ஹைக்கூ கவிதைகள்
தேனுகாமணி
மினுமினுப்பாய்
ஊர்ந்து செல்கிறது…
பயம்
……
செடியைப்பார்க்க
மனம் வரவில்லை…
பூக்கள் பறிக்கப்பட்ட பிறகு
……
காற்றில் அசைந்து அசைந்து
கவிதை எழுதும்…
செடிகொடிகள்
……
முட்புதரில்
முதலில் சிக்கியது பட்டம்…
கண்டபிறகு மனம்
…..
மரங்களை வெட்டி
மனிதன் செய்துகொள்கிறான்…
சவப்பெட்டி
…..
மெளனமொழி
பேசக்கற்றுத்தரும்…
கண்கள்
……..
தின்று விட ஆசைதரும்
அளவிற்கு அழகு….
அரளி விதை
……
தென்றல் என்ன பாடியிருக்கும்
தலையாட்டி இரசிக்கிறது…
தென்னை
…..
இடி விழுந்த பனையின்
முனையில் ஒரு காகம்…
எதை எண்ணி கரைகிறது
……
துக்க வீடு
தூங்க மனமில்லை…
விழித்திருக்கிறது விளக்கு
….
மழைமகள் வருகிறாள்
பூமித்தாய்க்கு கிடைக்கும்….
பச்சைப்புடவை
…..
வளைந்தது நாணல்
காற்றடிக்கும் திசையில்…
வாழக்கற்றுத்தருகிறது
…..
மழை இரவு
நடைப்பாதை வாசிக்கு…
எப்படி வரும் கனவு