Blog

  • எழுத்து – 6

    வேதா. இலங்காதிலகம்

    thamizh

     

     

     

     

     

     

     

     

    எண்ணங்களின் நிழல், எண்ணப் படங்கள்
    எண்ணப் பறவைகள், எண்ணங்களின் கும்மி
    எண்ணக் கொலுசுகள் வண்ணப் பரதம்,
    திண்ணமான அகத் தீயின் கொழுந்துகள்!
    கைநழுவி உதிர்வதல்ல எழுத்துகள்
    கைகாட்டும் வழிகாட்டி, கைத்தடியின்னும் பல.
    திசையறியாது வீழும் இறகல்ல பெரும்
    நசையோடுதிரும் வாசமுடை மலர் எழுத்து.

    நீதிக் கதவின் திறவுகோல் எழுத்து.
    பீதியின்றி உலகையும் அளக்கிறது நிறுக்கிறது.
    தீதுடை உலக மௌனத்தை ஊடுருவுகிறது.
    ஆதி சைகை, குறியீடு, கல்வெட்டு
    ஓலைச்சுவடியென்று விழுந்த கற்பக விதை.
    மூலைகளில் ஒதுங்கிய துன்பம் கிழிக்கும்
    ஆழ்ந்த மௌனத்தை ஆலயமணி ஓசையாய்
    வீழ்ந்து சுவாசம் நிறைக்கும் எழுத்து.

    எழுத்துப் பால் உறிஞ்சி உறிஞ்சியே
    எழுச்சியுடன் மனிதன் பாரில் பண்டிதனாகிறான்.
    எழுவாய் சொற்பிழம்பே! தயக்கங்களின் தடியடியில்
    எழுத்துக்களின் உராய்வு ஒரு நிசப்தக் குழியில்
    விழுந்தால் இலட்சிய நுரைகள் என்னாவது!
    ஏகலைவன் கணையால் சொற்கோடுகளின் ஆலிங்கனத்தில்
    வாக்கியங்கள் இரசவாதமாய் வீறுநடை போடும்.
    பாக்கியமாகி ஏற்றும் ஊதுபத்தி வாசனையேயெழுத்து.

     

    Share
  • ரமண வசனாம்ருதம்….!

     

    கிரேசி மோகன்
    ——————————–

    “முட்டைக்குள் குஞ்சாக ,கொட்டைக்குள்(மாங் கொட்டை) பிஞ்சாக ,
    சட்டைக்குள் (மேனிக்குள் )வாழ்கின்ற ஜீவனே , -பட்டைகள் –
    தீட்டியநீ வைரம் ,திருடன் வரும்வரையில்,
    காட்டி யயிடத்தில் குந்து “….(1)

     
    மாயநான் ஆணவம் மாற்றிடும் கோவணம்
    தூயநான் நிர்வாண தெய்வீகம் -நாயனார்
    யோகி ரமணரின் யோசனையைக் கேட்டுணர்வோர்
    சாகிறதை வென்ற சவம்….(2)

    கண்டேன் திருடனைக் கையும் களவுமாய்
    கொண்டேன் மனச்சிறையில் கைதியாய் -அண்டேன்
    இனியவன் பக்கம் தனிமையே சொர்கம்
    கனிநான் அவன்கள்ளக் காய்….(3)

    ஒப்புக்கு சப்பாணி ஊருக்கு மாங்கொட்டை
    சொப்புக்(கு) ஆடும் சிறுவனெனும் -இப்பக்
    குவம்வந்தால் ஈரேழு கண்டங்கள் ஆண்டும்
    தவம்செய்து வாழ்வோம் தனித்து….(4)

    சமத்துவ வேந்தன் சமர்த்தனுன் ஆன்மா
    அமர்த்தவனை சிந்தையில் ஆள -விமர்சனம்
    செய்யும் மனசாட்சி பொய்யின் அரசாட்சி
    நெய்யெதற்கு வெண்ணை நமக்கு…(5)…. கிரேசி மோகன்….!

     

     

    Share
  • ஆய்ச்சியர் மத்தொலி

    -மீனாட்சி பாலகணேஷ்

    தொல்காப்பியம் மாயோனாகிய திருமால், சேயோன் எனப்படும் முருகன், வேந்தன் எனப்படும் இந்திரன், வருணன் ஆகியோரை நானிலத் தெய்வங்களாகக் காட்டுகின்றது.

    மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்,
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்’  (தொல்காப்பியம்- அகத்திணையியல் –  பொருளதிகாரம்)

    பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களையும் அவை பற்றிய செய்திகளையும் பாடல்களில் இணைத்துக் கூறுவதுண்டு என முன்பு கண்டோம். முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பிள்ளைத்தமிழ் நூல்களில் குறிஞ்சிநிலம் பற்றிய செய்திகள் பெரிதளவில் பேசப்பட்டுள்ளன. பாட்டுடைத்தலைவன், தலைவியின் நாட்டு வளத்தைப் போற்றிவரும் பாடல்களில் வயல்சூழ்ந்த மருதநிலம், கடற்புறமான முத்துக்கள் விளையும் நெய்தல்நிலம், ஆகியன மிக விரிவாக விளக்கப்படுகின்றன எனக் கண்டோம். முல்லை, பாலை நிலங்கள் தொடர்பான செய்திகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. திருமால் பற்றிய பிள்ளைத்தமிழ் நூல்களிலும் முல்லைநிலம் பற்றிய வருணனைகளும் பாடல்களும் காணப்படவில்லை என்பது வியப்பையளிக்கின்றது. இக்கட்டுரையில் முருகப்பிரானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட பிள்ளைத்தமிழ் நூலொன்றிலிருந்து முல்லைநிலத்தின் வளத்தினைப் பற்றிய ஒரு பாடலைக் காண்போம். சிதம்பர அடிகளார் இயற்றியுள்ள திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழின் சிறுபறைப் பருவப் பாடலிது.

    அழகான திருப்போரூர் முல்லைநிலங்கள் செறிந்தவூர். meenatchi1இவ்வூரின்கண் பலவிதமான ஒலிகள் எப்போதும் எழுந்த வண்ணமாக உள்ளன. தயிரின் முடைநாற்றம் கமழும் மெல்லிய உருவம் கொண்ட இடைப்பெண்களின் மத்துக்கள் அவர்கள் தயிர் கடையும் கலங்களில் முழங்கும் ஒலி ஒருபுறம் கேட்கிறது; பசுக்களின் கூட்டங்கள் தம் கன்றுகளை நினைத்தமட்டிலேயே அழகான குடம்போலும் மடித்தலத்திலுள்ள பாலைச் சுரந்து கன்றுகளை எண்ணிக் கத்தும் முழக்கமும் மிகுதியாகக் கேட்கின்றது.

    இசையமைந்த துளைகளினூடே விரல்களைப் பொருத்திப்பிடித்து தொறுவர்கள் எனப்படும் இடையர்கள் ஊதும் புல்லாங்குழலோசையும்  கேட்கின்றது. பலவிதமான நிறங்கள் கொண்ட காட்டுக்கோழிகள் முறைமுறையாக நின்று நெருங்கிக் கூவும் ஓசையும் எழுந்தவண்ணம் உள்ளது.

    செழித்து விளைந்து மலர்ந்த செம்முல்லை மலர்களில் வரிவண்டுகள் அமர்ந்து விளரிப்பண்ணை இசைக்கும் அழகிய இனிய முழக்கமும் கேட்கின்றது. காலை விடியற்போதில் எழும் கடலின் ஒலியைப்போல இந்தப் பலவகை முழக்கங்களும் மிகுதியாக எழுகின்ற தன்மை கொண்டது இப்போரூரின் முல்லைநிலங்கள்.

    அம்முல்லை நிலத்தில் வாழ்பவனும் ‘குளமலி கண்ணனா’கிய சிவன் தந்தருளியவனுமான முருகப்பெருமானை, “முருகா, நீ சிறுபறை கொட்டுக! முத்தமிழினை மெத்த வளர்த்தவனே! சிறுபறை கொட்டுக!”- என வேண்டுவதாக அமைந்த பாடல்.

    ஒருவரைப் பற்றிக் கூறும்போது அவர் புகழ்வாய்ந்த குடும்பப் பின்னணி உடையவராயின் அவர் பெற்றோர், மற்ற உறவுமுறைகளைக்கூறி அவரைப் பெருமைப்படுத்துவது வழக்கம். அதுபோன்றே இப்பாடலில் முருகனின் புகழ்வாய்ந்த தந்தையாகிய சிவபிரானின் புகழையும் விளக்கியுள்ளார் புலவர். குலம்- குடிப்பெருமை கூற ‘குளமலி கண்ணன் தரும் இறை’ எனச் சிலசொற்களையே கூறுகிறார். குளம் = நெற்றி; அலிகம்- நெற்றி. நெற்றிக்கண்ணனாகிய சிவபெருமான் தந்தருளும் முருகக்கடவுள் என்கிறார்.  வேறென்ன பெருமை வேண்டும் முருகனுக்கு? அவனும் தன் பங்கிற்கு முத்தமிழையும் தனது பெற்றோரைப்போல் தொடர்ந்து வளர்த்து அருளுபவன் அல்லவா?

    “அளைகடை முடைகது வியதளிர் வடிவத்
    தாய்ச்சியர் மத்தொலியும்
    அங்குட மடிமுலை விம்மிக் கன்றுளி
    ஆன்நிரை கத்தொலியும்
    ……………………………………
    …………………………முல்லைக்
    குளமலி கண்ணன் தருபோ ரூரிறை
    கொட்டுக சிறுபறையே” (திருப்போரூர் முருகன் பி. த.- சிறுபறைப்பருவம்- சிதம்பர அடிகள்)

    முல்லைநிலத்திற்கான பண் ‘விளரிப்பண்’ என்பது இதிலிருந்து பெறப்படுகின்றது. ஆனால் தமிழிசை மரபுப்படி விளரிப்பண்ணானது மருதநிலத்துக்கு உரிய பண்ணாகும். வண்டுகளின் ஒலியே விளரிப்பண் என அறியப்படுகின்றது. இவ்வாறு திணைமயங்கி வருவதும் ஓர் இலக்கிய உத்தியாகக் கருதப்படுகிறது.

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அம்மானைப் பருவத்துப் பாடலொன்றில், ‘விளரிப் பண்ணைப் பாடுகின்ற வண்டுகள் முழங்குகின்ற கூந்தலையுடைய கொடி போன்றவளே!’ என அன்னை விளிக்கப்படுகிறாள்.

    ‘விளரிமி ழற்றருளி குமிறுகு ழற்கொடி.’

    இப்பாடலில் புல்லாங்குழலை இடையர்கள் வாசிக்கும் முறை நுட்பமாகக் கூறப்பட்டுள்ளது. மூங்கிற்குழலில் அமைக்கப்பட்ட துளைகளில் (இசைக்கேற்ப) விரல்களை மாற்றிமாற்றிப் பொருத்தி (அவற்றை மூடியும் திறந்தும்) இசைக்கிறார்கள் என விளக்கமாகக் கூறியுள்ளமுறை நயக்கத்தக்கது. இவ்வாறு நுணுக்கமான நயங்களை ஆங்காங்கே தாமியற்றியுள்ள பாடல்களிலும் நூல்களிலும் பொருத்திப் பாடியுள்ளமையும் வியக்கத்தக்கது. ஆராய்ந்து கண்டெடுத்து படித்து நுகரவேண்டும்.

