Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    unnamed
    ’’ தாய்க்கட்டு தாமோதர் கைக்கெட்ட பூதேவி
    வாய்க்கெட்ட வைக்கின்றாள் வையத்தை(மண்ணை), – சேய்த்தொட்டில்
    விட்டிறங்கி வீதிவலம் வந்திடும் வேளையில்
    தொட்டனள் விக்ரமர் தாள்’’….!

    ‘’அயி கிரி நந்தினி மெட்டில்’’
    ——————————————————-
    “அளிவரம் உக்ரமம் ஒளியரி அக்ரமம்
    உணர்குரு சுக்கிரர் கட்டளையை
    பலியிட அக்கணம் குறள்திரு விக்ரம
    வடிவினில் திக்கது தொட்டவரே!
    புலனுரு வாமனம் பழகிட நீமனம்
    பெருகுவை ஆணவ கந்தையிலே
    சலணரு ணேசரின் சிசுரம ணேசரை
    சரணடை கோவண சந்நிதியில்”…
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி 144-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    garland

    இதழ்களில் குமிண் சிரிப்போடு மாலையை உயர்த்திப் பிடித்திருக்கும் இந்தக் காளை அதனைச் சூட்டப்போவது யாருக்கு? ஆண்டாளைப் போல் ஆண்டவனுக்கா? இல்லை தன் மனம் ஆண்டவளுக்கா?

    இந்தப் புகைப்படத்தை எடுத்த திரு. லோகேஷ்வரன் ராஜேந்திரன், இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்த திருமதி. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகின்றது!

    இனி, காளையின் கையிலிருக்கும் மாலை யாருக்கு? என்பது குறித்த தம் சிந்தனையின் விளைச்சலைச் சமர்ப்பிக்க வருகின்றார்கள் கவிஞர்கள்; அவர்களை வரவேற்போம்!

    *****

    பட்டணத்து மாப்பிள்ளைக்கு மாலையிட வரிசைகட்டும் மக்கள், பட்டிக்காட்டு மாப்பிள்ளை என்றால் எட்டிப்போகும் வேதனையைச் சுட்டிக்காட்டுகின்றார் திரு. ஏ.ஆர். முருகன்.

    மாலை சூட நான் ரெடி!
    மணமகளே நீ எங்கடி??
    சலிச்சுப்போனேன் தேடி
    களச்சுப் போனேன் போடி!!
    கேக்குறாங்க வேல வெட்டி
    விரட்டுறாங்க விவசாயிங்காட்டி!!
    பட்டம் படிச்சுப்புட்டு
    பட்டணத்திலுக்காந்துட்டு
    பத்தாத சம்பளம்னாலும்
    பரிசம் போடுறாங்க!!
    பட்டிக்காட்டுப் பூமியில
    பக்குவமா உழுது
    பணம்நிறையச் சம்பாதிச்சாலும்
    மணம் முடிக்க மார்க்கமில்லே!!!
    பொண்ணு ஒண்ணு கொடுத்தா
    பூமாதிரிப் பாத்துக்குவேன்!!
    பொறுப்பான பையனுக்குப்
    பொண்ணுக்கொடுக்க யாரிருக்கா???

    *****

    வேலை தேடும் வயதினில் மணமாலை சூட எண்ணினால் இன்பச் சோலையன்று வாழ்க்கை; வறண்ட பாலையே! என எச்சரிக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    முதலில் வேலை

    வேலை தேடிடும் வயதினிலே
    வெற்றி காண எண்ணாமல்,
    மாலை தன்னைக் கையிலேந்தி
    மணமகள் தேடி யலைந்தாலே,
    சோலை யாகும் வாழ்வதுவும்
    சொல்ல வியலா வகையினிலே
    பாலை யாகிப் பயன்தராதே
    போயிடும் படித்த வாலிபனே…!

     *****

    ”ஆசிரியர்க்கோ, தலைவர்க்கோ, அன்னைக்கோ, தந்தைக்கு தேவையில்லை இந்தப் பூமாலை! உன் மனங்கவர்ந்த பாவைக்கே இது தேவை! ஆதலால் அன்பும் காதலும் பரிவு புரிதலும் கலந்து சூட்டிடு பூமாலையை மகிழ்ந்து!” என்று வாழ்த்துகின்றார் திரு.  பழ. செல்வமாணிக்கம்.

    யாருக்கு இந்த மாலை!

    புன்னகையுடன் ஓர் இளங் காளை!
    கையில் கட்டி வைத்த மலர் மாலை!
    யாருக்குச் சூட்டப் போகிறாய் இந்த மாலை!
    உனக்குப் படிப்பு சொல்லிக் கொடுத்த
    ஆசிரியருக்கா இந்த மாலை!
    அவர் சொல்லித் தந்தபடி வாழுகின்ற வேளை
    தேவையில்லைஅவருக்கு இந்த மலர்மாலை!
    நாம் வாழ, தன் வாழ்வை தியாகம் செய்த
    தலைவருக்கா இம் மாலை!
    அவரைப் போல பிறருக்கு நன்மை செய்யும் வேளை
    தேவையில்லை அவருக்கு இந்த மலர் மாலை!
    நமக்கெல்லாம் உணவு தரும்
    உழவருக்கா இம் மாலை!
    விளை நிலத்தை,மனை நிலமாய் மாற்றாத வேளை
    தேவையில்லை அவருக்கு இந்த மலர் மாலை!
    உனை கருவில் சுமந்து உடலும்,உயிரும் தந்த
    உன் அன்னைக்கா இம் மாலை!
    உன்னோடு அம்மாவை வைத்திருந்து சீராட்டும் வேளை
    தேவையில்லை அவருக்கு இந்த மலர் மாலை!
    உடலாலும், மனதாலும் உனைச் சுமந்த
    உன் தந்தைக்கா இம் மாலை!
    அவர் சுமையை நீ சுமக்கும் வேளை
    தேவையில்லை அவருக்கு இந்த மலர் மாலை!
    அன்னை, தந்தை, தன் சுற்றம், தன் வீடு
    அத்தனையும் உனக்காக விட்டு வரும்
    மணப் பெண்ணுக்கா இம் மாலை!
    மலர்களால் சரம் தொடுத்த இந்த மாலை!
    நீ தரப் போகும் அன்பு, பரிவு, காதல், புரிதல்,
    நட்பு என்ற மலர்களை சுட்டிக் காட்டும் அழகு மாலை!

    *****

    ”சோலையில் பலவண்ணத்தில் பூக்கின்ற நாங்கள் யாவரும் மாலையில் சேர்ந்தாலே மதிப்பு! நிலவுலகில் நிகழ்கின்ற விழாக்கள் அனைத்திலும் எமக்கே தலைமை என்பதே எம் சிறப்பு!” என்று பூமாலையைப் பாமாலை பாடவைத்திருக்கின்றார்  பெருவை திரு. பார்த்தசாரதி.

    மலர்மாலையின் பாமாலை..!

    மாலையிலே வானில்மறையும் கதிரவனின் மதிமயக்கும்…
    ……….மனதைக்கவரும் சிவப்பழகைக் கண்குளிரக் காண்பீர்.!.
    காலையிலே மறைகின்ற வெண்ணிலவின் வெளிச்சமும்…
    ……….கருநீலத்தில் விடை பெறுமழகையும் கண்டுகளிப்பீர்.!.
    ஓலைக்கீற்றுகள் ஒன்றோடொன்று உரசியெழுப்பும் கீத…
    ……….ஒலியில் புள்ளினங்கள் சேர்ந்து பாடுவதை ரசிப்பீர்.!.
    மாலையிலே சேர்கின்றபல வண்ணமிகும் மலர்களின்…
    ……….மனமீர்க்கும் வாசனையைக் கண்டுணர்ந்து நுகர்வீர்.!.
    .
    ஒருசோலையிலே பலவண்ண நிறத்தில் மலர்ந்தாலும்…
    ……….ஒன்றான மாலையாகச் சேர்ந்தால்தான் மதிப்பாகும்.!.
    பெருமானின் தலையிலோ காலடியிலோ கிடந்தாலும்…
    ……….பெருமை தானெங்களுக்கு சிறுமையில்லை அவனின்…
    கிருபையால் எமக்கெங்கு சென்றாலும் பெருமைதான்…
    ……….கருணைக்கும் அன்புக்கும் அடையாளச் சின்னம்!யாம்.
    தரும் சுகத்திற்கோர் எல்லையுமுண்டோ இவ்வுலகில்…
    ……….தாரணியில் நிகழும் எவ்விழாவிற்கும் யாம்தலைமை.!

    *****

    ”தம்பி! அன்பில் வசப்படும் மங்கைக்கு மாலையிடு; அந்த ஆண்டவனுக்கு மாலையிடு; விளையாடிப் பெருமை சேர்க்கும் வீரருக்கு மாலையிடு! அது பொருத்தம்! அதைவிடுத்துக் கூத்தாடிகளின் கட்டவுட்டுக்கெல்லாம் மாலையிட்டுக் கோமாளியாகாதே! அது தந்திடும் வருத்தம்!” என்கிறார் திரு. எஸ். கருணானந்தராஜா.

    யாருக்கு மாலை?

    மாலையிடு தம்பி மாலையிடு
    மணவாட்டி கழுத்தினிலே மகிழ்வோடு மாலையிடு
    ஆலயத்தில் இறைவனை நீ அர்ச்சித்து மாலையிடு
    கோலமிடு விளக்கேற்று குப்பை களைப் பொறுக்கு.

    வீரனாய் வெற்றி பெற்று விளையாட்டுப் போட்டிகளில்
    வீதி வலம் வருகின்ற விண்ணர் களைப் போற்றி
    மாலையிடு தம்பி மாலையிடு – அவரை
    மகிழ்வித்து ஊக்குவிக்க மாலையிடு.

    ஆத்தா இடுப்பிருந்த அரைக்காசை முடிச்சவிழ்த்து
    கூத்தாடி படம் ஓட, குடத்திலே பால் வாங்கி
    ஊத்தாதே கட்டவுட்டில் ஒரு முழமும் பூ வாங்கிச்
    சாத்தாதே கண்ணா! வீண் தறுதலையாயாகாதே.
    கூத்தாடிக் குந்தி நெளிப்பவரைச் சேவித்தல்
    ஆத்தாதவர் தொழிலாம் அவரையெலாம் போற்றி
    ஏத்தாதே ஐயா! எமக் கெதற்கு வீண் வேலை.

    படம்நூறு நாளோட பக்திப் பரவசத்தில்
    மண்ணிலே சோறிட்டு மடையனைப் போல் உண்ணாதே
    கண்ணா உனக்காகக் காத்திருக்கு உன் குடும்பம்
    எண்ணு அதை! மூட இரசிகனெனும் பேர் வேண்டாம்.

    கோயில் சிலைகளுக்குக் குடம் குடமாய்ப் பாலூற்றும்
    கொடுமைதனை ஆண்டவனே சகிக்க மாட்டான்
    கூத்தாடிக் கட்டவுட்டைக் கும்பிட்டு மாலையிடும்
    கோமாளித் தனந்தன்னை மன்னிப்பானா?

    மாலையிடு தம்பி மாலையிடு
    மணமகளாம், வரப்போகும்
    மனைவிக்கு, மாலையிடு
    ஆலயத்தில் இறைவனுக்கு,
    அழகு செய்ய மாலையிடு
    அசகாய சூரர்களாம்
    விளையாட்டு வீரருக்கு
    அழகான மாலைகட்டி
    அகமகிழ மாலையிடு.

    *****

    யாருக்கு மாலையிட வேண்டும்? எப்போது மாலையிட வேண்டும்? என்று இளைஞனுக்குப் பக்குவமாய் வழிகாட்டிய கவிஞர்களுக்குப் பாராட்டும் நன்றியும் சேரட்டும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…

    மாலை சூடும் மணாளன்
    *****************************
    இல்லறம் நடத்த உரிய பருவமெய்தி
    இல்லாள் ஆகக் காத்திருக்கும் நங்கை!
    இதயத்தைக் கவர்ந்த நாயகனைக் கண்டு
    இனிய முகம் நாணுகின்ற மங்கை!
    நல்லெதிர் காலமதை மனதிற் கொண்டு
    நல்லாளை மாலையிடும் நாயகனின் செங்கை!

    நல்லோர் காட்டிய அறவழியில் பொருளீட்டி
    நல்வழியில் காத்து நின்றால்தான் உவகை!
    தான்தேடிக் கண்டவுணவுப் பண்டம் சிறிதெனினும்
    தன்னினத்தை மறவாது அழைக்கின்ற காக்கை!
    போற்றப்படும் நற்பண்பாம் என்றும் அது
    போன்றிருக்க வேண்டும் உங்கள் வாழ்க்கை!

    பெற்றோரை மறந்து பிறந்தகத்தைத் துறந்து
    பெற்ற பேறாக உனைக்கருதும் பதுமை!
    உறுதியுள மனமோடு இறுதிவரை உன்னோடு
    உற்றத் துணையென இருப்பது அருமை!
    பிறழாத நெறியோடு மாறாத அன்போடு
    பிரியாமல் வாழ்வதே என்றும் இனிமை!

    இல்லாத நிலையென்று ஒன்று வந்தாலும்
    இயன்றவரை வைத்துத் தாங்கட்டுமுனது அங்கை!
    தள்ளாத நிலையென்று ஒன்று வந்தாலும்
    தோள் கொடுத் துதவுவதே இயற்கை!
    கள்ளமற்ற முகத்தாளை மறவாமல் ஒருபோதும்
    காப்பதுவே உன் தலையாயக் கடமை!

    இல்லறம் எனும் நல்லறத்தை மாலையிட்டுத் தொடங்கும் மணாளனும் மங்கையும், அன்பும் அறனும் உடையோராய் வாழ்ந்தால் அதுவே இல்வாழ்வின் பண்பும் பயனுமாக இருக்கும் என்பது வாழ்வியல் அறிஞர் வள்ளுவரின் கருத்து.

    அதே வகையில்,

    ”பிறழாத நெறியோடு மாறாத அன்போடு
    பிரியாமல் வாழ்வதே என்றும் இனிமை”
    இல்லாத நிலையென்று ஒன்று வந்தாலும்
    இயன்றவரை வைத்துத் தாங்கட்டுமுனது அங்கை!” என்று மணாளனுக்குப் புத்திசொல்லும் இக்கவிதை, நற்சிந்தனைகளுக்கான விதை! அதைப் பாராட்டி இக்கவிதையின் படைப்பாளி திரு. ஆ. செந்தில்குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவிக்கின்றேன்.

     

     

    Share
  • அன்புசிவ வெண்பாக்கள்

    கிரேசி மோகன்

     

    அன்பு ரமணா, வல்லமையில் உனது சிவகுரு வெண்பாக்கள் வாசித்தேன்….அந்த உற்சாகத்தில்(அது என்ன எப்பப்பாரு பாதிப்பில்) ‘’அன்புசிவ வெண்பாக்கள்’’ உனது மேலான பார்வைக்கு….!

     

    images

     

    காப்பு
    ——–
    பழமளித்த தந்தை புரமெரித்த போது
    தொழமறக்க தேர்கால் துணித்த -அழகா
    தளைதட்டா வெண்பாக்கள் தந்ததில் பக்திக்
    களைகட்ட கற்பகச்சேய் காப்பு…
    ————————————————————-
    நூல்
    ——-

    அப்பர் தமிழ்கேட்டு வெப்பக் களவாயை
    அப்பிய சந்தனமாய் ஆக்கியோய் -தப்பில்
    குதியிட்டுத் தாழ்ந்தேன் மதியில் சதங்கை
    ஜதியிட்டுத் தாண்டவ மாடு….(1)
    அசையும் உயிரில் அசைவாய் இருந்து
    அசையாது நிற்கும் அரனே -அசைந்து or இசைந்து
    பசையாய் இடபாகம் பற்றிய உமையும்
    அசைந்திடத் தாண்டவ மாடு….(2)

    எண்ணாத போதிலும் எண்ணும் எழுத்துமாய்
    உண்ணா முலைசமேத ராகஉந்தன் -முன்னாலே
    அண்ணா மலையான் அடியெடுத்து வைத்திடுவான்
    பின்னாலே நீசுற்றும் போது….(3)….

    இல்லையென்று சொல்வோர்(கு) இயம்ப பதிலில்லை
    தில்லையில் என்வீட்டுத் திண்ணையில் -இல்லையேல்
    கொல்லையில் நான்மட்டும் காண்பதற்கு இல்லையென்று
    சொல்லாது தாண்டவம் ஆடு….(4)
    இல்லம் புகந்தன்று பிள்ளைக் கறியுண்டு
    வெள்ளை மனச்சிறுத் தொண்டர்தம் -உள்ளத்தை
    சோதித்த ஆண்டவா சொக்கநாதா என்நெஞ்சில்
    தாதித்தை தாண்டவம் ஆடு….(5)
    கால்கட்டு சுந்தரர்க்கு கைகட்டு போட்டவரின்
    மால்கட்(டு) அவிழ்த்த மகாதேவா -நூல்கட்டி
    ஆட்டுவிக்கும் அம்பலனே ஆடுமிந்த பொம்மையை
    ஆட்படுத்த தாண்டவம் ஆடு….(6)

    காளை அமர்ந்தோனுன் காலைப் பணியுமென்
    வேளை வரவேண்டும் வெண்பாவில் -காளமேகம்
    போலாக்கு முத்தமிழில், நின்புகழை முப்புரி
    நூலாக்கிப் பூணுமென் நெஞ்சு….(7)….

    நஞ்சானால் நெஞ்சில் நதியானால் நீள்முடியில்
    மஞ்சானால் மாகயிலை மாடியில் -பஞ்சானால்
    தீக்கண் புகுந்தேனும் தீய்ந்திடுவேன் ஏனெதற்கு
    போக்கத்துப் போனேன் பிறந்து….(OR)
    போக்கத்த மாயப் பிறப்பு….(8)….

    தலைப்பிள்ளை ஆறு தலைப்பிள்ளை சூழ
    மலைப்பெண் மதங்கர் மகளோ(டு) -அலைப்பெண்
    கலைப்பெண் சமேத கயிலைக் குடும்பி
    முளைத்தென் மனதில் மலர்….(9)

    நீறாணை காற்று நிலமனல் நீள்விசும்பு
    நீரானைப் போற்றி நெகிழ்ந்திட -நீராணை
    இட்டால் நினக்குள்ளே கட்டாயம் வந்திடுவான்
    பிட்டால் சுமந்தான்மண் பண்டு….(10)

    அம்போவென்(று) என்னை அகிலத்தில் ஆடவிட்ட
    சம்போ மகாதேவா சிந்திப்பாய் -உன்போல்
    மனையாள், இரண்டு மகன்கள் பெற்ற
    இணையாம் எனக்கேன் இழிவு….(11)
    எனையாளும் ஈசா எனதுயிர் ஸ்வாசா
    வினையாள லாமோசர் வேசா -துணையாவாய்
    மன்றாடிக் கேட்கின்றேன் மாயப் பசிநீக்கி
    அன்றாடங் காய்ச்சிக்(கு) அருள்….(12)

    சுகம்தரும் சொல்லை சிவனென்று கண்டேன்
    புகலெனெக்(கு) உந்தனிரு பாதம் -பகலிரவாய்
    தொந்திரவு செய்வேன் திருவருள் கிட்டிட
    உன்தயவு ஒன்றே உரம்….(13)

    தில்லை சபேசா திகம்பர வேஷாகேள்
    இல்லை பணிவென் இதயத்தில் -வள்ளலே
    வாயென்மார் மீதேறி வாலையுடன் வந்தாடி
    நாயன்மா ராக நிமிர்த்து….(14)

    விடையவரே கேளும் வினாவினை தீரும்
    அடைய முடியவில்லை ஆன்மா -தடையாய்
    மனம்நெஞ்சு மூளை மதியுள்ளம் என்று
    பிணம்தின்னும் பஞ்சவரைப் போக்கு….(15)

    பனிமலை வாசா பரசிவ வாச
    முனிமன நேசா மஹேசா -இனிவரை
    காத்திருக்கும் என்னுள்ளே காத்திருக்கும் போதேநீ
    தூத்திவிடு தேடல் திளைப்பு….(16)

    கண்ணாலே முப்புரத்தைக் காமனைத் தீயிட்ட
    அண்ணா மலையுன் அடிமுடியை -எண்ணிலேன்
    முப்புறமும் காமத்தில் மூழ்கியயித் தீயோனை
    அப்பனே ஆதரித்(து) ஆற்று….(17)
    கழுதை மனமே பழுதைச் சுமந்து
    பொழுதைக் கழித்தது போதும் -தொழுது
    வணங்கிட பார குணங்களை ஏற்பான்
    அணங்கை சுமக்கும் அரன்….(18)

    மண்சுமந்து பிட்டுக்குப் புண்சுமந்தாய் மேனியில்முக்
    கண்சுமந்து கந்தனைக் கண்டெடுத்தோய் -பெண்சுமந்த
    பாகத்தோய் நஞ்சுண்ட தாகத்தோய் என்நெஞ்சில்
    ஆகமத் தாண்டவம் ஆடு….(19)
    முடவனன்று வேண்ட தடதடவென்(று) ஓடி
    குடமுழுக்(கு) ஆடிய கும்பேசா -விடமுண்டோய்
    ஆடை கரித்தோல் அணிந்தெனது நெஞ்சமாம்
    மேடையில் தாண்டவம் ஆடு….(20)
    நாம்நமதை விட்டு நமச்சிவாய நாமத்தை
    ஒம்நமஹ சேர்த்தென்றும் உச்சரிப்போர் -காமமதை
    வென்றிடக் கைகொடுக்கும் விஸ்வேசா என்நெஞ்ச
    மன்றிடைத் தாண்டவம் ஆடு….(21)
    நாரதன் தும்புரு நந்தி மிருதங்கம்
    பாரதி வீணை பயின்றிட -வாரிதி
    வானைப் பிடித்திட வையம் அறிந்திட
    தாணுவே தாண்டவம் ஆடு….(22)
    நாவாரப் பைந்தமிழில் தேவாரப் பிள்ளைக்குப்
    பாவூற வைத்த பரமசிவா -பூவாரம்
    கொன்றையும் கங்கையும் கொண்டையில் சூடியோய்
    என்றென்முன் தாண்டவம் ஆடு….(23)
    ஒருமுறை யேனும் அருணா சலத்தை
    கிரிவலம் செய்யக் கிடைக்கும் -கருவினில்
    தோன்றி இடுகாட்டில் தூங்கும் பரிட்சையைத்
    தாண்டிக் கயிலாயத் தேர்வு….(24)
    பதினாறைப் பெற்றோன் பெருவாழ்வைப் போக்க
    அதிகாரம் செய்த எமனை -குதிகாலால்
    எட்டி உதைக்க எழுந்த பதமென்மேல்
    பட்டிடத் தாண்டவம் ஆடு….(25)
    பெரிய புராணம் படித்தறி யேனே
    நரியைப் பரியாக் கியவா -இறைவாநான்
    நாயன்மார் ஆகிஉன் நாமம் ஜபித்திட
    நீயென்மார் தாண்வம் ஆடு….(26)
    பிரிவோடு வாழ்ந்த திருநீல கண்டன்
    உறவோடு சேர உகந்தோய் -திருவாரூர்
    த்யாகேசா தில்லை நடராசா நெஞ்சத்(து)
    ஆகாசம் தாண்டவம் ஆடு….(27)
    பூசலா நாயனாரின் மாசிலா நெஞ்சத்து
    வாசியாக கோயில் வளர்த்தோய் -காசிக்கு
    வந்துன்னைக் காண்போரை வாழ்விப்போய் என்நெஞ்சில்
    தந்தனத்தோம் தாண்டவம் ஆடு….(28)
    தவக்களை வாயினால் தத்துவம் பேசி
    சவக்களை ஆனது சிந்தை -தவக்களை
    வீச இமயத்தே வீற்றோய் எனக்கருள்
    ஓசை அடங்கிய ஓம்….(29)
    தேனிக்குப் போட்டியாய் மாணிக்க வாசகன்தன்
    ஆணிப்பொன் பாக்கள் அருந்தியுந்தன் -தீவிக்கும்
    கண்டத்து நஞ்சை அமுதாக்கிய சங்கரா
    பண்டைஊழ் தாண்டவம் ஆடு….(30)
    விழிமலர்த் தூவி வழிபட்ட வேடன்
    அழிவிலா நாயன்மா ராக -வழிவகுத்தோய்
    நானார் அறிந்திட நீயென்னுள் ஆனந்தக்
    கோனாராய் தாண்டவம் ஆடு….(31)

    அறையாய் உமைக்கு அரையை அளித்த
    அரனே அடியார்க்(கு) அரணே -அறமே
    பொருளே சுகமாம் பயனே பரமே
    மருளே வராது மகிழ்த்து….(32)
    சங்கீதம் சந்திரன் சாத்வீக மாருதம்
    இங்கிதம் கூட்டும் இளவேனில் -தங்கித்தேன்
    தின்னும் கருவண்டின் தீர்த்தக் கரையாம்முக்
    கண்ணன்தன் சீதக் கழல்….(OR)
    கண்ணன் குளிர்ந்த கழல்….(33)

    கொழிக்கும் புலனைவர் கூட்டத்தின் கொட்டம்
    அழிக்கும் கடவுளே அன்பாய் -விழிக்கும்
    சிவனே உமையாள் கவனம் தவிர்த்து
    இவனே கதியென்(று) இரு….(34)

    முதற்பிள்ளை நெஞ்சில் நுதற்பிள்ளை கண்ணில்
    சதிர்க்கென்று மேனியில் சக்தியுமை -முதற்குன்றாம்
    வெண்வரை வாசா வறியவனென் வாய்மூட
    மந்திர மானது நீறு….(35)

    கொழிக்கும் புலனைவர் கூட்டத்தின் கொட்டம்
    அழிக்கும் கடவுளே அன்பாய் -விழிக்கும்
    சிவனே உமையாள் கவனம் விலக்கி
    இவனே கதியென்(று) இரு….(36)

    கூத்தபிரான் தீமையைத் தீர்த்தபிரான் தென்முகம்
    பார்த்தபிரான் வாமபாகம் பார்வதியை -சேர்த்தபிரான்
    தீர்த்தபிரான் வெண்ணீறால் நீர்த்தபிரான் (OR) ஆனைத்தோல் போர்த்தபிரான் அன்புக்குத்
    தோற்த்தபிரான் சேவடி தொழு….(37)

    ஆடிய பாதன் அயன்மால் அடிமுடி
    தேடிய பாதன் திருவிளை -ஆடிய
    பாதன் அடியவர் பேதம் அறுத்திடும்
    நாதன் திருவடி நண்ணு….(38)

    கூடலில் சொக்கேசன் ஆடலில் அம்பலத்தோன்
    பாடலில் நாயன்மார் பண்ணாவான் -தேடலில்
    தென்முகம் நோக்கித் தவம்செய்யும் நாயகனின்
    பன்முகம் எண்ணாநாள் பாழ்….(39)

    வெளுத்த உடலும் வரிப்புலித் தோலால்
    வளைத்த இடைவாழ் வனப்பும் -திளைத்த
    இமய மலையில் இமைகள் குவித்து
    அமையும் அரன்தொழில் அன்பு….(40)

    கைவல்யம் கேட்கிலேன் கைலாசம் வேண்டிலேன்
    பொய்மல்கும் வாழ்விலாடி பிம்பமாய் -செய்யென்னை
    தெய்வமே தேசிகா உய்ய உபதேசம்
    செய்வாயா சங்கரா செப்பு….(41)

    துன்மார்கப் பாதையில் அந்தக னாய்ச்சென்று
    கண்வேர்த் திடநான் களைப்புற்றேன் -சன்மார்க
    பந்துவே சங்கரா ஈசான்ய மூலைக்கு
    வந்தென்னைத் தள்ளி விடு….(42)
    வரத்தினால் பூமிக்கு வல்லூறாய்ப் போன
    மருத்துவனைக் காலால் மிதித்தோய் -சிறுத்த
    விகார அகந்தை விலகதிரு வெண்கா
    அகோரமூர்த்தி மூர்த்தி அரண்….

    நோயுமாவான் சாய்ந்திடும் பாயுமாவான் மாற்றிடும்
    மாயமாவான் புத்தொளிர் காயமாவான் -நாயன்மார்
    நேயமாவான் வெவ்வினையால் காயமானால் காப்பாற்ற
    நேயமாவான் நாடாதோர் சீயமாவான் தேற்றிடும்
    தாயுமாவான் தந்தை தவித்து….(44)

    ஆர்வம் முறுக்கிட ஆசை கிழித்திட
    போர்வை மனது பலநூறு – நார்நாராய்
    கந்தையா னாலும் கசக்கிக் கட்டிட
    புந்தியை ஈசா பிழி….(45)

    சம்பந்த அண்ணனும் கம்பத்து பிள்ளையும்
    அம்பைஉண் ணாமுலையும் சூழ்ந்தாலும்-நம்பந்தம்
    நீக்கிடுவான் ஸ்ரீரமணர் ஆக்கிடுவான், நானொழிய
    ஆக்கிரமித்(து) ஆள்வான் அரன்….(46)

    கண்ணாலே முப்புரத்தைக் கற்பூரம் ஆக்கிய
    அண்ணா மலையுன் அடிமுடியை-எண்ணிலேன்
    முப்புறமும் காமத்தில் மூழ்கியயித் தீயோனை
    அப்பனே ஆதரிப் பாய்….(47)
    அச்சம், அசூயை, அகங்கார, ஆணவ
    எச்ச மிகுதியால் இவ்வுலகில் -அச்சனே!
    பொய்யில் எழுதும் புலவன் எனக்குன்மெய்
    செய்யுள் எழுதுசொக் கா….(48)

    விட்டலனைப் போல்மதுரை வீதி விளையாடி
    பிட்டலைந்து தின்று பிரம்படி -பட்டவனே
    எக்களங்க மும்வாரா ஏற்றம் எனக்குவர
    சொக்கலிங் காயென்சொல் கா….(49)

    எந்தையே உந்தன் இரண்டாம் மகனுனக்கு
    முந்தை ஒருநாள் உபதேசம் -தந்தனன்
    அந்த முருகன் இராமுருகன் ஆகிட
    சிந்தைகொள் சங்கரா சட்னு….(50)

    கோளரி கோவிந்தன் நூலறி நான்முகன்
    தாளறி தோளறியா தோற்றத்தில் -தீயெரி
    வெற்பாய் வளர்ந்தோய் வணங்குகிறேன், பத்தினி
    கற்பாய் இருந்தளி காப்பு….(51)
    பெண்ணுமை பாகனே கண்ணுதல் நாயகா
    ஷண்மத ஸ்தாபகா சங்கரா -தண்மதி
    பாகீ ரதிசூடும் நாகா பரணனே
    தேஹி பவதி பிட்சாம்….(52)
    போகம்போம் போக்கியம்போம் போசனம்போம் புன்மைபோம்
    மோகம்போம் மூர்கம்போம் மும்மலம்போம் -நாகம்பூண்
    நஞ்சுண்ட நாதனை நன்ணும் அடியார்க்கு
    நெஞ்சுண்ட நோய்கள்போம் நீர்த்து….(53)
    கலைகங்கை நாகம் கமழ்கின்ற கொன்றை
    மலைமங்கை கொண்டமகா தேவன் -நிலையை
    சிவராத் திரியன்று சிந்தித்(து) இருப்போர்க்கு
    கவிராத் திரிபகலும் காண்….(54)
    மகப்பேறு காண மருத்துவச்சி ஆக
    அகம்புறம் தாயுமான அன்பே -மிகப்பசியாய்
    பிள்ளைக் கறியுண்ட பித்தா உனதுலீலைக்(கு)
    எல்லைதனை யாரறிவா ரே….(55)
    வேதங்கள் அர்ச்சிக்கும் பாதாம் புயம்பற்ற
    போதா உனக்கில்லை பாழ்மனமே -தீதில்
    இராப்பகல் தோறும் இருந்தென்ன கண்டாய்
    சிராப்பள்ளி ஈசனைச் சேரு….(56)
    ஏகனை தேவியுமை பாகனை தீந்தமிழ்ப்
    பாகனை தேவார ராகனை -நாகணை
    தேகனை நற்றவர்தம் யூகனை நந்திஹேச
    வாகனனை வாயாற வாழ்த்து….(57)
    மாடமர்ந்த கற்பகமும், கோடொடிந்த பிள்ளையும்
    ஆடகச் செம்பொன் அழகனும் -கூடவர
    வீடுவிட்டு வேடிக்கை மாடவீதி பார்க்கின்ற
    தோடுதொட்டக் காதனைத் தொழு….(58)

     

    பாகீ ரதியைப் பிறைமான் மழுவினை
    பாகீ சதியுடன் தாங்கிடும் -த்யாகேசா
    வாகனம் வாயில்லா ஜீவன் வதையுறுமே(or)
    வாகனக் காளையின் வேகம் குறையுமே
    நீகனம் ஆனதே னோ….(59)

    மெய்யடி யார்கள் மிகுந்த மயிலையில்
    ஐயம் உனக்கேன் அமுதீசா -ஐயம்
    விடுத்து எடுப்பாய் தொடுத்தமலர் மாலை
    இடத்து உமைதோள் இட….(60)

    செல்வன் கபாலியை செல்வியுமை கற்பகம்
    கல்யாணம் செய்தவன் கைத்தலம் -செல்லும்
    தினம்நாளை சேர்வீர் திருமயிலா பூருக்கு
    இனம்ஜாதி இல்லை இதற்கு….(61)

    கைத்தலம் பற்றி கபாலியும் கற்பகமும்
    நெய்த்தலம் சுற்றி நடந்தனர் -மெய்த்தவ
    வேதியர் மாலயன் வானோர் குழுமிட
    பாதியில் பாதி பிணைந்து….(62)
    அன்னைக்கு தந்தைக்கு அர்த்தமதன் சொல்லுக்கு
    புன்னைக்கு பூங்கொடி பெண்ணுக்கு -இன்னைக்கு
    கையோடு கைகோற்கும் கல்யாண உற்சவம்
    மொய்யெழுதும் நேரமிது மெய்க்கு….
    மொய்யெழுத வாரீர் முனைந்து….(63)
    குங்குமமும் வெண்ணீறும் கூடிக் கலந்தின்று
    சங்கமம் ஆகுது சன்னிதியில் -தங்களை
    வாயாறக் கேட்கிறேன் வந்திதைக் காணவினை
    நோயாறிப் போகும் நொடித்து….(64)

    பாதியுறை பார்வதி பங்கனுக்(கு) இன்றுதிரு
    ஆதிரை நன்நாள் அனைவரும் -ஆதியிறை
    தில்லை நடேசன் திருவடி நாடிடுவீர்
    கொல்லையில் பூக்கும் களிப்பு….(65)
    பாலமார் கண்டன் பதினாறாய் வாழ்வதற்கு
    காலன் உயிர்குடித்த காளியின் -காலெனக்கு
    ஏதானால் நானும்தான் எத்துவேன் கூற்றினை
    பாதியின் பாதியளிப் பாய்….(66)….
    மூளத்தீ முப்புரத்தை மூழ்கடித்த முக்கண்ணா
    காளத்தி நாதரே, கண்ணப்பன் -காலொத்திக்
    கண்ணைக் கொடுத்த கருணைக்கு நாயன்மார்
    சின்னம் அளித்தோய் சரண்….(67)
    சடையில் குளிர்ந்த ஜலமும் கலையும்
    இடையில் இமவான் மகளும் -உடலில்
    களபம் அரனே, கதகதப்பாய் எந்தன்
    உளப்பாவத் தீக்குள் ஒதுங்கு….(68)
    ஒதுங்கி இருந்து ஒருகாலில் தங்கச்
    சதங்கை அணிந்து சபையில் -மதங்க
    மகளிணைந்து ஆடும் மகாதேவன் பாதத்
    துகளணிந்து நெஞ்சே துலங்கு….(69)

     

    துலங்குவெண் நீறு துனிப்பிறைக் கோடு
    இலங்க ஜதியின் இசைக்கு -மலங்க
    விழித்துமையாள் மண்பார்த்து வெட்க அரவக்
    கழுத்தரனின் கூத்தே களிப்பு….(70)
    களியா திரையோன்தென் கல்லால் இறையோன்
    வளிவான் நதிமதி வேய்ந்தோன் -புலியா
    சனத்தில் அமர்ந்து சுகத்தில் திளைப்போன்
    மனத்துப் பிணிக்கு மருந்து….(71)
    மருந்தவன் நீறு விருந்தவன் நாமம்
    அருந்தவன் ஆடல் அழகு -பெருந்தவம்
    சும்மா இருந்தந்த சோணா சலன்நினைவில்
    உம்மால் முடிந்தவரை உன்னு….(72)
    உன்நுதற் கண்கொண்டு உற்றெனைப் பார்த்திடு
    என்னிதய காமன் எரிந்திட -பின்னதை
    நெற்றியில் பூசிடு நீறாய், நிகழ்ந்திடும்
    வெற்றிக் குமாரசம்ப வம்….(73)
    வம்புக்(கு) இழுத்திடு வாயாடி கீரன்போல்
    சம்புயெதிர் வந்துன்னை சந்திப்பான் -நம்பிதை
    காட்டில் எரிதலினும், பாட்டால் பொசுங்கிட
    ஏட்டிலுன் பேரிருக்கு மே….(74)
    மேய்ந்து மகளிர் முலைபற்றி மந்தமாய்
    சாய்ந்து கிடக்காதே சோம்பேறி -பாய்ந்து
    வருகங்கை வீச்சை விரிகுழல் ஏந்தி
    தருசங் கரன்தாள் தழுவு….(75)
    தழுவுசிவ மார்கம் கழுவுபவ ரோகம்
    மழுவுமான் ஏந்தும் மஹேசன் -குழுவில்
    அடியார்க்(கு) அடியாராய் ஆகும் பணிக்கு
    துடியாய்த் துடித்தல் தவம்….(76)

