நடை (சிறுகதை)

வசுராஜ்

மொட்டை மாடியில் நடக்க ஆரம்பித்தேன். மாலை வானம் எஸ்.பி.பி. அவர்களை நினைவுபடுத்தும் “வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கொரு சேதி தரும்” தந்து கொண்டு தானிருக்கு. என்ன நிறங்கள்!

இந்த நிறங்களுக்கு இறைவன் எதைக் கொண்டு வண்ணம் சேர்க்கிறான்? எந்தத் தூரிகையால் தீட்டுகிறான்? அட எனக்கே கவிதை வரும் போல் இருந்தது. தலைக்குப் பக்கத்தில் விமானம் தரையிறங்கத் தாழ்ந்து பறந்தது. (விமான நிலையம் வெகு அருகே) எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத காட்சி. விமானம் தரையிறங்குவது ஒரு ராட்சசக் கழுகு மிக லாகவமாகத் தரையைத் தொடுவது போல இருக்கும். விமானம் கண்ணை விட்டு அகன்றதும் கீழே எட்டிப் பார்த்தேன்.

எதிரில் சின்னச் சின்னத் தகரத் தடுப்புகள். பக்கத்தில் உள்ள அடுக்குமாடிப் பணியாளர்களின் தங்குமிடம் புறாக் கூண்டுகள் போலிருந்தது. வேலை நேரம் முடிந்து வட மாநிலப் பசங்க வந்து கொண்டிருந்தார்கள். ஒரே சிரிப்பும் சந்தோஷமுமாய் வந்தார்கள். பாவம் வாழ்க்கையின் கஷ்டங்களைச் சிரித்தே தாங்கிக்கொள்ளப் பழகிவிட்டார்கள் போலும். நான் நடக்க ஆரம்பித்தேன். பக்கத்து வீட்டுக் குழந்தை சிரித்துக்கொண்டே தத்தக்கா பித்தக்கான்னு  நடந்து கொண்டிருந்தது. பாட்டி, குழந்தை கூட ஓடிக்கொண்டிருந்தாள்.

இந்தக் கொரானா காலத்தில் எல்லா மொட்டை மாடியிலும் தலைகள். எல்லாருக்கும் வெளிக் காற்றை சுவாசிக்க ஆசை. சூரியன் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழிறங்க ஆரம்பித்துவிட்டான். கொஞ்ச நேரத்தில் காணாமல் போய்விடுவான். நண்பா, காலையில் பார்க்கலாம் என்று மனத்துக்குள் விடை கொடுத்தேன். சீருடைப் பள்ளிக் குழந்தைகள் போல் காகங்கள் வரிசையாக நின்றபடி ஒன்றுக்கொன்று ஏதோ பேசிக்கொண்டன. உற்றுக் கேட்டேன்.

“என்ன இன்னிக்கு நல்லா சாப்பாடு கிடைச்சுதா மகனே?”

அம்மா. இன்னிக்கு 4ஆவது மாடி பாய் வீட்டு பிரியாணி சூப்பரா இருந்தது. நான் உன்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தேன். நீ வரவேயில்லை. அதுனால நானும் நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணும் சாப்பிட்டோம்” என்றது.

அம்மா காக்கா “எனக்குத் தெரியுண்டா, உனக்கு அவ மேல ஒரு கண். என்னைக் கூப்பிட்டெல்லாம் இருக்க மாட்ட. அவளப் பார்த்தா தான் உனக்குத்  தலகால் புரியாதே. நான் 2ஆவது மாடி மாமி வீட்டுத் தயிர் சாதம் சாப்பிட்டேன்” என்றது.

இன்னொரு பெரிய காக்கா வந்து “எல்லாரும் வந்தாச்சா? அவங்க அவங்க வீட்டுக்குப் போகலாமா”ன்னு கேட்டது. அது தான் கூட்டத்துக்குத் தலைவர் போல.

நம்ம பிரியாணிக் காக்கா மெதுவாக “எங்க பக்கத்து வீட்டுப் பொண்ணு வரலை”ன்னு சொல்லிச்சு. அம்மா காக்கா, ஒற்றைக் கண்ணால் முறைத்தது. பையனுக்குக் கண்ணுல புது ஒளி. தோழி வந்துவிட்டாள். “எல்லாரும் வந்தாச்சு” உற்சாகமாய்ச் சொன்னது. தனித் தனி பேட்ச்சா கிளம்பிப் போச்சு எல்லாம்.

ஐ. எனக்குக் காக்கா பாஷை புரியுது.   போன ஜென்மத்துல காக்காவாப் பொறந்திருப்பேனோ!

கீழே எட்டிப் பார்த்தேன். சப்பாத்தி, உருளை மசாலா ரெடியாகிக் கொண்டிருந்தது. இன்னும் 15 நிமிடம் நடந்து விட்டுக் கீழே இறங்க வேண்டியது தான் என்று நினைத்தேன். கிழக்கே நிலாப் பெண் தகதகவெனப் புறப்பட ஆரம்பித்தாள். இயற்கை தான் என்ன அழகு. ஓ! இன்னிக்கு பௌர்ணமி. நிலாவுடன் பேசிக் கொண்டே கொஞ்ச நேரம் நடந்தேன். இப்போது கடற்கரையில் இருந்தால் நல்லா இருக்கும். இப்போ தான் பீச்சக் கூட பூட்டிட்டாங்களே!

கீழே எட்டிப் பார்த்தேன். வரிசையாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் ஒன்றிரண்டு பெண்களும் இருந்தார்கள். குடும்பத்தோடு வேலைக்கு வந்திருப்பார்களோ. பாவம் இதில் பெண்களும் எப்படித் தங்குகிறார்களோ.  பக்கத்தில் Movable toilet & bathroom இருக்கு. அதில் பெண்கள் குளிப்பார்களோ. ஆண்கள் எல்லாம் தெருவிலேயே தான் குளிப்பார்கள். அதில் ஒரு பையனும் பெண்ணும்  கண்ணால் பேசிக் கொள்வது போல் தெரிந்தது. தெரு விளக்கும் நிலா வெளிச்சமும் இருந்ததால் ஓரளவு தெரிந்தது.

நம்ம பிரியாணிக் காக்கா மாதிரி தானா இவர்களும். நல்லா இருக்கட்டும் 2 ஜோடியும் என மனதிற்குள் வாழ்த்தினேன். மனுசனும் ஒரு விதத்தில் காக்கா தானோ, இல்லை,  அவற்றிடமிருந்து நாம் தான் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டுமோ? சப்பாத்தி பசியைத் தூண்டியது. போய் தோசை பண்ணலாம் என நினைத்துக் கொண்டே கீழிறங்கினேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.