Blog

  • முறையாமோ!

            ( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

    தோல்கொடுத்துப் பால்கொடுத்து தோழ்கொடுக்கும் விலங்குகளை

    வாழ்வெல்லாம் மனிதவினம் வசைபாடல் முறையாமோ

    விலங்குகளோ தம்பாட்டில் இருக்கின்ற வேளைதனில்

    வேணுமென்று மனிதன்சென்று வீண்தொல்லை கொடுப்பதேனோ !

     

    பசுவந்து தன்பாலை கறவென்று சொன்னதில்லை

    மான்வந்து தனைக்கொன்று தின்னென்று சொன்னதில்லை

    ஆனைவந்து மனிதனிடம் அடிமையாக்கச் சொன்னதுண்டா

    ஆனாலும் மனிதன்சென்று அத்தனையும் செய்கின்றான் !

     

    காட்டிலே வாழ்ந்துவிட்டு நாட்டுக்கு வந்தபின்பும்

    காட்டையே அழிப்பதற்குக் காரணந்தான் தெரியவில்லை

    காட்டிலே இருக்கின்ற விலங்குகளை அழித்தொழிக்க

    நாட்டிலே இருப்பார்க்கு யார்கொடுத்தார் அதிகாரம் !

     

    அரசியலும் தெரியாது ஆட்சியிலும் ஆசையில்லை

    அலைபாயும் மனங்கூட அவற்றுக்குக் கிடையாது

    நிலபுலனும் சேர்க்காது நிம்மதியும் இழக்காது

    வனமதிலே தன்பாட்டில் வசிக்கிறது விலங்கினம் !

     

    சிங்கத்தைப் பிடிக்கின்றான் சிறுத்தையையும் பிடிக்கின்றான்

    வெங்கரிகள் தனைநாளும் விரட்டியே பிடிக்கின்றான்

    காட்டிலே இருப்பவற்றை நாட்டுக்கே கொண்டுவந்து

    காட்சிப் பொருளாக்கிக் காசெடுத்து நிற்கின்றான் !

     

    வேட்டையெனும் பெயராலே காட்டையே கலக்குகிறீர்

    விலங்குகளைக் கொன்றுவிட்டு வீறாப்பும் பேசுகிறீர்

    காட்டிலுள்ள விலங்குகளை வேட்டையாடும் மனிதர்களே

    நாட்டிலுள்ள விலங்குகளை வேட்டையாட யார்வருவீரா !

     

    மிருகவதை கூடாது எனச்சொல்லும் சட்டமெலாம்

    வேட்டையாடும் வெறியர்களை விட்டுவைத்தல் எப்படியோ

    காட்டைவிட்டு வந்தபின்பும் காருண்யம் தொலைத்துவிடின்

    நாட்டிலே வாழுவதில் நம்வாழ்வு உயிர்ப்பெறுமா !

     

    குரங்கென்றும் கழுதையென்றும் கரடியென்றும் திட்டுகிறோம்

    நாயென்றும் மாடென்றும் நரியென்றும் நகைக்கின்றோம்

    மிருகமாய் இருந்தாலும் இவைதிட்டை நினைப்பதுண்டா

    மனிதராய் இருக்கும்நாம் திட்டுவது முறையாமோ !

     

     

    Share
  • தலையெழுத்து கொழுந்து பறிப்பது – ஈழத்து மலையகக் கவிதைகள்

    -முனைவர் சு.செல்வகுமாரன்

    selvaஇலங்கை  மலையக மக்களின் வரலாறு நீண்ட நெடிய துயர வரலாற்றைக் கொண்டது. அம் மக்களின் வரலாற்றை ஐந்து நிலைகளில் வகைப்படுத்துவார் மலையக வரலாற்று ஆய்வாளர் சாரல் நாடன். அவை பிரிட்டீஸ் ஆட்சிக்குட்பட்ட காலம் (1820 -1919), உள்ளூர் ஆட்சிக்காகப் பரிசோதனை மேற்பட்டகாலம் (1921 -1947), சோல்பரி அரசியல் திட்ட காலம் (1948 -1977), சிறிமாவோ அரசியல் திட்ட காலம் மற்றும் ஜயவர்த்தனா அரசியல் திட்டகாலமாக (1978 -1986), காலத்தையும் 1986 க்கு பிறகு பிரேமதாசாவின் அரசியல் காலமாகவும் வகைமைப்படுத்துவார். இவ்வகைப்பாடானது அம்மக்களின் பிரச்சனைகளை அக்கால அரசியல் சூழலோடு பொருத்திப் பார்த்து புரிந்துகொள்ள உதவியாய் அமைகிறது.

    மேற்சுட்டிய வகைப்பாட்டில் பிரிட்டீஸ் ஆட்சிக்குட்பட்ட முதற்காலக் கட்டப்பகுதி என்பது இம்மக்களின் இருண்ட காலம் என்றே கருதத்தக்கது. இக்கால கட்டத்தில்தான் தமிழகப் பகுதிகளிலிருந்து வறுமையில் வாழ்ந்த ஏராளமான தமிழ் மக்கள், பிரிட்டீஸ் அதிகாரிகளின் ஆலோசனைப்படி ஒப்பந்தக் கூலிகளாக காபி, தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதற்குக் கடல்வழியே கப்பலிலும், படகுகளின் மூலமாகவும் ஏற்றிச் செல்லப்பட்டு மலையகத்தில் கொண்டு சேர்க்கப்பட்டனர். எந்தவித அரசியல், சமூகப் பொருளியல், முன்னேற்றத்திற்குள்ளாகவும் உட்படுத்தப்படாத இம்மக்கள் எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் அடிமைகளாகவே வாழ்ந்து மடிந்து போயினர் என்றே சொல்ல வேண்டும்.

    ஆக ஈழத்தமிழர்கள், வரலாற்றில் மிகப்பெரிய கொடுமையை அனுபவித்தவர்களில் மலையகத் தமிழர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் வாழ்வியல் வலியினை மலையகக் கவிதைகள் நிரம்பப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக சி.வி.வேலுப்பிள்ளையின் கவிதைகளும் தமிழோவியனின் கவிதைகளும் மட்டுமின்றி சமீபகாலத்தில் வெளிவந்த இசைபிழியப்பட்ட வீணை (2007) தொகுப்பின் மூலமாகவும் இதனை நாம் கண்டடைய முடிகிறது.

    “வியர்வை வடித்து
    கூலியாய் உழைத்து
    வெறுமையுள் நலிந்து
    வீழ்வது எல்லாம்
    துயரக் கதையினும்
    துன்பக்கதை – அதைத்
    தொனிக்குதே பேரிகைத் (தப்பொலி)
    துடி ஒலிக் குமுறல்”         (http.//inioru.com)

    என்று மலையக மக்கள் உழைத்தும் எவ்விதப் பயனுமின்றி வறுமையில் உழலும் அவலத்தை சி. வேலுப்பிள்ளை இந்தக் கவிதையில் குறிப்பிடுகிறார். இது ஒருவிதத்தில் பாமர மக்களின் வாழ்வியல் அவலத்தைத் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் சென்றடையும் வண்ணம் கவிதை வடித்த பண்பாட்டுப் போராளி தோழர் ஜீவானந்தத்தின் அடர்த்தி மிகு மொழியினை  நினைவுபடுத்துவதாய் உள்ளது.

    மலையக மக்களின் வாழ்வியலைப் பேசுவதில் தமிழோவியனின் கவிதைகளும் மிக முக்கியப் பங்களிப்பு செய்கின்றன. தமிழோவியனின் கவிதைகள் மலையக மக்களின் பன்முகப்பட்ட துயரினை, குறிப்பாக அவர்கள் ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதை நுட்பமாக புலப்படுத்தக்கூடியன. ஆண்டாண்டு காலம் தம் வாழ்வைப் பணயம் வைத்துப் பெரும் முதலாளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் வருமானத்தை ஈட்டிக் கொடுத்த அம்மக்களில் பலருக்கு வாக்களிக்கின்ற உரிமை மறுக்கப்பட்ட அரசியல் துரோகத்தைப் பேசும் ஒரு கவிதை,

    ‘இன்று மிங்கே குடியுரிமை
    வாக்குரிமை இழந்து நிற்கின்றோம்
    நன்றி கெட்டோர் நாடற்றவர்
    என்று கெடுத்ததால்
    குன்றுகளில் உழைப்பவராய்த்
    தின்று பிழைத்தோம்”          http://www.thinnai.com

    என்று அவர்களின் மனவெளிப்பாட்டை பிரதிபலிக்கின்றது.

    மலையக மக்களின் வாழ்வில் தேயிலை பறிப்பது பெண்களின் தொடர் பணியாகின்றது. மிக குறைந்த கூலிக்கு அதிக எடை பறித்தாக வேண்டிய அவலம் அவர்களை நெருடுகிறது. சிறு குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கு இன்னும் அதிக நெருக்கடி. குழந்தைகளுக்கான எவ்விதப் பாதுகாப்போ, ஊட்டச்சத்து உணவோ அங்கு கிடையாது. எனினும் குழந்தைகளைக் காப்பாற்றியாக வேண்டும். அவர்களின் பசியாற்றியாக வேண்டும் எனும் நிலையில் அதிகாலையிலே நடந்தே மலையேறிச் சென்று இலைகளைப் பறித்து கையும், காலும் அசதியுறும் நிலையினை,

    “பச்சிளங் குழந்தைகள் பிள்ளைகள்
    பாதுகாக்கு மகத்தில் நிறுத்தி
    உச்சிமலை முகடுகளில் கொழுந்தை
    உடல் வியர்க்கப் பறித்து – நிறுத்தே
    ஓட்டமும் நடையுமாய்ப் பிள்ளைகள்
    உறங்கும் காப்பகம் வந்தே
    ஊட்டுவார் பாலை அரைவயிறாய்
    ஓடுவார் மீண்டும் மலைக்கே”    http://www.thinnai.com

    என்று பதிவு செய்கிறது. இசை பிழியப்பட்ட வீணை தொகுப்பில் இடம்பெற்றுள்ள பல கவிதைகள் இம்மக்களின் உணர்வுகளை திறம்பட பேசியுள்ளன. பல கவிதைகள் மிகச்சாதாரண வெகுஜன மொழியிலேயே அமைந்திருப்பதைப் பார்க்கலாம். இசைபிழியப்பட்ட வீணை கவிதை தொகுப்பிற்கு முன்னுரை எழுதும் தினகரன்.  “எது கவிதை எனும் கேள்விக்கு ஒவ்வொரு கோட்பாடும் வேறுவேறு விலக்கணங்களைக் கூறமுடியும். எனினும் மலையகத்துக்கும் பொருத்தமான கவிதை வடிவங்கள் எவை என்றால் இங்குள்ள கவிதை வடிவங்களையும் முன்மொழிய முடியும். தமது இலக்கு வாசகர்களை எளிதில் சென்றடையும் நோக்கில் படைக்கப்பட்டுள்ள இக்கவிதைகள் எவ்வித கவிதாமேதாவிலாச விமர்சனங்களையும் பொருட்படுத்தாது பயணிக்கின்றன” (இசைபிழியப்பட்ட வீணை, ப – 3)

    என்கிறார். இதனை ஒரு சரியான மதிப்பீடாகவே பார்க்கமுடிகின்றது. இத்தொகுப்பு மலையகமக்களின் உணர்வுகளைக் கவிதைரீதியில் அணுகி உணர்ந்து கொள்வதற்கு மிகவும் பயனுடையதாகிறது.

    சந்திரலேகாவின் “கற்கள் – கவண்கள் – தாவீது… ஈழப்போரின் ஊடாகவும் ஈழத்தில் மலையக மக்களை இரண்டாந்தரப் பிரஜையாகப் பார்க்கப்படுவதை, நடத்தப்படுவதை பதிவுசெய்கின்றது. தன்னை வஞ்சிக்கும் முதலாளித்துவத்துக்கும், தம்மை அந்நியனாகப் பிரகடனப்படுத்தும் சிங்கள அரசு, மற்றும் இன்னபிற மக்களுக்குமாகத் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதில் தீவிரம் காட்டுகின்றது.

    “மூச்சு முட்ட முட்ட
    உழைப்பை உறிஞ்சி விட்டு
    நான் இந்த பூமிக்கு
    அந்நியமானவன் என
    அக்கிரம போர்க் கோஷமிட நீ
    பூமியின் அவதார மில்லையே…..?
    பிறந்தவன் மட்டும் தான்”      (இசைபிழியப்பட்ட வீணை, ப – 10)

    என எதிர்தரப்பை கேள்விக்குள்ளாக்கும் கவிதை தொடர்ந்து தாவீதுக்கு கவணும் கற்களும்தான் வீர கவசம் குறிஞ்சியின் தாவீதுகளுக்கும் என்று பதிவு செய்யும் தொன்மம் சார்ந்த குறியீடு முதன்மை பெறுகின்றது. கவிதையில் எழுப்பப்படும் கேள்விகளும், முன்வைக்கப்படுகின்ற கருத்தியலும், மலையக மக்களின் போர்க்குணம் மிக்க எழுச்சியை உணர்த்துபவையாக உள்ளன. எல்லா இனமும் மனிதகுலத்தை மகிமைப்பவையே என்று குறிப்பிடும் கவிஞர் எனது நிலம், எனது மொழி, எனது இனம், எனது குருதியாவும் மாசுபடுகிறதெனில் மரணம் என்னால் விரும்பப்படுவது என்கிறார். மேலும், தோழர் கற்களைப் பொறுக்கு, கவண்களை உற்பத்தி செய், கவச வாகனங்களை, கண்ணீர்ப் புகையைக் கற்களால் வீழ்த்து என்பதாக உத்தரவு பிறப்பிப்பது போராட்டத்தின் தேவையையும் அதுவே விடுதலைக்கான வழி என்பதையும் வலியுறுத்துகின்றது.

    இஸ்மாலிகாவின் “நலம் பிறக்க வேண்டும்” மலையக மக்கள் வாழ்வில் பெரும் துயரினை அனுபவிக்கும் பெண்களின் வாழ்வினையும், அம்மக்களின் வறுமையினையும் பறைசாற்றுகின்றது. மலையகத்தில் ஊதுகின்ற சங்கு மங்கையவள் வாழ்வில் பெரும் பங்கு. இலைத்தளிரைக் கொய்ய வந்து இங்கு இன்னல்படும் வாழ்வு வேறு எங்கு? தலைவாரிப் பொட்டிடவா நேரம்?; தலை முழுகி ஆகிறதிரு வாரம். முலையசைய முதுகில் பெரும் பாரம். முந்நாளில் செய்ததிந்தப் பாவம் என்பதாய் தொடரும் கவிதை,

    “தலையெழுத்து கொழுந்தெடுக்க வேணும்
    தவறாது மலைக்குச் செல்ல வேணும்
    குலை நடுங்க குளிரில் வாடவேணும்
    கூடைநிறையக் கொழுந்தெடுக்க வேணும்
    இருள் விலக எழுந்து செல்லும் வேளை
    இளங்குழந்தை அழுது சுற்றும் காலை
    அருள் புரிய யாருமில்லா ஏழை
    எதிர்காலம் என்பதோர் பாலை”   (இசைபிழியப்பட்ட வீணை, ப – 17)

    என்று துயரங்களைத் தாண்டி வாழ்வில் தடம்பதிக்க விரும்பும் அம்மக்களின் அவாவினை புலப்படுத்துகின்றது.

    ‘காலமெல்லாம் கஷ்டத்தை அனுபவித்து ஜென்மதேசம் போகவேண்டு மென்றாலும் கூலியாள் சட்டம் குறுக்கே நிற்கிறது. சட்டத்தை அனுசரித்துப் போகிறதாயிருப்பினும் தகராறுகள் பலக் குறுக்கிடுகின்றன. கொஞ்சம் சுபாவத்தைக் காட்ட ஆரம்பித்தால் அடியும் குத்துந்தான் ஆதாயமாகிவிடும். அடிக்கும் குத்துக்கும் தப்பித்துக் கொள்ள முயன்றால் காவல் தண்டனைக்குட்பட வைத்துவிடுவார்கள்.

    இலங்கைத் தீவின் செல்வ வளத்துக்கு மூலமாயிருந்து கொண்டிருக்கும் மலைத்தொடர்களுக்குச் செல்வோம். அங்கே தேயிலைப் பயிர்களை விருத்தி செய்து முறையே முதலாளிக்கும், நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் செல்வத்தை வழங்கக்கூடியவர்கள் என்ன நிலையிலிருந்து வருகின்றார்கள் என்பதனைக் கவனிப்போமாயின் கண்களில் நீர் பெருகாமற்போகாது. அவர்கள் தேசத்தை விட்டுப் புறப்பட எண்ணிய தினம் முதல் தென்னிலங்கையிலிருந்து திரும்பிப் போகின்றவரை அவர்கள் அநேக கஷ்டங்களைச் சமாளித்துக் கொண்டு போக வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். அங்கே சேகரித்துக் கொடுக்கும் தரகரின் கபட நாடகமோ வாய்விட்டுச் சொல்ல முடியாது. கங்காணியரின் தயாளச்சிந்தனையோ அளவிட வேண்டியதில்லை. கண்டக்டர்களின் அதிகாரமோ கணக்கிட வேண்டியதில்லை. சின்னதுரையின் சீரழிவோ செப்பவேண்டியதில்லை. பெரிய துரையின் கம்பீரமோ பேச வேண்டியதில்லை.” (மலையகத் தமிழர் வரலாறு, ஜீலை – 2011, பக் – 193,194.) என்கிறார் சாரல் நாடன்.

    புனிதகலாவின் “சிறகுவிரி” தொன்மத்தின் மூலமாகப் பெண்ணியம் பேச விழைகின்றது. ஊழல் செய்தவனை உச்சியில் சுமந்து பெண்மையை ஈனப்படுத்திய நளாயினிப் பெண்ணாய் நீ நலமிழக்க வேண்டாம், கண்மூடிக் கணவன் பின்செல்லும் காவியச் சீதையாகவும் செயல்பட வேண்டாம். உன் சிறகுகளை நீயே சிதைத்துக் கொண்டு மரபுக் கூட்டுக்குள் அடைபட்ட காலம் மலையேறிப் போச்சு வெளியில் வா எனக் குரலை உயர்த்திப் பிடிக்கின்றது. மட்டுமின்றி அது என்ன உன் சிறகுகளில் புராணப் பிசுபிசுப்பு அறிவுச் சுடரொளியில் அதனை உலர்த்திக்கொள் என்பதுமான வரிகள் பெண் சார்ந்த மிகப்பெரிய மீட்டெடுப்பு முயற்சியாக அமைகின்றன.

    “மலைகளேறி
    மழையில் நனைந்து, விறைத்து
    கொழுந்து சுமந்து, இறக்கிக்
    களைப்போடு  வீடு வருகின்றேன்
    வழமை போலவே
    வழமைக்கு மாறாக
    என்றாவது
    ஒரு கோப்பை தேனீர் தந்து
    அதிர்ச்சியின்பத்தால்
    சிலிர்ப்பூட்ட
    உன்னிடம் ஏனில்லை
    என்னைப் பற்றிய சிறு எண்ணம்?”  (இசைபிழியபட்ட வீணை, ப – 24)

    என்னும் கலைச்செல்வியின் கவிதை, பெண்ணிய ரீதியில் ஆணைக்கேள்வி கேட்கின்ற மிக முக்கியமான ஒரு கவிதையாகின்றது. மேலும் பரமேஸ்வரியின் தொழிலாளிப் பெண்ணின் சோககீதம், மலையகப் பெண்ணின் வரலாற்றை, துயரத்தை விவரிக்கின்றன. இரவு பசி மீதமிருக்கக் காலை பசியையும் சுமந்து கொண்டு தூரத்தே உயர்ந்து நிற்கும் பச்சை மலையை எட்டிப் பிடிக்கும் இளவயது தாய்க்குத் தேயிலையைக் கொஞ்சும் அளவிற்கு மழலையைக் கொஞ்ச நேரமில்லை. மாலை ஆகிடக் கூடையை முதுகிலும், குடும்ப பாரத்தை மனத்திலும் சுமந்திட வீடு வரும் அவளுக்கு பகல் முழுவதும் பட்டினியாய் வாடிய குழந்தையும், சாராயமே வாழ்க்கையாகி விட்ட கணவனுமே அங்கமாகிவிட்டனார். கூடையைச் சுமந்தே கூன் விழுந்ததால் முப்பது வயதிலே ஐம்பது வயதுத் தோற்றம். எனினும் அப்பெண்கள் முகமலர உலவுகின்றனர். ஏன் தெரியுமா பொறுப்பற்ற கணவனுக்குக் கள்ளும், தன் குழந்தைக்குக் கல்வியும் தன்னால் கிடைக்கப் பெறுகிறதென்ற மகிழ்ச்சியே என்பதாய் அக்கவிதை மலையகப் பெண்ணின் வாழ்வை யதார்த்தமாய் நகர்த்தி செல்கின்றது.

    “இசைபிழியப்பட்ட வீணை” தொகுப்பில் பன்முகப்பட்ட கவிதைகள் இடம் பெற்றுள்ளன. எனினும் பெரும்பாலான கவிதைகள் அறிவுத்துறை சார்ந்தோ, கோட்பாடுகள் சார்ந்தோ எழுதப்பட்டவை அல்ல. முற்றிலும் மனித யதார்த்த வாழ்வின் ஊடாக எழும் பதிவுகளும் கேள்விகளுமாகவே உள்ளன. பொதுவாக பெண்ணெழுத்தில் மனைவி கணவனையும், அக்காள் தம்பியையும், பிள்ளை தந்தையையும் ஆணாதிக்க கேள்வியால் அதிரச் செய்யும் நிலையில் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள “அப்பா” கவிதை அப்பாவை அப்பாவாகவே பார்ப்பதென்பதும், ஒரு பொறுப்புமிக்க ஆணுக்கான அங்கிகாரத்தை வழங்குவதும் முக்கியமானதாகிறது.

    “தாய் என்னைக் கருவில் சுமக்க
    நீங்கள் என்னைத்
    தோள்மீது சுமக்க
    தோழனாக்கினீர்கள்
    நீங்கள் என் தந்தையானதற்கு
    நான்
    பெருமை பட்டுக் கொள்கின்றேன்
    எந்நாளும்”         (இசைபிழியபட்ட வீணை, ப – 42)

    என்பதாகத் தொடரும் கவிதை ஒரு தந்தையின் மன தைரியத்தை, சிக்கலான காலகட்டங்களில் முடிவுகளை எடுப்பதில் தந்தையிடம் இருந்த உறுதிப்பாடு, குழந்தையின் பாதுகாவலனாய், வாழ்க்கையைச் சொல்லிக் கொடுப்பதில் ஆசானாய் விளங்கியமையை அடையாளப்படுத்துகிறது.

    மலையகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுக்குத் தோட்டத்தை, தொழிலை மேற்பார்வை செய்யும் கங்காணிமார்களால் பாலியல் தொல்லை ஏற்படுவது அதிகம். இவை குறித்த துயரினை மலேசியத் தோட்டப்புற பாடல் ஒன்று

    “கங்காணி
    வேகமுடன் ஓடிவந்து
    தாவணியைத் தொட்டாண்டி – கைக்குத்
    தங்க காப்புத் தரேன்னு சொல்லி
    கையப் புடிச்சி இழுத்தாண்டி” (புலம்பெயர்ந்த தமிழர் வரலாறும் வாழ்வியலும், ப – 68)

    என்பதாகப் பதிவு செய்திருப்பதை முரசு நெடுமாறன் தனது கட்டுரை ஒன்றில் எடுத்தாள்வதைப் பார்க்கமுடிகிறது.

    “வேலை நிறுத்தம்
    காலை முதல் மாலை வரை
    மணிக்கணக்கில் போராடிப்
    பயனேதும் இல்லை
    மாத முடிவில்
    வருமானம் இன்றி
    வறுமையில் குன்றி
    துயரால் வாடும்
    பிறவிகளாய் நாம்
    என்று தான் ஒழியும்
    அதிகாரிகளின் குரூர நோக்கம்
    அன்று தான் தீரும் எம்
    மக்களின் ஓலம்”   (இசைபிழியபட்ட வீணை, ப – 67)

    எனும் மலையகப் பெண் கவிஞர் சரஸ்வதியின் “ஏழைகளின் ஓலம்” கவிதை அதிகாரிகளின் தவறான அணுகுமுறைகளால் ஏற்படும் போராட்டங்களும், அப்போராட்டத்தினால் பாதிக்கப்படும் மக்களின் நிலையினையும் புலப்படுத்துகின்றது. மேலும் சந்தாப் பணம் வாங்க மட்டும் சங்கங்கள், வாக்கு வாங்க மட்டும் கட்சிகள் என்னும் இரா. வனிதாவின் கூற்றும், முதலாளிமார் கைகள் செழிக்கின்றன. முதலானவர் வயிறுகள் வரள்கின்றன என்னும் வே. சசிகலாவின் கவிதை வரிகளும் மலையக மக்களின் வலி நிறைந்த வாழ்வினைப் பன்முகப்பட்ட யதார்த்தங்களோடும், விமர்சனங்களோடும் முன்வைப்பதைக் காணமுடிகின்றது. எனினும் இத்தகைய நெருக்கடியான மலையக மக்களின் வாழ்வியல் குறித்த பதிவினை ஈழத்தில் பெயர்பெற்ற நிலையில் கவிதை எழுதிக் கொண்டிருக்கக் கூடிய வ.ஜ.ச. ஜெயபாலன், சேரன், தீபச்செல்வன் போன்றோர் குறிப்பிடும் படியாகக் கவிதைகளில் பதிவு செய்யவில்லையோ என்பதும் ஐயமாகவே உள்ளது. ஆக ஈழத்து மலையக மக்களின் வாழ்வு என்பது இன்று கேட்பாரற்ற நிலையில் கொழுந்தெடுப்பதை மட்டுமே தலைவிதியாகக் கொண்டு பிறந்திருப்பதை மலையகக் கவிதைகள் உறுதிசெய்வதாய் உள்ளன.

    ****************

    தமிழ் உதவிப்பேராசிரியர், அண்ணாமலைப் பல்கல்கலைக்கழகம்
    தற்போது பணியிட மாற்றம் காரணமாக அரசு கலைக்கல்லூரி,
    பரமக்குடியில் பணியாற்றுகின்றேன்.

     

     

     

    Share
  • சமூக நோக்கில் கணேசகுமாரனின் ‘எழுத்தாளன்’ புதினம்

    -முனைவர் ச. அருள் 

    முன்னுரை

    arulஎழுத்தாளர் என்பவர் கதை, கவிதை, புதினம் உள்ளிட்ட எழுத்துப் படைப்புக்களைப் படைப்பவர். அவரது படைப்புக்கள் இதழ்கள், நூல்கள் மூலமாக வெளியாகும். இதழ்களில் எழுதும் எழுத்தாளர்களைத் தொழில்முறை எழுத்தாளர்கள் என்றும், சுதந்தர எழுத்தாளர்கள் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். ஒரு சமூகத்தில் சிந்திக்கும் எழுத்தாளன் நேர்மையான எழுத்தைப் பதிவு செய்பவனாகவும் சமரசங்களை ஒதுக்கித் தள்ளுபவனாகவும் வளைந்து கொடுக்காதவனாகவும் இருக்க வேண்டும். ஒரு சாதாரண சமூகத்தில் இருந்து எல்லாரையும் போல வெளியில் வருபவன்தான் எழுத்தாளன். எழுத்தாளன் என்பவன் கொம்பு முளைத்தவன் அல்லன். எழுத்தாளன் என்பவன் தான் வாழும் சமூகம் குறித்துச் சிந்தித்துத் தன் எழுத்துக்களால் சமூகத்தில் மாற்றத்தை மலரச் செய்பவன். அவ்வகையில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான கணேசகுமாரனின் ‘எழுத்தாளன்’ என்னும் புதினம் குறித்தது இக்கட்டுரை.

    சமூகப் புதினம்

    முதிர்ச்சி அடைந்த சமுதாயத்திலிருந்து காலப்போக்கில் இலக்கியம் தோன்றுகிறது. இவ்வாறு தோன்றும்  இலக்கியம் தான் தோன்றிய சமுதாயத்தின் நிறை, குறைகளை வெளிப்படுத்துவதாக இருக்கும். இத்தகைய தன்மையுடைய புதினங்கள் சமூகப் புதினங்கள் எனப்படுகின்றன. கணேசகுமாரனின் ‘எழுத்தாளன்’ என்னும் புதினமும் இந்த வகையைச் (சமூக நாவல்) சார்ந்ததாகும்.

    “ஒரு குறிப்பிட்ட காலத்தின் சமூக, பொருளாதாரச் சூழ்நிலையினை வெளியிடுவதில் தீவிரம் காட்டுகிறது சமூக நாவல்”1 என்று உலக இலக்கியச் சொல்லகராதி உரைக்கிறது.“ ‘சமூக நாவல்’ என்று நாம் மேலெழுந்தவாரியாகக் கூறும் நாவல் வகையானது உண்மையில் சமகால வரலாற்று நாவலாகத்தான் இருத்தல் வேண்டும். ஏனெனில் சமூக நாவலை ஆக்குகிறவன். சமகால வரலாற்றின் தன்மைகள் சிலவற்றிற்கு இலக்கிய வடிவம் கொடுக்கிறான்”2 என்பது க.கைலாபதி கருத்து.

    சமூகப் புதினங்கள், சமகாலச் சமுதாய நிலைமைகளைக் காட்டுவதோடு, சமுதாயத்தில் நிகழும் மாற்றங்களையும் காட்டுகின்றன. இதனை,“சமூகம் மாறுகிறது என்றால் மாறுகின்ற சமூகத்தால் படைக்கப்பெறும் இலக்கிய வகைகளுள் ஒன்றான நாவல்கள் தம்மை வெளிப்படுத்திய சமூகத்தையும், அது அவ்வப்போது அடைந்துவரும் மாற்றங்களையும் காட்டத் தவறுவதில்லை. எனவே, தமிழ்ச் சமூக நாவல்கள், தமிழ்ச் சமூகத்தையும் தமிழ் மக்களிடையே காணும் மாற்றங்களையும் அறிவிக்கும் ‘காலைச் சங்குகள்’”3 என்று தா.வே.வீராசாமி குறிப்பிடுகின்றார்.

    திருமணம்

    சமூக நடப்பியலில் முதன்மையானது திருமணம். “மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சடங்கின் மூலம் ஆணும் பெண்ணும் புதிய குடும்பத்தை உருவாக்கிக் கொள்ள நிறுவப்பட்ட ஒரு வினையே மணம் ஆகும். எனவே, அதுவும் ஒரு நிறுவனம் ஆகும். மணத்திற்குப் பிறகு கணவன் – மனைவி உறவு நிலைபெற்றதாகிறது.”4 என்பர். இவ்வுறவினை நீடித்து நிலைக்கச் செய்வது மக்கட்பேறாகும். நம் தமிழ்ச் சமூகத்தில் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பான பொருள் ஈட்டலையும் காத்தலையும் ஆடவன் ஏற்றுக் கொண்டாலும், குழந்தை வளர்ப்பும், குடும்பத்தைக் காக்கும் கடமையும், குலப்பெருமையைக் காப்பாற்றும் பொறுப்பும் இன்றும் பெண்கள் கையில்தான் இருக்கின்றன. எனவே, குடும்பத்தின் அடிக்கல்லாக இருப்பவள் பெண்.

    மரபுத் திருமணம்

    பெற்றோர் அல்லது உறவினர் உறுதிசெய்த ஏற்பாட்டுத் திருமணங்களே (மரபுத் திருமணம்) மிகுதி. இன்று திருமணம் என்பது நம் தமிழ்ச் சமூகத்தில் மிகுதியும் வணிக நெறியில் நடைபெற்று வருவதைக் காணமுடிகிறது. எழுத்தாளன் புதினத்தில் ஜெயந்தி என்னும் 21 வயது பெண்ணுக்கும் சகாதேவன் என்னும் எழுத்தாளனுக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப் பெற்ற மரபுத் திருமணம் நடைபெறுகிறது. “அப்போது ஜெயந்திக்கு 21 வயதுதான் யார் கையிலாவது தன் பெண்ணைப் பிடித்துக் கொடுத்துவிட்டால் தன் கடமை முடிந்துவிடும் என்று உறுதியாக நம்பினார் ராகவன். அம்மா இல்லாத ஜெயந்தியை காலேஜ் வரையில் வளர்த்ததே தன் வாழ்நாளில் பெரிய சாதனையாய் நினைத்தார். அவருக்கு மிகப்பெரிய ஓய்வு தேவைப்பட்டது. பெண் பார்க்க வந்த சகாதேவன் ஜெயந்தியுடன் தனியாய்ப் பேசினான்” – (எழுத்தாளன், ப.18). ஒரு கார்மென்ட்ஸ் கம்பெனியில் கணக்கு எழுதும் வேலை பார்த்துக் கொண்டே எழுத்தாளனாகவும் உருமாறிக் கொண்டிருந்த சகாதேவனை ஜெயந்தி மணம்செய்து கொள்கிறாள்.

    திருமணத்திற்குப் பிறகு ஜெயந்தியின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் சோகமே இழையோடுகிறது. அவள் நினைத்த வாழ்க்கை வேறு அவளுக்கு அமைந்த வாழ்க்கை வேறாக இருக்கிறது. “ஜெயந்தி ஒன்றும் தெரியாத பெண் அல்லள். ஆனால், அவளுக்கென்று சில எல்லைகள் இருந்தன. ஆரம்பத்திலிருந்தே அவள் தனக்கென ஒரு வட்டமிட்டு அதில் சுற்றி வந்தாள். வட்டம் தாண்டிய வானம் குறித்து அவள் பெரிதாய்க் கவலைப்படவில்லை. அப்படித்தான் அவள் சகாதேவனுக்கு மனைவியானாள். ஒரு மனைவி கணவனிடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று அவளுக்கு சொல்லப்பட்ட, அவள் கண்டுணர்ந்த வாழ்க்கையில் வாழ்ந்து சாக முடிவெடுத்தாள். ஆனால், அவளின் பகலும் இரவும் இடம் மாறியதைப் போல் ஆகிற்று திருமணத்திற்குப் பிறகான அவளது உலகத்தில் இன்னொரு கிரகத்தில் வாழ்வதைப் போன்ற உணர்வினை சகாதேவன் அவளுக்குத் தந்தான்” (எழுத்தாளன், ப.18).  ஜெயந்திக்கு தான் வாழ நினைத்த வாழ்க்கையும் அமையவில்லை. அவளுக்குப் பிறரால் சொல்லப்பட்ட வாழ்க்கையும் அமையவில்லை.

    இரவில் தன்னுடன் கூடும் தன் கணவன் எப்போது தன்னை விட்டு விலகிப் போகிறான். எப்போது உறங்குகிறான் என்பது புரியாமலே ஜெயந்தி உறங்கினாள், விழித்தாள், களைத்தாள். ஒருநாள் வழக்கமான கூடலுக்குப் பின் சகாதேவன் தன்னை விட்டு விலகுவதைப் பார்த்து ‘எங்கே போறீங்க’ என்று கேட்கிறாள். ‘ஒனக்கு சொன்னாப் புரியாது ஜெயந்தி. எனக்கு எழுதுறதுக்கான மூடு வர்றதே ஒனக்கும் எனக்குமான இது முடிஞ்சதுக்கப்புறம்தான்”  – (எழுத்தாளன், ப.19).  என்று பதில் உரைக்கிறான் சகாதேவன். “கட்டிலைவிட்டு இறங்கி லைட்டைப் போட்டுவிட்டு தன்னைப் பார்த்து சிரித்தவாறே சொன்ன கணவனையே இமைக்காமல் பார்த்தாள் ஜெயந்தி, அவளுக்கு இருள் தேவைப்பட்டது. சகாதேவனோ பெரும் வெளிச்சத்தில் நின்றிருந்தான். இனி ஒவ்வொரு முறை தன்னைத் தொடும்போதும் எப்போது இவன் முடித்து விலகுவான் என்ற எண்ணம்தானே தன்னை ஆக்ரமித்திருக்கும் என்று நினைக்கும்போது ஜெயந்திக்கு உடம்பெல்லாம் கூசியது. கணவன் முன்பான தன் நிர்வாணம் கைகொட்டிச் சிரிப்பதைக் கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள்” – (எழுத்தாளன், ப.19).  இந்தப் புதினத்தில் ஜெயந்தி என்பவள் சகாதேவனின் உடல் பசியைத் தீர்ப்பவளாகவும் குழந்தைகள் பெற்றெடுக்கும் எந்திரமாகவும் படைக்கப்பட்டிருகிறாள். அவளுக்கான எந்த ஒரு விருப்பத்தையும் நிறைவேற்றத் தவறியவனாகவே சகாதேவன் சித்திரிக்கப்பட்டிருக்கிறான்.

    காதல் திருமணம்

    ஆணும் பெண்ணும் பருவ வயதில் உடலில் ஏற்படும் ஓர் இயற்கை உந்துதலால் தூண்டப்பட்டு உடல் இச்சை கொண்டு இன்பம் பெறவிரும்பி, காதல் வயப்பட்டு, பெண் ஆணையும் ஆண் பெண்ணையும் விரும்பிக் காதலிப்பர். ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பிப் பெற்றோரின் சம்மதம் பெற்றோ பெறாமலோ திருமணம் செய்து கொண்டால் அதற்குக் காதல் மணம் என்று பெயர். களவு வழிவந்த திருமணத்தை,

    யாமே, பிரிவின் றியைந்த துவராநட்பின்
    இருதலைப்
    புள்ளி னோருயி ரம்மே”5
    என்று அகநானூறு சுட்டுகிறது.

    எழுத்தாளன் புதினத்தில் வரும் மதிபாரதி என்கிற ஜெயலெட்சுமி தீபக் என்பவனைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறாள். இவர்களுக்கு வயதுக்கு வந்த இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்; அவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கிறார்கள். இந்நிலையில் தீபக் ஒருநாள் சனிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டில் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்த மதிபாரதி அதிர்ச்சி அடைந்து அழத் தொடங்குகிறாள். பின்பு அவளே அழக்கூடாது எனத் தீர்மானித்து அழுகையை நிறுத்துகிறாள். இது குறித்து தீபக்கிடம் கேட்கிறாள். அவன் தான் செய்தது சரி என நியாயம் கற்பிக்கிறான். ஆனால், மதிபாரதி அவன் சொன்ன நியாயங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. தீபக் தான் ஓர் ஆணாதிக்கவாதி என்பதை நிரூபிக்கும் வகையில் பேசுகிறான்.

    “நீ மட்டும் இலக்கியக் கூட்டம், கவிதைத் தொகுப்பு வெளியீடுன்னு கௌம்பி வெளியூர் போயிட்டு வர்றே…. நான் எதுவும் உன்னைக் கேக்குறேனா… கும்பலா நின்று போட்டோவுக்கு போஸ் வேற குடுக்குறீங்க, என் பொண்டாட்டி கவிஞர்னு சொல்லிக்கிறதில் எனக்கென்ன பெருமை… கல்யாணப் பத்திரிகையில் ஜெயலட்சுமிதான். மதிபாரதிங்கறது நான் குடுத்த பர்மிசன்தானே” – (எழுத்தாளன், ப.11).  என்று தீபக்கின் குரல் ஒலிப்பதைக் கேட்ட மதிபாரதிக்கு, யாரோ ஓர் அந்நிய பெண்ணுடன் கணவன் தன் பெட்ரூம் குளியல் அறையில் இருப்பதைப் பார்த்த நினைவு அடிக்கடி வந்து போவதால் சுய நினைவு இல்லாமல் தலையில் கை வைத்தபடி சோகத்தில் ஆழ்ந்திருக்கிறாள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் மீண்டும் அவளிடம் ‘அந்தச் சகாதேவனுக்கும் ஒனக்கும் என்ன சம்பந்தம்’ என்று கேட்கிறான். மதிபாரதி சகாதேவனைப் பற்றி தன் மனத்தில் நினைத்து அசைபோடுகிறாள். சகாதேவன் ஓர் எழுத்தாளன். தான் ஒரு கவிஞர். அவ்வளவுதான் இலக்கியம் என்று வரும்போது கருத்துக்கள் ஒத்துப் போதலோ மாற்றுக் கருத்துக்கள் தோன்றுதலோ இயல்பு என்ற அளவில்தான் மதிபாரதி நினைத்துக் கொண்டிருக்கிறாள். சகாதேவனின் பார்வையிலும் அவ்வாறே இருக்கிறது. ஆனால், அவளைச் சுற்றியுள்ள மனிதர்களின் பார்வையில் நிறைந்த களங்கம் மதிபாரதியை யோசிக்க வைக்கிறது. மதிபாரதியின் எழுத்துக்கான முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கிறான் சகாதேவன். யதார்த்தமாக சகாதேவனும் மதிபாரதியும் பேசிக் கொள்வதற்கே சந்தேகப்படுகிறான் தீபக். ஆனால், அவன் செய்த துரோகத்துக்கு எந்தப் பதிலும் இல்லாமல் இரகசியமாக உறவைத் தொடர்கிறான். அந்தச் சனிக்கிழமைக்குப் பிறகு தீபக் மதிபாரதியை தொடவே இல்லை. அவளது வாழ்க்கை வேறு நிறத்துக்கு மாறுகிறது. மதிபாரதியின் கவிதைகள் இதழ்களில் தொடர்ந்து வெளியாக தீபக்கின் கோபமும் அதிகமாகிறது.

    “ஒனக்கு எழுதணும் நெறைய புகழ் கிடைக்கணும் உன் பேரும் போட்டோவும் எல்லா புக்குலையும் வரணும் ஏகப்பட்ட ஆம்பளைங்களோடு பேசணும், பழகணும் குறிப்பாக, உன் எழுத்து வாழ்க்கைக்கு எல்லாமுமா இருக்கிற அந்த சகாதேவன் இல்லாம உன்னால இருக்க முடியாதுல்ல” -(எழுத்தாளன்,ப.17).  என்று கூர்மையான சொற்களால் முள்போல் மதிபாரதியின் மனத்தில் குத்துகிறான் தீபக்.

    மதிபாரதி சகாதேவனிடம் பேசுவதற்காக கைப்பேசியில் அவனை அழைக்கிறாள். எதிர் முனையில் பேசிய சகாதேவன் தான் பேருந்தில் சொந்த ஊரான வேலூருக்குச் செல்வதாகக் கூறுகிறான். மதிபாரதி சத்தம் இல்லாமல் அழுது கொண்டே அவனிடம் பேசுகிறாள். “நான் லவ் மேரேஜ்தான் சார். தீபக் என் கணவர். ஆர்க்கிடெக்ட், மேரேஜ் ஆன அடுத்த வருசமே ட்வின்ஸ் பொறந்தாங்க. ரெண்டு பொண்ணுங்க. பெரியவங்களாகிட்டாங்க” -(எழுத்தாளன், ப.21).  என்று கூறுகிறாள். நீண்ட நாள்களாக தான் எழுதி வைத்திருந்த கவிதைகள் எல்லாம் சென்ற ஆண்டு தொகுப்பாக வந்ததாகவும், அப்போது எல்லாம் தீபக் தன்னை ஊக்கப்படுத்தியதாவும் கூறுகிறாள். ஆனால், கவிதை பேசப்பட்டதும் இலக்கியக் கூட்டங்களுக்கு தான் போகத் தொடங்கியதும் அவருக்குப் பிடிக்கவில்லை என சகாதேவனிடம் புலம்புகிறாள்.

