Blog

  • தமிழுக்கு எது தேவை?

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    ‘யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்’ என்றார் பாரதி.  ‘தமிழுக்கு அமுதென்று பேர்;  அது எங்கள் உயிருக்கு நேர்’ என்றார் பாரதிதாசன்.  தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தங்கள் தாய்மொழியை நினைத்துப் பெருமைப்பட வேண்டும்.  தாய்மொழிக்குப் பெருமை சேர்க்க வேண்டும்.  இது எல்லோரும் ஒப்புக்கொள்ளக் கூடிய விஷயம்.  அதை எப்படிச் செயலில் காட்டுவது என்பதில்தான் எல்லோரிடையேயும் ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை.

    இப்போது அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு பத்து கோடி ரூபாய் – டாலரில் சொல்வதென்றால் 15 லட்சம் டாலர் – கொடுப்பதாக வாக்களித்திருக்கிறது.  இறந்த அம்மையார் கொடுப்பதாக வாக்களித்திருந்ததால் இப்போதுள்ள தமிழ்நாடு அரசு கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறதாம்.  இதற்கு மூல காரணமாக இருந்தவர்கள் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, அமெரிக்காவில் வாழும் இரு மருத்துவர்கள்.  இவர்கள் இருவரும் ஆளுக்கு அரை மில்லியன் டாலர் (ஐந்து லட்சம்) ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று நிறுவுவதற்கு கொடுத்தார்கள்.  ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஒரு மில்லியன் போதாது என்று கூறி மொத்தம் எட்டு மில்லியன் (எண்பது லட்சம்) வேண்டும் என்று கேட்டது.  இதனால் அமெரிக்காவில் வாழும் அமெரிக்கத் தமிழர்கள் கொஞ்சம் பணம் திரட்டினார்கள்.  அப்படியும் ஹார்வர்ட் கேட்ட பணத்துக்கு நிறையத் துண்டு விழுகிறது.  அதை ஓரளவிற்கு நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசு 15 லட்சம் டாலர் கொடுப்பதாக வாக்களித்திருக்கிறது.

    ஏழை நாடான இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழகம் இத்தனை பணம் செலவழித்து அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றின் மூலம் தமிழை வளர்க்கத்தான் வேண்டுமா?  மேலும் அமெரிக்காவில் வாழும் தமிழர்களும் மற்ற தமிழ் அறிஞர்களும் விரும்பும் விதத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தமிழை வளர்க்குமா?  சமீபத்தில் சென்னையில் ஒரு பேட்டியில் இஸ்ரேலைச் சேர்ந்த டேவிட் ஷுல்மன் தமிழில் சம்ஸ்கிருதத்தின் தாக்கம் இருப்பதாகச் சொன்னதற்கு அவரைத் தமிழ்நாட்டுத் தமிழறிஞர்களில் சிலர் வெகுவாக விமர்சித்தார்கள்.  உலகிலேயே தமிழ்தான் மூத்த மொழி, சிறந்த மொழி என்று சொன்னால்தான் இவர்களுடைய விமர்சனத்திற்கு ஆளாகாமல் இருக்க முடியும்.  ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உலகின் மூத்த மொழி தமிழ்தான் என்று சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்களா? ஷுல்மன் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய நூலை வெளியிட்டது ஹார்வர்ட் பல்கலைக்கழகம்.

    ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தமிழை எப்படி ஆராய்ச்சி செய்யும், எப்படி வளர்க்கும் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  முதலில் தமிழைத் தமிழ்நாட்டில் வளர்ப்பது பற்றித் தமிழ் வல்லுநர்களும் அரசியல்வாதிகளும் ஆராயட்டும்; அதற்குரிய செயல்களில் இறங்கட்டும்.  ஆங்கிலக் கல்வி மோகம் அதிகமாகிவரும் இந்தச் சமயத்தில் தமிழைச் சிறப்பாகக் கற்பது பற்றி எத்தனை பெற்றோர்கள் சிந்திக்கிறார்கள்?  அவர்களையும் குறை சொல்வதற்கில்லை.  தங்கள் குழந்தைகளுக்கு எங்கு, எதில் வேலைவாய்ப்பு இருக்கிறதோ  அதைத்தானே படிக்கும்படி அவர்களும் வற்புறுத்துவார்கள்.  இந்தியாவில் இப்போது தொழிற்கல்வி பயிலக் கடும் போட்டி நிலவுகிறது.  அந்தப் படிப்பில் சேர வேண்டுமானால் அதற்குரிய பாடங்களில் நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டியிருக்கிறது.  இந்தப் போராட்டத்தில் மொழித் தேர்ச்சி பற்றி யாரும் கவலைப்படுவதில்லை  வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்காகவாவது ஆங்கிலத்தில் பயிற்சி பெற விழைகிறார்கள்.  அதனால் தமிழைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.  தமிழில் தேர்ச்சி பெற்றால் எங்கு வேலை கிடைக்கும் என்பது பற்றித்தான் கவலைப்படுவார்கள்.

    இப்போது தமிழ்நாட்டில் கல்வித்தரம் மிகவும் தாழ்ந்துபோயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் இதே நிலைதானா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.  ஆசிரியத் தொழிலுக்குத் திறமையானவர்களை ஈர்ப்பதாகக் கூறிக்கொண்டு ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்திக்கொண்டே போகிறது அரசு.  ஆனால் ஆசிரியர்களின் தரமோ அவர்களின் கற்றுத்தரும் திறமையோ கூடியிருப்பதாகத் தெரியவில்லை.  எங்கள் காலத்தில் நாங்கள் பள்ளியை விட்டு வெளிவரும்போது தமிழில் ஓரளவு நல்ல பயிற்சியும் கல்லூரியைவிட்டு வெளிவரும்போது ஆங்கிலத்தில் ஓரளவு பயிற்சியும் பெற்றிருந்தோம்.  இதற்கு முக்கியக் காரணமாக நான் கருதுவது அப்போதைய ஆசிரியர்களின் திறமை, ஆசிரியத் தொழில் மேல் அவர்களுக்கிருந்த பிடிப்பு ஆகியவை.  இப்போது அந்தக் குணங்களை ஆசிரியர்களிடம் பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது.  அப்போதுள்ள சமூகத்திலும் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர்களுக்கு மதிப்பு இருந்தாலும் ஆசிரியத் தொழிலுக்கு வந்தவர்களிடம் தரமும் திறமையும் இருந்தன.   நான் பள்ளியில் தமிழைப் பாட மொழியாகக் கொண்டுதான் கற்றேன்.  கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் ஆங்கிலம் பாட மொழி.  இப்போது எனக்கு இரண்டிலும் ஓரளவு தேர்ச்சி இருக்கிறது.

    இப்போது கல்லூரி முடித்து வரும் மாணவர்களிடம்கூட இரண்டிலும் தேர்ச்சியைப் பார்க்க முடியவில்லை.  ஆங்கிலத்தில் பள்ளியிலிருந்தே பாட மொழியாகக் கற்பதைப் பெருமையாக எண்ணி அதில் கற்கப் போய் ஆங்கிலத்தில் மட்டுமல்ல, தமிழிலும் தேர்ச்சி இல்லை இக்கால மாணவர்களுக்கு.  முதலில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்; அதற்கு ஆசிரியர்களின் தரத்தையும் அவர்களின் கற்பிக்கும் திறமையையும் உயர்த்த வேண்டும்.  தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் எல்லோரும் தமிழில் நன்றாக படிக்க, எழுதப் பயிற்சி தர வேண்டும்; பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல தமிழில் –நல்ல தமிழ் என்றால் பண்டிதத் தமிழ் அல்ல- எழுதும் திறமை வேண்டும். தொலைக்காட்சியில் தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரிய வேண்டும். நம் பள்ளிகளில், கல்லூரிகளில் தமிழைச் சரியாகக் கற்றுக்கொடுக்காமல் ஹார்வேர்டில் தமிழ் கற்றுக்கொடுப்பதில் என்ன அர்த்தம் என்று புரியவில்லை.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (81)

    நிர்மலா ராகவன்

    கேள்விகள் ஏனோ?

    நலம்

    ஒருவர் கேட்கும் கேள்வியை வைத்தே அவரைப்பற்றிப் புரிந்துகொண்டு விடலாம்.

    தாம் மற்றவரைவிட உயர்த்தி என்று காட்டிக்கொள்ளும் பொருட்டு எதையாவது கேட்டுவைப்பது சில அறிவிலிகளின் வழக்கம்.

    கதை

    நான் அசைவ உணவு சாப்பிடுவதில்லை என்று சொல்லக் கேட்டு, ஒருத்தி கேலியாகக் கேட்டாள், “அப்படியெல்லாம் உயிர் வாழ முடியுமா?”

    அவளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று என்னால் விட்டுவிட முடியவில்லை. “என்னைப் பார்த்தால் இப்போதே செத்துவிடுகிறவள்போலவா இருக்கிறது?” என்று பதில் கேள்வி கேட்டேன்.

    யாரோ சிரிக்க, அவளுக்கு அவமானமாகிவிட்டது. என்னை அவமானப்படுத்த நினைத்தவள் தானே பலியானாள்.

    கதை

    “உன் தந்தை இன்னும் குதிரைப் பந்தயத்துக்குப் போகிறாரா?” என்று ஓர் இளைஞன் இன்னொருவனைக் கேட்டான். பர் முன்னிலையில்.

    குறிப்பிடப்பட்ட நபருக்கு அந்த பழக்கமே கிடையாது. அறிவாளியாக இருப்பினும், எதிர்பாராது வந்த கேள்வியால், மகனுடைய வாய் அடைத்துப்போயிற்று.

    கேள்வி கேட்டவனுக்குப் பதில் வராது என்று தெரிந்துதான் இருந்தது. அவனுடைய நோக்கம் தன்னைவிட மேலான நிலையில் இருந்தவனைத் தாக்குவதுதானே! அவன் எண்ணம் கைகூட, இம்முறையைப் பிறர்மீதும் கையாள்வான்.

    நம்மையே நாம் கேட்டுக்கொள்ளும் கேள்வி

    நோயோ, உற்றவருக்கு மரணமோ சம்பவித்தால், நமக்குள் `ஏன்?’ என்ற கேள்வி எழுகிறது. உடனே பதில் கிடைக்காது. பொறுமையாக இருந்தால், பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதில் கிடைக்கக்கூடும்.

    கதை

    ஒரு பெண்ணுக்குத் திருமணம் தட்டிக்கொண்டே போயிற்று. ஒரு முறை, திருமணத்திற்கு முதல் நாள் நின்று போயிற்று – யாரோ அத்தை, `இந்தப் பெண் ரொம்ப ஒல்லியா இருக்கா. டி.பியா இருக்கும்!’ என்று சொன்னதால். கன்னியாகவே அப்பெண்மணி தொண்ணூறு வயதுக்குமேல் நோய்நொடி இல்லாமல் வாழ்ந்தாள்.

    அவளுக்குக் கல்யாணமாகி, குழந்தைகள் பெற்றிருந்தால், தன் குடும்பம், குழந்தை என்று சுயநலமியாக ஆகியிருப்பாள். இப்போதோ, எவர் பெற்ற குழந்தையாக இருந்தாலும் பரிவும் பாசமுமாக நடத்த முடிந்தது.

    இன்னொரு கதை

    எனது சீன நண்பர் ஒருவர் இருமுறை திருமணம் புரிந்துகொண்டும், தனக்குக் குழந்தைகளே இல்லை என்று என்னிடம் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

    “உங்கள் சகோதர சகோதரிகளின் குழந்தைகள் உங்களிடம் அன்புடன் இருப்பார்களே!” என்றேன்.

    உற்சாகமடைந்து, “ஆமாம். அவர்களைப் பெற்றவர்களைவிட என்னிடம்தான் அவர்களுக்கு ஒட்டுதல்!” என்றார். `எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்று தன்னையே கேட்டுக்கொண்டு வருந்தியவருக்கு ஒரு நல்ல காரணம் கிடைத்ததில் மகிழ்ச்சி.

    தகுந்த வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க கீழ்க்கண்ட கேள்விகளைப் பரிந்துரைக்கிறார்கள் நிபுணர்கள்:

    1 அவன் எப்போதும் உன்னை மரியாதையாக நடத்துகிறானா?

    2 உன் முன்னேற்றத்தில் பொறாமை கொள்ளாது, அக்கறை செலுத்துவானா?

    3 பத்து வருடங்களுக்குப் பின்னரும் நீ அவனுடன் இருக்க விரும்புகிறாயா?

    மனிதன் எப்போதும் மாற்றம் அடையாது இருப்பதில்லையே!

    இங்குதான் கேள்வி அவசியமாகிறது: மேற்கண்ட கேள்விகள் எந்த அளவுக்குப் பலன் தரும்?

    பொழுதைப் போக்க அநாவசியமான கேள்விகள் கேட்பர் சிலர்.

    கடைத்தெருவில் பார்ப்பவரை, `கடைக்கு வந்திருக்கிறீர்களா?’ என்று கேட்பது உரையாடலை ஆரம்பிக்க ஒரு வழி.

    இதையே நான் சற்று மாற்றிக் கேட்டேன், ஒரு முறை.

    பேரங்காடியில் சந்தித்த என் மாணவியிடம், “ஊர் சுற்ற வந்திருக்கிறாயா?” என்று கேட்டேன். பள்ளி மாணவ மாணவிகள் வீட்டுக்குப் போகாது, கடைத்தெருக்களில் சுற்றி நேரத்தை வீணாக்குகிறார்கள் என்று தினசரியில் வரும்.

    அவள் போலியாகக் கோபித்து, “ஆங்! சாமான் வாங்க வந்தேன்,” என்றாள்.

    `இன்று உங்கள் வீட்டில் என்ன சமையல்?’ என்று வெளிநாட்டிலிருப்பவரைக் கேட்பதும் இந்த ரகம்தான். கேட்பவருக்குச் சமைப்பதிலும் உண்பதிலும் ஆர்வம் இருக்கலாம். ஆனால், எல்லாரும் அப்படியே இருப்பார்களா!

    கேள்வி கேட்பது நன்மையா? அப்படியானால் ஏன்?

    வாழ்வைப் புரிந்துகொள்ள கேள்விகள் அவசியம். நம்மைச்சுற்றி நடப்பவை எல்லாவற்றையும் பார்த்தவுடனே புரிந்துகொள்ள முடியாது. கேள்விகள் அவசியமாகின்றன.

    ஒரு விஞ்ஞானிக்குள், `ஏன் இப்படி?’ என்ற கேள்வி எழுந்தால்தான் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க முடிகிறது. பதிலையும் அவரே தயாரித்துக்கொள்ளவேண்டிய நிலை. அது தவறு என்று புரிந்ததும், `ஒரு வேளை, இப்படி இருக்குமோ?’ என்று வேறு கோணத்தில் பிரச்னையை அணுகுகிறார். அவருக்குத் தோன்றிய பதிலால் பிறருக்கு நன்மை விளைகிறது.

    படைப்பாளிகள், `இப்படியும் இருக்கலாமோ?’ என்று யோசிப்பதால் வித விதமான புனைக்கதைகள் கிடைக்கின்றன.

    மூடநம்பிக்கைகளை ஒழிக்க

    சிறு வயதில் பயமுறுத்தி வைத்திருந்ததை நம்பி, எப்போதுமே ஒரு செயலுக்குப் பயப்படுவது சரிதானா?

    `பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்தும்’.

    பொய் சொல்ல வேண்டும் என்பதில்லை. ஆனால், வீணாக தெய்வத்தை இழுப்பானேன்?

    உடனுக்குடனே தண்டனை அளித்தால், கடவுள் எப்படி கருணை மிக்கவர் ஆவார்?

    அவருக்கும் மானிடனுக்கும் என்ன வித்தியாசம்?

    கடவுள், மதம் என்ற பெயரால் மனிதனின் சிந்திக்கும் திறனை, அத்திறனால் கேள்வி கேட்கும் பழக்கத்தை ஒடுக்கி விடுகிறார்கள் சிலர்.

    எனக்கு ஒரு பெண் விரிவுரையாளர் எழுதியது: `நீ நிறைய கேள்விகள் கேட்கிறாய். எல்லாவற்றையும் கடவுள் கொடுத்தது என்று ஏற்றுக்கொள்!’

    கடவுள் பெயரைத் தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டு, மனிதன் விதித்த நடைமுறைகளை கேள்வி கேட்காது ஏற்க வேண்டுமா?

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(192)

    செண்பக ஜெகதீசன்

     

     

    ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்

    கிரவி னிளிவந்த தில்.

    -திருக்குறள் -1066(இரவச்சம்)

     

    புதுக் கவிதையில்…

     

    பசுவின் தாகம் தீர்க்கும்

    நல்லறம் கருதி

    நீர்கேட்டு இரந்தாலும்,

    அவ்விதம்

    இரத்தலைக் காட்டிலும்

    இழிவான செயலொன்றில்லை,

    இரக்கும் நாவுக்கு…!

     

    குறும்பாவில்…

     

    பசு பருகிட நீர்கேட்டிரந்தால்,

    அறமிதுவெனிலும் இரக்கும் நாவுக்கு

    இதற்குமேலோர் இழிவில்லை…!

     

    மரபுக் கவிதையில்…

     

    தாகம் தீர்த்திட பசுவினுக்காய்

    தண்ணீர் கேட்டே யிரப்பதது,

    சாகும் உயிரைக் காத்திடும்நல்

    சாத்திரம் காட்டும் அறமெனிலும்,

    தேக உறுப்பாம் நாவினுக்குத்

    தண்ணீர் பெறவே யிரந்ததுதான்,

    ஆகக் கூடிய தலைகுனிவாம்

    அதற்கு மேலும் இழிவிலையே…!

     

    லிமரைக்கூ..

     

    நீரிரப்பர் தீர்த்திட பசுவின் தாகம்,

    அறமிதென்றாலும் ஆகாதிரந்த நாவினுக்கே

    அதுபெறும் ஈடிலா இழிவாம் சோகம்…!

     

    கிராமிய பாணியில்…

     

    எரக்காத எரக்காத

    எதுக்காகவும் எரக்காத..

     

    தாகத்தில தவிக்கிற பசுவுக்கு

    தண்ணிகுடுக்கறது புண்ணியந்தான்,

    அனாலும் அத

    எரந்துகுடுக்கறது நல்லதில்ல..

     

    எரந்து கேட்ட நாக்குக்கு

    இதவிடக் கேவலமான

    கெடுதியில்ல கெடுதியேயில்ல..

     

    எரக்காத எரக்காத

    எதுக்காகவும் எரக்காத…!

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 240

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – கட்டுரை காதை

    வார்த்திகனைச் சிறைவிடுத்து, அவனுக்கு இரண்டு ஊர்களை அளித்தல்

    திறக்க இயலாதபடி மூடிக்கொண்ட
    கோவில் கதவின் உறுதியான நிலையறிந்து,
    வீரம் மிக்க வேலை உடைய
    பாண்டிய நெடுஞ்செழியன் மயங்கினான்.

    “என் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியானதா?
    கொற்றவைக்கு நேர்ந்த வருத்தம் என்ன?”malar
    இதை ஆராய்ந்துவந்து என்னிடம் கூறுங்கள்…
    என மன்னன் கட்டளையிட்டான்.

    இளமையான அந்தச் சேவகர்,
    மன்னனை வணங்கிச் சென்றனர்.
    உளவுகண்டு செய்தி அறிந்து,
    வார்த்திகனைச் சிறையிலிருந்து அழைத்துவந்து
    மன்னன்முன் நிறுத்தினர்.
    உணமையை எடுத்துரைத்தனர்.

    உண்மையறிந்து மனம் வருந்தினான் மன்னன்.
    வார்த்திகனிடம் பேசலானான்.
    “பெரியவரே! உம்மைச் சிறையில் அடைத்தது
    செங்கோன்மைக்குப் பொருத்தமான
    செயல் அன்று;

    தம் கடமையிலிருந்து தவறிய
    அறிவில்லாத எம் காவலரால்
    என் அரசநீதி தவறிவிட்டது.
    இதைப் பொறுத்துக்கொள்வது
    பெரியவராகிய உங்கள் கடமை!”

     

     

    Share
  • இணையத்தமிழ் இதழ்களில் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் – 2

    -முனைவர்.வே.மணிகண்டன்

    வார்ப்பு இதழ் அறிமுகம்

    வார்ப்பு 1998-ஆம் ஆண்டின் முற்பகுதியில் ‘நிக்குமோ நிக்காதோ’ என்ற பெயரில் மூன்று கவிஞர்களின் கவிதைகளுடன் தொடங்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டு ‘நிக்குமோ நிக்காதோ’ என்ற பெயரில் இருந்து டப்ளின்.காம்  என்ற இணையத் தளப்பெயருக்கு வார்ப்பு மாறியது. அம்மாற்றம் பெரிய மாற்றத்தைக் கவிஞர்கள், இணையப்பயனர்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை. பிறகு கவிஞர் இசாக் அவர்களின் ஆலோசனைப்படி கவிஞர் மாலியன் அவர்களால் ‘வார்ப்பு’ என்ற பெயர் சூட்டப்பட்டது. தொடக்கத்தில் இலவச இணைய வழங்கியில்; தொடங்கப்பட்ட வார்ப்பு படிப்படியாக வளர்ச்சி நிலையை அடைந்தது.வார்ப்பு இதழின் பதிப்பாசிரியரான பா.மகாதேவன், உதவி ஆசிரியர்களான பிரியானா ராஜேந்திரா, ரமணன், ஆலோசனை வழங்குபவர்களான இசாக், ரவி சுவிஸ் , நந்தா கந்தசாமி, அருள்அரசி, ரஞ்சினி ஆகியோரின் பெரும் முயற்சியினால் காலத்தோடு மாறும் இணையத்தில் வார்ப்பு தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

    வார்ப்பு இதழின் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள்

    ‘கவிதை இதயங்களின் துடிப்பு’ என்னும் இலைச்சினையுடனும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உயரிய கொள்கையுடனும் வெளிவரும் வார்ப்பு இதழானது கவிஞர்கள், கவிதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், கட்டுரை நிகழ்வுகள், படமும் வரிகளும், சரம், நூலகம், எம்மைப்பற்றி, கருத்துக்கள், மொழிபெயர்ப்பு கவிதைகள் ஆகிய பகுதிகளைத் தன்னகத்தே  பெற்று வெளிவருகிறது. கவிஞர்கள், இணையப்பயனர்கள், விமர்சகர்கள் ஆகியோரின் முழுமையான பங்களிப்பால் முழுக்க முழுக்கக் கவிதை தொடர்பான படைப்பாக்கங்களை வெளியிடும் நோக்கில் வார்ப்பு இதழ் தொடங்கப்பட்டது.

    ‘எளிமையே பேரழகு’ என்னும் பதத்துக்கு உதாரணம் வார்ப்பு தளம்தான். சிரமம் இல்லாத இணைப்புகளாலும் புத்துணர்ச்சியூட்டும் வண்ணங்களாலும் வலைப்பக்கம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கவிதைகளுக்கும் படைப்புகளுக்கும் பொறுத்தமான புகைப்படங்களைத் தேடிப் பிடித்து இணைத்து படைப்புகளை அழகுபடுத்தும் பணி பெரிதும் பாராட்டத்தக்கது’எனக் கவிதைக்கான சிற்றிதழ் அணி வார்ப்பு பற்றிய தமது கருத்தைத் தெரிவித்துள்ளது.

    வார்ப்பு இதழானது கவிதைகளை மட்டுமல்லாது கவிஞர்கள், கவிதை விமர்சகர்கள், இணையப்பயனர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும் பாலமாகத் திகழ்கிறது. கருத்துக்களை தெரிவிக்கும் தெரிந்து கொள்ளும் களமாகவும் இவ்விதழ் உருபெற்றுள்ளது. 25.09.2008 வரை 359 கவிஞர்களையும் ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகளையும் வார்ப்பு இதழ்  தன்னகத்தே ஒருங்கiணைத்துள்ளது.

    ‘உங்கள் படைப்புகள் யாவும் யுனிகோடு எழுத்துரு அமைப்பில் எழுதப்பட வேண்டும் என்பதை தெரிவிக்கிறோம். எமக்கு வரும் படைப்புகளை நாம் யுனிகோடு எழுத்துருவுக்கு மாற்றும்போது அப்படைப்புகள் பல விதங்களில் சிதைவுறுகின்றன. உதாரணமாக கோவலன் என்ற பெயர் காவலன் என மாற்றப்பட்டால் அப்பிழையை நாம் அறிந்துகொள்ள வாய்ப்பு மிகக்குறைவு. ஆகவே, படைப்பாளிகளே படைப்புகளை யுனிகோடு எழுத்துருவில் எழுதி அனுப்பினால் அவ்வாறான பிழைகளையும் , எழுத்துப் பிழைகளையும் சீர்செய்து கொள்ள முடியும் என நம்புகிறோம்.

    உங்களுடைய கவிதைகள் ஏற்கனவே வார்ப்பில் இடம்பெற்றிருந்தால் தயவுசெய்து உங்களுடைய வார்ப்பு அடையாள இலக்கத்துடன (கவிஞர்கள் வரிசையில் உங்களுடைய பெயரோடு இருக்கும் எண்) சேர்த்துப் படைப்புகளை அனுப்பிவையுங்கள். படைப்பாளிகளும், படைப்புகளும் அதிகரிக்கப் படைப்புகளை பிரசுரிப்பது தொடர்பான சிக்கல்களும் அதிகரிக்கின்றன. சில சமயங்களில் ஒரு படைப்பாளியை இரு வேறு பெயர்களில் அறிமுகப்படுத்தும் தவற்றினைத் தவிர்த்துக் கொள்ள எமக்கு இந்த அடையாள இலக்கப்பிரயோகம் பெரிதும் உதவும்.

    கவிதைகளோடு அவற்றுக்குப் பொருத்தமான படங்களை இணைத்து அனுப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அனுப்பும் படங்களால் எழும் சட்டச்சிக்கல்களை எம்மால் எதிர்கொள்ள முடியாது. உங்களுடைய கவிதைத் தொகுப்புகளின் அட்டைப்படங்களை வேண்டுமானால் இணைத்து அனுப்பலாம்.

    கவிதைத் தொகுப்பை நூலகம் பகுதியில் அறிமுகம் செய்ய விரும்பினால் தொகுப்பின் பெயர், அட்டைப்படம், கவிஞரின் பெயர், தொகுப்பு கிடைக்குமிடம் போன்ற விடயங்களை இணைத்து அனுப்பிவையுங்கள்’6.

    வார்ப்பு ஆசிரியர் குழுவினால் இடப்பட்டுள்ள இக்கடிதத்தின் வாயிலாக வார்ப்பு இதழ் அனைத்துக் கணினிகளிலும் தெரியும் விதமாக யுனிகோடு; எழுத்துருவில் மாறியுள்ளமையும், ஆகையால் படைப்புக்களைப் படைப்பாளர்கள் பிற எழுத்துருக்களில் இதழுக்கு அனுப்பாமல் யுனிகோடில் மட்டும் அனுப்பும்படி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், படைப்புகளை வார்ப்பு இதழுக்கு முன்பிருந்தே அனுப்பும் கவிஞர்கள் இதழில் அக்கவிஞருக்கு தரப்பட்டுள்ள இலக்கத்தையும் சேர்த்து அனுப்பினால் எவ்வித கவிதை, பெயர் சிக்கல்கள் இன்றி கவிதைகள் இதழில் இடப்படலாம்.  எழுத்துப்பிழை, எழுத்துருச்சிக்கல் ஆகியவை தவிர்க்கப்பட்டு உலகத் தமிழர்கள் அனைவரும் படித்து பயனுறும் வகையில் கவிதைகள் இவ்விதழில் தொகுக்கப்படுகின்றன.

    கவிஞர்கள்

    கவிஞர்கள் பகுதியில் கவிஞர்களின் பெயர்கள் வரிசைப்படுத்த ஒவ்வொரு கவிஞருக்கும் ஓர் அடையாள இலக்கம் தரப்பட்டுள்ளது. அடையாள இலக்கத்தை வார்ப்பில் உள்ள தேடுபொறியில் இட்டுத் தேடினால் கவிஞரின் பெயர், கவிதையின் பெயர் மற்றும் வார்ப்பில் வெளியான கவிஞரின் படைப்புகள் முழுவதையும் வாசிக்கும் வசதியைப் பெறலாம்.

    கவிதைகள்

    கவிதைகள் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளின் தலைப்புகள் எண் கொடுக்கப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கவிதைகளில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து படிக்க அக்கவிதையின் தலைப்பைச் சொடுக்கினால் கவிதை முழுமையாகக் காட்சிபடுத்தப்படும். மேலும் கவிஞரின் மற்ற படைப்புகளை ‘இவரின் பிற கவிதைகள்’ எனும் பகுதியில் தெரிவு செய்து படிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கவிதைக்கும் வரும் கருத்துகள், விமர்சனங்கள் ஆகியவை பெறப்பட்டுக் காட்சிப்படுத்தப்படுகின்றன. கவிதைகளை நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் வசதியும், பிரதியெடுக்கும் வசதியும் கவிதைகள் பகுதியில் தரப்பட்டுள்ளன.

    மொழிபெயர்ப்புக் கவிதைகள்

    மொழிபெயர்ப்புக் கவிதைகள் பகுதியில் பதினேழு மொழிபெயர்ப்புக் கவிதைகள் தரவேற்றப்பட்டுள்ளன. உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களான கலீல் கிப்ரான், எரிக் பிரைட், ஜாவேத் அக்தர், தஸ்லீமா நஸ்ரின், கிறிஸ்ரா விஸ்ரரி, பிராபுல் சங்கர்  ஆகியோரின் படைப்புகளை மதியழகன் சுப்பையா, புதியமாதவி, ரஞ்சினி ஆகிய படைப்பாளர்கள் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.

    விமர்சனங்கள்

    விமர்சனங்கள் பகுதியில் ஐம்பதிற்கு மேற்பட்ட கவிதை நூல்களுக்கு மதிப்புரைகளும் விமர்சனங்களும் விமர்சகர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஒரு கவிதை நூலுக்கு ஒரு விமர்சனம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. சில கவிதை நூல்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட பல விமர்சனங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, ஒரு கவிதை நூலுக்குப் பல விமர்சனங்கள் அளிக்கப்படுவதால் பல கோணங்களில் அக்கவிதை நூலுக்கான விமர்சனங்கள் இணையப் பயனர்களுக்கு புதுவித அனுபவத்தையும் ,நூலின் மேல் பெரும் தாக்கத்தையும் அளிப்பதாகத் திகழ்கின்றன. புத்தகங்களின் அட்டைகள் வருடப்பட்டுப் பிரதியெடுத்து விமர்சனங்களொடு இணைக்கப்பட்டிருப்பது இப்பகுதிக்கு மேலும் பொலிவூட்டுகிறது. பெரும்பாலும் விமர்சனங்கள் பகுதியில் புலம்பெயர்வு, பெண்ணியம் தொடர்பான கவிதை நூல்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளன.

    நேர்காணல்கள்

    நேர்காணல் பகுதி இவ்விதழில் மற்றைய பகுதிகளை விட குறைவான ஆக்கங்களை பெற்றுள்ள பகுதியாகத் திகழ்கிறது. இப்பகுதியில் மீரா, அப்துல் இரகுமான், புதியமாதவி, நிரஞ்சினி, தீபச்செல்வன், அனார், ரஞ்சினி ஆகியோரின் நேர்காணல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.

    கட்டுரைகள்

    கட்டுரைகள் பகுதியில் பதினைந்து கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் கவிதைப் பற்றிய கட்டுரைகளாகப் படைக்கப்பட்டுள்ளன. புதுக் கவிதை, ஹைக்கூ, சில கவிஞர்களின் வரலாறு, நூல் கண்காட்சி, பெண்கள் சந்திப்பு, கவி அரங்கம் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

    நிகழ்வுகள்

    நிகழ்வுகள் பகுதியில் ஐம்பத்திற்கும் மேற்பட்ட நிகழ்வுகள் தரவேற்றப்பட்டுள்ளன. இப்பகுதியில் ஒருங்குகுறி எழுத்துருவில் மட்டுமே தகவல்கள் அளிக்கப்பட வேண்டும். இதற்காக நிகழ்வுகள் பகுதியிலேயே தமிழா, புதுவை ஆகிய ஒருங்கு குறி எழுத்துரு எழுதிகளும், பொங்குதமிழ் எழுத்துருமாற்றியும் இடம் பெற்றுள்ளன. புத்தகக் கண்காட்சி, நூல் வெளியீடு, பெண்கள் சந்திப்பு,கவிதை, கட்டுரை, சிறுகதைப் போட்டிகளுக்கான அறிவிப்பு, பட்டிமன்றம், கவிஅரங்கம் பற்றிய அறிவிப்புகள் ஆகியவை நிகழ்வுகள் பகுதியில் தரவேற்றப்படுகின்றன.

    படமும் வரிகளும்

    ‘படமும்…வரிகளும்’ பகுதியானது கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு ஏற்பக் கவிதை எழுதும் பகுதியாகும். இப்பகுதியானது இணையப் பயனர்களின் மனத்தைத் தூண்டி கவிஞர்களாக மாற்றும் வகையில் படங்களும் அவற்றிற்கேற்ப தலைப்புகளும் தரப்பட்டிக்கும். படங்களுக்கேற்ப இப்பகுதியில் கவிதையைப் படைக்க தமிழ் ஒழுங்குகுறி எழுத்துருக்களும் இப்பகுதியில் தரப்பட்டுள்ளன. பெயர், மின்னஞ்சல், நாடு ஆகியவற்றைக் குறிப்பிடவும் கவிதை எழுதவும் இப்பகுதியிலேயே வசதிகள் வழங்கப்படுகின்றன. ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதைகள் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன. இப்பகுதி அறிமுக கவிஞர்களைப் பெருவாரியாக உருவாக்கும் பகுதியாகவும், பிற தமிழ் இணைய இதழ்களில் இல்லாத புதுமையான பகுதியாகவும் கருதப்படுகிறது.

    சரம்

    கவிதை தொடர்பான இணைய இதழ்கள், வலைப் பதிவுகள் ஆகியவற்றைத் தொகுக்கும் பகுதி சரம். இப்பகுதியில் முழுக்க முழுக்க கவிதைத் தொடர்பான இணையத்தமிழ் தளங்களும் வலைப்பதிவுகளும் மட்டுமின்றி கவிதையை ஒரு பகுதியாகக் கொண்ட இணையதளங்களும், வலைப்பதிவுகளும் தொகுக்கப்படுகின்றன. இம்முயற்சியில் இதுவரை நூற்றுஐம்பத்திற்கும் மேற்பட்ட கவிதை தொடர்பான தளங்களும் வலைப்பதிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன.

    நூலகம்

    கவிஞர்களின் கவிதை நூல்களைக் காட்சிப்படுத்தும் பகுதியாக நூலகம் பகுதி திகழ்கிறது. கவிஞர்களின் கவிதைப் புத்தகங்கள் இப்பகுதியில் இடம் பெற விரும்பினால் கவிதை நூலின் அட்டைப்படம், கவிஞரின் பெயர், வெளியீடு, விலை மற்றும் நூல் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் வார்ப்பு இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்தால் அவை நூலகம் பகுதியில் காட்சிப்படுத்தப்படும். நூலகம் பகுதியில் இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் இடம்பெற்றுள்ளது. இப்பகுதியில் புலம்பெயர்வு, பெண்ணியம் சார்ந்த கவிதை நூல்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.

    நிலாச்சாரல் இதழ் அறிமுகம்

    நிலாச்சாரல் தமிழ் இணைய இதழ் மே 18, 2001-இல் தொடங்கப்பட்டது. ‘மண்ணில் தெரியுது வானம்’ என்ற அடைமொழியுடன், இரு மொழி வார இதழாக இலண்டனிலிருந்து வெளிவருகிறது. பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளுடன் வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் படைப்புகளையும் இவ்விதழ் சரிசமமாக தரவேற்றம் செய்கிறது. நிலாச்சாரலில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்துப் படைப்புகளையும் வாசகர்கள் இலவசமாகப் படிக்கலாம்.

    நிலாச்சாரலின் ஆசிரியர் நிலா என்னும் புனைபெயரில் எழுதும் நிர்மலா ராஜு. இவர் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் வேதிப்பொறியியலில் இளநிலைப் பட்டமும் , திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரியில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். தற்போது மென்பொருள் தரக் கட்டுப்பாட்டு ஆலோசகராக இலண்டனில் பணிபுரிந்து வருகிறார். நாவல், சிறுகதை படைப்பதில் மிகுந்த ஈடுபாடுடைய நிலா இதுவரை சுமார் 60 சிறுகதைகளும், குழந்தைகளுக்கான சில கதைகளும், பல கட்டுரைகளும் எழுதி இருக்கிறார். நிலாச்சாரல், திசைகள், விகடன், கல்கி, பாக்யா, குங்குமம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. நிலாச்சாரலின் படைப்புகளைத் தொகுத்து நிலா புக்ஸ்  மூலம் வெளியாகும் மின்நூல்களுக்குப் பதிப்பாசிரியராகவும் பணியாற்றுகிறார்.

    நிலாச்சாரல் இதழில் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள்

    நிலாச்சாரலில் கதை, கவிதை, கட்டுரை, ஆன்மீகம், சுவடுகள், நகைச்சுவை, சுயமுன்னேற்றம், அரசியல், பூஞ்சிட்டு, இலக்கியம், திரைச்சாரல், ஜோதிடம், தொடர்கள், கைமணம், கைமருந்து, நேர்காணல், தமிழாய்வு, மாணவர் சோலை எனப் பற்பல பிரிவுகளில் படைப்புகள் தொகுக்கப்படுகின்றன. தமிழ் தவிர, ஆங்கில மொழியிலும் படைப்புகள் வெளியிடப்படுகின்றன. தமிழில் மென்வாழ்த்துக்கள் அனுப்பும் வசதியும் இடம் பெற்றிருக்கின்றன.

    நிலாச்சாரலில் வெளியாகும் பல்வேறு படைப்புகள் தொகுக்கப்பெற்று மின் புத்தகமாகவும் நிலாபுக்ஸ் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. நிலாச்சாரலில் தன்னார்வத் தொண்டராக அல்லது பகுதி நேரப் பணியாளராக இணைந்து கொள்ளும் வாய்ப்பு வாசகர்களுக்கு வழங்கப்படுகிறது. இதழ் தயாரிப்பு உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள குழுவினரால் மேற்கொள்ளப் படுகிறது,

    ‘படைப்புகளைக் கவனமாய்ப் பரிசீலித்துத் தகுதியானவையாகக் கருதப்படுபவை மட்டுமே நிலாச்சாரலில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பும் பல படைப்புகள் மெருகேற்றப்பட்டே பிரசுரிக்கப் படுகின்றன’7 எனத் தமது இதழில் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும் திறம் குறித்து ஆசிரியர் நிலா கூறுகின்றனர்.

    ‘அச்சு இதழ்களைப் புதிய படைப்பாளிகள் நெருங்கவே முடியாத சூழலில் அவர்களுக்கு மேடை கொடுத்து அவர்களை வளர்த்;;தெடுக்கும் பணியை இணைய இதழ்கள் செய்து வருகின்றன’8 என்று நிலாச்சாரல் ஆசிரியர் புதிய படைப்பாளிகளின் திறமையை வெளிக்கொணரும் விதத்தினை விவரிக்கின்றார்.

     முன்னூறு வாரங்களாய் தவறாமல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலாச்சாரல் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் படைப்புகளை உள்ளடக்கி இருக்கிறது.  தரமான படைப்புகளை மெருகேற்றி வெளியிட்டு வருகிறது. குழந்தைகளுக்காகவும், மாணவர்களுக்காகவும் பிரத்யேகப் பகுதிகள் கொண்டு இளைய தலைமுறையின் மேல் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

    புதிய படைப்பாளர்களை ஊக்கப்படு;த்தவும் படைப்பிலக்கியங்களை வளர்த்தெடுக்கவும் நிலாச்சாரல் இதழும், நிலா புத்தக அங்காடியும் 2006-ஆம் ஆண்டிலிருந்து சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கி வருகிறது. நிலாச்சாரல் இதழில் பரிசுப்பெற்ற படைப்பாளரைப் பற்றிய அறிமுகச் செய்தி;களை  இதழில் தரவேற்றம் செய்து பெருமைப்படுததுகிறது.

    கதைகள்

    சிறுகதை இலக்கியத்திற்கு நிலாச்சாரல் இதழ் பெரும் பங்காற்றியுள்ளது. சிறுகதைப் பகுதியில் ரிசபன், எஸ்.ஷங்கரநாராயணன், ம.ந.ராமசாமி, நிலா, பெரிய நாயகி, மீனாகுமாரி, வாலம்பாள், கோபாலகிருஷ்ணன், சக்தி சக்திதாசன், நடராஜன், ஜெயந்தி சங்கர், ரிசிகுமார், சுகந்தி, சரவணன், சேவியர், என்.கணேசன், ஆல்பர்ட் மேலும் பல படைப்பாளர்களின் பங்களிப்பால் ஐந்நூற்றிற்கும் மேற்பட்ட சிறுகதைப் படைப்புகள் இவ்விதழில் தரவேற்றப்பட்டுள்ளன. பெரும்பாலான சிறுகதைகள் காதல்,தனிமனித நடத்தைகள், சமூகம் ஆகிய பொருண்மைகளில் படைக்கப்பட்டுள்ளன. ஆரம்பகாலச் சிறுகதைகள் புலம்பெயர்வு சார்ந்த கதைக் கருவைக் கொண்டவைகளாகப் படைக்கப்பட்டுள்ளன.

    கவிதைகள்

    கவிதைகள் பகுதியில் இளைய அப்துல்லாவின் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவரது பெரும்பான்மையான கவிதைகள் புலம்பெயர்வு சார்ந்த கவிதைகளாகப் படைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சேவியர், புஹாரி, சங்கர், புஷ்பா கிருஷ்ரி, ஈழநிலா, ரகசிவ் ஞானியார், நட்சத்திரன், மதுமிதா, சக்தி சக்திதாசன், புதியவன், கீதா மதிவாணன் ஆகிய கவிஞர்களின் பெரும் பங்களிப்பால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. புகழ்பெற்ற கவிஞர்களின் கவிதைகளை ஆசிரியர் குழுவே கவிஞர்களின் அனுமதியுடன் இதழில் பதிப்பு செய்துள்ளது.

    நாவல்கள்

    நிலாச்சாரல் இதழில் நாவல்கள் ‘தொடர்கள்’ எனும் பெயரில் தரவேற்றப்படுகின்றன. இவ்விதழில் என்.கணேசனின் நீ நான் தாமிரபரணி, மனிதரில் எத்தனை நிறங்கள் , சுகந்தியின் நானென்றும் நீயென்றும், உனக்காக, கண்ணை மூடி காட்சி தேடி, வெண்ணிலவே வெண்ணிலவே, நரேனின் நாயகன் ஒரு நங்கை, ஜெய்யின் ஜய், ரிசபனின் நிலாவட்டம், நிலாவின் அழகிய மிருகம் ஆகிய நாவல்கள் நிலாச்சாரல் ஆசிரியர் குழுவால் தரவேற்றப்பட்டுள்ளன. நிலாச்சாரலில் பெரும்பாலான நாவல்களின் கதைக்கரு காதலை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன.

    நிலாச்சாரல் இதழில் நாடகத்திற்கான பகுதிகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. படைப்பிலக்கிய வகைமைகளில் ஒன்றான நாடக இலக்கியப் படைப்புகள் படைப்பாளர்களாலும், ஆசிரியர்குழு உறுப்பினர்களாலும் தரவேற்றப்படவில்லை. கவிதை, சிறுகதை, நாவல் பகுதிகள் இதழ் தொடங்கப்பட்ட காலம் முதல் தொடர்ந்து வாரம் தவறாமல் தரவேற்றப்படுகின்றன.

    *************

    அடிக்குறிப்புகள்

    1. www.thinnai.com/?module=displaystory&story_id…format
    2. www.thinnai.com/?module=displaystory&story_id=60708024&format
    3. www.thinnai.com/?module=displaystory&story_id…format
    4. www.geotamil.com/pathivukal/VNG_ON_Pathivukal.htm
    5. www.madhiyalagan.blogspot.com/2006/11/3.html
    6. www.vaarppu.com/php/sendinfo_uni.php
    7. www.nilaraj.blogspot.com/2005/05/blog-post_14.html
    8. www.nilaraj.blogspot.com/2005/05/blog-post_14.html

    *******

    கட்டுரையாளர்
    உதவிப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
    விழுப்புரம்.

    Share
  • ஸ்ரீ ரமண வசனாம்ருதம்….!

     

     

    “பண்ணதையே பண்ணிண்டு , தின்னதையே தின்னுண்டு ,
    சொன்னதையே சொல்லும் சுகபுருஷா (கிளிப்பிள்ளை ) -என்னதைக்-
    கண்டாய் மனமே! கவனிநான் யாரென்று :
    கண்டவர் விண்டிலர் காண்”….!கிரேசி மோகன் ….!

    Share
  • அறிவோம் பாரதியை!

    பவள சங்கரி

     

    தமிழருக்கு புதிய

    உயிர் அளித்து

    சிந்தனையினைத்

    தெளிவாக்கி

    தலை நிமிர்ந்து

    நடக்கச் செய்ய

    பாரதியைப்

    படித்திடுவோம்

    IMG_20171112_102843496 (1)

    IMG_20171112_103008232

    மகாகவி பாரதியின் 135 ஆம் ஆண்டு பிறந்த தினம் தொடங்கி 2017ஆம் ஆண்டு முழுவதும் பாரதியின் கருத்துகளை பாரெங்கும் பரப்ப திருவையாறு பாரதி இயக்கத்தின் பாரதி இலக்கியப் பயிலகம் “அறிவோம் பாரதியை” என்ற இயக்கத்தினை நடத்திவருகின்றது.

    IMG_20171112_105940185_BURST000_COVER_TOP

    கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து பாரதியின் கருத்துகளை இந்த சமூகத்தில் விதைத்துக் கொண்டிருக்கும் திருவையாறு பாரதி இயக்கம் பெருமுயற்சியோடு கல்லூரி மாணவ மாணவியர், பள்ளிக் குழந்தைகள், பெரியோர், பெண்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் பாரதியைக் கொண்டுசேர்ப்பதே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது.

    IMG_20171112_110117705_BURST000_COVER_TOP

    பாரதியின் கருத்துகளை துண்டு பிரசுரங்கள் மூலமும், பாரதியின் நூல்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது, மாணவர்களுக்கு பயிலரங்கம், போட்டிகள், கருத்தரங்கம் நடத்துவது, பாரதி புகழ் பரப்பிய சான்றோர்களுக்கு விழா எடுத்தல், அனைத்திற்கும் மேலாக பாரதி வாழ்ந்த இடங்களுக்குச் சென்று பாரதி வரலாறு பற்றி சொற்பொழிவாற்றுதல் போன்ற அரிய பணிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று (12/11/2017) பாரதி இறுதியாகப் பயணம் செய்து, ‘மரணமிலாப் பெருவாழ்வு’ குறித்த சொற்பொழிவாற்றிய ஈரோடு கருங்கல்பாளையம் பாரதி புத்தகாலயத்திற்கு திருமிகு கோபாலன் வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில் 12 பேர்கள் கொண்ட குழு வந்திருந்தனர். திருமிகு கோபாலன் வெங்கட்ராமன் அவர்களின் அருமையான சொற்பொழிவைக் கீழ்கண்ட தொடுப்புகள் மூலம் கேட்கலாம்.

    திரு தஞ்சை வெ. கோபாலன் அவர்கள் நம் வல்லமைக்கு ஏற்கனவே அறிமுகமானவர். புத்தக மதிப்புரை போட்டியில் ஐயா வெங்கட் சாமிநாதன் மூலம்  முதல் பரிசு வாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

     

     

    வாழ்க பாரதி! (பகுதி – 3)

     

     

    Share
  • கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 7 – 12

    து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

    அலைபேசி : 9444939156.

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 7

             தஞ்சைப்பெரியகோயிலின் அதிட்டானப்பகுதியில் அமைந்துள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில் எழுத்துகளை நாம் கற்றுவருகிறோம். அவ்வெழுத்துகளுக்கு முந்தைய காலக் கல்வெட்டு எழுத்துகளும் பிந்தைய காலக் கல்வெட்டு எழுத்துகளும் பலவாறு மாற்றம் கொண்டவை. அம்மாற்றங்களோடு அவ்வெழுத்துகளையும் இனம் கண்டு படிக்க இங்கே பயிற்சி தொடங்குகிறது.

             சோழர்களுக்கு முன் தமிழகதிலிருந்த பல்லவர் காலத்திலேயே தமிழ் எழுத்துகள் கல்வெட்டுகளில் வழக்கத்துக்கு வந்தன என்றாலும் குறைவான எண்னிக்கையிலேயே அவை கிடைத்துள்ளன. பல்லவர்கள் வடநாட்டுப் பின்புலத்திலிருந்து வந்தவராதலால் பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய மொழிகளையே பயன்பாட்டுக்குட்படுத்தினர். பிறகு தமிழும் தமிழ் எழுத்தும் பயன்பாட்டுக்கு வந்தன. தமிழகத்தில் கிடைத்த காலத்தால் முந்திய தமிழ் எழுத்து பல்லவ அரசன் சிம்மவர்மன் காலத்தைச் சேர்ந்த பள்ளன்கோயில் செப்பேட்டில் உள்ளது. காலம் கி.பி. 575-600. அச்செப்பேட்டிலிருந்து சில வரிகள் இங்கு தரப்பட்டுள்ளன. (இரண்டு ஒளிப்படங்கள்).

    முதல் ஒளிப்படம்:

    1kal

    இப்படத்தின் பாடம் கீழ்வருமாறு:

    1 ….. விடுதகவென்று   நாட்டார்க்குத்திருமுக………..

    2 … ந் திருமுகங்கண்டு தொழுது தலைக்கு வைத்து படா

    3 கை நட(ந்)து கல்லுங்கள்ளியுநாட்டி நாட்டார் விடுத்த

    4 அறையோலைப்படிக்கெல்லை கீழ்ப்(பா)

    5 லெல்லை ஏந்தலேரியின் கீழைக்கடற்றி

    இரண்டாம் ஒளிப்படம்:

    2kal

    இப்படத்தின் பாடம் கீழ்வருமாறு:

    1 ந் மேற்கு மோமைக்கொல்லை எல்லை இன்னு

    2 ம் தென்பாலெல்லை வேள்வடுகன் கேணியி

    3 ன் வடக்கும் கடற்றினெல்லை இன்னுந் நீலபா

    நாம் கற்ற எழுத்துவடிவங்களிலிருந்து சற்று மாற்றம் பெற்ற எழுத்துகளைப்பற்றிய

    குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றில் கவனம் தேவை.

    pallankooyil thiruththam-3

    pallankooyil thiruththam-4

    பின்னிணைப்பு : (3-7-2015 அன்று இணைத்தது.)

    ஒரு ஒளிப்படமும் சில குறிப்புகளும் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன.

    5kal

     பள்ளன்கோயில் செப்பேடு,  பல்லவ அரசன் மூன்றாம் சிம்மவர்மன் தன் 6-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 550) பருத்திக்குன்றில் வாழ்ந்த வஜ்ரநந்திக் குரவர்க்குப் பள்ளிச்சந்தமாக அமண்சேர்க்கை என்னும் சிற்றூரைத் தந்த செய்தியைக் கூறுகிறது.

    மேலே நாம் பார்க்கும் செப்பேட்டுப் பாடத்தில் வரும் சில தொடர்களுக்கு விளக்கம் வருமாறு :

    பள்ளிச்சந்தம் – ஜைன, பௌத்த மதத்தவர்க்கு அளிக்கப்பெற்ற இறையிலி (வரி நீக்கம் பெற்ற) நிலம்.

    குரவர் – சமண ஆச்சாரியர்.

    நாட்டார் – நாட்டுச்சபையார்

    திருமுகம் – அரசனின் ஆணை எழுதப்பெற்ற ஓலை.

    தொழுது தலைக்கு வைத்து – நாட்டார் அரசனின் திருமுகம் வரக்கண்டு தொழுது தலைமேல் வைத்துக்கொண்டனர்.

    படாகை – பிடாகை=உட்கிடை ஊர்.

    படாகை நடந்து  கல்லுங்கள்ளியு(ம்) நாட்டி –  பிடாகையாகிய ஊர்ப்பகுதியில் யானைகொண்டு சுற்றிவந்து  எல்லையைக் குறித்து, எல்லைகள் புலனாகுமாறு அடையாளக்கற்களையும் கள்ளியையும் நட்டனர். சிவன்கோயிலாக இருப்பின் சூலம் பொறித்த கற்களும், திருமால்கோயிலாக இருப்பின் சக்கரம் (ஆழி) பொறித்த கற்களும் நடுவது மரபு.

    விடுத்த அறையோலை – கல்லும் கள்ளியும் நாட்டி எல்லை வகுத்த பின்னர்ப் பொதுமக்களுக்கு அச்செய்தியை அறிவித்தனர்.

    கிழக்கு எல்லை – ஏந்தலேரி என்னும் ஏரியின் கீழைக்கடறு; ஒமைக்கொல்லை. (கடறு=காடு)

    தெற்கு எல்லை – வேள்வடுகன் கேணி.

    துணை நின்ற நூல் : புலவர் வே.மகாதேவன் எழுதிய “கல்வெட்டுக்கள் வினா-விடை விளக்கம்”.

    கட்டுரை ஆசிரியர் குறிப்பு :

    நிலக்கொடை அளித்தலில் அரசன் ஆணையிடுவது தொடங்கி, பின்பற்றப்பட்ட நடைமுறைகள் மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியன பற்றி அறிகிறோம்.

    தமிழகத்தில் இன்றும் ஆங்காங்கே சூலக்கற்களும், ஆழிக்கற்களும் தொல்லியல் சிதறல்களாகக் காணக்கிடைகின்றன.

    சமணப்பெரியாரைக் குரவர் என  அக்காலத்தே அழைதுள்ளனர் என்பதை அறிகிறோம். இவ்வழக்கத்தைப் பின்பற்றியே, பின்னாளில் சைவப்பெரியாரையும் குரவர் என அழைக்கும் வழக்கு வந்திருக்கக்கூடும். திரு.வி.க. பற்றிய செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. சிலப்பதிகாரத்தில் சமணப்பெரியோராக வரும் கௌந்தி அடிகள் பெயரை அடியொற்றித் திரு.வி.க. அவர்கள், காந்திப்பெரியவரைக் “காந்தியடிகள்” என அழைத்து ”அடிகள்” என்னும் சொல்லைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார் எனக்கேள்வி.

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம்  8

    பல்லவர் காலக் கல்வெட்டு எழுத்துகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சென்ற வகுப்பில் பல்லவ அரசன் சிம்மவர்மனின் பள்ளன்கோயில் செப்பேட்டின் எழுத்துகளைப்படித்தோம். அச்செப்பேடு தமிழ் வரிவடிவத்தைக் கொண்ட முதல் செப்பேடு என்று கருதப்பட்டது. ஆனால் அதில் காணப்படும் வரிவடிவத்தின் அடிப்படையில் அச்செப்பேடு கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அந்த வகையில், முதலாம் மகேந்திரனின் வல்லம் கல்வெட்டே தமிழ் வரிவடிவம் தாங்கி நிற்கும் முதல் கல்வெட்டு எனலாம். அந்த வல்லம் கல்வெட்டைத் தற்போது பார்க்கலாம். கல்வெட்டின் மூலப்படியின் படத்தையும், (கையால் எழுதிய) பார்வைப்படியின் படத்தையும் கீழே தந்துள்ளேன்.

    மூலப்படி :

    6kal

    பார்வைப்படி :

    8kal

             கல்வெட்டின் மூலப்பாடம் கிழே தரப்பட்டுள்ளது:

    கல்வெட்டின் பாடம்:

                  சத்துரும் மல்லன் குணபரன்

                  மயேந்திரப்போத்தரெசரு அடியான்

                  வயந்தப்பிரிஅரெசரு மகன் கந்தசேன

                  ன் செயிவித்த தேவகுலம்


    குறிப்பு : சத்துரு(ம்)மல்லன், குணபரன் – மகேந்திரவர்மனின் விருதுப்பெயர்கள்.

            போத்தரசர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொடர் பல்லவ அரசர்களை                    மட்டுமே குறிக்கும் எனக்கருதலாம். தேவகுலம் என்னும் சொல்

             கோயிலைக்குறிக்கும்.

             வல்லம் கல்வெட்டின் எழுத்துகளை ஊன்றிப்பார்க்கும்போது, சிம்மவர்மனின் செப்பேட்டில் உள்ள எழுத்துகள் சற்றுப் பிற்காலத்தவை என்பது புலப்படும். ஏனெனில், நாம் அடிப்படை எழுத்தாகப் பயின்ற தஞ்சைப்பெரிய கோயில் எழுத்துகளை செப்பேட்டெழுத்துகள் பெரிதும் ஒத்திருப்பதைக் காணலாம். வல்லம் கல்வெட்டு எழுத்துகள் தமிழ் வரிவடிவத்தின் பழைய வடிவம் என்பது அவை தமிழ் பிராமி எழுத்தின் வடிவமைப்பை உள்ளடக்கி இருப்பதால் அறியலாம். எப்படி என்பதைக்கீழே காட்டியுள்ளேன்.

    vallam kalvettu- 9

             அடுத்து, நாம் பயின்றுவரும் அடிப்படை எழுத்துகளுக்கும் வல்லம் எழுத்துகளுக்கும் இடையே உள்ள மாற்றத்தையும் கீழே கொடுத்துள்ளேன்.

    vallam kalvettu-10

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம்  9

                      பல்லவர்காலத் தமிழ் எழுத்துகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மகேந்திரவர்மனின் வல்லம் கல்வெட்டைச் சென்ற பாடத்தில் பார்த்தோம். இங்கு, மாமல்லன் நரசிம்மவர்மனின் ஒரேயொரு தமிழ்க்கல்வெட்டெனக் கருதப்படும் திருக்கழுக்குன்றத்துக் கல்வெட்டைக் காண்போம். கல்வெட்டு திருக்கழுக்குன்ற மலைமேல் உள்ள குகைக்கோயிலில் உள்ளது. இதன் காலம் கி.பி. 630 – 668. கல்வெட்டின் பாடம் கீழே கொடுக்கபட்டிருப்பினும் கல்வெட்டை நேரடியாகப் படித்துப் பயிற்சி செய்க.

    கல்வெட்டின் பார்வைப்படி (Eye copy) :

    12

    கல்வெட்டின் பாடம் :

    ஸ்ரீ திருக்கழுக்குன்றத்து பெருமான்

    னடிகளுக்கு களத்தூர் கோட்டத்

    து …………………… திருக்கழுக்குன்ற

    த்து ஸ்ரீமலை மேல்

    (மூ)லட்டானத்து பெருமான்

    னடிகளுக்கு வழிபாட்டுப்புறமா

    க வாதாபி கொண்ட நரசிங்கப்

    போத்த(ர)சர் வைத்தது.

    குறிப்பு :

    • இறைவன் பெயர் திருக்கழுக்குன்றத்துப் பெருமானடிகள் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
    • மூலட்டானம் என்பது கருவறை ஸ்ரீகோயிலைக்குறிக்கும்.
    • புறம் என்பது கோயில் பணிகளுக்காக விடப்பட்ட நிவந்தம் அல்லது கொடையைக் குறிக்கும். பணிகளுக்கேற்பப் பெயரமையும். இங்கே கோயிலின் வழிபாட்டுக்காக (பூசை)க் கொடை அளிக்கப்பட்டுள்ளது. எனவே வழிபாட்டுப்புறம். அமுதுபடிக்காக (நைவேத்தியம்) எனில் அமுதுபடிப்புறம் என்றும், விளக்குக்காக எனில் விளக்குப்புறம் என்றும், மடைப்பள்ளிக்காக எனில் மடைப்புறம் என்றும் பலவாறு வழங்கப்படும்.
    • மகேந்திரவர்மனின் வல்லம் கல்வெட்டில் கண்டவாறே இங்கும் ”போத்தரசர்” என்னும் பெயர் வந்துள்ளதை நோக்குக.
    • கோட்டம் என்னும் ஆட்சிப்பிரிவு பல்லவர் காலத்திலேயே இருந்துள்ளது கருதத்தக்கது.
    • நரசிம்ம வர்மனின் பெயர் இக்கல்வெட்டில் ”நரசிங்க” என வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் பல்லவர் கல்வெட்டுகளில் “சிம்ம” என்னும் சொல்லுக்குப் பதில்  “சிங்க” என்னும் சொல்லே பயின்றுவருகிறது எனலாம்.
    • ஸ்ரீ என்பது கிரந்த எழுத்து.

     

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம் –  10

    பல்லவர்க்கு அடுத்து சோழர்களின் கல்வெட்டுகளில், நாம் அடிப்படையாகப் பயின்றுவரும் முதலாம் இராசராசனின் தஞ்சைக்கல்வெட்டுகளுக்கு முற்பட்ட எழுத்துகளின் வடிவ வேறுபாட்டை இரு கல்வெட்டுகளின் வாயிலாகப் பார்ப்போம். முதலாவது கல்வெட்டு கி.பி. 895-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. முதலாம் ஆதித்தனின் தக்கோலம் கல்வெட்டு. முதலாம் ஆதித்தன், பிற்காலச் சோழப்பேரரசுக்கு அடித்தளமிட்ட விசயாலயனின் மகனாவான். இவனுடைய ஆட்சிக்காலம் கி.பி. 871-907. கல்வெட்டின் பார்வைப்படி கிழே தரப்பட்டுள்ளது.

             பல்லவ அரசன் அபராசிதனின் கீழ் ஒரு குறுநில மன்னனாக இருந்த விசயாலயன், பல்லவருக்கும், வரகுணபாண்டியனுக்கும் இடையே நடைபெற்றபோரின்போது பல்லவர் பக்கம் நின்று பல்ல்வனுக்கு வெற்றியைத் தேடித்தந்ததோடல்லாமல், முத்தரையரைத் தோற்கடித்துத் தஞ்சையைக் கைப்பற்றினான். விசயாலயன் மகனான முதலாம் ஆதித்தன் காலத்திலும் பல்லவர்-வரகுணபாண்டியனிடையே நடந்த போரில், ஆதித்தன் பல்லவர் பக்கம் நின்று வெற்றி ஈட்டித்தந்தான். பல்லவன் சில ஊர்களை ஆத்தித்தனுக்குத் தந்தான். ஆதித்தன் சோழநாட்டை விரிவுபடுத்தும் நோக்கத்தில், பல்லவ அரசன் அபராசிதனையே எதிர்த்துப்போரிட்டு வென்று பல்லவரின் தொண்டை நாட்டைக்கைப்பற்றி, சோழநாட்டோடு இணைத்துக்கொண்டான். விசயாலயன் காலத்திலும், ஆதித்தன் காலத்திலும் சோழரோடு துணை நின்றவர்கள் கங்கமன்னர்கள். ஆதித்தனின் கீழ் குறு நிலமன்னராயிருந்த கங்க மன்னன் பிருதிவிபதி, தக்கோலம் கோயிலுக்கு ஆனிமாதம் சூரிய கிரகணத்தன்று 317 கழஞ்சு எடையுள்ள ஒரு வெள்ளிக்கெண்டிகையை அளித்தான். இந்தச் செய்தியைத் தாங்கிய கல்வெட்டுதான் நாம் இங்கே காண்பது.

    முதலாம் ஆதித்தனின் தக்கோல கல்வெட்டு-பார்வைப்படி

    13

    கல்வெட்டின் பாடம்:

    (ஸ்வஸ்திஸ்ரீ) கோவிராசகே

    சரி பன்பக்கு யாண்டு

    இருபத்து நாலாவது ஆ

    னித்தலைப்பிறையால்

    தீண்டின (ஸூர்யக்3ரஹணத்)

    தி நான்று திருவூறல் மாதேவ

    ர்க்கு மாரமரையர் மகனார்

    பிரிதிபதியார் குடுத்த வெ

    ள்ளிக்கெண்டி நிரை முன்நூ

    ற்று ஒருபத்தேழு கழஞ்சு

    இது பன்மா(ஹேச்0வரர் ரக்‌ஷை)

    சில குறிப்புகள்:

    • தலைப்பிறை –  வளர்பிறையில் முதல் நாள்
    • திருவூறல் – தக்கோலத்தின் பழம்பெயர் (கல்வெட்டில் உள்ளபடி)

                    தக்கோலம் தற்போது அரக்கோணத்துக்கருகில் உள்ள ஊர்.

    • பிரிதிபதி – கங்க அரசன் பிருதிவிபதி
    • கெண்டி – மூக்குள்ள செம்பு

     இன்னொரு கல்வெட்டு அடுத்த பாடத்தில்.

    தக்கோலம் கல்வெட்டின் பார்வைப்படியை எழுத உதவியது : முனைவர் சூ. சுவாமிநாதன்

    அவர்களின் “கல்லெழுத்தில் காலச்சுவடுகள்” நூலில் உள்ள ஒளிப்படம்.

    அது இங்கே

    14

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம்  11

             சென்ற வகுப்பில், சோழப்பேரரசுக்கு அடித்தளமிட்ட விசயாலயனின் மகனான முதலாம் ஆதித்தனின் தக்கோலத்துக் கல்வெட்டைப் (கி.பி.895) பார்த்தோம். இங்கு, ஆதித்தனின் மகனான முதலாம் பராந்தகனின் இரு கல்வெட்டுகளைப் பார்ப்போம். பராந்தகனின் காலம் கி.பி. 907-955. இரு கல்வெட்டுகளுமே திருநாவலூர் கல்வெட்டுகள். முதல் கல்வெட்டின் பார்வைப்படியின் படம் கீழே:

    15

    இப்பொழுது கல்வெட்டின் பாடத்தையும் எழுத்துகளின் வடிவ மாறுபாடுகளையும் பார்ப்போம்.

    கல்வெட்டின் பாடம்

    ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்

    ட கோப்பரகேசரி பன்மற்கு

    யாண்(டு..) ஆவது திருநாவ

    லூர் வியாபாரி முருகன் விச்சி

    யன் அட்டுவித்த கூத்தப்

    பெருமாளுக்கு வைத்த விளக்கு ஒன்றிற்

    க்கு வைத்த ஆடு தொண்ணூ(று) இவை

    (பன்) மாஹேச்0வரர் (ர) க்‌ஷை

    16

    இரண்டாம் கல்வெட்டின் பார்வைப்படியின் படம் கீழே :

    17

    இப்பொழுது கல்வெட்டின் பாடத்தையும் எழுத்துகளின் வடிவ மாறுபாடுகளையும் பார்ப்போம்.

    கல்வெட்டின் பாடம்

    ஸ்வஸ்தி(ஸ்ரீ) … மதிரைகொண்ட

    கோப்பரகேசரி பன்ம(ர்)க்கி(யா)

    ண்டு … ஆவது திருநாவ

    லூர் திருக்கொண்டீச்0வர ..

    ம் மாகிய ராஜாதித்த கு(..) ர க

    த்துக்கு ராஜாதித்த மலையா……

    ன் பரிவாரத்து சேவகன் ஒருக்கு

     …………….ழ சேந்தகுமரன்

    வைத்த நொந்தா விளக்கு ஒன்று

    க்கு வைத்த ஆடு நூறு சாவா

    மூவாப்பேர்ராடு இவை ப

    ன்மாஹேச்0வரர் ரக்‌ஷை

     கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 12

             சற்றே கால இடைவெளிவிட்டு  மீண்டும் கல்வெட்டு எழுத்துகள் கற்போம்

    பாடம் தொடர்கிறது. இராசராசனின் தஞ்சைக்கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளை அடிப்படையாக வைத்தே நாம் எழுத்துகளைக் கற்றோம். அவனுடைய காலத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளைப்

    பார்த்துக்கொண்டிருந்தோம். முதலாம் பராந்தகனின் இரு கல்வெட்டுகளைச்

    சென்ற வகுப்பில் பார்த்தோம். (காலம் கி.பி. 907-955). இப்போது  உத்தம சோழனின் காலத்துக் கல்வெட்டு ஒன்றையும் (கி.பி. 976 ) மற்றும் அதே காலத்தை ஒட்டிய 10-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றையும் பார்ப்போம்.

    1             மயிலாடுதுறை வட்டம்-திருவேள்விக்குடி மணவாளேசுவரர் கோயில்

                   கல்வெட்டு.   அரசன் :உத்தம சோழன்.  காலம் : கி.பி. 976.

    19

    கல்வெட்டின் பாடம் :

    ஸ்வஸ்திஸ்ரீ  யாண்டு ஆறாவது திருவே

    ழ்விக்குடி ஆழ்வார்க்கு உடையபிராட்

    டியார் பிராந்தகன் மாதேவடிகளாரா

    ன செம்பியந் மஹாதேவியார் குடு(த்)

    த வெள்ளிக்கலைசம் ஒந்று இது நி

    றை நூற்று நாற்ப்பத்து ஒரு கழை(ஞ்)

    சு இது பந்மாஹேச்வரர் ர(க்‌ஷை)

    குறிப்புகள் :

     வரி 1   ஸ்வஸ்திஸ்ரீ –  கிரந்தம்

    வரி  3   தே –  கிரந்தம்

    வரி 4   மஹாதே  –  கிரந்தம்

    வரி 7  மாஹேச்வரர் ர –  கிரந்தம்

    20

    2           தஞ்சை வட்டம் கருந்திட்டைக்குடி வசிஷ்டேஸ்வரர் கோயில்

                 கல்வெட்டு. காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு.

    கல்வெட்டின் பாடம் :

    ஸ்வஸ்திஸ்ரீ  இப்படைஇ

    ல் இருபத்து இ

    ரண்டு கல்லுகி(ழ)

    (வந்) ஆனை காவன் தா

    யார்ருக்கும் த(ன)

    க்கும் இருபத்

    தொன்று காசுபெற்றி

    குறிப்பு :

    வரி 1   ஸ்வஸ்திஸ்ரீ – கிரந்தம்

    22

    து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

    அலைபேசி : 9444939156.

    Share
  • வெண்பூ வெண்பா(மஹாசரஸ்வதி வெண்பாக்கள்….!)

     

    வெண்பூ வெண்பா
    ————————

    (சரஸ்வதி வெண்பாக்கள்)
    ————————————

    சு.ரவியின், ரவிவர்மா(ஆயில் பெயிண்டிங்) ஓவியம் பார்த்து எழுதியது….!

    19-saraswathi-ravi-varma-paintings

    “எண்ணையின் வண்ணத்தில் எண்ணென் கலையாளை
    பண்ணிசைக்கும் கோலம் படுஜோர் – உன்நுதல்
    குங்குமம் கொட்டி கலைமகள் நாசியில்
    தங்கிய மூக்குத்தி தூள்’’….(1)

    நாணல் இடையாளாம், நாவன்மை உடையாளாம்
    பூணல் அயன்மணந்த புண்ணியளாம்-வீணில்
    அலையாதெ நெஞ்சே அறுபத்தி நான்கு
    கலையாளை சேரக் கவி….(2)

    நாக்கில் நரம்பின்றி நாளும் வசைபாடி
    தீக்குள் குளிர்காயா தேநெஞ்சே -வாக்கில்
    கலைவாணி வந்து குடியேறும் வண்ணம்
    அலைபாய்ந் திடா(து) அடங்கு….(3)

    ரவியுடன் சுற்றி ரகசியங்கள் கற்ற
    கவிஅனுமன் கானம் குளிரப் -புவிமிசை
    பாயப் பொழிவாள் படிக நிறத்தாள்
    ஆய கலையாள் அருள்….(4)

    வந்தனம் செய்ய வரமளிக்கும் வாணியால்
    மந்தனும் ஆவானே மாகவி -சிந்தையும்
    வாக்கும் செயலுமவள் போக்கே துதித்திட
    தேக்கும் வடிக்குமே தேன்….(5).

    பலகலைக்கு ஞானி பயில்வோர்க்கு தோணி
    தளைதப்பா தீந்தமிழின் தேனி -நிலைகுலைந்து
    நான்நீ எனப்பேசும் நாநீ நுழையாயே
    வாணி வரமருள் நீ….(6)….கிரேசி மோகன்….!

    தேஜ சொரூபிணீ தேவி சரஸ்வதி
    ராஜ ஷியாமளா ரக்ஷிநீ -பூஜை
    புனஸ்காரம் எந்தன் நமஸ்காரம் தாயே
    மனக்கிலேச யாழினை மீட்டு….(7)

    வேதங்கள் நான்குமவள் காதணியும் குண்டலம்
    நாதப் பரப்பிரமம் நாசிக்காற்று -ஓதும்
    புராணங்கள் மேகலை பாதச் சிலம்பு
    சராசரங்கள் சேரும் சபை….(8)

    கட்டளை போடு கலித்துறைக்கு பாரதி
    கட்டளை கோர்ப்பெனக்கு கைவர -வெட்டவெளி
    வெண்பா களித்துறையில் வாழவைத்த வாணியே
    என்பால் கலித்துறைக்கேன் ஏய்ப்பு….(9)

    சகலகலா வல்லி அகலாதென் வாக்கில்
    பகலிரவாய்க் கொள்வாய்நீ பள்ளி -புகலவரும்
    வெண்பாவாம் வாரிசத்தில் வந்தமர்ந்து நின்புகழை
    பெண்பாவாய் பாடிப் பற….(10)

    நவையூறும் நாவில் சுவையூறச் செய்து
    அவையேறும் வாழ்வை அளிப்பாய் -இவையாவும்
    பெற்றிட வெண்பாக்கள் குற்றம் குறையின்றி
    சொற்றுளியால் சீராய் செதுக்கு….(11)

    மட்டொழுகும் வெண்கமலம் மீதில் தனிவெண்மைப்
    பட்டிழைய சிற்றிடையில் போயமர்ந்து -மொட்டிதழால்
    ஆய கலைகளை ஆன்றோர்(கு) அறிவிக்கும்
    தாயே எனக்குமதைத் தா….(12)….கிரேசி மோகன்….!

     

    சவ்வாது சந்தனம் சத்தியம் அவள்வாக்குக்(கு)
    ஒவ்வாத வாச உபமானம் -இவ்வாத
    உண்மை உணர்ந்தகம்பன் ஓதினன் அந்தாதி
    அம்மை சரஸ்வதிமேல் அன்று….(13)

    வேதம் உபநிடதம் வித்தைகள் எண்ணென்னும்
    பாதம் விளையாடும் பிள்ளைகள் -மாதம்மும்
    மாரியும் பெய்தலாய் மாண்புமிகு கல்வியதி
    காரியின்கண் பார்க்கக் கவி….(14)

    காமுறுவாள் கற்போர்மேல் கைகொடுக்கக் கற்பகமாய்
    நாமருவி நூற்சேலை நெய்திடுவாள் -பூமருவும்
    வாவிவளர் கூத்தனூர் தேவி சரஸ்வதி
    தாவி அளிப்பாள் தமிழ்….(15)

    துமியென்ற கம்பன் தவறில்லை என்று
    சமயத்தில் செய்தாள் சகாயம் -தமிழென்று
    ஆய்ச்சியாய் வந்தன்று பேச்சு வழக்காக்க
    கூச்சலிட்ட கூத்தன் களைப்பு….(16)

    காளிதாச கம்ப குமர குருபரர்கள்
    தோளிலங்க வஸ்த்திரமாய்த் துள்ளிடுவோய் -தாளிரெண்டில்
    கைக்கட்டிக் கேட்கின்றேன் பொய்க்கெட்டா புத்தியை
    கைக்குட்டை யாய்கையில் கட்டு….(OR)
    கைக்குட்டை யாய்கை கொடு….(17)

    படிகமணி மாலை படிப்புணர்த்தும் ஓலை
    மடிதவழும் வீணை, மருங்கின் -பிடிபடாமை
    கோலத்தை நெஞ்சிருத்தி கும்பிடுவோர் முன்வாழ்த்தாம்
    வேலொத்து பாய்ச்சும் வசவு….(18)….கிரேசி மோகன்….!

