Blog

  • நீலிக்கண்ணீர் என்றால் என்ன?

    பவள சங்கரி

    வணிகக் குலத்தைச் சேர்ந்த நீலி என்கிற பெண் தீய எண்ணம்கொண்ட தன் கணவனால் கொல்லப்படுகிறாள். பின் அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட பின்னர் அவள் பேயாகி, மனைவி போன்ற தோற்றத்துடனே வருகிறாள். கையில் ஒரு கரிக்கட்டையைக் குழந்தையாகக் கொண்டு மாய லீலைகள் செய்கிறாள். அப்பா என்று குழந்தையும் அன்பாக விளிக்கிறது. அவனோ அச்சத்தில் உடன் செல்ல மறுக்கிறான். நீலி கண்ணீர் மல்க நிற்கிறாள். ஊர் மக்கள் அவள் பேய் என்பதை அறியாமல் அவனை நீலியோடு சென்று குடும்பம் நடத்தவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். அது தன் மனைவி அல்ல, பேய் என்று அவன் அச்சத்தோடு வாதிடுகிறான். ஆனால் மக்கள் அதை நம்பாமல் ஒருவேளை அவன் பேய் என்று சந்தேகிக்கும் அந்தப் பெண்ணால் கொல்லப்பட்டால் தாங்களும் தீக்குளிப்போம் என்று சமாதானம் செய்கிறார்கள். ஆனால் பேயான நீலி அவனைக் கொன்றுவிட அந்த மக்கள் சொன்னதுபோல் தீப்பாய்கிறார்கள். இங்கிருந்து தான் நீலிக்கண்ணீர் என்ற பதம் வருகிறது. நீலி தன்னைக் கொன்ற கணவனைப் பழி வாங்கினாலும், எந்த பாவமும் செய்யாத சிலரும் உயிர் துறந்தது வசைக்குரிய ஒன்றாக மாறியிருப்பதைக் காண வேண்டியிருக்கிறது. பக்திக்காலத்தில் பெரும்பாலும் நிலவுடைமையாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதையும், வாணிகர்கள் துன்பம் அடைந்ததற்கும் குறியீடாகச் சொல்லப்பட்ட கதையாகக் காணமுடிகிறது.

    படியினப் பொழுதே வதைத்திடும் பச்சை நாவியை நம்பலாம்
    பழி நமக்கென வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம்
    கொடுமதக்குவ டெனவளர்த்திடு குஞ்சரத்தையும் நம்பலாம்
    ………………
    (விவேக சிந்தாமணி—பாடல் 30)

    Share
  • இணையத்தமிழ் இதழ்களில் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் – 1

     -முனைவர்.வே.மணிகண்டன்

    தமிழ் இலக்கிய உலகின் இன்னுமொரு பரிணாம விளைவு இணையத்தமிழ். தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னேற்றம் ஊடகங்களின் வளர்ச்சியினையும் அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. ஓலைச் சுவடிகள், பக்கங்களாக மாறி இன்று இணையத்தமிழ் வரை வளர்ச்சியடைந்துள்ளது. இணையத்தைப் பொறுத்தவரையில் உலகின் பல பாகங்களிலும் வாழும் இணையப் பயனாளர்களிடம் இணையத்தமிழ் இதழ்களை மிக எளிதாக எடுத்துச் செல்லும் சக்தி படைத்தது. தகவல்களின் சுரங்கமாக விளங்கும் இணையத்தில் வலையேற்றப்படும் இணையத்தமிழ் இதழ்களில் உடனுக்குடன் படைப்புகள் வெளியிடவும், இலக்கிய விவாதங்களையும், கருத்துப் பரிமாற்றங்களையும் நடத்த முடிகிறது. படைப்பிலங்கியங்களுக்கு பெரும்பான்மையான இணைய இதழ்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் இணையத்தமிழ் இதழ்களில் எந்தெந்த நிலைகளில் தொகுக்கப்படுகின்றன என்பதைத் திண்ணை, பதிவுகள், நிலாச்சாரல், வார்ப்பு ஆகிய இணைய இதழ்களின் வாயிலாக இவ்வியல் ஆராய்கிறது.

    திண்ணை இதழ் அறிமுகம்

    ஜனநாயக ரீதியாக அனைத்துத் தரப்பினரும் தம்முடைய கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு பொது மேடையாகத் திண்ணை இதழ் திகழ்கின்றது. மாறுபட்ட, முரண்பட்ட பல கருத்துகளுக்கும் களம் அமைத்துத்தரும் பணியை செவ்வனே திண்ணை இதழானது செய்கின்றது.

    திண்ணை ஓர் இலாப நோக்கற்ற இணைய இதழாகும். இவ்விதழ் வார இதழாக 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதியில் இருந்து இணையத்தில் தரவேற்றம் செய்யப்படுகின்றது. திண்ணை இதழின் ஆசிரியர் கோ.இராஜாராம். திண்ணையின் தொடக்க கால இதழ்கள் பெரும்பாலும் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டு காலம் முழுமை பெறாது வந்துள்ளன. திண்ணையின் முதல் இதழில் இலக்கியக் கட்டுரைகள் எனும் பிரிவில் மட்டும் பாவண்ணனின் ஒளிர்ந்த மறைந்த நிலா என்னும் கட்டுரை தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றைய பிரிவுகள் எந்தப் படைப்புகளும் இன்றிக் காணப்படுகின்றன.

    அரசியலும் சமூகமும், கதைகள், கவிதைகள், அறிவியலும் தொழில்நுட்பமும், கலைகள், சமையல், இலக்கியக் கட்டுரைகள், நகைச்சுவையும் வித்தியாசமானவையும், கடிதங்கள், அறிவிப்புகள் ஆகிய பகுதிகளில் ஆக்கங்கள் தரவேற்றம் செய்யப்படுகின்றன.

    இணையப் புத்தக அங்காடியின் இணைப்பும், ஜெயபாரதன் இணையப்பக்கம் எனும் வலைப்பதிவின் இணைப்பும், தோழி.காம், வார்ப்பு, தமிழோவியம், மரத்தடி, பதிவுகள் ஆகிய இணையத்தமிழ் இதழ்களின் இணைப்புகளும், அகத்தியர் யாஹு குழுமம், ராயர் காப்பி கிளப்,  யாஹு குழுமம், தமிழ் உலகம் யாஹு குழுமம் ஆகிய தமிழ் இணையக் குழுமங்களின் இணைப்புகளும் திண்ணை இதழில் தரப்பட்டுள்ளன. திண்ணைத் தளத்திலேயே படைப்புகளையும், தகவல்களையும் மின்னஞ்சல் அனுப்பும் வசதியும் , பிரதி எடுக்கும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளன.

    திண்ணை இதழின் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள்

    திண்ணையில் பல வகையான இலக்கியப் படைப்பாளிகளும் தங்கள் படைப்புகளை வழங்குகின்றனர். கதை, கவிதை, நாடகம், நாவல் போன்ற தரமான படைப்புகள் திண்ணையில் வெளியிடப்பட்டுள்ளமையை அதன் முந்தைய இதழ்களைக் காணும் பகுதிக்கு சென்று பார்வையிடும்படி பழைய இதழ்கள் தொகுத்துத் திண்ணையில் வைக்கப்பட்டுள்ளன.

    ’திண்ணையில் வரும் கதை, கவிதை கட்டுரைகளில் வரும் சம்பவங்களுக்கும், வெளிப்படும் கருத்துக்களுக்கும், உணர்ச்சிகளுக்கும், தொனிகளுக்கும் அந்தந்தப் படைப்பாளிகளே பொறுப்பு. திண்ணையில் வெளியிடப்படும் கதைகள், கட்டுரைகள் மூன்று வகையானவை. முதலாவது படைப்பாளிகளே திண்ணைக்கு அனுப்பிப் பிரசுரிக்கக் கோருபவை. இப்படிப்பட்ட படைப்புகள் வேறு பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்ய விரும்புபவர்கள் நேரடியாக அந்தப் படைப்பாளிகளையே தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களது மின்னஞ்சல் முகவரிகள் திண்ணையில் வெளியிடப்படுகின்றன. இரண்டாவது, திண்ணைக் குழு மொழிபெயர்க்கும் படைப்பாளிகள். இந்தக் கட்டுரைகளை திண்ணையில் மொழிபெயர்த்துப் பிரசுரம் செய்யத் தேவையான அனுமதி பெரும்பாலும் திண்ணை பெற்றிருக்கிறது. கேட்ட அனுமதி திண்ணையில் மொழிபெயர்த்துப் பிரசுரம் செய்ய மட்டுமே. இவைகளை மறு மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டுமெனில் அந்தந்த ஆசிரியர்களுக்கே நீங்கள் எழுத வேண்டும். இந்த மொழிபெயர்ப்பையே நீங்கள் உபயோகப்படுத்தும் பட்சத்தில் ‘மொழிபெயர்ப்பு திண்ணை’ எனக் குறிப்பிடுதல் நலம்.  மூன்றாவது படைப்பாளிகளின் அனுமதி இன்றியே திண்ணை எனக் குறிப்பிடுதல் நலம். படைப்பாளிகளின் அனுமதி இன்றியே திண்ணை ஒரு சில கட்டுரைகளையும் கதைகளையும் பிரசுரித்திருக்கிறது. அந்தப் படைப்பாளிகளின் முகவரி தெரியாதது ஒரு காரணம். சிலவற்றிற்கு நேர்ப்பேச்சில் அனுமதி பெற்றதும் உண்டு. ஒரு குறிப்பிட்ட முக்கியமான படைப்புத் தமிழ் வாசகர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது இன்னொரு  காரணம் ‘1  எனத் திண்ணையில் வெளிவரும் படைப்புகளின் தரவேற்ற நிலைபற்றித் திண்ணை ஆசிரியர் விவரிக்கின்றார்.

    திண்ணையில் காணும் படைப்பாளிகளைப் பார்க்கையில் கொஞ்சம் மிரட்சியாகவும் உள்ளது. மிகத் தீவிரமாக இலக்கிய உலகில் இயங்கி வரும் அனைவரது படைப்புகளையும் இங்குக் காணமுடிகிறது. திண்ணை இணைய தளத்தின் வெற்றிக்குக் காரணம் படைப்பாளிகளின் தரமான பங்களிப்புகள் என்று சொல்லலாம் ‘2 என மதியழகன் சுப்பையா திண்ணைப் படைப்பாளிகளைப் பற்றித் தமது திண்ணை. காம் எனும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

    ‘திண்ணையில் வரும் கதை, கவிதை கட்டுரைகளுக்கான பிரசுர உரிமை அவற்றை ஆக்கியவர்களுக்கே. அவர்கள் வேறு எந்தப் பத்திரிகையில் அவற்றை மறுபிரசுரம் செய்தாலும், அந்த விசயத்தைத் திண்ணைக்குத் தெரிவிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.  திண்ணையில் இந்தத் தேதியில் ஏற்கெனவே பிரசுரமானது என்ற விசயத்தை குறிப்பிடவும் தேவையில்லை (அப்படி குறிப்பிட்டால் திண்ணை ஆசிரியர் குழு நன்றி பாராட்டும்). திண்ணையில் வரும் கதை, கவிதை கட்டுரைகளில் வரும் சம்பவங்களுக்கும், வெளிப்படும் கருத்துக்களுக்கும், உணர்ச்சிகளுக்கும், தொனிகளுக்கும் அந்தந்தப் படைப்பாளிகளே பொறுப்பு. திண்ணையில் எழுதுபவர்கள் பொறுப்புடன் எழுதுங்கள். கருத்துகளைப் பற்றிப் பேசும்போது, வெறும் தனிப்பட்ட கோபதாபங்களுக்கான வடிகாலாய் எதையும் எழுதாதீர்கள்’3.  திண்ணை ஆசிரியர் குழு எழுதியுள்ள இக்கடிதத்தில் தரவேற்றம் செய்யப்படும் படைப்புகளின் படைப்புரிமை, படைப்புகளையும் கருத்துக்களையும் எழுதும் விதம் ஆகியவை குறித்து விளக்கப்படுகிறது.

    திண்ணை மூலமாகப் பல புதிய எழுத்தாளர்கள் உருவாகியுள்ளனர். பல புதிய வாசகர்கள் தமிழுக்குப் கிடைத்துள்ளனர். முன்பே எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர்களுக்கு வாசகத் தளம் விரிவு பெற்றுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக விஞ்ஞானக் கட்டுரைகள், பொருளாதாரம், சமூகவியல், மானிடவியல் கட்டுரைகள் மட்டுமின்றிச் சமகால அரசியல், சமூகம், தமிழ்நாட்டின் வாழ்நிலை குறித்த கட்டுரைகளும் வெளியாகியுள்ளன.

    கவிதைகள்

    திண்ணையில் கவிதைகள் பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகள் படைப்பாளர்களால் அனுப்பப்பட்டுத் திண்ணை ஆசிரியர் குழுவால் திண்ணையில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பெரும்பான்மையான கவிதைகளின் பாடுபொருள்கள் தனிமனிதச் செயல்பாடுகள், காதல், மொழிபெயர்ப்பு, புலம்பெயர்வு, பெண்ணியம் ஆகியவற்றைச் சார்ந்தே அமைகின்றன. தஸ்லீமா, அல் ஹண்டர் (யுட ர்ரவெநச), இ ரவீந்திரநாத் தாகூர், அல் பேர்டி, கைஃபி ஆஸ்மி, சுவாமி விவேகானந்தர், கவிஞர் அருண் கொலட்கர், பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் ஆகிய கவிஞர்களின் படைப்புகள் மொழிபெயர்த்துப் படைப்பாளர்களால் திண்ணையில் இடப்பட்டுள்ளன.

    ருத்ராவின் வைரமுத்துவின் வானம், கனடாவைச் சேர்ந்த சி.ஜெயபாரதனின் தமிழாக்கத்தில் காதல் நாற்பது, காற்றினிலே வரும் கீதங்கள் , தாகூரின் கீதங்கள்  பா.சத்தியமோகனின் பெரியபுராணம், கோபாலின் மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும் போது ஆகிய தலைப்புக்களில் திண்ணை இதழில் தொடர் கவிதைகள் வெளிவந்தன.

    திண்ணை ஆசிரியர் குழுவின் முயற்சியினால் சிறப்பான கவிதைகள் புத்தகங்களில் கண்டறிந்து மொழிபெயர்த்தும் வெளியிடப்பட்டுள்ளது. மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, கஜல், ஹைபுன், சென்ரியு ஆகிய வகைமைகளில் திண்ணையில் கவிதைகள் படைப்பாளர்களால் படைக்கப்பட்டுத் திண்ணை ஆசிரியர் குழுவினரால் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    கதைகள்

    திண்ணை இதழில் பிரபல படைப்பாளர்கள், அயல் நாட்டுப் படைப்பாளர்கள், புதுமுகப் படைப்பாளர்கள் என அனைத்துப் படைப்பாளர்களின் சிறுகதைகளும் ஐந்நூற்றுக்கும் மேல் இடப்பட்டுள்ளன. பிரபல படைப்பாளர்களின் சிறுகதைகள் பெரும்பாலும் படைப்பாளர்களின் அனுமதி பெற்றுத் திண்ணை ஆசிரியர் குழுவால் தரவேற்றம் செய்யப்படுகின்றன. தமிழில் சிறுகதை வடிவத்தையும், அறிவியல் புனைகதை வடிவத்தையும் வளர்த்தெடுக்கும் பொருட்டுத் திண்ணை மற்றும் மரத்தடி இணைந்து சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டியை 2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தி பரிசுகளை வழங்கிப் படைப்பாளர்களை ஊக்கப்படுத்தியது.

