருத இயலவில்லை போலும்! “உரையாமையையும் ஈதலையும்” தொழிற்பெயராக்கி உரைகண்ட தமது நெறியையும், ஈதலைப் பொருட்பன்மையாக்கிப் பிறர் கண்ட உரைநெறியையும் பந்தி வைக்கும் பரிமேலழகர் சீர் தூக்கும் பொறுப்பினைக் கற்பாருக்கு விட்டு ஒதுங்கிக் கொள்கிறார். ஏற்றுக் கொள்ளாததை மறுக்காமல் மறுக்கிறார். பிறர் மனம் கோணாமல் மறுக்கிறார். பரிமேலழகரின் உரை மட்டும் மாட்சியுடையதன்று. அவரும் மாட்சிமை உடையவரே என்பது இதனால் புலனாகலாம்.

    (தொடரும்…)

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 29

    கதை வடிவில் பழமொழி நானூறு – 29

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல்- 59

    சீர்த்தகு மன்னர் சிறந்ததனைத்தும் கெட்டாலும்
    நேர்த்துரைத்(து) எள்ளார் நிலைநோக்கிச் – சீர்த்த
    கிளையின்றிப் போஒய்த் தனித்தாயக் கண்ணும்
    ‘இளைதென்று பாம்பிகழ்வார் இல்’  

    பழமொழி- ‘இளைதென்று பாம்பிகழ்வார் இல்’

    எழுத்தாளரான  நான் கதை எழுத வந்திருக்கிறேன். குக்கிராமத்து வாழ்வியலை எழுதணும்ங்கறது என் நீண்ட நாள் ஆசை. புளோரிடாவில் வசிக்கும் எனக்கு இந்திய குக்கிராமத்தைப் பற்றி என்ன தெரியும். பிறந்து படித்து வேலைக்குப் போகிற வரை தில்லி வாசம். அப்பப்போ தமிழ்நாட்டு சொந்தக்காரங்களைப் பாக்கறதுக்காக சென்னை வருவது வழக்கம். அவ்வளவுதான். கல்யாணத்துக்கப்பறம் புளோரிடா போயாச்சு.

    நல்லவேளை தஞ்சாவூர் கல்யாணத்துல கலந்துக்கறதுக்காக இந்தியா வந்த இடத்துல மாயனப் பாத்தது நல்லதாப் போச்சு. கல்யாணத்துல சுருசுருப்பா அவன்தான் ஓடியாடி வேலைசெஞ்சான். சரி அவனை ஊக்குவிப்போமேன்னு நினைச்சு பேச்சு குடுத்ததுல பக்கத்து கிராமத்தச் சேந்தவன்னு தெரிஞ்சது. அதோட விளைவு அவன் கூட இப்ப இங்க வந்து உட்கார்ந்து இருக்கேன்.

    பஸ் ஸ்டாண்டுலேந்து நடந்துவந்த களைப்பப் போக்க ஆல மரத்தடியில போடப்பட்டிருக்கிற கல்திண்ணையில நான் இப்ப உக்காந்து இருக்கேன். மேல நிமிர்ந்து பாத்தா இடைவெளியில்லாம இலைகள். விதவிதமான பறவைகளின் ஒலி  சுத்திலும் ஏதோ நீர்நிலை இருக்கு போல. குளிர்ச்சியான காற்றுவேற வீசுது. ஆனா இதையெல்லாம் யாரும் ரசிக்கறதாத் தெரியவே இல்ல. சொல்லப்போனா ஆள் நடமாட்டமே இல்ல.

    மாயன் உட்கார்ந்து ஓய்வு எடுக்காம குறுக்கும் நெடுக்குமா நடக்கறான். ஒரு பக்கத்துல கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல் வெளிகள். சரி அவனுக்கு என்ன அவசர வேலை இருக்கோன்னு நினைச்சு கிளம்பலாம்னு சொன்னேன். வரப்பு வழியா என்ன கூட்டிக்கிட்டு  போறான். இப்பதான் நாத்து நட்டுவச்சிருக்காங்க போல,  அந்த வயல் என்னயப்பாத்து நான் சொட்ட மண்டையா இருக்கேன்னு நினைக்காத. கொஞ்ச நாள் கழிச்சு வா என் தலையில அடர்த்தியா நெற்கதிர் விளைஞ்சு நிக்கும்னு சொல்லுது. அதுக்கு அடுத்த வயல இப்பதான் உழுதுகிட்டு இருக்காங்க.  அது  எனக்கு மொட்ட போடறாங்கனு சொல்லுமோ. இந்தக் கற்பனையும் நல்லாத்தான் இருக்கு. யோசிச்சுக்கிட்டே மாயனப் பின்தொடர்ந்து  நடக்கறேன். வரப்புக்குப் பக்கத்துல இருக்கற மரத்துலேந்து தூக்கணாங்குருவிக் கூடு விழுந்துகிடக்கு. இந்த வீடு பழசாயிடுச்சுன்னு நினைச்சு இப்ப அந்த குருவி புது வீடு கட்டிக்கிட்டு இருக்குமோ? எதுக்கும் இருக்கட்டும் காட்சிப்பொருளா அதை வைக்கலாம்னு கையில் எடுத்துப் பாக்கறேன்.

    மாயன் கைய அசைச்சு என்னயக் கூப்பிடறான். அடுத்த வயலுக்கு நடுவுல அவன் இறங்கி நிக்கறதால நானும் வரப்ப உட்டு கீழ இறங்கறேன். கால் சேத்துல புதைஞ்சு செருப்பு உள்ள மாட்டிக்கிச்சு. வேற வழியில்லாம செருப்ப அங்கயே உட்டுட்டு கஷ்டப்பட்டு நடந்து அவன் இருக்கற இடத்த அடைஞ்சேன்.

    மாயன் என்னயப் பாத்து சிரிக்கறான். ஏன்சார் மண்ணுக்குள்ள முதல் தடவ கால வச்சிருப்பீங்க போல. எப்படி இருக்கு அனுபவம். இதையும் எழுதி வச்சிக்கோங்கங்கறான். நிசமாவே ஒரு கிலோமீட்டர் நடந்து மக்கள் வசிக்கும் அந்தக் குடிசைப் பகுதிக்குப் போகறதுக்குள்ள ரொம்ப கஷ்டமாயிடுச்சு.

    சுத்திவர ஐம்பது அறுபது மண் குடிசைவீடுகள். மண்ணால கட்டப்பட்ட நாலு சுவத்துக்கு மேல ஒலைக் கூரை வேய்ந்து இருப்பாங்கபோல.  குடிசைக்கு உள்ளேயும் வெளியிலயும் தரைய சாணியால மெழுகி சுத்தமா வச்சிருக்காங்க. மின்சார வசதி இல்லாத கிராமங்கறதால எல்லா வீட்லயும் விளக்கு வைக்க வெளிச் சுவத்துல மாடாக் குழி அமைச்சிருக்காங்க. குடிசையோட கூரை மேல இடைவெளி விட்டு ஓரளவு காய்ந்த எருமுட்டைனு சொல்லப்படற வறட்டிய பரப்பி வச்சிருக்காங்க. அடுப்பெரிக்க விறகுகூட சேர்த்து உபயோகிப்பாங்களோ என்னவோ?  அந்த குடிசைகளுக்கு  நடுவுல ஒரு கல் மண்டபம் தெரியுது. இவ்வளவுதான் அந்தக் கிராமத்தின் அமைப்பு. மத்தபடி உள்ள எல்லா இடத்திலயும் வயல்கள்தான் இருக்கு.  நடுவுல இருக்கற கல் மண்டபத்தப் பத்தி கதை எழுததான் நான் இவ்வளவு சிரமப்பட்டு இங்க வந்தேன். மாயனத்தவிர வேற யாரும் பேச்சு குடுக்க மாட்டேங்கறாங்க. அவங்கவங்க வேலையில கண்ணும் கருத்துமா இருக்காங்க. சின்னஞ்சிறுசுங்க மாடு,வயல் வேலையப் பாக்கறாங்க. வீட்டைவிட்டு இறங்கமுடியா வயசானவங்க தென்னங்கீத்து, பனை ஓலை இதையெல்லாம் சீவி துடைப்பம், விசிறி, கூடை  இந்தமாதிரி சாமான்கள் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.

    மாயன் ஆரம்பிக்கிறான். இந்த மண்டபம் சோழர் கால குறுநில மன்னரோட சமாதி. எங்க ஊரோட கடவுள் இவர்தான். உருவம் எதுவும் வைக்கல காலையில எழுந்து எல்லாரும் இந்த மண்டபத்தப் பாத்து கையெடுத்து கும்பிட்டுட்டுத் தான் வேலைக்குப் போவாங்க. இவர் இந்த மாதிரி ஆறு கிராமங்களுக்கு மன்னரா இருந்தார். தன்னோட ஆட்சிக்குட்பட்ட வயல் வெளிகள எல்லாக் குடும்பத்துக்கும் சரிசமமா பிரிச்சிக்குடுத்து விவசாயம் பாக்க வச்சாராம். அதனால ஏழை பணக்காரன்னு வித்தியாசம் இருக்கல. இப்பவரை அப்படித்தான். கடைசி வரை அவர் தனக்குனு எந்த நிலத்தையும் வச்சுக்கல. இராச பரம்பரை முடிவுக்கு வந்தபிறகு அவர் வம்சத்துல வாழறவங்க  பிழைப்புக்குனு வேறவேற வேலையப் பாக்க ஆரம்பிச்சுட்டோம்.

    அப்டின்னா நீங்களும் அந்த மன்னர் பரம்பரையச் சேர்ந்தவரா. ஆச்சரியம் எனக்கு. மாயன் ஆமாம் என்கிறான். ஊருக்குள்ள எனக்கு இப்பவும் நல்ல மரியாதைதான். இருந்தாலும் பரம்பரை கவுரவத்தக் காப்பத்தணும் இல்லயா. அதனாலதான் டவுணுக்கு வந்து எனக்குத் தெரிஞ்ச வேலையப் பாத்து சம்பாதிக்கிறேன். கொஞ்ச பணம் சேந்தவொடனே இதே ஊரிலயே ஒரு வயல விலைக்கு வாங்கணும். அதுதான் என் இலட்சியம். அவன் பேசிக்கொண்டே போக என் மனதுள் ‘இளைதென்று பாம்பிகழ்வார் இல்’ எனும் பழமொழி ஞாபகத்துக்கு வருது. தன் கூட்டத்த விட்டுட்டு தனியா வந்துநிக்குதுங்கறதுக்காக பாம்ப யாராவது குறைச்சு எடை போடுவாங்களா. அதுபோலத்தான் மன்னர்களும் தம் நிலமையில தாழ்ந்தாலும் அவங்க பெருமை கெடாது. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள் தானே. என் கண்முன் மாயன் மணிமுடி தரித்த சோழமன்னனாகவே தெரிகிறான். அவனை முன்னால் நிற்கச் செய்து அந்த மண்டபத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.     .

    பாடல் – 60

    சிறியதாய கூழ்பெற்றுச் செல்வரைச் சேர்ந்தார்
    பெரிதாய கூழும் பெறுவர் – அரிதாம்
    ‘இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால்
    கிடப்புழியும் பெற்று விடும்’..

    பழமொழி – . ‘இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்று விடும்’

    ராம்லீலா மைதானம் நிரம்பி வழிகிறது. வீட்டுக்குப் பக்கத்துல இருந்தாலும் ஒவ்வொரு வருசமும் இந்தக் கூட்டத்தப் பாத்து பயந்து கிட்ட போகறதேயில்ல. இந்தத் தடவ கண்டிப்பா பாத்தேயாகணும்ங்கற மன உறுதியோட நான் பக்கத்துவீட்டு பாசுவதி முகர்ஜி குடும்பத்தோட கிளம்பி வந்துட்டேன். முன்னால நிக்கற வரிசை நகருகிற மாதிரியே தெரியல. அவளோட ஐந்து வயசு குழந்தை வேற குதிக்க ஆரம்பிச்சிட்டான். பக்கவாட்டுல தெரியற ராட்சச ராட்டினம் அவனுக்கு பயத்தக் குடுக்குது போல. தூக்கிக்கச் சொல்லி அழறான். இன்னிக்கு எப்டித்தான் சுத்திப்பாக்கப் போறோமோ. அந்த மைதானத்துக்குள்ள மேஜிக் ஷோ, மரணக்கிணறு, விதவிதமான ராட்டினங்கள், கடைகள் எல்லாம் இருக்காம். எதிர் வீட்டு ஆன்ட்டி சொன்னாங்க. எது எப்படியோ அவங்க வாங்கிட்டு வந்த ஊறுகாய்களும், அப்பள வகைகளும் நல்லா இருந்திச்சு. அத வாங்கதான் நான் கஷ்டப்பட்டு போய்க்கிட்டிருக்கேன். பாசுவதி வேற எள்ளுமிட்டாய், கடலை மிட்டாய் எல்லாம் விதவிதமா கிடைக்கும்ங்கறா. முதல்ல உள்ள போனாதானே.

    அதுக்குள்ள முன்னால கூச்சலும் குழப்பமும். வரிசைய ஒழுங்குபடுத்த நிறைய போலீஸ் நிக்கறாங்க. என்ன பிரயோசனம். நம்ம மக்கள ஒழுங்கு படுத்தறது பிரம்ம வித்தையாச்சே. ஐயோ பாவம். ஒரு போலீஸ்காரர் மைக்ல கத்திக்கிட்டு நிக்கறார். இங்க நடக்கறது இராமயண நாடகம்தான். இதில நடிக்கறவங்க

    யெல்லாம் மனுசங்க. அதனால யாரும் உணர்ச்சிவசப்படக் கூடாதுனு. எனக்கு முன்னால நிக்கற அம்மா விளக்கம் சொல்றாங்க. அது ஒண்ணுமில்ல பாபி. இராவணன் வேஷம் போட்டவன் சிகரெட் குடிக்கறதுக்காக பந்தல விட்டு வெளிய வந்தான் போல. யாரோ ஒரு இராம பக்தன் அவனப் போட்டு அடிக்க ஆரம்பிச்சிட்டான். அதப் போலீஸ் தடுக்கப் போனா எங்க சீதா மாதாவ இவன் அவமானப்படுத்திட்டு எப்டி உயிரோட இருக்கலாம்னு சண்டை போடறானாம். அந்த நேரம் பாத்து என்ன சண்டைனு பாக்கறதுக்காக இராமர் வேசம் போட்டவன் வெளிய வரதப் பாத்து மொத்தக் கூட்டமும் ஜெய் ஸ்ரீராம்னு கத்திக்கிட்டே கீழ உழுந்து கும்பிட்டிருக்கு. அதனால பந்தலில போட்ட மண்ணு பூராகிளம்பி இப்ப புழுதியா நிக்குது. இராவணனுக்கு அடிபட்டதுனால நடிக்க முடியாதாம். அதான் வேற ஒருத்தன ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்ப என்னடான்னா நாடகத்த ஏன் நிறுத்தினீங்க. இது அபசகுனம்னு இன்னொரு கூட்டம் கத்துது.

