Blog

  • மன(ண)நிலை நிலவரம்

     சொல்லின் செல்வி

     

    மஞ்சள் தாலி எடுத்து
    என் கைகளால்
    என்னவளை வலதுபுறம் வளைத்து
    மூன்று முடிச்சு ஒத்திகையை
    நித்தம் நித்தம் எண்ணி
    ஏக்கம் கொண்டுதான் இருக்கிறேன் !

     

    வாழ்கையும் போய் கொண்டுதான் இருக்கிறது
    வாலிப வயதை தாண்டியது..!
    வில்லதனை கொடுத்து உடைக்கச் சொன்னால்
    நொடிப் பொழுதில் உடைத்து விடுவேன்;
    சொல்லதனை கொண்டு சொல்லிச் சொல்லிக் காட்டுகிறார்கள்
    ஜாதகம் சரி இல்லை என்று;

     
    என் கட்டில் கேலி செய்கிறது
    ”கடைசிவரை தலையனையைத் தான் நீ தழுவவேண்டுமென்று.!!”

    என் கைபேசி சிரிக்கிறது..
    ”உன் இச்சையை நான்தான் தீர்க்க வேண்டுமென்று..!”

    .எனது இருச்சக்கரம் வாகனம் சலித்துக் கொள்கிறது
    ”எவ்வளவு நாள் உன்னை மட்டுமே சுமக்கவேண்டுமென்று !”

    மனதிற்குள் உள்ள போராட்டத்தை
    மறைத்துக்கொண்டு
    ஆண் மகனென்ற மிடுக்கில்
    மீசையை முறுக்கிக்கொண்டு
    வெளிப்புறமாய் கர்வத்தை
    மாயை மீனாய் காட்டிக்கொண்டு
    தீர்ந்துவிடும் வாலிப வயதுகளில்
    தீராத ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்.

    என் மனநிலை புரிந்துக்கொண்டு
    என்னைப் போலவே
    மணமேடைக்கு காத்திருக்கும்
    முதிர்கன்னி எங்கேனும் உண்டென்றால்
    தனியறை ஜன்னலுக்குள்
    அனுப்பிவிடு
    தென்றலே..
    என் வசந்தக்கால தென்றலே.!!

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (252)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். வாரமொன்று ஓடியது. மடலொன்று தவறியது. மீண்டும் அடுத்த மடலுடன் உங்கள் முன்னால் வந்திருக்கின்றேன். இருக்கும்போது தெரிவதில்லை இழக்கும் போதுதான் புரிகிறது. இது வாழ்க்கையில் பலவற்றிற்குப் பொருந்தும். எம்முடன் இருப்போரை, அல்லது எம்முடன் இருப்பவைகளை அவை எப்போதும் இருக்கும் தானே எனும் எண்ணத்தில் பெரிதாகக் கணக்கில் ஒன்றும் எடுத்துக் கொள்வதில்லை. இது மனித வாழ்க்கையில் அனைவருக்கும் ஏதோ ஓர் இடத்தில் நிகழ்கிறது. அதற்கு நான் ஒன்றும் விதிவிலக்கானவனில்லையே! என்ன எதைச் சக்தி கணக்கிலெடுக்காமல் விட்டு விட்டேன் என்று எண்ணுகிறீர்களா?

    சில வருடங்களுக்கு முன்னால் எனது இடது கண்ணில் ” யூவீஜட்டிஸ் ( Uveitis ) “என்றழைக்கப்படும் ஒரு நோய் வந்தது. இதன்போது கண் சிவப்பாகும், சூரியஒளியையோ அன்றி மின்விளக்கையோ நேரடியாகப் பார்க்கும்போது கண் வலிக்கும். இதற்கு உடனடியாகத் தகுந்த வைத்தியம் எடுக்காவிட்டால் கண்பார்வை வெகுவாகப் பாதிக்கப்படும்.

    ஹாஸ்பிட்டலுக்குச் சென்று வைத்தியம் செய்து கொண்டேன். ஆனால் இரண்டு மூன்று மாத இடைவெளிகளில் இந்நோய் திரும்பத் திரும்ப எனது இடது கண்ணைத் தாக்கியது. இதன் பின்னணிக் காரணத்தைக் கண்டறிய பலவிதமான பரிசோதனைகளை நடத்தியும் சரியான காரணம் தெரியவில்லை. தொடர்ந்து ஒன்றரை வருடத்துக்கு மேலாக கண்ணில் “ஸ்டெரோய்ட் (Steroid)“ஐ அடிப்படையாகக் கொண்ட மருத்தை இடது கண்ணில் உபயோகித்து வந்தேன். இதன் பக்கவிளைவு ” கண்புரை (Cateragh)” மிகவும் விரைவாக வளர்வது. அதன் காரணமாகச் சிறிது, சிறிதாக எனது இடது கண்பார்வை குறைந்து எதையும் இடது கண்ணால் பார்க்க முடியாது எனும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். இடது கண்பார்வையைச் சரி செய்வதற்காக இடது கண்ணில் ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறினார்கள்.

    அறுவை சிகிச்சைக்கான திகதி அக்டோபர் 17ஆம் திகதி. இது மிகவும் பொதுவான, இலகுவான சிகிச்சை என்றாலும் மனதினில் உள்ளூர ஒரு சிறிய பயமிருந்தது. கண்பார்வை போய்விட்டால் . . . இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டேன். என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். அந்த நாளும் வந்தது காலை எட்டு மணிக்கு ஹாஸ்பிட்டலுக்கு வரும்படி பணித்திருந்தார்கள். காலையில் 7:15 மணிக்கு எனது மனைவியுடன் ஹாஸ்பிட்டலுக்குப் புறப்பட்டேன். அநேகமாக அன்றைய அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் நான் தான் முதலாவதாகச் சென்றிருப்பேன் போலும். அங்கிருந்த நர்ஸ் என்னை உள்ளே அழைத்து இரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, இரத்த குளுக்கோஸ் அளவு என்பவற்றைக் குறித்துக் கொண்டு எனது பெயர் எழுதப்பட்ட பட்டியை எனது இடது கணுக்கையில் கட்டி விட்டார்.அதன் பின்பு மனைவியுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன்.

    சுமார் 30 நிமிடங்களின் பின் என்னை உள்ளே அழைத்து ஒரு நர்ஸ் எனக்கு என்ன சிகிச்சை நடைபெறப் போகிறது என்பதை விளக்கி விட்டு இடது கண்ணுக்குள் சில மருந்துத்துளிகளை விட்டுவிட்டுக் காத்திருக்கச் சொன்னார். அதன் பின்னால் டக்டருடனான சம்பாஷணை. கண்களை ஒரு இயந்திரம் கொண்டு பரிசோதித்து விட்டுத் தாம் கூப்பிடும்வரை காத்திருக்கச் சொன்னார். எனக்கு முன்னால் ஒரு எழுபது வயது மதிக்கத்தக்க ஆங்கிலேயரை ஆபரேஷன் தியேட்டர் உள்ளே அழைத்துச் சென்றார்கள். மணியைப் பார்த்துக் கொண்டேன்.அடுக்கடுக்காக அன்றைய சிகிச்சைக்காக மேலும் பலர் வந்து அதே அறையில் நான் சென்ற அதே நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு அங்கே உட்கார்த்தி வைக்கப்பட்டார்கள். சிலர் சக்கர நற்காலிகளிலும் வந்திருந்தார்கள். எனக்கு அருகே உட்கார்ந்திருந்த ஆசிய மனிதரின் கைபேசி ஏதோ ராகத்தில் அவரையழைத்தது. அங்கே அமர்ந்திருந்த தாதி அவர் மீது ஒரு கடினப்பார்வை வீசினார். ஆனால் அவரோ தன்பாட்டுக்கு தன் பாஷையில் கைபேசியில் அரட்டை அடித்தார்.

    சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னால் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட ஆங்கிலேயர் சக்கரநற்காலியில் உட்கார்த்தி அழைத்து வரப்பட்டார். அவரது இடது கண் மூடிக்கட்டப்பட்டிருந்தது. அனைவரும் அவரது முகத்தைப் பார்த்தார்கள் அவர் அனைவரையும் பார்த்துப் புன்னகைத்தார். அனைவரும் பெருமூச்சு விட்டார்கள். ஆசிய மனிதர் அந்த ஆங்கிலேயரிடம் ஆபரேஷன் நடக்குப்போது எப்படி இருந்தது? வலித்ததா? என்றெல்லாம் கேட்டார். இல்லை எதுவுமே தெரியவில்லை என்றார் அந்த ஆங்கிலேயர். மீண்டும் அதே ராகத்தில் கைபேசி பாடியதும் இப்போது தாதி மட்டுமல்ல அனைவரும் ஆசிய மனிதரை நோக்கி ஓர் கடினப்பார்வையை வீசினர். புரிந்து கொண்ட ஆசிய மனிதர் கைபேசியை மூடிப் பைகளில் திணித்துக் கொண்டார்.

    நான் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டேன்.  மனைவியிடம் சொல்லிக் கொண்டு பலிக்குச் செல்லும் ஆட்டுக்கடா போலச் சென்றேன். ஆபரேஷன் அறைக்குள் முதலில் விறைப்பு மருந்து விடும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். நான் உட்கார்ந்திருந்த நாற்காலியே ஒரு கட்டிலைப் போல விரிந்தது. இரண்டு ஆசியப் பெண் டாக்டர்கள் நின்றார்கள். இருவரும் எனது பெயர் , பிறந்த திகதி ஆகியவற்றை என்னிடம் கேட்டுச் சரிபார்த்த பின்னால் அவர்களில் ஒருவர் என் கண்களில் இரண்டு மூன்று சொட்டுத் துளிகளாய் மருந்திட்டார். எனது கண் உணர்வுகள் மரத்துப் போகும் வரை அவர்கள் தமக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். தாமிருவரும் எப்போது இந்தியாவுக்கு விடுமுறையில் போகப்போகிறார்கள் என்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். என் கண் உணர்வுகள் மரத்துப் போனதும் ஒரு ஊசி மூலம் மேலும் மருத்தை எனது விழிகளுக்குள் செலுத்தியது போலிருந்தது ஆனால் ஒருவிதமான உணர்வும் இருக்கவில்லை.

    அப்படியே அடுத்த அறையினுள் தள்ளிச் செல்லப்பட்டு மற்றொரு பெண்வைத்தியரிடம் கையளிக்கப்பட்டேன். பின்னணியில் ஆங்கில மென்மையான இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்படும் கண்ணுக்கு மட்டும் இடைவெளி விட்டு விட்டு ஒரு முகத்தை மறைக்கும் துணி விரிக்கப்பட்டது. இரு கூரிய வெளிச்சம் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. தான் இப்போது கண்புரையை அகற்றி விட்டுச் செயற்கை லென்ஸ் பொருத்தப் போவதாகக் கூறிய பெண் வைத்தியர் சிகிச்சையில் ஈடுபட்டார். சுமார் நாற்பது நிமிடங்களில் அனைத்தும் முடிந்தது. சிகிச்சை முடிந்த கண் மட்டும் கட்டப்பட்டு நான் வெளியே அழைத்து வரப்பட்டேன். அழைத்து வந்த நர்ஸ் மிகவும் அன்பாக என் மனைவியை அழைத்து என் அருகில் அமர்த்தி விட்டு தேநீர், பிஸ்கட் ஆகியவற்றைக் கையளித்தார். எனது நிலையை அக்கறையோடு என் மனைவி விசாரித்தார். சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னால் மீண்டும் நர்ஸ் எனது இரத்த அழுத்தம், குளுக்கோஸ் ஆகியவற்றை அளந்து குறித்துக் கொண்டார். எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கித் தேவையான மருந்துகளைத் தந்து விட்டு அடுத்தநாள் காலை கண்கட்டுகளை அவிழ்க்கலாம் , கண்பார்வையில் பிரச்சனை இருந்தால் மட்டும் மீண்டும் வைத்தியசாலைக்கு வரும்படி கூறி வீட்டுக்கு அனுப்பினார்கள்.

    அடுத்தநாள் காலை எனது மனைவி தெரிந்த இறைவனின் பெயர்களையெல்லாம் அழைத்துத் துதித்த பின்னால் நம்பிக்கையோடு என் கண்கட்டை அவிழ்த்தேன். அப்பப்பா! இப்படிக்கூட அழகாகப் பார்க்கலாமா? எனும் அளவுக்கு எனது கண்பார்வை திரும்பியிருந்தது. ஆமாம் நண்பர்களே நாம் இழக்கும் வரை ஒன்றினதும் அருமை எமக்குப் புரிவதில்லை அது எமது உடல் உறுப்புக்களாக இருந்தால் கூட . . . கடந்தவாரம் எனது மடல் தவறிய காரணம் இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் இல்லையா?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • நேற்றைய நாளுக்கு ஏக்கம்!

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    ++++++++++++++

    jaya

     

    நேற்று எனது
    தொல்லைகள் எல்லாம் தெரிந்தன,
    வெகு வெகு
    தூரத்தில் இருப்பதாய்!
    இப்போது அவை எல்லாம்
    நிலைக்கப் போவதாய்
    கலக்கு தென்னை!
    நேற்றைய தினத்தை நம்பிக்
    கிடந்தேன்!

    திடீரென முன்பு இருந்ததில்
    அரை மனிதனாய்க் கூட நானில்லை!
    ஒரு கரிய நிழல் என்மீது
    படர்ந்துளது!

    அந்தோ!  திடீரென
    நேற்றைய தினம் வந்தது என் முன்னால்!
    ஏனவள் போக வேண்டுமென
    நானறியேன்! ஏன்
    அவளிங்கு தங்க வில்லை!
    தவறாய் ஏதும் சொல்லி விட்டேனா?
    இப்போது நான் ஏங்கித் தவிப்பது
    நேற்றைய தினத்துக்கு!

    காதல் விளையாட் டெனக்கு எத்தனை
    எத்தனை எளிதாய் இருந்தது,
    நேற்றைய தினத்தில்
    இப்போது நான் ஒளிந்து கொள்ள
    இடம் ஒன்று தேவை!
    அந்தோ!
    நேற்றைய தினத்தை நான்
    நம்பினேனே!

     

     

    Share
  • புத்தக வாசிப்பு – சில புரிதல்கள்

    -முனைவர். வே.மணிகண்டன்

    “உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனப் பயிற்சி புத்தக வாசிப்பு” – சிக்மண்ட் பிராய்டு.

    புத்தகம் = புதுமை + அகம், மனிதனுக்குப் புதிய சிந்தனைகளைத் தரும் வல்லமை படைத்தவை புத்தகங்களாகும். இவை, மனிதனின் அறிவுத்திறன் மற்றும் அனுபவத்தினை மேம்படுத்தக் கூடியவை. ஒவ்வொரு புத்தகமும் மனிதனுக்கு ஏதேனும் ஒரு கருத்தினையாவது அவன் மனத்தில் விதைப்பவை. புத்தக வாசிப்பு  என்பது  நுட்பமான கலை. வாசிப்பிற்கு ஏற்ற புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் முறையானது வாசகனின் மனம் சார்ந்ததாகும். பெரும்பாலும் வாசகனுக்கு ஆர்வம் மிகுந்துள்ள துறைசார்ந்த புத்தகங்களையே தேர்ந்தெடுத்துப் படிப்பான். வாசிப்புத் திறனானது வாசகனுக்கு வாசகன் மாறுபடும். ஒரு புத்தகத்தினைப் பற்றி பலவிதமான வேற்றுமை உடைய புரிதல்களை வாசகர்கள் கொண்டுள்ளனர். சில புத்தகங்கள் மனிதர்களால் போற்றப்படுகின்றன. சில புத்தகங்கள் மனிதர்களின் மனத்தில் தங்குவதில்லை. சில புத்தகங்கள் காலத்தை வென்று அனைவரின் நன்மதிப்பையும் பெற்று இவ்வுலகில் நிரந்தரமாக நிலைத்துள்ளன. சில புத்தகங்கள் படித்தவுடன் பொருள் தருவதில்லை. சில புத்தகங்கள் பொருள்தரினும் மனத்தில் நிற்பதில்லை.

    புத்தகத்தினை வாசித்தல் என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. வாசிப்பதற்கு இப்படித்தான் வாசிக்க வேண்டும். இவ்வாறு வாசித்தல் எளிது. இப்படி வாசிப்பது மட்டுமே புரியும் என விவரிப்பதால் அல்லது அறிவுரைகள் கூறுவதால் நல்ல வாசகனை ஒருநாளும் நம்மால் உருவாக்கிவிட இயலாது.

    புத்தகம் சொற்பொருள் விளக்கம்

    புத்தகம் என்னும் சொல்லிற்கு “புத்தகம் (book) என்பது எண்ணப் பதிவாகிய கருத்துகளை எழுத்து உருவில் காட்டும் ஒரு கருவி. இக்காலத்தில் அச்சிட்ட புத்தகங்களை உணர்த்த இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. காகிதம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் நூல் பனையோலையில் எழுதப்பட்ட பதிவாக இருந்தது. எழுதப்பட்ட பனையோலைகளைப் துளையிட்டு நூல்கயிற்றில் கோத்து வைத்தனர். பொத்துக் கோத்து வைத்த சுவடிகளைப் பொத்தகம் என்றனர். நாளடைவில் பொத்தகம் என்னும் சொல் புத்தகம் என மருவி வழங்கப்படுகிறது”1 கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா பொருள் தருகின்றது. பொத்தகம் என்னும் சொல்தான் புத்தகமாக மாற்றம் அடைந்துள்ளது. பொத்தகம் என்னும் சொல்லிற்கு பொதுவான செய்திகளை  அகத்தில் கொண்டிருப்பது அல்லது அகத்துள் சேர்க்க  உதவுவது என்று பொருள் கொள்ளலாம்.

    வாசிப்பதற்கான புத்தகத்தினைத் தேர்ந்தெடுக்கும் முறைகள்:

    1. மனத்திற்கு மகிழ்ச்சி அளிக்க கூடியவை
    2. ஆர்வத்தினை வளர்ப்பவை
    3. துறைசார்ந்த அறிவினை விரிவுபடுத்துபவை
    4. புதுமையான செய்திகளைத் தருபவை
    5. வாசகன் சார்ந்த படைப்பாளுமை வளர்க்க உதவுபவை
    6. திறனாய்வு அறிவினை மேம்படுத்துபவை
    7. பிறதுறை சார்ந்த வியப்பினை அளிப்பவை
    8. பொதுவானவை

    புத்தகம் வாசிக்கும் திறம்:

    புத்தகவாசிப்பு என்பது நடுநிலைத்தன்மையுடையதாக இருத்தல் வேண்டும். ஒரு புத்தகத்தினைப் பற்றிய எதிர்மறை கருத்துக்களை நண்பர்கள் அல்லது சமூக ஊடகங்களின் வாயிலாக அறிந்துகொண்டு பிறகு அப்புத்தகத்தினை வாசிப்பதில் எவ்வித பயனும் இல்லை. ஆகையால், புத்தகத்தினை பற்றிய எதிர்மறை கருத்துக்களை எல்லாம் மனத்திலிருந்து தூக்கி எறிந்துவிட வேண்டும்.

    ஓர் எழுத்தாளரின் செல்வாக்கினை மனத்தில் நிறுத்திக்கொண்டு புத்தகத்தினைப் படித்தல் கூடாது. புத்தகத்தில் வரையறுக்கப்பட்ட காலத்தினை மனத்தில் நிறுத்திக்கொண்டு புத்தகத்தினைப் படித்தல் வேண்டும். புத்தகத்தின் ஆசிரியரின் மீதுள்ள வெறுப்பு மற்றும் நம்பகத்தன்மையற்ற நிலையினை மனத்தில் கொண்டு புத்தகத்தினை வாசிக்க கூடாது. மொழிபெயர்ப்பு நூல்களைப் படிக்கும்பொழுது மூலநூல் படைக்கப்பட்ட நாட்டின் காலசாரம், பண்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சடங்கு முறைகள், காலநிலை, சூழல்கள் ஆகியவற்றை அறிந்துகொண்டு படிப்பது சிறப்பான புரிதலைத் தரும். புத்தக வாசிப்பிற்குத் தகுந்த சூழலை, நேரத்தை வாசகன் ஏற்படுத்திக்கொள்ளுதல் அவசியமானதாகும்

    புத்தக வாசிப்பில் புரிதல்அற்ற நிலைக்குக் காரணங்கள்:

    புத்தகவாசிப்பு நிலையில் முதன்மையானதாகக் கருதப்படுவது உணர்ந்து வாசிப்பதாகும். புத்தகத்தினை உணர்ந்து வாசிக்கும் நிலையில் வாசகனின் மனம் இல்லாத நிலையினால் புரிதல்அற்ற தன்மை பிறக்கின்றது.

    “புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே புத்தக வாசிப்பின் பெரிய சவால். ஒரு புத்தகம் புரிந்து கொள்ளப்படாமல் போவதற்குப் புத்தகம் மட்டுமே காரணமாக இருந்துவிடாது. வாசிப்பவனுக்கும் சமபங்கிருக்கிறது. அர்த்தம் புரியாமல் போவது வேறு. எதற்காக எழுதப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளாமல் போவது வேறு. ஒன்று அதன் மொழி மற்றும் வாக்கிய அமைப்புகள் காரணமாக அது புரியாமல் போயிருக்க கூடும். எந்தப் பொருள் பற்றி பேசுகிறதோ அது நமக்குப் பரிச்சயமற்றிருக்ககூடும். அல்லது அது ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய பயற்சி தேவைப்பட்டதாக இருக்ககூடும்”2.

    புத்தக வாசிப்பில் புரிதல்அற்ற நிலையினை வாசகன் அடைவதற்கு அப்புத்தகத்தினைப் படிப்பதற்கு ஏற்ற அனுபவத்தினை பெறாது இருத்தல். புத்தகம் படைக்கப்பட்ட காலம், புத்தகத்தில் இடம்பெற்றுள்ள காலசாரம், பண்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சடங்கு முறைகள், காலநிலை, சூழல்கள் ஆகியவற்றை வாசகன் அறியாதிருத்தல். புத்தக வாசிப்பிற்கு ஏற்ற சூழல் இல்லாத நிலையில் வாசகன் இருத்தல்.

    புத்தக வாசிப்பின் பயன்கள்

    1. மனம் தெளிவு பெறும்
    2. எழுத்துப் பிழைகள் நீங்கும்
    3. புதிய செய்திகளை அறிதல்
    4. வரலாற்றை த் தெரிந்து கொள்ளுதல்
    5. விவாதத்திறனை மேம்படுத்தும்.
    6. சிந்தனையை மேம்படுத்தும்
    7. பகுத்தறிவை வளர்க்கும்
    8. மொழிப்பற்றினை வளர்க்கும்
    9. படைப்பாளுமையின் மீது ஆர்வத்தினை ஏற்படுத்தும்
    10. தன்னம்பிக்கையை அதிகரிக்கும்

    முடிவுரை:

    புத்தக வாசிப்புப் பழக்கத்தினை நாம் தினசரி வாழ்க்கையின் நிகழ்வுகளில் ஒன்றாகக் கொள்ளுதல் வேண்டும். புத்தகங்களின்மீது அதீத ஆர்வத்தினை வளர்த்துக் கொள்வதால் நாம் புதிய சிந்தனைகளைப் பெறலாம் புத்தகங்களை நாம் கண்ணில்படும் இடங்களிலேயே வைத்திருத்தல் புத்தகங்களின்மீது நமக்கு ஈடுபாட்டை ஏற்படுத்த உதவும். நல்ல புத்தகங்கள் நல்ல மனிதர்களை உருவாக்கும். நல்ல மனிதர்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்குவார்கள் என்பது உண்மை.

    ஓர் எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான். வாசகன் அதை முடித்துவைக்கிறான். – சாமுவேல் சான்சன்.

    அடிக்குறிப்புகள்:

    1. https://ta.wikipedia.org
    2. http://www.sramakrishnan.com/?p=1542

    *****************

    கட்டுரையாளர்
    உதவிப்பேராசிரியர்,
    தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி(தன்னாட்சி),
    விழுப்புரம்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_4190

    ”பராக்பராக் கண்ணன் பரந்தாமன் மன்னன்
    பராக்பராக் கேசவ் பிரஷ்ஷில் -பராக்கெங்கும்
    இன்னாரென்று பாராதே எங்கும் இருக்கின்றான்
    மன்னார் குடிமைனர் மால்”….கிரேசி மோகன்….!

    Share
  • கொடுமணல் அகழாய்வில் சூதுபவளம்!

    பவள சங்கரி

    kodumanal 5

    இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு அகழாய்வுகளில் உலகளவில் சிறப்புப் பெற்ற மிக முக்கியமான அகழாய்வாக கொடுமணல் அகழாய்வு கருதப்படுகிறது. கல்வெட்டறிஞர் , புலவர்,பேராசிரியர் செ.இராசு அவர்கள் முதன் முதலில் ‘நொய்யல் ஆற்று நாகரிகம்’ என்று குறிப்பிட்டு வெளியிட்ட ஆய்வறிக்கை மூலமாக பிரபலமானது. மெருகூட்டப்பட்ட 8000 கண்ணாடி மணிகள் ஒரு கல்லறையில் கிடைத்த தகவல், 1985 முதல் 1991 வரை பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள் தலைமையில் நான்கு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. கொடுமணல், கொங்கு நாட்டின் ஈரோடு மாவட்டத்தில், பெருந்துறை வட்டத்தில் நொய்யல் ஆற்றின் வடகரையில், சென்னிமலையிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சங்ககாலத் தமிழ் மக்கள் பல்வேறு தொழில்நுட்பங்களில் மேன்மை பெற்றவர்களாக இருந்தனர் எனவும், அதன் மூலம் வளர்ச்சி பெற்று, பன்னாட்டு வணிகத்திலும், ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் மிக உன்னத நிலையை அடைந்திருந்தனர் எனவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ என்ற தனது நூலில், பக்: 79 முதல் 130வரை 52 பக்கங்களில் விரிவாகக் கூறியுள்ளார் முனைவர் கா.இராசன் அவர்கள்.

    கொடுமணல் பகுதியில் பச்சைக்கல், நீலக்கல், பளிங்கு, சூதுபவளம், சேசுபர், அகேட், குருந்தம், வைடூரியம், லாபியஸ் லசுலி (Lapius Lajuli), மாவுக்கல் முதலிய அரிய கற்களைக் கொண்டு மணிகள் செய்யும் தொழில் சிறப்பாக நடந்து வந்துள்ளது எனவும், மேற்கூறியவற்றில் வைடூரியம், சூதுபவளம், அகேட் போன்றவை மூலப் பொருட்களாக இந்தியாவின் பிற பகுதியிலிருந்து தருவிக்கப்பட்டு இங்கு ஆபரணங்களாக உருவாக்கப் பட்டுள்ளன எனவும் (பக்.122) மயிரிழை அளவு துளைகள் கொண்ட மணிகள் கொடுமணலில் கிடைப்பதால், தமிழர்கள் தொழில்நுட்பம் அறிந்தவர்களாக இருந்துள்ளனர் எனவும், இத்தொழில் சங்க காலத்தில் சிறப்புற்று விளங்கியதோடு, அதிக அளவு அந்நியச் செலவாணியை தமிழகத்திற்கு ஈட்டித் தந்துள்ளது எனவும்(பக்.124) அறியமுடிகிறது என்கிறார் முனைவர் இராசன் அவர்கள். அதோடு இரும்புக் கருவிகளான கத்தி, வாள், ஈட்டி, கேடயம், அங்கவடி (horse – stirrups) போன்றவைகளும் அதிக அளவில் கிடைத்துள்ளன. அக்கால வணிகத்தில் குதிரை முக்கியத்துவம் பெற்றிருந்ததை குதிரையின் அங்கவடி கிடைத்துள்ளதால் அறியமுடிகிறது. மத்திய தரைக்கடல் பகுதிகளிலிருந்து கடல்வழியாக குதிரைகள் ஏராளமாக தமிழகம் வந்திறங்கியதைப் பட்டினப்பாலை (185) குறிப்பிடுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும். இன்றளவிலும் ஈரோடு அந்தியூர் பகுதியில் குதிரைச் சந்தை மிகச்சிறப்பாக உலகளவில் வணிகம் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

    “கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
    பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம்”

    என்னும் பதிற்றுப்பத்து (74:5-6) சங்கப்பாடல் மூலமாக இதன் சிறப்பை அறியமுடிகிறது. சங்ககாலத்தில் கொடுமணம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் இன்று கொடுமணல் என வழங்கி வருகிறது. யவனர் என இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கிரேக்கம், ரோம், எகிப்து நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்த கொடுமணலுக்கு வந்து சென்றுள்ளனர்.

    கொடுமணல் அக்காலத்தில் ஒரு பெரிய தொழில் நகரமாக இருந்திருக்கிறது என்பதையும் இது புலப்படுத்துகிறது. இ.எச்.வார்மிங்டன் (E.H. warmington) தமது The commerce between the Roman Empire and India, (1948) என்ற நூலில், ரோமானியர் அக்காலத்தில் மிக விரும்பி பயன்படுத்திய அரிய கல் வகைகள் என்று குறிப்பிட்டுள்ளவைகள் கொடுமணலில் கிடைத்த மேற்கண்ட கற்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஆய்வுக்குழு தலைவர்,பேராசிரியர் இராசன் தினமலர் இதழ் நேர்காணலில்  கூறியதாவது:

    “கொடுமணல் பகுதியில், விலை உயர்ந்த, சிறந்த தொழில் நுட்பங்களை கொண்ட அணிகலன்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் இருந்துள்ளன. திருப்பூர் – ஈரோடு மாவட்ட எல்லையிலுள்ள கொடுமணல் கிராமம், 2500 ஆண்டுகளுக்குமுன், வணிக பெருநகரமாக விளங்கியதற்கான ஆதாரங்கள், அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்துள்ளன. “சபையர்’ எனப்படும் நீலக்கல், “குவார்ட்ஸ்’ எனப்படும் பளிங்கு கற்கள், “பெரில்’ எனப்படும் வைடூரியங்கள் மற்றும் கல் மணிகளை அறுக்கவும், மெருகூட்டவும் பயன்படும் குறுந்தம் கல் வகைகளும் இங்கு இருந்ததால், இங்கு தொழில் சிறப்பாக இருந்துள்ளது. மேலும், கார்னீலியன், அகேட் ஆகிய மணிகள் தயாரிக்கும் மூலப்பொருட்கள், குஜராத் பகுதியில் இருந்தும், “பிளாக் கேட் ஐ’ எனப்படும் பூனைக்கண் மணிகள் இலங்கையில் இருந்தும், லேபிஸ் லஸ்லி மணிகள், ஆப்கானிஸ்தானில் இருந்தும் வந்துள்ளன. அதோடு, சங்கு அறுத்து, அணிகலன்கள் தயாரித்ததும், துணி உற்பத்தியும் சிறந்து விளங்கியதற்கு சான்றாக உபகரணங்கள் கிடைத்துள்ளன. கார் நீலியன் எனப்படும் சூதுபவள மணிகள், பளிங்கு கற்கள், வைடூரியம், வீடு, தொழிற்கூடங்கள், 218 மணிகள், சங்கு அணிகலன்கள் என நூற்றுக்கணக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 50 ஏக்கர் பரப்பளவுள்ள வாழ்விட பகுதியில், 9 அகழாய்வு குழிகளும், 100 ஏக்கர் பரப்பளவுள்ள ஈமக்காட்டில், நடுகல், வட்ட கல் என 100 ஈமச்சின்னங்கள் உள்ளன. இதில், ஒரு ஈமச்சின்னமும் தோண்டப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் கல் மணி அணிகலன்கள் மற்றும் உலோக அணிகலன்கள், சங்கு அணிகலன்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கியதும், ஒரு குழுவாக வாழ்ந்ததும், பண்டை காலத்திலேயே, உலக அளவில், மதிப்புமிகு பொருட்கள் உற்பத்தி செய்து வணிக தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. ஐந்து கல் தொலைவில் உள்ள கத்தாங்கண்ணியில் கிடைத்த ரோமானிய நாணய குவியலும், வணிக தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன. அறிவியல் சார்ந்த கார்பன் ஆய்வு, அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வு செய்ததில், கொடுமணல் காலம் கி.மு., ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தையது என தெரிந்துள்ளது.கொடுமணல் என்ற நகரம், மிகச்சிறந்த தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழிற்கூடங்களை கொண்ட நகரமாகவும், உள்நாடு, வெளிநாடு வணிக உறவுகளைக் கொண்ட வணிக நகரமாகவும், சமூக, பொருளாதார, எழுத்தறிவு பெற்ற நகரமாகவும் விளங்கியுள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது என்று இராசன் கூறினார்”

    http://www.dinamalar.com/news_detail.asp?id=714866&Print=1

    Share
  • சூரசங்காரம்!

    பவள சங்கரி

    நேற்று பழனி மலை முருகன் தங்க மயில்வாகனனாக அற்புதக்காட்சி!

    IMG_20171025_182559384
    முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்ய 18 ஆண்டுகள் தேவைப்பட்டதா? அவ்வளவு பலம் வாய்ந்தவனா அவன்? இல்லை அவன் திருந்தி நல்வழிப்பட பொறுமையாகக் காத்திருந்து அவன் திருந்தி வாழ வாய்ப்பும் அருளுகிறார் . பொறுமை கடலினும் பெரிது என்பதையும் விளங்கச்செய்கிறார்.

    IMG_20171025_183821147

    IMG_20171025_181904034

    ஆறுமுகனின் திருவிளையாடல்களுள் ஒன்றான சூரசங்காரம் என்பது ஒரு குறியீடு. ஆணவம் எனும் அசுரனை அழித்து நம்மையெல்லாம் ஆற்றுப்படுத்தும்பொருட்டு சக்தி அம்சமாக எழுந்தருளும் முருகப்பெருமானுக்கு திருமுகங்கள் 6, படைவீடுகள் 6, வளர்த்தெடுத்த கார்த்திகைப்பெண்கள் 6 , சரவணபவ எனும் திருமந்திரமும் 6 எழுத்து.

    IMG_20171025_182523646
    மலைக்கோவிலும், திரு ஆவினன்குடி ஆலயமும் மாலை 4 மணிக்கே குமரன் சூரனை வதம் செய்ய கிளம்பியவுடனே நடை சாத்தப்படுகிறது. பின் சூரசங்காரம் முடிந்தபின் ஆலயத்துனுள் எழுந்தருளுகிறார்.

    Share
  • கந்தன் களிப்பு!

     

    கிரேசி மோகன்

    ——————-

    439px-Murugan_by_Raja_Ravi_Varma

    ஒயிலாய் குறத்தி ஒருபக்கம், வேழ
    மயிலாள் மறுபக்கம் மேவ -மயிலம்
    அமர்ந்த முருகா அருள்வாய் எனக்கு
    திமிர்ந்த ஞானத் துணிவு….(1)

    மோனை எதுகையாய் ஆனை குறவள்ளி
    மானை மணந்த மயிலோனே, -சேனை
    தளபதியே ,சூரன் தலைபறித்த சூரா,
    உளமதிலே உட்கார் உவந்து….(2)

    வள்ளி மகளோடு புள்ளி மயிலேறும்
    வெள்ளி மலையோன் விழிமைந்தா -உள்ளிருக்கும்
    ஆன்ம குகனே அகந்தை அழித்தெனக்கு
    வான்வசம் ஆக்கிட வா….(3)

    விடையேறு பாகன் விழிவந்த வேலா
    படையேறி வாழ்கின்ற பிள்ளாய் -கடையோரம்
    வைத்தேன் கவியெழுதி விற்றுன் அனுபூதி
    துய்த்தேன் தமிழ்வணிகத் தில்….(4)

    உடைந்தாலும் கண்ணாடி உள்ளதைக் காட்டும்
    குடைந்தாலும் கற்பாறை கோயிலாகும் -அடைந்தாலும்
    ஆறு கடலைத்தான் சேறும் அதுபோல
    ஏறு மயிலோன்கண் ஏகு….(5)

    பாம்பன் ஸ்வாமிகள் கோயில்….
    —————————————-
    உப்பு மிளகிட்டு சுப்பனின் சன்னிதியில்
    தப்புத்தப்(பு) என்றுகன்னத் தாளமிட்டு -அப்புறம்
    பாம்பன் சுவாமிகள் பாதம் பணிந்தளிக்கும்
    சாம்பலை நெற்றியில் சூடு….(6)….கிரேசி மோகன்….!

    பாம்பணைப் பள்ளிப் பெருமாள் மருகோனைத்
    தாம்புனைந்தார் சந்தத் தமிழ்கொண்டு -பாம்பன்
    குமர குருதாசர் கூறு கவசம்
    அமரநிலை சேர்க்கும் அமுது….(7)

    சாம்பவி புத்திரனே சம்பு புதல்வனே
    மாம்பழ வாயன் மருகோனே -பாம்பன்
    அடிகள் அழைக்க அழகுமயில் ஏறி
    சடுதியில் வந்தோய் சரண்….(8)

    தந்தைக்கு மிக்கதோர் மந்திரம் கூறிய
    எந்தையே ஏரகக் கந்தனே -முந்தைப்
    பழவினைகள் போக்கி புதுவினைக்கு ஞானக்
    கிழவனாய் வந்தெனையாட் கொள்….(9)

    ஆறு முகம்கொண்டோய் ஆறு படைநின்றோய்
    கோறும் அடியார் குறைதீர்க்கும் -மாறுபடு
    சூரனைக் கொன்ற சுரமகள் கேள்வனே
    பாரெனைத் தாயாய் பரிந்து….(10)

    கந்தா குஹாகடம்பா கார்த்திகே யாவென்று
    உன்தாள் பணிந்து உவப்புடன் -அந்தாள்
    அருணகிரி போலே வருணகவி பாட
    தருணமிது தாராய் தமிழ்….(11)

    அண்ணா மலைதீபம், உண்ணா முலையுந்தி
    விண்ணாளும் தேவர்தம் வெற்றி -எந்நாளும்
    காப்பதற்குக் கையில் கதிர்வேல் கொண்டவனாம்
    தீப்பொறி தோற்றத்தைத் தொழு….(12)….கிரேசி மோகன்….!

     

     

    தை பூசத்தன்று எழுதியது….
    ———————————–
    மைபூசும் மாதர்வாய் பொய்பேசப் புல்லரித்து
    கைகூசும் காலம் கலவிடுவாய் -தைபூச
    நன்நாளின் தெய்வத்தை நெஞ்சில் நிறுத்திடுவீர்
    பண்ணாத பாவமும் பாழ்….(13)
    அறுபடையோன் புகழ்….
    ——————————————
    திருவேரகம்(சுவாமி மலை)….
    ————————————-
    குந்திக்கால் மண்டியிட்டு கூப்பியக் கைகொண்ட
    தந்தைக்கு சொன்ன தனயனை -சிந்தைக்குள்
    வேராக ஊன்றி விருட்ஷமாய் நட்டிடு
    ஏரகச் செல்வனை ஏத்து….(14)
    பழமுதிர்சோலை
    ——————–
    கூப்பாடு போட்டவுடன் கும்பல் கூடிடும்
    தோப்பாய் இருந்து தனிமரமாய் -மூப்பால்
    கிழமுதிரும் போதேனும் கந்தன்கை கோர்க்க
    பழமுதிர் சோலைக்குள் புகு….(15)
    திருத்தணி
    ————–
    விருத்தனாய் வந்து குறத்தியைக் கூடி
    திருத்தணி மேவும் தலைவா -மருத்துவன்
    வைதீஸ் வரன்பெற்ற வேலா யுதாவாழ்வில்
    பொய்தீசல் சேராது போக்கு….(16)
    திருச்செந்தூர்
    ——————-
    மாறுபடு சூரனுடல் வேறுபட வேலெய்து
    கூறுபட வைத்த குருநாதா -சீறுகடல்
    செந்தூரில் பத்தினிகள் சேர வளர்ந்திடும்
    சிந்தூர வண்ணனைச் சேர்….(17)
    பழனி
    ——–
    மாம்பழம் தந்தை மறுத்ததால் கோபித்து
    தீம்பிழம் பாகி தவக்கோலம் -நாம்பழனி
    குன்றினில் கண்டு களித்திட காட்சிதரும்
    நின்றிடும் ஆண்டி நமக்கு….(18)
    திருப்பரங்குன்றம்
    ———————–
    குரங்கென்ற நெஞ்சோடு கூடிக் குலாவி
    தரங்குன்றி தாழ்ந்தோம், தவித்தோம் -பரங்குன்றில்
    தெய்வானை கைப்பிடித்த தேவ சகாயனை
    கைவாய்மெய் கொண்டு கருது….(19)….கிரேசி மோகன்….!
    சுரமகள் அத்தி குறமகள் வள்ளி
    இருபுறம் சுத்தி இழைய -அறுபடை
    வீட்டில் வசித்திடும் வேலா மயிலேறி
    பாட்டில் வருவாய் பறந்து….(20)
    கண்ணனுன் காதலன் கந்தனுன் காவலன்
    எண்ணனும் நெஞ்சேநீ எந்நாளும் -முன்னவன்
    மாலனும் பின்வந்த வேலனும் நம்வாழ்வில்
    காலமும் நேரமும் காண்….(21)
    மயிலவர்க்கு கொண்டை மயிலிவர்க்கு அண்டை
    சயிலம் இருவர்க்கும் ஜாகை -துயிலிருப்பார்
    வேலையில் மாலவன் வேலனோ தீயோர்மேல்
    வேலை விடக்கண் விழிப்பு….(22)
    சரவணா கேளாய் ஒருவினா ஞானம்
    பெறவொணா வண்ணமேன் பெற்றாய் -குருவெனால்
    சீடன் தவித்திருக்க சும்மா இருப்பதோ
    பாடமனு பூதி புகட்டு….(23)
    கரம்தாங்கும் வேலும் புறம்தாங்கும் நீல
    நிறம்தாங்கும் வண்ணமயில் நோக்கும் -அறம்தாங்கும்
    ஆறு முகமும் அணிசேவல் கொக்கரிப்பும்
    கூறு தமிழ்மொழியும் காப்பு….(24)
    சிலம்பும் சிலம்பணி செவ்வேள் கழலும்
    புலம்பும்புள் சேவலும் போகக் -கிளம்பத்
    தயாராக நிற்கும் தணிகைவேல் நீல
    மயூரமும் எண்ண முருகு….(25)….கிரேசி மோகன்….!

    மலையளவு குற்றமும் மங்கிடும், பொங்கும்
    அலையுலவு செந்தூர் அழகன் -சிலையுருவை
    எண்ணித் துதிப்போர்க்கு ஏத்திப் புகழ்வோர்க்கு
    நுண்ணிய நூலாய் நலிந்து….(26)

    கதிராய் வெளிப்பட்டு கார்த்திகை மாதர்
    உதிர முலைப்பாலை உண்டு -அதிரும்
    அயில்வேலை அன்னை அளித்திட வாங்கும்
    துயில்வோன் மருகன் துணை….(27)

    சொந்தம் எனக்குநீ பந்தம் எனக்குநீ
    தந்தை எனக்குநீ தாயாராய் -வந்தருள்
    பாலிக்க வேண்டும் பராசக்தி பாலனே
    காளிக்கை வேலனே காப்பு….(28)

    எண்ஜாண் உடம்புக்கும் ஏகாக்ர சிந்தைக்கும்
    பஞ்சா மிருதமும், பண்ணிரெண்டு -கண்ஜாடைக்
    காதலும் போதுமே, ஆதலால் கந்தனின்
    மீதுலாவு நெஞ்சே முனைந்து….(29)

    சந்தமிகு செந்தமிழில் கந்தரனு பூதியை
    தந்த அருணகிரி தான்போலே -உந்தன்
    திருப்பதிகள் சென்று திருப்புகழ் பாடும்
    விருப்பதை நேர்நிறை வேற்று….(30)

    அய்யோ எனக்கிளை குய்யோ முறையிடாது
    அய்யோ மணாளர் அணுகும்முன் -மெய்யோடும்,
    தேகான்ம பாவத்தை தாண்டி நிலைபெற,
    வாகா னவழிசொல்ல வா….(31)….கிரேசி மோகன்….!

    புரியும் தொழிலெனக்கு பொல்லாத சூரன்
    சரியும் படிவேல் செலுத்தும் -அரியின்
    சகோதரி மைந்தனின், சங்கரன் சேயின்
    மகோதரன் தம்பியின்த மிழ்….(32)

    முதற்பொருளை ஈசன் நுதற்பொருளை வள்ளிக்(கு)
    இதப்பொருளை சந்த இசைக்குப் -பதப்பொருளை
    மாறா ஸ்திதப்பொருளை மாரன் கதைப்பொருளை
    வீரம் விதைப்பொருளை வாழ்த்து….(33)

    பொய்பேசா வாக்கும் புறங்கூறா வார்த்தையும்
    கைகூசா காரியமும் கொள்வோர்கள் -தைபூசத்
    தானருளால் நற்கதியும் தேயா துருவனைப்போல்
    வானுருளும் மீனாகு வர்….(34)

    உதித்ததது தீயாய் உருமாற்றம் சேயாய்
    பதித்ததது பொய்கையில் பாதம் -துதித்த
    நதித்தலை ஈசர்க்(கு) உதிர்த்ததது ஓமை
    விதித்ததை மாற்றுமது வேல்….(35)

    வம்பை விலைகொடுத்து சம்பு விடம்வாங்கி
    தெம்பிழந்து மன்மதன் தீய்ந்ததோர் -சம்பவத்தில்
    திண்டாடும் தேவர்க்காய் உண்டான பிள்ளையை
    கொண்டாடக் கைகளைக் கூப்பு….(36)

    மனத்துள்ளான் பூச தினத்துள்ளான் வள்ளி
    வனத்துள்ளான் சூரன்மேல் வைத்த -சினத்துள்ளான்
    அண்ட கனத்துள்ளான் ஆதி கணத்துள்ளான்
    விண்ட ஷணத்துள்ளான் வேல்….(37)….கிரேசி மோகன்….!

    ஆனைக்(கு) இளையானை ஆனைக் களியானை
    ஆணை அமரர்க்(கு) அளிக்கின்ற -ஆணை
    வணங்கி எழுவானை வள்ளிகல் யாணம்
    இணங்கிய யானை அணைப்பு….(38)

    அய்யம் தகளியா ஐந்துபுலன் நெய்யாக
    பொய்யாம் விளக்கேற்றப் போந்தேனே -அய்யா
    விளக்குமாறு என்னை விலக்கிடாது உன்னை
    விளக்குமாறு வெண்பாவில் வா….(39)

    சுட்ட பழமா! சுடாத பழமாவென்(று)
    இட்டனை அவ்வைக்(கு) இடையூறு -கொட்டினை
    நாவல் பழத்தை நமுட்டு விஷமமாய்
    சேவல் கொடியோய் சிரித்து….(40)

    வீசும்வெண் சாமரம் பேசும் தமிழுனக்கு
    ஆசு கவியாகி ஆறுதிவ்ய -தேசமும்
    கூடி அருண கிரியாகி சந்தத்தில்
    பாடிக் களிக்கலாம் போது….(41)

    வயதுமிக சேர்ந்தும், வயோதிகம் நேர்ந்தும்
    தயவை எதிர்பார்த்து தாழ்ந்தும் -அயர்வில்
    கரணங்கள் ஓய்ந்தும் கலங்காது கந்தன்
    சரணங்கள் பற்ற செழிப்பு….(42)

    பசித்தால் உணவு, படுத்தால் கனவு
    நசித்தால் நமனார் நினைவு -அசத்தே!
    இதற்குமேல் ஒன்றுண்டு இன்னதென்றால் ஆதி
    முதற்கதன்பேர் ஆறு முகம்….(43)….கிரேசி மோகன்….!

    மண்டை தகளியா மானசீக நெய்யூற்றி
    குண்டலினி ஜோதி கொளுத்திட -தண்டை
    செறிகழல் சந்தம் செவிகளில் கேட்க
    விரிகுழல் வள்ளியுடன் வா….(44)

    கோபுரமீ தேறி குதித்த அருணகிரி
    தாபஜுரம் தீர்த்து தடுத்தாண்டு -நாபுறத்தில்
    முத்தென வேலின் முனையால் எடுத்தளித்தோய்
    புத்தென்னுள் பாம்பாய் புகு….(45)

    பாலூட்டும் அன்னையிடம் வேலூட்டம் பெற்றதனால்
    மாலாட்டும் பீலி மயிலேறி -தேளாட்டம்
    கொட்டுகின்ற சூரனை கூறாய் வகிர்ந்திட
    விட்டகலும் தாய்ப்பாலை வேல்….(46)

    குகையாம் மனதில் குடியேறி கந்தா
    புகைஐம் புலனை பொசுக்கு -பகையாம்
    எனைப்போய் விரட்டி எனக்கு பதிலாய்
    உனைப்போல் குடித்தனமாய் உய்….(47)

    வெந்த உளப்புண்ணில் வேலினைப் பாய்ச்சிமா
    சந்தத் தமிழ்மலையாய் செப்பனிடு -கந்தன்
    கடம்பன் குகனென்று காலமெல்லாம் கூவ
    உடம்பை ஒயில்மயிலாய் ஓட்டு….(48)

    சாத்திரம் கற்றும் சதுர்வேதம் ஓதியும்
    தூர்த்தெரி காட்டில் துடைத்தெறிவர் -நேத்திரம்
    தன்வழி சேயை துதிப்போர்கள் இப்பிறவிப்
    புண்வழிபோய் வாரார் பிறந்து….(49)

    காவலுக்கு வேலுமறை கூவலுக்கு சேவலும்
    தாவலுக்கு வண்ணமயில் தோகையும் -ஆவலுக்கு
    வள்ளியும் சீவலுக்கு வீரமும், கேவலம்நான்
    எள்ளி நகையாட ஏன்….(50)

    ஈசான்ய மூளை இருந்து புறப்பட்டு
    தீசார்ந்த சேயை, தினைப்புன -பூசாய்ந்த
    மார்பனை தேவர்கள் சார்பனை பாவலர்கை
    நூற்பனை நுண்பொருளை நண்ணு….(51)

    உடலே சதமென்(று) உனைநான் மறந்து
    திடலாம் கிளர்ச்சியைத் தாண்ட -அடடா
    திடலாடி பள்ளமாய் திடீரென்று ஆச்சே
    கடலாடி கந்தனே காப்பு….(52)

    வேகாத வெய்யிலில் வேகா ததையுண்டு
    வேகாதி வேகத்தில் வேண்டுதலாய் -போகாதே
    கோயில் குளமென்று ! குன்றாடும் கந்தனை
    வாயில் வளர்வெண்பா வாய்….(53)

    முருகா எனச்சொல்லி மூச்சை இழுமால்
    மருகா எனமுடக்கு மூச்சை -குரு!கா
    எனவோதி மூச்சை மனதின்றி விட்டால்
    உனதாயுள் கந்தர்க்(கு) உவமை….(54)

    கரும்பில் சுவையாய் இரும்பில் சுமையாய்
    வெறும்புல் விரிப்பில் வனப்பாய் -துரும்பிலே
    மாயமாய் தூணிலே சீயமாய் வானிலே
    மேயும் ஒளிக்கூட்ட மாய்….(55)….

    தடந்தோள் முதல்வன் தமிழ்த்தாய் புதல்வன்
    மடந்தை இருவர் மணாளன் -விடம்தோய்
    கழுத்தர்க்(கு) உரைத்தான் எழுத்தை குருவாய்
    வழுத்தி வணங்குவோம் வேல்….(56)
    பெண்டாண்டு பொய்பேசி பாழ்மது மாமிசம்
    சண்டாளர் நட்பால் சகித்துண்டு -பண்டாய
    வேதங்கள் போற்றும் பாதம் பணிந்திலேன்
    ஏதம் பொறுத்தருள்வாய் ஏற்பு….(57)
    சொன்னால் வினையழியும் பின்னால் பிறப்பொழியும்
    முன்னால் விலகும் மரணபயம் -முன்னாளில்
    தாரகனை மாய்த்த தணிகையான் நாமத்தை
    கூறகம் பூரிக்கக் கூவு….(58)
    இக்கா சினிக்கிங்(கு) இருப்பொன்றும் இல்லை
    முக்காலே வீசம் முழுமாயை -நிக்காதே
    இன்றே அறுபடை இல்லத்திற்(கு) ஏகிடு
    நன்றே நடக்குமிதை நம்பு….(59)
    அற்பமாய் மாதர் அழகில் மயங்கிநம்
    கற்பினைத் தோற்றோம் கசடறாய் -வெற்பிலே
    பூக்கும் முருகனால் புண்ணியம் தேடுவோம்
    காக்கும் கனகவேல் கை….(60).
    நன்றுலர்ந்து தீது நமைவாட்டும் நேரத்தில்
    அன்றலர்ந்த பூவால் அருச்சிப்பாய் -கன்றலைந்த
    கோகுல மாமனார் கொண்டமாப் பிள்ளையை
    ஆகுலம் தீர்ப்பான் அவன்….(61)….கிரேசி மோகன்….!
    அஞ்சரி யாசனத்தை ஆளத்தேர் மாமனின்
    குஞ்சரிப் பெண்ணின் கரம்பிடித்த -நெஞ்செரி
    கண்டரின் தீநுதற்க் கண்பிறந்த கந்தனை
    கண்டறியும் ஆவலே காப்பு….(62)மாலோலன் பெற்றபின் மண்ணில் தவழவிட்ட
    ஆலோல வள்ளி அகமுடையான் -கோலோடு
    தென்பழனிக் குன்றில் திகம்ப ரனாய்நிற்போன்
    முன்கழுவிக் கொள்மும் மலம்….(63)

    கோதையின் கைப்பிடித்த யாதவத்தாய் மாமனின்
    சோதரி பால்குடித்த சண்முகனை -சூதறி
    யாதபுத்தி யால்தொழுது ஆதரிப்போர்க்(கு) ஆயுளுக்கும்
    வாதபித்த ஜன்னி விலக்கு….(64)

    அரியின் திகிரியை அன்றுண்(டு) உமிழ்ந்த
    கரியின்பின் வந்த குமாரா -சரியை
    கிரியை அறியா கசடன் எனக்கு
    நெறியை நினைவில் நிறுத்து….(65)

    பார்வதி துர்கா பரமேஸ் வரிதந்த
    நேர்கதி செல்லும் நெடுவேலால் -சூர்விதி
    தீர்த்தவனை சேவலாய் தோகையாய் தன்னுடன்
    சேர்த்தவனை செந்தூரில் சேர்….(66)

    ஆனை துரத்திய மானை மருவிய
    மோனை எதுகை மொழிமுருகா -”நானை”
    தனித்துப் பிரித்து திருத்தும் ரமண
    ஜனிப்பே அருணா சலா….(67)….கிரேசி மோகன்….!

     

     ஊசித் துளைக்காதில் ஒட்டகம் போய்வரும்
    யோசித்த குப்பையும் யாப்பாகும் -நேசித்து
    யாசித்து நிற்பான் எதிரியும் கைகட்டி
    பேசிப்பார் கந்தன் புகழ்….(68)
    கணிகையர் கூடி பிணிவினையில் வாடி
    இனிதுயிரை தற்கொலைக்(கு) ஈய -தணிகையான்
    துள்ளிக் குதித்தவனை தாங்கிப் பிடித்துரைத்தான்
    பள்ளித் தலம்சென்று பாடு….(69)
    கந்தர் அலங்காரம் கந்தன் அனுபூதி
    தந்த அருணகிரிக்(கு) ஈடாக -கந்தன்
    களிப்பமைய வேண்டி கைகூப்பு கின்றேன்
    பலித்தலை கால்பாது காப்பு….(70)வேதாள பூதங்கள் பாதாள பாம்புகள்
    தீதாளும் மானுடத் துன்பங்கள் -சேதாரம்
    ஆகிடும் சக்தியின் அன்புமகன் கட்டளைக்கு
    ஏகிடும் வேல்முன் எதிர்ப்பு….(71)

    தந்தை சுமந்தவன் தாயால் வளர்ந்தவன்
    விந்தையச் சேயை வணங்காது -மொந்தையில்
    கள்ளுண்டு மாதரார் காமநெறி கொள்ளாதே
    முள்ளுண்(டு) எறியாய் மலர்….(72)

    கூனல் முதுகோடு காணல் குறையோடு
    தோணல் எதுவுமின்றி தூங்காதே -போநல்
    உபதேசம் தந்தைக்(கு) உரைத்தவெகு ஞான
    மக(ன்)தேசம் சாமி மலைக்கு….(73)….கிரேசி மோகன்….!

     சூடுவாய் கொட்டாய் சுடச்சுட வார்த்தைகள்
    சூடுவாய் பூனையாய் வாடுவாய் -சூடுவாய்
    கந்தர் அலங்காரம் கந்தன் அனுபூதி
    அந்த வெறிவாய்க்(கு) அவல்….(80)
    ஆத்தின்மேல் சோத்தின்மேல் கூத்தியார் கொங்கைமேல்
    பூத்துக் கசங்காதே புல்நெஞ்சே -நூத்தின்மேல்
    பாண்டவர் கொண்ட பகைதீர்த்தோன் பெண்ணுக்காய்
    வேண்டும் மருமகன்மேல் வை….(81)என்னதான் செய்வது ஏரகச் செல்வனே
    முன்னதாம் கர்மம் மயக்குதே -பின்னதாய்
    வந்தயிவ் வெண்பாக்கள் உந்தனருள் ஆகட்டும்
    சொந்த சரக்கென்றால் சோர்வு….(82)

    தாமரையாள் தங்கும் தடந்தோள் மணிமார்பன்
    மாமறைகள் காத்தோன் மருகனே -”யாமிருக்க
    அச்சமேன்” என்றபய ஆறுதல் தந்தவனே
    உச்சரிப்பாய் என்னுள்ளே ஓம்….(83)

    தொட்ட குறைகுறைய விட்ட நிறைபெருக
    பட்ட துயரகல போய்ச்சென்று -கஷ்டமொடு
    அண்டி வருவோர்க்கு வண்டி அருள்குவிக்கும்
    கண்டி கதிர்காமம் காண்….(84)

    கேட்ட தெலாம்கொடுக்கும் கேளா தனகுவிக்கும்
    மாட்டேன் எனச்சொல்லா, மூடுபனி -மூட்டக்
    கயிலை கபாலியும் கற்பகமும் கொஞ்சும்
    மயிலை முருகன் மனம்….(85)….கிரேசி மோகன்….!

    உறிவள வெண்ணை உருகுநெய் பாலை
    திருடுமுள மாமனின் தொண்டாய் -கிரிவலமாய்
    சித்தம் ஒருமித்து செவ்வேள் மருகனின்
    ரத்தி னகிரியைநீ சுத்து….(86)

    விண்வெற்றி கொள்ளவும் வீணரைக் கொல்லவும்
    முன்நெற்றிக் கண்ணுதித்த மூலத்தை -பின்பற்று
    பெண்கண் பொழிகின்ற போகத்தைப் பாராது
    எண்கண் தரிசனத்திற்(கு) ஏங்கு….(87)

    பூண்டியில் ஈசனை பூஜித்த ஈராறால்
    ஆண்டியே என்னை அணைத்தருள -பாண்டவ
    பாஞ்சாலி மானத்தைப் போர்த்திய மாலவனின்
    வாஞ்சை மருகோனே வா….(88)

    பணிக்கூனி யாலன்னை போவென்ற வாக்கை
    அணிந்தா ரண்யம் அடைந்து -கனியை
    இடகிழவி உண்ட இராமன் மருகோன்
    வடபழனி செல்வோம் வா….(89)

    பாலை சரவணப் பொய்கைமார் போட்டிட
    வேலை பராசக்தி வார்த்திட -ஆளாய்
    உருமாறி பக்தர்க்(கு) உதவிடும் அன்புப்
    பெருவா ரிதிக்கில்லை பூட்டு….(90)

    புள்ளி மயிலேறி பக்தர்க்(கு) அருள்வேலை
    ”துள்ளி வருகுதென” தோத்தரித்த -அல்லியூர்
    பாரதிக் கண்ணனின் பாச மருகோனே
    நேரெதிராய் வந்தென்முன் நில்….(91)….கிரேசி மோகன்….!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171024 soulmate a -lr

     

    ’’மேல்கோட்டை செல்ல மகன்(செல்லப் பிள்ளை)தினமும் வள்ளலாய்
    பால்கொட்டும் கன்றைப் பிரதான -ஸோல்மேட்டாய்க்(SOULMATE)
    கொண்டதன் காரணம் , காலை(அதிகாலை) தினமுமேகால்(திருவடி)
    உண்ட பசுவின் உணர்வு’’….கிரேசி மோகன்….!

