Blog

  • மண்டைப் பாணர் – ஓர் ஆய்வு

    -ஆ.ஜெயகணேஷ்

    முன்னுரை

         பாணர் குறித்த செய்திகள் சங்கப் பாடல்களிலும் தொல்காப்பியத்திலும் காணப்படுகின்றன. இப்பாணர் மூன்று வகையினர் என்று கூறுவர் அறிஞர் பெருமக்கள். அவற்றுள் மண்டைப்பாணர் என்றொரு வகையையும் கூறியுள்ளனர். மண்டைப்பாணர் என்றொரு வகைப் பாணர் மரபில் இருந்தனரா? மண்டை என்பது பாணர்க்கு மட்டும் உரிய ஒன்றா? மண்டை என்பது யாழ்க்கருவி போல் இசைக்கருவியா? மண்டைப்பாணர் என ஏன் அழைக்கின்றனர்? போன்ற வினாக்கள் தோன்றுகின்றன. எனவே, ~மண்டைப் பாணர் என்றொரு வகையினர் சங்க காலத்தில் இருந்தனரா? என்னும் சிக்கலை முன்னிறுத்தி இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

    மண்டை என்பது என்ன?

         மண்டை என்பது சங்ககால இரவலர்கள் உணவுபெற்று உண்பதற்கு வைத்திருந்த ஓர் உணவுப் பாத்திரம் ஆகும். மன்னரது அரண்மைக்குச் சென்ற இவர்கள், மன்னனைப் புகழந்துபாடி முடித்தபின்பு அரசர்கள் கொடுக்கும் கள், சோறு போன்ற உணவுகளை இம்மண்டையில் பெற்று உண்டுள்ளனர். அரண்மனைக்காரர்களும் அம்மண்டையில்தான் உணவுகளை வழங்கியுள்ளனர். இம்மண்டை இரவலர்களின் உண்கலமாக விளங்கியுள்ளன எனப் புறநானூற்றுப் செய்யுட்கள் கூறியுள்ளன. இதனைப் பின்வரும் தலைப்பின் கீழ் காணலாம்.

    புறநானூற்றில் மண்டை இடம்பெறும் சூழல்

         புறநானூற்றுப் பாடல்கள் பல செய்திகளை எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் மண்டை என்பதைக் குறித்து சில பாடல்கள் கூறியுள்ளன.  அவற்றினை எடுத்துக்காட்டி இப்பகுதியில் ஆராயப்பட்டுள்ளது.

         விறலியை ஆற்றுப்படுத்திய ஒளவையார், ‘கவிழ்ந்து கிடக்கும்  உண்கலமாகிய என் மண்டையை மலர்க்குநர் யார்? என ஏங்கிக் காட்டில் இருந்த சில்வளை விறலியே!, சேய்மைக்கண்ணன்றி அண்மையிலேயே நெடுமானஞ்சி உள்ளான். அவன்பால் செல்வையாயின், அவன் பகைப்புலத்துத் திறையாகக் கொண்ட பொருட்களை, ஒரு பொழுதும் ஈரம் பார்க்காத மண்டை நிரம்ப ஊன் கொடுப்பதில் வல்லவன். அவனை நாடிச் செல்க’ எனக் கூறியுள்ளார். இதனை,

               “ஒருதலைப் பதலை தூங்க வொருதலைத்
              தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூங்கிக்
              கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரெனச்
              சுரன்முத லிருந்த சில்வளை விறலி
              செல்வை யாயிற் சேணோ னல்லன்
              முனைசுட வெழுந்த மங்குன் மாப்புகை
              மலைசூழ் மஞ்சின் மழகளி றணியும்
              பகைப்புலத் தோனே பல்வே லஞ்சி
              பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை
              மெழுகுமெல் லடையிற் கொழுநிணம் பெருப்ப
              அலத்தற் காலை யாயினும்
              புரத்தல் வல்லன் வாழ்கவன் றாளே” (புறம்.103)

    என்னும் செய்யுளால் அறியலாம். இச்செய்யுளில் மண்டை என்னும் சொல் “கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரென” என்னும் அடியிலும் “பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை” என்னும் அடியிலும் இடம்பெற்றுள்ளது. உணவு இருந்தால் மண்டை மலர்தல் தன்மையுடையது; உணவு இல்லையெனில் அது மலர்தல் தன்மையற்றது என உணர்த்தப்பட்டுள்ளது. ஆகையால் மண்டையில் புரவலர்கள் உணவினை இட்டு, அதனை மலரச்செய்தல் தன்மை இன்மையால் அது கவிழ்ந்து காணப்பட்டது என்ற செய்தியை  “கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரென”  என்னும் அடி உணர்த்துகிறது. பொழுது இடைப்படாமையால் புலராத மண்டையைப் “பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை” என்றார். இவ்விரண்டு இடங்களிலும் மண்டை இடம்பெற்ற சூழல் உண்கலம் என்னும் பொருள் விளங்க அமைந்துள்ளது. மேலும், விறலிக்குரிய உண்கலமாக மண்டை அமைந்திருக்கிறது. எனவே, மண்டை என்பது இரவலர்கள் உணவுபெற்ற உணவுப் பாத்திரம் எனத் தெளிவாகிறது.

         அடுத்து வருகின்ற செய்யுளும் இச்செய்தியை உணர்த்தியுள்ளது. அதாவது, ‘இவ்வுலகில் வள்ளல்கள் இறந்தொழிந்தனர். இரப்போர் குறிப்பறிந்து ஈயும் வேந்தரும் இலராயினர். இந்நிலையில் ஏங்கி நிற்காது (வறுமையுற்று) கவிழ்ந்த என் இரவல் மண்டையை ஈத்து மலர்ப்பவர் யாவருளர் என இரவலர் வினவினர்’ என்னும் செய்தியை,

               “ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென
              ஏலாது கவிழ்ந்தவென் னிரவல் மண்டை
              மலர்ப்போர் யாரென வினவலின்”   (புறம்.179:1-3)

    என்னும் செய்யுளடிகள் கூறுகின்றன. புரவலர் கொடுக்கும் பொருளை நிமிர்ந்து ஏந்திய மண்டை, அவர்கள் இன்மையால் அத்தன்மையை இழந்து, ஏலாது கவிழ்ந்தது என்னும் கருத்து உணர்த்தப்பட்டுள்ளது. இரத்தலைப் பெற்ற மண்டையாதலால் “என் இரவல் மண்டை” என்றார் இரவலர். என் இரவல் மண்டை என்று கூறப்பட்டுள்ளதிலிருந்து மண்டை என்பது இரவல் பாத்திரம் என அறிய முடிகிறது. மேலும், ஒளவை.சு.து. அவர்கள், “மண்டை-உண்கலம். அடிகுவிந்து வாய்விரிந்து இருப்பதனாலும் ஏற்கும்பொழுது அதன் வாய்தோன்ற ஏந்துவதும், ஏலாப்பொழுது கவிழ்த்து வைப்பதும் இயல்பாதல்பற்றி, ‘ஏலாது கவிழ்ந்த மண்டை’ என்றும் இட்டு ‘மலர்ப்போர்’ என்றும் கூறினார்” (2009:599) என்பார். இக்கருத்திலிருந்து இரவலர்கள், வேந்தர்கள் ஈயும் பொருளை அல்லது  உணவைப் பெற மண்டையைப் பயன்படுத்தியுள்ளார்கள் என அறிய முடிகிறது. எனவே, மண்டை என்பது இரவலர்கள் இரந்துண்ணும் பிச்சைப் பாத்திரம் அல்லது உணவுப் பாத்திரம் என்பதை இச்செய்யுள் அடிகள் உணர்த்தியுள்ளன.

         பாரி இறந்தது குறித்துப் பாடிய கபிலர், ‘பாரியின் குன்றம், இவர் இருந்த காலத்தில், தன்னிடம் வந்த பாணர்க்கு மண்டை நிறையத் தரும் பொருட்டு இனிய கள் வடிக்கப்பட்டது. இப்பொழுது அத்தன்மையை இழந்தது’ எனக் கூறியுள்ளார். இதனை,

               “ஒருசா ரருவி ஆர்ப்ப வொருசார்
              பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்
              வாக்க வுக்க தேக்கள் தேறல்
              கல்லலைத் தொழுகு மன்னே”      (புறம்.115:1-4)

    என்னும் அடிகள் உணர்த்துகின்றன.  கள்ளைப் பாணர்க்கு மண்டை நிறைய ஊற்றிக் கொடுப்பர் என்னும் கருத்திலிருந்து மண்டை உணவு வழங்கப்பட்ட உண்கலம் என்பது தெளிவாகிறது. “பாணர் மண்டை” என்றதற்குப் பாணருடைய மண்டை என்று விளக்கம் கூறுவர் உரையாசிரியர்கள். எனவே, பாணர்க்கு மண்டையில் கள்நிறையக் கொடுத்துள்ளனர் என்னும் செய்தியின் மூலம்  பாணரது உண்கலமாக மண்டை விளங்கியிருக்கிறது என அறிய முடிகிறது.

         மன்னனிடம் பரிசில் பெறச்சென்ற பெருஞ்சித்தரனார், ‘நெருப்புத் தன் வெம்மை ஆறுதற்கேதுவாகிய, நெய்யினால் வறுத்தெடுத்த கொழுவிய ஊனையும் கள்ளையும் மண்டையோடு பெற்று மாறிமாறி உண்வோமாக, உன்னைக் காண வந்தேன் என்னுடைய தலைவா’ எனக் கூறியுள்ளார். இதனை,

               “நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை
              பரூஉக்கண் மண்டையொ டூழ்மாறு பெயர
              உண்கு மெந்தைநிற் காண்குவந் திசினே”   (புறம்.125:2-4)

    என்னும் அடிகளால் அறியலாம். இச்செய்யுள் அடிகளில் இடம்பெற்ற மண்டை, ஊனும் கள்ளும் உணவும் பெறப் பயன்படுத்திய பாத்திரமாக இடம்பெற்றுள்ளது. அரசனது அரசவையில் ஊனும் கள்ளும் மண்டையோடு சேர்த்தே வழங்கப்பட்டுள்ளன.  இதன்மூலம் அரசர்கள் அரண்மனைக்கு வரும் இரவலர்க்கு உணவு வழங்க மண்டையைப் பயன்படுத்தியுள்ளார்கள் என அறிய முடிகிறது.  மேலும், ஒளவை.சு.து. அவர்கள், பரூஉக்கண் மண்டை என்பதற்குக் “கள்ளையுடைய உடலிடம்பரிய மண்டை” (2009:416) எனக் கூறியுள்ளார். எனவே, மண்டை என்பது அனைத்து இரவலர்களுக்கும் உரிய ஒன்றாக திகழ்ந்துள்ளது என இச்செய்யுள் மூலம் தெளிவாகிறது. அடுத்து வருகின்ற செய்யுள் அடிகளும் இக்கருத்தைக் கூறியுள்ளன.

         தன் தலைவன் இறந்ததால் வருத்தமுற்ற ஆவூர் மூலங்கிழார், ‘வண்டுகள் வந்துபடியும் மதுவினால் ஒழியாத மண்டையொடு மிக்க சோற்றினை யாவர்க்கும் குறையாமல் வழங்கும் பெரிய இல்லமாக விளங்கியது. மன்னன் இறந்ததனால் அம்முற்றம் நீரற்ற ஆற்றின் ஓடம் போலப் பொலிவையிழந்தது’ எனக் கூறியுள்ளார். இச்செய்தியை,

               “அந்தோ வெந்தை யடையாப் பேரில்
              வண்டுபடு நறவின் தண்டா மண்டையொடு
              வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்
              வெற்றியாற் றம்பியி னெற்றற் றாகக்
              கண்டனென் மன்ற”  (புறம்.261:1-5)

    என்னும் அடிகளால் அறியலாம். இச்செய்யுள் அடிகள் இரவலரது மண்டையில் உணவு வழங்கியதைக் கூறி நிற்கவில்லை. மாறாக அரசர்கள் அரசவையில் இரவலர்களுக்கு உணவு வழங்குவதற்காக வைத்திருந்த மண்டையில் உணவு கொடுத்துள்ளனர் என்பதை உணர்த்தியுள்ளன. அதாவது இரவலர்களுக்கு மண்டையோடு சேர்த்தே சோற்றினை வழங்கியுள்ளனர். தற்பொழுது அன்னதானம் செய்பவர்கள் உணவினை ஒரு தட்டில் வழங்குவது போன்று சங்கக்காலத்தில் மண்டையில் வழங்கியுள்ளனர். இச்செய்தியை இரண்டு செய்யுட்களும் கூறியுள்ளன. எனவே, அரசர் மண்டையை இரவலர்களுக்கான உணவுப்பாத்திரமாக பயன்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகிறது.

         வரிசையால் உயர்ந்த முதுகுடி மறச் சான்றோர் ஒருவரைச் சிறப்புற நோக்கி அவர்க்குக் கள் வழங்குமாறு வேந்தன் பணியாளரை ஏவிச் சிறப்பித்தான். அதனை வியந்துநோக்கிய பாணனைக் கழாத்தலையார் அழைத்து, ‘பாணனே! தன்பாலுள்ள அன்பால் தனக்காகக் கள் முகந்தெடுத்துத் தந்த பசும் பொன்னாலாகிய மண்டையை, உனக்கு நல்குவாயாக எனச் சொல்லிச் செய்யும் அச்சிறப்பை வியந்து நோக்குதலை ஒழிக’ என்றார். இதனைக்,

                                    “காதலின்
              தனக்குமுகந் தேந்திய பசும்பொன் மண்டை
              இவற்கீ கென்னு மதுவுமன் றிசினே
              கேட்டியோ வாழி பாண”  (புறம்.289:5-8)

    என்னும் அடிகள் உணர்த்துகின்றன. அரசவையில் இரவலர்களுக்கென்று இருக்கும் மண்டையில் கள்வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை இப்பாடல் அடிகளும் உணர்த்தியுள்ளன. தலைசிறந்தவர்களாயின் பசும்பொன் மண்டையில் உணவு வழங்கிச் சிறப்பித்துள்ளனர். இதனை ஒளவை.சு.து. அவர்களும் ‘சிறந்தார்க்கன்றிப் பிறர்க்குக் கொடுக்கப்படாது என்றதற்குப் ‘பசும் பொன் மண்டை’ எனக் கூறினார்” (2010:313) என்று கூறுவார். எனவே, சங்க காலத்தில் பொன்னால் செய்யப்பட்ட மண்டை உண்கலம் இருந்துள்ளது என்றும் சிறப்பானவர்களுக்கே அதில் உணவு வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிய முடிகிறது.

          பாணனைச் சிறப்பு செய்வதற்காகப் பசும்பொன் மண்டையில் உணவு வழங்கப்பட்டுள்ளது என்னும் செய்தி கூறப்பட்டுள்ளது. இப்பசும்பொன் மண்டை பாணருடையது அல்ல; இது அரண்மனைக்குரியது. எனவே, மண்டை பாணர்க்கே உரியதல்ல என்பது  இச்செய்யுள் மூலம் தெளிவாகிறது.

    மண்டையில் கள் நிரம்பியிருந்தது என்னும் செய்தியை,

    “தேஎங் கொண்ட வெண்மண்டையான்”     (புறம்.352:1)

    என்னும் அடியால் அறியலாம். மண்டையில் கள் கொடுக்கப்பட்டதையே பெரும்பாலான பாடல்கள் கூறுகின்றன. ஒளவை.சு.து. அவர்களும், “மண்டை, கள் முதலியன உண்டற்குரிய மட்கலம்” (2010:511) என்று கூறுவார்.

         மேற்காட்டப்பட்ட செய்யுட்கள் மண்டை என்னும் உண்கலம் விறலி, பாணர், இரவலர் ஆகியோர்க்குரியது எனக் கூறின. உழவர்க்குரிய உண்கலமாகவும் மண்டை விளங்கியது என்பதைப் புறநானூற்றுச் செய்யுள் ஒன்று கூறியுள்ளது. அதாவது, ‘ஊரில் விழா ஒன்றும் இல்லையாயினும், உழவரது மண்டையில் பெரிய கெடிற்று மீன் உணவுடன், பூவுடன் கலந்த கள்ளும் நிறைந்திருக்கும்’ என்னும் செய்தியை,

               “விழவின்று ஆயினும் உழவர் மண்டை
              இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து”  (புறம்.384:8-9)

    என்னும் அடிகள் கூறுகின்றன. உழவர் தங்களுடைய மண்டையில் மீனுடன் கள்ளும் வைத்து உண்டுள்ளனர் என்னும் கருத்தின் மூலம் உழவர் உண்கலமாகவும் மண்டை விளங்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது.

         மண்டை என்னும் உண்கலம் கிணைவரிடத்திலும் இருந்துள்ளது. தடாரியை இசைத்து நின்ற இரவலன், ‘வெப்பம் கப்பிய என் மண்டை உண்கலத்தில் தெளிந்த மதுவை நிரம்பப் பெய்து, உண்ணத் தந்ததும் அல்லாமல் தன் கலத்தில் தான் உண்ணுதற்குரிய மான் இறைச்சிப் பொரியலையும் கொக்கின் நகம் போலும் அரிசிச் சோற்றையும் என் சுற்றத்தாரும் உண்க என்று வழங்கினான் என் தலைவன்’ எனக் கூறினான். இதனை,

               “மதியத் தன்னவென் னரிக்குரற் தடாரி
              இரவரை நெடுவா ரரிப்ப வட்டித்
              துள்ளி வருநர் கொள்கல நிறைப்போய்
              ………………………………………………………….
              அழல்கான் றன்ன வரும்பெறன் மண்டை
              நிழல்காண் டேற னிறைய வாக்கி
              யானுண வருள லன்றியுந் தானுண்
              மண்டைய கண்ட மான்வறைக் கருனை
              கொக்குகிர் நிமிர லொக்க லார
              வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
              விரைவுமணி யொளிர்வரு மரவுற ழாரமொடு
              புரையோன் மேனிப் பூத்துகிற் கலிங்கம்
              ஊரைசெல வருளியோனே” (புறம்.398:12-29)

    என்னும் செய்யுள்அடிகள்  கூறுகின்றன. மண்டையைக் காணும்தோறும் உணவின்மை தோன்றி வயிற்றுத் தீயை எழுப்பி வெதுப்புதலின், “அழல்கான் றன்ன மண்டை” என்றார். இவ்வாறு உணவின்றி வெப்பமிகுந்திருந்த என் வயிற்றிற்கு மண்டையில் உணவுவழங்கிக் குளிரச் செய்தான் தலைவன் என்று தடாரியை இசைத்து நின்ற இரவலன் உணர்த்தியுள்ளான். தடாரியை இசைத்து நிற்பவன் கிணைவன் எனப் பல பாடல்கள் கூறியுள்ளன. இப்பாடலும் மண்டை என்பதை உணவு உண்ணும் கலமாக வெளிப்படுத்தி உள்ளது. எனவே, மண்டை என்பது இங்குக் கிணைவர்க்குரிய உண்கலமாகக் கூறப்பட்டுள்ளது என அறிய முடிகிறது.

         மண்டை என்பது உணவு பெறும் அல்லது உணவு பெற்றுண்ணும் உண்கலம் (உணவுப் பாத்திரம்) என மேலே எடுத்துக்காட்டப்பட்ட செய்யுட்கள் நமக்கு உணர்த்தின. இம்மண்டை பாணர் என்பவருடன் மட்டும் இணைத்துக் கூறப்படவில்லை. இரவலர், உழவர், கிணைவர், விறலி ஆகியோருடன் இணைத்தும் கூறப்பட்டுள்ளன. மேலும், அரண்மனைக்கு வரும் இரவலர்களுக்கு உணவு வழங்கவும் இம்மண்டை விளங்கியிருக்கிறது. இம்மண்டையில் கள் வழங்கப்பட்டதைப் பல பாடல்களும் சோறு வழங்கப்பட்டதைச் சிலப்பாடல்களும் கூறியுள்ளன. எனவே, மண்டை என்பது கள், சோறு முதலியன உண்டற்குரிய உண்கலம் எனவும் இம்மண்டை அனைத்து இரவலர்களுக்கும் பொதுவானது எனவும் தெளிவாக அறிய முடிகிறது.

         உண்கலமாக விளங்கிய ஒன்று ஏன் மண்டை என்னும் பெயரால் அழைக்கப்பட்டது? என்னும் வினா எழலாம். மண்டை என்பதற்கு விளக்கம் கூறிய ஒளவை.சு.து. அவர்கள், ‘மண்டை, கள் முதலியன  உண்டற்குரிய மட்கலம்” (2010:511) என்று கூறியுள்ளார். இவரது விளக்கம் மண்டை என்பது மண்ணால் செய்யப்பட்ட பொருள் என்பதாக அமைந்துள்ளது. மண்ணால் செய்யப்பட்டதனால் மண்டை என அழைக்கப்பட்டதா? என்னும் ஐயம் எழலாம். சங்ககால மக்கள் பயன்படுத்திய பெரும்பாலான பொருட்கள் மண்ணால் செய்யப்பட்டவை என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மேலும், மண்டையானது பொன்னால் செய்யப்பட்டதாகவும் இருந்துள்ளது எனப் பாடல் கூறியுள்ளது. எனவே, மண்ணால் செய்யப்பட்டதனால் இப்பெயர் பெற்றிருக்காது என்பது தெளிவாகிறது. தமிழில் உள்ள சில சொற்களுக்கு விளக்கம் கூறுவதென்பது மிகக் கடினமான ஒன்றாகும். இன்னும் சில சொற்களுக்கு விளக்கமே கூறமுடியாது. இது தமிழ்மொழிக்கு மட்டுமல்ல அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். அவ்வகையில் மண்டை என்னும் சொல் அமைந்துள்ளது. எனவே, மண்டை என்னும் உண்கலம் நம் மண்டையின் ஓடு போன்று இருந்திருக்கலாம். ஆதலால் மண்டை எனப் பெயர் பெற்றிருக்கலாம் எனக் கருத இடமளிக்கிறது.

    மண்டைப்பாணர் குறித்த விளக்கமும் விவாதமும்

         ச.காஞ்சனா தேவி அவர்கள், “மண்டை என்னும் உண்கலத்தை உடையவர் மண்டைப் பாணர் ஆவர்” (செம்மூதாய் சதாசிவம், 2015:73) என்று கூறியுள்ளார்.  இவ்விளத்தையே பெரும்பாலான அறிஞர்கள் கூறியுள்ளார்கள். எனவே, ஒருவரது விளக்கமே இங்குப் போதுமானதாக அமைகிறது.

         உண்கலம் என்பது ஒவ்வொரு இரவலரிடத்தும் இருக்கின்ற ஒன்றாகும். ஏனெனில் அரசர் குலத்திற்கு இரக்கச் செல்லும் இவர்கள் அக்குலத்தார் இட்டு வழங்குகின்ற உணவுகளை அவ்வுண்கலத்தில்தான் பெற்றிருப்பர். அரசர் குலப் பெண்டிரும் இரவலர்களுக்கு உணவுகளை இட்டு வழங்கியதைப் பாடல்கள் எடுத்துக்கூறியுள்ளன. அவ்வகையில் இரந்துண்டு வாழும் ஒவ்வோர் இரவலரிடத்தும் ஓர் உண்கலம் இருந்திருக்கிறது. அவ்வுண்கலம் மண்டை என்னும் பெயரில் அழைக்கப்பட்டுள்ளது அல்லது வழங்கப்பட்டுள்ளது எனப் பாடல்கள் கூறுகின்றன. இரவலர்களுள் ஒருவரான பாணர்களிடத்தும் இம்மண்டை என்னும் உண்கலம் இருந்துள்ளது. இவர்களும் அம்மண்டையில் உணவுகளைப் பெற்று, உண்டு வாழ்ந்து வந்துள்ளனர். அறிஞர்கள் கூறுவது போன்று மண்டை என்பது பாணர்களுக்கும் உண்கலமாக அமைந்துள்ளது. இதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் மண்டை என்பது உண்கலம் எனக் கூறிய அறிஞர்கள், ஏன் மண்டைப் பாணர் என்றொரு வகையைக் கூறினர்? மண்டை அனைவருக்குமுரிய ஒன்று என இவர்கள் அறியவில்லையா? மண்டை என்னும் உண்கலத்தைப் பெற்றிருந்திருந்ததால் இவர்களை மண்டைப் பாணர் எனக் கூறலாமா? போன்ற வினாக்கள் எழுகின்றன.

         பாடுதல் தொழிலைச் செய்தவர் பாடுநர் என்றும் ஆடுதல் தொழிலைச் செய்தவர் ஆடுநர், கூத்தர் என்றும் யாழில் பண்ணிசைத்தவரைப் பாணர் என்றும் பறையிசைத்தவரைப் பறையர் என்றும் துடி இசைத்தவரைத் துடியர் என்றும் கிணை இசைத்தவரைக் கிணையர் என்றும் கூறியுள்ளனர்; அவர்களும் தங்களை அவ்வாறே அழைத்துக் கொண்டனர். இப்பெயர் ஒவ்வொருவரிடமும் உள்ள இசைக்கருவியை வைத்தும் அவர்களிடம் காணப்பட்ட கலைத்திறன் வேறுபாடு வைத்தும் தொழில் அடிப்படையிலும் அழைக்கப்பட்டதாகும். இவர்கள் அனைவரிடமும் மண்டை இருந்துள்ளது; மண்டையில் உணவு வழங்கப்பட்டுள்ளது. மண்டை அனைவருக்கும் பொதுவானதாக விளங்கியுள்ளது. இம்மண்டை என்னும் உண்கலம் ஓர் இசைக்கருவி போலவும் அதனை இசைத்துப் பாணர்கள் வாழ்ந்தது போலவும் பாணர்க்கே இது உரியது போலவும் மண்டைப் பாணர் என்றொரு வகையைக் கூறுகின்றார்கள் அறிஞர்கள். இரவலர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்த மண்டையைப் (உண்கலம்), பாணர்க்குரியதாகக் கருதி மண்டைப் பாணர் என்றொரு வகையினர் இருந்தனர் எனப் பிரித்துக் கூறுவது எவ்வாறு பொருந்தும்? இம்மண்டையை உழவரும், கிணைவரும், விறலியும் வைத்திருந்தனர் எனவும் உணவும் உண்டுள்ளனர் எனவும் பாடல்கள் கூறியுள்ளன. இச்செய்தியினால் மண்டை விறலி, மண்டை உழவர், மண்டைக் கிணைவர் என்னும் வகைகளைக் நாம் கூற முடியுமா? முடியாது. கூறினாலும் அதனை ஏற்கவியலாது. ஏனெனில் மண்டை என்பது அனைத்து இரவலர்களுக்கும் பொதுவானதாகும். எனவே, மண்டைப் பாணர் என்றொரு வகை இல்லை என்பது புறநானூற்றுச் செய்யுட்கள் மூலம் தெளிவாகிறது.

    முடிவுரை

         ‘மண்டைப்பாணர் என்றொரு வகையினர் சங்கக்காலத்தில் இல்லை’ என்பது இக்கட்டுரையின் முடிவாக அமைகிறது. மண்டை என்பது கள், சோறு முதலியன உண்டற்குரிய ஒன்றாக விளங்கியுள்ளது. இம்மண்டையில் விறலி, பாணர், உழவர், கிணையர் போன்றோரும் உணவுபெற்று உண்டுள்ளனர். ஆதலால் இம்மண்டை அனைத்து இரவலர்க்குமுரிய பொதுவான உண்கலம் என்பது உணர்த்தப்பட்டது. இதனைப் பாணர்க்கு மட்டும் உரியது எனக் கருதுவதும் மண்டைப்பாணர் என்றொரு வகை இருந்தனர் என்று கூறுவதும் தவறாகும். மேலும், பாணர்க்கு மட்டும் உரியதாகக் கருதுவதற்கும் அவற்றினால் ஒரு வகையைக் கூறுவதற்கும் இது(மண்டை) இசைக்கருவியும் அன்று. எனவே, மண்டை என்பது இரவலர்களுக்குரிய பொதுவான உண்கலம் என்னும் கருத்தின் மூலம் மண்டைப் பாணர் என்றொரு பாணர் வகையினர் இல்லை என்பது இக்கட்டுரையின் முடிவாகக் கூறப்படுகிறது. மேலும், நாம் மண்டைப்பாணர் என்றொரு வகையைத் தனியாகக் கூறுவது ஏற்புடையதல்ல என்பதும் இக்கட்டுரை முடிவின் மூலம் உணர்த்தப்படுகிறது.

    துணை நூற்பட்டியல்

    1. செம்மூதாய் சதாசிவம்(பதி.ஆ.கள்), தமிழர் வாழ்வியல் மரபும் மாற்றமும், செம்மூதாய் பதிப்பகம், சென்னை-89, டிசம்பர்-2015.
    2. துரைசாமிப்பிள்ளை.ஒளவை.சு.(உ.ஆ.), புறநானூறு முதல் பாகம், பூம்புகார் பதிப்பகம், சென்னை-108. ஜூலை-2009.
    3. துரைசாமிப்பிள்ளை.ஒளவை.சு.(உ.ஆ.), புறநானூறு இரண்டாம் பாகம், பூம்புகார் பதிப்பகம், சென்னை-108. மார்ச்-2010.

     

     

    Share
  • நாட்டுப்புறப்பாடல்களில் தாலாட்டு

    சிந்து.மூ

     

    உதவிப்பேராசிரியர்

          தமிழ்த்துறை

        கற்பகம் பல்கலைக் கழகம்

           ஈச்சனாரி.

                மனித இனம் தோன்றியகாலம் முதலே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றியது எனலாம். மனிதனது உள்ளத்தில் தோன்றம் உணர்வுகளின் வெளிப்பாடுகளே நாட்டுப்புற இலக்கியமாகத் தோன்றுகிறது. வாய்மொழி இலக்கியமாக  விளங்குகின்ற  நாட்டுப்புறப் பாடல் ஏட்டிலக்கியமாக மாறியதில் முன்னோடியாக இருந்தது தாலாட்டுத்தான். தாலாட்டு மனித வாழ்வோடு தொடர்புடையது. மிகத் தொன்மையான தாலாட்டின் சிறப்பை இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.

    பெயர்க்காரணம்

              ‘தால்’ என்றால் நாக்கு. நாவினை ஆட்டிப் பாடுவதால் தால் + ஆட்டு தாலாட்டாயிற்று. குழந்தையின் அழுகை ஒலியைக் கேட்கும் தாய் அவ்வெலியை அடக்கத் தன் உதடுகளைக் குவித்து நாவினை ஆட்டிக் குரலையிடுவதே தாலாட்டாகும். தாலாட்டு நாட்டு வழக்கில் “ராராட்டு“ எனவும் வழங்கிவருகிறது. மேலும் தாலாட்டைத் தாராட்டு, தாலேலோ, ஓராட்டு, ரோரோட்டு, ராராட்டு, தொட்டில் பாட்டு, ஓலாட்டு, திருத்தாலாட்டு எனப் பல்வேறு பெயர்கள் இன்றைய உலக வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் வழங்கப்படுகிறது.1

                “தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசுதான் தாலாட்டு”2 என்பர் தமிழண்ணல். குழந்தைக்கு முதன்முதலில் புலனாகும் உணர்வுகளில் கூர்மையானது, குறிப்பானது செவியுணர்வே. தாயையும், பிறரையும் வேறுபடுத்தி உணர குழந்தைகளுக்கு  உதவுவது அவரவர் குரலே இக்கருத்தின் வழி, தாலாட்டுப் பாடலில் குழந்தைக்கும் தாய்க்கும் உள்ள பிணைப்பு தெளிவாக வெளிப்படுகிறது. பிறப்பின் போது பாடப்படும் தாலாட்டும், இறப்பின் போது பாடப்படும் ஒப்பாரியும் மனிதனுக்குக் கிடைத்தற்கரியதாய் உணரலாம்.

    தாலாட்டுப் பாடல்களின் தோற்றம்

                ‘தாலாட்டு’ என்ற சொல்லாட்சியை மையமாகாக் கொண்ட இடைக்கால இலக்கியங்கள் “தாராட்டு” என்றும், பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் “தாலேலோ” என்றும் குறிப்பிட்டுள்ளமையைக் காணலாம்.

                தொல்காப்பியர்  “குழவி மருங்கினும் கிழவதாகும்”3 என்று தொல்காப்பியத்தில் குழந்தைக்குரிய பருவகளைச் சுட்டிக்காட்டுகிறார்.மேலும், சங்க இலக்கியத்தில் புறப்பாடலாக விளங்கும் பரிபாடலிலும் “வரையழி வாலருவி வாதாலாட்ட”4 என்ற பாடல்வரிகள் தாலாட்டினைப் பற்றிக் கூறுகிறது.

                தமிழ் மொழியில் முதன் முதலாகத் தாலாட்டுப் பாடல்களைப் பாடியவர் பெரியாழ்வார். குலசேகர ஆழ்வாரும், பிள்ளைத்தமிழ்ப் புலவர்களும் தாலாட்டினைத் தாய்ப்பருவம் என்று தனித்துறையாக வளர்த்தனர். ஞானசம்பந்தர் தாலாட்டு, நம்மாழ்வார் தாலாட்டு போன்ற தாலாட்டுச் சிற்றிலக்கியங்கள் அதன் வளர்ச்சியைக் காட்டுவன எனலாம். தற்காலத்தில் தாலாட்டுப் பாடல்கள் சூழ்நிலைகளால் உணர்ச்சி வசப்படும் பாடல்களல்ல, தாயின் ஓய்விலே குழந்தை தவிழும் போது பிறக்கின்ற பாடலாகும் என்பதை உணரமுடிகிறது.

    தாலாட்டிசைக்கும் காலம்

                குழந்தை அழும் போது அதன் அழுகையை  அடக்கித்துயிலச் செய்யத் தாய் தாலாட்டுப் பாடுகிறாள். குழந்தைப் பிறந்த ஓரிரு வாரங்களிலிருந்து மூன்று வயது வரை குழந்தை தூங்க இத்தாலாட்டுத் தேவைப்படுகிறது. எனவே, அக்காலமே தாலாட்டிற்குரிய காலாமாகும். 96 வகைத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் பிள்ளைத் தமிழ் இலக்கியமும் ஒன்றாகும். அது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும். ஒவ்வொரு   பிள்ளைத் தமிழும் பத்துப் பருவங்களால் பாடப்பெறும். ஒவ்வொரு நிலையிலும் குழந்தையின் அழகினையும், சிறப்பினையும் உயர்வாகப் பாடப்படும்,

    தாலாட்டுப்பாடலின் அமைப்பு

                தாலாட்டுப் பாடல்கள் குறுகிய அளவு உடையன.ஆனால் பெரும்பாலான தாலாட்டுப் பாடல்களுக்கு அடிவரையரை இல்லை என்றே கூறலாம். குழந்தையின் உறக்க நிலைக்கேற்பவும், தாயின் மனநிலைக்கேற்பவும் தாலாட்டுப் பாடல்கள் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ அமையப்பெறுகிறது.

    தாலாட்டு சமுதாயத்தில் பெறுமிடம்

                சமுதாயத்தில் பெண் தன் கருத்தை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு இடம். தன் எண்ணத்தை வெளிப்படுத்த தாய்க்கு வேறு இடம் இல்லாததால்  தாலாட்டில் வெளியாகின்றது எனத் தாலாட்டுப் பிறக்கும் நிலையை விளக்கியுள்ளமை தாலாட்டின் பயன் நிலையைச் சுட்டுவதாய் உள்ளது.

                இருவர் கொள்ளும் காதலைவிட, உடன் பிறந்தவர் கொள்ளும் வாஞ்சையை விட, உலகளக்கும் அருளினையும் விட பிள்ளைப் பாசமே ஆழமானது. இத்தகைய ”தாயும், சேயும் என்ற உறவுப் பிணைப்பிலே பிறந்த இயற்கைக் கலை தான் தாலாட்டு”5 ஆகும்.

    தாலாட்டில் பாடுப்பொருளாக வருவன

    • பிள்ளைப்பேறு கிட்டியமைக்கு நன்றி கூறல்.
    • தெய்வம் தொடர்பான கதைகளைக் கூறல்.
    • குழந்தை இல்லாத போது தாய்பட்ட துன்பங்களைக் கூறல்.
    • குழந்தையின் அழுகைக்கானக் காரணங்களைக் கூறல்.
    • குழந்தைப் பேற்றை வேண்டி செய்த அறங்களைக் கூறல்.
    • குழந்தையை வர்ணித்துக் கூறல்.
    • குழந்தையின் எதிர்காலத்தை எண்ணி வர்ணித்தல்.

    தாலாட்டின் பிரிவுகள்      

    1.குழந்தை பற்றியன

                குழந்தையின் நிலையைப் பற்றித் தாலாட்டுப் பாடுதல் ஒரு வகையாகும்.

                             “என்

                        தேனே தினைமாவோ – என் சாமி

                        சிவந்தானோ மாங்கனியோ – என்

                        மாங்கனியே யாரடிச்சோரோ”

    என்ற பாடலில் குழந்தையின் நிலையிணை விளக்குகிறது.

    2.குழந்தைக்கு உரிமையானப் பொருட்களைப் பற்றியன

                குழந்தையின் சிலம்பு பற்றிக் கூறும் போது,

                             “என் போல் திருப்பங்கண்ணாய்

                        ஒருகால்  சிலம்பு அசைய – என்

                        மறுச்சு திருப்பங்கண்ணாய் – என்

                        வலதுகால் சிலம்பு அசைய”

    என்ற பாடல் சான்றாகும்.

    3.தாய்மாமன் சீர் வரிசை

              ‘தாயில்லாப் பெண்ணுக்குச் சீர் இல்லை என்பார்கள்’.அதுபோல தமையன் இல்லாப் பெண்ணக்குச் சீர் மட்டுமல்ல பலமும் குறைந்து விடுகின்றது.தாலாட்டுப் பாடல்களில் அதிகமாகச் சொல்லப்படும் உறவுநிலை தாய்மாமன் உறவுநிலையேயாகும்.

                பெண்கள் தன் உடன்பிறந்தோர் கொடுக்கின்ற சீதனங்களை அவ்வபொழுது ஞாபகப்படுத்திக் கொள்வதுண்டு. குழந்தைப் பிறந்தவுடன் தாய்மாமன், குழந்தையின் பாலுக்காகப் பசு மாடு வாங்கிக் கொடுத்தல் வழக்கம். இதனை ‘ஆச்சிமாடு கொடுத்தல்’ என்று அழைப்பர்.

                            “மழைக்கால் இருட்டுலே

                                  மாரளவு சன்னிலிலே

                                  குடப்பால் கொண்டுவரும்

                                  குணமுள்ளார் உன் மாமன்”

    என்ற வரிகள் மூலம், தாய்மாமன் குழந்தைக்கு எவ்வளவு இன்னல்களுக்கு இடையில் பால் கொண்டு வரும் நிலையினை உணர்த்துகிறது.

                தாலாட்டுப் பாடல்கள் தாயின் மனவோட்டத்தில் அமையப் பெற்று ,குழந்தையை தாயானவள் எல்லா நிலையிலும் வர்ணித்துப்பாடக்கூடிய நிலையைக் காணமுடிகிறது.

    முடிவுரை

    • நாட்டுப்புறப் பாடல்களுக்கு முன்னோடியாகத் திகழ்வது தாலாட்டாகும்.
    • தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசுதான் தாலாட்டு என்பது உணரமுடிகிறது.
    • இருவர் கொள்ளும் காதலை விட, உடன் பிறந்தோர் கொள்ளும் வாஞ்சையை விட, ஏன் உலகளக்கும் அருளினையும் விட, பிள்ளைப் பாசம் ஆழமானது என்பதை உணரமுடிகிறது.
    • தாயும் சேயும் என்ற உறவுப் பிணைப்பிலே பிறந்த இயற்கைக் கலைதான் தாலாட்டு என்பதை உணரமுடிகிறது.
    • தாலாட்டுப் பாடல்கள் இருக்கும் வரை தாய்மாமனின் பெருமைகள் இருக்கும்.
    • தாலாட்டு தாய்க்குரிய இலக்கியமாகையால் அதில் தாய்மாமனின் பெருமையும், செல்வச் செழிப்பும், சீர்வரிசையும் சிறப்பாகப் போற்றக் கூடிய நிலையைக் காணமுடிகிறது.

    அடிக்குறிப்பு

    1.டாக்டர் சு.சத்திவேல் , நாட்டுப்புற இயல் ஆய்வு.ப-43

    1. தமிழண்ணல்,காதல் வாழ்வு,ப-10

    3.வ.த.இராமசுப்பிரமணியம் (உரையாசியர்),தொல்காப்பியம் பொருளதிகாரம் நூ-82

    4.அறிஞர்.வ.வே.சுப்பிரமணியன் சங்க இலக்கியம் மூலமும் தெளிவுரையும்,பரிபாடல்

        பா-6,52வது வரி

    1. தமிழண்ணல்,தாலாட்டு ப-11

     

    Share
  • ”வேர்களும் விழுதுகளும்”

    -சிறீ சிறீஸ்கந்தராஜா

    ஒளியைத் தேடி

    நான் மட்டும் தனியாக இருக்கும் அந்த நேரத்தில் கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது. யன்னலின் திரையை நீக்கி வெளியே பார்க்கிறேன். நான் நினைத்தது போலவே புகையிலைத் தரகர் பொன்னம்பலந்தான் நின்றுகொண்டிருந்தார்.

    கதவைத் திறக்காமலே அண்ணன் வீட்டிலில்லை என்பதை அவரிடம் கூறிவிடலாமா என ஒருகணம் யோசிக்கிறேன். ஆனால் அப்படிச் செய்யவில்லை.

    பொன்னம்பலம் உள்ளே வந்து கதிரையில் உட்காருகிறார். நான் அவருக்குத் தேநீர் தயாரிப்பதற்காகச் சமையல் அறைப்பக்கம் போகிறேன்.

    பொன்னம்பலத்திடம் எல்லோரும் மரியாதையுடன்தான் பழகுவார்கள். அதற்குக் காரணம் அவர் தனது தொழிலிற் காட்டும் நேர்மையாகத்தான் இருக்க வேண்டும்.

    பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு, நான் கல்லூரி மாணவியாக இருந்தபோது கண்ட பொன்னம்பலத்தின் இளமைத்தோற்றம் இன்றும் அப்படியே இருக்கிறது. அவர் அப்போதெல்லாம் வியாபார விஷயமாக எங்கள் வீட்டுக்கு வருவார். அப்பொழுது எங்கள் தந்தை உயிரோடு இருந்தார்; குடும்பமும் நல்ல நிலையில் இருந்தது.

    அண்ணனுக்கு அரசாங்கத்தில் ஆசிரியத் தொழில் கிடைத்த பின்னர் தோட்டத்தைக் கவனிப்பதற்கு நேரம் இல்லாமற் போய்விட்டது. எங்களிடம் இப்போது விற்பனைக்குப் புகையிலைக் கன்றுகளும் இல்லை.

    எங்கள் தந்தை இறந்தபின்பு எங்களுக்கு ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களோ பல. அப்போது பொன்னம்பலந்தான் எங்களுக்கு உதவியாக இருந்தார். அவர் ஒருவர்தான் இப்பொழுதும் எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கிறார்.

    அண்ணன் சிறிது நேரத்திற்கு முன்புதான் வெளியே சென்றார். பொன்னம்பலம் அதனைக் கவனித்த பின்புதான் இங்கு வந்திருக்க வேண்டும்.

    கடந்த சில நாட்களாக பொன்னம்பலம் என்னிடம் பழகும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனினும் நான் அதனை உணர்ந்து கொண்டவள்போல அவரிடம் காட்டிக்கொள்வதில்லை.

    தேநீரைக் கிளாஸில் ஊற்றிப் பொன்னம்பலத்திடம் கொடுக்கிறேன். அதனை வாங்கும்போது அவருடைய கை எனது விரல்களிற்படுகிறது.

    பொன்னம்பலம் சிரிக்கிறார். அவருடைய உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றத்தினாலோ என்னவோ முகத்தில் அசடு வழிகிறது.

    “பூமணி ! நீ எவ்வளவு வடிவாய் இருக்கிறாய்! ” பொன்னம்பலம் இப்படிக் கூறியதைக் கேட்க எனக்கு உள்ளூர ஆசையாக இருந்தாலும் ஏதோ ஒரு வித பயமும் இருக்கத்தான் செய்கிறது.

    பொன்னம்பலம் எழுந்து நிற்கிறார்.

    “பூமணி! நான் …. …. உன்னை ஒண்டு கேட்கிறேன். நீ அண்ணனிட்டைச் சொல்லுவியோ?”

    நாக்கு மேலே ஒட்டிக்கொண்டதுபோல அவரது குரல் தடுமாறுகிறது. உடல் சிறிது நடுங்குகிறது. அவர் சொல்லி முடித்ததும் எச்சிலை விழுங்குவது நன்றாகத் தெரிகிறது. அவரது முகம் மாறி விட்டது.

    அண்ணனிடம் சொல்லமாட்டேன் என்பதற்கு அடையாளமாக, நான் தலையைமட்டும் அசைக்கிறேன். அவர் கேட்கப்போவது என்ன என்பதை அறிய எனக்கு ஆவலாக இருக்கிறது.

    அண்ணன் வருவது தூரத்தே தெரிகிறது. பொன்னம்பலம் சமாளித்துக்கொண்டு கதிரையில் உட்காருகிறார். நான் சமையல் அறைப்பக்கம் போகிறேன்.

    அண்ணனும் பொன்னம்பலமும் முன் கூடத்திற் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பொன்னம்பலம் சிறிது காலமாக அண்ணனிடம் பேசுவதெல்லாம் எனக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டிய அவசியத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும்.

    அவர்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்பதற்கு எனக்கு கொள்ளை ஆசை.

    “பூமணிக்கு வயசு முப்பதாகுது. இனிமேலும் அவளுக்கு கலியாணஞ் செய்து வைக்காமல் இருக்கிறது சரியில்லைத் தம்பி.”

    பொன்னம்பலம் அண்ணனிடம் கூறிய வார்த்தைகள் என் காதிலும் விழுகின்றன.

    அண்ணன் மௌனமாக இருக்கிறார். அவரால் என்னதான் செய்யமுடியும்?.

    ஏழெட்டு வருடங்களாக எனக்குத் திருமணஞ் செய்து வைப்பதற்கு ஏறாத வாசற் படிகளெல்லாம் ஏறியிறங்கிவிட்டார். பலன்தான் கிட்டவில்லையே.

    எனக்குப் பெரிய இடத்தில் கைநிறையச் சம்பளம் எடுக்கும் ஒரு நல்ல மாப்பிள்ளையைக் கட்டிவைக்க வேண்டுமென்பது அண்ண னுடைய விருப்பம்

    நான் மணப் பருவம் எய்திய நாளிலிருந்தே அண்ணன் அதனை என்னிடம் அடிக்கடி கூறுவார். அதனாலேதான் என் மனதிலும் அந்த ஆசை வேரூன்றி விட்டதோ என்னவோ!

    நான் பெரியவளாகிச் சில மாதங்களுக்குள் என்னைத் தனது மகனுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டுமென மாமா விரும்பினார். ஆனால் நான் அதனைத் துளிகூட விரும்பியதில்லை. என் தோழி சுகுணா ஓர் என்ஜினியரைத் திருமணம் செய்து வாழ்க்கை நடத்துகிறாள். நான் மட்டும் ஒரு கமக்காரனுக்கு வாழ்க்கைப்படுவதா?

    பெரிய இடங்களில் எனக்குத் திருமணம் பேசியபோதெல்லாம் அத்திருமணம் நடந்துவிடாதா என என் மனம் ஏங்குவதுண்டு. எனக்கு அழகில்லை என்றார்கள் சிலர். எங்களுடைய அந்தஸ்து போதாதென்றார்கள் வேறு சிலர். எங்களால் கொடுக்க முடியாத அளவு சீதனம் கேட்டுத் தட்டிக்கழித்தனர் பலர். இப்போது எனக்கு வயது அதிகமாகிவிட்டது என்ற காரணமும் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது.

    பேசுகிறவர்கள் எதையும் பேசிவிட்டுப் போகட்டும் எனக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கத்தான் போகிறது.

    அன்று சுகுணா தனது கணவர் சந்திரனுடன் வந்திருந்தாள். அவளுடைய கணவனைப் போன்று அவளுடைய குழந்தையும் அழகாகத்தான் இருக்கிறான். முன் கூடத்தில் அண்ணனுடன் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது நான் மட்டும் சமையலறையில் அந்தக் குழந்தையுடன் கொஞ்சிக்கொண்டிருந்தேன்.

    நானும் ஒரு நாள் சுகுணாவைப்போல ஒரு பெரிய உத்தி யோகத்தரைக் கலியாணஞ் செய்வேன். எனக்கும் அழகான ஓரு குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தையை எப்பொழுதும் என்னிடம் வைத்துக் கொஞ்சுவேன். அப்போது என் கணவர் தன்னிடம் எனக்கிருந்த அன்பு குறைந்து விட்டதென்று செல்லமாகக் குறைப்படுவார்.

    நான் சுகுணாவின் குழந்தையை நெஞ்சோடு அணைத்து அதன் கன்னங்களை மாறி மாறி முத்தமிடுகிறேன். குழந்தை கன்னங் குழியச் சிரிக்கிறான். அவனுடைய மிருதுவான கேசங்கள் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன.

    குழந்தை தன் பிஞ்சுக் கரங்களால் என் மார்புச் சட்டையைப் பிடித்து இழுக்கிறான். கற்பனையில் எனக்கு ஏதேதோ ஆசைகள் எழுகின்றன. எனக்கு நாணமாக இருக்கிறது.

    நான் வழுகியிருந்த மேலாடையைச் சரிப்படுத்துகிறேன். பால் கொடுக்கலாமென்றால், பாற்காரன் காலந்தாழ்ந்தும் இன்னும் வரவில்லையே!

    சுகுணா வந்து குழந்தைக்குப் பாலூட்டுகிறாள். குழந்தை செய்யும் குறும்புத்தனங்களை எனக்குச் சொல்லும்போது அவளுக்கு பெருமை யாக இருக்கிறது. சுகுணாவைப்போல் நானும் என்றுதான் பெருமைப் படப் போகிறேனோ?

    சுகுணாவின் பேச்சு திசை திரும்புகிறது. “பூமணி! அண்ணர் உமக்கு எப்ப கலியாணஞ் செய்துவைக்கப் போகிறார்?”

    “இப்ப என்ன அவசரம் ? ஆறுதலாய்ச் செய்யிறது. கலியாணஞ் செய்தால் சுதந்திரமாய் இருக்கேலாது. குழந்தை குட்டியென்று பெரிய கரைச்சல்….”

    சுகுணா சிரிக்கிறாள். அவளும் இப்படித்தான் திருமணம் நிறைவேறுமுன்பு சொல்லிக்கொண்டிருந்தாளா? அல்லது எனது ஆதங்கத்தைப் புரிந்துகொண்டிருப்பாளா?

    சுகுணாவும் அவளது கணவரும் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்கள்.

    அண்ணன் என்றும்மில்லாத மகிழ்வுடன் இருக்கிறார்.

    “பூமணி! கடவுள் கண்ணைத் திறந்துவிட்டார். நான் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலன் கிடைத்து விட்டது. சுகுணாவின் கணவன் சந்திரனுக்கு ஒரு தம்பி இருக்கிறானாம், கொழும்பில் ஒரு கம்பனியில் வேலை; கைநிறையச் சம்பளம் கிடைக்கிறது. நானும் சந்திரனும் இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். அவர்களுக்கு இந்தச் சம்பந்தத்தில் நல்ல சந்தோஷம். வருகிற மாதமே திருமணத்தை நடத்திவிடவேண்டுமென்று சொல்கிறார்கள். ”

    அண்ணா இதனை என்னிடம் கூறும்போது உணர்ச்சி வசப்படுகிறார். ஆனந்த மிகுதியால் அவரது கண்கள் கலங்குகின்றன.

    என்னுள்ளமும் மகிழ்ச்சியால் துள்ளுகிறது. என்னுடைய நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகின்றன. இன்னும் ஒரு மாதத்தில் நான் ஒரு பெரிய உத்தியோகத்தரின் மனைவியாகி விடுவேன்.

    அண்ணனிடம் எந்தப் பதிலையும் சொல்ல என்னால் முடிய வில்லை. சமையல் அறைக்குள் ஒடிவிடவேண்டும் போல் இருக்கிறது. எனது மகிழ்ச்சியைக் கண்டுகொண்டால் அண்ணன் கேலி செய்வார். எனக்கு வெட்கமாக இருக்கும்.

    எனக்குத் திருமணஞ் செய்துவைக்க அண்ணன் இவ்வளவு காலமும் எவ்வளவு கஷ்டப்பட்டார். இப்போது திருமணம் தானாகவே வந்து கைகூடப்போகிறது. ஏதாவது காரணங்களால் இம்முறையும் என் திருமணம் குழம்பிவிடாமல் இருக்கவேண்டுமே.

    “பூமணி, எங்கள் இருவருக்கும் ஒரே பந்தலில் திருமணம் நடக்கப்போகிறது. சந்திரனின் தங்கையைத்தான் நான் திருமணஞ் செய்யப்போகிறேன்.”

    ‘ஐயோ அண்ணா!’ என்று அலற வேண்டும்போல இருக்கிறது. எனக்கு எல்லாம் ஒரே நொடியில் விளங்குகின்றன.

    சந்திரனின் தங்கை ஒரு குருடி. எனக்கு வாழ்வளிப்பதற்காக ஒரு பிறவிக் குருடியை அண்ணன் திருமணஞ் செய்யப்போகிறார். அண்ணா வுக்கு முன்னால் என்னால் நிற்கமுடியவில்லை. நான் சமையல் அறைக்குள் ஒடுகிறேன்.

    அண்ணன் சிரிக்கிறார். திருமணத்தைப்பற்றிச் சொன்னதும் எனக்கு வெட்கம் ஏற்பட்டுவிட்டதென நினைத்துச் சிரிக்கிறாரா? எனக்கு எல்லாமே மங்கலாகத் தெரிகின்றன.

    இரவில் படுக்கும்போது தூக்கமே வருவதில்லை, என் தலையே வெடித்துவிடும்போல் இருக்கிறது.

    அண்ணா! எனக்குத் திருமணஞ் செய்துவைப்பதற்குப் பணம் வேண்டுமென்ற காரணத்தால், நான் பெரியவளாகியதும் நீ மேலே தொடர்ந்து படிக்காமல், உன் உயர்வைக் குறுக்கிக்கொண்டு ஊரிலேயே உத்தியோகத்தில் அமர்ந்துகொண்டாய்.

    உழைக்கத் தொடங்கியதும் உனது பணத்தில் உனக்காக ஒன்றும் செலவு செய்யாது என் திருமணத்திற்காகப் பணத்தைச் சேர்த்து வைத்தாய்.

    அழகான பெண்ணுடன் வசதியான வாழ்க்கையை உனக்கு அமைத்துத்தரப் பலர் முன்வந்தபோதும் எனது திருமணத்தின் பின்புதான் உனக்கு திருமணம் என்று திடசித்தம் செய்துகொண்டாய்.

    இப்போது எனக்காகக் குருட்டு வாழ்க்கை நடத்தவும் திட்டமிட்டு விட்டாயா?

    நான் இதற்கு ஒரு போதும் சம்மதிக்கமாட்டேன். இந்தத் திருமணம் நடக்க ஒரு போதும் விடமாட்டேன்.

    ****

    http://www.sirukathaigal.com/tag/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/

    ****

    ஞானம் (இதழ்)

    https://ta.wikipedia.org/s/a7c

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

    Share
  • “மக்கள் மனசுல யாரு “

    S.Selvaragu-PRO

    (Film – Media – Event- Castg mgr )
    9003024334
    8015765631
    9382209649
    selvaragu.s.pro@gmail.com

    Makkal Manasuka yaru for Paper

    நியூஸ்7தமிழில் “மக்கள் மனசுல யாரு “என்ற மாபெரும்  கருத்துக்கணிப்பின் முடிவுகள் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. ரஜினி, கமல், விஜய் மூவரில் திரையுலகிலிருந்து அரசியலுக்கு அடுத்து யார் வருவார்? வந்தால் மக்களின் ஆதரவு எப்படி இருக்கும்? என்பதை அறிந்துகொள்ளும் வகையில் மாபெரும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புள்ளியியல் வல்லுநர் குழுவின் வழிகாட்டுதலின்படி வயது, பாலினம், மதம், கல்வித்தகுதி மற்றும் தொழில் அல்லது பணி அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் இந்த கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. நியூஸ்7 தமிழ் மற்றும் குமுதம் குழுமம் இணைந்து நடத்தும் “மக்கள் மனசுல யாரு” மாபெரும் கருத்துக்கணிப்புக்கான முடிவுகள் இந்தவாரம் 27, 28, 29, 30மற்றும் டிசம்பர் 1​ ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171128 - Govinda Damodara Madhaveti 03 -lr - indian ink and wash 24x32 cms

    ”கொஞ்சல்போல் கொஞ்சி கயிறுடன் காத்திருக்க,
    மிஞ்சுகிறான் ஆய்ச்சியவள் மைந்தன்: -அஞ்சியவன்
    வாய்க்குளே பார்த்திட வையம் தெரிகிறது:
    தாய்க்குள்ளே தாமோ தரன்’’….கிரேசி மோகன்….!

    Share
  • கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – பயிற்சி-19

    து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

    அலைபேசி: 9444939156

    முன்னுரை

    முதற்பகுதியில், பதினெட்டுப் பாடங்கள் வாயிலாகக் கல்வெட்டு எழுத்துகள் பற்றிய பயிற்சி ஓரளவு நல்லதொரு அறிமுகத்தைத் தந்திருக்கக்கூடும் என நம்புகிறேன். சற்று விரிவான பயிற்சியை இந்த இரண்டாம் பகுதியில் காணலாம். அதற்கு முன்பாக, மாணாக்கருக்கு ஒரு குறிப்பு. மாவட்ட அளவில், தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்டிருக்கும் கல்வெட்டுத் தொகுதி நூல்களை மாணாக்கர் வாங்கி வைத்திருத்தல் இன்றியமையாதது. அவற்றில் உள்ள கல்வெட்டுப் பாடங்கள், இன்றைய வழக்கில் உள்ள தமிழ் அச்சு வடிவத்தில் இருக்கும். அவற்றைத் தொடர்ந்து படிப்பதன் வழி, கல்வெட்டுகளில் பயின்று வரும் சொற்றொடர்களின் அறிமுகம் நன்கு ஏற்படும். அரசர் குறித்த தொடர்கள், கொடைப்பொருள்கள் (குறிப்பாக நிலக்கொடை, விளக்குக் கொடை)  குறித்த தொடர்கள், பாசனம் குறித்த தொடர்கள், வரிகள் குறித்த தொடர்கள், இறைவனுக்குப் படைக்கும் அமுதுபடிகள் (நைவேத்தியம்) குறித்த தொடர்கள் போன்ற பல்வேறு கல்வெட்டுத் தொடர்கள் நன்கு இனம் காணும் அளவு பதியும். இந்தப் பதிவு, கல்வெட்டுகளைப் படிக்கையில் யூகமாகப் புலப்படும். இந்த யூகத்தின் அடிப்படையில் எழுத்துகள் புலப்படும்.  இவ்வகைத் தொடர்கள், நாம் காணவிருக்கும் பயிற்சிக் கல்வெட்டுகளைப் படிக்கையில் ஆங்காங்கு விளக்கப்படும்.

    பயிற்சிக் கலவெட்டின் படம் கீழே: கல்வெட்டு, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் உள்ளது. படத்தைத் தேவைக்கேற்பப் பெரிது படுத்திக்கொள்ளலாம்.

    Copy of IMG_20170723_113418

    விளக்கம்:

    வரி 1  எழுத்துகள் தெளிவாக இல்லாததால் பின்னர் முயன்று பார்க்கலாம்.

    அல்லது படிக்காமல் தவிர்க்கலாம்.

    வரி 2 முதற் சொல்லை ஆய்வோம். மூ, ன்  ஆகிய இரண்டு எழுத்துகள் தெளிவானவை. மூன்றாவது எழுத்து, “அ” ,  “று”   ஆகிய இரண்டு எழுத்துகளின் தோற்றமும் கொண்டுள்ளது. அடுத்து வருகின்ற ”மாவிந் கீழ்”   என்னும் தொடரோடு பொருத்திப் பார்ப்போம். “மா”  என்பது நிலத்தின் அளவைக்குறிக்கும் சொல். நினைவில் கொள்ளவேண்டும்.  எனவே, முதற்சொல்லின் மூன்றாவது எழுத்து “று”  எனக்கொள்ளவேண்டும். தவிர “மூன்”  என்பதற்கடுத்து “அ”  உயிர் எழுத்து வருவதற்கில்லை. தொடர்ந்து படிக்கையில் “அரை”  என்பது முதல் வரியின் இறுதி. எனவே, வரி 2 கீழுள்ளவாறு அமைகிறது. (குறிப்பு:  எல்லா மெய்யெழுத்துகளும் புள்ளியிடாமல் எழுதப்பட்டவை. வேண்டிய இடங்களில் புள்ளியிட்டுப் படித்துப் பொருள் கொள்ளவேண்டும். இது பயிற்சியில் வந்திருக்கவேண்டும்)

    வரி-2  மூன்று மாவிந் கீழ் அரை

    வரி-3  மாந்தோட்ட நிலந் முக்கா

    குறிப்பு:  ”த”  எழுத்து இன்றைய “க”  எழுத்தை நினைவூட்டும். இதைத் தவிர்க்கவேண்டும்.  ”ட”  எழுத்தின் வடிவத்தைக் கருதுக. இதே        கல்வெட்டின் 5-ஆவது   வரியிலும், 6-ஆவது வரியிலும் ’ட”  எழுத்தின்       வடிவம் மாறுவதையும் கருதுக. “நிலந்”  என்னும் சொல்லை உன்னுக. நிலம் என்னும் சொல் நிலந் என்றும் கல்வெட்டில் பயின்று வரும். இது நிலன் என்பதன் திரிபு. றன்னகரம் கல்வெட்டில் தந்நகரமாக எழுதப்பெறும். நிலன் என்பது நிலம் என்பதன் திரிபு. கலம்-> கலன், பலம்-> பலன், வலம்-> வலன், புலம்-> புலன், திறம்-> திறன், அறம்-> அறன் ஆகிய சொற்களைக் கருதுக.

    வரி-4  முதல் எழுத்து ஓர் அரைப்பகுதியே காணப்படுகிறது. இரண்டாவது        எழுத்து முதற் பார்வையில் புலப்படவில்லை. படத்தைப் பெரிது படுத்திப் பார்க்கையில் அது “ழ”  என அறியலாம். அடுத்துள்ள எழுத்து,       பார்வைக்குப் புலப்பட்டாலும், ஐயத்தை விளைவிக்கிறது. ஆனால், “அ”       என்னும் எழுத்தைத் தவிர வேறு எந்த எழுத்தோடும்        பொருந்திப்போகவில்லை என்னும் காரணத்தால் “அ”  என உறுதி        செய்கிறோம். மிகுதியுள்ள எழுத்துகள் படிக்கும்படி உள்ளன. எனவே,

    வரி-4 ழ் அரையே ஒரு மாவரை

    குறிப்பு:  நிலம் குறித்த சொற்களில் “மா”, “மாக்காணி”,  “காணி”, “முந்திரிகை”

    ஆகிய அளவு குறித்த சொற்களும், கீழ் அளவு குறித்த  சொற்களும் பயில்வதால் “கீழ்”  என்னும் சொல்லும் தவறாமல் இடம் பெறும். எனவே, இவ்வரியின் முதல் எழுத்து, “கீழ்”  என்பதன் பகுதியே எனத் தெளியலாம்.

    வரி-5 முதல் ஓரிரு எழுத்துகள் தெளிவில்லை. படிக்க இயலா. அடுத்து வரும் எழுத்துகள் “டக்க”  எனப் படிப்பது எளிது. இதை அடுத்த எழுத்து, நம்மைச் சிந்திக்க வைப்பது. ”வ” எழுத்தை ஒத்திருந்தாலும், “வ” எழுத்தின் தொடக்கச் சுழியினின்றும் மாறுபட்டுள்ளது. மேலும், அதையடுத்து “கைகொண்ட” எனவிருப்பதாலும் முன்னெழுத்து “க”  என்றிருப்பதாலும், “கங்கைகொண்ட”  என்னும் சொற்றொடர் நம் நினைவில் தோன்றவேண்டும். “கங்கைகொண்ட”   என்ற சொல்லை அடுத்து “சோழன்”  வருவதுதானே இயல்பு? எனவே, இந்த வரியின் இறுதி எழுத்து “சோ” எனப்படிக்கப்படல்வேண்டும். இங்கே, “ங”  எழுத்து, நாம் பயின்ற எழுத்தின் வடிவினின்றும் சற்றே மாறுபட்டுள்ளது. தஞ்சைக் கல்வெட்டுகளின் எழுத்துகளுக்கும் இங்குள்ள கல்வெட்டின் எழுத்துகளுக்கும் சற்று வேறுபாடுள்ளது. தஞ்சைக்கோயில் எழுத்துகளை நாம் மையப்புள்ளியாகக் கொண்டு பயிற்சியைத் தொடங்கியுள்ளதால், மற்ற எழுத்துகளை மைய வடிவத்தின் முன்னும் பின்னுமான மாற்றத்தை மனத்தில் நிறுத்தியே படிக்கத் தொடங்கவேண்டும். அவ்வாறே இந்தக் கல்வெட்டு எழுத்துகள் நம் மைய எழுத்துகளினின்றும் மாறுபட்டுள்ளன.

                                         தஞ்சைக் கல்வெட்டு எழுத்து (மைய வடிவமாக)

                                                                                    ங

    Copy of Kalvettu18

                     பயிற்சிக் கல்வெட்டில் “ங”

    Copy of Copy of IMG_20170723_113418

    வரி-5 மூன்றாவது எழுத்தைத் தவிர மற்ற எழுத்துகள் எல்லாம் படிக்கும்படியுள்ளன. அவ்வாறு படித்தால், புகு( )கெமவிப்படி என்றமையும். மூன்றாவது எழுத்து கிரந்த எழுத்து. கிரந்த எழுத்துகளில் கூட்டெழுத்துகள் மிகுதியும் பயிலும். அவ்வாறான கூட்டெழுத்தே ஒவ்வெழுத்து. இதை நன்கு உற்று நோக்கின்,   என்னும் எழுத்து புலப்படும். அதன் இடப்புறம் இணைந்த பாதி எழுத்து “ந வுக்குரியது. எனவே, இது “ந்த என்றாகிறது. திருத்திய பாடம், புகுந்த கேமவிப்படி”  என்றாகும். “கேமவிப்படி”  என்பது ஒரு முழுமையான பொருளைத் தராததால், அதிலுள்ள “ம” எழுத்தைப் பெரிதாக்கிப் பார்க்கையில்   புலப்படும். எனவே,

    வரி-5 புகுந்த கேழ்விப்படி

    வரி-6  முதல் இரண்டெழுத்துகளும் தெளிவின்மையால் படிக்க இயலா. மற்ற எழுத்துகள் “ணைக்களம் நிருபமாத்த”  என்றமையும். முன்னுரையில் கண்டவாறு கல்வெட்டுகளில் பயின்றுவரும் தொடர்களை, நிறையக் கல்வெட்டுப் பாடங்களைப் படிப்பதன்மூலம் நாம் அறிமுகம் செய்துகொள்வோம். அரசு அதிகாரிகளின் பதவிப்பெயர்களும் அவ்வகைத் தொடர்களுள் அடங்கும். திருவாய்க்கேழ்வி, ஓலைநாயகம், திணைக்கள்ம், பொத்தகக் கணக்கு, மூவேந்த வேளான், பிரமமாராயன் போன்ற பல பதவிப்பெயர்கள்  உண்டு. இங்கே “திணைக்களம்” என்பதை எளிதில் யூகம் செய்யலாம். எனவே,

    வரி-6 (தி)ணைக்களம் நிருபமாத்த

    வரி-7  முதல் ஓரிரண்டு எழுத்துகள் தேய்ந்து போயுள்ளன. மற்றவை படிக்க இயலும் நிலையில் உள்ளன. எனவே,

    வரி-7  குறித்த களத்து

    வரி-8  முதல் ஓரிரண்டு எழுத்துகள் தேய்ந்து போயுள்ளன. அடுத்து ”சோழ  என்பது நன்கு புலப்படும். அடுத்துள்ள எழுத்து ஐயம் எழுப்பும். நன்கு பெரிதுபடுத்திப் பார்க்கையில் அது “ஈ  என விளங்கும். அதனை அடுத்துள்ள எழுத்து கிரந்தமாகையால் படிப்பது எளிதன்று. ஆங்காங்கே கல்வெட்டுகளில் வரும் கிரந்த எழுத்துகளை ஓரளவு தெரிந்துவைத்தல் தேவை. இங்கே, கிரந்தக் கூட்டெழுத்து ”ச்0வ”  என்பதாகும். எனவே,

    வரி-8 சோழ ஈச்வரமுடை

    குறிப்பு :  ”கங்கைகொண்டசோழஈச்வரமுடையார்”  என்பதான இறைவனின் பெயரமைந்த தொடர் இது என உய்த்துணரலாம்.

    வரி-9  எளிதில் படிக்க இயலும். எனவே,

    வரி-9  க்கு யாண்டு

    குறிப்பு :  அரசனின் ஆட்சியாண்டு குறிக்கப் பெறுவதை யூகம் செய்யலாம்.

    —————————————————

    து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

    அலைபேசி: 9444939156.

    Share
  • உடுத்தும் உடையில் மட்டுமா உள்ளது நாகரீகம்?

    பவள சங்கரி

    சுவாமி விவேகானந்தர் அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மிக எளிமையான உடையில் இருந்தாராம். கையிலே ஒரு தடியும், மேனியில் ஒரு சால்வையை மட்டும் போர்த்தியபடி சென்றாராம். சுவாமியின் எதிரில் வந்த ஒரு ஆங்கிலேயப் பெண்மணி அவருடைய தோற்றத்தைக் கண்டு எள்ளி நகையாடியிள்ளார். சிறிதும் கோபம் கொள்ளாத சுவாமி விவேகானந்தர் புன்முறுவல் தவழும் முகத்துடன், “அம்மா எங்கள் இந்திய நாட்டில் ஒருவர் அணியும் உடைகளை வைத்து அவரை மதிப்பிடும் வழக்கம் இல்லை. நாகரீகம் என்பது மனிதனுடைய நன்னடத்தையில் தான் அடங்கியிருக்கிறது” என்று சொல்லி விட்டு சங்கடம் ஏதுமின்றி அவ்விடம்விட்டு அகன்றாராம். இதில் நாம் உணர வேண்டியது 2 செய்திகள். ஒன்று, சுவாமிகள் தமது சொந்த மண்ணின் மீது கொண்ட மதிப்பு! அடுத்தது தம் நன்னடத்தையின் மீது கொண்ட அதீத நம்பிக்கை!

    Share
  • படக்கவிதைப் போட்டி 136-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    crackers

    கந்தக வெடிகளைச் சுற்றிக்கொண்டிருந்தாலும் மந்தகாசப் புன்னகையைக் குறைவின்றி அள்ளி வழங்கும் வனிதையரைப் படத்தில் காண்கிறோம். திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன் படம்பிடித்து வந்திருக்கும் இவ்வண்ணப் படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் நம் நன்றிக்குரியோர்.

    ’செல்வம் என்பது சிந்தையின் நிறைவே’ என்றார் குமரகுருபரர். இவர்கள் இன்முகத்தில் பூத்திருக்கும் கள்ளமிலா வெண்முறுவல் இவர்களின் நிறைவான சிந்தையின் வெளிப்பாடாகவே காட்சிதருகின்றது.

    வனிதையரையும் வாணவெடிகளையும் வைத்துப் பாப்புனையப் பாவலர்களை ஆவலுடன் அழைக்கின்றேன்.