    ஓ அதுதானா. நாங்க இந்த வரிசையில வந்து நிக்கும்போது ஜெய்ஸ்ரீராம்னு சத்தம் கேட்டது. சரி. இந்தக் குழம்பமெல்லாம் தீர்ந்து எப்ப கேட்டத் திறப்பாங்களோ. யோச்சிச்சுக்கிட்டே நிக்கறேன். பின்னாலேந்து யாரோ கூப்பிடற மாதிரி இருக்கு. திரும்பிப்பார்த்தேன். ஒரே ஆச்சரியம். முன்னால என் வீட்டுப் பக்கத்துல குடியிருந்த கரிஷ்மா நிக்கறா. மெதுவா என்னய அவ பின்னால வரச் சொல்றா.

    பாசுவதிக்கு பொறுமை போயிடுச்சு. அவ வீட்டுக்குத் திரும்பிப்போறேன்னு சொல்லிட்டா. நான் மட்டும் வரிசையிலேந்து விலகி கரிஷ்மா பின்னால போறேன். அவ எனக்கு ஒரு ஸ்பெஷல் பாஸ் குடுத்து இன்னொரு கேட் வழியா உள்ள கூட்டிக்கிட்டுப் போயிட்டா. அந்தப் பகுதியில ஒரே கடைகளா இருக்கு. எல்லாமே இந்த ராம்லீலாவுக்காக போடப்பட்ட கடைகள். அதில ஒரு கடைக்கு என்னயக் கூட்டிக்கிட்டுப் போய் உட்காறச் சொல்றா. அது ஒரு உயர் ரக கையேந்தி பவன் மாதிரி இருக்கு. என்ன சாப்பிடறீங்கனு கேட்டுட்டுப் பதிலை எதிர்பார்க்காம உள்ள போய் கட்லெட் கொண்டு வந்து வைக்கறா.

    வேற வழியில்லாம அவ முகத்தையே பாக்கறேன். தீதீ(அக்கா)  என என்னை அன்பா அழைச்சுட்டு இந்த கட்லெட் ஞாபகம் இருக்கானு கேக்கறா. எனக்கு ஒண்ணும் புரியல. அவ பேசப் பேச எனக்கு எல்லாம் ஞாபகம் வருது.

    அவ எங்க சொசைடியில குடியிருக்கும்போது துர்கா பூசைக்காக அவங்கவங்க விருப்பப்படுகிற கடைகளைப் போடலாம்னு அறிவிச்சாங்க. அப்ப நான்தான் அவகிட்ட கட்லெட் பண்ணி எடுத்துக்கிட்டு வா. விக்கலாம்னு சொன்னேன். ரொம்ப தயங்கித் தயங்கி ஐம்பது கட்லெட் பண்ணி எடுத்துக்கிட்டு வந்தா. எல்லாப் பொருளின் விலையும் பத்து ரூபாய்தான் இருக்கணும்ங்கற நியதிப்படி இரண்டு கட்லெட்டை ஒரு தட்டில் வைத்து பத்து ரூபாய்னு வித்தோம். அன்னிக்கு இராத்திரி அவ என்ன புலம்பு புலம்பினா. நாம அநியாய விலைக்கு வித்துட்டோம்னு நினைக்கிறேன். செலவு செஞ்சதவிட மிக அதிகமா பணம்வந்திருச்சுனு.

    மெதுவா அவளுக்குப் புரியறமாதிரி எடுத்துச்சொன்னேன். நீ எப்பவும் ஸ்வெட்டர் போட்டு பணம் சம்பாதிக்கற இல்ல. அத வியாபாரம்னு நினைக்கறதால வர இலாபம் உனக்குத் தப்பாத் தோணல. இப்போ இதை நீ பொழுதுபோக்குக்கு செஞ்சதா நினைக்கிற. அதனாலதான் வருத்தப்படற. பேசாம இதையே நீ நிரந்தர வியாபாரமா பண்ணலாமே. உன் கைப்பக்குவம் நல்லா இருக்கு என ஹிந்தியில் அவளுக்கு உசுப்பு ஏத்தினேன்.

    அதோடவிளைவு வீடு மாத்தி போனப்புறம் வியாபாரத்த மாத்திட்டாளாம். முதலில சின்னதா ஆரம்பிச்சு விரிவுபடுத்தி இப்ப பல கிளைகள் உள்ள கட்லெட் ஸ்டாலுக்கு அவள் சொந்தக்காரியாம். என்னயப் பாத்து நீங்க எனக்கு இருக்கறதுக்கு இடம் சொன்னீங்க. நான் அதை உபயோகிச்சு படுக்க இடம் தயார் பண்ணிட்டேன்கிறா. நம்ம ஊர்ல இதத்தான் ‘இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்று விடும்னு பழமொழியாச் சொல்லுவாங்க. அது எங்க இவளுக்குப் புரியப் போகுது. இருந்தாலும் அவளை மனதார வாழ்த்திவிட்டு என் ஊறுகாய் மற்றும் அப்பளம் ஸ்டால்களுக்கு வழி கேட்டுக்கொண்டுஎழுந்தேன்.

    Share
  • வாடும் நிலை போயகல வந்து நிற்பாய் தீபாவளி!

    வாடும் நிலை போயகல வந்து நிற்பாய் தீபாவளி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    வண்ண வண்ண மத்தாப்பு
    வகை வகையாய்ப் பட்டாசு
    எண்ண வெண்ண நாவூறும்
    இனிப்பு நிறை பட்சணங்கள்
    கண் எதிரே உறவினர்கள்
    கலகலப்பைக் கொண்டுவர
    மண்மகிழ மனம் மகிழ
    மலர்ந்து வா தீபாவளி  !

    பெருநோயின் தாக்கத்தால்
    பெருந்தாக்கம் விளைந்திருக்கு
    தெருவெல்லாம் களையிழந்து
    உருவுடைந்து நிற்கிறது
    வருங்காலம் தனையெண்ணி
    மக்கள் மனம் தவிக்கிறது
    வாடும் நிலை போயகல
    வந்து நிற்பாய் தீபாளி  !

    புத்தாடை மனம் இருக்கு
    புதுத்தெம்பு வரவேண்டும்
    சொத்தான சுற்றமெலாம்
    சுகங்காணும் நிலை வேண்டும்
    நித்தியமாய் வாழ்நாளில்
    நிம்மதியும் வர வேண்டும்
    நீள் சுகத்தைச் சுமந்தபடி
    நீ வருவாய் தீபாவளி  !

    மனக் கலக்கம் போக்குதற்கு
    வழிகொண்டு வந்துவிடு
    மாசகன்று மருள் அகல
    வரங்கொண்டு வந்துவிடு
    மனை எல்லாம் மங்கலங்கள்
    மீண்டும் வர வந்துவிடு
    மனமகிழ விருந்து தர
    வந்து நிற்பாய் தீபாவளி  !

    உளமுடைந்து நிற்போர்க்கு
    உயிர்ப்பூட்ட வந்துவிடு
    வளமிழந்து நிற்பாரை
    நிலையுயர்த்த வந்துவிடு
    நிலமெங்கும் நிம்மதியே
    நிலவிவிட வந்துவிடு
    நலன்மிக்க செய்தியுடன்
    வந்துநிற்பாய் தீபாவளி !

    Share
  • குறளின் கதிர்களாய்…(327)

    குறளின் கதிர்களாய்…(327)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(327)

    மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தத்
    தகுதியான் வென்று விடல்.

    – திருக்குறள் – 158 (பொறையுடைமை)

    புதுக் கவிதையில்...

    செல்வம் கல்வி இவற்றின்
    பெருக்கால் வந்த
    செருக்கால்
    தீங்கு தமக்குச் செய்வோரை,
    அவர் போல்
    தீங்கு ஏதும் செய்யாமல்
    தம் பொறுமை என்னும்
    தகுதியால் வென்று விடுக…!

    குறும்பாவில்...

    இறுமாந்து தீங்கு செய்தோரை
    எதிர்த்துத் தீங்கு செய்யாமல் பொறுமையெனும்
    தகுதியால் வென்றிடுக…!

    மரபுக் கவிதையில்...

    பெருகிடும் செல்வம் கல்வியினால்
    பெற்றிடும் செருக்கால் இறுமாந்தே
    தருவர் நமக்குத் தீங்கதுவே,
    தக்க பதிலடி கொடுக்கவவர்
    வருந்தத் தீங்கு செய்யாமல்
    வாழ்ந்து காட்டு பொறுமையெனும்
    பெருமை மிக்கத் தகுதியினால்
    பெற்றே அவரிடம் வெற்றியையே…!

    லிமரைக்கூ..

    வந்திடும் செருக்கு மிகுதியால்,
    தீங்கதனால் செய்வோரை ஒறுக்காதே வென்றிடு
    பொறுமை என்னும் தகுதியால்…!

    கிராமிய பாணியில்...

    வேணும் வேணும் பொறுமவேணும்,
    வாழ்க்கயில செயிக்கணுண்ணா
    வேணும் வேணும் பொறுமவேணும்..

    காசுபணம் அதிகமாத்தான்
    சேந்துண்ண கெவுறுவத்தில
    நமக்கு ஒருத்தன் கெடுதிசெஞ்சா,
    அவன செயிக்க
    பொறுமங்கிற ஒரு தகுதியே
    போதுமானது..

    அதால
    வேணும் வேணும் பொறுமவேணும்,
    வாழ்க்கயில செயிக்கணுண்ணா
    வேணும் வேணும் பொறுமவேணும்…!

    Share
  • குருப்பெயர்ச்சி பலன்கள் – 2020-21 | வேதா கோபாலன்

    குருப்பெயர்ச்சி பலன்கள் – 2020-21 | வேதா கோபாலன்

    வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி, இன்று இரவு 10 மணியளவில் குருப்பெயர்ச்சி நடைபெற்றது. குரு பகவான், தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ந்தார். ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன், 12 ராசிகளுக்கும் விரிவான பலன்களை உரிய பரிகாரங்களுடன் கணித்து வழங்கியுள்ளார். உங்கள் ராசிக்கு என்ன பலன் என்று பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கேதார கௌரி விரதத்தின் தாத்பர்யம்

    சந்திப்பு : அரவிந்த் பாலாஜி

    கண்டியூர் இராமன் அவர்கள், தஞ்சைக்கு அருகில் உள்ள கண்டியூரில் ஆஞ்சநேயருக்குக் கோவில் எழுப்பி, தினசரி பூஜைகள் செய்து வருகிறார். இந்த அமர்வில் கேதார கௌரி விரதத்தின் தாத்பர்யம் குறித்து நமக்கு விளக்குகிறார்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உற்சாக தீபாவளி வாழ்த்துகள்

    உற்சாக தீபாவளி வாழ்த்துகள்

    அண்ணாகண்ணன்

    இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நைஜீரியா எனப் பல நாடுகளில் வாழும் வல்லமை அன்பர்களின் தீபாவளி வாழ்த்துகளைப் பெற்று, இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். பன்முகம் கொண்ட இந்த உற்சாக தீபாவளி வாழ்த்துகளைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தீபாவளி மருந்து (லேகியம்) செய்வது எப்படி?

    தீபாவளி மருந்து (லேகியம்) செய்வது எப்படி?

    தீபாவளியை முன்னிட்டு நாம் உண்ணும் இனிப்புகள், பலகாரங்கள், உணவுகள் அனைத்தையும் செரித்து, அஜீரணம் ஏற்படாமல் காத்து, நம்மைத் துடிப்புடன் செயல்பட வைப்பது தீபாவளி மருந்து. மரபுவழியாக ஒவ்வொரு குடும்பத்திலும் இது இன்றிமையாத இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தத் தீபாவளி மருந்தைச் செய்வது எப்படி? பெங்களூருவிலிருந்து வைஷ்ணவி அஜய், நமக்காகச் செய்து காட்டுகிறார். பார்த்துப் பயன் பெறுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 284

    படக்கவிதைப் போட்டி – 284

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (15.11.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • பழகத் தெரிய வேணும் – 42

    பழகத் தெரிய வேணும் – 42

    நிர்மலா ராகவன்

    பெண்களுக்கு அழகு எதற்கு?

    சீனாவில் சாவோயாங் (Chaoyang) என்ற மிக ஏழ்மையான ஒரு கிராமம். அருகிலுள்ள நகரம் இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

    அக்கிராமத்து ஆண்கள் வேலை வாய்ப்பைத் தேடி நகர்ப்புறங்களுக்குச் சென்றுவிட, பெண்களும் குழந்தைகளும் மட்டுமே எஞ்சியிருந்தனர். பல ஆண்கள் வருடத்திற்கு ஒருமுறைதான் திரும்பி வருவார்கள்.

    `நம் அழகைக் கண்டு ரசிக்க ஆண்கள் இல்லாத நிலையில் எதற்கு நல்ல ஆடைகளை அணிந்து, ஒப்பனையும் செய்துகொள்ள வேண்டும்?’ என்று பெண்கள் நினைக்கவில்லை. ஆனாலும், தம் புற அழகில் அசிரத்தையாக இருந்தார்கள்.

    அவர்களுடைய ஓயாத வேலை அப்படி.

    இஞ்சி, தர்பூசணி போன்றவைகளைப் பயிரிடுவதோடு, பன்றிகளையும் வளர்த்துவந்தார்கள். கடும்வெயிலைப் பொருட்படுத்தாது வேலை செய்துவிட்டு வந்தபின், குழந்தைகளையும் வீட்டு வேலைகளையும் கவனித்தாக வேண்டும்.

    இந்நிலையில், தங்களுக்காகவும் நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றாமல் போனதில் அதிசயமில்லை.

    அவ்வப்போது, நகர்ப்புறங்களில் வாழும் நாகரிகமான பெண்களுடன் தம்மை ஒப்பிட்டுக்கொண்டு, சிறுமை உணர்ச்சியுடன் காலந்தள்ளிவந்தார்கள்.

    ஒரே ஒரு இளம்பெண்ணுக்கு மட்டும் இந்நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. அதைச் செயலாக்கினாள், பத்து ஆண்டுகளுக்குமுன்.

