குறுந்தொகை நறுந்தேன் – 8
-மேகலா இராமமூர்த்தி
வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைவனை எண்ணியே ஏங்கிக்கொண்டிருந்தாள் தலைவி. அவனைக் காணுமின்பமும் அற்றுப்போய்விட்டதே என எண்ணுங்கால் உள்ளமுடைந்தாள்; ஊணுறக்கம் மறந்தாள்.
விளைவு?
அவளின் தொல்கவின் தொலைந்தது; தோள் மெலிந்தது; மேனியெங்கும் பசலை படர்ந்தது.
தோழியைக் கண்டு, ”தலைவனின் பிரிவால் என் கைவளை நெகிழ்ந்ததையும், மெய்சோர்ந்து போனதையும் தாய் அறிந்தாளாயின் நான் உயிர்வாழ மாட்டேன்!” என்று மனம்நொந்து கூறினாள் அவள்.
”ஆய்வளை ஞெகிழவும் அயர்வுமெய் நிறுப்பவும்
நோய்மலி வருத்தம் அன்னை யறியின்
உளெனோ வாழி தோழி….” (குறுந்: 316 – தும்பிசேர் கீரன்)
வேளைகிடைக்கும் போதெல்லாம் தன் அளவற்ற மன உளைச்சலை ஆருயிர்த் தோழியிடம் கொட்டித் தீர்ப்பதே தலைவியின் வேலையாகிப் போனது.
”பெண்ணே! என்மீது அருள்காட்டி மணம்புரிய மறுத்துப் பொருள் தேடிச்சென்றுவிட்டான் தலைவன். அவன்வரும் வழிபார்த்தே என் விழிகளும் ஒளியிழந்தன. அவன் பிரிந்தநாளைக் குறித்துத் தொட்டுத் தொட்டு என் விரல்களும் தேய்ந்தன” என்று பெருமூச்செறிந்தாள்.
தன் உரையைத் தொடர்ந்தவள்…”தலைவன் என்னை முதன்முதலில் கண்டு காதல்கொண்ட இடத்தில் என் உள்ளங்கவர் கள்வனாகிய அவனைத் தவிர வேறு எவருமே எங்கள் காதலுக்குச் சாட்சியாக இல்லை; அவன் சூள்பொய்த்தால் நான் என் செய்வேன்?” என்று கலங்கினாள்.
திடீரென்று நினைவுவந்தவளாய், ”ஆங்…அவரன்றி இன்னோர் உயிரும் நாங்கள் இருந்த நீர்நிலைக்கு அருகே இருக்கவே செய்தது. ஆனால் அதுவோ கருமமே கண்ணாய் நீரில்வரும் ஆரல்மீனைக் கொத்தித் தின்பதிலேயே கவனமாயிருந்த தினையின் தாள்போன்ற சிறிய பசுங்காலைக்கொண்டிருந்த ஒரு நாரை! அது எம் காதலுக்குச் சாட்சி சொல்ல வருமோ?” என்றாள் உள்ளம் உடைந்து.
யாரு மில்லைத் தானே கள்(ள)வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே. (குறுந்: 29 – கபிலர்)
இப்பாடலைப் பொறுத்தவரை, ’தானே கள்வன்’ என்றும் ’தானே களவன்’ என்றும் இருவகைப் பாடபேதங்கள் காணப்படுகின்றன. ’கள்வன்’ என்று பொருள் கொள்ளும் உரையாசிரியர்கள், ’தலைவனே தன் நலத்தைக் களவாடிய கள்வன்’ என்று தலைவி கூறுவதாகவும், களவன் என்று பொருள்கொள்ளும் தமிழறிஞர் இரா. இராகவையங்கார் போன்றோர், ’தலைவன் ஒருவனே தங்கள் காதலுக்குக் களத்திலிருந்த ஒரே சாட்சி’ எனும் பொருளில் ’களவன்’ என்று தலைவி அவனைக் குறிப்பதாகவும் உரைவரைந்துள்ளனர். இரு கருத்துக்களும் மனங்கொளத்தக்கவையாகவே உள்ளன.
தலைவியின் உரைகேட்ட தோழி, “அடி பைத்தியமே! நீ நினைப்பதுபோல் தலைவன் உன்னை ஏமாற்றிவிட்டு ஓடிவிடக்கூடியவன் அல்லன்; அப்படிப்பட்டவனாயின் நான் உன்னை அவனுடன் பழகவே அனுமதித்திருக்கமாட்டேனே!
காந்தளினது அழகிய கொழுவிய அரும்பு தானாக மலரும் வரையில் காத்திராமல், வண்டுகள் அவற்றின் மூடிய இதழ்களைத் திறக்கும் சமயத்தில், முன்பும் தாம் அறிந்த நடுநிலைமை உடைய சான்றோரைக் கண்டு எதிர் கொள்ளும் கடமையுணர்ந்த மனிதரைப் போல, வண்டுகளுக்கு இடங்கொடுத்து இதழ்கள் பிணிப்பவிழ்ந்த உயர்ச்சியுடைய மலைநாட்டுத் தலைவன் தன் களவொழுக்கத்தை நீட்டிப்பதால் உனக்கு நிகழும் பாதகங்களை நான் (அவனுக்கு) எடுத்துரைத்த அளவிலேயே இக் களவொழுக்கத்தை மேலும் நீட்டித்தல் முறையன்று என்று நாணிய நன்னர்நெஞ்சத்தன். அவன் நின்னை வரைந்து கொள்ளுதற் பொருட்டே பொருள்தேடச் சென்றிருக்கிறான். வீணாக மனத்தைக் குழப்பிக் கொள்ளாதே” என்று கடிந்துகொண்டாள்.
காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது
வண்டுவாய் திறக்கும் பொழுதிற் பண்டும்
தாமறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடனறி மாக்கள் போல இடன்விட்டு
இதழ்தளை யவிழ்ந்த ஏகல் வெற்பன்
நன்னர் நெஞ்சத்தன் தோழி நின்னிலை
யான்தனக் குரைத்தனெ னாகத்
தான் நாணினன் இஃ து ஆகாவாறே (குறுந்: 265 – கருவூர் கதப்பிள்ளை)
தோழியின் நன்மொழிகள் தலைவியின் உள்ளத்தில் சற்றே தேறுதலையும், தலைவன் விரைவில் பொருள்தேடிக்கொண்டுவந்து தனக்கு அருள்செய்வான் எனும் நம்பிக்கையையும் விதைத்தன.
இதுபோல் சிலநாள்கள் தேறியிருப்பதும் பின்னர் மீண்டும் தலைவன்மீது நம்பிக்கையிழந்து மனம்வாடுவதுமாகவே தலைவியின் நாள்கள் கழிந்தன. தலைவியின் நிலையை நன்குணர்ந்த தோழி தினமும் அவளைத் தேடிவந்து இன்மொழிகள் சொல்லிச் செல்வதை வழக்கமாய்க் கொண்டிருந்தாள்.
அன்றும் அவ்வாறே தலைவியைக் காண அவள் இல்லத்துக்கு வந்தாள். அவளிடம் தலைவி, “பெண்ணே! தாய்முகம் நோக்கி வளருந் தன்மையுடைய ஆமையின் பார்ப்பைப் போலத் தலைவரைப் பலகாலம் திரும்பத் திரும்பக் காண்பதால் வளருந்தன்மையுடைய காமமானது, அவர் நாம் செயலறும்படி நம்மைப் பிரிந்து கைவிட்டால் தாயில்லாத முட்டை உட்கிடந்து அழிவது போல, உள்ளத்துள்ளேயே கிடந்து மெலிவதன்றி வேறு என்ன உறுதியைத் தரக்கூடும்? என்னை இடித்துரைப்போர் (தோழியைக் குறிப்பால் உணர்த்துகிறாள்) இதனைச் சிறிதேனும் அறிந்திலர்” என்றாள் சற்றே காட்டமாக.
யாவதும் அறிகிலர் கழறு வோரே
தாயின் முட்டை போலவுட் கிடந்து
சாயின் அல்லது பிறிதெவன் உடைத்தே
யாமைப் பார்ப்பின் அன்ன
காமங் காதலர் கையற விடினே. (குறுந்: 152 – கிள்ளிமங்கலங்கிழார்)
இதே கருத்தமைந்த பாடல் ஐங்குறுநூற்றிலும் காணக் கிடைக்கின்றது.
தீம்பெரும் பொய்கை யாமை யிளம்பார்ப்புத்
தாய்முக நோக்கி வளர்ந்திசி னாஅங்கு
அதுவே யையநின் மார்பே
அறிந்தனை யொழுகுமதி யறனுமா ரதுவே” (ஐங். 44)
தாயின் நினைவினால் முட்டையுள் கருப் பார்ப்பாகி, பின் அப்பார்ப்புத் தாய்முகம் நோக்கிவளரும் எனும் பொருளை மேற்கண்ட இரு இலக்கியப் பாடல்களும் நமக்கு அறியத் தருகின்றன. தாயின் அன்பும் அரவணைப்பும் இன்றேல் புவியில் எவ்வுயிரும் வாழ்தல் அரிது. இக்கருத்தைத் தலைவனின் அன்பையும், அவனோடு உடனுறையும் மணவாழ்வையும் பெறாத தன்னிலைக்கு உவமையாக்குகின்றாள் தலைவி.
”இந்தப் பெண்ணை நான் எப்படித்தான் தேற்றுவது…?” என்று யோசனையில் ஆழ்ந்தாள் தோழி. வேறு வழியில்லை…! நயமாகத் தேற்றித்தான் ஆகவேண்டும்; அன்றேல் தலைவன் குறித்த கவலையே இவளைத் தின்றுவிடும்; உயிரோடு கொன்றுவிடும் என்று எண்ணியவளாய்,
“தலைவன் எங்கே போய்விடப் போகிறான்? சித்தனைப்போல் பூமியைத் தோண்டி உள்ளே இறங்கிவிடப்போகிறானா? வானில் ஏறிவிடப் போகிறானா? அல்லது கடலின்மேல் நடந்துசென்றுவிடப் போகிறானா? பூமியில்தானே எங்கேனும் இருப்பான்? நாடு நாடாக, ஊர் ஊராக, முறையாகக் குடிகள் தோறும் ஆராய்ந்தால் அகப்பட்டுவிடப் போகிறான்! நான் அவனைக் கண்டுபிடித்து உன்முன் நிறுத்துகிறேன் பார்!” என்றாள் பொய்யான கோபத்தை முகத்தில் தேக்கிக்கொண்டு.
நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரும் உளரோநம் காத லோரே. (குறுந்: 130 – வெள்ளிவீதியார்)
இதைக் கேட்ட தலைவிக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்துவிட்டது. வெள்ளிக்காசுகளை அள்ளிக்கொட்டியதுபோல் கலகலவென நகைத்தாள். பேச்சில், சொல்வீச்சில் வல்லவளான தோழியின் நகைச்சுவை உணர்வுக்கு இப்பாடல் நற்சான்றாகிறது.
தலைவனின் வரவை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருந்த தலைவியின் இல்லந்தேடி அப்போது வேறொரு சோதனை வந்துசேர்ந்தது.
[தொடரும்]