    சகாதேவன் மதிபாரதிக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் பேசுகிறான். ஆனால், அவள் தன் அழுகையையும் வலிகளையும் தாங்கிக் கொண்டு, “நான் அழாம இருக்க கஷ்டப்பட்டுதான் இப்போ உங்ககிட்ட பேசிட்டிருக்கேன். படிச்சவர், காதலிச்சிக் கல்யாணம் பண்ணின புருஷன் இப்போ மொத்தமா மாறிப் போயிருக்கார். அன்னிக்கி உங்க புக்ஃபங்ஷனுக்கு வந்தேனே ஞாபகம் இருக்கா?” -(எழுத்தாளன், ப.21).  என்று சகாதேவனிடம் பேசுகிறாள். தன் கணவர் தீபக் இன்னொருத்தியுடன் தன் வீட்டில் ஒன்றாக இருந்ததையும் அது குறித்துக் கேட்டதற்கு தன்னையும் சகாதேவனையும் இணைத்துப் பேசியதையும் ஒன்று விடாமல் அவனிடம் ஒப்பிக்கிறாள். அவனும், உங்க வாழ்க்கையில் பிரச்சனை வருவதற்கு நானும் தெரிந்தோ தெரியாமலோ காரணமாக இருந்துருக்கேன் என வருத்தப்படுகிறான்.

    கணவன் தனக்குச் செய்த துரோகத்துக்குப் பதில் தானும் துரோகம் செய்யத் துணிகிறாள். அஃதாவது தன்னையே எழுத்தாளன் சகாதேவனிடம் ஒப்படைக்கிறாள். “சராசரி ஆம்பளைக்கு இருக்குற எல்லா ஆசையும் சராசரி பொம்பளைக்கும் இருக்கும்ல. அதேதான் எனக்கும் இப்போ வந்த ஒடனே கேட்டீங்கள்ல, அந்த மாதிரி ஒருநாள் கூட தீபக் என்கிட்ட இந்தப் பொடவையில் நல்லாருக்கேன்னு சொன்னதில்ல. லவ் பண்ணினப்போ இருந்த தீபக்கை நான் மேரேஜுக்கு அப்புறம் மிஸ் பண்ணிட்டேன். பொண்ணுங்களுக்கு எப்பவுமே ஒரு செக்யூரிட்டி தேவைப்பட்டுக்கிட்டே இருக்கும். அப்பா பாதுகாப்புல இந்த ஒலகத்தைக் கவனிச்சிட்டு அப்புறமா இன்னொரு ஆணோட பயணப்படுறதுன்னா அது புருஷனாத்தானே இருக்க முடியும். அப்பிடித்தானே இந்தச் சமூகம் சொல்லியிருக்கு. நாம இந்தச் சமூகத்துக்கு எதிரா எதுமே பண்ண முடியாது. யோசிச்சுப் பாருங்க. அப்படி எல்லாம் மறுக்கப்பட்ட நிலையில் ஒரு பொண்ணா நான் என்ன பண்ணியிருக்க முடியும். என் பொண்ணுங்க வாழ்க்கையை நெனச்சிப் பார்த்துதான் டைவர்ஸுக்கு சம்மதிக்கல. எனக்காகவும் கொஞ்சம் வாழணும்னு தோணுச்சி. நீங்க வந்தீங்க. என் மேல அன்பா இருந்தீங்க. அது காதலா மாறிச்சி. காமம் கலக்காட்டி காதல் ருசிக்காதுல்ல. அதான் படுத்துட்டேன்” -(எழுத்தாளன்,ப.50).  காலந்தோறும் பெண்கள் ஆண்களைச் சார்ந்தே வாழவேண்டியிருக்கிறது. முதலில் தந்தையின் கட்டுப்பாட்டில், அடுத்து கணவனின் கட்டுப்பாட்டில், அதன் பிறகு மகனின் கட்டுப்பாட்டில் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதைத்தான் மதிபாரதியின் கருத்தாகக் கணேசகுமாரன் பிரதி பலித்துக்காட்டியுள்ளார்.

    பெண்கள்

    ஆண், பெண் இருபாலரும் எந்தப் பருவத்தினராயினும் இருவரும் இணைந்துதான் சமூகம் உருவாகிறது. ஆண் சமூகம், பெண் சமூகம் எனப் பிரித்துப் பேசினாலும் இவை சமூகத்தின் அங்கங்களாகி இணையும் பொழுதுதான் முழுமை பெறுகிறது. ஆனால், சமூகத்தில் இருபாலரும் ஒத்த நிலையில் வைத்து எண்ணப்படுவதில்லை. ஆணுக்குப் பெண் தாழ்ந்தவள் கட்டுப்பட்டவள் என்ற எண்ணமே சமூகத்தில் வேரோடி நிற்கிறது. இதனால், சமூகத்தில் பெண்கள் பல்வேறு நிலைகளில் இழிவுக்குள்ளாக்கப்படுகிறார்கள். இந்நிலை அகற்றப்பட வேண்டும் என்பதே சமூகச் சீர்திருத்தவாதிகளின் எண்ணமாகும்.

    எழுத்தாளன் புதினத்தில் இடம்பெரும் பெண் கதைமாந்தர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்களால் புறக்கணிக்கப்படக் கூடியவர்களாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். சகாதேவனின் மனைவி ஜெயந்தி, மகள் தமிழ். தீபக்கின் மனைவி மதிபாரதி என்கிற ஜெயலட்சுமி இவர்களின் மகள்கள் (இரட்டையர்) இருவர். சண்முகத்தின் மனைவி சரிதா, மகள் தர்ஷனா. சண்முகத்தின் காதலி உமா.

    ஜெயந்தியைத் திருமணம் செய்து கொண்ட சகாதேவன் சில காலம் அவளுடன் தன் உடல்பசியை மட்டுமே தீர்த்துக் கொள்பவனாக வாழ்கிறான். பின்பு சென்னைக்குச் சென்று எழுத்தாளனாகப் பிறரால் அடையாளம் காணப்பட்டதும் தன் மனைவியின் நினைவே இல்லாமல் இருக்கிறான். இந்தக் காலகட்டத்தில்தான் கவிஞர் மதிபாரதியுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு அவளுடன் அடிக்கடித் தங்கும் விடுதிகளில் காம விளையாட்டில் ஈடுபடுகிறான். திருவள்ளுவர்,

    பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
    அறனொன்றோ
    ஆன்ற ஒழுக்கு”  6

    என்று உரைக்கின்றார். அஃதாவது பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று, நிறைந்த ஒழுக்கமும் ஆகும் என்கிறார். ஆனால், பெண்கள் குறித்து உயர்வாக எழுதும் எழுத்தாளன் சகாதேவன் இன்னொருவன் மனைவி எனத் தெரிந்தும் மதிபாரதியுடன் கூடிக் குலவுகிறான்.

    தீபக், தன் மனைவி மதிபாரதி கவிதை எழுதக் கூடாது எனக் கண்டிக்கிறான். ‘நீ எழுதுறது எனக்குப் பிடிக்கலைனு சொல்றேன். எழுதுறதை நிறுத்திடு. எனக்குப் பொண்டாட்டியா இருந்தா மட்டும் போதும்’ எனக் கூறுகிறான். மதிபாரதியின் எழுத்துச் சுதந்திரத்தைக் கூடப் பறிக்க நினைக்கிறான் தீபக். பெண் என்பவள் தனக்காக வாழாமல் தன் கணவனுக்காக மட்டுமே வாழவேண்டும் என்பதை இக்கூற்று தெளிவுறுத்துகிறது.

    சண்முகம் என்பவன் ‘உமா’ என்ற பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால், அவனது பெற்றோர் அவனைக் கட்டாயப்படுத்தி சரிதா என்ற பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். தாலி கட்டிய நாள் முதல் அவளை ஒரு மனுஷியாகக்கூட  ஏற்றுக் கொள்ளாமல் அவளுடன் வாழ்கிறான். ஒரு நாள் பெசன்ட் நகர் பீச்சுக்கு சரிதாவை அழைத்துச் சென்று அவளிடம் உரையாடுகிறான்.

    “நமக்கு நடந்தது அரேஞ்சுடு மேரேஜ். நம்ம ஃபர்ஸ்ட் நைட்ல பெருசா எதுவும் ஷேர் பண்ணிக்கல. இப்போ சொல்றேன். என்னோட பாஸ்ட்ல ஒரு லவ் இருக்கு. கல்யாணம்னு என் அப்பா கம்பெல் பண்ணினப்போ அந்தக் காதலுக்கு குட்பை சொல்லிட்டுத்தான் வந்தேன். எனக்கு அமையற பொண்டாட்டி கிட்ட நாம உண்மையா இருப்போம்னுதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். நான் எதிர்பார்த்த மாதிரி எதுவும் நடக்கல. ஒய்ஃபும். உன்னைத் தப்பா சொல்லல” -(எழுத்தாளன்,ப.44-45).  தனக்குப் பிடித்தது போல் இல்லை என்பதற்காகவே சரிதாவைப் புறக்கணிக்கிறான். அவள் தனக்காக வாழாமல் தன் கணவனுக்காகவே வாழ்கிறாள். இருந்தும் அவளை வெறுத்து ஒதுக்கும் இழி குணம் கொண்டவனாகவே சண்முகம் படைக்கப்பட்டிருக்கிறான்.

    விவாகரத்து

    தம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சனைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக் கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம்ஒத்த தம்பதிகள் அப்படித்தான் செய்வர். ஆனால், குறிப்பிட்ட ஒருவரே தொடர்ந்து விட்டுக் கொடுக்க முடியாது. மட்டுமின்றி விட்டுக் கொடுக்கவே இயலாத விடயம் ஏதும் ஒன்று பிரச்சினையாகி அதன் மூலம் மனத்தாங்கல் ஏற்பட்டு இனிச் சேர்ந்து வாழவே இயலாது போனால்…. பிரிவதைத் தவிர வேறு வழி இல்லை. இந்நிலையில் மனம் ஒத்துப் போகாத தம்பதியர் அரசு அனுமதியுடன் அதிகாரப் பூர்வமாக பிரிதலே விவாகரத்து. ஆங்கிலேயர் வருகையால் நமது பண்பாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் ஏற்பட்டுள்ள பெரும் மாறுதல்களுள் ஒன்று சட்டப்படி விவாகரத்து பெறுதல். நம் நாட்டில் விவாகரத்து பெறுவது எளிதல்ல. அதில் ஏகப்பட்ட விதிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் தக்க காரணங்கள் காட்ட வேண்டும். ஒரு குடும்பம் பிரிந்தால் அஃது அந்தக் குடும்பத்தை மட்டுமல்ல, சமூகத்தையும் நாட்டையும் பாதிக்கிறது. எனவே, நமது சட்டம் கூடியவரை விவாகரத்து ஏற்படுவதைத் தவிர்க்கவே விரும்புகிறது. ஆனால், சட்டத்தின் துணை கொண்டு மணவிலக்குப் பெறாமலே பிரிந்து வாழ்வதும் இன்றைய தமிழ்ச் சமூகத்தில் பல்கிப் பெருகி வருகின்றது.

    மரபுத் திருமணம் செய்து கொண்ட சண்முகம் – சரிதா தம்பதியர் வாழ்வில் விரிசல் ஏற்படுகிறது. திருமணமான ஓர் ஆண்டிற்குள்ளேயே அவளை விட்டுப் பிரிய நினைக்கிறான் சண்முகம். அவள் தன் வயிற்றில் சண்முகத்தின் கருவைச் சுமந்து கொண்டிருக்கிறாள். “நீ கன்சீவா இருக்கிறேன்னு சொன்னப்போ எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. ஏன் இவ்ளோ அவசரமா நடக்குதுன்னு எனக்கே என்மேல கோபமாதான் இருந்துச்சி. ஒனக்கு அடுத்த மாசம் டெலிவரி. அதுவரைக்கும் நான் உன்கூட இருக்கேன். முறைப்படி டிவோர்ஸ் அப்ளை பண்ணி ஒன் இயர் வெயிட் பண்ணி அதுக்கப்புறம் ஃபார்மாலிட்டீஸ்லாம் முடிச்சிட்டுப் பிரியறதுக்கு அடுத்த மாசமே பிரிஞ்சிடலாம். எனக்கும் உமாவுக்கும் நெக்ஸ்ட் இயர் மேரேஜ் நடந்திடும். நான் உன் லைஃப்ல எந்த விதத்திலும் க்ராஸ் பண்ண மாட்டேன். என் பேரன்ட்ஸை நான் கன்வின்ஸ் பண்ணிக்குவேன். உங்க அப்பா அம்மாகிட்டவும் நான் பேசுறேன். நான் இவ்ளோ தைரியமா முடிவெடுக்குறதுக்குக் கூட நீதான் காரணம். உன்னால் எதையும் ஃபேஸ் பண்ண முடியும்ங்கிறதைத்தான் இந்த ஆறு மாசம் பார்த்தேன். உனக்குப் பணமா எந்த ஹெல்ப் வேணும்னாலும் நான் பண்றேன். நாம பிரிஞ்சிடலாம்” -(எழுத்தாளன்,ப.45).  என்று சண்முகம் கூறியதைக் கேட்ட சரிதா விவாகரத்துக்குச் சம்மதிக்கிறாள். பின்பு அவளுக்கு தர்சனா என்ற பெண் குழந்தை பிறக்கிறாள். அதன் பிறகு ஆண்கள் மீது நம்பிக்கை இல்லாமல் தன் மகளுடன் தனியாகவே வாழ்ந்து வருகிறாள். சரிதாவின் பெற்றோர் அவளை வேறொரு திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியும் அவள் மறுத்து விடுகிறாள். எட்டு வருடங்களுக்குப் பிறகு சகாதேவனின் கவிதைகளைப் படித்து அவனுடைய இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்கிறாள். அவனது எழுத்துக்கள் பெண்கள் பிரச்சனைகளை அவர்களே எழுதுவது போல் உள்ளது. இதன் காரணமாகவே சகாதேவனின் எழுத்துக்களை உயிர்ப்புடன் நேசிக்கும் வாசகியாகிறாள். சகாதேவனின் எழுத்துக்களில் ஒன்றி விட்ட சரிதா அவனையும் அவனது எழுத்துக்களையும் விமர்சிக்கும் விமர்சகியாகவும் மாறுகிறாள்.

    காதலித்து மணம் புரிந்து கொண்ட தீபக் தன் மனைவி ஜெயலெட்சுமியை (மதிபாரதி) விவாகரத்து செய்ய நினைக்கிறான். ஆனால், அவள் தன் இரண்டு மகள்களின் எதிர்காலத்தை நினைத்து பிரிய மறுக்கிறாள். ஒரு நாள் மதிபாரதி தன் கவிதைகள் குறித்து சகாதேவனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள். அப்போது சகாதேவன் ‘நீங்கள் எழுதித்தான் தீரணும்னா அதுக்கு சில விலை தந்துதான் ஆகணும்’ என்கிறான். அதற்கு அவள், “இல்லைங்க. அதெல்லாம் தாண்டியாச்சி, டைவர்ஸ் வரைக்கும் போய் நிக்குது” -(எழுத்தாளன்,ப.21).  என்கிறாள். எந்தச் சூழலிலும் திருமண உறவினை முறிக்கக்கூடாது என்று பெண்களின் உள்ளத்தில் ஊறிப் போன சமூக மரபு முழுவதுமாக நம்பிக்கையற்றதாய், பயனற்றதாய்ப் போய் விடவில்லை என்பதையே மதிபாரதியின் செயல்பாடு காட்டுகிறது.

    மதுப் பழக்கம்

    பெரும்பான்மையான படைப்பாளிகளும் சரி கலைஞர்களும் சரி இந்த ‘மது’ என்னும் அரக்கனின் பிடியில் இருந்து தப்பித்ததாக வரலாறு என்பது இதுவரை இல்லை. கவிஞர்களுக்கும், கலைஞர்களுக்கும் மது என்பது ஒரு சாபக்கேடு என்பதில் எள்ளின் முனைஅளவுகூட சந்தேகம் இல்லை. “மது அருந்தும் பழக்கம் நம் நாட்டில் சங்ககாலந்தொட்டு இன்று வரை நிலவி வருகின்றது. இன்று இல்லங்களில், காப்பி, தேநீர் மற்றும் பலவகை சத்துணவுப் பானங்கள் அருந்தப்படுவது போல அன்று மது தமிழரின் வாழ்விலும் இன்ப துன்பங்களிலும் இடம் பெற்றாலும் பெரும் சிக்கல்கள் உருவானதாகத் தெரியவில்லை”7 ஆனால், இன்று மது அருந்தும் பழக்கம், சூது, மாது, போதைப்பொருள் எனப் பல்வேறு ஒழுக்கக் கேடுகளுக்கு அழைத்துச் செல்கிறது.

    சகாதேவன் ஓர் இலக்கிய நிகழ்வுக்காக சேலம் செல்கிறான். பேருந்து நிலையம் அருகில் அறை எடுத்துச் சக எழுத்தாளர்களான பாரதி நேசன், ராம், கௌரவன் ஆகியோருடன் தங்குகிறான். காலை, மதியம் இலக்கிய நிகழ்வு முடிந்து அருகிலேயே அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். அன்று இரவு சகாதேவன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துகிறான். “இரவு சக எழுத்தாள நண்பர்களுடன் மது அருந்தினான் சகாதேவன்” -(எழுத்தாளன்,ப.28).  மதுபோதை தலைக்கு ஏறியதும் அவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. சகாதேவன் ராமைப் பார்த்து, “என்ன ராம்…. பெக் அதிகமாகிடுச்சோ” -(எழுத்தாளன்,ப.28)  என்று கேட்கிறான். பிறகு கலவரம் அதிகமாகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். அன்று  இரவே பக்கத்து அறையில் தங்கியிருக்கும் மதிபாரதியை அழைத்துக் கொண்டு வெளியேறுகிறான் சகாதேவன். “அளவோடு இருந்தால் குடிப்பழக்கமும் தவறானதன்று; அளவுக்கு மீறினால் தவறு”8 என்று ஜெயகாந்தன் கூறும் கருத்து இவ்விடத்தில் ஒப்புநோக்கத்தக்கது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குடிப்பழக்கத்திற்கு ஆளானோர் அளவோடு நிற்பதில்லை என்பதை மேற்காணும் நிகழ்வு படம்படித்துக் காட்டுகிறது.

    முடிவுரை

    ஒரு சமூகத்தை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நியாயமாகவும் நேர்மையாகவும் கடத்திச் செல்பவனே சிறந்த எழுத்தாளன் ஆகிறான். இப்புதினத்தில் முதன்மைக் கதைமாந்தனாக வரும் எழுத்தாளன் சகாதேவன் சுயக்கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் இல்லாதவனாகவே இருக்கிறான். புதினத்தின் தொடக்கத்தில் இருந்து கடைசி வரை தான் ஓர் ஆண் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறான் சகாதேவன். வரிக்கு வரி நான் ஓர் ஆண், நான் ஓர் ஆண், நான் அடுத்தவன் மனைவி கூட இருப்பேன் அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை ஏனென்றால் நான் ஒரு ஆண் என்பதாகவே இக்கதை நகர்கிறது. தன் மனைவி ஜெயந்தி தன்னுடைய எழுத்தை இரசிக்கவில்லை என்பதற்காகவே சகாதேவன் அவளைக் குற்றப்படுத்துகிறான். சகாதேவன் எல்லா இடங்களிலும் தன்னை நியாயப்படுத்துகிறான். தன் மனைவி ஜெயந்திக்குத் தெரியாமல் வேறொருவன் (தீபக்) மனைவியுடன் (மதிபாரதி) தவறான உறவை ஏற்படுத்தி வாழ்ந்து வருகிறான். அது குறித்த எந்தக் குற்ற உணர்ச்சியும் அவன் மனத்தில் இல்லை.

    இரண்டு மகள்களோடு வாழ்க்கையில் தடுமாறும் மதிபாரதியை நற்கருத்துக்கள் கூறி நல்வழிப்படுத்தாமல் தன்வயப்படுத்தி தன் இச்சையைத் தீர்த்துக்கொள்கிறான் சகாதேவன். இந்தச் சமூகத்தில் ஓர் ஆண் தனியாக வாழ்ந்து விடலாம். ஆனால், ஒரு பெண் தனியாக வாழ முடியாது. அதனால்தான் மதிபாரதியின் கணவன் தீபக் நாம் இதிலிருந்து பிரிந்து விடலாமா? எனக் கேட்கும் போது அவள் மறுத்துவிடுகிறாள். அவள் விவாகரத்து செய்தால் தன் இரண்டு மகள்களோடு தனியாக வாழ முடியாது. அப்படியே தனித்து வாழ்ந்தாலும் இந்தச் சமூகம் அவளை அடங்காப்பிடாரி, மோசமானவள் எனக் கூறலாம். கணவன் தீபக் வேறொரு பெண்ணுடன் இருப்பதைப் பார்த்த மதிபாரதி மனம் கலங்கி, பின்பு தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு, கணவனைப் பழிவாங்கும் நோக்கில் இன்னொருத்தியின் கணவனைத் தேடிப் போகிறாள்.

    மதிபாரதி தான் வேறொரு ஆணுடன் (சகாதேவன்) இருப்பதைப் பற்றி கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாதவளாகவே இருக்கிறாள்.  சரிதா தன் கணவனை விவாகரத்து செய்து, தனியாக தன் மகளுடன் வாழும் போதும் சுயமரியாதை உள்ளவளாகவும், ஒழுக்கம் மிக்கவளாகவும் வாழ்ந்து வருகிறாள்.

    எழுத்தாளர்கள் என்பவர்கள் பெருங்குடிகாரர்கள் என்பதை இப்புதினத்தின் கதைமாந்தர்கள் வழி கணேசகுமாரன் புலப்படுத்தியுள்ளார். முந்நாளில் பெண்கள் திருமணம் ஆகும் வரை பெற்றோருக்கும், திருமணம் ஆனபின் கணவனுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். ஆனால், இந்நாளில் அவர்கள் தாங்களாகவே பொருள் தேடவும், சிந்திக்கவும், செயல்படவும் தொடங்கிவிட்டார்கள் என்பதை இப்புதினம் வழி அறியமுடிகிறது.