    சீனாவின் தலைநகருக்குப் போய் ஒப்பனைக்கலையைக் கற்றுக்கொண்டு, அவளுடைய கிராமத்துக்கு அருகே இருந்த நகரில் ஓர் அழகுநிலையத்தைத் திறந்தாள்.

    கடந்த பிப்ரவரி மாதம் கிராமத்திற்கு வந்தபோது, கோவிட் தொற்றுக் கட்டுப்பாட்டால் அங்கேயே தங்க நேர்ந்தது.

    அவளுடைய நாகரிகமான ஆடையணிகளுடன் ஒப்பனையால் நேர்த்தியாக இருந்த முகமும் பிற பெண்களின் கவனத்தைத் தூண்டியது. ஒப்பனையைப்பற்றி அவளை விசாரித்தாலும், அவர்களுக்கு ஏதோ தயக்கம். அதைப் போக்க முடிவெடுத்தாள் அந்த அழகுக்கலை நிபுணர்.

    அவளுடைய பாட்டிதான் அவளுடைய முதல் வாடிக்கையாளர்.

    ஓய்வு, ஒழிச்சல் இல்லாத வேலையால் அங்கிருந்த பிறரைப்போலவே பாட்டியின் கைகளும் காய்த்துப்போயிருந்தன. கால்களும் வெடித்துப்போயிருந்தன. அவற்றை மிருதுவாக்க முயற்சி எடுத்தாள் பேத்தி Zhou. (இப்பெயரைத் தமிழில் எப்படி எழுதுவது? ஜௌ என்றா?)

    பாட்டிக்கு முக ஒப்பனையும் உண்டு.

    அந்த மாற்றத்தைக் கண்ட பிற பெண்களுக்கு ஆச்சரியத்துடன், ஆசையும் எழுந்தது: `நம்மால்கூட அழகாக மாறமுடியும் போலிருக்கிறதே!’

    துணிந்து வந்தார்கள்.

    ஒப்பனை செய்துகொண்டதும், பண்டிகைக்காலங்களுக்கென்று வாங்கி வைத்திருந்த ஆடைகளை அணிந்து தம்மை அழகுபடுத்திக்கொண்டனர்.

    Zhou தன் உபகரணங்களுடன் தயாராக வைத்திருந்த கண்ணாடியைக் காட்டி, அவர்களும் அழகுதான் என்ற நம்பிக்கையை ஊட்டினாள். (பல பெண்களிடம் முகம் பார்க்கும் கண்ணாடிகூட கிடையாது). அவர்களது மாற்றத்தைப் புகைப்படத்தில் எடுத்தாள்.

    ஒரு பெண்மணிக்கு மட்டும் வீட்டில் எவ்வளவு தேடியும், நல்ல உடை எதுவும் கிடைக்கவில்லை.

    `என் குடும்பத்திற்காகவே உழைத்து வந்ததில், என்னைப்பற்றிய சிந்தனையே எனக்கு இல்லாமல் போய்விட்டது,’ என்ற வருத்தம் எழ, `இனிமேல், எனக்காகவும் ஏதாவது செய்துகொள்ளப்போகிறேன். அழகான ஆடைகளை உடுத்தப்போகிறேன்,’ என்று தீர்மானித்தாள்.

    இருபது பெண்களுக்கு மேற்பட்டவர்கள் அப்படி அழகாக மாறினார்கள். ஒப்பனை செய்துகொள்ள ஒவ்வொரு முறையும் ஒன்றரை மணிநேரம் செலவழிந்தாலும், அதனால் அவர்கள் மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டது.

    `இப்போது, `நாம் ஒன்றும் நகர்ப்புற மக்களைவிட தாழ்ந்தவர்கள் இல்லை என்ற தன்னம்பிக்கை பிறந்துவிட்டது,’ என்ற ஒரு பெண்மணி, எப்போதோ விழுந்திருந்த பல்லுக்கு மாற்றுப்பல் பொருத்திக்கொண்டாளாம்!

    அலங்காரம் ஆண்களுக்காக அல்ல

    `ஆண் மயில் தோகை விரித்து ஆடுவது பெண் மயிலை மயக்கத்தான்! அதுபோல், பெண்கள் அலங்கரித்துக்கொள்வது ஆண்களுக்காகத்தான்!’ என்பது பெரும்பாலான ஆண்களின் கருத்து.

    `யாருக்காக இப்படி அழகாக அலங்கரித்துக்கொண்டிருக்கிறாய்?’ என்று மனைவியைப் பார்த்து ஒரு கணவன் கேட்டால், அவன் முட்டாள். பெண்களைப் புரிந்துகொள்ளத் தெரியாத, அல்லது விரும்பாத, ஆணாதிக்கவாதி.

    இரண்டே வயதான பெண்குழந்தைகூட ஒரு புதிய ஆடையோ, வளையோ அணிந்துகொண்டவுடன் கண்ணாடியை நோக்கி ஓடும் — தன்னை அழகுபார்த்துக்கொள்ள. யாரையும் கவர வேண்டும் என்பது அக்குழந்தையின் நோக்கமல்ல. தான் அழகாக இருக்கிறோம் என்பதில் ஒரு மகிழ்ச்சி.

    “நான் அழகா இருக்கேன். இல்லே?” என்று பெருமைப்பட்டுக்கொள்ள, தன்னம்பிக்கை கூடும்.

    பொதுவாகவே, பெண்கள் தம் மகிழ்ச்சிக்காகத்தான் அலங்கரித்துக்கொள்கிறார்கள்.

    `கல்யாணம் ஆகிவிட்டது. இனி எதற்கு அழகு?’

    `முப்பது வயதுக்குமேல் அலங்காரம் செய்துகொண்டால், பிறர் என்ன சொல்வார்களோ!’

    `நிமிர்ந்து நடப்பதும், உடலழகைப் பராமரிப்பதும் விமானப் பணிப்பெண்களுக்குத்தான்!’

    ஏதோ பயமே பெண்களை அப்படிப் பேசவைக்கிறது.

    அத்துடன், அழகைப் பராமரிக்க அளவான உணவு, உடற்பயிற்சி என்று உடலை வருத்திக்கொள்ள வேண்டியிருக்கிறதே! (சிறு வயதில் போதிய ஆகாரம் கிடைக்காது அவதிப்பட்டவர்கள் வசதி கிடைத்ததும், அளவுக்கு அதிகமாக உண்பார்கள்).

    தன்னம்பிக்கை வளர உணவைக் கட்டுப்படுத்து

    நான் எந்த மருத்துவரிடம் போனாலும், `எடையைச் சற்றுக் குறைக்கலாம்,’ என்பார், நைச்சியமாக.

    நாற்பத்து ஐந்து வயதுக்குமேல் உடற்பயிற்சி மட்டும் போதவில்லை. ஆகாரத்தையும் பாதியாகக் குறைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஐந்து வருடங்களுக்குப்பின், இன்னும் குறைத்துக்கொண்டேன். இல்லாவிட்டால், எடை ஏறிக்கொண்டே போனதை இடுப்பில் தொங்கிய சதை பறைசாற்றியது.

    கனமான வேலை செய்யாததாலும், உடல் வளர்ச்சி குன்றியதாலும் ஒரே அளவு ஆகாரமே எடையைக் கூட்டியது.

    `குண்டானால் என்ன!’ என்ற அலட்சியம் ஏற்படவில்லை. கால்வலி, சோம்பல், ஓயாத அசதி என்று எழுந்த வேண்டாத உபாதைகளைப் பொறுத்துப்போவதைவிட உணவுக் கட்டுப்பாடு உகந்ததாகப்பட்டது. பழங்களை நிறையச் சாப்பிட்டு, சர்க்கரையையும் வெகுவாகக் குறைத்துக்கொண்டேன்.

    எனக்கோ, இனிப்பு வகைகள் மிகவும் பிடிக்கும். முதலில், `நான் பாவம்!’ என்ற தன்னிரக்கம் ஏற்பட்டது. ஆனால், சுறுசுறுப்பு அதிகரிப்பது போலிருக்க என் `தியாகம்’ பெரிதாகப்படவில்லை.

    சீனக் கிராமத்துப் பெண்கள் தம் நலனைப் பெரிதாகக் கருதாது, கடமை உணர்வையே பெரிதாக மதித்ததால் அவர்களுடைய தன்னம்பிக்கை எப்படிப் பாதிக்கப்பட்டுவிட்டது, பார்த்தீர்களா?

    தனிப்பட்ட காரணங்களுக்காக நான் என் உடலைப் பராமரித்ததால் பிற பெண்களின் பொறாமைக்கு ஆளாக நேரிடும் என்று நினைத்ததில்லை.

    கதை

    மேற்பயிற்சிக்காக என்னைத் தலைநகரிலிருந்து மலேசியாவின் வடபகுதியிலிருந்த ஊருக்கு அனுப்பியிருந்தார்கள். எப்போதும்போல் இல்லாவிட்டால், புது இடத்தில் வெறுமை, சலிப்பு என்று ஏதாவது வரும் என்று தயாராகப் போயிருந்தேன்.

    மற்ற ஊர்களிலிருந்து வந்தவர்கள் என்னைப்பற்றி நிறைய வம்பு பேசினார்கள். உதட்டுச்சாயமும் காலணிகளும்கூட என் புடவை வண்ணத்தில் இருந்தது கண்டு அவர்களுக்கு ஆச்சரியம். மருதோன்றி உபயத்தில், தலைமயிர் சிவப்பு நிறத்தில் மின்னியது!

    நாற்பது வயதுக்கு மேற்பட்ட அந்த மலாய்பெண்கள் மத போதனைக்கான பாடத்தைக் கற்பிக்கிறவர்கள். கை, கால் இரண்டிற்கும் உறை அணிந்திருப்பார்கள். தலைமயிரும் வெளியில் தெரியாதபடி `தூடோங்’கால் (TUDUNG) மறைத்திருப்பார்கள்.

    வெளித்தோற்றத்தில் நான் வெகுவாக மாறுபட்டிருந்ததால்  அவநம்பிக்கை.

    அவர்களில் ஒருத்தி வயிற்றுவலியால் துடிக்க, “என்னால் உதவ முடியும். செய்யட்டுமா?” என்று கேட்டுவிட்டு, அவளுடைய விரல்களைப் பிடித்து அழுத்தி, சிகிச்சை அளித்தேன். சில நிமிடங்களில் குணமாகியது.

    பிறகு, ஒருத்தி ரகசியமாகத் தெரிவித்தாள்: “நீ அழகாக அலங்கரித்துக்கொள்வது ஆண்களைக் கவரத்தான் என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம்!”

    நான் தலையில் அடித்துக்கொள்ளாத குறை.

    அதன்பின், என்னைக் கண்டால் முகமலர்ந்து, கட்டி அணைத்துக்கொள்வார்கள்!

    உதவி செய்ததில் வித்தியாசங்கள் மறைந்துபோய்விட்டன!

    Share
  • தெய்வக் குழந்தை (சிறுகதை)

    தெய்வக் குழந்தை (சிறுகதை)

    வசுராஜ்

    பாவனா மிக்சியில் தேங்காய் சட்னி அரைத்துக் கொண்டிருந்தாள். குக்கரில் இட்லி வெந்து விட்டது போல. தொடர்ந்து வந்த ஆவியுடன் இட்லி வெந்து விட்ட வாசனையும் வந்தது. அடுப்பை சிம் பண்ணின விட்டு அடுத்த அடுப்பில் சட்னிக்குத் தாளித்தாள். ஹாலில் ஊதுபத்தி மணத்துடன் கந்த சஷ்டிக் கவசம் கணீரென ஒலித்தது.

    அது முடிந்ததும் மணிச்சத்தம் கேட்டது. இட்லியை ஹாட் பேக்கில் வைத்து விட்டு அவளும் ஹாலுக்கு வந்து தீபாராதனையைக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள்.  கணவனைப் பார்த்தாள்.  காதோரம் நரைக்க ஆரம்பித்திருந்தது. அவன் முகத்திலும் பதட்டம் தெரிந்தது. “கடவுளே! இன்று எல்லாம் நல்லபடியாக  முடியணும்” என வேண்டிக் கொண்டாள்.  அவளறியாமல் கண்ணீர் வழிந்தது. இரண்டு பேர் மனதிலும் பரபரப்பு. ஒருவருக்கொருவர் அதனை முகத்தில் காட்டாமல் இருக்க முயற்சி செய்து கொண்டிர்ந்தார்கள்.

    அமைதியாகச் சாப்பிட்டு முடித்தார்கள். எளிய அலங்காரத்துடன் கிளம்பினார்கள். முதலில் மோகன் கிளம்பிக் காரை சரி பார்த்தான். பெட்ரோல் அரை டாங்குக்கு மேல் இருந்தது.  பாவனா புது விருந்தினரை வரவேற்க எல்லாம் சரியாக இருக்கான்னு பார்த்தாள். இன்னிக்கு இவர்களுடன் அவர் வருவது சந்தேகம் தான். ஆனாலும்  எதற்கும் எல்லாம் தயாராக வைத்துக் கொள்வோம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். கடைசியாக எல்லாக் கடவுளையும் பார்த்து அவசரமாகப் பிரார்த்தித்துக் கொண்டாள்.

    வீட்டைப் பூட்டி விட்டு வந்து காரில் ஏறிக் கொண்டாள்.  மோகன் காரைக் கிளப்பினான். பாவனா திரும்பிக் கணவனைப் பார்த்தாள். சாந்தமான அவன் முகம் இன்று இன்னும் அழகாய்த் தெரிந்தது. இப்பவே இப்படி இருப்பவன் 10 வருஷத்துக்கு  முன்னால் கல்யாணத்தின் போது அரவிந்த் சாமி (அப்போதுள்ள)  போலிருந்தான். பெண் பார்க்க எல்லாம் வர மாட்டேன் என்று அவன்  சொன்னதால் இரண்டு பெற்றோர்களுடன் இவர்கள் ஒரு ஹோட்டலில் சந்தித்தார்கள். பார்த்தவுடனே அவன் முகம் அவளுக்குள் பதிந்து விட்டது. “ஐயோ! இவன் வேண்டாம்னு சொல்லிக் கூடாதே” எனப் பிள்ளையாருக்கு 100 தோப்புக்கரணம் போடறேன்னு  வேண்டிக் கொண்டாள். அவனுக்கோ  ஜாங்கிரியை ஆசையாய்ச் சாப்பிட்ட அவளே ஜாங்கிரியாய்த் தெரிந்தாள்.  சாதாரண சுடிதாரில் தேவதையாய்த் தெரிந்தாள்  “இந்தப் பெண் என்னை  ஓ.கே சொல்லி விட்டால் எங்க வீட்டிலிருந்து (மாம்பலத்தில் வீடு) வடபழனி வரை  நடந்து வரேன்னு முருகனை வேண்டிக் கொண்டான்.  அண்ணனும் தம்பியும் சேர்ந்து கூட்டணி அமைத்து அவர்களது பக்தர்களின் வேண்டுதலை எளிதாக  நிறைவேற்றி வைத்து விட்டார்கள். திருமணம் முடிந்ததும் 2 பேரும் சேர்ந்து வேண்டுதல்களை நிறைவு செய்தார்கள்.

    முதல்  2,3  வருஷங்கள் சந்தோஷமாகத் தான் போச்சு. மோகன் பெற்றோர் கிராமத்திலேயே மூத்த பையன் வீட்டில் இருந்தார்கள். இங்கு வரும் போது பாவனா அவர்களை அருமையாய்ப் பார்த்துக் கொண்டதால் அவர்களுக்கும் திருப்தி  தான். கல்யாணம் ஆகி 3 வருடம் ஆன பின் அவர்களிடம் ஊரில் உள்ளவர்கள் எல்லாம் “என்ன உங்க இளைய மருமகள் சும்மாதான்  இருக்காளா?” எனக் கேட்க ஆரம்பித்த பின் அவர்களும் அதே கேள்வியை இவர்களிடம் கேட்க ஆரம்பித்தார்கள்.

    முதலில் இவர்கள் அது பற்றி ஏதும் சட்டை பண்ணவில்லை என்றாலும் நாளாக நாளாகக் சின்னக் குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம் கலங்க ஆரம்பித்தார்கள்.

    ஒருவருக்கொருவர் அடுத்தவர் மனசைக் காயப்படுத்தி விடக் கூடாதே என்பதில் கவனமாய் மனதுக்குள்ளேயே மறுகினார்கள்.  இப்படிப் போராட்டத்திலேயே 2 வருடம் ஓடி  விட்டது. அப்புறம் அவர்களே மனம் விட்டுப் பேசி இதற்கான மருத்துவ மனைக்குச் சென்று பரிசோதனை பண்ணினார்கள். 2 பேரிடமும் குறை இல்லையென்று சொல்லி விட்டார்கள். ஆனால் 5 வருடமாக சிகிச்சை எடுத்து உடலும் மனமும் ரணமானது தான் மிச்சம். இவர்களுக்குப் பணம் ஓரளவு இருப்பதால் அது பற்றிப் பிரச்சனை ஏதும் எழவில்லை.

    இவர்களுக்குக் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை குறைந்து விட்டதால்  இவர்களே ஒரு அனாதைக் குழந்தையைத் தத்தெடுக்கலாம் என முடிவு பண்ணினார்கள். பெற்றவர்களிடம் சொன்னதுக்கு அவர்களும்  அரைகுறையாகச் சம்மதித்தார்கள்.  “சரி,உங்கள் வாழ்க்கை! நீங்களே முடிவெடுங்கள்!“ என்று இவர்களிடம்  பொறுப்பைக் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார்கள். இவர்களும் நன்றாக  யோசித்து நகருக்கு வெளியே உள்ள ஒரு இல்லத்தைத் தொடர்பு கொண்டு தத்தெடுப்பது  குறித்து விவாதித்தார்கள்.  இல்லத்தின் பொறுப்பாளர்  இவர்களை நேரில் வரச் சொல்லி விவரங்கள் எல்லாம் கேட்டார்கள். இவர்களுக்கு 3 முதல் 6 மாதத்திற்குள் உள்ள குழந்தை தான் வேண்டும் என சொல்லி இருந்தார்கள். இன்று இவர்களுக்கு  ஏற்ற குழந்தை இருப்பதாகவும் நேரில் வந்து பார்த்து முடிவெடுக்கச் சொன்னதால் இப்போது கிளம்பி விட்டார்கள்.

    இதெல்லாம் பாவனாவின் மனதில் திரைப்படம் போல் ஓடியது. இவ்வளவு நேரம் பேசாமல் மௌனமாய் இருவரும் இருந்ததே இல்லை.  ஏதாவது வளவளவென்று பேசிக் கொண்டே வருவாள். அந்த ஆசிரமம் வந்து விட்டது. சுற்றிலும்  மரங்களுடன் அந்த எளிமையான கட்டிடம் இவர்களுக்கு ஒரு கோயில் போலத் தோன்றியது. பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட சின்னச் சின்ன தெய்வங்களால்  நிறைந்திருந்ததால் அப்படித் தோன்றியது போல. வெளியே உள்ள தோட்டத்தில் உள்ள விதவிதமான பூக்கள் போல விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்தவுடனேயே இரண்டு பேர் முகத்திலும் மலர்ச்சி.

    உள்ளே நுழைந்து  வரவேற்பறையில் உட்கார்ந்தார்கள். களையான முகமுள்ள  ஒடிசலான  ஒரு இளம் பெண் வரவேற்றாள். “வணக்கம்.  உங்கள் பெயர் மோகன், பாவனாவா? நீங்கள் வருவீர்கள் என்று அம்மா சொன்னார்கள்” என்றாள். அவர்களுக்கு அந்தப் பெண் அவர்கள் பெயர் சொல்லி வரவேற்றது மகிழ்ச்சியை அளித்தது. அந்த ஆசிரமத்தின் மீதிருந்த நம்பிக்கை கூடியது.  இன்று எப்படியும் வந்த வேலை முடிந்து விடும் எனத் தோன்றியது. அப்போது  ஒரு சின்னக் குழந்தையின்  அழுகைச் சத்தம் பக்கத்து அறையிலிருந்து வந்தது . அழக் கூட சக்தியில்லாத மாதிரி தீனமாகக் கேட்டது. அந்த அம்மா பக்கத்து அறையிலிருந்து வெளிப்பட்டார்.  சாந்தமான  முகம், நரைத்த  தலை, மூக்குக் கண்ணாடியுடன் பார்த்தவுடனே எழுந்து வணங்கும்  தோற்றத்துடன் இருந்தார்.

    இவர்கள் எழுந்து வணங்கினார்கள். இதற்குள் முதலில் பார்த்த இளம்பெண் கண்ணாடி டம்ளர்களில் மோர் கொண்டு வந்து கொடுத்தாள்.  குளிர்ச்சியான மோர் இதமாக இருந்தது. குடித்து முடித்தவுடன் அந்த அம்மாள் “உங்களுக்கு இந்தக் குழந்தை கண்டிப்பாகப் பிடிக்கும்.  நீங்க வந்துட்டுப் போனதிலிருந்து இந்த அருமையான ஜோடிக்கு ஏற்ற மாதிரி குழந்தை கிடைக்கணுமேன்னு பிரார்த்தனை பண்ணினேன்.  இந்தக் குழந்தையைப் பார்த்தவுடன் இது உங்க குழந்தை மாதிரியே தோணித்து. வந்து பாருங்க” என்று சொல்லிக் கூட்டிப் போனார். இவர்கள் அடுத்த அறையைக் கடக்கும் போது தன்னிச்சையாகச் திரும்பிப் பார்த்தார்கள். கொஞ்சம்  கறுப்பான நோஞ்சான் குழந்தை படுத்துக் கொண்டு விழித்துக் கொண்டிர்ந்தது. அந்த இளம்பெண் ஒரு பொம்மையைக் காட்டி அந்தக் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். குழந்தையின் கண்கள் நட்சத்திரம் மாதிரி ஜொலித்தது.  அதன் உயிரே அந்தக் கண்களில் தான் இருப்பது போலத் தோன்றியது.

