Blog

  • படக்கவிதைப் போட்டி (146)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    27498021_1549685795085614_956605116_n

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (03.02.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • இனிக்கும் சடங்குகள் – ஒரு மானுடவியல் பார்வை

    -நிலவளம் கு.கதிரவன்

    முன்னுரை :-

    நாம் ஏன் பாரம்பரிய விழாக்களையும், விடுமுறைக் கால கொண்டாட்டங்களையும், பண்டிகைகளையும் kathiravanகொண்டாடுகிறோம்? அவைகள் நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா? இது என்ன கேள்வி என்கிறீர்களா? ஆம். இதுபோன்ற கொண்டாட்டங்களை நாம் பெரிதும் விரும்புகிறோம். அவைகள் நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. என்று கூறுகிறார்கள் மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள். இதைச் சொல்ல எதற்கு ஆராய்ச்சி? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.  இதை நான் சொல்லவில்லை.  அமெரிக்கப் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.  அப்பாடா. ஒரு பிரச்சினை விட்டது.  அமெரிக்கா என்றால் அனைவரும் நம்பிவிடுவார்கள்.

    ஆம். மக்களே. நாம் ஏன் பாரம்பரிய விழாக்களையும், மதச் சம்பிரதாயமான விழாக்கள், விடுமுறைக் காலக்கொண்டாட்டங்களை கொண்டாடுகிறோம்? என்பதற்கான காரணங்களையும், அக் கொண்டாட்டங்கள் தரும் மகிழ்ச்சியினையும் ஆராய்ந்து நமக்கு அளித்துள்ளார்கள் அமெரிக்க பல்கலைக் கழக மானுடவியல் பேராசிரியர்கள்.  விரிவாக கீழே காண்போம்.

    சடங்குகளும், விழாக்களும் :-

    விழாக்கள், கொண்டாட்டங்கள் என்பது பற்றிய எண்ணமே பெரும்பாலான மக்களின் முகங்களில் புன்னகையை அளித்து, இனிமையான எதிர்பார்ப்பு மற்றும் ஏக்க உணர்வுகளைத் தருகிறது.  காரணம் கொண்டாட்டத்தின் போது நடக்கும் கேளிக்கைகள், சிறப்பு உணவுகள் அனைத்தையும் அனுபவிக்கலாம்.

    பொதுவாகச் சடங்குகள் மற்றும் விழாக்கள், அது மத விடுமுறை தினங்களில் கொண்டாடப்படும் விழாக்கள் அல்லது பிறந்தநாள்,திருமணம், போன்ற தனிப்பட்ட விழாக்களாகட்டும் அவைகள் நம் வாழ்வில் முக்கியமான தருணங்களாகவும் அமைந்து, மறக்க முடியாத பதிவுகளாக அமைந்துவிடுவதாகச் சிலர் கூறுவதைக் காணலாம்.

    இத்தகைய கொண்டாட்டங்கள் உணர்ச்சிப் போட்டிகளுடன் வெடித்தாலும், மிகப் பெரும்பாலும் இது பொதுவான நிகழ்வு போன்று இல்லாமல், ஒரு கட்டமைப்புடன், ஈடுபாட்டுடன் மிகவும் ஒழுங்கமைவுடன் அமைவதால் நமது நினைவுகளில் இத்தகைய இனிமையான தருணங்கள் நீடித்த நினைவுகளாக அமைந்துவிடுகின்றன. மேலும் அத்தகைய சிறப்பு நிகழ்வுகளை நாம் நினைவில் வைத்திருப்பதை மதிப்புடையதாகவும் ஆக்குகிறது.

    உண்மையில் குடும்ப விழாக்களுக்கு மதிப்புமிக்க பல காரணங்கள் உள்ளன.  பல்வேறு மனநல நன்மைகளை வழங்கமுடியும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.  நம்மை நாமே அனுபவிக்க உதவுகிறது. அன்புக்குரியவர்களோடும், உறவினர்களோடும் இணைந்து கொண்டாடுவதால் குறுகிய காலஅளவில் கூட நமது கடினமான காலத்திலிருந்தும், மகிழ்ச்சியற்ற மனநிலையிலிருந்தும் விடுபட முடிகிறது.

    கவலையை விட்டொழிக்கும் வழிமுறை :-

    நமது தினசரி வாழ்க்கையானது அழுத்தம் நிறைந்ததாகவும், நிச்சயமற்றதாகவும் உள்ளது.  நாம் சரியாக என்ன செய்ய வேண்டுமென்றால், ஒரு சிறப்பான நேரத்தில் ஒரு செயலைச் செய்து முடித்துள்ள காலம், அதற்கான வழிமுறை, அமைப்பு, கட்டுப்பாடு இகைளைத் திட்டமிட்டு அமைத்துக் கொண்டோமேயானால் வாழ்க்கை நீடித்த, நிலைத்த தன்மைக்கு வசதியாகிறது.

    விடுமுறை மரபு சார்ந்த கொண்டாட்டங்கள், சடங்குகள் வழியாக நமக்கு வாழ்த்துதல்கள் நிறையக் கிடைக்கின்றன.  தொடர்ந்து இத்தகைய கொண்டாட்டங்களை திரும்பத் திரும்ப நிகழ்த்தும்போது, நமது கவலைகளை விட்டொழிக்கும் நம்பிக்கையுள்ள இடமாக இந்த உலகம் மாறுவதாக ஆய்வகச் சோதனையின் மூலம் ஆய்வாளர்கள் அறிந்துள்ளனர்.

    விழாக்கள் என்பது ஆண்டு முழுவதும் மற்ற நேரங்களில் கூட நடக்கின்றன.  ஆனால் ஒரு குடும்ப விழாவாகட்டும் அல்லது விடுமுறைக்  காலத்தில் நண்பர்களோடு இணைந்த விழாக்களாகட்டும் இத்தகைய நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் இணைந்த விழாக்கள் மட்டுமே அவர்களை அர்த்தமுள்ளவர்களாக்குகின்றன.  காரணம் குறிப்பிட்ட இத்தகைய விழாக்களுக்கு மட்டுமே அதிகமான மக்கள் வருட இறுதி நாட்களிலோ அல்லது தேவையான நேரத்திலோ ஒன்று கூடுகின்றனர்.  இதற்காக மக்கள் தூரமான இடங்களில் இருந்து கூட ஒன்று கூடுகின்றனர்.  இதனால் அவர்களுடைய கவலைகளை மறக்கின்றனர். இத்தகைய தருணங்கள் மிகவும் மதிப்புமிக்கதாகவும், மதிப்புமிக்க குடும்ப மரபுகளை மீண்டும் இணைக்க ஒரு வாய்ப்பாகவும் உதவுகிறது.

    சந்தோஷமான குழு உணவு முறை : –

    ஒரு விழா என்றால் உணவு சிறப்பிடம் பெறுவது இயல்பான ஒன்று.  அதிலும் குடும்ப விழா என்றால் சொல்லவே தேவையில்லை.  விழாவிற்கு வந்துள்ள பெண்கள் ஒன்றாகச் சமையல் அறையில் கூடி, பல மணி நேரம் செலவழித்து உணவு தயாரித்து, தயாரித்த உணவினை ஒன்றாக அமர்ந்து உண்டு களிக்கிறோம்.  இத்தகைய குழுவாகச் சேர்ந்து உணவு தயாரித்து உண்ணும் முறையானது, ”வேட்டைச் சமூகத்தின் நமது முதல் மனிதர்கள், தங்கள் வேட்டைகளை நெருப்பிலிட்டு வறுத்தெடுக்க ஒன்றாகக் கூடியதாகவும், இத்தகைய முறைமையே நம் இனங்களில் சமையல் என்ற ஒரு வரையறுக்கும் பண்புகளில் ஒன்றாக உள்ளது” என ஆய்வாளர் கூறுகிறார்.

    இத்தகைய குழு உணவு உட்கொள்ளும்போது பல சம்பவங்களை நினைவுபடுத்திக் கொண்டும், நமது மூதாதையர்களைப் பழைய சம்பவங்களோடு இணைத்து நினைவுபடுத்திக் கொண்டும் உண்கின்றபோது, பினைப்புக்கான வழிகள் மென்மையாகிறது.  சமூகத்தோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.

    அனைத்து கலாசாரங்களிலும் விழாக்கள் உண்டு.  இத்தகைய கலாசாரங்களிலும் உணவு என்பதும், அதை தயாரிக்கும் முறையானதும் சடங்குகளை மையப்படுத்தியே வருகின்றன. உதாரணத்திற்கு யூத பாரம்பரியத்தில் குறிப்பிட்ட உணவானது (கோஷர்) ஜேவிஷ் விதிப்படி தேவைக்கு உரியதை மட்டும்தான் தேர்வுசெய்து தயாரிக்க வேண்டும் எனக் கட்டளையிடுகிறது.  மத்தியக் கிழக்கு மற்றும் இந்தியாவின் பகுதிகளில் வலது கை மட்டுமே உண்பதற்கு பயன்படுத்த வேண்டும். பல ஐரோப்பிய நாடுகளில் ஏழு வருடங்கள் மோசமான பாலினத்தைத் தவிர்ப்பதற்காக ஒரு சிற்றுண்டி செய்யும்போது கண்களை மூட வேண்டியது அவசியம்.

    நிச்சயமாகச் சிறப்புச் சந்தர்ப்பங்களில் நமக்குச் சிறப்பு உணவு தேவைப்படுகிறது.  எனவே பெரும்பாலான கலாசாரங்கள் மிகச் சிறந்த, முக்கிய உணவு வகைகளை மிக முக்கியமான விடுமுறை நாட்களில் பராமரிக்கின்றன.  உதாரணமாக மொரிஷீயஸ் நாட்டில் தமிழ் இந்துக்கள் தைப்பூச காவடித் திருவிழாவின் முடிவில் ஏழு வகையான காய்கறிப் பதார்த்தங்களுடன் கூடிய உணவை பரிமாறிக் கொள்கின்றனர்.  கிரீஸ் குடும்பங்களில் குழுவாகக்கூடி ஓர் இளம் ஆட்டிறைச்சியை முழுதாக கம்பியில் செருகிச் சில இரகசியப் பொருட்களைச் சேர்த்து தீயில் வறுத்து, பரிமாறுகின்றனர்.  இவைகளை நம்மால் வெறும் சமையலாகப் பார்க்க முடியவில்லை. அதையும் தாண்டி இதில் மிகப் பெரிய உளவியலும் உள்ளது.

    ஆராய்ச்சி முடிவுகளின்படி, ஓர் உணவிற்கு முன் ஒரு சடங்கைச் செய்வது உணவு அனுபவத்தை மேம்படுத்துவதாகவும், வெறும் வெற்று கேரட் துண்டுகள் கூட சுவையுடன் இருப்பதாகத் தோன்றும் என ஆய்வு தெரிவிக்கிறது.  மற்ற ஆய்வுகள் உணவுத் தயாரிப்பில் பங்கேற்கும்போது, அவர்கள் உணவை அதிகம் அனுபவிக்கிறார்கள் என்றும், உணவை தயாரிப்பதற்காக நேரத்தை செலவழித்து, உண்டு இன்னும் அதை அதிகமாகப் பாராட்டுகிறார்கள் என்றும், இது நல்ல உணவைத் தயாரித்தல் மற்றும் உண்ணுதல் அனுபவத்தை தருவதாகக் கூறுகிறது.

    பகிர்தலில் அக்கறை காட்டுதல் : –

    நமது குடும்ப விழாக்களிலும், நண்பர்களோடு கூடிய விடுமுறை நாள் விழாக்களிலும் பரிசுகளை வழங்குவதும், பெற்றுக் கொள்வதும் பொதுவான ஒன்றாகும்.  ஒரு சில பகுத்தறிவு முற்போக்குவாதிகள் இந்நடைமுறையை வளமான நோக்கத்திலும், சிலர் இது அர்த்தமற்றது, வீண் எனக் கருதலாம்.  ஆனால் இந்தப் பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. பல சமூகச் சடங்குகள் மற்றும் விழாக்களில் இந் நடைமுறை சமூக உறவுகளைப் பராமரிப்பதில் முக்கியப்பங்கு வகிப்பதாக மானுடவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

    இத்தகைய விழாக்களில் பரிசுப் பொருளாகவோ அல்லது பணமாகவோ பெற்று வழங்கும் இந்த அமைப்பானது மிகத் திறமையாகவும், துல்லியமாகவும் பராமரிக்கப்படுவதாகவும், தங்களுடைய பணம் மறு சுழற்சி செய்யப்படுவதாகவும், இத்தகைய பரிசுகளை வழங்குவதிலும், பெற்றுக் கொள்வதிலும் ஒரு திருப்தி ஏற்படுவதாக மக்கள் கூறுவதாகவும் மானுடவியலாளர்கள் கூறுகின்றனர்.