    ***** 

    கரித்துகளில் கிடந்துழன்றாலும் கம்பீரமாய், ஔவையின் மொழிபோற்றும் அரிவையராய் வாழும் இலட்சியப் பெண்களைத் தன் கவிதையில் காட்சிப்படுத்துகின்றார் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணன்.

    பூரிப்பு

    ஆனந்த சிரிப்பு..அடடா
    ஆச்சரியச் சிரிப்பு அக்காவின் முகத்தில்
    ஆவலில் சென்று கேட்டேன்..
    துயரங்களை உன்னுள் மறைத்து
    துளிர்விடும் இந்தப் புன்னகை போலிதானே?!
    புன்னகை மாறாமல் அழகாய்ப்
    புரிய வைத்தாள் எனக்கு.
    கழுதை போலப் பொதி சுமந்தாலும்
    காகம் போல வெயிலில் அலைந்தாலும்
    கரித்துகள்களிலே கிடந்து கஷ்டப்பட்டாலும்
    கம்பீரமாய் நிற்கிறேன்.. பூரிக்கிறன்.. ஆம்
    கல்வி கற்கிறேனடா என் கண்ணே!
    ஔவை மொழி கேட்டிலையோ?
    அஃதே செய்கிறேன் புரியலையோ?
    நீயும்
    அடியெடுத்து வை இன்றே – புதிய
    அத்தியாயம் துவங்க..
    அடியெடுத்து வை இன்றே
    அடிமைச் சிறையை தகர்த்தெறிய..
    அடியெடுத்து வை இன்றே
    அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க..
    அடியெடுத்து வை இன்றே
    அழகிய வருங்காலம் வரைய..

    வெகு தொலைவில் இல்லை
    வெற்றிப் பாதை!

    *****

    ”குடும்ப வறுமையெனும் இடும்பையைச் செயற்கை முறுவலால் மூடி, வெடிகள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வாடும் பூங்கொடிகள் இவர்கள்” என்று இப்பெண்களின் வாழ்க்கைப் பின்னணியை வேதனையோடு விளம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    சிரிப்பிலே

    வெடித்துச் சிதறும் வெடிகளுடன்
    வெடிக்கும் சிரிப்புடன் வேடிக்கையாய்த்
    துடிப்புடன் உழைக்கும் வனிதையரும்
    துயரைச் சிரிப்பில் தான்மறைத்தார்,
    குடிக்கும் தந்தை செயலாலே
    குடும்ப வறுமை தனைப்போக்கக்
    கொடிகள் காய்ந்தே பணிக்குவரும்
    காரணம் காட்ட வேண்டாமே…!

    *****

    ”விதி செய்த (வறுமையெனும்) சதியால் கல்விகற்க முடியாமல், வீட்டுத்திண்ணையிலே அமர்ந்து வெடிசுற்றும் பிஞ்சுகளைக் காணுகையில் நெஞ்சுபொறுக்குதிலையே…இதற்கோர் விடிவிலையோ?” என்று நொந்து வினவுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    உயிருக்கும் உலகுக்கும் ஆபத்து பட்டாசு..!

    பாட்டெழுதிக் குவித்தார்கள் பாவலரும் கவிஞரும்..
    ……….பஞ்சம் பசிபட்டினி வறுமை கொடுமைபற்றியே.!
    நாட்டில் நடக்கும் அநியாயதையும் அவலத்தையும்..
    ……….நம்பிய மக்களுக்கு நயம்படப் புரியவைத்தார்கள்..!
    பட்டாசு வெடிப்பதாலே பயனென்ன என்பதையும்..
    ……….பலருக்கும் புரியும்படிப் பகலிரவாய் எழுதினார்கள்.!
    கேட்டவரால் புவிகொரு பயனுமில்லை இன்னும்..
    ……….கெடவைக்கிறார் ஓசோனையும் காற்றுவெளியையும்.!

    ட்டுக் கல்வியென்பது ஏழைக்கு எட்டாக்கனியாகும்..
    ……….இலவசக்கல்வி என்பது இன்னும் ஏட்டளவிலேதான்..!
    ஓட்டுக் கேட்கும்போது உங்களுக்கும் வழிபிறக்கும்..
    ……….என்பார்.! அதன்பிறகு அடுத்தமுறைதான் வருவார்.!
    வீட்டுத் திண்ணையிலே அமர்ந்து வெடிசுத்துகிறோம்..
    ……….விதியை நொந்து படிக்கமுடியாமல் போராடுகிறோம்.!
    பாட்டுகொரு புலவன் மாகவிபாரதியும் இதைத்தானா..
    ……….புண்ணியம்கோடி ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றான்.?

    ஆட்டுக்குட்டி மாடுகன்னு வளர்த்தாலும் ஆயுளாவது..
    ……….அதிகரிக்கும் இத்தொழிலோ உயிருக்கே உலைவைக்குது.!
    ஓட்டுப்போட்ட மக்களால் மிகஉயர்வுக்குச் சென்ற..
    ……….அதிகாரியே முறையின்றியிதைச் செய்ய அனுமதிப்பது.!
    பட்டாசு ஆலைகளும் ஆவணமின்றி முளைக்கிது..
    ……….பசும்பிஞ்சுகளும் பட்டாசோடு சேர்ந்து சாம்பலாகுது.!
    அட்டபந்தன விழாவில் அனுமதியின்றிக் கொல்லத்தில்..
    ……….ஆயிரம்வாலா வெடித்ததில் ஐநூறுபேரையது கொன்றது.!

    குடிக்காதே புகைக்காதே எச்சரிக்கிறது அரசாங்கம்..
    ……….குடிபுகை இரண்டையும் மறந்துவிடு அவைநலமில்லை.!
    குடித்தலும் புகைத்தலும் உடல்நலத்துக்குத் தான்கேடு..
    ……….வெடிக்கும் பட்டாசோ வேறுலகுக்கு அனுப்பிவிடும்.!
    வெடிதயாரிப்பதை உரிமமின்றிச் செய்கின்றார் பலர்..
    ……….விதிகள்பல இதற்குண்டு பின்பற்றுவோர் யாருமில்லை.!
    வெடித்து உயிர்கருகியபின் விபத்தென்பார் இதுகூட..
    ……….படித்த மாந்தர்களுக்கும் புரிவதில்லை..“இந்தமாயை”.!

    *****

    ”மருந்துகளோடு பணிபுரிவதால் நீ மருத்துவச்சி இல்லை; வெடிகுண்டு தயாரிப்பதால் நீ தீவிரவாதியும் இல்லை. இந்த ஆபத்தான தொழில் உன் வாழ்க்கைக்கான பிழைப்பு! இத்தொழிலால் ஊறின்றி நீ வாழ்ந்திடவேண்டும் ஆண்டு நூறு!” என்று வாழ்த்துகின்றார் திருமிகு. சொல்லின் செல்வி.

    கந்தகச் சிரிப்பு

    மருந்துகளோடு பணிபுரிவதால்
    நீ மருத்துவச்சியும் அல்ல
    வெடிகளை உருவாக்குவதால்
    நீ தீவிரவாதியும் அல்ல.
    ஆபத்தென தெரிந்தாலும்
    உன்னை வேலைக்கு அனுப்பிய
    அன்னையும் இந்நேரம் ஏனோ
    அனல் மூட்டிய
    பட்டாசு திரியாய்
    பதறிக்கொண்டுதானே இருப்பாள்.?
    ஆமாதானே தோழி.?

    உன் கந்தகம் தோய்ந்த
    கரங்களில்
    முத்தம் பாய்ச்சும்
    உன்னவனுக்கு
    உன் மத்தாப்பு வெட்கம்
    பூக்கும் இந்த சிரிப்புதானே
    காதல் சங்கீதம்..?
    ஆமாதானே தோழி..?

    நீ திரிக்கும்
    இந்த பட்டாசு மட்டும்
    எங்கள் வீடுகளில் வெடித்தாலும்
    சிலசமயம்
    இதோ வெடிக்கும்
    உன் புன்னகை போலவெ
    சில புன்னகைப் பூக்களின்
    சில தொழிலாள சோதிரிகளின்
    யாக்கையும் வெடித்திடும் போது
    உள்ளம் ரணமாகி
    இருதயம் வெடித்து விடுகிறது
    தோழி..?

    என்றாலும் என்ன..
    ஆபத்தில்லா வாழ்வை
    நீ வாழ
    வாழ்த்துகிறேன்..
    உன் கந்தக புன்னகை
    கண்டு
    என் கண்களில்
    கந்தக கண்ணீர் தோழி
    ஆனந்தமாய்..
    ஆனந்தமாய்!

    *****

    வெடிகளையும் அதைச்சுற்றும் பூங்கொடிகளையும் வைத்துப் பொருள்பொதிந்த கவிதைச் சரத்தைத் தொடுத்துத் தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் உளங்கனிந்த பாராட்டு.

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து வருகின்றது…

    நீ சிரித்தால் தீபாவளி:

    நம் மகிழ்ச்சியை கொண்டாட விதவிதமாய் வெடிகள்!
    செய்து தருவது எண்ணற்ற பிஞ்சுக் கரங்கள்!
    படிக்கும் வயதில், இவர்களுக்கேன் இந்தப் பாடு?!
    வறுமையால் விளைந்தது இந்தக் கேடு!
    பூச்சரம் சூடி வாழத்தான் ஆசைகள்!
    வெடிச் சரம் செய்வது விதி வரைந்த கோலங்கள்!
    இவர்கள் கை வண்ணத்தில் மத்தாப்பின் ஒளிச் சிதறல்கள்!
    ஆனால் இவர்களின் வாழ்வில் என்றும் இருட்டின் சாயல்கள்!
    வானை முட்டும் இவர்கள் உழைப்பில் கிடைத்த வெடிகள்!
    மண்ணிலே புதைந்து போகும் இவர்களின் ஆசைகள்!
    ஆண்டவன் படைப்பினிலே ஏனிந்த பேதங்கள்!
    வசதிகள் சிலருக்கும், வறுமை பலருக்கும், ஏன் இங்கே?
    விடை தெரியாக் கேள்விகள்!
    இருந்தும் இப்பெண்கள் முகத்தில் புன்னகைப் பூக்கள்!
    போனதை எண்ணிச் சிறிதும் கலங்காத மாதர்கள்!
    வரும் காலம், நன்மை தரும் எனும் நேரிடை எண்ணங்கள்!
    நம்பினோர்க் கெடுவதில்லை! ஆன்றோரின் வார்த்தைகள்!
    நல்லகாலம் அமைவதற்கு நம் அனைவரின் வாழ்த்துக்கள்!

    ”படிக்கும் வயதில் வெடித் தொழிற்சாலையில் வேலை செய்யும் பிஞ்சுகளைப் பார்க்கையில் நெஞ்சு துடிக்கின்றது. இவர்கள் கைவண்ணத்தில் உருவான மத்தாப்புக்கள் ஒளிச்சிதறல்களை எங்கும் வாரியிறைத்த போதிலும் இவர்கள் வாழ்வில் படிந்திருப்பதென்னவோ மருட்டும் இருட்டின் சாயலே!

    இந்த முரணான வாழ்விலும் முறுவலிக்கும் இவர்களின் மனோதிடம் மற்றவரும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடம். இந்தப் பிஞ்சுகளின் வாழ்வில் காரிருள் அகன்று கவினொளி துலங்கட்டும்! அதுவே நம் அனைவரின் வாழ்த்தாக இருக்கட்டும்!” எனும் கருத்தமைந்த கவிதையைத் தந்து நம் இதய வீணையின் உணர்ச்சி நரம்புகளை மீட்டிச் சென்றிருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • ஒப்பீட்டு நோக்கில் வீரசோழிய யாப்புப் படலம் – தொன்னூல் விளக்க யாப்பதிகாரம்

     .பிரபாகரன்,

         ஆய்வாளர்,

    EFEO, புதுச்சேரி

                  ம.பிரபாகரன் photo - ஒப்பீட்டு நோக்கில் வீரசோழிய யாப்புப்படலம் - தொன்னூல் விளக்க யாப்பதிகாரம்                                                                   

                            வீரமாமுனிவர் தொன்னூல் விளக்கத்தில் அமைத்துள்ள ஐந்திலக்கண முறைக்கும்  புத்தமித்திரர் தன் நூலான வீரசோழியத்தில் ஐந்திலக்கணத்தை அமைத்திருப்பதற்கும் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. வீரசோழியம் தொல்காப்பிய மரபை விட்டுத் தன்போக்கில் எழுத்து, சொல் மரபை வடமொழியை ஒட்டி அமைத்துக் கொள்வதோடு பொருளிலக்கணத்திலும் தொல்காப்பியத்தைப் பின்பற்றாமல் வேறுமுறையில் அமைத்துக் கொள்கிறது. அணிக்குத் தண்டியின் காவியாதர்சத்தை மொழி பெயர்த்து அமைத்துக் கொள்கிறார் வீரசோழிய ஆசிரியர். யாப்பில் தொல்காப்பியம் யாப்பருங்கல மரபை ஒட்டி அவருக்கே உரிய ஒரு மரபை உருவாக்கி அமைக்கிறார். வீரசோழியம் செய்ததைப் போலவே வீரமாமுனிவரும் தமிழ்ப் பொருளிலக்கண மரபை முற்றிலும் தன் கோட்பாட்டின்படி அமைத்துள்ளார்’ என்று தன் கட்டுரையொன்றில் (மணற்கேணி9) முனைவர்.கி. நாச்சிமுத்து  கூறுகின்றார். மேற்கண்ட கூற்றில் பேராசிரியர் அவர்கள் வீரசோழியம் – தொன்னூல் விளக்கம் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரை, இவ்விரு நூல்களிலுமுள்ள யாப்பிலக்கணத்தை ஆராய்ந்து ஒற்றுமை, வேற்றுமைகளை சுட்டிக்காட்டுவதை தம் நோக்கமாகக் கொள்கிறது. கட்டுரையைத் தொடங்குவதற்கு முன் ஒரு கருத்து இங்குச்  சுட்டற்பாலது.  ராஜமாணிக்கம் என்பவர் தன்னுடைய வீரமாமுனிவருடைய தொண்டும் புலமையும் என்ற நூலில், தொன்னூல் விளக்க உரையில் நிறைய இடைச்செருகல்கள் இருப்பதாகக் கூறுவதால் இக்கட்டுரையில் தொன்னூல் விளக்கத்தின் உரை கணக்கில் கொள்ளப்படவில்லை.

                            முதலில் ஒரு கருத்தைக் கவனப்படுத்திக் கொள்ள வேண்டும். வீரமாமுனிவர், யாப்பிலக்கணத்தைப் பொறுத்தவரை எவ்விடத்திலும் தொல்காப்பியத்தைப் பின்பற்றவில்லை. இங்கு இவர் தொல்காப்பியம் பற்றித் தெரிந்திருந்தாலும் அது கடினமான வழக்கத்திலில்லாத நூல் என்ற கருத்தைச் சொல்லியிருக்கிறார். அக்காலத்தில் தொல்காப்பியம் எல்லாவகைத் தமிழறிஞர்களாலும் கற்கப்படாத நூலாக இருந்திருக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்’ (மேற்கண்ட கட்டுரை) என்ற முனைவர்.கி. நாச்சிமுத்து  கருத்தும் இவண் ஒப்பு நோக்கற்பாலது. நாம் இக்கட்டுரையில் வீரமாமுனிவர் பின்பற்றியுள்ள முந்தைய யாப்பிலக்கண நூல்களின் பெயரைத் தனித்தனியாக சுட்டவில்லை. அவற்றை நாம் சிந்தனைபள்ளியாகக் கருத்தில் கொண்டு கூறியுள்ளோம். அதாவது காக்கைபாடினியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலவிருத்தி, யாப்பருங்கலக்காரிகை என்று தனித்தனியாகச் சுட்டாமல் யாப்பருங்கல மரபு என்றே கூறியுள்ளோம். வீரமாமுனிவர் உறுப்புக்களைத் தொகுத்துக் கூறும் முறையில் யாப்பருங்கல மரபைப் பின்பற்றுகிறார். ஆனால் உறுப்புக்களை விரித்துரைக்கும் போது எழுத்தை விளக்காமல் விட்டுவிடுகிறார். யாப்பருங்கல மரபில் (யாப்பருங்கலம்) ‘தூக்கு’ என்ற உறுப்பையும் சேர்த்து உறுப்புக்கள் 7 என்னும் முறைமை இருந்ததை அறியமுடிகிறது. ஆனால் வீரமாமுனிவர் தூக்கை சேர்த்துக்கொள்ளவில்லை. தூக்கை வீரசோழியர் ஓர் உறுப்பாகக் கூறாவிடினும் தூக்கு என்ற ஓசைக்கு வீரசோழியம் (உரை) மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. வீரசோழியம் தளையை நிராகரிக்கிறது. தளையால் பாவினது ஓசையை உண்டாக்க முடியாது. தூக்கு அடிப்படையிலேயே பாவினது ஓசையை உண்டாக்க முடியும் என்பது வீரசோழியக் கொள்கை. இத்தன்மையைத் தொன்னூல் விளக்கத்தில் நம்மால் காணமுடியவில்லை. தூக்கு என்ற சொல்லை ‘பா’ என்ற பொருளிலது பயன்படுத்தினாலும் தளையே ஓசையை உண்டாக்கும் என்ற கொள்கையை உடையதாய் இருக்கிறது.

     உதாரணம்:

                            வெள்ளையுள் பிறதளை விரவா வெண்டளை

                       ஒன்றாய்ச் செப்பல் ஓசையாம் அஃதே

                       ஏந்திசை வெண்சீர் இயற்சீர் தூங்கிசை

                       ஒழுகிசை இரண்டும்உள எனில் ஆகும்

                            வெண்பா ஓசையின் விகற்பம் உணர்த்துகின்றார். பிறதளை விரவாது வெண்தளையே வந்ததால் விளையும் செப்பலோசை இதற்குரியது. வெண்சீர் மட்டும் வருவது ஏந்திசையும் இயற்சீரே பெறுவது தூங்கிசையும் இரண்டும் கலப்பது ஒழுகிசைச் செப்பலும் ஆம் (131:1978).

                            வீரசோழியம் தொல்காப்பியத்தைப் பின்பற்றி தளையை ஓர் உறுப்பாகக் கூறவில்லை. தொன்னூல் விளக்கம் தளையை யாப்பருங்கல மரபைப் பின்பற்றி ஏழுவகையாகக் கூறுகிறது. நாம் ஏற்கனவே கூறியது போல் வீரசோழியம் தளையை நிராகரித்தது அதன் கோட்பாட்டம்சத்தில் மிகவும் முக்கியமானதாகும். தொன்னூல் விளக்கத்தில் காணப்படும் உறுப்புக்களைத் தொகுத்துக் கூறும் முறைமையை நாம் வீரசோழியத்தில் பார்க்கமுடியாது. வீரசோழியம் தன் யாப்புப் படலத்தை அசைகளை விளக்குவதுடன் தொடங்குகிறது. அது எழுத்தைப் பற்றி எதுவும் விளக்கவில்லை. அதே போல் எழுத்திற்கு முந்தைய உறுப்பான மாத்திரையையும் வீரசோழியம் விளக்கவில்லை. யாப்பருங்கல மரபு  மாத்திரையைச் செய்யுள் உறுப்புக்களுள் ஒன்றாகத் தொகுத்து கூறவில்லை. எனினும் யாப்பருங்கல மரபைச் சார்ந்த   உரைகள் (யாப்பருங்கல்ம், யாப்பருங்கலக்காரிகை உரைகள்) மாத்திரையை விளக்குகின்றன. தொன்னூல் விளக்கம் மாத்திரையைப் பற்றி நூற்பாவில் எதுவும் கூறவில்லை. உரையைப் பற்றி ஒன்றும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. தொன்னூல் விளக்கம் எழுத்தை விளக்காமல் விட்டது வீரசோழியத்தைப் பின்பற்றியதனாலாகலாம். தளை 7 என்பதில் யாப்பருங்கலமரபோடு தொன்னூல் விளக்கம் ஒத்தமைகின்றது. ஆனால் வைப்பு முறையில் வேறுபடுகிறது. பின்வரும் அட்டவணை இதனைக் காட்டும்.

    வ. எண்    யாப்பருங்கலம்   வீரசோழியம் தொன்னூல்விளக்கம்

     

     1 இயற்சீர் வெண்டளை          –  நேரொன்றாசிரியத்தளை

     

     2  வெண்சீர் வெண்டளை          – நிரையொன்றாசிரியத்தளை

     

     3 நேரொன்றாசிரியத்தளை          – வெண்சீர் வெண்டளை

     

     4 நிரையொன்றாசிரியத்தளை          – இயற்சீர் வெண்டளை

     

     5 கலித்தளை          – கலித்தளை

     

     6 ஒன்றிய வஞ்சித்தளை         – ஒன்றா வஞ்சித்தளை

     

     7 ஒன்றா வஞ்சித்தளை         – ஒன்றிய வஞ்சித்தளை

     

                      அசையைப் பொறுத்தவரை தொன்னூல் விளக்கம் முந்தைய யாப்பருங்கல மரபைப் பின்பற்றி அசை, நேரசை, நிரையசை என இருவகைப்படும் என்றே கூறுகிறது. வெண்பாவின் இறுதியை பொறுத்தவரை முந்தைய யாப்பருங்கல  மரபு நாள், மலர், காசு, பிறப்பு என்பனவற்றுள் ஏதேனும் ஒன்றை கொண்டு முடியும் என்று காட்டுகின்றது. அதையே தொன்னூல் விளக்கமும் பின்பற்றுகிறது. இது குறித்த தொன்னூல் விளக்கப் பகுதியாவது:

                       வெள்ளைக்கு இயற்சீர் வெண்சீர் விரவி

                       ஏற்கும் அளவடி ஈற்றடி சிந்தடி

                       ஈற்றுச்சீர் அசைச்சீர் உக்குறள் மிகலுமாம்

     

    வெண்பாவின் இயல்பு உணர்த்துகின்றார். இயற்சீரும், வெண்சீரும் விரவி, அளவடியாய், ஈற்றடி சிந்தடியாய் ஈற்றுச்சீர் அசைச்சீர் ஆய் வரும். அசைச்சீர் ஆய் வரும். அசைச்சீர் உக்குறள் மிக்கும் வரும்.

     

                       ‘சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

                        கொல்லப் பயன்படும் கீழ்’

                                                              (130:1978)

     

                             வீரசோழியம் தமிழ்ச்சீரை முற்சீர், இடைச்சீர், கடைச்சீர் என்று பாகுபடுத்திக்காட்டும். இம்மரபைத் தொன்னூல் விளக்கத்தில் காணமுடியவில்லை. யாப்பருங்கல மரபு நாலசைச்சீர், ஓரசைச்சீர் ஆகிய இரண்டையும் பொதுச்சீராக அடையாளப்படுத்தும். ஆனால் தொன்னூல் விளக்கம் அசைச்சீரைப் பொதுச்சீரிலிருந்து தனியாக பிரித்துக்காட்டுகிறது. வீரசோழியத்தில் இத்தன்மை காணப்படவில்லை. பின்வரும் அட்டவணை இதனைத் தெளிவாகக் காட்டும்.

       யாப்பருங்கல மரபு   வீரசோழியம்  தொன்னூல் விளக்கம்

     

    இயற்சீர் – 4    முதற்சீர் (இயற்சீர்) அசைச்சீர்

     

     வெண்பா உரிச்சீர் – 4    இடைச்சீர் (உரிச்சீர்)   இயற்சீர் – 4

     

      வஞ்சி உரிச்சீர்    கடைச்சீர் ( கனிச்சீர்)   வெண்பா உரிச்சீர் -4,

    வஞ்சி உரிச்சீர் -4

      பொதுச்சீர்

    நாலசைச்சீர் -16

    ஓரசைச்சீர் – 2

       பொதுச்சீர்

    நாலசைச்சீர்

    இங்ஙனம் தொன்னூல் விளக்கம் அசைச்சீரைப் பொதுச்சீரிலிருந்து விலக்கிக்காட்டுவது கவனத்திற்குரியது. ஒரு அடியில்  எட்டுச்சீர் வரை வருவது சிறப்பு என தொன்னூல் விளக்கம் கூறுவது யாப்பருங்கல மரபைப் பின்பற்றியாகும். இலக்கண விளக்கத்தில் ஏழு சீர் வரை வருவது சிறப்பு என கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் வரும்  ‘நாற்சீர் கொண்ட தடியென படுமே’ என்ற சூத்திரம் இவண் எண்ணற்பாலது.

                            தொடைகளை விளக்குமிடத்து தொன்னூல் விளக்கம் யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது. ச.வே. சுப்பிரமணியன் அவர்கள், ‘தலையாகு, இடையாகு, கடையாகு எதுகைகள் இந்நூலுக்கே (தொன்னூல் விளக்கம்) உரியன (215)’ என்று கூறுவது பொருத்தமாக தோன்றவில்லை. இம்மூன்று எதுகைகளையும் தொன்னூல் விளக்கம் யாப்பருங்கலமரபிலிருந்தே பெற்றிருக்கிறது என்றே தோன்றுகிறது. யாப்பருங்கல விருத்தியில் இம்மூன்று எதுகைகளும் விளக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும் வீரசோழியம் ‘எதுகை எனினும் தொடை எனினும் ஒக்கும்’ என்று எதுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. வீரசோழிய யாப்பிலக்கணக்கோட்பாட்டில் எதுகை முக்கிய இடம் வகிக்கிறது. இத்தன்மையை தொன்னூல் விளக்கத்தில் காணமுடியவில்லை. எதுகைக்கு என இவர் இரு சூத்திரங்கள் ஒதுக்கியுள்ளார். இதனால் இவர் எதுகைக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்று கூறமுடியாது. கீழ்க்காணும் ஒப்பீட்டு அட்டவணை தொன்னூல் விளக்கத்தின் தொடை பற்றிய நோக்கைத் தெளிவாக்கும்.

      யாப்பருங்கலம்   வீரசோழியம்  தொன்னூல் விளக்கம்

     

       மோனை, எதுகை, முரண்,இயைபு, அளபெடை   மோனை , எதுகை    மோனை, எதுகை,

    முரண், இயைபு, அளபெடை

    இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று  

    இணை, பொழிப்பு,

    ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று.

    செந்தொடை, இரட்டைத்தொடை, அந்தாதித்தொடை செந்தொடை,

    இரட்டைத்தொடை, அந்தாதித்தொடை

    எதுகை

    வ.எண்      யாப்பருங்கலம்   வீரசோழியம்  தொன்னூல்

    விளக்கம்

       1     முதலெழுத்து குற்லாய் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்த எதுகை         ✓        ✓

     

       2 மூன்றாமெழுத்து ஒன்றின எதுகை           ✓        ✓
       3     இரண்டடி எதுகை            ✓        –

     

       4   சீர் முழுதும் ஒன்றிவந்த  எதுகை              ✓        –

     

       5     இன எதுகை             ✓         ✓

     

      6     உயிரெதுகை             ✓         –

     

      7 ஆசிடையிட்ட எதுகை

                ✓

             ✓

     

      8  தலையாகு எதுகை             –     தலையாகு

    எதுகை

      9  இடையாகு எதுகை             –    இடையாகு எதுகை

     

      10  கடையாகு எதுகை            –    கடையாகு எதுகை

     

    தொன்னூல் விளக்கத்தைப் பொறுத்தவரை வைப்புமுறையில், ஆசு எதுகைக்கு பின்னரே இன எதுகை இடம்பெற்றுள்ளது. ஒப்பீட்டு முறைக்காக மேல் அட்டவணையில் மாற்றிக் கூறப்பட்டது.

                            தமிழ்ப்பாவினங்களுடைய விளக்கமுறையைப் பொருத்தவரை வீரமாமுனிவரின் விளக்கமுறை மற்ற மரபுகளிலிருந்து வேறுபட்டு அமைகிறது. யாப்பருங்கலத்தில் ஒவ்வொரு பாவிற்கும் பிறகு அதன் இனங்கள் விளக்கப்படுகின்றன. வீரசோழியத்தில் பாவினங்கள் பாக்கள் விளக்கப்பட்ட பிறகு   மொத்தமாக, வரிசையாக விளக்கப்படுகின்றன. தொன்னூல் விளக்கத்தில் ஒவ்வொரு கூறின் கீழ் (துறை, தாழிசை, விருத்தம்) அனைத்து பாவினங்களும் விளக்கப்படுகின்றன. சான்றாகத் துறை எனும் கூறின் கீழ் வெண்டுறை, ஆசிரியத் துறை, கலித்துறை, வஞ்சித்துறை ஆகியவை விளக்கப்படுகின்றன. இது பிற மரபுகளில் காணப்படாதது ஆகும். கீழ்க்கண்ட அட்டவணைகள் இதனை உணர்த்தும்.

    யாப்பருங்கலம்:

          வெண்பா    ஆசிரியப்பா       கலிப்பா     வஞ்சிப்பா

     

          தாழிசை    தாழிசை       தாழிசை     தாழிசை

     

         துறை   துறை        துறை    துறை

     

         விருத்தம்    விருத்தம்       விருத்தம்     விருத்தம்

     

    யாப்பருங்கலக் காரிகை:

       வெண்பா   ஆசிரியப்பா      கலிப்பா   வஞ்சிப்பா

     

         விருத்தம்    தாழிசை       தாழிசை       தாழிசை

     

         தாழிசை   துறை        துறை        துறை

     

         துறை    விருத்தம்       விருத்தம்       விருத்தம்

     

    வீரசோழியம்:

     வெண்பா பாவினம்   ஆசிரியப்பாவினம்  கலிப்பாவினம்  வஞ்சிப்பாவினம்

     

       விருத்தம்   தாழிசை      தாழிசை   துறை

     

       தாழிசை   துறை     விருத்தம்    விருத்தம்

     

       துறை   விருத்தம்      துறை    தாழிசை

     

    தொன்னூல் விளக்கம்:

               துறை         தாழிசை  விருத்தம்

     

        வெண்பா      வெண்பா      வஞ்சி

     

        ஆசிரியம்      ஆசிரியம்      கலி

     

        கலிப்பா      கலிப்பா    வெள்ளை

     

       வஞ்சி      வஞ்சி    அகவல்

     

    மேலே கண்ட அட்டவணைகளில் யாப்பருங்கல மரபைப் போல் பாவின வைப்புமுறை வீரசோழியத்தில் அமையாமல் மாறுபட்டும்  தொன்னூல் விளக்கத்தில் பாவின வைப்புமுறை யாப்பருங்கலம், வீரசோழியம் ஆகிய இரண்டும் போல்  அமையாமல் மாறியும் அமைந்துள்ளமையை உற்றுநோக்குக.

                            பொதுநோக்கில் வீரசோழியத்தோடு தொன்னூல்விளக்கத்திற்கு வேறுபாடு இருப்பினும் சிறப்பு நோக்கில், அது வீரசோழியத்தை ஒட்டித் தன் கோட்பாட்டை உருவாக்கிக் கொள்கிறது. உண்மையில் வீரசோழியத்தைப் போல சில புதுமைகளைத் தொன்னூல் விளக்கம் படைத்துள்ளது என்றே கூறவேண்டும்.  வீரசோழியம் கலிவெண்பாவை வெண்பா வகையில் சேர்த்து புதுமை உண்டாக்கியிருக்கும். அதே போல் தொன்னூல் விளக்கமும், சவலை வெண்பா என்ற பாவை வெண்பா வகையில் சேர்த்துப் புதுமை செய்துள்ளது. சவலை வெண்பா வகையை மாறன் அலங்காரம் கூறினாலும், அதை வெண்பா வகையில் முதலில் சேர்த்தது தொன்னூல் விளக்கமேயாகும். சவலை வெண்பாவை வெண்பா வகையில் வைத்து விளக்கிய தொன்னூல் விளக்கம் கலிவெண்பாவை கலிப்பாவில் வைத்தே விளக்கியுள்ளது. வீரசோழியம் சவலை என்ற ஒரு பா வகையைத் தன் பத்தியக்கவி வகையில் வைத்துள்ளது. சவலையை அது முதற்சவலை, இடைச்சவலை, கடைச்சவலை என்று விளக்கும். வீரமாமுனிவர் சவலை வெண்பா கூறுவதற்கு வீரசோழியம் காரணமாக இருந்திருக்கலாம்.

                            தொன்னூல் விளக்கத்தைப் பொருத்தவரை முக்கியமாக அமைவது செய்யுளைப் பத்தியம், கத்தியம் என்று பகுத்திருக்கும் முறையாகும். இப்பகுப்பை வீரமாமுனிவருக்கு முன்னர் தமிழ் யாப்பிலக்கண மரபில் செய்திருப்பது வீரசோழியமே ஆகும். பகுப்பு நிலையில் ஒற்றுமையிருப்பினும் விளக்கமுறையில் வீரசோழியத்திற்கும் தொன்னூல் விளக்கத்திற்குமிடையில் வேறுபாடு உள்ளது. வீரசோழியம் பத்தியப் பிரிவில் கூறும் குறள், சிந்து, திரிபாதி, திலதம் முதலிய எதுவும் தொன்னூல் விளக்கத்தில் இல்லை. தொன்னூல் விளக்கம் தமிழ்ப்பாக்களையும் பாவினங்களையும் பத்தியமாகக் கூறுகிறது. அந்நூற்பா பின்வருமாறு.

     

                       ‘பத்தியம் என்ப பாவொடு பாவினம்

                        கத்தியம் அவைபோல் கலை அல்லனவே’

                                                                       (நூற்.250)

    வீரசோழியம் (மூலம்) கட்டுரைப்போலி, செய்யுள் போலி ஆகியவற்றைக் கத்தியமாகக் கூறும். ஆனால்  வீரசோழிய உரை ஒரு படி மேலே சென்று செய்யுள் போலி என்பதற்கு  தமிழ்ப்பா பாவினங்களைக் உதாரணமாகக் கொண்டு அவற்றைக் கத்தியம் என்று கூறும்.ஆனால் தமிழ்ப் பாக்களையும், பாவினங்களையும்    தொன்னூல் விளக்கம் ‘பத்தியம்’ என்று கூறுவதைக் கவனிக்க. தொன்னூல் விளக்கம் பத்தியம், கத்தியம் என்று வீரசோழிய மரபை அடியொற்றி கூறினாலும் அதிலிருந்து விலகி தனக்கென தனிக் கோட்பாட்டை வகுப்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளமுடியும். அடுத்துப் போலி பற்றி இவ்விரு நூல்கள் கூறும் கருத்துக்கள் முக்கியமானவையாகும். வீரசோழியம் பத்திய இலக்கணத்தில் மிக்கும் குறைந்தும் வருவன பத்தியப்போலி என்கிறது. இவற்றை அது கத்தியத்தில் அடக்கியது போல் தெரியவில்லை. வீரசோழியத்தைப்(மூலம்) பொருத்தவரை, கத்தியம் என்பது கட்டுரைப்போலி, செய்யுள் போலி ஆகிய இரண்டுமேயாகும் என்று தோன்றுகிறது. ஆனால் அது கட்டுரைப்போலி மற்றும் செய்யுட்போலி ஆகியவை எவை என்று கூறவில்லை.(வீரசோழிய உரைதான் கட்டுரைப்போலி என்றால் என்ன ? செய்யுள் போலி என்றால் என்ன? என்று விளக்குகிறது. தமிழ்ப்பாவினங்களை அது செய்யுட்போலி என்று கூறியது மேலே சுட்டிக்காட்டப்பட்டது).   தொன்னூல் விளக்கமோ தமிழ்ப்பாவினங்களின் இலக்கணத்தில் பிழைத்து வருவனவற்றைப் போலி என்கிறது. இது ஒரு வகையில் வீரசோழியர் காட்டும் பத்தியப் போலி போலவே தோன்றுகிறது. பத்தியம், கத்தியம், போலி இவையெல்லாம் வடமொழி இலக்கணங்கள் எனினும் வீரசோழியருக்கு இருந்த ஆழமான கோட்பாட்டுப் பின்னணி தொன்னூல் விளக்கத்திற்கு இருந்ததாகத் தெரியவில்லை. வீரசோழியரின் கோட்பாட்டைப் பொருத்தவரை பத்தியம் என்பது தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவாக அமைகிறது. ஆனால் தொன்னூல் விளக்கம் வடமொழிப் பிரிவில் (பத்தியம்) தமிழ்ப்பாக்களைச் சேர்க்கிறது என்பது கவனத்திற்குரியது. இதன்மூலம் இரு வேறுபட்ட கற்றல்-கற்பித்தல் மரபை நம்மால் உணர முடியும். வீரசோழியத்தின் கற்பித்தல் மரபு ஏற்கெனவே விளக்கப்பட்டுவிட்ட சூழ்நிலையில் தொன்னூல் விளக்கத்தின் கற்பித்தல் மரபை அதன் சமூகப் பின்னணி கொண்டு விளக்க வேண்டிய தேவை நமக்கிருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. கீழ்க்கண்ட அட்டவணைகள் வீரசோழியம், தொன்னூல் விளக்கம் ஆகியவை கூறும் பத்தியம் கத்தியம் ஆகியவற்றை ஒப்பிட்டுக் காட்டுகின்றன.

    பத்தியம்

       வ.எண்             வீரசோழியம்       தொன்னூல் விளக்கம்

     

        1          குறள்     வெண்பா               துறை

     

    அகவல்        X       தாழிசை   = 17

     

    கலிப்பா                 விருத்தம்

     

    வஞ்சி

       2   சிந்து  

     

       3  திரிபாதி  

     

       4   வெண்பா  

     

       5   திலகம்  

     

       6  விருத்தம்  

     

       7   சவலை  

     

    கத்தியம்

     வ.எண்      வீரசோழியம்   தொன்னூல் விளக்கம்

     

        1      கட்டுரைப்போலி     இலக்கணம் சிதையினும்

    இலக்கணப் பாவின்

    நடையோடு ஒப்ப வருவன

     

        2    செய்யுள் போலி  

     

    பத்தியப்போலி

    வ. எண்     வீரசோழியம்  தொன்னூல் விளக்கம்

     

      1   குறள் போலி                 –

     

      2    சிந்துப் போலி                –

     

      3    திரிபாதிப் போலி                –

     

      4     வெண்பாப் போலி                –

     

      5    திலதப் போலி                 –

     

      6   விருத்தப் போலி                 –

     

       7   சவலைப் போலி                 –

     

                            தொன்னூல் விளக்கம் தமிழ்ப்பாவினங்களை விளக்கி வரும் போது விருத்தம் பற்றிய பகுதியில் வடமொழி விருத்தத்தையும் சேர்த்து விளக்குகிறது. இது  குறிப்பிட்டுச்சொல்லத்தகுந்தது. வீரசோழியத்தில் வடமொழிவிருத்தம் தனியாக விளக்கப்படுகிறது. அது பத்தியக் கவிவகைகளில் ஒன்றாகக் கூறும் விருத்தம் என்பது தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவாக அமைகிறது. இதைத் தொன்னூல் விளக்கத்தோடு ஒப்பிடமுடியாது. வீரமாமுனிவர் தமிழ் விருத்தத்துடன் வடமொழி விருத்தத்தைச் சேர்த்து விளக்குவதை யாப்பருங்கல விருத்தி, காக்கைபாடினி முதலானோர் வடமொழி சந்த தாண்டகங்களைத் தமிழ்ப் பாவினங்களுள் அடக்குவர் என்றும் தொல்காப்பியர் கொச்சகக் கலிப்பாவுள் அடக்குவர் என்றும் கூறுவதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். தொன்னூல் விளக்கம் தமிழ் விருத்தத்துடன் சேர்த்து வடமொழி விருத்தத்தை எண்ணிப்பார்ப்பதற்கு மேற்சொன்ன யாப்பருங்கல மரபு ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். இதில் மற்றொரு செய்தியும்  கவனிக்கத்தக்கது. யாப்பருங்கல மரபைப் போல் தொன்னூல் விளக்கம் தமிழ் விருத்தத்திற்குள் வடமொழி விருத்தத்தை அடக்கவில்லை சேர்த்து எண்ணுகிறது. இது முக்கியமானதாகும். மேலும் தொன்னூல் விளக்க ஆசிரியர் சந்த விருத்தத்தின் வகையாக எடுத்துக்காட்டும் எழுத்து சந்த விருத்தம், அசைச்சந்த விருத்தம் ஆகியவை வீரசோழியம் எடுத்துக்காட்டும் வர்ண விருத்தம், மாத்திரா விருத்தம் ஆகியவற்றுடன் ஒத்துள்ளமை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். வீரசோழிய மரபில் உள்ள வர்ண விருத்தம், மாத்திரா விருத்தம் ஆகியவற்றை மொழிபெயர்த்து எழுத்து சந்த விருத்தம், அசைச் சந்த விருத்தம் எனத் தொன்னூல் விளக்கம் அமைத்துக் கொண்டது எனலாம். யாப்பருங்கல மரபில் மாத்திரா விருத்தம் தனியாக விளக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு விடயம், தொன்னூல் விளக்கம் சந்த விருத்தத்தை வண்ண விருத்தம் என்று கூறுவது மேற்கண்ட இரு மரபுகளிலும் இல்லாதது. மேற்கண்ட கருத்துக்கள் மூலம் தொன்னூல் விளக்கம், யாப்பருங்கல, வீரசோழிய மரபுகளை பின்பற்றினாலும் அப்படியே தம் நூலில் அமைத்துக் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ள முடியும். இவ்விடத்தில்  முக்கிய கருத்தொன்றைச் சுட்டிக்காட்டுவது அவசியம். யாப்பருங்கல விருத்தி பாவுக்கு சாதி, நிலம், நிறம், ராசி ஆகியவை கூறும்போது தம் கருத்தை எங்கும் பதிவு செய்யாது. அங்ஙனம் பதிவு செய்யாமைக்கு அதனுடைய சமூகச் சூழல் காரணமாக அமைந்திருக்கலாம். ஆனால் வீரமாமுனிவர் பாவுக்குச் சாதி நிலம் முதலியன விரிக்கும் போது முதற்பாவாகிய நான்கிற்கும் சிலவிலக்கணங்களையுரைத்தார் முன்னோர். அவையொரு  பயனுமொரு காரணமுமின்றி முன்னர் நிறுத்திய மதத்திலூன்றினவாயினும் பிறன் மதங் கூறவே தந்திரயுத்தி யாகையிலவற்றைக் காட்டுதும் ‘ (214:1891) என்று தம் கருத்தைப் பதிவு செய்கிறார் (உரை இடைச்செருகல் நிறைந்ததாகையால் இக்கருத்து அவரால் சொல்லப்பட்டது என்று உறுதியாக கூறமுடியாதென்றே கூறலாம்). இங்ஙனம் பதிவு செய்வதற்கு அவருடைய ஐரோப்பிய பின்னணியே காரணமாகும். இதுவரை கண்ட கருத்துக்கள் பின்வரும் பேரா.கி. நாச்சிமுத்து அவர்களின் கூற்றை நோக்கி நம்மை இட்டுச் செல்கின்றன.

                            ‘கிளிப்பிள்ளை போல தொல்காப்பியருக்கு பின்வந்தோர் சொல்லிச் செல்ல வீரமாமுனிவர் மட்டும் முன்னையோர் கருத்தை மீட்டும் சொன்னாலும் தானாகச் சிந்தித்துத் தன் கருத்தைப் புதுமையாகப் புரட்சிகரமாக தன் இலக்கணநூலில் முன்வைக்கிறார். இதுமேலே சுட்டிய தமிழ் வழி வந்த சமூக நீதிக்கருத்துக்களை உட்கொண்டும் கிறித்துவக் கோட்பாடுகளின் பின்னணியில் ஐரோப்பியக் கிறித்துவக் கோட்பாட்டினைப் பின்பற்றி எழுந்த சமூகநீதிக் கருத்தை முன்னிறுத்தியும் அவர் செய்த வெளிப்பாடு எனலாம்’ (மணற்கேணி 9.9).

    நூலடைவு

    சுப்பிரமணியன் ச.வே. (பதிப்பாசிரியர், விளக்கவுரையாசிரியர்) தொன்னூல் விளக்கம், தமிழ்ப்பதிப்பகம், சென்னை மு.ப.1978.

    நாச்சிமுத்து. கி., வீரமாமுனிவர் (1680-1747) தொன்னூல் அகப்பொருளிலக்கணம் காட்டும் சமத்துவக் கல்விக் கொள்கை புதுமையும் புரட்சியும், மணற்கேணி இதழ் 9, டிசம்பர் 2011, பக்.33-41.

    மெக்கென்ஜி.காபன் அய்யர். ஜி. (பதிப்பாசிரியர்) தொன்னூல் விளக்கம், ADDISON & CO, Madras: 1891.

    வீரசோழியம் பெருந்தேவனார் உரை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், மு.ப.2008.

    Share
  • ‘அண்ணாமலை’’….!

     

    ’’கட்டாந் தரைதனில் கையே தலையணையாய்
    கொட்டாவி விட்டுறங்கு கோமானாய் -கட்டாயம்
    தன்னாலே வந்துனக்கு தாலாட்டு பாடிடுவார்
    பெண்ணாளும் அண்ணா மலை’’….

    ’’கண்டதே காட்சியாய், கொண்டதே கோலமாய்
    உண்டதோர் பிக்‌ஷையில் உன்மத்தம் -கொண்டுநீர்
    ஏகான்மம் ஏற்றிட ஏற்றிடுவான் உச்சிக்கு
    மீகாமன் அண்ணா மலை’’….

    ’’கற்ற கரத்தளவே பெற்ற பகுத்தறிவை
    முற்றும் துறக்க முனைந்திடுவாய் -சற்றும்
    நினையாத வேளை நினக்கருள் செய்வான்
    மனையாளும் அண்ணா மலை’’….

    ’தொட்ட குறைதோஷம், விட்ட குறைவேஷம்
    எட்டநின்று சாட்ஷியாய் ஏற்றிட -அட்டவணை
    போட்டுயர்ந்த ஞானம் படிப்படியாய் நல்கும்
    மாட்டமர்ந்த அண்ணா மலை’’…

    ’’அச்சம் பொறாமை அசூயை அவமானம்
    மிச்சமின்றி போட்டு மிதித்திடு -உச்சம்
    உனக்களிக்கும், ஒன்றிலும் ஒட்டாத இன்ப
    மனக்களிப்பே அண்ணா மலை’’…கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171127 -Govinda Damodara Madhaveti -lr

    ”வாயூட்டும் தாய்க்கு விஸ்வரூ பம்காட்ட
    சேயூட்டம்(ஊட்டச்சத்து) கொண்டதோ! ,சவ்யஸாஸி(அருச்சுனன்) -நோயோட்ட(போரிட பயநோய்)
    கீதா வடித்தலா !,கேசவ் வரைதலா!,
    மாதா யசோதை மயர்வு!(மாய மயக்கம்)’’….கிரேசி மோகன்….!

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் (250)

    இவ்வார வல்லமையாளராக திருமதி நூஃப் மர்வாய் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    நூஃப் மர்வாய் சவூதி அரேபியாவின் முதல் அதிகாரபூர்வ யோகா பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கபட்டு சர்வதேச செய்திகளில் இடம் பிடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்

    “யோகா என்றால் என்னவென்றே தெரியாத அரபிகளுக்கு யோகாவை பயிற்றுவிப்பது கடினமான சவால்தான். ஆனால் உடல்நலன் மேல் அவர்கள் அக்கறைகொண்டுள்ளதால், யோகாவை அவர்களுக்கு உடல்நலன் நோக்கில் அறிமுகம் செய்து வருகிறேன்.

    நான் சிறுவயது முதல் ஆட்டோஇம்யூன் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தேன். இயல்பான வாழ்க்கையை வாழ்வதே சிரமமாக இருந்தது. இந்த சூழலில் யோகா குறித்து படித்தேன். மேலும் படிக்க, படிக்க அது என் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் என நம்பிக்கை பிறந்தது. அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு மேற்படிப்புக்கு சென்றேன். அங்கிருந்த போது ஆட்டோஇம்யூன் வியாதி என் கிட்னியையும் தாக்கியதால், கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத நிபுணர்களை சந்தித்தேன். அங்கே தங்கி இருந்து ஆயுர்வேத சிகிச்சை மற்றும் யோகக்கலை பயிற்சி மூலம் எனக்கு நல்ல நிவாரணம் கிட்டியது. இப்படியே யோகக்கலையுடனான என் தொடர்பு வலுப்பட்டது.

     

    1

    என் பெற்றோர் எனக்கு ஆதரவாக இருந்தாலும் யோகா பற்றி தெரியாத உறவினர்கள் என்னை விமர்சனம் செய்தார்கள். இப்போது அவர்களில் பலர் என்னிடம் யோகா பயின்று வருகிறார்கள்.

    நான் சவூதி அரேபியா திரும்பியபோது அரேபியர்களுக்கு யோகக்கலை பற்றி எதுவுமே தெரியவில்லை என்பதை அறிந்தேன். அவர்கள் அதை ஒரு பவுத்த தியானக்கலையாக கருதினார்கள். பல டிவி நிகழ்ச்சிகள் மூலம் யோகக்கலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். யோகா மதம் சம்பந்தமானதா என பலர் கேள்வி எழுப்பினார்கள். அவர்களுக்கு யோகம் அளிக்கும் நன்மைகளை அறிவியல்ரீதியில் விளக்கினேன்.
    நூப்
    பிர்தமர் நரேந்திர மோடி ஆட்சியில் யோகக்கலையை பரப்ப பல்வேறு முயற்சிகள் நடந்தன. அதன் விளைவாக ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவை அளித்தது.

    தற்போது ஜெட்டா, ரியாத், மக்கா, மதீனா உள்ளிட்ட பல நகரங்களில் யோகக்கலை பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் உள்ளன. அரபியரிடையே யோகா குறித்த விழிப்புணர்வு பரவி வருகிறது. தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் வருகின்றன” என கூறுகிறார்.

    தமிழரின் யோகக்கலையை அரபுமண்ணில் பரப்பிவரும் நூஃப் மார்வாயின் உடல்நலன் சார்ந்த விழிப்புணர்வை வாழ்த்தும் விதத்தில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. இந்த பரிந்துரையை செய்த அண்ணாகண்ணன் அவர்களுக்கு வல்லமையின் நன்றி.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • பூகோளம் வெகு விரைவாகச் சூடேறுகிறது விஞ்ஞானிகள் அஞ்சியதுபோல் !

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++++

    சூட்டு யுகம் புவிக்கு
    வேட்டு வைக்க ஏகுது !
    நாட்டு நடப்பு, வீட்டு மக்கள்
    நாச மாக்கப் போகுது !
    சூறாவளிப்  புயல் எழுப்ப மூளுது !
    பேய் மழைக்கு மேகம் சூழுது !
    நீரை, நிலத்தை, வளத்தை,
    பயிரை, உயிரை, வயிறை
    இயற்கை சிதைக்க விரையுது !
    கடல் மட்டம், கனல் ஏறி
    கரைப் பகுதிகள் மூழ்க்குது !
    மெல்ல  வெப்பம் ஏறி, நம்மைக்
    கொல்லப் போகுது
    பொல்லாத சூட்டு யுகப் போர் !

    ++++++++++++++++

    http://www.chicagotribune.com/92378906-132.html

    உலக விஞ்ஞானிகளின் புதியதோர் எச்சரிக்கை

    22 உலக நாடுகளின் 98 விஞ்ஞானிகள் 2000 ஆண்டு காலப் பூகோள உஷ்ணப் பதிவு இலக்கங்களைத் திரட்டி வெளியிட்டு பூகோளம் வெகு விரைவாகச் சூடேறி வருகிறது என்று இப்போது புதியதோர் எச்சரிக்கை விடுவித்துள்ளார்.  பல்வேறு விஞ்ஞானக் குழுவினர் சேர்ந்து மூன்று ஆண்டுகளாய் மெய்வருந்திச் செய்த கூட்டு முயற்சி இது.  இந்த வெளியீட்டுத் திட்டத்தின் பெயர் “பதிவுகள் 2000” [PAGES2K].  இத்திட்டம் உலகின் 648 பகுதியில் எடுத்த 692 பல்வேறு காலவெளிப் பதிவுகள்.  இத்தகவலில் நீர், நிலம், கடல் பனிக்குன்றுகள், மரங்கள், கடல் பவழங்கள், கடல் சேர்ப்புப் படிவுகள், பருவக் காலப் பதிவுகள் ஆகியவற்றின் நீண்ட காலத் திரட்டுச் சேமிப்புகள்.  பருவகாலப் பதிவுகள் 2 வாரத்திலிருந்து, 2000 ஆண்டுகள் வரை நீடித்தவை.  இந்த புதிய விஞ்ஞான அறிக்கை 2017 ஜூலையில் “இயற்கை” மின்னியல் [Online Nature] இதழில் வெளியானது.

    இதன் முக்கிய அறிவிப்பு : “பூகோளம் வெகு விரைவாகச் சூடேறுகிறது, நாம் அஞ்சுவது போல்” என்பதே.   இதை வெளியிட்ட துணைப் பேராசிரியர் : ஜீன் மேரி  ஸெயின்ட் ஜேக்ஸ்.   அவர் கூறுவது :  கால நிலை உஷ்ண மாறுதல்கள் கடந்த 150 ஆண்டுகளாக எடுக்கப் பட்டவை. அதுவும் கனடாவில் கடந்த 50 வருடங்களாகப் பதிவானவை தான்.  அவற்றுக்கு முந்தையப் பதிவுகள் – உஷ்ண அளவீடுகள் எதிர்மறையாகக் கணிக்கப் பட்டவை.

    2015 இல் 195 உலக நாடுகள் நிலக்கரி போன்ற இயற்கைக் கனல்சக்திப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, பூமியின் சராசரித் தள உஷ்ணத்தை 2 டிகிரி C [ 3.6 டிகிரி F] கீழ் நிலைநிறுத்த முயன்றன.  அதாவது 1.5 C அளவுக்கு நிலைநாட்ட முடிவு செய்தன.  பூகோளத்தில் 1 டிகிரி C உஷ்ண ஏற்றம், கடல்நீர் மட்டத்தை உயர்த்தி, வேனிற் காலச் சூறாவளிகளைப் பெருக்கியும், வெப்பப் புயல்களை அடித்தும், காட்டுத் தீக்களைத் தூண்டியும், நில வறட்சியை உண்டாக்கியும், ஹர்ரிக்கேன் தாக்குகளை ஏவியும் மக்களுக்குப் பெருந்துயர் அளித்து வருகின்றன.  சூடேற்றம் 1.5 முதல் 2.0 டிகிரி வரைக் கட்டுப்பாடுக் குள்ளே கொண்டு வர,  எப்படிக் கரிவாயு [CO2] உற்பத்தி குறைய வேண்டும் என்பதுதான் தற்போதைய சவாலாக உள்ளது !

    An Argo float is deployed into the ocean

    3800 AGRO FLEET Autonomous Devices Spread out Uniformly across Oceans

    Image result for oceans are warming rapidly

    கடல் வெள்ளம் விரைவாகச் சூடேறுவதைப் புதிய ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.

    கடற்பகுதிகளின் பரவலான பதிவுகளில் மாறும் உஷ்ண நிலையைத் தீர்வாகச் சொல்ல முடியா விட்டாலும், கடல் நீர் விரைவாகச் சூடேறுகிறது என்பதில் எதிர்ப்பு எதுவும் இல்லை. அண்டவெளித் தொழில் யுகத்தில் அனுதினமும் மனிதனும், இயற்கைத் தீ மூட்டத்திலும் ஏராளமான புகைமுகில் சூழ்வெளியில் வெளியாகிக் கடல் கனல் சேர்ப்பு [Ocean Heat Content (OHC)] மிகுதியாகி வருகிறது. பூமியின் வெப்பமும் ஏறுகிறது.  இவைதான் பூகோளச் சூடேற்றப் பிரச்சனைக்கு அடிப்படைக் காரணிகள்.  ஆயினும் இந்தக் கனல்சக்தி எங்கே போகிறது ?  எவ்வளவு மிக வெப்பம் ஏறியுள்ளது ?  இவற்றின் அளவைக் கண்டதில் எத்தனை விழுக்காடு துல்லிமம் உள்ளது ? பல்லாயிரம் மைல் பரந்த கடற் பகுதிகளில் வெப்ப ஏற்ற இறக்கம் தொடர்ந்து எப்படி நெறிப்படி பதிவாகிறது ?

    Image result for oceans are warming rapidly

    பூகோளச் சூடேற்றத்துக்கு முக்கிய கணக்கீடு கடற் பகுதிகளில் உள்ளது.  மெய்யாக புவிக்கனல் ஏற்றம் என்பது கடற்கனல் ஏற்றமே.  அதற்கு உலகக் கடல் பரப்பு பூராவும் பரவலாக உணர்வுக் கருவிகள் ஆழத்திலும், மேல்தளத்திலும் நிறுவப் படவேண்டும். பல்லாண்டு கால அளவுகள் பலரால் நீண்டு தொடரப்பட்டு சேமிக்கப் படவேண்டும்.  சிக்கலான, சிரமான இப்பணியை மூன்று விதக் கடற்கனல் ஆய்வு வரைக் குழுவினர் [Oceanographers] செய்து வருகிறார்.  அவரின் ஆய்வுப் பதிப்புரை 2017 ஜுன் வெளியீட்டில் [Journal Climate Dynamics] வந்துள்ளது.  அதன் தலைமை விஞ்ஞானி டாக்டர் காஞ்சி வாங்  [Dr. Gonjgie Wang].

    “எமது ஆய்வுப் பதிப்பு  1970 ஆண்டு முதல் பூகோளக் கடல் நீர்ச் சூடேற்றம் பொங்கி வருகிறது என்று மீண்டும் உறுதி செய்கிறது. ஆயினும் பரவலான கடற்கனல் பதிவுகளில்  பேரளவு ஐயப்பாடு காணப் படுகிறது. சமீபத்தில் வந்த பத்தாண்டு விளைவுகளில் பூகோளச் சூடேற்றத்தில் கடற்கனல் மாற்றங்களில் தணிப்பு நிலை [Slowdown] தெரிகிறது. அதற்குப் பெருவாரியான விளக்க ஆய்வுகள் மதிப்பீடு  [Comprehensive Evaluation] தேவைப் படுகிறது. மேலும் 2000 மீடர் [6600 அடி] கடல் ஆழத்தில் நீரோட்டம் ஆயும் பல்வேறு கடற்கனல் கண்காணிப்புக் கூட்டுப்பணிக் குழு [Ocean Monitoring Network] அமைக்கப் பட வேண்டும்.” என்று சொல்கிறார் டாக்டர் காஞ்சி வாங்.  இப்போது அவர்கள் பயன்படுத்துவது 3800 சுயயியக்கிகள் கொண்ட ஆர்கோ படைக் கப்பல் [ARGO FLEET with 3800 Autonomous Devices].  அது 2005 ஆண்டு முதல் கடற்பணி செய்து வருகிறது.

    Icebergs in the Sea

    கிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் 

    21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் சூழ்வெளிப் பாதிப்புச் சவாலாய் இருப்பது பூகோளக் கடற்கனல் ஏற்றமே , அதற்குக் காரணமான கடல்நீர் மட்ட உயர்வு.  கடல்நீர் மட்ட உயர்வுக்கு இரு முக்கிய காரணங்கள்:  ஒன்று துருவப் பனிக்குன்றுகள், கிரீன்லாந்து பனிக்கட்டிகள் உருகுவது, அடுத்து கடல் வெள்ளம் வெப்ப மிகையால் கொள்ளளவு விரிவது.  நாசாவின் குறிப்பணி [Oceans Melting Greenland (OMG) Mission] வான் பறப்பு, கப்பல் பயணக் கண்காணிப்புகள் மூலம் தொடர்ந்து, கரையோரப்  பகுதி பனிக் குன்றுகள் உருகி நீராவதைப் பதிவு செய்வது. ஐந்தாண்டு பணி இது [5 Year Airborne & Ship-Based Mission]. இவற்றின் விளைவு  என்ன ? மேற்தள / அடித்தளக் கடல்நிலைகள் எப்படி நீர் மட்ட உயர்வை மாற்றுகின்றன என்பதை அறிவது.  துருவப் பனி உருகுவதற்கு புவிச் சூடேற்றம் மட்டுமே காரணமாகிறது.

    கிரீன்லாந்தின் பனிச்சேர்க்கை அண்டார்க்டிகாவுக்கு அடுத்தபடி அளவில் பெரியது.  கிரீன்லாந்து பனிமட்டும் உருகினால் கடல் நீர் உயரம் 23 அடி உயரும்.  அந்தப் பயங்கர கடல் உயரம் பல கடற்கரை நகரங்களை மூழ்க்கி விடும்.  அப்படிக் கிரீன்லாந்து உருக  பல நூற்றாண்டுகள் ஆகலாம்.  தற்போது கடலில் சேரும் கிரீன்லாந்து பனியுருக்க நீர் ஆண்டுக்கு சுமார் 250 பில்லியன் டன்  என்று  ஓயெம்ஜி மூலம் [OMG MISSION] நாசா கணித்துள்ளது.

    Greenland Ice melting

    Image result for oceans are warming rapidly

    http://www.cbsnews.com/videos/scientists-warn-of-sea-level-rise-as-antarctic-glacier-melts/

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G7iEYgb50yc

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-EMCxE1v22I

    http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ]

    ++++++++++++++++++++

    கடல் சூடேற்றத்தால் விரிவதும், பனிக்குன்றுகள், உறைப்பாறைத் தட்டுகள் உருகிக் கடல் நீர்க் கொள்ளளவு மிகையாவதும் இப்போது நமக்குத் தெரிந்ததுதான்.  அம்முறைப்படி குறைந்தது சுமார் 3 அடி [1 மீடர்] அல்லது அதற்கும் மிகையான கடல் மட்ட உயர்ச்சி, ஒரு நூற்றாண்டில் நேரலாம் என்பது இப்போது உறுதியாகி உள்ளது.  ஆனல் அந்த உயர்ச்சி ஒரு நூற்றாண்டுக்குள் நேருமா அல்லது அதற்கும் அப்பால் ஏறுமா என்பது எமக்குத் தெரிய வில்லை.
    ஸ்டீவன் நீரம் [ தலைமை ஆய்வாளி, கொலராடோ, போல்டர் பல்கலைக் கழகம்]
    பூர்வீகக் காலநிலைப் பதிவு [Paleoclimate Record] மூலம் நாங்கள் அறிந்தபடி ஓரிரு நூற்றாண்டுகளில் 10 அடி [3 மீடர்] கடல் மட்ட உயர ஏற்றம், நிகழக் கூடிய மாறுதல்தான்.
    டாம் வாக்னர் [Cryosphere Program, NASA Headquarters, Washington.D.C]
    Image result for oceans are warming rapidly
    நாசாவின் அறிவிப்புப்படி கடல் மட்டம் மென்மேலும் உயர்ந்து கொண்டு வருகிறது.
    1992 ஆண்டு முதல் 2015 [?] வரை உலகளாவிய கடல் பரப்புகளில் சராசரி 3 அங்குலம் [ 8 செ.மீ.] உயர்ந்துள்ளது.  சில கடல் மட்டப் பகுதிகளில் 9 அங்குலத்துக்கும் [25 செ.மீ.] மேலாக இயற்கை மாறுபாடுகளால் ஏறியுள்ளது என்று நாசா துணைக்கோள் கருவிகள் மூலம் அறியப் பட்டுள்ளது.  இப்போது ஓர் ஆழ்ந்த ஆய்வு முயற்சி நாசா துணைக்கோள் அளப்புகளை வைத்து தவிர்க்க முடியாத பல்லடிக் கடல் மட்ட உயர்ச்சி நேரப் போவதாக எச்சரிக்கை வந்துள்ளது. விஞ்ஞானிகள் இப்போது எழுப்பும் வினா எத்தனை விரைவில் கடல் மட்ட  உயரம்  ஏறப் போகிறது ?
     Image result for oceans are warming rapidly
    கொலராடோ, போல்டர் பல்கலைக் கழக ஆய்வாளர் நாசா துணைக்கோள் 1992 ஆண்டு முதல் 2015 வரை அனுப்பிய 23 ஆண்டுகளின் கடல் மட்ட உயர்வுகளை அடிப்படையாகக் கொண்டு சீரான ஏற்றமில்லாத நிலைக்கு விளக்கம் தேடுவார்.   2013 ஆண்டில் காலநிலை மாறுதலை நோக்கும் ஐக்கிய நாடுகளின் அரசாங்க உட்துறைக் குழுவினர்  [United Nations Intergovernmental Panel on Climate Change]  அறிவிப்புப்படி, உலகளாவிய கடல்களின் நீர்மட்ட உயரம் சுமார் 1 அடி முதல் 3 அடி [0.3 முதல் 0.9 மீ.] இந்த நூற்றாண்டு  இறுதியில் ஏறிவிடும் என்று கூறியுள்ளது.   இதற்குப் பிறகு குறிப்பிடப்படும் ஆய்வுச் செய்திப்படி மிகையாகக் கூறப்படும் 3 அடி [0.9 மீ.] உயரமே உறுதியாக எடுத்துக் கொள்ளப் படுகிறது.
    Image result for oceans are warming rapidly
    இந்த 3 அடி [0.9 மீ.] உயர ஏற்றத்தில் 1 அடி உயரம் கடல்நீர் சூடேற்றத்தால் உண்டாகுகிறது என்றும், அடுத்த 1 அடி [0.9 மீ.] ஏற்றம் கிரீன்லாந்து மற்றும் அண்டார்க்டிக் பனிப்பாறை உருகுவதால் நேர்கிறது என்றும், மிச்சமுள்ள 1 அடி உலக மலைச் சிகரப் பாறை உருகுவதால் என்றும் மதிப்பிடப் படுகிறது.  கிரீன்லாந்தின் பனித்தளம் 660,000 சதுர மைல் [1.7 மில்லியன் சதுர கி.மீ.] பரப்பு சுமார் 303 கிகா டன் [gigatons] பனிக்கட்டிகளை ஓராண்டு காலத்தில்  உதிர்த்துவிடும் என்று நாசாவின் துணைக்கோள் மூலம் அறிய வருகிறது.  இது கடந்த பத்தாண்டு கணக்கீடுகள்.  அண்டார்க்டிக் துருவப் பனித்தட்டு சுமார் 5.4 மில்லியன் சதுர மைல் பரப்பளவில் [14 மில்லியன் சதுர கி.மீ.] உருகி சராசரி 118 கிகா டன் அளவில் கடல் நீர்க் கொள்ளளவு சேர்ந்துள்ளது.
    Greenland Rivers -2

    2000 ஆண்டு முதல் 2008 ஆண்டு வரை கிரீன்லாந்தின் பனிப்பாறை 1500 கிகா டன் [1 gigaton = 1 billion ton] பரிமாணத்தை இழந்திருக்கிறது [190 gigaton per year]  என்று ஒரு புதிய அறிவிப்பில் தெரிகிறது.  அதாவது  2006 முதல் 2008 வரை ஓராண்டுக்குப் பனிப் பரிமாண இழப்பானது 273 கிகா டன்னாக ஏறி இருக்கிறது.  2000 முதல் 2008 வரை அறியப் பட்ட கடல் மட்ட உயரம் : 4 மில்லி மீடர்.  கடைசி  மூன்று ஆண்டு களில் மட்டும் கடல் மட்டம் ஆண்டுக்கு 0.75 மில்லி மீடராக ஏறியுள்ளது.

    Van Den  Broeke [Dutch Researcher Spoke to SPEIGEL ONLINE]

    கிரீன்லாந்துதான் உலகப் பெரும் நீர் சேமிப்புப் பூங்காவாகக் கருதப் படுகிறது !  அங்கு ஓடும் நீல நிற ஆறுகள் பனிப்பாறைக் குள்ளே மகத்தான, நளிமான, ஆனால் பயங்கரமான பாதாளங்களை [Canyons] உண்டாக்கி வருகின்றன.

    Image result for oceans are warming rapidly

    2015 ஜனவரியில் செய்த புதிய ஆராய்ச்சிகள் நொறுங்கி விடும் அந்தப் பனித்தட்டுகளின் போக்கைச் சுட்டிக் காட்டி, பூகோளச் சூடேற்றம் விளைவிக்கும் பேரிடரை முன்னறிப்பு செய்கின்றன.

    லாரென்ஸ் ஸ்மித் [தலைமை ஆய்வாளி, காலிஃபோர்னியா பல்கலைக் கழகம்]

    கிரீன்லாந்து பனித்தளத் தேய்வு எதிர்காலக் கடல் மட்ட உயர்வுக்குப் பெரும்பங்கு வகிக்க மெய்யாக உதவி செய்கிறது.  நவீன பூகோளச் சூடேற்றத்தின் தாக்கத்தைக் கூறும், காலநிலைக் கணினி மாடலைச் செம்மைப் படுத்தவும் அது அவசியமானது.

    திடெஸ்கோ [இணைப் பேராசிரியர், புவியியல் & சூழ்வெளி விஞ்ஞானம்]

    Arctic Ice Region

    “துணிச்சலான இந்தப் பணியின் வெற்றி அகில நாட்டு ஐக்கிய விஞ்ஞானச் சமூகத்தின் முயற்சி யாலும்,  விண்வெளி ஆணையாளர் பலருடைய துணைக்கோள்களின் துல்லிய உணர்வுக் கருவிகளின் அறிவிப்பாலும்  கிடைத்தது.   இந்த ஆதாரங்களின்றி, எப்படிப் பனித்தட்டுகள் உருகின வென்று நாங்கள் உறுதியோடு மக்களுக்கு அறிவித்திருக்க முடியாது.   பூகோளச் சூடேற்றம் பற்றி நீண்ட காலமாய்  நிலவிய நிச்சயமற்ற இந்த ஐயப்பாட்டை நாங்கள் நீக்கியிருக்க இயலாது.”

    பேராசிரியர் ஆன்ரூ ஷெப்பர்டு [லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து]

    Image result for oceans are warming rapidly

    கிரீன்லாந்தின் பனித்தளங்கள் விரைவில் உருகி ஆறுகளாய் ஓடுகின்றன.

    கிரீன்லாந்தின் பனித்தளங்கள் ஆறுகளாய் விரைவில் உருகி ஓடிக் கடல் நீர் மட்ட உயர்ச்சிக்கு மற்ற பனிச்சேமிப்புகளுக்குச் சமமாகப் பெரும்பங்கு ஏற்கிறது.  இந்தப் புதிய கண்டுபிடிப்பு இவ்வாண்டு 2015 ஜனவரி 15 இல் வெளிவந்த தேசீய விஞ்ஞானக் கழகத்தின் ஜனவரி இதழில்  [National Academy of Sciences Journal] பதிவாகி உள்ளது.  கிரீன்லாந்தின் 80% பரப்பளவில் பனித்தளப் பாறைகள் உறைந்துள்ளன.   இவை தொடர்ந்து உருகி ஓடினால் கடல் மட்ட உயர்ச்சி பேரளவில்  ஏறிட வாய்ப்புள்ளது என்று தெரிய வருகிறது. கிரீன்லாந்தால் நீரோட்டம் நிலைபெற்ற 523 ஆறுகள் சுமார் 2000 சதுரமைல் பரப்பில் ஓடி நீரைக் கடலில் மௌலின்ஸ் என்னும் புதை குழிகள் [Moulins or Sink Holes] மூலம் கொட்டி வருகின்றன. நீரோட்டத்தின் வேகம் : 23,000  முதல்  46,000 ft/sec. கொள்ளளவு : 55,000 முதல்  61,000 cuft/sec. பேரளவு நீரை உருகிக் கொட்டும் கிரீன்லாந்தின் பனித் தட்டுகளே உலகின் மிகப் பெரும் நீர்ச் சேமிப்புத் தீவாகக் கருதப் படுகிறது.

    Arctic Ice Retreat

    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டு களில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச் சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!

    Image result for oceans are warming rapidly

    அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப் பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    unnamed

    அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

    “பல ஆண்டுகளாக அண்டார்க்டிக் பனிப்பாறைப் பரிமாணத்தில் ஏற்பட்ட அரங்க மாறுதல்கள் பளிச்செனத் தெரிந்தாலும், எம்மிடமுள்ள துணைக்கோள் கணக்கெடுப்புகளில் பொதுவாகச் சமப்பாடு நிலைமை மாறாமல் இருப்பது காணப் பட்டது.

    டாக்டர் எரிக் ