Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    121231 -Raas Leela -oil on canvas - commissioned work from Bhagavatham series - Umesh’s friend -lr
    121231 -Raas Leela -oil on canvas – commissioned work from Bhagavatham series – Umesh’s friend -lr

     

    ’’ஒன்பது ஓட்டை உடலே உடனேநீ
    தின்பது தூக்கம் தவிர்த்தாயர் -நண்பனின்
    ஊது குழலாய் உருமாறி என்நாளும்
    கீதகோ விந்தமதைக் கூவு’’….!

    ’’ஜாமக் கடுமிருளில் ஜாதிவிட்டு, நந்தனார்
    கோமக் களைமேய்த்த கோபாலன் -காமக்
    கடும்புனல்(யமுனா) கோபியரைக் கூடியும், உள்ளக்
    கடும்பிரமச் சாரியாம் காண்….கிரேசி மோகன்….!

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 9

    -மேகலா இராமமூர்த்தி 

    தலைவியின் எழில்நலத்தையும் குடிப்பெருமையையும் அறிந்த அவ்வூரில்வாழும் வேறொரு குடும்பம் தலைவியை மணம்பேச அவள் இல்லத்துக்கு வந்துவிட்டது. மேலும் சோதனையாக மணம் பேசவந்த அந்தக் குடும்பத்தையும், மணமகனையும் தலைவியின் தந்தைக்கும் தமையன்மார்க்கும் பிடித்தும் போய்விட்டது. அடுத்தகட்ட நடவடிக்கையாக மணநாள் பற்றிய பேச்சுவார்த்தையில் இருவீட்டாரும் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

    தன்னுளம் மகிழத் தலைவனொடு தனக்குக் காதற் கடிமணம் நிகழும் என்று தலைவி கனவுகண்டிருக்க, நொதுமலர் (அயலார்) மணம்பேசவந்த நிகழ்வு அப்பூங்கொடியாளை வாடச் செய்தது. அவ்வேளை பார்த்துத் ”தலைவனின் நட்பு பொய்த்துவிடுமோ? அயல்மணம் உனக்கு வாய்த்துவிடுமோ?” எனத் தோழியும் அடுக்கடுக்காய் ஐயங்களை எழுப்ப, ”தைரியத்தை இழக்கலாகாது” என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்ட தலைவி,

    ”வலைஞன் குளத்தே மீனுக்கு வலைவிரிக்க, அதில் நீர்நாய் அகப்பட்டால் அதனால் அவனுக்கென்ன பயன்? அதுபோல் நொதுமலர் என்னை வரைய முற்படுவதும் பயனின்றி முடியும். தலைவன் நிச்சயம் எனைவந்து மணப்பான்” என்ற தன் நம்பிக்கையைத் தோழியிடம் வெளிப்படுத்தினாள் தலைவி.

    காணினி  வாழி  தோழி  யாணர்க்
    கடும்புனல்
     அடைகரை  நெடுங்கயத்  திட்ட
    மீன்வலை
     மாப்பட்  டாஅங்கு
    இதுமற்
     றெவனோ  நொதுமலர்  தலையே. (குறுந்: 171 – பூங்கணுத்திரையார்)

    ”பெண்ணே! உன் நெஞ்சுரம் வெல்லவேண்டும்; தலைவன் உன்னைக் கரம்பற்றிச் செல்லவேண்டும் என்பதே என் வேணவா. ஆயினும் சில நேரங்களில் நாமொன்று நினைக்க வேறொன்று நிகழ்ந்துவிடுவதும் உண்டே! அதுகுறித்துத்தான் கவல்கிறேன்” என்றாள் தோழி.

    ”அவ்வாறு ஒன்றும் நடவாது; நடக்கவும் விடமாட்டேன்” என்று உறுதிபட மொழிந்த தலைமகள்,

    பலாமரத்திற் பழங்களைத் தின்னக் கூட்டமாகத்monkey-eating-jackfruit திரண்டிருக்கும் ஆண் குரங்குகள், சிலைமரத்தாற் செய்த வில்லையுடைய வேட்டுவனது குறிபிழையாச் செம்மையுடைய அம்புகளுக்கு அஞ்சி, போர்க்களத்தை அடைந்த குதிரையைப் போல மேலெழுந்து சாரலிலுள்ள பெரிய மூங்கிலினது நீண்டகோல் அசையுமாறு பாய்கின்ற பெரிய மலையடுக்குகளையுடைய தலைவன், அன்றிருந்ததைப் போலவே மாறுபாடின்றி எப்போதுமிருக்கும் நட்பினையுடையவன். அங்ஙனம் இருப்பவும்,  ஆரவாரமிக்க இந்த ஊரானது என் மணங்குறித்து வந்த புதியவர்களை உடையதாயிருக்கின்றது.” என்றாள் தலைவி. அவள் சொற்களில் எள்ளல் துள்ளியது!

    பலவிற்  சேர்ந்த  பழமா  ரினக்கலை
    சிலைவிற்
     கானவன்  செந்தொடை  வெரீஇச்
    செருவுறு
     குதிரையிற்  பொங்கிச்  சாரல்
    இருவெதிர்
     நீடமை  தயங்கப்  பாயும்
    பெருவரை
     யடுக்கத்துக்  கிழவ  னென்றும்
    அன்றை  யன்ன  நட்பினன்
    புதுவோர்த்  தம்மவிவ்  வழுங்க  லூரே.  (குறுந்: 385 – கபிலர்)

    கலைகள் பாய்வதால் வளைந்து நிமிரும் மூங்கிலானது போர்க்களத்தில் குதிரைகள் பொங்கிப் பாய்தலுக்கு ஈண்டு உவமையாய்க் கூறப்பட்டுள்ளது. கானவன் அம்பைக் குறிதப்பாமல் எய்யும்வேளையில் குரங்குகள் எப்படிப் பாய்ந்தோடுமோ அதுபோல் தலைவன் தன்னை மணம்பேச வரும்போது தன்னை வரைந்துகொள்ள விரும்பும் இப்புதியவர்களும் விரைந்தோடுவர் எனும் உள்ளுறை தலைவியின் சொல்லில் ஒளிந்திருக்கின்றது.

    மூங்கில் வளைந்து நிமிர்வதற்குக் குதிரை துள்ளியெழுவதை மேற்கண்ட குறுந்தொகைப் பாடலேயன்றி, குறுந்தொகை 74ஆம் பாடலும், புறம் 302ஆம் பாடலுங்கூட உவமையாய்ச் சுட்டியிருப்பது ’சான்றோர் சான்றோர் பாலர் ஆப’ எனும் நன்மொழிக்குச் சான்றாகின்றது.

    ”விட்ட  குதிரை  விசைப்பி  னன்ன
    விசும்புதோய்
     பசுங்கழைக்  குன்ற  நாடன்….     (குறுந். 74:1-2) 

    ”வெடிவேய் கொள்வது போல வோடித்
    தாவுபு உகளு மாவே…  (புறம்: 302: 1-2)

    தோழியிடம் வீரவசனம் பேசிவிட்டாளே தவிர எங்கே தனக்கு அயல்மணம் நிகழ்ந்துவிடுமோ எனும் விசனம் தலைவிக்கும் உள்ளூற இருக்கத்தான் செய்தது.தலைவியின் மனத்திண்மையையும், தலைவன்மீது அவள் கொண்டிருக்கும் உண்மையான நம்பிக்கையையும் உளமாரப் பாராட்டினாள் தோழி.

    இதற்கிடையில் பொருள்தேட மொழிபெயர்தேயம் (வேற்றுமொழி பேசும் பகுதி) சென்ற தலைவன் வேண்டிய பொருளைத் திரட்டிக்கொண்டு ஊர்திரும்ப ஆயத்தமானான். தொடலைக் குறுந்தொடியாளை உடனே காணவேண்டும் எனும் வேட்கை அந்த விடலையைப் பிடர்பிடித்து உந்திற்று. தேரேறினான். விரைந்து; தேர்ப்பாகன் தேரைச் செலுத்த, தலைவனோ தன் உள்ளத்தைத் தலைவிபால் செலுத்தலானான்.

    அன்றொரு நாள் இரவுக்குறியில் தன்னைக் காணவந்த தலைவி, மாறுபடு வலிமையுடைய செவ்வேல் மலையனின் (மலையமான் திருமுடிக்காரி) முள்ளூர்க் கானத்தில் வீசும் நறுமணத்தைப்போல் மணம்வீசும்படி தன்னருகில் வந்து மகிழ்ந்திருந்ததையும், பின்னர்ப் பொழுதுபுலரும் வைகறையில் தலையில் தான் சூட்டியிருந்த விரவுமலர்களைக் களைந்துவிட்டு, நறிய கூந்தலில் நெய்தடவி, தலைவனை அறியாதவள்போல் காட்டிக்கொண்டு, தன் வீட்டாரின் இயல்புக்கேற்ப மாறிய கள்ளத்தனத்தையும் மீண்டும் இப்போது நினைவுகூர்ந்தான். அவன் முகத்தில் குறுநகை அரும்பியது.  

    இரண்டறி  கள்விநங்  காத  லோளே
    முரண்கொள் துடுப்பின்
    செவ்வேல்  மலையன்
    முள்ளூர்க்
     கானம்  நாற  வந்து
    நள்ளென்  கங்குல்  நம்மோ  ரன்னள்
    கூந்தல்  வேய்ந்த  விரவுமலர்  உதிர்த்துச்
    சாந்துளர்
     நறுங்கதுப்பு  எண்ணெய்  நீவி
    அமரா
     முகத்த  ளாகித்
    தமரோர்  அன்னள்  வைகறை  யானே.   (குறுந்: 312 – கபிலர்)

    தலைவனுக்கேற்றபடி இரவிலும், தன் சுற்றத்தாருக்கேற்றபடி பகலிலும் தன்னியல்பை மாற்றிக்கொள்ளும் தலைவியை ’இரண்டறி கள்வி’ என்று தலைவன் குறித்தது சரிதானே?

    ”ஐய! தங்களுக்கு அட்டியில்லையேல் தலைவியின் ஊர்பற்றி எனக்கும் சிறிது அறியத் தாருங்களேன்!” எனும் பாகனின் குரல் கனவுலகில் காதலியோடு மனங்கலந்திருந்த தலைவனை நனவுலக்கு மீட்டுவந்தது.

    kondrai”அதற்கென்ன…கேள் பாக! பெரியவர்களுக்கு நீரொடு தானம் செய்து எஞ்சியபொருளையும், யாவர்க்கும் தடையில்லாச் சோற்றையும் உடைய, வரிசையான, திரண்ட குறிய வளைகளை அணிந்த தலைவியின் தந்தை ஊரானது, கவலைக் கிழங்கைக் கல்லியதனால் உண்டான அகன்ற வாயுடைய சிறிய குழி, கொன்றையினது ஒளிபொருந்திய மலர் பரவப்பெற்று செல்வர்க்குரிய பொன்வைக்கும் பெட்டியின் மூடியைத் திறந்து வைத்தாற் போன்ற தோற்றமுடைய, கார்காலத்தை ஏற்றெதிர்கொண்ட, முல்லை நிலத்தின்கண் உள்ளது” என்றான்.

    தலைவியை மணந்துகொள்ளப் போகிறோம் எனும் பெருமிதத்தில் தலைவியின் தந்தை ஊரை (அதாவது தலைவியின் ஊரை) உவகைபொங்கப் பாகனுக்கு விளக்குகின்றான் தலைவன்.

    கவலை  கெண்டிய  அகல்வாய்ச்  சிறுகுழிgold
    கொன்றை
     யொள்வீ  தாஅய்ச்  செல்வர்
    பொன்பெய்
     பேழை  மூய்திறந்  தன்ன
    காரெதிர்
     புறவின்  அதுவே  உயர்ந்தோர்க்கு
    நீரொடு  சொரிந்த  மிச்சில்  யாவர்க்கும்
    வரைகோள்  அறியாச்  சொன்றி
    நிரைகோற்
     குறுந்தொடி  தந்தை  யூரே.  ( குறுந்: 233 – பேயன்)

    கொன்றை மலரைப் பொற்காசோடு உவமித்தலை,
    “….காசி னன்ன போதீன் கொன்றை”    (குறுந். 148:3)  எனும் மற்றொரு குறுந்தொகைப் பாடலிலும் நாம் காணலாம்.

    முல்லை நிலத்திலுள்ள தலைவியின் ஊரெழிலையும், அவள் தந்தையின் வள்ளன்மையையும் அறிந்து வியந்த பாகன், அவ்வூரின்கண்ணே கவலைக்கிழங்குகள் அகழ்ந்த குழிகளில் நிறைந்திருக்கும் பொன்னிறக் கொன்றைமலர்கள், செல்வர்வீட்டுப் பேழையில் பெய்துவைத்த பொற்காசுகளை ஒத்திருக்கும் எனும் தலைவனின் கருத்தைத் தன்னுள் இரசித்தபடியே தேரைச் செலுத்த, வளியைக் கிழித்தவண்ணம் விரைந்துகொண்டிருந்தன புரவிகள்.

    [தொடரும்]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    பகவான் உவாச
    ———————-

    171101 e Dialogue with Arjuna
    ”காரியம் அற்றசோர்வு குந்திமைந்தா கொள்வதேன்!,
    சூரிகள் விண்ணிடை சேர்ப்பாரோ ! -வீரியா
    நெற்றியில் வைத்தேன் நினக்குவீ ரத்திலகம்
    பற்றதை விட்டெதிர்கொள் போர்”….கிரேசி மோகன்….!

    Share
  • மலேசியாவில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்கம் செய்தி – மு.இளங்கோவன்

    மலேசியாவில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்க விழா!

     

         தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தைப் பரப்பும் வகையில் தமிழகத்திலும், பிற நாடுகளிலும் உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பு செயல்படுகின்றது. இந்த அமைப்பின் கிளை மலேசியாவில் தொடங்கப்பட உள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பந்திங்கில் உள்ள தெலுக் பங்ளிமா காராங் என்ற இடத்தில் 23.12.2017 சனி(காரி)க் கிழமை மாலை 6 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளை தொடக்க விழாவும், தொல்காப்பியர் நூலகம் திறப்பு விழாவும் நடைபெறுகின்றன.  இந்த நிகழ்ச்சிக்குத் தமிழகத்திலிருந்து முனைவர் மு.இளங்கோவன் வருகை தந்து சிறப்புரையாற்ற உள்ளார்.

         மலேசிய நாட்டில் வாழும் தமிழ்மக்கள் பல்வேறு இலக்கிய அமைப்புகளை ஏற்படுத்தித் தமிழ்மொழிக்குத் தொண்டாற்றி வருகின்றனர். இந்த நாட்டில் வாழ்ந்த தொல்காப்பிய அறிஞர் செ. சீனி நைனா முகம்மது அவர்கள் தொல்காப்பியப் பரவலுக்குப் பல்வேறு முயற்சிகளைச் செய்துவந்தார். அன்னாரின் மறைவு மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது. அவரின் தொண்டினைத் தொடரவும், அவர் செய்த பணிகளை இயன்ற வரை நினைவுகூரவும், தொல்காப்பிய நூல் அறிமுகத்தைப் பரவலாக்கும் வகையிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளையை மலேசியாவில் தொடங்க உள்ளனர். உலகத் தொல்காப்பிய மன்றம் இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் பல கிளைகளுடன் இயங்குகின்றது.

         தொல்காப்பியத்தில் ஈடுபாடுடைய அறிஞர்களை அழைத்து, தொல்காப்பியத்தை மக்களுக்கும், மாணவர்களுக்கும் அறிமுகம் செய்யவும், தொல்காப்பியப் பணிகளில் ஈடுபடுவோரைச் சிறப்பிக்கவும் இந்த அமைப்பு விரும்புகின்றது.

         மலேசியாவின் மூத்த தமிழறிஞரான முனைவர் முரசு. நெடுமாறன், திரு. ம. மன்னர் மன்னன், திரு. திருச்செல்வம், திரு. கம்பார் கனிமொழி உள்ளிட்ட அறிஞர்கள் நெறியாளர்களாக இருந்து இந்த அமைப்பை நெறிப்படுத்த உள்ளனர். தமிழகத்திலிருந்து தமிழறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொல்காப்பியச் சிறப்புகள் குறித்து உரையாற்ற உள்ளனர்.

         தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தைத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்யும் எங்கள் முயற்சி வெற்றியடைய அனைவரின் மேலான ஒத்துழைப்பினையும் வழிகாட்டலையும் வழங்க வேண்டும் என்று இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான ம. முனியாண்டி, சரசுவதி வேலு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    உலகத் தொல்காப்பிய மன்றம்  மலேசியாக் கிளை தொடங்கும் விவரம்:

    தேதி: 23.12.2017 காரி(சனி)க் கிழமை

    நேரம் : மாலை 6.00 மணி

    இடம்: 32 B, ஜாலான் உத்தாமா 2, தாமான் ஜெயா உத்தாமா, தெலுக் பங்ளிமா காராங்,  பந்திங்,  சிலாங்கூர்

    தொடர்புக்கு:

    ம. முனியாண்டி 0060 164442029

    சரசுவதி வேலு 0060 123189968

    ஒருங்கிணைப்பாளர்கள்,

    உலகத் தொல்காப்பிய மன்றம் – மலேசியாக் கிளை

    Share
  • ஞானச் சுடர் [3]

    -இன்னம்பூரான் 
    நவம்பர் 01, 2017

    innam

    அரசல் புரசலாகக் குழப்பம் அதிகரித்து தலைநகர் முழுதும், பின்னர் சிக்கலாகிவிட்ட மகளிர் கூந்தல்போல் மற்ற பிராந்தியங்களிலும் பரவியது; ‘கந்தரகூளம் போல’ என்று ஒரு பிள்ளையார் கோயிலாண்டி அதை வருணித்தார். இது இப்படியிருக்கும்போது, கணீரென்று நாற்கால் மண்டபத்தின் ஆராய்ச்சி மணி ஒலித்தது; ஜயபேரிகை முழங்கியது; ஆங்காங்கே தண்டோரா சத்தம் காதைப் பிளந்தது. இவையெல்லாம் அவைக்கு அரசர் வருகிறார் என்பதற்கு சமிக்ஞைகள். விழுந்தடித்துக்கொண்டு அதிகாரவர்க்கம், தத்தம் சீருடைகள், மெடல்கள், தலைப்பாகைகள் அணிந்து கொண்டு தர்பார் மண்டபத்துக்கு விரைந்தனர். ரதகஜதுரகபதாதிகளின் படை புடை சூழ, டவாலிகள் ‘பராக்’! பராக்’! ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட வீராதி வீர சூராதி சூர மன்னர்பிரான் வருகிறார் என்று கட்டியம் கூற, அவரும் அலங்கார பூஷிதனாக, ஆனால் சிந்தனையில் ஆழ்ந்த முகத்துடன் அரியணையின் படிகளின் பக்கவாட்டுப் பதுமைகளை பார்த்துக்கொண்டே ஏறியமர்ந்தார்.

    சங்கொலியும், யாழிசையும், பாணர்களின் புகுழ்மாலைகளும் அவருக்கு உற்சாகம் அளிக்க முயன்று தோல்வி அடைந்தன. இது எல்லாம் எல்லா ராஜாங்கங்களிலும் நடப்பவைதான். இங்கு ஒரு வித்தியாசம் யாதெனில் அரசர் ஏதோ ஒரு தெளிவு பெற்று விட்டார் என்று அரண்மனை சோதிடர் காதோடு காதாக திவானிடம் ரகஸ்யம் கூறினார். அது என்ன?

    [தொடரும்]

    *****

    சித்திரத்துக்கு நன்றி:

    https://www.udumalai.com/p_images/main_thumb/sinthanai-sei-maname-35938.jpg

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் – 33

    க. பாலசுப்பிரமணியன்

    வேண்டிக்கிடந்தால் வேதனையில்லை !

    திருமூலர்-1-3

    இறைவனின் அருளைப் பெற அடியார்கள் என்னென்னவோ முயற்சிகள் செய்கின்றார்கள். சிலருக்கு அவன் அருள் மிக விரைவிலேயே கிட்டுகின்றது. சிலருக்கு பல காலம் தவமிருந்து அருள் கிடைக்கிறது. இன்னும் சிலருக்கு எவ்வளவு முயன்றும் அருள் கிடைப்பதற்கான அறிகுறி கூடாக கிடைப்பதில்லை. ஏன் இந்த பாரபட்சம் என்ற கேள்வி நம் உள்மனதில் தோன்றுகின்றது . ஆனால் இறைவனோ நம் உள்ளத்திலே குடிகொண்டுள்ளதாகக் கூறுகின்றார்கள் . அப்படியானால் நம்முடைய உணர்வுகளுக்கும் பேச்சுக்களுக்கு சிந்தனைகளுக்கு அவன் உள்ளிருந்து சாட்சியாக அமைகின்றான்.

    அவனை நாம் எப்படி அணுக வேண்டும்? திருமூலரின் இந்தப் பாடல் நம்முடைய சிந்தனைக்கு விருந்தாக அமைகின்றது.

    காண்டற்கு அறியான் கருத்திலன் நந்தியும்

    தீண்டற்கு சார்தற்கும் சேயேனாகத் தோன்றிடும்

    வேண்டிகிடந்து விளக்கொளியான் நெஞ்சம்

    ஈண்டிக்கிடந்து அங்கு அருள் அறும் ஆமே

    வேண்டிகிடப்போருக்கு விளக்கொளியாய் வந்து அருள்பாலிக்கும் பேரருளாளன் ! உள்ளத்தில் நிறுத்தி ஆராய்ந்து பார்த்தால் உலகமே அங்கே அவன் வசத்தில் தென்படும். வெளியுலகில் காண்கின்ற காட்சிகளெல்லாம் நம் உள்ளுணர்வில் உறைந்திருப்பதைக் காணக்காண அணுவும் அண்டமும் ஒன்றுக்குள்ளே ஒன்றாய் எல்லையில்லா இன்பத்தின் பிரதிபலிப்பாய் இருப்பதைக் காண முடியும்

    திருமூலர் சொல்வதைக் கேட்கலாமே!

    குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்

    வெறுப்புஇருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்

    செரிப்புஉறு சிந்தையை சிக்கென நாடில்

    அறிப்பு உறு காட்சி அமரரும் ஆவே.

    நம்முடைய ஆன்மாவை விட்டுப் பிரியாமல் அத்தோடு ஒன்றி இருக்கும் நிலையை மிக அழகாக “’விகிர்தன் நிற்கும்’” என்று விளக்கிய திருமூலர் இந்தப் பாடலில் இறைவனின் காட்சிக்கு வழி காட்டுகின்றார்.

    “சிக்கென நாடில்” என்று திருமூலர் சொல்லும்பொழுது இறைவனைக் காண வேண்டும் அந்த ஆனந்த அனுபவத்தை ரசிக்க வேண்டும் என்பதில் எவ்வளவு உறுதி தேவை என்பது தெளிவாக வெளிப்படுகின்றது.

    இதே உறுதியான போக்கை நாம் மாணிக்கவாசகரிடமும் பார்க்கின்றோம்

    செம்மையே ஆய சிபதம் அளித்த

    செல்வமே சிவபெருமானே

    இம்மையே உன்னைத் சிக்கெனப் பிடித்தேன்

    எங்குஎழுந் தருளுவது இனியே !

    இவ்வாறு ‘சிக்கெனைப்பிடித்த’ மாணிக்கவாசகருக்கு அவன் எப்படி அருளினான் தெரியுமா? அந்த அனுபவத்தை அவரே வர்ணிக்கின்றார்

    கேட்டாரும் அறியாதான் கேடொன் றில்லான்

    கிளையினான் கேளாதே எல்லாங் கேட்டான்

    நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே

    நாயினிக்குத் தவிசிட்டு நாயி னேற்கே

    காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங்

    கேளா தனவெல்லாங் கேட்பித்த தென்னை

    மீட்டேயும் பிறவாமற் காத்தாட கொண்டான்

    எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே !

    “சிக்கெனப் பிடித்த” மாணிக்கவாசகருக்கு அருளிய இறைவன் அன்பு பாராட்டித் தன்னை நாடி வரும் உயிர்களின் குற்றங்களைக் கூட ‘குணாமாகக்” கருதி ஆட்கொள்ளும் கருணை உள்ளம் படைத்தவன். அதை உணர்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் பாடுகின்றார்:

    மற்று நான் பெற்றது ஆர்பெற வல்லார்?

    வள்ளலே கள்ளமே பேசிக்

    குற்றமே செயினும் குணமேயெனக் கொள்ளும்

    கொள்கையால் மிகைபல செய்தேன்:

    செற்றமீது ஓடும் திரிபுரம் எரித்த

    திருமுல்லை வாயிலால் அடியேன்

    பற்றினேன் உற்ற படுத்துவர் களைவாய்

    பாசுபதா !   பரஞ்சுடரே !

    “சிக்கெனப் பிடிப்பதும் பாதங்களை பற்றிக்கொண்டு வேறு சிந்தனையே இன்றி அழுவதும் அரற்றுவதும் வேண்டுவதும் அடியார்களுக்குச் சொல்லியும் வேறு தர வேண்டுமோ? வேண்டிக்கிடந்தால்  வேதனையில்லையே

    இவர்கள் சொன்னதுபோல் “சிக்கெனைப் பிடிக்காமல் ” சிந்தையை அலைக்கழித்து ஊரெல்லாம் தேடி பயனற்று உள்ளம்நொந்து அந்த வேதனையில் நாம் வாடும் பொழுது பத்திரகிரியாருக்கு ஏற்பட்ட நிலையும் அதில் பிறக்கின்ற கேள்வியும் தான் நினைவுக்கு வருகின்றது

    மற்றிடத்தைத் தேடியென்றென் வாழ்நாளைப் போக்காமல்

    உற்றிடத்தைத் தேடி யுறங்குவது யெக்காலம்?

    இறைவனின் பாதங்களை தங்கள் உணர்வுகள் மூலம் பற்றிக்கொண்ட அடியார் நெஞ்சம் பதைபதைக்கின்றது. “இறைவா! என்னென்ன பிழைகளெல்லாம் நான் வாழ்வில் செய்துவிட்டேன். அப்படியிருந்து உன் பெருங்கருணை எல்லாப் பிழைகளையும் பொறுத்து என்னை ஆட்கொள்ள விரும்புகின்றதே !” என்று வியந்து தன் பிழைகளைப் பொறுத்தருள பட்டினத்தார் வேண்டுகின்றார். ஆயின் என்னென்ன பிழைகள் செய்திட்டோம் என்று அவர் பாடல் பட்டியலிட்டுக் காட்டுகின்றது:

    கல்லாப்  பிழையும் கருத்தாப் பிழையும் கசிந்துருகி

    நில்லாப் பிழையும் நிலையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்

    சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்

    எல்லாப் பிழையும் பொருத்தருள்வாய் கச்சி ஏகாம்பரனே !