    Share
  • அளறுபட்ட மகரப்பரவை

    மீனாட்சி பாலகணேஷ்

    Kandapuranam-10

    இன்று கந்தசஷ்டி தினம். முருகப்பிரான், அன்னை பராசக்தி (வேல்நெடுங்கண்ணி) ஆசிர்வதித்து தனக்களித்த கூரிய வடிவேலினால் அரக்கர்களைக் கொன்று தேவர்களைக் காத்தான்.

    குழந்தை குமரன்; அவன் தன் சின்னஞ்சிறு கைகளால் சப்பாணி கொட்டுமாறு அன்னையும் பிறரும் வேண்டுகின்றனர். சப்பாணிப்பருவத்தின் பாடுபொருளாவன குழந்தையின் கைகளே! இங்கு குமரனின் குட்டிக்கரங்கள் எத்துணை அரும்பெரும் செயல்களைச் செய்தன என்பதனைக் காண்போமா? திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழில் காணும் ஒரு சப்பாணிப்பருவப்பாடல்.

    நெய்தல்நிலமாகிய கடற்புறத்தே அமைந்தவூர் திருப்போரூர்; அங்கு மகரமீன்களைக் கொண்ட கடல் சேறாகி விட்டது; (மகரப்பரவை அளறுபட்டது). அரக்கர்களின் மாயை நிறைந்த கிரௌஞ்சமலை பொடியாகி அதிலிருந்து செந்தூள் பொடியாகப் பறக்கின்றது. வயிரம்பாய்ந்த மலைபோன்ற யானைமுகாசுரனின் மார்பு உடைந்துபட்டது. சிங்கமுகாசுரனின் ஆயிரம் வாய்களினின்றும் பெருகிய குருதி கடலைப்போல விளங்கி அலைகளை வீசி எறிகிறது. அண்டகூடம் வரை ஒரு நெடிய மாமரம் உயர்ந்து நிற்கின்றது. சூரபத்மன்தான் இவ்வாறு மாயையால் மரமாகி நிற்கிறான். குமரன்கை வேலால் தாக்கப்பட்டு முறிந்து பிளந்து அலறி விழுகின்றான். அரக்கர்கள் தமது குடியிருப்பான மகேந்திரபுரியிலிருந்து பதறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கிறார்கள்! தேவர்கள் பெருத்த நிம்மதியுடன் தங்களது விண்ணுலகக் குடியிருப்புகளில் திரும்பக் குடியேறுகின்றனராம்.

    samhara-1

    இவ்வாறெல்லாம் நிகழும்படிக்கு முருகன் கையிலெடுத்த வேல் அன்னை அளித்த வேல். அதுஅழகும் பொலிவும் பொருந்தி ஒளிவீசும் நீண்ட இலைபோன்ற தகட்டுவடிவில் அமைந்த கூரிய நீண்ட வேலாகும். அதனைத்தான் முருகன் தன்கையிலெடுத்து நிற்கிறான்.

    ‘மகரப் பரவை யளறுபட

    மாயைத் திறமார் கிரவுஞ்ச

    வயமால் வரைசெந் தூளியெழ

    மதமா முகத்துச் சினத்தவுணன்

    அகலக் குலிச வரைதகர

    அரிமா முகன்பே ராயிரவாய்

    ……………………………………..’

    (திருப்போரூர் முருகன் பி. த.- தாலப்பருவம்- சிதம்பர அடிகள்)

    Murugan- soorapadman

    கிரவுஞ்சமலை மாயைத்திறம் கொண்ட அரக்கன். ஆகவே அதனை ‘மாயைத் திறமார் கிரவுஞ்சம்’ எனக்கூறுகிறார். இவ்வாறு நெய்தல் நிலத்தில் அக்காட்சிகள் தோன்றும்படி சூரனை வதைத்த முருகவேளின் புகழைப் பாடியமை கண்ட நாம் அடுத்து முருகன் வாழும் திருச்செந்தூரின் நெய்தல் நிலத்தின் அழகினைக் காணலாமா?

    திருச்செந்தூர் தலம் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆகவே, பகழிக்கூத்தனார் தாமியற்றிய பிள்ளைத்தமிழில் கடல்சார்ந்த நெய்தல் நிலத்தினைப் பலவிதமாகப் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களில் போற்றியுள்ளார்.

    ‘திரையெறியு மலைவாய்’ – அலைகளை வீசி எறியும் திருச்செந்தூர் (திருச்சீரலைவாய் என்பது இதன் பெயர்),

    ‘வெள்வளை தரும் தண்தரள மலைகொண்டு கொட்டு நகராதிபா’- வெண்மையான சங்குகள் ஈனும் குளிர்ச்சி பொருந்திய முத்துக்களை மலைபோல கடலலைகள் கொண்டு கொட்டும் நகருக்கு அதிபனே!’,

    ‘குரைகட லலையெறி திருநக ரதிபதி’- ஓசையிடும் கடல் அலைகளை வீசியெறியும் திருநகருக்கு அதிபதி,

    ‘அலையாழிசூழ் திருச்செந்தூர் வடிவேலன்.’

    ‘கழிதொறும் கயல்குதிக்கத் திரைவாய் முழங்கும் திருச்செந்தில் வேலவனே!’ (கழி- உப்பங்கழி- நெய்தலின் அடையாளம்) என்பன சில உதாரணங்கள்.

    முத்தப்பருவத்துப் பாடலில் கூறுகிறார்: “குமரனே! உனது அலைவாய் எனப்படும் திருச்செந்தூரில் கடலலைகள் முத்துக்களை வாரி வாரி வீசும். அலைகள் விடாது ஒலியெழுப்பும் கடலிலும், கடற்கரையிலுள்ள உப்பங்கழிகளிலும், அவற்றில் மலர்ந்துள்ள கழுநீர் மலர்களிலும், அக்கழிகளில் உண்டாகும் நீர்ச்சுழிகளிலும், கடற்கரையில் வளர்ந்துள்ள அடர்ந்த தாழைப் புதர்களிலும், இன்னும் பல இடங்களிலும் சங்குகள் வருந்திப்பெற்ற கோடிக்கணக்கான முத்துக்களைக் காணலாம். அத்தகைய வளமுடைய திருச்செந்தூரில் குடிகொண்டிருக்கும் பெருமானே! எமக்கொரு முத்தம் தந்தருளுக,” எனத்தாய் வேண்டுவதாக அமைந்த ஒரு இனிய பாடல்.

    ‘கத்துங் கடலி னெடும்படவிற்

    கழியிற் கழுநீ ரிற்சுழியிற்

    கானற் கரையிற் கரைதிகழும்

    கைதைப் பொதும்பிற் ………

    …………………………………….

    முத்தம் சொரியும் கடலலைவாய்

    முதல்வா முத்தம் தருகவே’

    (திருச்செந்தூர் முருகன் பி. த.- முத்தப்பருவம்- பகழிக்கூத்தர்)

    திருவிடைக்கழி என்றொரு சிறப்பு வாய்ந்த திருத்தலம். இதுவும் சூரசங்காரத்துடன் தொடர்புடையது. திருச்செந்தூரில் சூரபதுமனை வென்றான் குமரன். சூரனின் மகன் இரணியாட்சன் என்பவன் ஒரு மகரமீனாக இருந்துகொண்டு தேவர்களுக்குத் துன்பம் விளைவித்து வந்தான். அவன் சிறந்த சிவபக்தனுமாவான். தேவர்களின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்து முருகன் இங்குவந்து இரணியாட்சனைக் கொன்றான். பின்பு அவனைக்கொன்ற பாவம் தீர ஒரு குராமரத்தடியே சிவலிங்கத்தினைப் பிரதிட்டை செய்து வழிபட்டான். சிவனும் மனமகிழ்ந்து குமரனிடம், “நீயும் நானும் ஒன்றே,” எனக்கூறினார். ஆகவே இத்தலத்தின் சிவனும் முருகனும் ஒருவரே!

    திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இந்தத் தலத்து முருகன்மீது ஒரு பிள்ளைத்தமிழை இயற்றியுள்ளார். அதிலிருந்து ஒரு செங்கீரைப்பருவப்பாடல்.

    ‘முறுவல் கொண்ட முகத்து வேர்வை முத்தைப்போல் இலங்க, பச்சைநிறங்கொண்ட பாம்பாட, எருக்கஞ்செடிகள் போன்று சூழ்ந்திருக்கும் படையோடு உன்னை எதிர்த்துப் போரிட்ட சூரபதுமன் தோல்வியடையுமாறு போரிட்ட பன்னிரு திருத்தோள்களும் அசைந்தாட, திருவிடைக்கழி முருகனே! நீ செங்கீரையாடுக!’ என வேண்டுவதாக அமைந்த பாடல்.

    ‘………………………………

    சூரனெருக்கமை கானென முற்றிச்

    சுற்றிய படையொடுசூர்

    தொலைதர மலைதரு நிலைதரு பன்னிரு

    தோளு மசைந்தாட

    …………………………………

    ஆய இடைக்கழி நேய முடைக்குகன்

    ஆடுக செங்கீரை’

    (திருவிடைக்கழி முருகன் பி. த.- செங்கீரைப்பருவம்- மீனாட்சிசுந்தரம் பிள்ளை)

    இதுபோன்று நயமிகுந்த பாடல்கள் பல முருகன் சூரபதுமனை அழித்த பெருமையைப்பாடியுள்ளன. இக்கந்தசஷ்டி தினத்தன்று முருகன் திருவடிகளில் இந்த எளிய கட்டுரையை வைத்து வணங்குகிறேன்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)

    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,

    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,

    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,

    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ************

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 8

    -மேகலா இராமமூர்த்தி 

    வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைவனை எண்ணியே ஏங்கிக்கொண்டிருந்தாள் தலைவி. அவனைக் காணுமின்பமும் அற்றுப்போய்விட்டதே என எண்ணுங்கால் உள்ளமுடைந்தாள்; ஊணுறக்கம் மறந்தாள்.

    விளைவு?

    அவளின் தொல்கவின் தொலைந்தது; தோள் மெலிந்தது; மேனியெங்கும் பசலை படர்ந்தது.

    தோழியைக் கண்டு, ”தலைவனின் பிரிவால் என் கைவளை நெகிழ்ந்ததையும், மெய்சோர்ந்து போனதையும் தாய் அறிந்தாளாயின் நான் உயிர்வாழ மாட்டேன்!” என்று மனம்நொந்து கூறினாள் அவள்.

    ”ஆய்வளை ஞெகிழவும் அயர்வுமெய் நிறுப்பவும்
    நோய்மலி
    வருத்தம்  அன்னை யறியின்
    உளெனோ
    வாழி தோழி….”  (குறுந்: 316 – தும்பிசேர் கீரன்)

    வேளைகிடைக்கும் போதெல்லாம் தன் அளவற்ற மன உளைச்சலை ஆருயிர்த் தோழியிடம் கொட்டித் தீர்ப்பதே தலைவியின் வேலையாகிப் போனது.

    ”பெண்ணே! என்மீது அருள்காட்டி மணம்புரிய மறுத்துப் பொருள் தேடிச்சென்றுவிட்டான் தலைவன். அவன்வரும் வழிபார்த்தே என் விழிகளும் ஒளியிழந்தன. அவன் பிரிந்தநாளைக் குறித்துத் தொட்டுத் தொட்டு என் விரல்களும் தேய்ந்தன” என்று பெருமூச்செறிந்தாள்.

    தன் உரையைத் தொடர்ந்தவள்…”தலைவன் என்னை முதன்முதலில் கண்டு காதல்கொண்ட இடத்தில் என் உள்ளங்கவர் கள்வனாகிய அவனைத் தவிர வேறு எவருமே எங்கள் காதலுக்குச் சாட்சியாக இல்லை; அவன் சூள்பொய்த்தால் நான் என் செய்வேன்?” என்று கலங்கினாள்.

    heronதிடீரென்று நினைவுவந்தவளாய், ”ஆங்…அவரன்றி இன்னோர் உயிரும் நாங்கள் இருந்த நீர்நிலைக்கு அருகே இருக்கவே செய்தது. ஆனால் அதுவோ கருமமே கண்ணாய் நீரில்வரும் ஆரல்மீனைக் கொத்தித் தின்பதிலேயே கவனமாயிருந்த தினையின் தாள்போன்ற சிறிய பசுங்காலைக்கொண்டிருந்த ஒரு நாரை! அது எம் காதலுக்குச் சாட்சி சொல்ல வருமோ?” என்றாள் உள்ளம் உடைந்து.

    யாரு  மில்லைத்  தானே  கள்(ள)வன்
    தானது
     பொய்ப்பின்  யானெவன்  செய்கோ
    தினைத்தா
     ளன்ன  சிறுபசுங்  கால
    ஒழுகுநீர்
     ஆரல்  பார்க்கும்
    குருகு
     முண்டுதான்  மணந்த  ஞான்றே. (குறுந்: 29 – கபிலர்)

    இப்பாடலைப் பொறுத்தவரை, ’தானே கள்வன்’ என்றும் ’தானே களவன்’ என்றும் இருவகைப் பாடபேதங்கள் காணப்படுகின்றன. ’கள்வன்’ என்று பொருள் கொள்ளும் உரையாசிரியர்கள், ’தலைவனே தன் நலத்தைக் களவாடிய கள்வன்’ என்று தலைவி கூறுவதாகவும், களவன் என்று பொருள்கொள்ளும் தமிழறிஞர் இரா. இராகவையங்கார் போன்றோர், ’தலைவன் ஒருவனே தங்கள் காதலுக்குக் களத்திலிருந்த ஒரே சாட்சி’ எனும் பொருளில் ’களவன்’ என்று தலைவி அவனைக் குறிப்பதாகவும் உரைவரைந்துள்ளனர். இரு கருத்துக்களும் மனங்கொளத்தக்கவையாகவே உள்ளன.

    தலைவியின் உரைகேட்ட தோழி, “அடி பைத்தியமே! நீ நினைப்பதுபோல் தலைவன் உன்னை ஏமாற்றிவிட்டு ஓடிவிடக்கூடியவன் அல்லன்; அப்படிப்பட்டவனாயின் நான் உன்னை அவனுடன் பழகவே அனுமதித்திருக்கமாட்டேனே!