    தவமெதற்கு தான தருமம்தான் ஏனோ
    சிவமிருக்க சிந்தையில், ஜீவன் -அவமனைத்தும்
    சூரியன்தன் முன்தோன்றி சூம்பிப் பனியுருகி
    நீரிழந்த ஆவி நிலைப்பு….(77)
    நிலைப்படியில் நின்று நமனழைக்கும் நேரம்
    குலப்படிப்பு கோத்திரங்கள் கூறி -களைப்படையாய்
    மார்கண்டன் ஆர்த்தநஞ்சு நீர்கண்டன் பேர்சொல்ல
    பார்கண்டம் போகும் பணிந்து….(78)

    பணிந்தாய் பதர்முன் குனிந்தாய் குதிர்முன்
    துணிந்தாய் எளியோரைத் தூற்ற -மனிதா!
    கனிவாய் திருவல்லிக் கேணியோன் சொன்ன
    பணிருத் திரத்தைப் பழகு….(79)

    பழகப் புளிக்கும் பெரும்பாலும் காமம்
    அழகின் கதியும் அதேதான் -முழுகு
    சிவாய நமவென்ற சிந்தையில் நாளும்
    அவாவைம் புலன்கள் அழிவு….(80)

    அழிப்பது போலிருக்கும் ஆனால் அவனோ
    கழித்தபின் கூட்டும் கணக்கன் -ஒழித்த
    உயிரைப் பெருக்கி உலவவிட்டு ஆன்ம
    பயிரை வகுக்கும் பரம்….(81)
    பரம்பரை கர்வம், பணத்திமிர், மோகம்
    இரும்பினில் நாரெடுக்கும் இன்பம் -புரம்தனை
    தீக்குள் தொலைத்தவனை பாக்குள் பிடித்திடும்
    சாக்கில் சிவத்தை சுகி….(82)
    சுகம்பிறக்கும் முன்னால், அகம்சுரக்கும் பின்னால்
    இகம்பரத்தை ஈர்க்கும் இயல்பாய் -யுகம்பொருத்து
    சொக்கனாய், சங்கரனாய், சுந்தரனாய்த் தோன்றிய
    முக்கண்ணன் ஈசனை மொய்….(83)
    மொய்யெழுதப் போனவன் மாப்பிள்ளை, தன்பெயரை
    கையெழுத்துப் போடாதோன் கல்விமான் -தையெழுங்கால்
    மட்டுமல்ல ஈசனருள் கிட்டுமா யின்நிற்கும்
    எட்டுவித சித்தி எதிர்….(84)
    எதிர்படும் கூற்றின் எருமை மிரளும்
    விதிர்த்தகுப்தன் ஏடு வதங்கும் -குதித்த
    மறலிக்கை பாசம் மருக்கொழுந்தாய் வீசும்
    திறலக்கை ஈசன் தயை….(85)
    தயாபரன், கங்கை மயானத்தில் செல்வோர்
    பயாஅபயம் போக்கப் பரிவாய் -கயாபுரத்து
    விஸ்வநாதன் கர்ணத்தில் வாசிக்கும் மந்திரத்தால்
    பஸ்மமாகும் செத்தோர் பிறப்பு….(86)
    பிறப்பறுக்கும் நூலோன், மறக்கடிக்கும் மாலோன்
    இறப்பெதிர்க்கும் சூலோன் இதுதான் -இருப்பதற்கு
    எங்கும் இருந்தாலும் தங்கும் அடியார்மேல்
    பொங்கும் கருணையின் பால்….(87)
    பாலவன் பாதிநிறம்,பச்சையவன் மீதிநிறம்
    ஆலவன் ஜோதியமர் ஆசனம் -மூலவன்
    ஆகம நூலவன் அல்லாது போலவன்
    தேகமில் தேவனவன் தான்….(88)
    தான்தோன்றி ஜாலமவன், கான்தோன்றும் காலனவன்
    ஆண்போன்றும் பெண்போன்றும் ஆனதவன் -”நான்”தோன்ற
    ஜீவனாய் வீண்தோன்றி, ஜம்பமாய் வான்தோன்றி
    தேவனாய் வந்தடைவான் தீர்வு….(or)
    ஆவலாய்வந் தான்மா அவன்….(90)
    அவனர லிங்கம் ,அவனரி சிங்கம்
    அவனலர் தங்கும் அயனும் -அவனவனி
    வந்த மனிதன் விழியிமையா வானவன்
    எந்த பொருளுமவ னே….(91)
    நேற்றின்று நாளையவன், காற்றுவான்மண் தீநீராய்
    போற்றப் படுகின்ற பூதமவன் -தோற்றம்
    இலாதவன், தோன்றும் கலாதரன், சொல்லிச்
    சொலாதவன் ஆலில் ஜபித்து….(92)
    ஜபமாலை தாங்கி, சதுர்மறை ஏந்தி
    அபயவர ஹஸ்தம் அமைந்து -தபஸாய்
    சனகா தியர்சூழ சங்கேதம் பேசும்
    முனிதக் ஷிணாமூர்த்தி மாண்பு….(93)
    மான்மழு சூலம் மலைமகள் பார்வதி
    வான்விழு கங்கை வளர்பிறை -ஊன்தழுவ
    வெள்ளி மலையேறி வாசம் புரிந்திடும்
    சொல்லில் அடங்கா சிவம்….(94)
    சிவானந்த சாகரத்தில் சிந்தை குளிக்க
    அவாவந்த ஐம்புலன்கள் ஆசு, -முவாசைகள்,
    நானெ னுமகந்தை தானெனும் தற்பெருமை
    வீணெனவிட் டோடும் வெளுத்து….(95)

    வெளுத்ததெலாம் பாலாய் வழித்துண்ணும் மூடா
    களித்ததால் வந்த கருப்பு -குளித்திட
    எந்நாளும் போகாது உன்னாசை சொக்காயை
    வண்ணானச் சொக்கன்முன் வை….(96)
    வைகறையில் நீராடி வாயாறத் தேவாரம்
    மெய்கரைய ஓது மடநெஞ்சே -மைகரையா
    வண்டு நிகர்த்த விழியாள் வலத்தினில்
    கொண்ட சிவன்தாள் குனி….(97)
    குனிந்திடக் குட்டு துணிந்திடப் பட்டு
    நினைந்திடாய் கூடாத நட்பு -அணிந்திடுவாய்
    மந்தா கினியை மதியை குழல்சூடும்
    அந்தாள் நமச்சிவாய அஞ்சு….(98)

    அஞ்சை அடக்கிடலாம் அஞ்சா(து) இருந்திடலாம்
    அஞ்சிரெண்டு மாதகர்பம் ஆட்படாய் -அஞ்சிலொன்றில்,
    அஞ்சிலொன்றைத் தாண்டிய அஞ்சனசேய் அம்சமான
    அஞ்செழுத்துக் காரன் அளிப்பு….(99)
    அளியினம் பூவென்(று) அணுகிடும் பாதத்
    துளிமக ரந்தத்தை துய்க்க -கலிகொண்ட
    அல்வினை சேரா(து) அணைத்தருளும் கற்பகச்
    செல்வி கபாலி சரண்….(100)….கிரேசி மோகன்….!

     

    (சுபம்)
    (முடிவு)
    (மங்களம்)
    ——————————————————————————————————————

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180122 -Saraswati -lr watercolour 24x32cms
    180122 -Saraswati -lr watercolour 24x32cms

     

    வந்தனம் பாரதி வாணி சரஸ்வதி
    மந்தனென் மூளை முடுக்கினில் -வந்துநுண்
    ஆன்ம தரிசன ஆர்வம் பெருக்கிடு
    நான்மகன் அன்றோ நினக்கு….!

    நாள்செல்ல நாள்செல்ல, நாம்செல்ல வேண்டுமே
    ஆள்கொல்லி கூற்றன் அழைப்பானே! -கேள்நல்ல
    வார்த்தைக்(கு) அதிபதி வாணியைப் போற்றிடப்
    பூர்த்தியா கும்பார் பிறப்பு….!

    ”சகலகலா வல்லி அகலாதென் வாக்கில்
    பகலிரவாய்க் கொள்வாய்நீ பள்ளி -புகலவரும்
    வெண்பாவாம் அன்னம்(தாமரை), வஸந்தருது பஞ்சமியில்,
    பெண்பாவாய் பாடிப் பற”….!

    பாத்தநூறு தெய்வத்தில் பாரதியை போலிங்கு
    காத்திருக்க வைக்கா கடவுளெது -கூத்தனூர்
    தேவி மனம்வைத்தால் தேளின் கொடுக்கிலும்
    காவியம் கொட்டும் களிப்பு….!

    ‘’நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட
    ஐயம் அகன்றதும் ஆதரவாய் -கையைப்
    பிடித்திழுத்துச் செல்வாள் பரமசுகம் கூட்ட
    படித்ததெலாம் பெண்ணிவள்முன் பாழ்….

    படிகமணி மாலை படிப்புணர்த்தும் ஓலை
    மடிதவழும் வீணை, மருங்கின் -பிடிபடாமை
    கோலத்தை நெஞ்சிருத்தி கும்பிடுவோர் முன்வாழ்த்தாம்
    வேலொத்து பாய்ச்சும் வசவு….!
    ”சங்கரன் முன்செல்ல சாரதை பின்செல்ல
    துங்கையின் தீரத்தில் தேவிதன்,ச -தங்கையின்
    சத்தம் குறைந்திட சத்குரு பார்த்திட
    வித்தை சிருங்கேரி வாய்த்து”….கிரேசி மோகன்….!

    ’’வஸந்தருது கேசவ், வரைந்த விதத்தில்
    அஸந்தயென் மூளைக்குள் அன்னம்(அன்னமயகோஸம் -ஆன்மா)-பிஸைந்தூட்டு-
    பாரதி சாலப் பரிந்துநீ ,பஞ்சமியில்,
    வேறெதிர் பார்ப்பெலாம் வீண்’’….கிரேசி மோகன்….!

     

    Share
  • வாணியைச் சரண்புகுந்தேன்!

    இசைக்கவி ரமணன்

    விடையற்ற கேள்விகளின் வெளிச்சப் புள்ளி`

    –கவிஞர் ஹரிகிருஷ்ணன்

    கால மயக்கம்

    எது வேத காலம் என்னும் ஏகோபித்த முடிவு இன்னும் ஏற்படவில்லை. பண்டிதர்கள் ஒருவர்க்கொருவர் மாறுபடுவது ஒருபுறம் இருக்கட்டும். ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆராய்ச்சியை அரசியலும், மதங்களும் ஆளும்படி விட்டுவிட்டார்கள். அதனால் அவர்களில் ஒருவர் கூறுவதை இன்னொருவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து நிலவும் இந்தப் பெருங்கூச்சலின் நடுவே, நமக்குச் சற்றேனும் தெளிவாகத் தெரியும் தகவல்கள் இருக்கத்தான் செய்கின்றன:

    1. ரிக்வேதம் கி.மு. 1600 ஐச் சேர்ந்தது என்றார்கள். துவாரகையில் மேல்மட்டத்தில் நடந்த ஆராய்ச்சியே அந்தக் கண்டுபிடிப்புகளை கி.மு. 1200 என்று தேதியிட்டது. மொத்தம் ஏழு மட்டங்கள் உள்ளன. அதில், இந்தக் கூற்று, மேல்மட்ட ஆராய்ச்சியால் வந்த கண்டுபிடிப்பு! அப்படியானால், ரிக் வேதத்திற்கும் துவாரகைக்கும் இடைப்பட்ட காலம் 400 ஆண்டுகள்தானா? என்ன பிதற்றல் இது?

    2. மஹாபாரதத்தின் காலம் கி.மு. 2550 லிருந்து கி.மு. 3212 வரை என்று கொள்வதற்கான ஆராய்ச்சிப்பூர்வமான தகவல்கள் இருக்கின்றன. அப்படியானால், ராமாயணக் காலம்? 3000 ஆண்டுகளேனும் முந்தியிருக்காதா? ராமன், இக்‌ஷுவாகு குலத்தில் 92 ஆவது அரசன் என்று ஒரு கணிப்பும் 62 ஆவது அரசன் என்று ஒரு கணிப்பும் இருக்கிறதென்று கேள்விப்படுகிறோம். அவனுக்குப் பல தலைமுறைகள் முன்பு ஹரிச்சந்திரன் ஆண்டான் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். ஹரிச்சந்திரன் காலத்திலேயே, காசி, உலகத்திலேயே மிகப் பழமையான நகரமாகக் கருதப்பட்டிருக்கிறது. எனில் திலீபன் காலம் எது?

    3. ரிஷிகள் சரஸ்வதி நதியின் கரையில்தான் வாழ்ந்தார்கள் என்றும், புவியியல் மாற்றங்களால் அந்த நதி புதையுண்டு போன பிறகு, அவர்கள் சிந்து நதிக்கரைக்குப் புலம் பெயர்ந்தார்கள் என்றும், அதன்பின் கங்கைக் கரைக்கு வந்தார்கள் என்றும் கேள்விப்படுகிறோம். இதில் சிந்து சமவெளி நாகரிகத்தின் காலமெது? உயர்ந்த நாகரிகத்தைக் கடைபிடித்த அந்த மனிதர்கள் என்ன மொழி பேசினார்கள்? தெரியவில்லை. பாண்டங்களில் கிடைத்த சித்திரச் சின்னங்கள் இன்னும் புதிராகவே தொடர்கின்றன.

    4. ஒரு சமூகம், ஒரு குறிப்பிடத்தக்க நாகரிக நிலையை எய்துவதற்கு எத்தனை நூற்றாண்டுகள் பிடித்திருக்க வேண்டும்?

    இவற்றையெல்லாம் மனதில் வைத்துப் பார்க்கும்போது, வேத காலம் என்பது குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று நாம் கொள்ளலாம்.

    சரஸ்வதி யார் அல்லது என்ன?

    அவள் நதியா? இல்லை, அறிவின் தாயா? என்ற சர்ச்சையில் இன்னும் பண்டிதர்கள் ஈடுபட்டிருக்க, `அவள் இரண்டும்தான்` என்று என் குருநாதர் சொன்னதால் என்னைப் பொறுத்தமட்டில், அவர் வாக்கே இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி, அல்லது, ஹரி சொன்ன `வெளிச்சப் புள்ளி.`

    ரிக்வேதம் சரஸ்வதியைப் பற்றிப் பாடும் ஸுக்தங்களை மேலோட்டமாகப் பார்த்தால் அவை ஒரு நதியை வர்ணிப்பது போலவும், உள்ளாழ்ந்துப் பார்த்தால் அவை ஒரு தெய்வ சக்தியைக் குறித்துப் புகழ்வது போலவும் தோன்றுகிறது என்கிறார்கள் பெரியோர்.

    நதியை ஒரு பக்கத்தில் விட்டுவிட்டு, தேவியைப் பார்ப்போம்!

    சரஸ்வதி என்பது சத்தியம் என்னும் செம்பொருளிலிருந்து இறங்கிவரும் ஓர் ஊக்கத்தின் சக்தி. அது மாமுனிகளின் சித்தத்தில் தெளிவான ஞானமாக தரிசனமாகிறது. அந்தத் சித்தத்திலிருந்துதான் வேதக் கவிதைகள் வெளிப்பட்டன. சத்திய தரிசனம் கண்டவனே ரிஷி. ரிஷி என்றாலே காண்பவன் என்று பொருள். ரிஷியே கவி. சத்தியத்தின் வெளிப்பாடே கவிதை. அறியாமையே அனைத்துப் பாவங்களுக்கும் காரணம். ரிஷிகளின் கவிதையே அந்த அறியாமையைக் களையும் மருந்து. ஆம், சத்தியமே, அவித்தைக்கு முறிவு.

    சரஸ்வதி ஆனந்தமான உண்மைகளைத் தூண்டுபவள். (ஸுன்ருதானாம் சோடயித்ரி) சித்தத்தில், சத்தியத்தின் முறையான மனனங்களை விழிக்கச் செய்பவள். (சேதந்தி சுமதினாம்) அனைத்து எண்ணங்களையும் அல்லது புத்தியை (திய) ஒளிதிகழச் செய்கிறாள். (விராஜதே)

    ஸுக்தம் குறிப்பிடும் ஸமுத்ரம் கடல் அல்ல, அது இதயத்தில் கொழிக்கும் இறைவெள்ளம். ஆம், ஸமுத்ரத்திற்கு முன் ஹ்ருத வருகிறது. பின்பு, க்ருத அதாவது தெளிவு வருகிறது.

    குறைந்தது இரண்டு விதமாகப் பொருள்கொள்ளும்படி விளங்குகிறது வேதத்தின் பாஷை.

    வாக் தேவி:

    சத்தியத்தைக் கேட்கச் செய்யும் சக்தி சரஸ்வதி. சத்திய ரீங்காரமே ஸ்ருதி எனப்படுகிறது. வாக் என்பது பேச்சல்ல!

    தீயென்றால் காடெரியத் தேனென்றால் பூமகிழ

    வாய்நின்ற பேரருளே வாக்கு

    நாம் பேசுவது பேச்சு. ரிஷிகளின் பேச்சு வாக்கு. `மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்,` என்றான் பாரதி. அது வாக்கு. ஏன்? அது உச்சத்தில் இருக்கும் சத்தியம் என்னும் பிரக்ஞையிலிருந்து வருவது. மாமுனிகளின் மூலம் மந்திரங்களாக வெளிப்படுவது. மகத்தான செயல்களை நொடியில் செய்வது.

    பவபூதி சொல்வதைக் கேட்போம்:

    `எத்தனை நல்ல மனிதர்கள் என்றாலும், அவர்களுடைய பேச்சு என்பது, அவர்கள் மனதில் ஏற்கனவே இருக்கும் எண்ணங்களுக்கு ஏற்பவேதான் இருக்கும். ஆனால், ஒரு முனிவரின் வாக்கு என்பது அவருடைய மனதிலிருந்து வருவதில்லை. அது எல்லாவற்றுக்கும் மேலான சத்திய சித்தம் என்னும் தளத்திலிருந்து நேரடியாக வருவது. அப்படி அது வெளிப்படும்போது, அந்த முனிவரைச் சுற்றியுள்ள சூழல் அல்லது உலகத்தையே மாற்றவல்ல ஆக்கசக்தி வாய்ந்ததாக அது விளங்குகிறது. அது அறியாமையை அழிக்கவல்லது.“

    இதையே ஸ்ரீ அரவிந்தர் வாயிலாகக் கேட்போம்:

    `சத்தியம் என்பது நம்மை ஒளியாய், அல்லது ஒளியின் குரலாய் வந்தடைகிறது. அது நம் புத்தியில் ஒரு மாறுதலை நிகழ்த்துகிறது. நம்மிலும் நம்மைச் சுற்றிலும் ஒரு தெளிவை வலிந்து வழங்குகிறது. எண்ணத்தில் நின்ற சத்தியம், காட்சியாய் விரிகிறது. அந்த சத்திய தரிசனம் ஆன்ம சத்தியமாய் நிலைபெறுகிறது. அதுவே உணர்ச்சி, புத்தி, செயல் யாவற்றையும் சத்தியத்தின் புறப்பாடாகவே ஆக்கிவிடுகிறது. இதுவே வேதத்தின் ஜீவக் கோட்பாடு.“

    சரஸ்வதீ ஸுக்தம் (இலா, சரஸ்வதி, பாரதி:)

    சரஸ்வதி என்னும்போது, ரிக்வேதம் இலா, சரஸ்வதி, பாரதி என்னும் மூன்று தெய்வங்களைச் சேர்த்தே கொண்டாடிப் போற்றுகிறது. மஹி என்னும் பெயரும் உண்டு. மஹியும் பாரதியும் ஒன்று என்பர் பெரியோர். மனுவின் பிள்ளை இல பெண்ணாகி இலாவானான் என்று புராணக் கதை ஒன்று உண்டு. ஆனால், இந்த மூன்று தெய்வங்கள், சத்திய வேள்வியில் ஈடுபட்டிருப்பவனுக்கு பார்வை, கேட்டல், மற்றும் விரிவு மூன்றையும் வழங்குகின்றனர். பாரதி என்பவள் அகண்ட பிரகாசம். இலா, அவ்வொளியின் அகண்டத்திற்கு ஏற்பவே, அதைச் சித்தத்தில் ஒளியாக்கித் தருபவள். ஊக்கத்தைத் தரித்தவளான சரஸ்வதி, அந்த ஒளியை, அதாவது சத்தியத்தைக் கேட்கச் செய்கிறாள்! இந்த சக்திகளெல்லாம் பார்க்கக் கூடிய வடிவில் தெரிபவை!

    மங்கலமான சத்தியங்கள் மண்டிக் கிடப்பவள்

    மனதில் ஆனந்த எண்ணங்களை விழிப்புறச் செய்பவள்

    அந்த சரஸ்வதி இந்த வேள்வியை ஏற்கட்டும்!

    (சோதயித்ரி ஸுந்ருதானாம் சேதந்தி ஸுமதீநாம்

    யக்ஞம் ததே ஸரஸ்வதீ! 1:3:11)

    சித்தத்தில் தரிசனத்தைச் சிந்திக்கும் வண்ணம் நிகழவைத்து

    சத்தியமாம் பெருவெள்ளத்தை விழிப்புறச் செய்பவள் சரஸ்வதி

    அத்தனை எண்ணங்களையும் ஒளியுறச் செய்கிறாள்1

    (மஹோஅர்ண: ஸரஸ்வதீ ப்ரசேத்யதி கேதுனா

    தியோ விஸ்வா விராஜதி 1:3:12)

    தூய்மை நல்குபவள் சரஸ்வதி. நிறைவால் நிறைந்திருப்பவள். சித்தத்தில் ஞானமாய்ச் செழித்திருப்பவள். நம் வேள்வியை ஏற்பளாக!

    (பாவகா ந: ஸரஸ்வதீ வாஜேபிர் வாஜினீவதீ

    யக்ஞம் வஷ்டு தியாவசு: 1;3:10)

    நிறைவால் நிறைந்திருப்பவள். செழுமையின் ஆற்றல் மிகுந்தவள், சித்தத்தில் ஞானத்தைப் பாதுகாப்பவள், எங்களைக் காப்பாற்றட்டும்!

    (ப்ரணோ தேவீ ஸரஸ்வதீ வாஜேபிர் வாஜினீவதீ

    தீனாம் அவித்ரி அவது 6:61:4)

    வாக் ஸுக்தம் : ரிக்வேதம் 10:125

    இந்த ஸுக்தம், வாக் என்னும் பெண் ரிஷியின் மூலம் வெளிப்பட்டது. வேதத்தில் குறைந்தது 25 பெண் ரிஷிகளைக் காணலாம். அவர்களுள், வாக் என்னும் ரிஷி சிறப்புக்குரியவர். ஸ்ரீ ஸுக்தம் அவர்மூலம்தான் வெளிப்பட்டிருக்கிறது. அதில் அவரே பராசக்தியாக வெளிப்பட்ட அபூர்வ இடம் உண்டு. `ஷுத்பிபாசா மலாம்ஜ்யேஷ்டாம் அலக்‌ஷ்மி நாசயாமி அஹம். `பசி தாகம் போன்ற முன்னர் தோன்றிய அசுத்தங்களை, துர்பாக்கியங்களை நான் விரட்டியடிக்கிறேன்` என்று அம்பிகையே மொழிகிறாள்! அதே ரிக்கின் அடுத்த வரி அம்பிகையை இறைஞ்சுவதாக அமைந்திருக்கிறது!

    அந்த வாக் ரிஷியின் மூலம்தான் இந்த வாக் ஸுக்தமும் வெளிப்பட்டது.

    வாக் என்பது பேச்சல்ல என்று ஏற்கனவே பார்த்தோம். அது சத்தியத்தின் இதயத்திலிருந்து வருகின்ற ஊக்கம். அண்டம் முழுதும் படைப்பில் நீக்கமற நிறைந்திருக்கும் ஆர்வம். அறிவின் ஆக்கத்தின் ஊற்று.

    எனவே. ஸுக்தம், `நான் ருத்திரர்கள், வசுக்கள், ஆதித்யர்கள், மித்ரன், வருணன், இந்திரன், அக்னி, அஸ்வினி தேவர்கள் இவர்களுடன் நடக்கிறேன், தாங்குகிறேன்,` என்னும் போது வாக் என்பதன் பொருள், பெரும் பிரமிப்பில் நம்மை ஆழ்த்துகிறது.

    `உயிர்கள் உண்பதும், காண்பதும், கேட்பதும், ஏன், சுவாசிப்பதும் என்னுடைய சக்தியால். சித்தத்தை என்பால் வைக்காதவர்கள் சிதைவுறுகிறார்கள். யாரை விரும்புகிறேனோ, அவனை வலிவுடையோன் ஆக்குகிறேன். அவனை ரிஷியாய் ஆக்கி, ஞானத்தைத் தந்து, பிரம்மத்தில் நிலைபெறச் செய்கிறேன்.

    ஒரு பெண்மூலம், இந்த மகாசக்தி பேச்சாகவும் வெளிப்பட்டிருக்கிறது என்பது நம்மை வாய்புதைக்க வைக்கிறது.

    மேதா ஸுக்தம்

    `நீ வருவதற்கு முன்னர், வருத்தம் தரும் பேச்சுக்களில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். எங்களை மகிழ்ச்சியுடன் அணுகும் அறிவின் தேவியே வருக! மங்கலமானவளே, மென்மனம் கொண்டவளே, எங்கும் நிறைந்திருப்பவளே வருக! நின் வருகையால், நாங்கள் ஒளி பெற்று, பரம சத்தியத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தும் வல்லமை பெறுவோமாக!` என்றே துவங்கும் இந்த ஸுக்தம் எதைப்பற்றிப் பேசுகிறது என்பதை விளங்கிக் கொள்வது சிரமமாக இல்லை. அறிவார்ந்த உணர்வே மேதா. Conscious awareness! Conscious intelligence!

    `தேவியே! நின்னருள் பெற்றோர் ரிஷியாகலாம். செல்வங்கள் யாவும் பெறலாம். பிரம்ம ஞானம் எய்தலாம். பலவிதமாய்ப் பல்கும் ஐஸ்வரியங்களைப் பெறலாம். எம்மீது மகிழ்ச்சி கொண்டு, அறிவோடு கூடிய செல்வங்களையே அளிப்பாயாக! சரஸ்வதி தேவியின் அறிவு, என்னுள் அருளப்படட்டும்!`

    இவள்தான் வாணி!

    saraswati

    இவள் அறிவுத் தெய்வமல்ல, அறிவின் தெய்வம்! இவளுடைய நாதத்திலிருந்தே படைப்பு. சொல்லப்போனால், இவளுடைய வாக்கே இந்த சிருஷ்டி. எனவே, இவள் தேவதையல்ல, இவளுக்கு மேல் இன்னொரு சக்தி இல்லையென்னும்படி இருக்கின்ற பராசக்தியே இவள்.

    இந்த வாணியைத்தான் பாரதி சரண்புகுந்தான். அதனாலேயே அவனில் பாரதி பூரணமாய்க் குடிகொண்டாள். வேதங்களை நேரடியாகப் பயின்றவன் பாரதி. எனவே, அவன், ஒரு தெய்வத்தைப் பற்றிப் பாடினால் அதில் வேதத்தின் சொற்கள், வேதத்தின் பொருள், வேதத்தின் கொள்கை இவை காணப்படுவதில் வியப்பில்லை. சரஸ்வதியைப் பற்றிய, மேற்குறிப்பிட்ட விளக்கங்களை மனதில் வைத்துக்கொண்டு, பாரதியின்,

    ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் – அதை

    அன்னை எனப்பணிதல் ஆக்கம்!

    என்னும் வரிகளை நோக்கும்போது நமக்கு மெய் சிலிர்க்கிறது!

    ..நாதமோ டெப்பொழுதும் –என்றன்

    நாவினிலே பொழிந்திட வேண்டும்…

    கண்மணி போன்றவரே

    அண்மையில் இருந்திடுவீர் – இனி

    அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ!

    என்று அவன் பாடிய பாடல் ஸரஸ்வதி ஸ்தோத்திரம் எனப்படுகிறது. ஆனால் இது வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பாரதி, ஸரஸ்வதி, மஹி, வாக் எல்லோரையும் ஒருங்கே சேர்த்துத் துதிப்பது போலவே இருக்கிறது.

    உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே

    ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்

    கள்ளமற்ற முனிவர்கள் கூறும்

    கருணை வாசகத் துட்பொருளாவாள்

    என்னும் வரிகள் ரிக் வேத விளக்கமாகவே தெரிகின்றன.

    வஞ்சமற்ற தொழில்புரிந்துண்டு

    வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்

    வெஞ்சமர்க் குயிராகிய கொல்லர்

    வித்தை யோர்ந்திரு சிற்பியர் தச்சர்

    மிஞ்சநற்பொருள் வாணிகஞ் செய்வோர்

    வீர மன்னர், பின் வேதியர் யாரும்

    தஞ்சமென்று வணங்கிடுந் தெய்வம்

    தரணி மீதறி வாகிய தெய்வம்..

    இதுவும் வேதக் கொள்கையே! ஸரஸ்வதியைத் தொழில்களோடு இணைத்துப் பார்க்கும் தரிசனம் ஸ்ரீ அரவிந்தருடையது. அவர்தான் பாரதியின் நண்பராயிற்றே! அவர்கள் இதைப் பற்றி விவாதித்திருக்கலாம்.

    வாணி யார்? இதோ பதில்:

    வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்

    ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்

    காணுகின்ற காட்சியதாய்க் காண்பதெல்லாங் காட்டுவதாய்

    மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே தொழுவோமே!

    அறிவுமுத்து மாலையினாள் என்னும் சொற்றொடர் சிந்திக்கத்தக்கது. சனாதன தர்மத்தில் அறிவைப் பேணும் வழக்கம் உண்டே தவிர, அறிவைத் தொழும் வழக்கம் இல்லை. அப்படிச் செய்தல் அறியாமை என்று நம் முன்னோர்களின் முடிவு. ஓர் உபநிடதம் சற்றுக் கடுமையாகவே சொல்கிறது, `அறிவை மதியாதவன் முட்டாள். அறிவை வணங்குபவன் அடிமுட்டாள்,` என்று. ஏன்? அறிவு, ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டும். அதை நாம் ஆள வேண்டும். கருவியை எஜமானனாக்கித்தான் வேதத் திருவிழியாளுக்கு, மிக்க பல்லுரையெனும் கருமையிட்டார்கள் பண்டிதர்கள். அது நம்மை ஆண்டால், நாம் ஆணவத்தின் வசம் இருக்கிறோம் என்றே பொருள். எனில், நம் அறிவு கனியாது, தெளிவடையாது. வேதத்தின் உட்பொருள் காணாது. பேச்சோடு நின்றுவிடும். வாக்கு வராது. இதைத்தான், என்னென்னவெல்லாம் அறிவுகளோ அதை முத்துமாலைகளாக்கி அணிந்திருக்கிறாள் வாணி என்கிறான் பாரதி. பாரதியின் இந்தப் பார்வை அவன் எவ்வளவு உயரமானவன் என்று நமக்குக் காட்டுகிறது.

    அந்த தேவியைச் சிறுவயதில் நேரிலும் கண்டவனாதலின் அவன் அவள் மேல் காதலே கொண்டு `பகற் பேச்சும் இரவிற் கனவும் அவளிடை வைத்த நினைவையல்லால் பிற வாஞ்சையுண்டோ?` என்று கலைமகளிடம் காதல் வயப்பட்டதை வர்ணிக்கிறான்.

    மஹா காளியின் புகழ் பாடப் புகுந்தவன்,

    வேதமாய் அதன்முன்னுள்ள நாதமாய் விளங்குமிந்த

    வீரசக்தி வெள்ளம் விழும் பள்ளம் – ஆக

    வேண்டுநித்தம் என்றன் ஏழை உள்ளம்

    என்று வாணியைத்தானே பார்த்துப் பாடுகிறான்!

    ஒரு கணம்கூட, தான் பேசக் கூடாது. தனது எண்ணம் என்ற ஒன்றிருந்து அது எத்தனை சிறப்பானதாக இருந்தாலும் அது சொல்லாக வெளிப்படுவதில் பாரதிக்கு சம்மதமில்லை. அவளுடைய வாக்கே இவனது நாவினின்று வெளிப்பட வேண்டும் என்பதே அவன் தவம்:

    வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு ளாக விளங்கிடுவாள்

    தெள்ளுகலைத்தமிழ் வாணி நினக்கொருவிண்ணப்பஞ் செய்திடுவேன்

    எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராதென்றன் நாவினிலே

    வெள்ளமெனப் பொழிவாய் சக்தி வேல் சக்திவேல் சக்திவேல்!

    அவள் வெளிப்பட்டால்தான், வேதக்கருப்பொருள் தன்னைப் புறந்தள்ளி வெளிப்பட்டால்தான் அது கவிதை, மந்திரச் சொல், வாழ்ந்த பயன். அல்லவெனில், `நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில்` எறிந்த கதைதான்.

    ஓர் அரிய அக அனுபவத்தை வைக்கிறான், பராசக்தி என்ற கவிதையில். எல்லாமாகி இருப்பவள் பராசக்தி. அவளே கதையும் கவிதையும் சித்திரமும் சிற்பமும் நாடகமுமாய்ப் பல்கும்போது வாணியாகிறாள். காவியம் பாடென்கிறாள் வாணி. தன் கால்களைத் தவிர வேறெதையும் நினைக்காதே என்கிறாள் பராசக்தி. அல்லாடுகிறது மன்றாடும் கவிஞனின் மனம். (கவிதை..)

    இந்த அற்புதக் கவிதையில்,

    சொல்லினுக் கெளிதாக நின்றிடாள்

    சொல்லை வேறிடம் சொல்ல வழிவிடாள்

    என்னும் வரிகள் பராசக்தி, வாணி இருவருக்குமே கச்சிதமாகப் பொருந்தும்! அவர் இருவரல்லவே!

    சரி, வாணியைப் பற்றி இவ்வளவு சேதிகளைத் தெரிந்துகொண்டோம். பாரதிக்கும் பாரதிக்கும் உள்ள பரவசமான பந்தத்தைக் கண்டோம். நமக்கும் வாணியருள் வேண்டுமென்று தோன்றுகிறது. அவளிடம் எதை எப்படிக் கேட்க? கவலையே வேண்டாம், பாரதியின் இந்தப் பாடலைச் சொன்னால் போதும்:

    தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல்

    சிந்திப்பார்க்கே

    களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்

    கண்ணீர்த்

    துளிவர உள்ளுருக்குதல், இங்கிவையெல்லாம் நீயருளும்

    தொழில்களன்றோ!

    ஒளிவளரும் தமிழ்வாணி அடியனேற் கிவையனைத்தும்

    உதவுவாயே!

    இந்தப் பாட்டை, பாஞ்சாலி சபதத்தில் சூதாட்டச் சருக்கத்திற்குக் கடவுள் வாழ்த்தாக வைத்தான்! அறியாமையின் சூதிலிருந்து நம் ஆன்மா தப்பி, அகண்டப் பிரகாசமாகத் திகழவேண்டுமானால், அவளே கதி!

    இறுதியாக, தன்னுடைய ஸரஸ்வதி வணக்கம் என்னும் பாட்டில், வாணிக்கு அழகான வடிவம் தந்து அவளைச் சரணெய்துகிறான்:

    வெள்ளைக் கமலத்திலே – அவள்

    வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்

    கொள்ளைக் கனியிசைதான் – நன்கு

    கொட்டுநல் யாழிசை கொண்டிருப்பாள்

    கள்ளைக் கடலமுதை – நிகர்

    கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே

    பிள்ளைப் பருவத்திலே – எனைப்

    பேணவந்தாள் அருள் பூணவந்தாள்!

    வேதத் திருவிழியாள் – அதில்

    மிக்கபல்லுரை யெனும் கருமையிட்டாள்

    சீதக் கதிர்மதியே – நுதல்

    சிந்தனையே குழலென்றுடையாள்

    வாதத் தருக்கமெனும் – செவி

    வாய்ந்த நற்றுணிவெனும் தோடணிந்தாள்

    போதமென் நாசியினள் – நலம்

    பொங்குபல் சாத்திர வாயுடையாள்

    கற்பனைத் தேனிதழாள் – சுவைக்

    காவிய மெனுமணிக் கொங்கையினாள்

    சிற்பமுதற் கலைகள் – பல

    தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப்பாள்

    சொற்படு நயமறிவார் – இசை

    தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறிவார்

    விற்பனத் தமிழ்ப்புலவோர் – அந்த

    மேலவர் நாவெனும் மலர்ப்பதத்தாள்!

    வாணியைச் சரண்புகுந்தேன் – அருள்

    வாக்களிப் பாளெனத் திடம்மிகுந்தேன்

    பேணிய பெருந்தவத்தாள் – நிலம்

    பெயரளவும் பெயர் பெயராதாள்!

    திருஞான சம்பந்தரோடு அடியார்கள் ஜோதியில் கலந்ததுபோல்

    பாரதியோடு நாமும் வாணியைச் சரண்புகுவோம்!

    Share
  • குருவெண்பா

     

    இசைக்கவி ரமணன்

    1456219253-6062

     

    சிவனே குருவெனச் செப்பிய ஆசான்

    அவனே சிவனென் றறிந்தேன் – தவமே

    அறியா எனையும் அருளால் அணைத்தான்

    வறியன் அடைந்ததே வாழ்வு

    குருவே வெயிலாய்க் கொளுத்தி உறிஞ்சி

    குருவே மழையாய்ப் பொழிவார் – குருவே

    கரத்தைக் கொடுத்துக் கலத்தில் இருத்திக்

    கரையில் இறக்குவார் காண்!

    குருவின் திருவடியைக் கூடுவதும், அன்னார்

    அருளே கதியென் றடங்கி – இருப்பதுமே

    நல்வழி நம்வழி நம்பிக்கை யானவழி

    சொல்வ தறிந்ததிந்தச் சொல் !

    நிலையற்ற வாழ்வில் நிலையான தொன்றே

    கலைகின்ற காட்சி கலையாத தொன்றே

    குலையாமல் காக்கும் குருதேவன் பாதம்

    அலைபாயும் நெஞ்சே அறி

    பரமகுரு வந்தான்! பரிபக்கு வத்தைக்

    கரமதனில் தந்தான்! கலந்தான்! சரமாய்க்

    கவிதைமிகு கானங்கள் நான்பாட வைத்தான்

    செவியாரக் கேட்டான் சிரித்து

    விட்டுவிட்டேன் ஐயா நான் விட்டுவிட்டேன்; தாங்கவில்லை

    பட்டுவிட்டேன் ஐயா என் பாழும் விதியாலே

    தொட்டுவிட்டாய், பின்னே தொடர்ந்துவந்தாய்; போதவில்லை

    சுட்டால்தான் கிட்டும் சுகம்

    உணர்வெலாம் ஒற்றை உயிர்முனையில் கூடித்

    தணலாய்ச் சுடுதே தலைவா! அணைப்பாயா?