    என்ன உருக்கமான வேண்டுகோள் ! இந்த மனம் விட்டுப் பேசும் அடியார்களின் அன்புக்கு இறைவன் பணியமாட்டானா? மனமுருகி வேண்டுகின்ற அடியார்களுக்கு அருளே வடிவான இறைவன் எப்படி வந்து அருள் புரிகின்றான் ? திருமூலர் சொல்லுவதைக் கேட்போமே !

    அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு

    அருளில் அழிந்து இளைப்பு ஆறி மறைந்திட்டு

    அருளால் ஆனந்தத்து ஆரமுதூட்டி

    அருளால் என் நந்தி அகம் புகுந்தானே 

    சிற்றறிவு பேரறிவில் இணைவதற்கு அவன் அருள் தேவைதானே! அது அடியார்களுக்கு அளவின்றிக் கிடைத்துக் கொண்டிருந்தது !

    தொடரும்

    Share
  • ஹைக்கூ கவிதைகள்

     

    தேனுகாமணி

     

    மினுமினுப்பாய்

    ஊர்ந்து செல்கிறது…

    பயம்

    ……

    செடியைப்பார்க்க

    மனம் வரவில்லை…

    பூக்கள் பறிக்கப்பட்ட பிறகு

    ……

    காற்றில் அசைந்து அசைந்து

    கவிதை எழுதும்…

    செடிகொடிகள்

    ……

    முட்புதரில்

    முதலில் சிக்கியது பட்டம்…

    கண்டபிறகு மனம்

    …..

    மரங்களை வெட்டி

    மனிதன் செய்துகொள்கிறான்…

    சவப்பெட்டி

    …..

    மெளனமொழி

    பேசக்கற்றுத்தரும்…

    கண்கள்

    ……..

    தின்று விட ஆசைதரும்

    அளவிற்கு அழகு….

    அரளி விதை

    ……

    தென்றல் என்ன பாடியிருக்கும்

    தலையாட்டி இரசிக்கிறது…

    தென்னை

    …..

    இடி விழுந்த பனையின்

    முனையில் ஒரு காகம்…

    எதை எண்ணி கரைகிறது

    ……

    துக்க வீடு

    தூங்க மனமில்லை…

    விழித்திருக்கிறது விளக்கு

    ….

    மழைமகள் வருகிறாள்

    பூமித்தாய்க்கு கிடைக்கும்….

    பச்சைப்புடவை

    …..

    வளைந்தது நாணல்

    காற்றடிக்கும் திசையில்…

    வாழக்கற்றுத்தருகிறது

    …..

    மழை இரவு

    நடைப்பாதை வாசிக்கு…

    எப்படி வரும் கனவு

     

    Share
  • யாரடி நீ மோகினி

    அணிந்துரை

    பவள சங்கரி

    New Doc 2

    சிறுகதைத் தொகுப்புகளை வாசித்து உள்வாங்கி உணர்வதும் ஓர் கலை என்றே சொல்லலாம். ஆம், ஒவ்வொரு கதையின் சூழலையும் அது எழுதப்பட்ட பின்னணியையும் அதன் காலகட்டங்களை உணரவும் தெளிவான புரிதலும், சிந்தனையும் தேவை. ஆழ்ந்த கருத்துகளை உடைய கதைகளாயின் அவை அதற்குத் தகுந்த அமைதியான மன நிலையில் வாசிக்கவேண்டிய ஒன்றாகும். அப்போதுதான் அதன் சாரத்தை உள்வாங்கவியலும்.

    “நீ உன் வீட்டு சன்னல் கதவைத் திறந்து பார். அங்கே நடப்பதை எழுது” என்பார் சுஜாதா.

    ‘சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதைகள்’ என்ற தலைப்பில் தமது எம்.பில். ஆய்வை முடித்துள்ள சகோதரர் திருமுருகன் சுஜாதா அவர்கள் போகிற போக்கில் சொல்லிச்சென்ற வாசகங்களை சிரமேற்கொண்டாற்போன்று அதே போக்கில் தமது சிறுகதைகளை வடிவமைத்திருக்கிறார். குடும்ப வாழ்க்கை பற்றிய சித்திரம் ஒவ்வொரு மனிதரின் மனதிலும் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்தவையாகவே இருக்கும். அமைதிக்கும் அன்புக்கும் உறைவிடமாக இருக்கவேண்டிய இல்வாழ்க்கை சில நேரங்களில் ஒருவரையொருவர் உணர்வுப்பூர்வமாகத் தாக்கிக்கொள்ளும் களமாக மாறிவிடும் நிலை ஏற்படுவதும் உண்டு. குடும்ப வாழ்க்கையின் ஆதாரமான காதல் என்ற அந்த மென்மலர் பூக்க ஆரம்பித்த தருணத்தில் சம்பந்தப்பட்டவர்களை அதனினும் மென்மையாக மாற்றிவிடுவதோடு வானில் பறக்கவும் செய்துவிடுகிறது. ஆனால் அந்த காதலுக்குத் துரோகம் நேருகையில் அதற்கு நேர்மறையாக வீறு கொண்டெழும் மனோபாவம் ஒருவரை கொலை செய்யும் அளவிற்கு மாற்றியும் விடுகிறது என்பதைச் சித்தரிக்கும் கதை, ‘நேற்று இன்று நாளை’ என்ற முதல் கதை.

    இராமன் காட்டிற்குச் செல்ல புறப்படும்போது சீதை தானும் உடன் வருவதாக அடம் பிடிக்கும் சமயத்தில் இராமன் அடர் வனத்தில் எதிர்கொள்ள வேண்டிய இன்னல்கள் குறித்து தெளிவாக எடுத்துக்கூறி மறுத்தபோதும் சீதை, ‘நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?’ என்று கூறி இராமபிரானுடன் அந்த அடர்ந்த காட்டிற்குச் செல்லத் துணிகிறாள். பிரிவுத் துயர் என்பது காட்டு வாழ்க்கையை விடக்கொடியது என்பதை உணர்த்தும் அற்புதமான வரிகள்! கதாசிரியரின் ‘நீ இல்லாமல்…’ என்ற சிறுகதை மனைவியை இழந்த ஒரு முதியவர் படும் துயரை தெள்ளென விளக்கும் நிதர்சனம்.

    காதலுக்குக் கண்ணில்லை என்ற கதையில் நல்ல திருப்பு முனையை வைத்து தலைப்பையும் நியாயப்படுத்துகிறார்.

    சாதி இரண்டொழிய வேறில்லை என்று எத்தனை ஆன்றோர்கள் அறுதியிட்டு உரைத்தாலும் அன்றாட வாழ்க்கையில் சாதிக்கு உள்ள முக்கியத்துவம் இன்றுவரை ஒழிந்தபாடில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்லும் காதல் சாதி என்ற கதை நச்..

    ‘அறுந்த செருப்பு’ எனும் கதையில் சோகம் பிழியச்செய்யும் சம்பவங்களை நேரில் கண்டதுபோல் விளக்குகிறார். எதிர்பாராத முடிவும் உள்ளத்தை ஊடுறுவி வதைக்கக்கூடியது.

    வரதட்சணைக் கொடுமையை மண்டையில் சம்மட்டியால் அடித்து விளங்கச் செய்யும் கதைதான் ‘முற்பகல் செய்யின்’.

    ‘அபூர்வம்’ எனும் கதையும் நல்ல திருப்பத்துடன் முடிவடைகிறது.

    காதல் வேட்டை, என் இனிய தேவதை, பொய்க் காதல், காதல் தோல்வி ஆகிய கதைகள் காதலின் பல்வேறு பரிமாணங்களை சுவையாக எடுத்துரைப்பதாக உள்ளன. காதலில் நேர்மறை, எதிர்மறை, நம்பிக்கைத் துரோகம், காதலுக்காக நட்பிற்கு செய்யும் துரோகம் என்று ஆழ்ந்து நோக்க வேண்டிய பல கருத்துகளை மேலோட்டமாக எடுத்துரைத்திருக்கிறார்.

    ‘மரம்’ என்ற சிறுகதை இத்தொகுப்பின் முத்தான கதை என்று சொல்லலாம். ஒரு சிறுமியின் வாயிலாக ஆழ்ந்த கருத்துகளை உள்ளத்தை உருக்கும் வகையில் யதார்த்தமாக, பொட்டில் அறைந்தது போன்று சொல்லியிருப்பது பாராட்டிற்குரியது.

    ‘யாரடி நீ மோகினி’ என்ற இத்தொகுப்பின் தலைப்பிற்குரிய கதையும், ‘கண்டுபிடி கண்டுபிடி’, கொலை ஆகிய சிறுகதைகள் மூலம் மெல்லிய நகைச்சுவை உணர்வுடன் விழிப்புணர்வூட்டும் சில விசயங்களை எளிமையாகக்கொடுக்க முயன்றிருக்கிறார்.

    மொத்தத்தில் ‘யாரடி நீ மோகினி’ என்ற சிறுகதைத் தொகுப்பு நவரசங்களையும் உள்ளடக்கியதொரு தொகுப்பாகவே அமைந்துள்ளது. இது இவருடைய இரண்டாவது நூல் என்பது இவர்தம் சரளமான நடையால் அறிய முடியாமல் போகிறது. ஆகச்சிறந்த எழுத்தாளர் சுஜாதாவை முன்மாதிரியாகக்கொண்ட இவருடைய எழுத்துகள் மென்மேலும் பிரகாசிக்க உளமார்ந்த வாழ்த்துகள். சிறுகதை உலகில் புதியதொரு மைல்கல்லாக இவருடைய படைப்புகள் வலம் வரும் என்று நம்புவோம்!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171025a Udupi Krishna

    “இடக்கையில் மத்து, வலக்கையில் வெண்ணை
    உடுப்பிவிலாஸ் கண்ணன் உரத்து- விடுக்கின்றான்,
    ” இன்றை யMENUவைக், கன்றது உண்டபின்,
    தின்றிடு பார்த்தாகீ தை”….கிரேசி மோகன்….

    Share
  • சைவ சமய வரலாற்றில் காதக்கல் Today is a milestone day in the annals of Saiva religion

    சைவ சமய வரலாற்றில் காதக்கல் Today is a milestone day in the annals of Saiva religion.

    ஐப்பசி 13, 2048 திங்கள் (30.10.2017)

    photo jeyaprakashtelugu
    திருப்பதி வேங்கடவன் பல்கலைக் கழக மேனாள் தமிழ்த்துறைப் பேராசிரியர், மதுரை காமராசர் பல்கலைக்கழக மேனாள் தெலுங்குப் பேராசிரியர், சங்க இலக்கியங்களைத் தெலுங்குக்கு மொழிபெயர்க்கும் செம்மொழி நிறுவனக் குழுத் தலைவர், பேராசிரியர் சிறீபாத செயப்பிரகாசர்.
    03.03.2011இல் முதன் முதலாகத் திருப்பதியில் சந்தித்தேன். பெரியபுரணத்தைத் தெலுங்குக்கு மொழிபெயர்க்கும் தொடக்கநிலையில் இருப்பதாகக் கூறினார். தருமை ஆதீனச் செயற்றிட்டத்தில் திருமலை திருப்பதி தேவத்தான நிதி வழங்கலுடன் மொழிபெயர்ப்பதை தொடருங்கள் எனக் கேட்டேன்.

    dharmapuram adheenam 04
    மொழிபெயர்ப்புகளைப் பகுதி பகுதியாக அனுப்பி வந்தார். இன்று அவர் அனுப்பிய மின்னஞ்சலில் 4274 பாடல் வரையான இறுதிப் பகுதி இணைப்பில் வந்தது.

    tnrgopalaaiyarsachi

    telugu jayaprakash0396
    அன்னாருக்கு நான் அனுப்பிய பதில்

    Vanakkam
    Today the entire text of 4274 hymns of Periyapuranam is in Telugu.
    An effort which squeezed the time, energy, scholarship and the multilingual capability of Prof Jayaprakash over a period of about 10 years.
    Today is a milestone day in the annals of Saiva religion.
    It is a day where Tamil – Telugu interaction provided a new bondage.
    It is a day for adorning the feather, another feather, in the cap of achievements of Prof. Jayapraksh.
    Let us celebrate the blessings of Lord Shiva Parvathi, Saraswathi, Lord Venkatesa Pathmavathi.
    Let us congratulate Prof Jayaprakash, a probable incarnate of Sekkizhaar.
    Let Devas shower the most fragrant choicest flowers on Prof.Jayaprakash, his family and Ms. Gayathri.
    Let us move to book making of this holy text and making it available at www.thevaaram.org site.
    I shall keep you informed.
    HH Gurumaha Sanithanam of Dharmapuram Adhenam, and
    Scholar par excellence, nature’s inbuilt translator, with every syllable of Tirumurai transposed in each cell of his physical form, Sekkizhaar Adipodi TN Ramachandran,
    were behind this blessed endeavor of translations (beginning 2000 CE) of Thirumurai to
    English (9, 11)
    German (portions of 1st Thirumurai),
    Telugu (1,2,3,4, 7,8,9, portions of 5,10, 11 and now the entire 12),
    Kannada (1, 8.1 and 9),
    Malayalam (8)
    Hindi (1, now 2 in progress)
    Sanskrit (4, 5, 6, 8.1 and portions of 10)
    Sinhala (8.1, 9)
    Chinese ( 1 hymn of Thevaaram with all of 8.1 now in progress)
    Malay (8.1 now in progress)
    Myanmar (thiruvembavai of 8.1)
    Thai (transcriptions of selected Tirumurai hymns in Thai language and Grantha to facilitate Thai Royality follow Saiva rituals)
    Grantha (Transcribing from Grantha to Devanagari the entire text of 12 Upamnayu Baktha Vilasam – digitized in Jaffna)
    Blessed are those universalizing the fathomless knowledge embedded in Thirumurai.
    Regards

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    Maravanpulavu K. Sachithananthan

    Share
  • இந்த வார வல்லமையாளர் (246)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக எழுத்தாளர் பா.ராகவன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

    அமுதசுரபி, தாய் இதழ்களில் இவரது எழுத்துலக பயணம் துவங்கியது. அதன்பின் கல்கியில் துணையாசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் குமுதம் வார இதழின் துணையாசிரியராக மூன்று ஆண்டு காலம் பணியாற்றினார். குமுதம் குழுமத்திலிருந்து ‘ஜங்ஷன்’ என்ற மாதமிருமுறை இதழ் தொடங்கப்பட்டபோது அதன் பொறுப்பாசிரியராக ஓராண்டுகாலம் பணியாற்றினார். அதன்பின் பத்திரிகைப் பணியிலிருந்து விலகி பதிப்புத்துறைக்கு வந்த இவர், தற்போது நியூ ஒரைசன் மீடியா நிறுவனத்தின் முதன்மை ஆசிரியராகப் பணிபுரிகிறார். சில தொலைக்காட்சித் தொடர்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் இவர், இப்போது திரைப்படங்களுக்கும் திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

    வாணி ராணி தொடரின் வசனகர்த்தாவாக அத்தொடரின் 1400வது எபிசோடை இவ்வாரம் எழுதிமுடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். பாரதிய பாஷா பரிஷத், இலக்கியபீடத்தின் சிறந்த நாவலாசிரியர் விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

    மாய வலை, பாக், ஒரு புதிரின் சரிதம் போன்ற நூல்களை எழுதினாலும் இவரை அனைவரும் திரும்பிப்பார்க்க வைத்தது “நிலமெல்லாம் இரத்தம்” தொடர்தான். இஸ்ரேலிய வரலாற்றை பைபிள் காலம் துவங்கி தற்போதைய பாலஸ்தின பிரச்சனை காலகட்டம் வரை எழுதிய நூல் இதற்கு முன்னரும், பின்னரும் தமிழில் இதுவரை வந்ததில்லை எனலாம்.

    அதன்பின் இவரது டாலர்தேசம் எனும் அமெரிக்காவின் வரலாற்றை சொல்லும் தொடரும் வெளிவந்து பெருத்த வெற்றியை அடைந்தது. இவை நூல்களாக வெளிவந்தும் பெருவெற்றி பெற்றன. அவ்விதத்த்தில் தமிழின் மிகச்சிறந்த வரலாற்று நூல் ஆசிரியர்களில் ஒருவர் என இவரை கருதலாம்.
    இவரைப்பற்றி பொதுமக்களுக்கு தெரியாத விஷயம் ஒன்று உண்டு. அது இவர் ஒரு சிறந்த சமையல் கலைஞர் என்பதே. பனீர் டிக்கா சில்லி பனீர் , காய்கறிபொறியல், அவியல் என சமையலை கற்றுக்கொண்டு அதில் இவர் காட்டும் நளபாகம் அனைவரையும் வியக்கவைக்கும். இவரது முகநூல் நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த இவரது நளபாகத்திறனை உலகுக்கு தெரிவிக்கும் விதம் ருசியியல் எனும் தொடரை தமிழ் இந்து பத்திரிக்கையில் எழுதி வாசகர்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தார்.

    ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இவர் எழுதிய பொலிக, பொலிக எனும் இராமானுஜ முனிவரின் வாழ்க்கைசரிதம் நூலாக வந்து வெற்றிபெற்றது.

    இவரது முகநூல் பதிவுகள் பலவும் இவரது நூல்களை மிஞ்சும் அளவு சுவாரசியத்துடன் இருக்கும். புறாவை பிடித்த பூனை பற்றிய இப்பதிவு அதற்கு ஒரு உதாரணம்.

    “இன்றைய காலை நடையின்போது ஒரு காட்சியைக் கண்டேன். இந்தக் கணம் வரை கண்ணையும் மனத்தையும்விட்டு நகராத காட்சி.

    நான் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தை மொத்தமாக ஒரு சுற்று சுற்றி வந்தால் 618 தப்படிகள் காட்டும். மித வேக நடையில் தோராயமாக அதற்கு ஆறு நிமிடங்கள் பிடிக்கும். பொதுவாக நான் இந்த நீண்ட நடை வட்டத்தைத் தேர்ந்தெடுப்பதில்லை. வளாகத்திலேயே அறுபத்து ஐந்து தப்படிகள் வரக்கூடிய அளவுக்கு ஒரு சிறு ரவுண்டானா உண்டு. அதில்தான் நடப்பேன். நீள் நடையைக் காட்டிலும் சிறு வட்ட நடையில் அதிக கலோரி எரிக்கப்படுகிறது என்பது என் பிரத்தியேக ஆய்வுத் தீர்மானம். [இது அறிவியல்பூர்வமானதோ இல்லையோ, எனக்கு இதுதான் சரிப்பட்டு வருகிறது.]

    நிற்க. இன்று ஒரு மாறுதலுக்கு மூன்று சுற்றுகள் நீள்நடை போகலாம் என்று முடிவு செய்தேன். அதாவது சுமார் இரண்டாயிரம் தப்படிகளுக்கு நீண்ட நடை.

    முதல் சுற்று முடியும்போது வளாகத்தில் எப்போதும் சுற்றி வரும் பூனையொன்றைக் கண்டேன். முன்னூறு குடும்பங்கள் உள்ள வளாகத்தில் இதற்கு உணவுப் பிரச்னை இராது என்று எப்போதும் நினைத்துக்கொள்வதையே இன்றும் நினைத்துக்கொண்டு நடந்தேன்.

    மேலே படபடவென்று புறாக்கள் சிறகடித்துக்கொண்டன. காலைப் பொழுதில் புறாக்களின் புறப்பாட்டைக் கவனிப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. அவற்றின் சுறுசுறுப்பு, காகங்களிடமும் காண முடியாதது. கொத்தாக பத்து சன் ஷேடுகளின்மீது நூறு புறாக்கள் அமரும். ரெடி ஒன் டூ த்ரீ சொல்லி சொய்யாவென்று எம்பிப் பறக்கத் தொடங்கும். ஒரு நீரூற்று பீய்ச்சியடிப்பது போல.
    முன்னூறு குடும்பங்கள் உள்ள வளாகத்தில் இப்புறாக்களுக்கு தானியம் வைப்போர் எத்தனை பேர் என்று எனக்குத் தெரியாது. என் மனைவி தினமும் சமையலறை ஜன்னல் திறந்து ஒரு தட்டு சாதம் வைப்பார். சமர்த்தாக நேரத்துக்கு வந்து சாப்பிட்டுப் போகும் புறாக்கள் சிலவற்றை நானறிவேன். உணவு வைக்கும் மனித உயிர்களிடம் பறவைகள் காட்டும் பிரியம் மகத்தானது. உண்டு முடித்ததும் அவை எழுப்பும் ஒரு வினோதமான ஒலியில் நன்றியை உணர முடியும். மகிழ்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்.

    இன்றைய எனது இரண்டாவது சுற்று நடையின்போது சன்ஷேடுகளில் புறாக்களின் அணிவகுப்பு நிகழ்ந்து முடிந்திருந்தது.

    ரெடி ஒன் டூ த்ரீ.

    படபடவென்று சிறகுகளை அடித்துக்கொண்டு அவை உயரே எழும்பிப் பறக்கத் தொடங்கின. ஒரு கணம் நின்று அண்ணாந்து பார்த்து ரசித்தேன். பறக்கத் தொடங்கிய ஒரு புறாவுக்கு என்ன தோன்றியதோ, சரேலென்று அறுபது, எழுபது டிகிரி சரிவில் தரையை நோக்கிச் சீறி வந்தது. அதன் கண்ணில் அங்கு ஏதோ தானிய மணிகள் பட்டிருக்க வேண்டும்.

    அதனைக் கொத்திக்கொண்டு அது மீண்டும் மேலேறிப் பறக்க ஓரிரு வினாடிகள்கூடப் பிடிக்காது. ஆனால் அந்த ஓரிரு வினாடிகளுக்குள்தான் அந்தச் சம்பவம் நடந்துவிட்டது.

    புறா கீழே பாய்ந்து வந்து தானியத்தைக் கொத்திய அதே கணத்தில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த பூனை ஒரே கவ்வாக அதன் கழுத்தைக் கவ்வியது.

    துடித்துவிட்டேன். ஒரு வீராவேசம் வந்து ஏய் என்று கத்திக்கொண்டு நான் அதை நோக்கி ஓடுவதற்குள் கவ்விய புறாவைத் தூக்கிக்கொண்டு பூனை ஒரு காருக்கு அடியில் பாய்ந்தது.
    எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. புறாவின் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருந்தது. அது தினசரி ஜன்னலில் உண்டு முடித்துவிட்டு நன்றி சொல்லும் குரல் அல்ல. அடி வயிற்றில் இருந்து எழுந்த அவல ஓலம். தனது இறுதி மூச்சை விடப் போகிற பதற்றத்தில் அதன் சிறகுகள் படபடவென்று அடித்துக்கொண்டன.

    காருக்கடியில் குனிந்து பூனையை விரட்டப் பார்த்தேன். எடுத்து எறிய ஏதேனும் கல்லோ வேறு பொருளோ கிடைக்குமா என்று தேடினேன். ஒரு வாட்டர் பாட்டில் கிடந்தது. அதை எடுத்து விட்டெறிந்தேன். பூனை உடனே அடுத்த காரின் அடியே ஓடி மறைந்தது. கீழ்த்தளம் முழுதும் கார்கள். குறைந்தது இருநூறு, இருநூற்றைம்பது கார்கள். அந்தப் பூனை சரியான மறைவிடத்தைத்தான் தேர்ந்தெடுத்திருந்தது. என்னால் ஒவ்வொரு காருக்கு அடியிலும் குனிந்து விரட்டுவதென்பது இயலாத காரியம். தவிர ஒவ்வொரு முறையும் அந்தத் தண்ணீர் பாட்டிலையும் பொறுக்கி எடுத்து எறிய வேண்டும். நடக்கிற கதை இல்லை என்று தோன்றியது.

    பதற்றத்தில் செக்யூரிடியை அழைத்து விவரம் சொன்னேன். எப்படியாவது அந்தப் பூனையை வெளியே கொண்டு வாருங்கள். அதன் வாயில் கவ்வியிருக்கும் புறாவுக்கு விடுதலை கொடுக்கப் பாருங்கள்.

    அவரும் தம்மாலான முயற்சிகளைச் செய்து பார்த்தார். ஆனால் அந்தப் பூனை பிடிபடவேயில்லை. கவ்விய புறா கதறக் கதற அதன் கழுத்தைக் குதறியெடுத்தபடி அது ஓடியேவிட்டது.
    எலியை உண்ணும் பூனையை அறிவேன். புறாவைத் தின்னுமா?

    தானியத்துக்காகப் புறா தேடிக் கிளம்பியது எத்தனை சரியோ, அதே அளவு தனது உணவைத் தேடியடைந்த பூனை செய்ததும் சரியே. ஆனாலும் அடித்துத் தின்பதை உணர்ச்சிவசப்படாமல் பார்க்க முடியவில்லை. சுய உணர்வின்றி வாட்டர் பாட்டிலைத் தேடியெடுத்து அதன்மீது நாலைந்து முறை விட்டெறிந்த என் கோபத்தை எண்ணிப் பார்த்தேன். பிறகு கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது.
    இயற்கையை அதன் அனைத்து குணாதிசயங்களுடனும் ஏற்கும் மனம் எனக்கில்லை. இந்த ஜென்மத்தில் அது வரவும் வராது என்று தோன்றுகிறது.

    இன்று மதியம் என் மனைவி ஜன்னல் திறந்து சாப்பாடு வைக்கும்போது என் ஒரு சொட்டுக் கண்ணீர்த்துளியைச் சேர்த்து வைப்பேன். உண்ண வரும் புறாவுக்கு அது நிச்சயம் புரியும்.”

    தமிழ்மண்ணின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான பா.ராகவன் அவர்களுக்கு அளிக்கும் இந்த விருதானது அவரைப்போல் சுவாரசியமாக எழுத இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என வல்ல்மை நம்புகிறது

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171030 Karuna sagara
    ”பாலாழி(பாற்கடல்) சேடன் படுத்த பெருமாள்தன்
    வாலாட்டும் கன்றுக்கு வாத்ஸல்யம்: -மாலூழி(மால் ஊழி)
    காலத்தும் மாட்டுக்கு காலை அளித்திடுவார்,
    ஞாலா வதாரத்தில் நின்று’’….கிரேசி மோகன்….!

    Share