    காந்தளினது அழகிய கொழுவிய அரும்பு தானாக மலரும் வரையில் காத்திராமல், வண்டுகள் அவற்றின் மூடிய இதழ்களைத் திறக்கும் சமயத்தில், முன்பும் தாம் அறிந்த நடுநிலைமை உடைய சான்றோரைக் கண்டு எதிர் கொள்ளும் கடமையுணர்ந்த மனிதரைப் போல, வண்டுகளுக்கு இடங்கொடுத்து இதழ்கள் பிணிப்பவிழ்ந்த உயர்ச்சியுடைய மலைநாட்டுத் தலைவன் தன் களவொழுக்கத்தை நீட்டிப்பதால் உனக்கு நிகழும் பாதகங்களை நான் (அவனுக்கு) எடுத்துரைத்த அளவிலேயே இக் களவொழுக்கத்தை மேலும் நீட்டித்தல் முறையன்று என்று நாணிய நன்னர்நெஞ்சத்தன். அவன் நின்னை வரைந்து கொள்ளுதற் பொருட்டே பொருள்தேடச் சென்றிருக்கிறான். வீணாக மனத்தைக் குழப்பிக் கொள்ளாதே” என்று கடிந்துகொண்டாள்.

    காந்தளங்  கொழுமுகை  காவல்  செல்லாது
    வண்டுவாய்  திறக்கும்  பொழுதிற்  பண்டும்
    தாமறி  செம்மைச்  சான்றோர்க்  கண்ட
    கடனறி  மாக்கள்  போல  இடன்விட்டு
    இதழ்தளை  யவிழ்ந்த  ஏகல்  வெற்பன்
    நன்னர்  நெஞ்சத்தன்  தோழி  நின்னிலை
    யான்தனக்  குரைத்தனெ  னாகத்
    தான்  நாணினன் இஃ து ஆகாவாறே (குறுந்: 265 – கருவூர் கதப்பிள்ளை)

    தோழியின் நன்மொழிகள் தலைவியின் உள்ளத்தில் சற்றே தேறுதலையும், தலைவன் விரைவில் பொருள்தேடிக்கொண்டுவந்து தனக்கு அருள்செய்வான் எனும் நம்பிக்கையையும் விதைத்தன.

    இதுபோல் சிலநாள்கள் தேறியிருப்பதும் பின்னர் மீண்டும் தலைவன்மீது நம்பிக்கையிழந்து மனம்வாடுவதுமாகவே தலைவியின் நாள்கள் கழிந்தன. தலைவியின் நிலையை நன்குணர்ந்த தோழி தினமும் அவளைத் தேடிவந்து இன்மொழிகள் சொல்லிச் செல்வதை வழக்கமாய்க் கொண்டிருந்தாள்.

    அன்றும் அவ்வாறே தலைவியைக் காண அவள்turtle இல்லத்துக்கு வந்தாள். அவளிடம் தலைவி, “பெண்ணே! தாய்முகம் நோக்கி வளருந் தன்மையுடைய ஆமையின் பார்ப்பைப் போலத் தலைவரைப் பலகாலம் திரும்பத் திரும்பக் காண்பதால் வளருந்தன்மையுடைய காமமானது, அவர் நாம் செயலறும்படி நம்மைப் பிரிந்து கைவிட்டால் தாயில்லாத முட்டை உட்கிடந்து அழிவது போல, உள்ளத்துள்ளேயே கிடந்து மெலிவதன்றி வேறு என்ன உறுதியைத் தரக்கூடும்? என்னை இடித்துரைப்போர் (தோழியைக் குறிப்பால் உணர்த்துகிறாள்) இதனைச் சிறிதேனும் அறிந்திலர்” என்றாள் சற்றே காட்டமாக.

    யாவதும்  அறிகிலர்  கழறு  வோரே
    தாயின்  முட்டை  போலவுட்  கிடந்து
    சாயின்  அல்லது  பிறிதெவன்  உடைத்தே
    யாமைப்  பார்ப்பின்  அன்ன
    காமங்  காதலர்  கையற  விடினே.  (குறுந்: 152 – கிள்ளிமங்கலங்கிழார்)

    இதே கருத்தமைந்த பாடல் ஐங்குறுநூற்றிலும் காணக் கிடைக்கின்றது. 

    தீம்பெரும்  பொய்கை  யாமை  யிளம்பார்ப்புத்
    தாய்முக
     நோக்கி  வளர்ந்திசி  னாஅங்கு
    அதுவே
     யையநின்  மார்பே
    அறிந்தனை
     யொழுகுமதி  யறனுமா  ரதுவே”     (ஐங். 44)

    தாயின் நினைவினால் முட்டையுள் கருப் பார்ப்பாகி, பின் அப்பார்ப்புத் தாய்முகம் நோக்கிவளரும் எனும் பொருளை மேற்கண்ட இரு இலக்கியப் பாடல்களும் நமக்கு அறியத் தருகின்றன. தாயின் அன்பும் அரவணைப்பும் இன்றேல் புவியில் எவ்வுயிரும் வாழ்தல் அரிது. இக்கருத்தைத் தலைவனின் அன்பையும், அவனோடு உடனுறையும் மணவாழ்வையும் பெறாத தன்னிலைக்கு உவமையாக்குகின்றாள் தலைவி.

    ”இந்தப் பெண்ணை நான் எப்படித்தான் தேற்றுவது…?” என்று யோசனையில் ஆழ்ந்தாள் தோழி. வேறு வழியில்லை…! நயமாகத் தேற்றித்தான் ஆகவேண்டும்; அன்றேல் தலைவன் குறித்த கவலையே இவளைத் தின்றுவிடும்; உயிரோடு கொன்றுவிடும் என்று எண்ணியவளாய்,

    “தலைவன் எங்கே போய்விடப் போகிறான்? சித்தனைப்போல் பூமியைத் தோண்டி உள்ளே இறங்கிவிடப்போகிறானா? வானில் ஏறிவிடப் போகிறானா? அல்லது கடலின்மேல் நடந்துசென்றுவிடப் போகிறானா? பூமியில்தானே எங்கேனும் இருப்பான்? நாடு நாடாக, ஊர் ஊராக, முறையாகக் குடிகள் தோறும் ஆராய்ந்தால் அகப்பட்டுவிடப் போகிறான்! நான் அவனைக் கண்டுபிடித்து உன்முன் நிறுத்துகிறேன் பார்!” என்றாள் பொய்யான கோபத்தை முகத்தில் தேக்கிக்கொண்டு.

    நிலந்தொட்டுப்  புகாஅர்  வானம்  ஏறார்
    விலங்கிரு  முந்நீர்  காலிற்  செல்லார்
    நாட்டின்  நாட்டின்  ஊரின்  ஊரின்
    குடிமுறை  குடிமுறை  தேரிற்
    கெடுநரும் உளரோநம் காத லோரே.  (குறுந்: 130 – வெள்ளிவீதியார்) 

    இதைக் கேட்ட தலைவிக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்துவிட்டது. வெள்ளிக்காசுகளை அள்ளிக்கொட்டியதுபோல் கலகலவென நகைத்தாள். பேச்சில், சொல்வீச்சில் வல்லவளான தோழியின் நகைச்சுவை உணர்வுக்கு இப்பாடல் நற்சான்றாகிறது.

    தலைவனின் வரவை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருந்த தலைவியின் இல்லந்தேடி அப்போது வேறொரு சோதனை வந்துசேர்ந்தது.

    [தொடரும்]

     

    Share
  • Korea – Tamil cultural relationship

    Pavala Sankari

    1951-004-5B84B16E

    We find it is timely to focus on India-Korea relationship from an economical, historical, cultural and linguistic point of views. By doing so we can bring these two economical powers of Asia closer for mutual prosperity and healthy relationships. The most dynamic and fastest growing economic region of the world today, and as two great countries of Asia, Korea and India, have roots in their common values and interests. So the ongoing transformation of Korea-India relationships is not only a mere coincidence. As we know Korean companies like Samsung, Hyundai and LG are now household names in India already as their products have found an important place in most of our homes. This is because of Korean company’s confidence in the fundamentals of the Indian economy and its growth potential, they are investing in a big way.

    India maintained close trade and cultural relations with China by exporting coral, pearls, glass vessels and beads and in return importing jade and silk from China. Archaeologists have discovered Chinese coins made of copper or bronze in many places such as Mahabalipuram and Tanjavur in India as evidence. When ancient Indians refer to China, even though Korea had its own identity, it most probably included Korea as well, as there were times when it existed in truce with mighty Chinese dynasties in the past.

    18
    A missionary explorer in New Zealand named William Colenso, found a bronze bell among the Ma-ori tribes with Tamil inscriptions (Mohaiyideen Buk’s ship’s bell) indicating Tamil trader’s presence in the far east Asia in the year 1836 itself.

    An interesting  novel based on the old legend of an Indian princess marrying a Korean prince written by our India’s past Ambassador, Dr. Parthasarathy, in Seoul has pointed out several similarities between Korea and India such as Buddhism. The spread of Buddhism in South East and Far East Asia was essentially through the silk route established earlier by traders.

    Ofcourse, myths play a vital role in every society in retaining communal memory over ages.

    30
    The legend of the Indian princess is narrated in Samguk Yusa which was set in the Kaya kingdom in the first century CE. It says, in the south central Korean peninsula, was first ruled by nine elders, but there was no king. One day, due to a voice spoke from heaven at a place called Kuji and by following that, a plum-coloured cord descended from heaven with a gold chest filled with six golden orbs which transformed into a baby boy. The boy grew quickly and reached a height of nine feet. He was now called Kim Suro came to the throne of Kaya. After two years he built his own palace and ruled from there.

    In the Indian tradition the sea is the source not only of eternal life but sovereignty and sanctity and thus many words and terms are related to Ocean in Rig Veda. Manusmrti states in the beginning , only the water was created and then in the waters he laid his seed. And this became a golden egg ….. from this egg Brahma the ancestor of all beings was born. Moreover magico – religious power lies at the bottom of the sea and is given to heroes by female beings, Nagi (or princess of smelling fish). Along with the Iron age megalithic cultural difference between northern and southern Koreas… this mythological narration of cosmogonic golden egg is also significantly different with that of northern kingdoms and it resembles the Indian tradition especially the legend of princess Heo reminds strikingly the story of Meenakshi in Madurai”. KIM YONGJUN (Ancient Indo – Korean Contacts: Archaeological perspective)

    When the king was adviced to take a bride he refused, saying that heaven had sent him to be king and heaven would take care of his marriage as well. At the same time in India, Huh Hwang-ok was a princess in ‘Ayuta’. The princess says that she was 16 years old when she reached Kaya, that her family name was Huh and her name, Hwang-ok which means Yellow jade. She says, according to her parent’s dream, in which God said, he has sent down Suro to be king of Kaya. Suro is a holy man, and is not yet married. So that their daughter had to become his queen’.

    Huh is said to have arrived in Kaya, along with her brother Po-ok, on a ship with a red sail and red flag. When she was presented to the king, with treasure and gifts she told him of the dream and the king understood at once that this was heaven’s chosen bride for him. As they were married in 49 CE and the queen was greatly loved by all her subjects and lived to the grand old age of 156! The couple had 10 sons and two daughters. As per the Queen’s wish and request, two of their sons were named Huh after their mother’s family name and the rest were called Kims, after King Kim Suro.

    Surprisingly, the same story in ancient Tamil literature the ‘Kuji’ mountainside is referred as ‘Kurunji’ and the prayer song “Guha, Guha” is practiced even today in Tamilnadu. Kurunji Ganam or the song of the mountains of Tamil Nadu resembles Kujiga, says research scholar Dr. Kannan . It is not a simple coincidence that the first Kingdom of Korea is named after Gaya where Buddha attained Nirvana. in celebration of his seven Buddhist monk sons reaching Nirvana. Queen Huh’s 5-metre high earthen mound tomb still stands in the Gyeongsang (South) province of Korea. At this royal tomb of Gimhae, in an archaeological survey researchers found that Koreans have DNA traceable to South or South East Asian ethnic groups like Indian, Malaysian or Thai. The place of origin of Queen Huh needs further research with the base of her Tamil ancestral culture.

    51
    When Korean historians found in Ayodhya paired fishes on the gates of Hindu temples, the gates of academies, government offices, military ranks, law enforcement helmets, and transportation registration centres and hence concluded that the root must be in the state of Uttarpradesh. To consider about the possibility of that Queen Huh might have come from South India rather than Uttarpradesh, which has better evidences of both linguistic as well as archeological, but they were not aware of the ancient Pandiyas ruled the South India with fish as their ruling symbol in their flag and Silk Road by sea was dominated by Pandiyas and not by Mishras of North India.
    Gimhae (Pandiyas) and Cholla (Cholas) suggest that these southern shores of Korea were visited by Pandiyas and Cholas from Tamilnadu in earlier times.

    55
    Thus, if a Pandiyan Queen of authority travelled with a name Pavalambigai. Red Jade would have been called in ancient Korean as Huh Hwang-ok. Since then Koreans started calling their parents as Amma and Appa like Tamil people. Now more than 6000 tamil words have been used by Koreans in day to day life. If Queen Huh had reached the Korean shores from Ayodhya which is a Hindi speaking country they might not have called their parents as Amma and Appa. A portrait of Huh which is depicted at the royal tomb in Gimhae is a peculiar feature of Queen Huh who had a long ear lobe like women of Tamil country side which have been regarded as a sign of superior status and spiritual development .

    As in Tamilnadu, in Korea also marriage is considered as an important relationship between families rather than individuals and also respect for elders. After the father the elder son has the responsibility for the family in Korea as in Tamilnadu and also ancestral worship is still a primary function in Korean families.

    The staple diet for Koreans and Tamils is the same as rice . Several food items like rice cakes, rice puff, lentil cakes etc are similar in both cultures.

    3
    According to my knowledge Pandiyan princess Pavalambigai might be the native of Kongu Nadu which is referred as Aykongu in ancient Italian map.

    Travelling several thousand miles alone in that olden days, a young woman needs to have guts and should be aware about her tradition as well as culture. The history shows that in Tamilnadu, Kongu Nadu women have their family responsibilities, religious practices, social relations and expert in agricultural work. Yes, there are some special properties for certain places. People who have appeared in some places have the unique characteristics of that place. It has been proved with Sangam Literature and archealogical evidences, cultural resemblences, traditions, Iron casting works, beads collection etc… and published the book in Tamil named, “கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம்”.

    Kongu nadu comprises the modern day districts of Coimbatore District, Nilgiri District, Tirupur District, Erode District, Namakkal District, Salem District, Karur District, parts of Dindigul District in the South Indian state of Tamil Nadu and also parts of South-western India including parts of Palakkad District in the Kerala state and parts of Chamarajanagar District in Karnataka state. The Western Ghats mountain range passes through the region with major rivers Kaveri, Bhavani, Amravati and Noyyal flowing through the region.

    In order to find out the exact silky route of the Princess, Universities and Research Institutes in Tamilnadu should focus more on topics dealt in this article. Substantial research is due.

    Surprisingly, we could find some evidences regarding this interesting research at Bhavani, a small town near Erode, Kongu nadu with a main river of the same name.

    62
    Bhavani, which is the second longest river in Tamil Nadu and a major tributary of the Kaveri River is a major river in Kongu Nadu region of Tamil Nadu, India. Bhavani river originates from Nilgiri hills of the Western Ghats and 217-kilometre long . 0.62 million hectares of area spread over Tamil Nadu (87%), Kerala (9%) and Karnataka (4%) have been watershed by Bhavani river. The majority river courses mainly through Coimbatore district and Erode district in Tamil Nadu. About 90 per cent of the river’s water is used for agriculture irrigation.