    திண்ணையில் மதுமிதா எனும் படைப்பாளரால் மொழிபெயர்க்கப் பட்ட ’தைவான் நாடோடிக் கதைகள்’ சிறுகதைத் தொடராக வெளிவந்தது. மேலும் , காப்ரியல் கார்ஸியா, மார்க்வெஸ், லாரி ஃப்ரெஞ்ச், டேவிட் பெஸ்மொஸ்கிஸ், பெர்னாட்சா  ஆகியோரின் சிறுகதைப்  படைப்புகள் திண்ணையில் பல படைப்பாளர்களால் மொழிபெயர்க்கப்பட்டுக் கதைகள் பகுதியில் இடப்பட்டுள்ளது. தமிழில் பிரபல எழுத்தாளர்களான  நீல பத்மநாபன், வல்லிக்கண்ணன், அசோகமித்ரன், ஜெயகாந்தன், வண்ணநிலவன், அம்பை, வண்ணதாசன், கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, அஸ்வகோஸ், அழகியசிங்கர், அ.முத்துலிங்கம், விந்தன், பூமணி, புதுமைப்பித்தன், ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளும் திண்ணையில் தரவேற்றப்பட்டுள்ளன. திண்ணை சிறுகதைகள் பெண்ணியம், புலம்பெயர்வு இலக்கியம், சமுதாயம், காதல், பெரியாரியம், மார்க்சியம் ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

    நாவல்கள்

    நாவல் இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் தளமாகத் திண்ணை இதழ் திகழ்கின்றது. திண்ணை இதழில் வெளிவரும் நாவல்கள் பெரும்பாலும் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் நாவல்களாகவே அமைகின்றன. திண்ணையில் கு.அழகிரிசாமியின் முகக்களை, எம்.வி.வெங்கட்ராமின் மாளிகை வாசம், ஆதவனின் சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல், வ.ஐ.ச.ஜெயபாலனின் செக்குமாடு, சேவல் கூவிய நாட்கள் (குறுநாவல்), ஜெயமோகனின் நான்காவது கொலை, இரா.முருகனின் வாயு (குறுநாவல்) , அரசூர் வம்சம், ஷங்கரநாராயணனின் பறவைப்பாதம், திசை ஒன்பது திசை பத்து, ராகு கேது ரங்கசாமி, க.அருள் சுப்பிரமணியத்தின் விடியும்,  கோச்சாவின் கனவின் கால்கள் (நாவல் தொடர்) , ரெ.கார்த்திகேசுவின் புழுத் துளைகள் (குறுநாவல்), முகம்மது இஸ்மாயிலின் பிறந்த மண்ணுக்கு, அ.ம.ந.ராமசாமியின் துணை, ஜாவா குமாரின் திருவண்டம், சி.ஜெயபாரதனின் கானல் நதிக்கரை நாகரிகம் (குறுநாவல்), ஜோதிர்லதா கிரிஜாவின் மறுபடியும் , அதிர்ச்சி (குறுநாவல்) , ஒரு மகா பாரதம், நாகரத்தினம் கிருஸ்ணாவின் மாத்தா – ஹரி, நீலக்கடல்; கௌரிகிருபானந்தனின் மொழிபெயர்ப்பில் தொடுவானம் தொட்டுவிடும் தூரம் ஆகிய நாவல்கள் திண்ணையில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    நாடகங்கள்

    இணையத்தமிழ் இதழ்களிலேயே அதிகமான நாடகங்கள் தரவேற்றப்பட்ட இதழாகத் திண்ணை திகழ்கின்றது. திண்ணை இதழில் மொழிப்பெயர்ப்பு நாடகங்கள் அதிக அளவில் இடப்பட்டுள்ளன. திண்ணையில் அகஸ்ட் ஸ்ட்ரிண்ட் பெர்கினுடைய ஒரு நாடகம், இன்குலாப்பினுடைய அத்தனை ஒளவையும் பாட்டிதான் (ஒளவையிலிருந்து), சின்னக் கண்ணனுடைய நிழல், ஜெயமோகனுடைய வடக்குமுகம், புதுமைப் பெண்மணி வேலுப்பிள்ளையினுடைய கனடாவின் நாகம்மா, கணேசனுடைய இருள், ஒரு மரக்கிளையில் சில நூறு குருவிகள், சி.ஜெயபாரதனுடைய மொழிப்பெயர்ப்பில்  நரபலி நர்த்தகி ஸலாமி (ஓரங்க நாடகம்), உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்), புனித அணங்கு ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்சா நாடகத்தின் தழுவல்), ஆப்ரஹாம்லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்), கரு.திவரசினுடைய ஐயம், சந்தேகம், அயிர்ப்பு, வெறிச்சென்று ஒரு வீதி, தௌஃபீக் அல்-ஹகீம்னுடைய ஓர் அரேபிய நாடகம் ஆகிய நாடகங்கள் தரவேற்றப்பட்டுள்ளன. இந்த நாடகங்களில் பல நாடகங்கள் தொடர் நாடகங்களாக வார வாரம் வெளிவந்துள்ளன.

    திண்ணை இதழில் கவிதைகள், கதைகள் ஆகியவை தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து வைத்திருப்பதைப் போன்று நாவல்கள், நாடகங்கள் ஆகிய படைப்பிலக்கியப் பிரிவுகள் தனித்தனியாகப் பிரித்து வைக்கப்படவில்லை. எளிதில் இணையப் பயனர்கள் கண்டறிந்து படிக்கும் விதத்தில் இப்பிரிவுகள் பிரித்து வைக்கப்பட வேண்டும். நாவல்களும், நாடகங்களும் கதைப்பகுதியிலேயே தரவேற்றம் செய்யப்படுகின்றன.

    பதிவுகள் இதழ் அறிமுகம்

    பதிவுகள் இணைய இதழானது மாசி 2000-இல் கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் வ.ந.கிரிதரனால் மாத இதழாகத் தொடங்கப்பட்டது. இணையத்தமிழைப் படைப்பாளிகள், வாசகர்கள் அனைவரும் பயன்படுத்தும் படி செய்தல் , அறிவினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளல், படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் இடையிலொரு பாலமாக விளங்குதல் ஆகியவற்றை அடிப்படை நோக்கங்களாகக் கொண்டு பதிவுகள் இதழ் செயல்படுகிறது.

    பதிவுகளின் ஆசிரியர் வ.ந.கிரிதரன்  ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது (தொராண்டோ) கனடாவில் வாழ்ந்து வருபவர். இலங்கையில் இருந்த காலத்தில் ஈழத்துப் பத்திரிகைகள் பலவற்றில் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. இவர் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய இலக்கிய வகைமைகளைப் படைப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். மொறட்டுவைப் பல்கலைக் கழகக் கட்டடக்கலைப் பட்டதாரியான இவர் மொறட்டுவைத் தமிழ்ச் சங்க வெளியீடான ‘நுட்பம்’ மலரின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். கனடாவுக்குப் புலம்பெயர்ந்தபின் இவரது ஆக்கங்கள் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியன ‘தாயகம்’, ‘தேடல்’, ‘கணையாழி’, ‘துளிர்’, ‘சுவடுகள்’, ‘உயர் நிழல்’, ‘ஆனந்த விகடன்’, ‘சுபமங்களா’ மற்றும் இணைய இதழ்களான ‘திண்ணை’, ‘அம்பலம்’, ‘ஆறாந்திணை’, ‘மானசரோவர்.காம்’ ஆகியவற்றில் வெளிவந்திருக்கின்றன. 2000-ஆம் ஆண்டிலிருந்து ‘பதிவுகள்’ இணையத் தளத்தை வடிவமைத்து அதன் ஆசிரியராக இருந்து வருகின்றார்.

    பதிவுகள் இதழின் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள்

    ’தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் வாசகர்கள், படைப்பாளிகள் மற்றும் அறிஞர்கள் அனைவரும் தம் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளுமிடமாகப் பதிவுகள் விளங்குகின்றது. இணையத்தின் ஆரோக்கியமான பயன்களிலொன்று மிக இலகுவாகப் பலரை எல்லைகளைக் கடந்து தொடர்பு கொள்ள வைத்தலென்பது. இணைய இதழொன்றினால் மிக இலகுவாக விரைவாகப் பல படைப்பாளிகள், ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். அதற்கு அனைவரையும் இணையத்தமிழின் நன்மைகளை உணர வைக்க வேண்டும். இத்தகைய இணைய இதழ்களால் அவற்றை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவதன் மூலம் அவற்றில் பங்களிக்க வைப்பதன் மூலம் உணர வைக்க முடியும். இதற்கு முதல்படியாகப் பதிவுகள் ஆரம்பத்தில் பாவிக்கும் எழுத்துருக்களில் ஆக்கங்களை, எண்ணங்களை அனுப்பி வைக்கும்படிக் கோரினோம். அவ்விதம் வரும் படைப்புகளையே பிரசுரிக்கத் தொடங்கினோம். பல பெரிய எழுத்தாளர்கள் ஆரம்பத்தில் தமிழில் எழுதச் சிரமப்பட்ட போது அவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்தினோம். அதன்பின் அவர்கள் பதிவுகளுக்குத் தாங்களாகவே உரிய எழுத்தில் ஆக்கங்களை அனுப்பத் தொடங்கினார்கள். இதன் மூலம் படைப்பாளிகளைக் கணித்தமிழின் பயனை நேரடியாகவே உணரவைக்கக் கூடியதாகவிருந்தது. மேலும், பதிவுகள் இதழினை ஆரம்ப காலத்திலிருந்தே படைப்பாளிகளின், வாசகர்களின் பங்களிப்புடன் வெளிக்கொணர்ந்திட முடிந்தது. பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்பும் படைப்பாளிகள் தங்களது ஆக்கங்களைத் தாங்களே தட்டச்சு செய்து அனுப்புவதென்பது பதிவுகள் சஞ்சிகையின் வெற்றிக்கு முக்கியமானதொரு தேவையாகவிருந்தது. ஆரம்பகாலப் பதிவுகள் இதழ் மிகவும் மோசமான வடிவமைப்புடன் ஆர்வத்தின் காரணமாக வெளிவந்ததை ஆரம்ப ஆக்கங்களைப் பார்க்கும்போது புரிந்து கொள்வீர்கள். இருந்தும் , பதிவுகள் ஆரம்பத்திலேயே பலரையும் ஈர்க்கத் தொடங்கி விட்டது என ஆசிரியர் வ.ந.கிரிதரன் பதிவுகள் இதழின் ஆரம்பகால படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகளைக் குறிப்பிடுகின்றார்‘4.

    பதிவுகள் முதல் இதழில் இந்திரனின் அகமும் புறமும் நூலிருந்து ஓவியம் பற்றி வெளிவந்த கருத்துகள் சிலவும் மகாகவி, சோலைக்கிளி போன்றவர்களின் கவிதைகளும் வெளியிடப்பட்டன. மேலும் , இலங்கை, தமிழக அரசியல் பற்றிய கட்டுரைகள், தமிழ் விமர்சனம் பற்றிய சு.ரா., கா.சிவத்தம்பி மற்றும் கனேடியத்தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகளும் முதல் இதழில் இடப்பட்டுள்ளன.

    தொடக்க காலத்தில் முரசு அஞ்சலின் இணைமதி எழுத்துரு பாவிக்கப்பட்டு பின்னர் அது முரசு அஞ்சலில் மாற்றப்பட்டது. தற்போது பதிவுகள் யுனிகோர்டில் (லதா எழுத்துருவில்) பாவிக்கப்பட்டு வெளிவருகின்றன.

    ‘அரசியல் கவிதை, சிறுகதை, கட்டுரை நூல் விமர்சனம், நிகழ்வுகள், அறிவியல், சினிமா, நாவல், வாதம் ஆகியவைகளோடு உங்கள் நலம், தமிழ் வர்த்தகக் கையேடு, இலவச வரி விளம்பரம், நூல் அங்காடி மற்றும் வாசகர் எதிரொலி எனப் பல அடுக்குகளைக் கொண்டு கனத்துக் கிடக்கிறது. இந்தத் தளம், உலகத்தின் அனைத்து மூலையிலும் உள்ள எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளைப் பதியும் ஒரு தளம் என்றால் மிகையாகாது. அரசியல் கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் வாசிக்க வேண்டிய சிறப்புப் பகுதி. சிறப்பான ஆங்கிலக் கட்டுரைகளையும் ஏற்கிறார்கள். இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களின் படைப்புகளைத் தக்க ஓவியங்கள், புகைப்படங்கள் இணைப்புடன் வெளியிடுவது இவர்களின் ஈடுபாட்டுக்கு ஒரு சான்று. விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் இங்குப் புதிய பரிணாமம் பெற்றிருக்கிறது. இன்று தமிழ் அச்சேடுகளில் எங்கும் காணக் கிடைக்காத அறிவியல் கட்டுரைகளைப் பதிவுகள் தளத்தில் காணலாம். பதிவுகள் தளத்தின் படைப்புகளை யாரும் எடுத்தாளலாம் என்று பெருந்தன்மையோடு அனுமதித்திருக்கும் நிலையில் அச்சு இதழ்களும் பிற இதழ்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்கள் வர்த்தகம் குறித்து இலவசமாக விளம்பரம் செய்து பயன் அடையுங்கள் என்று வாசல் திறந்து வாய்ப்பளித்து உள்ளது இந்த இதழ். தமிழர் விழாக்களை முன்னிட்டு சிறப்பிதழ்களும் புதுப்பிக்கப் படுகின்றன. உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள், இலக்கியம் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து புகைப்படங்களுடன் செய்தி வெளியிடப்படுகிறது. நல்ல திரைப்படங்கள் குறித்து புகைப்படங்களுடன் செய்தி வெளியிடப்படுகிறது. நல்ல திரைப்படங்கள் குறித்து சிறப்பான விமர்சனங்களும் நூல் மதிப்புரைகளும் பாராட்டத்தக்கவைகள். வீண் அரட்டைகளும் விவாதங்களும் இந்தத் தளத்தில் இல்லை. ஆக்கப் பூர்வமான படைப்புகளை எதிர்பார்க்கும் எவரும் இந்தத் தளத்தை திறக்கலாம். தங்கள் படைப்புகள் காலத்தால் அழியாமலும் வெகுமக்களால் படிக்கவும் பாராட்டவும் பட வேண்டும் என்று விரும்புவார்கள். உடனடியாக இந்த இணைய இதழைக் காணுங்கள். பதிவுகள் தளம் காலத்தின் அத்தனை நிகழ்வுகளையும் மிகச் சரியாக பதிவு செய்து வருகிறது’5 எனப் பதிவுகள் இதழின் படைப்பிலக்கியம் பற்றி மதியழகன் சுப்பையா தமது வலைப்பதிவில் பதிவுகளில் விவரிக்கின்றார்.

    மாத இதழாக வெளிவரும் பதிவுகள் இதழில் அரசியல், கவிதை, சிறுகதை, கட்டுரை அறிவியல், சினிமா, நூல்விமர்சனம், நாவல், உங்கள் நலம், விவாதம், உளவியல், சமூகம், உலக இலக்கியம் என அனைத்துப் பிரிவுகளிலும் ஆக்கங்கள் இடப்படுகின்றன. மேலும் , நிகழ்வுகள், வாசகர் எதிரொலி, இலவச வரி விளம்பரம், தமிழ் வர்த்தகக் கையேடு போன்ற பிரிவுகளும் பதிவுகள் இதழில் இணைய உலாவிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தியா, இலங்கை, கலிபோர்னியா, மலேசியா, கனடா, சுவிஸ், பிரித்தானியா, சிங்கப்பூர், பாரீஸ், நியூயார்க், பிரான்ஸ், செர்மனி, டென்மார்க் உட்பட உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் வாழும் தமிழர்கள் பதிவுகள் இதழில் தங்கள் படைப்புகளை வெளியிடுகிறார்கள். இவ்விதழ் தமிழில் வெளிவந்தாலும் ஆங்கிலத்தில் வெளிவரும் படைப்புக்களையும் ஏற்கிறது. பதிவுகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாக இணையப் பயனர்கள் அறியம்படி வெளியிடுகிறது.

    பதிவுகளில் ஜெயமோகன், வெங்கட்சாமிநாதன், ஜெயபாரதன், யமுனா ராஜேந்திரன், சுப்ரபாரதிமணியன், திலகபாமா, கே.எஸ்.சிவகுமாரன், லதா ராமகிருஷ்ணன், நளாயினி தாமரைச் செல்வம், ரஞ்சி(சுவிஸ்), பாராகவன், நேசகுமார், புதியமாதவி, பிச்சினிக்காடு இளங்கோ, சந்திரவதனா, செல்வகுமாரன், இராஜேஸ்வரி, பாலசுப்ரமணியம், அ.முத்துலிங்கம், செழியன், டாக்டர் சுமதி ரூபன், கவிஞர் ஜெயபாலன், மைக்கல், ரமணீதரன், டி.செ.தமிழன், ஆபிதீன், தாஜ், ராஜநாயகம், ரோசாவசந்த்;, சூரியா, இரா.முருகன், சங்கர், வேதசகாயகுமார், நாகரத்தினம் கிருஸ்ணா, தேவகாந்தன், த.சிவபாலு, கே.எஸ்.சிவகுமாரன், மு.திருநாவுக்கரசு, அருணன்;, என்.கே.மகாலிங்கம், சுசீந்திரன், ஸ்ரீரங்கன், வைகைச்செல்வி, நவஜோதி;, வேதா இலங்காதிலகம், சக்தி சக்திதாசன், நடேசன், டானியல் ஜீவா, அன்புதாசன் எனப் பல பிரபல படைப்பாளிகளிலிருந்து புதிய படைப்பாளிகள் வரை எழுதியுள்ளார்கள்.

    ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியான அறிஞர் அ.ந.கந்தசாமியின் படைப்புகளும், பதிவுகள் ஆசிரியர் வ.ந.கிரிதரனின் படைப்புகளும் பெரும்பகுதி முழுமையாகத் தொகுக்கப்பட்டுப் பதிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கனேடிய, சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகள், கவிதைகள், கதைகள், விமர்சனங்கள், தகவல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் இதழாகவும் பதிவுகள் திகழ்கின்றது. குழந்தைகள் இலக்கியத்திற்கான சிறப்புப் பக்கங்களையும் இவ்விதழ் தன்னகத்தே பெற்றுள்ளது. உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் உலகத்தமிழ் மக்களின் கலை, அரசியல், இலக்கிய முயற்சிகள் மற்றும் புகலிடவாழ்வு பற்றிய கட்டுரைகள், ஆய்வுகள், தகவல்கள் ஆகியவை அக்கறையில் எனும் பகுதியில் தரவேற்றம் செய்யப்படுகின்றன.

    கவிதை

    பதிவுகள் இணைய இதழில் கவிதை பிரிவில் இருநூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் பங்களிப்பால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் இடப்பட்டுள்ளன. இப்பிரிவு அதிகமான படைப்பாளிகளின் படைப்புகள் இடம் பெற்றுள்ள பிரிவாகவும் இணைய உலாவிகள் அதிகம் உலாவும் பிரிவாகவும் திகழ்கிறது. புதுக்கவிதை, மரபுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியு, ஹைபுன் ஆகிய வடிவங்களில் கவிதைகள் இடப்பட்டுள்ளன. காதல் கவிதைகள் குறிப்பிட்ட அளவு இத்தளத்தில் காணக் கிடைக்கின்றன.

    பெண்ணியம், மார்க்சியம், புலப்பெயர்வு இலக்கியம், பின் நவீனத்துவம் ஆகிய இலக்கிய வகைமைகளில் கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கவிதைகள் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் புலப்பெயர்வு சார்ந்த கவிதைகளாகவும், காதல், தனிமனித நடத்தை ஆகியவை சார்ந்த கவிதைகளாகவும் இடம்பெற்றுள்ளன. மொழிபெயர்ப்பு கவிதைகளும் இத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எவ்விதத் திருத்தமும் இன்றி படைப்பாளிகளின் கவிதைகள் வெளியிடப்பட்டுள்ளன. அறிமுக, பிரபல எழுத்தாளர்களின் கவிதைகளும் எவ்விதப் பாகுபாடுமின்றி வெளியிடப்படுகின்றன.

    சிறுகதை

    பதிவுகள் இதழில் கதைகள் பகுதியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் தரவேற்றப்பட்டுள்ளன. பெரும்பான்மையான கதைகள் தனி மனித நடத்தைகள், புலம் பெயர்வு, சமூகம், அறிவியல் சார்ந்த கதைகளாகப் படைக்கப்பட்டுள்ளன. உலகின் பலப் பகுதிகளில் வாழும் படைப்பாளர்களின் சிறுகதைப் படைப்புகள் இவ்விதழில் இடப்பட்டுள்ளன.

    மொழிபெயர்ப்புச் சிறுகதைகளான நாகரத்தினம் கிருஷ்ணா மொழிபெயர்த்த ழான்-ரொபெர் எல்ஸாவின் தோட்டம், தொனினோ பெனகிஸ்ட்டாவின் கறுப்புப் பேழை, டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர் மொழிபெயர்த்த ஜோ பாசின் அன்னைக்கு, மார்கரெட் லாரன்சுவின் உண்மையான ஆரியன் ஆகிய உலகச் சிறுகதைகள் இவ்விதழில் தரவேற்றப்பட்டுள்ளன.

    சிறுகதை இலக்கியத்தை வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்லவும், புதியப் படைப்பாளர்களை உருவாக்கவும் பதிவுகளும் நந்தா பதிப்பகமும் இணைந்து 2004-ஆம் ஆண்டு தமிழர் மத்தியில் எனும் சிறுகதைப் போட்டியை நடத்தியது. உலகின் பலப்பகுதிகளில் இருந்தும் அறிமுக மற்றும் பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை அளித்தார்கள். படைப்புகள் நடுவர்களால் நடுநிலையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பான படைப்புகள் பதிவுகள் இதழில் தரவேற்றம் செய்யப்பட்டன.

    நாவல்

    நாவல் பகுதியில் அ.ந.கந்தசாமியின் மனக்கண், மைக்கலின் ஏழாவது சொர்க்கம் ஆகிய இரண்டு நாவல்கள் மட்டுமே தரவேற்றப்பட்டுள்ளன. மற்ற பிற நாவல்கள்  கதைகள் மற்றும் சிறப்புப் பக்கங்களில் தரவேற்றப்பட்டுள்ளன. இப்பகுதிக்குப் பெரும் பங்களிப்பை இவ்விதழ் ஆசிரியர் வ.ந.கிரிதரன் அளித்துள்ளார். பதிவுகளில்  புலம்பெயர்வு, மொழிபெயர்ப்பு ஆகிய இலக்கிய வகைமைகளைச் சார்ந்த நாவல்கள் பெருமளவில் படைப்பாளர்களால் படைக்கப்பட்டுள்ளன.

    நாகரத்தினம் கிருஷ்ணாவின் குறுநாவலான திருப்பாதங்களுக்குச் சமர்ப்பணம், ஆபிதீனின் ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும், பதிவுகள் ஆசிரியர் வ.ந.கிரிதரனின் அமெரிக்கா, அமெரிக்கா  மண்ணின் குரல் (வன்னி மண், அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும், கணங்களும் குணங்களும் மற்றும் மண்ணின் குரல் ஆகிய நாவல்களின் தொகுப்பு), கனிஸ்காவின் சிறுவர் நாவலான ரினோ, மொழிபெயர்ப்பு நாவல்களான அ.ந.கந்தசாமியால் மொழிபெயர்க்கப்பட்ட எமிலி ஸோலாவின் நானா, நாகரத்தினம் கிருஷ்ணாவினால் மொழிபெயர்க்கப்பட்ட மார்கெரித் த்யூராவின் காதலன் ஆகிய நாவல்கள் பதிவுகள் இதழில் தரவேற்றப்பட்டுள்ளன.

    நாடகம்

    பதிவுகள் இதழ் நாடக இலக்கியத்திற்குக் குறிப்பிட்ட அளவே பங்களித்தள்ளது. பதிவுகள் இதழில் கவிதை, கதை, நாவல் ஆகிய படைப்பிலக்கியங்கள் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து வைத்திருப்பதைப் போன்று நாடக இலக்கியம் தனிப்பிரிவாகப் பிரித்து வைக்கப்படவில்லை. அ.ந.கந்தசாமியால் எழுதப்பட்ட தாஜ்மகால் உதயம் பற்றிய நாடகமான கடைசி ஆசை, வ.ந.கிரிதரனால் எழுதப்பட்ட ஓரங்க நாடகமான யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க ஆகிய நாடகங்கள் பதிவுகள் இதழில் தரவேற்றப்பட்டுள்ளன. பதிவுகளில் பெரும்பாலும் நாடகங்கள் கதைப் பிரிவுகளிலும் தனி நபர் சார்ந்த சிறப்புப் பிரிவுகளிலும் தரவேற்றப்பட்டுள்ளன.

    நாவல் இலக்கியத்திற்குத் தனிப்பிரிவு இருந்தும் கூட அதில் சில நாவல்கள் மட்டுமே தரவேற்றப்பட்டள்ளன. நாவல்களும், நாடகங்களும் கதைப்பகுதியிலேயே தரவேற்றம் செய்யப்படுகின்றன.இணையப் பயனாளர்கள் கண்டறிந்து படிக்கும் விதத்தில் படைக்கிலக்கியப் பிரிவுகள் பிரித்து வைக்கப்பட வேண்டும்.

    [தொடரும்]

    *****

    கட்டுரையாளர்
    உதவிப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி(தன்னாட்சி),
    விழுப்புரம்.

    Share
  • சித்தக் கனவு

    -விவேக்பாரதி

     

     

    கண்மூடிக் கட்டிலிலே கனவோடு சாய்ந்திருக்கப்

    பண்பாடும் நெஞ்சகத்தில் பாழாக ஒருகேள்வி

    கேட்டது ! நெஞ்சம் கிளர்ந்தது ! கேள்விதனைக்

    கேட்டவரார் அஃதறியேன்! கேள்விமட்டும் எதிரொலியாய்!!

    உண்மைக்குப் பொருளென்ன? ஊர்வாழ வழியென்ன?

    பெண்மைக்கு விடையென்ன? பேரழகுந் தான்என்ன?

    என்றெல்லாம் கேட்டிருந்தால் ஏதேனும் கவிசொல்லி

    மன்றத்து முன்னவரின் மரியாதை உரைசொல்லி

    தூங்கி இருப்பேன்! தோன்றிவந்த கேள்வியதோ

    ஏங்கிட வைக்கும் எக்காளக் கேள்வியம்மா!

    என்தேவை யாதென் றென்னை யாரோ

    தன்தேவை தீரத் தடுத்தங்கு கேட்டுவிடத்

    தேவையென்று நானெதனைத் தெளிந்துரைப்பேன் தெய்வதமே!!

    தேவையென்றால் யாதென்றே தெரியாத பிள்ளையன்றோ!!

    விட்டில் பூச்சிக்கு விளக்கொளிதா னேதெரியும்!

    சிட்டுக் குருவிக்கு சிறுநெல் தானேதெரியும்!

    பாடசாலை பயில்கின்ற பச்சிளம் பாலகனைத்

    தேடலரும் வேதாந்தம் சித்தாந்தம் என்றெல்லாம்

    பெருங்கேள்வி கேட்டுவிட்டால் பேதை என்செய்வேன்!

    குரங்குக்குக் கீதைக் குணமூட்டல் சாத்தியமா?

    கண்கட்டிக் காதலனைக் காட்டுக்குள் விட்டதுபோல்,

    பண்கூட்ட மறந்ததொரு பாடகனின் மேடைபோல்,

    அச்சம் எதிலும் அச்சமயம்! அச்சமயம்,

    உச்சிக் குடுமியை உயரே பிடித்திழுத்துக்

    காதைத் திருகிக் கனிவான கொட்டுவைத்து

    எழுப்பி விட்டதொரு ஏகாந்த அருட்சோதி!

    ஆகாச மார்க்கத்தில் ஆழ்ந்துவந்த நற்ஜோதி!

    ஏகாரம் சேர்கவிபோல் எழும்பிவந்த பொற்சோதி!

    “ஏடா பிள்ளாய்! எழுத்தறிவும் பெற்றிலையோ

    மூடா! முன்னவர்கள் மொழிந்தனவும் கற்றிலையோ?

    நின்தேவை விளம்ப நிமிடங்கள் பலநூறோ?

    என்கேள்விக் கதுசொல்” என்றென்னை அதட்டிடவே

    ஒன்றும் புரியாமல் ஓரசைவும் காட்டாமல்

    வன்புலியைக் கண்டவொரு வளையெலிபோல் காட்டுக்குள்

    சிங்கத்தைக் கண்டவொரு சிறுநரிபோல் நின்றிருந்தேன்!

    அங்கதற்குள் ஒருமாற்றம் அண்டிப் பயங்கொடுக்கச்

    சட்டென்று விழித்தேன் சகலமும் பின்னறிந்து

    பட்டென்று பேனாவைப் பாசத்தோ டெடுத்ததற்குச்

    செல்ல முத்தங்கள் சிலவிட்டு வாழ்த்திட்டு

    வெல்லத் தமிழணங்கை வென்று தொழுதிட்டு

    தேவை யாதென்று தெளிவாய் எழுதவந்தேன்!

    “தேவை தெரிந்துவிட்டால் தேவனாகிப் போவேனே!”

    அதற்குள் இன்னுமொரு அழகான இளம்பெண்ணாள்

    பதுமை, சிரிக்கின்ற பால்குடம்! இதழ்ச்சிவப்பால்

    என்னை அழைக்க எழுதவந்த கதைமறந்து

    மின்னேர் உடல்புல்லி மீண்டுமீண்டும் முத்தமிட்டு

    மோகப் பெருமயக்கில் மொத்தமும் மறந்ததுபோல்!

    ஏகக் காதலே இதயமெலாம் நின்றதுபோல்!

    உச்சக் கலைதொட் டுடல்விட்டு வானுலக

    எச்சம் அடைந்தேன்! ஏராளப் பறவைகள்

    கூடி முயங்கிக் குதிக்கும் விசும்பிடையே

    பாடி மகிழ்ந்தேனப் பாவை கைவிலகப்

    பதறி விழித்தேன் பார்வை திருத்திச்

    சிதறிய விழிக்கோணம் சிந்தாமல் சேர்த்து

    மணிபார்த்தேன்! மணியெட்டு மயக்கம் தீர்ப்பதற்காய்க்

    கனிந்த காலை,”சித்தக் கனவென்று சொல்லியதே!!

     

     

    Share
  • “அவன், அது , ஆத்மா”

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்
    10.11.2017

    அத்யாயம்: 55

    கீழாம்பூர் S. சங்கர சுப்பிரமணியன்

    அவன் 1990ஆம் வருடம் மகரசங்கராந்தி (பொங்கல்) அன்று குருநாதரைத் தரிசிக்கச் சிருங்கேரிக்குச் சென்றிருந்தான். குருவைத் தரிசித்து விட்டு வரும் பொழுது, அவனுக்கு முன்பே பழக்கமான, “Call of Sankara”  என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த எம்.எம்.சுப்பிரமணியன் என்பவர், “ஆசார்யாள் தமிழில் ஒரு மாதப் பத்திரிகையைக் கொண்டு வரவேண்டும் என்றும், அது முன்பு வெளிவந்து கொண்டிருந்த “சங்கர கிருபா”வைப் போன்று சிறந்த ஆன்மிகப் பத்திரிகையாக இருக்க வேண்டும் என்றும் விரும்புவதாகச் சொல்லி, தமிழிலும், ஆன்மிகத்திலும் ஈடுபாடு கொண்ட உனக்குத் தெரிந்த இளைஞரை என்னோடு தொடர்பு கொள்ளச் சொல்லு” என்று அவனிடம் கேட்டுக் கொண்டார். அவனும் முயற்சி செய்வதாக அவரிடம் உறுதி கூறினான்.

    கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்சென்னைக்குத் திரும்பிய இரண்டு தினங்களில் “நெல்லை கலாசார சங்கம்” என்ற அமைப்பு நடத்திய ஒரு கூட்டம் அண்ணா சாலையில் இருக்கும் மத்திய நூலகத்தின் மாடியில் உள்ள ஒரு அறையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் அருமையாக உரையாற்றியது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரின் பெயர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் என்று அறிந்து கொண்டான். நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்த இளைஞரிடம் சென்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு,” உங்களுக்குச் சொந்த ஊர் கீழாம்பூரா?” என்று கேட்க, அவரும் ஆமாம் என்று சொல்லி தன்னையும் அவனிடம் அறிமுகப் படுத்திக் கொன்டார். அந்த நேரத்தில், தான் சமீபத்தில் சிருங்கேரி சென்று வந்த விபரத்தையும், எம்.எம்.சுப்பிரமணியம் என்ற அன்பரின் கருத்தையும் அவரிடம் பகிர்ந்து கொண்டான். உடனேயே,” சார்..எங்களுக்கும் சிருங்கேரி ஆசார்யாள்தான் குரு”.  தானே ஒரு பத்திரிகையைத்  துவக்க வேண்டும் என்ற விருப்பத்தில் “அம்மன் தரிசனம்” என்ற பெயரையும் பதிவுசெய்து வைத்திருப்பதாகவும், விரும்பினால் இந்தப் பெயரையே அவர்கள் பயன் படுத்திக் கொள்ளக் கொடுத்து விடுகிறேன்” என்றும் சொன்னார். மேலும் தமிழறிஞர் பி.சி.கணேசன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட “இந்து மதம் அழைக்கிறது” என்ற பத்திரிகைக்காக ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாசுவாமிகளைச் சந்தித்துத் தான் கண்ட நேர்காணலையும் அவனுக்குப்  படிக்கக் கொடுத்தார்.   அவன் அவரிடம் விடை பெரும் பொழுது,” நீங்கள் எம்.எம்.எஸ். அவர்களிடம் என்னுடைய விருப்பத்தைச் சொல்லுங்கள் என்றார்”. அவன் அன்று இரவே சிருங்கேரியில் இருக்கும் எம்.எம்.சுப்பிரமணியம் அவர்களுடன் தொலைபேசியில் கீழாம்பூர் சங்கர சுப்ரமணியனை சந்தித்த விபரங்களைச் சொல்லி, விபரமாகக் கடிதமும் எழுதி மறுநாள் அனுப்பி வைத்தான். அதன் பிறகு எம்.எம்.எஸ். அவர்களிடம் இருந்து பத்திரிகை தொடங்குவது பற்றி, கீழாம்பூருக்கும், அவனுக்கும் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து  இருந்து வந்தது.

    அம்மன் தரிசனம்” மாத இதழ் பிறந்த கதை

    ஒரு நல்ல நாளில் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியனை சிருங்கேரிக்கு அழைத்து, “அம்மன் தரிசனம்”  என்ற பெயரிலேயே மாதப் பத்திரிகையைத் தொடங்குங்கள். ஸ்ரீ சாரதாம்பாள்நீங்களே ஆசிரியராக இருங்கள். உங்களுக்குப் பரிபூர்ண ஆசீர்வாதம்” என்று ஆசார்யாள் ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள், ஸ்ரீ சாரதாம்பாள் பதித்த ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், மந்திராக்ஷதையையும் கொடுத்து, சென்னைக்குச் சென்றதும் திரு. எஸ். விஸ்வநாதன் (என்பீல்ட் சேர்மன்) அவர்களைத் தொடர்பு கொண்டு மேற்கொண்டு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று அனுப்பி வைத்ததாக அவனிடம் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் சொன்னார்.

    ஒரு வாரம் சென்றதும் “கீழாம்பூர்” அவர்கள் அவனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ” சார்… என்பீல்ட் விஸ்வநாத மாமாவைப் பார்க்கப் போகிறேன். நீங்களும் வாருங்கள்” என்று அழைத்தார். இருவரும் திருவான்மியூர், சிவசுந்தர் அவின்யூவில் இருக்கும்  திரு. என்பீல்ட் விஸ்வநாதன் அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். அவர்கள் வரும் விபரமறிந்து வைத்திருந்த திரு. என்பீல்ட் விஸ்வநாதன், இருவரையும் அன்போடு வரவேற்று, கீழாம்பூரிடம் புதிய பத்திரிகை தொடர்பான விபரங்களைக் கேட்டுக் கொண்டார். ஒரு பத்திரிகையைத் துவங்க என்னென்ன தேவையோ அவைகளை மிகவும் தெளிவாக எழுதி ” என்பீல்ட் விஸ்வநாதன்” மாமா அவர்களிடம் கீழாம்பூர் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்துப் படித்து மிகுந்த மகிழ்ச்சியோடு, “எல்லாம் நல்ல படியாக நடக்கும். கவலைப் படவேண்டாம். “அம்மன் தரிசனம்” என்ற இந்த ஆன்மிகப் பத்திரிகையில் வரும் செய்திகள், கதைகள், கட்டுரைகள் எல்லாம் சிறப்பாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும். அதுதான் இந்தப் பத்திரிகையின் தர்மம். அலுவலகத்திற்கான இடத்தையும் உடனேயே பார்த்து வந்து சொல்லுங்கள்” என்றார்.

    அம்மன் தரிசனம் இதழில் திரு. ஏ.என்.சிவராமன் அவர்களைக் கொண்டு “வேத மந்திரங்கள்” என்ற பெயரில் ஒரு தொடரை எழுதவும், பெரிய புராணத்தின் நாயன்மார்களின் கதையை, சிறுகதையாக எழுத எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களிடம் கேட்கவும் எண்ணம் இருக்கிறது என்று கீழாம்பூர் சொன்னவுடன், ” ரொம்ப சந்தோஷம். ஏ.என்.சிவராமனை உங்களுக்குப் பழக்கம் உண்டா என்றதும், “அவர் எனக்குத் தாத்தா முறை. அவர்தான் எனக்கு குரு” என்று கீழாம்பூர் சொன்னார். இந்த உரையாடலின் பொழுது என்பீல்ட் திரு. விஸ்வநாதன் அவர்களின் மனைவி திருமதி. கோமதி விஸ்வநாதனும் உடனிருந்தார். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். “விஸ்வப்ரியா” என்ற பெயரில் கதைகளும், சிறுகதைகளும் எழுதியவர். விகடனில் முத்திரைக் கதைகளும் எழுதி இருக்கிறார். தமிழ், ஆங்கிலம், வடமொழிகளில் நல்ல பாண்டித்தியம் கொண்ட மிகவும் பண்பான பெண்மணி.

    மயிலாப்பூரில் எல்டாம்ஸ் சாலையில் ஒரு அறையை வாடகைக்குப் பார்த்தோம். மாத வாடகை ரூபாய் ஐயாயிரம். முன்தொகை ரூபாய் பத்தாயிரம் என்று பேசி இந்தத் தகவலை திரு. விஸ்வநாத மாமாவிடம் கீழாம்பூர் சொன்னார். இடம் போதுமானதாக இருந்தது. முதல் இதழுக்கான கதை, கட்டுரை, கவிதைகளைக் கீழாம்பூர் தேர்வு செய்து, மயிலாப்பூரில் இருந்த “முருகன் பிரிண்டிங் பிரஸ்” மூலம்    மிக அருமையாக அச்சாகி “அம்மன் தரிசனம்” பத்திரிக்கையின் முதல் இதழ் 1990ம் வருடம்   செப்டம்பர் மாதம் வெளியானது. அப்பொழுது அந்த மாத இதழின் விலை ரூபாய் ஐந்து.

    இதழைச் செம்மையாகக் கொண்டு வருவதற்கு மிகவும் உதவியாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் கவிஞர் முருகதாசன், பாரதி காவலர் கு. ராமமூர்த்தி, கங்கா ராமமூர்த்தி, பி.ஆர்.விஸ்வநாதன், ஓவியர் ஜகன், அலுவலக உதவியாளர் குணசேகரன் ஆகியோர். அவனும் அம்மன் தரிசனம் இதழில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வந்தான்.

    கலைமகள் மாதப் பத்திரிக்கைக்கு ஆசிரியராக கீழாம்பூர் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அம்மன் தரிசனம் இதழுக்கு கவிஞர் முருகதாசன் ஆசிரியரானார். அவர் சிறந்த மரபுக் கவிஞர். நேர்மையாளர். அவர் ஆசிரியராக இருக்கும் பொழுதுதான், 2006ம் வருடம் ஸ்ரீ சங்கர ஜயந்தி மாத இதழில் “ஸ்ரீ ஆதி சங்கர அத்வைத காவியம்” என்ற பெயரில் ஸ்ரீ சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை, மாதவீய சங்கர விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு தொடராக எழுதி வந்தான். கவிஞர் முருகதாசனுக்குப் பிறகு ஜெ.எஸ்.பத்மநாபன் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். அம்மன் தரிசனம் வெள்ளிவிழா கண்டு மிகச் சிறப்பாக நடந்து வருவது குறித்தும், அது நூற்றாண்டைக் கடந்து பல்லாண்டுகள் ஆன்மிகப் பணியில் தொடர்ந்து வர அவனும், கீழாம்பூரும் குருவிடம் வேண்டிக் கொள்வதுண்டு. “அம்மன் தரிசனம்” அவர்களின் குழந்தை அல்லவா!கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் கலைமகள் பத்திரிக்கையில் நல்ல அறிஞர்களின் படைப்புகளை வெளியிட்டு வருகிறார். சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கும் அவருக்கு மணிவிழா சென்ற வருட இறுதியில் நடைபெற்றது.

    மஞ்சரி மாத இதழின் ஆசிரியர் இலட்சுமணன் (லெமன்) அவர்களை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதுமுதல் “லெமன்” அவர்களுடன் அவனுக்குத் தொடர்பு இருந்து கொண்டு வந்தது. அவன் எழுதிய “மிருதங்கம்” என்ற சிறுகதையை வாங்கிப் பிரசுரித்தார். கலைஞன் பதிப்பகம் தொகுத்த இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் என்ற தொகுப்பில் “மிருதங்கம்” சிறுகதையும் தேர்வாகி இடம்பெற்றது அவனுக்கு மகிழ்ச்சி.  இலட்சுமணன் (லெமன்) மஞ்சரியில் இருந்து ஓய்வு பெற்றதும் அதன் ஆசிரியராக செங்கோட்டை ஸ்ரீராம் பொறுப்பேற்றார். அவரையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தது கீழாம்பூர்தான். இன்றும் அவனுக்கு ஸ்ரீராம் நல்ல நண்பர்.

    கீழாம்பூரின் குடும்பமே அவன் மீதும், குடும்பத்தார்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருப்பதும், அவனுக்கு நல்ல நண்பனாகக் கீழாம்பூர் கிடைத்ததும் குருவின் அருள்.

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்…

    Share
  • அறிஞர் நன்னன் அவர்களுக்கு அஞ்சலி

     

    Nannan_1_10024

     
    தமிழர் நெஞ்சம் நிறைந்திருக்கும்.
    நானிலத்தோர் நாளும் வாழ
    நல்ல தமிழ் நவின்ற நன்னா!
    நற்றமிழர் வாழ்வுயர நற்றமிழைக்
    காத்த தமிழ்க் காரி!
    இன்தமிழ் இலக்கணத்தை
    இன்சுவையாய் எடுத்துரைத்து
    இளையோரின் இதயத்தில்
    இடம்பிடித்த இலக்கண மன்னா!
    கொடிகாத்த குமரனைப் போல்
    தமிழ் மொழி காத்த தூயவனே!
    பகுத்தறிவுப் பகலவனாய்
    பார்போற்ற தமிழ் வளர்த்தாய்
    நன்னன் முறை என்றுலகோர்
    நற்றமிழ் வளர வழிவகுத்தோய்!
    சாத்துக்குடலில் பிறந்திட்ட தமிழ்க்கடலே!
    பதினேழு ஆண்டுகளாய் பாமரரும்
    பைந்தமிழைக் கற்றுக் கொள்ள
    பைந்தமிழைக் கற்பித்த பாவலனே!
    என்றமிழைக் கற்பதற்கோ
    எமனுன்னை வானுலகம் அழைத்திட்டான்
    எழுபது நூல்களையே எளிதாய் எழுதி எங்கள்
    ஏற்றத்திற்கு வித்திட்ட
    ஏற்றமிகு தமிழ்ப் புலவ!
    தொடக்க கல்வி முதல் உயர்கல்வி நிலையம் வரை
    தொடங்கியதே உம் பணியே!
    நற்றமிழ் வளர்க்கும் அறப்பணியே!
    தன்னை வளர்க்காது
    தமிழ்தனையே வளர்த்திட்ட
    தரணி புகழ் தமிழ் நன்னா! உலகில்
    வந்த பணி முடிந்ததென்று
    வானுலகப் பணியேற்று
    வானுலகம் சென்றனையோ?
    மொழிகாத்து இனம் காத்து
    தமிழர் நலம் காத்த தமிழ் நன்னா!
    தமிழும் தமிழுலகும்
    உலகும் உள்ளவரை
    உம்புகழ் நிலைத்திருக்கும்
    தமிழர் நாவில் நன்னா உம் பெயரொலிக்கும் அதில்
    தமிழர் நெஞ்சம் நிறைந்திருக்கும்.

     

    மு​னைவர் சி.​சேதுராமன் தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.
    Malar.sethu@gmail.com

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 10

    -மேகலா இராமமூர்த்தி

    தலைவன் ஊர்திரும்பிவிட்ட நற்செய்தியை முதலில் அறிந்தவள் தோழியே. அதனைச் சொல்லித் தலைவியை மகிழ்விக்கவேண்டும் எனும் எண்ணத்தோடு தலைவியின் இல்லம்நோக்கி விரைந்துவந்தாள்.

    அயலார் தலைவியை மணம்பேசிவிட்டுச் சென்றபின் தலைவி முன்புபோல் அதிகமாய் வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை; இற்செறிக்கப்பட்டாள். (இல்லத்திலேயே இருக்குமாறு வலியுறுத்தப்படுதல்). அவளின் மலரன்ன முகத்தில் நொதுமலர் மணம்பேசிச் சென்றதிலிருந்தே மலர்ச்சியில்லை; உடல் மெலிந்தும் உளம் நலிந்தும் ஓர் நடைப்பிணமாகவே அவள் நடமாடி வந்தாள் எனலாம்.

    தலைவியைக் கண்ட தோழி, அவள் உளமறியாது, ”இவளைச் சிறிதுநேரம் வம்புக்கிழுத்துவிட்டுத் தலைவனின் வரவைப் பின்னர் அறிவிப்போம்” என்று குறும்பாக எண்ணியபடி தலைவியைப் பார்த்தாள். ”என்ன இது? தலைவனையன்றி எனை மணக்க ஒருவராலும் ஏலாது; அவனைக் கண்டதும் கானவனின் அம்புக்கு அஞ்சியோடும் குரங்குகள்போல் மணம்பேசவந்த அயலார் சிதறுவர் என்று என்னிடம் சவால்விட்ட பெண்ணா இப்படிச் சுணங்கியிருப்பது?” என்றாள் கேலியாக.

    SONY DSCதலைவனின் வருகை தாமதமாகிக்கொண்டே இருப்பதால் மனம்நொந்திருந்த தலைவி, ” நல்ல பசுவின் இனிய பாலானது, அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாது, கறக்கும் பாத்திரத்திலும் வீழாது, தரையில் சிந்தி வீணானது போல், என் மாமைப் பேரழகு எனக்கும் கவின் சேர்க்காது, என் தலைவனுக்கும் இன்பம் பயவாது, பசலையால் உண்ணப்பட்டு அழிகின்றது” என்று வேதனையோடு விளம்பவும், தோழி தன் குறும்புப் பேச்சைச் சட்டென நிறுத்தினாள்.

    கன்றும்  உண்ணாது  கலத்தினும்  படாது
    நல்லான்
     தீம்பால்  நிலத்துக்  காஅங்கு
    எனக்கும்
     ஆகாது  என்னைக்கும்  உதவாது

    பசலை  உணீஇயர்  வேண்டும்
    திதலை
     அல்குல்என்  மாமைக்  கவினே. (குறுந்: 27 – வெள்ளிவீதியார்)

    மாமைக் கவின் என்பது மாந்தளிர் வண்ணத்தைக் குறிக்கும். பெண்களுக்கு இவ்வண்ணம் பேரழகு பயக்கும் என்பது நம்மனோரின் எண்ணம்.

    பசலை என்பது என்ன? இது பெண்களின் உடலில் ஏற்படும் ஒருவகை நிறமாற்றம்; காதலரைப் பிரிந்த ஆற்றாமையால் சரியாக உண்ணாமலும் உறங்காமலுமிருக்கும் மடந்தையரின் மேனி மெலியும்; சற்றே வெளிறும். அதனால் மாறுபட்ட ஒருவகையான (பசும்)பொன்னிறம் அவர்கள் உடலில் படரும். இதனையே பசலை என்கின்றனர் பைந்தமிழ்ச் சான்றோர். (In English this condition is called Green Sickness; also known as ‘The Disease of Virgins’). பசலை படர்ந்தால் மாமைக் கவின் அழியும்.

    இப்பசலை நோய், காதலரைப் பிரிந்த பெண்டிரை மட்டுந்தான் தாக்குமா? காதலியரைப் பிரிந்த ஆடவரைத் தாக்காதா? என்றொரு கேள்வி நம்முன் எழலாம்.

    ஆடவரைப் பசலை நோயொடு தொடர்புபடுத்திய பாடல்கள் ஏதும் நம் இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லை.

    காரணம் என்னவாயிருக்கும்?

    ”பெருமையும் உரனும் ஆடூஉ மேன” (தொல். பொ. 98) என்று பழந்தமிழிலக்கணம் ஆடவருக்கு (வீர)இலக்கணம் வகுத்துவிட்டபடியால், ”காதலர் பிரிவால் பசலை பாய்வதும், அழகு தேய்வதும் நங்கையர்க்கே உரித்தானவை; நம்பியர்க்கு இழுக்கானவை” என்று புலவர்கள் முடிவுகட்டிவிட்டனர் போலும். இன்றுங்கூட ”ஆண்பிள்ளைஅழுவது கூடாது” எனும் சொலவடை நம்மிடம் புழக்கத்தில் இருப்பதை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். பாவம் ஆண்கள்! துன்பம் நேர்கையில் அழக்கூட அவர்களுக்கு உரிமையில்லை!

    சரி…வருந்திப் புலம்பிக்கொண்டிருக்கும் தலைவியின் பக்கம் நம் பார்வையைத் திருப்புவோம்!

    தான் கவினழிந்து பொலிவிழந்து நிற்கத் தலைவனின் பிரிவாற்றாமையே காரணம் என்ற தலைவி தோழியிடம் தொடர்ந்து கூறலுற்றாள்…

    cockfight”தலைவரைக் கண்ட கண்கள் தந்ததனால் உண்டாகிய காமமாகிய ஒள்ளிய தீயானது, என் என்பை (எலும்பை) நலிவுறச்செய்யினும், அவரை விரும்பிச்சென்று அளவளாவுதற்கு அரிய காட்சியள் ஆகிவிட்டேன் (இற்செறிக்கப்பட்டதால்). அவரும் தாமாகவந்து என் துன்பத்தை நீங்கச் செய்தாரல்லர். இந்நிலையில் என் காமநோயானது, அதனைக் களைவோர் இன்மையால், குப்பைக்கோழிகளின் தனித்த சண்டைபோல் தானே அழியவேண்டியதுதான்!” என்றாள் குரல் தழுதழுக்க.

    ”என் நோய் களைவோர் இல்லை” என்று தலைவி பொடிவைத்துப் பேசியதன் உட்பொருள், அவள் துயர்தீரத் தோழி உதவவேண்டும் என்பதே. அவளன்றித் தலைவியின் ஆரஞர் களைவார் ஆருளர்?

    கண்தர   வந்த   காம   ஒள்ளெரி
    என்புற   நலியினும்  அவரொடு  பேணிச்
    சென்றுநாம்  முயங்கற்கு  அருங்காட்  சியமே
    வந்தஞர்  களைதலை  அவராற்  றலரே
    உய்த்தனர்  விடாஅர்  பிரித்திடை  களையார்
    குப்பைக்  கோழித்  தனிப்போர்  போல
    விளிவாங்கு  விளியின்  அல்லது
    களைவோர்  இலையான்  உற்ற  நோயே.  (குறுந்: 305 – குப்பைக்கோழியார்)

    தலைவனைக் கண்டபோதே  தலைவியின் நெஞ்சம், ஊழின் வலியால், அவன்பாற் காமங் கொண்டதாகலின், ’கண்தர வந்த காம ஒள்ளெரி’ யென்றாள்.

    கண்தாம்  கலுழ்வ  தெவன்கொலோ  தண்டாநோய்
    தாம்காட்ட
     யாம்கண்  டது. (1171)

    படலாற்றா பைதல்  உழக்கும்  கடலாற்றாக்
    காமநோய்  செய்தஎன்  கண். (1175) எனும் குறட்பாக்கள் இக்குறுந்தொகை அடியோடு ஒப்புநோக்கத்தக்கவை.

    குப்பைக்கோழியின் போரைத் தலைவி ஈண்டுக் குறிப்பிடக் காரணம், போரின்பொருட்டு வளர்க்கப்படும் சேரிக்கோழிகளின் போர், பெருந்திரளான மக்கட்கிடையே நிகழும்; ஆனால் குப்பைக்கோழிகளின் போரைக் காண்பாருமிலர்; அப்போரால் அவையுறும் துயர் களைவாருமிலர். ஆதலால் துயர்மிகுந்த தன்னிலையைக் குப்பைக்கோழியின் நிலையோடு பொருத்திப்பார்த்து வருந்துகிறாள் தலைவி. இயற்பெயர் அறியவியலா இப்பாடலின் ஆசிரியர் ’குப்பைக்கோழியார்’ என்றே குறிக்கப்படுகின்றார்.

    தலைவியின் சொற்கள் கண்ணீரில் நனைந்து வெளிப்பட்டதைக் கண்ட தோழி, இனியும் காலந்தாழ்த்தலாகாது என்று தீர்மானித்து, தலைவன் ஊர்திரும்பிவிட்ட நற்செய்தியை அவளிடம் தெரியப்படுத்தினாள். அச்செய்தி தலைவியின் அகவாட்டத்தைச் சற்றேபோக்கி அவள் முகத்தில் மலர்ச்சியை வருவித்ததெனினும், வேற்று வரைவை மாற்றும் ஆற்றல் தலைவனுக்கு இப்போதிருக்குமா எனும் ஐயம் அவளுள் கிளர்ந்தெழவே, மீண்டும் அவள் முகம் கூம்பியது. தோழியிடம் தன் ஐயத்தைப் புலப்படுத்தினாள். அது நியாயமானதே என்றுணர்ந்த தோழி, இச்சிக்கலைத் தீர்க்க என்ன வழி என்று தீவிரமாய் யோசிக்கலானாள்.

    இருவழிகள் அவளுக்குப் புலப்பட்டன!

    ஒன்று…தலைவியின் தமரிடம் அவள் காதலைத் தெரிவித்துக் காதல் மணத்துக்குச் சம்மதம் பெறுவது; ஆனால், வேற்று மணத்தை நிகழ்த்திவிடுவதற்கான மணநாளைக் குறிப்பதில் இருவீட்டாரும் முனைந்திருக்கும் இத்தறுவாயில், தலைவியின் காதலை வீட்டுக்குச் சொல்வதால் தலைவிக்குச் சாதகமாக எதுவும் நிகழ்ந்துவிடப்போவதில்லை; மாறாகத் தலைவியின்மீது அவள் பெற்றோர் சினமும் சீற்றமும் கொள்ளவே அது வழிவகுக்கும். எனவே அந்தவழி பயன்படாது!

    மீதமிருக்கும் ஒரேவழி ’உடன்போக்கு’ என்று எண்ணமிட்டவள், தலைவன் தலைவியைத் தன்னூருக்கு உடனழைத்துச் சென்று மணப்பது ஒன்றே இப்போதைக்குச் சாத்தியப்படக்கூடிய ஒரேவழி எனும் முடிவுக்குவந்தாள். தலைவியிடம் அதைக்கூறவும் அவள் மருண்டு நோக்கினாள் தோழியை!

    அவளைத் தெளிவிக்க எண்ணிய தோழி, ”அருமைத்elephant_tiger தோழி! நீ வாழி! என்று தலைவியை வாழ்த்திவிட்டு, மிக்க வலியினையும் பிளந்த வாயினையுமுடைய பெரிய ஆண்புலியானது, மதத்தால் நனைந்த கவுளையுடைய, அண்ணல் யானையின் அழகிய முகத்தின்கண்ணே பாய, அவ்யானையின் வெள்ளிய கொம்பைத் தனது குருதியால் செவ்விய கறைகொள்ளச் செய்து, மலைப் பள்ளத்திலுள்ள, மேலைக் காற்றால் வீழ்த்தப்பட்ட, கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் வாடிய பூவையுடைய கிளையைப் போல இறந்துகிடக்கும். அத்தகு  உயர்ந்த மலைநாட்டுத் தலைவனுடன் உடன்போவதை நீ எண்ணுவாயாக” என்றாள் உறுதிபட.

    நினையாய்  வாழி  தோழி  நனைகவுள்
    அண்ணல்  யானை  அணிமுகம்  பாய்ந்தென
    மிகுவலி  இரும்புலிப்  பகுவாய் ஏற்றை
    வெண்கொடு   செம்மறுக்  கொளீஇ  விடர்முகைக்
    கோடை  யொற்றிய  கருங்கால்  வேங்கை
    வாடுபூஞ்  சினையிற்  கிடக்கும்
    உயர்வரை  நாடனொடு  பெயரும்  ஆறே.  (குறுந்: 343 – ஈழத்துப் பூதந்தேவனார்)

    இப்பாடலில் வலிமிகு புலியொன்று தலைவன் நாட்டு யானையின்மீது தானாகப் பாய்ந்து காயப்பட்டு இறந்துபோகும் நிகழ்வு பேசப்படுகின்றது. தலைவன் நாட்டு யானை, சிரமமின்றிப் பகையை எளிதில் வீழ்த்துவதுபோல், தலைவனும் இடையூறுகளை எளிதில்வெல்லும் பேராற்றல் படைத்தவன் எனும் செய்தி இதனுள் பொதிந்துகிடக்கின்றது.

    தோழி நயந்த உடன்போக்குக்குத் தலைவி உடன்பட்டாளா?

    [தொடரும்]

     

     

     

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 34

    க. பாலசுப்பிரமணியன்

    எப்போது வருவான்? எப்படி வருவான்?

    திருமூலர்-1-3

    அடியார்களைப் படைத்தது மட்டுமின்றி அவர்கள் உள்ளத்தில் தானே ஒளிவடிவாக அமர்ந்து அவர்களுக்கு அன்பு நெறிகாட்டி அருளால் ஆட்கொள்ளும் ஆனந்தியாக இருக்கின்றான் இறைவன்! பாசத்தால் கவரப்பட்டு ஐம்பொறிகளின் தூண்டுதலுக்கு அடிமையாகி சத்தான வாழ்க்கையின் உண்மைப்பொருளை மறந்த உயிர்களுக்குத்  தானே கைகொடுத்து அவர்களுக்கு ‘பிறவாப் பெருமையை’ தன் அருளால் அளிக்கின்ற பெருந்தகை அவன். அவன் அகத்திலே எப்படி நுழைந்தான்? நம் பிறப்போடு வந்தானா? பின் வந்தானா? நமது ஊழ்வினையின் சத்தாக வந்தானா? வந்தவன் ஏன் அமைதியாக உள்ளே உறங்கிவிட்டான் ? அவன் நினைத்திருந்தால் நம்மை இந்தத் துயரக்கடலிலிருந்து எப்பொழுதோ காப்பாற்றி ஆட்கொண்டிருக்கலாமே ? அவன் இவ்வளவு என நேரம் தாமதமாய் வரக் காரணம் என்ன?

    அவனைக் காண்பதற்கு திருமூலர் என்னவெல்லாம் செய்தார்?

    ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்

    தேடியும் கண்டேன் சிவன் பெருந்தன்மையைக்

    கூடியவாறே குறியாக குறிதந்து என்

    ஊட நின்றான் அவன் தன் அருள் உற்றே

    அவன் ஒருவனையே மனதில் நிறுத்தி வேறு ஏதும் வேண்டாத நிலையில் இருக்கும் பொழுது இந்த உலகில் உள்ள எந்தப் பொருளும் நமக்கு வேண்டாததாகவும் விருப்பமற்றதாகவும் மாறிவிடும். இந்த நிலையில் சுற்றமும் சூழலும் கூட நமக்கு பாரமாகத் தோன்றும்.  இந்த நிலைதான் மாணிக்கவாசகருக்கும் ஏற்பட்டது.

     உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்

    கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனிமையும்

    குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே

    கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே !

    இத்தனையையும் செய்து அவன் அருளை பெற அவர் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும் ?

    அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே

    அகம் புகுந்தும் தெரியான் அருளில்லார்க்கு

    அகம் புகுந்து ஆனந்தமாக்கிச் சிவமாய்

    அகம் புகுந்தான் நந்தி ஆனந்தியே !

    அகம் புகுந்தும் தெரியாதவனாய் மறைந்து நின்று எந்த நேரத்தில் நம்மை ஆட்கொள்ளவேண்டுமோ அந்த நேரத்தில் சரியாக வந்து காப்பவனாகத் திகழ்கின்றான் அந்தப் பேரருளாளன்!  அவன் அகத்தில் அமைதியாக இருந்த பொழுது என்ன செய்து கொண்டிருந்தான்? நம்முடைய மதியையும் செயலையும் கண்டு ஆராய்ந்து கொண்டிருந்தானா? அல்லது விதிவழி நடக்கும் செயல்களை ஒரு மௌனியாக இருந்து பார்த்துக்கொண்டிருந்தானா? கேள்விகள் எழுகின்றன. சரியான பதில்கள் கிடைப்பதில்லை. திருமூலரின் கீழ்கண்ட பாடல் அதற்கு ஒரு விளக்கம் அளிப்பது போல் இருக்கின்றது

     பொய் இலன் மெய்யன் புவனாபதி எந்தை

    மை இருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு

    செய் இருள் நீக்கும் திருவுடை நந்தி என்

    கை இருள் நீங்கக் கலந்து எழுந்தானே.

     மை இருள், செய் இருள் மற்றும் கை இருள் என்ற ஸ்தூல இருளையும், அஞ்ஞானத்தால் பிறக்கும் செய் இருளையும் மற்றும் ஆசைகளால் எழும் மலத்தினையும் நீக்கி நமக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கின்றான்.

    பட்டினத்தாரோ அவன் செய்யும் செயல்களையெல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லி அவனுடைய அளவில்லாத அன்பை நமக்கு வெளிப்படுத்துகின்றார்

    ஊட்டுவிப்பானு முறங்குவிப்பானு மிங்கு ஒன்றொடொன்றை

    மூட்டு விப்பானும் முயங்கு விப்பானும் முயன்ற வினை

    காட்டு விப்பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி

    ஆட்டு விப்பானும் ஒருவன் உண்டே தில்லை அம்பலத்தே !

     இப்படியெல்லாம் நமக்கு அருள் பாலித்துக்கொண்டிருக்கும் இறைவன் தன்மையென்ன? அவனை எப்படித்தான் வர்ணிப்பது? “தனக்குவமை இல்லாதான் ” என்று வள்ளுவர் கூறும்பொழுது அந்த உவமையில்லாதவனை கற்பனையில் கூட நம்மால் காண முடியாதோ? அவனுக்கு என்ன வண்ணம்? அவன் குணங்கள் எப்படிப்பட்டவை?

    ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்

    ஒரூர னல்லன் ஒருவ னில்லி

    அப்படியும் அந்நிறமும்அவ் வண்ணமும்

    அவனருளே கண்ணாகக் காணி னல்லால்

    இப்படியும் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்

    இவனிறைவன் என்றெழுதிக் காட்டொண் ணாதே.

    எனது திருநாவுக்கரசர் கூறும்பொழுது  அவனை உள்ளத்தில் உணர்வால்தான் அறியமுடியும் என்ற உண்மை தெளிவாக நமக்கு விளங்குகின்றது.

    இறைவனுடைய இந்த அளவற்ற பரந்த கற்பனைக்கடங்கா நிலையை வலியுறுத்தும் வண்ணம் வள்ளலார் கூறுகின்றார் :

    பொங்கும் சமயமெனும் நதிகளெலாம்

    புகுந்து கலங்கிட நிறைவாய்ப்

    பொங்கி ஓங்கும் கங்குகரை காணாத கடலே “ 

    வடமொழியில் காலையில் கதிரவனை வணங்கும் பொழுது வந்தனையிலே இவ்வாறு சொல்லும் வழக்கமுண்டு ” எவ்வாறு ஆகாயத்திலிருந்து வருகின்ற நீரானது பெருகிக் கடலையே சென்று அடைகின்றதோ அதுபோல எந்தக் கடவுளை வாங்கினாலும் அது ஒரே இறைவனைச் சென்று அடைகின்றது

    தொடருவோம்

    Share
  • பகவான்(ரமணர்) உவாச….!

     

    ’’அநாத்மாவோ ஆத்மாவுக்(கு) அன்னியம் அல்ல
    பெனாத்துகின் றாய்பேதை போல: -வினாத்தவம்
    மேற்கொண்டு உன்னுள்ளே மாண்புமிகு நானார்
    நூற்கண்டை ஊசியால் நெம்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (247)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக மலாலா யூசுப்சையிவை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    மலாலா யூசுப்சையி பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் பிறந்தார்.  இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்லக்கூடாது என தலிபான் அமைப்பு தடை விதித்திருந்தது. தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009இல் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும்  தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார். இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாகிஸ்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.

    மலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது. இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் பாதுகாப்பு கருதி அமெரிக்காவில் குடியேறினார் மலாலா. இவரது 17ம் வயதில் 2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார்.

    இவ்வருடம் இவருக்கு இன்னொரு சிறப்பும் கிடைத்தது. தன் மேல்படிப்புக்காக உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்பர்டு பல்கலைகழகத்தில் சேர இவருக்கு சீட்டு கிடைத்தது. அத்துடன் இவ்வாரம் “மலாலாவின் மேஜிக் பென்சில்” எனும் நூலையும் எழுதி வெளியிட்டார். குழந்தைகளுக்கான இந்த நூலை இவர் வெளியிட்டது பெண்கல்விக்கு உதவும் வண்ணம் இருப்பதால் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    பெண்கல்வி, பெண்முன்னேற்றம், பழமைவாத மூடநம்பிக்கைகளை சாடல் என பெண்களின் முன்னேற்றத்தின் சின்னமாக திகழும் செல்வை மலாலாவை பாராட்டி இவ்வார வல்லமையாளர் விருதை அளிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. மலாலா போல பெண்கல்விக்கு பாடுபட அனைவருக்கும் இது ஊக்கம் அளிக்கும் என வல்லமை நம்புகிறது.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    நன்றி

    https://ta.wikipedia.org/wiki/மலாலா_யூசப்சையி

    Share
  • சொற்களின் வரலாறு

      சந்திரா  மனோகரன் 

     

     

    மெல்ல  சுரக்கும்  சொற்கள்

    ஊமையாகிப்  போயிருந்தன …

    அவள்  மென்விரல்களைப் போலவே  !

    அதன்  பின்னணியில்  ஒரு

    மௌன யுத்தம் முடிந்திருந்தது

    மொழி  பாவம்  என்ன செய்யும் …

    நொண்டி  நொண்டி சறுக்குகிறது

    வற்றாத  சொற்பெருக்கு !

    புகைந்து  நெளியும்  உக்கிர நெருப்பில்

    நழுவி  விழுந்து சாம்பலாகிப்போகும்  அவலம்

    வழிப்போக்கனைப்போல்  ஏகாந்தமாகிப்போன

    எனக்கு  ஆறுதலே  அந்த

    வசீகரிக்கும்  சொல்லலங்காரம்தான்  !

    என் சொற்களின்  பிறப்பிடம்

    எனக்கு அந்தரங்கமானது.

    எனக்குள் ஊற்றெடுக்கும்

    எல்லா சொற்பட்சிகளுக்கும்

    இப்பொழுது  சிறகுகள் !

    என்னைவிட்டு  விடுதலையாகி

    அவள்  விதியை  சீண்டிப்பார்க்கும்  ஆசான் அவை  !

    அவளை உடைத்தெறிய  அவை போதும்

    வண்ண வண்ண சொல்வலையில் விழுந்து

    காயம் பட்டு … சீர் கெட்டு …

    ஒரே  ஒரு தடவையேனும்

    அவள்  பொழிகிற  சொல்மழையில்

    தொப்பலாய் நனைய  ஆசை

    அலைப்பில்  தவிக்கும்  மனசுள்

    அவை  பீடு நடை  போடட்டும் …

    சிலசமயம்  ஆர்ப்பரிக்கும்  சொற்போரில்

    அவள்  எழில்  கூடுகிறதே  !

    அந்தப்  பரவசத்தில்  பிய்த்துக்கொண்டு வரும்

    ஒளியில் … மௌனமாய் சுருண்டுகொள்ளும்

    என்  முடிவற்ற  சொற்கள்  !

    Share
  • மேகத்தில் கரைந்த நிலா..!

    பெருவை பார்த்தசாரதி 

    moon

     

     

     

     

     

     

     

     

    மேகத்தினுள் கரைகின்ற வெண்ணிலவே உன்னை..

    ……….மென்மையென மேன்மையாகப் பாடாதவர் உளரோ.?

    மோகத்தில் திளைத்திருக்கும் இளைஞரும் உன்னை..

    ……….மனம்நாடும் மங்கையொடு ஒப்பிட்டே அழைப்பர்.!

    போகத்தில் கட்டுண்ட காளையரோ தன்கன்னியரைப்..

    ……….போற்றிக் கொஞ்சும்போது கண்ணே நிலவேயென்பர்.!

    தேகத்தின் அழகைவருணிக்கப் பெண்ணே நிலவுக்கு..

    ……….தகுதியான உவமையென..பாவலரும் பாப்புனைவர்.!

     

    காகமொன்று கரைந்தாலன்று விருந்தாளி வருவாராம்..

    ……….கன்னியொருத்தி நிலவுபோல வருவாளென் கனவில்.!

    மேகமீதமர்ந்து நானவள் மேனியழகை ரசிக்கையில்..

    ……….முகத்தைக் காட்டாமல் மறைத்தே வைத்திருப்பாள்.!

    யாகத்தீயின் வேதவொலியில் எழும் தேவதைபோல்..

    ……….யோகமிருந்தால் மட்டுமே மேகம்கிழித்து வருவாள்.!

    வேகமாய் விரைவாக விண்ணிலே கலந்துவிடுவாள்..

    ……….வெண்மேகத்தில் கரையும் விண்நிலவைப் போல்.!

     

    நிலவு ஒருபெண்ணாகி நீந்துகின்ற அழகோவெனும்..

    ……….நினைவில் நீங்காப்பாட்டெனக்கு பிடித்த பாட்டாகும்.!

    பலவண்ண மேகம்சூழநீ வருவாய் காதல்மயக்கத்தில்..

    ……….புழுதி மறைவதைப்போல் நீயும்சட்டென மறைவாய்.!

    நிலவொளியின் நிழலில்கூட நீயெங்கும் தெரிகிறாய்..

    ……….நீலமலர் இதழ்விரியும் நேரத்திலெனை அழைப்பாய் .!

    அலக்கழித்தது போதும் மீண்டுமெனையாட்டி வைக்காதே..

    ……….அழுக்குநிலா போல்வராமல் பளிச்சென்று நேரில்வா.!

     

    இரக்கமீகை என்பது தாகம்போல தானாகவரவேண்டும்..

    ……….இரண்டுமே கனவுக்கில்லை காண்பவருக்கு தெரியும்.!

    உறக்கத்தைக் கெடுக்குமுன் வேலையால்…காதலில்..

    ……….உன்மத்தம் பிடித்தவர்கள் உலகில் ஏராளமுண்டு.!

    மறக்கும் செயலை மறந்து….வாழுமிளங்காதலை..

    ……….மறப்பதற்கு மனிதனால் முடிவதில்லையாம்!-ஆசை

    துறக்கும் முனிவர்களின் முன்காதல் வந்தால்..கண்..

    ……….திறக்கும் ஞானியரும் காதல்செயும் கதையுமுண்டு.!

     

    ==========================================

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::04-11-17

     

    நன்றி:: கூகிள் இமேஜ்.

     

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 133-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

     

    goal and boy

    ”நட்பும் தயையும் கொடையும் பிறவிக்குணம்” என்றார் அறிவிற்சிறந்த அவ்வை மூதாட்டி. அவர் வாக்கிற்கு வாழும் சான்றாய்த் திகழும் சுட்டிப் பையனையும், அவன் கையில் ஆட்டுக்குக் கொடுப்பதற்காக நீண்டிருக்கும் தழைகளையும் பார்க்கையில் மனம் பரவசத்தின் வசப்படுகின்றது. திரு. ஆய்மன் பின் முபாரக் எடுத்துத் தந்திருக்கும் இந்த அற்புதமான புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞருக்கும், தேர்வாளருக்கும் என் பாராட்டும் நன்றியும்! 

    ஆட்டையும் அதனருகில் புன்னகை பொங்கநின்றிருக்கும் பூங்கண் மழலையையும் பாட்டிலேற்றக் காத்திருக்கின்றனர் ஆற்றல்மிகு கவிஞர் பெருமக்கள். அவர்களை வாழ்த்தி வரவேற்போம்! 

    *****

    ”சிறுவன் தரும் தழையை உண்ணவிரும்பாது திரும்பிநிற்கும் இதே ஆடு, தன்னை வெட்டவருபவனை நம்பிக்கையோடு நாடிச்செல்லும்” என்று ஆட்டின் உளவியலை நாடிபிடித்துப் பாட்டில் பதிவுசெய்திருக்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    கள்ளமில்லாச் சிரிப்புடன் ஆட்டுக் கிடாவிற்கு தீனி காண்பிக்கின்றாய்
    அதுவோ உன்னைக் கண்டும் காணாமல் உன்னருகில் நிற்கின்றதே
    உன் கையில் உள்ள இலைத்தழையை சாப்பிடத் தயங்குதே
    தன்னை வெட்டுபவனை மட்டும் முழுமையாய் நம்புதே!
    ஆட்டு மந்தை போல் செல்லாதே சின்னங்சிறு சிறுவனே
    உனக்கெனப் பாதையை நீயே வகுத்து முன்னேறு சிறுவனே
    ஆடு உன் அருகில் வாராமல் எங்கோ நோக்குதே
    நீ அருகில் வந்து கொடுப்பாய் என்று எதிர்பார்க்குதே!
    உயிர்வதை கூடாது என்று சொல்கிறது ஒரு கூட்டம்
    கொன்ற பாவம் தின்னப் போகும் என அலையுது மற்றொரு கூட்டம்
    என்னதான் உரைத்தாலும், மாறாத சில மனிதர்களின் எண்ணம்
    பழி, பாவங்களுக்கு என்றுமே அஞ்சாத மனித ஜென்மம்!
    சிறுவனே, அழகிய சிரிப்புடன் நீ அதன் உணவைக் காட்டி நிற்கின்றாய்
    நாளை, இறப்பது தெரிந்தும், அந்த ஆடு பார்க்கவில்லை என்கிறாய்
    ”துன்பம் வரும்போது சிரிக்கவும்” எனச் சொன்னவனை நினைக்கின்றாயா?
    மனதுள் அழுதுகொண்டே சிரிக்கும் ஆட்டினைப் பார்த்து நீ சிரிக்கின்றாயா! 

    *****

    ”காட்டில் மேயும் ஆடும், கள்ளமில்லாப் பிள்ளை ஆசையோடு தரும் உணவுதனை விருப்பத்தோடு நாடும்” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பிள்ளை மனது…

    கள்ள மில்லாப் பிள்ளைக்கும்
    காட்டில் மேயும் ஆட்டுக்கும்
    வெள்ளை மனது என்பதாலே
    வேறே யெதுவும் தெரிவதில்லை,
    கொள்ளை யடிக்கும் மனிதனவன்
    கொடுக்க மறந்த உணவுதனைப்
    பிள்ளை யெடுத்துக் கொடுக்கையிலே
    பெரிதும் மகிழ்வர் இருவருமே…! 

    *****

    ”அன்பின் மொழியாம் புன்னகையோடு உயிரின நேயம் காட்டும் உயர்ந்த பிள்ளைக்குப் போதித்துவிடாதீர்கள் இரைதந்து இரையாக்கும் உங்கள் மானுட இயல்பை” என்று மன்றாடுகின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.

    அறியாப் பிள்ளை மனம்

    உயர்திணையா அஃறிணையா அறியாப் பிள்ளை மனம்
    உணவிடும் அன்னையாக
    கண்ணில் வழியும் கருணை
    கடவுளின் காட்சியாக
    மழலையின் கரங்கள் நீளுவது
    மழலையிடம் அல்ல
    பேதமறந்த உயிரின நேயம்
    பிள்ளைமனத்திடம் மட்டுமே
    தேசம் எதுவென்றாலும்
    பாசம் என்பது உலகப்பொதுமறையாக
    அன்பிற்குத் தெரியாது உயர்வு தாழ்வு
    அன்பிற்குப் புரிதல் மொழி புன்னகை மட்டுமே
    குழந்தை உலகுக்கு
    கற்றுக்கொடுக்க காத்திருக்கும் உள்ளங்களே!
    இரை தந்து இரையாக்கும் மானுட இயல்பை
    தயவு செய்து கற்றுத் தராதீர்
    அறியா பிள்ளை மனம்
    அவர்இயல்பில் முளைக்கட்டுமே. 

    *****

    ”குணமிருப்பவரை மதிக்கும் இக்குவலயத்தில் தணலில் வெந்தால் மட்டுமே மதிப்புப் பெறுவாய் நீ! முக்திக்கு வழிகிடைக்கும் என்று மூடர்கள் மொழிந்ததால் கத்திக்குப் பலியாகும் கதியுனக்கு வாய்த்ததே!” என்று ஆட்டின் நிலைக்கு வருந்தி இரங்கற்பா படைத்துள்ளார் பெருவை திரு. பார்த்தசாரதி. 

    அம்பியும், ஆட்டுக்குட்டியும்!

    அழகான ஆட்டுக்குட்டி அமைதியுடன் இருக்கும்..
    ……….அதனருகினிலே நீபயமின்றி விளையாடலாம் அம்பி.!
    விழலுக்குப் பாடுபட்டு விளைநிலமாக்கி உழைக்கும்..
    ……….உழவனுக்கு…அதன்சாணம்கூட நல்லுரமாகும் அம்பி.!
    பழம்கனி கொடுக்கும் மரம்செடியதன் இலைதின்னும்..
    ……….பாருக்குப் பயனுண்டாமதைப் பற்றுடன்வளர் அம்பி.!
    எழும் குளிருக்கிதமான கம்பளியென உடலங்கம்..
    ……….எல்லாமே பயனுறும் விலங்குயிராகும் அதுதம்பி.!

    வீட்டுக்குள் இருக்கும் மனிதர்களோடு நல்லுறவாடி..
    ……….விரும்பும் விலங்கினமாக வீட்டினருகே வளருமாம்.!
    கூட்டணியாய் சேர்ந்துதன் குடும்பம் பெருக்குமொரு..
    ……….கால்நடையாவாய் வாஞ்சையோடு வளர்ப்பதற்கே.!
    நாட்டம் கொண்டு நாளுமாசையுடன் வளருமுன்னை..
    ……….வெட்டும் அரிவாளுக்கே உன்கொம்புதான் பிடியாகும்.!
    ஆட்டுக்கு உணவாவதெலாம் சைவம்தான் எனினும்..
    ……….அம்மனிதனுக்கே ஆடு உணவாகியது அசைவமாகும்.!
    உணவுக்காக ஓடுமுயிர்களில் மனிதனும் உண்டாம்..

    ……….உணவுக்காக மட்டுமே உனையன்போடு வளர்ப்பார்.!
    பணம் சம்பாதிக்க இவ்வுலகில் பலவழியுண்டாமதிலே..
    ……….பாங்காகயுனை விற்றதில் பெரும்லாபம் கண்டிடுவார்.!
    மணமுடித்த கையுடனே மாந்தருக்கு விருந்துண்டாம்..
    ……….மணக்கு மசாலாக்கறியாக இலையில்நீ வீற்றிருப்பாய்.!
    குணமிருப்பவரைத்தான் இவ்வுலகம் மதிக்கும் நீயோ..
    ……….தணலில் வெந்தால்தானுன் விலைமதிப்பு உயருமன்றோ.!
    சக்தியின்மகனே உன்னிடத்தில் சாதுரியம் கண்டதாலே..
    ……….சக தோழனாக்கி தனக்கேயுன்னை வாகனமாக்கினான்.!
    சக்திவேண்டும் தம்முடலில் எனுமெண்ணம் கொண்டே..
    ……….சாமானியர் உனையுண்டு பலசாலியாகவே நினைப்பார்.!
    முக்திக்கு வழிகிடைக்குமென்று மூடர்கள் சொன்னதால்..
    ……….கத்திக்கு இரையாகி மடிவதேயுந்தன் தலையெழுத்தோ.!
    பக்திக்கு பலியாவதையும்….பசிக்கு உணவாவதையும்..
    ……….பெருமான் முருகனே வந்தாலும் தடுக்கவும் முடியுமோ.! 

    ***** 

    சுகப் பிரசவத்தைக்கூட கத்திவைத்துச் சோகப்பிரசவமாக மாற்றும் மருத்துவ வணிகத்தையும், ஏட்டுக்கல்விக் கூடங்களெல்லாம் ரூபாய் நோட்டுக்கு விலைபோய்விட்ட கேடுகெட்ட நிலையையும், ஊழல் பெருச்சாளிகளெல்லாம் உத்தமராய் வலம் வரும் அவலத்தையும், இன்னபிற சமூகச் சீர்கேடுகளையும் ஆத்திரத்தோடு அடுக்கிச்சொல்லும் ஆட்டைக் காண்கிறோம் திருமிகு. சொல்லின் செல்வியின் கவிதையில்.