    இல்லை அணைப்பாயா? என்குருவே! என்னுயிரே!

    தொல்லைகள் நீங்கத் தொடு

    அன்பே குருதேவா! ஆருயிரே! ஒன்றுமில்லா

    என்மீதும் அன்பாய் இரைக்கும் கருணையென்னே!

    நன்றியன்றி வேறு நலமேதும் என்னிலில்லை

    புன்மைகள் இன்னமும் போயொழிய வேயில்லை

    சென்மத்தைக் காலமென்னும் செல்லரிக்க, அவ்வப்போ(து)

    உன்மத்தம் ஏறி உயிர்சிலிர்க்க, ஓர்கணத்தே

    கன்மம் அழிந்ததுபோல் காண, மறுகணத்தே

    கன்மமே என்விதியாய்க் கட்டி எனைஇறுக்க

    அன்பே!நான் காணும் அனுபவங்கள் யாவினுள்ளும்

    நின்றொலிக்கும் ஆதார நாதவொலி நீயன்றோ!

    உன்முகம் உன்ஸ்வாசம் உன்நினைவு உன்கனவு

    என்றோர் சுருதியில் எல்லாம் நடக்கிறது

    என்கடன் என்தவறு என்சரி என்பொறுப்பு

    என்றேதான் ஏதும் எனக்குண்டோ இங்கினிமேல்?

    நீயே பொறுப்பு நினதே விருப்பு வெறுப்பு, அன்றே

    தீயாய் வினையை எரித்தென்றன் சித்தத்

    திரிமுனையில்

    நீயன்றோ தீயாய் நிமிர்ந்து சுடரலானாய்?

    நினைவின் நிழல்கள் நிசமல்ல என்று

    நினைவு படுத்தி நெருங்கியது நீதானே?

    என்னை முடிப்பதாய் என்றைக்கோ சொன்னாயே?

    உன்முன்னில் ஓர்நாள் உயிருதற நின்றேனே

    அன்றே முடிந்ததாய் மற்றொருநாள் சொன்னாயே?

    என்னாயிற் றப்பா? எதுவும் தவறியதா?

    சின்ன மறதியா? செப்பு! சிரிக்காதே!

    ஏதும் இயலாத ஏழைநான் என்பதிலே

    பேதமின்றி உன்முன்பு பிள்ளையாய் நிற்கின்றேன்

    போதும்வா! உன்னில் பொசுக்கிவிடு! வேறிங்கே

    ஏதும்நான் கோரேன் இனி

    Share
  • படக்கவிதைப் போட்டி (145)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    26696782_1529077903813070_863492715_n
    பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.01.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 105

    மார்க்கோ போலோ அருங்காட்சியகம், வெனிஸ், இத்தாலி

    முனைவர் சுபாஷிணி

    மார்க்கோ போலோ என்ற பெயர் இன்று வணிக நிறுவனங்கள் சில தமக்குச் சூட்டிக் கொண்ட பெயர்களாக உள்ளன. சுற்றுலாத்துறை, உயர்தர ஆடைகள் என சில வணிக நிருவனங்கள் மார்க்கோ போலோவின் பெயரைத் தாங்கி செயல்படுவதை நாம் அறிந்திருப்போம். அந்தப் பெயருக்கு உரிய மார்க்கோபோலோ பற்றிய செய்திகளோடு இந்த அருங்காட்சியகப் பதிவு அமைகின்றது.

    1

    மார்க்கோ போலோ கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வணிகர். இவர் பிறந்து வளர்ந்தது இத்தாலியின் அழகு மிகு நகரமான வெனிஸ் நகரில். ஒரு வணிகராக உலகை வலம் வந்தவராக அறியப்பட்டவர் இவர். தன் சமகாலத்து ஏனைய கடலோடிகளை விட மார்க்கோ போலோ பல வகைகளில் சிறப்பித்துக் கூறப்படுவதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. இவரது பயணத்தில் 24 ஆண்டுகள் முழுமையாக ஆசிய கண்டத்திலேயே தன் வாழ்க்கையைச் செலவழித்திருக்கின்றார். அதுமட்டுமன்றி இவரது பயணக்குறிப்புக்கள் இன்று நம்மில் பலருக்கு ஐரோப்பா மட்டுமன்றி ஆசிய நாடுகளின் வரலாற்றின் சில பகுதிகளை அறிந்து கொள்ள உதவுவனவாக அமைந்துள்ளன எனலாம். மங்கோலிய மாவீரன் குப்ளை கான் தன் ஆளுமைக்குக் கீழ் வைத்திருந்த சீனாவிற்கு வருகை தந்து அங்கு குப்ளை கானின் விருந்தினராகவும் பல ஆண்டுகள் இருந்தார் என்பது மார்க்கோ போலோவுக்குள்ள தனிச்சிறப்பு.

    2

    மார்க்கோபோலோ பிறந்த இத்தாலியின் வெனிஸ் நகரம் ஐரோப்பாவின் வணிக மையமாகத் திகழ்ந்த காலமது. 1254ம் ஆண்டு இவர் பிறந்தார். இவரது தந்தையாரும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் கூட வணிகத்திற்காகச் செல்வது என்று மட்டுமல்லாது நாடுகளைச் சுற்றிப்பார்த்து வருவதை இயல்பாகக் கொண்டிருந்தனர். இவர்கள் குடும்பத்தினருக்கு கான்ஸ்டண்டினோப்பல் (Constantinople), அதாவது இன்றைய துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் ஒரு வர்த்தக அலுவலகம் இருந்தது. மார்க்கோபோலோவுக்கு 15 வயது இருக்கும் போது இவரது தந்தையார் நிக்கோலோவும், இவர் சிற்றப்பா மாஃபியோவும் ஒன்பது ஆண்டுகள் கிழக்கு நோக்கி அவர்கள் சென்றிருந்த பயணத்தை முடித்துக் கொண்டு வெனிஸ் திரும்பியிருந்தனர். இவ்வகை குடும்பப்பின்னணி மார்க்கோபோலோவிற்கு வணிகப் பயணங்களைப் பற்றிய இயல்பான ஒரு அறிமுகத்தை இளம் வயதிலேயே ஏற்படுத்தியிருந்தது.

    3

    ஒன்பது ஆண்டுகள் பயணத்திற்குப் பின்னர் வீடு திரும்பிய மார்க்கோபோலோவின் தந்தையும் சிற்றப்பாவும் ஆசிய கண்டத்தை நோக்கிய பயணத்தைத் திட்டமிட்டனர். இம்முறை ஆசியாவை நோக்கிய பயணமாக இது அமைந்தது. ஆசியப்பயணத்தைத் தொடங்கிய போதே இவர்களுக்குப் பயணம் நிறைவளிப்பதாக அமைந்தது. செங்கிஸ்கானின் மகன் பர்கா கானின் அரண்மனைக்குச் சென்று அங்கு இவர்கள் கொண்டு வந்திருந்த விலையுயர்ந்த ஆபரணங்களைக் காட்டி அவற்றை நல்ல லாபத்திற்கு விற்றனர். அந்தக் காலகட்டத்தில் அப்பகுதியில் போர் மூண்டது. பர்கா கானின் உதவியுடன் அங்கேயே தங்கியிருந்தனர். அந்த வேளையில் இவர்கள் தாத்தார் மொழியைக் கற்றனர். இது இன்றைய ரஷ்யாவின் ஒரு பகுதி. அக்காலகட்டத்தில் செங்கிஸ்கான் கைப்பற்றிய பல பகுதிகள் அடங்கிய பேரரசுக்குள் அடங்கிய ஒரு பகுதி எனலாம். தாத்தார் மொழியையும் பண்பாட்டையும் மார்க்கோ போலோ குடும்பத்தினர் கற்றுக் கொண்டதால் இவர்கள் பயணம் மேலும் எளிதானது. அப்போது சீனாவையும் மங்கோலியப் பேரரசு கைப்பற்றியிருந்தது அதனை குப்ளை கான் ஆட்சி செய்துகொண்டிருந்தார். போலோ சகோதரர்களுக்குத் தாத்தார் பண்பாட்டு அறிமுகம் இருந்தமையால் குப்ளை கானை சென்று காணும்படி சிலர் தூண்டவே, இவர்கள் குப்ளை கானின் அரசவைக்குச் சென்றனர்.

    குப்ளை கானுக்கு ஐரோப்பாவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற பேராவல் இருந்தது. தாத்தார் மொழி தெரிந்த போலோ சகோதரர்களைச் சந்தித்தபோது மேலும் ஐரோப்பாவை அறிந்து கொள்ள இது வாய்ப்பாகும் என அவர் எண்ணினார். மார்க்கோ போலோவின் தந்தையையும் சிற்றப்பாவையும் தனது தூதுவர்களாக நியமித்து வாட்டிக்கன் நகருக்குச் சென்று அங்கு போப்பை சந்தித்து தனக்கு 100 கிறிஸ்துவ பாதிரிமார்களையும், விஞ்ஞானிகளையும் அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொண்டார் குப்ளை கான். நிக்கோலோவும் மாஃபியோவும் குப்ளை கான் கொடுத்த தங்கத் தட்டில் தகவல் பொறித்த ஆவணத்தையும், பயணத்தில் பாதுகாப்பிற்காகக் கொடுத்த சான்றிதழையும் எடுத்துக் கொண்டு 1269ம் தங்கள் நாட்டிற்குத் திரும்பினர்.

    இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது 1271ம் ஆண்டில் இவர்கள் மீண்டும் குப்ளை கானைச் சந்திக்க வெனிஸிலிருந்து புறப்பட்டனர். அப்போது 17 வயது நிரம்பிய மார்க்கோ போலோவையும் தம்முடன் அழைத்துக் கொண்டனர். இப்பயணம் இவரது வாழ்க்கையின் முதல் பயணம் மட்டுமல்லாது முக்கியப் பயணமாகவும் அமைந்தது. குப்ளை கானின் அரசவையில் இவர்களுக்கும் இவர்கள் உடன் வந்த பாதிரிமார்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. மன்னரின் அரண்மனையிலேயே இவர்கள் தங்கினர் என்றும் 25கிமீ தூர அளவிலான வனத்தில் மன்னர் தன் ஓய்வு நாட்களைக் கழித்ததைப் பற்றியும் மார்க்கோ போலோ தன் குறிப்புக்களில் எழுதியிருக்கின்றார். வெனிஸிலிருந்து குப்ளை கான் அரண்மனைக்கு வந்தவர்கள் அங்கேயே 17 ஆண்டுகள் தங்கியிருந்தனர் என்றும் இக்குறிப்புக்களால் அறிய முடிகின்றது. நில மார்க்கமாகப் பட்டுப் பாதை வழியாக முதலில் சென்று, பின்னர் கடல்மார்க்கமாக சீனாவின் ஷங்டு நகரிலிருந்து மீண்டும் தமது பயணத்தை மார்க்கோ போலோவின் குழு தொடங்கியது.

    கடல் பயணத்தின் போது இவர்கள் இந்தியாவின் தமிழகக் கடற்கரையோரப் பகுதிகளில் இறங்கி அங்கு வணிகம் செய்தனர் என்றும் பின்னர் கேரள கடற்கரை துறைமுகப் பகுதிகளிலும் மிளகு போன்றவற்றை வாங்கிக் கொண்டு வெனிஸ் நகரம் திரும்பினர் என்றும் இவரது நூல் குறிப்புக்களும் வரைபடங்களும் ஓவியக் குறிப்புக்களும் குறிப்பிடுகின்றன. ஏறக்குறைய 20,000 கிலோமீட்டர் தூரம் மார்க்கோ போலோவின் ஆசியப் பயணம் அமைந்தது. ஒரு வணிகராக, நாடோடியாக, கடலோடியாக, இவர் தன் வாழ்க்கையை, பயணத்திலேயே பல ஆண்டுகளைக் கழித்திருக்கின்றார்.

    4

    தனது 24 ஆண்டுகள் பயணத்தை முடித்து வெனிஸ் திரும்பிய மார்க்கோபோலோ, வெனிஸ் நகரில் அப்போது ஆட்சி செய்த அரசால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். 1299ம் ஆண்டு விடுதலை பெற்று சிறையிலிருந்து வெளிவந்து வெனிஸ் நகரில் தன் வர்த்தகத்தொழிலை விரிவாக்கினார். அங்கேயே ஒரு பெண்ணை மணந்து அவர்களுக்கு 3 குழந்தைகளும் பிறந்தனர். 1324ம் ஆண்டு தனது 70ம் வயதில் இவர் காலமானார். வெனிஸ் நகரின் சான் லொரேன்சோ தேவாலயத்தில் இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    மார்க்கோ போலோவின் இல்லம் இன்று ஒரு அருங்காட்சியகமாக செயல்படுகின்றது. உலகின் பல நாடுகளில் உள்ள பெரிய அருங்காட்சியகங்களில் இத்தாலிய அரசு தற்காலிக மார்க்கோ போலோ கண்காட்சியையும் ஏற்படுத்தி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    5

    மார்க்கோ போலோவின் நூல் The Travels of Marco Polo அல்லது The Description of the World இவரது இளம் வயது பயணக் குறிப்புக்களுடன் தொடங்குகின்றது. இன்றும் முக்கிய வரலாற்றுத் தகவல்களை வழங்கும் முக்கிய ஆவணமாக இந்த நூல் திகழ்கின்றது. மார்க்கோ போலோ ஐரோப்பாவிலிருந்து ஆசிய பயணம் மேற்கொண்டு சீனாவை அடைந்த முதல் ஐரோப்பியர் அல்ல. ஆயினும், மிக விரிவான பயணக் குறிப்பை விட்டுச் சென்ற ஒரு பயணி என்ற சிறப்புதான் அவரது புகழுக்குக் காரணமாக இருக்கின்றது. இவரது பயணக் குறிப்புக்களையும் வரைபடங்கள் மற்றும் அவற்றின் குறிப்புக்களையும் வாசித்து, அதனால் ஈர்க்கப்பட்டு தான் கிறிஸ்டஃபர் கொலம்பஸ் போன்ற கடலோடிகள் புதிய நாடுகளைத் தேடித் தங்கள் தேடும் பயணத்தைத் தொடங்கினர் என்பதில் சந்தேகமில்லை.

    Share
  • குறளின் கதிர்களாய்…(200)

    -செண்பக ஜெகதீசன் 

    மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
    குடிமடியும் தன்னினும் முந்து. (திருக்குறள்-603: மடியின்மை) 

    புதுக் கவிதையில்… 

    அழித்திடும் சோம்பலை
    ஒழிக்காமல்
    தன்னுள்ளே கொண்ட
    அறிவிலான் பிறந்த குடி,
    அழிந்திடும்
    அவன் அழியுமுன்னே…! 

    குறும்பாவில்… 

    அழிவைத்தரும் சோம்பலை அழித்திடாமல்,
    அகத்தே கொண்ட அறிவற்றவன்
    குடியழியும் அவனுக்கு முன்னே…! 

    மரபுக் கவிதையில்… 

    அகில வாழ்வில் நிலைபெறவே
    -அழித்திட வேண்டும் சோம்பலதை,
    பகையாம் மடியை ஒழிக்காதே
    -பக்க துணையாய்க் கொண்டிருக்கும்
    வகையிலாப் பேதை பிறந்தகுடி
    -வீழ்ந்தே யழிந்து போய்விடுமே,
    தகுதி யில்லா யிவன்தனக்குத்
    -தானே சாவு வருமுன்னே…! 

    லிமரைக்கூ… 

    அழிந்திடும் முதலிலவன் குடி
    அறிவிலா சோம்பேறி அழியுமுன்னே,
    காரணமவன் அழிக்காதுவிட்ட மடி…! 

    கிராமிய பாணியில்… 

    அழிச்சிடு அழிச்சிடு சோம்பல அழிச்சிடு
    அழிவத் தருகிற சோம்பல அழிச்சிடு…

    அழிவத்தரும் சோம்பல அழிக்காம
    அதுனோடயே வாழுகிற
    அறிவுகெட்ட சோம்பேறி
    அழிஞ்சிபோவு முன்னாலே,
    அழிஞ்சிபோவும்
    அவன்பொறந்த குடியெல்லாமே…

    அதுனால
    அழிச்சிடு அழிச்சிடு சோம்பல அழிச்சிடு
    அழிவத் தருகிற சோம்பல அழிச்சிடு…!

     

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே -4

    க. பாலசுப்பிரமணியன்

    பண்பான கல்விக்குப் பாதை எங்கே?

    வாழ்ந்து-பார்க்கலாமே-1-1

    அலைபேசியில் “வாட்ஸ் ஆப் ” மூலமாக வந்த அந்தச் செய்தியை பார்த்ததும் நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டேன். அமெரிக்காவில் வாழும் ஒரு இந்தியச் சிறுவனுக்கு ஒரு வினோதமான வியாதி. அவனுடைய எலும்புகள் வலுவிழந்து அடிக்கடி உடையும் நிலையில் உள்ளன. தன் சக்கர வண்டியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அந்தச் சிறுவன் தனக்கு 130 எலும்பு உடைப்புக்கள் வந்ததாகவும் ஒவ்வொன்றையும் வலுவான மனத்துடனும் நம்பிக்கையுடனும் பயமின்றி ஏற்றுக்கொண்டது மட்டுமின்றி வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பாடல் கற்றுக்கொண்டதாகவும் கூறினான். அவனுடைய தன்னம்பிக்கைக்கு நான் தலைதாழ்த்தி நின்றேன்.

    இங்கிலாந்தில் பிறந்த உலகப் புகழ் பெற்ற இயற்பியல், வானியல்  தத்துவ மேதை ஸ்டீபன் ஹாக்கிங் என்பவருக்கு 76 வயது நிரம்பியுள்ளது. தன்னுடைய உடலில் ஏற்பட்டுள்ள பலவிதமான உபாதைகளால் தன்னுடைய  சக்கர வண்டியில் முடக்கப்பட்டும் அவருடைய ஆராய்ச்சிகள் தடைப்படவில்லை. உலகமே வியக்கும் வண்ணம் பல வானியல் கண்டுபிடிப்புக்களை அளித்துள்ள அவர் கூறுவதென்ன?

    “வாழ்க்கை என்று ஒன்று இருக்கும் வரை நம்பிக்கை என்ற ஒன்றும் உண்டு” “எப்பொழுதும் வானிலுள்ள நட்சத்திரங்களைப் பாருங்கள், காலடியில் இருக்கும் மண்ணை அல்ல.”

