திருச்சி புலவர் இராமமூர்த்தி

பாடல் :

தொண்டனார்க்கு   இமயப்    பாவை   துணைவனார்   அவர்முன்  தம்மைக்
கண்டவாறு      எதிரே   நின்று   காட்சிதந்து    அருளி,  மிக்க
அண்டவா   னவர்கட்கு    எட்டா  அருட்கழல்    நீழல்   சேர
கொண்டவாறு   இடையறாமல்   கும்பிடும்  கொள்கை  ஈந்தார்.  

பொருள் :

சிந்தை செய்த தொண்டனாருக்குப் பார்வதியம்மையார் கொழுநராகிய சிவபெருமான் அவர் முன் பன்னாளும் தம்மைக் கருத்தினில்வைத்துக் கண்டிருந்த வண்ணமே வெளிப்பட அவர் எதிரிலே வந்து காட்சி கொடுத்து அருள்புரிந்து, மிகுந்த தேவர்களுக்கும் எட்டாத தமது அருளாகிய சீபாதநீழல் சேரும்படி அருள் கொடுத்து, இடையறாமற் கும்பிட்டிருக்கும் பேற்றினையும் ஈந்தருளினார்.

விளக்கம் :

தொண்டனார் என்ற சீர், இறைவனது  தொண்டராகவே தம்மை  வைத்துச்  சிந்தை செய்தார் ஆகலின். முன்பு ‘கொற்றவன்’ என்றும் ‘புரவலர்’ என்றும் அந்தந்த  நிலைக்கேற்பக்  குறித்த சேக்கிழார்,  இங்குத்   ‘தொண்டனார்’ என்று வழங்கிய அழகும் தகுதியும் காண்க.  தொண்டனார் என்றதற்கேற்ப  இறைவன்  கழல் நிழலிலே   இடையறாமல்  இருந்து கும்பிடும்   சிறப்பை   ஈந்ததும்  காண்க.

இமயப்பாவை துணைவனார் என்ற தொடர், சிவகாம வல்லியாருடன் வெளிப்பட்டுத் தந்த காட்சியை  விரித்துக் கூறியதைக்   காட்டியது.

அவர்முன்  தம்மைக்  கண்டவாறு என்ற  தொடர், முன்பு பலகாலமும் சிந்தித்தும், வந்தித்தும்  அகத்தே கண்ட படியே, தில்லையம்பல  வாணரையே  தம் ஆத்மார்த்த  நாயகராக வணங்கியவர்  ஆதலின், அந்த அம்பலவரே  அம்மையுடன் எழுந்தருளிய  சிறப்பைக் காட்டியது. இக்காரணம்  பற்றியே   இங்கே  இடப வாகனம் கூறாது  விட்டார்.

எதிரே  நின்று  காட்சி  தந்தருளி , என்ற தொடர் முன் உள்ளப் புண்டரிகத்து  உள்ளிருந்து காட்சி தந்தருளினவர், இப்போது அகம்புறம் என்பதின்றி யாங்கணும் விரிந்து நின்று காணுமாறு காட்சி யளித்தருளி. அவ்வாறு – காட்சி தந்தருளியவாறு. “விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்,

மறைய நின்றுளன் மாமணிச் சோதி யான்
உறவு கோல்  நட்டு  உணர்வு கயிற்றினான்,
முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே,

“நெஞ்சுண்டென் நினைவாகி நின்றான் றன்னை“

“இவனென்னைப்  பன்னாள்  அழைப்பொழி யான்  என்று எதிர்ப்படுமே“

முதலிய திருவாக்குக்கள்  இதனை  விளக்குகின்றன,

மிக்க  அண்ட   வானவர்கட்கு  எட்டா  அருள் கழல் ‘’ என்ற தொடர்  மக்கள், தேவர், நரகர் என்னும் மூவகை உயர்திணையிலும் புலமை, ஆயுள், தவம், ஒளி முதலிய பலவற்றாலும் மிகுந்த தேவர்களுக்கும் எட்டமுடியாத கழலைக்  குறித்தது

அண்ட வானவர் – அண்டங்களாகிய மேலுலகங்களை ஆட்சி புரியும் வானவர்கள். பிரமன் – விட்ணு – இந்திரன் முதலியோர்.

“ஆரேனுந் தன்னடியார்க்  கணியான்   தன்னை,
அமரர்களுக்கு   அறிவரிய அளவில்  லானை’’   முதலியவை காண்க.

கழல் நிழல் – திருவடி வியாபகத்தின் நிறைவே நீழல் எனப்பெறும். பிறவித் துன்பமாகிய வெயிலுக்கு மறைவு தந்து ஆற்றுவிக்கும் நிழல். வெயிலின் வெப்பம்  மாற்றும் நிழல்போலத் துன்பம்  நீக்கி,  இன்பமான குளிர்ச்சி  தருவதனாலே நிழல் என்று  உருவகப்படுத்திப் பேசப்பெறும்.

“தண்ணிழலாம்பதி“ என்பது சிவஞானபோதச் சூத்திரம்.

“சுழலார் துயர்வெயில்  சுட்டிடும் போது  அடித்
தொண்டர் துன்னு, நிழலாவன…..ஐயாற னடித்தலமே“

என்ற திருவிருத்தத்தில் அப்பர் பெருமான் இவ்வுருவகத்தை முற்றும்  விரித்தருள்வது காண்க. நீண்ட  நிழல், நீழல்  எனப்பட்டது.

நீழல் சேரக்கொண்டு – திருவருள் வியாபகத்தில் அவர் கலந்திருக்க ஏற்றுக்கொண்டு “முத்தி, நான்ற மலர்ப்பதத்தே நாடு“ என்றபடி ஆடுங் கழலே முத்திநிலையாம். அதனையே அவர் வந்தித்தார்; அதனையே சிந்தித்தார்; ஆதலின் இறைவன் அதனையே அவர் சேரக்கொண்டார் என்க.       

இடையறாமல் கும்பிடும் கொள்கை – இதுவே சைவ சித்தாந்தத்தின்படி, முத்தியினதிலக்கணமாம். முத்தி நிலையினும் உயிர் இறைவனுக்கு அடிமையேயாகி அவனைக் கும்பிட்டு இன்புற்றிருக்கும் என்பது. “மறக்குமாறிலாத வென்னை“என்ற ஆளுடைய பிள்ளையார் திருத்துருத்தித் தேவாரமும்,

“பண்டு திருவடி மறவாப் பான்மையோர்“ என்ற ஆளுடைய பிள்ளையார் புராணமும் காண்க. இடைவிடாது. சிந்தித்துக்கொண்டிருத்தல்.

“குஞ்சித்த சேவடியுங் கும்பிட்டேயிருப்பர்“ (சிவஞானசித்தியார்)

கொள்கை – கும்பிடுதலை உட்கொண்ட நிலை.

இப்பாடலில் மெய்ப்பொருள்  நாயனார்  தம் செயலால்  கிறைவனின் திருவருளை முற்றவும் பெற்றமையாலே அவர் இறைவியோடு எழுந்தருளி தம் மலரடி நிழலில் என்றென்றும், இடையறாமல்  இருந்து கும்பிடும் சிறந்த  நிலையைப்  பெற்றார்! என்பது  நமக்கு   ஊக்கமும், நம்பிக்கையும் தருகிறது. மெய்ப் பொருள்  நாயனார்  அருள்  வரலாறு  இத்துடன் நிறைகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *