செண்பக ஜெகதீசன்

 

 

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ                                                                 

டியைந்துகண் ணோடா தவர்.

       -திருக்குறள் -576(கண்ணோட்டம்)

 

புதுக் கவிதையில்…

 

பெற்றிருக்கும் கண்ணால்

பிறர் துன்பத்தைப்

பார்த்து

இரக்கம் கொள்ளாதவர்

இயங்கினாலும்,

மண்ணில் பொருந்தி

நின்றிருக்கும்

மரத்துக்கு ஒப்பாவர்…!

 

குறும்பாவில்…

 

கண்ணால் பார்த்து இரக்கம் கொள்ளாதார், 

மண்ணில் பொருந்தி இயக்கமிலா 

மரம் போன்றவர்களே…!

 

மரபுக் கவிதையில்…

 

மண்ணில் மாந்தர் படுந்துன்பம்

     மாறிட மனதில் இரக்கத்துடன்

கண்ணை யியக்கிப் பார்ப்பதுதான்

     கடமை கண்ணைப் பெற்றவர்க்கே,

கண்ணி னிந்த ஓட்டமதைக்

     கருத்தில் கொள்ளா மாந்தரவர்,

மண்ணில் பொருந்தி நிலைபெற்ற

     மரத்தினை யொப்பார் அறிவீரே…!

 

லிமரைக்கூ..

 

கண்ணோட்டம் வேண்டும் கண்ணில்,

இரக்கபார்வை ஈதில்லாதவன், அசையாது

நிற்கும் மரம்போன்றவன் மண்ணில்…!

 

கிராமிய பாணியில்…

 

வேணும் வேணும்

கண்ணுக்கு வேணும்,

எல்லாரயும் பாக்கும்

எரக்க பார்வ..

 

கண்ணுரெண்ட வச்சிக்கிட்டு

அடுத்தவன் தும்பத்தப் பாத்து

எரக்க்கப்படாதவனும்,

மண்ணுல நெலச்சிநிக்கும்

மரமும் ஒண்ணுதான்..

 

அதால,

வேணும் வேணும்

கண்ணுக்கு வேணும்,

எல்லாரயும் பாக்கும்

எரக்க பார்வ…!

 

-செண்பக ஜெகதீசன்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.