    வாழ்க்கையில் பயத்தால் முடங்கிக்கிடந்தால் முன்னேற்றப் படிகளில் அடியெடுத்து வைக்க முடியாது. குழந்தைகளுக்கு பய உணர்ச்சியை ஊட்டி வளர்த்தால் அவர்களுடைய வாழ்க்கை ஒளியிழந்து போகும். பல இடங்களில் வீட்டில் குழந்தைகளைப் பாதுகாக்கும் எண்ணத்தில் அவர்களுக்கு உண்மையான வாழ்க்கையை இழக்கவைத்து விடுகின்றார்கள். குழந்தைகளுக்கு பாதுகாப்புக் கொடுத்து அவர்களைப் பேணுதல் மிக அவசியம். ஆனால் அவர்களை வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்தும், போராட்டங்களிலிருந்தும் கஷ்ட -நஷ்டங்களிலிருந்தும் விலக்கிவைத்து வெறும் பசுமையை மட்டும் காட்டிவந்தால் வாழ்க்கையின் வேனில் பருவத்தில் அவர்கள் துவண்டுவிட வாய்ப்புக்கள் உண்டு. இதைப் பல இடங்களில் நாம் பார்த்திருக்கின்றோம் .

    பயமில்லாத சூழ்நிலையில் குழந்தைகளை வளர்க்கவேண்டும் என்பது ஒரு வரவேற்கவேண்டிய கருத்து. ஆனால் அதே நேரத்தில் தவறுகளை உறுதி செய்யும் சூழ்நிலைகளிலும் வன்முறையை வலுப்படுத்தும் சூழ்நிலைகளிலும் குழந்தைகளை வளர்ப்பது அவர்களுடைய மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களிடம் வன்முறையைத் தூண்டிவிடவும் அதிக வாய்ப்புக்கள் உண்டு.

    கடந்த சில நாட்களில் பள்ளிகளில் நடந்த சில நிகழ்வுகள் நம்மை வேதனைப்பட வைத்துள்ளது மட்டுமின்றி வருங்காலத்தைப் பற்றிக் கவலைப்படவும் வைத்துள்ளன. பள்ளிக்கு விடுமுறை விடுவதற்கான வழியைத் தேடிய ஒரு 14 வயதுப்  பெண்குழந்தை அதே பள்ளியில் ஆரம்ப வகுப்பில் படிக்கின்ற குழந்தையின் கழுத்தை பள்ளிக் கழிவறையில் அறுத்துக் கொன்ற நிகழ்ச்சி. அரியானாவில் யமுனாநகரில் ஒரு தனியார் பள்ளி முதல்வர் மாணவனைக் கண்டித்ததற்காக அந்த மாணவன் தன்னுடைய தந்தையின் துப்பாக்கியை பள்ளிக்கு எடுத்துவந்து பள்ளி முதல்வரைச் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி. சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் வகுப்பறையிலேயே ஒரு ஆசிரியையை மாணவன் கத்தியால் குத்திக் கொன்ற நிகழ்ச்சி. அடுக்கிக் கொண்டே போகலாம். காரணம்? சாதிக்கவேண்டும் என்ற வெறித்தனம், பொறாமை, இயலாமை, பொறுமையின்மை, தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாத மன நிலை … இவ்வாறு வன்முறையில் வாழ்க்கையைக் கற்றுக்கொள்ளும் இளைய சமுதாயம் நாளை இந்த சமூகத்தில் அமைதியை எப்படி நிலை நாட்டும் ?

    அமைதியான பண்பான ஆனந்தமான வாழ்க்கையை உருவாக்க வேண்டிய இடத்தில் நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் ? ஒரு நண்பர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது  “அந்தப் பள்ளிக்கூடத்தில் எனது மகனைச் சேர்க்க வேண்டும் என்று நினைக்கின்றேன். அங்கே முதல் வகுப்பு முதற்கொண்டே மாணவர்களை ஐ ஐ டி மெடிக்கல் போன்ற தேர்வுகளுக்கான பாடங்களை சொல்லிக் கொடுக்கின்றார்களாமே ” என்கிறார். எனக்குச் சிரிப்பதா அல்லது அழுவதா என்று புரியவில்லை. அன்பையும், பண்பையும், மனித நேயத்தையும், தன்னம்பிக்கையையும் சமூக உணர்வுகளையும் வளர்க்க வேண்டிய இந்த நேரத்தில் ஏன் சில பெற்றோர்கள் இதுபோன்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுகின்றார்கள்? வாழ்க்கையில் வெற்றி பெற பல பாதைகள் இருக்கின்றன. எந்தப் பாதையை பின்பற்றினாலும் அதில் முன்னேறி சிறக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டுமே தவிர, அடுத்த வீட்டுக் குழந்தை இதை படிக்கின்றானே என்பதற்காக நமது குழந்தையின் விதியோடு நாம் விளையாடக்கூடாது. இதை ஆங்கிலத்தில் ஒரு மனிதன் “தானாக இருப்பதற்கும் – இன்னொருவனாக ஆவதற்கும்” உள்ள மிகப் பெரிய போராட்டம் என்று எடுத்துரைக்கின்றார்கள். (The Royal conflict between “Being” and “Becoming”)

    இந்த நிலையை மாற்ற நாம் என்ன செய்யவேண்டும்? சற்று யோசிக்கலாமே !

    (தொடருவோம் )

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (91)

    நிர்மலா ராகவன்

    நலம்-1

    இந்த மனிதப்பிறவிக்குத்தான் சிறு பிராயத்திலிருந்தே எத்தனை எத்தனை உணர்ச்சிகள்!

    தன் குட்டித் தம்பிக்காக தாய் செலவிடும் நேரம் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு சலனத்தை உண்டாக்கும். கைக்குழந்தையின் கண்ணைக் குத்தப்பார்க்கும். அல்லது, போர்வையைப் பிடுங்கிக் கீழே எறியும். ஓரிரு முறை இப்படிச் செய்துவிட்டு, `குட்டிப் பாப்பா, பாவம்!’ என்று பிறர் புத்தி சொல்கையில், `ஏதோ தப்பு செய்கிறோம்!’ என்று புரிந்து, பிறரது கையைப் பிடித்து அழைத்து வந்து, தன் தகாத செயலைக் காட்டும்!

    `அம்மாவுக்கு நம்மைப் பிடிக்காமல் போய்விட்டதோ!’ என்று, சொல்லத் தெரியாத கலக்கம்தான் இத்தகைய செயலுக்குக்கெல்லாம் காரணம்.

    பொறாமை இயல்பாகவே ஒருவருக்கு ஏற்படும் குணம்.

    யாரைப் பார்த்துப் பொறாமை?

    அழகு, திறமை, வெற்றி ஆகியவற்றில் ஒன்றோ, இல்லை அனைத்துமோ பெற்று, அதனால் பிறரது பாராட்டையும் பெற்றிருப்பவர்பால் பொறாமை எழுகிறது.

    பிறரது வெற்றியையும் பலத்தையும் பொறுக்காதவர் அவர்களுடைய பலவீனங்களைப் பரப்பி, அல்லது அவர்களைத் தாழ்த்தி, அதில் அற்பசந்தோஷம் அடைகிறார். அதனால் பிறருக்கு ஒரு நஷ்டமும் கிடையாது. அவர்தான் வேண்டாத உணர்ச்சிகளால் நிம்மதியை இழக்க நேரிடும்.

    யார் பொறாமைப்படுகிறார்கள்?

    தம் திறமையை முழுமையாக உணராது, அல்லது பயன்படுத்தும் வாய்ப்பை இழந்தவர்கள்.

    திறமையை வெளிக்கொணராது இருப்பதற்கு எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம் — வசதியின்மை, வளர்த்தவர்கள் ஊக்கமளிக்காது குறை கூறியே வளர்த்தது, ஆண்பிள்ளையைப் பாராட்டி, பெண்குழந்தைகளை ஒடுக்கி வைத்தல் இப்படி. இவ்வாறு வளர்க்கப்பட்டிருந்தவர்கள் தன்னம்பிக்கை குறைய, ஒடுங்கிப்போகிறார்கள். தம்மைப்போல் இல்லாத பாக்கியசாலிகளைப் பார்த்தால் எரிச்சல் எழுகிறது.

    ஏன் பொறாமை வருகிறது?

    `பிறர் அவரையே கவனிக்கிறார்களே!’ என்ற ஆதங்கத்துடன், `அவர் என்னைவிட நிறைய சாதிக்கிறாரே!’ என்ற அச்சமும் ஏற்படும்போது ஒருவருக்குப் பொறாமை எழுகிறது. தன்னையும் பிறர் அப்படி மதிக்க மாட்டார்களோ என்ற அவநம்பிக்கை எழுவதால் வயிற்றெரிச்சல்.

    கதை

    சுமார் நாற்பது வருடங்களுக்குமுன் என் கதைக்குப் பவுன் பரிசு கிடைத்தது. முதல் கதை! பெருமையாக இருந்தது. டாலரை என் சங்கிலியில் கோர்த்து அணிந்து, பள்ளிக்கூடத்திற்குப் போனேன்.

    நம்மில் ஒருத்திக்குப் பரிசு கிடைத்திருக்கிறதே என்று பலரும் மகிழ்ந்து பாராட்ட, “இரண்டு பவுன்தான் இருக்கும்!” என்ற இளக்காரமான குரல் ஒன்று எழுந்தது, ஒரு சக இந்திய ஆசிரியையிடமிருந்து. (தங்கம் மலிவாக விற்ற நாடு இது).

    என் மகிழ்ச்சியை எப்படியாவது குறைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சொன்ன வார்த்தைகள் அவை.

    பரிசு, பரிசுதான். சந்தையில் என்ன விலைக்குப் போகும் என்று நிறுத்தா பார்ப்பார்கள்?

    அவளை யாரும், என்றுமே, இப்படிப் பாராட்டவில்லையே என்ற ஏக்கத்தின் எதிரோலி அது.

    சில சமயம், பல திறமைகளுடன் முன்னேறியிருப்பவர்கள்கூட இதற்கு விதிவிலக்கல்ல.

    `இவர் எவ்வளவு நல்லவர்!’ என்று அவருக்கு மிகவும் தாழ்ந்த நிலையிலிருந்தவர்கள் பூரித்தார்கள். தன்னை எப்படியும் இவர்களால் மிஞ்ச முடியாது என்று கீழே உள்ளவர்களிடம் தனது இயற்கையான நல்ல குணத்தைக் காட்டி நடந்துகொள்வார்.

    அவர்களுக்குத் தெரியாது, அவருக்கும் பிறரது வளர்ச்சியைக் கண்டு பொறாமை மிகும், சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் அவர்களை மட்டம் தட்டுவார் என்று.

    ஒரே மனிதரிடம் இப்படி மாறுபட்ட இரு குணங்களும் இருப்பதில் அதிசயமில்லை.

    கதை

    அவருக்கு வேற்றூரில் பெரிய உத்தியோகம். தீவிர ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொள்வார். நிறைய கட்டுரைகள் எழுதியிருந்தார். ஏழு ஆண்டுகள் மிகுந்த பிரயாசைப்பட்டு என் தொலைபேசி எண்ணை வாங்கியதாகச் சொன்னார். (பத்திரிகைக்காரர்கள் கொடுக்க மறுத்துவிட்டார்களாம்).

    ஒரு முறை நேரில் சந்தித்தபோது, என்னிடம், “நீங்கள் எழுதுவதெல்லாம் அடிக்கடி வெளியாகிறதே என்று நினைத்து மகிழாதீர்கள். பந்தை மேலே, மேலே அடிக்கிறவனே அப்புறம் அதைக் கீழே தள்ளுவான்!” என்று பலமுறை கூறியது ஏனென்று எனக்கு அப்போது புரியவில்லை. ஏன் இதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்ற குழப்பம்தான் ஏற்பட்டது.

    “நான் உங்கள் ரசிகன்!” என்று அறிமுகப்படுத்திக்கொண்டவர், நான் எதை எழுதவேண்டும், எப்படி எழுதவேண்டும் என்று விரிவாகப் போதிக்க ஆரம்பித்தார்.

    “நான் ஒ..ரு கதை எழுதியிருக்கேன்!” என்று என்னிடம் பெருமையாகச் சொல்லிக்கொண்டபோதும், என்னுடன் போட்டி போடுகிறார் என்பது எனக்கு உறைக்கவில்லை.

    `நீங்கள் புரட்சிக்காரர்!’ என்று என்னைப் பழித்தார்.

    அவர் தன் மனைவியை அதிகாரம் செலுத்தி வேலை வாங்குவதைப் பார்த்தேன். அவள் செய்தது எல்லாவற்றிலும் தலையிட்டு, தன் விருப்பப்படி செய்ய வைத்தார்.

    ஆணாதிக்க மனப்பான்மை கொண்டிருந்த அவருக்குத் தன்னைவிட ஒரு பெண் மேல்நிலையில் இருப்பதா என்ற எரிச்சல். தாழ்வு மனப்பான்மை. அதனால் என்னையும் அதே உணர்ச்சிக்கு ஆளாக்கி, கட்டுப்படுத்த நினைத்திருக்கிறார்!

    இந்த மனப்பான்மை இக்காலத்திற்கு ஒவ்வாது என்றும், பெண்களை மதித்து நடத்த வேண்டும் என்றும் நான் பலவாறாக (ஆங்கிலத்தில்) எழுதியதில் அவரது தைரியம் ஆட்டம் கண்டிருக்கவேண்டும்.

    நான் துளிக்கூட மசியவில்லை என்றதும், அவரது உற்சாகம் குன்றிப்போயிற்று.

    எந்தத் துறையானாலும், அதில் முன்னுக்கு வரவேண்டுமானால், யார் சொல்வதையும் காதில் வாங்கிக்கொள்ளக்கூடாது. ஏதோ, நமக்குத் தெரிந்ததை நம்மால் இயன்றவரை செய்கிறோம் என்று சமாதானம் அடைய வேண்டியதுதான்.

    முன்னணியில் இருக்கும் ஓர் அமெரிக்க நடிகையின் உபதேசம்: `வெற்றியில் நாட்டம் இருக்கிறதா? அப்படியானால், உனக்காக உண்மையிலேயே மகிழ்பவர்களைக் காண்பது அரிது’.

    தெரிந்தவர்கள் மட்டுமல்ல, தம்பதியருக்குள்ளும் போட்டி, பொறாமை எழுகிறது.

    அன்பால் அல்ல

    `மனைவி வெளிவேலைக்குப் போகிறாளே, அங்கு பிற ஆண்களுடன் எப்படிப் பழகுகிறாளோ! அவர்கள் தன்னைவிடச் சிறப்பாக இருப்பார்களோ’ என்ற சந்தேகம் எழ, ஓயாமல் அந்த ஆண்களைப்பற்றி ஒருவன் துளைக்கிறான்.

    அன்பை ஏற்று அனுபவித்தால் உண்டாகும் மகிழ்ச்சி அவனுடைய கேள்விக்கணையால் கிடைக்குமா?

    `எனக்கு உன்மேல் மிகுந்த அன்பு!’ என்று சொல்லி மனைவியைச் சமாதானம் செய்கிறான். தன்மேலேயே நம்பிக்கை இல்லாததால் உண்டாகும் சிறுபிள்ளைத்தனம் இது.

    போட்டி மனப்பான்மையால் பொறாமை எங்குதான் எழும் என்று கூறுவது சாத்தியமில்லை.

    கதை

    வித்யா தன் தாயைவிட கல்வி நிலையில் உயர்ந்து, நல்ல வேலையிலும் அமர்ந்தாள். மேற்படிப்புக்கும் அந்த உத்தியோகத்தில் வசதி உண்டு.

    `மகள் தன்னைவிட உயர்ந்த நிலைக்குப் போய்விட்டால் தன்னை மதிப்பாளோ?’ என்ற கலக்கம் தாய்க்கு ஏற்பட்டது.

    “படித்துக்கொண்டே வேலைக்கும் போவதால் உன் ஆரோக்கியம் கெட்டுவிடும். வேலையை விட்டுவிடு!” என்று நச்சரிக்க ஆரம்பித்தாள்.

    குழம்பிய வித்யா, சக ஊழியர்களிடம் தான் வேலையை விட்டு விலகப் போவதாக அறிவிக்க, அவர்கள் அதிர்ந்து, `கிடைத்த நல்ல வேலையை விடாதே!’ என்று எச்சரித்தார்கள்.

    இறுதியில், தாய் சொல்லைத் தட்டாது நடந்துகொண்டாள் மகள்.

    உத்தியோகம் சம்பந்தமான பரீட்சைக் கேள்விகளைப் புரிந்துக்கொள்ள வேலையில் நிலைத்து இருந்திருக்க வேண்டும் என்று காலங்கடந்து உறைத்தது.

    வேலையும் போயிற்று, பரீட்சைகளில் தேர்ச்சி பெறுவதும் கடினமாயிற்று.

    எப்படி வெல்லலாம்?

    தன் வயதொத்த ஒரு சிறுவன் அணிந்திருக்கும் இருவண்ணம் கொண்ட சட்டையைப் பார்த்து, “எனக்கும் இதேமாதிரி வாங்கித் தர்றியா?” என்று கேட்கும் பாலகனுக்குப் பொறாமை இல்லை. தானும் அவன் நிலைக்கு உயரலாம் என்று புரிந்திருக்கிறான்.

    `உனக்கு யாரைப் பார்த்துப் பொறாமை வருகிறதோ, அவரைப்போல் ஆக முயற்சி செய்!’ என் தாய் எனக்களித்த பாடம்.

    நாம் என்ன ஆகவேண்டும் என்று நிர்ணயித்துக்கொண்டு, அந்த இலக்கை நோக்கி நடக்கையில், அதற்கான சாத்தியக்கூறுகள் நமக்குள் ஒளிந்துகிடப்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

    தாழ்த்தாதே, தாழ்ந்துபோகாதே!

    விரைவில் உச்சிக்குச் செல்லும் ஆசையுடன் குறுக்கு வழியில் கால் வைத்து, தன்னைவிட உழைப்பாளிகளோ, அல்லது திறமைசாலிகளோ இருந்தால் அவர்கள்மேல் பொறாமை கொண்டு தாழ்த்த நினைப்பது ஒருவரை இன்னும் சறுக்கத்தான் செய்யும்.

    தொடருவோம்

    Share
  • யுத்தம் செய்யும் கண்கள்..!

     

    ht1396

    =====================

     

    மொத்தநம் அங்கமும் பொய்யுடலில் பொழித்திருப்பின்..

    ……….ஒத்தயிரண்டு கண்களில்லா உருவத்தை ஏற்கமுடியுமா.?

    அத்துணை படைப்புக்குமற்புத உறுப்புண்டாம் அதில்..

    ……….அழகுமிகும் கண்களுக்கே..! அங்கத்தில் முதலிடமாம்.!

    தத்துவமாய்த் தெரிகின்றதோர் ஓவியத்தை உயிரூட்டத்..

    ……….தகும் சான்றொன்று உண்டென்றாலது கண்ணழகேயாம்.!

    வித்தைசெயும் வித்தகன்தன் விளையாட்டை விடுமுன்..

    ……….விழிகளுக் கங்கேயோர் விழிப்பான வேலையுண்டாம்.!

     

     

     

    முத்துக்கோர்த்த பற்களொடு முல்லையிதழ் சிரிப்பொடு..

    ……….மமதைமிகு கன்னியொருத்தி யெதிர்வந்தால்!.காளையர்..

    ரத்தநாளமும் கொதிக்குமவர் கண்களும் யுத்தம்செய்யும்..

    ……….முத்திநெறி பக்தியெல்லாம் பஞ்சுபோலப் பறந்தோடிடும்.!

    அத்தியாயம்போல…காதல்சரிதத் தையங்கே துவக்கும்..

    ……….அத்திரப் பிரயோகம்போல காதலுணர்வு ஆர்ப்பரிக்கும்.!

    யுத்தம்செயும் யுத்தவீரனின் கூர்வாளும் சிவந்தவிழியும்..

    ……….யுத்தகளம் நோக்காதந்த யுவதியின்கண் சாய்ந்துவிடும்.!

     

     

     

    உறங்காமல் கண்விழித்து..கண்ணழகி மனைவியின்கண்..

    ……….ஒளிகாக்க உச்சிவெயிலில் குடைபிடித்தான் ஒர்மறவன்.!

    உறங்காவில்லி தாசனெனும் உத்தமவீரனாம்! ஒப்பிலாத..

    ……….உறையூர் மன்னன்மெய் காப்பாளனென ஊரரிவான்.!

    உறவாடுமுற்ற துணையாமவன் மனைவியின் கண்ணே..

    ……….உலகுபோற்றும் பேரழகென ஊரெங்கும் உலாவருவான்.!

    துறவறம்பூண்ட இராமனுச முனிவனுமிதைப் பார்த்தான்..

    ……….திறன்வீரனிடம்…இதைவிடப் பேரழகு? உண்டென்றான்.!

     

     

     

    யுத்தம்செயும் கண்களில் கனல்நெருப்பைக் காணும்படி..

    ……….வெறித்தவீரனும் தன்வெறுப்பை முனிமீது யுமிழ்ந்தான்.!

    மொத்தயுலகமும் திரண்டு வந்தாலுமென் மனைவியின்..

    ……….முத்தான அவள்கண்ணே அழகென்றான்!வழக்காடினான்.!

    மெத்தனத்தால் மெய்யறியாத மெய்க்காப் பானவனுக்கு..

    ……….மெதுவாய்ப் புரியவைத்தார்! பெரும்பூதூர் மாமுனிமகான்.!

    அத்துணைபேரும் அறிந்த அழகான கண்ணென்றாலது..

    ……….அத்தன் அரங்கனுடைதென அறியவைத்தார் உலகுக்கே.!

     

    =================================================

    நன்றி கவிதைமணி வெளியீடு::14-01-18

    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • முன்பு விஞ்ஞானிகள் யூகித்த கரும்பிண்டம், கரும்சக்தி இல்லாத ஒரு மாற்றுப் பிரபஞ்சம் பற்றிப் புதிய ஆராய்ச்சி

    Posted on January 20, 2018

     

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++

     
    +++++++++++++++++++++++++++++
    unnamed (1)

     

    பல்வேறு ஒளிமந்தைகள்

    +++++++++++++++++

    பிரபஞ்சத்தின் ஊழ்விதியை
    வரையப் போவது
    புரியாத கருமைச் சக்தியா ?
    விரைவாய்க் குடை விரிக்கும்
    பிரபஞ்சத்தைக்
    கருஞ்சக்தி
    உருவாக்குமா அல்லது
    முறித்து விடுமா ?
    ஒளிமந்தைகளின்
    ஈர்ப்பு விசைக்கு எதிராய்
    விலக்கு விசைபோல்
    கலக்குவது, கரும்விசையா ?
    காலவெளிக் கடல் அலையில்
    விண்வெளியின்
    உண்மை நிறம் கருமையா ?
    ஆழியைச் சுற்றிக்
    கோள்கள் படைக்கும்
    காலக் குயவனின்
    களிமண் கட்டிகள்
    கருமைப் பிண்டமா ?
    இருந்தும், இல்லாத கரும்பிண்டமும்
    கருஞ்சக்தியும், மெய்யாக
    இருக்க வில்லையென
    இப்போது சவால் விடுகிறார் !
    இது நிஜமா ? அது நிஜமா ?
    புது யுகத்தில் !
     
     
    +++++++++++++++
     

    மர்மக் கரும்விசை விரிக்கும் பிரபஞ்சம் 

    +++++++++++++++

    1998 ஆண்டுக்கு முன்னால் “கருமைச் சக்தி” என்னும் ஓர் விஞ்ஞானக் கருத்தை யாரும் கேள்விப்பட்ட தில்லை !  கருமைச் சக்தி என்பது அண்டங்களின் ஈர்ப்பு விசையைப் (Gravity) போல ஒருவித விலக்கு விசையே (Anti-Gravity) ! அது முக்கியமாகக் காலாக்ஸிகளின் [ஒளிமந்தைகள்] நகர்ச்சியைக் கட்டுப்படுத்து கிறது.  அத்துடன் காலாக்ஸிகளின் வடிவங்களைச் சிற்பியைப் போல் செதுக்கி, அவை ஒன்றையொன்று மோதிக் கொள்ளாத வாறு அவற்றுள் இடைவெளிகளை ஏற்படுத்திக் கொண்டும் வருகிறது.
     
    கிரிஸ்டொஃபர் கன்ஸிலிஸ்  (வானோக்காளர், நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகம்)
     
     
     
    20 ஆம் நூற்றாண்டுப் பிரபஞ்ச விளக்கமும் ஐயப்பாடும்.
    இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகள் ஊகித்த பிரபஞ்சம் ஐன்ஸ்டைன் பொது ஒப்புமைச் சமன்பாடு [Einstein’s Equation of General Relativity], நியூட்டனின் அகிலவியல் ஈர்ப்பியல் கோட்பாடு [Newton’s Universal Gravitation], துகளியல் இயக்கப்பாடு  [Quantum Mechanics] விதிமுறைகளை உறுதிப்படுத்துபவை.  பலரும் ஒப்புக் கொண்ட தற்போதைய மாடல் “பெருவெடிப்புக்குப் பிறகு விரிவாகுவது பிரபஞ்சம்” என்பது.  இந்த மாடலில் ஓர் ஆரம்ப நிலைக் கோட்பாடு எடுத்துக் கொள்ளப் படவில்லை என்பது என் கருத்து என்று கௌரவப் பேராசிரியர், டாக்டர் ஆன்ரே மேய்தர் [Andre Maeder] [Dept of Astronomy in UNIGE’s Faculty of Science] கூறுகிறார்.
    அவர் சொல்ல வருவது : சூன்ய வெளிப் பரிமாண மாறாமை [Scale Invariance of the Empty Space].  அதாவது  சூன்ய வெளியும் அதன் விரிவுக்கு அல்லது சுருக்குக்குப் பிறகு பண்பாடுகள் ஒருபோதும் மாறுவதில்லை  [The empty space and its properties do not change following a Dilation or Contraction].  மேலும்  ஆன்ரே மேய்தர் குறிப்பிடுவது, சூன்யவெளிப் பரிமாண மாறாமை மின்காந்த அடிப்படை நியதியிலும் உள்ளது என்று. 
     
     
     
     
    சூன்யவெளிப் பரிமாண மாறாமை என்றால் என்ன ?
     
     
    டாக்டர் ஆன்ரே மேய்தர் சொல்கிறார் : பெருவெடிப்பு போன்ற மாபெரும் வெடிப்புகளின் பண்பாடுகள் மாறாது இருப்பது போல், விண்வெளியின் உள்ளணிக் கட்டமைப்பும் [Lattice Structure of Space]  மாறாமல் அமைந்துள்ளது.   அப்போது நவீன பிரபஞ்சவியல் பௌதிகம் கரும்பிண்டம், கரும்சக்தி இருப்பதாக ஊகிக்கப் படுகின்றன.   மாபெரும் வெடிப்பில் உள்ளணிக்குள்ளே விரிவும், சுருக்கமும் உண்டாகலாம்.  கரும் பிண்டமும், கரும்சக்தியும் ஒளிமந்தைகள் [காலக்ஸிகள்]  விண்மீன்கள் நகர்ச்சிக்குக் காரணமாக இருக்கின்றன.  1998 ஆண்டுகளில்தான் ஒளிமந்தைகள் விரைவு வேகத்துக்கு கரும்சக்திதான் ஆதாரமாக இருக்க வேண்டும் என்று கண்டு பிடித்தார்.
    சூன்யவெளிப் பரிமாண  மாறாமைக் கோட்பாடின்படி, பிரபஞ்ச விரிவும், வேகத் துரிதமும் ஏற்கனவே இருப்பதால், கரும் பிண்டமும், கரும்சக்தியும் விண்வெளியில் இருக்க முடியாது என்று ஆன்ரே மேய்தர் தன் புதிய கருத்தைக் கூறுகிறார்.
    [தொடரும்]
     +++++++++++++++++++++
    fig-1d-energy-distribution-of-the-universeஇந்த பௌதீக உலகத்திலே மர்மத்தைத் தாண்டிச் சென்று குறிப்பிடாத ஒரு மர்மம் இல்லை !   அனைத்து அறிவுப் பாதைகளும், நியதிகளின் தனி வழிகளும், சிந்தனை யூகிப்புகளும், முடிவிலே மனித மகத்துவம் தொட முடியாத ஒரு பிரதமக் கொந்தளிப்பை (Primal Chaos) நோக்கிச் செல்கின்றன.”
     
    லிங்கன் பார்னெட் (பிரபஞ்சம் & டாக்டர் ஐன்ஸ்டைன் என்னும் நூலில்)
    பிரபஞ்சம் உப்பி விரியும் போது, காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன!   அதை வேறு விதமாகக் கூறினால், காலாக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது !   அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது !    அது சோப்புக் குமிழிபோல் உப்பிக் கொண்டே போகும் ஒரு பெருங்கோளம் !
     
    அமெரிக்க வானியல் மேதை,  எட்வின் ஹப்பிள்
     
     

    பிரபஞ்சத்தை விரித்துச் செல்லும் புரிந்தும் புரியாத புதிரான குதிரைச் சக்தி !
     
     

    இருபதாம் நூற்றாண்டின் அற்புத விஞ்ஞானக் கண்டுபிடிப்பு, புரிந்தும் புரியாத புதிரான கருஞ்சக்தி.    1990 ஆண்டின் ஆரம்பத்திலேதான் பிரபஞ்சம் விரிந்து செல்கிறது என்பது சற்று உறுதியாக அறியப் பட்டது.   கருஞ்சக்தியின் திரட்சி [Dark Energy Density] பிரபஞ்ச விரிவைத் தடுத்து மீள் முறிவை (Expansion & Recollapse) நிறுத்தும் அளவுக்கு ஆற்றல் உடையது.   அதுபோல் கருஞ்சக்தியின் சிறிதளவு திரட்சியும் பிரபஞ்ச விரிவைத் தொடர்ந்து நீடிக்கவும் தகுதி கொண்டது.   ஆயினும் காலக்ஸி ஒளிமந்தைகளின் ஈர்ப்பு விசைகள் கருஞ்சக்தியின் பிரபஞ்ச விரிவாக்கத்தைக் குன்றச் செய்யும் என்று சிலரால் சிந்திக்கப் படுகிறது.   இதுவரைக் கருஞ்சக்தி புரியும் பிரபஞ்ச விரிவியக்கம் சிறுக்கவே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.   பிரபஞ்சம் முழுவதும் பிண்டம் [Matter] நிரம்பி, அவற்றின் ஈர்ப்பு விசைகள் ஒன்றை ஒன்றை இழுத்து தம்மிடையே வைத்துக் கொண்டுள்ளன.1998 ஆம் ஆண்டில் உருவான ஹப்பிள் விண்ணோக்கி  [Hubble Space Telescope] தூரத்தில் உள்ள சூப்பர்நோவாவைக் [Supernovae] கண்டு பிரபஞ்சம் இன்றைவிட முன்பு மெதுவாக விரிந்து வந்தது என்று சான்றுகள் தந்துள்ளது !    ஆதலால் அண்டங்களின் ஈர்ப்பு விசைகள்  பிரபஞ்சத்தின் விரிவைக் குன்ற வைக்க வில்லை என்பது தெரிகிறது ;  மாறாகப் பிரபஞ்ச விரிவு நாளுக்கு நாள் விரைவாகி பலூன் போல் ஊதி உப்பி வருகிறது !

    அகிலவியல் விஞ்ஞானிகள் மூன்று வித விளக்கங்களோடு எதிர்கால விளைவுகளை ஊகித்தார்கள்.

    1.   “அகிலவியல் நிலைத்த இலக்கம்”  [Cosmological Constant] என்று இணைக்கப் பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதி முன்பு புறக்கணிப்பான ஐன்ஸ்டைன் ஈர்ப்பியல் நியதி [Einstein’s Theory of Gravity].  இந்த இலக்கே  கருஞ்சக்தியைக் குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்வது.

    2.  விண்வெளியில் பரவியுள்ள ஏதோ ஓர் “சக்தி திரவ இயல் ஆவி”  [Energy Fluid] பிரபஞ்சத்தை விரியச் செய்வது.

    3.   ஐன்ஸ்டைன் ஈர்ப்பியல் நியதி தவறாய் இருக்கலாம்.   பிரபஞ்ச விரிவை விளக்கும் புது நியதி படைக்கப் படலாம்.

    ஆதலால் அகிலவியல் விஞ்ஞானிகள் சரியான கருத்து அறிவிக்க முடியாமல் தற்போது அதைக் கருஞ்சக்தி [Dark Energy] என்று குறிப்பிட்டு வருகிறார்.

    பிரபஞ்சத்தின்  எதிர்காலக் கோர முடிவு  [Cosmic Doomsday]

    மாயா [Maya Forecast] கணித மேதைகள் முன்பு பயங்கரமாய்க் கணித்தபடி இந்த உலகம் 2012  இல் அழிந்து விடும் என்று சொல்ல முடியாது.   ஆனால் அகிலவியல் விஞ்ஞானிகள், கருஞ்சக்தி புரிந்து வரும் தீவிரப் பிரபஞ்ச விரிவின் வரலாற்றை ஆராய்ந்து [using MZ Parameterization] பரிமாண அளவீதப்படி பிரபஞ்சத் தலைவிதியை கணித்துள்ளார்.

    கருஞ்சக்தி, கரும்பிண்டம், கருந்துளை [Dark Energy, Dark Matter, Black Hole] ஆகிய மூன்றும் பிரபஞ்ச விண்வெளியின் பண்பாட்டு உட்பகுதிகள் [Properties of Space] என்று கருதப்படுகின்றன.   விண்வெளி என்பது ஒன்று மில்லாத சூனியப் பிரதேசமில்லை என்று முதன்முதலில் அறிவித்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.   அவை மூன்றைப் பற்றியும்  இப்போதுதான் விஞ்ஞானிகள் ஓரளவு புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.   தற்போதைய விஞ்ஞானக் கணிப்புப்படி  பிரபஞ்சத்தில் 70% கொள்ளளவு பரவியுள்ளது கருஞ்சக்தியே.   அத்தகைய பேராற்றல் படைத்த பெருஞ்சக்தி பிரபஞ்சத்தின் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு மூன்றையும் கட்டுப் படுத்துகிறது.  பலூன் ஊதுவது போல் பிரபஞ்சத்தை உப்பி வரும் கருஞ்சக்தி பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு அதை உடைத்துக் கிழித்து அழித்து விடலாம் என்று ஊகிக்கப் படுகிறது.   சைனாவின் அகிலவியல் நிபுணர் நமது பால்வீதி காலக்ஸி முறிந்து கிழிந்து போக சுமார் 32.9 மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று கணித்துள்ளார்.

    பிரபஞ்சத்தின் தலைவிதியை எழுதப் போகும் கருமைச் சக்தி !

    நமது அகிலாண்ட கோடியின் எதிர்கால முடிவு வரலாற்றைத் தீர்மானிக்கப் போவது புரிந்தும் புரியாத புதிரான கருமைச் சக்தியே (Dark Energy) !  பிரபஞ்சத்தில் கருமைச் சக்தி இருப்பதை நாசா பிப்ரவரி 2003 இல் நிரூபித்துக் காட்டினாலும் அந்த “அகில விசை” (Cosmic Force) இன்னும் புரியாத ஓர் மர்மச் சக்தியாகவே இருந்து வருகிறது.  ஈர்ப்பு விசைக்கு எதிரான விலக்கு விசை இந்தக் கருமைச் சக்தி.  காலாக்ஸியில் உள்ள எண்ணற்ற விண்மீன்கள் தமது கவர்ச்சி விசையால் ஒன்றை ஒன்று இழுத்துக் கொண்டு மையத்தைச் சுற்றி வர நடுவில் உள்ளப் பூதக் கருந்துளையின் அசுரக் கவர்ச்சி விசை அத்தனை கோடான கோடி விண்மீன்களையும் தன்வசம் ஈர்த்துப் பிடித்துக் கொள்கிறது.  பிரபஞ்சத்தில் உள்ள பில்லியன் கணக்கான காலாக்ஸி ஒளிமந்தைகளை ஒன்றை விட்டு ஒன்றை உந்தித் தள்ளி வருவது இந்த கருமைச் சக்தி என்னும் விலக்கு விசையே !  அதாவது பிரபஞ்ச விரிவை முடிவின்றித் தொடர்ந்து இயக்கி வருவது இந்தப் புதிரான கருமைச் சக்தியே !

    fig-3-the-big-rip-of-the-universe

    இந்த முடிவிலா விரிவு நியதி பிரபஞ்சம் முடிவில் ஒரு “பெரும் நொறுங்கலில்” (Big Crunch) சிதைந்து விடும் என்னும் ஒரு கருத்தை முறியடிக்கிறது.  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முதல் ஸ்டீஃபன் ஹாக்கிங் வரை பிரபஞ்சம் ஒருநாள் விரிவை நிறுத்தி ஈர்ப்பு விசையால் திரண்டு உள்வெடிப்பில் (Implosion) முறியும் என்று கருதினார்கள் !  நாசா ஆராய்ச்சியாளர் WMAP “நுண்ணலை வேறுபாடு விண்ணுளவி” (Microwave Anisotropy Probe MAP, Launched in 2001) மூலம் அறிந்ததில் பிரபஞ்சத்தில் “கனல் தளங்கள்” (Hot Spots) இருப்பதைக் கண்டு, பிரபஞ்சம் துரித விரைவாக்கத்தில் விரிவதை (Expansion of the Universe is Accelerating) நிரூபித்தார்கள்.  அதாவது விலக்கு விசையானக் கருமைச் சக்தி மட்டுமே அத்தகைய விரைவாக்கத்தைப் புரிய முடியும் என்பது தெளிவானது !  நமது பிரபஞ்சத்தின் விரிவு மிக வேகத்தில் நிகழ்வதால் ஈர்ப்பு விசையால் இழுத்துச் சிறிதாகி அது நொறுங்கிச் சிதையும் என்னும் அவரது கோட்பாடு புறக்கணிக்கப் படுகிறது.