    புன்னகையைப் பத்திரப்படுத்து கண்ணா..!

    கொம்புமில்லை வாலுமில்லை
    பயந்து ஒதுங்கத் தேவை இல்லை
    குட்டி குட்டி ஆட்டுக்குட்டிகளை
    பெற்றெடுத்த பொட்டச்சி நானடா!
    என்னை மீறிய தாய்ப் பாசத்தில்
    உன்னை அள்ளி அணைக்கத் தோணுதடா…
    மனிதப் பிறவி எடுத்துப் பாவம் செய்தாயே!
    உன் நிலை கண்டு வருந்தச் செய்தாயே….

    நான் கண்ட உன் பிறவியின்
    இழிநிலையை
    இன்றைய நிலையில்
    சொல்கிறேன் கேளடா கண்ணா..!

    பிடித்த வலியை பொறுத்துக்கொண்டு
    உந்தி பெற்றெடுக்கும் சுகப்பிரசவத்தினை
    வயித்தைக் கிழித்து உடலைத் தேய்த்து
    காசு பண்ணத் திட்டமிடும் கூட்டம் இது
    பணத்திற்காக நோயை வளர்க்கும்
    படித்த மேதைகள்
    வரிசையில் நின்று அழையுதடா…..!

    ஏட்டுக்கல்வியும் பாட்டுக்கல்வியும் போய்
    ஏசி அறைதன்னில் ஒளிப்பாடம் ஒலிக்குதிங்கே
    பள்ளிக்கூடங்களெல்லாம் பணத்திற்கு விலைபோக
    அடித்தட்டு மக்களுக்கு
    அடிவயிறு கலங்குதடா…
    பட்டப் படிப்பு படிக்க வைப்பதற்குள்
    பாதி உசுரு போகுதடா!

    வேலைக்குப் போகுமிடத்தில்
    கட்டுப்பாடும் கலாசாரமும்
    சீர்கெட்டுப்போய்
    புதிய இலக்கணம்
    புகுத்திக்கொண்டு…
    கார்ப்ரேட் நிறுவனங்கள்
    நம்மீது மோகங்கொண்டு
    பணத்தாசை காட்டியதால்
    மகுடிக்கு ஆடும்
    பாம்புகளாய்
    மயக்கநிலையில் அலைகின்றனர்
    இன்றைய இளைஞர் கூட்டம்தானே டா..!

    பொறுப்பற்ற மனிதர்களெல்லாம்
    தலைவர்களென்று உரைத்துக்கொண்டு
    பொதுக்கூட்டம் நடத்தி
    பைத்தியாகாரத்தனம் செய்கிறதடா..!

    ஊழல் செய்யும் அதிகாரிகள்
    உத்தமர் வேஷம் போட்டுக்கொண்டு
    ஊரை ஏமாற்றுவதால்
    உண்மையான அதிகாரிகளின்
    நேர்மை கேள்விக்குறி ஆகுதடா..!

    எதிர்த்து நின்று போராட
    துணிவின்றி
    கருத்தை மட்டும் சொல்லிக்கொண்டு
    ஒதுங்கி நின்று
    வேடிக்கை பார்க்கும்
    இழிநிலை மாந்தர்களடா..!

    இந்த ஒழுக்கமற்ற சமுதாயம்
    ஒன்றுக்கும் உதவாமல் போகுதடா..!

    ஜாதி வெறிப்பிடித்து
    தரங்கெட்ட கூட்டங்கள்
    கெளரவக் கொலைகள்
    செய்வதை
    பெருமை என அலையுதுடா.!

    பொருத்தம் பார்த்து
    திருமணம் செய்தாலும்
    திருத்தங் கொண்டு
    வாழ தெரியாமல்
    விவாகரத்து கோரி
    நீதிமன்ற வாசலில்
    நீளுகிறதடா பெருங்கூட்டம்.

    இப்படியாக இப்படியாக
    எண்ணிக்கை இல்லாமல்
    சொல்லிக்கொண்டே போகலாம்.
    மனிதர்களை குறித்து
    சொல்ல சொல்ல
    தீராது என் கோபமடா..!

    ஐந்தறிவு பதர்கள் நாங்கள்
    கூட்டமாய் இருக்கின்றோம்.
    ஓட்டமாய் ஓடுகிறோம்
    ஒற்றுமையாய் வாழ்கிறோம்.
    கட்டளைக்குக் கட்டுப்படுகிறோம்.
    வளர்த்த மனிதனுக்கு
    விசுவாசமாய்
    அன்பு அடிமையாய் இருந்தும்
    கடைசியில் கசாப்புக் கடைகளில்
    மனிதர் உண்ணும் உணவுக்காக
    விற்கப்பட்டு இறந்தும் போகிறோம்.

    களிற்றைப் போல
    இருந்தாலும்
    இறந்தாலும்
    ஆயிரம் பொன் சேவகர்களடா நாங்கள்..!

    உன் ஒட்டு மொத்த சமூகமும்
    பணத்திற்கு அடிமைகளாய்
    பண்பின்றி திரிகிறதடா
    பாசத்தை கூறுப்போட்டு
    பட்டியிலிட்டு பிரிக்கிறதடா..!

    கண்ணா.. என் அழகு மன்னா..!
    உன் அழகுச் சிரிப்பை
    உன் மழலைப் பூரிப்பை
    படம் போட்டுப்
    பத்திரமாய் வைத்துக்கொள்ளடா..!

    பெரியவனாய் நீ வளரும் போது
    இக்கேடு கெட்ட
    மனிதக் கூட்டத்தில்
    கள்ளம் கபடமற்ற
    உன் சிரிப்பு
    உன்னிடத்தில் நிலைக்காதடா…!

    *****

    ஆட்டினை வைத்து அரும்பொருள் பலவற்றைப் பாட்டில் உரைத்திருக்கும் பாவலர்களுக்கு என் பாராட்டு உரித்தாகின்றது. 

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது… 

    மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி நான்
    இன்றைய பொழுது எனக்கிப்
    பிஞ்சுக் குழந்தையுடன்,
    இனிமையாய்க் கழிகிறது
    குழந்தைக்குத் தெரியாது என்னைக்
    கொல்லப் போகிறார்களென்று!
    கள்ளமில்லா அவன்
    பிஞ்சு மனம் அதை அறிந்தால்….!?
    நெஞ்சுடைந்து போவான்.
    கையில் கிடைத்ததை மகிழ்வோடு
    கொண்டு வந்து நீட்டுகிறான்.
    வாங்கிக் கொள்வதுதான்
    அவனை மகிழ்விக்கும்.

    நாளை நடக்கப்போவதையெண்ணி
    இன்றைய வாழ்வின் மகிழ்ச்சிகளைத்
    தூக்கியெறிய முடியுமா?
    குழந்தையோடு குதூகலமாய்க்
    கழிகின்றன என் கணப் பொழுதுகள்.
    வாழும்போது மகிழ்வாக
    வாழ்ந்து விடவேண்டும்!
    அப்போதுதான், போகும்போது,
    மகிழ்வாக வாழ்ந்துவிட்ட
    திருப்தியாவது இருக்கும்!

    கொலைக்களத்திற்குக் கூட்டிப் போகும்போது – என்
    குழந்தை நண்பனுக்குத் தெரியக் கூடாது
    ஏனழைத்துச் செல்கிறார்களென்று!
    அவன் முகத்தில் மலரும் புன்சிரிப்பு
    என்றும் மாறாதிருக்கட்டும்!

    ”நாளை நடப்பதையெண்ணி இன்றைய மகிழ்ச்சியைத் தொலைப்பது அறிவுடைமையன்று; ஆதலால் என் மழலைத் தோழனோடு இன்றைய பொழுதை இனிமையாய்க் கழிப்பேன்” என்று அறிவின் முதிர்ச்சியோடு ஓர் ஆடு மொழிவது,

    ”…இன்னாதம்ம இவ்வுலகம்
    இனிய காண்கஇதன் இயல்புணர்ந்தோரே” (உலகம் துன்பம் நிறைந்ததுதான்; அத்துன்பத்துக்கிடையே இன்பத்தைக் காண்பதுதான் உலகின் இயல்புணர்ந்தோர் செயல்) என்ற புறநானூற்றுப் புலவர் பக்குடுக்கை நன்கணியாரின் பொன்மொழிகளை எனக்கு நினைவூட்டுகின்றது. அரிய செய்தியை எளிய பாட்டில் பதிவுசெய்திருக்கும் திரு எஸ். கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன். 

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (134)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    22883441_1465870270133834_601823443_n

    பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.11.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • பிளாஸ்டிக்கும் ரவாண்டாவும்!

    -நாகேஸ்வரி அண்ணாமலை 

    பிளாஸ்டிக்கின் தீமைகளைப் பற்றி அறியாதார் யாரும் இல்லை.  ஆனால் அதன் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதைப் பற்றித்தான் யாரும் எந்த முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை.  அமெரிக்காவில் உள்ள பல பெருமைக்குரிய பல்கலைக்கழகங்களில் சிகாகோ பல்கலைக்கழகமும் ஒன்று.  இங்கு என்னென்னவோ ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இதில் பூமி மாசுபடுவது பற்றிய் ஆராய்ச்சியும் அடங்கும்.  ஆனால் வளாகத்தில் பிளாஸ்டிக் உபயோகம் என்று வரும்போது பிளாஸ்டிக்கினால் வரும் தீமைகளைப் பற்றி யாரும் சிந்தித்துக்கூடப் பார்ப்பது இல்லை. பல பார்ட்டிகளில் விருந்திற்குப் பிறகு அத்தனை பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள், கரண்டிகள், முள் கரண்டிகள் குப்பைத் தொட்டியை நிறைத்திருக்கும்.  இத்தனை பிளாஸ்டிக் சாமான்கள் குப்பைக்குப் போகின்றனவே, அவை எங்கு போய்ச் சேரும் என்று யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.  அமெரிக்காவில் மனித உழைப்பிற்குக் கூலி அதிகம் கொடுக்க வேண்டும்.  அதனால் மறுபடியும் உபயோகிக்கக் கூடிய பீங்கான் போன்ற மூலப்பொருளில் செய்த தட்டுகள், கப்புகள் பற்றி யாரும் நினைப்பதில்லை. இவற்றைக் கழுவச் செலவாகும், பாத்திரம் கழுவும் இயந்திரம் இருந்தாலும்.  சிகாகோவில் பலசரக்குச் சாமான்கள், காய்கறிகள், பழங்கள் விற்கும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு நம் சொந்தத் துணிப்பைகளைக் கொண்டுசென்றால் ஏழு சென்ட் ஊக்கத் தொகையாகக் கொடுப்பார்கள்.  கடைப் பைகளிலேயே சாமான்களைப் பெற்றுக்கொண்டால் ஏழு சென்ட் நாம் அபராதமாகக் கொடுக்க வேண்டும்.  ஆனால் இப்படிப்பட்ட சிறு காரியங்களைத் தவிர அமெரிக்கா வேறு எதுவும் செய்வது மாதிரித் தெரியவில்லை.  இது பெருங்கடலில் ஒரு துளி தண்ணீரைச் சேர்த்தது மாதிரிதான்.  மறுசுழற்சி செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பார்கள் சிலர்.   மறுசுழற்சி செய்யும் முறையிலிருந்தும் நச்சுப் புகை வெளியேறிக் காற்றில் கலக்கிறது.  பிளாஸ்டிக்கையே உபயோகிக்காமல் இருப்பதுதான் மிகச் சிறந்த வழி.

    அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு சுற்றுச்சூழல் பற்றிக் கவலையேபடாமல்  சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி ஒபாமா செய்திருந்த எல்லா கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிந்து வருகிறார்.  இவருடைய காலத்தில் இன்னும் சுற்றுச்சூழல் கெட்டு மக்களின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்படும்.  அதைப் பற்றியெல்லாம் ட்ரம்ப் கவலைப்படப் போவதில்லை.  ஒபாமா செய்த எல்லாவற்றையும் மாற்றுவதுதான் ட் ரம்ப்பின் ஒரே இலக்குபோல் தெரிகிறது.  இவர் எப்படி பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைப்பது பற்றி யோசிக்கப் போகிறார்?

    இப்போது உலகில் பிளாஸ்டிக் சாமான்களின் உபயோகத்தைப் பெருமளவில் நிராகரித்திருக்கும் நாற்பது நாடுகளில்  சீனா, பிரான்சு, இத்தாலி ஆகிய பெரிய நாடுகளோடு ஆப்பிரிக்காவிலுள்ள சிறிய நாடான ரவாண்டாவும் இருக்கிறது.  பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா பிளாஸ்டிக் உபயோகத்தை தடுத்து நிறுத்துவதைப் பற்றிக் கொஞ்சம்கூட சிந்திக்காமல் இருக்கும்போது  சிறிய நாடான ரவாண்டா பிளாஸ்டிக்கை முழுமையாக நிராகரித்திருப்பது சந்தோஷமான விஷயம். 

    ரவாண்டாவில் பிளாஸ்டிக்கை வெளியிலிருந்து இறக்குமதி செய்வதோ, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதோ, விற்பதோ, உபயோகிப்பதோ சட்டப்படி குற்றம்.  அப்படிப்பட்ட குற்றம் புரிபவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?  சிறைவாசம், அபராதம் மற்றும் பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டிய நிர்ப்பந்தம்.  பிளாஸ்டிக்கினால் செய்த பைகள் தண்ணீர்க் குழாய்களை அடைத்துக்கொள்வது, கடலில் சேர்க்கப்படுவதால் கடல் நீர் மாசுபட்டு அங்குள்ள ஜீவராசிகளுக்குத் தீங்கு விளைவிப்பது, ஆடு, மாடுகள் பிளாஸ்டிக் பைகளைத் தின்று ஆரோக்கியம் கெட்டு உயிரிழப்பது, பிளாஸ்டிக் சாமான்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மக்காமல் இருப்பது, பிளாஸ்டிக் பைகள் தெருவெல்லாம் சிதறுண்டு கிடந்து ஊரின் அழகையே கெடுப்பது ஆகிய பிளாஸ்டிக்கின் அபாயத்தை ரவாண்டா நன்றாக உணர்ந்திருக்கிறது.  அதனால் மருத்துவமனைகள், மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் ஆகியவை தவிர மற்ற யாரும் பிளாஸ்டிக் சாமான்கள் உபயோகிப்பதை அனுமதிப்பதில்லை. 

    பக்கத்து நாடுகளிலிருந்து பிளாஸ்டிக் பைகளைத் திருட்டுத்தனமாக கடத்திக்கொண்டு ரவாண்டாவுக்கு வருபவர்களுக்கு ஆறு மாதம் வரை சிறைவாசம் உண்டு.  பக்கத்து நாடுகளிலிருந்து பெண்கள் தங்கள் உள்ளாடைகளில், புஜங்களில் பிளாஸ்டிக் பைகளைத் திருட்டுத்தனமாக மறைத்துக் கடத்திக்கொண்டு வருவார்களாம்.  (எத்தனை சட்டங்கள் இருந்தாலும் சட்டத்தை மீறுபவர்களும் எல்லாச் சமூகங்களிலும் இருப்பார்கள் போலும்.)  இவர்களைச் சோதனையிடுவது கொஞ்சம் கஷ்டம் என்கிறார் இரு நாடுகளுக்கிடையேயுள்ள எல்லைக்காவல் துறையைச் சேர்ந்த ஒரு காவலர்.  குறிப்பாக ரவாண்டாவிற்குப் பக்கத்து நாடான காங்கோவிற்கும் ரவாண்டாவிற்கும் இடையில் எப்போதும் வர்த்தகப் பரிவர்த்தனைகள் நடந்துகொண்டேயிருக்கும்.  இரு பக்கத்திலுமிருந்தும் மனிதர்கள், கால்நடைகள், சாமான்கள் போய்க்கொண்டிருக்கும்.  இந்தக் களேபரங்களில் பெண்கள் எளிதாக பிளாஸ்டிக் பைகளைக் கடத்திக்கொண்டு வருவார்கள் போலும்.  மேலும் தலையில் கூடைகளில் காய்கறிகளைச் சுமந்துகொண்டு விற்பனை செய்வோர் அந்தக் காய்கறிகளுக்கு இடையில் பிளாஸ்டிக் பைகளை ஒழித்துவைத்துக்கொண்டு போவார்களாம்.  ஒரு முறை இப்படிச் சென்ற ஒரு பெண் பிடிபட்டு பொது இடத்தில் மன்னிப்பு கேட்க நேர்ந்தபோது போதை மருந்து கடத்தலில் பிடிபட்டவர்போல் முகத்தை மறைத்துவைத்துக்கொண்டாராம்.  சக்கர நாற்காலியில் வந்த ஒருவர் அதன் அடிப்பாகத்தில் நிறைய பிளாஸ்டிக் பைகளை அடுக்கிவைத்துக்கொண்டு வந்தாராம்.