    ****

    அடுத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலங்களையும் ஒரு தொடராக நயந்து பாடிய பாடலொன்றினை குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ் செங்கீரைப்பருவத்துப் பாடல்வாயிலாகக் காணலாம்.

    meenatchiகுமரன் குடிகொண்டுள்ள குறுக்குத்துறையெனும் ஊரானது பொருநை எனப்படும் தாமிரபரணி நதியினருகே அமைந்துள்ள அழகியதோர் ஊராகும். குமரனெனும் குழந்தையைச் செங்கீரையாட வேண்டிடும் புலவர், அப்பொருநை நதியின் அலைமுழக்கிற்கியையச் செங்கீரையாட வேண்டுகிறார். அந்நதியின் பெருமையை விளக்க அது ஓடிச்செல்லும் பாதையை நயமுற விரித்துரைப்பதே இப்பாடல். வேதங்களிலும், புராணங்களிலும், இலக்கியங்களிலும், வரலாற்றிலும் உயர்வாகப்பேசப்படும் நதி தாமிரபரணியாகும்.

    தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு
    முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்,
    என்றும் அவன் உறைவிடம் ஆம்; ஆதலினால்,
    அம்மலையை இறைஞ்சி ஏகி,
    பொன்திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்
    திரு நதி………’ எனக் கம்பராமாயணமும் போற்றுகிறது.

    ‘தெற்கேயுள்ள தமிழ்நாடான பாண்டியநாட்டுப் பகுதியில் அகன்ற பொதியமலையில் நிலைபெற்ற சிறந்த அகத்தியமுனிவனது தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தால், அது எப்போதும் அம்முனிவன் வாழும் உறைவிடமாகும். அம்மலையை வணங்கிச் சென்றால் அப்பால், பொன்துகள்கள் நிரம்பிய நீர் பெருகும் பொருநை எனும் திருநதியைக் காண்பீர்கள்,’ என சுக்கிரீவன் கூறுவதாக அமைந்த பாடல்.

    பொதிகை மலையின் உச்சியினின்றும் குதித்து இறங்கி ஓடிவரும் நதி, முதலில் தினைப்புனங்கள் நிரம்பிய மலைகள் சார்ந்த குறிஞ்சிநிலத்திற்கு வளங்களைச் சேர்க்கின்றது. பிரம்மாவின் மகனான புலத்திய முனிவரின் மகனாகிய அகத்தியரின் பெருமையை உலகிற்கு அறிவிக்கின்றது இப்பொருநை நதி.

    எவ்வாறு?

    பெருமை வாய்ந்த உயர்ந்த முனிவர்களுள் அகத்திய முனிவர் முதன்மையானவராவார். அகத்தியர்meenatchi2 கைக்கமண்டலத்தைக் காக வடிவில் வந்த விநாயகன் தட்டி விட்டதனால் சிந்திய நீரினின்றும் உற்பத்தியானவள் காவிரி நதியாள்*. தம்முடைய கமண்டலத்தில் அடைபட்டிருந்த நீரை, பூமி செழித்து வளம் பெறவேண்டும் என்பதற்காக, அகத்தியர் தாமே உவந்து திருவுள்ளங்கொண்டு கவிழ்த்ததனால் தாமிரபரணி என அறியப்படும் தண்பொருநை* நதியாள் பெருகியோடினாள் எனக் கூறப்படுகிறது. அது மட்டுமின்றித் தன்னில் வந்து நீராடுவோருக்கு, அவர்களுடைய பாவங்களைக் களைந்துவிடும் தன்மையும் கொண்டவள் அவள். பின்பு பெருமை சேர்ந்த காடுசார்ந்த இடமாகிய முல்லைநிலங்களின் வழியாக, அவற்றின் வளங்களைக் கண்ணுற்றபடி செல்கின்றாள்.

    அடுத்து, பலவிதமான பயிர்கள் விளைவிக்கப்பட்டுள்ள வயற்பிரதேசமாகிய மருதநிலத்தில் புகுந்து உலவிச் செல்கிறாள் தாமிரபரணியாள். அவ்வாறு உலவுங்கால், அகன்று விரிந்து வயல்களில் நீரெனத் தேங்கி, நெல்லினை விளைவித்தும் மகிழ்கிறாள்; குமரியெனக் குதிநடை போடாமல் அடங்கி மென்னடை நடந்து ஸ்ரீவைகுண்டம் எனும் புண்ணியத் தலத்தைச் சேர்ந்து வழிபடுகிறாள்; பின்பு அங்கிருந்தும் நீங்கி கடல்சார்ந்த நெய்தல் நிலத்தில் புகுகிறாள் அவள். அங்குகுழை எனப்படும் ஒருவகை நெய்தல்நில மலரில் புகுந்து தங்கியிருந்து இளைப்பாறுகிறாள். பின் எழுந்து உருண்டுபுரண்டு ஓடுபவள் அழகிய கடலின் கரங்களால் அரவணைத்துக் கொள்ளப்படுகிறாள். இவ்வாறு பெருமை கொண்ட நதியான தண்பொருநையின் முழக்கத்திற்கு இசைவாக நீயும் நயமாக செங்கீரை ஆடிடுவாயாக! குறுக்குத்துறை நாதனான குமரனே! செங்கீரையாடுக! என வேண்டுகிறார் புலவர்.

    தண்பொருநையான தாமிரபரணியின் பாதையை இயற்கையின் இனிய காட்சிநயத்துடன் விளக்கும் பாடல்.

    பொதிகைப் பொருப்பின் குதித்திறங்கிப்
    புனஞ்சேர் குறிஞ்சி வளம்பெருக்கிப்
    புலத்தி யன்றன் சுதன்பெருமை
    புவிக்கே காட்டித் தனைச்சேர்ந்தார்
    ………………………………………………
    நதியாம் பொருநை யலைமுழக்கில்
    நயந்தா டிடுக செங்கீரை
    நலமார் குறுக்குத் துறைநாதா
    நன்கா டிடுக செங்கீரை.

    (புலத்தியன் தன் சுதன்- புலத்திய முனிவரின் மகனான அகத்தியர்)

    (குறுக்குத்துறை குமரன் பி. த.- செங்கீரைப்பருவம்- வித்துவான் தி. சு. ஆறுமுகம் எனும் சிவதாசன்)

    *நதிகளைப் பெண்ணெனக் குறிப்பிடுவது நம் நாட்டு வழக்கு.

    ***************

    ஆய்வுக்கு உதவிய நூல்கள்:

    1. திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்- சிதம்பர அடிகள்
    2. குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்- சிவதாசன்.

    *****

    கட்டுரையாளர்
    முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்

     

    Share
  • இரவின் தனிமை

     

       சந்திரா  மனோகரன்

     

     

    எனக்கும்  அவனுக்குமிடையே

    முறுவலின்  அலைகள் !

    படகின்  மிதப்பில் —

    குளிர்மாலை  ஒளியில் —

    ஏரியின்  சிலிர்ப்பில்–

    அடைபட்ட  எண்ணங்கள்

    அவன் எதிர்பார்ப்பின்றி

    *பட பட * வென்று …

    அவன்  மௌனம்  இனியது

    சிற்றலைகளின்  அமைதியில்

    சிதறி  உடையும்  சொற்கள்

    மழைச் சாரல்  ஏரியை

    துளைத்தெடுக்கின்றன

    நீண்ட  நதிபோல்

    நெளிந்து கிடக்கும்  நீர்க்குளம்

    அவன்  மோனமும்  துணிவும்

    முடிவற்ற  பரிச்சயம்  எனக்கு

    இடையிலென்ன  இரும்புத்திரை ….

    தடுப்புச்சுவர்  அழியட்டும்

    நீரலைக்குள்  நீர்த்துப்போகட்டும்

    கரிய இரவுப்பயணம்  முடிந்துவிடும்

    கரைந்த  மோனத்தின் சில்லுகள்

    நிழல்களாய்ப்  படிகிறது , நீரில்

    மங்கலாய்த்  தெரியும்  கரையில்

    பளீரிடும்  நம்பிக்கை !

    சிற்றொளியில்  உதிரும்  சோகம்

    அவன்  மட்டும் கால்பதிக்க …

    பாவம்  பேதை

    வாழ்வின்  இரகசியம் புரியாதவள் !

    ஏரியும்  தோணியும் துணையற்ற  இருளும்

    என்னை ஏந்திய வண்ணம்  !

     

     

     

     

     

     

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 35

    க. பாலசுப்பிரமணியன்

     மனம் படுத்தும் பாடு

    திருமூலர்-1-3

    இறைவனை நாடும் முயற்சியில் நாம் எவ்வளவுதான் ஈடுபட்டிருந்தாலும் நமது மனம் அடிக்கடி நம்முடைய கட்டுப்பாட்டிலிருந்து விலகி எங்கெங்கோ அலைபாய்கின்றது. இதைத்தான் நினைக்கவேண்டும், இதற்குள்தான் சிந்திக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளெல்லாம் அதற்கில்லை. தேவையற்ற சிந்தனைகளுக்கு அடிமையாகி நாம் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். நம்முடைய முக்கிய நோக்கங்களும்  குறிக்கோள்களும் பாதை தவறிப் போகின்றன. இந்த அவலநிலைக்குத் தன்னைக் கொண்டுவிட்ட நெஞ்சை மாணிக்கவாசகர் எவ்வாறு சாடுகின்றார் தெரியுமா?

    வாழ்கின்றாய் வாழாத  நெஞ்சமே வல்வினைப்பட்டு

    ஆழ்கின்றாய், ஆழாமற் காப்பானை ஏத்தாதே

    சூழ்கின்றாய் கேடு(உ )னக்குச் சொல்கின்றேன் பல்காலும்

    வீழ்கின்றாய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே

    இது போன்ற துயரத்தை அனுபவித்த பத்திரகிரியாரோ தன்னுடைய மனநிலையை இவ்வாறு வெளிப்படுத்துகின்றார் :

    ஊரிறந்து பேரிறந்து வொளியிறந்து வெளியிறந்து

    சீரிறந்து நின்றதிலே சேர்ந்தாயே நெஞ்சமே

     ஏன் நம் மனம் இவ்வாறெல்லாம் அலைகின்றது? இதைப் பற்றி திருமூலர் என்ன நினைக்கின்றார்?

    எவ்வாறு ஒரு குயில் தன் முட்டையை காகத்தின் கூட்டினிலே விட்டுவிடவே காகம் அதைத்தன் முட்டையென நினைத்து அதையும் பேணுகின்றதோ அதுபோல் நாம் மாயையில் சிக்கி தேவையற்ற ஆசைகளையும் சேர்த்து காத்துக்கொண்டு வருகின்றோம்; பேணிக்கொண்டு வருகின்றோம். இதுதான் நம்முடைய சிற்றறிவின் வினைப்பாடு.

    குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக்கூட் டிட்டால்

    அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்

    இயக்கில்லைப் போக்கில்லை யேனென்ப தில்லை

    மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே 

     சிற்றறிவின் தூண்டுதலால் தன்னுடைய துயரத்தின் எல்லைக்கே போய்விட்ட பட்டினதோரோ தன்னுடைய குறையை இறைவனிடம் எப்படி எடுத்துச் சொல்லுகின்றார் தெரியுமா?

    காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே

    மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிட்ட

    தூதென்றெண் ணாமற் சுகமென்று நாடுமித் துர்புத்தியை

    ஏதேன் றெடுத்துரைப் பேனிறை வாகச்சி யேகம்பனே

     இதற்கெல்லாம் ஒரே வழி – தம்மைத் தாமே அறிந்து கொள்ளுதல்தானே ? தன்னை அறிந்துகொண்டு தன்னுடைய வாழ்வின் நோக்கத்தை அறிந்துகொண்டு அறவாழ்வு வாழ்பவர்க்கு எப்படி இந்தத் துயரங்கள் வரும்? ‘நான் யார்?” என்ற  கேள்விதான் காலந்தொட்டு நம்முடைய தவத்தோர்களால் கேட்கப்பட்டு வந்த கேள்வி. திருமூலர் கூறுகின்றார்

    தாம் அறிவார் அண்ணல்தான் பணிவார் அவர்

    தாம் அறிவார் அறந்தாங்கி நின்றார் அவர்

    தாம் அறிவார் சில தத்துவராவர்கள்

    தாம் அறிவார்க்குத் தமர்ப்பர னாமே .

    தன்னைப் பற்றி அறிந்துகொள்பவர்க்கு தன்னுள் மற்ற உயிரினங்களின் தரிசனம் கிடைக்கின்றது. அந்த எல்லா உயிரினங்களிலும் அந்த ஒரே இறைவன் ஆட்சி கொண்டிருப்பதும் புலனாகின்றது இந்த நல்ல உணர்வே அறம் சார்ந்த வாழ்விற்கு அடிப்படையாகவும் அமைகின்றது.

    தன்னைப் பற்றிய அறிவு ஒரு மனிதனுக்கு கிடைக்கப்பெற்றால் அது ஒரு பெரிய விழிப்புணர்வு. அது சோதி வடிவில் நிற்கும் பரம்பொருளின் ஆனந்த தரிசனம். அந்த நிலையில் தன்னுள் இறைவனையும் இறைவனில் தன்னையும் காண்கின்ற ஒரு ஒன்றுபட்ட உன்னத நிலை   வெளிப்படுகின்றது.

    மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்

    தன்னுற்ற சோதி தலைவன் இலையிலி

    பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்

    என்னுற் றறிவனான் என்விழித்  தானே

    என்று அந்த பேரின்பநிலையை விளக்குகின்றார் திருமூலர்.

    இந்தப் பேரானந்த நிலைக்கு நம்மை எவ்வாறு ஆண்டவன் அழைத்துச் செல்லுகின்றான்? அவனுடைய பெருங்கருணைக்கு காரணம் என்ன? இந்த அருள் கிடைப்பதற்கு நாம் எவ்வாறு தகுதி உள்ளவராகின்றோம்? இந்த வினாக்களுக்கெல்லாம் பதில் கிடைப்பதில்லை. நம்மால்  இந்தக் கருணையைக் கண்டு வியக்கத்தான் முடியும். திருவாசகத்தில் மாணிக்க வாசகருக்கும் இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை

    மூத்தானே மூவாத முதலானே முடிவில்லா

    ஒத்தானே பொருளானே உண்மையாய் இன்மையுமாய்ப்

    பூத்தானே பூத்திங்குப் புரள்வேனைக் கருணையினால்

    பேர்த்தேநீ ஆண்டவா றன்றேஎம் பெருமானே

    சிற்றறிவின் கட்டுப்பாடுகளிலிருந்து விலகி இப்பேரானந்த நிலைக்குச் செல்ல நாம்கூட முதல் படி எடுத்து வைக்கலாமே !

    (தொடருவோம்)

    Share
  • உன் குரல் கேட்டால்..!

    பெருவை பார்த்தசாரதி 

    images (10)

     

     

     

     

     

     

     

     

     

    அத்தானென அழகாயுன்குரல் கேட்டால் போதும்..

    ……….அன்பின் உச்சத்துக்கு அச்சொல்லே பிரதானமாகும்.!

    முத்தான கனிச்சொல் பலவுண்டாம் தாய்மொழியில்..

    ……….முத்தமிழில் “என்அத்தான்” எனும்சொல் இனிக்கும்.!

    இத்துணையினால் பெறும் பேரின்பக் கிளர்ச்சியே..

    ……….இயக்கும்நம் பெரும்சக்திக்கு ஈடாகும் பாலமாகும்.!

    எத்தனை போராட்டங்கள் புவியில்பல நடந்தாலும்..

    ……….இத்“தஞ்சம்” எனும்முடிவு காதலிலே மட்டுமெழும்.!

     

    காதல் இயல்பாக எழவேண்டுமதில் எப்போதுமே..

    ……….கனலிருக்கும்!உரசிக்கொண்டால் பற்றிக் கொள்ளும்.!

    மோதலென்பது காதலில் வந்தாலது முற்றியவுடன்..

    ……….முடிவில் சரணாகதி என்பதேயதன் தத்துவமாகும்.!

    காதலியே!“காதலிக்கிறேன்”எனஉன்குரல் கேட்டால்..

    ……….காலத்திற்கும் அடிமையாவது காதலின் பண்பாகும்.!

    காதல் கைகூடாமல் மாந்தரழிந்தாலும் இவ்வுலகில்..

    ……….காலத்தால் அழியாதென்பது உண்மைக் காதலாகும்.!

     

    கவர்ச்சியென்பது காதலுக்கு முக்கிய இலக்கணமாம்..

    ……….காணும் பார்வையாலே யாவரையும் கவர்ந்திழுக்கும்.!

    கவண்கல்போல் வைத்தகுறி நோக்கி விரைந்துசெலும்..

    ……….கருவிழிகள் காதல்வயப்பட்டவரை சுண்டி இழுக்கும்.!

    அவசரத்தில் அரும்புகின்ற காதல்முதலில் இனிக்கும்..

    ……….அவகாசத்தில்……அடிநாக்கிலதுவே பின்பு கசக்கும்.!

    விவரமாகக் காதல்செய்யத் தெரியவேண்டும் அதில்..

    ……….விழிப்புடன் இருந்தால் மட்டுமேயது கைகூடிவரும்.!

     

    இருந்துபோதல் என்பதே இம்மனித வாழ்க்கையாம்..

    ……….இன்பக்காதல் இல்லையேல் வாழ்வென்பது சுமையாம்.!

    ஒருமித்த காதலுக்கு உண்மையன்பு பாசம்வேண்டும்..

    ……….உறவைச் செழிப்பாக்கும் உரமாவது காதலுணர்வாகும்.!

    ஒருஉயிர்பிறக்க ஈருயிர் வேண்டுமென்பது விதியாகும்..

    ……….ஈருறவில் காதல்விதி மாற்றமிருந்தால் பிறவியேது.!

    உருவாகும் உன்னதக் காதலிலெழும் எண்ணங்களை..

    ……….உரையாக்க….உன்குரல் கேட்டால்தான் அதுமுடியும்.!

     

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::11-11-17

    நன்றி:: கூகிள் இமேஜ்

     

     

    Share
  • தமிழ் – மலையாள மொழிகளில் செயல் வினைமுற்றுக்கள் (Indicative Verbs in Tamil and Malayalam)

    -முனை. விஜயராஜேஸ்வரி 

    தமிழ் மொழியின் சொல் வகைகளை இலக்கணவியலாளர்கள் பலவாகப் பிரிப்பர். பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் தமிழ் மொழியின் சொல் வகைகளைப் பெயர் வினை இடை உரி என்று நான்கு வகைகளாகப் பிரிக்கின்றது. அவற்றுள் வினைச்சொற்கள் மிக முக்கியமானதொரு சொல் வகையாகும். தொல்காப்பியம் இதனை,

    ”வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
    நினையுங் காலை காலமொடு தோன்றும்”   (தொல்.சொல். 683) என்பார்.

    தமிழ் வினைச்சொற்கள் வேற்றுமை உருபுகளை ஏற்காமல்; காலங்காட்டும் இடைநிலைகளை ஏற்று வரும் என்பது தொல்காப்பியனாரின் கருத்து. கால இடைநிலைகளை ஏற்கவல்லதாயும்; பாலிட விகுதிகளை ஏற்க வல்லதாயும் அமையும் கிளவிகள் வினைச்சொற்கள் என்று கொள்ளப்படும் என்பார் பேரா. பொன். கோதண்டராமன். ( இக்காலத் தமிழ் இலக்கணம், 2002, பக் – 44).

    வினைச்சொல் வகைப்பாடுகள்

    தமிழ் வினைசொற்களைப் பல்வேறு அடிப்படைகளில் பல வகைப்பாடுகளுக்கு  இலக்கணவியலார் உட்படுத்தியுள்ளனர். இதன் பயனாக பல்வேறுபட்ட வினைவகைப்பாடுகள் காணப்படுகின்றன. இவற்றுள் மெல்வினை, வல்வினை என்பது ஒரு வகை. வினைச்சொற்கள் ஏற்கும் காலம்காட்டும் உருபுகளை அடிப்படையாக வைத்து; கிரால் என்பவர் பன்னிரண்டு வகைகளாகப் பிரிப்பார். ஆர்டன் என்பவர் ஏழு வகைகளாகப் பிரிப்பார். பேரா.பொன் கோதண்டராமன் அவர்கள் வினைச்சொற்கள் ஏற்கும் காலங்காட்டும் உருபுகளை அடிப்படையாகக் கொண்டு ஆறு வகைகளாகவும்; ஒழுங்கில்லா வினைகளையும் சேர்த்து மொத்தம் ஏழாகவும் வகைப்படுத்தியுள்ளார். வினையடிகளை அடிப்படையாக வைத்து தனிவினை, கூட்டுவினை எனப்பிரிப்பர். வினைச்சொற்களின் பொருட்பண்புகளை அடிப்படையாக வைத்து; செயல்வினை, நிலைவினை, இயங்குவினை என்றும் பிரிப்பர். தன்வினை பிறவினை என்பது மற்றுமொரு வகைப்பாடு. தெரிநிலைவினை குறிப்புவினை என்பது மரபிலக்கணங்கள் கூறும் வகைப்பாட்டு முறை. செய்வினை, செயப்பாட்டு வினை என்பதொருமுறை. முற்று, எச்சம் என்பது மற்றுமொரு வகை. வினைச்சொல்லுடன் பிற வினைகள் இணைவதனை வைத்து முதல்வினை, துணைவினை என்ற பகுப்பையும் காணலாம். இவ்வாறு தமிழ்வினைச்சொற்கள் பலவகைகளான பகுப்புகளைக் கொண்டுள்ளன.

    மலையாளத்தில்  வினைச்சொல் பாகுபாடு

    கேரளபாணினியம் என்ற மலையாள இலக்கண நூலின் ஆசிரியரான ஏ.ஆர். இராஜ இராஜ வர்மா அவர்கள் மலையாள மொழியின் வினைச்சொற்களை வினைமுற்று, வினையெச்சம் என்று இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார்.

    தற்கால மலையாள மொழிக்கு இலக்கணம் வகுத்த ஆர்.இ.ஆசர் அவர்கள் வினைச்சொற்களை வினைமுற்று, வினையெச்சம் என்ற இரு பிரிவுகளாகவே பிரித்துள்ளார்.

    தற்கால மலையாள வினைச்சொற்களைக் குறித்து ஆய்ந்த ஏலியாஸ் என்பவர் வினைகளை வினைமுற்று, வினையெச்சம் என்றே பிரித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    மலையாள மொழியின் வினைச்சொற்களை பேரா. சூரநாடுகுஞ்ஞன் பிள்ளை அவர்கள் பதினாறு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். இறந்தகால இடைநிலைகளின் அடிப்படையில் இந்த வினைப்பகுப்பு அமைந்துள்ளது. மலையாளப் பேரகராதியிலும் இராமசரிதம் , கன்னச இராமாயணம், இராம கதாப்பாட்டு, பாரதமாலை போன்ற மலையாள நூல்களின் விளக்கவியல் இலக்கணங்களிலும் இம்முறையே பின்பற்றப்பட்டுள்ளது.

