எட்டுக் கோணல் பண்டிதன் – 14

0

தி. இரா. மீனா

             அத்தியாயம் பதினெட்டின் தொடர்ச்சி

71. ஒளி வடிவமாகக் காண்கின்ற பொருளேதும் காணாதவனுக்கு விதியேது, விரக்தியேது, துறவேது, அடக்கமேது?

72. எல்லையில்லாத பொருளாகச், சுடர் விடுபவனாக படைப்பையே காணாதவனுக்குக் கட்டுப்பாடேது விடுதலையேது, சுகமேது, துக்கமேது ?

73. அறிவு மட்டுமே தோன்றும் படைப்பின் மாயை பலவாக உள்ளது. இதையுணர்ந்த ஞானி நான், எனது என்றில்லாமல், ஆசைகளற்று இருப்பான்.

74. அழிவும், தாபமும் அற்று தன்னையே காண்கின்ற  மௌனிக்கு அறிவேது உலகமேது,உடலேது, நான் எனது என்பதேது?

75. மனதை அடக்கும் தன்மையை அஞ்ஞானி கைவிட்டால் அக்கணமே அவன் தவறுகள் செய்து வீண் வார்த்தைகள் பேச நேரும்.

76. சாதாரணன் உண்மைப் பொருளைக் கேள்விப்பட்டாலும் மடமை ஒழிவ தில்லை; முயற்சியால் வெளித் தோற்றத்தில் மாறுபாடில்லாதவன் போலவும், உள்ளே சபலமானவனாகவும் இருப்பான்.

77. ஞானத்தால் செயல் நீங்கியவன், உலக நோக்கில் செயல்கள் புரிந்தாலும் எதையும் சொல்லவோ செய்யவோ அவனுக்கு அவசியம் ஏற்படுவதில்லை.

78. எப்போதும் விகாரமில்லாமல், தாபமில்லாமல் வாழும் தீரனுக்கு இருளேது, ஒளியேது, சிறிதேனும் அழிவேது?

79. இவன் தன்மை இது என்று சொல்ல முடியாத உயர்வான யோகிக்கு தீரமேது, விவேகமேது, தாபமின்மை தானேது?

80. விண்ணுலகமில்லை, நரகமில்லை, ஜீவன் முக்தியில்லை.மிகப் பேசு வதேன்? யோக  நோக்கில் எதுவுமேயில்லை.

81. தீரனது குளிர்ச்சியான சித்தம் அம்ருதம் பெருகுவதாகும். அவன் எதையும் விரும்ப மாட்டான்; அடையவில்லையே என்றும் வருந்த மாட்டான்.

82. ஆசையில்லாதவன்  அமைதியுள்ளவனைப் புகழ மாட்டான்; தீயவனை இகழவும் மாட்டான். இன்ப, துன்பங்களில் சமனாய், செய்தற்குரிய எதையும் காணமாட்டான்.

83. தீரன் உலகியலை வெறுக்க மாட்டான்; ஆத்மாவைக் காணவும் விரும்ப மாட்டான். மகிழ்தல், சினமடைதல் ஆகிய எதுவுமற்றவன். அவன் இறந்த வனுமில்லை, பிழைத்திருப்பவனுமில்லை.

84. ஞானி மக்கள் வீடு முதலியவற்றில் நட்பற்றவனாக, விஷயங்களில் ஆசையற்றவனாக தனது உடலில் கவனமற்றவனாக எதையும் விரும்பாதவனாக இருப்பான்.

85. இருப்பதைக் கொண்டு பிழைப்பவனும், நாடெங்கும் யதேச்சையாக  நடப்பவனும், அஸ்தமித்த இடத்தில் படுப்பவனாகிய  தீரனுக்கு எங்கும்  சந்தோஷமே.

86. பூமியில் இளைப்பாறி, உலகியலனைத்தையும் மறந்தவனுக்கு உடல் விழுந்தாலும், எழுந்தாலும் அதுபற்றிக் கவலையில்லை.

87. ஒன்றுமில்லாதவனாக, இரட்டையற்றவனாக, சந்தேகம் நீங்கியவனாக, எதிலும் ஆசையில்லாதவனாக தானாகத் தனித்து மகிழ்ச்சி அடைபவன் ஞானி.

88. கர்வமின்றி,  மண்ணும், கல்லும், பொன்னும் சமமாகக் கருதும் ஆசை யற்றவனாக ஞானி விளங்குவான்.

89. எதிலுமே விருப்பமில்லாதவனுக்கு மனதில் வருத்தமிருக்காது. விடு தலையுடன் நிறைவாக வாழ்கின்றவருக்கு யாரை நிகராகச் சொல்ல முடியும்?

90. அறிந்தும் அறியாதவன், பார்த்தும் பார்க்காதவன், பேசியும் பேசாதவன் — ஞானியைத் தவிர வேறு யார்?

91. பிச்சைக்காரனானாலும் அரசனானானாலும் ஆசையின்றி, நல்லது கெட்டது என்னும் எண்ணமற்றவனே சிறந்தவன்.

92. கள்ளமிலாமல் நேர்மையாக வாழ்கின்ற யோகிக்குச் சுதந்திரமேது, ஒடுக்கமேது, தத்துவ நிச்சயம் தானேது ?

93. தன்னுள்ளே இளைப்பாறி, நிறைவடைந்து, ஆசைகளற்று, துன்பமற்றவன உள்ளே அனுபவிக்குமதை எப்படி ஒருவருக்குச் சொல்ல முடியும்?

94. தீரன் தூக்கத்திலும் , கனவிலும், விழிப்பிலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறான்.

95. ஞானி நினைவுற்றாலும் நினைவற்றவன்; புலன்களோடு செயல் பட்டாலும் புலனற்றவன்; புத்திசாலியானாலும் புத்தியற்றவன்; அகந்தையோடிருந் தாலும் அகந்தையற்றவன்.

96. அவன் சுகியிமில்லை; துக்கியுமில்லை; பற்றவற்றவனுமில்லை; பற்றுள்ளவனுமல்ல; எதுவுமாகாதவன்.

97. தீரன் குழப்பத்தில் குழம்ப மாட்டான்; சமாதியில் ஒடுங்க மாட்டான்; ஜடத் தன்மையிலும் ஜடமாக மாட்டான். மேதமை மிகுந்தாலும் பண்டித னாக மாட்டான்.

98. உள்ளபடி தன்னிலை நின்ற முக்தன் செய்ததிலிருந்தும், செய்ய வேண்டி யதிலிருந்தும் விடுபட மாட்டான். ஆசைகளற்று எங்கும் சமனாகிய நிலையிலிருப்பான். அவன் செய்யாததையோ, செய்ததையோ நினைக்க மாட்டான்.

99. வணங்கினால் மகிழ்வதும், வைதால் கோபமும் அடைய மாட்டான். சாவு கண்டு பதற மாட்டான்; வாழ்விலும் களிப்படைய மாட்டான்.

100. புத்தி அமைதியுடையவன்  ஜனக்கூட்டத்திற்கோ, காட்டிற்கோ ஓட் மாட்டான். எங்கும் சமமாக உள்ளபடியே இருப்பான்.

[பதினெட்டாம் அத்தியாயம் நூறு சுலோகங்களைக் கொண்டு மிகப் பெரியதாக அமைந்ததாகும்.]

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *