கடைசி அலை !
சந்திரா மனோகரன்
அவள் மென்முறுவலில்
என் வனம் நனைந்து சிலிர்க்கிறது
பச்சையோ சிதறி
புதுப் புது பட்சிகளால் உயிர்த்தெழுகிறது !
ஆனாலும் —
என் இதயமோ கற்பாறையாய்
இறுகியே கிடக்கின்றது
அந்த சிசுப்பாதங்களின் பதிவுகள்
பாதையெங்கும் தழும்புகளாய்
முளைத்துக் கிடக்கின்றன
பெருங்காற்றின் சுழற்சியில்
அவள் முணுமுணுப்பு
என் மனதைக் கலங்கடிக்கிறது
ஊற்றெடுக்கும் ஈரக்கசிவில்
பூத்திருந்த பகைமை
உடைத்தெறியப்படுகிறது
வலுவிழந்த மனதின் வலி
வீழ்ந்து நொறுங்கிப் போகிறது
அடர்ந்த இலைகளுக்குள்
மெல்லத் தேய்ந்துபோகும் இருள் !
நேற்றுவரை அறுந்த கம்பி !
இன்று மென்சிறகுகளால்
போர்த்தப்படுகிறேன்
அவள் வருகை மாயையின் பிம்பமா ?
இல்லை , பேரொளியின் அதிர்வு !
மென்தளிர்போல் மென்மையாய்
மொழியற்ற சந்திப்பில் இருவரும் …
கடலில் எது கடைசி அலை ?
எனக்குள் புதிதாய் ஓரு பேரலை !
உள்ளத்தின் ஆழத்தைத் தொடுகிறது கவிதை