விடியல் கவிதை
முனைவர் க. முத்தழகி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
தஞ்சாவூர்.
ஞாயிறு எழுந்து வர!
ஞாலமெல்லாம் ஒளிப்பெற!
நண்டுவளை திறந்திட நல்லன பூரிக்க!
புதுமையாய் நாள் புலர்ந்ததுவே!
ஏழையும் எழுந்திட எஜமானும் எழுந்திட
உதித்தது ஞாயிறு தானே!
காலைக் கதிரவனே!
காரிருளை அகற்றியவனே!
கானக் குயில் பாடிடவே!
அன்னமென பெண் நடந்திடவே!
அரியணையில் வீற்றிடவே!
வீர நடை நடந்திடவே!
விடிவெள்ளியாய் வந்த ஆதவனே!
சோம்பலை போக்கிட்டு
இருள் கதவை திறந்திட்டு
சுறுசுறுப்பை உலவ விட்டு
சுடரொளியாய் வந்தவனே!
உச்சத்தில் தோன்றுமுன் – உன்
வரவை எதிர் நோக்கி – ஓடோடி
வரச் செய்த சுடரொளியே!
வாசலில் வந்து நின்று
விடியல்! விடியல் ! என்று விடியும்
என் வாழ்வு என்று பச்சிளங் குழந்தையும்
உன் வரவை எதிர்ப்பார்த்திடுமே!!!