    (ரவி)வர்மன் வரைந்தாற்போல் வாரிசத்தில் வீற்றிருந்து
    தர்மம் தவம்தானம் தேர்ந்திட -கர்மமாய்
    மோனத்தில் மூழ்கி முனையும் மஹாசக்தி
    ஞானத்தை நானுற நல்கு….(19)

    அற்பனே ஆனாலும் ஆசான் அவளிரெண்டு
    பொற்பதம் போற்ற புழலறிவின் -கற்பனை
    ஊற்றில் குளித்து உவப்பால் துடைத்தணிவர்
    மாற்றுத் துணியாய் மனது….(20)

    கல்வி கலவிடும் செல்வம் சிணுங்கிடும்
    வல்லமை வீரம் வணங்கிடும் -செல்வி
    கலைவாணி யாலுன் கவுரவம் கூடும்
    தலைவானில் நிற்கும் திமிர்ந்து….(21)

    வேறெதையும் எண்ணாது வேண்டி வணங்கிடுவாய்
    சாரதையை நம்பி சிருங்கேரி -ஊரதனில்
    பாரதன்பின் வாழ்வு பரிசுத்தம் ஆகிடும்
    பாரதன்பின் பார்க்கப் பளிங்கு….(22)

    துங்கா நதிக்கரைசத் சங்காய் சிருங்கேரி
    சிங்கா சனத்திருக்கும் சாரதே -சங்காய்
    கிடக்கின்றேன் சும்மா எடுத்தூதி அம்மா
    நடத்தெனது நாடகத்தை நன்கு….(23)

    சங்கரன் முன்செல்ல சாரதை பின்செல்ல
    துங்கையின் தீரத்தில் தேவியின்ச -தங்கையின்
    சத்தம் குறைந்திட சத்குரு பார்த்திட
    வித்தை சிருங்கேரி வாய்த்து….(24)….கிரேசி மோகன்….!.

    கர்ப நுணல்மேல் குடையாய் படம்பிடிக்கும்
    சர்ப சகாய சிருங்கேரி -கர்ப
    கிரகத்து சாரதையை கும்பிடுவோர் முன்பு
    கிரகங்கள் கூப்பும் கரம்….(25)….

    வித்தை, வினயம், விசாரம், விவேகமிவை
    மொத்தமுமென் நெஞ்சில் முளைத்திட -ஸ்ரத்தை
    அளித்திடு சாரதா அம்பிகே, என்னுள்
    முளைத்திடு முண்டக மா….(26)….

    உளம்கொடுக்கும் உன்ன, உரம்கொடுக்கும் நண்ண
    களம்கொடுத்து ஞானக் கொழுந்தாய் -புலன்மடக்கி
    ஆசை அறுத்தான்ம பூசைக்கு சாரதை
    ஓசை சதங்கையொலி ஓம்….(27)

    நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட
    ஐயம் அகன்றதும் ஆதரவாய் -கையைப்
    பிடித்திழுத்துச் செல்வாள் பரமசுகம் கூட்ட
    படித்ததெலாம் பெண்ணிவள்முன் பாழ்….(28)

    கோனார் கணக்கினில், கம்பன் கவிதையில்
    நானார் விளக்கநூல் நாற்பதில் -மூணாறில்
    எண்ணும் எழுத்துமாய் எங்கும் இருப்பவளை
    எண்ணல் அயன்கை எழுத்து….(29)

    பேசக் கொடுத்ததில்லை பாரதியின் தாய்மொழி
    கோஷமிட்டு கூற்றன் குதிக்கஆ -வேசமுற்று
    நாரணா, நான்முகா, நாதா நமச்சிவாயா
    கூறநா கிட்டிடும் காப்பு….(30)….கிரேசி மோகன்….!

    எண்ணமவள் நேற்று, எழுத்தவள் இன்றுநாம்,
    பண்ணும் செயலவள் பின்நாளை -பெண்ணவள்
    ஆன்றோர்க்கு ஞானம் அறிவிலார்க்கு ஆணவம்
    தேன்தோன்றும் தாய்சொல் தமிழ்….(31)

    கீரன் திருமுரு காற்றுப் படையவள்
    மாறன் திருவாய் மொழியவள் -சூரன்
    மகாகவி பாரதியின் மாங்குயில் பாட்டு
    தகாதோர் செவிக்கவள் திட்டு….(32)

    வண்டுவந்து மொய்க்கா வரைந்த மலர்சோலை
    கொண்டவர்மன் ஓவியத்தில் கால்மடித்து -முண்டகத்தின்,
    மெல்லிதழில், தோகை மயிலன்ன தடாகத்தில்
    நல்கிடுவாள் யாழில் நலம்….(33)

    என்பிழைகள் ஏராளம் என்றாலும் அன்னையே
    புன்மொழியான் என்னைப் பொறுத்தருள்வாய் -உன்விழியால்
    கூட்டு தமிழை கவிபாடும் ஆற்றலை
    ஏட்டுச் சுரைக்காய் எனக்கு….(34)

    பாக்கு பழமிலை பூக்கள் பணிவெதிர்
    பார்ப்பாள் பராசக்தி பாரதி -வாக்கில்
    வினயமுடன் வித்தை விரும்புவோர் தம்மை
    தனயனென ஏற்பாள்அத் தாய்….(35)

    வேசிவரக் காத்தவடை தோசை வரதனை
    ஆசுகவி ஆக்கிய ஆனைக்கா -ஆசிகையே
    காளமேகம் வாய்க்கெட்டி கைக்கெட் டியவாணி
    மூளயோகம் என்வாய்க்கும் மூட்டு….(36)….கிரேசி மோகன்….!

     

    பாத்தநூறு தெய்வத்தில் பாரதியை போலிங்கு
    காத்திருக்க வைக்கா கடவுளெது -கூத்தனூர்
    தேவி மனம்வைத்தால் தேளின் கொடுக்கிலும்
    காவியம் கொட்டும் களிப்பு….(37)

    சாத்திரங்கள் வேதங்கள் கூத்தனூர் தேவியின்
    நேத்திரத்து தீர நுணலிமைகள் -பாத்திரம்
    கண்டவள் பார்வை கருவண்டு போடுமே
    பண்டிதப் பிச்சை பிறப்பு….(38)

    பண்டித வன்புலிக்கு பாமரத் தோல்போர்த்தும்,
    மண்டை கனத்தில் மிதக்குங்கால் -எண்டிசைக்கும்
    மூளியைக் காவிய மன்னனாய் மாற்றிடும்
    காளியின் தாஸன் கதை….(39)

    வேதவ்யாசன் சொன்னது வேழம் தொகுத்தது
    கீதையைக் கண்ணன் கொடுத்தது -ஏதுமே
    வெற்றிக்குப் பின்னிருந்து வாணி விதைத்ததே
    முற்றும் துறக்கவும்அம் மாது….(40)

    கூனியின் சூழ்ச்சியும் கைகேயி வீழ்ச்சியும்
    மானி இராமன் முதிர்ச்சியும் -தோணி
    குகனின் நெகிழ்ச்சியும் குன்றனைய வாயு
    மகனனுமன் வாக்குமவள் மாண்பு….(41)

    பால்முகமும் வேல்விழியும் மால்மருவா நூல்மருங்கும்
    ஆல்சிவன்பெண் பால்வடிவாய், நால்மறையும் -தாள்தழுவ
    சீதமலர் போதமர்ந்து போதிக்கும் ஏதமில்
    லாதவள்யாழ் கீதம் லயிப்பு….(42)….கிரேசி மோகன்….!

    கூனியின் சூழ்ச்சியில் கைகேயி வீழ்ச்சியில்
    மானி இராமன் முதிர்ச்சியில் -தோணி
    குகனின் நெகிழ்ச்சியில் குன்றனைய வாயு
    மகனின்சொல் வாக்கிலவள் மாண்பு….(43)

    காடுவரை சென்றங்கு கொள்ளியில் வெந்துஎமன்
    ஏடுரைத்த வண்ணம் எரிவாயில் -போடும்முன்
    முட்டா ளையும்காக்கும் மந்திரமாம் வாணியைநா
    கட்டாலப் போறவனே கொள்….(44)

    தாத்தனூர் சேர்த்த திரவியங்கள் செல்லாது
    கோர்த்தநூறு சுற்றமும் கூடவரா -கூத்தூர்
    பேடையை நம்பிநீ பாடை படுத்திருக்க
    காடென் கடைசிவரை காப்பு….(45)

    கல்லறைக் காட்டினில் செல்லரித் தாலுமுடல்
    சொல்லரித்துப் போகாது சோர்வடையாய் -புல்லரித்து
    போற்றி உனைத்தூக்கி பூர்புவஸ் லோகத்திற்(கு)
    ஏற்றி விடுவான் எமன்….(46)

    தெக்குவாய் கூறிடும் தோத்திரங்கள் சுத்தமாய்
    மக்குபோய் ஆளும் மகாசபை -சுக்கலான
    ஓலைச் சுவடி உவேசா அவர்களால்
    நாளைக் கடந்துநிற்கும் நூல்….(47)

    கற்றதனால் ஆயபயன் நற்றமிழாள் நல்லுறவைப்
    பெற்றதே போதுமென்று போதியமர் -மற்றதெலாம்
    செந்திருவால் செல்வமும் சங்கரியால் வீரமும்
    வந்திரும்பார் வாணி வகுத்து….(48)….கிரேசி மோகன்….!

    போகத்தில் விந்து புகுமுன் புகுந்தங்கு
    மோகச் சினைமுட்டை மூளையை -வேகவைத்து
    பாமரனா, பண்டிதனா, மாமர மண்டையா
    தாமரையாள் தந்திடுவாள் தீர்ப்பு….(49)

    உச்சிக் குடிமியை ஊடாடும் பூணலை
    மெச்சிடும் ஆசார மேன்மையை -துச்சமாய்
    எண்ணும் கலைவாணி ஏற்பாள் வினயத்தை
    கண்ணின் மணியாய்க் குறித்து….(OR)
    மின்னும் அணியாய் மகிழ்ந்து….(50)

    வீணை படிகமணி வேதக் கரத்தளை
    பானை பிடிக்குமயன் பத்தினியை -சேனை
    கலைகள்எண் ணென்சூழ செந்தா மரையில்
    விளையும்வெண் பூவை வணங்கு….(51)

    பத்தரைப் பொன்னில் பதினாறாம் யவ்வனத்தில்
    முத்திறைக்கும் சேயின் முறுவலில் -சித்திரையில்,
    புத்தரின் மோனத்தில், புண்ணிய தீர்த்தத்தில்
    இத்தரைதர் மத்தில் இவள்….(52)

    காசியில் கங்கையில், ஆசியில், ஆண்மையில்
    வாசி அடக்கும் விளையாட்டில் -பூசிடும்
    மாசிவை வெண்ணீற்றில், ஹாசிய நாடகத்தில்
    ஆ!சிரி அப்பா அவள்….(53)

    தண்டடியில் தூங்கி தவமகுடி கேட்டெழுந்து
    மண்டயிடித் தாங்கே மலமறுக்கும் -குண்டலினிப்
    பாம்புக்(கு) அடங்காது, பாரதியின் கண்ணிநுண்
    தாம்புக்(கு) அடங்கத் தெருள்….(54)….கிரேசி மோகன்….!

     

     
    ————————————————————————————————————————–

     

     

    Share
  • நவகண்டம் – அரிகண்டம்

    பவள சங்கரி

    நவகண்டம்’ என்பதன் பொருள் நவம் – ஒன்பது, கண்டம் -துண்டங்கள். ஒரு வீரர் தம் உடலை 9 துண்டங்களாகத் தாமே வெட்டிக்கொண்டு உயிர் துறப்பது.

    அரிகண்டம்’ என்றால் ஒரு வீரன் தம்மைத்தாமே வாளால் கழுத்தை அறுத்துக்கொண்டு உயிர் தியாகம் செய்வது. தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டோ, தலையை ஓரிடத்தில் இழுத்துக் கட்டியோ மறுகையால் வாள் கொண்டு கழுத்தினை அறுத்து பலி கொடுப்பது.

    திருவாசி_சிவாலய_அரிகண்டம்

    பழங்காலத்தில் மன்னர்கள் போரில் வெற்றிபெறவும், அவர்கள் நலம் பெறவும், தாங்கள் எடுத்துக்கொண்ட முக்கிய நலப்பணித் திட்டங்கள் எவ்விதத் தடங்கலுமின்றி நடந்தேறவும் போர்வீரர்கள் கொற்றவை தெய்வத்தின் முன், தங்களைத்தாங்களே பலியிட்டுக் கொள்ளும் வழக்கம் இருந்துள்ளதை சிற்பங்கள், நடுகற்கள் கல்வெட்டுகள் போன்ற ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது.

    panrutti-11century

    கொற்றவைக்கு அவ்வாறு பலியிட்டுக் கொள்பவர்கள் கூரிய வாளால் தங்கள் உடலை ஒன்பது பாகங்களாக, அதாவது கை, கால், வயிறு ஆகிய பகுதிகளை அரிந்துகொண்டு இறுதியாகத் தன் தலையைத் தானே அறுத்துக்கொள்வர். இதனை வெளிப்படுத்தும் “நவகண்ட சிற்பங்கள்’ தமிழ்நாட்டில் பல இடங்களிலும் காணமுடிகிறது. குறிப்பாக பழம்பெரும் நாடான கொங்கு நாட்டில் மிக அதிகமாகக் காணப்படுவதை அறியமுடிகிறது.

    01mp_mamp_thenkari-_938170g

    அரச விசுவாசிகளான படை வீரா்கள் தம்மைத் தாமே பலியிட்டுக் கொள்வதற்கான பலிபீடங்கள் பட்டினப்பாக்கத்தில் இருந்தமையை இளங்கோவடிகளின் கீழ்கண்ட பாடலின் மூலம் அறியமுடிகிறது:

    வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கென
    நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்கு
    உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
    மயிர்க்கண் முரசொடு வான்பலியூட்டி
    ( இந்திர விழவூரெடுத்த காதை 85-88 )

    மேற்கண்ட அடிகள் மூலம் வீரா்கள் தமது தலையைத்தாமே வெட்டி பலிபீடத்தில் வைப்பதைக் குறிப்பிடுகின்றன.

    மேலும் கொற்றவைக்கு தலையை அரிந்து கொடுக்கும் சிற்பங்களை மகாபலிபுரம் – திரௌபதி ரதத்திலும் சிங்கவரம் குன்றத்திலும் திருவானைக்காவிலும் காணலாம்.

    கம்பவர்மன் காலத்து நடுகல் ஒன்றில் இதைப்பற்றி சிறப்பாகக் கூறுவதைக் காணலாம்.

    “ஸ்ரீகம்ப பருமற்கி யாண்டு இருபதாவது
    பட்டை பொத்தவனுக்கு ஒக்கொண்ட நாதன்
    ஒக்கதிந்தன் பட்டை பொத்தன் மேதவம்
    புரிந்ததென்று படாரிக்கு நவகண்டம் குடுத்து
    குன்றகத் தலை அறிந்துப் பிடலிகை மேல்
    வைத்தானுக்கு…”

    என்பது அந்தக் கல்வெட்டு வாசகம்.

    பழங்குடிகள் நிறைந்த கொங்கு நாடு பலப்பல தொன்மை வரலாறை தனக்குள்ளே கொண்டுள்ளது. இன்றளவிலும் மொத்த மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் பழங்குடியினர் வாழ்கின்றனர். சங்ககாலம் தொட்டு கொங்குச் சமவெளிப்பகுதியில் வாழ்ந்த பழங்குடியினரில் குறிப்பிடத்தக்கவர்கள், குறும்பர், பூலுவர், காவலர், ஆவியர், சோழர் பூர்வபட்டயம் மாவலவர், குறும்பிலார், வேட்டுவர், அவ்டர், படைத்தலை போன்றவர்கள் இருந்தாலும், அவ்டர், ஆவியர், குறும்பர் போன்ற இனத்தவர் சமூக நீரோட்டத்தில் இணைக்கப் பெற்றதற்கான சான்றுகள் இல்லாவிட்டாலும், அவ்டநாடு, ஆவியர்நாடு, குறும்பநாடு போன்ற பெயர்கள் அரசியல் சமூகவியல் நீரோட்டத்தில் இருந்திருக்கின்றன. கொங்கு நாட்டில் சோழர் காலத்து பல நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவைகளில் பெரும்பாலும் எழுத்துகள் அதிகமில்லை. கொங்கு நாட்டின் எல்லைப்புறத்தில் கிடைத்த நடுகற்கள் போன்றவற்றில் சேர, சோழ, பாண்டிய பேரரசின் முயற்சிகளால் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.

    கொங்கு நாட்டின் வட பகுதியிலும், கருநாடக நாட்டின் தென் பகுதியிலும் வாழ்பவர்கள் வேட்டுவர்கள் என்ற கிராதர் என்கிறார் டி.என்.சுப்ரமணியம். கங்கமன்னன் சிவமாறனின் செப்பேடுகள், ‘வேட்டுவ அரசர்களின் அரன்களை எறிந்து வேட்டுவ அரசிகளைச் சிறை பிடித்தான்’ எனும் அது வடமொழியில் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. பிற்காலச் சோழர்களின் முதலாம் ஆதித்தன் கொங்கில் ‘வேட ராஜாக்களை வென்றான்’ என்று கொங்குதேச இராஜக்கள் என்ற மரபுவழி நூல் கூறும். சிவமாறன் போரும் ஆதித்தன் போரும் கி.பி. 9 – 10 ஆம் நூற்றாண்டில் நடந்திருக்கிறது. ஆதித்தன் காலத்து வேட்டுவ இராஜாக்கள் பலர் இருந்தனர் என்று வேட்டுவ இராஜாங்கம் என்ற நூல் கூறுகின்றது.

    தமிழ் மண்ணில் முதன் முதலில் படைத்தொழிலில் ஈடுபட்டவர்கள் …..

    தமிழ் மண்ணில் முதன் முதலில் படைத்தொழிலில் ஈடுபட்ட வேட்டுவ இனத்தில் இருந்துதான் சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் உருவானார்கள் . வேட்டையாடுதலைத் தமது முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள் வேட்டுவர்கள். வேடர் என்ற சொல்லே வேட்டுவர் என்றாயிற்று. இவர்கள் வேடன், வெற்பன், சிலம்பன், எயினன், ஊரன், வேட்டைக்காரன், வேட்டுவன், வேட்டுவதியரையன், ஊராளி, வேட்டுவ கவுண்டர் மற்றும் நாடாழ்வான் முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். “வேர் வகையை எண்ணினாலும், வேட்டுவர் வகையை எண்ணமுடியாது” எனும் முதுமொழியும் ஏற்பட்டுள்ளது.

    வேட்டுவரின் பூர்வீகம் குறித்து அறிஞர்களிடையே பலவிதமான கருத்துகள் நிலவுகின்றன. வேட்டுவர், பிரம்மனால் படைக்கப்பட்ட ஆதி வம்சத்தினர் என்று வேளாளர் புராணம் குறிப்பிடுகிறது. சோழன் பூர்வ பட்டயம், வேட்டுவ கவுண்டர்களைக் கொங்கு நாட்டின் ஆதிகுடிகள் என்று சுட்டுகின்றது. சில பட்டயங்களில் வேட்டுவர், முத்தரையரின் வழித்தோன்றல்கள் என்றும் செப்புகின்றன. வேட்டுவக் கவுண்டரும் முத்தரையரும் கண்ணப்ப நாயனாரைத் தமது குல தெய்வமாகக் கொண்டு வழிபடுகின்றனர். எட்கார் ஃதர்ஸ்ட்டன் (Edgar Thurston) அவர்கள் முத்தரையர், வேட்டுவர், வலையர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். இருப்பினும் வேட்டுவரின் பூர்வீகம் குறித்து நான்கு முக்கிய கொள்கைகள் (கருத்துகள்) உள்ளன. அவை, வேட்டுவர் நாகர் இனத்தவர், குரு குலத்தவர், கண்ணப்ப நாயனாரின் கால்வழியினர், கொங்கு நாட்டின் பூர்வீகக் குடிகள்.

    கொங்கு நாட்டு வேட்டுவக்கவுண்டர்கள் வீர வரலாறு” வரலாற்று வித்தகர், களஞ்சியச் செம்மல் பேராசிரியர் ம இரா தங்கமணி.

    ’வெட்டவெட்டத் தழைக்கும் வேட்டுவர் படை’ என்பர் அண்ணன்மார். பழங்குடி வாழ்க்கையில் படையென்று ஒரு தனிப்பிரிவு கிடையாது. பழங்குடி இனம் மொத்தமுமே ஒரு படையாகச் செயல்படும். ஒரு குழுவினர் போரில் மாண்டுவிட்டால் அடுத்த குழுவினர் போருக்குத் தயாராகிவிடுவர். உடல் பலம் உள்ளோர் அனைவரும் போர் வீரர்களே. அதனால் அவர்களை மொத்தமாக அழிக்கவே முடியாமல் இருந்திருக்கின்றனர்.

    நவகண்டச் சிற்பங்கள் – தலைபலி சிலைகள்

    mdu-navakandam

    கொங்கு நாட்டுச் சிவன் கோவில்களில் நவகண்டச் சிற்பங்கள் காணப்படுகின்றன. வேட்டுவர்கள் கொற்றவையின் பல புகழையும் கூறிப் பரவி, விறல் வெய்யோன் வெட்சி சூடுக எனத்தம் அரசனை வாழ்த்தினர். வேட்டுவவரி சித்தரிக்கும் கொற்றவையின் தோற்றத்தில் வைதீகச் சார்பு மிக்கிருந்தாலும் எயினர்களின் கொற்றவை வழிபாடு பழைய வேட்டைச் சமூக மரபுகளையே அடியொற்றி அமைக்கப்பட்டுள்ளமை சிலப்பதிகார வேட்டுவவரியின் தனிச் சிறப்பாகும்.

    இட்டுத் தலை எண்ணும் எயினர் அல்லது
    சுட்டுத் தலைபோகாத் தொல் குடிக் குமரியை-
    சிறு வெள் அரவின் குருளை நாண் சுற்றி
    குறு நெறிக் கூந்தல் நெடு முடி கட்டி,
    இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து
    வளை வெண் கோடு பறித்து, மற்று அது
    முளை வெண் திங்கள் என்னச் சாத்தி;

    மறம் கொள் வயப் புலி வாய் பிளந்து பெற்ற
    மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி;
    வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து
    உரிவை மேகலை உடீஇ; பரிவொடு
    கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்
    திரிதரு கோட்டுக் கலைமேல் ஏற்றி;
    பாவையும், கிளியும், தூவி அம் சிறைக்
    கானக்கோழியும், நீல் நிற மஞ்ஞையும்,
    பந்தும், கழங்கும், தந்தனர் பரசி;
    வண்ணமும், சுண்ணமும், தண் நறுஞ் சாந்தமும்,
    புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும்,
    பூவும், புகையும், மேவிய விரையும்,
    ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர;
    ஆறு எறி பறையும், சூறைச் சின்னமும்,
    கோடும், குழலும், பீடு கெழு மணியும்,
    கணம் கொண்டு துவைப்ப; அணங்கு முன் நிறீஇ
    விலைப்பலி உண்ணும் மலர் பலி – பீடிகை,
    கலைப் பரி ஊர்தியைக் கைதொழுது ஏத்தி- 2. வேட்டுவ வரி 20 – 40

    இராமாயண காலத்தில் இலங்கையில் இந்த வழக்கம் இருந்ததை இராவணன் புதல்வர்களான மேகநாதன், இந்திரசித் ஆகியோர் பயங்கரமான நிகும்பிளா குகையில் நடத்திய சடங்குகள் காட்டுகின்றன.

    பொதுவாக நாட்டுப்புறப் பாடல்கள், வில்லுப்பாட்டுகள், கும்மிப் பாடல்கள் போன்றவைகள் பத்ரகாளியம்மனை சிவபெருமானின் துணைவியாக, பராசக்தியின் அம்சமாகவும், திருமாலின் இளைய சகோதரியாகவும் குறிக்கப்படுவதால் சைவம், வைணவம் என இரண்டையும் பாலமாக இணைக்கும் தெய்வம் அன்னை பத்ரகாளி எனக் கருதலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். தாய்த்தெய்வம் என்று மக்களால் அன்பாக போற்றப்படும் பத்ரகாளியன்னை, மாகாளி, ஓம் காளி, கொற்றவை, எல்லைப் பிடாரி, பத்ரகாளி என பல்வேறு திருநாமங்கள்கொண்டு போற்றப்படுகிறாள். காளி என்றால் கறுத்தவள் என்றும் பொருள்படும். பீடையை அறுப்பவள் பிடாரியானாள். தீமைகளை, தீயவர்களை, தீய எண்ணங்களை அழித்து நல்லவைகளை நிலைநாட்டுபவர்கள் பேராண்மை பெற்று விளங்க எண்ணுவோர் காளியை வழிபடுகின்றனர். அதாவது அன்னை அருள்வடிவாய் காட்சியளிக்கும்போது பவானியாகவும், ஆண் சக்தியாக அருள்பாலிக்கும்போது துர்க்கையாகவும் விளங்குகின்றாள் என்கின்றனர் ஆன்றோர். அந்த வகையில் பழம்பெரும் நகரமான அந்தியூர் எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பத்ரகாளியம்மன் சகல செல்வங்களும் அருளும் வடிவுடை அன்னையாகத் திகழ்கிறாள். இவள் வீற்றிருக்கும் ஆலயமோ ஆயிரம் ஆண்டுகள் பழமையானது!

    ஈரோட்டிலிருந்து வடக்கு புறம் 35 கி.மீ. தொலைவில் உள்ளது அந்தியூர். செல்லீசுவரர் திருக்கோவில் மற்றும் அழகராசப் பெருமாள் திருக்கோவிலும் அருகிருக்க இக்கோவில் அந்தியூர் கோட்டையின் உட்புறத்தில் மேற்குப் புறமாக அமைந்துள்ளது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களுடன், கொங்கர்களும் தனியாட்சி செய்துவந்த நாடு கொங்கு நாடு என்பது. 24 உட்பிரிவுகள் கொண்ட கொங்கு நாட்டில், பவானி ஆற்றின் வடபுறம் உள்ள வடகொங்கு வடகரை நாடு என்பதும் ஒன்றாகும். இந்த வடகரை நாட்டின் தலைநகராக இருந்தது அந்தியூர்.

    கொங்கு நாட்டின் வடக்கு எல்லையாக இருப்பது பர்கூர் மலைத்தொடர். சங்க காலச் சிறப்புமிக்க நகரங்களில் முக்கியமானது அந்தியூர். அக நானூறு எனும் சங்க இலக்கியத்தின் 71 ஆம் பாடலைப் பாடிய ‘அந்தி இளங்கீரனார்’ என்ற புலவர் அந்தியூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து இவ்வூரின் பழமையை அறிய முடிகிறது. பண்டைக் காலத்தில் மூன்று சுற்றுகளுடன் அகழிப்பாதுகாப்பும் கொண்ட, வராக நதிக்கரை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த மண்கோட்டை இன்று அழிந்துவிட்டாலும் கோவில்கள் இவ்வூரின் பழம்பெருமையை எடுத்துரைக்கின்றன.

    அந்தியூரின் தென்கிழக்கு மூலையில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது இவ்வாலயம். கோவிலின் முன்புறம் அறுபது அடி நீளமுள்ள குண்டம் காணலாம். குண்டத்தின் மேற்குப்புறம் கம்பீரமான வடிவுடைய பெரியதொரு கணபதியைக் காணலாம். திருக்கோவில் வாயிலில் அழகும், அச்சமும் ஒருங்கே அமையப்பெற்ற கம்பீரத் தோற்றத்துடன் இரண்டு பூதகணங்கள் காவல்புரியும் காட்சி மெய்சிலிர்க்கச்செய்பவை. மகாமண்டபத்தில் முருகன் மற்றும் பிள்ளையார் திருவுருவங்கள் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர்.

    களப்பலி வீரர் சிற்பம்! – நவகண்டம்

    IMG_20171107_153621581_HDR-1-1024x576

     

     

    மூதுபுகழ் கொண்ட கொங்கு நாட்டில் வீரப்பெண்மணிகளின் வரலாறு எண்ணற்றவை. தங்கள் நாட்டு மன்னன் போரில் பகைவர்களை அழித்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தங்கள் தலையை வெட்டி வெற்றித் தெய்வமாகிய காளி அன்னைக்கு காணிக்கையாக்கும் வழமை இருந்துள்ளது. கி.பி. 1265 – 1285 காலத்திய ராஜகேசரி வர்மன் என்கிற வீரபாண்டித் தேவரின் கல்வெட்டுகள் இதற்கு ஆதாரமாக உள்ளன. அவ்வழக்கத்தின்படி பெண் வீரர்களும் தங்களையே களப்பலி கொடுத்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக அந்தியூர் சிறீபத்திரகாளியம்மன் திருக்கோவிலில் தமது தலையைத் தாமே வெட்டிக்கொண்டு பலி கொடுக்கும் வீரப்பெண்மணிகளின் சிலைகள் கேட்பாரற்று குப்பைமேட்டில் மண்ணில் புதைந்து கிடக்கும் அவலத்தைப் பார்க்க வருத்தமாகத்தான் இருந்தது.. பழம்பெரும் ஆலயங்கள் புதுப்பிக்கப்படும்போது இதுபோன்று வரலாற்று ஆவணங்களின் அருமை தெரியாமல் அழிக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால் சென்ற வாரம் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பு எடுத்த முயற்சியின் காரணமாக இந்த நவகண்ட சிற்பங்கள் மண்ணிலிருந்து மீட்டெடுத்து சுத்தம் செய்யப்பட்டு எண்ணெய் காப்பும் சாத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவில் நிர்வாகத்தினரால் மேலும் ஒரு நவகண்ட வீரர் சிற்பம், இடப்புறம் மனைவியுடனும், வித்தியாசமான ஆடை, ஆபரணங்கள் அணிந்தவாரும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    இன்றும் ஈரோடு, சென்னிமலை, திருச்செங்கோடு, கபிலர்மலை, மதுரை, திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் “சாவான் சாமி’ கோயில்கள் உள்ளன. சேலத்தில் எடப்பாடி, புதுப்பாளையம், தாரமங்கலம், அத்தனூர், மணப்பள்ளி, கல்யாணி, சிங்களாந்தபுரம் ஆகிய ஊர்களில் நவகண்ட சிற்பங்கள் உள்ளன.

    காரைக்குடிக்கு மேற்கே 9.கி.மீ. தொலைவில் உள்ளது குன்றக்குடி. இங்குள்ள குடைவரைக் கோயிலிலுள்ள கொற்றவை சிற்பம் எழில் மிக்கது. கொற்றவையின் வலப்புறத்தே வீரன் ஒருவன் “நவகண்டம்’ அளிக்க, தன் வலக்கையால் வாளை ஏந்தி அடிக்கழுத்தில் நெடுஞ்சிரத்தை அரியும் நிலையில் காட்டப்பட்டுள்ளன. இதேபோல கொற்றவைக்கு தலையை அரிந்து கொடுக்கும் சிற்பங்களை மகாபலிபுரம் – திரௌபதி ரதத்திலும் சிங்கவரம் குன்றத்திலும் திருவானைக்காவிலும் காணலாம்.

    அத்தனூர் அம்மன் கோவில் (ராசிபுரம்), சிங்களாந்தபுரம் சந்தைப்பேட்டை, புதுப்பாளையம் முப்பீஸ்வரர் கோவிலில் மூன்று நவகண்ட சிற்பங்கள் (எடப்பாடி), தர்மபுரி மாவட்டம் காவேரிப்பட்டினத்திலிருந்து கிழக்கே 4 கி.மீ. தொலைவிலுள்ள பெண்ணேசுவர மடம் கோயிலின் முன்புறம் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நவகண்ட சிற்பம் என பல்வேறு சிற்பங்களைக் காணமுடிகிறது. திருவான்மூரிலுள்ள கி.பி. 889 ஆம் ஆண்டு கல்வெட்டொன்று பட்டிப்பொத்தன் என் பவன் நவகண்டம் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது. அம்பலக் கூத்தன் என்ற வீரன் தன் படைத் தலைவனின் நோய் குணமாக நவகண்டம் கொடுத்துள்ளதை முதலாம் குலோத்துங்க சோழன் காலக் கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது. கல்வெட்டு பொறிக்கப்படாத நவகண்டக் கற்கள் கரூர், பேரூர், அவினாசி, ஆறூர் ஆகிய ஊர்களில் காணப்படுகின்றன. கொற்றவை வழிபாட்டு மரபில் நவகண்டம் என்னும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

    இந்த சிற்பங்கள் ஒன்றிலும் எழுத்துக்கள் இல்லை என்பதால் அவர்கள் யார் என்றும் அவர்களின் வரலாறு என்ன என்றும் அறிந்து கொள்ள முடியவில்லை.

    கி.பி. 1600 ஆம் ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டிய பேரரசு பாண்டிய மன்னர்களின் மெய்காவலர்களாக இருந்தவர்கள் பண்டாரம் இனத்தைச் சார்ந்த வைராவி மட்டுமே. மன்னருக்காகத் தங்கள் இன்னுயிர் கொடுப்பவர்கள் வைராவிகள் மட்டுமே. யுத்தத்திற்கு முன்னால் ஒரு இராச இரத்தத்தை பலியாக கொடுத்தால் காளி தேவி வெற்றிக்கு உதவுவாள் என்பது ஐதீகம்.
    கலிங்கத்துபரணியில் சோழ அரசின் வெற்றிக்காக இப்படி தலையை அறுத்து பலிகொண்ட வீரனைப் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. இது போலவே தண்டனையாகவும் தன் தலையைத் தானே அறுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது.

    இந்த நிகழ்ச்சி  ஒரு பெரிய விழா போன்று நடத்தப்படும். நவகண்டம் ‍‍/ அரிகண்டம் கொடுப்பதற்கு முன் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். நவகண்டம் ‍கொடுப்பவர் இடையில் உடைவாளும், மார்பில் கவசமும் தரித்து போர்வீரன் போல் போர்க்கோலம் பூண்டு இருப்பார். கொற்றவைக்கு பூசை முடித்து பின்பு, தனது இடது கையினால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட்டிக் கொண்டு இறப்பர்.

    நவகண்டம் கொடுப்பதற்கான காரணங்கள் :

    வலிமையான‌ எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற‌ தருணங்களில் தெய்வத்தின் அருளை நாட வேண்டியுள்ளது. துர்க்கைக்குப் பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக்கையில் நவகண்டம் கொடுக்கப்பட்டது. உடல் ஆரோக்கியம் கெட்டு படுத்த படுக்கையாகக் கிடக்கும் அரசனுக்கு, அவன் நலம் திரும்ப அவரது விசுவாசிகளால் நவகண்டம் கொடுக்கப்பட்டது.

    கடுமையான நோய் தாக்குதலால் சாவை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒருவர் வீர சொர்க்கம் அடைய விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வது.

    குற்றவாளி ஒருவன் தான் செய்த குற்றத்தினால் மரண தண்டனைக்கு உள்ளாகும்போது, அவ்வாறு சாகாமல் அரசன் அனுமதியுடன் நவகண்டம் கொடுத்துக் கொண்டு வீர சொர்க்கம் அடைவ‌து.

    மற்றுமொரு சுவையான செய்தி – ஒருவன் போர்க்காயத்தினாலோ, நோயினாலோ சாகும் தருவாயில் அவனுக்கு முடிக்க வேண்டிய கடமைகள் பாக்கி இருக்குமாயின் தனது இறப்பை தள்ளிப் போடுமாறு இறைவனிடம் வேண்டுவர். அந்த கடமை நிறைவேறியதும் நவகண்டம் கொடுத்துக் கொள்வர். பெரும் அவமானத்தைப் பெற்றபின் அதற்கு மேல் வாழ விரும்பாமல் சாக விரும்புபவன் கோழையாக இல்லாமல் வீரச்சாவை விரும்பி நவகண்டம் கொடுத்துக் கொள்வர்.

    சோழர்களுக்கு “வேளக்கார படைகள்” மற்றும் பாண்டியர்களுக்கு “தென்னவன் ஆபத்துதவிகள்” போன்ற தற்காப்புப் படைகள் இருந்தன. அரசர் உயிருக்கு ஆபத்து நேர்கையில் கொற்றவையின் சந்நிதியில் தங்களுடைய தலையைத் தங்கள் கையினாலேயே வெட்டிக் கொண்டு பலியாகிவிடுவர்.

    உலகின் உயிரினங்கள் அடைந்த வளர்ச்சியினை உணர்த்தும் காலக் கண்ணாடி வரலாறு என்பது. வீரதீர செயல் புரிந்தவர்களின் வரலாற்று அடையாளமாகவே இந்த நவகண்டச் சிற்பங்கள் உள்ளன. இவை பல இடங்களில் கால வரலாற்றைக்காட்டும் முக்கிய ஆவணங்களாகவே விளங்குகின்றன.

    துணை நூல்கள்:

    கல்வெட்டு ஓர் அறிமுகம், தமிழ்நாடு தொல்பொருள்துறை ஆய்வுத்துறை வெளியீடு, 1976
    சிலப்பதிகாரம் மூலமும் உரையும் – பொ.வே.சோமசுந்தரனார், கழகப்பதிப்பு, சென்னை-1, 1973.
    சிலப்பதிகாரம் (கட்டுரைத் திரட்டு) – கா.அய்யப்பன் (பதி.ஆ.) மாற்று, சென்னை-106, 2009.
    https://tamilandvedas.com/tag/navakandam/
    David Roy, ‘The Megalithic Culture of the Khasis ANTHRORPOS.L.VIII.Pt 3 – 4. p.p522 ff’)

    .

    Share
  • பூமியின் ஓசோன் குடைக்குப் புதிய ஆபத்து ! கடல் மட்ட உயர்வு ! கடல் வெப்ப ஏற்றம் ! சூட்டு யுகப் பிரளயம் !

    Image result for new threat to ozone layer

     சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    unnamed

     
    ஈரோப்பில் சூட்டு யுகப் பிரளயம்  !
    பேரளவு பேய்மழை
    ஓரிடத்தில் !
    வீரிய வேனிற் காலப்புயல்
    வேறிடத்தில் !
    மீறிய வெப்பக் கனலால்
    தானாகக்
    கானகத் தீக்கள் பற்றின !
    வன விலங்குகள்,
    மனிதர் புலப்பெயர்ச்சி !
    விரைவாகக் கடல் மட்டம்
    ஏறும் போக்கைக்
    கூறும் துணைக்கோள் !
    சூட்டு யுகப் புரட்சியில் உலகு
    மாட்டிக் கொண்டுள்ளது !
    நாட்டு மாந்தர் வயிற்றைக் கலக்கி
    வீட்டை விட்டு விரட்டுது !
    நீரின்றி, நிலமின்றி
    நித்திரை யின்றி மின்விளக் கின்றி
    மீண்டும் வரும் இழப்பு !
    நீண்ட காலத் தவிப்பு !

    ++++++++++++++++

    Image result for new threat to ozone layer

    Image result for new threat to ozone layer

    பூமியின் வான்குடை ஓசோனுக்குப் புதிய ஆபத்து வருகிறது. ஓசோன் இழப்புப் பிரச்சனை தீர்ந்து விட்டதென்று எண்ணுவோர் பரவிக் கிடக்கிறார்.  இது கனடா தேசக் குபெக்கில் உள்ள மாண்டிரியால் நகரச்  சூழ்வெளிக் கோட்பாட்டின் [Montreal Protocol] ஓசோன் இழப்புக் கட்டுப்பாட்டு உடன்பாட்டில் தவறி விட்ட ரசயானத்தால் எதிர்பாராது எழுந்த ஆபத்தாகத் தெரிகிறது. இந்த ஆபத்தை ஈரோப் பூதளவியல் விஞ்ஞானக் கூட்டியக்கம்  [European Geoscience Union] சூழ்வெளி ரசாயனப் பௌதிக இதழில் 2017 அக்டோபர் 8 ஆம் தேதி [Atmospheric Chemistry & Physics Magazine] வெளி யிட்டுள்ளது.

    ஓராம் ஆய்வுக் குழுவினர் [Oram Researchers’ University]

    சைனா போன்ற கிழக்காசிய தொழிற்துறை நாடுகளில், குளிர்ச்சி வாயு எழுச்சியால்  ஓசோன் சிதைக்கும் ரசாயனங்கள் வெளிவீச்சாகித் தொழிற்துறை மாசுக்கள் வேனிற் காலத் தளங்களுக்குத் தள்ளப்படுகின்றன.  அதாவது  ஓசோன் அழிப்பு ரசாயனங்கள்,  சீர்கேடு அடைவதற்கு முன்பே  ஓசோன் அடுக்கு அரங்கத்தை நெருங்கிவிடும்.

    மாத்யூ ஆஸ்போல்டு [ஆய்வாளர், நட்டிங்ஹாம் பல்கலைக் கழகம், மலேசிய முகாம். 

    Image result for new threat to ozone layer

    பெயிண்ட் சுரண்டுவது முதல் வேளாண்மைத் தகர்ப்பு வரைப் பயன்படும் டைகுளோரோமீதேன் இப்போது ஓசோன் அழிப்பைத் துவக்கும் என்னும் ஓர் ஆபத்து ரசாயனம் என்று அறியப் பட்டுள்ளது.  1990 – 2000 ஆண்டுகளில் சூழ்வெளியில் குறைவாய்க் காணப் பட்ட இந்த ரசாயனம் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 6% அதிகமாய்ப் பெருகி வியப்பூட்டி யுள்ளது.  மேலும் இந்த எதிர் பாராத ரசாயனம் தொழிற் புரட்சி ஏற்பட்ட சைனா, இந்தியா போன்ற முன்னேறும் நாடுகளிலிருந்து வெளி வரலாம்.  எங்கள் மதிப்பீடு : கிழக்காசியாவில்  சைனா மட்டும் சூழ்வெளியில் சுமார் 50% -60% கொள்ளளவு டைகுளோரோமீதேன் எழுச்சிக்குப் பொறுப்பாகலாம்.

    ஓராம் சொற்பொழிவு

    Image result for new threat to ozone layer

    2012 & 2014 ஆண்டுகளில் சூழ்வெளி விஞ்ஞானிகள் தென்சைனா கடற்பகுதிகளில் மலேசியா, தைவான் தளங்களில் வாயு மாதிரிகளைச் சேமித்து, சோதிக்க இங்கிலாந்துக்கு அனுப்பினர். மேலும் ஓசோன் அழிக்கும் 50 ரசாயனங்களைச் சூழ்வெளியில் தொடர்ந்து கண்காணித்தார்.  ஆனால் அவை யாவும் கனடாவின் மாண்டிரியால் நகரத்தில் நடந்த  ஓசோன் இழப்புக் கட்டுப்பாடு கருத்தரங்கத்து நிரல்படிக் குறைந்து வருகின்றன.

    சைனாவில் கடந்த இருபது ஆண்டுகளாக ஏராளமாய்த் தயாரிக்கப்படும் பிவிசி [PVC] பிளாஸ்டி உற்பத்தியால் டைகுளோரோ மீதேன், டைகுளோரோ ஈதேன் வாயுக்கள் சூழ்வெளியில் சேர்ந்து, அவை ஓசோன் குடையை அரித்து ஓட்டையைப் பெரிதாக்குகின்றன.  இந்த புதிய ஆபத்தைத் தடுக்கவோ, குறைக்கவோ டைகுளோரோ மீதேன் வாயு சூழ்வெளியில் சேமிக்கப்படாமல் சைனா விதிமுறைகள் வகுத்துக் கையாள வேண்டும்.

    Image result for new threat to ozone layer

    Ozone Depletion??????? • What is the threat from ozone depletion? Good versus bad ozone. • What causes ozone depletion? • ...

    Image result for new threat to ozone layer

    Image result for new threat to ozone layer

    Image result for new threat to ozone layer

    உலகெங்கும் சூட்டுப் பிரளயத் துயர்கள் (ஜூலை 2007)

    இங்கிலாந்தில் 60 ஆண்டுகளாகக் காணாத பேய்மழை 2007 ஜூலையில் பொழிந்தது ! ஒரு மாத மழை ஒரே நாளில் பெய்தது ! இரண்டு மணிநேரத்தில் கொட்டியது ! பெரு வெள்ளத்தால் மக்கள் புலம்பெயர நேரிட்டது. 350,000 வீடுகளின் குடிநீர் பரிமாற்றம் தடைப்பட்டது ! இருபதாம் நூற்றாண்டில் மனிதர் தூண்டிய சூடேற்றத்தால் உலகில் பூகோளப் மழைப் பொழிவின் போக்கு மாறிவிட்டது என்று ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறது. அதே சமயத்தில் சமீபத்தில் இங்கிலாந்தில் பெய்த பேய்மழைக்கு மனிதர் விளைவித்த பூகோளச் சூடேற்றமே காரணம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்னும் கருத்தும் நிலவி வருகிறது.கடந்த வாரம் தாக்கிய அசுர வேனற்புயல் அடிப்பில் [Heat Wave] ஹங்கேரியில் சுமார் 500 பேர் மாண்டதாக ஹங்கேரிய மருத்துவக் குழுவினர் கூறியுள்ளார்கள் ! ருமேனியாவில் 35 பேர் மரணம்.

    கிரீஸில் ஒருவர் மரிப்பு. இத்தாலியின் தென்பகுதியில் வெக்கை மிகுந்து கானகத் தீக்கள் தானாகப் பற்றி இருவர் மரணம். ருமேனியாவில் உஷ்ணம் 46 C (115 F) ஏறியது. கிரீஸில் உஷ்ணம் 45 C (113 F). செர்பியாவில் [Serbia, Near Bosnia] உஷ்ணம் 43 C (109 F) ஏறி 50 காட்டுப் பகுதிகளில் தீப்பற்றி 30 பேர் மாண்டனர் ! வெப்பக் கொதிப்புத் தாங்காது செர்பியாவில் 19,000 பேர் மருத்துவ மனைகளுக்குக் கொண்டுவரப் பட்டனர். அதுபோல் 2003 ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் அடித்த வேனிற் கனல்வீச்சில் சுமார் 15,000 முதியோர் மாண்டதாக அறியப்படுகிறது.

    பூகோளச் சூடேற்றத்தால் உலகில் நேர்ந்த விளைவுகள்

    1870 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வட கரோலினா ஹாட்டெரஸ் முனையில் [Cape Hatteras, North Carolina] கட்டிய கலங்கரை விளக்கு [Light House] கடலிலிருந்து 1500 அடி கரை தூரத்தில் இருந்தது. நூறாண்டுக்குப் பிறகு (1980) கடல் வெள்ளம் பெருகிக் கலங்கரை விளக்கின் அருகே 160 அடிக்குள் வந்து விட்டது. தற்போது அது விழக்கூடா தென்று புதிய இடத்துக்கு மாற்றலாகிக் கட்டப் பட்டிருக்கிறது.

    1000 அடிக்கு உட்பட்டிருந்த பிளாரிடா மாநிலத்தின் வேளாண்மைப் பகுதிகளைக் கடல்நீர் தாக்கி நிலவளம் உப்புக் கலவையால் நஞ்சாகி நாசமாக்கப் பட்டிருக்கிறது.

    1915-1950 ஆண்டுகளில் ஏறிய கடல் மட்ட உயரத்தால் தென் அமெரிக்காவில் பிரேஸின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் [Region of Recife] ஆண்டுக்கு 6 அடி வீதம் குறைந்து கொண்டு வந்தன. 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் (1985-1995) கடல் மட்ட உயர்ச்சி விரைவாகி ஆண்டுக்கு 8 அடி வீதம் கடற்கரைப் பகுதிகள் சிறுத்து வருகின்றன.

    1997 இல் அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தின் ஓஹையோ நதியில் வெள்ளம் பெருகி 30 பேர் இறந்து, 500 மில்லியன் டாலர் மதிப்பளவுக் கட்டடச் சொத்துக்கள் சேதாரம் அடைந்தன.

    1998 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவின் 50 ஆண்டுக் கோரமான நிகழ்ச்சியாக வேனிற்கால வெப்பக்கனல் அடிப்பில் 2500 பேருக்கு மேலாக மாண்டு போயினர் !

    1998 இல் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் தொடர்ந்து 29 நாட்கள் அடித்த 38.5 C (100 F) உஷ்ணக் கனலில் பயிர் வளர்ச்சி அனைத்தும் வரட்சியால் நாசமாயின.

    1999 செப்டம்பர் மாதத்தில் ஹர்ரிக்கேன் ·பிளாய்டு [Hurricane Floyd] தாக்கி பேய்மழையும், மணிக்கு 130 மைல் வேகத்தில் பெரும் புயலும் அடித்து அமெரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரைப் பகுதிகள் பாதிக்கப் பட்டு 77 பேர் மடிந்தார். ஆயிரக் கணக்கான நபர் வீடிழந்தனர்.

    அண்டார்க்டிகா பனித்தளப் பகுதிகள் சூடாகிக் கொண்டு வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக வேனிற்காலப் பனியுருக்க நாட்கள் ஓர் ஆண்டில் மூன்று வாரங்கள் கூடி யிருக்கின்றன.

    American CNN.Com News Message (July 24, 2007)

    பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது! ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது! அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது. அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

    அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர்

     

    தகவல்:

    (Picture Credits: Time Magazine April 9, 2007)1. Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference](April 9, 2007)

    2. An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

    3. The Assault on Reason By Al Gore (2007)

    4. BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

    5. BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

    6. BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

    7. The Big Thaw, Ice on the Run, Seas on the Rise << National Geographic >> By Tim Appenzeller (June 2007)

    8. Climate Change A Guide for the Perplexed << New Scientist >> (May 19 2007)

    9. Historic Global Warming Linked to Methane Release, Environmental News Network By: John Roach (Nov 19 1999)

    10 The Shrinking Glaciers of Kilimajoro, East Africa (2006)

    11. Global Warming Speed : “Earth is on Fast Track to Global Warming.” (2006)

    12. Good News For A Change – Hope for A Troubled Planet By: David Suzuki & Holly Dressel [2002]

    13. The End of Nature By: Bill McKibben [2006]

    14. ‘No Sun Link’ to Climate Change By: Richard Black, BBC Environment Correspondent.

    15. BBC News – Climate Change Around the World.

    16. BBC News – Billions Face Climate Change Risk

    17. Through the Climate Window – Analysis By: Richard Black BBC Environment Correspondent

    18. Deadly Heat Wave Grips in Europe [CNN.Com#cnnSTCPhoto]

    19. Europeans Struggle to Keep Cool in Heat Wave By Cesar G. Soriano (USATODAY.com)

    20. Humans “Affect Global Rainfall ” BBC News

    21. Britains Battle Worst Floods in 60 Years By Tewkesbury, England (July 23, 2007)

    22. BBC News – Prince Sees Boscastle, (England) Devastation (July 24, 2007)

    23. https://www.sciencedaily.com/releases/2017/10/171012091009.htm  [October 12, 2017]

    24. https://phys.org/news/2017-10-reveals-threat-ozone-layer.html  [October 12, 2017]

    25. https://www.livescience.com/60860-humans-causing-climate-change-government-report.html?utm_source=notification  [November 3, 2017]

    ++++++++++++++++++++

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  Noverber 10, 2017] [R-1]

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (254)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இந்தவார மடலுடன் உங்கள் மத்தியில் மீண்டும் மனம் திறக்கிறேன். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடு. அதற்காக நாட்டிலிருக்கும் ஒவ்வொரு குடிமகனும் நாந்தானே இந்நாட்டு மன்னன் என்று கூறி தன் மனம் போன போக்கிலே தனக்குப் பிடித்தமான விதிகளை இயற்றி வாழ்ந்து விட்டுப் போக முடிகிறதா ? ஒவ்வொரு குடிமகனின் கைகளிலும் இருக்கும் வாக்குச்சீட்டு ஒன்றே அவனுக்கு அந்நாட்டு மன்னன் எனும் அந்தஸ்தை வழங்குகிறது என்பதே பொருளாகிறது. ஒரு நாட்டின் அனைத்துப் ப்ரஜைகளினதும் மனதில் ஒரே மாதிரியான எண்ணங்கள் விளைவதில்லை. நாட்டின் முன்னேற்றம் எத்தகையதாக இருக்க வேண்டும், அதற்கு கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள் எவை என்பன ஒவ்வோர் மனிதனின் மனதிலும் வெவ்வேறு கோணங்களில் பரிணமிக்கின்றன.

    ஒரு நாட்டின் மக்களின் பலதரப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையிலேயே வெவ்வேறு அரசியல் கட்சிகள் தோற்றமெடுக்கின்றன. அவைகளின் தோற்றத்தின் காரணம் நியாயமிக்கதாக இருப்பினும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் எனும் இலட்சியம் வெறியாக உருவெடுக்கிறது. இதன் விளைவாக எந்தவழி சென்றாயினும், அன்றி எத்தகைய பிரச்சாரத்தை மேற்கொண்டாயினும் தாம் அதிகாரத்தைக் கைப்பற்றி விட வேண்டும் எனும் அவா, மக்களின் நன்மையையோ அன்றி நாட்டின் நன்மையையோ இரண்டாம் பட்சத்துக்குப் பின் தள்ளிவிடுகிறது. இதுவே இன்று பல நாடுகளின் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு ஆகியிருக்கிறது. இந்த நோக்கத்திற்காக “உண்மைக்குப் புறம்பான செய்திகள் அல்லது Fake news “ எனும் வழிமுறை மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுக்கிறது. சமூகவலைத்தளங்களின் மூலம் பல மக்களை சென்றடையக்கூடிய அனுகூலத்தினால் இவ்வகையான மாயச்செய்திகள் பிரபல்யம் பெற்று விடுகின்றன.

    இங்கிலாந்தின் பிரபல்யமான அகராதியான Collins Dictionary எனும் அமைப்பின் தகவலின்படி நடந்து கொண்டிருக்கும் இவ்வாண்டில் இந்த Fake News எனும் பதமே அதிகமாக உபயோகிக்கப்பட்டிருக்கும் எனும் பதம் எனப்படுகிறது. இதன் மூலம் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரதிகூலம் ஒன்றுண்டு. அதாவது ஒரு நாட்டின் தலைவரையோ அன்றி அந்நாட்டின் நிர்வாக இயந்திரங்களின் முக்கிய உறுப்புகள் அன்று உறுப்பினர்கள் மீதோ சுமத்தப்படும் பல உண்மையான குற்றச்சாட்டுகளைக் கூட அவர்கள் ” மாயச்செய்திகள் அன்றி Fake News “என்று மிக இலகுவாக உதறித் தள்ளி விட்டுச் செல்லும் ஒரு நிலையைப் பல இடங்களில் கண்கூடாகப் பார்க்கிறோம். இதனால் பல நேர்மையான , உண்மையான மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பான்மை கொண்ட அரசியல்வாதிகள் அரசியலை விட்டு ஒதுங்கிச் செல்லும் நிலையைக் காண்கிறோம். இது எம்மை உலக வரலாற்றின் மிக இருளடைந்த ஒரு காலகட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிடுமோ எனும் அச்சம் பல அரசியல் அவதானிகள் மத்தியில் தோன்றியுள்ளது. உலக அரசியல் மாற்றங்கள் ஒரு வலுவான சினேகபூர்வமான நிலையை விட்டு விலகிச் செல்லும் நிலை போன்றதொரு பிரமை ஏற்படுகின்றது.

    கடந்த ஞாயிறு, திங்கள் ஆகிய இரு தினங்களிலும் இங்கிலாந்து பி.பி.ஸி தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் பனோராமா எனும் நிகழ்ச்சியில் திடுக்கிடும் பல உண்மைகள் நிறைந்த செய்திகள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. “அப்பில்பீ” எனப்படும் ஒரு நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் அந்தரங்க கோப்புகள் கணிணியின் இரகசிய பாதுகாப்பை உடைக்கும் குழுவினரால் ஹக் செய்யப்பட்டு ஜெர்மனிய செய்திநிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் ஜெர்மனியில் இத்தகைய அந்தரங்க கோப்புகளை ஆய்வு செய்யும் நிறுவனங்களைக் கூட்டி அவர்களுக்கு இக்கோப்புகளின் பிரதிகளைக் கொடுத்தார்கள். அவ்வரிசையில் இங்கிலாந்த்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனமான பி.பி.ஸிக்கும், கார்டியன் பத்திரிகைக்கும் இக்கோப்புகளின் பிரதிகள் கொடுக்கப்பட்டன. அக்கோப்புகளின் அடிப்படையில் இங்கிலாந்து பி.பி.ஸி நிறுவனம் மேர்சொன்ன நிகழ்ச்சியைத் தயாரித்து ஒளிபரப்பியிருந்தது.

    இங்கிலாந்தின் பல கோடீஸ்வரர்கள் இங்கிலாந்தின் வரியிலிருந்து தப்பிப்பதற்காக தமது பணத்தை வரிவிலக்களிக்கும் பெர்மியூடா போன்ற நாடுகளில் முடக்கியிருப்பது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. அவர்களின் அத்தகைய நடவடிக்கைகள் சட்டத்துக்குப் புறம்பான செய்கைகள் அல்ல சட்டத்தின் பல ஓட்டைகளை உபயோகித்து அரசர்கள் இத்தகைய வழியில் இங்கிலாந்து அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளார்கள். இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை, மற்றும் போலிஸ் இலாகா ஆகியவை நிதிப் பற்றாக்குறையினால் அல்லாடிக் கொண்டு இருக்கும் நிலையில் கோடி,கோடியாக சம்பாதிக்கும் பலர் இத்தகைய வழியில் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரிப்பணத்தைக் கட்டாமல் இருப்பது தேசத்துரோகத்துக்கு நிகரானது எனும் வாதம் பல மூலைகளில் இருந்து ஒலிக்கிறது. இத்தகிய சிக்கல் இங்கிலாந்தின் மகாராணியைக் கூட விட்டு வைக்கவில்லை. அவரின் பணத்தைக் கையாளும் நிறுவனம் இத்தகைய வரிவிலக்களிக்கும் நாட்டில் முதலீடு செய்திருப்பதும் இப்போது அம்பலமாகியுள்ளது. அது மட்டுமின்றி தற்போது பதவியிலிருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய நிதி உதவியாளர் இத்தகைய வழியில் தானும் வரி கட்டாமல் தப்பியிருப்பதும் தெரிய வந்துள்ளது, இது இங்கிலாந்தின் அரசுக்குப் பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது. மேலும் அமெரிக்க ஜனாதிபதியின் நெருங்கிய உறவு கொண்டவரும்,வியாபார அமைச்சருமான ஒருவருக்கும், இரஸ்ய அதிபருக்கு நெருக்கமான ஒருவருக்கும் இடையிலான வியாபார உறவுகளும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

    இவையெல்லாவற்றையும் பார்க்கும்போது ஒரு நாட்டின் சாதாரணப் பிரஜை எனும் பகடைக்காயை உருட்டி அந்நாட்டின் பிரபலங்கள் தமக்குள் விளையாடிக் கொண்டிருப்பது போன்றே எண்ணத் தோன்றுகிறது. இது வந்த வழியில் இன்னும் என்னென்ன வரப்போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்ப்போமே !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • கல்வெட்டு எழுத்துகள் கற்போம் ! (1-7)

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம்  பகுதி-1

    து.சுந்தரம், கோவை

    அலைபேசி:     9444939156.

     

             கோயில்கள். வரலாற்றுக் கருவூலங்களுள் சிறப்பிடம் பெறுபவை. வரலாற்று ஆவணங்களான கலவெட்டுகளைத் தம்மகத்தே பொதித்து வைத்துள்ள களஞ்சியங்கள். நினைத்தவுடனே கல்வெட்டுகளைப் பார்க்க வாயில் திறந்து காத்திருக்கும் எளிமை அகங்கள். கோயில்கள் இல்லையேல் தொல்லியல் துறையே இல்லை எனலாம்.

             கோயில்களுக்குச் செல்கிறோம். கோயிற்சுவர்களில் ஏதோ எழுதப்பட்டுள்ளதைக் கண்கள் பார்க்கின்றன. மனமோ அறிவோ அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. கல்வெட்டுகளில் காணும் எழுத்துகள் தமிழ் எழுத்துகள்தாம் என்றுகூட அறிந்திருப்பதில்லை. பெரும்பாலான நிகழ்வு இது. ஆனால், இதற்கு விலக்கு உண்டு. பலர் இக்கல்வெட்டுகள் பற்றிச் சற்றே எண்ண முற்படுகின்றனர். ஆனால் மேலே முயலுவதில்லை. கல்வெட்டுகளைப் பற்றிய அறிவு குடத்துக்குள் வைத்த சிறு விளக்கொப்ப வெளிச்சம் பரப்பாமலே மறைந்துவிடுகிறது.

             இக்கட்டுரை ஆசிரியரின் நிலையும் மேற்சொன்னவாறுதான். சிறுவயது முதல் பார்த்துவரும் கல்வெட்டுகளைப்பற்றிய ஒரு விழிப்பு, பணி ஓய்வுக்குப்பிறகு (அகவை அறுபதுக்கு மேல்) ஏற்படுகிறது. முயற்சி தொடர்கிறது. தமிழகத் தொல்லியல் கழகத்தின் தொடர்பு ஏற்படுகிறது. அங்கு, மூத்த அறிஞர்கள், கல்வெட்டறிவை இளைஞர்களுக்கு எடுத்துச் செல்லுங்கள் எனக்கூறுகின்றனர். அண்மையில், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் மு.முத்துவேல் அவர்களைக் காணும் வாய்ப்பு கிட்டியது. அவர் சொன்னதும் கல்வெட்டு அறிவை இளய தலைமுறைக்குச் சேர்ப்பியுங்கள் என்பதே. இந்த நோக்கமே இப்பகுதியைத் தொடங்கியமைக்குக் காரணம்.

             கல்வெட்டு எழுத்துகள் ”தமிழி” என்னும் தமிழ் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து என முப்பெரும் பிரிவாக விரியும். தமிழ் பிராமியும், வட்டெழுத்தும் எங்கும் காண இயலா. அவற்றைத் தேடித்தான் போகவேண்டும். ஆனால், ஏழைக்கும் கிடைக்கும் உப்புப் போல எங்கும் கிடைப்பது தமிழ் எழுத்தே. கிடைக்குமிடம் கோயில்கள். கற்க எளிது. கற்றபின் காண எளிது. இளைய தலைமுறையினர் முன்வரவேண்டும்.

             முதல் பகுதியில், உயிர் எழுத்துகளும், மெய்  (உயிர்மெய் வடிவில்) எழுத்துகளும் கொடுக்கப்பட்டுள்ளன. க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன என்னும் வரிசையை மனப்பாடமாக வைத்துப்பழகுதல் நல்லது பயக்கும். ஏனெனில் ங் எழுத்து க எழுத்துடன் இணைந்தே பார்க்கப்படும். இதுபோலவே, ஞ்-ச, ண்-ட, ந்-த, ன்-ற ஆகியன இணைந்து வருவன. இனி, பாடம் தொடர்கிறது.

    கல்வெட்டு எழுத்துகள் - உயிர்

    கல்வெட்டு எழுத்துகள் - மெய் 2

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 2

                                

             முதற்பகுதியில் உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துகளையும் பார்த்தோம். இனிக் காண இருப்பவை உயிர்மெய் எழுத்துகள். பெரும்பாலும் தற்போதுள்ள எழுத்துகளை ஒத்திருப்பினும், ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகள் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முன்பு வழக்கில் இருந்த எழுத்துகளை ஒட்டியிருப்பன. பாடம் தொடர்கிறது.

    கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 3

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 3

             உயிர்மெய் எழுத்துகளில் “த” எழுத்தின் இறுதிப்பகுதியையும் ”ந”, “ப”, “ம”, ”ய”, “ர” ஆகிய எழுத்துகளின் வடிவங்களையும் இப்பகுதியில் காணலாம். பாடம் தொடர்கிறது.

    கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 4

    கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 5

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 4

             “ல” முதல் “ற”  வரையிலான இறுதி உயிர்மெய் எழுத்துகள் இப்பகுதியில்   தரப்பட்டுள்ளன. ஐகாரத்தைக் குறிக்கப்பயன்படும் முன்னொட்டு இரு வடிவங்களில் கல்வெட்டுகளில் பயில்கிறது. அதேபோல், னா, ணா, றா ஆகியவை பழைய வடிவில் அமைந்திருக்கும். விளக்கம் கீழ் வருமாறு:

    கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 6

    கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 7

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – பகுதி 5


    இதுவரை எழுத்துகள் முழுமையும் பார்த்தோம். இனி, நேரடியாகக் கல்வெட்டுகளின் மூலவடிவத்தில் எழுத்துகளை இனம் கண்டு, படிக்கும் பயிற்சி தொடங்குகிறது. முன்பே குறிப்பிட்டவாறு, பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து என மூவகை வடிவங்களைக் கல்வெட்டுகளில் காண்கிறோம். தமிழ் எழுத்துகளைப் பொதுமைப்படுத்தி, முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்த (கி.பி. 985) எழுத்து வடிவங்களையே நாம் பயின்றோம். இக்கால எழுத்துகள் திருத்தமான வடிவும் அழகும் அமையப்பெற்றவை.  இவற்றை மையமாகக் கொண்டு பயின்றால், இதன் காலத்துக்கு முன்பு, பின்பு என எழுத்துகளின் வடிவ மாறுபாட்டைக் கண்டுணர்ந்து  பயிற்சி பெறுதல் எளிது. எனவே, தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டு எழுத்துகளில் நம் பயிற்சி தொடங்குகிறது.

    Kalvettu27 9

    எழுத்துகளைப் படித்துத் தனியே எழுதிவைத்துக்கொண்டு, கீழே தரப்பட்ட கல்வெட்டின் பாடத்தோடு உங்கள் பயிற்சியை ஒப்பிடுக.

    கல்வெட்டின்  பாடம்

    —————————-

    த்து ஏழு கழஞ்சேய் முக்காலே நாலு ம

    த்து எண் கழஞ்சு-ஒற்றை கங்கி(ல்)

    பள்ளித்தொங்கல் மகுடங்கள் திருப்ப

    ழஞ்சேய் முக்காலே யிரண்டு மஞ்சாடி

    சேய் முக்கால் திருப்பள்ளித்தொ

    (தி)ன் கழஞ்சாக இரண்டினால் பொன்

    பத்து ஒன்பதின் கழஞ்சே ஏழு ம(ஞ்)

    ண்டு மஞ்சாடியுங் குன்றி – திருப்ப(ள்)

    எழுத்துகளில் கவனிக்கவேண்டியவை

    ——————————————————

    1. எகரம், ஏகாரம் இரு எழுத்துகளும் ஒன்றே.
    2. ”ழு”, “மு”  இரு எழுத்துகளும் ஒன்றே.
    3. “னா” எழுத்தின் பழைய வடிவம்.
    4. “பொ” எழுத்தில் பின்னொட்டுக் குறியீடு “ப” எழுத்தை அடுத்து எழுதப்படாமல்

       “ப” எழுத்தோடு ஒட்டியுள்ளது.

    1. இரண்டாவது வரியில் “ஒற்றை” என்னும் சொல்லில் ஐகாரக்குறியீடு.

    இன்னுமொரு கல்வெட்டு.

    கல்வெட்டின் பாடம்

    —————————–

    VadaSuvar60 10

    முதல் வரியில் கிரந்த எழுத்துகள் உள்ளன. எனவே பாடம் தரவில்லை.

    இருபத்தாறாவது நாள் நூற்று

    மேற்படி கல்லால் நிறை

    ழஞ்சு –  நாளதினாலேய் கு

    டுத்த பொன்னின் கலச

    பொன்னின் தட்டம் ஒன்

    ல்  நிறை ஐய்ம்பதின் க

    கவனிக்கவேண்டியன

    ——————————

    1. “றா”  எழுத்தின் பழைய வடிவம்
    2. “ஞ்” எழுத்து முந்தைய கல்வெட்டில் உள்ள “ஞ்” எழுத்திலிருந்து

        மாறுபட்டுள்ளது.

    1. இறுதி வரியில் உள்ள “நிறை” என்னும் சொல்லில் ஐகாரக்குறியீடு

       முந்தைய கல்வெட்டில் உள்ள குறியீட்டிலிருந்து மாறுபட்டுள்ளது.

    ——————————————————————————————-

     

     

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-6

             சென்ற பாடத்தில் நான்கு கல்வெட்டுகளின் ஒளிப்படங்களைத் தந்து அவற்றைப்படிக்கும் முறையையும் சொல்லியிருந்தேன். நீங்கள் அவ்வாறு படித்திருந்தால் உங்கள் பாடத்தைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். சரியான பாடம் கீழே தரப்பட்டுள்ளது.

    வரி 1 உடையார் ஸ்ரீராஜராஜதேவர் சேரமானையும் பாண்டியர்களையும் மலைநாட்டு எறிந்துகொண்ட பண்டாரங்களில் யாண்டு இருபத்தாறாவது நாள் முன்

    வரி 2 னூற்று ஒருபத்தொன்பதினால் ஸ்ரீராஜராஜஈஸ்வரமுடைய பரமஸ்வாமிக்குக் குடுத்த பொன்னின் சின்னங்கள் ஆடவல்லான் என்னும் கல்லா

    வரி 3 ல் நிறையெடுத்து கல்லில் வெட்டினபடி காளாஞ்சி ஒன்று பொன் ஐஞ்ஞூற்று எண்பத்து அறுகழஞ்சு – காளாஞ்சி ஒன்று பொன் அறுநூ

    வரி 4 ற்று ஒருபத்து ஒரு கழஞ்சரை குடம் ஒன்று பொன் முன்னூற்று எண்பத்து இரு கழஞ்சரை குடம் ஒன்று பொன் முன்னூற்று அறுபத்து எழு

    வரி 5 கழஞ்சு குட ஒன்று பொன் முன்னூற்று ஐம்பத்து ஒரு கழஞ்சு – குடம் ஒன்று பொன் இருநூற்றுத் தொண்ணூற்று நாற்கழஞ்சு – கரண்டிகைச்

    வரி 6 செப்பு ஒன்று அடியும் மூழலும் உட்பட பொன் நூற்று ஒருபத்து ஒரு கழஞ்சரை இலைச்செப்பு ஒன்று யாளிக்கால் நாலும் மூழலும் உட்பட பொ

    வரி 7 ன் நூற்று எண்பத்து ஐங்கழஞ்சே முக்கால் இலைச்செப்பு ஒன்று யாளிக்கால் நாலும் …. லும் உட்பட பொன் நூற்று நாற்பத்து எழு கழஞ்சு –

    வரி 8 தளிகை ஒன்று அடியுட்பட (பொன்) ஆயிரத்து ஒருநூற்று முப்பத்து ஐங்கழஞ்சரை  கல …… நை ஒன்று மூக்கும் அடியும் உட்பட பொன் நானூற்று எ

    சில விளக்கக் குறிப்புகள் :

    • நீலவண்ணத்தில் காட்டப்பட்டுள்ள எழுத்துகள் கிரந்த எழுத்துகள். அவற்றின் வடிவத்தை இக்கட்டுரையின் இறுதியில் காண்பித்திருக்கிறேன்.
    • அருஞ்சொற்பொருள் :

    உடையார் = அரசர்

    எறிந்து = வென்று

    பண்டாரங்கள் = கருவூலங்கள்

    ஈஸ்வரம் = சிவன்கோயில்

    பரமஸ்வாமி = இறைவன்

    சின்னங்கள் = பொருள்கள்

    ஆடவல்லான் என்னும் கல் = எடைக்கல்

    காளாஞ்சி = தாம்பூலக்கலம்

    கழஞ்சு = நகை எடைகளில் ஒன்று

    கரண்டிகை = பானை போன்ற கலம்

    இலைச்செப்பு = வெற்றிலைச்சிமிழ்

    மூழல் = மூடி

    தளிகை = தட்டு அல்லது உண்கலம்

    • கல்வெட்டின் செய்தி :

    முதலாம் இராசராசன் சேர பாண்டியரை வென்று அவர்களின் கருவூலங்களிலிருந்து  கொணர்ந்த செல்வங்களைக்கொண்டு தஞ்சைப்பெரியகோயிலுக்குப் பொன்னால் செய்யப்பட்ட பல பொருள்களைக் கொடையாக அளித்தான். கொடை அளிக்கப்பட்ட ஆண்டு இராசராசனின் இருபத்தாறாவது ஆட்சியாண்டு; (கி.பி. 1011) அவ்வாண்டில் முன்னூற்றுப் பத்தொன்பதாவது நாளும் கூட.

    • சில நுட்பங்கள் :

    நாம் முன்னூற்றுப் பத்தொன்பது என்று தற்போது குறிப்பதைக் கல்வெட்டு முன்னூற்று ஒருபத்தொன்பது என்றும், நாம் நூற்றுப்பத்து என்று கூறுவதைக் கல்வெட்டு நூற்று ஒருபத்து என்றும் குறிப்பதை நோக்குக.

    வெற்றிலைச்சிமிழுக்கு நான்கு கால்களை யாளியின் உருவத்தில் அமைத்த கலை வடிவத்தின் அழகை நோக்குக.

    அரசன் ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்து ஆட்சிக்காலம் ஆண்டு மற்றும் நாள் கணக்கீடு பெறுவதைக் காண்க.

    • கிரந்தம் பற்றிய குறிப்புகள் :

    கல்வெட்டில் வரும் கிரந்த எழுத்துகளைக் கீழே இணைத்துள்ளேன். இவ்வாறு, அவ்வப்போது காணுகின்ற கிரந்த எழுத்துகளைத் தனியே தொகுத்து வைத்துக்கொள்வது நலம். பின்னால் கல்வெட்டுகளைப் படிக்கும் நேரத்தில் அடையாளம் கண்டு படிக்கத் துணை செய்யும்.

    ——————————————————

    kirantham 11

    து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

    அலைபேசி : 9444939156.

    Share
  • ’’ரமண வசனாம்ருதம்’’….!

     

    ‘’தள்ளலும், கொள்ளலும், தானாம் யதார்த்தத்திற்(கு)
    எள்ளளவும் இல்லைகாண் எய்ததை: -துல்லிய
    வெண்தா மரைஇதயம் வேதம் இருக்கும்(ம)அக
    கண்தாவென்(று) ஈசரிடம் கேள்’’….கிரேசி மோகன்….!

    Share
  • உயர் நோட்டு மதிப்பிழப்பின் ஓராண்டில் மக்களின் நிலை!

    பவள சங்கரி

    தலையங்கம்

    உயர் மதிப்பு நோட்டு செல்லாது என்று அறிவித்தலும், விற்பனை மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) போன்றவற்றை மக்கள் பெருவாரியாக எதிர்ப்பதாக எதிர் கட்சிகள் பிரச்சாரம் செய்தாலும் மக்கள் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் எடுத்த கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. 38% பேர் முழு ஆதரவும், 30% பேர் நன்மைகளும் தீமைகளும் இருப்பதாகவும், 32% பேர் மட்டுமே எதிர்ப்பதாகவும் இதனால் வேலையிழப்பு ஏற்பட்டதாகக் கூறுவது தற்காலிகமானதே என்றும் பெருவாரியாகத் தெரிவித்துள்ளனர். குறைந்த சதவிகிதத்தினரே இந்த வேலையின்மை பிரச்சனை நிரந்தரமானது என்றும் தெரிவித்துள்ளனர். 2000 ரூபாய் நோட்டை முடக்குவதற்கும் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேர்தலில் இதனால் மக்களின் அதிருப்தி என்பது மாயத்தோற்றமாகத் தெரிவதாகப் புலப்படுகிறது.

    Share