    அனுமதி இல்லாமல் பிளாஸ்டிக் பைகளை உற்பத்திசெய்யும் கம்பெனிகளின் நிர்வாகிகளுக்கு ஒரு வருடம் வரை ஜெயில் தண்டனை உண்டு.  பிளாஸ்டிக் பைகளைத் திருட்டுத்தனமாக உபயோகிக்கும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதோடு கடைகளையும் ஒரு வருடத்திற்கு இழுத்து மூடும்படி அரசு அதிகாரிகள் கூறிவிடுவார்களாம்.  பொது இடத்தில் மன்னிப்பும் கேட்க வேண்டுமாம்.

    ஓட்டல்களில் ரொட்டி, உறைந்த மாமிசம், மீன் ஆகிய சாமான்களுக்கு மட்டும் செல்லபேன் (cellophane) என்னும் ஓரிரு ஆண்டுகளில் மக்கக்கூடிய பேப்பர்களை அவற்றைச் சுற்றுவதற்கு உபயோகிக்கலாமாம்.  அவையும் ஓட்டலை விட்டு வெளியே போகாமல் ஓட்டல் உரிமையாளர் பார்த்துக்கொள்ள வேண்டுமாம்.  உருளைக் கிழங்கு வறுவல் போன்ற சாமான்களைத் தயாரிப்பவர்கள் செல்லபேனை உபயோகித்தாலும் அவற்றை வாங்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து அவற்றை அந்தக் கம்பெனிகள் எப்படித் திரும்ப வாங்கும், எப்படி மறுசுழற்சி செய்யும் என்று முதலிலேயே அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டுமாம். 

    சமீபத்தில் செல்லபேன் பேப்பரில் சுற்றி விற்கப்பட்ட ரொட்டியை விற்ற சூப்பர் மார்க்கெட்டுகளை (செல்லபேன் ஓட்டல்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது) திடீரென்று வந்து சோதனையிட்ட இன்ஸ்பெக்டர்கள் கடைகளை மூடியதோடு அபராதமும் விதித்தார்கள்.  பிளாஸ்டிக் பைகளில் சுற்றி ரொட்டிகள் விற்ற ஒரு கடையில் இருந்த அத்தனை ரொட்டிகளையும் எடுத்துக்கொண்டு போய் அனாதை ஆசிரமங்களுக்குக் கொடுத்தார்களாம்.  இதோடு அந்தக் கடை மூடப்பட்டதோடு அதன் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.  ரொட்டி போன்ற சாமான்களை  உள்ளே இருப்பது தெரியாத பேப்பரில் சுற்றி விற்றால் ரொட்டியைக் கண்ணால் பார்த்து வாங்குபவர்கள் வாங்குவதில்லையாம்.  ஆதனால் விற்பனை குறைகிறதாம்.  மேலும் இவற்றை பிளாஸ்டிக் பைகளில் சுற்றிவைக்காவிட்டால் வேகமாகக் கெடக் கூடியவை.  அதனால் ரொட்டி விற்கும் ஒரு வியாபாரி ‘எங்கள் விற்பனையைக் குறைக்காமல் இருப்பதற்கு ஒரு வழி கண்டுபிடித்தால் நலமாக இருக்குமே’ என்று புலம்புகிறார்.

    வெளிநாடுகளிலிருந்து பிளாஸ்டிக் பைகளில் சுற்றிவரும் சாமான்கள் எல்லையில் உள்ள சுங்கச் சாவடியில் பிரிக்கப்பட்டு அவை உடையக் கூடியவை என்றால் மட்டுமே அப்படியே அவற்றைப் பெற்றுக்கொள்வோருக்கு அனுப்பப்படுமாம்.  இல்லையென்றால் அங்கேயே பார்சல் பிரிக்கப்பட்டு அதிலுள்ள பிளாஸ்டிக் பைகள் அனுப்பியவருக்கே திரும்ப அனுப்பப்படுமாம்.

    ரவாண்டாவின் பக்கத்து நாடான காங்கோவில் இந்தியாவில்போல் தெருக்களில் பிளாஸ்டிக் பைகள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் போலும்.  அங்கு தண்ணீர் குழாய்களை, சாக்கடைகளை அடைத்துக்கொண்டு விலங்கினங்களுக்குத் தீங்கிழைத்துக்கொண்டு சுகாதாரக்கேட்டை விளைவித்துக்கொண்டு பிளாஸ்டிக் பைகள் இருக்கின்றன.  ரவாண்டாவாசிகள் தங்கள் நாடு மிகவும் சுத்தமாக இருப்பதாகவும் காங்கோ மிகவும் அசுத்தமாக இருப்பதாகவும் பெருமையாகக் கூறிக்கொள்வார்களாம்.

    ரவாண்டாவில் வரைமுறை இல்லாத அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.  மாதம் ஒரு முறை எல்லோரும் தங்கள் தெருக்களைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று அவர் கட்டளை இட்டிருப்பதோடு அவரும் சேர்ந்து சுத்தப்படுத்துவாராம்.  ரவாண்டா இப்படி மிகவும் சுத்தமாக இருப்பதற்கு இவரைப் போன்றவர்களின் ஆட்சியும் ஒரு காரணம் என்கிறார்கள்.  இது ஒரு எல்லை என்றால் அமெரிக்கா இன்னொரு எல்லை.  அங்கு பிளாஸ்டிக் உபயோகம்  பற்றி எந்தக் கட்டுப்பாடும் இதுவரை இல்லை.  குப்பைகளை உருவாக்குவதில் அமெரிக்கா உலகிலேயே முதலிடம் வகிக்கிறது.   இந்தக் குப்பையெல்லாம் கடலுக்கோ புதைகுழிகளுக்குள்ளோ போய்ச் சேருகிறது.  இப்போது உலகில் உள்ள கடல்களில் மீன்களின் எடையைவிட குப்பையின் எடை அதிகமாக இருக்கிறதாம்.  இது இப்படியே தொடர்ந்தால் இன்னும் ஐம்பது வருடங்களில் கடல் ஜீவராசிகள் எல்லாம் மாண்டுபோகும் அபாயம் இருப்பதாகக் கூறுகிறார்கள். 

    இந்தியாவின் பிரதமர் ‘தூய்மை இந்தியா’ என்ற ஒரு திட்டத்தைத் துவக்கினாரே.   அது என்ன செய்கிறது?  இந்தியாவில் ஒரு இடம்கூட பிளாஸ்டிக் பைகள் இல்லாமலோ அல்லது மற்றக் குப்பைகள் இல்லாமலோ இருப்பதாகத் தெரியவில்லை.  இந்தியாவிலேயே சுத்தமான நகரம் என்று பெயர் வாங்கியிருக்கும் எங்கள் ஊரான மைசூரில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பைகள்.  நம் அரசியல்வாதிகளுக்குத் தங்கள் நலனைக் காத்துக்கொள்வதற்கே நேரம் போதவில்லை.  இதில் தூய்மை இந்தியாவைப் பற்றி யோசிக்க எங்கே நேரம் இருக்கிறது?

    ஒரு சிறிய நாடான ரவாண்டா செய்திருக்கும் சாதனையை இந்தியா செய்யக் கூடாதா?  ஸ்மார்ட் நகரங்கள் கட்டுவதற்கு முன் பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் கட்டுப்படுத்தலாமே.  அதுதான் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகச் சுற்றுச்சூழலுக்கு இந்தியா செய்யும் நன்மை.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (80)

    நிர்மலா ராகவன்

    சிறார்களும் கேள்விகளும்

    நலம்-1-1

    எதையும் அறியவேண்டும் என்ற ஆர்வம் குழந்தைகளிடம் இயற்கையாகவே அமைந்திருக்கிறது.

    தர்மசங்கடமான கேள்விகள்

    `நான் எப்படிம்மா ஒன் வயத்துக்குள்ளே போனேன்? என்னை ஏன் முழுங்கினே?’
    `முழுங்கலே..,’ என்று விழிப்பாள் தாய். `அசட்டுப்பிசட்டுன்னுன்னு ஏதாவது கேக்காதே. போய் விளையாடு!’ என்று அதட்ட, சிறுமியின் கண்ணில் நீர் எட்டிப்பார்க்கும்.
    `நீ என்னை அசடாக்கப் பாக்கறே!,’ என்று குற்றம் சாட்டிவிட்டு, `நீ சொல்லாட்டா, நான் எப்படி அம்மாவா ஆக முடியும்?’ என்று மீண்டும் ஒரு கேள்வி கேட்பாள்!

    தடை உத்தரவு

    பல பெற்றோர் இந்தப் போக்கிற்கு ஆரம்பத்திலேயே தடை போட்டுவிடுவார்கள்: `எனக்கு நிறைய வேலை இருக்கு. நீ கேக்கறதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டிருந்தால், பொழுது விடிஞ்சுடும்!’
    இப்படிச் செய்வதால், தம்மையும் அறியாமல் குழந்தைகளின் ஆர்வத்திற்கு, அவர்கள் அறிவுத்திறன் வளர்வதற்கு, தடைபோட்டு விடுகிறார்கள்.
    ஒரு குழந்தை கேள்வி கேட்டால், அறிவுபூர்வமாக பதிலை ஏற்க அவன் தயார் என்பதுதான் உண்மை. வயதுக்கேற்றபடி, எளிமையாகக் கூறலாம்.
    `செய்யாதே! என்று தடைவிதிக்கப்பட்டவைகளை, `செய்’ என்று எடுத்துக்கொள்வார்கள் சிறு குழந்தைகள்.
    சகுனத்தடை என்பதால், `அப்பா வெளியே போறபோது, `எங்கே போறே?’ன்னு கேக்காதே!` என்று அம்மா குழந்தையிடம் நினைவுபடுத்துகிறாள். அடுத்தமுறை அப்பா எங்காவது புறப்பட்டால், ஞாபகமாக, `அப்பா! எங்கே போறே?` என்று கேட்கும்! (நான் கேட்டிருக்கிறேன்).
    மாறாக, `இவள் சமர்த்து. யாராவது வெளியே புறப்படறபோது, எதுவும் கேக்கமாட்டா! நானும் வரேன்னு அடம் பிடிக்கமாட்டா,` என்று பாராட்டினால், குழந்தை அடங்கிவிடும்.

    பள்ளியில் கேள்விகள்

    1 ஒரு முறை, விஞ்ஞானப் பாடத்தை நடத்திவிட்டு, “ஏதாவது கேள்வி இருக்கிறதா?” என்று நான் கேட்க, “ஆண்கள் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியுமா?” என்று ஒரு பதின்ம வயது மாணவி கேட்டாள்.
    “பாட சம்பந்தமாகக் கேட்கத்தான் சொன்னேன்!” என, வகுப்பில் ஒரே சிரிப்பு.
    மாணவர்கள் கேள்வி கேட்கும்போது சில ஆசிரியர்கள் `இவர்கள் நம்மை ஆழம்பார்க்கிறார்கள்!’ என்று ஆத்திரப்படுவார்கள். உண்மை அதில்லை. எதை எந்த நேரத்தில் கேட்க வேண்டும் என்று அவர்களுக்குப் புரியாது.

    2 ஸிதி(Siti) என்ற மாணவி எப்போதோ நடத்தப்போகும் நடத்தப்போகும் பாடத்திலிருந்து பல கேள்விகள் கேட்பாள். அவளுக்கு இன்றைய பாடமே புரிந்திருக்காது. சராசரிக்கும் குறைந்த மாணவி. தன்னை, தான் மிக அழகாக இருப்பதை, ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும் என்று கையாண்ட தந்திரம் அது. வகுப்பில் நுழைந்த ஒவ்வொரு ஆசிரியரையும் இப்படியே தொணதொணப்பாள்.
    என் சக ஆசிரியை, `ஓயாது கேள்வி கேட்டால், புத்திசாலி என்று நினைப்பார்கள் என்று யாரோ ஸிதிக்குச் சொல்லி இருக்கவேண்டும்!’ என்றாள் கேலியாக.
    சரியான கேள்விதான் அறிவை வளர்க்கும். நான் அலுத்துப்போய், “முதலில் இப்போது நடக்கும் பாடங்களைக் கவனி! இதையே புரிந்துகொள்ளாமல், எதை எதையோ ஏன் இப்போதே கேட்கிறாய்?” என்று ஸிதியைக் கண்டித்தேன். அவள் முகம் வாடினாலும், அதன்பிறகு கேள்விகள் நின்றன.
    கிடைக்கும் பதிலும் கேள்வியைப் பொறுத்தது.

    3 சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியாது. பிரசவ காலம் முடிந்து வகுப்பிற்குள் நுழைந்தேன்.
    “ஆணா, பெண்ணா?” என்ற கேள்வி பின்னாலிருந்து உரக்கக் கேட்டது.
    நான் அதை மரியாதைக்குறைவாக எடுத்துக்கொள்ளவில்லை. பெரிய உருவத்துடன் இருந்த ஒருத்தியை பழைய நிலைக்கு மாற்றிவிட்ட குழந்தையைப்பற்றி அறியும் ஆர்வம் எவருக்கும் ஏற்படுவதுதானே!
    புன்சிரிப்புடன், “ஆண் சாயலில் ஒரு பெண்!” என்று சொல்லிவைத்தேன்.

    4 நான் புதிய பாடம் ஒன்றை நடத்த ஆரம்பிக்கும்போது, அதன் தலைப்பை கரும்பலகையில் எழுதுவேன். உடனே, “அப்படியென்றால் என்ன, டீச்சர்?” என்ற கேள்வி உரக்க எழும்.
    “தலைப்புடனேயே நிறுத்திவிடப்போகிறேனா? பாடம் நடத்தியபின் தானே புரியப்போகிறது!” என்பேன்.
    பதினேழு வயதான டின் (DIN) வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாது, பன்னிரண்டு வயதானவன்போல் இருப்பான். தனது சிறிய உருவம் அவனுக்குப் பெருங்குறையாக இருந்திருக்க வேண்டும். தன்னை எங்காவது கவனிக்காமல் போய்விடுவார்களோ என்று நினைத்தவனாக, “அப்படியென்றால் என்ன, டீச்சர்?” என்று கேட்பதை அவன் நிறுத்தவேயில்லை — `சும்மா இருடா!’ என்று பிற மாணவர்கள் அவனைக் கண்டித்தபோதும்!

    5 அமீர் என்ற மாணவன் வகுப்பில் எழுந்து நின்று, என்னை ஒரு கேள்வி கேட்டான். நடந்த பாடத்தில்தான்.
    உடனே, சகமாணவன் ஒருவன், “ஐயே! உனக்கு இதுகூடத்தெரியாதா?” என்று கேலிக்குரல் எழுப்பினான்.
    “தெரியாது. அதான் கேட்கிறேன்!” என்றான் அமீர், சற்றும் அயராது.
    இவனைப் போன்றவர்கள் புத்திசாலிகள். கேள்வி கேட்பதற்குப் பயந்துகொண்டிருந்தால், முட்டாளாகவேதான் இருக்கவேண்டும் என்பதைப் புரிந்து வைத்தவர்கள்.
    அதிகப்பிரசங்கித்தனமா?
    பள்ளிக்கூடங்களில் பெரும்பாலும் ஆசிரியரின் குரல்தான் ஒலிக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆசிரியரின் விளக்கம் மாணவனுக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் மௌனமாகத்தான் இருந்தாக வேண்டும். ஏன், எப்படி, எதற்காக போன்ற கேள்விகளைக் கேட்டால், `அதிகப்பிரசங்கி’ என்ற பெயர்தான் கிடைக்கும்.
    இவ்வாறு ஒடுக்கப்பட்டபின், படிப்பு முடிந்தபின் மட்டும் கேள்வித்திறனோ, அதற்கான தைரியமோ வந்துவிடுமா?
    வாழ்வைப் புரிந்துகொள்ள கேள்விகள் அவசியம். ஆனால், நாம் கேட்கும் கேள்விகள் `தொணதொணப்பு’ என்று பிறர் நினைக்கும் அளவுக்கு இருக்கக்கூடாது. சரிதானா?

    Share