    Bhavanisagar dam which is located on the Bhavani river in Erode district, Tamil Nadu, India is one of the largest earthen dams in the world. This dam is situated some 16 km west of Sathyamangalam and 35 km from Gobichettipalayam. The Lower Bhavani Project was the first major irrigation project initiated in India after independence in 1948.

    Once upon a time in ancient days people say Bhavani river was flooded many times. During this flood Gautama Bhudda’s daughter Sangamithirai drowned in this river. Evidences for this local belief should be searched through researches. There is also a strong belief that in ancient days one of the charroits of a princess was drowned in this Bhavani river with full of valuable wealths. Even now some people take much pain to find out this charriot illegally. This might also be taken in to account for research.

    Anthiyur near Bhavani, Erode is a major horse market in Tamil Nadu. It has a very long history for attracting buyers from Arabia too, long back.

    Near Bhavani we could find some more evidences like Pandya thittu (stage), ancient village temples with Pandya fish symbols, beads collecting areas etc…

    37

    At Bhavani every year they celebrate mud festival as like Korean festival, that too around the same time! Its really a much surprising news for Korea – India relationship researchers!

    A thorough study of the ancient and ethnically enhanced Kongunadu for more than three thousand years is an essential requirement for the excavation. Kodumanal excavations and Pattinam excavations prove this. The ruined old towns of Kongu Nadu are the longest paths of their domestic overseas trade with their Jain Buddhist Pilgrimage through Waterway, landway and seaway. If new study of weaving and iron casting industry has been made possible, it can be proved that both South Kongu and Gaya had been developed relatively by Tamil merchants.

    The hypothesis is that the idea that Tamil bhuddism might have been introduced by the tamil traders, particularly by the Aykongu traders in the Gaya country of 50 BC.

    There is another assumption that the iron weapons, statues made of melted gold and the iron casting made in kongunadu spreaded in kadaram and the Korean’s Gaya country, from which the Koreans made the iron weapons like sword. Through tamil traders iron casting, colour beads, red corals, golden ornaments might have been exported to korea.

    Tamil traders, for their business purpose introduced Buddha’s numerical routes to Afghanistan in the northwest of India and introduced it to Tamil Nadu and neighboring northern Sri Lanka. Tamil traders who became the Buddhist witnesses to the Tamil Buddhist Ministries prior to Ashoka introduced the Buddha’s propagation.

    Before the advent of Ashoka’s bhuddism Tamil Buddhism could reach Korea and collect data to spread and the Tamil Buddhism went to Korea through China. Korean researchers also have reported that it is possible that the girl might have crossed the sea in the western direction of South Korea and married Gaya king.

     

    Share
  • வான வேடிக்கை..!

    பெருவை பார்த்தசாரதி

    வான வேடிக்கை

     

     

     

     

     

     

     

    நானிலத்தில் நலமுடனே வாழும்நன் மக்களுக்கு..
    ……….நேரும் துன்பம்போக்க அவதரிப்பான் இறைவன்.!
    மனிதனாக மண்ணுலகில் மறைமுகமாய்ப் பிறந்து..
    ……….மக்களின் பக்திநலத்தை தன்னுள்ளே பேணுவான்.!
    புனிதனாமவன் பிறக்குமுன் அதிசயங்கள் நிகழவே..
    ……….புதியஜீவன் பூவுலகில் பிறக்குமென பெருங்குரலில்..
    தொனிக்குமொரு அசரீரிச்சொல் எழுமாம்..? அப்போது..
    ……….வானவேடிக்கை பலவுமங்கே விண்ணிலே நிகழும்.!

    இதிகாச மன்னரான இராமனையும் கண்ணனையும்..
    ……….இன்றுமென்றும் துதிக்கிறோம் இறையவன் ஆனதாலே.!
    அதிசயமாம் மனிதருக்கு அவர்களின் அருஞ்செயல்..
    ……….ஆகையாலதை விழாவாகக் கொண்டாடி மகிழ்வோம்.!
    மதியிலா அரக்கர் தம்மக்களையே துன்புறுத்தியதால்..
    ……….மானுடனாய் அவதரித்து அவர்களையே அழித்தான்.!
    மதிப்பில்லா அரக்கரழிந்ததை தீமையொழிந்த தினமாக..
    ……….மாபெரும் விழாவாக மண்ணுலகில் நடத்துகின்றோம்.!

    மதிக்கத்தக்க நம்பண்பாட்டில் மரணத்தைக் கொண்டாட..
    ……….மாபாவியசுரனெனும் தீமை அழித்தான் மாயக்கண்ணன்.!
    உதிக்கும் பண்டிகையில் வாழ்விலொளி ஏற்றும்நாளாக..
    ……….உருவான உன்னத விழாவாகியது தீபஒளித்திருநாள்.!
    கொதிக்கும் செங்கதிரெழுந்து வானம் சிவப்பாக்குமுன்..
    ……….கொளுத்திய பட்டாசுவெடித்து வானவேடிக்கை காட்டும்.!
    அதிசயமாய் அதிகாலை அன்றுமட்டும் கண்விழிப்போம்..
    ……….அதிகமான சப்தஒளியுடன் வானவேடிக்கை காண்போம்.!
    ==========================================
    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::23-10-17
    நன்றி:: படம்..கூகிள் இமேஜ்

     

    Share
  • குருகோவிந்தரும் இராமலிங்கரும்

    -இராம. மலர்விழி மங்கையர்க்கரசி

    அக்டோபர் மாதம் அகிம்சை மாதம் என்றாற்போல அடுத்தடுத்து அருளாளர்களின் அவதார தினங்களால் நிறைந்திருக்கிறது. அக்டோபர் இரண்டு காந்தி ஜெயந்தி, அக்டோபர் ஐந்து இராமலிங்கர் ஜெயந்தி, அக்டோபர் 7 (1708 அக்டோபர் 7) குருகோவிந்த் குரு பூஜை (மறைவு) என இரண்டு, மூன்று நாட்கள் இடைவெளியில் அருளாளர்கள் அவதரித்துள்ளனர். காந்தியடிகளை அருளாளர் என அழைக்கலாமா எனில் சமய ஆன்மிக அன்பர்களை மட்டுந்தான் அவ்வாறு அழைத்தல் மரபு எனினும் அகிம்சையால் ஆங்கிலேயரைத் துரத்தியவரும், சர்வோதயம் கண்டவரும், இராமராஜியத்தை நிலைநிறுத்தப் பாடுபட்டவரும், தள்ளியவர்களை ஹரிசனங்கள் (இறைவனின் குழந்தைகள்) என அழைத்து இன்பங்கண்ட ஆன்மநேய காந்திமகானை அருளாளர் என அழைப்பதில் என்ன பிழையிருக்க முடியும்?

    ஆன்மநேய ஒருமைப்பாடு கண்டு சன்மார்க்கம் கண்டு நெறிப்படுத்தி தெனைச் சங்கம் அமைத்து நெறிப்படுத்திய இராமலிங்கர் பதினெட்டாம் நூற்றாண்டு அருளாளர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியது மட்டுமன்றி வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் துறந்தவர். இத்தகையோரைக் கணித்து உலகளாவிய அளவில் “உலகச் சிந்தனையாளர்கள்” என்ற பெயரில் நூலாக்கிய இராபர்ட் எல். ஹெல்போர்னர் பின்வருமாறு கருத்துரைக்கிறார். “மத்திய நூற்றாண்டுகளின் சிந்தனைப் புரட்சியாளர்களின் சிந்தனை உருமாற்றம் குறிப்பாகப் பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளில் மண், மனிதர்கள், சமூகம், இயங்குதளம் இவற்றின் அடிப்படையிலேயே பழையனவற்றை மாற்றிப் புதிய முறைமைகளை இனங்கண்டு உரைத்தனர்” (‘The worldly philosophers’ – Robert L. Heilbroner IV edition -1972 – Simon and Schuster, New York, Page – 25) என்பது பொருத்தமே.

    இந்து மற்றும் இஸ்லாமிய சமய ஒருமைப்பாடு கண்ட அருளாளராக பதினேழாம் நூற்றாண்டில் அவதரித்த குருகோவிந்தர் விளங்குகிறார். சீக்கிய ஒன்பதாவது மதகுருவாகக் கொண்டாடப்பட்டாலும் இவருக்குப் பின்னரே சீக்கிய மதம் ’குருகிரந்தம்’ என்ற பெயரில் சீக்கியப் பனுவல்களைப் பெறுகிறது. அதைத் தொகுப்பித்த பணியைக் குருகோவிந்தர் செய்ததோடு மட்டுமல்லாமல் உருவவழிபாட்டில் மிகப்பெரிய புரட்சியையே செய்துள்ளார் எனக் கூறமுடியும். அதுவரைக் கடவுளர் உருவங்கள், மதகுருமார்களின் உருவங்கள் ஆராதிக்கப்பட்டு வழிபடுதன்மையைப் பெற்றதெனின் இவரே மதநூலான குருகிரந்தத்திற்கு வழிபடுதன்மையை வகுத்துத்தருகிறார். பதினெட்டாம் நூற்றாண்டில் அதேபோல் இராமலிங்கரும் “அருட்பெருஞ்சோதி” என்று கடவுளர் உருவத்தை விடுத்து ஒளியைக் குறியீடாக்கி வழிபடும் ஒளிவழிபாட்டை ஜோதி தரிசனத்தைக் கூடியிருந்து கண்டு ஆன்மநெகிழ்வடையும் புதுமார்க்கத்தைக் கண்டறிந்து தந்தார். இவ்விருவரது மார்க்கங்களும் அவர்தம் காலத்துக்குப் பின்னரும் இன்றுவரை தொடர்ந்து வருவதே தனிச்சிறப்பும் அவரது கொள்கை வெற்றிபெற்றதை உணர்த்துதலுமாகிறது.

    சீக்கியமதத்தின் சீரிய நெறிமுறைகளைக் கையிலெடுக்காது தனிமனித குருவழிபாட்டில் சிக்கி ராம்ரஹீம் போன்றவர்களால் ஹரியானா மாநிலத்தில் சென்ற மாதம் நிகழ்ந்த கலவரங்களை நாடே கண்டு வியந்து கண்டனக்குரல்களை எழுப்பியது என்பதையும் மனதிற்கொள்ளவேண்டும். தனிமனிதத்துதி இவ்வாறு தீமையில்தான் ஓர் எல்லை கடந்து செல்லும்போது முடியும் என்பதை உணர்ந்துதானோ என்னவோ குருகிரந்தத்தைப் பொற்கோவிலின் கடவுள் நிலைக்கு வைத்துப் புனிதப்படுத்தினார் குருகோவிந்த்சிங். சீக்கிய மதத்தின் வாழும் குருவாக வழிபடுத்திய குருகோவிந்த்சிங் பீஹார் மாநிலம் பாட்னாவில் 1666ஆம் ஆண்டு டிசம்பர் 22இல் பிறந்தார். இராமலிங்கர் 1853 – விழுப்புரம் மாவட்டம் மருதூரில் தமிழ்நாட்டில் பிறந்தார்.

    குருகோவிந்தர் “அரபி, பெர்சியன், சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்” (பக்-8, தினமலர் நாளிதழ் – 07.10.2017 – மதுரைப் பதிப்பு) என்னும் தகவல் அவர் பன்மொழியாளர் என்பதை உறுதிசெய்கிறது. இராமலிங்கரும் ஆங்கிலம், பிரெஞ்சு, (பாண்டிச்சேரியில் வசித்த காலத்தில் அறிந்திருக்கக் கூடும் என்பாரும் உளர்) சமஸ்கிருதம் அறிந்தவராகத் திகழ்கிறார். தமிழ் தாய்மொழி, சமஸ்கிருதம் தந்தைமொழி என திருவருட்பா – உரைநடைப் பகுதியில் அவர் கூறியிருப்பது வியப்பிற்குரியது. அவரது உரைநடையே மணிபிரவாள நடைக்கான கடைசிச் சாட்சியாகத் தமிழ் எழுத்திலக்கிய வரலாற்றில் இருந்திருக்கக் கூடும் என்று ஆய்வாளர்களை உறுதிபடுத்த வைக்கிறது. இராமலிங்கர் காலத்துக்குப் பின்னரே மறைமலையடிகள், நீதிக்கட்சி, தேவநேயப்பாவணர் போன்றோரால் தனித்தமிழ் இயக்கமும் தனித்தமிழ் நடையும் சமஸ்கிருத ஒறுப்பும் நிகழ்ந்திருக்கிறது.

    குருகோவிந்தர் “குதிரைவாரி, பலவகைத் துப்பாக்கிகள், ஆயுதங்கள் முதலியவற்றைக் கையாள்வதில் சிறப்புப் பெற்று விளங்கினார்.” (பக்-8, தினமலர்) என்ற செய்தி தேக ஆரோக்கியம், தற்காப்பு ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த அக்கறை முக்கியத்துவம் பெறுகிறது.

    இராமலிங்கரும் தேக ஆரோக்கியம் பற்றிச் சுத்த தேகம், பிரவண தேகம், ஒளியுடம்பு ஆகியன குறித்துப்  பேசியுள்ளார். உடல்நலன் குறித்த அக்கறையில் மூலிகை மற்றும் பயிரினங்களின் பயன்பாடு குறித்து மானுடர்களுக்கு உரைநடைப் பகுதியில் தனித்த பதிவினைக் குறித்துள்ளார். கரிசலாங்கண்ணிப் பொடியை அன்றாடம் உண்ணல் நலம் எனத் தானும் உண்டு பிறருக்கு முன்னோடியாக வழிகாட்டியும் விளங்கியுள்ளார்.

    குருகோவிந்தரின் மதிப்புமிகு சிந்தனைகளாகத் தான் உருவாக்கிய சீக்கிய மார்க்கத்தை பின்பற்றுபவர்களுக்கு ஒழுக்கமுறைகளை வகுத்துள்ளார். “மது அருந்தாமை, புகை பிடிக்காமை, நாள்தோறும் ஐந்துமுறை வழிபடுதல், வருமானத்தில் பத்தில் ஒருபங்கு தானம், வட்டி வாங்காமை ஆகியவற்றைக் கடைப்பிடித்து சீக்கியர் வாழவேண்டும்” என்று சிறந்த பண்புகளையுடைய மானுடச்சமூகம் உருவாகக் கட்டமைத்துத் தந்துள்ளார். அதனைக் கட்டாயமாகப் பின்பற்றவேண்டும் என்றும் சட்டம் இயற்றித் தந்திருக்கிறார். 1708 அக்டோபர் மாதம் ஏழாம்நாள் அவர் காலமானாலும் இன்றுவரை அவர் கொள்கைகளை சீக்கியர் பின்பற்றி வருகின்றனர்.

    இராமலிங்கரும், புலால் உண்ணக்கூடாது. உருவ வழிபாடு கூடாது. ஒளி வழிபாடு மேற்கொள்ள வேண்டும். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல். பரோபகாரம், பசிப்பிணி மருத்துவம் போன்ற கொள்கைகளை வலியுறுத்தியுள்ளார். அவர் பசியாற்றுக்காக அன்று ஏற்றிவைத்த நெருப்பு அணையா அடுப்பாக இன்றும் வடலூர் சத்திய தருமசாலையில்  பசித்தோருக்கு அன்றாடம் உணவு சமைத்து வழங்கிக் கொண்டிருக்கிறது.

