Blog

  • ஞானச் சுடர் [2]

    -இன்னம்பூரான்
    அக்டோபர் 25, 2017

    innam

    பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா எனப்படும் பாரதவர்ஷம் முழுவதையும் ஒரு மன்னர்பிரான் ஆண்டுவந்தார். வெண்குடை, கிரீடம், சாமரம், சிம்மாசனம், செங்கோல் போன்ற அரசாட்சி சின்னங்களும், பட்டு, ஜரிகை, பீதாம்பரம் போன்ற படாடோப ஆடைகளும், ஜொலிக்கும் வைரம், மரகதம், வைடூர்யம், பவழம், நன்முத்து போன்றவை மாசறு பொன்னில் பதித்த அணிகலன்களையும் அணிந்து அவன் யானை மீது அமர்ந்தோ, குதிரை சவாரி செய்தோ, இரதத்தில் பவனி வந்தோ, அந்தப்புரத்திலிருந்து அரண்மணை தர்பார் மண்டபத்துக்கு வருவது கண்கொள்ளாக்காட்சி என்று மக்கள் கூறுவர். ராஜகுரு, மந்திரிமார், தளபதி ஆகிய உயர் அதிகாரிகள் நாணயத்துக்கும், வாய்மை அணுகுமுறைக்கும், மக்கள் நலத்துக்கு உழைப்பதற்கும், ராஜவிசுவாசத்திற்கும் அழியாப்புகழ் பெற்றவர்கள். சுற்று வட்டாரங்கள் அவரவர் பொறுப்புகளைக் கவனத்துடன் சிறப்பாக ஆற்றுவதில் ஈடு, இணை இல்லாதவர்கள். சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வு கிடையாது. தகுதிக்கு மட்டும் தான் மதிப்பு. சிபாரிசு என்பது மன்னனுக்கு ஒவ்வாதது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் இருந்தது என்று பேசிக்கொள்வார்கள்.

    அந்தக்காலத்தில் பல மனைவிகளை மணந்து கொள்ளும் வழக்கம் கிடையாது. ஆகவே, மஹாராணி என்ற அந்தஸ்து ஒரே ஒரு அழகிய பெண்மணியை மட்டும் சாரும். அவரும் சுயம்வரத்தின் போதுதான் இவரைத் தேர்ந்தெடுத்தார். ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்ற உலகவழக்குக்கிணங்க, அந்தப்புரத்தில் அவள்தான் ராணி. ராஜா அவளை தாஜா பண்ணுவதே ஒரு சுவையான காட்சி என்று தாதிகள் தங்கள் தங்கள் கணவர்களிடம் கூறி, அடக்கி ஆள்வார்கள். அலங்காரத்தில், அரசனை விட ஓர் இம்மி அளவு குறைவு இல்லை என்றாலும், அவர் குணவதி. ராஜகுமாரி அரசுப்பள்ளியில் தான் படித்துவந்தாள். மதிய உணவு அரண்மணையிலிருந்து வராது. மற்றவர்களுடன், அவளும், வரகுச்சோறு, கம்பங்கூழ், கேழ்வரகு அடை, தினைப் பாயசம் போன்றவற்றை உண்டு ஆரோக்யமாக இருந்தாள். செல்வனின் மூதாதையர்கள் கூடப் பிறவாத காலமது. பேலியோ டயட் நடைமுறைக்கு வரவில்லை. பசுஞ்கன்றுகளும் சேஃப்; பன்றிக்குட்டிகளும் சேஃப்; மீன்குஞ்சுகளும் சேஃப்; காடை கெளதாரிகளும் சேஃப். வாத்துக்கள் அன்னநடை போட்டன. புலியும் ஆடும் நட்பு பாராட்டி ஒரே ஓடையில் நீர் பருகின. ஆனாலும், பக்கத்து ராஜாங்கத்தில் சிலர் மர்மமான பேலியோர்கள் என்று இலைமறைவு காய்மறைவாகச் சொல்லப்படுவது உண்டு. இது நிற்க.

    சுருங்கச்சொல்லின், அரசாட்சியின் மேன்மை பாதரசக்கண்ணாடி போல் மக்கள் முகத்தில் மகிழ்ச்சியாகத் திகழ்ந்தது. இப்படியிருக்கும்போது ராஜாவின் முகம் ஒருநாள் இருண்டது. அவர் கவலையில் ஆழ்ந்து விட்டதைக் கண்டு, ராணியும், ராஜகுமாரியும் கண்கலங்கினர். தாதிகள் மூலம் ட்விட்டர் துணுக் போன்றவைத் தற்கால டெங்குவைவிட வேகமாகப் பரவியதால், மக்களும் யாது செய்வது என்று தெரியாமல் தவித்தனர். அரண்மனைக்கு எதிர்வாடையில் ஒரு மினி தர்பார் மண்டபம் உளது. அங்கு அரசர் வரும் மரபு கிடையாது. எனவே, ராஜகுரு, மந்திரிமார், தளபதி ஆகிய உயர் அதிகாரிகள் அங்கு கூடி மந்திராலோசனை செய்தார்கள்; குழப்பம் கூடியது தான் மிச்சம்.

    [தொடரும்]

    ***

    சித்திரத்துக்கு நன்றி:
    https://i.ebayimg.com/images/g/~OAAAOSwCQZZB-lj/s-l225.jpg

     

     

     

    Share
  • புலவர் சூ.தாமசின் படைப்புகளில் வேளைநகர் அன்னையின் சிறப்புகள்

    -அ.அல்போன்ஸ் சிந்தியா  

    அமைதியின் உருவமாய், அழகின் வடிவமாய், உத்தமப் பெண்ணாய், அறத்தின் இமயமாய்த் திகழ்பவள் அன்னை மரியாள். முப்பொழுதும் கன்னியாய் இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து ஈன்றெடுத்த மகன் இயேசு கிறிஸ்து. இருப்பினும் தியாகத்தின் திருவுருவமாகவும், உலக மக்களின் தாயாகவும் திகழ்பவள். இவ்வன்னையின் புகழை, தனித்தன்மையை, புதுமையைப் பல்வேறு வடிவங்களில் கவி செய்துள்ளார் புலவர்  தாமஸ் அவர்கள். இவர் 1910 ஆகஸ்டு நான்காம் நாள் அன்று தஞ்சை மாவட்டத்தில் கோட்டரப்பட்டி என்ற சிற்றூரில் பிறந்தார்.

    திருக்காட்டுப்பள்ளி சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை பயின்றார். அதன்பின் அவர் பெரிய தகப்பனார் வைத்திருந்த தேம்பாவணி, அரிச்சந்திர புராணம் முதலிய நூல்களைப் படித்ததனால் அப்பெருமனாருக்குத் தமிழ் ஆர்வம் ஏற்பட்டது. அதனால் உந்தப்பட்டு 1931 ஆம் ஆண்டு அவரது உறவினரும் திருச்சி ஆர்.சி.பயிற்சிப் பள்ளி தமிழாசிரியருமான சுயம்பிரகாச உடையார் வீட்டில் தங்கி, மதுரைத் தமிழ்ச் சங்கப் பிரவேச பண்டிதத் தேர்வுக்குப் படித்து 1932ஆம் ஆண்டில் வெற்றியும் பெற்றார்.

    1933இல் அவருக்குத் தெரிந்த ஒரு பெரியாரின் உதவியால் உள் மாணவனாகச் சேர்ந்து 1936இல் தனித்தமிழ் வித்வான் தேர்வில் வெற்றி பெற்றார். 1938ஆம் ஆண்டில் தூத்துக்குடி தூய சவேரியார் உயர்நிலைப் பள்ளியில் ஓராண்டு தமிழாசிரியராக இருந்தார். 39ஆம் ஆண்டு முதல் தஞ்சை தூய இருதய மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 22 ஆண்டுகள் தமிழாசானாய் விளங்கி ஓய்வுபெற்றார். அவரது உயர்ந்த பணியால் சிறப்பும் பெற்றார்.

    தமிழில் பல கிறித்துவ இலக்கியங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. அவற்றுள் சிற்றிலக்கிய வகைமைகளை அடிப்படையாகக் கொண்டு தஞ்சைப் புலவர் சூ.தாமஸ் அவர்கள், சிறப்புடைய பத்தொன்பது தலைப்புகளை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு ‘ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ என்னும் தலைப்பில்  வெளிவந்துள்ளன. இறைமகன் ஏசுவின் எண்ணற்கரிய வாழ்வியல் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கவிபாடியுள்ள திறம், இலக்கிய இலக்கணச் செழுமை, சிற்றிலக்கிய வகைமை போன்றவை கிறித்துவ இலக்கிய வரலாறுகளில் நிலைத்த புகழ்பெற்று சிறப்படைந்துள்ளது.

    இந்நூலிற்கு வணக்கம் தெரிவித்த சிந்தனைச் செல்வர் புலவர் நாகசண்முகம் அவர்கள், “போற்றத்தக்க நூல் எழுதுவது கருவூலத்திற்குச் சிலை வடிப்பதைப் போன்றது. அந்த நூலைச் சீரோடும் செம்மையோடும் பதிப்பிப்பது என்பது ஆலயம் எழுப்புவது போன்றது என்பன இளமைக் காலத்திலிருந்தே என் கருத்தோடு கலந்துவிட்டவை” என்று  கூறியுள்ளார். அவ்வாலயத்தில் இருக்கும் இறைவனே இப்புத்தகம்தான் என்பது என் கருத்து. புலவரின் புலமையை நிலைநாட்டும் விதமாக அவரது இலக்கியச் சுவையையும் அன்னையின் சிறப்பினையும் அரிய கருத்துக்களையும் வெளிக்கொணருவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    வேளைநகரின் இயற்கை செழிப்பு   

    புலவர் சூ.தாமசின் படைப்புகளில் முதலாவதாக, வேளை நகர் அன்னையின் பெருமைகளையும் அற்புதங்களையும் கருணைகளையும் எடுத்தியம்பும் திறம் வியப்பிற்குரியதாகும். இறை இயேசுவின் தாயாக விளங்கும் தூய கன்னிமரியாள் அற்புதக் காட்சி கொண்டு உறைவிடமாக வீற்றிருக்கும் வேளைநகர், பார்ப்பவரின் கண்ணைக் கவர்ந்திடும் வண்ணம் உன்னதக் காட்சிகள் பெற்று விளங்கும். ஒவ்வொரு நாளும் அருவியிலிருந்து விழுந்து கொண்டிருக்கும் நீரின் சத்தம் முழவின் ஓசையைப்போல் ஒலி எழுப்பும். குயில்கள் இசையை எழுப்பிக் கொண்டும், மயில்கள் நாடகப் பெண் போல நடனமாடிக் கொண்டும் மகிழும் காட்சி மனத்திற்கு குளிரூட்டும். இதனைப் புலவர்,

                  “நித்தம் அருவியில் நீர் குதிக்கும் – அந்தச்
                   சத்தம் முழவினைப் போல் தொனிக்கும்
                   நத்தும் குயில்கள் இசை முழக்கும் – மயில்

                   நாடக மாதரைப் போல் நடிக்கும்”   (ஏ.தீ – 1:3)  

    என்ற வரிகளால் சிறப்பித்துள்ளார். மேலும் அந்நீரில் வாளை மீன்கள்; துள்ளிக் குதிப்பதையும் குளத்தில் தென்னங்குலை சாய்வதையும் தாழை மடல் மணம் வீசுவதையும் அழகுபடுத்தியுள்ளார்.

    வேளை நகரில் வயல்களின் செழிப்பு

     ஞாயிறு தோன்றி தன் கதிர்களை பரப்பும் முன், உழவர்கள் வயலிற்குச் சென்று உழவுத்தொழில் ஈடுபட்டிருப்பார்கள் அச்சூழலில் காலை வேளையில் குரங்கினங்கள் இளநீர் பறித்துப் பாதசாரிகள் மீது வீசி ஆர்ப்பரித்து விளையாடி ஆரவாரிக்கும் சிறப்பினையும், நெற்கதிர்கள் கரும்பினைப் போல் வளர்ந்து காட்சித்தரும் தன்மையினையும், சேறு நிறைந்த வயல்களில் நண்டு உறங்கிக் கொண்டிருக்கும் செயலினையும், சேவல் அதன் பெடையோடு கண்ணுறங்குவதையும் நாற்று நடும் பெண்களின் இசையினையும் பறவையினங்கள் அதைக் கேட்டு மகிழும் திறத்தினையும் செம்மைபடுத்தியுள்ளார் இதனை,

              “சாலைக் குரங்கிள நீர் பறிக்கும்”         (ஏ.அ.தீ-1:7)
              “செந்நெல் கரும்பினைப் போல் வளரும்”  (ஏ.அ.தீ-1:8)
              “சேவல் பெடையோடு கண்ணுறங்கும்”   (ஏ.அ.தீ-1:10)

    என்ற பாடல் வரிகளால் அறியலாம்.

    மந்தியின் செயல்கள்

    இயற்கையின் எழிலைக் கண்டுணர்ந்த புலவர், ஆலமரத்தில் தொங்கும் விழுதுகளைக் கண்டு பாம்பென்று அஞ்சி குரங்குகள் ஒதுங்கும் காட்சியினை எடுத்தியம்பும் திறம் சிறப்பிற்குரியதாகும். இதே கருத்தினை வாணிதாசன் கவிதை தொகுப்பில், உயிர் வாட்டும் காலம் என்னும் தலைப்பில்,

              “பசு மூங்கில் தேனடையைச் சிதைத்துண்ட மந்தி
               மால் கொண்ட கடுவன்வால் பாம்பென்
               றஞ்சும்” என்ற வரிகளால் மந்தியின் செயல்பாடுகளை ஒப்பு நோக்கி அறிய முடிகிறது.

    இடையர்குலச் சிறுவன் கண்ட அதிசயம்

    வேளைநகருக்குச் சற்றுத் தொலைவில் ஒரு சிற்றூர் பழங்காலத்தில் அதனை வேளாளர் காணியென்று அழைப்பர். சிலர் ஏருழுதும், சிலர் பால் கறந்தும், சிலர் மீன் பிடித்தும், சிலர்  குற்றேவல் செய்தும் வாழ்ந்து வந்தனர். பழைய ஊரான அச்சிற்றூரில் ஓர் தெருவில் வசித்து வந்த பெண் வறுமையுற்று வாழ்ந்து வந்தாள். அப்பெண்ணின் தனித்தன்மையைப் புலவர், 

              “கன்ன லெனப்படும் மென் மொழியாள் – இரு
               காதள வோடிய நீள் விழியாள்
               அன்ன மெனப்படும் நன்னடையாள் – அந்த
               ஆயர் குலத்துக் கொடியிடையாள்”        (ஏ.அ.தீ-1:33) என்ற வரிகளால் உவமைகள் வாயிலாக வர்ணித்துள்ளார் ஆசிரியர்.

    அம்மங்கைக்கு  ஓர் ஆண் குழந்தை இருந்தது. பசுவும் கன்றுமே அவளுக்குச் சொத்தாக இருந்தது. காலையில் எழுந்ததும் குளித்து, வீட்டு வேலைகளைச் செய்து முடித்து, துயிலும் மகனை எழுப்பிவிட்டு பால் கறக்கச் சென்றாள். பால் செம்பை எடுத்துச் செல்ல மறந்து சிறிதும் பொறுப்பில்லாமல் விளையாடும் தன் மகனை அழைத்து, வறுமையறியாத மகனே!  நீ செல்ல தாமதித்தால், அடுப்பில் பூனை உறங்கும், கையில் காசும் இல்லை. அதனால் கவலை அதிகரிக்கும். எனவே நாகைக்கு விரைவாகச் சென்று வா என்று மொழிந்தாள். தாயின் புலம்பலைக் கண்ட அச்சிறுவன் மிக நொந்து கொண்டு மனமில்லாதவனாய் அடிமேல் அடி வைத்து கண்ணீர் ததும்ப மெல்ல மெல்ல நடந்து சென்றான். வெயிலின் வெம்மை அதிகரிக்கச் சிறுவனின் கால்கள் மண்ணில் பதிய மறுத்தன என்பதால் இளைப்பாற நினைத்துக் குளக்கரைக்கு அருகில் இருந்த ஆலமர நிழல் கண்டு ஒதுங்கினான். தென்றல் வீசவும், கிளைமீதினில் கிளிகள் பேசவும், தனிமையில் களைப்பு நீங்கவும் கண்ணை சுழற்றி உறங்கவே நல்லதொரு தூக்கத்தில் இனிமையானதொரு கனவும் தோன்றியது.

    கன்னியும் குமாரனும்

    சிறுவனின் கனவில் ஒரு பெண் வந்தாள். அவள் அழகிற்கு இணையேதும் இல்லை. அவள் கையில் ஒரு குழந்தை தூய்மையான சந்திரன்போல் ஒளி வீசியது. இக்காட்சியைக் கண்ட சிறுவன் விழித்துக் கொண்டான். களை சொட்டும் முகத்துடன் அவ்வன்னை அருகில் வர, சிறுவன் என்ன செய்வதென அறியாது திகைத்தான். கண்ணை கசக்கி இரு கைகளையும் கூப்பி நின்றான். தாயைக் கண்டு வியந்தான், அதிசயித்தான், தன்னை அறியாது மகிழ்ச்சியில் மூழ்கினான். இருப்பினும்  அவனுள் அச்சமும் ஏற்பட்டது. அத்தகைய அழகுமிக்க அன்னை மற்றும் சுதனின் தோற்றப் பொவை,

              “ கன்னி யொருத்தி இது போலே – எங்கும்
               கண்டறியேன் இப் புவிமேலே
               சின்னக் குழந்தை யோர் சித்திரமே – அதன்
               சிரிப்புதான் என்ன விசித்திரமே”          (ஏ.அ.தீ-1:53)

    என்ற வரிகளால் அழகுபடுத்துகிறார் புலவர். தாயைக் கண்ட வியப்பில் ஆழ்ந்தான் சிறுவன். அவ்வேளையில், அத்தாய் பச்சைக் குழந்தையைக் காட்டி, செம்பின் பக்கம் கையை நீட்டிக் கொஞ்சம் பால் தருவாயா பிள்ளைக்கு என்று கேட்டாள். கையில் செம்பைக் கொடுத்தான். அதை தெய்வச் சிறுவனும் உண்டு களித்தான் நன்று என்று வாழ்த்தி மகிழ்ந்தாள் செம்பை கொடுத்துவிட்டு மறைந்தாள்.

    சிறுவனின் மகிழ்ச்சியும் பயமும்

    மெய்ம்மறந்த மகிழ்ச்சி ஒருபுறம் இருக்க, செம்பில் பால் குறைந்த வருத்தத்தில் நாகைக் காரனின் சினம் கண்டு வருந்தி செம்பை மறவாமல் எடுத்துச் சென்றான். நாகையில் அந்த எஜமான் பால் வரவில்லையே என்று சினம்கொண்டு  தெரு வீதியைப் பார்த்தே சலித்துப் பாவி மகனின் பால் இனி எதற்கு என்றே திட்டித் தீர்த்தான். நடுங்கி வந்த சிறுவன் எஜமானின் சினம் கண்டு செம்பை வைத்துவிட்டு செம்பில் பால் குறையும் என்று சொன்னபடி ஓடினான். எஜமான் செம்பைத் திறக்க பால் பொங்கி வழிந்தது கண்டு மயங்கினான், சிறுவனும் வியந்தான். என்ன நடந்தது என்று கேட்க, சிறுவன் நடந்ததைக் கூற, மனம் குழம்பி என்னையும் அங்கு அழைத்துச்செல் என்று கூறினான் சிறுவனும் அழைத்துச் சென்றான். 

    குளக்கரைக்கு அருகில் உள்ளம் உருகி நிற்கவே அந்த தாய் மறுபடியும் மகனுடன் வந்து காட்சி தந்தாள். எஜமான் கைகுவித்து வணங்கினான். இதனை,

              “ கண்டு வணங்கியே கைகுவித்தார் – தெய்வக்
               கன்னியிவள் எனவே மதித்தார்
                நின்ற பிறகும் அதிசயித்தார் – கண்ட
               நின்மலத் தாயினை யேதுதித்தார்”        (ஏ.அ.தீ-1:71)

    என்ற பாடலால் காட்சிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். அன்று முதல் ஆலமரக்குளம் தெய்வ அன்னையின் மாதாக்குளம் என்று  அழைக்கப்பட்டது. இக்காட்சி வேளாங்கண்ணி பழைய கோவிலில் இன்றும் பக்தர்களின் பார்வையில் உள்ளது. அன்னையின் ஆசிர்பெற்ற இறைமக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

    சற்குணத்தாயும் சப்பாணி மகனும்

         அவ்வேளை நகரிலே ஓர் விதவை மோர்விற்றுப் பிழைத்து வந்தாள். அவளுக்கு கால்கள் ஊனமுற்ற மகன் ஒருவன் இருந்தான். மரத்தால் சூழப்பட்ட வேளாங்கண்ணியில் நடுத்திட்டு என்னுமிடத்தில் மோர் பானையை வைத்துவிட்டு தன் முடமான மகனை அமரவைத்துவிட்டுச் செல்வாள். அவனும் திறத்துடன் விற்றுத்தருவான். அம்மோரின் சுவையை அழகிய வரிகளால் வர்ணிக்கும் பண்பை,

              “ மிக்க கரும்பின் சுவைநீரோ – தெங்கில்
               மேவிக் குளிர்ந்த இள நீரோ
               செப்பும் அமுதினம் மேலாமே – அந்தச்
               சிறுவன் வழங்கிடும் மோர்தாமே”         (ஏ.அ.தீ-1:79)

    கரும்பு, இளநீர், மற்றும் அமிழ்தின் சுவையைக்காட்டிலும் சிறந்ததாக கூறும் பண்பு சிறப்பிற்குரியது. தள்ளாச் சிறுவனின் மொழி பாகுபோன்று இனிக்கின்ற தன்மையால் வழியில் செல்லும் மனிதரெல்லாம் மோர் அருந்திச் செல்வார்.

    அன்னையின் இரக்கமும் அற்புதமும்

     ஏழையின் துயர்நீக்க அன்னை அப்பெண்ணின் வறுமையை போக்கவும் தனக்கென ஓர் ஆலயம் எழுப்பவும் எண்ணி ஓர் அற்புதம் நிகழ்த்தினாள். அன்றொரு நாள் சிறுவனின் மோர் வாங்குவோரின்றி கிடந்தது. பொழுது சாய்ந்தும் யாரும் வரவில்லையே என வருந்தியிருக்கும் நிலையில், அன்னை காட்சி தந்தாள் தன் மகனோடு. அன்னையின் தோற்றப் பொலிவை,

              “அருளைச் சுரந்திடும் மான் விழியாள் -ஞான
               அமுதைச் சொரிந்திடும் தேன் மொழியாள்
               இருளை அகற்றும் மதிமுகத்தாள் – தஞ்சம்
               எவருக்கும் வழங்கும் தளிர்பதத்தாள்”          (ஏ.அ.தீ-1:85)

    என்று அன்னையின் அழகை அள்ளிப்பருகும் கவிஞர் தமிழ் எழுத்துக்களால் ஓவியமாக்கிக் காட்டும் புலமை வியப்பில் ஆழ்த்துகிறது. அன்னையின் கையில் உள்ள குழந்தை ஒளிவீசும் தங்கப் பதுமை போல் விளங்குவதாக பெருமைப்படுத்தியுள்ளார். அன்னை சிறுவனை அழைத்து, “சிறிது மோர் கொடு” என்று கேட்கிறாள். அன்னையின் காட்சியைக் கண்ட சிறுவனின் செயலாக்கத்தை புலவர்,

              “விழியொளி பெற்ற குருடனைப் போல் – நாட்டின்
               விடுதலை பெற்ற புருடனைப் போல்
               குளிர்மழை பெற்ற பயிரினைப் போல் – முழுக்
               குணம்வரப் பெற்ற  உயிரினைப் போல்
               தாங்கா மகிழ்ச்சியைக் கொண்டானே – மோரைத்
                தாராள மாய்மொண்டு தந்தானே”         (ஏ.அ.தீ-1:88,89)

    போன்ற வரிகளால் எடுத்தியம்பியுள்ளார். சிறுவனின் காலில், கன்னி மற்றும் சுதனின் கண் ஒளிபட சுகமாயின. அதை உணராதவனாய் திகைத்த சிறுவனிடம், “நல்ல மோர் தந்ததால் நானும் மகிழ்ந்தேன் நான் சொல்லும் உதவியைச் செய்வாயா? சற்றுத் தொலைவில் உள்ள நாகைக்குச் செல்வாயா? அங்கு கிறித்துவ பக்தன் ஒருவன் உள்ளான் அவனிடம் நான் இங்கு இருப்பதாக கூறிவிட்டு வா” என்றாள். ஊனத்தை சொல்ல முடியாமல் தயங்கிய சிறுவனை, “கால் ஊன்றியே நட” என்றாள் அவனும் நடந்தான். அதிசயம் ஆனாலும் உண்மை. துள்ளி ஓடினான். நாகைக்காரனை அழைத்து வந்தான். இருவரும் மண்டியிட்டு புகழ அன்னை மறுபடியும் காட்சி தந்தாள் ஓர் ஆலயம் கட்டப் பணித்து மறைந்தாள். உடனே சின்னக் குடிசைக் கோவில் ஒன்று கட்டினான் அன்னையின் சொரூபம் கொண்டு அமைத்தான். அவ்வாலயத்தின் அருள் பொலிவை,

              “அன்றுமுதல் மக்கள் வந்தாரே – வேண்டி
               ஆரோக்கியம் பெற்றுச் சென்றாரே
               நன்றியாய் ஆரோக்கியத் தாயெனவே – ஒரு
               நாமஞ் சூட்டி மகிழ்ந்தாரே”.         (ஏ.அ.தீ-1:101)

    போன்ற வரிகளில் அன்னையின் அற்புதச் சிறப்பை மொழிந்துள்ளார்.

    மேலை நாட்டு வணிகர்

    சீன நாட்டிலிருந்து இந்தியாவை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போர்த்துகீசியரின் கப்பல் பெரும்புயல் ஒன்றில் சிக்கியது. கப்பலிலிருந்த அனைவரும் மரியன்னையை நோக்கி தங்களை அபாயத்திலிருந்து காப்பாற்றுமாறும், தங்களைக் கரை சேர்த்ததும், தங்கள் கரை சேர்ந்த இடத்தில் அன்னைக்கு ஓர் கோவில் எழுப்புவதாகவும் மன்றாடினார்கள். அவர்கள் மன்றாட்டு கேட்கப்பட்டது. கொந்தளித்த கடலிலிருந்து மக்களைக் காப்பாற்றி வாழ்வு தந்த அன்னைக்கு கோவில் கட்டி நன்றிக்கடன் செலுத்தினார்கள். இதனை,

              “கன்னி கருணை புரிகுவையேல் – எங்கள்
               கப்பலைக் காத்து தருகுவையேல்
               மண்ணில் உனக்கொரு கோவில் செய்வோம் –
    என்றும்
               மறவோமினி யென நேர்ச்சை செய்தார்”. (ஏ.அ.தீ-1:106)

    என்ற பாடலில் புலவர் சூ.தாமசின் புலமைத் திறன் வெளிப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கோவில் அமைத்த உடனே மரியன்னையின் சொரூபம் தன்னிச்சையாய் வந்தமைந்தது கண்டு அதிசயித்தனர். அவர்கள் கொண்ட துயர் விடப்பட்ட நன்னாள் ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் என அன்று அன்னையின் திருநாளைக் கொண்டாடினர். இவ்வாறு அன்னையின் அரும்பெரும் காட்சிகளை இலக்கிய நயங்களோடும் உவமைப் பொலிவோடும் பாடியுள்ளார் புலவர் சூ.தாமஸ் அவர்கள்.

    *****

    கட்டுரையாளர்
    தமிழ்த்துறை பேராசிரியர்
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
    தஞ்சாவூர்.

     

     

    Share
  • புலம்பெயர் தமிழரும் புதிரான வாழ்வும் – ஈழத்தமிழர் வாழ்வியல் சிக்கல்கள்

    (சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் இடம்பெற்ற கட்டுரை)

    • பொலிகையூர் ரேகா

    அறிமுகம்

                   புலம்பெயர் இலக்கியங்களைப்  பற்றிப் பேசுவதற்கு முன்பாக அத்தகைய இலக்கியங்களுக்குக் காரணமாயமைந்த காரணிகளையும், புலம்பெயர் மக்களின் வாழ்வியலோடு கலந்துள்ள வாழ்வியல் சிக்கல்களையும் பேச வேண்டியது இன்றியமையாததாகும்.

                   காலம் காலமாக வேரூன்றி வளர்ந்த மண்ணிலிருந்து பிடுங்கி வீசப்பட்ட பின்னர் அந்நிய மண்ணில் துளிர்த்தெழுதல் என்பது சவால் நிறைந்ததாகும். சொந்த மண்ணைப் பிரிந்த சோகத்தோடு; அநாதையாக  வாழ்ந்து வேற்று நாட்டிலும் அடையாளமற்றவராகப் புலம்பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்கள் அதிகம். அவை பற்றிய ஓர் ஆய்வே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    புலம் பெயர்தல்

                   ‘’புலம்பெயர்தல்’’ அல்லது ‘’இடம் பெயர்தல்’’ என்பது மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது. பொதுவாக ஒருவரது முன்னோர் பிறந்து வளர்ந்த நிலப்பரப்பே புலம் எனப்பட்டது. அக,புற நெருக்கடிகள் காரணமாக தாம் வாழ்ந்து வந்த இடத்தை விட்டு வேறிடத்திற்குச் சென்று அங்கு தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் புலம்பெயர் மக்கள் / ஏதிலிகள் என அழைக்கப்படுகின்றனர்.புலம்பெயர்தலானது உள்நாட்டிற்குள்ளோ , பிற நாடுகளுக்கோ இடம்பெயர்தலைக் குறிக்கின்றது.

    புலம்பெயர்தலுக்கான காரணிகள்

                   கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழர்கள் பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து கொண்டுள்ளனர். அதற்குப் பல காரணிகள் இருப்பினும் முக்கியமாகக் கருதப்படுபவை பின்வருமாறு:

    • உள்நாட்டுப் போர்
    • அரசியல் காரணங்கள்
    • மனித உரிமை மீறல்கள்
    • இயற்கைச் சீற்றங்கள்
    • கல்வி
    • பொருளீட்டல்
    • வேலையின்மை
    • வறுமை

    சங்க இலக்கியங்களில் புலம்பெயர்தல்

                   “பதியெழு அறியாப் பழங்குடி கெழீஇய”(சிலம்பு)

    எனப் புலம்பெயராது ஒரே இடத்தில் மக்கள் வாழ்ந்த செய்தியைச் செவ்வியல் இலக்கியங்கள் பதிவு செய்ததைப்போன்று புலம்பெயர்தலைப்பற்றி முல்லைப்பாட்டு,நெடுநல்வாடை, புறநானூறு, பட்டினப்பாலை, நற்றினை ஆகியன கூறுகின்றது.

                   “புலம்பெயர் மாக்கள் கலந்தினிது உறையும்” என்று வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்து புகாரில் வாழ்ந்தவர்களைப்பற்றிப் பட்டினப்பாலை எடுத்துரைக்கின்றது. “அவன் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து” என நற்றிணையும், “கலந்தரு திருவின் புலம்பெயர் மாக்காள்” எனக் கடலாடு காதையில் இளங்கோவடிகளும், “ஓதல் பகையே துதிவை பிரிவே” எனத் தொல்காப்பியரும் கூறுகின்றார்.

    ஈழம் ஓர் அறிமுகம்

                     இன்றைய காலப் பகுதியில் “இலங்கை” என்று அழைக்கப்படும் தீவானது முற்காலத்தில் “ஈழம்” என்றே அழைக்கப்பட்டது. பழந்தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட சாசனங்களில் “ஈழம்”, “ஈழ மண்டலம்” என்ற பெயரே பயன்படுத்தப்பட்டிருந்தது. அத்தோடு பழந்தமிழ் இலக்கியங்களில் “ஈழத்துணவு”, “ஈழத்துப் பூதந்தேவனார்” போன்ற சொல்லாடல்களும்  ஈழம் என்பது வரலாற்றோடு தொடர்புடைய பெயர் என்பதை வலியுறுத்தி நிற்கின்றது. ஆக்கிரமிப்புகளின் பின்னரான ஈழமானது தமிழர் பகுதி என்ற எல்லைக்குள் குறுகிப்போய் வந்தேறிகளின் ஆட்சிக்குள்ளாகிப்போனது.

    ஈழத் தமிழர் இடப்பெயர்வு 

                  உலகத் தமிழர் வரலாற்றில் ஈழத் தமிழரின் இடப்பெயர்வு தனித்துவமானதாகும். சிங்களப் பேரினவாதத்திற்குள் மூழ்கிக் கிடக்கின்ற அரச பயங்கரவாதமானது தமிழ் மக்களை அவர்களது சொந்த மண்ணிலிருந்து புலம்பெயரச்  செய்தது.

                   சனநாயகத்திற்குட்பட்ட கோரிக்கைகள் மறுக்கப்பட்ட நிலையில்; உரிமை மீட்புப் போராட்டங்கள் ஆயுதப் போராட்டங்களாக மாறிய பின்னர் பேரினவாத அரசின் கெடுபிடிகளுக்குள் உயிர்வாழ முடியாமல் தமிழர்கள்  பிற நாடுகளுக்கு ஏதிலிகளாக இடம்பெயர்ந்தனர்.

                  1983 ஆம் ஆண்டு இனக் கலவரமும், இராணுவத் தாக்குதல்களும், ஆயுதப் போராட்டங்களும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழவேண்டிய ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது. தம் விருப்பத்திற்கு மாறாக, பிறந்த மண்ணிலே வாழ்வதற்கான உத்தரவாதம் எதுவுமற்ற நிலையில் இடப் பெயர்வானது; உள்நாட்டு இடப்பெயர்வாகவும் பிற நாடுகளில் தஞ்சம் புகுதலாயும் அமைந்தது.

                   உயிர் பிழைத்தலின்பொருட்டுப் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று இந்தியா, இங்கிலாந்து, நோர்வே, கனடா, அமெரிக்கா, அயர்லாந்து, ஆசுத்திரேலியா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, பின்லாந்து, சேர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

    வாழ்வியல் சிக்கல்கள்

                   புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தாம் இழந்த வீட்டையும் நாட்டையும் உறவுகளையும் எண்ணி வருந்துவதன்றிப் பல இன்னல்களையும் அனுபவித்து வருகின்றனர். ஈழத் தமிழினத்தின் போராட்டத்தின் பின்பு புலம் பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு

    • ஏதிலி முகாம்கள்
    • மனநிலை
    • உணவுப் பழக்கங்கள்
    • மொழி
    • காலநிலை
    • நிறவாதம்
    • வேலைவாய்ப்பு
    • ஆளுமைச் சிதைவு
    • தனிமை
    • பண்பாட்டுச் சிக்கல்
    • அடையாளச் சிக்கல்
    • முரண்கள்
    • சுரண்டல்கள்
    • அச்சுறுத்தல்கள்
    • காழ்ப்புணர்ச்சி

    1. ஏதிலி முகாம்கள்

                  பிற நாடுகளுக்கு ஏதிலிகளாகச் செல்பவர்கள் அங்குள்ள அகதி முகாம்களில் தங்க வேண்டியுள்ளது. இச்சூழலில் நிலவும் பாகுபாடுகளும், சட்டதிட்டங்களும் தனிமனித சுதந்திரத்தைப் பாதிப்பதாகவே அமைகின்றது. நிம்மதியாக வாழவேண்டித் தாய்நாட்டைத் துறந்து வந்தவர்கள் இங்கேயும் கட்டுப்பாடுகளுக்குள் வாழ்தலென்பது கவலையளிப்பதாகவே அமையும்.

    1. மனநிலை

                   இயல்பாகவே உயிர்களிடத்திலுள்ள இழந்தது குறித்த ஏக்கமானது பூர்வீக நாட்டையும்,புகலிட நாட்டையும்  ஒப்புநோக்க வைத்து மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. வாழும் நாட்டுச் சூழல் ஒத்துப்போகாத நிலையில் பிறந்தநாட்டு ஏக்கமும், நினைவுகளும் விரக்தியைத் தூண்டுகின்றது. போர்ச் சூழலிலிருந்து வெளியேறிப் பல காலம் கழிந்துவிட்ட நிலையிலும் பெரும்பாலானோர்  அதிலிருந்து வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

    1. உணவுப் பழக்கங்கள்

                   இது வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குச் சிறிய விடயமாக இருப்பினும் இதுவும் ஒரு இன்னலாகவே புலம்பெயர்ந்தவர்களால் பார்க்கப்படுகின்றது. நெல்லரிசிச் சோற்றைப் பிரதான உணவாகக் கொண்ட தமிழர்க்கு வெளிநாட்டு உணவுகளின் மேலிருக்கும் மோகம் சிறிது காலத்தில் சலிப்புத் தட்டிவிடும். அத்தோடு குடும்பத்தைவிட்டுப் பிரிந்து தனியே புலம்பெயர் நாட்டில் வசிப்பவராக இருப்பதாலும்  பிறந்த நாட்டு உணவைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகின்றது.

     

    1. மொழி

               பிறநாட்டின் மொழி தெரியாது அங்கு வாழ்தல் என்பது மிகவும்   கொடுமையானது. வெளியில் சென்றால் கேட்கப்படும், பேசப்படும் மொழி விளங்காததாக இருப்பதோடு தெரிந்த சில வார்த்தைகளோடு சமாளிப்பதும், மொழியைக் கற்றுத் தேர்ந்திருப்பினும் மனதில் உள்ளதை உள்ளவாறு  தாய்மொழியில் கூறுவதைப்போல வெளிப்படுத்த இயலாமல் வாழ்வதும் வேதனை அளிக்கக் கூடியதாகும்.

                 வாயிருந்தும் ஊமையாக வாழவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. ஒரே ஊரில் வாழும்போது பிரிவினைவாதம் பேசுபவர்கள்கூட வெளிநாட்டில் தமிழ் பேசுபவனைக் கண்டதும் கடவுளைக் கண்டதைப் போன்று மகிழ்கின்றனர். மனதில் இருப்பதைச் சொந்த மொழியில் கூறுவதை போல வேறு மொழியில் பகிர்ந்துகொள்ள  முடியாதென்பதே உண்மையாகும்

               பெரியவர்களுக்கு மொழியைக் கற்றல் சிக்கலாய் இருப்பது போல இளைய தலைமுறைக்குத் தாம் சார்ந்து வாழும் நாட்டின் மொழியைக் கற்றல் இலகுவாகவும் தாய் மொழியைக் கற்றல் கடினமாயும் போவதால் தாய்மொழியை எழுத, வாசிக்கத் தெரியாத சமூகமாக மாறிவிடுகின்றனர்.

    1. காலநிலை

                 வெயில் கொளுத்தும் வெப்பமண்டல நாட்டுக்குச் சொந்தமான தமிழர்கள்  உடலை உலுக்கும் குளிர்தேசத்தில் ஊசிமுனைகளாய் ஊடுருவும் குளிருக்கு ஈடுகொடுக்க முடியாமலும், நேர மாற்றத்திற்கு தம்மை பழக்கப்படுத்திக் கொள்வதிலும் இன்னல்களை அனுபவிக்கின்றனர். கடல் கடந்து சென்று கால மாற்றத்துக்கு ஈடு கொடுத்து வாழ்தல் என்பது சவால் நிறைந்ததாகவே உள்ளது.

    1. நிறவாதம்

                  புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டும் நிறத்தையும், உருவ அமைப்பையும் கொண்ட தமிழர்கள் நிறவாதம் காரணமாக நிறவெறிச் சிக்கல்களை எதிர் கொள்கின்றனர். பல இடங்களில் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.

    1. வேலைவாய்ப்பு

                   வேலை அனுமதிச் சீட்டு இல்லாமையையும் புலம்பெயர்ந்துள்ளமையையும் காரணம்காட்டி பன்னாட்டு நிறுவனங்கள் தகுதியுள்ளவர்களை வேலைக்கு எடுக்காத சூழ்நிலை இந்தியாவில் பல படித்த புலம்பெயர் தமிழர்கள் எதிர்கொண்டுவரும் சிக்கலாகும். இதேபோன்று வெளிநாடுகளிலும் தமிழர்கள் பெரும்பாலும் கூலி வேலைகளுக்கே பயன்படுத்தப்படுகின்றனர். துப்புரவுத் தொழில், உணவகங்களில் பணியாட்களாக என அடிநிலை வேலைகளுக்கே பணியமர்த்தப்படுகின்றனர். அதுமட்டுமன்றி குறைந்தளவு ஊதியமே வழங்கப்படுகின்றது.உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்

    1. ஆளுமைச் சிதைவு

                   எத்தகைய திறமை இருப்பினும் குடியுரிமை கிடைக்கப்பெறாதாதாலும், மொழிப் பிரச்சனைகளாலும் அதற்கேற்ப வேலைகள் கிடைப்பதில்லை. கிடைத்த வேலையைச் செய்வதற்கு உந்தப்படுகின்றனர். தனி மனித ஆளுமையானது வீணாகிப்போவதில் வெளிநாட்டு வாழ்க்கையும் ஒரு காரணியாகிவிடுகின்றது.

        9.தனிமை

                    தனிமை என்பது நாமாக எடுத்துக் கொள்ளாவிடின் இனிமையைக் குலைப்பதாகவே அமையும். வேலை நேர மாற்றங்களால் குடும்பத்தில் உள்ளவர்கள் முகத்தையே பார்க்க முடியாத சூழலிலும், வயதானவர்களால் தங்கள் பிள்ளைகளின் இயந்திர வாழ்க்கையின் ஓட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாமலும் போவதால் தனிமை கொடுமையாக மாறிவிடுகின்றது. மொழி தெரியாத நாட்டில், அயலினரிடம் கூட பேச முடியாத நிலையில் நினைவெனும் சிறையில் சிக்கிவிடுகின்றனர். இது தாய்நாடு உள்ளிட்ட பிற ஏக்கங்களை அதிகரித்து மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.

    1. பண்பாட்டுச் சிக்கல்

                 தமது பண்பாட்டிற்கு முற்றிலும் வேறுபட்ட அந்நிய மக்கள் மத்தியில் வாழ்வது ஒன்றும் சுலபமானதல்ல. நாம் வழக்கமாகச் செய்யும் சிறு செயல்கள் கூட நம்மை அந்நியப்படுத்திக் காட்டும். நமது பண்பாடுகள்கூட புதுமையாக உற்று நோக்கப்படும். எடுத்துக்காட்டாக நெற்றியில் பொட்டிடும் தமிழ் வழக்கம் அங்கு ஏன் என்ற வினாவுடன்தான் பார்க்கப்படுகின்றது.

                   ஆடை அணிகலன்களிலிருந்து, கொண்டாடும் பண்டிகைகள் வரையில் வித்தியாசமாகப் பார்க்கப்படுகையில் நமது பண்பாட்டைக் கைவிட்டு அந்நாட்டுச் சூழலுக்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டு அவர்கள் விழாக்களில் ஈடுபாடு கொள்ளும் சமூகம் இயல்பாகவே தோன்றிவிடுகின்றது. இது நம் அடையாளங்களைத் தொலைக்க ஒரு காரணியாகிவிடுகின்றது.

    1. அடையாளச் சிக்கல்

                 ஏதிலியாக வாழும் நாட்டில் உண்மை முகத்தை தொலைத்து     வாழவேண்டி உள்ளது. புலம்பெயர் நாட்டில் கடினமின்றி வாழ்வதற்காகப் பல விடயங்களை இழந்து வாழ வேண்டியிருத்தல் சிக்கலான ஒன்றாகும். வைக்கும் பெயர்கூட அந்நாட்டு வாழ்க்கையில் இடையூறாக இருத்தல் கூடாதென்றெண்ணி தமிழ்ப் பெயர்களை விடுத்து வாயில் நுழையாத மேலைநாட்டுப் பெயர்களையும், வடவெழுத்துப் பெயர்களையும் வைக்கத் தொடங்கிவிடுகின்றனர்.புலம்பெயர் நாட்டில் தம்மைத் தக்கவைத்துக்கொள்ளத் தம் அடையாளங்களையும் இழக்கத் துணியும் அவல நிலைக்கு புலம்பெயர் தமிழர்கள் ஆளாகின்றனர்.

    1. முரண்கள்

                  புலம்பெயர்ந்து வந்ததன் காரணம் அறியாத இளைய தலைமுறைக்கும், தாய் நாட்டு ஏக்கத்தோடு வாழும் முந்தைய தலைமுறைக்கும் இடையேயான கண்ணோட்டம் மாறுபடுவதால் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. புகலிட நாட்டின் பழக்கவழக்கங்களால் பெரும்பாலான இளைய தலைமுறையினர் தம் நாட்டுப் பண்பாட்டை மறந்துவிடுகின்றனர். பண்பாட்டில் ஊறிப்போன முந்தைய தலைமுறைக்கு இம்முரண்கள் மன உளைச்சலை அளிப்பதாகவே இருக்கின்றது.

    1. சுரண்டல்கள்

                     வேலையின்மை என்ற சூழ்நிலையில்  எந்த வேலைக்கும் செல்லத் தயாராக இருக்கும் மக்களை குறைந்த சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்துதலும், குடியுரிமை பெறாதவர்களுக்கு  மிக மிகக் குறைந்த சம்பளம் வழங்குவதுமாக புலம்பெயர் நாட்டில்  உழைப்புச் சுரண்டல்கள் இடம்பெறுகின்றன.

      14.அச்சுறுத்தல்கள்

                   தாய்நாட்டோடு ஒப்பிடுகையில் கருத்துச் சுதந்திரம் என்பது புலம்பெயர் நாட்டில் அதிகம் இருப்பினும் அதை புகலிடம் கோரிச் செல்பவர்கள் அதிக அளவில் பயன்படுத்த முடியாது என்பதுதான் உண்மை. அப்படிப் பயன்படுத்தி உரிமைகள் பற்றிப் பேசமுற்பட்டால் தேவையற்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.அடக்குமுறை காரணமாக தாயகத்தைவிட்டு நீங்கியவர்களுக்கு மீண்டும் அடக்குமுறைகளுக்குள் வாழ்தலென்பது கொடுமை நிறைந்ததாகும். இது அவர்களுக்கு அச்சுறுத்தல் நிறைந்த சவாலாகவே அமைகின்றது.

     

    15.காழ்ப்புணர்ச்சி

                  புலம்பெயர் நாட்டினரில் ஒரு பகுதியினர் காழ்ப்புணர்ச்சியோடே ஏதிலிகளை எதிர்கொள்கின்றனர். தங்கள் நாட்டில் தமக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளையும் வேலை வாய்ப்புகளையும் தட்டிப் பறிக்க வந்திருக்கும் எதிரிகளாகவே புலம் பெயர்ந்தவர்களைப் பார்க்கின்றனர். இம் மனநிலை புலம்பெயர்ந்தவர்கள் மீது பலவகையிலும் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. இவற்றால் புலம்பெயர்ந்தவர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகின்றனர்.

      

    புலம்பெயர் இலக்கியம் 

                 புலம்பெயர் இலக்கியமானது புகலிட இலக்கியம், ஆறாந்திணை இலக்கியம் எனவும் அழைக்கப்பட்டது. போரானது “போர் இலக்கியம்” மற்றும் “புலம்பெயர் இலக்கியம்” என இரு வகையான இலக்கியத்திற்கு காரணமாயமைகின்றது. தம் சொந்த நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் தமது தாய் நாடு தொடர்பான நிகழ்வுகள்,வலிகள், ஏக்கங்கள் ஆகியனவற்றையும் புலம் பெயர்தலிலும் புலம்பெயர் நாட்டிலும் சந்திக்கும் இன்னல்களையும் இலக்கியங்களாகப் படைத்தனர். இவையே புலம்பெயர் இலக்கியங்கள் எனப்படுகின்றன.

                  போரின்  கொடுமை, குடும்பங்களின் சிதைவு, உயிரிழப்பு, வெறுமை,ஏக்கம்,

    நினைவுகள் எனப் பலவற்றை வெளிப்படுத்தித் தன்னிரக்கம் நிறைந்தவையாய் வெளிவரும் ஈழத்துத் தமிழ்ப் படைப்புகளை எளிதாகக் கடந்துவிட முடியாது. நல்ல இலக்கியம் அவலங்களிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் பிறக்கின்றன. சொந்த நாட்டில் வாழ்வு மறுக்கப்பட்ட நிலையில் தாம் இழந்துவிட்ட நாட்டையும் உறவுகள் பற்றிய விரக்தியையும், பிரிவாற்றாமையையும் வெளிப்படுத்த  இவ்விலக்கியங்கள் உதவுகின்றன.

                  என்னதான் புலம்பெயர் இலக்கியங்கள் உண்மையின் குரலாக இருப்பினும் பலர் உண்மைகளை ஆவணமாக்குவதை விடவும் சந்தைப்படுத்தலிலே முன்னணி வகிக்கின்றனர் என்பதையும் மறுத்துவிட முடியாது. அதேபோன்று புலம்பெயர் தமிழர்களின் எழுத்துக்களும் எழுத்தாளர்களும் சரியான முறையில் இனங்கண்டுகொள்ளப்பட்டு முழுதாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பதும் இலக்கிய உலகில் குறைபாடாய் உள்ளது.

    முடிவுரை

                     புலம்பெயர்தலானது பல காரணிகளின் அடிப்படையில் நிகழ்வதாயினும் புகலிட நாட்டில் புலம்பெயர் சமூகம் சந்திக்கின்ற இன்னல்கள் எண்ணிலடங்காதவை.இருப்பினும் தங்கள் பண்பாட்டை எப்படியாயினும் கட்டிக்காக்க வேண்டும் என்ற முனைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது அவர்கள் தாயகத்தின்மேல் கொண்ட ஆழ்ந்த பற்றை வெளிப்படுத்துகின்றது.

                  புலம்பெயர் தமிழர்கள் தாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பிறந்த நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டுமென்றெண்ணித் தமது அனைத்து முயற்சிகளிலும் எமது அடையாளத்தை நிலைநிறுத்தும் வண்ணம் வளர்ந்துள்ளார்கள் என்பதும் பெருமைக்குரியதாகும். அதேபோன்று இளைய சமுதாயமும் பண்பாட்டைக் காக்கும் செயல்களிலும், நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் சாதனைகளிலும் உயர்ந்து செல்வதை எண்ணிப் பெருமிதம் கொள்ள வேண்டும்.

                 புலம்பெயர்ந்தவர்கள் தங்களது இன்னல்களையும்,கனவுகளையும், தாயகத்தின் நினைவுகளோடு தாம் அடையும் துயர்களையும், புலம்பெயர் நாட்டிலுள்ள தங்கள் வாழ்க்கை நிலையையும், சொந்த நாட்டின் நிகழ்வுகள் குறித்தும்  பல்வேறு இலக்கியங்களைப் படைக்கின்றனர். இவையே இன்று புலம்பெயர் இலக்கியங்களாக  வெளிவருகின்றது. பெரும்பாலும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே படைக்கப்படுவதால் இலக்கிய வரலாற்றில் புலம்பெயர் இலக்கியங்களுக்கென்று தனிச் சிறப்புள்ளது.

                                 புலம்பெயர் வாழ்வில் பணம் அதிகம் ஈட்டலாம், மகிழ்ச்சியாக வாழலாம் எனும் நல்வாழ்க்கை போன்ற தோற்றத்தைக் காட்டுவதாக இருப்பினும் உண்மையில் அதிக வலியைத்தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. தாய்நாட்டு நினைவுகளும், நிகழ்வுகளுமே புலம்பெயர் தமிழரை விரட்டிக்கொண்டிருக்கின்றது. தாய் நாட்டைப் பற்றிய ஏக்கத்தைப்போலவே புகலிட நாட்டின் மீதான எதிர்பார்ப்பும் கனவாகவே போய்க் கொண்டிருப்பதுதான் புலம்பெயர் தமிழர்களின் உண்மை நிலையாகும்.

                                           **************************

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    171024 b Eternal companion -lr

    ”நினைத்திட நம்முள் நவநீதம் பொங்கும்
    கனைத்திடக் காமம் கலங்கும் -மணத்துழாய்
    திண்ணிய தோளில் துலங்கும் துவாபரக்
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (245)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக தொழிலதிபர் திரு குமார் துரைசாமி அவர்களை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

    குமார் துரைசாமி அவர்களின் சொந்த ஊர் திருப்பூர். பின்னலாடை தொழில் செய்து வருபவர். டாலர் சிட்டி என பெயர் பெற்றிருந்தாலும் சுற்றுச்சூழல் பிரச்சனை திருப்பூரை வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது. இந்தச் சூழலில் தினமலர் நாளிதழ் மற்றும் தமிழக வனத்துறை ஆகியோர் உதவியுடன் திருப்பூர் மாநகர மக்கள் இணைந்து வனத்துக்குள் திருப்பூர் எனும் ஒரு முயற்சியை முன்னெடுத்தனர்.

    இதன்படி அப்துல்கலாம் ஐயா அவர்கள் கனவை நிறைவேற்றும் வகையில் திருப்பூர் எங்கும் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வழக்கமாக இதுபோன்ற நிகழ்வுகளில் மரக்கன்றை நட்டுவிட்டுப் போய்விடுவார்கள். மரம் விரைவில் பட்டுப்போய்விடும். ஆனால் வனத்துக்குள் திருப்பூர் அமைப்பினர் மரங்களை நடுவதுடன் நில்லாமல் அவற்றுக்கு தினமும் தண்ணீர் லாரிகளை கொண்டு நீர் பாய்ச்சி மரங்களை கண்காணித்து வளர்த்தார்கள்.

    பல தனியார் நிறுவனங்கள், கம்பனிகள் ஆகியோரை தொடர்புகொண்டு தொழிலகங்களின் நிலங்களில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டுகோள் விடுத்தார்கள். திருப்பூர் தொழிலதிபர்களும், பொதுமக்களும் இதற்கு மிகுந்த ஆர்வத்துடன் உதவி செய்தார்கள். சில ஆண்டுகளில் இது திருப்பூரா, கானகமா எனக் கேட்கும் அளவு திருப்பூர் பசுமை பொருந்திய மாநகர் ஆகிவிட்டது.

    இரண்டுகட்டமாகத் துவங்கிய இத்திட்டம் 1 .40 இலட்சம் மரங்களை நடுதல் என்ற இலக்குடன் ஆகஸ்ட் 15 ‘2017 அன்று மூன்றாம் கட்டமாக விரிவடைந்தது. இரு மாதங்களில் 75 ,000 மரக்கன்றுகள் நிறைவு பெற்று இலக்கின் பாதியை எட்டவுள்ளது.

    இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் தலைவரும் ஆன தொழிலதிபர் குமார் துரைசாமி அவர்கள் இது குறித்து கூறுகையில் “இன்றைய வனத்துக்குள் திருப்பூர் 3.0 நிகழ்வின் வெற்றி அனைவருக்கும் மகிழ்வளிக்கிறது. குக்கிராமமாக இருந்த இந்த திருப்பூர் இன்று மாவட்டத் தலைநகராக உருவெடுத்துள்ளதென்றால் அதற்கான முழு காரணம் உழைப்பு மட்டுமே, இன்றைய முதலாளிகள் அனைவருமே நேற்றைய தொழிலாளிகள், உழைக்கும் வர்க்கம் இல்லையென்றால் இந்த ஊரின் வளர்ச்சி கேள்விக்குறியே, பல்வேறு இன்னல்களை இந்த நகரம் குறிப்பாக பின்னலாடை தொழில் சந்தித்தபோதெல்லாம் அனைவரோடும் தோளோடு தோள்கொடுத்து வளர்ச்சியை சீராக்கிய பங்கு இங்குள்ள தொழிலாளர்களையும் அவர்கள் சார்ந்த அனைத்து தொழில்சங்கங்களையும் சாரும்.
    தொழில் வளர்ச்சியில் மட்டுமல்ல இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும் எங்கள் கரங்களை கோர்ப்போம்” எனக் கூறினார்.

    மரங்களை நடுவதுடன் நில்லாமல் நீர்நிலைகளை மேம்படுத்தவும் இவ்வமைப்பு பாடுபட்டு வருகிறது. இது குறித்து பேசிய குமார் துரைசாமி அவர்கள் “தான் உண்பதைப் பங்கிட்டுக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் பாதுகாத்தல், அறநூலார் தொகுத்துக் கூறிய அரங்கள் எல்லாவற்றுள்ளும் சிறந்த அறமாகும்” என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப வாழாமல் தொடர்ந்து தான் வாழ பிற உயிர்களை தெரிந்தும் தெரியாமலும் அழித்து வந்ததால் ஏற்பட்ட வினையின் நீட்சி பருவமழை பொய்த்தல், அதன் விளைவாக நீர் நிலைகள் அழிந்து அதன் ஆதாரத்தில் வாழ்ந்த பல்வேறு உயிரினங்கள் அழிந்து அதன் காரணமாக ஏற்பட்ட இயற்கைக்கு முரணான நிகழ்வுகள், விழித்துக்கொண்ட தருணத்தில் இயற்கையைக் காக்கவும் மீட்கவும் இயன்ற அளவு,  தலைப்பட்டு வருகிறோம். அந்த வகையில் எங்கள் வெற்றி அமைப்பு திருப்பூர் மக்களோடு இணைந்து நீர்வழித் தடங்களை செப்பனிட்டு தூர்வாரிய ஆண்டிபாளையம் குளத்தில் பல்வேறு உயிரினங்கள் மீண்டும் வாழத் துவங்கி பதிமூன்று ஆண்டுகள், படத்தில் காண்பது ஆண்டிபாளையம் குளத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் விருந்தாளிகள், குளத்தின் நடுவே செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட இரண்டு தீவுகளில் சர்க்கரை பழம் உள்ளிட்ட பல்வேறு சிறு பழங்களை தரும் மரங்களை நட்டோம், நன்கு வளர்ந்துள்ள இந்த மரங்களில் ஏராளமான பறவையினங்கள் வசிக்கின்றன. காலையிலும் மாலையிலும் அந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண கண் கோடி வேண்டும்.

    மாணிக்கபுரம் குளம், மூளிக்குளம், வேட்டுவப்பாளையம் குளம், அவிநாசி தாமரை குளம் என மாவட்டத்தின் பல்வேறு குளங்கள் பல்வேறு அமைப்புகளால் குறிப்பாக இளைஞர்களும் பொதுமக்களும் இணைந்து தூர் வாரப்பட்டு பருவமழையின் காரணமாக நிரம்பியுள்ளது, அங்கெல்லாம் பல்வேறு உயிரினங்கள் மறுவாழ்வு பெற்றுள்ளன, பறவை இனங்கள் வந்த வண்ணம் உள்ளன, நாளது தேதியில் பல்வேறு அமைப்புகள் மாவட்டம் முழுவதும் மரங்களை நடுவது, அதனை பராமரித்து வளர்ப்பது, நெகிழி ஒழிப்பு, குப்பை மற்றும் கழிவு நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு என ஒரு எழுச்சியுடன் இளைஞர்கள் செயலாற்றுகிறார்கள்.

    இன்னும் 10 வருடங்களில் நிச்சயம் திருப்பூர் மிகப் பசுமையான மாவட்டமாக உருவெடுக்கும் நிலப்பரப்பில் 34 % மரங்கள் , 50 அடியில் நிலத்தடி நீர், நீர் மேலாண்மை , மழை நீர் சேகரிப்பு, கழிவு நீர் மேலாண்மை உள்ளிட்ட இயற்கை சார்ந்த அனைத்து பிரிவுகளிலும் முன்னோடியாகத் திகழும் , வலிமையான, வளமான, பசுமையான இந்திய தேசத்தை கட்டமைக்க திருப்பூர் மாவட்ட இளைஞர்கள் நிச்சயம் முன்னோடியாக இருப்பார்கள்” என்றார்

    திருப்பூர் வணிகத்துக்கு மட்டுமல்ல, சுற்றுசூழலிலும் இந்தியாவுக்கே முன்னோடி என்பதை உணர்த்தும் வகையில் செயல்படும் வனத்துக்குள் திருப்பூர் மற்றும் வெற்றி அமைப்புகளை பாராட்டும் வகையில் குமார் துரைசாமி அவர்களை வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் வல்லமை இதழ் மகிழ்ச்சி அடைகிறது. இவரை கண்டு தற்கால இளைஞர் சமூகம் சுற்றுசூழல் மேம்பாட்டில் ஆர்வம் காட்டவேண்டும் என வல்லமை விரும்புகிறது

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • ’சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகலு’’….!