    fig-1a-path-of-dark-matter

    “இந்த புதிய கோட்பாடு பிரபஞ்சத்தைப் பற்றிய நமது கருத்தை மாற்றிவிடும்,” என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் வானியல் விஞ்ஞானி அந்தோணி லாஸன்பி கூறினார்.  இதை மற்றோர் விஞ்ஞானி இப்படிக் கூறுகிறார் : “ஒரு பந்தை மேல் நோக்கி வீசுவதைப் போன்றது இது.  கவர்ச்சி விசை மட்டும் இருக்கமாயின் மேலே செல்லும் பந்து மெதுவாகி நின்று திரும்பித் தரையை நோக்கி விழும்.  விலக்கு விசை எதிராகத் தள்ளுவதால், பந்து நிற்காமல் தொடர்ந்து விரைந்து செல்கிறது.”  அகிலவியல் விஞ்ஞானிகள் (Cosmologists) நமது பிரபஞ்ச உருவை அளக்க அதனுள் அடங்கிய பிண்ட சக்தியைக் கூட்டிச் சமீபத்தில் வெளியிட்டார்.  அந்த அறிவிப்பின்படி கருமைச் சக்தியே (74%) பெரும்பான்மை யாக உள்ளது.  அடுத்து கருமைப் பிண்டம் (Dark Matter) 22%  மூன்றாவது கோடான கோடி எண்ணிக்கையில் இருக்கும் காலாக்ஸி ஒளிமந்தைகள், வாயுக்கள், தூசி துணுக்குகள், விண்கற்கள் போன்றவை (பரிதி மண்டலத்தின் கோள்கள் உட்பட) : 4%.

    fig-1b-microwave-anisotropy-probe

    ஐன்ஸ்டைன் அறிவித்த அகிலவியல் நிலையிலக்கம் (Cosmological Constant)

    1917 ஆம் ஆண்டில் பிரபஞ்சத்தைப் பற்றி ஐன்ஸ்டைன் ஆக்கிய ஓர் சமன்பாட்டில் அகிலவியல் நிலையிலக்கத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்.  அந்தக் காலத்தில் விரிந்து செல்லும் பிரபஞ்சத்தைப் பற்றிக் கருத்துக்கள் எழவில்லை.  பிரபஞ்சம் நிலையானது. (Universe was Static) அது விரியாதது, சுருங்காதது என்ற கருத்தே நிலவியது. அத்தகைய நிலையான ஒரு பிரபஞ்சத்தையே ஊகித்து பூதகரமான கவர்ச்சி விசையைச் (Gravitational Force) சமன் செய்ய அவர் ஒரு அகிலவியல் நிலையிலக்கத்தைப் பயன்படுத்தினார்.  அதற்குப் பிறகு 1929 இல் அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் தன் தொலை நோக்கியைப் பயன்படுத்தி பிரபஞ்சம் மெய்யாக விரிவதை எடுத்துக் காட்டினர் !  உடனே ஐன்ஸ்டையின் அதை ஒப்புக்கொண்டு தான் “வாழ்க்கையில் செய்த மாபெரும் தவறு (Biggest Blunder of Life) என்று சொல்லிச் சமன்பாட்டிலிருந்து   “அகிலவியல் நிலை யிலக்கத்தை”  நீக்கினார்.  அப்போது ஐன்ஸ்டைன் பிரபஞ்சத்தின் விரிவு விரைவேற்றம் அடைகிறது (Expansion of the Universe is Accelerating) என்பதை அறியத் தவறினார்.

    fig-2-the-three-scenerios-of-the-universe

    நியூட்டனின் இரண்டாவது நியதிப்படி உந்துவிசை = பளுநிறை X விரைவேற்றம் (Force = Mass X Acceleration).  அதைத் திருப்பிக் கூறினால் ஒரு பளுநிறை விரைவேற்றத்தில் நகர்ந்தால் அதை உந்தித் தள்ளுவது ஒரு விசையாக இருக்க வேண்டும்.  அதாவது காலாக்ஸி ஒளிமந்தைகளின் வேகத்தை விநாடிக்கு விநாடி மிகுதியாகச் செய்வது ஒருவித மர்ம விசை என்று கருதப்பட்டது.  ஐன்ஸ்டைன் தவறெனக் கருதிப் புறக்கணித்த அகிலவியல் நிலையிலக்கமே பின்னால் அந்த மர்ம விசைக்குச் சார்பாக எடுத்துக் கொள்ளப்பட்டது.  அந்த நிலையிலக்கமே காலாக்ஸி ஒளிமந்தைகளை உந்தித் தள்ளும் கருமைச் சக்திக்கு விதையிட்டது என்று உறுதியானது !

    பிரபஞ்சத்தைக் கிழிக்குமா கருமைச் சக்தி ?

    1998 ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் ஒரு புதியக் கண்டுபிடிப்பை வெளியிட்டது விஞ்ஞான உலகை அசைத்து விட்டது !  அந்தக் கண்டுபிடிப்பு இதுதான் : ஏதோ ஓர் மர்ம விசை பிரபஞ்சத்தின் விரிவு வீதத்தை விரைவாக்கம் (Accelerating the Rate of Expansion) செய்கிறது ! அந்தப் புதிரான விசைக்குத்தான் “கருமைச் சக்தி” (Dark Energy) என்று பெயர் வைத்தார்.  கருமைச் சக்தியின் உட்கலப்பு (Composition) என்ன வென்று தெரியாவிட்டாலும், அதுவே பிரபஞ்சத்தின் விரிவு வீதத்தை (Expansion Rate) ஆட்சி செய்கிறது என்றும் பிரபஞ்சத்தின் முடிவான தலைவிதியை (Ultimate Fate) நிர்ணயம் செய்கிறது என்றும் தெளிவானது.

    பிரபஞ்சத்தின் விரிவியக்க வீதம் மிகையாகத் துரிதமாகும் போது, கருமைச் சக்தியைச் சார்ந்த “சக்தியின் திணிவு” (Energy Density Associated with Dark Energy) வலுவாகி முடிவிலே அகிலத்தில் ஈர்ப்பாற்றல் பிணைத்துள்ள வடிவண்டங்கள் (Gravitational Objects) எல்லாம் பிளந்து கொண்டு சிதைந்து விடும் என்று சில விஞ்ஞானிகள் கருதுகிறார் !  அதாவது மிகையாகும் துரித விரைவாக்கம் சூரிய மண்டலம் போன்ற உள்ளகக் குழுக்களைப் பிளந்து விடும் என்பது ஒன்று.  உதராணமாக நமது பரிதியிலிருந்து பூமியைப் பிரித்து அதைச் சிதைத்து விடலாம் !  அவ்விதம் சிறுகச் சிறுகச் சீர்குலைத்து இறுதியில் அணுக்களைக் கூடப் பிரித்து விடலாம் ! ஆனால் கருமைச் சக்தி காலாக்ஸி பூதக் கொத்துக்களில் (Galactic Superclusters) ஒன்றை விட்டு ஒன்றைப் பிளக்கும்படிச் செய்யாது என்றும் அவர் சொல்கிறார்.  கருமைச் சக்தியானது பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு முடிவு காலத்தில் சீர்குலைக்கும் இந்த அழிவியல் இயக்கத்தைப் “பெரும் பிளவு” (Big Rip) என்று அந்த விஞ்ஞானிகள் பெயரிடுகிறார் !

    பூதத் தொலைநோக்கியில் பிரபஞ்சத்தை ஆய்ந்த அமெரிக்க விஞ்ஞானி

    அமெரிக்க வானியல் நிபுணர், எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] 1929 ஆம் ஆண்டில் கண்டு பிடித்த விண்வெளி விந்தை பெரு வெடிப்பு நியதிக்கு ஆணித்தரமான சான்றாக ஆனது! வெகு தொலைவு காலக்ஸிகள் [Galaxies] விடும் ஒளிநிறப் பட்டையை [Light Spectrum], சக்தி வாய்ந்த பூதத் தொலை நோக்கி மூலம் ஆராய்ந்த போது, அது செந்நிற விளிம்பை நோக்கிப் பெயர்வதைக் [Redshift, செந்நிறப் பெயர்ச்சி] கண்டார்! ‘டாப்பிளர் விளைவு’ [Doppler Effect] கூற்றுப்படி செந்நிறப் பெயர்ச்சிக் காலக்ஸிகள் ஒன்றை விட்டு ஒன்று விலகி அப்பால் போகின்றன என்று தெளிவாக நிரூபிக்கிறது! மேலும் காலக்ஸிகளின் தூரம் அதிகமாக அதிகமாக, அவற்றின் வேகமும் மிகையாகிறது, என்றும் எட்வின் ஹப்பிள் கண்டுபிடித்தார்.

    கருமைப் பிண்டமும், கருமைச் சக்தியும் (Dark Matter & Dark Energy) பிரபஞ்சப் படைப்பின் கண்ணுக்குத் தெரியாத படைப்பு மூலத்தின் இயக்கக் கருவிகள் !  நியூட்டன் கண்டுபிடித்த ஈர்ப்பு விசை விண்மீனையும் அண்டங்களையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஓர் குறிப்பிட்ட விண்வெளிச் சூழலில் இயக்கிய வண்ணம் உள்ளது.  அதுபோல கருமைப் பிண்டத்தின் அசுரக் கவர்ச்சி விசை காலாக்ஸியில் உள்ள விண்மீன்கள் தமக்குரிய இருக்கையில் இயங்கி எங்கும் ஓடிவிடாதபடி இறுக்கிப் பிடித்துக் கொண்டு வருகிறது.

    பிரபஞ்சத்தில் கருமைச் சக்தி ஆட்சியின் கைத்திறன் !

    காலாக்ஸியின் தோற்றக் கோட்பாடுகளில் இடையிடையே சேராமல் இருக்கும் ஐயப்பாடுகளை இணைக்கும் ஓர் இணைப்பியாக கருமைச் சக்தி எண்ணப் படலாம்.  அவற்றில் ஒரு முடிவு காலாக்ஸிகளின் ஈர்ப்பாற்றல் விரிவைத் தடுப்பதில்லை (Galaxies’s Gravity does not resist Expansion).  சுருக்கமாக விளக்கினால் கீழ்க்காணும் முறையில் கருமைச் சக்தியைப் பற்றிச் சொல்லலாம் :

    1.  கண்ணுக்குப் புலப்படாமல் பிரபஞ்ச முழுமையாக ஓர் அசுர விலக்கு விசையாக (Anti-Gravity Force) ஆட்சி செய்யும் கருமைச் சக்தி “அகில விரைவாக்கி” (Cosmic Accelerator) என்று குறிப்பிடப் படுகிறது.

    2.  பிரபஞ்சத்துக் குள்ளே இருக்கும் பொருட்களின் மீது கருமைச் சக்தி விளைவிக்கும் இரண்டாம் தரப் பாதிப்புகள் (Secondary Effects) என்ன வென்றால் :  பெரும்பான்மை அளவில் பிண்டத்தின் நுண்மை துகள் சீரமைப்பை (Filigree Pattern of Matter) அறிய உதவியது.

    சிறுபான்மை அளவில் ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே “காலாக்ஸி முந்திரிக் கொத்துகள்” வளர்ச்சியை கருமைச் சக்தி நெறித்தது (Choked off the Growth of Galaxy Clusters) !

    3.  மிகச் சிறிய அளவில் கருமைச் சக்தி காலாக்ஸிகள் ஒன்றுடன் ஒன்று இழுத்துக் கொள்வதையும், மோதிக் கொள்வதையும், பின்னிக் கொள்வதையும் குறைத்துள்ளது !  அவ்வியக்கங்கள் காலாக்ஸிகள் உருவாகச் சிற்ப வேலை புரிகின்றன.  கருமைச் சக்தி வலுவற்ற தாகவோ, வல்லமை யுற்றதாகவோ இருந்திருந்தால், நமது பால்மய காலாக்ஸி மெதுவாக உருவாகி இருக்கும் !  அதனால் நமது பூகோளத்தில் நிரம்பியுள்ள “கன மூலகங்கள்” (Heavy Elements) பிணைந்து கொண்டு தாதுக்களாய்ச் சேராமல் போயிருக்கும்.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – What is Dark Energy ? & How Did the Milky Way Galaxy Form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20 Spaceflight Now – Hubble’s Evidence for Dark Energy in the Young Universe (Nov 16, 2006)
    21 Large Synoptic Survey Telescope (LSST) – Dark Energy
    22 The Sydney Morning Herald – Saving the Universe (Feb 11, 2003)
    23 A Mysterious Dark Energy Fills the Universe By : Rhiannon Buck [Feb 12, 2008]
    24 The Newyork Times – Dark Energy Stunts Galaxies’ Growth By : Dennis Overbye [Dec 17, 2008]
    25 The Daily Galaxy – Will Dark Energy Save the Universe ? (Jan 20, 2009)
    26 Astronomy Magazine – Will Dark Energy Tear the Universe Apart ? By : Liz Kruesi (February 2009)

    27  NASA Science : Dark Energy : http://science.nasa.gov/astrophysics/focus-areas/what-is-dark-energy/ (May 18, 2012)

    28  Discover Magazine : http://blogs.discovermagazine.com/cosmicvariance/2011/10/04/dark-energy-faq/ (Oct 4, 2011)

    29  http://universe-review.ca/F02-cosmicbg.htm  (The Observable Universe & Beyond)

    30  http://www.eurekalert.org/pub_releases/2012-07/sicp-dea071112.php  [Dark energy and fate of the Universe]  (July 22, 2012)

    31 Stellar Chemistry : Dark Energy & Fate of the Universe, Staff  Writers, /Beijing, China (July 25, 2012)

    32   http://en.wikipedia.org/wiki/Dark_energy   (July 26, 2012)

    33.  https://www.space.com/8588-dark-energy-dark-matter-exist-scientists-allege.html  [June 13, 2010]

    34. https://phys.org/news/2017-11-dark-energy.html  [November 22, 2017]

    35.  https://gizadeathstar.com/2017/11/space-time-not-scale-invariant-swiss-professor-challenges-dark-matter-new-hypothesis/  [November 26, 2017]

    36.  http://rense.com/general72/exis.htm

    37.  http://www.newsweek.com/dark-matter-dark-energy-new-model-universe-719719  [November 22, 2017]

    38.  https://www.space.com/39001-dark-matter-doesnt-exist-study-suggests.html [December 7, 2017]

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  January 20, 2018 [R-1]

    Attachments area
    Preview YouTube video Do Dark Matter & Dark Energy Exist? by Stephen Hawking – BRILLIANT LECTURE

    Do Dark Matter & Dark Energy Exist? by Stephen Hawking – BRILLIANT LECTURE

    Preview YouTube video Dark matter and dark energy: Do they really exist?

    Dark matter and dark energy: Do they really exist?

    Preview YouTube video DARK ENERGY DOES NOT EXIST. I CAN PROVE IT

    DARK ENERGY DOES NOT EXIST. I CAN PROVE IT
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180121 - Yadava 05 -Ornament -lr The one who was the ornament of the scriptures (Agamabhooshana), the one who is is enquired upon by the sages, became an ornament of the cowherds in Gokula.
    180121 – Yadava 05 -Ornament -lr
    The one who was the ornament of the scriptures (Agamabhooshana), the one who is is enquired upon by the sages, became an ornament of the cowherds in Gokula.

     

    ”ஆரணத்தின்(வேதங்கள்) ஆபரணம், ஆதிமுத லோனவரை
    சாரணர்(முனிகள்) சிந்தைவி சாரிக்கும், -நாரணர்தான்
    அண்ணனாய்க்(துர்காவின் அண்ணனாய்) கைமாறி, ஆக்களை மேய்த்திடும்
    கண்ணனாம் கீதைக் கிளி(கிளிசுகர் பாகவத நாயகர்)….கிரேசி மோகன்….!

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (22)

     

     

    மீ.விசுவநாதன்

     

    பகுதி: 22

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1

    “ஜனகருடன் சந்திப்பு”

    சனகருடை நாட்டிற்குள் சடைமுனியும் சோதரரும்

    தவச்சாலை காணச் சென்றார்

    அனைவருமே கௌசிகரை அன்போடு உபசரித்து

    அவர்களுக்கு இடமும் தந்தார்

    மனமகிழ்ந்து புரோகிதராம் சதானந்தர் சனகரிடம்

    வந்தவர்கள் புகழைச் சொல்ல

    கனகமென ஒளிமுகத்துக் காளையர்கள் பாத்தவர்கள்

    கல்யாண குலத்தைக் கேட்டார் !

    மாமுனியோ இவ்விருவர் மாமன்னன் தசரதரின்

    வரம்பெற்ற பிள்ளை என்றார் !

    காமுகியாம் தாடகையைக் காட்டினிலே வென்றுவந்த

    காலவரம் இவர்கள் என்றார் !

    சேமமுற அகலிகைக்குச் சிறப்பான வாழ்வளித்த

    செங்கதிரோன் இந்த ராமன் !

    நாமுமது வேள்வியுடன் நாள்பட்ட “வில்லையும்”

    நன்றாகக் காண வந்தோம் !

    “விசுவாமித்திரர் வரலாறு”

    அகலிகையின் மகனான “சதானந்தர்” முனிவரது

    அடிபணிந்து அவரின் வாழ்வை

    சுகமாக ராமனுக்குச் சொல்லிடவே ஆரம்பித்தார் !

    “கௌசிகனாம் மன்னன் காட்டில்

    அகத்துள்ளே ஆழ்ந்திருந்த “வசிட்டரது”

    ஆஸ்ரமத்தை வியந்து பார்த்து

    முகத்தினிலே முன்னூறு சூரியனின் ஒளிபெற்ற

    முனிவரடி தொழுது நின்றார் !

    வசிட்டரின் “காமதேனு”

    வசிட்டருமே மன்னரினை வரவேற்று பசரித்தார்

    வயிறார உணவும் தந்தார் !

    பசித்தவர்க்கு உணவளித்த காமதேனு திறம்வியந்து

    பக்குவமாய் அதனைக் கேட்க

    விசித்திரமாய் இருக்குதென வசிட்டரிஷி சொன்னதற்கு

    விசுவாமித் திரரோ கோபச்

    சிசுவாக மாறிவிட்டார்; ரிஷியுடனே

    சினத்தோடு போரும் செய்த்தார் !

    “கெளசிக மன்னன் தோற்றார்”

    போரினிலே வசிட்டர்தான் புகழ்மிக்க வெற்றிகண்டார்!

    புழுங்கினரே விசுவா மித்ரர் !

    நேரிடையாய் மகனுக்கு அரியணையைத் தந்திட்டு

    நிம்மதியாய் தவத்தைச் செய்தார்!

    ஆயிரமாம் ஆண்டுகளாய் ஆழ்ந்திருந்த உள்ளத்தில்

    அரன்தோன்றி அவரை மெச்சி,

    தூயவராம் ராஜரிஷி வேண்டுகையில் ஆயுதங்கள்

    தோன்றுகிற வரத்தைத் தந்தார் !

    மீண்டும்போர் முழக்கமிட்டு வசிட்டரது ஆஸ்ரமத்தை

    விசுவாமித் ரர்தான் தாக்க

    கூண்டோடு அங்கிருந்தோர் ஓடித்தான் ஒளிந்துகொள

    குற்றமிலா பிரும்ம ரிஷியைத்

    தீண்டவந்த அஸ்திரங்கள் தெய்வதண்டம் முன்னாலே

    தீய்ந்துடனே ஓய்ந்து போக

    மூண்டுவிட்ட சண்டையங்கு முடிவுக்கு வந்தாலும்

    முடியாத பகையே மிச்சம்.

     

    (தர்ம சரிதம் வளரும்)

     

    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 50,51,52,53,54,55,56ம் பகுதி நிறைந்தது)

    Share