சந்திரா  மனோகரன் 

 

 

மெல்ல  சுரக்கும்  சொற்கள்

ஊமையாகிப்  போயிருந்தன …

அவள்  மென்விரல்களைப் போலவே  !

அதன்  பின்னணியில்  ஒரு

மௌன யுத்தம் முடிந்திருந்தது

மொழி  பாவம்  என்ன செய்யும் …

நொண்டி  நொண்டி சறுக்குகிறது

வற்றாத  சொற்பெருக்கு !

புகைந்து  நெளியும்  உக்கிர நெருப்பில்

நழுவி  விழுந்து சாம்பலாகிப்போகும்  அவலம்

வழிப்போக்கனைப்போல்  ஏகாந்தமாகிப்போன

எனக்கு  ஆறுதலே  அந்த

வசீகரிக்கும்  சொல்லலங்காரம்தான்  !

என் சொற்களின்  பிறப்பிடம்

எனக்கு அந்தரங்கமானது.

எனக்குள் ஊற்றெடுக்கும்

எல்லா சொற்பட்சிகளுக்கும்

இப்பொழுது  சிறகுகள் !

என்னைவிட்டு  விடுதலையாகி

அவள்  விதியை  சீண்டிப்பார்க்கும்  ஆசான் அவை  !

அவளை உடைத்தெறிய  அவை போதும்

வண்ண வண்ண சொல்வலையில் விழுந்து

காயம் பட்டு … சீர் கெட்டு …

ஒரே  ஒரு தடவையேனும்

அவள்  பொழிகிற  சொல்மழையில்

தொப்பலாய் நனைய  ஆசை

அலைப்பில்  தவிக்கும்  மனசுள்

அவை  பீடு நடை  போடட்டும் …

சிலசமயம்  ஆர்ப்பரிக்கும்  சொற்போரில்

அவள்  எழில்  கூடுகிறதே  !

அந்தப்  பரவசத்தில்  பிய்த்துக்கொண்டு வரும்

ஒளியில் … மௌனமாய் சுருண்டுகொள்ளும்

என்  முடிவற்ற  சொற்கள்  !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.