     

    1

    “இங்கல்பம் யாவுமே இந்திரியம் மூலமாய்
    சங்கல்பம் ஆகிட சஞ்சலம் -பொங்குது ,
    ஆகவே ஆசை அறுமின் ,அகந்தைப்பேய்
    சாகவே ஆன்மன் ஜனிப்பு”….கிரேசி மோகன் ….!

    ‘சூரி நாகம்மாள்’’ ‘’ஸ்ரீரமணாஸ்ரம லேகுலு’’(கடிதங்கள்)….குருவின் கண்ணசைவுக்குக் காத்திருக்கும் சீடனின் திருஷ்டியை வேதாந்த பரிபாஷையில் ,வானர லக்‌ஷியத்திற்கு உவமானமாக சொல்கிறார்கள்….இதைத்தான் ZEN SATORI என்கிறது….விவேகானந்தரின் ‘’விழிமின்! எழுமின்!’’….!

    ”செத்தமனம் வேண்டும் சகஜ சமாதிக்கு,
    புத்தமனம் பூர்ண பிரஞ்ஞைக்கு, -மொத்தமனம்,
    வேண்டுமே லக்‌ஷியமாய் வானரம்போல், கைவல்யம்
    தீண்டுமே உன்னைத் தொடர்ந்து’’….கிரேசி மோகன்….!

    Share
  • ஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள்!

    Research Articles

    வல்லமை மின்னிதழ், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission) அங்கீகாரத்தை அண்மையில் பெற்றது நீங்கள் அறிந்ததே. வல்லமை, ஆய்வுக் கட்டுரைகளுக்காகவே தனிப் பகுதியைக் கொண்டிருக்கிறது. தரமான ஆய்வுக் கட்டுரைகளையும் இதர ஆக்கங்கள் பலவற்றையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

    ஆய்வாளர்கள் பலரும் தத்தம் கட்டுரைகளை நமக்கு விரும்பி அனுப்பி வருகின்றனர். மேலும் புதிய ஆய்வாளர்கள் பலர், ஆய்வுக் கட்டுரைகள் எப்படி அமைய வேண்டும்? என்னென்ன நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? எந்தெந்தக் கருப்பொருள்களில் இருக்கலாம்? என்றும் பலவுமாய் வினவி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு, சில குறிப்புகளை இங்கே வழங்குகிறோம்.

    ஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள்:

    புதிய கோணத்தில், ஆய்வுச் சிக்கல் ஒன்றுக்குத் தீர்வு காணும் வகையில் கட்டுரை அமைதல் நலம்.

    ஆய்வுக் கட்டுரையானது, ஆய்வாளரின் சொந்த ஆக்கமாக இருத்தல் வேண்டும். மொழிபெயர்ப்பு, தழுவல், போலச் செய்தல் போன்றவை கூடாது.

    ஆய்வுக் கட்டுரை, புதிய ஆக்கமாக இருக்க வேண்டும். வேறு எங்கும் வாசிக்கப்பட்டது, வேறு இதழ்களில் வெளிவந்தது எனில் அதனை முதலிலேயே குறிப்பிட வேண்டும். வல்லமை ஆசிரியர் குழுவினர் விரும்பினால், அவற்றை மறுபகிர்வு என்ற பிரிவில் வெளியிடப் பரிசீலிப்போம்.

    ஆய்வுக் கட்டுரை, எந்தக் கருப்பொருளிலும், எந்தத் தலைப்பிலும் இருக்கலாம். இந்தத் தலைப்பினைத் தேர்ந்ததற்கான காரணத்தையும் முன்னுரையில் குறிப்பிட்டால், வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.

    ஆய்வுகள் நன்னோக்கத்துடன், ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும். அதன் மூலமாகச் சமுதாயம், நன்மை அடைய வேண்டும். அந்தக் கண்ணோட்டத்துடன் ஆய்வுகள் அமைந்தால், பெரிதும் மகிழ்வோம்.

    ஏற்கனவே வெளியான தலைப்புகளைத் தவிர்க்கலாம். அதே கருப்பொருள், தலைப்பினைத் தேர்ந்தெடுத்தால், அதனைப் புதிய கோணத்தில், புதிய உண்மைகள் வெளிப்படுமாறு கட்டுரைகளைப் படைக்க வேண்டும்.

    வழக்கமான ஆய்வியல் நெறிகளைப் பின்பற்றியிருக்க வேண்டும். உரிய சான்றுகள், தரவுகளுக்கான மூலங்கள், அடிக்குறிப்புகள், உசாத் துணைகள், ஆய்வுக்கு உதவிய நூல்கள், இணையச் சுட்டிகள் உள்ளிட்டவற்றைத் தவறாது குறிப்பிட வேண்டும்.

    அடிப்படைச் சான்றுகள் இல்லாத, கற்பனைக் கதைகளைச் சான்றாகக் கொண்ட கட்டுரைகளை அனுப்ப வேண்டாம். பத்திரிகைச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டவை எனில், அச்செய்தி உண்மையா என ஆராய்ந்து தெளிந்து அனுப்ப வேண்டுகிறோம். எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதை நீங்கள் அறிவீர்கள்.

    கட்டுரைகள், சந்திப் பிழை உள்ளிட்ட இலக்கணப் பிழைகள், தட்டுப் பிழைகள் போன்றவை இல்லாமல் இருக்கின்றனவா எனச் சரிபார்த்து அனுப்ப வேண்டும். அளிக்கும் தரவுகளிலும் மேற்கோள்களிலும் பிழையில்லாமல் இருக்க வேண்டும்.

    கட்டுரைக்குத் தேவையான படங்கள், பட்டியல்கள் உள்ளிட்டவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
    கட்டுரை, தமிழிலோ, ஆங்கிலத்திலோ இருக்கலாம்.

    ஒருங்குறியில் இருக்க வேண்டும். இதர எழுத்துருக்களிலோ, பிடிஎஃப் வடிவிலோ அனுப்ப வேண்டாம்.

    முறையாக வாக்கியங்கள், பத்திகள், சொற்கள் பிரிக்கப்பட்டு, நிறுத்தற்குறிகள் இடப்பட்டு இருக்க வேண்டும்.

    ஆய்வாளரின் படத்துடன் அவரைப் பற்றிய சிறுகுறிப்பைக் கட்டுரையின் இறுதியில் அளிக்கலாம். ஆய்வாளரின் தொடர்பு விவரங்களைக் கட்டுரையில் அல்லாமல், மடலின் ஒரு பகுதியாகவே வல்லமைக்குத் தெரிவிக்கலாம்.

    தகுதி வாய்ந்த, தரமான ஆய்வுக் கட்டுரைகளை வல்லமை உளமார வரவேற்கிறது. இதன் வழியே அறிவுலகம் செழித்து, அனைத்துலகும் பயன்பெற விழைகிறோம். ஆய்வாளர்களின் ஒத்துழைப்பினைத் தொடர்ந்து வேண்டுகிறோம். உங்கள் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – vallamaieditor@gmail.com

    ===================================

    அன்புடன் என்றும்,
    அண்ணாகண்ணன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171023 -Udupi Krishna -lr

     

    “சாமயஜுர் ரிக்கதர்வ கானரச கீதையை
    ஆமை உருவெடுத்து அன்றளித்த -வாமன
    மீனவ ராகசிம்ம மூணுராம கண்ணனாய்
    ஆனகல்கி மூர்த்தி அவர்”….கிரேசி மோகன்…

    *கல்கி” கிருஷ்ண மூர்த்தி….!

    Share
  • படக்கவிதைப் போட்டி 131-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    man lying on tree

    வெண்துகிலென அருவியது பாய்ந்துவர, அவ்வருவி நீரில் குளித்த பாறைகள் பளிச்சென்று பளபளக்க, இவ்வெழிற் காட்சிகளிடையே மரத்தின்மீது ஏகாந்தமாய்ச் சாய்ந்திருக்கும் மனிதரை அழகுறப் படம்பிடித்து வந்திருக்கிறார் திரு. முத்துகுமார். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    இயற்கை அன்னையின் இன்ப அணைப்பினில்  மயங்கிநிற்கும் வேளையிலே,

    ”எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
    எங்கள் இறைவா இறைவா இறைவா!

    சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்குச்
    சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்
    அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
    மாகப் பலபலநல் அழகுகள் சமைத்தாய்”
    என்று நமதுள்ளம் துள்ளும்; ஆனந்தக்களி கொள்ளும்.  

    இந்த அழகின் சிரிப்பு நம் கவிஞர்களின் சிந்தனைக்கும் சேர்த்திடும் சிறப்பு எனும் நம்பிக்கையோடு அவர்களைக் கவிபாட அழைப்போம்!

    *****

    ”தம்பி! நீ படுத்திருக்கும் இடம் உனக்குப் பாதுகாப்பானதில்லை; சறுக்கி விழுந்திடாதே; சுருக்காய் எழுந்திடு” என்று அன்போடு எச்சரிக்கின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.

    தம்பி கவனமடா சறுக்கி விழப் போகின்றாய்
    ஆனை அடிசறுக்கி அதலபாதாளத்தில்
    போனது போல் நீயும் பொறி கலங்க வீழ்ந்திட்டால்
    முட்டுக்கால் பேந்த மொடமாய்ப் பொழப்பின்றி
    கட்டிலில் வீழ்ந்து கவலைமிக வுற்று
    துட்டுக்கலையும் துயர்சேர எப்போதும்
    தட்டுப்பாட்டோடு தவிக்கு நிலை வரலாம்
    மெல்ல இறங்கு வேண்டாமிவ் வீண்வேலை
    கல்லெல்லாம் ஈரம் கவனம்.

    *****

    ”மரத்தின்மேல் மல்லாந்துபடுத்த கரணியம் என்ன தம்பி? கரணம் தப்பினால் மரணம் என்பதை நீ அறியாயோ? அலட்சியத்தை விடுத்து இலட்சியத்தில் உறுதிகொண்டு உலகை வெல்வாய்!” என்று படுத்திருக்கும் இளைஞனை எழுச்சிகொள வைக்கின்றார் திரு. பழ.செல்வமாணிக்கம்.

    எழுச்சி கொள் தம்பி:

    வனம் பூமித்தாய் தந்த சீதனம் தம்பி!
    அருவி ஆண்டவனின் அருட்கொடை தம்பி!
    மரங்கள் பூமித்தாய் பெற்றெடுத்த அழகுப் பெண்கள் தம்பி!
    இத்தனையும் ரசிப்பதற்கு இப்பிறவி போதாது தம்பி!
    இளங்கன்று பயமறியாது, நான் அறிவேன் தம்பி!
    காட்டாறு கிணற்றுக்கள் அடங்காது,
    நான் அறிவேன் தம்பி!
    ஏகாந்தம் இனிமை தரும்,
    நான் அறிவேன் தம்பி!
    மரத்தின் மேல் ஏன் படுத்தாய் தம்பி!
    கரணம் தப்பினால் மரணம், எச்சரிக்கை தம்பி!
    அச்சமின்மை ஆண்மைக்கு அழகு,
    நான் அறிவேன் தம்பி!
    விவேகம் இல்லா வீரம் விபரீதம் தம்பி!
    நான் உரைக்கும் வார்த்தைகளை
    செவிமடுப்பாய் தம்பி!
    பாரதியின் கனவுகளை மறந்தாயோ தம்பி!
    அய்யா கலாம் சொன்னதை
    நீ மறந்தாயோ தம்பி!
    உன் லட்சியத்தைக் கனவாக்கு தம்பி!
    சாதனைகள் படைத்திட
    உடனே எழுந்திடுவாய் தம்பி!
    நாளைய உலகம் இருக்குது, இளைஞர்களை நம்பி!
    பாரதம், பார் புகழ வளரட்டும் தம்பி!

    ***** 

    ”நிலையிலா மனிதா…மரத்தின்மேல் துஞ்சிடாதே! நீ கீழே விழுந்தால் எதுவும் மிஞ்சிடாதே!” என்று அக்கறையோடு அறிவுரை பகர்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மலை மேலே

    மலையினில் பெய்த மழையதுதான்
    மகிழ்ந்தே ஆறாய் ஓடியபின்,
    மலையி லிருந்தே குதித்தாலும்
    மகிழ்ந்தே நாமும் அருவியென்போம்,
    நிலையில் கொஞ்சம் மாறிடினும்
    நீரில் மாற்றம் ஏதுமில்லை,

    நிலையிலா மனிதனே நெஞ்சில்கொள்
    நீவிழ எதுவும் மிஞ்சிடாதே…!

    *****

    ”கண்விழிக்கும்போதே கணினியைக் கையில்கட்டிக்கொண்டு விழிக்கவேண்டிய அவசர யுகத்தில், இயற்கையோடு இயைந்திருக்கும் சிறுபொழுதில் மட்டுமே மனம் பெருமகிழ்வு கொள்கிறது” என்று எதார்த்தம் பேசும் கவிதையைத் தந்திருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    எந்திர வாழ்க்கை...!
    காலை எழும்போதே கணிணியைக் கையில்
    ……….
    கட்டிக் கொண்டே கண்விழிக்கும் அவலநிலை.!
    மாலைநேரம் வேலை முடிந்து திரும்பினாலும்
    ……….
    மலைபோலக் குவியும்நம் அலுவலக வேலை.!
    வேளைக்கு அவசரமாக உண்டபின் அலுவலக
    ……….
    வேலையைக் கடுகிமுடிக்க எழும் மனக்கவலை.!
    களைப்பாற நேரமில்லை..! தகுந்த இடமில்லை..
    ……….
    கண்டதெலாம் நாகரிக நகரமாகிப் போனதாலே.!

    சற்றுநேரம் எந்திரவாழ்வில் கிடைத்து விட்டால்
    ……….
    சங்கடத்தில் மனமது ஓய்வுகொள்ள நினைக்கும்.!
    பற்றுடனே மனமெதிலும் ஈடுபாடு கொள்ளாது
    ……….
    படபடப்புடனே எப்போதும் நிலைத் திருக்கும்.!
    கற்றறிந்த மானிடர்க்கு மனத்தில் தோன்றுமிடர்
    ……….
    கடக்கும் வழியறிய வாழ்வில்பல வழியுண்டாம்.!
    எற்றைக்கும் இந்நிலை வாழ்வில் நீடிக்காதென
    ……….
    எண்ணும் போதிலெ மனமும் அமைதியாகும்.!

    உதிக்கின்ற கதிரவனுக்கு முன்னெழ வேண்டும்
    ……….
    உலகம் சுழல்வதுபோல் நாமும் சுற்றவேண்டும்.!
    அதிகாலை எழுந்து நடைபயில முடியவில்லை
    ……….
    ஆவலுடன் அலுவல் நோக்கி ஓடவேண்டும்.!
    மதியமைதி பெறுதற்கு இயற்கையெழில் சூழ்நிலை
    ……….
    மனிதருக்கே வேண்டுமப்பா இக்கலி யுகத்தில்.!
    இயற்கையின் இன்பத்திலென் மனம் மூழ்குதப்பா
    ……….
    இறைவன் படைப்பில் எத்தனை அற்புதமப்பா.!

    ***** 

    நல்ல சிந்தனைகளை வழக்கம்போலவே தம் பாக்களில் பதிவுசெய்திருக்கும் பாவலர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    எனக்குள்ளும் இருக்கின்றான்!

    மனம் பறக்கிறது
    மரக்கிளையில் சாய்ந்த
    மறுகணம்
    மனம் பறக்கிறது….
    கவலைகள்
    ரணங்கள்
    இயலாமைகள்
    தவிப்புகள்
    அனைத்தையும் மறந்து
    ஆனந்த லயத்தில்

    மனம் பறக்கிறது

    காட்டாற்று
    வெள்ளம் கண்ட
    வேளையில்தான்
    ஆரவாரமிக்க மனம்
    அமைதியை
    அரவணைத்தது

    பெரும் பாறைகளைவிடப்
    பாறையாய் இருந்த மனம்
    காட்டாற்று வெள்ளத்தைப்போல
    கருணையை உள்ளத்தில் கொண்டு
    காலங்கள் பின்னோக்கி ஒடுகின்றது
    கண்ணீரைக்
    கண்கள் விரும்பிச் சூடுகின்றது

    இசைக்கின்ற ஆறு
    இனிய மரங்கள்
    ஈரக்காற்று
    ரசித்த பிறகுதான்
    தெரிகிறது
    எனக்குள்ளும் இருக்கின்றான்
    இறைவன்!

    வெள்ளத்தின் ஓட்டம்
    தீர்ந்தது
    உள்ளத்தின் வாட்டம்

    இயற்கையை
    தரிசிக்க வந்தவனைத்
    தன்னை,
    தன்னிலையைத் தானே
    தரிசிக்க செய்தது இயற்கை!

    கவலை எனும் சிலந்தி வலை மனித மனத்தைச் சுற்றிப் பின்னி, அதனைத் துன்புறுத்தும் வேளையில், கைபுனைந்து இயற்றா கவின்பெறு வனப்பாய் விரிந்துகிடக்கும் இயற்கையொன்றே அம்மனத்துக்கு மகிழ்ச்சியெனும் ஒத்தடத்தை நல்கவல்லது. பாய்ந்துவரும் ஆற்றுவெள்ளம் மகிழ்ச்சிவெள்ளத்தை மனித உள்ளத்திலும் ஊற்றெடுக்க வைப்பது எனும் உண்மையைத் தன் கவிதையில் உரக்கச் சொல்லியிருக்கும் திரு. வி. மணிகண்டனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (132)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    22359423_1449646335089561_257837991_n
    கோகுல்நாத் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.10.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • கல்விக்கு வரதட்சணை

    சி. ஜெயபாரதன், கனடா

     

    பல்கலைக் கழகம் பகட்டுப்
    பணச் சந்தை ஆனது !
    பள்ளிக்கூடம்
    பணக்கூடம் ஆனது !
    கல்விக்கூடம்
    காசுக்கூடம் ஆனது !
    மடி நிறையப் பணமிருந்தால்
    மகளுக்குப் படிப்பு !
    வாரிக் கொடுத்தால் தான்
    பட்டம் கிடைக்கும் !
    படிப்புக்கும், பதவிக்கும்
    லஞ்சமா ???
    வள்ளுவரைப் படிக்கவும், ஆங்கிலத்தில்
    ஷேக்ஸ்பியர் படிக்கவும்,
    வரதட்சணை வழங்க வேண்டுமா ?
    வழி தவறிய தமிழ்நாடே !

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் -100

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றலின் நோக்கமும் வருங்காலமும்

    education-1-1-1-1-1

    கற்றலைப் பற்றிய பல பரிமாணங்களை இதுவரை நாம் பார்த்து வந்திருக்கின்றோம். ஒரு தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் பொழுதிலிருந்து கற்றல் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடந்துகொண்டிருக்கின்றது. ஒருவர் இப்படித்தான் கற்றுக்கொள்வாரென்றோ இவ்வளவுதான் கற்றுகொள்வாரென்றோ இந்தச் சூழ்நிலையில் தான் கற்றுக்கொள்வாரென்றோ சொல்லமுடியாது. கற்றல் உணர்வோடு ஒன்றி தொடர்ந்து நடக்கின்ற ஒரு செயல்.

    நாம் பள்ளிகளில் ஒரு கதை படித்திருக்கின்றோம். கண் பார்வை இல்லாத பத்து பேர்கள் ஒரு யானையை தொட்டுப் பார்த்துவிட்டு தங்கள் அனுபவத்திற்கேற்ப  அதை எவ்வாறு வர்ணனை செய்தார்களோ அது போல் கற்றலைப் பற்றி பல பார்வைகள் உள்ளன. எல்லாப் பார்வைகளிலும் உண்மையும் குறைகளும் இருக்கின்றன. ஆகவே தற்போதைய மூளை நரம்பியல் வல்லுநர்கள் கருத்துப்படி கற்றல் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட செயல் என்றும் அதில் மற்றவர்களால் தாக்கத்தை மட்டும் ஏற்படுத்த முடியும் என்றும் கூறுகின்றனர். எனவே “கற்பித்தல்” (Teaching) என்ற செயலுக்கு ஒரு புதிய பார்வை ஏற்பட்டுளளது. அது “கற்றலை” ஊக்குவிக்கும் வளப்படுத்தும் மற்றும் வழிகாட்டும் செயல் மட்டுமே என விளக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பிக்கும் முறைகளில் மாற்றங்களும் புதிய பார்வைகளும் தேவைப்படுகின்றது. ஆசிரியர்கள் கூட்டுக் கற்றலில்(Cooperative and participative learning ) பங்குதாரர்களாகக் கருதப்படுகின்றனர். மேலும் அவர்கள் மாணவர்களிடையே உணர்வுசார் கற்றலை ஏற்படுத்தி கற்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளை ஏற்படுத்தவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். மேலும் மூளையின் நெகிழ்தன்மை (Neuro-plasticity) காரணமாக கற்றலின் திறனையும் அளவையும் காலத்தையும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்களும் அதிகரித்துள்ளன. மூளை வல்லுநர்கள் கருத்துப்படி கடைசி மூச்சு வரை கற்றல் தானாக நடந்துகொண்டுதானிருக்கின்றது. துரதிர்ஷ்டவசமாக, நாம் கற்றலைப் பள்ளிச்சுவர்களுக்குள்ளேயும் கல்லூரிக் கட்டிடங்களுக்குள்ளேயும் மற்றும்  புத்தகங்களுக்குள்ளேயும் சில தேர்வுகளுக்கு விளக்கமாக வரும் பதிவேடுகளிலும் சிறைப்படுத்திவிட்டோம். இவைகளுக்கு அப்பாலும் கற்றல் சிறப்பாகவும் வலுவாகவும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. கற்றல் என்பது மனிதனின் ஒரு உயிர் ஆற்றல். நம் உயிர் மூச்சின் பதிவேடு. நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதற்கு ஒரு பதிவில்லாத சான்று.

    கற்றலில் எத்தனை விழுக்காடு ‘நினைவாக’ மாறுகின்றது என்று செய்யப்பட ஆராய்ச்சிகளில் பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கும் பாடங்களில் கிட்டத்தட்ட அறுபது முதல் எழுபது விழுக்காடு வரை கேட்கப்பட்ட நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்குள் மறக்கப்படுகின்றது என்றும், (Volatile Memory) கிட்டத்தட்ட தொண்ணூறு விழுக்காடு நான்கு நாட்களுக்குள் மறக்கப்படுகின்றது என்றும் அறியப்பட்டுள்ளது.  மூளையில் பதிவாகும் கருத்துக்களில் அதிகமானவை தற்காலிக நினைவாகவே (Short term memory) இருந்து மறைந்து விடுகின்றன. அதில் சிறிதளவு மட்டும் அந்தத் தனி நபரின் ஆர்வம், தேவை, மற்றும் ஈடுபாடுகளுக்கேற்ப நீண்ட கால நினைவாக மாறி பதிவாகின்றது. இதில் ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் எப்பொழுது ஒரு கற்றலுக்குக் கிடைக்கும் உள்ளீடுகள் உணர்வுசார்ந்ததாக அமைகின்றனவோ,(Emotionally Competent Stimuli) அப்பொழுது விரைவில் நீண்டகால நினைவாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அறிந்துள்ளனர்.

    தற்காலத்தில் தொழில்நுட்பங்களாலும் (Technology) மற்றும் கணினியின் தாக்கத்தாலும் கற்றலின் முறைகள், பாதைகள் மற்றும் தாக்கங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நேர்முகக் கற்றலிலிருந்து மறைமுக மற்றும் தொலைதூரக் கல்வி முறையில் (Distance learning) கல்வி கற்கும் முறைகள் வளர்ந்தும் முக்கியத்துவம் அடைந்தும் வருகின்றன. அத்துடன் வலைத்தளங்களின் ஆதிக்கத்தால் எல்லாவிதமான அறிவு உள்ளீடுகளும் விரைவிலும் நல்ல தரத்திலும் அதிக அளவிலும் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. இதன் காரணமாக கற்றலுக்கான துணை உள்ளீடுகள் அதிகரித்து வரும் நிலையில் கற்றல் தாற்காலிகத் தேவைகளை ஈடுகட்டுவதற்கான ஒரு கருவியாக மட்டும் அமைந்துவிட்டது. இதனால் கல்வியின் தரத்திலும் மேன்மையிலும் மாற்றங்களும் தாக்கங்களும் ஏற்பட்டுள்ளன. இதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாத நிலைக்கு நாம் ஏற்கனவே வந்துவிட்டோம்.

    இந்த வலைத்தள உள்ளீடுகளால் சில நேரங்களில் மாணவர்களின் கற்றலின் போக்கில் கவனச் சிதறல்களும் கவனச் சிதைவுகளும் ஏற்பட வாய்ப்புக்களும் அதிகரித்து வருகின்றன. அது மட்டுமின்றி, தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள், செய்தி ஊடுருவல்கள், வியாபாரத் தாக்கங்கள் ஆகியவற்றால் மாறுபட்ட சிந்தனைகளும் உறவுப் பார்வைகளும் கற்றலின் ஆழம், வளமை மற்றும் வலிமையின் அடித்தளங்களை ஆட்டிக்கொண்டிருக்கின்றன. இது நல்லதா இல்லையா என்பதைக் காலம்தான் நிர்ணயிக்க முடியும். ஏனென்றால்  மாற்றம் என்பது இயற்க்கையின் வழி. காலந்தொட்டு மாற்றங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருப்பதால் தான் சிந்தனைகளில் வளர்ச்சியும் வாழ்வாதாரங்களில் முன்னேற்றங்களும் சமூக நீதியில் புதிய பார்வைகளும் தோன்றிக்கொண்டிருக்கின்றன. “மாற்றம் என்பது நிரந்தரமானது. அதை மாற்றமுடியாது” என்று சமூகவியல் வல்லுநர்கள் ஆணித்தரமாகக் கூறுகின்றனர்.

    கற்றல் ஒரு தனிமனிதனின் தன்னிச்சையான செயல் என்பதால் இதற்கு பள்ளிக்கூடங்கள் தேவையா ஆசிரியர்கள் தேவையா அப்படியானால் அவர்களின் வருங்காலச் செயல்பாடுகள் எப்படியிருக்கும் எப்படியிருக்கவேண்டும் என்ற கேள்விகளும் அவ்வப்போது மேடை விவாதங்களுக்கு ஒரு கருத்தாக முன்வைக்கப்படுகின்றது. பல மேலை நாடுகளில் ஆசிரியர் தட்டுப்பாடுகளை நீக்கவும் கற்றலின் தரத்தை சமப்படுத்தவும் ரோபோ இயந்திரங்களை ஆசிரியர்களாக பயன்படுத்தும் சிந்தனையும் வளர்ந்துள்ளது. இது வியப்பாக மட்டுமின்றி  வேதனையளிப்பதாகவும் இருக்கின்றது. ஆனால் முன் கூறியபடி மாற்றங்களின் பாதைகள் எப்படி இருக்கும் என்பதை யாராலும் முன்கூட்டியே நிர்ணயிக்க முடியாது.

    கற்றல் வாழ்வின் முழு வளமைக்கா அல்லது பொருளீட்டலுக்கு தயார் செய்யப்படவேண்டிய ஒரு வழிமுறையா என்ற கருத்துக்களை  காலந்தொட்டு கல்வியாளர்கள் உலகளவில் விவாதித்துள்ளனர்  ஆனால் கல்வியின் குறிக்கோளை மிக அழகாகக் கூறியுள்ள வள்ளுவர் பெருந்தகை

    கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்

    நிற்க அதற்குத் தக.

    என்று சொல்லி கற்றலுக்கும்  வாழ்விற்கும் உள்ள நெருக்கமான உறவை தெள்ளத்  தெளிவாக விளக்கியுள்ளார். ஆகவே கற்றலில் ஒரு மனிதனின் நல்வாழ்க்கைக்கும் பண்புகளுக்கும் மேன்மையான சமூகச் சிந்தனைகளுக்கும் தேவையான உள்ளீடுகள் இருத்தலின் அவசியம் தென்படுகின்றது. இந்தக் கருத்தை அரசும் பள்ளி நிர்வாகங்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் சமூகச் சிந்தனையாளர்களும் நினைவில் நிறுத்துதல் மிக்க அவசியம். அது நம்முடைய கல்விக்கொள்கைகளில் உள்ள சில தவறுகளை சீர் செய்ய உதவியாக இருக்கும்.

    ஆனால் இதே நேரத்தில் வள்ளுவப் பெருந்தகையின் மற்றொரு குறளையும் நாம் மனதில் கொள்ளுதல் அவசியமாகின்றது.

    உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும்

    கல்லான் அறிவிலாதான் .

    உலகத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களைத் தன்னடக்கி  நமது கல்வி முறைகள் மாணவச் செல்வங்களை உலகளவில் பெருமைசேர்க்கும் நல்ல மனிதர்களாக உருவாக்க ஒரு கருவியாக இருக்கவேண்டும்.

    “கற்றல் என்ற ஆற்றல்” – இதில் பல கோணங்களைக் கண்ட நாம் விரைவில் மற்றொரு தலைப்பின் கீழ் சந்திப்போம் !

    இந்தத் தொடருக்கு உறுதுணையாக இருந்த வல்லமை ஆசிரியர் குழுவிற்கும் நிர்வாக ஆசிரியராக இதற்கு உதவி செய்த திருமதி பவள சங்கரிக்கும் என் உளங்கனிந்த நன்றி.

    (நிறைவு)

    Share
  • தாம்பத்தியம் = சண்டை + பொய்

    நிர்மலா ராகவன்

     

    அதிவேகமாக உள்ளே நுழைந்த மகளைப் பார்த்தாள் வேதா. வழக்கம்போல், ஆத்திரமும், தன்னிரக்கமுமாகத்தான் இருந்தாள் பத்மினி. யாருடன்தான் ஒத்துப்போக முடிந்தது இவளால்!