    அந்த அறையைக் கடந்து விட்டார்கள். மூன்றாவது அறைக்குள் அந்த அம்மா நுழைந்தார். இவர்களும் பின்னால் போனார்கள். அங்கே தொட்டிலில் கிடந்த குழந்தை கொள்ளை அழகுடன் பூக்குவியலைத் தொட்டிலில் பரத்தி வைத்தது போல் தூங்கிக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தையை விட்டுக் கண்களை நகற்றவே முடியவில்லை. ரோஜாப்பூ நிறத்தில் கருகருவெனத் தலைமுடியுடன் குட்டி தேவதை  போல இருந்தது. அப்படியே அணைத்துக் கொள்ள வேண்டும்  போல் இருந்தது. தூக்கத்தில் என்ன கனவு கண்டதோ சிரித்தது. சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழுந்தது. அந்த அம்மா “இந்தக் குழந்தையைப் பார்த்தால் எல்லாரும் உங்கள் குழந்தை என்று தான் செல்வார்கள்” என்று சொன்னார். இவர்களுக்கும் அது சரிதான் எனத் தோன்றியது.

    அந்த நேரத்தில் முதல்  அறையிலிருந்து அழுகைச் சத்தம் கேட்டது. இவர்களால் ஆவலைக் கட்டுப்படுத்த  முடியவில்லை. பாவனா தான் முதலில் வேகமாய்ப் போனாள். அந்தப் பெண் குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுக்க ஆரம்பித்தாள். குழந்தை வேக வேகமாய்க் குடித்தது.  அவசரமாய்க் குடித்ததில் புரையேறி விட்டது. பாவனா தன்னிச்சையாக நெஞ்சை நீவி விட்டாள். எலும்புக் கூட்டைத் தொட்ட மாதிரி இருந்தது. அதையும் தாண்டி அவள் உடல் சிலிர்த்தது.  அவள் கணவனைப் பார்த்தாள். அவள் பார்வை ஏதோ சொல்வது புரிய என்ன எனக் கண்களால் கேட்டான். அவள் “கொஞ்சம் வரீங்களா?” என்று வாசல் நோக்கி நடந்தாள். அந்த அம்மாள் எதுவும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    வெளியில் வந்ததும் “நான் ஒண்ணு சொல்றேன், கேப்பீங்களா?” என்றாள். “நீ நினைக்கிறது எனக்குக் கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு” என்று சொன்னான். “இல்லை இந்தக் குழந்தையைப் பார்த்தால் பாவமா இருக்கு. அத்தோட அது மேல ஒரு இனம் புரியாத பாசம் வருது.  முதலில் பார்த்த  குழந்தை தேவதை மாதிரி இருக்கு, எல்லோருக்கும் பிடிக்கும். அடுத்து யார் வந்தாலும் கண்டிப்பாக  அந்தக் குழந்தையைத் தான் கேட்பார்கள். இந்தக் குழந்தையைப் பார்ப்பவர்கள் தத்தெடுக்கத் தயங்குவார்கள். இந்தக் குழந்தையை நாம் நல்லா வளர்த்தா இதுவும்  அருமையா வளரும். அதன் கண்களைப் பார்த்தாலே ஒரு மின்னல் இருக்கு. நாம இந்தக் குழந்தையைத் தத்தெடுக்கலாமா?” என்று கெஞ்சலாய்க் கேட்டாள்.

    அவன் “நீ சொல்றது சரிதான். ஆனால் பார்ப்பவர்கள் எல்லாம் உங்க குழந்தை மாதிரி இல்லையேன்னு கேப்பாங்க.  உங்கம்மா, எங்கம்மா எல்லாம் கூட இத ஒத்துக்க மாட்டாங்க. நம்மால் எல்லாரையும் சமாளிக்க  முடியுமா?”ன்னு கேட்டான்.  அதற்கு அவள் “நீங்க மட்டும் சம்மதிச்சாப் போதும். மத்தவங்கள நான் சமாளிச்சுக்கறேன். நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணினால் போதும்” என்றாள். அவனுக்கும் அவள் சொன்னது சரியெனப்பட்டது.

    அந்த அம்மாளிடம் போய்ச் சொன்னார்கள்.  அவர்கள் பிரமித்துப் போய்ப் பார்த்தார். இவ்வளவு நல்லவங்க இந்தக் குழந்தையைக் கண்டிப்பா நல்லாப் பாத்துப்பாங்க. இந்தக் குழந்தை இவர்கள் கண்ணில் பட்டது அதன் அதிர்ஷ்டம் என நினைத்தார். திரும்பவும் வந்து அந்தக் குழந்தையைப் பார்த்தார்கள். பால் சாப்பிட்ட நிம்மதியோ ஒரு நல்ல அம்மா அப்பா கிடைத்த சந்தோஷமோ அது நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது. அடுத்து வந்த ஒரு நல்ல நாளில் அந்தக் குட்டி லட்சுமி இவர்கள் வீட்டுக்கு வந்து விட்டாள்.  அந்த குட்டிக்கு அர்ச்சனா எனப் பெயர் வைத்தார்கள். அச்சுக் குட்டி மேல் அதிருப்தியாய் இருந்த பாட்டிகளையும் ஒரு சில மாதங்களில் தன் பொக்கை வாய்ச் சிரிப்பால் கவர்ந்து விட்டாள். பாவனாவின் கவனிப்பாலும் அப்பாவின் அரவணைப்பிலும் அச்சுக் குட்டி கொழு கொழு குழந்தையாகி விட்டாள். நிறமும்  கொஞ்சம் கூடி விட்டது.

    ஆசிரமத்துக்குக் குழந்தையைக்  கூட்டிப் போன போது அந்த அம்மாவால் நம்பவே முடியவில்லை . அந்தக் குழந்தையா இது என ஆச்சரியப்பட்டார்.  குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தைப் பொறுத்து ஜொலிப்பார்கள் போல என வியந்தார். இவர்கள் முதலில் பார்த்த அழகான குட்டி தேவதையும் மற்றொரு வீட்டிற்கு மகளாய்ப் போன செய்தி கேள்விப்பட்டு நிம்மதியானார்கள். அச்சுக் குட்டி அழகாய்ச் சிரித்தாள்.

    Share
  • உயர்பொருளே!

    உயர்பொருளே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    பிறப்பறுக்கும் பெரும்பொருளே
    பெருவெளியில் நிறைபொருளே
    செருக்கறுக்கும் செம்பொருளே
    திருமுறையின் கருப்பொருளே
    அருவுருவாய் அமைபொருளே
    அணுவணுவாய் அமர்பொருளே
    உளநினைவார் வருபொருளே!

    உமைஅணைய உறைபொருளே
    உலகசைய உறுபொருளே
    நிலவுலகு உயிர்ப்புஎழ
    நீள்சக்தி தருபொருளே
    விளைபொருளாய் விரிபொருளே
    விரிகதிராய்த் தெரிபொருளே
    நிலவொளியில் வருபொருளே
    நின்நாமம் நிறைபொருளே!

    Share