நான் அறிந்த சிலம்பு – 241
மதுரைக் காண்டம் – கட்டுரைக் காதை
வார்த்திகனைச் சிறை விடுத்து, அவனுக்கு இரண்டு ஊர்களை அளித்தல்
நல்ல நீர் வளம் மிக்க கழனிகள் சூழ்ந்த
அந்த திருத்தங்கால் எனும் ஊருடன்
குறைவில்லாத விளைச்சல் விளையும்
வயலூர் என்ற ஊரையும்
அவனுக்கு மானியமாய் வழங்கிக்
கற்புடைய கார்த்திகை என்னும் பெண்ணுக்கும்
அவள் கணவன் வார்த்திகனுக்கும் முன்னே
பெரிய நிலமடந்தையாம் தம் தேவிக்குத்
தன் மார்பினில் இடம் அளித்து,
அவளது தணியாத காமத்தையும்
சற்றே தணிக்கும் வண்ணம்
நிலத்தில் விழுந்து கும்பிட்டான்.
அந்தப்பொழுதில்,
என்றும் நிலையாக விளங்கும்
கூடல் மாநகரின் நீண்ட வீதிகளில்
மலை போன்று உயர்ந்து நின்ற
மாடமாளிகைகள் எங்கும் கேட்கும்படி,
மானை ஊர்தியாகக் கொண்டு அமர்ந்திருந்த
கொற்றவையின் கோயில் கதவுகள்
மிக்க ஒலியுடன் திறந்தன.
மன்னன் மனம் மகிழ்ந்து,
“சிறை அதிகாரிகள் சிறைக்கதவுகள் திறந்து
எல்லோரையும் விடுதலை செய்யுங்கள்” என்றும்;
வரி வசூல் செய்பவர்கள்
மக்களிடம் இருந்து பெற வேண்டியது
எவ்வளவு வரியானாலும்
அதை வசூல் செய்யாது விடுங்கள் என்றும்;
பிறர் கொடுத்த பொருள் என்றால்
அதை பெற்றுக் கொண்டவர்க்கும்
புதையல் என்றால்,
அது எடுத்தவர்க்கும் சொந்தமாகும் என்றும்”
யானையின் பிடரியில்
அழகிய முரசினை ஏற்றி வைத்து,
அரசு ஆணையைப் பறையடித்து அறிவித்தான்.
இங்ஙனம் தன் செங்கோல் முறைமையை
மக்களுக்கு அறிவித்த வெற்றி வேந்தன்
“பாண்டிய செடுஞ்செழியனே
முறை தவறிய காரணத்தைக் கூறுகிறேன்
அதையும் கேட்பாயாக” என்று கூறினான்.