    விழாக்கள் குடும்பத்தை வலுப்படுத்துகிறது : –

    குடும்பத்தில் நடத்தப்படும் சடங்குகள் மற்றும் விழாக்கள் குடும்ப உறவுகளை பராமரித்து வலுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  உண்மையில் மிக தூரத்தில் நம்மிடமிருந்து விலகி வாழும் உறவுகள், நண்பர்கள் ஆகியோர் நடத்தப்படும் வழக்களுக்காக ஒன்று கூடும்போது அவர்களுக்கிடையே பிணைப்பும், பந்தமும் வலுவடைகிறது.  பசைபோல் ஒட்டி வைத்திருக்க உதவுகிறது.

    சடங்கு மற்றும் விடுமுறைகால விழாக்களில் கலந்து கொள்வது என்பது, ஒரு சக்தி வாய்ந்த குழு உறுப்பினர் என்ற அடையாளத்தை தனக்குத் தருவதாகவும், தவிர, பல்வேறு பழக்கவழக்கங்களைக் கொண்ட குழுக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும்போது தனக்குத் தாராள மனநிலை உணர்வைத் தருவதாகவும் அமெரிக்காவின் கனக்டிகட் மானுடவியல் பேராசிரியர் டிமிட்ரிஸ் சைகலாடஸ் கூறுகிறார்.

    இத்தகைய கொண்டாட்டங்கள் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியம்.  குழுச் சடங்குகளில் பங்கேற்கும் பிள்ளைகள் சக குழந்தைகளுடன் மிக வலுவாக இணைகின்றனர்.  கூடுதலாக இவ்விழாக்களால் ஏற்படும் நேரிய எண்ணங்களால், குழந்தைகளும் அத்தகைய நேரிய நினைவுகளுனேயே தொடர்புபடுத்திக் கொள்வதாக ஆராய்ச்சி காட்டுகிறது.

    குடும்ப விழாக்களில் நடைபெறும் உரையாடல்கள், அரசியல் வம்படிப் பேச்சுகள், சச்சரவுகள் கூட குடும்ப இணக்கத்திற்கான செய்முறையாகவே பார்க்கப்படுகிறது.  மாறாக ஒட்டுமொத்த அனுபவங்களை இது கெடுக்கச் சாத்தியமில்லை.  தவிரவும் கடந்த அனுபவங்களை நாம் மதிப்பீடு செய்யும்போது, சிறந்த தருணங்களையும், கடைசித் தருணங்களையும் நினைவுபடுத்துகிறோம்.  மாறாக எல்லாவற்றுக்கும் குறைவான கவனத்தையே செலுத்துகிறோம் என்று கூறுகிறார் நோபல் பரிசு பெற்ற ஆய்வாளர் கான்மேன்.

    முடிவுரை :-

    சங்க காலத்திலிருந்தே கொண்டாட்டம் என்பது நம் வாழ்வியலோடு இணைந்த ஒன்றாகும்.  குடும்பக் கொண்டாட்டங்களில் இருந்தே நமது நினைவுகளில் பெரும்பாலும் மகிழ்ச்சியாகவும், வேடிக்கையாகவும், அக் கொண்டாட்டங்களின் வழியாக நல்ல உணவும், பெறக்கூடிய, வழங்கக் கூடிய பரிசுகளும் இப்படியாக நம் மனத்தில் பசுமையாகப் பதிந்து விடுகிறது.  எனவே கொண்டாட்டங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை.  அந்தக் கொண்டாட்டங்களின் வழியாகக் குடும்பங்களின் கட்டமைப்பை வலுப்படுத்துவோம். வாருங்கள் அடுத்த கொண்டாட்டத்திற்காக, அடுத்த விடுமுறை தினத்தை எதிர்பார்த்து காத்திருப்போம்.

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (92)

    நிர்மலா ராகவன்

    சுற்றமும் குற்றமும்

    நலம்-1-1

    `நாங்க ரொம்ப பேசிக்கிறதே இல்லை!’ என்றாள் ஒரு மாது, பேச்சுவாக்கில். `இது எல்லா குடும்பங்களிலும் நடப்பதுதானே!’ என்பதுபோன்ற தொனி அவள் குரலில். இருபது வருடங்களுக்குமேல் ஒன்றாக வாழ்ந்திருந்த தம்பதிகள் அவர்கள்.

    அன்பு என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதம் என்னவென்றால், அது வெறுப்பு இல்லை. அலட்சியம்தான்.

    பேசுவதற்கு விஷயமா இல்லை? வாழ்க்கையில் தினம், தினம் எத்தனையோ நடக்கின்றனவே! அவைகளைப் பகிர்ந்துகொண்டாலே போதுமே! ஆனால், நிறையப் பேசுவதால் மட்டும் அன்பு இருக்கிறதென்று அர்த்தமில்லை.

    `இவளுடன் என்ன பேசுவது! புத்திசாலித்தனமாக இரண்டு வார்த்தை பேசத் தெரிகிறதா!’ என்று மனைவியைப்பற்றி அலுத்துக்கொள்ளும் ஆண்களைச் சந்தித்திருக்கிறேன்.

    இந்தக் குறை திருமணம் செய்துகொள்வதற்குமுன் ஏன் தெரியவில்லை?

    கொள்ளை அழகு, ஜாதகப் பொருத்தம், சுயமாகச் சம்பாதிப்பவள், நிறைய வரதட்சணையுடன் வருபவள், பெற்றோருக்குப் பிடிக்கும், முறைப்பெண் என்று ஏதாவது ஒரு காரணம் அவர்களை இணைத்திருக்கும். ஆனால், ஆரம்பகால ஈர்ப்பு மழுங்கத் தொடங்கியவுடன், மனைவியின் குறைகள் பெரிதாகத் தெரியும்.

    பெரும்பாலான பெண்கள், `அவரது குறை நியாயமானதுதானே!’ என்று அடங்கியிருப்பார்கள். அவர்களுக்குள் ஏதாவது திறமை உறங்கி இருக்கிறதா என்று அவர்களுக்கே சந்தேகம் வந்துவிடும். ஏதோ இயந்திரம்போல் தங்கள் கடமையைச் செய்து காலத்தைக் கழிப்பார்கள்.

    எது அன்பு?

    `அன்பு’ என்றால், இன்னொருவரின் மகிழ்ச்சிக்காக தன் சொந்த நலனை விட்டுக்கொடுப்பதல்ல.

    கதை

    நந்தினி நாட்டியத்தில் தேர்ந்தவள். அது தெரிந்தே அவளை மணந்தவன், `இனி நீ ஆடவே கூடாது!’ என்று கட்டளையிட்டான். அவனை எதிர்த்துக்கொண்டு, தாய் வீட்டுக்கே போய்விடலாம் என்று முதலில் எழுந்த யோசனையைக் கைவிட்டாள். கீழ்ப்படிந்தாள். ஆனால் மனம் குமுற, அதை அடக்கும் வழியென, ஓயாது உணவருந்தினாள்.

    செல்வச்செழிப்பு இல்லாதிருந்தும், மிகுந்த பிரயாசையுடன் மகளை நாட்டியத்தில் ஈடுபடுத்தியிருந்த தாய்க்குத்தான் வருத்தம்.

    என்னைப் பார்க்கும்போதெல்லாம், “உங்க மகள் டான்ஸ் ஆடிண்டிருக்காளா?” என்று விசாரிப்பாள். பிறகு, “மருமகன் நந்தினியை ஆடக்கூடாதுன்னு சொல்லிட்டார். இப்ப ஒரே குண்டாப்போயிட்டா!” என்று தெரிவிப்பாள். கடந்த இருபது ஆண்டுகளில் நாங்கள் எப்போது சந்திக்கும்போதும் இதையே சொல்லத் தவறுவதில்லை.

    தாய்க்கே இப்படி என்றால், தன் திறமையையும் ஆசையையும் துறந்த மகளுக்கு எப்படி இருக்கும்!

    நந்தினியின் கணவரைப் போன்றவர்களுக்கு `நாட்டியம்’ என்றால் அரைகுறையாக ஆடையணிந்து, இடுப்பை ஆட்டியபடி, கண்டபடி கையையும் காலையும் தூக்கி, அதன்மூலம் காமத்தைத் தூண்டுவது. எல்லாம் திரைப்படங்கள் கற்றுக்கொடுத்த பாடம்தான்!

    முறையாக பரதநாட்டியம் கற்றவர்களின் கைகள், முகத்தைத் தவிர பிற அங்கங்கள் மறைக்கப்படும்போது, அவர்களிடமிருந்து கலைத்திறனும், பக்தியும் மட்டும்தான் வெளிப்படும். யாரும் இவர்களைத் தவறான கண்ணோட்டத்துடன் அணுகுவதில்லை.

    கற்பனை உலகில் காதல்

    பல திரைப்படங்களில், காதலர்கள் பெரும்பகுதியில் சண்டை போட்டுவிட்டு, இறுதியில் தாபத்துடன் ஓடி வந்து அணைப்பார்கள்.

    காதல் மணம் புரிந்துகொண்ட ஒரு பெண், “ஐந்து வருடங்களுக்குப்பின் இவர்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்க்க வேண்டும்!” என்று சிரித்தாள்.

    எந்த முறையில் கல்யாணம் செய்துகொண்டாலும், காதலோ, மோகமோ நிலைத்திருப்பதில்லை என்று அனுபவப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். அதிக பட்சம் ஈராண்டுகள்! அதன்பின் சண்டை, பூசல் எழுவதைத் தவிர்க்க முடியாது.

    படம் பார்க்கும் அப்பாவிகளுக்கோ, `காதல் என்ற உணர்வு இவ்வளவு கிளுகிளுப்பானதா!’ என்ற பிரமிப்பு உண்டாகும். நம் வாழ்க்கையும் இப்படித்தான் அமையவேண்டும் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும்.

    இஸ்மாயில் என்ற எங்கள் நண்பர், `இந்த மனைவியைப் பிடிக்கவில்லை!’ என்று இன்னொரு பெண்ணை மணந்தார். சில ஆண்டுகளுக்குப்பின் அவளுடைய குறைகளும் பூதாகாரமாகத் தெரிய, `எல்லாப் பெண்களும் மோசம்!’ என்று கூற ஆரம்பித்தார்.

    பெண்களிடமே குற்றம் கண்டுபிடிக்கும் ஆண்கள் தங்களுக்கும் குறைகள் இருக்கலாம் என்பதை ஏனோ நினைத்துப் பார்ப்பதில்லை?

    மனமொத்து இருப்பவர்களின் ரகசியம்

    நீண்டகால உறவுமுறைகளுக்கு நேர்மை, பொறுமை ஆகிய குணங்கள் அவசியம். இவர்கள் ஒருவர் குறைகளை மற்றவர் தெரிந்துகொண்டவர்கள். அவைகளைப் பெரிதுபடுத்தாது இருந்தால்தான் வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும் என்பதைப் புரிந்துகொண்டவர்கள். மற்றவரின் சிறப்பான குணங்களை மட்டும் எடுத்துக்கொள்பவர்கள். இது புரிய இருபது வருடங்கள்கூட ஆகலாம். ஒல்லியாக, அழகாக இருந்த மனைவி இரு பிள்ளைகளைப் பெற்றபின் மிகப் பருமனாக ஆனபோதும், அவளை அழகியாகவே பார்க்கும் மனப்பக்குவம் சிலருக்கே வாய்க்கிறது. அவள் நோய்வாய்ப்பட்டால் சிடுசிடுக்காமல், சிரத்தையாகப் பார்த்துக்கொள்வதும் அப்படித்தான்.

    இவர்களுக்குள் சிறு பூசல்கூட வராது என்பதில்லை. வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக, நிறைவு அளிப்பதாகவே இருப்பதில்லை என்று இவர்களுக்குத் தெரியும். ஆகையால், இன்பம் மட்டுமே நிலைத்திருக்கவேண்டும் என்ற நடவாத எதிர்பார்ப்பு இவர்களிடம் கிடையாது.

    கதை

    பெரிய குடும்பத்தில் பிறந்து, போதிய அன்பும் கவனிப்பும் கிடைக்காது வாடியவன் குமரன். `என்னை யாருக்கும் பிடிக்கவில்லை!’ என்ற ஏக்கத்துடன் வளர்ந்தான் குமரன்.

    வளர்ந்தபின்னர், எந்தப் பெண்ணுடனும் நெருக்கமான தொடர்பு வைத்துக்கொள்ள அச்சம். அவர்களுக்கும் தன்னைப் பிடிக்காமல் போய்விட்டால்?

    திருமணம் ஆனபின்னரும், மனைவிக்குத் தன்னைப் பிடிக்கிறதோ என்று பலவகையாக சோதித்துப் பார்த்தான். முரட்டுத்தனத்தை வரவழைத்துக்கொண்டான்.

    இவனைப்போல், `உன்னால் என் வாழ்க்கை கெட்டுவிட்டது. இப்போது மகிழ்ச்சியே போய்விட்டது!’ என்று பிறத்தியாரைச் சாடுபவர் ஒன்றை உணரத் தவறிவிடுகிறார். ஒருவருடைய மகிழ்ச்சிக்கு அவரேதான் பொறுப்பு. வேறு யாரும் அவரது கனவுகளை நிறைவேற்ற முடியாது.

    உறவில் சிக்கல்

    தம்பதியரோ, உடன்பிறந்தவர்களோ, இல்லை, நண்பர்களோ, எவரும் நம் நன்மைக்காகவே எப்போதும் இயங்குவார்கள் என்று கூறமுடியாது.

    கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருக்கலாம், உடன்பிறந்தவர்கள் பரம்பரைச் சொத்தில் பெரும்பகுதியை அபகரித்திருக்கலாம், நண்பர்கள் புறம்பேசி நமக்குக் கெடுதல் விளைவித்திருக்கலாம். இவை எல்லாமே நடந்தபோது மனப்பாரத்தைக் கொடுத்திருக்கும். ஆனால், நம்மை அலைக்கழித்தவைகளையே விடாது பிடித்துக்கொண்டிருந்தால் நிம்மதி ஏது!

    கதை

    “என் கணவரை அவருடைய மேலதிகாரியே சூதாட அழைத்துப்போனார்!” என்று வருத்தத்துடன் தெரிவித்தாள் என் சிநேகிதி மரியா. அவள் பிலிப்பீன் நாட்டவள். கணவர் வாங் வேறு நாட்டவர்.

    “குடிப்பாரா?” என்று கேட்டுவைத்தேன்.

    “எல்லாம், எல்லாம்!” என்றாள்.

    இந்த செலவுகளுக்காக வாங் வட்டிமுதலைகளிடம் நிறைய கடன் வாங்கியிருந்தார். அவர்கள் அச்சுறுத்த, மரியா தான் வாங்கியிருந்த பங்களாவைப் பாதிவிலைக்கு அவசரமாக விற்றாள்.

    “இதையெல்லாம் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டிருக்காதே!” என்று எச்சரித்தேன்.

    “இல்லை. உங்களிடம் மட்டும்தான் சொல்கிறேன்,” என்றவள், “இப்போது சம்பளத்தை என் கையில் கொடுக்கிறார். குழந்தைகளுடன் நான் அவரையும் பார்த்துக்கொள்ளவேண்டும்,” என்றாள், கடமை உணர்ச்சியுடன்.

    சில மாதங்கள் கழிந்தன. தீய பழக்கங்கள் மீண்டும் அவரை அழைத்தன. மனைவியின் நற்குணத்தை அவர் புரிந்துகொள்ளவில்லை.

    பொறுமைக்கும் ஓர் எல்லை இல்லையா, என்ன! குழந்தைகளுடன் தன் நாட்டுக்கே திரும்பப் போய்விட்டாள் மரியா.

    நல்லவரோ, கெட்டவரோ, கொண்டவரை மாற்றுவது எளிதல்ல.

    கதை

    கமலத்திற்குத் தன் கணவர் பட்டதாரி இல்லையே என்ற குறை. திருமணமாகி இருபது வருடங்களுக்குமேல் ஆகியிருந்தும், அவரை நச்சரித்துக்கொண்டே இருப்பதாக என்னிடம் பெருமையுடன் கூறினாள், `நான் செய்வது சரிதானே?’ என்று நியாயம் கற்பிப்பதுபோல்.

    அவரோ, விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர். தனக்குப் பிடித்தமான உத்தியோகத்தில் இருந்தார். `எதற்காக இன்னும் படிக்க வேண்டும்!’ என்ற அலுப்புடன், மனைவியின் நச்சரிப்பைத் தாளமுடியாது, “ஆரம்பிச்சுட்டியா?” என்று விலகிப் போய்விடுவாராம்.

    தங்கள் உறவில் ஏன் விரிசல் என்று கமலத்திற்குப் புரியவில்லை.

    `எனக்கு மட்டும் ஏன் நிறையப் படித்த, புத்திசாலியான கணவர் வாய்க்கவில்லை?’ என்று அவள் கொண்ட சுய பரிதாபம்தான் அவளை இப்படி ஆட்டுவித்ததோ?

    நமக்குப் பிடித்தவகையில் இன்னொருவர் மாறவேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். முதலில், நாம் மாற்ற விரும்புகிறவர் தான் மாற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்க வேண்டும். அவருக்கே வழி தெரியாதபோது, ஆதரவளித்து, அவருடைய சிறப்புகளைப் பாராட்டி, முன்னேற வைக்கலாம்.

    எந்த எதிர்பார்ப்பும் இல்லாது, எவரையும் மாற்ற நினைக்காது, அவரவர் இருக்கிறபடியே ஏற்றால்தான் சுற்றம் நிலைக்கும்.

    தொடருவோம்

    Share
  • திருவருட்பயனில் ஆளுமைக்கான தனிமனித நடத்தைக் கூறுகள்

    -ர. நித்யா

    முன்னுரை

    திருவருட்பயன் = திரு+அருள்+பயன் எனப் பொருள் கொள்வர். இறைவனின் திருவருளால் அடையும் பயனை விவரிக்கும் நூலாகும். ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றின் விரிவான விளக்கமே திருவருட்பயனில் விளக்கப்பட்டுள்ளது. திருவருளால் உயிர்க்கு உண்டாகும் ஆன்ம தரிசனம், ஆன்ம சக்தி, ஆன்ம லாபம் என்ற மூன்றையுமே அதன் பயன் என்கிறார் சிவப்பிரகாசர். சிவப்பிரகாசத்தில் உள்ள இவ்விரு தலைப்புக்களையும் இணைத்தால் கிடைப்பது திருவருட்பயன் என்று பெயர். அதனையே இந்நூலுக்கு பெயராக சூட்டினார் ஆசிரியர். சிவப்பிரகாசத்தில் ஞானவாய்மையும் அதன் பயனும் ஆகிய இரண்டையும் சுருக்கமாகவும் செறிவாகவும் கூறிச் சென்ற ஆசிரியர் திருவருட்பயனில் அவற்றிற்கென ஐந்து அதிகாரங்களை நூலில் பகிர்ந்தளித்து விரிவாக விளக்கியுள்ளார். அருளதுநிலை, அருளுருநிலை,அறியும் நெறி, உயிர் விளக்கம், இன்புறும் நிலை என்ற அந்த அதிகாரங்களில் திருவருளின் இயல்பையும், திருவருளால் உயிர் அடையும் பயனையும் படிப்படியாக இனிமையான முறையில் விளக்கியுள்ளார். நூல் முழுவதையும் குறள் வெண்பா யாப்பினாலே அமைத்துள்ளார். அதிகாரத்திற்குப் பத்துக் குறள்களாகப் பத்து அதிகாரங்களை ஆக்கியுள்ளார். ‘சிவநெறித்திருக்குறள்’என்று சொல்லுமாறு இந்நூலை செய்துள்ளார் ஆசிரியர் உமாபதி சிவாசாரியார் அவர்கள்.

                    “தெள்ளுசீர்ப்புலமை வள்ளுவன் தனக்கோர்
    நற்றுணை  உடைத்தெனக்    கற்றவர்களிப்ப
    அருட்பயன்   என்னா  அதற்கொரு    நாமந்
    தெருட்படப்   புணைந்து   செந்தமிழ்  யாப்பில்
    குறளடி வெள்ளை   ஒரு நூறு    இயம்பினன்.” (சி.பா)

     என வரும் சிறப்புப்பாயிரம் பகுதியில் தெய்வப் புலமைத் திருவள்ளுவருக்கு ஒரு நல்ல துணை வாய்த்தது

    தனிமனித நடத்தைக் கூறுகள்

    தனிமனிதனின் செயல்பாடுகளில் நடத்தைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தனிமனிதனுடைய எண்ணங்கள் நடத்தைகளாகின்றன. எனவே, தனி மனிதனின் எண்ணங்களையும், நடத்தைகளையும் சமூகத்திற்கு வளம் சேர்க்கும் வகையில் மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது. மேம்பட்ட எண்ணங்களும், நடத்தைகளும் தனிமனிதனின் உயர்நிலையை அடையாளம் காண உதவுகின்றன. திருவருட்பயன் நூல் முழுவதும் ஆராய்ந்தால் எண்ணற்ற தனிமனித நடத்தைக் கூறுகள் உள்ளன. ஆயினும் இக்கட்டுரையில் தனிமனிதனின் நடத்தைகளில் மிக இன்றியமையாதவைகளான ஒருமைப்பாடு, நன்னடத்தை ,அறியாமையை அகற்றல் போன்ற ஆகிய கூறுகள் எடுத்துரைக்கப்படுகின்றன.

    எல்லோரும் ஓர்குலம்

    உள்ளம் மேம்பாடு அடைய வேண்டுமெனில், எல்லோரும் ஓர் குலம் என்னும் எண்ணத்தை மனதில் விதைக்க வேண்டும்.  இதனை உணர்ந்த அறிஞர் ரஸ்கின்,” ஒருவனுக்குத் தன்னைத் தவிர வேறு எது சொந்தம், அவன் வேறு எதை அனுபவித்து ஆனந்தம் காண முடியும் என்பதும், வாழ்வது முக்கியம் என்று கற்றுக் கொள்ள வேண்டும்” என்கிறார். இதனை உணர்ந்து சமுதாயத்தைத் தம் சொந்தம் என்று கருத வேண்டும். இதனை,

                    அகர உயிர்போல் அறிவாகி எங்கும்
    நிகரில் இறை நிற்கும் நிறைந்து.       (கு.எண்: 1)

    இக்குறள் வெண்பாவின் பொருளானது, பதிப் பொருள் தனக்கு ஒப்பாக வேறு ஒரு பொருளும் இல்லாதது. அது பேரறிவாய் எங்கும் நீக்கமின்றி  நிறைந்து  நிற்கும். அகரமாகிய உயிரெழுத்து மற்றைய எல்லாப் பொருட்களிலும் இயைந்து  நிற்பதுபோலப் பதிப் பொருள் பிற எல்லாப் பொருட்களிலும் வேற்றுமையின்றி கலந்து நின்று அவற்றை  இயக்கும். எனவே பதியாகிய  இறையே உலகிற்கு முதல் என்பது விளங்கும்.

    மனிதனும் உலகில் யாரிடமும் வேற்றுமை பாராட்டாமல் பழக வேண்டும். ஏனெனில் அகரமாகிய உயிரெழுத்து எல்லாப் பொருட்களிலும் வேற்றுமையின்றி கலந்து நின்று அவற்றை இயக்கும். அது போலத் தனிமனிதன்  வேற்றுமை பாரட்டாமல் அனைவரிடமும் பழகி தன் ஆளுமைத் தன்மையால், அனைவரையும் வழிநடத்த வேண்டும் என்பதையே இப்பாடல் வலியுறுத்துகிறது.

    நன்னடத்தை 

    உள்ள மேம்பாட்டில் நன்னடத்தை முக்கியப் பங்கு வகிக்கின்றது. ஆளுமையை உணர்வதற்கு முதலில் தன்னை நன்றாகப் புரிந்திருக்க வேண்டும். தனது பிரச்சனைகள் என்ன என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்க வேண்டும். ஒன்றையோ, ஒருவரையோ அணுகும் முன் அதைப்பற்றிய அல்லது அவரைப் பற்றிய சகல தகவல்களைத் தெரிந்திருப்பது அவசியம். “சிக்கலான சூழ்நிலையிலும் உங்களிடம் உள்ள தகவலையும் அதிகாரத்தையும் பயன்படுத்திப் பிறர் நடத்தையை மாற்றி அமைப்பதுதான் உங்கள் வேலையிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, சதா நீங்கள் இதைத்தான் செய்ய வேண்டும்”4 என்னும் கருத்தைக் கொண்டு நன்னடத்தையை மேம்படுத்தலாம். இருப்பினும், திருவருட்பயனில்,

     பெருமைக்கும்  நுண்மைக்கும்  பேரட்கும்  பேற்றின்
    அருமைக்கும்  ஒப்பின்மை  யான் (கு.எண் : 3)

    இக்குறள் வெண்பாவின் கருத்தானது, எல்லாவற்றிலும் பெரிய பொருளாய்  நிற்கும் தன்மையில் அவனை ஒப்பார் இல்லை. எல்லாப் பொருளிலும் உட்கலந்து நிறைந்து நிற்கும் நுண்மையில் அவனை ஒப்பார் இல்லை. எல்லா உயிர்களிடத்திலும் கொண்டிருக்கும் மாறாத பெருங்கருணைத் திறத்தில் அவனைப் பெறுவதற்கு அரியனாய் நிற்கும் நிலையிலும் ஒப்பார் இல்லாதவனே. இவ்வாறு பெருமை, நுண்மை, பேரருள், பெறுவதற்கு அருமை ஆகிய இந்நான்கு திறத்திலும் தனக்கு ஒப்பாக வேறொன்று இல்லாத சிறப்பினை உடையவன் இறைவன். இறைவன் உலகிற்கு தலைவன் என்பதும் , அவனே அனைத்து இயக்கத்திற்கும் முதல் என்பதும் இச்செய்யுளில் உணர்த்தப்பட்டது.

    பெருமை, நுண்மை, பேரருள், பெறுவதற்கு அருமை ஆகிய இந் நான்கு திறத்திலும் தனக்கு ஒப்பாக வேறொன்றும் இல்லாத இறைவனைப் போல, ஆளுமைத் தன்மை உடைய ஒருவனுக்கு நிகராக ஒன்றும் இல்லை. அன்பிலே சிறந்தது தாயன்பு , ஈடு இணையற்றது என்பர். அவளது அன்பின் நிலையும் ஓரொரு சமயம் மாறி விடுவதைப் பார்க்கலாம். ஆயின், ஆளுமைத் தன்மை உடையவன் சிறந்த நடத்தையில் மாறாத் தன்மை உடையவனவாக இருக்க வேண்டும். சிக்மண்ட் பிராய்டு அவர்கள் இக்கருத்தையே ஒடிபஸ் மனநிலை என்று உளவியல் பாங்கில் விளக்குகிறார்.

    அறியாமை அகற்றல்

    மனிதன் தனக்குப் புறவயமாக உலகம் என்ற ஒன்றைப் பார்ப்பதோ, இறைவனை வெளியே தேடி அடைய முயற்சி செய்வதோ அவன் அறியாமையைத்தான் காட்டும். ஒவ்வொரு மனிதனும் தனித்தனி உலகம் என்பதை உணர்தல் வேண்டும். “மனிதன் இறைவனைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆனால், அதை அறிய முடியாதிருக்கிறான்.. குற்றம் மனத்தில்தான் உள்ளதே தவிர உலகப்பொருளில் இல்லை. உலகப் பொருளை பரம்பொருளாகப் பார்க்க தன்னைத் தயார் செய்து கொள்ளுவதற்குப் பெயர்தான் அறியாமை நீக்கம்”5  என ரா.நடராஜன் கூறியுள்ள கருத்தை மனதிற் கொள்வோம். ஒருவனின் ஆளுமையில், அறியாமை அகற்றுதலை,

              ஆக்கி எவையும் அளித்துஆசுடன் அடங்கப்
    போக்கும்  அவன்போகாப் புகல்.         (கு.எண் : 4)

     இக்குறள் வெண்பாவில், இறைவன் உயிர்களிடம் உள்ள ஆணவ மலமாகிய அழுக்கினை நீக்க வேண்டிய அவ்வுயிர்களும் உடம்பும். ஐம்பொறி முதலிய கருவிகளும், உலகும் உலகிலுள்ள நுகர்ச்சிப் பொருள்களும் ஆகிய எல்லாவற்றையும் படைத்துக் கொடுக்கின்றான். உயிர்கள் குறித்த காலம் வரை அவற்றோடு பொருந்தி வாழும்படியாக அவற்றை நிலை நிறுத்திக் காக்கின்றான். பின், ஆணவமலம் நீங்கும் நிலையை அடையும் காலத்தில் அம் மலத்தோடு சேர்ந்து, தான் படைத்துக் காத்த உடம்பு முதலிய பொருள்களையும் ஒரு சேரப் போக்கி உயிரைத் தூயதாக்குகின்றான். இப்பேருதவியைச் செய்யும் இறைவனே உயிர்களுக்கு நீங்காத புகலிடம் ஆவான்.

    தலைமைப் பண்பு கொண்ட மனிதன் தனு, புவனம், கரணம், போகம் ஆகிய எல்லாவற்றையும்  பொருந்தி வாழ வேண்டும். மூலமாகிய ஆணவத்தை நீக்கும் பொருட்டே உயிரோடு உடம்பு முதலியவற்றைக் கூட்டுவிக்கின்றான். இறைவன் உடம்பு, தனு முதலிய கருவிகள் கரணம் எனப்படும். இந்த உலகு புவனம் என குறிக்கப்படும். உலகிலுள்ள நுகர்ச்சிப் பொருட்கள் போகம் எனப்படும்.   உயிர்களிடத்தில் இயற்கையாகவே ஆணவ மலம் என்ற குற்றம் உள்ளது. உயிர் என்று உண்டோ அன்றே அதனிடத்தில் இந்தக் குற்றமும் உடனாகச் சேர்ந்து இருத்தலினால் “சகச மலம்” எனச் சொல்லப்படும். ஆடையில் உள்ள அழுக்கு அதன் வெண்மையை மறைப்பது போல உயிர்களிலுள்ள ஆணவ மலமாகிய அழுக்கு அதன் அறிவை மறைத்து நிற்கிறது. அம் மறைப்பினால் உயிர்க்கு அறியாமை உண்டாகிறது. அறியாமையினால் வருவது துன்பமே ஆகும். மனிதன் தன்   அறியாமையை அகற்ற வேண்டும். அதற்கு  ஆணவம் என்ற இருளை  நீக்க வேண்டும் என்பதே இப்பாடலில் மறைமுகமாக கூறப்படும் கருத்தாகும்.

            இருளான தன்றி இலது எவையும் ஏகப்
    பொருளாகி நிற்கும் பொருள்.                (கு.எண்: 22)

    எனும் குறட்பாவில், உலகத்திலுள்ள பல வகைப்பட்ட பொருள்களையும் அவைகளுடைய தன்மை தோன்றாதபடியும், அவை யாவும் தானேயாய்த் தோன்றும்படியும், மறைந்து நிற்கும் பொருள் இருளையன்றி வேறில்லை.

    இரவு நேரத்தில் படித்துக் கொண்டிருக்கிறோம். திடீரென்று விளக்குகள் அணைகின்றன. எங்கும் ஒரேயிருள். பக்கத்தில் உள்ள பொருள் கூடத் தெரியவில்லை. மெழுகுவர்த்தியைத் தேடலாம் என்று எழுகிறோம். சில அடி தூரம் நடந்திருப்போம். அங்குள்ள சுவரில் தெரியாமல் முட்டிக் கொள்கிறோம். வழியில் ஒரு நாற்காலி கிடக்கிறது. அது நமக்குத் தெரியவில்லை. அது நம் காலை இடறிக் காயப்படுத்துகிறது. அதையும் தாண்டிச் செல்லும் போது கீழே கிடந்த கயிற்றின் மீது காலை வைக்கிறோம். என்னவோ, ஏதோ என்ற பதைப்புடன் தாவிக் குதிக்கிறோம். நல்ல வேளையாக அப்பொழுது விளக்குகள் எரியத் தொடங்குகின்றன. அந்த விளக்கொளியில் கீழே கிடந்தது கயிறுதான் என்பதைத் தெரிந்து கொண்டு ஆறுதல் அடைகிறோம். இந்த நிகழ்ச்சியில் சுவர் சுவராக தெரியவில்லை. நாற்காலி நாற்காலியாகத் தோன்றவில்லை. கயிறு கயிறாகத் தோன்றவில்லை.  மனம் ஒரு கற்பனைக் குதிரை போன்றது. அது தன் விருப்பம் போல எண்ணங்களையும் ஆசைகளையும் நினைத்துக் கொண்டே இருக்கின்றது. நிறைவேறாத ஆசைகள் அவனது அடிமனத்தில் சென்று தங்குகின்றன. அடி மனத்தில் உள்ளவைகளை ஒருவன் எப்பொழுதும், தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியாது. அதனை அறியாமலே சில சமயம் வேற்றுருக் கொண்டு வெளிவர முயல்கின்றது.

    முடிவுரை

    சைவசித்தாந்த நூல்களில் சிவநெறித் திருக்குறள் என்றும் போற்றப்படும் திருவருட்பயனில் தனிமனிதத் தலைமைப் பண்புகளில் சிறந்த சில பண்புகளை  இனங்கண்டு , அவற்றை வெளிக்கொணரும் வகையில் இக் கட்டுரை அமைந்துள்ளது.

    ***********

    குறிப்புகள்

    ஆ.ஆனந்தராசன்      திருவருட்பயன்                       நர்மதா பதிப்பகம்,10 நானா  தெரு,   ஆதமங்கலம். முதற்பதிப்பு 2010

    திரு.க.வெள்ளைவாரணன் திருவருட்பயன்                                23, கனகசபைநகர், சிதம்பரம்                                                             முதற்பதிப்பு 1965

    *****

    கட்டுரையாளர்
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    அரசு கலைக் கல்லூரி
    கோயம்புத்தூர்

     

     

    Share
  • காதல் கிடைக்குமா காசுக்கு !

    Beatles Picture -3

    காதல் கிடைக்குமா காசுக்கு!

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    +++++++++++

    காதல் கிடைக்க வில்லை
    காசுக்கு!
    வைர மோதிரம்
    வாங்கி மாட்டுவேன் உனக்கு
     மகிழ்ச்சி தருமாயின்,
    எதுவும் வாங்கி உனக்கு
    அளிக்க முடியும் என்னால்!
    பணத்தைப் பற்றிக்
    கவலை இல்லை எனக்கு! 
    ஆயினும்
    காசு கொடுத்துக்
    காதல் கிடைக்க வில்லை
    எனக்கு!
    இருப்பதை எல்லாம்  உனக்கு
    விருப்பப் படிக் கொடுப்பேன்,
    என்னை நேசிப்ப தாய்ச்
    சொன்னால்!
    பணத்தைப் பற்றிக்
    கவலை இல்லை எனக்கு!
    ஆயினும்
    காதல் கிடைக்க வில்லை
    காசுக்கு!
    பையில் நிறையப் பணம்,
    கையில் வைர மோதிரம்
    காட்டி
    காதல் வாங்கப் போனேன்!
    எல்லாரும் சொல்வார்
    என்னிடம்:
    காதல் கிடைக்காது காசுக்கு!
    காசு வாங்காது
    காதல்!

     

     

     

    Share
  • ஓரெழுத்து ஒரு மொழி

     

    14088488_1123402657748221_4120214870862385499_n

     

    காவில் மேயும் ஆவின் பாலருந்தி
    ஊ வளர்த்தால் சா வா என்றால் வருமா?
    பர்கரும் பீட்சாவும் உண்டு வளரும்
    பாலகர்க்கு நோ போ என்றால் போகுமா?

    மையிருள் குயிலின் மெல்லிறகைக் கொய்தபின்
    கூ என்று பணித்தல் தகுமோ?
    அகரம் கற்கும் கள்ளமில்லா குழந்தையிடம் நீ
    காம்போதியில் பாடென்பது தகுமோ?

    மென்மலரின் மெல்லிதழை மெல்ல மெல்ல கொய்தபின்
    பூ என்று சொல்லுதல் முறையா?
    அகவைக்குரிய அளவினதாக கற்கும் கல்வி இல்லாமல்
    அளவுக்கதிக சுமையை திணித்தல் முறையா?

    ஏ எய்த அறியான் கையில் கோ
    சோவை கா என்பது நலமா?
    தக்கோன் அல்லாதான் தான் கொண்ட பள்ளியில்
    தளிர் குழந்தையை சேர்ப்பது என்பது நலமா?

    மையழகு தையலை நீ சாவென தீ நாவில் சுட்டு பின்
    அன்பை தா என்றால் தருவாளா?
    பெற்ற கல்வியின் நோக்கத்தை உணர்த்த மறந்து பின்
    பெற்ற பிள்ளை பேணவில்லை என்பது சரியா?

    -ஆ. செந்தில் குமார்

    பொருள் :-
    கா – கானகம், காத்தல்
    நோ – நோய்
    ஆ – பசு
    ஊ – ஊன், தசை
    சா – இறப்பு , இறந்து போ
    கூ – கூவு என பணித்தல்
    பூ – மலரவும் என பணித்தல்
    ஏ – அம்பு
    கோ – அரசன்
    சோ – அரண்
    மை – கண் மை
    தையல் – பெண்
    நா – நாக்கு
    நன்றி : கூகிள் இமேஜ்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே -5

    க. பாலசுப்பிரமணியன்

    வீட்டில் வளரும் நம்பிக்கையின் உத்தரவாதங்கள்

    வாழ்ந்து-பார்க்கலாமே-1-1-1

    வாழ்க்கை என்பது என்ன? அதைப் பற்றி எந்தப் புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது? அதற்கான விளக்கங்களை எங்கே நாம் பெறலாம்? அப்படி மற்றவர்களால் எழுதப்பட்ட வாழ்க்கை முறைகள் நமக்குப் பயனுள்ளதாக இருக்குமா? அவ்வாறு படித்தவை நமக்கு வாழத் துணிவும் தன்னம்பிக்கையும் கொடுக்குமா? “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?” என்பது வழக்குமொழி. எனவே ஏட்டுக்கல்வி வாழ்க்கைப் பயணத்திற்கு உதவுமா?

    உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும்

    கல்லான் அறிவிலாதான் 

    என்று வள்ளுவன் கூறினானே! அப்படியென்றால் உண்மையான அறிவு கல்விச்சாலைகளில் கிடைக்கிறதா அல்லது வாழ்க்கைச் சாலையில் கிடைக்கிறதா? என்றெல்லாம் பல கேள்விகள் நம் மனத்தை அவ்வப்போது துளைத்துக்கொண்டிருக்கின்றன.

    “கல்வி என்பது ஒரு தனிமனிதனை வாழ்க்கைக்குத் தயார் செய்வதே” என்று ஒரு கருத்தும் “கல்வியே வாழ்க்கையின் பயிற்சிதான்” என்று ஒரு வாதமும் இருக்கின்றன. வீட்டிலும் வெளியிலும் கல்விக்கான கற்றலுக்கான ஏணிப்படிகள் இருக்கின்றன. கல்வி என்பது வெறும் புள்ளிவிவரங்களையோ அல்லது சரித்திர நுணுக்கங்களையோ அல்லது அறிவியல் கண்டிபிடிப்புக்களின் பயன்களையோ கற்றுக்கொள்ளுவது மட்டும் அல்ல.

    இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகக் கல்வியின் போக்கும் நடைமுறையும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி யுனெஸ்கோ (Unesco) நிறுவனம் உலகளாவிய குழு அமைத்து பிரெஞ்சு முன்னாள் அமைச்சர் திரு ஜாக்கஸ் டெல்லோர்ஸ் (Dr. Jacques Dellorss) என்பவர் தலைமையில் பரிந்துரை செய்தது.  இந்தியாவின் தரப்பில் ஒரு மிகச் சிறந்த கல்வியாளரும் மேதையுமான ஜம்மு காஷ்மீரின் முன்னாள் அரசர் டாக்டர் கரன்சிங் (Dr. Karan Singh) அதில் பங்கேற்றார். அந்தக் குழு இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் கல்வி நடைமுறைக்கான நால்வழிப் பாதையை முன் வைத்தது.  அவை:

    1. அறிவுக்காகக் கற்றல் (Learning to Know)
    2. செயலுக்காகக் கற்றல் (Learning to Do)
    3. கூடிவாழ்வதற்க்காகக் கற்றல் (Learning to Live together)
    4. தன்னிறைவுக்காகக் கற்றல் (Learning to Be)

    இந்த நான்குமே வாழ்க்கையின் முழுமைக்கும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதவை. இவைகளை ஒரு குழந்தையின் இளம் பிரயாத்திலிருந்தே வீடுகளில் வாழ்க்கை வழிகளோடும் முறைகளோடும் இணைத்து சொல்லிக்கொடுத்தல் அவசியமாகின்றது. “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என்பது வெறும் வழக்குமொழி அல்ல. மூளை வளர்ச்சிகளின் ஆராய்ச்சிகளில் இளம் வயதில் கற்றலிலும் அனுபவங்கள் மூலமாகவும் உணர்ச்சிபூர்வமான செயற்பாடுகள் மூலமாகவும் பதிவு செய்யப்படுகின்ற கற்றல்கள் எவ்வாறு வாழ்வு முழுவதும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்று விளக்கப்பட்டும் உறுதிசெய்யப்பட்டும் இருக்கின்றது.

    சிறுபிள்ளைப் பருவத்தில் என்னுடைய பாட்டி மற்றும் வீட்டில் இருந்த பெரியவர்கள் கூறிய கதைகள், அனுபவச் சொற்கள், நிகழ்வுகள் வாழ்க்கையை வளப்படுத்த வாழ்க்கையைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ள உதவி செய்துள்ளன என்று நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக உள்ளது. இன்று சிந்திக்கும் திறன்கள் பற்றி வெளிவந்துள்ள பல ஆய்வுகள் –  பக்கவாட்டுச் சிந்தனை, (Lateral Thinking) ஆய்வுச் சிந்தனை,(Analytical Thinking) நுண்ணறிவுச் சிந்தனை (Critical thinking) மற்றும் இணைச் சிந்தனை  (Parallel Thinking)- போன்ற பல சிந்தனைத் திறன்கள் விளையாட்டாகக் கதைகள் மூலமாகவும், விடுகதைகள் மூலமாவும், கூட்டு விளையாட்டுக்கள் மூலமாகவும் வளர்க்கப்பட்டன. அன்று குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட  தெனாலி ராமன் கதைகள், பீர்பல் கதைகள், மரியாதை ராமன் கதைகள், விக்ரமாதித்தன் கதைகள் போன்ற பல அவர்களை சிந்திக்கவும் வழிப்படுத்தவும் உதவின. வாழ்க்கையை சந்திப்பதற்கான கருத்துக்களை அள்ளித் தந்தன. வாழ்க்கை வாழ்வதற்கே என்றும், வாழ்வில் தோல்விகளை சந்திக்காத தயங்கக்கூடாது என்றும்,  எழுந்து நில், நிமிர்ந்து நில் என்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வளர்க்கவும் மன நலத்தை வலுப்படுத்தவும் அந்தக் கருத்துக்களும் உந்துதல்களும் மிகவும் உதவின.

    கல்லூரிப் பருவத்தில் திருமதி சிவசங்கரி அவர்கள் எழுதிய “சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது” என்ற ஒரு நூலை நான் ஒரு நூறுமுறையாவது படித்திருப்பேன். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்றுக்கொடுக்காத நுண்ணறிவை அந்த நூல் ஊட்டி வளர்த்தது. ஒவ்வொரு முறையும்  ஏதாவது ஒரு பிரச்சனையை சந்திக்கும் பொழுது அந்த நூலைப் படித்து விட்டால் போதும். உங்களுக்கு விடை கிடைத்துவிடும். அதேபோல் திரு உதயமூர்த்தி அவர்கள் எழுதித் தொடராக வந்த “உன்னால் முடியும் தம்பி”  என்ற கட்டுரைகள் எத்தனை இளைஞர்கள் இதயத்தில் வாழ்க்கைக்கான நம்பிக்கை ஒளியை ஏற்றியது !

    வாழ்க்கையில் தவறி விழுவது ஒரு சாதாரணமான செயல். ஆனால் கீழே விழுந்து விட்டபின் ‘விழுந்தேனே, விழுந்தேனே” என்று அழுதுகொண்டிருப்பதை விட எழுந்து அடுத்த படிக்கு கால்களை முன்வைப்பதே புத்திசாலித்தனமான செயல்

    “சாதனை என்பது ஒவ்வொரு முறை தோல்வி அடைந்தபின்னும் மீண்டும் தோல்விக்கு நம்மைத் தயார் செய்து கொள்வதுதான்” என்று சர் வின்ஸ்டன் சர்ச்சில் என்ற முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் கூறினார். தன்னுடைய எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகொள்ளும் முயற்சியில் முதன்முறை தோல்வியடைந்த பின் திரு எட்மண்ட் ஹில்லாரி இமயத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டே சொன்னாராம் ” இமயமே ! உன்னால் இதற்கு மேல் உயர முடியாது. என்னால் என் முயற்சியில் இன்னும் உயர முடியும்.”

    நம்பிக்கை ! தன்னம்பிக்கை ! வாழ்வின் வெற்றிக்கு ஆணிவேர் !

    தன்னம்பிக்கையோடு வாழ்ந்து பார்க்கலாமே !

    (தொடருவோம்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(201)

    செண்பக ஜெகதீசன்

     

     

    மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ                                                                 

    டியைந்துகண் ணோடா தவர்.

           -திருக்குறள் -576(கண்ணோட்டம்)

     

    புதுக் கவிதையில்…

     

    பெற்றிருக்கும் கண்ணால்

    பிறர் துன்பத்தைப்

    பார்த்து

    இரக்கம் கொள்ளாதவர்

    இயங்கினாலும்,

    மண்ணில் பொருந்தி

    நின்றிருக்கும்

    மரத்துக்கு ஒப்பாவர்…!

     

    குறும்பாவில்…

     

    கண்ணால் பார்த்து இரக்கம் கொள்ளாதார், 

    மண்ணில் பொருந்தி இயக்கமிலா 

    மரம் போன்றவர்களே…!

     

    மரபுக் கவிதையில்…

     

    மண்ணில் மாந்தர் படுந்துன்பம்

         மாறிட மனதில் இரக்கத்துடன்

    கண்ணை யியக்கிப் பார்ப்பதுதான்

         கடமை கண்ணைப் பெற்றவர்க்கே,

    கண்ணி னிந்த ஓட்டமதைக்

         கருத்தில் கொள்ளா மாந்தரவர்,

    மண்ணில் பொருந்தி நிலைபெற்ற

         மரத்தினை யொப்பார் அறிவீரே…!

     

    லிமரைக்கூ..

     

    கண்ணோட்டம் வேண்டும் கண்ணில்,

    இரக்கபார்வை ஈதில்லாதவன், அசையாது

    நிற்கும் மரம்போன்றவன் மண்ணில்…!

     

    கிராமிய பாணியில்…

     

    வேணும் வேணும்

    கண்ணுக்கு வேணும்,

    எல்லாரயும் பாக்கும்

    எரக்க பார்வ..

     

    கண்ணுரெண்ட வச்சிக்கிட்டு

    அடுத்தவன் தும்பத்தப் பாத்து

    எரக்க்கப்படாதவனும்,

    மண்ணுல நெலச்சிநிக்கும்

    மரமும் ஒண்ணுதான்..

     

    அதால,

    வேணும் வேணும்

    கண்ணுக்கு வேணும்,

    எல்லாரயும் பாக்கும்

    எரக்க பார்வ…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 241

     

    மதுரைக் காண்டம் – கட்டுரைக் காதை

     

    வார்த்திகனைச் சிறை விடுத்து, அவனுக்கு இரண்டு ஊர்களை அளித்தல்

     

    நல்ல நீர் வளம் மிக்க கழனிகள் சூழ்ந்த
    அந்த திருத்தங்கால் எனும் ஊருடன்
    குறைவில்லாத விளைச்சல் விளையும்
    வயலூர் என்ற ஊரையும்
    அவனுக்கு மானியமாய் வழங்கிக்
    கற்புடைய கார்த்திகை என்னும் பெண்ணுக்கும்
    அவள் கணவன் வார்த்திகனுக்கும் முன்னே
    பெரிய நிலமடந்தையாம் தம் தேவிக்குத்
    தன் மார்பினில் இடம் அளித்து,
    அவளது தணியாத காமத்தையும்
    சற்றே தணிக்கும் வண்ணம்
    நிலத்தில் விழுந்து கும்பிட்டான்.

    அந்தப்பொழுதில்,
    என்றும் நிலையாக விளங்கும்
    கூடல் மாநகரின் நீண்ட வீதிகளில்
    மலை போன்று உயர்ந்து நின்ற
    மாடமாளிகைகள் எங்கும் கேட்கும்படி,
    மானை ஊர்தியாகக் கொண்டு அமர்ந்திருந்த
    கொற்றவையின் கோயில் கதவுகள்
    மிக்க ஒலியுடன் திறந்தன.

    மன்னன் மனம் மகிழ்ந்து,
    “சிறை அதிகாரிகள் சிறைக்கதவுகள் திறந்து
    எல்லோரையும் விடுதலை செய்யுங்கள்” என்றும்;
    வரி வசூல் செய்பவர்கள்
    மக்களிடம் இருந்து பெற வேண்டியது
    எவ்வளவு வரியானாலும்
    அதை வசூல் செய்யாது விடுங்கள் என்றும்;
    பிறர் கொடுத்த பொருள் என்றால்
    அதை பெற்றுக் கொண்டவர்க்கும்
    புதையல் என்றால்,
    அது எடுத்தவர்க்கும் சொந்தமாகும் என்றும்”
    யானையின் பிடரியில்
    அழகிய முரசினை ஏற்றி வைத்து,
    அரசு ஆணையைப் பறையடித்து அறிவித்தான்.

    இங்ஙனம் தன் செங்கோல் முறைமையை
    மக்களுக்கு அறிவித்த வெற்றி வேந்தன்
    “பாண்டிய செடுஞ்செழியனே
    முறை தவறிய காரணத்தைக் கூறுகிறேன்
    அதையும் கேட்பாயாக” என்று கூறினான்.

    Share
  • தூரத்து வெளிச்சம்..!

    பெருவை பார்த்தசாரதி

    moon (1)

    ஆரம்பமாதிமூலம் ரிஷிமூலநதிமூலம் உண்டென்பர் ஞானியர்..

    ……….அதையறிய முனைந்தால் உலகிலெதுவுமிலை என்பதேயுண்மை.!

    ஈரடிப்புலவன் அய்யன்வள்ளுவனும் இதைத்தான் இயம்பினான்..

    ……….அகிலத்தையு மோர்வரியில் “ஆதிபகவன் முதற்றேயுலகென்றான்”

    தூரத்தில் நின்றுநிலையாய் வெளிச்சம்தருமந்த வெண்ணிலவும்..

    ……….துருவநட்சத்திரமும் விரிகதிரும்…நிலையாயது தோன்றாவிடின்.?

    பாரஞ்சுமக்கும் புவியில்தான் நுண்ணுயிர்கள் பிறக்கவழியுண்டா..

    ……….பார்புகழும் விஞ்ஞானியிடம் இதற்கொருபதிலும் உண்டாசொல்.?

     

    வருடத்திற் கொருமுறைதான் தோன்றுமாமந்த வானவேடிக்கை..

    ……….வருடமோராயிரம் கடந்தாலுமின்றுமது புரியாததொரு புதிராகும்.!

    பெருமக்கள் பெருந்திரளாயொருங்கே ஓரிடத்தில் கூடியிருப்பர்..

    ……….பேருலகத்தாரும் காலம்கருதாதங்கே வெகுநேரம் காத்திருப்பர்.!

    ஒருநொடியில் தோன்றுமதைக் கண்டுலகமனைத்துமே வியக்கும்..

    ……….ஓரொளியாய்ப் மகரஜோதியாய்த் தோன்றிமறையும் அதிசயமாம்.!

    அருகிலிருக்கும் ஒளியானது புறக்கண்ணுக்குத்தான் வழிகாட்டும்..

    ……….ஆங்கேதூரத்து வெளிச்சமோ நம்மகக்கண்ணுக்கே அறிவூட்டும்.!

     

    குருவென்பவன் மிகஅவசியம் கலையொன்றைக் கசடறப்பயில..

    ……….குருசீடன் உறவுக்குள்ளே ஒருமித்தகருத்தும் இருக்கவேணும்.!

    இருளைவிலக்கும் தன்மைகொண்ட ஒளிபோல உத்தமர்பலரும்..

    ……….இரும்பு மனமுடனேநம் மனயிருளையகற்றவும் முனைந்தனராம்.!

    பெருநிலத்தவதரித்த யோகியும் முனிவனுமிதை அறியுவண்ணம்..

    ……….பெருங்காப்பியமாய் வடித்துவைத்துநாம் வாழவழி வகுத்தனராம்.!

    கருத்துமிகு இதிகாசமும்காப்பியமும் கன்னல்தமிழை வளர்க்கும்..

    ……….காரிருளகற்றும் தூரத்துநிலா வெளிச்சம்போல் வாழவழிகாட்டும்.!

     

     

    Share
  • பூதக்கோள் வியாழனைச் சுற்றிலும் பன்னிற வாயுப் பட்டைகள் இருப்பதை ஜூனோ விண்ணுளவி படம் எடுத்துள்ளது

    The Colorful Cloud Belts of Jupiter’s Southern Hemisphere Dominate This Stunnung Photo from NASA’s Juno Spacecraft in Orbit around the Gas Giant , Released on January 1, 2018.  Juno captured this Image on December 16, 2017.  It was Processed by Cityzen Scientist, Kevin M. Gill. 

    Credit : NASA / JPL -CALTECH / SwRI /  MSSS/ Kevin M. Gill

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++

    2017 டிசம்பர் 16 இல் நாசா விண்ணுளவி ஜூனோ எடுத்த தெளிவான படங்கள் :

    https://www.space.com/12495-jupiter-juno-mission-photos-gallery.html

        பூதக்கோள் வியாழனின் வாயுச் சூழ்வெளியை எடுத்துக் காட்டும் வெவ்வேறு வாயுக்களின் பன்னிறப் பட்டைகளின் [Multicolored Ribbons]  படங்கள் பொதுநபர் பார்வைக்கு நாசா வலைத் தளத்தில் இடப்பட்டுள்ளன.   ஒரு படத்தில் பூதக்கோள் வியாழனின் நடுமைய ரேகையில் [Equator] மிகத் துல்லிய தெளிவு விளக்கமாய் வாயுப் பட்டைப் படம் எடுக்கப் பட்டுள்ளது.   அத்தெளிவுப் படங்களில் வாயுக்கள் திடப் பொருளைப் போல் நுணுக்க விபரங்கள் கிடைக்கின்றன. ஆரஞ்சு நிறப்பட்டை புள்ளிகள் இட்ட மரத்தடம்போல் [Speckled  Knotty Wood Plank]  தெரிகிறது.  வெண்ணீலப் பட்டை மணற் தளமுள்ள ஆறோட்டம்போல் [Sandy River Bottom] காணப் படுகிறது.  

     

    Citizen-scientist Gerald Eichstadt processed this image of Jupiter’s south polar region, which highlights the distinctive cloud bands that wrap around the gas giant.

    Credit: NASA/JPL-Caltech/SwRI/MSSS/Gerald Eichstadt

     

    அடுத்தோர் படத்தில் பூதக்கோள் வியாழனின் தென் துருவப் பகுதியில் புயல் காட்சிகள் இருப்பினும், பளிச்செனத் தெரியும் வண்ணத்தில் வளைய வாயுக்கள் தனித்தனியாய் வேறு பட்டுள்ளன.  பூதக்கோளை ஒருமுறைச் சுற்றிவர ஜூனோ விண்ணுளவி 53 நாட்கள் எடுத்துக் கொள்ளும் சுற்றுப் பாதை ஒன்றில் சுற்றி வருகிறது.   படம் எடுக்கும் கருவியின் பெயர் ஜூனோகாம் [JunoCam].  வாயுப் பட்டைகளுக்கு வண்ண மிட்டவர் பெயர்கள் :  கெவின் எம். கில் & ஜெரால்டு ஐக்ஸ்டாட்  [Kevin M. Gill & Gerald Eichstadt]. இருவரும் ஜெட் உந்துகணை ஆய்வுக்கூடத்தைச்    [JPL -JET PROPULSIOL LAB] சேர்ந்தவர்கள்.  படங்கள் எடுத்த தேதி : டிசம்பர் 16, 2017.  ஜூனோ விண்ணுளவி நடுமைய ரேகைக்கு மேல் 8453 மைல் [13,604 கி,மீ.] உயரத்தில் பறந்த போது எடுத்த படங்கள்.  தென் துருவத்தில் எடுத்த படங்கள் 64,899 மைல் [104,446 கி.மீ] உயரத்தில் ஜூனோ விண்ணுளவி பறந்த போது எடுத்தவை.

     

    https://youtu.be/O8vSOrPnVqs

     

    அமெரிக்க விடுதலை நாள் [ஜூலை 4, 2016] கொண்டாட்ட தினத்தில் விழாவின் போது, அடுத்த முக்கியப் பாராட்டு நிகழ்ச்சி ஜூனோ விண்ணுளவி பூதக்கோள் வியாழனின் சுற்றுவீதியில் துல்லியமாகப் புகுந்தது.  இது நாசாவின் துணிச்சலான முயற்சி.  இத்திட்டத்தில் இதுவரை எந்த விண்கப்பலும் செய்யத் துணியாதத் தீரச்செயல்களை ஜூனோ செய்துகாட்டப் போகிறது. இதுவரை அறியப் படாத பூதக்கோள் வியாழனின் வலுநிறைந்த கதிர்வீச்சு வளையங்கள் [Radiation Belts] பற்றி ஆய்வு செய்யும்.  வியாழக் கோளின் உட்தளத்தை ஆழமாய் உளவு செய்து, அது எப்படி உருவானது, நமது சூரிய மண்டலம் எப்படித் தோன்றியது போன்ற புதிர்களை விடுவிக்கும்.

    சார்லி போல்டன் [NASA Space Program Administrator]

     

    https://youtu.be/6o9FiTf1vZE

    https://youtu.be/rQDuF2l3P-Q

    https://youtu.be/SgEsf4QcR0Q?list=PLTiv_XWHnOZpM1iLQr95P4KDXYiYnJUOE

    ++++++++++++++++++++++

    ஜூனோ விண்ணுளவி 1.7 பில்லியன் மைல் தூரம் பயணம் செய்து, பழுதின்றி முழுத்திறமையில் இயங்கியது.  பூதக்கோள் வியாழச் சுற்றுவீதி நுழைவு [Jupiter Orbit Insertion]  நுணுக்கமான, சவாலான ஒரு பெரும் விண்வெளிப் பொறியியல் எட்டு வைப்பு. இந்த முன்னோடி வெற்றியைச் சார்ந்தவைதான் மற்ற ஜூனோ திட்டக் குறிக்கோள்கள் எல்லாம்.

    ரிச்செர்டு நைபாக்கன் [ JPL Juno Project Manager]  

     

    அமெரிக்க நாட்டின் விடுதலை நாள் கொண்டாட்டம்

    2016 ஜூலை 4 அமெரிக்க விடுதலை நாளை மக்கள் கொண்டாடி வரும் சமயத்தில், அடுத்தோர் விண்வெளி வெற்றி அன்றைய தினத்தில் பாராட்டப் பட்டது.  அன்றுதான் ஐந்தாண்டுகள் பூதக்கோள் வியாழனை நோக்கிப் பயணம் செய்த ஜூனோ விண்கப்பல், அதன் சுற்றுவீதி ஈர்ப்புக்குள் வெற்றிகரமாய்ப் புகுந்தது.  சூரியனுக்கு அடுத்தபடியாய்ப் பூகோளத்தைப் பெரிதும் பாதிப்பது பூதக்கோள் வியாழனே.  சூரியக் கோள் மண்டலத்தின் வடிவத்தை வார்த்தது வியாழனே.  பூர்வப் புவியில் ஏராளமான பனித்தளப் பண்டங்களை  விதைத்தது வியாழனே.  பிறகுப் புவிமேல் வால்மீன்கள் போன்ற பல கொடூர அண்டங்கள் விழாமல், பாதுகாத்ததும் வியாழனே.  எப்படி முதலில் உருவானது வியாழன் ? மெதுவாக அது உருவானதா ?  அல்லது ஒரே சமயத்தில் ஒற்றை ஈர்ப்பு நிகழ்ச்சியில் குட்டி விண்மீன்போல் தோன்றியதா ?  அது நகர்ந்து வந்த தென்றால், ஆதியில் வடிவானது எப்படி ?  நாசாவின் இந்த ஜூனோ திட்டத்துக்குச் செலவு 1.1 பில்லியன் டாலர்.

    Juno Space Project

    இந்தப் புதிர்க் கேள்விகளுக்கு ஜூனோ விண்ணுளவி பூதக்கோள் வியாழனை 37 முறை 3000 மைல் [5000 கி.மீ.] தூரத்தில் சுற்றிவந்து, பதில் கண்டு பிடிக்கும்.  இதற்கு முன்பு 1995 இல் வியாழனை நோக்கி ஏவிய முதல் கலிலியோ விண்கப்பல் 2003 ஆண் டுவரை சில ஆய்வுகளைச் செய்தது. ஆனால் ஜூனோ பூதக்கோள் வியாழனை ஆழமாய் உளவிடப் போகிறது. வியாழக் கோளின் ஈர்ப்பு விசைத் தளத்தை [Gravitational Field] வரைப்படம் செய்யும்.   அதன் உட்கருவில் இருப்பது என்ன ?  பாறைக் கருவா, உறைந்த திரவமா ? உலோகக் கருவா ?  இந்த வினாக்களுக்கு விரைவில் நல்ல தகவலை ஜூனோ விண்ணுளவி ஆய்ந்து அறிவிக்கப் போகிறது.

    முதலாவதாக 54 நாள் மெதுவான சுற்றுவீதியிலும் [54 Day Slow Speed Orbit] , பின்னர் 14 நாள் வேகச் சுற்றுவீதியிலும் [14 Day Fast Speed Orbit] ஜூனோ பூதக்கோள் வியாழனச் சுற்றிவரும்.  வியாழனின் காந்தசக்தி ஆற்றல் புவிக் காந்த சக்தியை விட 20,000 மடங்கு தீவிர உக்கிர மானது.  இதனை ஆழ்ந்து ஆராய ஜூனோ விண்ணுளவி 20 மாதங்கள் [240 நாட்கள்] வியாழக் கோளைச் சுற்றிவரும்.  இதுவரை பூதக்கோள் வியாழனின் 67 சந்திரன்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.  ஜூனோ தொடர்ந்து மேலும் புது சந்திரன் களைக் காணலாம்.

    Click to Enlarge

    [youtube https://www.youtube.com/watch?v=4O_Wp1tWbcI?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    விண்ணுளவி ஜூனோ வியாழனின் சுற்றுவீதி ஈர்ப்பில் நுழைந்தது

    2016 ஜூலை 4 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணுளவி ஜூனோவின் 650 நியூட்டன் உந்து தள்ளிகள் [Newton Thrusters] 35 நிமிடம் இயங்கி, வேகம் குறைக்கப் பெற்றுப் பூதக்கோள் வியாழனின் சுற்றிவீதி வட்டத்தில் புகுந்தது.  அப்போது விண்ணுளவியின் வேகம் 1212 mph [542 mps (meter per sec] தளர்ச்சி அடைந்து, வியாழனின் ஈர்ப்பு விசை ஜூனோவைத் தன் பிடிக்கொள் இழுத்துக் கொண்டது.  அதற்குப் பிறகு ஜூனோவின் ஆற்றல் மிக்க 18,698 சூரிய ஒளிச் செல்கள் பரிதியால் இயக்கமாகி விண்ணுளவிக்கு மின்சக்தி அளித்தன.