    திராவிட மொழிகளைக்குறித்து ஆராய்ந்த பேரா. ஜான் சாமுவேல் அவர்கள் அவற்றின் வகைப்பாடுகளைக் குறித்து கீழ்க்கண்டவாறு விளக்குவார்.

    ”திராவிட மொழிகளின் வினைச்சொற்களில் தன்வினை, பிறவினை, இயக்குவினை என்ற மூவகையான வினை வகைகளையும், ஏவல் வினை, நிபந்தனை வினை, வியங்கோள் வினை என்னும் பல்வேறு வினைப்பொருள்களையும் (Moods) காணலாம். வினைச்சொற்களின் பொருளைச் சிறப்பிக்க ஐரோப்பிய மொழிகளில் முன்னொட்டுக்கள் (Prepositions) பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் திராவிட மொழிகளில் துணை வினைகளும் எச்சமாக அடுக்கும் வினைகளும் (Particles and Infinitives) பயன்படுத்தப்படுகின்றன. இம்மொழிகளின் வினைச்சொற்களைக் காலங்காட்டும் முறை, வினையின் தன்மை, பால்காட்டும் முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கூறுபடுத்தலாம்.

    (பேரா.ஜான் சாமுவேல், திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ஓர் அறிமுகம், 2008, பக், 176).

    எனவே தமிழிலும் மலையாளத்திலும் பல அடிப்படையிலான வினைச்சொற்களின் வகைப்பாடுகள் காணப்படினும் இவற்றுள் எந்த அடிப்படையிலான பகுப்பு தமிழ் மலையாள வினைச்சொற்களை  தெளிவாக விளக்க பயன்படுமோ அப்பகுப்பே சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தமிழ் – மலையாள கணினி வழி மொழிபெயர்ப்பிற்கு வினைச்சொற்கள் குறித்த தெளிவினை அளிக்க இப்பகுப்பு முறைகள் இன்றியமையாததாகும். இங்ஙனம் அமைந்துள்ள பல பகுப்பு முறைகளில்     வினைமுற்று, வினையெச்சம் என்ற பகுப்புமுறை தமிழ் – மலையாள மொழிகளில் நவீன இலக்கண ஆசிரியர்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழில் வினைமுற்று

    தமிழ் மொழியில் பொருள் நிறைவுற்று / முற்று பெற்று வரும் வினைகள் வினைமுற்று என்ற வகையில் அடங்கும். இவ்வினைகள் வினையடி, கால இடைநிலை, பால், இட விகுதி என்ற அமைப்பில் அமையும்.

    மலையாள மொழியில் வினைமுற்று பிற திராவிட மொழிகளிலிருந்தும் வேறுபட்ட அமைப்பினைக் கொண்டுள்ளது. இவ்வினைமுற்றுக்களில் எழுவாய்க்கும் வினைமுற்றுக்கும் எவ்வித இயைபும் கிடையாது. அதாவது பால், எண், இடவிகுதிகள் மலையாள வினைமுற்றுக்களில் காணப்படுவது இல்லை.

    வினைமுற்று வகைகள் 

    வினைப்பொருண்மையின் அடிப்படையில் மூன்று வகையான வினைமுற்று வகைகள் தமிழிலும் மலையாளத்திலும் அமைந்துள்ளன. அவையாவன,

    • ஏவல் வினைமுற்று ( Imperative Mood)
    • கூற்று அல்லது செயல் வினைமுற்று (Indicative Mood)
    • வியங்கோள் வினை முற்று ( Optative Mood)

    இவ்வகைகளுள் தமிழ் – மலையாள மொழிகளில் வழங்கப்படும் செயல் வினைமுற்றுக்கள் மூன்று காலங்களுக்கும் ஏற்ப அமையும் முறைகள் இங்கே ஒப்பீட்டு முறையில் ஆய்வு செய்யப்படுகின்றன.

    செயல்வினை முற்றுக்கள் (Indicative Verb Forms)

    செயல்வினை முற்றுகள் ஒரு செயல் நிகழ்ச்சியை நடுவு நிலையில் வெளிப்படுத்த உதவுகிறது. ( இசுராயேல் பக்-16). இவை திணை, பால், எண், இட உருபுகளை ஏற்று வரும். செயல் வினைகளில் உடன்பாடும் எதிர்மறையும் உண்டு.

    மலையாளத்தில் செயல்வினை வடிவங்கள் காலங்காட்டும் உருபுகளை மட்டும் எடுத்து வரும். அவை திணை, பால், எண், இட உருபுகளை ஏற்பதில்லை. மலையாளத்திலும் உடன்பாட்டு செயல்வினை முற்றுக்களும் எதிர்மறை செயல்வினை முற்றுக்களும் உண்டு.

    உடன்பாட்டு செயல்வினை முற்று

    தமிழில் உடன்பாட்டு செயல்வினை வடிவங்கள் பால், எண், இட உருபுகளை ஏற்றே வருகின்றன. அப்போது அதன் அமைப்பு கீழ்க்கண்டவாறு அமையும்.

    [ வினையடி + காலங்காட்டும் உருபு + எண் உருபு + இடவிகுதி ]

    தமிழில் பால், எண், இட உருபுகள் மூன்றும் ஒன்றாக இணைந்து ஒரே உருபனாக, இம்மூன்று செய்திகளையும் உள்ளடக்கிய பாலறிகிளவியாக அமைகின்றது.

    எ.கா:

    வந்தான், வருவான், வருகிறான்

    மலையாளத்தில் உடன்பாட்டு வினை வடிவம் வினையடியையும், காலங்காட்டும் இட உருபனை மட்டுமே கொண்டு அமைகின்றது. அது, பாலறிகிளவிகளைக் கொண்டிருப்பதில்லை.

    இதன் அமைப்பு:

    [ வினையடி + காலங்காட்டும் உருபு]

    எ.கா: (அவன்) வன்னு, (அவன்) வருன்னு, (அவன்) வரும்

    தமிழில் வினை முற்றிலிருந்தே எழுவாயின் திணை, பால், எண் மற்றும் இடத்தினை அறிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் மலையாளத்தில் இவ்வாறு அறிய முடிவதில்லை. இதற்குப்பதிலாக, எழுவாயின் பதிலிடுபெயர் வினைமுற்றின் முன்பு இணைக்கப்படுகின்றது. அப்பதிலிடுபெயரிலிருந்தே எழுவாயின் திணை, பால், எண் மற்றும் இடத்தினை அறிந்துகொள்ள இயல்கின்றது. இம்மாறுபாடு அமைப்பு அளவிலும் வெளிப்பட்டு, இரு மொழிகளுக்கும் இடையே சிறப்பான வேறுபாடாக அமைகின்றது.

    [ அவன் வருன்னு = வருகிறான் ]

    தமிழிலும் மலையாளத்திலும் மூன்று காலங்களுக்கும் உடன்பாட்டு வினைமுற்றுக்கள் அமைவதைக் கீழே காணலாம். 

    இறந்தகால உடன்பாட்டு செயல்வினை முற்றுக்கள்

    தமிழ்மலையாளம்

    ”வருதல்” எனும் வினைக்கு இறந்த காலத்தில் தமிழிலும் மலையாளத்திலும் அமையும் செயல் வினைமுற்று வடிவங்களைக் கீழே காணலாம். 

    எண் .பெயர் /

    மூ.பெ.

    வி.மு. ..பெயர்/

    மூ.பெ.

    வி.மு.
    1 நான் வந்தேன் ஞான் வன்னு
    2 நாம்- உ.த.பன் வந்தோம் நாம் வன்னு
    3 நாங்கள்-உ.தா.த.பன் வந்தோம் ஞங்ஙள் வன்னு
    4 நீ வந்தாய் நீ வன்னு
    5 நீங்கள்-மரி.ஒ வந்தீர்கள் நிங்ஙள் வன்னு
    6 நீங்கள்-பன் வந்தீர்கள் நிங்ஙள் வன்னு
    7 அவன் வந்தான் அவன் வன்னு
    8 அவள் வந்தாள் அவள் வன்னு
    9 அவர் வந்தார் அத்தேகம் வன்னு
    10 அவர்கள் வந்தார்கள் அவர் வன்னு
    11 அது வந்தது அது வன்னு
    12 அவை வந்தன அவ வன்னு

    தமிழில் இறந்தகால உடன்பாட்டு செயல் வினைமுற்றுக்கள் பெயர் மற்றும் மூவிடப்பெயர்களுக்கு பத்து வெவ்வேறு விதமான பாலறிகிளவிகளை ஏற்று அமைகின்றன. அவையாவன,

    1.ஏன் 2.ஓம் 3.ஆய் 4.ஈர்கள் 5.ஆன் 6.ஆள் 7.ஆர் 8.ஆர்கள் 9.து 10.ன.

    ஆனால் மலையாள இறந்தகால வினைமுற்றுக்கள் இவற்றை ஏற்று வருவதில்லை. எனவே அமைப்படிப்படையில் தமிழிலும்  மலையாளத்திலும் இறந்தகால உடன்பாட்டு வினைமுற்றுக்களில் அமையும் சிறப்பான வேறுபாடாக இது கருதப்படுகின்றது.

    [ வந்தான் = வன்னு ]

    ”வருதல்” எனும் வினைக்கு இறந்த காலத்தில் தமிழிலும் மலையாளத்திலும் அமையும் வினைமுற்று வடிவங்களை மேலே கண்டோம். மலையாள வினைகள் இறந்த காலத்தில் எவ்வித பாலறிகிளவியையும் எந்த ஒரு பதிலிடு பெயருக்கும் ஏற்பதில்லை என்பது அதன் மூலம் தெளிவாகின்றது. இனி நிகழ்காலத்திற்கு ”வருதல்” எனும் வினைக்கு இருமொழிகளிலும் அமையும் வினைமுற்று வடிவங்களையும் அவற்றின் பாலறிகிளவிகளையும் காண்போம். 

    நிகழ்கால உடன்பாட்டு செயல்வினை முற்றுக்கள்

    தமிழ்மலையாளம்

    எண் .பெயர்

    மூ.பெ.

    வி.மு. ..பெயர்

    .மூ.பெ.