    அதுவரை இருந்த வழிபாட்டுத் தலங்களினின்றும் தனித்துப் பொற்கோயில் என்பதை வடிவமைத்து அமிரிதசரஸ் நகரிலே சீக்கிய வழிபாடு நடத்துகின்றனர். இந்தப் பொற்கோயிலை 1469-இல் பிறந்த சீக்கிய சமய நிறுவனரான குருநானக் மெக்காவிற்குப் புனிதப்பயணம் மேற்கொண்டதன் பின்னர் இந்து முஸ்லிம் இருசமயக் கோவில் அமைப்புகளையும் இணைத்து வடிவமைத்ததாக இந்தியாவின் சிறந்த கோயில்கள் (The Great Temples of  India – Ceylon and Burma Asian Educational Services – New delhi & Madras – 1988 – Page 43 – Sikh Temples) என்ற நூலில் சீக்கியக்கோயில் என்பதனுள் பொற்கோயில் என்ற கட்டுரையில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

    லாகூரிலிருந்து முப்பதிரண்டு மைல் தூரத்தில் வெள்ளியும் தங்கமும் கலந்து கட்டுமானம் அமைத்த கோயிலாகவும் திகழ்கிறது. இந்துசமய மறுமலர்ச்சியாளரான கபீரின் சிந்தனைகளின் அடித்தளத்தில் குருநானக் அவர்கள் இந்து முஸ்லிம் மதக்கோட்பாடுகளை இணைக்கவேண்டும் என்ற அடிப்படையில் சீக்கியத்தை உருவாக்கியதாகக் கருத இடமுள்ளது.

    இராமலிங்கரும் அவர்காலத்தே தமிழகச் சூழலில் இருந்த இஸ்லாமிய, கிறித்தவ ஊடுருவாக்கச் சிந்தனைகளில் அவற்றை இணைத்து வழிபடுதலத்தை வடலூரில் நிர்மாணிக்கிறார் எனக் காணும்போது வியப்பு மேலிடுகிறது. சத்தியஞானசபை என்பது அதுவரை தமிழகத்தில் இருந்த வழிபடுதலங்களினின்றும் மாறுபட்டுப் புதிய நிர்மாணமாக அமைகிறது. எண்கோண அமைப்பில் சத்தியஞானசபையை உருவாக்கி ஒளிவழிபாட்டை சமஸ்கிருதச் சொல்லாடல் பிரயோகத்தில் ஜோதி தரிசனம் என்ற முறைமையை அமல்படுத்தினார். சிதம்பரத்திலிருந்து சில மைல்தூரத்தில் வடலூரை சத்தியஞானசபையைத் தேர்வு செய்தார். சிதம்பரத்தைப் பூர்வஞான சிதம்பரம் என்றும் வடலூரை உத்தரஞான சிதம்பரம் எனக்கொண்டு அமைத்தார் என்பது பதிவு.

    அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கும் வடலூர் சத்தியஞான தருமச்சாலைக்கும் ஒரு பரோபகார ஒற்றுமையுள்ளது. வளாகத்துள் வருபவர்கள் பசியாறிச் செல்கின்றனர் எனும் பெருங்காருண்ய உபகாரமேயிது.

    சீக்கிய நூலான குருகிரந்தமும் இராமலிங்கரின் திருவருட்பாவும் கருத்துநிலையில் சில ஒருபோடுத்தன்மை உடையனவாக உள்ளன. குருகிரந்த ஜபுஜியுள் (ஜபுஜி – ஜபம் – இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல்) புலப்படாத கடவுளின் குணநலன்கள் நிரல்படுத்தப்படுகின்றன.

    “அவர் உண்மையானவர் அவர் நாமம் உண்மையானது
    படைப்பு உண்மையானது கடவுள் பயமில்லாதவர்,
    எதிரிகள் இல்லாதவர், அன்பு நிறைந்தவர்
    பிறப்பு இறப்பு இல்லாதவர்” (ஜபுஜி சாகிபு – தமிழாக்கம், லூர்து சகாயராணி, முதுநிலைப்பட்டயச் சான்றிதழ் படிப்பு ஆய்வேடு – 1998 – மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்) என்றவாறு கடவுட்கருத்தாக்கம் சித்திரிக்கப்பட்டுள்ளது.

    திருவருட்பாவில் இராமலிங்கர் கடவுளை,

    “இயற்கையிலே பாசங்கள் ஒன்றும் இலார்; குணங்கள் ஏதுமிலார்; தத்துவங்கள் ஏதுமிலார்; மற்றோர் செயற்கை இல்லார்; பிறப்பில்லார் இறப்பில்லார்; யாதும் திரிபில்லார்; களங்கமே இல்லார்; தீமை ஒன்றும் இல்லார்; வியப்பற வேண்டுதல் இல்லார்; வேண்டாமை இல்லார்; மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்பமயமாய் உயத்தரும் ஓர் சுத்த சிவானந்தசபைதனிலே ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்” (திருவருட்பா – திருச்சிற்றம்பலத் தெய்வமணி மாலை – 12) என்று கடவுள் பண்புநலன்கள் உரைக்கப்பட்டுள்ளன.

    ஜபுஜி       –   திருவருட்பா

    உண்மையானவர்  –  மெய்யே மெய்யாகி எங்கும் விளங்குபவர்
    அன்பு நிறைந்தவர்  – அன்புருவாம் பரசிவமே
    பிறப்பு இறப்பு இல்லாதவர் –    பிறப்பிலார் இறப்பிலார்
    என்றவாறு குருகிரந்தத்து ஜபுஜியிலும் இராமலிங்கரின் திருவருட்பாவிலும் கருத்துகள் ஒத்த தன்மையினவாய் விளங்குவதைக் காணமுடிகிறது.

    இறையின் முறைமை குறித்துப் பேசும் மற்றொரு இடமும் வியப்பில் ஆழ்த்துகிறது.

    “இறைமுறை என்பதுதான் வாழ்க்கை
    இறைமுறைமைக்குள் வாழ்வதுதான் ஆசிர்வாதம்
    இறைமுறைமையால் உயர்வும் தாழ்வும்
    இறைமுறைமையால் சந்தோசங்களும் துக்கங்களும்
    இறைமுறைமைக்குள்ளே ஒவ்வொருவரும் வாழ்கின்றனர்
    இறைமுறைமைக்கு வெளியே எவரும் இல்லை” – என்பதாக ஜபுஜியில் இடம்பெற்றுள்ளது.

    அதே கருத்துடன் அருட்பாவின் வரிகள் பின்வருமாறு அமைகின்றன.

    “பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால்
    பணிகின்றேன் பதியே நின்னைக்
    கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால்
    குழைகின்றேன் குறித்த   ஊணை
    ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறங்குவித்தால்
    உறங்குகின்றேன் உறங்காதென்றும்
    ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோ
    இச்சிறியேனால் ஆவதென்னே” (திருவருட்பா – தற்சுதந்திரம்இன்மை –  4)

    மேற்குறித்த பாடல்கள் மனித வாழ்வின் அனைத்துமே இறைவிருப்பின்படியே இறைமுறைமையாலே நடைபெறுகின்றன என்பதற்குக் கட்டியங்கூறுவதுபோல அமைத்திருப்பதைக் காணமுடிகிறது. அப்படியே கொஞ்சம் இருபதாம் நூற்றாண்டிற்கு நகர்ந்து வந்தால் பாரதியும் “யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் தீதுநன்மையாவும் உந்தன் தெய்வலீலையன்றோ” என்கிறான்.

    எங்கிருந்தாலும் அருளாளர்களின் ஆன்மா ஒன்றுபோல்தான் அனுபவங்களை உணர்கின்றனவா அன்றி ஆண்டவர் அவர்க்கெல்லாம் ஒன்றேபோல உணர்த்துகின்றானா? யாமொன்றறியேன் பராபரமே!

    *****

    கட்டுரையாசிரியர்
    தமிழ்த்துறைத் தலைவர்
    தியாகராசர் கல்லூரி

     

     

     

    Share
  • திருமந்திரத்திலிருந்து சில சிந்தனைத் துளிகள் 32

    க. பாலசுப்பிரமணியன்

    அறிவே அறிவைத் தேடி ..

    திருமூலர்-1-3

    பாசத்திலிருந்து விடுபடவேண்டும் என்று துடிக்கின்ற மனம் அந்த மயக்கத்தை விலக்க அறிவின் துணையை நாடுகின்றது. உயிர்களுக்குள் இருப்பதோ சிற்றறிவு. பேரறிவாளனாகி எங்கும் ஆதிக்கம் செய்து இருப்பவனோ இறைவன். ஆகவே இந்த சிற்றறிவு பேரறிவின் துணை கொண்டாலன்றி அதனோடு ஒன்றாகி ஆனந்த அனுபவ நிலைக்குச் செல்ல முடியாது. இந்தத் தேடல் எப்படிப்பட்டது?  திருமூலருக்கு இந்தத் தேடல் இருந்ததா ?

    திருமூலர் கூறுகின்றார்

    தேடுகின்றேன் திசை எட்டோடு இரண்டையும்

    நாடுகின்றேன் நலமே உடையான் அடி

    பாடுகின்றேன் பரமே துணையாம் எனக்

    கூறுகின்றேன் குறையா மனத்தாலே

    இதை விடச் சிறந்த விளக்கம் நமக்குத் தேவையோ ?

    தேடல் ஒரு அருமையான அனுபவம். அது நம்முடைய உயிரின் ஒரு பயிற்சி நிலை. இடைவிடாத முயற்சியால் அது இந்தப் பயிற்சியின் மூலம் உண்மை அறிவை நாடிச் செல்லுகின்றது. ஒளி மையமாக விளங்கும், அன்பின் வடிவமாக விளங்கும் அந்தப் பேரறிவின் அடிகளைச் சென்று அணைக்க விரும்புகின்றது. இந்த முயற்சியின் முடிவில் அது எதைத்தான் அறிந்துகொள்கின்றது? விளக்கம் இதோ : 

    என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்

    என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்

    என்னை அறிந்திட்டு இருத்தலும

    என்னை இட்டு என்னை உணர்கின்றேனே

    என்னை அறிந்திலேன் என்று தன் அறியாமை நிலையை விளக்கிய பின் “என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்” என்று தன்னுடைய விடுதலை அடைந்த முக்தி நிலையையும் தெளிவாக விளக்குகின்றார்

    “என்னை இட்டு என்னை உணர்கின்றேன்” – என்ன அருமையான கருத்து. சிற்றறிவின் சின்னமாக விளங்கும் இந்த உயிர் பேரறிவின் ஒளியோடு இணையும் பொழுது நானும் நானாகின்ற நிலை- வியப்பாக உள்ளதன்றோ? – ஒரு மிகப் பெரிய ஆன்மீகக் கருத்தை திருமூலர் எவ்வளவு அழகாக விளக்குகின்றார்

    இந்த முயற்சியின் பல்வேறு வளர் வடிவ நிலைகளை உள்ளம் உருகும் வகையில் மாணிக்கவாசகர் தம்முடைய திருவாசகத்தில் முன்வைக்கின்றார்

    புல்லாகி பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

    பல்விருக மாகிக் பறவையாய்ப் பாம்பாகிக்

    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

    வல்லகர ராகி முனிவராய்த் தேவராய்ச்

    செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 

    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

    மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

    உய்யான் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற

    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

    ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே”

    .பிறந்து பிறந்து இளைத்த பெருந்தகையின் உள்ளுணர்வு நமக்கு எவ்வளவு பெரிய பாடத்தைப் புகட்டுகின்றது? இந்த வகையிலே ஒவ்வொரு அடியார்களும் ஒவ்வொரு விதமாக அந்தப் பேரருளாளனை  நாடியிருக்கின்றார்கள். பட்டினத்தார் இந்த அறிய அனுபவத்தைப் பெற என்ன முயற்சி செய்தார்? அவரே கூறுகின்றார்

    அஞ்சகக் கரமென்னும் கோடாலி கொண்டிந்த ஐம்புலன்கலாம்

    வஞ்சப் புலக்கட்டை வேர்அற வெட்டி வளங்கள் செய்து

    விஞ்சத் திருத்தி சதாசிவம் என்கின்ற வித்தை விட்டுப்

    புஞ்சக் களைபறித்தேன்; வளர்த்தேன் சிவபோகத்தையே “ 

    அந்த ஐம்புலன்களின் தூண்டுதலால் நமக்கு வரும் துன்பங்களைக் கட்டுப்படுத்த என்னென்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கின்றது! திருநாவுக்கரசரோ இதற்கு உள்ள ஒரே வழியாக மனத்தைக் கட்டுப்படுத்தி அறிவு என்னும் ஒளியை ஏற்றுவதன் அவசியத்தை அழகாக எடுத்துரைக்கின்றார்

     உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக

    மடம்படும் உணர்நெய்யட்டி உயிரேனும் திரிமயக்கி

    இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்

    கடம்பர் காளை தாதை கழலடி காணலாமே

     இந்தப் பேரறிவின் திருவடிகளை அடைவதற்கு நம்முடைய சிற்றறிவு என்ன முயற்சி செய்கின்றது? இந்த முயற்சிகள் அதனுடைய வலிமையினாலோ அல்லது வளத்தினாலோ கிடைத்ததா? இல்லை அதற்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா ? மனத்தைக் கட்டுப்படுத்தி கிடைக்கும் அறிவின் தன்மை எப்படிப்பட்டது ?

    திருமூலர் விளக்குகின்றார் :

    அறிவுக்கு அழிவு இல்லை ஆக்கமும் இல்ல

    அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை

    அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு

    அறைகின்றன மறையீறுகள் தாமே.

    என்ன ஒரு அடக்கம் அவருடைய சொற்களில் ! ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகின்றேன் என்று சொல்லாமல் “அறைகின்றன மறையீறுகள் தாமே” என்று சொல்லி தன்னுடைய கருத்தை வலிமைப் படுத்திக்கொள்ளுகின்றார்.

    அறிவின் வடிவாய் அமர்ந்த அந்தப் பேரறிவாளனின் வண்ணத்தை காரைக்கால் அம்மையார் எவ்வாறு காண்கின்றார் தெரியுமா ?

    அறிவானுந் தானே அறிவிப்பான் தானே

    அறிவால் அறிகின்றான் தானே – அறிகின்ற

    மெய்ப்பொருளுந் தானே விரி-சுடர்பார் ஆகாயம்

    அப்பொருளுந் தானே அவன்

    ஆகவே நலமான வாழ்விற்கு வளமான வாழ்விற்கு ஐம்பொறிகளின் தூண்டுதலால் கிடைக்கின்ற சிற்றறிவின் விளைவான சிற்றின்பங்களைத் துறந்து பேரின்பத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும். இந்தக் கருத்தை தன்னுடைய ஈரடிகள் மூலம் வள்ளுவர் அழகாகச் சொல்லுகின்றார்.

    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

    நெறிநின்றார் நீடுவாழ் வார்

    திருமூலரின் ஒவ்வொரு பாடலும் நம்முடைய சிந்தனையை வளர்த்து பேரின்ப வாழ்வுக்கு ஒளிவிளக்காக அமைந்துள்ளது.

    தொடரும்

    Share