ஓரெழுத்து ஒரு மொழி
காவில் மேயும் ஆவின் பாலருந்தி
ஊ வளர்த்தால் சா வா என்றால் வருமா?
பர்கரும் பீட்சாவும் உண்டு வளரும்
பாலகர்க்கு நோ போ என்றால் போகுமா?
மையிருள் குயிலின் மெல்லிறகைக் கொய்தபின்
கூ என்று பணித்தல் தகுமோ?
அகரம் கற்கும் கள்ளமில்லா குழந்தையிடம் நீ
காம்போதியில் பாடென்பது தகுமோ?
மென்மலரின் மெல்லிதழை மெல்ல மெல்ல கொய்தபின்
பூ என்று சொல்லுதல் முறையா?
அகவைக்குரிய அளவினதாக கற்கும் கல்வி இல்லாமல்
அளவுக்கதிக சுமையை திணித்தல் முறையா?
ஏ எய்த அறியான் கையில் கோ
சோவை கா என்பது நலமா?
தக்கோன் அல்லாதான் தான் கொண்ட பள்ளியில்
தளிர் குழந்தையை சேர்ப்பது என்பது நலமா?
மையழகு தையலை நீ சாவென தீ நாவில் சுட்டு பின்
அன்பை தா என்றால் தருவாளா?
பெற்ற கல்வியின் நோக்கத்தை உணர்த்த மறந்து பின்
பெற்ற பிள்ளை பேணவில்லை என்பது சரியா?
-ஆ. செந்தில் குமார்
பொருள் :-
கா – கானகம், காத்தல்
நோ – நோய்
ஆ – பசு
ஊ – ஊன், தசை
சா – இறப்பு , இறந்து போ
கூ – கூவு என பணித்தல்
பூ – மலரவும் என பணித்தல்
ஏ – அம்பு
கோ – அரசன்
சோ – அரண்
மை – கண் மை
தையல் – பெண்
நா – நாக்கு
நன்றி : கூகிள் இமேஜ்