புத்தக வாசிப்பு – சில புரிதல்கள்

0

-முனைவர். வே.மணிகண்டன்

“உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனப் பயிற்சி புத்தக வாசிப்பு” – சிக்மண்ட் பிராய்டு.

புத்தகம் = புதுமை + அகம், மனிதனுக்குப் புதிய சிந்தனைகளைத் தரும் வல்லமை படைத்தவை புத்தகங்களாகும். இவை, மனிதனின் அறிவுத்திறன் மற்றும் அனுபவத்தினை மேம்படுத்தக் கூடியவை. ஒவ்வொரு புத்தகமும் மனிதனுக்கு ஏதேனும் ஒரு கருத்தினையாவது அவன் மனத்தில் விதைப்பவை. புத்தக வாசிப்பு  என்பது  நுட்பமான கலை. வாசிப்பிற்கு ஏற்ற புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் முறையானது வாசகனின் மனம் சார்ந்ததாகும். பெரும்பாலும் வாசகனுக்கு ஆர்வம் மிகுந்துள்ள துறைசார்ந்த புத்தகங்களையே தேர்ந்தெடுத்துப் படிப்பான். வாசிப்புத் திறனானது வாசகனுக்கு வாசகன் மாறுபடும். ஒரு புத்தகத்தினைப் பற்றி பலவிதமான வேற்றுமை உடைய புரிதல்களை வாசகர்கள் கொண்டுள்ளனர். சில புத்தகங்கள் மனிதர்களால் போற்றப்படுகின்றன. சில புத்தகங்கள் மனிதர்களின் மனத்தில் தங்குவதில்லை. சில புத்தகங்கள் காலத்தை வென்று அனைவரின் நன்மதிப்பையும் பெற்று இவ்வுலகில் நிரந்தரமாக நிலைத்துள்ளன. சில புத்தகங்கள் படித்தவுடன் பொருள் தருவதில்லை. சில புத்தகங்கள் பொருள்தரினும் மனத்தில் நிற்பதில்லை.

புத்தகத்தினை வாசித்தல் என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. வாசிப்பதற்கு இப்படித்தான் வாசிக்க வேண்டும். இவ்வாறு வாசித்தல் எளிது. இப்படி வாசிப்பது மட்டுமே புரியும் என விவரிப்பதால் அல்லது அறிவுரைகள் கூறுவதால் நல்ல வாசகனை ஒருநாளும் நம்மால் உருவாக்கிவிட இயலாது.

புத்தகம் சொற்பொருள் விளக்கம்

புத்தகம் என்னும் சொல்லிற்கு “புத்தகம் (book) என்பது எண்ணப் பதிவாகிய கருத்துகளை எழுத்து உருவில் காட்டும் ஒரு கருவி. இக்காலத்தில் அச்சிட்ட புத்தகங்களை உணர்த்த இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. காகிதம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் நூல் பனையோலையில் எழுதப்பட்ட பதிவாக இருந்தது. எழுதப்பட்ட பனையோலைகளைப் துளையிட்டு நூல்கயிற்றில் கோத்து வைத்தனர். பொத்துக் கோத்து வைத்த சுவடிகளைப் பொத்தகம் என்றனர். நாளடைவில் பொத்தகம் என்னும் சொல் புத்தகம் என மருவி வழங்கப்படுகிறது”1 கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியா பொருள் தருகின்றது. பொத்தகம் என்னும் சொல்தான் புத்தகமாக மாற்றம் அடைந்துள்ளது. பொத்தகம் என்னும் சொல்லிற்கு பொதுவான செய்திகளை  அகத்தில் கொண்டிருப்பது அல்லது அகத்துள் சேர்க்க  உதவுவது என்று பொருள் கொள்ளலாம்.

வாசிப்பதற்கான புத்தகத்தினைத் தேர்ந்தெடுக்கும் முறைகள்:

  1. மனத்திற்கு மகிழ்ச்சி அளிக்க கூடியவை
  2. ஆர்வத்தினை வளர்ப்பவை
  3. துறைசார்ந்த அறிவினை விரிவுபடுத்துபவை
  4. புதுமையான செய்திகளைத் தருபவை
  5. வாசகன் சார்ந்த படைப்பாளுமை வளர்க்க உதவுபவை
  6. திறனாய்வு அறிவினை மேம்படுத்துபவை
  7. பிறதுறை சார்ந்த வியப்பினை அளிப்பவை
  8. பொதுவானவை

புத்தகம் வாசிக்கும் திறம்:

புத்தகவாசிப்பு என்பது நடுநிலைத்தன்மையுடையதாக இருத்தல் வேண்டும். ஒரு புத்தகத்தினைப் பற்றிய எதிர்மறை கருத்துக்களை நண்பர்கள் அல்லது சமூக ஊடகங்களின் வாயிலாக அறிந்துகொண்டு பிறகு அப்புத்தகத்தினை வாசிப்பதில் எவ்வித பயனும் இல்லை. ஆகையால், புத்தகத்தினை பற்றிய எதிர்மறை கருத்துக்களை எல்லாம் மனத்திலிருந்து தூக்கி எறிந்துவிட வேண்டும்.

ஓர் எழுத்தாளரின் செல்வாக்கினை மனத்தில் நிறுத்திக்கொண்டு புத்தகத்தினைப் படித்தல் கூடாது. புத்தகத்தில் வரையறுக்கப்பட்ட காலத்தினை மனத்தில் நிறுத்திக்கொண்டு புத்தகத்தினைப் படித்தல் வேண்டும். புத்தகத்தின் ஆசிரியரின் மீதுள்ள வெறுப்பு மற்றும் நம்பகத்தன்மையற்ற நிலையினை மனத்தில் கொண்டு புத்தகத்தினை வாசிக்க கூடாது. மொழிபெயர்ப்பு நூல்களைப் படிக்கும்பொழுது மூலநூல் படைக்கப்பட்ட நாட்டின் காலசாரம், பண்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சடங்கு முறைகள், காலநிலை, சூழல்கள் ஆகியவற்றை அறிந்துகொண்டு படிப்பது சிறப்பான புரிதலைத் தரும். புத்தக வாசிப்பிற்குத் தகுந்த சூழலை, நேரத்தை வாசகன் ஏற்படுத்திக்கொள்ளுதல் அவசியமானதாகும்

புத்தக வாசிப்பில் புரிதல்அற்ற நிலைக்குக் காரணங்கள்:

புத்தகவாசிப்பு நிலையில் முதன்மையானதாகக் கருதப்படுவது உணர்ந்து வாசிப்பதாகும். புத்தகத்தினை உணர்ந்து வாசிக்கும் நிலையில் வாசகனின் மனம் இல்லாத நிலையினால் புரிதல்அற்ற தன்மை பிறக்கின்றது.

“புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே புத்தக வாசிப்பின் பெரிய சவால். ஒரு புத்தகம் புரிந்து கொள்ளப்படாமல் போவதற்குப் புத்தகம் மட்டுமே காரணமாக இருந்துவிடாது. வாசிப்பவனுக்கும் சமபங்கிருக்கிறது. அர்த்தம் புரியாமல் போவது வேறு. எதற்காக எழுதப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளாமல் போவது வேறு. ஒன்று அதன் மொழி மற்றும் வாக்கிய அமைப்புகள் காரணமாக அது புரியாமல் போயிருக்க கூடும். எந்தப் பொருள் பற்றி பேசுகிறதோ அது நமக்குப் பரிச்சயமற்றிருக்ககூடும். அல்லது அது ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய பயற்சி தேவைப்பட்டதாக இருக்ககூடும்”2.

புத்தக வாசிப்பில் புரிதல்அற்ற நிலையினை வாசகன் அடைவதற்கு அப்புத்தகத்தினைப் படிப்பதற்கு ஏற்ற அனுபவத்தினை பெறாது இருத்தல். புத்தகம் படைக்கப்பட்ட காலம், புத்தகத்தில் இடம்பெற்றுள்ள காலசாரம், பண்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சடங்கு முறைகள், காலநிலை, சூழல்கள் ஆகியவற்றை வாசகன் அறியாதிருத்தல். புத்தக வாசிப்பிற்கு ஏற்ற சூழல் இல்லாத நிலையில் வாசகன் இருத்தல்.

புத்தக வாசிப்பின் பயன்கள்

  1. மனம் தெளிவு பெறும்
  2. எழுத்துப் பிழைகள் நீங்கும்
  3. புதிய செய்திகளை அறிதல்
  4. வரலாற்றை த் தெரிந்து கொள்ளுதல்
  5. விவாதத்திறனை மேம்படுத்தும்.
  6. சிந்தனையை மேம்படுத்தும்
  7. பகுத்தறிவை வளர்க்கும்
  8. மொழிப்பற்றினை வளர்க்கும்
  9. படைப்பாளுமையின் மீது ஆர்வத்தினை ஏற்படுத்தும்
  10. தன்னம்பிக்கையை அதிகரிக்கும்

முடிவுரை:

புத்தக வாசிப்புப் பழக்கத்தினை நாம் தினசரி வாழ்க்கையின் நிகழ்வுகளில் ஒன்றாகக் கொள்ளுதல் வேண்டும். புத்தகங்களின்மீது அதீத ஆர்வத்தினை வளர்த்துக் கொள்வதால் நாம் புதிய சிந்தனைகளைப் பெறலாம் புத்தகங்களை நாம் கண்ணில்படும் இடங்களிலேயே வைத்திருத்தல் புத்தகங்களின்மீது நமக்கு ஈடுபாட்டை ஏற்படுத்த உதவும். நல்ல புத்தகங்கள் நல்ல மனிதர்களை உருவாக்கும். நல்ல மனிதர்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்குவார்கள் என்பது உண்மை.

ஓர் எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான். வாசகன் அதை முடித்துவைக்கிறான். – சாமுவேல் சான்சன்.

அடிக்குறிப்புகள்:

  1. https://ta.wikipedia.org
  2. http://www.sramakrishnan.com/?p=1542

*****************

கட்டுரையாளர்
உதவிப்பேராசிரியர்,
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி(தன்னாட்சி),
விழுப்புரம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.