வான வேடிக்கை..!
பெருவை பார்த்தசாரதி
நானிலத்தில் நலமுடனே வாழும்நன் மக்களுக்கு..
……….நேரும் துன்பம்போக்க அவதரிப்பான் இறைவன்.!
மனிதனாக மண்ணுலகில் மறைமுகமாய்ப் பிறந்து..
……….மக்களின் பக்திநலத்தை தன்னுள்ளே பேணுவான்.!
புனிதனாமவன் பிறக்குமுன் அதிசயங்கள் நிகழவே..
……….புதியஜீவன் பூவுலகில் பிறக்குமென பெருங்குரலில்..
தொனிக்குமொரு அசரீரிச்சொல் எழுமாம்..? அப்போது..
……….வானவேடிக்கை பலவுமங்கே விண்ணிலே நிகழும்.!
இதிகாச மன்னரான இராமனையும் கண்ணனையும்..
……….இன்றுமென்றும் துதிக்கிறோம் இறையவன் ஆனதாலே.!
அதிசயமாம் மனிதருக்கு அவர்களின் அருஞ்செயல்..
……….ஆகையாலதை விழாவாகக் கொண்டாடி மகிழ்வோம்.!
மதியிலா அரக்கர் தம்மக்களையே துன்புறுத்தியதால்..
……….மானுடனாய் அவதரித்து அவர்களையே அழித்தான்.!
மதிப்பில்லா அரக்கரழிந்ததை தீமையொழிந்த தினமாக..
……….மாபெரும் விழாவாக மண்ணுலகில் நடத்துகின்றோம்.!
மதிக்கத்தக்க நம்பண்பாட்டில் மரணத்தைக் கொண்டாட..
……….மாபாவியசுரனெனும் தீமை அழித்தான் மாயக்கண்ணன்.!
உதிக்கும் பண்டிகையில் வாழ்விலொளி ஏற்றும்நாளாக..
……….உருவான உன்னத விழாவாகியது தீபஒளித்திருநாள்.!
கொதிக்கும் செங்கதிரெழுந்து வானம் சிவப்பாக்குமுன்..
……….கொளுத்திய பட்டாசுவெடித்து வானவேடிக்கை காட்டும்.!
அதிசயமாய் அதிகாலை அன்றுமட்டும் கண்விழிப்போம்..
……….அதிகமான சப்தஒளியுடன் வானவேடிக்கை காண்போம்.!
==========================================
நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::23-10-17
நன்றி:: படம்..கூகிள் இமேஜ்