    வி.மு.
    1 நான் வருகிறேன்/

    வருகின்றேன்

    ஞான் வருன்னு
    2 நாம்- உ.த.பன் வருகிறோம்/

    வருகின்றோம்

    நாம் வருன்னு
    3 நாங்கள்-உ.தா.த.பன் வருகிறோம்/

    வருகின்றோம்

    ஞங்ஙள் வருன்னு
    4 நீ வருகிறாய்/

    வருகின்றாய்

    நீ வருன்னு
    5 நீங்கள்-மரி.ஒ வருகிறீர்கள்/

    வருகின்றீர்கள்

    நிங்ஙள் வருன்னு
    6 நீங்கள்-பன் வருகிறீர்கள்/

    வருகின்றீர்கள்

    நிங்ஙள் வருன்னு
    7 அவன் வருகிறான்/

    வருகின்றான்

    அவன் வருன்னு
    8 அவள் வருகிறாள்/

    வருகின்றாள்

    அவள் வருன்னு
    9 அவர் வருகிறார்/

    வருகின்றார்

    அத்தேகம் வருன்னு
    10 அவர்கள் வருகிறார்கள்/

    வருகின்றார்கள்

    அவர் வருன்னு
    11 அது வருகிறது/

    வருகின்றது

    அது வருன்னு
    12 அவை வருகின்ற அவ வருன்னு

    தமிழில் நிகழ்காலத்திற்கும் 1.ஏன் 2.ஓம் 3.ஆய் 4.ஈர்கள் 5.ஆன் 6.ஆள் 7.ஆர் 8.ஆர்கள் 9.து 10.ன. என்ற பத்து வித பாலறிகிளவிகளும் வினைமுற்றில் வருகின்றன. ஆனால் மலையாள வினைமுற்றுக்கள் அதன் ஈற்றில் எவ்வித பாலறிகிளவியையும் ஏற்பதில்லை. நிகழ்காலங்காட்டும் “உன்னு” எனும் உருபு மட்டுமே ஈற்றில் வந்து வினை முடிகின்றது. இவ்வேறுபாடு இங்கே குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

    [வருகிறான் = வருன்னு] 

    எதிர்கால உடன்பாட்டு செயல் வினை முற்றுக்கள்

    தமிழ்மலையாளம்

    ”வருதல்” எனும் வினைக்கு எதிர் காலத்தில் தமிழிலும் மலையாளத்திலும் அமையும் வினைமுற்று வடிவங்களைக் கீழே காணலாம். தமிழில் எட்டு வகையான பாலறிகிளவிகள் முக்காலத்திற்கும் ஒரே போன்று அமைகின்றன. தமிழில் அஃறிணைப்பதிலிடு பெயரான ”அது” மற்றும் ”அவைக்கு” எதிர்கால உடன்பாட்டு வினைமுற்றுக்கள் ”உம்” என்று மட்டுமே அமைகின்றன. இவ்வாறு நோக்குகையில் தமிழின் அஃறிணைப்பதிலிடுபெயர்களின் பாலறிகிளவிகளான ”உம்” மட்டுமே மலையாளத்தின் மூன்று காலங்களுக்கும் பாலறிகிளவிகளாக அமைந்து வருகின்றது என்று  கருத ஏதுவாகின்றது. 

    எதிர்கால உடன்பாட்டு செயல் வினை முற்றுக்கள்

    தமிழ்மலையாளம்

    எண் .பெயர்/

    மூ.பெ.

    வி.மு. ..பெயர்/

    .மூ.பெ.

    வி.மு.
    1 நான் வருவேன் ஞான் வரும்
    2 நாம்- உ.த.பன் வருவோம் நாம் வரும்
    3 நாங்கள்-உ.தா.த.பன் வருவோம் ஞங்ஙள் வரும்
    4 நீ வருவாய் நீ வரும்
    5 நீங்கள்-மரி.ஒ வருவீர்கள் நிங்ஙள் வரும்
    6 நீங்கள்-பன் வருவீர்கள் நிங்ஙள் வரும்
    7 அவன் வருவான் அவன் வரும்
    8 அவள் வருவாள் அவள் வரும்
    9 அவர் வருவார் அத்தேகம் வரும்
    10 அவர்கள் வருவார்கள் அவர் வரும்
    11 அது வரும் அது வரும்
    12 அவை வரும் அவ வரும்

    [ வருவேன், வரும் = வரும்    ]

    வேறுபாடுகள்

    1. தமிழில் வினை முற்றிலிருந்தே எழுவாயின் திணை, பால், எண் மற்றும் இடத்தினை அறிந்துகொள்ள முடிகின்றது. மலையாளத்தில் அவ்விடம் இடம்பெறுகின்ற எழுவாயின்   பதிலிடுபெயர் வினைமுற்றின் முன்பு சேர்க்கப்படுகின்றது.      எனவே மலையாளத்தைப் பொறுத்தவரையிலும் அப்பதிலிடுபெயரிலிருந்தே எழுவாயின் திணை, பால், எண்    மற்றும் இடத்தினை அறிந்துகொள்ள இயல்கின்றது. இரு    மொழிகளுக்கும் இடையே அமையும் சிறப்பான வேறுபாடாக    இது அமைகின்றது.

    [ அவன் வருன்னு = வருகிறான் ]

    1. தமிழில் இறந்தகால வினைமுற்றுகள் பத்து வெவ்வேறு வித பாலறிகிளவிகளைப் பெற்றே அமைகின்றன. ஆனால் மலையாளத்தில் இறந்தகால    வினைமுற்றுக்களுடன் எவ்வித      பாலறிகிளவிகளும் வருவதில்லை. இது தமிழ்-மலையாள   இறந்தகால உடன்பாட்டு வினைமுற்றுக்களில் அமையும் சிறப்பான வேறுபாடாகக்   கருதப்படுகின்றது.

    [ வந்தான் = வன்னு ]

    1. தமிழில் 8 வித பாலறிகிளவிகள் எதிர்கால உடன்பாட்டு வினைமுற்றினைக் குறிக்க பயன்படுகின்றன. மேலும் இரண்டு அஃறிணைப் பெயர்களுக்கும் ”வரும்” என்ற ஒரேயொரு   முறையே உள்ளது. (எ.கா: அது வரும்). மலையாளத்தில்    உயர்திணைக்கும் அஃறிணைக்கும் “வரும்” என்ற ஒரேயொரு    முறையே அமைகின்றது. இருமொழிகளுக்கும் இடையே    அமையும் குறிப்பிடத்தக்க வேறுபாடாக இது அமைகின்றது.

    [ வருவேன், வரும் = வரும்]

    ***** 

    துணைநூற்பட்டியல்

    1. Thomas Lehmann – A Grammar of Modern Tamil
    2. E.Asher –           Malayalam
    3. Eugene A. Nida – Morphology
    4. S.Subramoniam – Dravidian Comparative Grammar
    5. Ravishankar . S. Nair – A Grammar of Malayalam
    6. R. Gopalapillai – Linguistic Interpretation of Lilathilakom
    7. Collected Papers on Malayalam Language and Linguistics – ISDL Publication
    8. M.Israel – The Treatment of Morphology in Tolkappiam
    9. Naduvattom Gopalakrishnan -Early Middle Malayalam
    10. N.Rajasekharan Nair – Auxiliary Verbs in Malayalam
    11. N.Ezhuthaccan -The History of the Grammatical Theories in Malayalam
    12. Arden – Grammar of Modern Tamil
    13. K.M.George – Malayalam Grammar and Reader
    14. பேரா.பொன் கோதண்டராமன் – இக்காலத்தமிழ் இலக்கணம்
    15. ஏ.ஆர்.இராஜ இராஜ வர்மா – கேரள பாணிணியம்
    16. தேவநேயப்பாவாணர் – மொழி மரபு
    17. பரமசிவம்.கு. – இக்காலத்தமிழ் மரபு
    18. அகத்தியலிங்கம்.ச – தமிழ் மொழி அமைப்பியல்
    19. பேரா.ஜான் சாமுவேல் – திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ஓர் அறிமுகம்.
    20. கால்டுவெல் – திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
    21. நன்றி: பேரா. நடுவட்டம் கோபாலகிருட்டினன் – திராவிட மொழியியல் கழகம், திருவனந்தபுரம்.
    22. நன்றி: பேரா. இரவிசங்கர் எஸ்.நாயர் – மொழியியல் துறை, காசர்கோடு மத்தியப்பல்கலைக்கழகம்.
    23. முனை.செ.வை சண்முகம் – கேரளபாணினியம் – முகவுரை – மொழியியல் ஆய்வு.
    24. முனை.செ.வை சண்முகம் – தொல்காப்பியரின் சொல்லியல் கோட்பாடு
    25. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – சிவலிங்கனார்
    26. பேரா.சிவா.எம்.ஏ. – தமிழ்மொழி

    *****

    கட்டுரையாசிரியர்
    விரிவுரையாளர், தமிழ்த்துறை,
    கேரளப்பல்கலைக்கழகம்,
    காரியவட்டம், திருவனந்தபுரம்.

     

     

     

     

    Share
  • சர்வதேச நீரிழிவு நோய் தினம்

    பவள சங்கரி

    நீரிழிவு (சக்கரை வியாதி) நோயாளிகளின் எண்ணிக்கையில் முதன்மையான பத்து நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்கிறது சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை . இந்தியாவில் 70 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இன்று, 199.5 மில்லியன் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேல் பெண்கள் .  2040 இல் 313 மில்லியன் பெண்கள் சக்கரை நோயினால் பாதிக்கப்படக்கூடுமாம்.. ஆண்கள்தான் சக்கரை வியாதியால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்ற பழைய கதையெல்லாம் மலையேறிவிட்டது. ஆம் இந்த இடைவெளி மிக விரைவாக மறைந்து வருகிறது. அதிகரித்து வரும் உடல் பருமன், அமைதியற்ற வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது போன்ற காரணங்களால் நகர்ப்புற பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர், கிராமப்புற பெண்களும் விதிவிலக்கல்ல!

    இந்த எண்ணிக்கை மேலும் கூடுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதால் உடனடி நடவடிக்கை அவசியமாகிறது என்கிறது அந்த ஆய்வறிக்கை.

    Share
  • இந்தவார வல்லமையாளர்! (248)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக முனாப் கபாடியாவை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    பன்னாட்டு கம்பனிகளில் வேலை செய்வது பலருக்கும் ஒரு கனவு. ஆனால் உலகின் மிகப்பெரிய கம்பனியான கூகிளில் பணிபுரியும் ஒருவர் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சமோசா விற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் என்றால் அது நமக்கு வியப்பாக தானே இருக்கும்? அதை செய்தவர் தான் முனாப் கபாடியா.

    இது குறித்து தட்ஸ்தமிழ் இணையதளம் கூறுவது என்னவெனில்

    “2015ஆம் ஆண்டு முனாப் கபாடியா எம்பிஏ படித்து முடித்துவிட்டு கூகிள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது தாய் நபிசா அவர்களை டிவி முன் தினசரி பார்ப்பதைத் தவிர்க வேண்டும் எனத் திட்டமிட்டு புதிய புட் பிராஜெக்ட்-ஐ தயாரித்தார். கபாடியாக்கள், போஹ்ரி சமூகத்தைச் சார்ந்தவர்கள், இவர்கள் பொதுவாக எச்சில் ஊறும் தின்பண்டங்களைச் செய்வதில் பிரபலமானவர்கள். இதில் முனாப் கபாடியா-வின் தாயார் நபிசா கைதேர்ந்தவர். அம்மா கையால் செய்த உணவு.. தனது உறவினர்கள் மத்தியில் நபிசா உணவு மிகவும் விரும்பத்தக்க ஒன்றாக இருந்த நிலையில், இதனை வெளியுலகத்திற்கும் கொண்டு செல்ல முடிவு செய்தார் முனாப். சோதனை முதலில் இந்த முயற்சியை நேரடியாகச் சந்தைக்குக் கொண்டு செல்வதை விட அதனை முறையாகச் சோதனை செய்து பார்க்க முடிவு செய்தார் முனாப்.

