Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    MANASA SANJARARE….!

    171124 -Vanamali -mixed media - lr Charcoal, conte - 15”x22”

    “வனமாலை சூடி வசுக்களை மேய்க்கும்
    கனவானே மன்னார் குடிசேய், -மனவான்,
    வெளிதனில் சஞ்சாரி ,வேய்ங்குழல் ஊதும்
    களிமிகு கண்ணனே காப்பு “….கிரேசி மோகன் ….!

    ”பராக்பராக் கண்ணன் பரந்தாமன் மன்னன்
    பராக்பராக் கேசவ் பிரஷ்ஷில் -பராக்கெங்கும்
    இன்னாரென்று பாராதே எங்கும் இருக்கின்றான்
    மன்னார் குடிமைனர் மால்”….!

    ”வில்டாப் விஜயனுக்கு வீரம் விளைவித்து
    ஃபுல்ஸ்டாப் நூறுக்குப் போட்டவன் -அல்டாப்பாய்
    கண்ணார்வம் கொண்டிங்கு கோதைக்காய் காத்திருக்கான்
    மன்னார் குடிமைனர் மால்’’….!
    ஓவியப் பிதாமகர் திரு.கோபுலு சார் நமது கேசவ்ஜிக்கு ‘’கிருஷ்ணப் பிரேமி’’ என்ற பட்டத்தை அளித்துள்ளார் என்பதை சந்தோஷத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்….(கேசவ் வெகு கூச்சத்துடன் என்னிடம் இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டது அடியேன் செய்த பாக்கியமே)….
    ’’யாரென் றுதெரியுதா! , யாதவன் தானிவன்மன்
    னார்குடி கோபுலு மாடோடு- சாரே!(மலையாள ‘’சாரே’’)
    கிருஷ்ணனை டெய்லி தருகின்ற கேசவ்,
    ‘’கிருஷ்ணப் பிரேமி கரெக்ட்’’….கிரேசி மோகன்….

     

    Share
  • மெய்நிகர் மருத்துவர்

    நிலவளம் கு.கதிரவன்

    ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை வழக்கம்போல் நண்பருடன் நடை பயிற்சியில் இருக்கும்போது, வழக்கமாக உற்சாகமாக பேசிக் கொண்டு வரும் நண்பர் சற்று மலர்ச்சியற்ற முகத்துடனே வருவதைக் கண்டேன். அவரிடம் என்ன நண்பரே என்ன பிரச்சினை, எதுவும் பேசாமல் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக வருகின்றீரே என்றேன். என்னத்த சொல்லச் சொல்றீங்க? மனைவியின் மன அழுத்த பிரச்சினைக்கு ஆறு மாசமா அலையோ அலைனு டாக்டர்கிட்ட அலையிறேன். ஒன்னும் குணமான பாடு இல்லை. டாக்டர்கிட்ட தப்பா? இல்லை, என் மனைவி ஒழுங்கா மருந்தை எடுத்துகிடறாளா? என்று ஒரே குழப்பமா இருக்கு என்றார் நண்பர்.

    நான் சிரித்துக் கொண்டே, அதற்கெல்லாம் ஒரு முடிவு வந்துவிட்டது நண்பா. உங்க மனைவி ஒழுங்கா மருந்து எடுத்துகிடறாங்களா, இல்லை மறதியில விட்டுடுறாங்களா என்பதைப் பற்றியெல்லாம் துல்லியமா தகவல் கொடுக்குற டிஜிட்டல் மாத்திரை சந்தைக்கு வந்தடுச்சி. கவலைய விடுங்க. எங்க பிரச்சினைனு கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம் என்று நண்பரை ஆற்றுப் படுத்தினேன்.

    ஆம். மருத்துவ உலகில் ஒரு புரட்சியாக டிஜிட்டல் மாத்திரையை சந்தைப்படுத்த, மிக சமீபத்தில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக நிறுவனம் ( Food and Drug Administration ) அனுமதியளித்துள்ளது. இதில் என்ன விசேஷம்? ஏற்கெனவேதான் டிஜிட்டல் மாத்திரைகள் உள்ளதே, என்கிறீர்களா? விசேஷம் உள்ளது நண்பர்களே.

    உலகிலேயே முதல் முறையாக மாத்திரையுடன் எண்ம உணரியை ( Digital Sensor ) இணைத்து தயாரிக்கப்பட்டு அமெரிக்க அரசின் அனுமதியோடு ஒரு வாரத்திற்கு முன்னர்தான் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

    மாத்திரையுடன் சென்சாரை இணைக்க வேண்டிய அவசியம் ஏன்? :

    பொதுவாக உலகில் வாழும் மக்களில் பலர் பல்வேறு நோய்களுக்கு மருந்துகளை உட்கொள்கின்றனர். உதாரணமாக உயர் ரத்த அழுத்தம், டைப்-2 சர்க்கரை குறைபாடு, மன நலம், மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு டாக்டர்கள் அளிக்கும் மருந்துகளை தொடர்ச்சியாக உட்கொள்ள தவறிவிடுகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் வழியாக உறுதிப்படுத்தியுள்ளனர். நோயாளிகளில் பலர் நோய்களின் தன்மை பற்றி அறியாதவர்களாகவும், மறதி மற்றும் பக்க விளைவு, நோயாளி-அக்றையாளர் இடையிலான புரிந்துணர்வின்மை அல்லது மருத்துவர்-நோயாளி இடையிலான பிரச்சினை போன்ற பல காரணங்களை ஆய்வு முடிவுகள் பட்டியலிடுகின்றன. இதன் காரணமாக நோயாளிகளின் நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும்பொழுது நீண்டநாள் சிகிச்சை, அதிக செலவினம், மற்றும் உயிரிழப்பு போன்ற பேராபத்துகள் நிகழ்கின்றன. உயிரிழப்புடன் மருந்துகளுடன் ஒத்திசைவு இல்லாததால் ( Nonadherence ) ஆண்டுக்கு அமெரிக்காவில் மட்டும் 300 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதாகவும், உலக அளவில் இது இரண்டு மடங்கு இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஓட்சுகா – ப்ரோட்டஸ் இணைந்த ஆராய்ச்சி :

    டாக்டர்கள் அளிக்கும் மருந்துகளை தொடர்ச்சியாக நோயாளிகள் உட்கொள்ள தவறுவதற்கான காரணங்களை ஆராய, ஜப்பானின் ஓட்சுகோ மருந்து நிறுவனம்( Otsuka Pharmachutical company ), மற்றும் அமெரிக்காவின் ப்ரோட்டஸ் டிஜிட்டல் நிறுவனமும்( Protus Digital Company ) இணைந்து ஆப்ளிஃபை மைசைட் ( Ablify Mycite ) என்ற மாத்திரையை நீண்ட ஆய்வுக்குப் பின்னர் உருவாக்கி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிறுவனத்தின் அனுமதியை பெற்றுள்ளனர். ஓட்சுகா நிறுவனம் ஏற்கெனவே 2002 முதல் சென்சார் இல்லாமல் ஆப்ளிஃபை மாத்திரையை சந்தைப்படுத்தி வருகிறது. இது ஸ்கிசோபெர்னியா என்ற மனச் சிதைவு நோய் ( Schizophrenia ) பிரச்சினைக்காகவும், மனநோய் மற்றும் மனத் தளர்வு குறைபாடான இருமுனை நோய்க்கான சிகிச்சைக்காகவும்(Bipolar Disorder ), மன அழுத்தம் ( Depression ) தீர்வதற்கான சிகிச்சைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட நோய்க் குறைபாடு உடையவர்கள் தொடர்ச்சியாக மருந்து எடுத்துக் கொள்ளத் தவறுகின்றனர். ஞாபக மறதி மற்றும் நோய்க்கான அடிப்படை காரணத்தை புரிந்துகொள்ள இயலாமை போன்ற காரணங்களால் இக்குறைபாடு நிகழ்கிறது. இதை தடுக்கும்வண்ணம் அமெரிக்காவின் ப்ரோட்டஸ் நிறுவனம் ஒவ்வொரு மாத்திரையுயுடன் சென்சாரை இணைத்து ஆப்ளிஃபை மைசைட் என்ற பெயருடன் நோயாளிகளுக்கு வழங்குகின்றனர்.

    ஆப்ளிஃபை மைசைட் எப்படி இயங்குகிறது?

    ஆப்ளிஃபை மைசைட் என்ற மாத்திரையானது சென்சார், காப்பர், மெக்னீசியம் மற்றும் சிலிக்கான் போன்ற பாதுகாப்பான உணவுக் கலவை கலந்து உருவாக்கியதாகும். இது நோயாளி, உணரி, ஆண்ட்ராய்டு செல்பேசி அல்லது ஐ-பேட் ஆகியவற்றோடு இணைந்ததாகும். முதலில் ஒரு மாத்திரை நோயாளிக்கு அளித்தவுடன், உட்கொண்டவுடன் வயிற்றில் உள்ள அமிலத்துடன் சேர்ந்து கரையத் தொடங்கும். கரையத் தொடங்கியவுடன், சென்சார் எலக்ட்ரிக்கல் சிக்னல் உதவியுடன் தகவல்களை நோயாளி வயிற்றில அணிந்திருக்கும் சென்சார் பேட்சுடன் ( sensor patch ) இணைந்து தகவல்களை ஆராய்ந்து சேகரித்து, அங்கிருந்து நோயாளியின் ஆண்ட்ராய்டு போனுக்கு தகவல்களை அனுப்பும். அனுப்பிய தகவல்களை சேகரித்து சம்பந்தப்பட்டவரின் அனுமதியுடன் டாக்டருக்கோ அல்லது நோயாளியை கவனித்துக் கொள்பவருக்கோ ( care taker) அளிக்கலாம். சரி. எந்தவிதமான தகவல்களை அனுப்புகிறது? நோயாளி தொடர்ச்சியாக மருத்துவர் அளித்த மாத்திரைகளை உட்கொண்டாரா, உட்கொள்ள தவறிய நாட்கள், அவரின் ரத்த அழுத்தம், நடை, நடத்தை, ஓய்வு போன்ற தகவல்களை அனுப்புகிறது. இதன் மூலம் மருத்துவர் தொடர் சிகிச்சை அளிக்க வசதியாகிறது.

    ஆப்ளிஃபை மைசைட் மாத்திரையின் பயன்கள்:

    1. நோயாளி மருத்துவர் அளிக்கும் மாத்திரைகளை விடுதலின்றி தொடர்ச்சியாக உட்கொள்ள உதவி புரிகிறது.

    2. நோயாளிக்குரிய நோய் முற்றாத நிலையில் குணப்படுத்த வழி ஏற்படுகிறது.

    3. ரத்த அழுத்தம், காச நோய், அல்சைமர், பல்வேறு மனநோய்கள், மன அழுத்தம் உள்ள நோயாளிகள் ஞாபக மறதியால் மருந்து உட்கொள்ள தவறுவதை இதன் வழியாக கண்டறியலாம்.

    4. நீண்டநாள் மருத்துவமனை வாசத்தை தவிர்க்கலாம்.

    5. நோய் முற்றி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.

    6. மருந்து உட்கொள்ளும் ஒத்திசைவை தொடர்வதன் வழியாக பெரும் செலவினங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    குறைபாடுகள் :

    1. தனி நபரின் அந்தரங்கம் கசிய வழி ஏற்படுகிறது.

    2. Big-Data என்னும் பெரும் தரவுகளை வைத்துக் கொண்டு எண்ணற்ற மருந்து நிறுவனங்கள் இதே போன்று பலவகை மாற்று மருந்துகளை கண்டறிந்து சந்தைப்படுத்த முனையலாம்.

    3. பெரும்பாலும் தாமும், தமது நோய் பற்றிய தரவுகளும் கண்காணிக்கப்படுவதை நோயாளிகள் விரும்பமாட்டார்கள்.

    முடிவுரை :

    மன அழுத்தம், மனச் சிதைவு, மனத்தளர்வு, ஆட்டிசம் போன்ற நோய் தாக்கியவர்கள் இத்தகைய மருந்துகளை எடுத்துக் கொள்ள மறந்துவிடும் வாய்ப்பு அதிகம். அத்தகையவர்களுக்க இந்த டிஜிட்டல் மாத்திரை மிகப் பேரளவில் பயன்படும். சென்சார் வசதியுடனான தகவல் அளிக்கும் வழிமுறையானது நோயாளியின் மனநிலை மற்றும் சிகிச்சை அளிக்கும் மருத்துவராலேயே கண்டறிய முடியாத தரவுகளை இதன் மூலம் கண்டறிந்து தொடர்ச்சியான, நீடித்த சிகிச்சை அளிக்க வழி ஏற்படுகிறது. தற்பொழுது ஆய்வுத் தரவுகளின்படி உயர் ரத்த அழுத்தம், டைப்-2 நீரிழிவு நோய், காச நோய் போன்ற நோயாளிகளுக்கு தொடர்ச்சியான நீடித்த மருத்துவ சிகிச்சை அவசியமாகும். அந்த வகையில் இந்த டிஜிட்டல் மாத்திரை ஒரு மருத்துவருக்கு நிகரான மெய் நிகர் மருத்தவராகவே ( Virtual Doctor ) செயல்படுவதால் நாம் இதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். மேலும் படிப்படியான பயன்பாட்டின் மூலமே இதன் வெற்றி தோல்வி தெரிய வரும் என்றாலும், இதன் மீதான மேலதிக ஆய்வுகள் தொடர்ச்சியான மற்ற நோய்களுக்கும் இந்த வகையான மாத்திரைகள் கண்டறியப்பட்டால் அது மருத்துவ உலகின் புரட்சியாகவே கருதப்படும்.