    *****

    குறிப்புகள்

    1. இரா.தண்டாயுதம், சமூக நாவல்கள், ப.25
    2. க.கைலாசபதி, தமிழ் நாவல் இலக்கியம், ப.116
    3. தா.வே.வீராசாமி, தமிழில் சமூக நாவல்கள், பக்.3-4
    4. எஸ்.ஜெ.பாஸ்கல் கிஸ்யாட், சமூகவியலின் அடிப்படைக் கோட்பாடுகள், ப.1
    5. அகநானூறு, பா.12:4-5
    6. திருக்குறள், 148
    7. ச.பரிமளா, சங்கத் தமிழர் வாழ்வில் தேறல் (ஆய்வுக் கோவை-1), இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றம், பக்.372-377
    8. கரு.முத்தையா, ஜெயகாந்தன் நாவல்களில் பாத்திரப்படைப்பு, ப.378

    *****

    கட்டுரையாளர்
    உதவிப் பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    அ.வ.அ.கல்லூரி (தன்.),
    மன்னன் பந்தல்,
    மயிலாடுதுறை.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (82)

    நிர்மலா ராகவன்

    வயதாகிவிட்டதா? அதனால் என்ன!

    நலம்

    `ஆண்களிடம் சம்பளமும் பெண்களின் வயதையும் கேட்கக்கூடாது!’

    சிறு குழந்தைகள் தம் வயதைவிட ஒன்றிரண்டைக் கூட்டிச் சொல்வார்கள், பெருமையுடன். பிறர் தம்மை ஒரு பொருட்டாகக் கருதமாட்டார்களோ என்ற பயம்தான் காரணம்.

    ஒரே கவலை

    பொதுவாகவே, வயதாக ஆக, நாம் மரணத்தின் அருகில் இருக்கிறோமே என்ற கவலை பலருக்கும் வந்துவிடுகிறது. அதனால், இன்று உயிருடன்தானே இருக்கிறோம் என்று திருப்தி அடைய முடியாது போகிறது.

    சிலருக்குத் தம் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் மனைவிதான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. தமக்கு வயதாகிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள இவர்களுக்கு மனமில்லை.

    `நான் முன்பெல்லாம் இப்படியா பலகீனமா இருந்தேன்! எல்லாம் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டதால்தான்!’ என்று மனைவியிடம் பாய்வார்கள் — நாற்பது வருட `இல்லறத்துக்கு’ப்பின்!

    “எனக்கு முடி நரைக்க ஆரம்பித்துவிட்டது. அவமானமாக இருக்கிறது!” என்றாள் என் சக ஆசிரியை பரம்ஜித் கௌர்.

    “இதில் அவமானமென்ன! உதிர முடி இருக்கிறதே என்று திருப்தி அடைய வேண்டியதுதான்!” என்றேன் அவளுக்கு ஆறுதலாக.

    நடையில் தளர்ச்சியா? நடக்கவாவது முடிகிறதே என்று சந்தோஷப்படுக்கொள்ளலாமே!

    ஐம்பது வருடங்களுக்குமுன் ஒருவர் பதவியிலிருந்து விலகி ஓய்வு பெறும்போது, நண்பர்கள் எல்லாரும் கைத்தடிதான் பரிசாக அளிப்பார்களாம்.

    இன்றோ!

    தள்ளாடி நடந்து, எப்போது விழுந்துவிடுவாளோ என்ற பயத்தைப் பார்ப்பவருக்கு அளிக்கும் என் உறவினரிடம், “ஒரு தடி வைத்துக்கொள்ள மாட்டாயோ!” என்றேன், கரிசனத்துடன்.

    “வயசானவள்னு நினைச்சுடுவாடி!” என்றாள். அவளுடைய பேரனுக்குக்கூட கல்யாணம் நடந்திருந்தது!

    வயதானதில் பெருமை

    சிலர் `எனக்கென்ன! வயசானவன்!’ என்று அடிக்கடி கூறுவார்கள். பெருமையாக. தம்மை எல்லாரும் மதித்து நடத்த வேண்டும், தாம் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுடைய குரலில் இருக்கும். அந்த எண்ணம் ஏமாற்றத்தில்தான் முடியும்.

    வயதானால் அனுபவங்கள் நிறைய இருக்கலாம். ஆனால், மாறிக்கொண்டே இருக்கும் காலத்தில் அவர்களுடைய அதிகாரத்தை எத்தனை இளையவர்கள் ஏற்பார்கள்?

    கதை

    தொண்ணூறு வயதான மீனாட்சி பாட்டி படுக்கையிலேயேதான் நாட்களைக் கழிக்க வேண்டியிருந்தது.

    ஒரு முறை, சிறுவனான பேரன் கையைச் சொறிந்தபடி பெரிதாக அழ, “பூச்சி கடிச்சிருக்கும். புளியை ஜலத்திலே கெட்டியா கரைச்சுத் தடவினால் சரியாப் போயிடும்!” என்றார்.

    உடனே குணம் தெரிந்தது. எக்காலத்திற்கும் ஏற்றதாக இருப்பவைகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.

    `எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்..’ என்பதைக் கடைப்பிடிப்பவர்கள் தகுந்த அறிவுரைகளைப் பின்பற்றி பலன் அடைகிறவர்கள்.

    தவிர்க்க முடியாதது

    மனிதனாகப் பிறந்த எவருமே தாமும் ஒரு நாள் முதுமை அடையப்போகிறோம் என்பதை உணரத் தவறிவிடுகிறார்கள். இளமையில் முதியவர்களைப் பார்த்துக் கேலி, இளக்காரம். அவர்களுடைய அறிவுரையோ, `தொணதொணப்பு’.

    அவர்களே முதுமை அடையும்போது, `எத்தனையோ சொன்னார்கள். நான் கேட்கவில்லை!’ என்ற வருத்தம்தான் மிஞ்சும்.

    அதிகாரம் செலுத்தாது, கட்டுப்படுத்த நினைக்காது குழந்தைகளுடனும் இளையவர்களுடனும் பழகினால், இளமைக்கே உரிய உற்சாகம் பிறரையும் தொற்றிக்கொள்ளும்.

    அலட்சியமும் இலட்சியமும்

    இருபது வயதை எட்டும் இளைஞர்கள் இலட்சியவாதிகளாக இருக்கிறார்கள். வயது ஏற, ஏற, உலகின் போக்கு பிடிபட்டுப்போகிறது. அதனால் கசப்பு ஏற்படலாம். அவர்களைப் பாதித்தவைகளைக் கண்டு அலட்சியம் மிக, சுயநலவாதிகளாக மாறுகிறார்கள்.

    காலங்கடந்த வருத்தம்

    பழையதொரு புத்தகத்தைப் புரட்டிப் பார்ப்பதைப்போல, தாம் வாழ்ந்த காலங்களை அசைபோடும்போது, எத்தனையோ கைகூடாத லட்சியங்களும், கனவுகளும் பெரிதாகப் புலன்படும். அவைகளை நினைத்து வருந்தினால் முதுமையின் பாதிப்புதான் அதிகரிக்கும். எவ்வளவு ஆசைப்பட்டாலும், எத்தனை முயற்சிகள் எடுத்தாலும், இளமை என்னவோ திரும்பிவிடப் போவதில்லை.

    கதை

    எனது நெருங்கிய தோழி ஒரு மருத்துவ நிபுணர். `இதில் கால்சியம், இதில் புரோதச்சத்து,’ என்று பார்த்துப் பார்த்துச் சாப்பிடுவாள். குதிரையேற்றத்திலிருந்து ஏதேதோ உடற்பயிற்சிகள் வேறு.

    எழுபது வயதை எட்டியதும், “என்னதான் கவனமாக இருந்தாலும், முதுமையைத் தோற்கடிக்க முடியாது!” என்றாள் விரக்தியுடன். “இன்னும் எதற்கு தலைமுடிக்குக் கறுப்புச் சாயம்!”

    தோற்றத்தில் முதுமையை ஏற்றவுடன் மனமும் தெளிவடைய, ஆன்மிகத்திலும் சமூக சேவையிலும் நிறைவு காண்கிறாள். எதையாவது புதியதாகக் கற்றுக்கொண்டே இருப்பது மனதை, அதன்மூலம் உடலையும், இளமையாகவே வைத்திருக்கும்.

    உலகில் இருக்கும் எல்லா அவலங்களையும் ஒருவரால் ஒழிக்க முடியாவிட்டாலும், ஒத்த மனதுடையவருடன் இணைந்து ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யலாமே! வாழ்விலும் ஒரு பிடிப்பு ஏற்பட இது நல்ல வழி.

    `வண்டி’ ஓடும்வரை

    வயதானதால் உடல் சற்றுத் தளரலாம். ஆனால், மனதையும் தளரவிடுவது உயிர் இருக்கும்போதே இறப்பதுபோல்தான்.

    “உயிரை நடத்திச்செல்லும் வாகனம் உடல்,” என்கிறார்கள். நம்முடைய வாகனம் ஒன்று சற்று பழையதாகிவிட்டால், அதில் அடிக்கடி கோளாறு உண்டாகிறதல்லவா? தூக்கியா ஏறிந்துவிடுகிறோம்? நம் உடலும் அப்படித்தான். நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்க முடியாது. அதைப்பற்றியே சிந்தனையை ஓடவிடாது, பிறரிடமும் நம் `போதாத காலத்தை’ப்பற்றிப் பேசாது இருந்தாலே வியாதிகளும் நம்மைப் பார்த்து அஞ்சி விலகும்.

    ஞாபகசக்தி குறைவா? பழைய கஷ்டங்களும் மறந்திருக்குமே!

    `என்னாலே ஒண்ணுமே முடியலே!’

    இப்படிச் சொல்வது சோம்பலின் அறிகுறியா, இல்லை, `உன் வயதுக்கேற்றபடி நட!’ என்று யாராவது கூறிவிடுவார்களோ என்ற பயமா?

    ‘உன்னால் எதையும் சரியாகச் செய்ய முடிவதில்லை. மறந்து, மறந்து போய்விடுகிறாய்! ஒதுங்கி இருந்து, நடப்பதை வேடிக்கை பார்!’ என்பது கொடுமை.

    நம்மால் இயன்றதை சிரத்தையுடன், சற்று சிரமப்பட்டாவது செய்யலாமே!

    இந்த வயதிலுமா `பிறர் பழிப்பார்களே!’ என்று அஞ்சி நடக்கவேண்டும்?

    கதை

    எனக்குச் சற்று பரிச்சயமாகி இருந்த லிண்டாவிடம் அவள் வயதைக் கேட்டேன்.

    சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “ஐம்பத்து ஏழு!” என்றாள் ரகசியக்குரலில். அதற்கு முன்பு, `நான் எப்போது ஷாப்பிங் போனாலும், லிப்ஸ்டிக் வாங்குவேன்!’ என்று தெரிவித்திருந்தாள் மகிழ்ச்சியுடன்.

    லிண்டாவற்குப் பேரக்குழந்தைகள் இருந்தார்கள். அதனால் என்ன! வயதானதால் மட்டும் ஒருவர் தம் விருப்பு வெறுப்புகளுக்குத் தடை விதித்துவிட வேண்டுமா?

    தனக்கு இளமையில் கைகூடாமல் போன ஆசைகளை உயிர் இருக்கும்போதே நிறைவேற்றாமல், `அடுத்த ஜன்மத்தில் பார்த்துக்கொள்ளலாம்!’ என்று ஒத்திப்போடுவார்களா யாரேனும்?

    உலகின் போக்கு

    நான் சந்தித்த மலாய் ஆசிரியைகளின் வயதைக் கேட்டால், `நாற்பதுக்கு மேலே!’ என்று பூசி மெழுகுவார்கள்.

    41? 50? 100?

    எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மீதியை நம் கற்பனைக்கு விட்டுவிட வேண்டியதுதான்.

    அவர்களைத் துளைத்து, தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவானேன் என்ற பெரிய மனதுடன் யாரும் மேற்கொண்டு கேட்கமாட்டார்கள்.

    பி.கு: என் வயதுதானே?

    அது ஆச்சு, மூணு கழுதை வயசு! (ஒரு கழுதையின் ஆயுட்காலம் எத்தனை என்று ஆராய்வது உங்கள் பாடு!).

    தொடருவோம்

    Share
  • தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்

    -இல.மேனகா

    menakaபெண்ணியம் என்பது பெண்ணின் சமூக நிலையை மறுமலர்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. இது பாலினப் பாகுபாடு தொடர்பான சமூகப்பண்பாட்டு வேர்களை இனம் கண்டு கொள்ளவும், குறிப்பாக பெண்களுக்கு எதிரான அடக்குமுறை, சுரண்டல் முறையை உணர்ந்து கொள்ளவும் பெண்ணியம் தெளிவான வரையரை அளிக்கிறது. இது ஆணிய பண்பாட்டுக் கட்டமைப்பில், பாலிய உருவாக்கம் ஊடுருவியிருப்பதையும்,  அதனால் பழைய மதிப்பீடுகள், புதிய பண்பாட்டு மதிப்பீடுகளால் எத்தகைய மாற்றத்தைப் பெறுகின்றன என்பதையும் நன்கு அறிய உதவுகின்றது. இவற்றைத் தொல்காப்பியம், சங்கஇலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், காவியங்கள், புராணங்கள், நவீனஇலக்கியங்கள் வழி பெண்ணியச் சிந்தனைகளை முன்வைத்து இக்கட்டுரைப் படைக்கப்படுகிறது.

    சங்க இலக்கியத்தில் பெண்ணியக்கூறுகள் 

    தமிழ் இலக்கியத்தின் தொன்மையான நூல்களில் ஒன்றான தொல்காப்பியம் ஆண்களின் நிலை குறித்து,

    “பெருமையும் உரனும் ஆடூஉமேன”          (தொல்-களவு-நூற்7) என்று பெருமையும், வலிமையும் ஆணுக்குரிய பண்புகளாகவும்,

    “அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
    நிச்சமும்   பெண்பாற் குரிய”                     (தொல்-களவு-நூற்8) இவை பெண்ணுக்குரிய பண்புகளாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது அச்சம், மடம், நாணம் இவையெல்லாம் பெண்ணுக்குரிய குணங்களாக தொல்காப்பியம் கூறுகின்றது. மேலும் “கற்பு” என்பது பெண்ணிற்கு கட்டாயமாக்கப்படுகிறது.

    பெண்களின் உரிமை  சங்ககாலத்தில் தடை செய்யப்படவில்லை. பெண்கள் கல்வி கற்று, நன்கு புலமை பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். மேலும் சங்க இலக்கியமானது பெண்களின் நிலையினை பலவாறாக கூறுகின்ளது. அஃதாவது,

    “பெண் பிறவி இழிவுக்குரியது” என்று யாரும் கருதவில்லை    (ஐங்;:257)

    “மணக்கொடை(வரதட்சணை) கொடுமை இல்லை”         (அகம்:280)

    “நல்லிற்பாவையன்ன நல் லோற் கணவன்”                   (பதிற்றுப்பத்து61)

    “மறுவில் கற்பின் வாணுதல் கணவன்”      (திருமுருகாற்றுப்படை:அடி 6)

    என்றவாறு பெண்ணுக்குப் பெருமை தேடித்தரும் வகையில் சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். சங்ககாலத்திலும் பெண்ணிற்கு கற்பு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆணைத் தலைமையாகக் கொண்ட குடும்பம் வரவேற்கப்பட்டது.

    திருக்குறள் வழி அறியலாகும் பெண்ணியம் 

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறள் பெண்ணியம் பேசுகிறது. அஃதாவது,

    “மனைத் தக்க மாண்புடையாளாகித் தற்கொண்டாள்
    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை”             (குறள்:7)

    என்கிறது. அதாவது குடித்தனத்துக்கு ஒத்த பெருமையுடையவளும், தன் கணவனுடைய வருவாய்க்குத் தக்கபடி செலவு செய்கிறவளுமான மனைவியே சரியான வாழ்க்கைத் துணைவி என்கின்றார் வள்ளுவர். மேலும், 

    “பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
    திண்மை  உண்டாகப் பெறின்”                   (குறள்:54)

    அதாவது கற்பு என்ற மன உறுதியுள்ள பெண்ணைக் காட்டிலும் பெருமை தரக்கூடிய பொருள் இவ்வுலகத்தில் வேறு என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை என்கிறார். மேலும் இவர் குடும்பம், கற்பு இரண்டும் பெண்ணிற்குத் தேவை என்றும் வலியுறுத்துகின்றார்.

    இடைக்காலத்தில் பெண்களின் நிலை

    நீதி நூல்களிலிருந்து காப்பியத்திலும் அறவழி வாழ்க்கை நடத்தல், இல்லறத்தைப் பேணிக்காத்தல், கலைகளைத் தெய்வமாக வழிபடல் ஆகியன பெண்ணின் கடமைகளாக வரையறுக்கப்பட்டிருந்தன. ஆண்கள் குடும்ப வளத்தைக் காக்கக் கூடிய நிலையில் கற்புடன் திகழும் பெண்களைத் தெய்வமாகக் கருதினர். ஆனால் பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் புராணகாலத்தில் பெண்களின் நிலை மேலும் தாழ்வடைந்தது.

    பக்தி காலத்தில் சமயங்களின் எழுச்சியால் சாதிக்கட்டுப்பாடுகளை மீறிப் பெண்கள் கோவில் வழிபாடு, விருந்தோம்பல், சமூகப் பணிகளில் கலந்து கொள்ளுதல் ஆகியவற்றை மேற்கொண்டனர். அரச, பிராமண, வேளாளர் குலப் பெண்கள் சமய வாழ்வில் பங்கேற்றனர். அதற்குப் பின்னர் சிற்றிலக்கியங்களில் ‘பதிவிரதை’ என்ற கொள்கையை வரையறுத்தலோடு பெண்ணைப் பாலியல் பொருளாகக் கருதினர்.

    நவீன இலக்கியத்தில் பெண்கள் 

    மேலை நாடுகளில் தோன்றிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஆகியன இந்தியாவில் ஆங்கிலக்கல்வியின் வரவால் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றை இலக்கியங்கள் எடுத்துக்காட்ட முனைந்த போது தான் பெண்முன்னேற்றமும் முளைவிடத் தொடங்கியது.

    தமிழில் முதன்முதலில் எழுந்த புதினம் வேத நாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’(1879). அந்நாவலைத் தொடர்ந்து வந்த மாதவையாவின் ‘பத்மாவதி சரித்திரம்’(1898) என்ற இவ்விரண்டு நாவல்களும் பெண்கல்வி,  விதவை மறுமணம், முதலியவற்றைப் பற்றி பேசுகின்றது.

    “தமிழின் முதல் நாவலாசிரியராகத் திகழ்வதற்கு முனிசீப் வேதநாயகம் பிள்ளையிடத்திருந்த தகைமைகள் பெண் விடுதலை இயக்கம், சன்மார்க்க நெறிப்பிரச்சாரம், சமூக சீர்திருத்தம் போன்ற துறைகளில் அவருக்கிருந்த ஈடுபாடு ஆகியவை வேத நாயகம் பிள்ளையின் பெண் விடுதலை உணர்வைத் தோற்றுவிக்கக் காரணிகளாக இருந்தன”1 என்று கா.சிவத்தம்பி கூறுகின்றார்.

    தமிழகப் பெண்ணிய முன்னோடிகள் 

    தமிழ் இலக்கியத்தில் பெண்களின் நிலையை மாறுபட்ட கண்ணோட்டத்தில் எடுத்துக் கூறியவைகளுள் தேசியப் போரட்டக் காலத்தைச் சேர்ந்த பாரதியாரும், பெரியாரும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

    பாரதியார் 

    தேசியப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற பாரதியார் பெண் கல்வி, பெண் விடுதலை குறித்து எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கியத்தில் பெண்ணியக் கூறுகளை அறிவதற்கான சான்றுகளாகத் திகழ்கின்றன.

    “நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்”  (புரட்சிப்பெண் – பா.எ.4) என்று சாடுவதோடு நில்லாமல்,

    “மாதர் தம்மை இழிவு செய்யும்
    மடைமையைக் கொளுத்துவோம்”    (புரட்சிப்பெண்- பா.எ.7) என்றதோடு,

    “ஆணும் பெண்ணும் சரிநிகர்  சமானம்”   (புரட்சிப்பெண் – பா.எ.4) என்றும் கூறுகின்றார். இவ்வாறாக பாரதியாரின் கவி வரிகளின் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்தார் என்று கூறினால் அது மிகையாகாது. இதனால் தான் பாரதியின் கவிதைகள் வரலாற்றில் நிலைத்த இடத்தைப் பெறுகின்றன.

    பெரியார்

    பெண் விடுதலை குறித்து எழுந்த சீர்திருத்த இயக்கங்களில் பெரியாரின் சுயமரியாதை இயக்கமானது பெண் என்பவள் ஆணின் போகப் பொருள் என்பதை மறுத்து, ஆணின் பாதி என்பதை மாற்றி பெண்ணினம் தன்னை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவி செய்தது. பெரியாரை “தமிழ் இலக்கியப் பெண்ணிய முன்னோடி” எனக் கூறலாம்.

    அவர், “பெண்களைக் கணவனுக்கு நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றவும், புகழ் பெறும் பெண்மணியாகவும் வேண்டும். பெண்ணும் தன்னை  பெண்ணினம் என்று கருத இடமும் எண்ணமும் உண்டாகும்படியாக நடக்கவே கூடாது. நமக்கும், ஆணுக்கும் ஏன் பேதம்? ஏன் நிபந்தனை? ஏன் உயர்வு தாழ்வு? என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் எழவேண்டும். ஏனெனில் பெண் என்பவள் வெறும் போகப் பொருளாக ஆக்கப்படுதல் கூடாது. அவர்கள் புது உலகைச் சித்தரிக்க வேண்டும்”2 என்றெல்லாம் பெரியார் தம்முடைய பொதுவுடைமைச் சிந்தனைகளாக வலியுறுத்துகின்றார்.

    இவ்வாறாகப் பாரதி, பெரியார் மட்டுமல்லாது இன்னும் பல அறிஞர்களும் கவிஞர்களும் பெண் முன்னேற்றத்திற்காகவும் பெண் கல்விக்காகவும் பாடுபட்டனர். சங்ககாலத்தில் பெண்களின் நிலை குறித்தும் அவளின் கல்வி, வாழ்க்கைமுறை, ஆண்கள் பெண்களை எவ்வாறெல்லாம் நடத்தினர் என்பது பற்றியும் இக்காலத்தில் பெண்களின் முன்னேற்றம் கல்வி மற்றும் கல்வியினால் அவர்கள் அடைந்த பயனையும் பெண்களை இலக்கியங்கள் எவ்வாறெல்லாம் சித்தரிக்கின்றன என்பது பற்றியும் பெண்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர்கள் பற்றியும் இக்கட்டுரையானது விவரிக்கின்றது.

    தாய் வழி சமூகத்தில் பெண்ணுக்கு முதன்மை இடம் அளிக்கப்பட்டதால்  விவசாயம் முதல் கல்வி ஈறாக அனைத்து துறைகளிலும் தன் திறமையை வெளிப்படுத்தினாள். தொழில் நுட்பப்புரட்சி ஏற்பட்டுள்ள இக்காலத்தில் பெண்கள் விண்வெளி வரை சாதனை புரிந்து பாரதியின் கனவை நனவாக்கி வருகின்றனர்.

    அடிக்குறிப்புகள்:

    1. கா. சிவத்தம்பி – நாவலும் வாழ்க்கையும், பக்:52
    2. ஈ.வெ.ரா. பெரியார் – சுயமரியாதைத் திருமணம் ஏன்?, பக்:12

    மேற்கோள் நூல்கள்:

    1. முனைவர் அரங்க.மல்லிகா – தமிழ் இலக்கியத்தில் பெண்ணியம்
    2. நாஞ்சில் ஆனந்தன் – சங்க இலக்கியத்தில் மனித உரிமைகள்
    3. பாரதியார் கவிதைகள் – கழக வெளியீடு

    *****

    கட்டுரையாளர்
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    தஞ்சாவூர்.

     

     

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(193)

     

    செண்பக ஜெகதீசன்

     

     

    உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்

    விட்டேமென் பார்க்கு நிலை.

    -திருக்குறள் -1031(உழவு)

     

    புதுக் கவிதையில்…

     

    உழவுத் தொழிலைச் செய்யாது

    உழவர்

    கைகட்டி அமர்ந்துவிட்டால்,

    ஆசை விட்டு

    முற்றும் துறந்தோம் என்பவர்க்கும்

    வாழ்க்கையில்லை வையத்திலே…!

     

    குறும்பாவில்…

     

    உழவர் உழைக்காது போனால்,

    வையத்தில் வாழ்வில்லை

    உலகாசை விட்டோம் என்பார்க்கும்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    வயலில் உழைத்திடும் உழவரவர்

    வேலை யேதும் செய்யாமல்

    பயனே யின்றி கைகட்டிப்

    படுத்துக் கிடந்தால் பாரினிலே,

    உயர்ந்த நிலையைப் பெற்றிடவே

    உலகின் ஆசை விட்டோமெனும்

    உயரிய துறவைக் கொண்டோரும்

    உய்ய வழியே இருக்காதே…!

     

    லிமரைக்கூ..

     

    உழைக்காதே உழவரிருந்தால் வீட்டில்,

    உலகாசை விட்டோமெனும் துறவியர்க்கும் கூட

    வாழ்வென்பது ஏதுமில்லை நாட்டில்…!

     

    கிராமிய பாணியில்…

     

    ஒசந்தது ஒசந்தது

    ஒலகத்தில ஒசந்தது

    ஒழவுவேல ஒசந்தது..

     

    வயலுல எறங்கி வேலசெய்யாம

    உழுறவன் ஊட்டுல ஒறங்கிக்கெடந்தா

    ஒண்ணுமே நடக்காது ஒலகத்துல..

     

    ஒலக ஆசய உட்டோமுங்கிற

    சாமியாருங்க கூட

    ஒலகத்தில வாழ வழியிருக்காதே..

     

    அதால,

    ஒசந்தது ஒசந்தது

    ஒலகத்தில ஒசந்தது

    ஒழவுவேலயே ஒசந்தது…!

     

     

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (18)

     
    (மீ.விசுவநாதன்)

    பகுதி: 18
    பாலகாண்டம்
    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2-1-1-2-1-1
    “சரகன் வரலாறு”

     

    சூர்ய குலத்து வழியினிலே
    சொல்லும் செயலும் ஒன்றான
    சுத்த அரசன் சரகனென்பான்
    சொந்தப் பிள்ளை வேண்டுமென
    பார்யாள் “சுமதி, கேசினீயை”
    பக்கம் அழைத்து வனம்சென்று
    பக்தி யுடனே தவம்செய்தான்!
    பரிவு கொண்ட முனி”பிருகு”
    கார்யம் அறிந்து சரகனிடம்
    “காதல் மனைவி ஒருத்தியின்
    கனவு பலிக்க ஓர்மகனும்
    களிறு போன்ற பலமுடைய
    பேர்கள் அறுப தாயிரமும்
    பெறுவர் இரண்டாம் மனைவியுமே
    பிள்ளை வம்சம் கொண்டுதர்மப்
    பிடிப்பில் மகிழ்வாய்” என்றுரைத்தார்! (1)

    ஒன்று பெற்றாள் கேசீனி
    உச்சி மோந்து “அசமஞ்சன்”
    உன்பேர் என்று முத்தமிட்டார்
    உவகை கொண்டு சரகனுமே !
    குன்று போலச் சதைப்பிண்டம்
    புவியில் போட்டாள் சுமதியுமே !
    புட்டுக் கொண்டு அதிலிருந்து
    பூவாய் “அறுப தாயிரமாய்”
    நன்றாய் வந்த பிள்ளைகளை
    நறுநெய்க் குடத்தில் வைத்திருந்து
    நன்கு வளர்த்தார் தாதியர்கள் !
    நாளில் பலவான் ஆனார்கள் !
    ஒன்றாய் வந்த அசமஞ்சன்
    ஊரில் கெட்ட பேர்கொண்டான்
    உடனே அரசன் அம்மகனை
    ஊரை விட்டே விரட்டிவிட்டான்! (2)

    அவனின் மகனே “அம்சுமா”னாம்
    அறிவு வீரம் கொண்டவனாம்
    அந்தப் பேரப் பிள்ளையிடம்
    அளவு கடந்த அன்புவைத்து
    அவனைத் தான்செய் வேள்விக்கு
    அசுவம் காக்கும் பொறுப்புதனை
    அரசன் சரகன் கொடுத்திருந்தார்
    அந்த நேரம் பார்த்துத்தான்
    கவன மாக இந்திரனும்
    களவு செய்து குதிரையினை
    காணா இடத்தில் கொண்டுவிட்டான் !
    கவலை கொண்ட சரகனுமே
    தவமாம் வேள்வி நடப்பதற்குத்
    தடையாய்ப் போன அசுவத்தைச்
    சரியாய்க் கண்டு பிடித்திங்கே
    சடுதி வரவே ஆணையிட்டான் ! (3)

    பூமி எங்கும் தேடினார்கள்
    புழுதி பறக்க ஓடினார்கள்
    உள்ள அறுப தாயிரம்பேர்
    ஊரை துவம்சம் செய்தார்கள்
    தாமி ருக்கும் தரையெங்கும்
    சக்தி கொண்ட லைந்தபின்னும்
    சரியாய்க் காண முடியாமல்
    சரகன் முன்னே போனார்கள் !
    “பூமி தன்னைத் தோண்டுங்கள்
    பொல்லா நாகர் உலகத்தில்
    புனித இடபா தாளத்தில்
    ஒன்று விடாமல் தேடுங்கள்
    சாமி நமக்குத் துணையுண்டு
    சத்தாம் செயல் செய்பவர்க்குச்
    சரித்தி ரத்தில் இடமுண்டு”
    தந்தை சொல்லச் சென்றார்கள் ! (4)

    சரகர் மகன்கள் செயல்கண்டு
    சபையைக் கூட்டி தேவர்கள்
    தரையைத் தோண்டும் கொடுமைகளை
    தலைவன் பிரும்மா விடம்சொன்னார் !
    அரண்டு போன முகம்பார்த்து
    “அரியே கபில முனியாக
    அகிலம் முழுதும் காக்கின்றான்
    அவரின் கருணை புவிகாக்கும்
    அரங்கன் அவனைத் துதியுங்கள்
    அடுத்த செயலை அவன்பார்ப்பான்”
    அயனின் இந்த வார்த்தைகளில்
    அமைதி பெற்றார் தேவர்கள்!
    கரத்தில் கொடிய ஆயுதத்தால்
    பள்ளம் தோண்டிப் பூமிக்குள்
    பக்கம் பக்கம் தேடுகையில்
    கண்ணில் பட்டது குதிரைதான் ! (5)

    கபில முனிவர் தவம்செய்யும்
    காட்சி கண்ட புத்திரர்கள்
    கள்வன் இவர்தான் என்றெண்ணி
    கடிந்து கொண்ட வேளையிலே
    அமிலக் கண்கள் முனிதிறக்க
    அங்கே அவர்கள் எரிந்தார்கள் !
    அதுவே சாம்பல் மாலையாச்சு
    அசுவம் தேடிச் சென்றவர்கள்
    சபிக்கப் பட்டு இறந்தகதை
    சரக மன்னன் அறியவில்லை
    தனது பேரன் “அம்சுமானை”
    தகவல் அறிந்து வரச்சொன்னான்!
    தவிக்கும் தாத்தா மனம்தேற்றி
    தடையம் தேடித் புறப்பட்டான்
    கண்டான் சாம்பல் குவியலினை
    கண்டான் யாகக் குதிரையினை ! (6)

    துக்கம் கொண்ட அம்சுமான்தன்
    சோகம் அறிந்த கருடனவன்,
    “சொந்தம் யார்க்கும் நீர்க்கடனை
    துளபம் சேர்த்துச் செய்வதற்கு
    அக்கம் பக்க நீர்வேண்டாம்
    அமுத கங்கைத் தண்ணீரால்
    அர்க்யம் கொடுத்துக் கரையேற்று !
    அந்தச் செயலைச் செய்வதற்குத்
    தக்க தருணம் இதுவென்றான்!”
    சரிதான் என்று குதிரையினை
    சவாரி செய்து அழைத்தபடி
    தாத்தா சரக மன்னனிடம்
    இக்கட் டான நிலைசொன்னான்!
    ஏற்ற மிக்க வேள்வியினை
    வேந்தன் “சரகன்” முடித்தவுடன்
    மேலு லகமும் அடைந்திட்டான்! (7)

    (பாவகை : பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

    (தர்ம சரிதம் வளரும்)
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 38, 39, 40, 41ம் பகுதி நிறைந்தது)

    Share
  • நிலக்கரி அபாயம்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    உலகளவில் நிலக்கரி அதிகமாக பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சீனா உள்ளது. நிலக்கரி அதிகமாக பயன்படுத்துவதால் கார்பன் ஆக்சைட் அதிகமாக வெளியேறுகிறது. இது நச்சுத்தன்மை வாய்ந்தது. இதனால் இந்தியாவில் மூன்று கோடியே 30 இலட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். முதல் இடத்தில் உள்ள சீனாவில் 9 கோடியே 90 இலட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனால் நுரையீரல் சம்பந்தமான பல்வேறு வியாதிகள் அதிகமாகின்றன. விழித்துக்கொண்ட சீன அரசு எடுத்துக்கொண்ட கட்டுப்பாடு நடவடிக்கைகளால் இந்த பாதிப்பு 50% குறைந்துள்ளது. இதே நேரத்தில் இந்தியாவில் இந்த பாதிப்பு மேலும் 30% அதிகரித்துள்ளது. இதனால் காற்று மாசடைகிறது. தில்லி, நொய்டா போன்ற பகுதிகளில் காற்று மாசடைந்திருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்தப் பிரச்சனையை சரிசெய்ய மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

    Share
  • பெண் முன்னேற்றத்தில் பாரதி

    திருமதி பா. அனுராதா

    உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை

    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர்.

     

     

    பெண்மையின் வழிகாட்டியே!

    நீ சென்ற ஒற்றையடி

    பாதையால்  உயர்ந்தனர் மாதர்;!

    அடுப்படியில் பூட்டி வைத்த நயவஞ்சகரே

    நாங்கள் அகிலத்தை அடுப்படிக்கு

    கொண்டு வந்தோம்!

    பெண்ணே!

    நீ இன்றி இவ்வுலகில்

    யாருமில்லை! அறிவாய் நீ!

    துணிந்து எழு பெண்ணே!

    வஞ்சகர் நாட்டில் பாரதியின்

    சொற்சுவையும் பொருள்சுவையும்

    மாதரின் மலர்ச்சியை மறுசுழற்சி செய்தனவே!

    நம்பிக்கையோடு பிறந்துவிட்டாய் பெண்ணே

    நாணம் கொள்ளாதே!

    உன் பெருமைதனை பேச

    இன்னொரு பாரதி பிறக்கவில்லையே!

    துகிலுரிக்கையில் மானம் காக்க

    நவீன கண்ணன் யாருமில்லை! பெண்ணே!

    உன் சபதத்தை ஏற்று

    போர் புரிய பாண்டவருமில்லை!

    பெண்ணிற்காக இதிகாசம் எழுத

    தாய்மண்ணில் யாருமில்லை!

    மதுரத் தேமொழி மங்கையரே!

    அவலம் எய்திக் கவலையின்றி

    வாழும் பாவையரே – உன்

    கவலையை உமிழ்ந்து தள்ளி

    பெண்ணறமாய் நிமிர்ந்து நில்!

    வானம் உன் வசமாகட்டும்!

    தாய்திரு நாட்டில் பெண்மைவெல்ல

    வீரமங்கையாய் விடியலைத் தேடி

    ஓடு மகளே! ஓடு

    தனியாக சஞ்சாரம் செய்து

    அண்டத்தை தழைத்தோங்கச் செய்வோம்!

    நயவஞ்சகரே!

    நாங்கள் என்றேனும் தோற்றதுண்டா?

    நீங்களல்லவா எம்மை

    வைத்து இழந்தீர்!

    குடும்ப வறுமையிலும்

    இல்லாதோரை மகிழச்செய்தாயே!

    மனையாளை அடிமைப்படுத்த எண்ணி

    தாய்குலத்தை அடிமைப்படுத்தலாமோ!

    அம்புபட்ட மான்போல்

    அழுது துடித்தேன் — ஓ பாரதியே!

    இன்னும் பிறப்பெடுக்கவில்லையா?

    உம்மை மறக்க முடியாமல்

    எம் மழலைச் செல்வத்திற்கு

    பாரதியென பெயர்ச் சூட்டிடுவேன்

    உம் பெயர்தனை உச்சரிக்க

    என் உள்ளந்தனில் உற்சாகம்

    பெருக்கெடுக்க

    வாழ்வுதனில் முன்னேற உன்

    வார்த்தை ஜாலம்

    என் வசம்.

    Share
  • மழலை மொழி !

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

    குழலினிது யாழினிது என்பர்  ஆனால்

    குழந்தைகள் மொழியோ அதனினும் இனிது

    மழலைகள் நிறைந்திடும் போது அங்கு

    மகிழ்வெனும் ஊற்று பொங்கியே நிற்கும் !

     

    கோடிகள்கொட்டி திருமணம் செய்வர் ஆனால்

    குழந்தைகள் இன்றில் கொடுமையோ கொடுமை

    கூழது குடித்துமே வாழ்வார் வீட்டில்

    குதூகலம் கொடுத்திட மழலைகள் குவிவார் !

     

    ஓடிநாம் களைத்துமே வந்தால் அங்கு

    ஓடியே வந்துமே மடிதனில் அமர்ந்து

    நாவினால் மழலைகள் உதிர்ப்பார் அது

    நாளுமே நமக்கின்பம் நல்கியே நிற்கும் !

     

    கோபங்கள் வந்திடும் வேளை வீட்டில்

    குழந்தைகள் அங்கு வந்துமே நின்றால்

    கோபங்கள் ஓடியே போகும் அவர்

    குறும்புகள் மழலைகள் கொடுக்குமே இன்பம் !

     

    வறுமையிலே கிடந்தாலும் வாடிநாம் நின்றாலும்

    தலைதடவும் பிஞ்சுவிரல் தளர்வெல்லாம் போக்கிவிடும்

    புவியினிலே வாழ்கின்றார் பொலிவுடனே வாழுதற்கு

    அவர்வீட்டில் மழலைமொழி அருந்துணையாய் அமையுமன்றோ !

    Share
  • பிரபஞ்சம் திட்டமிட்ட படைப்பா ? தாறுமாறான சுயத்தோற்றமா ?

    பிரபஞ்சம் திட்டமிட்ட படைப்பா ?

    தாறுமாறான சுயத்தோற்றமா  ?

     unnamed

    unnamed (1)

    சிஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ஓர் அப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஓர் பிரபஞ்சம் உண்டாக்கப் படவேண்டும்.

    அகிலவியல் விஞ்ஞானி கார்ல் சேகன்.

    பிரபஞ்சத்தை மாபெரும் மகத்தான ஒரு நூலகமாக உருவகித்துப் பார்த்து கருத்துரை கூறியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  அந்த நூலகத்தின் கோடான கோடி நூல்களை எழுதியது யார் ?  எப்படி அது எழுதி வைத்துள்ளது ? ஏன் எழுதி இருக்கிறது ?  எப்போது எழுதியவை அந்த நூல்கள் என்றெல்லாம் கேள்வி கேட்கிறார் ஐன்ஸ்டைன் !  இருபதாம் நூற்றாண்டின் சவால் அப்பிரபஞ்ச மர்மத்தை நாம் புரிந்து கொள்ள முடியும் என்ற மன உறுதியே.

    பிரம்மாண்டமான, மகத்தான, மர்மமான, பெரும் புதிரான நமது பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ? எப்படித் துவங்கியது ? அது  எத்தனை பெரியது ?  பிரபஞ்சத் தோற்றத்துக்கு முன்பு எதுவும் இருந்ததா ? எப்போது தோன்றியது பிரபஞ்சம் ? எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது ? காலம் எப்போது ஆரம்பித்தது ? காலக் கடிகாரத்தின் வயதென்ன ? சூரியனின் வயதென்ன ?  பூமியின் வயதென்ன ?  நிலவு எப்போது, எப்படித் தோன்றியது ? கோடான கோடி விண்மீன்கள் கொண்ட காலக்ஸி என்னும் ஒளிமந்தைகள் எப்படி உருவாயின ? நமது சூரிய மண்டலத்தின் கோள்கள் ஒன்பதா அல்லது பத்தா ?

    சூரியனைச் சுற்றும் அகக்கோள்களான புதன், வெள்ளி, பூமி & நிலவு, செவ்வாய், புறக்கோள்களான பூதக்கோள் வியாழன், சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன், புளுடோ எப்படி உருவாயின ? அக்கோள்கள் ஒவ்வொன்றும் ஏன், எப்படி, எப்போது சூரியனைச் சுற்ற ஆரம்பித்தன ? ஈர்ப்பியல் கவர்ச்சி என்பது என்ன ? ஈர்ப்பியல் கவர்ச்சிக்கு எதிரான விலக்கு விசை என்னும் கருஞ்சக்தி எப்படித் தோன்றியது ? நமது சூரிய மண்டல எல்லைக்கு அப்பால் என்ன உள்ளது ? பேரொளி வீசி வால் நீண்ட வால்மீன்கள் எங்கிருந்து சூரிய மண்டலத்துக்கு வருகின்றன ? அண்டவெளிப் பிண்டம் எப்படி உண்டானது ?  முரண்கோள்கள் என்பது என்ன ? ஒளிமந்தை நடுவே உள்ள பூத விழுங்கியான கருந்துளை என்பது என்ன ? காலக்ஸிகள் என்னும் ஒளிமந்தைகள் எவ்வாறு உருவாகி வளர்ந்தன ?  பிரபஞ்சத்தின் வடிவம் என்ன ? பிரபஞ்சம் ஒன்றா, பலவா ?  இணைப்பிரபஞ்சங்கள் உள்ளனவா ?  சோப்புக் குமிழிபோல் பிரபஞ்சம் தொடர்ந்து விரிகிறதா ? மெதுவாக விரிகிறதா ? அல்லது விரைவாக விரிகிறதா ?  அவ்விதம் விரிந்து கொண்டே போய் இறுதியில் முறிந்துவிடுமா ?  ஒளிமந்தைகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டால் என்ன நேர்ந்திடும் ?

    சூரிய குடும்பத்திலே மிகவும் புதிரான அமைப்பு கொண்ட பூமியில் மட்டும் ஏன் பயிரினங்கள், உயிரினங்கள் தோன்றின; எப்படித் தோன்றின; எப்போது தோன்றின; உலகிலே உன்னத படைப்பான, உயர்ந்த மூளையுடைய மானிடர் பூமியில் மட்டும் தான் தோன்றினாரா ? வேறு அண்டவெளிக் கோள்களிலும் உயிரினங்கள் வசிக்கின்றனவா ? பூமியில் மூன்றில் இருமடங்கு பரப்பை நிரப்பிய பேரளவுக் கடல் வெள்ளம் எப்படிச் சேர்ந்தது ? உப்புக்கடலாய் எப்படி மாறியது ? மர்மமான பூகாந்தம், பரிதிக் கதிர்களைக் குடைபோல் தடுத்து உயிரினம், பயிரினம் பாதுகாக்கும் வாயுச் சூழ்வெளி எவ்விதம் தோன்றி இன்னும் நீடிக்கிறது ?

     unnamed (2)

    சனிக்கோளின் அழகிய நீண்ட வளையங்கள் எப்படித் தோன்றின ? பரிதிபோல் வாயுக்கோளான பூதக்கோள் வியாழன் ஏன் சுய ஒளிவீசும் சூரியனாய் மிளிரவில்லை ?  கோடான கோடி விண் பாறைகள், முரண்கோள்கள் ஏன் செவ்வாய்க் கோளுக்கும், பூதக்கோள் வியாழனுக்கும் இடையே சூரியனைச் சுற்றி வருகின்றன ? வால்மீன்கள் சூரிய மண்டலத் தோற்றத்தின் எச்சங்களா ? பூமியைப் பன்முறைத் தாக்கிய வால்மீன்கள் வழியாக    உயிரின மூலவிகள் பூமியில் சேர்ந்தனவா ?

    பிரபஞ்சம் எதிலிருந்து, எப்படி உருவானது என்னும் கேள்விக்கு விஞ்ஞானிகள் இன்னும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடையைக் கூற முடியவில்லை என்பது என் கருத்து.  படைப்பா அல்லது பரிணாமமா ?  திட்டமிட்ட படைப்பா ?  அல்லது தாறுமாறாய் உண்டான சுயத் தோற்றமா ?  டார்வின் எழுதிய பரிணாமக் கோட்பாடு உயிரினத் தோற்றத்தையோ அதன் விருத்தியையோ, மாற்றத்தையோ ஆரம்பம் முதல் முழுமையாக விளக்கவில்லை.  டார்வின் விஞ்ஞானம் உயிர் என்பது என்ன வென்று எங்கும் கூற வில்லை. உயிரற்ற வெற்றுக் கூடுகளைப் பற்றியும் அவற்றின் வளர்ச்சி, விருத்தியைப் பற்றியும்  அவரது பரிணாமம்  சிறப்பாக விளக்குகிறது.

    பிரபஞ்சம் ஓர் உன்னத சக்தியான கடவுளால் திட்டமிட்டுப் படைக்கப் படவில்லை. அது தானாக உருவானது என்று விஞ்ஞான மேதை ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியிருப்பதும் ஓர் ஊகிப்பே ! முதலில் அக்கூற்று ஒரு விஞ்ஞான ஆய்வு விளக்கம் இல்லை; முடிவு மில்லை. அப்படி மேலாகச் சொல்லித் தப்பிக் கொள்வது ஒரு விஞ்ஞான மேதையின் இயலாமையைத்தான் குறிக்கிறது. 500 பேரைச் சுமந்து கொண்டு வானில் பறக்கும் நவீன 707 ஜம்போ ஜெட் விமானம் தானாய் உருவானது என்று கூறினால் யார் இப்போது நம்புவார் ?  வெவ்வேறான  தோற்றம், பண்புடைய ஆறு பில்லியன் மக்களும், கோடான கோடிப் புள்ளினம், பூவினம், பயிரினம், ஊர்வன, நீர்வள மீனினம் வாழும், சிக்கலான இந்த பூமி, 4.5 பில்லியன் ஆண்டுகளாய்த் தவறாது, மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில், ஒரே சுற்றுப் பாதையில் சூரியனைச் சுற்றி வருவது தானாகத் தோன்றியது என்று ஒருவர் கூறினால் இப்போது யார் நம்புவார் ?  பிரபஞ்சம் ஏன் தோன்றியது, ஆறறிவு படைத்த மனிதர் ஏன் பிறந்தார் என்னும் வினாக்களுக்கு விஞ்ஞானம் பதில் கூறு முடிய வில்லை.

    பிரபஞ்சம் தானாய்த் தோன்றி மாறி வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறினாலும், கடவுள் படைத்தது என்று ஆன்மீக மதவாதிகள் கூறினாலும் இரண்டு கோட்பாடுகளும் ஒன்றுதான். விஞ்ஞானிகள் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று விளக்கி, இதுவரை எழுதிய யூகிப்புக் கோட்பாடுகள் எல்லாம், நாளுக்கு நாள் மாறி வருகின்றன. பிரபஞ்சம் எப்படி இறுதியில் முடிவாகப் போகிறது என்பதும் யூகிப்புக் கோட்பாடாகவே இருக்கிறது.

    இரசாயனக் கதிர் ஏகமூலங்களின் (Radio Isotopes) அரை ஆயுள் தேய்வு நியதிப்படிப் பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டுக்கு முன்னே தோன்றி யிருக்க வேண்டும் என்று பல்வேறு உலக விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளார்.  அதாவது படைப்பாளியே இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு தோற்றப் பகுதியை உண்டாக்க 13.7 பில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்கிறது என்பது என் னுடைய கருத்து.  இதுவரை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ள பெரு வெடிப்பு நியதியின் (The Big Bang Theory) ஆரம்பமே ஓர் அனுமான ஊகிப்புதான்.  மெய்யாக இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று இதுவரை எந்த விஞ்ஞானியாலும் தர்க்க ரீதியாக விளக்க முடிய வில்லை. எல்லாம் கால வெள்ளத்தில் கருத்து மாறி, திசை மாறி, உருமாறிப் போகும் விஞ்ஞானத்தின் வெறும் அனுமான ஊகிப்புகள்தான்.  விஞ்ஞானம் பிரபஞ்ச ஆதி அந்தங்களை ஆராய முடியாமல் இறுதியாக அந்த முயற்சியைக் கைவிட்டு விடுகிறது.  அத்துடன் பிரபஞ்சத் தோற்ற கால இடைப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு மட்டும் விளக்கம் அளிக்க முற்படுகிறது.

    காரண-விளைவு நியதியைத் (Cause & Effect Theory) தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் உலக  விஞ்ஞானிகள், பிரபஞ்சம் தானாக உருவானது, தானாக இயங்குவது, தானாக மாறுவது, தானாக அழிவது என்று ஆதாரமின்றிக் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

    விஞ்ஞானிகள் இதுவரை “உயிர்” என்றால் என்னவென்று விஞ்ஞான விளக்கம் தர முடிய வில்லை. எந்த இரசாயன மூலகங்களோ, மூலக்கூறுகளோ சேர்ந்து, உயிரென்னும் புதிரை உண்டாக்குவதில்லை. ஆங்கிலத்தில் “உயிர்” என்பதற்கு ஒரு தனிச்சொல் கூடக் கிடையாது. உயிர், ஆத்மா இரண்டு மட்டுமே மனிதனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள தொடர் இணைப்பைக் காட்டுபவை என்பது என் கருத்து.

    நமது பிரபஞ்சத்தின் தோற்றம், அதன் இயக்கங்கள் யாவும் “தாறுமாறான சீரமைப்பு”  [Irregular Order] என்பது என் கருத்து.  நமது பால்வெளி ஒளிமந்தை, அதன் கோடான கோடிப் பரிதிக் குழுமங்கள்,  சூரிய மண்டலக் கோள்களின் அமைப்பு, பண்பாடு, நகர்ச்சி முறை, சுற்றும் பாதை, தட்ப / வெப்ப நிலை, சூழ்வெளித் தோற்றம், காலவெளி மாற்றம் போன்றவை எல்லாம் ஒன்றுக் கொன்று முரண்பட்டவை, தாறுமாறானவை, ஆனால் ஓர் சீரமைப்புக்கு உட்பட்டவை.  காரண-விளைவு நியதிப்படி ஒன்றிலிருந்து மற்றொன்று உருவானதாய், முதல் வடிவைச் சார்ந்ததாய், அதிலிருந்து படிப்படியாய் மேம்பட்டதாய் விருத்தி யாகி வந்துள்ளதாய்த் தெரிகிறது.

    இந்தப் பிரபஞ்சத்தின் உள்ளே இயங்கிவரும் கோடான கோடி காலக்ஸி ஒளிமந்தைகள், அவற்றில் உள்ள விண்மீண்கள், அவற்றைச் சுற்றும் அண்டக் கோள்கள், கண்ணுக்குத் தெரியாமல், கருவிகளுக்குத் தென்படும் கருந்துளைகள், கருஞ்சக்தி, கருமைப் பிண்டம், பூமியில் உள்ள பயிரினங்கள், உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்றாய் உருமாறி, அடுத்தடுத்துச் சங்கிலித் தொடர்பில் பிறந்தவை. அழிபவை.  அதாவது அவை யாவும் இயற்கை விதியான “காரண-விளைவு நியதியைப்” (Cause & Effect Theory) பின்பற்றித் தோன்றியவை.

    தற்போதைய நவீனக் கணினி மேற்பார்க்கும் மோட்டார் வாகனம் விருத்தியாகச் சுமார் 100 ஆண்டுகள் எடுத்துள்ளன.  எலும்புக் கூடு போன்று ஹென்றி  ஃபோர்டு செய்த முதல் கார் வாகனம் எத்தனை முறை மாற்றம் அடைந்து செம்மையாகி நவீனக் காராய் மாறி யுள்ளது ?  ரைட் சகோதரர் முதன்முதல் செய்த சைக்கிள் உறுப்புகளில் உருவான வான ஊர்தி 100 ஆண்டுகளில் விருத்தி யாகிச் சந்திரனுக்குச் செல்லும் ராக்கெட்டாய், சூரிய மண்டலம் தாண்டிய முதல் வாயேஜர் விண்கப்பலாய் முன்னேறியுள்ளது.  கணினி மின்கருவி எத்தனை ஆண்டுகள், எத்தனை முறைகள் சீராகி நவீன வல்லமை மிக்க கணினியாக உருவாகி உள்ளது ?  சார்லஸ் டார்வின் அறிவித்த  உயிரின விருத்திக் கோட்பாடு இயற்கை முறையில் எத்தனை தரம் உருமாறிச் செயல் மாறிச் சீராகி, மானிடம் தற்போதைய ஆறறிவு படைத்த உன்னத மனிதராய் உலவி வருகிறது ?

    விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து  அணுவுக்குள் இருக்கும் நுண்ணிய புரோட்டான், எலெக்டிரான், நியூட்ரான் [நேரான், எதிரான், நடுவான்] என்னும் பரமாணுக்களை வெளியேற்றி  அவற்றின் அளவைக் கணித்து விட்டார்.  பரமாணுக்களையும் பிரித்து அவற்றின் அடிப்படைத் துகள்களைக் [ஃபெர்மியான், போசான், (குவார்க்ஸ், லெப்டான்ஸ்)] கண்டுபிடித்து விட்டார்.  எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவற்றைப் பல்வேறு எண்ணிக்கையில் சேர்த்து, நூற்றுக்கு மேற்பட்ட மூலகங்கள் [Elements], ஆயிரக்கணக்கான மூலக்கூறுகள்  [Molecules] இயற்கை / செயற்கை மூலம் தயாரிக்கப் பட்டு இப்போது மனிதர் பயன்படுத்த ஏதுவாக உள்ளன.  ஒரு புரோட்டான் எப்படி ஹைடிரஜன் வாயு ஆனது ?  எட்டுப் புரோட்டானும் எட்டு நியூட்ரானும் சேர்ந்து எப்படி ஆக்ஸிஜன் வாயுவானது ? அவைபோல் எப்படி நைட்ரஜன், வெள்ளி, தங்கம், தாமிரம், தகரம், பாதரசம், இரும்பு, ஈயம், கால்சியம், கார்பன், ஸல்ஃபர், ரேடியம், தோரியம், யுரேனியம் உருவாயின ?  வெவ்வேறான வடிவம், பண்பாடுள்ள மூலகம் எல்லாம் தானாய்த் தோன்றினவா ? சீரமைப்பில், அணி வரிசையில் இருக்கும் இவைத் தாறுமாறாய்த் தோற்றம் எடுத்தவையா ? அல்லது திட்டமிட்டுப் படைக்கப் பட்டனவா ?

    சமீபத்தில் [2017 நவம்பர்] ஈரான், ஈராக் பகுதியில் நேர்ந்த பூகம்பத்தில் 500 மேற்பட்ட மாந்தர் மரித்தார்.  இவ்வாறு ஆண்டு தோறும் பற்பல இயற்கை இடர்பாடுகள், சுனாமிகள், பேய்மழைச் சேதாரங்கள், சூறாவளி, ஹர்ரிக்கேன்கள் தாக்குதல் நமது பூமியில் ஏன் ஏற்பட வேண்டும்.  படைக்கப் பட்ட பூமியோ, தானாகத் தோன்றிய பூமியோ, அது பூரணச் சீரமைப்புக் கோளாகத் தோன்ற வில்லை. பூமிக்குள்ளும் புற்று நோய் பரவியுள்ளது   தூரத்தில் பூரண வட்டக் கோளமாகத் தென்படும் பூமி, தோற்ற காலம் முதலே சற்று தாறுமாறாகத்தான் உருவாகியுள்ளது.  மனிதர் போன்ற உயிரின வளர்ச்சிக்குப் படைக்கப்பட்ட நமது பூமி ஒரு தாறுமாறன சீரமைப்புக் கோளே.

    தேனீக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாய் ஒன்றாய் உழைத்துக் கூட்டில் தேனைச் சேர்க்கின்றன.  தூக்கணாங்குருவி தானாய் கூடு நெய்து முட்டை யிட்டுக் குஞ்சுகள் பொரிக்கின்றது.  இலைப் புழுவாய் கிளையில் நெளிந்த புழு முடத்துவ நிலை அடைந்து சில நாட்களில் பறக்கும் பட்டாம் பூச்சியாகக் கண்ணைக் கவர்கிறது.  ஜிம்பான்சி மனிதக் குரங்கிலிருந்து மனிதன் படிப்படியாக மாறினானா ? அல்லது ஒரே பாய்ச்சலில் மாறினானா ? படிப்படி யாக மாறினான் என்றால் கால் மனிதன், அரை மனிதன் இருக்க வேண்டுமே !  குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்று கூறினால், இப்போது ஏன் அந்நிகழ்ச்சி கண்முன் நேருவதில்லை ?  ஜிம்பான்சியும், மனிதமும் தனித்தனியாய் ஒரே சமயத்தில் பிறந்து, தமது இனத்தைப் பெருக்கி, விருத்தி செய்து வருகின்றனவே !

    உலகில் நிகழும் வினைகள் அனைத்தும் இரண்டு விதமான முறைப்பாட்டில் நேர்கின்றன. ஒன்று இயற்கை நிகழ்ச்சி: இரவு பகல் சுழற்சி. பருவக் காலச் சுழற்சி, இடி மழை வெள்ளம், புயல், சுனாமி, பூகம்பம், எரிமலை போன்றவை யுகயுகமாய் நேரும் இயற்கை நிகழ்ச்சிகள் !  அதே சமயம் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், ஜப்பான் அணுகுண்டு வீச்சுகள், ஆறு மில்லியன் யூதரைக் கொன்ற கோலோஹாஸ்ட் கொடூரம், ஈராக் படை யெடுப்பு, சமீபத்தில் நிகழ்ந்த ஈழப் போர் ஆகிய அனைத்தும் ஆக்கிரமிப்பு மனிதரால் உண்டாக்கப் பட்டவை.  அதாவது இயற்கை செய்வதை மனிதர் செய்ய முடியாது.  மனிதர் செய்வதில் இயற்கை ஈடுபடாது, தலையிடாது, தடுக்கவும் செய்யாது, ஆனால் எச்சரிக்கை செய்யும்  !  ஒரு சில பௌதிக, இரசாயன வினைகளை மனிதன் செய்து காட்டியுள்ளான்.  அணுவைப் பிளந்து பேரளவு சக்தியை வெளியாக்கியது, சூரியனின் அணுப்பிணைவு சக்தியை உண்டாக்கி ஹைடிரஜன் குண்டை வெடித்தது,  அணுக்கருச் செயற்கை முறையில் மூலங்கள் [புதியவை, பழையவை] உண்டாக்கியது, இவற்றுக்குச் சான்றுகள்.

    விண்வெளி விஞ்ஞானம் அனுதினம் விருத்தியாகும் மகத்தான 21 ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்கிறோம். விண்வெளி ஏவுகணைகள் பாய்ந்து செல்லும்இருபதாம் நூற்றாண்டில் பிறந்த இளைஞ ரெல்லாம் பல விதங்களில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். முக்கியமாக விண்வெளி விஞ்ஞானம்பேரளவில் விருத்தி அடையும் ஒரு மகத்தான யுகத்திலே நாம் புதிய அற்புத விளைவு களைக் காண்கிறோம். வெண்ணிலவில் தடம் வைத்து மீண்டமனிதரின் மாபெரும் விந்தைகளைக் கண்டோம் !  அடுத்து இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் மனிதரின் மகத்தான தடங்கள் செவ்வாய்த்தளத்திலேயும் பதிவாகப் போகின்றன என்று நினைக்கும் போது நமது நெஞ்ச மெல்லாம் துள்ளிப் புல்லரிக்க வில்லையா ?

    பூதளத்தில் தோண்டி எடுத்த பூர்வ மாதிரிகளையும், உயிரின எலும்புக் கூடுகளையும் சோதித்து கடந்த 100,000 ஆண்டு முதல் வாழ்ந்து வந்தமானிடரின் மூல தோற்றத்தைக் காண முடிகிறது !  5000 ஆண்டுகளுக்கு முன்னே நாகரீகம் தோன்றி கிரேக்க, ரோமானிய, எகிப்த், இந்திய, சைனகலாச்சாரங்களை அறிய முடிந்தது.  பிரபஞ்சத்தின் பல்வேறு பூர்வப் புதிர்களை விடுவிக்க பல்லாயிரம் ஆண்டுகளாக மானிடச் சித்தாந்த ஞானிகள்முயன்று எழுதி வந்திருக்கிறார்கள்.  சிந்தனைக்குள் சிக்கிய மாபெரும் சில புதிர்கள் விடுவிக்கப் பட்டாலும் பல புதிர்கள் இன்னும் அரை குறையாகவிடுவிக்கப் பட்டும், படாமல்தான் நம்கண் முன் தொங்கிக் கொண்டிருக் கின்றன !

    பிரபஞ்சத்தின் பல புதிர்களில் ஒரு புதிரை விடுவிக்கப் போனால் ஒன்பது புதிர்கள் முளைக்கின்றன. பரமாணுக்களில் நுண்ணிய நியூடிரினோ துகள்கள்(Neutrino Particles) எப்படி விண்வெளியில் உண்டாகின்றன ?  காமாக் கதிர் வெடிப்பு (Gamma Ray Bursts), ஈர்ப்பியல் அலைகள்(Gravitational Waves) என்றால் என்ன? செவ்வாய்க் கோளின் தளப்பகுதி ஏன் வரண்டு போனது ?  அகிலக் கதிர்கள் (Cosmic Rays)எங்கிருந்து வருகின்றன ?  பிரபஞ்சத்தைப் புதிய “நூலிழை நியதி” (String Theory) கட்டுப்படுத்துகிறதா? ஈர்ப்பாற்றல் அலைகளை(Gravitational Waves) உருவாக்குவது எது? இந்தக் கிளைப் புதிர்களுக்கும் விஞ்ஞானிகள் விடைகாண வேண்டிய நிர்ப்பந்தம் இப்போதுஏற்பட்டுள்ளது.

    இப்புதிர்களுக்கு எனது கட்டுரைகளில் விடை பூரணமாகக் கிடைக்கலாம். அரைகுறையாகக் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம்.  வானியல்விஞ்ஞானம் வளர்ச்சி அடையும் ஒரு விஞ்ஞானத் துறை. பெருவாரியான புதிர்களுக்கு விடை கிடைக்க இன்னும் நெடுங்காலம் ஆகலாம்.  புதியகருவிகள் படைக்கப் பட்டு, கண்டுபிடிப்புகளும் உண்டாகி முன்பு மெய்யாகத் தோன்றியவைப் பின்னால் பொய்யாக நிரூபிக்கப் படலாம். குறிப்பாக இப்போது விண்வெளியைச் சுற்றிவரும் ஹப்பிள் தொலைநோக்கி பல அரிய விண்வெளிக் காட்சிகளைத் தொடர்ந்து ஆராயத் தந்திருக்கிறது.

    unnamed (3)

    +++++++++++

    Share
  • வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் கவிதைகள்

    க. பாலசுப்பிரமணியன்

    4677627d8477923052e60ee2dfdeb4dd

    குழந்தையே மனிதனின் தந்தை

    (வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்- ஆங்கிலக் கவிஞரால் 1802 மார்ச் மாதம் எழுதப்பட்டு 1807ம்  பிரசுரிக்கப்பட்ட கவிதை )

    தமிழாக்கம் : க. பாலசுப்ரமணியன்

    வானவில்லைப் பார்க்கும்பொழுதெல்லாம்

    என் மனம் ஏனோ துள்ளி எழுகின்றது !

    என் வாழ்க்கை ஆரம்பித்த பொழுதும் அப்படித்தான்;

    இன்று நான் ஒரு முழு மனிதனாக வளர்ந்தபின்பும்

    நாளை என் முதுமையிலும் கூட,

    இல்லையென்றால், மரணம் என்னைத் தழுவட்டும் !

    குழந்தையே மனிதனின் தந்தை !

    நான் விரும்புவதெல்லாம் என் வாழ்க்கை

    நாளொருவண்ணமும் இயற்கையோடு கைகோர்த்து

    ஒரு வண்ணத்துப்பூச்சிக்கு …( TO A BUTTERFLY)

    (வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்- ஆங்கிலக் கவிஞரால் 1802 மார்ச் மாதம் எழுதப்பட்டு 1807ம்  பிரசுரிக்கப்பட்ட கவிதை )

    தமிழாக்கம் : க. பாலசுப்ரமணியன்

    என்னோடு தங்கிவிடு – பறந்து செல்லாதே !

    இன்னும் சற்று  நேரம் என் பார்வையில் !

    என் குழந்தைப் பருவத்தின் சரித்திர ஆசிரியனே

    உன்னோடு நான் நிறையப்  பேச வேண்டும் !

    என் அருகில் மிதந்து கொண்டிரு; பறந்து விடாதே !

    எனது கடந்த காலம் உன்னிடம் மீண்டும் பிறக்கின்றது;

    உன்னைப்  போன்ற மகிழ்வான சீவன்களின் நினைவு வருகின்றது !

    எனது குடும்பத்தின் நினைவும்

    உயிர்ப்புள்ள நினைவுகளும் மீண்டும் என் மனதில் !

    ஓ ! எத்தனை மகிழ்வான நினைவுகள்,

    குழந்தைப் பருவத்தில் விளையாடிய அந்த நாட்கள் !