    இதன் படி தனது தெரிந்த வெளிநபர்களை இரவு உணவிற்காக அழைத்தார். அப்போது தனது தாய் சமைத்த உணவை அனைவருக்கும் அளித்து அதன் ருசி, மக்கள் கருத்து, சந்தையில் இதன் வெற்றி வாய்ப்பு ஆகியவற்றைத் துல்லியமாக்க கணித்தார். அடுத்தக் கட்டமாக அறிமுகம் இல்லாதவர்களைத் தனது தாயின் உணவை ருரி பார்க்க வைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு இணையத்தில் word of mouth என்ற பிரச்சாரத்தின் மூலம் சில பெண்கள் குழுக்களைச் சாப்பிடத் தனது வீட்டிற்கு அழைத்தார். இதற்கு அவர் நிர்ணயம் செய்த கட்டணம் ஒரு நபருக்கு 700 ரூபாய். இதின் பின்னரே தனது பிராஜெக்ட்-க்கு போஹ்ரி கிட்சென் எனப் பெயர் வைத்தார். உடனே பேஸ்புக்-இல் போஹ்ரி கிட்சென் என்ற பக்கத்தைத் திறந்தார். இதன் பின் தனது தாயைவிடவும் முனாப் மிகவும் பிசியாக இருந்தார். தனது கனவிற்கும் திட்டத்திற்கும் வேலை ஒரு தடையாக இருக்கும் காரணத்தால், கூகிள் போன்ற பெரிய நிறுவனத்தில் வேலை செய்தாலும் அதனை விட்டுவிட்டு உணவு சந்தையில் புதிய புரட்சியைச் செய்யக் களமிறங்கினார்.

    இன்றைய நிலையில் இந்த உணவை நீங்கள் ருசிக்க ஆசைப்பட்டால், அதற்கு மூனாப்-ஐ உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் இல்லையெனில் அவரின் நண்பர்களை யாரையாவது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படி இல்லையாக நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும் அந்த அளவிற்கு இவர் தற்போது மும்பையிலே பேமஸ். பிரபலங்கள் தற்போது இவர் வீட்டு உணவகத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் வந்த சாப்பிட்டுள்ள காரணத்தால், இந்திய மீடியா மட்டும் அல்லாமல் உலக மீடியாக்களிலும் இவர் இடம்பிடித்துள்ளார். மேலும் உணவு சந்தையில் இருக்கும் பல இவர் வெற்றியின் ரகசியத்தைத் தெரிந்துகொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

    தற்போது இவரது போஹ்ரி கிட்சென் தனது டெலிவரி அங்காடியை மும்பையின் வார்லி பகுதியில் திறந்துள்ளது. இந்நிலையில் முனாப் புதிய ரெஸ்டாரண்ட் திறக்குத் திட்டத்தில் தற்போது உள்ளார். மேலும் தனது மார்கெட்டிங் தந்திரத்தையும் யாருக்கும் பயப்படாமல் கூறிய முனாப், போஹ்ரி கிட்சென் என்பதை ஒரு பிராண்டாக உருவாக்க திட்டமிட்டுள்ளார். வெற்றி இதுகுறித்து முனாப் கூறுகையில், “போஹ்ரி கிட்சென் திட்டத்தை ஒரு வர்த்தகமாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் துவங்கவில்லை. இதன் வெற்றியே தற்போது அடுத்தடுத்த வளர்ச்சி திட்டத்திற்கு எங்களைக் கொண்டு சென்றுள்ளது. இந்தப் பிராஜெக்ட் முழுவதும் அம்மாவிற்காகத் துவங்கப்பட்டது, அவளின் எண்ணத்தின் படியே அனைத்தையும் வடிவமைக்கப்பட்டது. இதன் வெற்றிக்கு அம்மா-வின் பார்வையே முக்கியக் காரணமாக உள்ளது”. என்று கூறினார்.

    மேலும் அவர் கடையில் முக்கியமான மற்றும் பிரபலமான உணவு அல்லது தின்பண்டமாகப் பார்க்கப்படுவது மட்டன் சமோசா. இதை விற்பனை செய்வதற்காகலவே கூகிள் வேலையை விட்டுவிட்டு அதில் வெற்றிப் பெற்றுள்ளார் முனாப். பிராண்ட் அம்பாசிட்டர்.. எங்களுடைய வர்த்தகத்திற்கு அம்மா (நபிசா) தான் பிராண்ட் அம்பாசிட்டர் என முனாப் கூறினார். சாப்பிட வீட்டுக்கு வரும் அனைவரும் வயிறு நிறைந்து மகிழ்ச்சியுடனும், புன்னகையுடனும் செல்கின்றனர். இதுதான் எங்களின் வெற்றி. பேஸ்புக் இவ்வளவு பிரபலம் ஆன பின்பும் முனாப், போஹ்ரி கிட்சென் பேஸ்புக் பக்கத்திற்கு ஒரு வாரம் 700 ரூபாய் செலவு செய்து புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பன்னாட்டு கம்பனி வேலையை விட்டுவிட்டு சுயதொழில் துவக்கி பலருக்கும் வேலைவாய்ப்பை அளித்த சாதனையாளரான முனாப் கபாடியாவை பாராட்டும் விதத்தில் அவருக்கு இவ்வார வல்லமையாளர் விருதை அளிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • “பாக்கிய லக்ஷ்மி பாரம்மா ’’….!

     

    “பாக்கிய லக்ஷ்மி பாரம்மா -நம்மன்னை
    பாக்கிய லக்ஷ்மி பாரம்மா

    பானை பிடித்தவன் ,தூணை பிடித்தவன்
    சேணம் பிடித்த சாரதியின்
    மேனி பிடித்தவர் மார்பில் பதிந்திடும்
    பாக்கிய லக்ஷ்மி பாரம்மா

    “உச்சியுறியேறும் அச்சுத ரமணன்
    மச்சமாகியே மார்பில் அமர்ந்தவள்
    பாக்கிய லக்ஷ்மி பாரம்மா “….!

    “சிம்ம ராஜனை சாந்தமாக்கிடும்
    நம்ம அன்னையே நடுவில் (மடியில் ) அமர்செள
    பாக்கிய லஷ்மி பாரம்மா”….!….கிரேசி மோகன்….!

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (17)

     
    மீ.விசுவநாதன்
    பகுதி: 17

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2-1-1-2-1

    கங்கை, உமா தேவி கதை
    வைகறைப் பொழுது வந்ததென
    வாழ்த்தி எழுப்பி விட்டவுடன்
    கைகளால் நீரை வான்நோக்கி
    வழங்கித் துதித்தான் காகுத்தன் !
    பொய்யிலா குருவின் முகம்நோக்கி
    “புனித சோணா நதிகடந்து
    அய்யனே எங்கு செலவுள்ளோம்
    அடியேன் தனக்கு அருளென்றான்!” (1)

    உலகினைத் தாங்கும் உத்தமரின்
    உயர்ந்த வழியே நம்வழிதான்
    பலவினை போக்கும் கங்கைநதி
    பார்த்து வணங்கப் போகின்றோம்
    அலைகிற மனத்தை அடக்கிடுவோர்
    அங்கே அதிக மென்றுரைத்தார்
    விலையிலா தவத்தில் சிறந்துயர்ந்த
    விசுவா மித்ர ராஜரிஷி. (2)

    கங்கையை அடைந்து நீராடி
    கதிரைத் துதித்து வழிபட்டு
    எங்குமே பரந்த இந்நதியின்
    ஏற்றம் மிகுந்த வரலாற்றை
    உங்களின் வாக்கு வழியாக
    உரைக்கக் கேட்க விருப்பமென
    அங்கமே பணிந்து ஸ்ரீராமன்
    அரிய முனியைத் துதிசெய்தான். (3)

    யோகியர் சாந்த இடமாக
    சோலைக் காட்டு மாமலையாய்
    ஆகிய இமய “இமவானும்”
    அன்பு மனைவி “மேனா”வும்
    தூவிய பக்தி மலர்களுக்கு
    தோகை இருவர் பிறந்தார்கள் !
    தீவிர தவம்செய் “உமை”இளையாள்
    தேவ “கங்கை” மூத்தவளாம். (4)

    தேவரே கங்கை மகள்கேட்டு
    தேடி வந்த காரணத்தால்
    மூவரும் போற்றும் முதல்மகளை
    முறையாய்க் கொடுத்தார் இமவானும் !
    பூமகள் உமைக்கோ சிவன்கரத்தைப்
    போற்றிப் பிடிக்கத் துணைசெய்தார் !
    மாபெரும் மலையோன் மகள்கதையின்
    மகிமை சொல்லில் அடங்காது. (5)

    உமையினை மணந்த பரமசிவன்
    உடலின் காம உணர்வினுக்குத்
    தமைதினம் அடிமை செய்ததினால்
    தவத்தில் மேன்மைத் தேவர்கள்
    சிவனிடம் பணிவாய், “சிற்றின்ப
    நினைவை விட்டு வருகவென்றார்”
    அவனி சிறக்க வேண்டுமென்று
    அவர்தன் வீர்யம் அடக்கிவைத்தார். (6)

    உங்களின் வாக்குப் படிகேட்டு
    உயிராம் வீர்ய ஒளிசேர்த்து
    இங்குநான் பூமி மீதினிலே
    இறையின் சக்தி அளிக்கின்றேன்
    அங்கமே அக்னி உருவமென
    அழகு “கார்த்தி கேய”னென்று
    அங்குள கார்த்தி கைப்பெண்கள்
    அறுவர் பாலில் வளர்வனென்றார். (7)

    ஓசையே இல்லா உள்ளத்தில்
    ஓம்ஓம் என்ற பிரணவத்தை
    ஆசையாய்க் கொண்டு தவம்செய்ய
    அன்னை உமையும் காந்தனுமே
    மாசினை அழிக்கும் கங்கையுடை
    மலையாம் இமயம் அடைந்தார்கள் !
    ஈசனின் மகனாம் கந்தனவன்
    தேவ சேனா பதியானான். (8)
    (தர்ம சரிதம் வளரும்)
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 35, 36, 37ம் பகுதி நிறைந்தது)

    Share
  • படக்கவிதைப் போட்டி 134-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    clock

    காலங்காட்டும் கடிகார முள்ளும், காலைப் பதம் பார்க்கும் கடிதான முள்ளும் நெருங்கியமர்ந்து தாமாற்றும் பணிகள்பற்றி உரையாற்றிக் கொள்கின்றனவோ?

    இருவேறு பணிசெய்யும் முட்களை ’வித்தியாசமான இரசனையோடு’ அணிசேர்த்துப் படமெடுத்திருக்கும் திரு. பிரேம்நாத் திருமலைசாமிக்கும், இப்படத்தைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றி!

    ”ஏற்ற காலமும் இடமும் அறிந்து முயற்சிகளைத் தொடங்கினால் ஞாலமும் வசப்படும் நம்கையில்” என்பது ஐயனின் பொய்யாமொழி.

    ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
    கருதி இடத்தாற் செயின்.

    நம் கவிஞர்கள் கவிபாட வேண்டிய காலமிது…களமிது! செந்தமிழ்ச் சொல்லெடுத்து, ஞாலம் வெல்லும் கவிதை சொல்ல அவர்களை அன்போடு அழைக்கிறேன்!

    *****

    ”கடிகார முட்கள் சுற்றிவருவதுபோல் நம் வாழ்க்கையும் ஒரு வட்டத்துக்குள் சுற்றிவருகின்றது. மனித உடலுக்குள்ளும் இதயம் எனும் கடிகாரம் ஓய்வின்றிச் சுற்றுகின்றது. காலங்காட்டும் கடிகாரம் நின்றால் பழுது பார்க்கலாம்; இதயமென்னும் கடிகாரம் நின்றால் அழுது தீர்ப்பதைத் தவிர வேறென்ன செய்வது?” என்று வாழ்க்கை ஓட்டத்தைக் கடிகார ஓட்டத்தோடு ஒப்பிட்டுக் காட்டுகின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.