    ••••••••••••••••••••••••••••••••

    Share
  • மகாசக்திக்குப் பிரார்த்தனை

    விவேக் பாரதி

     

    Aadi-Sakti-parvati-Mata

     

    அம்பிகே சிவசக்தி – எனை
    ஆட்டுவிக்கும் காலம் எத்தனையோ?
    அம்படி நானுனக்கு! – எனை
    ஆற்றலோ டேவிடும் வில்லடிநீ!!
    நம்பினேன் உள்ளவரை – அவர்
    நாளெலாம் நடித்திடக் காணுகையில்
    வெம்பினேன் மனதுக்குள்ளே – இந்த
    வேதனை மாய்ந்திட வழியிலையோ?

    உள்ளமாம் அகழியிலே – நான்
    உள்ளொரு முதலைபோல் உழன்றிடவே
    தெள்ளிய ஞானமெனும் – ஒளித்
    தேரெனைக் கூப்பிடும் நாள்வருமோ?
    பள்ளெலாம் உன்புகழ்தான் – என்
    பாட்டெலாம் கூத்தெலாம் உன்பெயர்தான்
    துள்ளும்வேல் கொடுத்தெனையும் – தொடும்
    துக்கமும் நீங்கிடத் துணைபுரியே!!

    பற்றிலா வாழ்வுகொடு – இப்
    பாரினைப் பாடிடும் வலிமைகொடு
    ஒற்றிலா நெஞ்சுகொடு – உன்
    ஓங்கார ஓசையின் சந்தம்கொடு
    முற்றிலா இன்பம்கொடு – சுக
    முக்தியிலே எனை மூழ்கவிடு!
    கற்றிலேன்! கல்விகொடு! – புவிக்
    கயமையைப் போக்கிடும் கணையைக்கொடு!!

    உன்னொளிக் கிரணத்திலே – பல
    உவகைகண் டேன்மிக உணர்ச்சிகொண்டேன்
    அன்னையே உன்மடிமேல் – என்
    ஆவி அமர்ந்திடச் செய்பவளே
    என்னையே தந்துவிட்டேன் – இங்கு
    என்செயல் யாவையும் நின்செயலே
    இந்நில வாழ்வினிலே – யான்
    இயற்றுவ தெக்கடன்? சொல்லடியே!!

    அம்பிகே சிவசக்தி!!

    23.11.2017

    Share
  • மக்கள் கவிஞர் சுகிர்தராணியின் கவிதைச் சீற்றம்

    -சிவ. விஜயபாரதி

    முன்னுரை

    இலக்கியம் காலத்தின் கண்ணாடி. சமுதாயத்தின் பிரதிபலிப்பு. இலக்கிய மரபில் பன்னெடுங்காலந் vijayaதொட்டே பாடுபொருளும் மாறிவந்துள்ளன. எல்லோருக்கும் பிடித்த வடிவமாக, இலக்கியத்தின் பிள்ளையாக விளங்குவது கவிதை. எதை வேண்டுமானாலும் பாடுபொருளாகக் கொண்டு பாடுவதுதான் கவிதைக்குக் கிடைத்த சுதந்தரம். மக்கள் கவிஞர் சுகிர்தராணி தம் கவிதைகளில் சமுதாய விளிம்புநிலை மக்களின் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகள் குறித்தும் திடகாத்திரமாக எழுதிருக்கிறார்.

    கவிதைக்குள் கண்ணிவெடி

    இலக்கியத்தின் அமைப்பைக் கூர்ந்து நோக்கின் தற்காலச் சூழலில் நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்று இரு கூறுகளை எடுத்து இயம்புகின்றனர் தமிழறிஞர்கள். கவிதைகள் கண்ணிவெடி போன்றன என்பார் எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள். புத்தகங்கள் புரட்சி செய்ய வேண்டும். கவிதைகள் கிளர்ச்சி செய்ய வேண்டும். அப்படிப்பட்ட புத்தகம்தான் நின்று வாழும்.

     மக்கள் கவிஞரின்  கவிதைகள் அரசியல் நிலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காதல், நாடகக் காதல், மதமெனும் இழிவு, சாதியச் சாக்கடையைத் தோலுரித்தல், அடிப்படை விளிம்புநிலை மக்களின் வலிகள், கோட்பாட்டுத் தத்துவங்கள், பெண்ணியச் சிந்தனைகள், காதலின் மென்மை, காமத்தின் வன்மை, பகைமுடிக்கும் சீற்றம், போராளியின் முழக்கம் எனப் பரந்துபட்ட விடுதலை ஒளிக்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளன.

    சமகாலப் பதிவுகள்

    கவிதைகள் சமகாலத்தின் பதிவுகளாக இருக்க வேண்டும். அதுவே உயிர்ப்புள்ளதாக இருக்கும். மதங்களின் கூடாரத்தில் வருணாசிரமத் தத்துவத்தில் கட்டமைக்கப்பட்டதுதான் சாதி. அது இன்றும் நின்றுநிலைத்து மனித உயிர்களைப் பலி கேட்கிறது. நூற்றாண்டுகளாகத் தொடர்ந்தபடி இருக்கும் இழிவை “நூற்றாண்டுகளின் ஒற்றைக் கேள்வி” என்னும் தலைப்பிலமைந்த கவிதை

    தலை சாய்த்து நீரருந்தும்
    சிறு பட்சியைப்போல
    ______ _______ _______
    சேரி ஊராகாதா அம்மா?  {இப்படிக்கு ஏவாள்  பக்கம் 20 } என்ற கேள்வியின் வலி சமுதாயத்தின் அவமானம்.

    “சாதி என்பது இன்னும் கிராமங்களில் தான் கட்டமைக்கப்படுகிறது” என்றார் பெரியார். இரட்டை கிராமம் {ஊர் – சேரி}, இரட்டைச் சுடுகாடு, இரட்டைக் குவளை என்று விளிம்புநிலை மக்களைப் புறக்கணிக்கிற ஒதுக்குகிற சமூக அவலத்தை “வீடு திரும்புதல்”என்னும் கவிதை மூலம் பதிவு செய்கிறார்.

    பித்தேறி திரிந்து கொண்டிருக்கிறோம்
    _____ ______  ______   ______  _______
    மேடையைவிட்டு
    நாமிருவரும் கீழிறங்குகிறோம்
    வரிசைதப்பி மக்கள் கலைகிறார்கள்
    நீ ஊருக்குள் போகிறாய்
    நான் சேரிக்குச் செல்கிறேன்.” {இப்படிக்கு ஏவாள்  பக்கம்  65}

    என்று முடிக்கும்போது வலிபொறுக்காது நெஞ்சின் குமுறலோடு வேற்றுமைக்கான சுவர் எதுவென அடையாளப்படுத்துவதன் மூலம்  மானுடத்தைத் தலைகவிழச் செய்கிறார்.

    வாழ்வு தரும் வலிகள்

    சூறாவளிக் காற்றில் பறக்கும் தூசு திசைகளற்றுத் துடித்து விழுவதெனப் புரட்டிப்போட்டு விடுகிற இவ்வாழ்க்கை, பொருளாதார நெருக்கடிகள் தரும் வலிகளை, வயிற்றுப் பிழைப்புக்காக அசையும் அசைவுகளை, வாழும் வாழ்க்கையைப் “பல் பிடுங்கப்பட்ட வாழ்க்கை” என்ற கவிதையில் சமநிலைத் தவறிஆடும் வாழ்க்கையின் தீராத துக்கத்தை,

    ஒவ்வொரு அடியாக நடக்க நடக்க
    சமநிலைத் தவறி ஆடுகிறது வாழ்க்கை
    ஏந்தியிருக்கும் கழியின் இருபுறமும்
    தீராத துக்கமும்
    ஒருபோதும் காணப்படாத கனவுகளும்
    தொங்கிக் கொண்டிருக்கின்றன.” { இப்படிக்கு ஏவாள்  பக்கம்  15}

    என்று பிழைப்புக்காகக் கயிற்றின்மேல் நடக்கும் பெண்ணொருத்தியின் வாழ்வு தரும் வலியை வடுக்களாகக் காட்டுகிறார்.

    உயிர்தின்னி

    காலம் காலமாய் உயிர்தின்று ஏப்பம்விடும் சாதிகள், கொடும் வல்லூறுகள் பறந்த வண்ணம் இருக்கின்றன. அவைகள் விளிம்புநிலை மக்களில் பெண்களிடம் தன் கோபத்தைச் செலுத்துகின்றன.

    சாதி ஆதிக்கவெறிகளின் குறிகள் அப்பப்பா வலிகளின் உச்சத்தில் பீறிட்டெழும் யோனியின் குருதியைக் குடித்து கொப்பளித்துக் கும்மாளமடிக்கின்றன. துயர்நிரம்பிய இவ்வாழ்வைப் பொறுக்காது முடிவுகட்ட ஒட்டுமொத்த தலித் பெண்களின் மனக்குமுறல்களை போர்க்குரலெடுத்து ஓங்கி உரைக்கிறார்,

    ”கொலையும் செய்வாள் பறச்சி “என்னும் கவிதையில்,

    எங்கள் ஆடைகளை அவிழ்ப்பீர்
    அம்மணமாக்குவீர்
    வன்புணர்வீர்
    தமையனோடு புணரச் செய்வீர்
    —– ——   ——   —-   —- —
    இனி எவையும் மிச்சமில்லை
    நீங்கள் செய்வதற்கு
    ஆனால்
    நான் செய்ய ஒன்றுண்டு
    அது
    கொலையும் செய்வாள் பறச்சி” {இப்படிக்கு ஏவாள்  பக்கம் 31}

    இழிநிலையாக அரங்கேறிகொண்டிருக்கும் ஆணவக் கொலைவரை செய்து விட்டீர்கள் என்று கூக்குரலிட்டு மாவோவின் வரிகளை நினைவுபடுத்துகிறார். “எனக்கான ஆயுதத்தை என் எதிரியே தீர்மானிக்கிறான்.”

     உயர்சாதி இந்துக்களாகத் தன்னை கருதும் சமூகத்தில் பிறந்த பெண்களின் மனதில் மரித்துப்போகும் காதலை “பலியிடப்பட்ட காதல் என்னும் கவிதையின் வரிகள் உணர்த்துகின்றன.

    சாணைப் பிடிக்கப்பட்ட சாதியின் கூர்வாளால்
    வெட்டப்படாத உனதுயிர் வேண்டியே
    கைவிடுகிறேன்
    நம்முடைய காதலை“ { இப்படிக்கு ஏவாள்  பக்கம் 36 }

    மதம் கட்டமைத்த சாதியம் அழிந்து போகக் கடவதாக! இல்லையெனில் நிலம் மலடாகட்டும் எனக் கொதிக்கிறார் “கொலை பார்க்கும் நிலம் “தலைப்பிலமைந்த கவிதையில்,

    எனக்கு நானே சாபமிட்டுக் கொள்கிறேன்
     சாதியின் புல் பூண்டு மரம் மயிரென
     எவையும் முளைக்காத
     மலட்டு நிலமாகட்டும் நான்“ { இப்படிக்கு ஏவாள்  பக்கம்  46 }

    என்று கொடூரத்தின் வேர்களைச் சாடுகிறார்.

    காமத்தின் பெருவலி

    தனிமையின் விரக்தியும், காமத்தின் வெம்மையும் உடலையும் மனத்தையும் வாட்டுகின்றன. உடல் என்பது ஒரு வணிகப் பொருளாகிப்போன உலகமயச் சூழலில், இச்சையின் அர்த்தத்தை மீட்டு அதன்வழி பெண்ணின் விடுதலையைப் பேசுகிறார் ‘இரவு மிருகம்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதை

    பருவப் பெண்ணின் பசலையைப் போல
    – – – – – – – – – – – – – – – – – –
    – – – – – – – – – – – – – – – – – –
    கூசும் வார்த்தைப் பிரயோகங்களைச்
    சன்னமாய் சொல்லியவாறு
    சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
    பறவைகளின் சிறகோசை கேட்டதும்
    என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு
    ஓடிவிட்டது இரவுமிருகம்” {இரவுமிருகம் பக்கம் 19}

    மெழுகுவர்த்தியின் ஒளியும் தனிமையுமான வாழ்வில் இச்சை உடலைப் பருகுவதை பதிவு செய்கிறார்.

    ஆணாதிக்க மிருகங்கள் காமத்தின் வால்பிடித்துப் பித்தேறித் திரிந்தும், அது பெண்ணின் மனவலி எதையும் பாராமல் தேகத்தைக் கிழித்துப்போட்டு, எச்சிலும், காமநீரையும் சிந்திவிட்டுப் புணர்வு நிமித்தமாக மதர்த்துத் திரிவதை “கலவி வாசனை” என்னும் கவிதைமூலம் சமூக மனங்களைக் கிழிக்கிறார்.

    கிழிந்த தேகத்தை
    நேர்படுத்திகொண்டு நிமிர்கிறேன்.
    மறுபடியுமென்
    உறுப்புக்கிளைகள் ஒடிந்துவிழும் படியாக
    வந்தமர்கிறது ஓர் உருவபூதம்
    – – – – – – – – – – – – – – – – – –
    முடிவின் பிந்தைய கணத்தில்
    இரத்தம் தோய்ந்த ஆடையைத்
    துவைத்துப் போடுகிறாள்
    பிரபஞ்சமெங்கும் கலவிவாசனை.”              {இரவுமிருகம் பக்கம் 30}

    முடிவுரை

    இவ்வுலகில் பிறந்த அத்தனை உயிர்களும் வாழப்பிறந்தவை. உரிமைகளுடன் வாழ்தல் மிகவும் அவசியம். வாழ்க்கை கொஞ்சம் காலம்தான். இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை

    “ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
    கோடியும் அல்ல பல” – என்கிறார்.

    ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கூற்றின்படிப் பிறப்பால் அனைவரும் சமம் என்ற எண்ணம் எல்லோர் மனத்திலும் பதிந்து வேற்றுமையற்ற சமத்துவ சமுதாயம் என்ற ஒற்றைத் தத்துவத்தைநோக்கிப் பயணிக்கின்றன கவிஞரின் கவிதைகள்.

    ******

    துணை நூற்பட்டியல்

    • இப்படிக்கு ஏவாள் – சுகிர்தராணி – காலச்சுவடு பதிப்பகம் .
    • இரவு மிருகம் – சுகிர்தராணி – காலச்சுவடு பதிப்பகம் .
    • பெரியார் களஞ்சியம் – விடியல் பதிப்பகம்.
    • திருக்குறள் தெளிவுரை – மணிவாசகர் பதிப்பகம்.

    ******

    கட்டுரையாசிரியர்
    முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி),
    கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி
    எழுத : godhassan82@gmail.com
    பேச : 0 97 866 345 22

     

     

    Share
  • கொடி தனை ஏந்தும்!

    கவிஞர் இடக்கரத்தான்

     

    இந்திய தண்டனைச் சட்டம் விரைந்து

    எதைச் செய்ததுஎனத் தெரியலே – அதை

    முந்தியில் செருகியும் ஊழல் செய்வார்

    முற்றும் மறைத்தல் சரியிலே!

    ஒளிக்கற் றைதனில் ஊழல் செய்தார்

    ஒழிந்து திரிவார் நன்று – சட்டம்

    எளிதாய் வாய்தா வழங்கியும் நீதியை

    எறிந்தே வீசிடும் கொன்று!

    எத்தனை வருடங்கள் வழக்குத் தொடருது

    என்று தானிது முடியும்? – வழக்கு

    இத்தனை வருடம் தொடர்ந்து நடப்பின்

    என்று அவலம் வடியும்?

    பசியைப் போக்க உணவைத் திருடிய

    பாமரன் மறுநாள் சிறையில் – நாட்டை

    ருசித்துப் புசிக்கும் பாதகர் அழகாய்

    பளபளப் பார்குளிர் அறையில்!

    முரண்பா டதுவும் நீதித் துறையை

    முற்றும் அரித்து வருகுது – நாட்டைச்

    சுரண்டும் அரசியல் தனமும் நீதியைச்

    சுட்டும் பொசுக்கிடக் கருகுது!

    வழக்குரை ஞர்தமில் பாதிப் பேரும்

    வாய்மை தனைப்பொய் ஆக்குறார் – உயர்

    கிழக்கை மேற்கெனச் சொல்லும் திறனால்

    கயவரின் கவலை போக்குறார்!

    வண்ணம் மாறிடும் பச்சோந் திகள்போல்

    வகையாய் மாறும் தீர்ப்பு – தம்

    எண்ணம் போன்று தீர்ப்பை மாற்றிடின்

    எங்ஙனம் வாழும் ஈர்ப்பு?

    அன்று கொல்லும் அரசனும் இல்லை

    ஆண்டவன் கல்லெனும் தொல்லை – நீதி

    கொன்று குவிக்கும் சட்டம் தன்னால்

    கொடுமைக் கேது எல்லை?

    நாமும் அமைதி காப்பது இழிவு

    நிலையிது தொடருதல் அழிவு – இனித்

    தாமதம் இன்றியும் வாள் எடுப்போம்

    தர்மம் சாயுதல் தடுப்போம்!

     

    Share
  • யாருமில்லாத மேடையில்..!

     

    பெருவை பார்த்தசாரதி

    download (22) (1)

     

     

     

     

     

    பாருக்கு பாரதியும் பகன்றபல நற்கருத்தையெலாம்..

    ……….படித்துப் புரிந்துகொண்டோர் எத்துணை பேராவார்.!

    ஆருடம் சொல்லும் இடமங்கேதான் கூட்டமதிகமாம்..

    ……….அருந்தலைவர்கள் ஆற்றுவதைக் கேட்க ஆளில்லை.?

    ஊருடன் ஒத்துவாழ உலகமக்களுக்கு அறிவுறுத்திய..

    ……….ஒருமித்த கருத்துள்ள உத்தமரோயிரம் உண்டிங்கே.!

    யாருமில்லாத மேடையில்நான் கூச்சல் போடுகிறேன்..

    ……….வாருங்களய்யா!..வந்துஅவர் பேச்சைக் கேளுமென்று.!

     

     

    ஊருக்குள் இருப்பவருக்கு எங்கிருக்கிறது அக்கரை..

    ……….உலகில் யாவர்குமெளிதாய் வருமோ?…நாட்டுப்பற்று.!

    நேருவும் காந்தியும் நேத்தாஜியும் வ.உ.சிதம்பரமும்..

    ……….நெறிதவறி வருமானம்பெற வழிதவறிப் போகவில்லை.!

    ஆருமே அறியாதபல அற்புத வாழ்வியல்கல்வியை..

    ……….அய்யன் வள்ளுவனும் வாழ்வினுக்கு வழங்கினான்..!

    பெருமதிப்பு கொண்ட பெரியோர்களின் நல்லுரையை..

    ……….பெறமறவாதீர்! என்கிறேன் யாருமில்லா மேடையில்.!

     

    கம்பனும் இளங்கோவனும் காப்பியம் படைத்தார்கள்..

    ……….கலையுலகம் விழிப்புணர கண்ணுறங்காமல் எழுதினர்.!

    அம்பரீடன் சரித்திரத்தை ஒருமுறை படித்துப்பாரும்..

    ……….அகங்காரம் ஒருபோதும் நம்மிடமே வாராதுபோகும்.!

    இம்பருலகம் இறைஞ்சும் எதுவும் வேறெங்குமில்லை..

    ……….இந்தியாவின் காப்பியங்களில் கொட்டியே கிடக்கிறது.!

    பம்பரமாய்ச் சுழன்றே பாரதத்தின் பெருமைசொல்ல..

    ……….பரப்புரை செய்யவந்தேன்! யாருமில்லாத மேடையில்.!

     

    படிப்பறிவு இல்லாதவரே பள்ளிகல்லூரி நடத்துகிறார்..

    ……….படித்த மாமேதையங்கே பாடம் சொல்லித்தருகிறார்..!

    கொடிபடரக் கொழுகொம்பு தேவையென்பது போல..

    ……….பிடிதளராத மாணவனும் பட்டம்பெற மன்றாடுவார்..!

    மடிச்சுக்கட்டிய வேட்டியுடன் வளைத்துப் போடவே..

    ……….மதிப்புமிகு கல்வியைத் தொழிலாக்கும் விந்தையிதை..

    இடித்துரைக்க ஓடிவந்தேன் யாருமில்லா மேடையிலே..

    ……….இசைந்து வந்தவரெலாம் கொடிபிடிக்கச் சென்றனரே.!

     

    நன்றி:: தினமணி கவிதைமணி:: 11-11-17

    நன்றி:: படம் கூகிள் இமேஜ்.

    Share
  • நாட்டுப்புறப் பாடல்களில் காதல்

    -சிந்து. மூ

    நாட்டுப்புறப் பாடல்கள் காலம் கடந்தும் இன்றும் மக்களிடையே வாழ்ந்து வருகின்றன. பண்டைய தமிழர்கள் இசையில் மிகுந்த நாட்டம் உடையவர்கள். அவ்வகையில் நாட்டுப்புறப் பாடல்கள் மிகுந்த ஓசைபெற்று அமைந்திருப்பதை உணரமுடிகிறது. மனத்தில் உள்ள உணர்வுகளை உள்ளவாறு வெளிப்படுத்தும் கண்ணாடியாக வாய்மொழி இலக்கியமான நாட்டுப்புறவியல் அமைவதைக் காணலாம். படிப்பறிவில்லாத பாமர மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகைகயில் அமைந்திருப்பது சிறப்பிற்குரியது. மனத்தில் உள்ள இன்ப துன்பங்களை மெய்ப்பாடுகளோடு எடுத்தியம்பும் இலக்கியமாகத் திகழ்கிறது.

    நாட்டுப்புறப் பாடல்களைக் குழந்தைப்பாடல்கள், உணர்ச்சிப்பாடல்கள், தொழிற் பாடல்கள், கொண்டாட்டப்பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள் என வகைப்படுத்தலாம். அவற்றுள் உணர்ச்சி நிலையான காதலைப் பற்றி  ஆராய்வதாகும்.

    காதல் பாடல்

    நாட்டுப்புறப் பாடல்களில் காதல் முதன்மை பெறுவதைக் காணலாம். காதல் பாடல்களில் கற்பனை, அணிநயம் இடம்பெறுவதில்லை. மனத்தில் தோன்றும் காதலைத் தன் வாய்மொழி வார்த்தைகளால்  பாடல்களாக வெளிப்படுத்துவர்.

    காதல்

    ஆண் பெண் இருவரின் உள்ளத்தில் தோன்றும் ஒருவித உணர்ச்சியை வெளிப்படுத்துவது காதலாகும். அக்காதல் இன்பமும், பொருளும், அறமுடையது. தொல்காப்பியத்தில் அன்பின் ஐந்திணை பற்றிக் கூறும் தொல்காப்பியர்,

    ”இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
    அன்பொரு புணர்ந்த ஐந்திணை” 1 என்று சுட்டுகிறார்.

    இலக்கியத்தில் களவு ஏற்படும் காலத்தில்  தலைவிக்குச் செவிலி, தோழி, பாங்கன், பாங்கியிற் கூட்டம் எனத் தூதாக அமைவர். ஆனால் நாட்டுப்புறத்தில் உள்ள தலைவியின் காதலானது, பாடல்கள் வாயிலாக இனிமையாகவும், உண்மையான உணர்வுகளோடும் வெளிப்படுத்தப்படுகிறது.

    காதலானது மனிதனது பருவ காலங்களில் மொட்டவிழ்ந்து மலராகும் போது மனிதனது பருவத்தில் தோன்றும் உணர்வுகளால் காதல் என்னும் மணமானது பரப்பப்படுகிடுன்றது. வண்டும் மலரும் ஒன்றால் ஒன்று ஈர்க்கப்படுவதுபோல, ஆண்மையும், பெண்மையும் ஒன்றால் ஒன்று ஈர்க்கப்படுகின்றது.

    காதல் பாடலில்  இடம்பெறும் பொருண்மைகள்

    நாட்டுப்புறப் பாடல்களில் காதல் வயப்படல், வருணித்தல், அன்பு வெளிப்படல், இடஞ்சுட்டல், உரையாடல், காவல்செய்தல், மறக்கமுடியாமை, உறுதி நிலை ஆகியவை முதன்மையாக விளங்குவதைக் காணலாம். காதல் பாடல்கள் அன்பினை வெளிப்படுத்தும்  சிறந்த ஊடகமாக அமைகிறது என்றால் மிகையாகாது.

    காதல் வயப்படல்

    அறிமுகம் இல்லாத ஆணும், பெண்ணும் சந்திக்கின்ற சூழலில் ஏற்படும் கவர்ச்சியும், தொடர்ச்சியாக இரண்டு மூன்று முறை சந்திக்கின்ற போது மேலும் ஒருவரால் ஒருவர் கவரப்பட்டுக் காதல் கொள்ளும் நிலையே காதல் வயப்படல் என்று கூறலாம்.

    ”ஏரிக்கரையிலே
    ஊருக்குத் தெரியாம ஒதுக்குப்புறமா
    உன்ன பாக்கயல தூண்டிலில
    மாட்டிக்கிட்ட மீனு போல
    துடிக்குதடா ஏ மனசு……”காதல் வயப்பட்ட பெண்ணொருத்தி தன் காதலை அழகாக வெளிப்படுத்துகிறாள்.

    வருணித்தல்

    காதல் வயப்பட்ட ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் வருணித்துப் பாடுவது குறிப்பிடத்தக்கதாகும்.

    ”கொசுவம் கட்டி
    இடுப்பாட்டிப் போரபுள்ள
    உனக்காகக் காத்திருக்கும்
    மாமன சித்த திரும்பித்தா
    பாருபுள்ள……”3 என்று காதலன் காதலியையும்,

    ”முறுக்கு மீசை காரா
    முரட்டு காவல்காரா
    கருத்த உடம்புக்காரா
    கண்டாங்கி கட்டுனவளா
    கண்டுக்காமா போகாதடா……”4 என்று காதலி காதலனையும் வர்ணித்துப் பாடும் நிலையைக் காணலாம்.

    அன்பு வெளிப்படல்

    பெண் அன்பின் உறைவிடம் என்று கூறுமிடத்து நாட்டுப்புறப் பாடலில் ஆண் ஒருவன் பெண்மீது கொண்ட அன்பை,

    ”தங்கத்துக்குத் தங்கம் – பெண்ணே
    தனித்தங்கம் நான் இருக்கப்
    பித்தளைத் தங்கத்துக்குப் – பெண்ணே
    வீணாசைப் பட்டாயோ!” என்று பாடுவதிலிருந்து ஆணின் அன்பினை உணரமுடிகிறது.

    இடஞ்சுட்டல்

    காதலர்கள் யாரும் அறியாது சந்தித்துப் பேசும் விதமாகக் காதலன் காதலியிடம்,இடஞ்சுட்டுமாறு கேட்கும் நிலையில்,
    ”ஒதுக்குப்புறமா
    ஓலை குடிசையடுத்து
    ஒத்தடிப் பாதையிலுள்ள
    ரெட்டப் பனமரம் தா அடையாளம். 5” என்று சந்தித்துப் பேசுவதற்குரிய இடத்தினைக் காதலி குறிப்பிடுவதை உணரமுடிகிறது.

    காதலில் உறுதி

    ஆண்,பெண் காதலுக்குத் தன் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காதபோது உடன்போக்கு என்னும் நிகழ்வானது நடைபெறும். பெற்றோரின் சம்மதம் பெறும் வரைக் காத்திருந்து திருமணம் செய்வதும் உண்டு.

    ”கண்ணோடு கண்ணாக
    கலந்த உன்னைக்
    கல்யாணம் செய்யாம
    ஊரைவிட்டுப் போவதில்லை….” என்ற பாடலின் வாயிலாக நாட்டுப்புறப் பாடல்களில் காதலனும் காதலியும் உறுதியாக இருந்து மணம் முடிக்கும் நிலையைப் பெரும்பான்மையாகக் காணமுடிகிறது.

    முடிவுரை 

    நாட்டுப்புறப் பாடல்கள் உணர்ச்சி நிலையான காதலைப் பற்றி வெளிப்படையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

    ஆண்மையும், பெண்மையும் ஒன்று ஒன்றால் ஈர்க்கப்பட்டுக் காதல் வயப்படும் நிலையைக் காணமுடிகிறது.

    தன் காதலுக்கிடையே பலவித இன்னல்கள் தோன்றினாலும் தன் காதலில் உறுதியாக இருந்து வெற்றி கண்ட நிலையை நாட்டுப்புறப் பாடல்கள் பதிவு செய்கின்றன.

    நாட்டுப்புறக் காதலானது
    “செம்புலப்பெயல்நீர் போல,
    அன்புடை  நெஞ்சம் தாம்கலந் தனவே”6 என்னும் குறுந்தொகைப் பாடலின் வரிகளை மெய்ப்பிக்கும் தன்மையைக் காணமுடிகிறது.

    *****

    பின்னிணைப்பு

    1. மு.சண்முகம் பிள்ளை (ப.ஆ) தொல்காப்பியம்,பொருளதிகாரம்.களவியல் நூ – 1
    2. இராமாத்தாள் (தகவலாளர்) வயது 61, சித்தநாயக்கன் பாளையம்கோவை.
    3.  இராமாத்தாள் (தகவலாளர்) வயது 61, சித்தநாயக்கன் பாளையம்கோவை.
    4. இராமாத்தாள் (தகவலாளர்) வயது 61, சித்தநாயக்கன் பாளையம்கோவை.
    5.  இராமாத்தாள் (தகவலாளர்) வயது 61, சித்தநாயக்கன் பாளையம்கோவை.
    6. சங்கஇலக்கியமுலமும் உரையும் அறிஞர் ச.வே சுப்பிரமணியம்.
    7.  குறுந்தொகை பா.40

    *****

    கட்டுரையாசிரியர்
    உதவிப் பேராசிரியர்
    தமிழ்த்துறை
    கற்பகம் பல்கலைக் கழகம்
    ஈச்சனாரி.

     

     

     

     

    Share
  • அறிவியல் தமிழ் – கற்றல் கற்பித்தல் – 2

    -முனைவர் ப. ஜெயகிருஷ்ணன்

     எழுத்துருக்கள் (Fonts)

               ஆங்கிலத்தில் எத்தனையோ எழுத்துக்கள் இருந்தாலும் TIMES NEW ROMAN மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தமிழில் குறிப்பிட்ட எழுத்துருவைப் பயன்படுத்துவதில்லை. அவற்றில் அபிராமி, அகல்யா, அகத்தியர், அக்னி, அஜந்தா, அகிலா, ஆட்சயா, அன்னை, அனுராதா, அரசு, இலக்கியா, அமலா, அப்பர், சந்திரா, ஹீனா, இளங்கோ, கம்பன், கண்ணதாசன், கோமளா ,நம்பி,ட்டினத்தார்,ருதி,ன்மொழி,மிழ்து,னவில்,ன்னி,ண்ணா,ந்தமிழ், சுரபி, பாமினி, மயிலை, லதா இவற்றுள் சில ஒருமொழியிலும் சில இரு மொழியிலும் இயங்கக் கூடியவை.

    இணைய இதழ்கள்

               இணையம் வழி வெளியிடப்படும் இதழ்கள் மின் இதழ்கள் எனப்படுகின்றன தமிழில்.1.திண்ணை. www.thinnai.com 2 தட்ஸ் தமிழ் www.thatstamil.oncindia.in 3.வார்ப்பு www.vaarappu.com (கவிதைக்கென்று வெளிவரும்) 4.பதிவுகள் www.pathivukal.com 5.மரத்தடி www.maraththadi.com 6.தமிழ் நெட் www.tamizham.net 7.தமிழ்க்கூடல் www.koodal.com 8.நிலாச்சாரல் 9.தமிழ் ஓவியம் 10. தமிழ்க் காவல் 11.தமிழ்த்திணை 12.வானவில் 13.ஆறாம்திணை 14.அம்பலம் 15. அரும்பு.

    வலைப்பூக்கள்

         ஆங்கிலத்தில் (Blogger) வலைப்பூ என்று குறிப்பிடுகின்றனர். இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் அனைத்தையும் இதிலும் பதிவேற்றம் செய்யலாம். இணையதளத்தை உருவாக்கி நிர்வகிக்க அதிகப் பொருள்செலவு ஏற்படும். ஆனால் பொருள்செலவின்றி வலைப்பூ உருவாக்கி நிர்வகிக்க முடியும். ஒருவர் தன் சிந்தனைகளை வலைப்பூ வடிவில் இணையதளத்தில் உலவ விடமுடியும். உடனுக்குடன் பின்னூட்டம் அடிப்படையில் மாற்றங்களைச் செய்யமுடியும். யாகூ, எம்.எஸ்.என், ரீடிப் மெயில் என்பவை வழக்கில் உள்ளன. எனினும் கூகிள் நிறுவனத்தின் பிளாக்கர் என்பதே பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. புதிதாக வலைப்பூ உருவாக்க விரும்புபவர்கள் பின்வரும் படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும்.

    1. Creat an account 2.Name your blog 3.Choose your template அவரவர் விருப்பத்திற்கேற்ப மின்னஞ்சல் முகவரியை அமைத்துக் கொள்வது போலவே வலைப்பூ முகவரியும் அமைத்துக் கொள்ளலாம்.

    Selvi.blogspot.com –இதில் செல்வி என்பது வலைப்பூ பதிவர். மற்றவை இந்நிறுவனத்தைக் குறிக்கும் பொதுவான அமைப்பு.

    தமிழில் வலைப்பூக்கள்

               தமிழ்ப்பூக்கள், மானிடன், மு.இளங்கோவன், துரையரசன், திருமன்றில், மலையறிவு, குறிஞ்சி மலர், வாழ்க தமிழுடன்,உயிர்கொண்டு திளைத்தல், தமிழ்மொழி, தமிழ் அறிஞர்கள், அறிவுமதி, தமிழ்வலைப்பதிவர் உதவிப்பக்கம், திரட்டிகள் போன்றவைக் குறிப்பிடத்தக்கவை.

    கல்விசார் இணையதளங்கள்

         இவற்றை 1.கற்பிப்பவை 2.நூலகங்கள் 3.தகவல்கள் வழங்குபவை என மூன்று வகையாகப் பிரிக்கலாம். தகவல் தருபவையில் 1. விக்கிப்பீடியா 2. யூ.ஜி.ஸி, 3. மனிதவள மேம்பாட்டுத்துறை 4. தமிழ்நாடு மாநில உயர்கல்வித்துறை 5. தமிழ்வளர்ச்சித்துறை.

    வேலைவாய்ப்பு இணையதளங்கள்

    1.மத்தியரசு பணியாளர் தேர்வாணையம் 2.இந்திய ஆட்சிப்பணி 3.இணையவேலைவாய்ப்பு மையங்கள் (நாக்ரி.காம்).

    மின்னணுப் பாடநூல்

         வகுப்பறைப் பாடநூலுக்கும் மின்னணுப் பாடநூலுக்கும் இடையே மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. ஆசிரியர் உதவியின்றி சுயமாகக் கற்றுக் கொள்ளும் திறன் எவ்வாறெல்லாம் மின்னணுப் பாடநூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழை முதல் மொழி மற்றும் இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொள்வதற்கு எவ்வாறெல்லாம் இந்த மின்னணுப் பாடநூல்கள் பயன்படுகின்றன என்றும் ஆராய்வது தேவையானதொன்றாகும்.

               இவ்வகையில் தமிழை முதல் மற்றும் இரண்டாம் மொழியாகப் பல்லூடக முறையில் கற்பிப்பதற்கும் கற்பதற்கும் அரசும் தனியார் நிறுவனங்களும் பல்லூடகக் குறுந்தட்டுகளை வெளியிட்டுள்ளன. இவற்றில் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ‘தமிழ் உலகம்’ ஆலன்பார்க் இன்போடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘செம்மொழி’ தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சான்றிதழ் கல்விக்கான அடிப்படை நிலை, மற்றும் இடைநிலைக் கல்வி பல்லூடகக்  குறுந்தட்டுகளை அறிமுகம் செய்து நிறைகுறைகளைக் கண்டறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இக்கட்டுரைப் பின்வரும் பகுதிகளைக் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

               1.மின்னணுப் பாடநூல் சுருக்கம்
    2.பாடப்பொருள் மதிப்பீடு
    3.உரையாடல் பகுதி மதிப்பீடு
    4.பயிற்சிப் பகுதி மதிப்பீடு
    5.கணினிப் பயன்பாடு மதிப்பீடு.

    1.மின்னணுப் பாடநூல் சுருக்கம்

         1.தமிழ் உலகம்

               உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தமிழ்மொழியை இரண்டாம் மொழியாக ஆங்கிலம் வழிக் கற்பதற்குத் ‘தமிழ் உலகம்’ என்ற தலைப்பில் இரண்டு குறுந்தட்டுகளை வெளியிட்டுள்ளது. ஆப்பிள் சாப்ட் நிறுவனத்தினர் தயார் செய்த பல்லூடக மென்பொருளைப் பின்பற்றிப் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஆங்கிலமொழி வழித் தமிழை முறையாகக் கற்க வேண்டுமென்ற ஆர்வமுடைய வெளிநாட்டவருக்கும், ஓரளவு தமிழ்தெரிந்த பிற மொழியினருக்கும், புலம்பெயர்ந்து தமிழை மறந்த தமிழர்களுக்கும் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள உதவும் முறையில் 25 அலகுகளாகப் பிரித்துப் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. இலக்கணப்பகுதி, உரையாடல் பகுதி, இலக்கியப் பகுதி, பயிற்சிப்பகுதி என்னும் பல்வேறு கோணங்களில் பாடக் கருத்துக்கள் மிக எளிமையாகப் பல்லூடக முறையில் விளக்கப்பெற்றுள்ளன. குறுந்தட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள கணினி நுணுக்கம் தமிழை முதல், இரண்டாம் மொழியாக ஆசிரியர் துணையுடன் மட்டுமே கற்கும் முறையில் அமைந்துள்ளது. ‘தமிழ் உலகம்’ குறுந்தட்டுகளின் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள செயல் திட்டங்கள் படித்தல் திறனை வளர்த்தல், பாடங்களின் பொருளைப் புரிந்துகொள்ளுதல், மொழி விளையாட்டுக்கள் என்ற முறையிலேயே அமைந்துள்ளன. இவற்றில் கணினி சரியான விடை தருபவர் என்னும் நிலையிலேயே உள்ளது. பயிற்சி செய்யும்போது மாணவன் தவறு செய்தால் தவற்றைச் சுட்டிக்காட்டும் கணினி நுணுக்கம் சிறிதளவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாடப்பகுதி மற்றும் பயிற்சிப்பகுதியில் அமைந்துள்ள மென்பொருள் மாணவர்களுக்குக் கற்றல் சாதனங்களைக் கொண்டு கொடுக்கும் வாகனமாக மட்டுமே அமைந்துள்ளது.

    1. செம்மொழி

            ஆலன் பார்க் இன்போடெக் நிறுவனம் இப்பல்லூடகக் குறுந்தட்டை வெளியிட்டுள்ளது. தமிழ்மொழியை முதல் மற்றும் இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொள்ள உதவும் முகமாகப் பாடங்கள் பல்லூடக முறையில் விளக்கப் பெற்றுள்ளன. .அடிப்படை எழுத்துப் பயிற்சி, உச்சரிப்புப் பயிற்சி, எண்கள் ,பாடங்கள், விடுகதைகள், செய்யுள், பாடல்கள், கதைகள் என்னும் எட்டு தலைப்புகளில் பாடக் கருத்துக்கள் விளக்கப் பெற்றுள்ளன. கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல், உரையாடுதல், இலக்கணக் கூறுகளை அறிதல் போன்ற மொழித் திறன்களைப் பெறும் வகையில் ஆசிரியர் உதவியின்றி விளையாட்டு, வேடிக்கை என்று கற்கும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    1. சான்றிதழ்க் கல்வி அடிப்படை நிலை

               தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்தக் குறுந்தட்டில் தமிழ்ச் சான்றிதழ்க் கல்விக்கான அடிப்படை நிலை மற்றும் இடைநிலைப் பாடங்கள் இடம்பெற்றுள்ளன. அடிப்படை நிலையில் தமிழ் எழுத்துக்களின் ஒலி/வரி வடிவங்களும் எழுநூறுக்கும் மேற்பட்ட சொற்களும் சிறு தொடர்களும் பல்லூடக வசதிகளைப் பயன்படுத்திப் படிக்க ஆர்வமூட்டும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

         எழுத்துக்களின் ஒலிப்புப் பயிற்சி, எழுதும் பயிற்சி, எழுத்துக்களைக் கூட்டிப்படிக்கும் பயிற்சி, சொற்களைக் கூட்டிப்படிக்கும் பயிற்சி, பாடல் பயிற்சி போன்ற பயிற்சிகளுடன் பாடங்களை எளிதில் கற்கும் வகையில் பல்லூடக வசதிகளோடு ஆக்கப்பட்டுள்ளன. தொடக்க வகுப்புகளில் பயன்படும் வகையில் 15 தலைப்புகளில் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன.

    2.பாடப்பொருள் மதிப்பீடு

    1.எளிமையிலிருந்து கடினம்

         ஒரு மொழியில் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று இலக்கண உட்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை முறைப்படி கற்கும் முறையில் பாடப்பகுதி அமைய வேண்டும். கற்றல் உத்தியான எளிமையிலிருந்து கடினம் என்னும் முறையிலும் பாட விளக்கம் அமைய வேண்டும். ஆனால் சில இடங்களில் கடினமான பகுதி முதலில் விளக்கப்பட்டுள்ளது. பாட விளக்கமும் முன்பின் முரணாக அமைந்துள்ளது.

           ‘தமிழ் உலகம்’ குறுந்தட்டில் வேற்றுமைகளின் விளக்கத்தைச் தொடர்ச்சியாக அடுத்தடுத்த இயல்களில் விளக்கியிருக்க வேண்டும். ஆனால் வேற்றுமை விளக்கம் முன்பின் முரணாகப் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளது. செம்மொழி மற்றும் சான்றிதழ்க் கல்வி குறுந்தட்டுகளில் ஓரளவு எளிமையிலிருந்து கடினம் என்னும் நிலையில் பாடப்பொருள் விளக்கம் அமைந்துள்ளது.

    1. இலக்கியத் தமிழும் பேச்சுத்தமிழும்

           ‘தமிழ் உலகம்’ குறுந்தட்டில் பேச்சுத்தமிழ்ப் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அளவிற்கு, செம்மொழி, சான்றிதழ்க்கல்வி  குறுந்தட்டில் பேச்சுத்தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இலக்கியத் தமிழ் விளக்கப்பட்ட அளவிற்குப் பேச்சுத்தமிழ் விளக்கம் பெறவில்லை. பேச்சுத்தமிழைச் சிறப்பாகக் கையாளுவதற்கு நாட்டுப்புறப் பாடல்கள் வட்டார வழக்குச் சொற்கள் போன்றவற்றைக் கொடுத்திருக்க வேண்டும்,

    பொருளடக்கப்பகுதி

          ‘தமிழ் உலகம்’ குறுந்தட்டின் முன்னுரையில் பொருளடக்கப் பகுதி கொடுக்கப்படவில்லை. முன்னுரை அல்லது முதல் இயலில் பொருளடக்கப் பகுதி (Index) கொடுத்திருந்தால் குறிப்பிட்ட பாடப்பகுதியை எளிதாகக் கண்டு பிடிப்பதற்கு உதவியாக அமைந்திருக்கும்.

         ஒரு மொழியை முழுமையாகக் கற்பதற்கு அம்மொழியிலுள்ள இலக்கியங்களைக் கற்க வேண்டும். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், கவிதை போன்றவற்றை இசையுடன் பாடலாகப் பல்லூடகம் வழிச் சிறப்பாக வெளிப்படுத்த முடியும். தமிழ் உலகம் குறுந்தட்டில் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் பகுதியிலிருந்து ஓரிரு பாடல்கள் மட்டுமே இசையுடன் கொடுக்கப்பட்டுள்ளன. பிற குறுந்தட்டுகளில் குழந்தைப்பாடல்கள் மட்டுமே இசையுடன் கொடுக்கப்பட்டுள்ளன. பாடத்தோடு தொடர்புடைய பழமொழிகள், பாடல் வரிகள், தற்கால எழுத்தாளர்களின் படைப்புகள், குட்டிக் கதைகள், படங்கள் போன்றவற்றைப் பாடப்பொருள் விளக்கத்தின் இடையிடையே கொடுத்திருக்கலாம்.

    1. 2. உரையாடல் பகுதி மதிப்பீடு

            உலகில் தோன்றிய எல்லா மொழிகளிலும் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் இந்த வேறுபாடு தமிழில் சற்று மிகுந்து காணப்படுகின்றது. கல்வி கற்றவர்களால் மட்டுமே பேச்சு வழக்கினையும் எழுத்து வழக்கினையும் சரளமாகக் கையாள முடியும். பேச்சுத் தமிழைக் கற்க இயற்கையான வழிகளைக் கடைப்பிடிப்பது சிறந்த முறையாகும். இவ்வகையில் பாடங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வீடு, விழாக்கள், சுற்றுலா போன்றவை பற்றியே அமைந்துள்ளன. சான்றிதழ்க் கல்வி குறுந்தட்டில் இப்பகுதி இயற்கையாக அமையவில்லை.

         ல, ள, ழ, ன, ண, ந, ற, ர ஆகிய எழுத்துக்களின் உச்சரிப்பைத் தெளிவாக உச்சரிக்கத் தெளிவான பயிற்சி கொடுக்கவில்லை என்றால் உச்சரிப்பில் பிழை ஏற்பட வாய்ப்புண்டு. தமிழ் உலகம், சான்றிதழ்க் கல்வி குறுந்தட்டுகளில் இவ்வகை எழுத்துக்களுக்குத் தெளிவான உச்சரிப்பும் பயிற்சியும் கொடுக்கப்படவில்லை. சில சொற்கள் பிழையாக உச்சரிக்கப்பட்டுள்ளன.

    (எ.டு)சந்த்திப்பேன்- சந்திப்பேன், சான்னு- சானு

    உறுப்புகளின் அசைவுகள்

         உரையாடலில் சில குறிப்பிட்ட உடல் உறுப்புகளுக்குப் பெரும் பங்களிப்பு உண்டு. வாயின் அசைவுகளை வைத்தே சைகை மொழியில் கருத்துக்களை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

           உடல்மொழி (Body Language) பேச்சு மொழிக்குத் துணையாக அமையும்  என்று மொழியியல் அறிஞர் கூறுவர். தமிழ் உலகம், செம்மொழி குறுந்தட்டுகளின் உரையாடல் பகுதி விளக்கத்தில் நிழற்படங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. நவீன கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேரடியாக உரையாடும் முறையைக் கொடுத்திருந்தால் மொழி கற்பித்தல் இயற்கையாக அமைந்திருக்கும்

    3.பயிற்சிப்பகுதி மதிப்பீடு

               பயிற்சிப் பகுதி தன் மதிப்பிடுதல் முறையில் விளக்கப்பட்டுள்ளது. எளிய பயிற்சி அணுகுமுறைகள், துணைக்கருவிகள் உருவாக்கப்பெற்று சொல் விளையாட்டு, வாக்கிய விளையாட்டு என்னும் நிலைகளில் இப்பகுதி அமைந்துள்ளது. பாடங்களில் கற்றவற்றை மாணவர்கள் நினைவில் வைத்துள்ளனரா என்று கண்டறியும் பொருட்டே வினாக்கள் அமைய வேண்டும். ஆனால் வினாக்கள் அனைத்தும் பொதுவானவையாகவே அமைந்துள்ளன. இலக்கியத் தமிழைக் கற்றுக்கொள்ளும் முறையிலேயே பெரும்பான்மையான பயிற்சிகள் அமைந்துள்ளன.

               எழுத்துக்களை ஒன்றுசேர்த்து சொற்களை உருவாக்குவதும், சொற்களை இணைத்து வாக்கியங்களைப் படைப்பதுமாகிய இரண்டு முறைகளே பாடங்களில் பயிற்சியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் கற்போருக்கு எழுத்துக்களை இணைக்கும் பயிற்சியும் சொற்களை இணைக்கும் பயிற்சியுமே ஏற்படுகிறது. பொருளை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. எனவே ஆய்வுக்குரிய குறுந்தட்டுகளில் பொருளை அறிந்துகொள்ளும் முறையில் பயிற்சிகள் கொடுத்திருக்கலாம்.

    www.chennailibrary.com
    www.ezhilnila.com
    www.kalachuvadu.com
    www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl.html
    www.noolaham.net
    www.tamilmanam.net
    www.tamil.net/project
    www.tamilvu.org
    www.ta.wikipedia.org
    www.Viruba.com

    ******

    கட்டுரையாளர்
    தமிழ்த்துறை
    கேரளப்பல்கலைக்கழகம்
    காரியவட்டம்
    திருவனந்தபுரம் 695 581

                         

    Share
  • சிகரம் தொடுவோம்

    நம் வல்லமை வலைத்தளத்தில் 28 வாரங்களாக வெளிவந்த ‘சிகரம் நோக்கி’ எனும் கட்டுரைகள், இனிய நண்பர் மணிமேகலை பிரசுர மேலாண்மை இயக்குனர் திருவாளர் ரவி தமிழ்வாணன் அவர்கள் உதவியுடன் ஒரு அழகிய புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

    அதன் வெளியீட்டு விழா, மஸ்கட்டில் சீரோடும் , சிறப்போடும் கடந்த 20-11-2017 திங்கள் கிழமை மாலை நடைபெற்றது. இதோ உங்களுக்காக…

    அன்புடன்
    சுரேஜமீ

    சிகரம் தொடுவோம் – புத்தக வெளியீடு

    SPT_5185

    ஓமான் தலைநகர் மஸ்கட்டில்’ சிகரம் தொடுவோம்’ புத்தக வெளியீடு, ஓமனுக்கான இந்திய தூதர் மேதகு இந்திரமணி பாண்டே அவர்களால் கடந்த 20-11-2017 திங்கள் கிழமை மாலை 7 மணி அளவில் சிறப்பாக நடை பெற்றது.

    மேதகு இந்திரமணி பாண்டே அவர்கள் நிகழ்ச்சியைக் குத்துவிளக்கு ஏற்றி, நம் மரபுப் படித் தொடக்கி வைத்தார். மஸ்கட் தமிழ்ச் சங்கத் தமிழாசிரியைகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர்.

    SPT_5315

    திருமதி. ரேவதி சுந்தர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார்.

    மேதகு இந்தியத் தூதர் அவர்கள் நூலை வெளியிட,

    திருமதி. சித்ரா நாராயண் அவர்கள் (Director, Middle East Nursery) , திரு. குமார் மஹாதேவன் (Director & Advisor – Oman Sharpooji Co ), திரு. P .R .ராமகிருஷ்ணன் (CEO, Vision Insurance), திரு. T .கணேஷ் (CFO, Bank Muscat ), திரு. சங்கர் சர்மா (CFO, Bank Dhofar), திரு. P .S .லக்ஷ்மணன் (CFO, National Drilling & Services Co), திரு. ஸ்ரீதர் நாரணசாமி (Ex – Chariman, ICAI-Muscat Chapter), திரு. J. ராஜேந்திரன் (GM, National Steel Fabricators) மற்றும் முனைவர். T . தங்கமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    SPT_5241

    விழாவில் மேதகு. இந்திரமணி பாண்டே அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார். திருமதி. சித்ரா நாராயண் அவர்கள் சிறப்புரை கவித்துவமாக இருந்தது.

    ஏனைய சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரை வழங்க, நூலாசிரியர் சுரேஜமீ அவர்கள் ஏற்புரை வழங்கினார்.

    மஸ்கட் தமிழ்ச் சங்கப் பொருளாளர் திருமதி. விஜயலக்ஷ்மி சந்திர சேகர் நன்றி கூற, விழா இனிதே முடிந்தது.

    நிகழ்சசியை மஸ்கட் தமிழ்ச் சங்கப் பொருளாளர் திருமதி. விஜயலக்ஷ்மி சந்திர சேகர் தொகுத்து வழங்கினார்.

    இவ்விழாவில் மஸ்கட் வாழ்த் தமிழர்கள் மட்டுமல்லாது, பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.​

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 12

    -மேகலா இராமமூர்த்தி

    நாளைக் காலை எவரும் அறியாமல் நான் தலைவியை மலைச்சாரலிலுள்ள வேங்கை மரத்தடிக்கு அழைத்துவருவேன். நீங்களும் அவ்விடம் வந்துவிடுங்கள். அங்கிருந்தே நீங்கள் இருவரும் உங்கள் இல்லறப் பயணத்தை தொடங்கிவிடலாம் என்றாள் தோழி தலைவனைப் பார்த்து.

    அவள் யோசனைக்கு அமைதியாய்த் தலையசைத்துத் தன் ஆமோதிப்பைத் தெரிவித்தான் தலைவன்.

    அன்றைய இரவுப்பொழுது கழிந்தது. கதிரவன் தன் கிரணங்களை நீட்டிப் புவியின் இருளைத் தொட்டழித்தான். புள்ளினங்கள் மரங்களில் இருந்தபடியே பள்ளியெழுச்சி பாடின.

    தலைவியைச் சந்திக்க அவள் இல்லம் நோக்கி நடைபோட்டாள் தோழி. தலைவியைச் சந்தித்தவள், ”இன்னுமா நீ கிளம்பவில்லை? நேரம் கடந்துகொண்டிருக்கிறதே! புறப்படு சீக்கிரம்” என்று அவள் காதோரம் கிசுகிசுத்தாள்.

    உடன்போக்கன்றித் தானும் தலைவனும் இல்லறத்தில் இணைய வழியேதுமில்லை என்பதைத் தலைவியும் அறிந்திருந்தபோதிலும், அன்னையும் அத்தனும் அறியாது பிறந்தகம் நீங்கி, காதலனொடு தனித்துச் செல்ல அந்தப் பெண்ணுளம் மறுத்தது; உடன்பிறந்த நாணம் தடுத்தது. கால்களோ வாயில்கடக்க மறுத்து மறியலில் ஈடுபட்டன.

    தன்னைத் துரிதப்படுத்திய தோழியை நோக்கி, “இன்றே செல்லவேண்டுமா? நாளை செல்லலாமே!” என்று தட்டுத்தடுமாறி சொல் முத்துக்களை உதிர்த்தாள் தலைவி!

    தோழி வியப்பில் தன் புருவங்களை உயர்த்தியவளாய், ”பெண்ணே! என்ன சொல்லுகிறாய்?! நீ உடன்போக இசைந்தாய் என்று நான் கூறியதால்தான் தலைவன் குறியிடத்திற்கு வந்து உனக்காகத் காத்திருக்கின்றான். நீயோ கையும் காலும் ஓய்ந்து வருத்தமுற, இன்றைய பொழுது கழியட்டும்; நாளை போகலாம் என்கிறாயே! உன் சொற்கேட்டுத் தீயில்விழுந்த தளிராய் நான் நடுங்குகின்றேன். இனி நான் செய்வதற்கு ஏதுமில்லை” என்றாள் ஏமாற்றத்தோடு!

    நீயுடம்  படுதலின்  யான்தர  வந்து
    குறிநின்  றனனே  குன்ற  நாடன்
    இன்றை  யளவை  சென்றைக்  கென்றி
    கையுங்  காலும்  ஓய்வன  அழுங்கத்
    தீயுறு  தளிரின்  நடுங்கி
    யாவதும்  இலையான்  செயற்குரி  யதுவே.   (குறுந்: 383: படுமரத்து/படுமாத்து மோசிகீரன்.)

    தலைவி நாணமிகுதியால், ”இன்று வேண்டாம்… நாளை செல்வோம்” என்று கூறியபொழுதில், ”நாணினும் உன் கற்பே நனிசிறந்தது. காதலித்த தலைவனையன்றி வேறொருவனை நீ மணப்பது உன் கற்புக்கு இழுக்கு; ஆதலால் தலைவனொடு உன் வாழ்வை அமைத்துக்கொள்ள இன்றே புறப்படு!” என்று தலைவியை ஆற்றுப்படுத்துவதே இங்குத் தோழியின் நோக்கம்.

    நாணால் தடுமாறிய தலைவி, சிறுபொழுதில் தன்னிலை உணர்ந்தாள்; தமரறியாது தோழியொடு புறப்பட்டாள்.

    குறியிடத்தில், தலைவியை அழைத்துச்செல்ல ஏற்கனவே வந்து காத்திருந்தான் தலைவன்.

    ”அன்ப! நான் சொன்னதுபோலவே தலைவியை அழைத்துவந்து உம்மிடம் ஒப்படைத்துவிட்டேன் என்றாள் தோழி. உணர்ச்சிமேலீட்டால் அவள் குரல் கரகரத்தது. ஒருசில நொடிகள் மௌனமாய் நின்றவள், தான் சொல்லவேண்டிய கருத்துக்களை மனத்துக்குள் ஒழுங்குபடுத்திக்கொண்டு மீண்டும் பேச்சைத் தொடங்கினாள்…

    cow_elk”அசைகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த, தண்ணிய நறிய மலைப்பக்கத்தின்கண், மெல்லிய நடையுடைய மரையா (female elk), இலைகளை விரும்பி உண்டு, துயிலுதற்கிடமாகிய, நல்ல மலை நாட்டையுடைய தலைவ! பெரிய நன்மையொன்றை ஒருவர் தமக்குச் செய்தால் அங்ஙனம் செய்தாரைப் போற்றாதாரும் உளரோ?  யாவருமே போற்றுவர்! ஆனால் அஃது சிறப்புக்குரியதன்று! சிறிதளவு நன்மையை இத்தலைவி பெற்றவளாயிருக்கும் காலத்திலும் விருப்பத்தோடு புலவிதீர இவளை நீ பாதுகாப்பாயாக! நினையன்றி பற்றுக்கோடு ஏதுமற்றவள் இவள்!” என்றாள் தோழி. 

    பெருநன்  றாற்றிற்  பேணாரும் உளரே
    ஒருநன்  றுடையள்  ஆயினும்  புரிமாண்டு
    புலவி  தீர  அளிமதி  இலைகவர்
    பாடமை  ஒழுகிய  தண்ணறுஞ்  சாரல்
    மென்னடை  மரையா  துஞ்சும்
    நன்மலை  நாட  நின்னல  திலளே.  (குறுந்: 115 – கபிலர்)
     

    இப்பாடலின் பொருளை இன்னும் சற்று எளிமைப்படுத்திச் சொல்வதானால்…”தலைவி இப்போது இளமை நலத்தினள்; தலைவனுக்கு இன்பம்நல்கும் பருவத்தினள்; ஆதலால் தலைவன் அவளை விரும்புவதில் வியப்பில்லை. ஆனால் இதே தலைவி நரைகூடிக் கிழப்பருவம் எய்தும் காலமும் வரும். அப்போது தலைவி,

    ”புதுமலர் அல்ல; காய்ந்த 
         புற்கட்டே அவள் உடம்பு! 
    சதிராடும் நடையாள் அல்லள்
     
         தள்ளாடி விழும் மூதாட்டி 
    மதியல்ல முகம் அவட்கு
     
         வறள்நிலம்! குழிகள் கண்கள்!”  என்று சொல்லும் நிலையில் இருப்பள்.

    அப்போதும் தலைவன் அவளை வெறுக்காது, அவளிடம் அன்புகாட்ட மறுக்காது அவளை இன்முகத்தோடு காக்கவேண்டும் எனும் தன் எதிர்பார்ப்பைத் தலைவனுக்கு இப்பாடலில் குறிப்பால் உணர்த்துகின்றாள் சிறுமுதுக்குறைவியான (சிறு பருவத்திலேயே பேரறிவு படைத்தவள்) தோழி.

    ஈதொப்ப, தலைவியைத் தலைவனிடம் ஓம்படுத்தி (அடைக்கலப்படுத்தி), இவள் இளமை யெழில்நலம் தளரினும், நன்னெடுங்கூந்தல் நரையெய்தினும் அன்பொடு புரப்பாய்” என்று தோழி மொழியும் பொருள்செறிந்த அரும்பாடலை நற்றிணையிலும் காணலாம்.

    அண்ணாந்து   ஏந்திய   வன முலை   தளரினும்
    பொன்நேர்   மேனி   மணியின்  தாழ்ந்த
    நல்நெடுங்  கூந்தல்  நரையடு  முடிப்பினும்
    நீத்தல்   ஓம்புமதி  பூக்கேழ்  ஊர
    இன்கடுங்  கள்ளின்  இழைஅணி  நெடுந்தேர்க்
    கொற்றச்  சோழர்  கொங்கர்ப்  பணீஇயர்
    வெண்கோட்டு  யானைப்  போஒர்  கிழவோன்
    பழையன்  வேல்  வாய்த்தன்ன  நின்
    பிழையா  நன்மொழி  தேறிய  இவட்கே.  (நற்: 10)

    தலைவியின்மாட்டுப் பெருங்காதலும் பேரன்பும் கொண்டவள் அல்லவோ தோழி? ஆதலால், தலைவியை இன்னும் சற்றுநேரத்தில் பிரியப்போகிறோம் எனும் உணர்வு அவளுக்குச் ஆற்றொணா வேதனையை அள்ளித்தந்தது. தன்னருமைத் தோழி அவள்விரும்பிய காதலனோடு இன்பமாய் வாழவேண்டும் எனும் நாட்டமும், அவளை இனி எப்போது மீண்டும் காண்போம் எனும் வாட்டமும் அவளை மாறிமாறி அலைக்கழித்தன.

    தன் உயிரன்ன தோழியாம் தலைவியைக் கண்ணின் கருமணியாய்த் தலைவன் பேணவேண்டும் எனும் தன் வேணவாவை மீண்டும் ஒருமுறை அவனிடம் அழுத்தமாகத் தெரிவிக்க விரும்பிய தோழி மேலும் சில சொல்லலுற்றாள்… 

    “அரும்புகள் முதிர்ந்த ஞாழலினது முட்டையைப் போன்ற திரண்ட மலர்களை  நெய்தலது கரிய மலரிலேwater-lily பெய்வதைப்போலக் குளிர்காற்றுத் தூவுகின்ற வன்மையுடைய கடற்கரைக்குத் தலைவ! ஈன்றவள் சினந்து வருத்தும்போதும் வாய்திறந்துஅன்னையே என்று அழுங் குழந்தையைப் போல் என் தோழியாகிய இத்தலைவிக்கு நீ இன்னாதவற்றைச்செய்தாலும், இனிதாகத் தலையளி செய்தாலும் இவள் நின்னாற் புரக்கப்பட வேண்டிய எல்லையிலிருப்பவள்; நின்னையன்றித் தனது மிக்க துன்பத்தை நீக்குவாரைப் பெற்றிலள் என்பதை அறிந்து இதமாக நடந்துகொள்க” என்றாள்.

    நனைமுதிர்  ஞாழற்  தினைமருள்  திரள்வீ
    நெய்தல்  மாமலர்ப்  பெய்தல்  போல
    ஊதை  தூற்றும்  உரவுநீர்ச்  சேர்ப்ப
    தாயுடன்று   அலைக்கும்  காலையும்  வாய்விட்டு
    அன்னா  வென்னுங்  குழவி  போல
    இன்னா  செயினும்  இனிதுதலை  யளிப்பினும்
    நின்வரைப்  பினளென்  தோழி
    தன்னுறு  விழுமம்  களைஞரோ  இலளே.  (குறுந்: 397 – அம்மூவனார்)

    தாய் தனக்குத் துன்பம் செய்தாலும் குழந்தையானது அழுதுகொண்டு அவளையே நாடி நிற்பதுபோல், தலைவனல்லால் வேறு பாதுகாப்பும், பற்றுக்கோடும் அற்றவளாய்த் தலைவி இருப்பதனால், அவளிடம் தலைவன் எப்போதும் தயவாய் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை அவனுக்குப் பல்லாற்றானும் வலியுறுத்துகின்றாள் தோழி.

    mother-and-child-pencil-artதாய் அலைப்பினும் தளர்நடைக் குழவி அவளையே நாடிநிற்கும் நிலையை குலசேகராழ்வார் இயற்றிய பெருமாள் திருமொழியும், நான்மணிக்கடிகை (எனும் பதினென்கீழ்க்கணக்கு) நூலின் 25ஆம் பாடலும் உருக்கமாய்ப் பேசுகின்றன.

     “….அரிசினத்தால்  ஈன்றதாய்  அகற்றிடினும்  மற்றவள்தன்,
    அருள்நினைந்தே அழுங்குழவி அதுவேபோன் றி ருந்தேனே (பெருமாள். 5:1.)

    குழவி அலைப்பினும்  அன்னேயென்  றோடும் (நான்மணி. 25)

    தலைவனும் தலைவியும் தோழியிடம் பிரியாவிடைபெற்றுப் புறப்பட, விழிநீர் பார்வையை மறைக்க அவர்கள் செல்லும் வழியையே நெடுநேரம் பார்த்தபடி நின்றிருந்தாள் அந்த அருள்நங்கை!

    தலைவியின் நல்வாழ்வே தன்வாழ்வு எனும் நன்னர்நெஞ்சுடைய தோழியின் கழிபேரன்பு நமக்குப் பிரமிப்பை ஏற்படுத்துகின்றது. தன்னலம் என்பது கடுகளவுமற்ற தூயபெண்ணாய்த் தோழியைப் புனைந்திருக்கும் சங்கப் புலவோரின் திறத்தைப் போற்றுதற்கு வார்த்தையில்லை!

    [தொடரும்]

     

     

     

     

     

    Share
  • “ வர்லாம் வா “

     

    தமிழ்த்தேனீ

    கற்பனையான ஒரு பதிவு இது, பெரும் யோகிகளும் ஞானிகளும் இந்த சம்சார பந்தத்தை அறுத்துக்கொண்டு இறைவனை அடைய மிகவும் மனப்பக்குவம் தேவை என்று சொல்கிறார்கள்.  பலர் ஏதேனும் துன்பம் வந்தாலோ என்னை ஏன் இறைவா இப்படி சோதிக்கிறாய் அழைத்துக் கொண்டு போய்விடு என்பார்கள், அழைத்துக் கொண்டு போய்விடு என்று சொல்பவர்கள் எல்லாம் மனப்பூர்வமாகவா சொல்கிறார்கள் , அது அவ்வளவு எளிதா என்று சிந்தித்தேன், அதனால் வந்த கற்பனை இது .

    “ வர்லாம் வா  “   சிறு கதை

    *இப்போ என்னோட வரியா மானுடனே வர்லாம் வா என்றது அமானுஷ்யக் குரல்
    அட மறு படியும் ஆரம்பிச்சிட்டியா நான் கொஞ்சம் பலகீனமான உடனே எங்கேருந்தோ வந்து வர்லாம் வா வர்லாம் வான்னு கூப்பிட ரெடியாக காத்துகிட்டு இருக்கே , மத்த நேரத்திலே நீ எங்கே இருக்கே என்ன செய்யறே ஒண்ணுமே புரியமாட்டேங்குது

    நானும் ரொம்பக் காலமா நீ யாரு எங்கே இருக்கே என்னதான் செஞ்சிண்டு இருக்கே அப்படீன்னு ஆராய்ஞ்சிண்டே இருக்கேன் இது வரைக்கும் ஒரு சின்ன ஆதாரம் கூட கிடைக்கலே
    தவஸ்ரேஷ்டர்களும், முனிவர்களும், யோகிகளும், சித்தர்களும் பக்தி செஞ்சா போதும், பாவம் பண்ணாம இருந்தா போதும் ,கூடிய வரைக்கும் புண்ணியம் செய்யுங்க உன்னை எளிதா அடையலாம்ன்னு காலம் காலமா சொல்றாங்க , அவங்களாலே கூட உன்னை அவ்ளொ எளிதா நெருங்க முடியலே.

    ஆனா பக்திமான்லேருந்து சக்திமான் வரைக்கும் நிரூபிக்கிறாங்க பணம் இருந்தாத்தான் உன்னை அடைய முடியும்னு. யார் பணத்தை அதிகமா சேத்து வெச்சு பதுக்கி வெக்கிறாங்களோ அவங்களை யாராவது ஒருத்தன் உன்கிட்ட அனுப்பறான். இல்லேன்னா அவங்களுக்கு நீயே தரிசனம் குடுக்கறே , உண்டியல் ரொம்பினா போதும்னு அப்பிடியும் இல்லேன்னா நேரிலேதான் பாக்க முடியலையேன்னு ஏங்கிப் போயி கோயில்லே வந்து சிலாரூபமாவாவது பாக்கலாம்னு பாத்தா அங்கேயும் பணம் இருந்தாத்தான் அனுமதிக்கறாங்க, ஆனா நிறைய பணத்தை சேமிச்சு வைக்கறவன் எல்லாரையும் அவங்களே வாசல் வரைக்கும் வந்து பூரணகும்பம் வச்சி அழைச்சிட்டுப் போயி யாரும் தொடக் கூடாதுன்னு எழுதிப் போட்டிருக்கற த்வஜஸ்தம்பத்தையும் தொட்டுக்கோங்க தொட்டு கும்பிடுங்க என்று அனுமதிச்சு , கர்பக் கிருஹம் உள்ளேயே அழைச்சிட்டுப் போயி உனக்கே அவங்க தரிசனம் காட்டறாங்க ,

    நீயும் அவங்களைப் பாக்கறே இன்னும் அதிகமா பணம் தர, அதிகமா பதவி தர,, செல்வம் செல்வாக்கு எல்லாம் தர, இது என்னடான்னு ஆச்சரியப்பட்டா மறு நாளே செய்தி வருது உன்னையே கடத்திட்டாங்க பணத்துக்காகன்னு. ஒண்ணுமே புரியலே கிருஷ்ணா நாராயணா .

    ஆனா எங்களை மாதிரி நடுத்தர வர்க்கம்  நடுத்தெரு வர்க்கம் மாதிரியானவங்களை பதவியைப் பறிச்சு பணத்தைப் பறிச்சு பலவிதமா சோதிச்சு எங்களை பலகீனமாக்கி அப்பிடி பலகீனமான நேரத்திலே வர்லாம் வா வர்லாம் வான்னு கூப்புடுறியே இது நியாயமா கிருஷ்ணா நாராயணா
    எனக்கு இன்னமும் கொஞ்சம் கடமை இருக்கு அதை முடிச்சிட்டு வரேன் என்றார் மானுடன்.

    இதோ பாரு எப்பவும் கேள்வி கேட்டுகிட்டே இருக்காதே , பதில் சொல்றது கஷ்டம் , அப்பிடியே நான்பதில் சொன்னாலும் உனக்கு அதைப் புரிஞ்சிக்கறது கஷ்டம், அதுனாலே நானே நேரிலே வந்து கூட்டிகிட்டு போறதெல்லாம் ரொம்பப் பெரிய சமாச்சாரம் ,அது உனக்கு புரியலே நான் கூப்புடும் போது வந்துட. இல்லேன்னா உனக்குதான் கஷ்டம் என்றான் கிருஷ்ணன்.

    அதெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம் இப்போதான் எனக்கு பேரன் பொறந்திருக்கான் நான் அவனைக் கொஞ்ச வேண்டாமா பிறகு வருகிறேன் என்றார் மானுடன்

    சரி உன் இஷ்டம் ஆனால் பீஷ்மருக்கு நான் ஒரு வரம் கொடுத்தேன் அவர் எப்போது என்னிடத்துக்கு வரவேண்டுமோ அப்போது வரலாம் என்று , அதுபோன்ற அருமையான வரத்தை பல யுகங்கள் கழித்து இப்போது உனக்கு கொடுக்கிறேன்., ஆனால் அந்த வரத்தை சரியாக உபயோகித்துக் கொள் . இப்போது நான் செல்கிறேன் என்றபடி அமானுஷ்யக் குரல் மறைந்தது.

    அப்போதிலிருந்து அவர் யோசிக்கத் தொடங்கினார் வந்த நல்ல வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோமோ , இந்த உலகத்திலே இருந்து அப்படி என்ன சாதிக்கப் போகிறோம் ? பரம்பொருளை அடைய தவம் இருக்கிறார்கள், நான் பரம்பொருளே என்னை நோக்கி வந்து மனமிறங்கி அழைக்கும் போது அதைவிட முக்கியமாய் வேறெதையோ நினைத்துக் கொண்டு நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டிருக்கிறோமே,

    நல்ல வேளை பூர்வ ஜென்ம புண்ணியம் பரம்பொருள் நம் மேல் கோபப்படாமல் நம் இஷ்டத்துக்கு நாம் நினைக்கும் போது வரலாம் என்று வரம் கொடுத்திருக்கிறது
    இந்த வரத்தை எப்படி உபயோகிப்பது வீணாக்காமல் என்று மிகவும் கவனமாக கையாண்டு உபயோகிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இது வரை வாழ்க்கையில் உழைப்பு கவலை சோகம் பிரிவாற்றாமை இழப்பு என்று ஏகப்பட்ட மானுட விதிகளை அனுபவித்தாயிற்று, சரி இனிமேல் சற்று காலமாவது மகிழ்ச்சியுடன் வாழலாம் சந்தோஷங்களை அனுபவிக்கலாம் என்று நினைக்கும் இந்த நேரத்திலே வந்து அழைத்தால் எப்படிப் போவதாம் ! என்று தன்னையே சமாதானப் படுத்திக் கொண்டு வாழத்தொடங்கினார் ,

    பேரன் தாத்தா என்றான் அட அதுக்குள்ள உனக்கு பேச்சு வந்துடுத்தா ! உனக்கு இப்பத்தான் உனக்கு ஆயுஷ்ஹோம்ம் செஞ்சு முதல் பொறந்த நால் கொண்டாடினா மாதிரி இருக்கு. ,காலம் ரொம்ப வேகமா ஓடறது நீயே அந்தக் கிருஷ்ணனோட ப்ரசாதம் தானே வரம்தானே , நீ என்னைத் தாத்தான்னு கூப்படறதே “ செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே “ ன்னு மஹாகவி பாரதியார் பாடின பாட்டு நியாபகத்துக்கு வருது.

    மஹாகவி பாரதியார் 39 வயசுக்குள்ளே கண்ணன் என் காதலன்னு கண்ணனை அடைஞ் காதல்ன்னா என்னான்னு நிரூபிச்சுட்டார். ஆனா வாழ்ந்த அந்த குறுகிய காலத்துக்குள்ளே எத்தனையோ அவதிகள் பட்டும் அதற்கு நடுவே நல்லதைச் செய்து நல்லதைப் பேசி நல்லதைப் பாடி சாகாவரம் அடைஞ்சார், உலகப் புகழ் அடைஞ்சார் . எத்தனை காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமே இல்லை இறந்த பின்னும் வாழ்கிறோமா என்பதே முக்கியம்னு நிரூபிச்சார், உனக்குத் தெரியுமோ என்றார் மானுடன்.

    குழந்தை தாத்தா என்றது மறுபடியும் , ஆமாண்டா நான் தாத்தாதான் ஆனா பாரதியார் எனக்கே தாத்தா என்றார் . குழந்தை தன் பொக்கை வாய் திறந்து ஏதோ புரிந்தாற்ப் போல் சிரித்துவிட்டு மறுபடியும் நீ தாத்தா என்றது .

    ஆமா நான் தாத்தா நீ பேரன் என்றார் மானுடன் அவருக்குள் ஏதோ ஒரு மாற்றம் ! அட நாம எப்போ சாகணும்னு நெனைக்கிறோமோ அப்போ சாகலாம்னு வரம் கொடுத்தானே மாயக்கிருஷ்ணன் , இது வரமா அல்லது அவரே நினைக்காத நேரத்திலே மஹாகவி பாரதியாரை கையைப் பிடிச்சு உரிமையோட வா போகலாம்ன்னு கூட்டிண்டு போனானே அது வரமா !

    என்ன இருந்தாலும் நாம சாதாரண மானுடன்தானே அதுனாலேதான் கண்ணனே வந்து கூப்புடும்போது போகாமே இருந்துட்டோம் கண்ணன்தான் நாம் எப்போ நெனைக்கிறோமோ அப்போ வர்லாம்னு வரம் கொடுத்திருக்கானே , சரி இப்போ முதல் வேலையா நாம் எப்போ போகணும்னு தீர்க்கமா முடிவெடுக்கணும்னு யோசிக்க ஆரம்பித்தார்.

    ஒரு பேரன் பொறந்துட்டான் இப்பிடீ யோசிச்சுகிட்டே இருக்கும் போதே நாலு பேரன் ஒரு பேத்தின்னு பிள்ளை , பெண்களுக்கு குழந்தைகள் பொறந்து எல்லாரோடையும் கொஞ்சி மகிழ்ந்தாச்சு , இனிமே என்ன எப்போ வேணா வர்ரதுக்கு நான் ரெடி , நீ எப்போ வரமுடியுமோ அப்போ வந்து என்னைக் கூப்பிட்டுண்டு போ நான் தயாரா இருக்கேன் என்றபடி ஈசிசேரில் சாய்ந்து மனக்கண்ணால் கிருஷ்ணனைப் பார்க்கத் தொடங்கினார்,

    எனகுத் தெரியும் கிருஷ்ணா நீ வருவே “ வர்லாம் வா வர்லாம் வா “ என்று வர்லாம் வா என்னும் ஸ்லோகத்தையே நாராயண மந்திரமாய் நினைத்துக் கொண்டு சொல்ல ஆரம்பித்தார். திடீர்ன்னு யாரோ அவரைத் தூக்கிண்டு போறாமாதி உணர்வு, ஓ வந்துட்டியா கிருஷ்ணா நீதான் என்னைத் தூக்கிண்டு போறியா என்று கண்ணை விழித்துப் பார்க்க முயன்றார்.

    எங்கிருந்தோ ஒரு குரல் டாக்டர் சார் பேஷன்ட் கண் முழிச்சிட்டார் , அவருக்கு நினைவு வந்துடிச்சு என்று ஒரு செவிலித்தாயாரின் குரல் கேட்டது. மருத்துவர் வந்து மானுடரே கண்ணைத் திறங்க , உங்களுக்கு ஒண்ணும் இல்லே பயப்படாதீங்க, நீங்க பொழைச்சிகிட்டீங்க என்றார்.

    அட கிருஷ்ணன் இன்னும் வரலியா என்றார், அவர் வாயருகில் காதை வைத்துக் கேட்ட மருத்துவர் எல்லாரும் வெளியேதான் இருக்காங்க , பயப்படாதீங்க நான் கிருஷ்ணனை வரச் சொல்றேன் என்றபடி வெளியே சென்று மானுடன் பொழைச்சிட்டார் பயப்படவேண்டாம், உள்ளே போயி பாக்கலாம்
    என்றார்,

    அப்பா பயப்பட ஒண்ணுமில்லே இப்போ நல்லா ஆயிட்டீங்க . அப்பா நீங்க ஈசீசேர்லே சாஞ்சுண்டு இருந்தீங்களே அப்போ உங்களுக்கு வேர்த்துக் கொட்டித்து, மூச்சு விடமுடியாமே அவதிப் பட்டீங்க , அதுனாலேதான் இங்கே கூட்டிண்டு வந்தோம், இப்போ டாக்டர் சொல்லிட்டார் இனிமே பயப்பட ஒண்ணுமில்லே உங்களுக்கு இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமா நடந்தாச்சு என்றார் கிருஷ்ணன்,

    அப்போ அந்தக் கிருஷ்ணன் வரலியா என்றார் மானுடன் .

    இன்னும் அப்பாவுக்கு மயக்கம் சரியா தெளியலே என்றான் அவர் மகன் கிருஷ்ணன்
    ஆமா எனக்கு மயக்கம் தெளிஞ்சு போச்சுப்பா என்றார் பலகீனமாக அப்பா இப்போ நீங்க ஒண்ணும் பேசவேண்டாம் நன்னா ரெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்கார் என்றான் கிருஷ்ணன். ஹே கிருஷ்ணா நான்தான் வரேன்னு சொல்லிட்டேனே ஏன் வந்து என்னைக்கூட்டிண்டு போக மாட்டேங்கற என்றார் மானுடன். அப்பா இன்னிக்கிதான் சரியாயி மயக்கம் தெளிஞ்சிருக்கு இன்னும் ஒரு வாரத்திலே கூட்டிண்டு போயிடறேன் வீட்டுக்கு என்றான் கிருஷ்ணன்,

    ஏன் கிருஷ்ணா அம்மா எங்கே என்றார் மானுடன் . உங்களுக்கு சரியாகனுமேன்னு அம்மா வேண்டாத தெய்வமில்லே, அதோ அங்கே நிக்கறா வெக்கப்பட்டுண்டு, என்றான் கிருஷ்ணன், எதுக்குடா வெக்கம் அவளை வரச்சொல்லு என்றார் மானுடன் சரி நான் வெளியிலே போயி அம்மாவை அனுப்பறேன் என்று வெளியே போனான்
    திடீரென்று மயக்கும் குழலோசை கேட்டு திரும்பிப் பார்த்தார் மானுடன் அங்கே கிருஷ்ணன் ஒரு கள்ளப் புன்னகையுடன் வர்லாம் வா வர்லாம் வா மானுடனே என்று கையை நீட்டினான் .

    உள்ளே வந்த மானுடனின் மனைவி பக்கத்திலே உக்காந்து நீங்க பொழைக்கணுமேன்னு நான் வேண்டாத தெய்வம் இல்லே என்றாள், தழுதழுப்புடன். உங்க கிட்ட ரகசியமா ஒரு விஷயம் சொல்லணும் உங்களுக்கு மறுபடியும் ஒரு பிள்ளை பொறக்கப்போறான் என்று வெட்கப்பட்டாள்,

    அதிர்ந்து போய் கிருஷ்ணனைத் திரும்பிப் பார்த்த மானுடன் என்ன கிருஷ்ணா ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி வரக் கூடாதோ , கேட்டியா என் பொண்டாட்டி சொன்னதை , எனக்கே வெக்கமா இருக்கு , ஆனாலும் நீ எல்லாரும் சொல்றா மாதிரி மாயக்கண்ணன்தான்.

    சரி எனக்காக இன்னொரு தடவை ஒரே ஒரு சந்தர்ப்பம் குடுத்துதான் பாரேன் நிச்சயமா நான் உன்னோட வந்துருவேன் . அடுத்த தடவை நீ மறுபடியும் வாயேன் அப்போ நான் உன்னோட வந்துடறேன்  சரியா என்றார் மானுடன்.

     

    Share
  • இன்றைய சமூகம் !…….

     முனைவர் சு.சத்தியா

    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

    பான் செக்கர்ஸ் மகளிர்   கல்லூரி, தஞ்சாவூர்.

     

    கூடி  வாழ்ந்து  கோடி  நன்மை   பெற்ற

    காலம்போச்சு!…

    நாடி  எங்கும்  கேடு  செய்யும்

    உலகமாச்சு!….

    மனிதன  மனிதன்  மதிக்கும்  காலம்

    மாண்டுபோச்சு!…

    மனிதன்  எங்கே  வசிக்கிறான்? என்ற

    நிலையாச்சு!….

    அன்பு   என்றால்  என்ன?

    என்பதாச்சு!…..

    வம்பு  என்பதே  இன்று

    வாடிக்கையாச்சு!….

    கருணை  என்பது  முதியோர்

    இல்லமாச்சு!….

    காசு  மட்டுமே  இன்று

    வாழ்க்கையாச்சு!..

    அது இல்லாதவர் வாழ்வோ

    கல்லறையாச்சு!….

    உழவனின்   வாழ்வோ

    உதிர்ந்துப்போச்சு!….

    நாற்பது  பக்க சுயவிவரம்

    செல்லாகாசாச்சு!….

    நாற்பது  லெட்சம்   கையூட்டே   இன்றைய

    நாகரீகமாச்சு!….

    இதுதான்   இன்றைய  சமூகம்

    என்பதாச்சு!…

     

     

    Share
  • கடைசி அலை !

    சந்திரா  மனோகரன்

     

     

    அவள்  மென்முறுவலில்

    என்  வனம்  நனைந்து  சிலிர்க்கிறது

    பச்சையோ  சிதறி

    புதுப் புது  பட்சிகளால் உயிர்த்தெழுகிறது !

    ஆனாலும் —

    என் இதயமோ  கற்பாறையாய்

    இறுகியே  கிடக்கின்றது

    அந்த  சிசுப்பாதங்களின் பதிவுகள்

    பாதையெங்கும்  தழும்புகளாய்

    முளைத்துக் கிடக்கின்றன

    பெருங்காற்றின்  சுழற்சியில்

    அவள்  முணுமுணுப்பு

    என் மனதைக்  கலங்கடிக்கிறது

    ஊற்றெடுக்கும்  ஈரக்கசிவில்

    பூத்திருந்த பகைமை

    உடைத்தெறியப்படுகிறது

    வலுவிழந்த  மனதின் வலி

    வீழ்ந்து  நொறுங்கிப் போகிறது

    அடர்ந்த  இலைகளுக்குள்

    மெல்லத்  தேய்ந்துபோகும்  இருள் !

    நேற்றுவரை  அறுந்த  கம்பி !

    இன்று மென்சிறகுகளால்

    போர்த்தப்படுகிறேன்

    அவள்  வருகை  மாயையின் பிம்பமா ?

    இல்லை , பேரொளியின் அதிர்வு !

    மென்தளிர்போல்  மென்மையாய்

    மொழியற்ற  சந்திப்பில்  இருவரும் …

    கடலில்  எது  கடைசி அலை  ?

    எனக்குள் புதிதாய்  ஓரு பேரலை  !

     

     

     

     

    Share
  • விடியல் கவிதை

     

    முனைவர் க. முத்தழகி

    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,

    தஞ்சாவூர்.

     

     

    ஞாயிறு எழுந்து வர!

    ஞாலமெல்லாம் ஒளிப்பெற!

    நண்டுவளை திறந்திட நல்லன பூரிக்க!

    புதுமையாய் நாள் புலர்ந்ததுவே!

    ஏழையும் எழுந்திட எஜமானும் எழுந்திட

    உதித்தது ஞாயிறு தானே!

    காலைக் கதிரவனே!

    காரிருளை அகற்றியவனே!

    கானக் குயில் பாடிடவே!

    அன்னமென பெண் நடந்திடவே!

    அரியணையில் வீற்றிடவே!

    வீர நடை நடந்திடவே!

    விடிவெள்ளியாய் வந்த ஆதவனே!

    சோம்பலை போக்கிட்டு

    இருள் கதவை திறந்திட்டு

    சுறுசுறுப்பை உலவ விட்டு

    சுடரொளியாய் வந்தவனே!

    உச்சத்தில் தோன்றுமுன் – உன்

    வரவை எதிர் நோக்கி – ஓடோடி

    வரச் செய்த சுடரொளியே!

    வாசலில் வந்து நின்று

    விடியல்! விடியல் ! என்று விடியும்

    என் வாழ்வு என்று பச்சிளங் குழந்தையும்

    உன் வரவை எதிர்ப்பார்த்திடுமே!!!

     

     

     

    Share