    +++++++++++++++

    “பரிதி மின்சக்தித் தட்டுகள் இணைத்தியங்கும் (Solar Panel Powered) விண்ணுளவிப் பயணத் திட்டமானதால், துருவ நீள் வட்டத்தில் சுற்றும் ஜூனோவின் பரிதி மின்தட்டுகள் எப்போதும் சூரியனை நோக்கியே பறந்து செல்லும்.  விண்ணுளவி வியாழக் கோளின் மறைவுப் புறத்தில் பயணம் செய்யாதபடி நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்.”

    ஸ்காட் போல்டன்,  ஜூனோ திட்டப் பிரதம விஞ்ஞானி

    (ஜூனோ விண்ணுளவியின்) முக்கிய முதலிரண்டு சோதனைகள் :

    1.  பூதக்கோள் வியாழனில் எவ்வளவு நீர் உள்ளது ?

    2.  வியாழக் கோளின் மைய உட்கருவில் இருப்பது கன மூலகங்களின் திரட்சியா அல்லது நடு மையம் வரை இருப்பது அழுத்த வாயுத் திணிவா ?

    ஸ்காட் போல்டன்

    Path & Probe of Juna

    unnamed

     

    “கடந்த நூற்றாண்டுகளில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்”

    காலிலியோ (1564-1642)

    நாமறிந்தவை எல்லைக்கு உட்பட்டவை.  நாமறியாதவை கணக்கில் எண்ணற்றவை.  புரிந்து கொள்ள முடியாத கரையற்ற ஒரு கடல் நடுவே, சிறு தீவு ஒன்றில் அறிவு படைத்த நாம் அடைபட்டுள்ளோம். நமக்குத் தொழில் ஒவ்வொரு பிறவியிலும் நாம் மேலும் சிறிது புதுத் தளத்தைக் கைப்பற்றுவதுதான்.

    தாமஸ் ஹக்ஸ்லி [Thomas Huxley] (1825-1895)


    Inside Jupiter

    2011 இல் பூதக்கோள் வியாழனை நோக்கி மீண்டும் நாசா பயணம்

    ஒரு பில்லியன் டாலருக்கு மேற்பட்ட நிதிச் செலவில் மீண்டும் நாசா 2011 ஆகஸ்டு 5 ஆம் நாள் பிளாரிடா கெனாவரல் ஏவுமுனைத் தளத்தில் சுமார் 200 அடி (60 மீடர்) உயரமுள்ள அட்லாஸ் -5 ராக்கெட்டில் (Atlas -5 Rocket) மனிதரற்ற ஜூனோ விண்ணுளவியை ஏற்றிக் கொண்டு ஆய்வுகள் செய்ய அனுப்பியுள்ளது. ஜூனோ விண்ணுளவி 5 ஆண்டுகள் 1740 மில்லியன் மைல்கள் பயணம் செய்து செந்நிறக் கோள் செவ்வாயைக் கடந்து, கோடிக் கணக்கான முரண்கோள்கள் சுற்றும், முரண்கோள் வளையத்தை ஊடுருவிச் (Asteroid Belt) சென்று, 2016 இல் புறக்கோள் வியாழனை நெருங்கி ஓராண்டு சுற்றி வரத் திட்டமிடப் பட்டுள்ளது.  அட்லாஸ் -5 ராக்கெட் சுடப்படும் முன்பு அதன் மேலடுக்கில் ஹீலியம் ஏற்றும் சாதனத்தில் கசிவு உண்டாகி பிரச்சனை எழுந்ததால், அதை அடைக்க ஏவுக் காலம் சற்று தாமதமானது.  ஆகஸ்டு 5 ஆம் தேதி ஏவப்பட்ட ஜூனோ விண்கப்பல் இப்போது சுமுகமாகப் பயணம் செய்து வருகிறது.

    ஜூனோ விண்ணுளவி முதல் இரண்டு ஆண்டுகள் பரிதியைச் சுற்றி வந்து, பூமிக்கு மீண்டு அதன் ஈர்ப்பு வீச்சு விசையில் மேலும் உந்தப்பட்டு (Earth Flyby) அடுத்த மூன்று ஆண்டுகள் வியாழனை நோக்கி வேகமாய்ச் செல்லும்.  பூமியிலிருந்து 390 மில்லியன் மைல் (640 மில்லியன் கி.மீ.) தூரத்தில் இருக்கும் பூதக்கோள் வியாழனுக்குப் பயணம் செய்ய முதன் முதலாக பரிதி மின்சக்தித் தட்டுகள் (Solar-Panelled Mission) மூன்று அமைக்கப் பட்டு இயங்கும் விண்வெளித் திட்டம் இது.  சூரிய மின்தட்டு ஒன்றின் நீளம் 30 அடி.  அகலம் 9 அடி.  பூதக்கோள் வியாழன் மீது படும் பரிதி ஒளி பூமியின் மீது விழும் ஒளியைப் போல் 25 மடங்கு குறைந்தது.

    ஆகவே ஜூனோ விண்ணுளவி வியாழனின் மறைவுப் புறத்தில் சுற்றாமல் துருவங்களைச் சுற்றி வரப் போகிறது.  இதற்கு முன்பு வியாழன், சனிக்கோள் நோக்கிச் செல்லும் இவ்வித நீண்ட பயணங்களுக்குக் கதிரியக்க முள்ள புளுடோனிய மின்கலம் பயன்படுத்தப் பட்டது.  ஜூனோவில் பரிதி மின்சக்தி திரட்ட, 120 டிகிரிக் கோணத்தில் இருக்கும் மூன்று சூரியத் தட்டுகளில் 18,000 பரிதிச் செல்கள் (Solar Cells) அமைப்பாகி உள்ளன.  பூதக்கோள் வியாழனின் துருவச் சுற்று வீதியில் 33 நீள்வட்டச் சுற்றுக்களை 3000 மைல் (5000 கி.மீ.) உயரத்தில் ஓராண்டு புரிந்து வர ஜூனோ திட்டமிடப் பட்டுள்ளது.  இறுதியில் பரிதி மின்தட்டுகள் பழுதடையும் போது வியாழக் கோளில் ஜூனோ விண்ணுளவி சுற்றுவீதியை முறித்துக் கொண்டு வியாழனில் விழும்படி நாசா விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்துள்ளார்.

    ஜூனோ விண்ணுளவித் திட்டத்தின் முக்கிய குறிப்பணிகள் என்ன ?

    பூதக்கோள் வியாழனே பரிதி மண்டலத்தில் சுற்றிவரும் மற்ற கோள்களை விடப் பெரியது.  அது சூரியனைப் போலிருக்கும் ஒரு வாயுக் கோள்.  வியாழனின் தோற்றத்தை யும் வளர்ச்சியையும் புரிந்து கொண்டால் ஓரளவு சூரிய மண்டலத்தின் ஆரம்பத்தை அறிந்து கொள்ள முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் எண்ணுகிறார்.  ஜூனோ விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள ‘தூர முகர்ச்சிக் கருவிகள்’ (Remote Sensing Instruments) பூதக்கோளின் பல்லடுக்குச் சூழ்வெளியை உளவி அவற்றின் உஷ்ணம், உட்பொருட்கள்,  முகில் நகர்ச்சி, மற்றுமுள்ள தளப் பண்பாடு களைப் பதிவு செய்து, பூமிக்கு மின்தகவல் அனுப்பி வைக்கும்.  மேலும் வியாழனில் தோன்றும் முகில் வண்ணப் பட்டைகளின் உள்ளமைப்பைக் கண்டறியும்.  சிறப்பாக கடந்த 300 ஆண்டு களாகக் காணப்படும் விந்தையான ‘கொந்தளிக்கும் செந்திலகம்’ (Violently-Active Red Spot) என்ன வென்று ஆழ்ந்து அறியப்படும்.

    எல்லாவற்றும் மேலாக பூதக்கோள் வியாழனில் உள்ள நீரின் செழிப்பை அறிந்து ஆக்ஸிஜன் எத்தனை அளவு இருந்தது என்று கணக்கிடவும், பரிதி மண்டலத் தோற்றத்தை உறுதிப் படுத்தவும் பயன்படும்..  அத்துடன் பூதக்கோள் வியாழனுக்கு நடுவே உள்ளது திண்ணிய கடும் பாறையா அல்லது வாயுத் திணிவு மிகுந்து வியாழன் உட்கருவில் அழுத்தமுடன் உறைந்து போய் உள்ளதா என்றும் அறியப்படும்.  வியாழக் கோளின் காந்த தளத்தையும், ஈர்ப்புக் களத்தையும் பதிவு வரைபடக் கருவி வரையும்.  பூதக்கோள் வியானின் துருவக் காந்தக் கோளத்தை (Polar Magnetosphere) உளவி அது எப்படி வியாழனின் சூழ்வெளி வாயு மண்டலத்தப் பாதிக்கிறது என்று ஆராயும்.  ‘வியாழனில் தென்படும் தென்துருவ, வடதுருவ ஓவியக் கோலங்களையும்’ (Polar Auroras) ஜூனோ ஆராயும்.

    வியாழக் கோளை முன்பு சுற்றிய நாசாவின் விண்கப்பல்கள்

    நாசா காஸ்ஸினி விண்கப்பல் (1997- 2004) இல் சனிக்கோளைச் சுற்ற அனுப்புவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, காலிலியோ விண்வெளிக் கப்பல், வியாழனைச் சுற்றிவர ஏவப்பட்டு, ஏராளமான விஞ்ஞானத் தகவல்களைப் பூமண்டலத்துக்கு அனுப்பியுள்ளது. விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ‘நவீன பெளதிகத்தின் பிதா’ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூட்டிய, காலிலியோவின் பெயரைக் கொண்ட நாசாவின் விண்கப்பலே, வியாழனை ஆராயும் முதல் ‘விண்ணுளவி’ [Space Probe] ஆனது !  தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளி யின் முகத்திரையை உலகுக்குத் திறந்து வைத்தவர், காலிலியோ! பூதக்கோள் வியாழனைச் சுற்றும் நான்கு துணைக் கோள்களை முதலில் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ!

    நாசா 1972 இல் ஏவிய பயனீயர்-10, பயனீயர்-11 [Pioneer-10, Pioneer-11], அடுத்து1977 இல் அனுப்பிய வாயேஜர்-1, வாயேஜர்-2 [Voyager-1, Voyager-2] ஆகிய நான்கு முன்னோடி விண்சிமிழ்கள் பயணம் செய்து முதன் முதலில் வியாழன், சனிக்கோளின் விஞ்ஞான விபரங்களை உளவிப் பூமிக்கு ஏராளமான தகவல் அனுப்பின. 1987 இல் அனுப்பிய காலிலியோ விண்கப்பல் எட்டாண்டுகள் பயணம் செய்த பிறகு, 1995 இல் வியாழக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் இழுக்கப்பட்டு, நீள்வட்ட வீதியில் சுற்றி, ஓர் உளவுச்சிமிழை [Probe Module] வியாழ தளத்தில் இறக்கி, விண்வெளி வரலாற்றில் முதன்மை பெற்றது.  ஒரு ‘சுற்றுச் சிமிழும்’ [Orbiter] ஒரு ‘சூழ்வெளி உளவுச்சிமிழும்’ [Atmospheric Probe] இணைக்கப் பட்டிருந்த, காலிலியோ விண்வெளிக் கப்பல் இரண்டு முக்கியப் பணிகளை நிறைவேற்றத் தயாரானது. முதல் பணி வியாழனை நெருங்கி, சுற்றுச்சிமிழ் சுழல்வீதியில் விழானைச் சுற்றிவருவது. அடுத்த பணி உளவுச்சிமிழை விடுவித்து, வியாழ தளத்தில் அதை மெதுவாக இறக்குவது.  மின்சக்தி பரிமாறப் புளுடோனியம் டையாக்ஸைடு [PuO2] பயன்படும் இரண்டு ‘கதிர்வீச்சு வெப்ப ஜனனிகள்’ [RTG, Radioisotope Thermal Generators] அமைக்கப் பட்டிருந்தன.

    கொந்தளிக்கும் செந்திலகம்! பூதக்கோளில் புயல் காற்று !

    வியாழச் சூழகத்தில் பொங்கி எழும் வாயு மண்டலம் வடக்கிலும் தெற்கிலும் பாய்ந்து விரிகிறது! மத்திம ரேகைப் பிரதேசத்தை நோக்கி வீசும் காற்று நீண்ட பாதையில் செல்லும் போது, துருவ முனை நோக்கிப் போகும் காற்றுக் குறுகிய பாதையில் அடிக்கிறது. அவ்வாறு திருப்பம் அடையும் காற்றுகள், மேக மண்டல அடுக்குகளை அறுத்துப் பட்டை, பட்டையாய் [Bands] பிரிக்கின்றன! அப்பட்டை நிற மேகங்கள், சுற்றும் அச்சுக்கு ஒப்பாக 24 மணி நேரத்தில் கிழக்கு நோக்கி 11 டிகிரி கோண அளவு திரிந்து மாறுகிறது! புயல் காற்று மத்திம ரேகையில் அடிக்கும் உச்ச வேகம் 360 mph!

    வியாழனின் பெயர் பெற்ற ‘மாபெரும் செந்திலகம் ‘ [Great Red Spot] சீரிய தொலை நோக்கி தோன்றிய நாள் முதல், 300 ஆண்டுகளுக்கும் மேலாகக் காணப்பட்டு கொந்தளித்து வருகிறது! செந்திலகம் முட்டை வடிவானது! அதன் கொந்தளிப்புக்குக் காரணம் இன்னும் அறியப் படவில்லை.

    முகில் ஆட்டத்திற்குச் செந்நிறத்தைத் தருபவை, புறவூதா [Ultraviolet] ஒளியை விழுங்கும், கந்தகம் [Sulfur], ஃபாஸ்ஃபரஸ் [Phosphorus] போன்றவற்றின் இரசாயனக் கூட்டுறுப்புகள் [Compounds]. மாறிக் கொண்டே வரும் செந்திலகத்தின் தற்போதைய பரிமாணம் 16200 மைல் நீளம்; 8700 மைல் அகலம்.

    மாபெரும் புயல்கள் வியாழ மண்டலத்தில் திடீர் திடீரென வீசி அடிக்கின்றன!சூரியனின் தட்ப, வெப்ப மாறுதலால், பூமியில் சூறாவளி, ஹரிக்கேன் ஆகியவை ஏற்படுகின்றன. ஆனால் வியாழக் கோளின் சூறாவளிப் புயல்கள், கொந்தளிக்கும் உட்தள வாயுக் குமிழ்களால் [Gas Bubbles] எழும்பி, அடர்த்தியான முகில் அடுக்குகளைக் கலக்கி அடிக்கின்றன! வாயுக் குமிழ்கள் தாறுமாறான வெப்பத் திட்டுகளை தாங்கிக் கொண்டு, புயல் காற்றுக்களைக் கட்டுப் படுத்த, வியாழனில் மேடு, பள்ளங்கள், மலைகள் ஏதும் இல்லாது, எல்லாத் திசைகளிலும், குறுக்கு நெடுக்காக முறுக்கி அடிக்கின்றன!

    (தொடரும்)
    ++++++++++++++++

    [youtube https://www.youtube.com/watch?v=f5XQUWDaS8U?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [youtube https://www.youtube.com/watch?v=zAGS_3mcO04?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [youtube https://www.youtube.com/watch?v=4O_Wp1tWbcI?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    ++++++++++++++++

    Juno
    Juno Transparent.png

    Artist’s rendering of the Juno spacecraft
     
    Mission type Jupiter orbiter
    Operator NASA / JPL
    COSPAR ID 2011-040A
    SATCAT no. 37773
    Website
    Mission duration Planned: 7 years
    Elapsed: 6 years, 5 months, 19 daysCruise: 5 years
    Science phase: 2 years
     
    Spacecraft properties
    Manufacturer Lockheed Martin
    Launch mass 3,625 kg (7,992 lb)[1]
    Dry mass 1,593 kg (3,512 lb)[2]
    Dimensions 20.1 × 4.6 m (66 × 15 ft)[2]
    Power 14 kW at Earth,[2] 435 W at Jupiter[1]
    2 × 55-A·h lithium-ion batteries[2]
     
    Start of mission
    Launch date August 5, 2011, 16:25 UTC
    Rocket Atlas V 551 (AV-029)
    Launch site Cape Canaveral SLC-41
    Contractor United Launch Alliance
     
    Flyby of Earth
    Closest approach October 9, 2013
    Distance 559 km (347 mi)
    Jupiter orbiter
    Orbital insertion July 5, 2016, 03:53 UTC[3]
    1 year, 6 months, 19 days ago
    Orbits 37 (planned)[4][5]
    Orbit parameters
    Perijove 4,200 km (2,600 mi) altitude
    75,600 km (47,000 mi) radius
    Apojove 8.1 million kilometers
    Inclination 90 degrees (polar orbit)
    [show]Instruments
    Juno mission insignia.svg

    Juno mission insignia

    Picture Credit : NASA, ESA,

    1. Galileo Project Information http://www.nssdc.gsfc.nasa.gov/planetary/galileo.html

    2. Exploration of the Planets By: Brian Jones [1991]

    3. Jupiter By: Garry Hunt & Patrick Moore

    4. Galileo Orbiter & Probe By: Michael Wilcox [Nov 16, 1995]

    5. Solar System Exploration: Mission Jupiter, Galileo

    6. Astronomy By: Reader ‘s Digest [1998]

    7. Galileo Project: http://www.jpl.nasa.gov/galileo NASA/JPL Press Release [Feb 26, 2003]

    8. National Geographic News : On August 5th NASA Spacecraft is Slated to Launch on a     Five-year Journey to Jupiter (August 4, 2011)

    9. Space Daily : NASA Launches Juno to Jupiter (August 5, 2011)

    10. BBC News : Juno Probe Heads for Jupiter from Cape Canaveral (August 5, 2011)

    11. NASA Report : NASA’s Juno SpacecraftLaunches to Jupiter (August 5, 2011)

    12. http://www.spacedaily.com/reports/Glorious_Glowing_Jupiter_Awaits_Junos_Arrival_999.html  [June 28, 2016]

    13.  http://www.dailygalaxy.com/my_weblog/2016/07/nasas-juno-mission-will-it-solve-the-mystery-of-jupiters-magnetic-field-strongest-in-our-solar-syste.html?  [July 1, 2016]

    14. http://www.spacedaily.com/reports/NASAs_Juno_spacecraft_begins_bid_to_orbit_Jupiter_999.html  [July 5, 2016]

    15. http://www.spacedaily.com/reports/NASAs_Juno_spacecraft_orbits_Jupiter_king_of_solar_system_999.html  [July 5, 2016]

    16. http://www.spacedaily.com/reports/What_is_the_goal_of_Junos_mission_to_Jupiter_999.html  [July 5, 2016]

    17.  http://www.bbc.com/news/science-environment-36700048  [July 4, 2016]

    18.  https://en.wikipedia.org/wiki/Jupiter  [July 7, 2016]

    19.https://en.wikipedia.org/wiki/Juno_(spacecraft)

    20. https://www.space.com/topics/nasa-juno-jupiter-mission-news

    21.  https://www.nasa.gov/mission_pages/juno/main/index.html

    22.   [Jahttps://www.space.com/39487-juno-pictures-reveal-jupiter-stripes.htmlnuary 25, 2018]

    ++++++++++++++++++

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (January 27, 2018)  [R-2]

    https://jayabarathan.wordpress.com/

    Attachments area
    Preview YouTube video What Happened to the Juno Spacecraft?

    What Happened to the Juno Spacecraft?

    Preview YouTube video First Science From Juno at Jupiter (NASA News Audio with Visuals)

    First Science From Juno at Jupiter (NASA News Audio with Visuals)

    Preview YouTube video 2017 SCIENCE LECTURE ABOUT JUNO MISSION TO JUPITER

    2017 SCIENCE LECTURE ABOUT JUNO MISSION TO JUPITER

    Preview YouTube video Jupiter: Into the Unknown (NASA Juno Mission Trailer)

    Jupiter: Into the Unknown (NASA Juno Mission Trailer)

    Preview YouTube video Galileo Jupiter Atmospheric Entry Probe Spacecraft “Mission to Jupiter” 1989 NASA JPL

    Galileo Jupiter Atmospheric Entry Probe Spacecraft “Mission to Jupiter” 1989 NASA JPL

    Preview YouTube video Jupiter Juno mission: 5 facts you need to know- BBC News

    Jupiter Juno mission: 5 facts you need to know- BBC News

    Preview YouTube video Juno probe enters into orbit around Jupiter | A big Jump in Space

    Juno probe enters into orbit around Jupiter | A big Jump in Space
    Share
  • ரமண வசனாம்ருதம்….!

     

    ”உள்ளதைப் பார்த்திரு உள்ளது நாற்பது
    கள்ளுண்டோர் காணார் கலயத்தை: -மெள்ளநீ
    வந்தவழி சென்று வரவேற்பாய் ஆன்மனை:
    மொந்தை அகந்தை மொழி’’….கிரேசி மோகன்….!

    “எந்தவேலை ஆனாலும் எந்தவேளை ஆனாலும்,
    சிந்தையில் சித்தை சுகித்திருக்க, -அந்த,
    சமாதி லயமே சகஜமாகும் ,பட்ஷம்,
    சமாதானம் ஆகும் சலிப்பு”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    yadavabhyudayam 11 - Kalia -lr - Krishna on the hood of Kaliya looked like his footrest made of sapphire studded with ruby with the red eyes of Kaliya. He danced on the five heads of Kaliya (the five senses) extricating the poison of sensual desires) — when the mind climbs over the senses and dances with the ecstacy of the love for Krishna, the Kaliya is subdued and mind is at peace. This can be done only when Krishna takes possession of the mind.
    yadavabhyudayam 11 – Kalia -lr – Krishna on the hood of Kaliya looked like his footrest made of sapphire studded with ruby with the red eyes of Kaliya. He danced on the five heads of Kaliya (the five senses) extricating the poison of sensual desires) — when the mind climbs over the senses and dances with the ecstacy of the love for Krishna, the Kaliya is subdued and mind is at peace. This can be done only when Krishna takes possession of the mind.

    ”காளிங்கன் மந்திமனம்,மாலிங்கு ஐம்புலனை
    சோளிங்கர் சிங்கமாய் சீர்படுத்தல்: -தாளிங்கு,
    தேசிகர் சொன்னாற்போல் தெய்வ அவதாரம்
    பாசிநிறக்(பச்சை மால்) கண்ணன் பதம்’’….கிரேசி மோகன்…!

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (23)

     

    மீ.விசுவநாதன்
    பகுதி: 23

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1

    திரிசங்கு மன்னன்

    சூர்யகுலத் தோன்றலான “திரிசங்கு” மன்னன்

    கொண்டிருக்கும் உடலோடு சொர்க்கத்தைச் சேர

    பாரினிலே ஒருவருமே செய்திடாத வேள்வி

    பண்ணிடவே எண்ணினான்; வசிட்டரிடம் சென்று

    நேர்மைமிகு குருநீங்கள் எனக்குதவ வேண்டும்

    நிலத்தினிலே உமக்கீடு யாருமில்லை என்றான்

    ஊரினிலே இல்லாத பழக்கமெனச் சொல்லி

    உடனேயே அனுப்பிவிட்டார் வசிட்டரெனும் ஞானி.

    வசிட்டரின் பிள்ளைகளைத் “திரிசங்கு” வேண்ட,

    “மகத்தான குருவினது வார்த்தையினைக் கேளா

    விசித்திரனே சண்டாள வேடம்நீ கொள்வாய்

    விரைந்துடனே சென்றிடுவீர்” என்றுரைத்தார்; மன்னன்

    நசித்திருக்கும் மனத்தோடு கௌசிகரைப் பார்த்தான்

    நடந்ததெலாம் சொன்னவுடன், “நானுன்னைக் காப்பேன்

    பசியறியா விண்ணுலக விருப்பமதைத் தீர்ப்பேன்

    பதறாமல் இருங்களென” வேள்விதனைச் செய்தார் !

    திரிசங்கு சொர்க்கம்

    வேள்வித்தீக் குள்ளிருந்து தேவர்கள் வந்து

    விரும்பியதைப் பெற்றனர் ; திரிசங்கு மன்னன்

    கேள்விக்கு விடையாக தேவலோகம் சென்றார் !

    கீழுலகம் செல்லேன்றே தேவர்கள் தள்ள

    தாள்மேலும் தலைகீழு மாகவே வீழ

    தாங்கினார் கௌசிமுனி, தனியாக சொர்க்கம்

    ஆளென்று திரிசங்கு சொர்கத்தைச் செய்தார்

    அதற்கும்தான் தேவர்கள் ஆசிகளும் தந்தார்.

    (தர்ம சரிதம் வளரும்)

    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 57,58,59,60ம் பகுதி நிறைந்தது)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180126 - Yadavabhyudayam 10 - Krishna returns from the forest in the evening, guiding the cattle home. Covered with dust, the evening sun playing with shadows on his person. To the gopikas of Gokula , it was as though Kamadeva was marching with his full army.  lr- indian ink -watercolour
    180126 – Yadavabhyudayam 10 – Krishna returns from the forest in the evening, guiding the cattle home. Covered with dust, the evening sun playing with shadows on his person. To the gopikas of Gokula , it was as though Kamadeva was marching with his full army. lr- indian ink -watercolour

    ’’பொன்னிற வண்ணப் புழுதி எழுந்துயர்
    விண்ணவர் கண்ணில் விழுந்திட -செந்நிற
    மாலையில், கோபியர்க்கு மன்மதன் தோற்றத்தில்,
    வேலை(பசுக்களை மேய்த்தல்) முடிந்துமால் வீடு’’….கிரேசி மோகன்….!

    Share