    `ஒரே குழந்தையுடன் நிறுத்திக்கொண்டால் அதிக செலவாகாமல் தப்பிக்கலாம். வேலையும் மிச்சம்!’ என்றுஎப்போதோ எண்ணியது தவறோ என்ற சிந்தனை உதித்தது. “வேலை முடிஞ்சு நேரா வர்றியா?” அனுசரணையாகக்கேட்பதுபோல் கேட்டாள். “என்ன சாப்பிடறே?”

    “ஒரு சொட்டு விஷம்!”

    “அதெல்லாம் இந்த வீட்டிலே கிடையாது. தோசை வேணுமா? மாவு இருக்கு. ஆனா, புளிக்கும்”.

    “விஷமே சாப்பிடறேன்னு சொல்றேன். என்னமோ, புளிப்பு, அது, இதுன்னு! ஒண்ணும் வேண்டாம், போ!”முணுமுணுத்தபடியே தன் அறைக்குள் நுழைந்தாள் பத்மினி. அவள் கணவன் வீட்டுக்குப் போய் ஒரு வருடம்ஆகியிருந்தாலும், அவள் குணம் புரிந்து,  அந்த அறையை அப்படியே விட்டு வைத்திருந்தார்கள்.

    உள்ளே நுழைந்தவள் அதே வேகத்தில் திரும்ப வந்தாள்.

    “பாத்துப் பாத்து எனக்குப் பண்ணி வெச்சீங்களே, ஒரு கல்யாணம்!” என்று தாயைச் சாடினாள்.

    “மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்? படிப்பு இருக்கு. கைநிறைய சம்பளம் வாங்கறார்!”

    தனக்குப் பிடிக்காதவருக்கு அம்மாவே வக்காலத்து வாங்குவதா! பச்சைத் துரோகம்!  பத்மினி பொருமினாள்.

    “தான்தான் ஒசத்தின்னு கர்வமும் இருக்கு. அதை விட்டுட்டியே!”

    வேதாவுக்கு அலுப்பாக இருந்தது. வாரம் தவறாமல் இவள் கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு தாய்வீட்டுக்குவந்துவிடுவது எப்போதுதான் நிற்குமோ!

    “அவர் செய்யறதுதான் ரைட்டு. நான் என்ன செஞ்சாலும், தப்பு கண்டுபிடிச்சுக்கிட்டே இருக்கணும்மா அவருக்கு!”  பத்மினியின் குரல் தழுதழுத்தது.

     

    அதே சமயத்தில், “பத்மினி இருக்காளே, அவ செய்யறது தப்புன்னு ஒத்துக்கவே மாட்டாம்மா. அதுதான்பிரச்னையே!” என்று தன் தாயிடம் முறையிட்டுக்கொண்டிருந்தான் கார்த்தி.

    “அவ குணம்தான் புரிஞ்சு போச்சில்ல? என்ன செஞ்சாலும் கண்டுக்காதே,”  என்று அறிவுரை வழங்கினாள் மங்களம்.

    “அது எப்படி? இன்னிக்கு உப்புமா பண்ணியிருந்தா. பேரிலே உப்பு இருக்குதான். அதுக்காக கரண்டி கரண்டியாஉப்பை வாரிப் போடணுமா?”

    “அப்படியே தூக்கிக் கொட்டிட்டு, ஹோட்டல்லே போய் சாப்பிட்டிருக்கணும் நீ!”

    “தோணிச்சு. ஆனா அவ கத்துவாளேன்னு பயந்து, ரொம்ப கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடிச்சேன்”.

    மங்களத்திற்கு அவனுக்குப் பரிந்து பேசத் தோன்றவில்லை. ஒரே மகன் என்று பார்த்துப் பார்த்து, அவனுக்குப்பிடித்ததாக சமைத்துப்போட்டது  ஒரு காலம். இன்று அவன் அவளுக்கு மகன் மட்டுமில்லை. இன்னொரு பெண்ணின்துணைவன். அவனைப்போலவே தானும் சிறுபிள்ளைத்தனமாக, விட்டுக்கொடுக்காமல் இருந்தால் எப்படி!

    “நிறைய படிச்ச பொண்ணு வேணும்னு சொன்னே. அவ படிச்சுக்கிட்டே இருந்ததிலே  சமைக்க  கத்துக்க நேரமில்லாம போயிருக்கும்னு அப்பவே தெரியாம போச்சு! இனிமே என்ன செய்யறது! விட்டுப் பிடி!”

    மகன் காதில் அந்த அறிவுரை விழுந்ததாகத் தெரியவில்லை. உப்புமா விஷயத்திலேயே இருந்தான். “நானும்மொதல்லே ஒண்ணும் சொல்ல வேண்டாம்னுதான் பாத்தேன். ஆனா, அவ வாய்க்குப் பயந்து,” என்றுசொல்லிக்கொண்டே போன மகனை இடைமறித்தாள் மங்களம். “என்னடா பயம்?” புரியாமல் கேட்டாள்.

    “முந்தி ஒரு தடவை பீன்ஸ் பொரியலைக் கறுக்க விட்டுட்டா. அடுப்பிலே எதையாவது வெச்சுட்டு, டி.வியைப் பாத்துயோகா பண்ணப்போனா வேற எப்படி இருக்கும்?  `இதை எவன் சாப்பிடுவான்?’னு கத்தினேனா! `எனக்குஇவ்வளவுதான் தெரியும். ஒங்கம்மாமாதிரி சமைச்சுப்போட பொண்டாட்டி வேணும்னா, படிக்காத பொண்ணாபாத்து கட்டியிருக்கணும்,’ அப்படின்னு காளி மாதிரி ஆடினா, பாரு! பயந்துட்டேன்”.

    தாய்க்கும் கோபம் வந்தது. இவர்கள் சண்டையில் தன்னை எதற்கு இழுக்கிறாள்?

    “ஆபிசிலிருந்து நேரா வர்றியா?” பேச்சை மாற்றப்பார்த்தாள்.

    “ஆமா. அவ ஏன் எங்க வீட்டிலே இருக்கப்போறா! அம்மா வீட்டிலே அவளுக்கு ஆசார உபசாரம் நடக்குமில்ல!” சற்றுப் பொறாமையுடன் கூறியவன், “இதுக்குத்தான் அழகில்லாத, அனாதைப் பொண்ணாப் பாத்துக்கட்டியிருக்கணும்கிறது!” என்றான் நொந்த குரலில்.

    கட்டியவளுக்கு ஒரு நியாயம், இவனுக்கு ஒரு நியாயமா? கோபம் வந்தால் போக இவனுக்கு அம்மா வேண்டுமாம்,அதையே மனைவி செய்தால் ஆத்திரம்! நல்ல பிள்ளை!

    சிரிப்பை அடக்கிக்கொண்டு மங்களம் யோசித்தாள். தான் உபசாரம் பண்ணி உணவளிப்பதால்தான், ஒவ்வொருமுறை மனைவி கோபித்துக்கொண்டு பிறந்தகம் போய்விடும்போதும் சாப்பிட இங்கு வந்துவிடுகிறான்!

    “எனக்குக் கொஞ்ச நாளா உடம்பே சரியா இல்லே, கார்த்தி. இன்னிக்குப் பெரிசா ஒண்ணும் ஆக்கலே. நீ போறவழியிலே ஏதாவது ஹோட்டல்லே சாப்பிட்டுக்க,”  என்று அந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டினாள்.

    தனது ஏமாற்றத்தை மறைத்தபடி, “ஏண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இருக்கு! பேசாம, டைவர்ஸ் வாங்கிடறேன்,” என்றபடி எழுந்தான் கார்த்தி.

    தியானம் பண்ணுவதாகப் பெயர் பண்ணிக்கொண்டு தன் அறையிலிருந்த அப்பா எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு  வெளியே வந்தார். “பசியோட வந்திருக்கான், பாவம்! ஒடம்பு முடியலேன்னு ஏன் கதை விடறே?” என்று மனைவிமேல் பாய்ந்தார்.

    “நாம்ப போடாத சண்டையா! அப்புறம் எப்படியோ சமாதானமாகி, நான் இந்த முப்பது வருஷமா ஒங்ககூட குப்பை கொட்டலியா?   இந்த காலத்துப் பசங்க ஆஊன்னா, டைவர்ஸ் அது இதுன்னு போயிடறாங்க! உள்ளூரிலே பொண்ணு எடுத்ததே தப்பு!”  என்றாள் மங்களம்.

     

    ஹோட்டலைக் கடந்தபோது கார்த்திக்கு  விரக்தி எழுந்தது.  சமைக்கத் தெரிந்தவன்களெல்லாம் கைநிறையச்சம்பாதிக்கலாம் என்று பேராசையாக வெளிநாட்டுக்குப் போய் சமைக்கிறான்கள். இங்கிருப்பவனோ, முன்னேபின்னே சமையலறைக்குப் போயிருக்க மாட்டான்.

    மனைவி மோசமாகச் சமைத்தால் திட்ட முடியும். இங்கு அது நடக்குமா?

    பசியுடன் வீடு திரும்பியதும் அவனுக்கு  ஆச்சரியம் காத்திருந்தது. பத்மினி வீட்டில்தான் இருந்தாள்! அதுவும்அழகாக அலங்கரித்துக்கொண்டு!

    அப்படியானால், தான் நினைத்ததுபோல் அவள் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குப் போகவில்லையா?

    “இன்னிக்கு ரொம்ப வெயில், இல்லே? களைப்பா இருக்கு. நாம்ப ரெண்டுபேரும் வெளியே போய் சாப்பிடலாமா?”என்று பத்மினி   அன்பு சொட்டச்  சொட்ட கேட்டபோது, `நல்லவேளை,  சமைக்கிறேன்னு நீ கிளம்பலே!’ என்றஎண்ணம் எழுந்தது  கார்த்திக்கு.

    கூடவே, `எவ்வளவு அழகா இருக்கா! இவளோட சேர்ந்து நடந்துபோனா, அவனவன் பொறாமையில சாவான்!’ என்றும்தோன்ற,   “நானும் அதைத்தான் சொல்லணும்னு நினைச்சுக்கிட்டே வந்தேன்! உனக்கு வெளியிலேயும் வேலை,வீட்டிலேயும் வேலை, பாவம்! அது நியாயமில்லே,” என்று உருகிவிட்டு, “நல்லா சாப்பிட்டு, ரெஸ்ட் எடு. அப்பத்தானேராத்திரி..!” என்று கண்களைச் சுழற்றினான்.

    `பொய் சொன்னா, சாமி கண்ணைக் குத்திடும்!’ என்று சொல்லி வைத்திருப்பவர் பிரம்மச்சாரியாகவே காலத்தைக்கடத்தியிருப்பார் என்று தோன்ற, சிரிப்பு வந்தது அவனுக்கு.

    Share
  • பதிற்றுப்பத்தில் பெண் தொன்மங்கள்

    -முனைவர். வே.மணிகண்டன்

     

    சங்கச் சமுதாயத்தில் இடம்பெற்றுள்ள தொன்மங்கள் சங்ககால மாறுதல் நிலையையும் தொன்மையான சமுதாய எச்சத்தையும் வெளிக்காட்டுவனவாய் அமைந்துள்ளன. சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் பெண் தொன்மங்களாக கொற்றவை, கொல்லிப்பாவை திருமகள், அருந்ததி, துர்க்கை, கண்ணகி ஆகியோர் பற்றிய பதிவுகள் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. மேலும்,  ஆண் தெய்வங்களான முருகப்பெருமான், திருமால், தேவர்கள் குறித்த தொன்மச்செய்திகளும் இவ்விலக்கிய நூலில் இடம்பெற்றுள்ளது. பதிற்றுப்பத்தில் பெண் தெய்வங்கள் என்னும் இவ் ஆய்வுக்கட்டுரை பெண் தொன்மங்களுக்கு முதன்மை தந்து படைக்கப்படுவதுடன் ஆண் தொன்மங்களைப் பற்றியும் விவரிக்கின்றது.

    கொற்றவை பற்றிய தொன்மம்

    பதிற்றுப்பத்தில் பாலை நிலத்துத் தெய்வமாகிய கொற்றவை பற்றிய தொன்மம் மூன்றாம் பத்தின்  பதிகத்திலும், அரிசில் கீழார் பாடிய எட்டாம் பத்தில் மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு புகழ்ந்து வாழ்த்துதல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலிலும்  இடம் பெற்றுள்ளது.

    மூன்றாம் பத்தின்  பதிகத்தில்,

    அயிரை பரைஇ ஆற்றல் சால் முன்போடு

    என்னும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளது. இவ்வரியில் சால் என்னும் சொல் கொற்றவை என்னும்  தெய்வத்தை குறிப்பதாகும். அயிரை என்னும் மலையில் இருக்ககூடிய தெய்வம் கொற்றவை என்னும் பொருள் தரக்கூடிய இப்பாடல் வரிகளின் வாயிலாகப் புராணச்செய்தியை அறிகின்றோம்.

    அரிசில் கீழார் பாடிய எட்டாம் பத்தில் மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு புகழ்ந்து வாழ்த்துதல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலில்,

    மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின்
     கடவுள் அயிரையின் நிலைஇ

    கடவுள் அயிரை என்னும் சொல் கொற்றவையை குறிக்கும் சொல்லாகும். கொற்றவை வாழும் இடமாகிய அயிரைமலையைப் பற்றிய குறிப்புக்கள் இப்பாடலில் தொன்மச்செய்தியாக வெளிவந்துள்ளது.

    கொல்லிப்பாவை பற்றிய தொன்மங்கள்

    பதிற்றுப்பத்தில் கொல்லிப்பாவை பற்றிய தொன்மங்கள் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன. கபிலர் பாடிய ஏழாம் பத்தில் வென்றிச் சிறப்போடு படுத்து அவன் கொடைச்சிறப்புக் கூறுதல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலில்
    பலாஅம் பழுத்த பசும்புண் அரியல்
       வாடை தூக்கும் நாடுகெழு பெருவிறல்
    ஒவத்தன்ன வினைபுனை நல்இல்
    பாவை அன்ன நல்லோள் கணவன்

    இங்கே பாவை என்னும் சொல் கொல்லிப்பாவை எனும் தெய்வத்தைக் குறிப்பிடுகின்றது. கொல்லிப்பாவையானது புராணங்களில் வரக்கூடியது. எனவே, இப்பாடலில் கொல்லிப்பாவையைப்பற்றிய குறிப்புகள் உள்ளதால் தொன்மக்கருத்துள்ள பாடலாக அமைகின்றது.

    பெருங்குன்றூர் கிழார் பாடிய ஒன்பதாம் பத்தில் கொடைச்சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன் கூறி வாழ்த்துதல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலில்,

    ஓவத்து அன்ன உருகெழு நெடுநகர்,
    பாவை அன்ன மகளிர் நாப்பண்

    பாவை என்னும் சொல்  புராணத் தொன்மமாகிய  கொல்லிப்பாவையை குறிக்கின்றது. சித்திரத்தைப் போன்ற அழகையுடைய பகைவர்க்கு அச்சம் பொருந்திய நீண்ட அவ்வரண்மனையில் கொல்லிப்பாவையைப் போன்ற வடிவழகையுடைய நின் உரிமை மகளிர் என்னும் கருத்தினை இவ்வரிகள் தருகின்றன.

    திருமகள் பற்றிய தொன்மங்கள்

    பதிற்றுப்பத்தில் திருமகள் பற்றிய தொன்மங்கள் நான்கு இடங்களில் இடம்பெற்றுள்ளன. குமட்டூர்க்கண்ணணார் படைத்துள்ள இரண்டாம் பத்தில் மன்னனுடைய பல குணங்களையும் ஆற்றலையும் ஒருங்கு கூறி வாழ்த்துதல் என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடலில்,

    எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து
    நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை

    என்னும் பாடல் வரிகளில் திரு என்னும் சொல் திருமகள் என்னும் தெய்வத்தை குறிக்கின்றது. வெற்றியைத் திருமகள் மிகவும் விரும்புபவள் என்னும் தொன்மச்செய்தியை இப்பாடலின் வாயிலாக அறியலாம்.

    காப்பியாற்றுக்காப்பியனார் படைத்துள்ள நான்காம் பத்தில் மன்னர்க்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல் என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடலில்,

    வண்டுஊது பொலிதார் திருஞெமர் அகலத்து
    கண்பொரு திகிரி கமழ்குரல் துழாஅய்
    அலங்கல் செல்வன் சேவடி பரவி,
    நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதி பெயர

    திரு என்னும் சொல்லாவது திருமகளைக் குறிப்பதாக வந்துள்ளது. வண்டுகள் ஒலிக்கும் மாலையினை அணிந்த திருமகள் பொருந்திய மார்பினை உடைய, காண்பவர் கவர்திருக்கும் சக்கரப்படையினை ஏந்திய கையையும்

    நறுமணம் வீசும் பூங்கொத்துக்களையுடைய துவள மாலையை அணிந்த மார்பினையும் கொண்ட திருமாலினது திருவடிகளைப் புகழ்ந்து வணங்கித் துதித்து மனத்தின்கண் மிகுந்த மகிழ்ச்சியுடையவராகத் தாங்கள் வாழும் ஊர்களுக்குச் செல்வர் என்பது இப்பாடலின் பொருளாகும். திருமகள் பொருந்திய மார்பினையும், கையில் சக்கரப்படையினையும், துவளமாலையினையும் உடையவர் திருமால் என்னும் தொன்மச்செய்தி  இடம்பெற்றிருப்பதை இப்பாடலின் வாயிலாக அறியலாம்.

    காப்பியாற்றுக்காப்பியனார் படைத்துள்ள நான்காம் பத்தில் கொடைச்சிறப்பு என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடலில்

    எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து

    என்னும் பாடல் வரிகளில் திரு என்னும் சொல் திருமகளைக் குறிப்பதாக வந்துள்ளது. இப்பாடலானது நன்னனது சிறப்பினை உரைக்கும் பொழுது திருமகளை மார்பில் பொருந்தியவன் நன்னன். வெற்றியைத் தன்னகத்தே பெற்றவர்களுக்குத் தக்க துணையாக திருமகள் இருப்பாள் என்னும் தொன்மச்செய்தி இப்பாடலில் பதிவுச்செய்யப்பட்டுள்ளது.

    அரிசில் கிழார் பாடிய எட்டாம் பத்தில் நல்லொழுக்கமும் அதற்கு ஏற்ற நல்லறிவுடைமையும் எடுத்துக்கூறுதல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலில்,

    வேறுபடு திருவின் நின்வழி வாழியர்
    கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
    என்னும் பாடல் வரிகளில் திரு என்னும் சொல் திருமகளைக் குறிப்பதாக வந்துள்ளது. நுண்மையான கருமணலைப் போன்ற புறத்தே தாழ்ந்த பெரிய கூந்தலையுடையவளும், தெய்வமாகிய திருமகளில் இருந்து வேறுபட்டு இன்னொரு திருமகளாக உன் தலைவி இருக்கின்றாள் என்னும் பொருளில் இப்பாடல் வரிகள் அமைந்துள்ளன.

    அருந்ததி பற்றிய தொன்மங்கள்

    அருந்ததி பற்றிய தொன்மங்கள் பதிற்றுப்பத்தில் இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளன. காப்பியாற்றுக்காப்பியனார் படைத்துள்ள நான்காம் பத்தில் மன்னர்க்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல் என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடலில்,

    வண்டுபட
    ஒலித்த கூந்தல் அறம்சால் கற்பின்
    குழைக்கு விளக்கு ஆகிய ஒள்நுதல், பொன்னின்
    இழைக்கு விளக்கு ஆகிய அவ்வாங்கு உந்தி,
    விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த
    செம்மீன் அனையள் நின் தொல்நகர்ச் செல்வி

    செம்மீன் என்னும் சொல்லானது அருந்ததி  என்ற பெண் தெய்வத்தினைக் குறிக்கின்றது. வண்டுகள் ஒலிக்கும்படி தழைத்த கூந்தலினையும் அறக்கற்பினையுடைய காதிலே அணிந்திருக்கின்ற அணிக்கு விளக்கம் அளிப்பதாக அமைந்திருக்கின்ற ஒளிபொருந்திய நெற்றியினையும் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களுக்கு விளக்கம் அளிப்பவளாகிய அழகிய வளைந்த கொப்பூழினையுடைய நின்மனைவி வானுலகில் திரியும் தெய்வப் பெண்களுக்குள் சிறந்த அருந்ததியை போன்றவள். இப்பாடலில் அருந்ததி என்னும் தொன்மத்தினைப்பற்றிய செய்திகள் தரப்ப்பட்டுள்ளது.

    கற்புத் தெய்வம் அருந்ததி எனும் தொன்மச்செய்தியானது அரிசில் கிழார் எழுதிய எட்டாம் பத்தில் வென்றிச் சிறப்புக் கூறி, மன்னவனது நாடு காவற் சிறப்புக் கூறி வாழ்த்துதல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலில்,

     மீனோடு புரையும் கற்பின்

    என்னும் பாடல் வரிகளில் மீன் என்கின்ற சொல் அருந்ததியைக் குறிப்பதாக கூறப்பட்டுள்ளது.

    முருகப்பெருமான் குறித்த தொன்மம் 

    பதிற்றுப்பத்து இலக்கியத்தில் முருகப்பெருமான் குறித்த தொன்மம் இரண்டாம் பத்தில் இடம்பெற்றுள்ளது.

    வரைமருள் புணரி வான்பிசிர் உடைய
    வளிபாய்ந்து அட்ட துளங்குஇருங் கமஞ்சூல்
    நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
    அணங்குடை அவுணர் ஏமம் புணக்கும்
    சூருடை முழுமுதல் தடித்த பேர்இசை
    கடிஞ்சின விறல்வேள் களிறு ஊர்ந்தாங்கு

    இப்பாடலில் வேள் என்னும் சொல் முருகப்பெருமானைக் குறிக்கின்றது. கடலிலே அலைகள் மலைப்போல்  பெரியனவாய் எழுகின்றன. அவ்வலைகள் சிறுசிறு துளிகளாக உடைந்து சிதறும் வகையில் காற்று பாய்ந்து அடிக்கின்றது. எனவே கடல் அசைகின்ற நிறைந்த நீரினைச் சூல்போலக் கொண்டு விளங்குகின்றது. இத்தகைய நீர்நிறைந்த பெரிய பரப்பினையுடைய கரிய கடலின் நடுவே சென்று உயிர்களை வருத்துகின்ற இயல்புடைய அசுரர்களுக்குச் பாதுகாவலைச் செய்யும் சூரபதுமனது தன்மையுடைய மாமரத்தின் அடியினை வெட்டிய பெரும்புகழையும் மிகுதியான சினத்தையும் வெற்றியினையும் கொண்ட முருகப்பெருமான் எனும் கருத்தினைக் கொண்ட இப்பாடலில் முருகப்பெருமான் சூரபதுமனை வதம்செய்த புராணச் செய்தி இடம்பெற்றுள்ளதை அறிகின்றோம்.

    திருமால் பற்றிய தொன்மங்கள்

    சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் திருமால் பற்றிய தொன்மங்கள் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பத்தில் வென்றிச் சிறப்பும் நாடு காத்தற் சிறப்பும் என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடலில்,

    மண்ணுடை ஞாலத்து மன்உயிர்க்கு எஞ்சாது
    ஈத்துக் கை தண்டாக் கை கடுந்துப்பின்
    புரைவயின் புரைவயின் பெரிய நல்கி
    ஏமம் ஆகிய சீர்கெழு விழவின்
    நெடியொன் அன்ன நல் இசை
    ஒடியா மைந்தே நின்பண்பு பல நயத்தே

    நெடியோன் என்னும் சொல் திருமாலைக் குறிப்பதாக இடம்பெற்றுள்ளது. மண்செறிந்த இந்நிலவுலகில் நிலைபெற்றுள்ள உயிர்களுக்கெல்லாம் குறைவில்லாத ஈகையும் குறைவில்லாத வலிய வலிமையையும் உடையாய். உயர்ந்த இடங்களாகிய இறைவன் உறையும் ஆலயங்களுக்கெல்லாம் சிறந்த அணிகலன்களை அளிப்பவனே. காண்பவருக்கு இன்பத்தைத் தருகின்ற திருமாலைப் போன்ற குறைவற்ற புகழ்உடைய உனது பண்புகளைக் காண விரும்புகின்றேன் என்பது இப்பாடலின் கருத்தாகும். குறைவற்ற புகழ் உடைய தெய்வம் திருமால் எனும் தொன்மச்செய்தியை இப்பாடலின் வாயிலாக அறிகின்றோம்.

    நான்காம் பத்தில் மன்னர்க்கு உரிய மாட்சிமையேல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலில்,

    குன்று தலைமணந்து, குழூஉக்கடல் உடுத்த
    மண்கெழு ஞாலத்து மாந்தர் ஒராங்குக்
    கைசுமந்து அலறும் பூசல் மாதிரத்து
    நால்வேறு நனந்தலை ஒருங்குஎழுந்து ஒலிப்ப
    தெள்உயர் வடிமணி எறியுநர் கல்லென
    உண்ணாப் பஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
    வண்டுஊது பொலிதார், திருஞெமர் அகலத்து
    கண்பொரு திகிரி கமழ்குரல் துழாஅய்
    அலங்கல் செல்வன் சேவடி பரவி
    நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதி பெயர 

    குன்றுகள் தம்மிடம் பொருந்தி நிற்க, பல்பொருள்களும் திரளுகின்ற கடலினை ஆடையாக உடுத்திய நிலவுலகத்து மக்கள். ஒரே நேரத்தில் ஒன்று போல் தம் கைகளைத் தலைமேல் தூக்கி வணங்கித் தம் குறையைக் கூறித் தீர்க்குமாறு வேண்டிக்கொள்ளும் ஆரவாரமானது வேறுபட்ட நான்கு திசைகளும் பரந்த இடத்தில் ஒன்றாக ஓங்கி ஒலித்தது போன்று இருந்தது. தெளிந்த ஓசையை உடைய மணியை அடிப்பவர் கல்லென்னும் ஓசையுண்டாக ஆரவாரிப்ப, அதனைக் கேட்டு உண்ணாமல் இருந்த இறைவனை வணங்கும் மக்கள்கூட்டம் குளிர்ச்சியான நீர்த்துறையில் நீராடும் வண்டுகள் ஒலிக்கும் மாலையினை அணிந்த திருமகள் பொருந்திய மார்பினை உடைய, காண்பவர் கவர்ந்திருக்கும் சக்கரப்படையினை ஏந்திய கையையும் நறுமணம்வீசும் பூங்கொத்துக்களையுடைய துவள மாலையை அணிந்த மார்பினையும் கொண்ட திருமாலினது திருவடிகளைப் புகழ்ந்து வணங்கித் துதித்து மனத்தின்கண் மிகுந்த மகிழ்ச்சியுடையவராக தாங்கள் வாழும் ஊர்களுக்குச் செல்வர் என்பது இப்பாடலின் பொருளாகும். திருமகள் பொருந்திய மார்பினையும், கையில் சக்கரப்படையினையும், துவளமாலையினையும்  உடையவர் திருமால் என்னும் தொன்மச்செய்தி  இடம்பெற்றிருப்பதை இப்பாடலின் வாயிலாக அறியலாம்.

    ஏழாம் பத்தின் பதிகத்தில்,

    மாய வண்ணனை மனன் உறப் பெற்று

    என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது. இவ்வரியானது கரியநிறமுடைய திருமாலைத் தன் மனத்தில் பொருந்தப் பெற்றவன் என்னும் பொருளைத்தருகின்றது. கரிய வண்ணமுடைய திருமால் என்பது புராணத்தின் வாயிலாக அறியக்கூடிய தொன்மச்செய்தியானது இப்பாடலில் இடப்பெற்றிருப்பதை அறிகின்றோம்.

    தேவர்கள் பற்றிய தொன்மங்கள்

    பதிற்றுப்பத்தில் தேவர்கள் பற்றிய தொன்மச்செய்திகள் வென்றிச் சிறப்போடு பிற சிறப்புக்களையும் கூறி வாழ்த்துதல் என்னும் தலைப்பில் அமைந்த பாடலில் இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளன.

    உயர்நிலை உலகத்து ஐயர் இன்புறுத்தினை

    இப்பாடல் வரிகளில் உயர்நிலை உலகம் என்னும் சொல் தேவர்கள் வாழுகின்ற உலகத்தினைக் குறிக்கின்றது. மேலும், ஐயர் என்னும் சொல் முனிவர் என்னும் பொருளைத் தருகின்றது. எனவே, தேவர்கள் உலகத்தில் வாழுகின்ற முனிவர்கள் என்னும் புராணச்செய்தியை இப்பாடல் வரிகளின் வாயிலாக அறியலாம்.

    மாடோர் உறையும் உலகமும் கேட்ப

    இப்பாடல் வரிகளில் மாடோர் என்னும் சொல்லானது தேவர்களைக் குறிக்கின்றது. காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, சங்கநிதி, பதுமநிதி முதலிய செல்வங்களைப் பெற்றுப் பொன்னுலகில் வாழ்வதால் தேவர்கள் மாடோர் என அழைக்கப்பட்டனர் எனும் தொன்மச்செய்தியை  இப்பாடலின் வாயிலாக அறிகின்றோம்.

    முடிவுரை

    பதிற்றுப்பத்தில் பெண் தொன்மங்கள் என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையானது, பெண் தெய்வத் தொன்மங்களான கொற்றவை, கொல்லிப்பாவை, அருந்ததி, துர்க்கை, திருமகள் ஆகியாரைப் பற்றி பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள தரவுகளை வெளிப்படுத்தி உள்ளது. திரு என்னும் சொல் திருமகளைளையும், மீன் என்னும் சொல் அருந்ததியையும், பாவை என்னும் சொல் கொல்லிப்பவையையும், சால் என்னும் சொல் கொற்றவையையும் குறிக்கும் நிலையினையும், இத்தொன்மங்களைப் பயன்படுத்திய நிலையில் பதிற்றுப்பத்து இலக்கியம் கொண்டுள்ள தொன்மை வளம் குறித்தும் அறிகின்றோம்.

     

    Share