    நேரமும், கடல் அலையும், மனிதனுக்காக காத்திருக்காது
    பணமும், பொருளும் மனிதனிடத்தில் என்றும் தங்காது!
    அதிகாலையில் கடிகார மணியோசை கேட்டு எழுவோம்
    அன்றைய வேலைக்கு செல்ல உடனே புறப்படுவோம்!
    நம்மைவிட்டு என்றும் அகலாத ஓர் கருவி
    நாளும் நமக்கு தேவைப் படும் அதன் உதவி!
    வேலைக்குச் செல்வோர் கையில் கடிகாரம் இருக்கும்மே
    வேலை முடியும் நேரத்தையும் தெளிவாகக் காட்டும்மே!
    கடிகாரத்தில், அண்ணன், தம்பி போல் இரு முள்கள் இருக்கும்
    கருவேல மரத்திலும் ரோஜா செடியிலும் முள்கள் இருக்கும்!
    பைந்தமிழில் கடிகாரத்தை நிழற் கடிகை என அழைப்பர்
    சூரியஒளி  நிலவொளி கொண்டு அன்று நேரத்தைக் கணக்கிடுவர்!
    கடிகாரம் இருபத்துநான்கு மணி நேரமும் ஓடிக்கொண்டேயிருக்கும்

    பல தேசங்களுக்கு வித்தியாசமான நேரத்தைக் காட்டிகொண்டியிருக்கும்
    வாழ்க்கை எனும் வட்டம் கடிகார முள்கள் போல சுற்றி வருமே
    கடிகார முள்ளும், ஒரு வட்டத்திற்குள்ளேயே சுற்றி வருமே!
    மனித உடலில் இதயமெனும் கடிகாரம் துடித்து ஓடுகின்றது
    நேரத்தைக் காட்டும் கடிகாரமும் நிற்காமல் ஓடுகின்றது!
    நேரத்தைக் காட்டும் கடிகாரம் நின்றால் பழுது பார்க்கலாம்
    இதயம் எனும் கடிகாரம் நின்றால் பழுது பார்க்க முடியுமா!
    நேரத்தைக் காட்டும் கடிகாரமோ காலை,மாலை,நேரத்தை காட்டும்,
    இதய ரத்த ஓட்டமோ மனிதனின் நாடி துடிப்பை தெளிவாக காட்டும்!
    எல்லோருக்கும், எந்நேரத்திலும் பயன்படும் கடிகாரமே
    மனிதனின் மனதில், நிலையாய் இருப்பாய் என்பது திண்ணமே!

    *****

    கடிகாரமுள் காலத்தைக் காட்டும்; காட்டுமுள் காலில் காயம்தந்து வாட்டும். அக் காட்டுமுள்போல் துயர்கூட்டும் மனிதரும் நானிலத்தில் உண்டு. அவர்தம் தீயுறவைக் கழித்து, காலங்காட்டி ஊக்குவிக்கும் கடிகாரமுள் போன்றோரின் நல்லுறவைக் கூட்டினால் நற்செயல்கள் கைகூடும்” என்று பொன்மொழி பகர்கின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.

    காலத்தைக் காட்டும் கடிகார முள் போலும்
    காயத்தைச் உருவாக்கும் காட்டு முள் போலும்
    ஞாலத்தில் எத்தனை பேர் நம்மிடையே உள்ளார்கள்
    சீலத்தால் வாய்மையினால் சிந்தனையால் உயர்ந்தோர்
    தீமையே பயக்கின்ற செயல் புரியும் கீழோர்
    எல்லோரும் வாழ்கின்ற இந்தவுலகிற்தான்

    நல்லதற்கும் தீயதற்கும் நடுவினில் நாம் வாழ்கின்றோம்
    முள்ளிலும் பலவாயுண்டு முனைப்பிலே, மாறுபட்ட
    சொல்லிலும் மாந்தராலே சுகமுண்டு துக்கமுண்டு.
    இனிய நற் செயலாலெங்கள் இதயத்தைத் தொடுவார் மேலோர்
    கனிவிலா மொழிகள் கூறிக் கவலையைத் தருவார் கீழோர்
    நனி துயர் கூட்டுகின்ற நடு வழிப் புதர் முள் போலும்
    எனிலவர் தொடர்பு நீங்கி இருப்பதே என்றும் மேலாம்.
    உரிய நேரத்தைக் காட்டி உறக்கத்தைப் போக்கும் முள்போல்
    சரியெனும் தருணந்தன்னில் தளர்ந்திடா தூக்குவிக்கும்
    அரியநல் அன்பர் தம்மோ டருகினில் என்றும் வாழ்வோர்
    புரியுநற் செயல்களெல்லாம் போற்றுதற் குரியவாகும்.

    *****

    பள்ளங்களும் மேடுகளும் வாழ்க்கைப் பயணத்துக்குத் தடையாகிட, காலத்தின் பிடியில் சிக்கிச் சிறுதுரும்பாய்த் தத்தளிக்கும் மானுட வாழ்வை அருமையாய்ப் படம்பிடிக்கிறார் திருமிகு. மா. பத்ம பிரியா  தன் கவிதையில்.

    காலத்திற்கு முன் நானொரு சிறுதுரும்பு

    காலம் கரைகிறது
    கனவு வளர்கிறது
    ஒவ்வொரு கனவும்
    ஓலமிடும் காதோரம்

    சிகரம் தொடும் எண்ணத்துடன்
    சிந்தனைகள் சிறகடிக்க
    சிக்கல்களைச் சிதறடிக்கும்
    உத்வேகம் உள்ளத்தில்
    உயரத்தின் உச்சிதனைத்
    தொட்டுவிட ஆசைதான்
    துவளும் மனவுறுதியைக்
    கட்டிவைக்க ஆசைதான்
    கண்ணில் விரியும் எல்லையின் நீளம்
    கரங்களில் உள்ளடக்கம்
    செம்மாந்த மனச்செருக்கு என்னிலும் உண்டு
    வளைந்து நெளியும் வாழ்க்கைப் பாதையில்
    வாகனஓட்டுநர் நேர்த்தியுடன் கையாளும் திறனை
    வல்லூறு கூர்நகங்கள் புரட்டிப்போடும் நாளும்
    இன்னல்களும் இன்பங்களும்
    இடையீடு செய்தாலும்
    இலட்சியத்தின் பயணத்தில்
    எச்சரிக்கை மணி அடித்தாலும்
    சிலந்தி வலையாக என்னை நான் சூழ்ந்திருக்க
    போதிமரத்து புத்தனாக ஞானஒளி யாசித்திருக்க
    புன்னகை பரிமாறும் விழிகளின் சீண்டல்கள்
    பொழுதுபோக்காகத் திசைமாற்றும் என்னை
    ஏனிந்த அலைபாயும் மனது
    பாதையில் பயணிக்க
    பள்ளங்களும் மேடுகளும் பயணத்தில் தடையாக
    காலத்தின் ஓட்டத்தை
    விரல்விட்டு எண்ணிப் பார்க்கும் குழந்தையின் மனசாக
    மானுட விதியோ காலத்தின் பிடியில்
    முந்திக்கொண்டு ஓடும் மானுட கதியோ
    முனகிக் கொண்டே ஜன நதியில் பயணிக்க
    நானொரு சிறுதுரும்பானேன்
    காலத்தின் பிடியில்

    *****

    ”தம்பி! காலம் நமக்காய்க் காத்திராது; ஆதலால் வேலையைக் காலத்தில் செய்துவிடு; வெற்றியை ஞாலத்தில் கொய்துவிடு!” என்பது திரு. செண்பக ஜெகதீசன் சொல்லும் அனுபவமொழி!

    கால மேலாண்மை

    காலம் காட்டிடும் கடிகாரம்
    காலமே வாழ்வின் அதிகாரம்,
    வேலையைச் செய்திடு காலத்திலே
    வெற்றியே தங்கிடும் ஞாலத்திலே,
    காலம் நமக்காய்க் காத்திராது
    கடந்தால் இலக்கில் சேர்த்திடாது,
    கோலம் வாழ்வில் நன்றாய்ப்பெற
    கொண்டிடு கால மேலாண்மையே…!

    *****

    ”வெண்ணிலவும் செங்கதிரும் ஒருநாளும் நேரந் தவறுவதில்லை. நாமும் அதுபோல் கூரறிவோடு நேரத்தை நிர்வாகம் செய்தால் நேரமில்லை எனும் புலம்பலுக்கு வேலையில்லை; வாழ்க்கையிலும் தோல்வியில்லை” என்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    நேரத்தின் தத்துவம்..!

    இயற்கை தந்ததோ இருபத்திநான்கு மணித்துளிகள்..
    ……….
    இதிலெத்துணை நேரத்தைப் பயனாக்குகிறோம் நாம்.!
    வியத்தகு விஞ்ஞானம் வியப்புறும் விந்தைபுரிந்தாலும்..
    ……….
    வீணே கழியுநல்நேரத்தை சேமிக்க வழியில்லையோ.?
    மயக்கும் செயல்கள்மீதே நம்மதிகெட்டுப் போனதால்..
    ……….
    மாயமாய் மறைந்தே போய்விடுகிறது மொத்தநேரமும்.!
    இயங்கும் இவ்வுலகிற்குப் பஞ்சபூதம் காரணமாமவை..
    ……….
    இயங்காமல் சற்றுநேரம் நிலையாயின் என்னவாகும்..?
    நேரமதை நேசிக்கநாம் பழகவேண்டும்! செயல்புரியும்..
    ……….
    நேரத்தில் நல்லநேரம் கெட்டநேரம் உண்டென்போர்.!
    கூரரறிவு பெற்றிட கடுமுழைப்பில் கவனம்வேண்டும்..

    ……….குறுகியநேரம் கிடைத்தால்கூட வீணடித்தல் கூடாதாம்.!
    சீரழியுமிச் சமுதாயத்தில் நாட்டமிலா நிலைவேண்டும்..
    ……….
    சிறுபருவத்திலேயே சீராக வாழ்வுநெறி கற்கவேண்டும்.!
    ஈரடிப்புலவன் வள்ளுவன் ஆயிரம்வருடம் முன்னமே..
    ……….
    இடித்துரைத்தான்!இளமையில் கல்லென எழுதினான்.!
    வானில் எழிலாயுதிக்கின்ற விரிகதிரும் வெண்ணிலவும்..
    ……….வருவதற் கொருநாளும் நேரம்பார்க்க நினைவதில்லை.!
    தேனீக்கள் மலர்நாடிச் செல்லத்தகுந்த நேரமெதுவென..
    ……….
    தெரிந்தா செல்கிறது! சிந்தையிலிது உதிக்கவேண்டும்.!
    நானிலத்தில் ஓடும்நதியெலாம் நிலம்செழிக்க உதவும்..
    ……….
    நேரம்பாரா நலமொன்றேயதன் இயற்கை விதியாகும்.!
    இனிப்புடன் கசப்பும் வாழ்வில் வருவதியற்கையப்பா..
    ……….
    இனியாவது நேரத்தின்மீது பழிபோடாக் கடமையாற்று.!
    நேரமில்லை நேரமில்லையெனவே புலம்புவார் பலரும்..
    ……….
    நேரம்குறித்த கவலையெலாம் அவரிடம் இல்லையே.!
    நேரமதைப் பகுத்து நித்தம்செயும் செயல்களினாலதை..
    ……….
    வகுத்தெடுத்தால் நேரமென்பது நிறையவே கிடைக்கும்.!
    பாரஞ்சுமக்கும் மாடும் நேரமறிந்து செயல்படும்போது..
    ……….
    பகுத்தறிவாளருக்கோ இன்னும் ஏனோ புரியவில்லை.!
    சோரமில்லாது வாழ்வில் ஏற்றம்பெற வேண்டுமெனில்..
    ……….
    சோம்பல் விடுத்துநேரம் கூட்டிக்கழித்து வாழப்பழகு.!

    *****

    ”கடிகாரத் தோழி! நீயும், பெண்ணான நானும் ஒன்றுதான்! மனிதர்கள் தம்முடைய தோல்விக்கு நேரம் சரியில்லை என்று உன்மீதோ, மருமகள் வந்தநேரம் சரியில்லை என்று என்மீதோ பழிபோடத் தவறுவதில்லை. இசையோ, வசையோ எதுவும் நம் ஓட்டத்தை நிறுத்தாது” என்று சூளுரைக்கிறார் திருமிகு. சொல்லின் செல்வி.

    கடிக்காரத் தோழி 

    இரவுக்கும் பகலுக்கும் மத்தியில் உன்னோட்டம்
    பிறப்பும் இறப்புக்கும் மத்தியில் என்னோட்டம்.
    சிலர் சில நேரங்களில்
    நல்லநேரமென வாழ்த்துவார்கள்.

    உன்னை.
    மகராசி என வாழ்த்துவார்கள்
    என்னை.
    பலர் பல நேரங்களில்
    ராகு காலம் எமகண்டமென
    வசைப்பாடுவார்கள் உன்னை
    வாழாவெட்டி, விதவை மலடி என
    வசைப்பாடுவார்கள் என்னை!
    காலதேவனாகிய நீ
    ஒருவருடைய
    வெற்றிக்கும் தோல்விக்கும் காரணமாம்,
    மருமகளாகிய நான்
    புகுந்தவீட்டில்
    நல்லதுக்கும் கெட்டதுக்கும் காரணமாம்.
    உனக்குள் இருப்பது
    டிக்டிக் சத்தம்.
    எனக்குள் இருப்பது

    லப்டப் சத்தம்..
    இந்த மானுடம் இப்படித்தான்
    தன் குறைகளை களையாது
    காலம் உனை குற்றஞ்சாட்டும்
    பகுத்தறிவற்றுத் திட்டி தீர்க்கும்
    பெண் சமூகம் எங்களையும்
    கலாசார வேலியிட்டு நாசப்படுத்தும்..
    ஆனாலும், கடிகாரத் தோழியே..!
    வசைபாடுவதாலும் வாழ்த்துவதாலும்
    நம் ஒட்டதை நிறுத்தமுடியாது
    எதிர்காலம் என்று ஒன்று உண்டு
    எவருக்கும் அஞ்சாத மனம் உண்டு.

    *****

    ”கடிகார முள்ளின் சுழற்சிக்கேற்பச் சுற்றித் திரியும் மானுடருக்கு, நட்பும் காதலும் வாழ்க்கையும் இன்னபிறவும் இறுதிவரை விளங்காத கேள்விக்குறிகளே” என்பது திருமிகு. லீலாவின் கவிதை செப்பும் கருத்து. 

    பயணம்:

    காலக் கடிகாரத்தின்
    முட்களின் சுழற்சியில்
    ஒடிக்கொண்டும்
    உழைத்துக்கொண்டும்
    இருக்கும் நாம்,
    நம்மை வருத்தி
    சுயத்தை இழந்து
    நட்பை இழந்து
    நேரத்தைக் கடத்தி
    ஒய்ந்து.. களைத்து
    நிறைவில்
    மரணத்தின் விளிம்பில்
    கேள்விகுறியாகவே பயணிக்கிறது.
    நட்பு
    காதல்
    வாழ்க்கை..
    இயற்கை..
    செயற்கை
    கடவுள்.. மானுடமென..யாவும்.

    *****
    கடிகாரத்தை வைத்து ’மணி’யான கருத்துக்களைத் தம் கவிதைகளில் பொதிந்து தந்திருக்கும் கவிஞர் பெருமக்களுக்கு என் வாழ்த்தும் பாராட்டும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து… 

    முள்ளும் மலராகும் 

    முள் என்றால் காயம் மட்டுமா,
    என் தோழா!
    அது உனைக் காக்கும் வேலி அதை ஏனோ மறந்தாய்,
    என் தோழா!
    மொட்டுக்கள் மலராய் மலர முள்ளே காவல்,
    என் தோழா!
    விதைகள் மரமாய் வளர  முள்ளே காவல்,
    என் தோழா!
    புல்பூண்டுகூட முளைக்காத பாலைவனத்தில், முள்ளே
    விலங்கிற்கு உணவாம் என் தோழா!
    கடிகாரக் குடும்பத்தின் உயிர்நாடி,
    முட்கள் தானே என் தோழா!

    கண்டிப்பு என்ற முள்தானே
    ஒழுக்கத்தை தந்தது என் தோழா!
    தண்டனை என்ற முள்தானே
    குற்றத்தை ஒழித்தது என் தோழா!
    மருந்து என்ற முள்தானே
    நோயைத் தீர்த்தது என் தோழா!
    மரணபயம் என்ற முள்தானே,
    தவற்றைக் குறைத்தது என் தோழா!
    முதுமை என்ற முள்தானே
    தெளிவைத் தந்தது என் தோழா!
    முள்ளென்று இழிவாய் நினைக்காதே
    என் தோழா!
    முள்ளும் மலராகும் அதன் விளைவாலே
    என் தோழா!

    ”காலங்காட்டும் கடிகாரத்தில் முட்கள் இல்லையெனில் மணி தெரியாது; வாழ்க்கைப் பாதைவழிச் செல்லும் பயணத்தில் முட்கள் இல்லையெனில் அனுபவங்கள் கிடையாது.

    காலைத் தாக்கும் அதே முள்தான் வேலியாகிப் பயிரைக் காக்கிறது. நோயைத் தாக்கும் மருந்தெனும் முள்தான் உயிரைக் காக்கிறது. முதுமையெனும் முள் தெளிவைத் தருகிறது; மரணமெனும் முள் தவற்றைக் குறைக்கிறது.

    ஆதலால் மானிடா! முள்ளென்று தள்ளாதே! அதனையும் நல்அனுபவங்கள் நல்கும் மலரென்று கொள்!” என்று சிந்தனைக்கு விருந்தாகும் சீரிய கவிதையைத் தந்திருக்கும் திரு. பழ.செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன். 

     

     

    Share
  • சிட்டுவின் வலசை வரலாறு!

    பவள சங்கரி

    birds

    உல்லாசமாய் உலகளந்திருந்த
    சிட்டுக்குருவி
    வெள்ளோட்டமாய் மனுசனூரில்
    மதியிறக்கி
    தள்ளாட்டமாய் தத்தளிக்கும்
    கூட்டத்தினூடே
    பரவசமாய் கூர்ந்துநோக்கி
    வண்ணமயமான
    வஞ்சகமெனும் புதிதாயொரு
    வரைவிலக்கணமும்
    நெஞ்சகத்தை ஆட்கொள்ள
    அள்ளியெடுத்ததை
    பத்திரமாய் பையகப்படுத்திப்
    பறந்தது
    வகைவகையாய் பிறன்பொருள்
    களவாடலும்
    காழ்ப்பும், கோபதாபமும்,
    புறம்பேசுதலும்
    தீயசொல்லும் விதண்டாவாதமும்
    விரசமும்
    அனைத்தும் அள்ளிஅள்ளி
    பையகப்படுத்தி
    சுமந்தசுமை மூச்சழுத்தி
    எழும்பவிடாமல்
    விழிபிதுங்கி மூலையில்
    முடங்கச்செய்ய
    வாட்டமுற்று வாடிக்கிடந்ததை
    வழிப்போக்கன்
    நாய்நண்பன் பரிவோடு
    நலம்விசாரிக்க
    தன்வினை தானறியாது
    தலைகவிழ்ந்திருக்க
    பைரவனும் ஏற்றிவைத்த
    துர்பாரங்களை
    ஒவ்வொன்றாய் சுமையிறக்கி
    சுகமளிக்க
    கூனாய் குவிந்ததெலாம்
    சிதறியோட
    குதித்தோடி குதூகலமாய்
    சிறகுவிரித்த
    சிட்டுக்குருவி தவறியும்
    மனிதப்பதரின்புறம்
    சிரம்சாய்க்காமல் வான்வழியே
    வலசைபோனது!

     

    இணையப்படத்திற்கு  நன்றி.

    Share
  • படக்கவிதைப் போட்டி (135)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    23573984_1478741622180032_1160826125_n
    சத்யா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (18.11.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • துயர் போக்கடா!

     கவிஞர் இடக்கரத்தான்

     

     

    மனிதமுமே சிறிதேனும் இல்லார் – புனித

    மண்தனையும் ஏய்த்துவக்கும் பொல்லார் – வாழ்வின்

    புனிதமதை மிகமறந்து

    புவிதனையும் மிகப்படுத்தி

    வாழ்வார் – வீழ்ந்து – தாழ்வார்!

     

    பிறர்துயரில் மகிழ்ச்சிமிகக் கொள்வார் – பெரும்

    பொருள்பறிக்க வெறிபிடித்துத் துள்வார் – உயர்

    அறவழியை மிகமறந்து

    ஆதாயம் காணவழி

    தேடுவார் – ஓடி – ஆடுவார்!

     

    பேராசை பிடித்துமிக அலைவார் – பெரும்

    பேய்த்தனங்கள் செய்ததனில் குலைவார் – என்றும்

    நேராக்க முடியாத

    நெளிவுவழி தனில்நடந்து

    கெடுவார் – துயர் – படுவார்!

     

    அன்புவீசை என்னவிலை? என்பார் – பிறரை

    அடித்தவரும் அதன்துயரை உண்பார் – என்றும்

    என்புதோல் போர்த்தவரும்

    எளிதாக மண்ணுலகை

    ஏய்ப்பார் – நலம் – தீய்ப்பார்!

     

    தனையசைப்பார் யாருமிலை சொல்வார் – பெரும்

    தலைக்கனத்தில் பிறர்கனவைக் கொல்வார் – என்றும்

    தனைஆழம் புதைத்தழிக்கும்

    தகுதியற்ற வழிதன்னை

    நாடுவார் – தேடி – ஓடுவார்!

     

    புனையாரின் குருட்டுத்தனம் புரிவார் – கண்ணைப்

    பொத்திடவும் உலகொளிரின் எரிவார் – பெரும்

    ஆனைவெளிறி ஓடுதல்போல்

    அதட்டிவரும் மெய்க்கெனவே

    அஞ்சுவார் – அழுது – கெஞ்சுவார்!

     

    மேலொருவன் பார்ப்பதனை மறப்பார் – தனை

    மடக்கயாரும் இல்லையென்று பறப்பார் – எந்தக்

    காலமுமே ஏதும்செய்யா

    கடவுள்கற் சிலைஅஞ்சேன்

    என்பார் – தீ – பண்பார்!

     

    தெய்வம்நின்று கொல்லுமெனல் பொய்யடா – உடன்

    தேடிவந்து பாய்ந்தடித்தல் மெய்யடா – இனிச்

    செய்வதையும் நலம்காக்கச்

    செய்வதற்கு நினைவலைகள்

    தேக்கடா – துயர் – போக்கடா!

     

     

    Share