    எனது சகோதரி எம்மாலினும் நானும்

    எத்தனை வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்தினோம் !

    ஒரு வேடனைப் போல நான் வேகமாக

    இரையைத் தேடி – குதித்துக் குதித்து

    ஆனால் அவளோ – இறைவன் அவளை ஆசீர்வதிக்கட்டும் !

    சிறகுகளில் படிந்த தூசிகளை தட்டிவிடப் பயந்தாளே !

    Share
  • “அவன், அது , ஆத்மா” 56

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)
    (மீ.விசுவநாதன்)

    அத்யாயம்: 56

    சுவாமி பரமார்த்தானந்தா

    சுவாமி பரமார்த்தானந்தா

    அவனுக்கு மனைவி சீதாலக்ஷ்மிக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. தனது கல்லூரி நாட்களில் கொல்கத்தாவில் சுவாமி சின்மயானந்தர், சுவாமி தயானந்த சரஸ்வதி அவரது சீடர் தர்ஷ சைதன்யா போன்றவர்களின் பகவத்கீதை, உபநிஷத் வகுப்புகளுக்குத் தவறாமல் சென்று பயனுள்ள நல்ல குறிப்புகளைத் தனது புத்தகங்களில் பதிவு செய்து கொள்ளும் பழக்கம் உடையவர். 1985ம் வருடம் திருமணத்திற்குப் பிறகு சென்னையில் அதுபோன்ற வகுப்புகளுக்குப் போக வேண்டும் என்று விரும்பி அவனிடம் கேட்ட பொழுது அவன் அதிலெல்லாம் தனக்கு ஈடுபாடு இல்லை என்று சொல்லி விட்டான். அப்படிச் சொன்னதில் அவனுக்கு மனைவிக்குக் கொஞ்சம் வருத்தம் உண்டு. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து விட்டாள். பிறகு சென்னையில் கீதை வகுப்பு யார் எடுக்கிறார்கள் என்ற தகவலைக் கேட்டு, தனது குரு ஸ்ரீ தர்ஷ சைதன்யா சுவாமிக்குக் கடிதம் எழுத, அவர் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சீடர்தான் சுவாமி பரமார்த்தானந்தா. அவர் சென்னையில் வேதாந்த வகுப்புகள் எடுப்பதாகவும், அது நடைபெறும் இடத்தையும் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

    அந்த வகுப்புகள் சென்னை பெசன்ட் நகரில் ஒரு விளையாட்டு மைதானத்தில் ஒவ்வொரு சனி, ஞாயிறுகளில் மாலை 6.30 மணி முதல் 8 மணிவரை நடைபெற்று வந்தது. அதன் பிறகு அடையாறில் இருக்கும் வித்யாமந்திர் பள்ளியின் ஆடிட்டோரியத்தில் மாலை ஆறு மணிமுதல் ஏழு மணிவரை நடைபெற்றத் துவங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது.

    அவனது வீடு அப்பொழுது இந்திராநகர்ப் பகுதியில் இருந்தது. அவனுக்கு மனைவிக்கு சுவாமிஜியின் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்று விருப்பம். அவனுக்கோ அதில் நாட்டம் இல்லை. அவனுக்கு மனைவி அவனிடம், “ஒரு நாள் வந்து கீதை வகுப்பைக் கேளுங்கள். பிடித்திருந்தால் வாருங்கள். இல்லையென்றால் உங்களைக் கட்டாயப் படுத்த வில்லை, நான் மாத்திரம் சென்று வருகிறேன். என்னை அந்த வகுப்பு நடக்கும் இடத்திற்குக் கொண்டு விட்டு, அழைத்து வாருங்கள்” என்று சொன்னாள். வேண்டா வெறுப்பாகத்தான் அவன் அன்று கீதை வகுப்புக்குச் சென்றான். சுவாமி பரமார்த்தானந்தாவின் எளிய ஆங்கிலமும், ஒவ்வொரு சுலோகத்தையும் அவர் விளக்கிச் சொல்கிற முறையும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது . அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் மனைவியுடன் கீதை, உபநிஷத் வகுப்புகளுக்குச் செல்லத் துவங்கி, இருபத்தைந்து வருடங்கள் தொடர்ந்து சுவாமிஜியின் உரைகளைக் கேட்டு அவன் பயனடைந்தான். அவனும் குறிப்புகள் எடுத்துக் கொள்வான். அதை உள்வாங்கிக் கொண்டு கவிதைகளும் எழுதி வருவான். இப்பொழுதும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சுவாமிஜியின் வகுப்புகளுக்குச் சென்று வருகிறான்.

    அவனுக்கு ஸ்ரீ ஆதிசங்கரரின் வாழ்க்கையைக் கவிதையாக எழுதவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதை அவன் 10.06.2006 அன்று சுவாமி பரமார்த்தானந்தரிடம் தெரிவித்த பொழுது, சமீபத்தில் (06.05.2006) புதிய பதிப்பாக வெளிவந்திருந்த ஸ்ரீ வித்யாரண்யர் எழுதிய “மாதவீய சங்கர விஜயம்” என்ற புத்தகத்தை அவனிடம் கொடுத்து,” இதை அடிப்படையாக வைத்து எழுதுங்கள்.” என்று ஆசிதந்தார். அவனும் அதை “அம்மன் தரிசனம்” பத்திரிகையில் “ஆதி சங்கர அத்வைத காவியம்” என்று தலைப்பிட்டு ஒரு நெடும் தொடராக எழுதினான். சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் வெளியீடாக “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” என்ற தலைப்பில் அந்தப் புத்தகம் ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள் ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் முன்னிலையில் தமிழகத்தின் கவர்னரால் 26.10.2012 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது .

    1999ம் வருடம் செப்டெம்பர் மாதம் சுவாமி பரமார்த்தானந்தா அவர்கள் தனது வகுப்புக்குத் தொடர்ந்து வருகின்ற சுமார் இருநூறு சீடர்களை “ரிஷிகேசத்திற்கு” அழைத்துச் சென்றார்கள். பத்து தினங்கள் அந்த கங்கைக் கரையிலே தங்கி வேதாந்தப் பாடங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். அவனுக்கும் அதில் கலந்து கொள்ளும் நல்ல வாய்ப்பு அமைந்தது.

    சுவாமி ஓங்காரானந்தா

    சுவாமி ஓங்காரானந்தர்

    ஒவ்வொரு நாளும் காலையில் ஆறரை மணிமுதல் எட்டு மணிவரை உபநிஷத் வகுப்பும், மாலை நான்கு மணிமுதல் ஐந்து மணிவரை பத்ரஹரியின் “நீதி சதகம்” வகுப்பும் சுவாமி பரமார்த்தானந்தா அவர்கள் நடத்துவார்கள். காலை எட்டு மணி முதல் ஒன்பது வரைச் சிற்றுண்டி நேரம். காலை ஒன்பது மணிமுதல் பத்து மணிவரை “சிவமானச பூஜை” விளக்கத்தை ஆஸ்ரமத்தில் இருக்கும் ஒரு சீடர் செய்வார் . காலை பத்து மணி முதல் பன்னிரெண்டு மணிவரை சுவாமி ஓங்காரானந்தா அவர்கள் திருக்குறளில் வேதாந்தம் என்ற தலைப்பில் உரை நிகழத்துவார். மாலை ஆறு மணிக்கு ரிஷிகேசம் ஆஸ்ரமத்தின் அருகிலேயே அழகாக ஓடிக் கொண்டிருக்கும் கங்கைக்கு ஆரத்தி நடைபெறும். சுவாமி பரமார்த்தானந்தரின் முன்னிலையில் சுவாமி ஓங்காரானந்தா அவர்கள் ஆராத்தி பூஜையைச் செய்வார்கள். சீடர்கள் அனைவரும் ஒரு விளக்கை ஏற்றிப் பிரார்த்தனை செய்து கொண்டு கங்கை நீரில் மிதக்க விடுவார்கள். சுவாமிகளுடன் சீடர்களும் கங்கா மாதாவின் சுலோகத்தைச் சொல்வதைக் கேட்டு அவன் மெய்சிலிர்த்துப் போவான்.

    கங்கைக்கு ஆரத்தி முடிந்தவுடன் ஆஸ்ரம வளாகத்தில் இருக்கும் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி ஆலயத்தில் பூஜை நடைபெறும். அங்கு தரிசனம் செய்தவுடன் இரவு ஏழு மணி முதல் எட்டு மணிவரை ஸ்ரீமத் பகவத் கீதை பாடத்தை சுவாமி பாமார்த்தானந்தா அவர்கள் நடத்துவார்கள். இரவு எட்டு மணிமுதல் ஒன்பதுக்குள் இரவு உணவு. அவன் ஒவ்வொரு நாளும் கங்கையில் உற்சாகமாகக் குளிப்பான். முதல் நாள் அவன் அங்கே நீந்தினான். அவன் நீந்துவதை வெகு தொலைவில் இருந்து பார்த்த சுவாமி பரமார்த்தானந்தா அவனை அழைத்து,” இங்கெல்லாம் நீந்தாதீர்கள். எப்பொழுது தண்ணீர் அதிகம் வரும் என்று சொல்ல முடியாது. ஜாக்கிரதையாக இருங்கள் ” என்றார். அதன் பிறகு அவன் அந்தப் படித்துறைப் பகுதியில் குளித்து சந்தியாவந்தனம் செய்து வந்தான். இரவில் சில நண்பர்களுடன் ஆஸ்ரமத்தின் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு பாய்ந்து செல்லும் கங்கையின் அழகிலும், ஒலியிலும் மெய்மறந்திருப்பான்.

    சுவாமி ஓங்காரானந்தா அவர்கள் வேதாந்தக் கருத்துகளை திருக்குறள், தாயுமானவர், வள்ளலார், பாரதியார், பட்டினத்தார் பாடல்களுடன் ஒப்பிட்டு நல்ல இலக்கியச் செறிவோடு சொல்வதைக் கேட்டு அவன் மிகவும் ரசிப்பான். அவரது உரையில் நகைச்சுவையும் இருக்கும். அவர் சுவாமி சித்பவானந்தரின் சீடர். சுவாமி பரமார்த்தானந்தரிடம் வேதாந்தப் பாடம் கற்றவர். புதுக்கோட்டையில் இருக்கும் ஸ்ரீ புவனேஸ்வரி பீடத்தின் பீடாதிபதி. தேனியில் ஒரு ஆஸ்ரமம் அமைத்துச் சீடர்களுக்கு வேத்தாந்தப் பாடங்கள் நடத்தி வருகிறார். “வேத நெறி” என்ற புத்தகம் அந்த ஆஸ்ரமத்தின் வெளியீடாக வந்துகொண்டிருக்கிறது. அவர் சென்னைக்கு அடிக்கடி வந்து ஆன்மிக உரைகள் நிகழ்த்தும் பொழுது அவன் தவறாமல் சென்று கேட்பான். 29.10.2017 ஞாயிறு அன்று அச்சிரப்பாக்கம் கிராமத்தின் மிக அருகில் அமைந்திருக்கும் “ஸ்ரீ பால வேத பாட சாலையின்” பத்தாவது ஆண்டு விழாவிற்கு சுவாமி ஓங்காரானந்தா அவர்கள்தான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சனாதன தர்மத்தின் சிறப்பைப் பற்றி அருமையான சொற்பொழிவு செய்தார்.

    “வேதம் கற்கும் மாணவர்களைப் பார்த்துப் பெருமைப் படவேண்டும். அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் உதவ வேண்டும். வேதம்தான் நம் தேசத்தின் ஆணிவேர். வேதம் கற்றவர்களின் குணமே, இந்த உலகம் முழுவதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அனைவரும் மனச்சாந்தியுடன் வாழவேண்டும் என்று பிரார்த்திப்பது மட்டும்தான். பசிக்கு உணவும், படுக்க ஒரு இடமுமே அவனது தேவைகள். அவர்களுக்கு என்றுமே மனத்தில் வறுமை தோன்றாது” என்ற அவரது உரை இன்னும் அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு அவனும், அவனுக்கு மனைவி சீதாலக்ஷ்மியும் சென்று வந்தார்கள்.

    ஸ்ரீ நாராயணானந்த பாரதீ சுவாமிகள்

    சுவாமி நாராயணானந்த பாரதீ

    ஸ்ரீ நாராயணானந்த பாரதீ சுவாமிகள் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் கிளைமடங்களில் ஒன்றான “நிலமாவு” மடத்தின் பீடாதிபதியாக இருந்தார்கள். அவரது பஜனைப் பாடல்களைக் கேட்டுக் கேட்டே அவன் அவருக்கு அடிமையானான். மதுரமான குரல்வளம் அவருக்கு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது . இன்றும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவரது பாடல்களைக் கேட்டு இன்புருவதுண்டு.

    1986ம் வருடம் ஸ்ரீ ஆதிசங்கரரின் ஆயிரத்தி இருநூறாம் ஆண்டு. அது தொடர்பாக சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் முப்பத்தைந்தாவது பீடாதிபதியாக இருந்த ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள் “ஸ்ரீ ஆதிசங்கரர் ரதத்தை” பாரத தேசம் முழுவதும் சுற்றிவர ஆசிதந்தார்கள் . காலடி துவங்கி கேதார்நாத் வரை செல்லும் அந்த “ஸ்ரீ சங்கரர் ரதத்திற்கு”ச் சேவை செய்வதற்காகத் தன்னார்வத் தொண்டர்களை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் வழக்கறிஞர் தியாகராஜன், அவன் உட்படப் பலர் இருந்தார்கள். அவன் 25.12.1986 முதல் 01.01.1987 வரை அந்த ரதத்துடன் தஞ்சாவூர், திருவையாறு, திருச்சி, சிதம்பரம், சுவாமிமலை, கும்பகோணம், பாண்டிச்சேரி, காஞ்சீபுரம், சென்னை போன்ற இடங்களுக்குச் சென்று வந்தான். தஞ்சாவூரில் இருந்து சென்னை வரை அந்த ரதத்தின் கூடவே ஸ்ரீ நாராயணானந்த பாரதீ சுவாமிகளும் வந்தார்கள். ஒவ்வொரு ஊரிலும் சுவாமிகள் ஸ்ரீ சங்கரரின் மேன்மைகளைக் கூறுவார்கள். அந்தப் பயணத்தின் பொழுது அவன் ஒலிபெருக்கியில் ஸ்ரீ சங்கரர் செய்த பணிகளையும், அவரது சிறப்பையும் உரக்கக் கூறி வந்தான். அவனது அந்தத் துடிப்பு சுவாமிகளுக்குப் பிடித்திருந்தது. ஒவ்வொரு ஊரிலும் ஓய்வு நேரத்தில் அவன் எழுதிய கவிதைகளைப் பற்றிக் கேட்டு உற்சாகப் படுத்துவார். சென்னைக்கு வந்ததும் ஸ்ரீ நாராயணானந்த பாரதீ சுவாமிகளைத் தங்கள் இல்லத்திற்கு “பிக்ஷைக்கு” வர வேண்டினான். அவரும் மிகுந்த அன்போடு,”வருகிறேன் விஸ்வநாதா” என்று, அவனது எளிய இல்லத்திற்கு வந்து அனைவரையும் ஆசீர்வதித்தார்.

    அவர் சென்னைக்கு வரும் சமயங்களில் அவன் அவரை சந்தித்து ஆசிபெருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படி ஒரு முறை சந்தித்த பொழுது,” நீ கவிஞன் ..எங்க ஊர்க் கவிஞர் வாலியை உனக்குத் தெரியுமா?” என்றார். அவன் “தெரியும்….பழக்கம் உண்டு” என்றான். “என்னுடைய பூர்வாச்ரம அண்ணாவும், வாலியும் ஸ்ரீரங்கத்து நண்பர்கள். அவரது “சமய புரத்தாளே சமயம் தாளே” என்ற பாட்டை நாங்கள் பாடுவோம்” என்று சொல்லி ,” அவரைப் பார்த்தால் இதைச் சொல்லுங்கள்” என்றார். அவன் அன்று மாலையே கவிஞர் வாலி அவர்களை இல்லத்தில் சந்தித்து விபரங்களைச் சொன்னான். “ஓ…அப்படியா..அவரது பூர்வாச்ரமப் பெயர் பத்ரி. ரொம்ப நல்லாப் பாடுவார். அவரது சகோதரரும் நானும் நண்பர்கள்… ” என்று மகிழ்ச்சியோடு சொன்னார். “”விஸ்வநாதா….அவர நான் பாக்கணும்..எங்க இருக்கார்” என்ற கவிஞர் வாலியிடம்,” தி.நகர் ஸ்ரீ சாரதாம்பாள் கோவில்லதான் இப்ப இருக்கார்” என்றான். மறுநாள் ஸ்ரீ நாராயணானந்த பாரதீ அவர்களை கவிஞர் வாலி சந்தித்து விட்டு வந்தார். இரவில் தொலைபேசியில் என்னை அழைத்து, “விஸ்வநாதா…சுவாமிகளை தரிசனம் செஞ்சுட்டு வந்தேன்…மனம் விட்டு ஊர் நினைவெல்லாம் பேசினோம்” என்றார். அவனுக்கு இதுபோன்ற நல்லோர்களின் தொடர்பு அமைந்ததால் தடம்புரளாமல் வாழ்க்கை வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது .

    அவன் ஒரு “காபி”ப் பித்தனாக இருந்தான். ஒரு நாளில் ஏழு, எட்டு காபிகள் குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தான். காலையில் எழுந்து பல்துலக்கியவுடன் காபி வேண்டும். இல்லை என்றால் கோபம் வந்து விடும். அப்படிப் பட்ட அவனுக்கு ஒரு சோதனை வந்தது. இரவில் தஞ்சாவூர் வந்த ஸ்ரீ சங்கரர் ரதம், மறுநாள் காலையில் புறப்பட வேண்டும். அதிகாலையில் ஸ்ரீ கணபதி ஹோமம் துவங்கப் போகிறது. காலை ஐந்து மணி இருக்கும், வக்கீல் தியாகராஜன் அவனிடம் ,”ஏய்…விச்சு …சீக்கிரம் குளிச்சுட்டுவா…ஹோமத்துக்கு ஏற்பாடு பண்ணனும்” என்றார். “காபி” குடிச்சுட்டு குளிக்கறேன் மாமா” என்றான். காபி வர நேரம் ஆகி விட்டது. தியாகராஜன் மாமாவும், இன்னொரு அன்பரும் குளித்துவிட்டு வேலைகளைச் செய்தது கொண்டிருந்தார்கள். அவனுக்கு வெட்கமாக இருந்தது. ” விச்சு …ஏண்டா இப்படி காப்பிக்கு அடிமையா இருக்கே…” என்று தியாகராஜன் மாமா கேட்க,” ஓய் ….இனிமே காபி குடிக்க மாட்டேன்.” என்று குளிக்கச் சென்று விட்டான். குளித்துவிட்டு வரும் பொழுது, மணக்க மணக்க காப்பியை ஒரு வாளி நிறைய ஒருவர் கொண்டு வந்தார். வாசனை இழுக்கத்தான் செய்தது. தியாகராஜ மாமா சிரித்துக் கொண்டே, “இந்தா உன்னோடு காபி..” என்றார். அவன் திடமாக மறுத்து விட்டான். அன்றிலிருந்து அவன் காபி, டீ குடிப்பதில்லை. 01.01.1987 முதல் வண்ண உடை அணிவதையும், தங்க நகைகள் அணிவதையும் விட்டுவிட்டான். வெள்ளை ஆடையைத்தான் விரும்பி அணிவான்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு அவனது நண்பனின் பெண் குழந்தை நிர்பந்தம் செய்ததால் கொஞ்சம் காப்பி குடித்தான். அதோடு சரி. அவனது மகனும், மகளும் ,”அப்பா எங்களுக்காக இந்த “கலர்” பனியனையாவது போட்டுக்கணும்” என்று அவர்கள் வாங்கித் தந்த கலர் பனியனைப் போட்டுக்கொண்டான். அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் .

    “வைராக்கியம்” அவனுக்கு எந்த ஜென்மாவிலோ? கிருஷ்ணார்ப்பண மஸ்து.

    17.11.2017 அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்……….

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (255)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். மற்றொரு வாரம் அதிவிரைவாக முன்னே வந்து கண்சிமிட்டிக் கொண்டிருக்கிறது. மனத்தில் ஓடும் எண்ணங்கள் மடல் வாயிலாக உங்கள் முன்னே விரல் வழி வடிந்து உதிக்கிறது. ஒரு நாட்டிலிருந்து வேறோர் நாட்டிற்குப் புலம்பெயர்வது என்பது ஏதோ இலகுவான காரியமன்று. இத்தகைய புலம்பெயர்வுகளின் காரணங்கள் பலவகைப்படுவதுண்டு. நாட்டின் போர்ச்சூழல்களில் இருந்து உயிர் தப்பிச் செல்வோர்கள் ஒரு வகையினர். கல்விக்காகப் புலம் பெயர்வோர்கள் ஒரு வகையினர். வேலைவாய்ப்புத் தேடி புலம்பெயர்வோர்கள் மற்றொரு ரகம் என ப்லவகையான் காரணங்களைக் காணலாம்.ஆனால் புலம் பெயர்ந்தபின் தாம் புகுந்த நாட்டில் தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதில் உள்ள சிரமங்களின் உண்மையான் தாக்கம் அத்தகைய ஒரு நிலையை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்களே சரியான் வகையில் உள்வாங்கியிருப்பார்கள்.

    ஒருவகையான கலாசார சூழலில், வித்தியாசமான காலநிலைகளின் மத்தியில் வாழ்ந்துவிட்டு முற்றிலும் புதிதான ஒரு கலாசார சூழல் மற்றும் காலநிலை மாற்றம் என்ப்வனவற்றிற்கு ஏற்ப எம்மை மாற்றிக் கொள்வது என்பது ஒன்றும் சுலபமான காரியமல்ல; அதுவும் குறிப்பாக நிறவேறுபாடு கொண்ட ஒருநாட்டில் எம்மை இணைத்துக் கொள்ளும்போது அந்நாட்டில் வாழும் சிறுபகுதியான நிறவெறி, இனவெறி கொண்ட மக்களின் காழ்ப்புணர்ச்சிகளின் மத்தியில் எமக்காக ஓர் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும்போது ஏற்படும் இடர்களைச் சமாளிப்பது ஒரு பெரிய சவாலாகவே இருக்கும். சில சமயங்களில் அவசரம், அவசரமாக அகதிகளாகத் தாம் பிறந்த நாட்டை விட்டுவிட்டு ஓர் அந்நிய நாட்டினுள் புலம்பெயரும்போது அந்நாட்டின் மொழி எமக்கு அந்நியமானதாக இருப்பின் அம்மொழியைக் கற்றுக் கொள்ளும்வரை வாழ்க்கை என்பது ஒரு மாபெரும் போராட்டமே!

    நாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் ஒவ்வொன்றும் புலம்பெயர் மக்களாகிய எமது வாழ்வில் எத்தகைய தாக்கங்களைத் தோற்றுவிக்கப் போகிறது என்பதனை உன்னிப்பாகக் கவனித்து வாழவேண்டிய தேவையிருக்கிறது. நாம் வாழும் சமுதாயத்தை விட்டு எம்மை அந்நியப்படுத்தி வாழ்வது என்பது முடியாத காரியம். ஓரளவிற்கு எமது வாழ்க்கைச் சூழலை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் நாமும் நாம் வாழும் நாடுகளின் அடிப்படைச் செயற்பாடுகளில் எம்மை இணைத்துச் செயல்படுத்தி வாழ்வேண்டியது காலத்தின் கட்டாயமாகக் கருதப்படுகிறது. எமக்கென ஒரு தனியான வட்டத்தை ஏற்படுத்தி எம்மவர் மத்தியில் மட்டுமே நாம் எமது உறவுகளைப் பலப்படுத்தி வாழ்ந்துவிட்டு நாம் இப்புலம்பெயர் நாடுகளில் இரண்டாம்தரப் பிரஜைகள் போல நடத்தப்படுகிறோம் என்று கூச்சலிடுவதால் பலனேதும் ஏற்படப்போவதில்லை. எம்மை அந்நியப்படுத்தி வாழும்போது நாம் வாழும் நாட்டு மக்க்களின் பார்வை உன்னிப்பாக எம்மீது விழுவதும், அவ்வித்தியாசங்களை அரசியல் லாபங்களுக்காக வேறுபாடுகளை முதன்மைப்படுத்தி அரசியல் நடத்தும் சிலரின் கைகளில் நாம் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுவதும் தவிர்க்கப்பட முடியாததாகி விடுகிறது.

    இப்படியான சூழலில் இன்று நாம் பல புலம்பெயர் மக்கள் வெற்றியான வாழ்க்கையைத் தமதாக்கிக் கொள்ளும் ஒரு நிலையைப் பார்க்கிறோம். இத்தகைய சாதனையாளர்களின் மனவைராக்கியத்தையும், இலட்சிய வேட்கையையும் வியந்து பாராட்டாமலிருக்க முடியாது. வாழ்க்கை தம்மீது தூக்கிப் போடும் அத்தனை தடைக்கற்களையும் படிக்கட்டுகளாக்கித் தமது முன்னேற்றம் தமக்கு மட்டுமல்ல தாம் வாழும் நாட்டுக்கும் பெருமை தேடித்தரும் ஒன்றாக ஆக்கி உதாரண புருஷர்களாக வாழ்வைதைக் காணும்போது அவர்கள் வாழ்க்கை ஒவ்வொரு புலம்பெயர் மனிதருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைவது இயற்கையே. இம்மடல்மூலம் அத்தகைய ஒரு சாதனையாளரின் வாழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே எனமது மனத்தில் இவ்வாரம் இழையோடும் எண்ணமாகிறது.

    யார் அவர் ?

    1983ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி தற்போதைய “ஸொமாலிலாண்ட் (Somaliland)”எனப்படும் நாட்டிலே “கபீலி” எனும் இடத்தில் “கவீர் அவால் LONDON, ENGLAND - AUGUST 04: Mo Farah of Great Britain celebrates winning gold in the Men's 10000 metres final during day one of the 16th IAAF World Athletics Championships London 2017 at The London Stadium on August 4, 2017 in London, United Kingdom. (Photo by Shaun Botterill/Getty Images)இசாக்” குடும்பத்தில் பிறந்தவர் “மோ ஃபரா (Mo Farah)” ஆனில ஜந்து என்றழைக்கப்படும் “மொகமட் முக்தார் ஜெமா ஃபரா (Mohamed Muktar Jama Farah ) “ இவரது பாட்டனார்.  “ஜெமா” அந்நாளில் இங்கிலாந்தின் கீழிருந்த ஸொமாலியாவிலிருந்த ஒரு பிரித்தானியப் பிரஜையாவர். இவரின் தந்தை “முக்தார் ஃபரா”லண்டனில் பிறந்த ஒரு ஸொமாலிய இனத்தவர். விடுமுறையில் அவர் மோ ஃப்ராவின் தாயரைச் சந்தித்து திருமணம் புரிந்தார். எட்டு வயதுவரை ஸொமாலிய நாட்டிலேயே வாழ்ந்து வந்த மோ ஃப்ரா , எட்டு வயதில் இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்தார். தான் இங்கிலாந்துக்குள் நுழைந்தபோது தனக்கு ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாது என்று கூறுகிறார். இவர் இங்கிலாந்தில் Feltham எனும் இடத்திலுள்ள Isleworth and Syon school எனும் பள்ளியிலும், பின்பு Feltham Community College எனும் கல்லூரியிலும் கல்வி பயின்றார். படிக்கும்போது ஒரு கார் மெக்கானிக்காகவோ அன்றித் தனது விருப்பத்துக்குரிய உதைபந்தாட்டக் குழுவான Arsenal உதைபாந்தாட்டக் குழுவில் உதைபந்தாட்டம் விளையாட வேண்டும் என்றே கனவு கண்டதாகக் கூறுகிறார்.

    ஆனால் காலதேவனின் கணக்கோ வேறு. இவர் பயின்ற கல்லூரியின் விளையாட்டுப் பயிற்சியாளர் இவரின் ஓட்டப்பந்தயத் திறமையை இணங்கண்டார். இவர் தனது பதின்மூன்றாவது வயதில் கவுன்சிலோ நகரைப் பிரதிநிதிப்படுத்தி லண்டன் இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற்று மரதன் ஓட்டப் போட்டியில் ஒன்பதாவதாக வந்தார். அதற்கடுத்த வருடம் அவர் ஐந்து ஆங்கிலப் பள்ளிக்கூடங்களுக்கான ஓட்டப் போட்டியில் முதலாவது பரிசினைப் பெற்றார். இவரது திறமையை அறிந்த ஒரு செல்வந்தரான Eddie Klukundis என்பவர் இவர் இங்கிலாந்துப் பிரஜையாவதற்குரிய தொகையினை நன்கொடையாகக் கொடுத்து இவரைச் சட்டபூர்வமாக

    Four-time Olympic champion Sir Mo Farah with wife Tania after he was awarded a Knighthood by Queen Elizabeth II at an Investiture ceremony at Buckingham Palace, London. PRESS ASSOCIATION Photo. Picture date: Tuesday November 14, 2017. See PA story ROYAL Investiture. Photo credit should read: Jonathan Brady/PA Wire

    இங்கிலாந்துப் பிரஜையாக்கினார். அதைத் தொடர்ந்து பல ஐரோப்பிய மற்றும் உலக ஓட்டப் பந்தயங்களின் நீண்டதூர ஓட்டப் பந்தயங்கள் பலவற்றில் பங்குபற்றி இங்கிலாந்து நாட்டுக்கும், தனக்கும் பல வெற்றிகளையும் , பதக்கங்களையும் வாங்கிக் குவித்தார்.  எமது நாட்டு ஓட்டப் பந்தயவீரர் என்று அனைத்து இங்கிலாந்து நாட்டு மக்களாலும் உரிமை கொண்டாடப்பட்ட ஒரு கறுப்பு இனத்தவர் எனும் பெருமையைத் தேடிக் கொண்டார். ஒலிம்பிக் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களைத் தட்டிக் கொண்ட இவர் கடைசியாக நடந்து முடிந்த ஓலிப்பிக் பந்தயத்துடன் தனது ஓய்வினை அறிவித்தார். மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான இவர் இங்கிலாந்துக்கும், தான் பிறந்த ஸொமாலிய நாட்டிற்கும், இஸ்லாமிய மக்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார்.

    எனது எண்ண முற்றத்தின் முன்றிலில் இவர் நினைவுகள் தவழ்வதற்குக் காரணம் சில தினங்களுக்கு முன்னால் இவருக்கு இங்கிலாந்து மகாரணியாரால் “சார்” பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டமையேயாகும்.

    எட்டுவயதுச் சிறுவனாக , ஆங்கில வார்த்தை ஒன்றுகூடத் தெரியாமல் இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்து இன்று மகாராணியாரால் “சார்” பட்டம் பெற்ற “மோ ஃப்ரா” அனைத்துப் புலம்பெயர் மக்களுக்கும் ஒரு புத்துணர்ச்சியாக, முன்னுதாரணமாக விளங்குகிறார் என்றால் அது மிகையாகாது அல்லவா?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 11

    -மேகலா இராமமூர்த்தி

    தோழியின் யோசனைக்குப் பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள் தலைவி. அவளை அவசரப்படுத்த வேண்டாம் எனக் காத்திருந்தாள் தோழியும். காலம் கடுகிச் சென்றுகொண்டிருந்ததேயொழியத் தலைவியோ வாய்திறப்பவளாகத் தெரியவில்லை. எந்த முடிவுக்கும் வரமுடியாமல் அவள் தடுமாறிக்கொண்டிருந்ததை உணர்ந்த தோழி மீண்டும் பேசலுற்றாள்…

    ”அருமைத் தோழி! உடன்போக்கைத் தவிர வேறெந்த வழியிலும் இப்போது நீ தலைவனை அடைய இயலாது!

    ”நான் சொல்வதைக் கேள்! நம் ஊருக்கும் தலைவர் indian gooseberryஊருக்கும் இடையே உள்ள வழி இனிமையானது; நெல்லிக்காய்கள் நிறைந்தது. அவ்வழியில் வானைத் தொடும் உயர்ந்த மலையின் அடிவாரத்தில், கரும்புப் பாத்தியில் தேங்கியிருக்கும் நீர்போல, காட்டு யானைகளின் அடிகள் புதைதலால் உண்டாகும் பள்ளங்களில் நீர் நிறைந்திருக்கும். நீ அவ்வழியே நெல்லிக்காய்களைத் தின்று, உன் கூரிய பற்கள் ஒளிபெறுமாறு நீரை அருந்தித் தலைவனோடு உடன்போக்கை மேற்கொள்ளுதலை நான் விரும்புகின்றேன்!

    நீ போனபின் நம்மூரில் என்ன நடக்கும் என்றுதானே யோசிக்கிறாய்? நீ தலைவனோடு போனதுகுறித்து ஊரில் அலர் தூற்றுவர்; நம் சேரியிலுள்ளோர் (கல்லெனும் ஒலியெழ) வசைமாரிப் பொழிவர். அவர்களால் வேறென்ன செய்யமுடியும்? அற நினைவில்லாத நம் அன்னை தன் மனையில் தனியே கிடந்து புலம்பட்டும்!

    இதுகுறித்தெல்லாம் நீ கவன்றால் தலைவனோடு இணையும் இல்லற வாழ்வை இழப்பாய்! எனவே இதுபோன்ற வசைமொழிகளுக்கெல்லாம் அசையாதே! இறுதியில் நீ இன்ப வாழ்வைக் காண்பது உறுதி!” என்று பலபடக் கூறித் தலைவியை ஒருவாறு உடன்போக்குக்கு உடன்பட வைத்தாள்.

    ஊர்உ   அலரெழச்  சேரி  கல்லென
    ஆனாது  அலைக்கும்  அறனில்  அன்னை

    தானே  இருக்க  தன்மனை  யானே
    நெல்லி  தின்ற  முள்ளெயிறு  தயங்க
    உணலாய்ந்  திசினால்  அவரொடு  சேய்நாட்டு
    விண்தொட  நிவந்த  விலங்குமலைக்  கவாஅற்
    கரும்புநடு  பாத்தி  யன்ன
    பெருங்களிற்  றடிவழி  நிலைஇய  நீரே. (குறுந்: 262 – பாலை பாடிய பெருங்கடுங்கோ)

    இக்குறுந்தொகைப் பாடலை அடியொற்றிய பழஞ்செய்யுளொன்று ’தமிழ்நெறி’ எனும் நூலிலிருந்து மேற்கோளாகக் கிடைத்திருக்கின்றது. (இந்நூலின் காலம், ஆசிரியர் பெயர் போன்ற பிற தகவல்கள் கிட்டவில்லை.)

    ஊருஞ் சேரியும் அலரெழ யாயும்
     தானே  யிருக்க  தன்மனை  யானே
    திருந்துவேல்
     விடலையொடு  கெழீஇ
     அருஞ்சுரஞ்  சேறல்  புரிந்தனன்  இனியே”      (தமிழ்நெறி. மேற். 92)

    ’நெல்லியைத் தின்று நீர்குடித்தால் நாவினிக்கும்’ என்பதைக் கூறும் பாடல்கள் வேறுசிலவும் நம் அகவிலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.

    ”…புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்
    நீர்குடி
    சுவையில்…”  (அகம்: 54)

    ”…..சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர்
    வீழ்கடைத்
     திரள்காய்  ஒருங்குடன்  தின்று
    வீசுனைச்
     சிறுநீர்  குடியினள்…..”  (நற்: 271)

    தலைவனொடு செல்லத் தலைவியின் ஒப்புதல்பெற்ற தோழி அடுத்து தலைவனைச் சந்திக்கப் புறப்பட்டாள். முதன்முதலில் அவனைச் சந்தித்த மலையருவி ஓரமே மீண்டும் அவனைக் காணும் வாய்ப்பினைப் பெற்றாள்.

    தலைவியும் தோழியும் இருதலைப் புள்ளாய் இணைந்திருத்தலையே இதுவரை கண்டிருந்த தலைவன், தோழிமட்டும் தனியே வருவதைக் கண்டு வியந்தான்.

    தலைவனுக்கு அணித்தே வந்த தோழி, ”ஐய! நலந்தானே?” என்று உசாவினாள்.

    ”நலமே நங்காய்! தலைவி எப்படி இருக்கிறாள்? அவளின்றி உனைநான் தனியே காண்டல் இதுவே முதன்முறை” என்றான் வியப்பு மாறாமல்.

    ”அன்ப! தலைவி நலமாயிருக்கிறாள் என்று நான் பொய்யுரைக்க ஏலாது! உம்மைக் காணாது அவள் தொல்கவின் தொலைந்து, தோள்மெலிந்து வாழ்வதிலே நாட்டமின்றி வாட்டமுற்றிருக்கிறாள். அவள் துயரை மேலும்கூட்டும் வகையில் அவளுக்கு அயல்மணங்கூட்ட முடிவுசெய்துவிட்டனர் அவள் தமர்” என்று கூறிவிட்டுத் தலைவனின் முகத்தை ஏறிட்டாள்.

    திடுக்கிட்ட தலைவன், ”என்ன? அயலானோடு என் தலைவிக்கு மணமா? அவள் அதற்கு இசைந்துவிட்டாளா?” என்றான் ஐயத்தோடு.

    ”தலைவ! கற்புக்கடம்பூண்ட எம் பொற்புடைத் தலைவி உம்மையே தன் மணாளனாய் மனத்தில் வரித்துவிட்டவள்; வேறொரு மானிடவனுக்கென்று பேச்சுப்படில் அவள் வாழகில்லாள்!” என்று சீறினாள் தோழி.

    ”சினவாதே பெண்ணே! தலைவியை அயலானுக்கு மணமுடிக்க இசைந்துவிட்ட அவள் பெற்றோர், இப்போது நான் அவளை மணம்பேசச் சென்றால் அதனை ஏற்றுக்கொள்வார்களா?” என்றான் குழப்பத்தோடு!

    ”இல்லை! இனி உம்மோடு தலைவிக்கு மணம்நிகழ்த்த அவள் பெற்றோர் ஒருப்படப் போவதில்லை; ஆனால் அவளை நீர் மணக்க வேறோர் உபாயம் உண்டு!” என்ற தோழியைப் பார்த்து, ”என்ன அது?” என்றான் தலைவன் பரபரப்போடு.

    அதுதான் ’உடன்போக்கு’ என்று தலைவிக்குச் சொன்னதையே திரும்பத் தலைவனுக்கும் சொன்னாள் தோழி.

    துணுக்குற்ற தலைவன்… ”முறையாகத் தலைவியை மணக்க எண்ணியிருந்தவனைக் கள்வனைப்போல் அவளைக் கடத்திக்கொண்டு போ என்கிறாயே… இது முறையா?” என்றான் வருத்தம் மேலிட.

    ”வேறு வழியில்லை! என் ஆருயிர்த்தோழியின் மனம்விரும்பும் மணவாழ்வே எனக்கு முக்கியம். அதற்கான ஒரேவழி தலைவியை நீர் உம்மோடு கொண்டுதலைக் கழிதலே (உடன்போக்கு) என்றாள் தீர்மானமாக!

    ”அழைத்துச் செல் என்று நீ எளிதாய்ச் சொல்லிவிட்டாய். கல்லும் முள்ளும் கடும் வெப்பமும் பாதங்களைப் பதம்பார்க்கும் பாலைவழியில், மலரினும் மெல்லியளான தலைமகள் எங்ஙனம் நடப்பாள்; அவ்வழியை எப்படிக் கடப்பாள்?” என்றான் தலைவன் தயக்கத்தோடு.

    ”அன்ப! நீரில் வளர்வது குவளை (blue waterlilies); தன் தாளில் நீர் நிறைந்திருக்க மலர்ந்திருக்கும் அப்பூவானது, Blue Water Lilyமேல்காற்று தன்மேல் மோதுவதனால் வாடிப்போவதில்லை. கவண்போன்ற நுகத்தின் பிணிப்பால் வருந்துதலையுடைய உப்பு வாணிகரின் எருதுகள் பூட்டிய வண்டிகளின்  தொகுதியை வரிசையாய் வைத்தாற்போன்ற உலர்ந்த மரக்கிளைகளை  பிளத்தற்கு வலியின்மையால் யானை தன் துதிக்கையை மடித்து வருந்துகின்ற  பாலைநிலங்களும் நும்மோடு வந்தால் தலைவிக்கு இனிமையுடையனவே” என்றாள் தோழி முறுவலோடு.

    நீர்கால்  யாத்த  நிரையிதழ்க்  குவளை
    கோடை  ஒற்றினும்  வாடா  தாகும்
    கவணை  அன்ன  பூட்டுப்பொரு  தசாஅ
    உமணெருத்  தொழுகைத்  தோடுநிரைத்  தன்ன
    முளிசினை  பிளக்கு  முன்பின்  மையின்
    யானை  கைமடித்  துயவும்
    கானமும்  இனியவாம்  நும்மொடு  வரினே. (குறுந்: 388 – ஔவையார்)

    குவளை மலரில் மேல்காற்றுப்பட்டு அதனை வாடவைக்க முயன்றாலும், அதன் தாளடியில் இருக்கின்ற தண்ணீரால் அது வாடாமலிருப்பதுபோல், பாலை வழிகள் தலைவியின் மென்பாதங்களுக்குத் துன்பம் தந்தாலும், தலைவனொடு செல்வதால் அவையும் அவளுக்கு இனியனவே என்ற தோழியின் சாமர்த்தியமான பதில் தலைவனை மேலும் மறுத்துப் பேசவொட்டாமல் தடுத்துவிட்டது.

    இங்கே வேறோர் நிகழ்வை நாம் பொருத்திப் பார்க்கலாம்…

    கைகேயின் விருப்பப்படி இராமன் காடேக ஆயத்தமாகின்றான். சீதையும் உடன் வருவேன் என்று அடம்பிடிக்கின்றாள். ”நெருப்புப் போன்ற வெம்மையோடு கல்லும் முள்ளும் பொருந்திய காட்டில் உன் மலரடியால் நடத்தல் இயலாது” என்று இராமன் அவளைத் தடுக்கப்பார்க்க, அவளோ, ”உன்னால்வரும் பிரிவுத் துயரெனும் வெம்மைக்கு ஊழிக்காலத்துச் சூரிய வெப்பமும் ஈடாகாது; அப்படியிருக்க உன் பிரிவினும் என்னைச் சுடுமோ அந்தப் பெருங்காடு?” என்று அவனை மடக்கிவிடுகின்றாள்.

    ‘பரிவு இகந்த மனத்தொடு பற்றுஇலாது
    ஒருவுகின்றனை ஊழி அருக்கனும்
    எரியும் என்பது யாண்டையது ஈண்டுநின்
    பிரிவினும் சுடுமோ பெருங்காடு?
     (அயோத்தியா காண்டம்,  நகர்நீங்கு படலம் 221.) 

    ஔவையாரின் மேற்கண்ட குறுந்தொகைப்பாடலில், ”உன்னோடு வந்தால் கானமும் இனியவே எம் தலைவிக்கு” என்கிறாள் தோழி. கம்பனின் சீதையோ “உன் பிரிவைவிடவா கானம் என்னைப் பெரிதாகச் சுட்டுவிடும்?” என்று கேட்கிறாள். ஔவையின் நோக்கும், கம்பரின் சிந்தனைப் போக்கும் ஒன்றுபோலவே இருப்பது வியப்பளிக்கின்றது.

    ஒருவழியாகத் தலைவனையும் உடன்போக்குக்கு ஒத்துக்கொள்ள வைத்துவிட்ட தோழி, தன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவனிடம் விவரிக்கலானாள்!

    [தொடரும்]

     

     

    Share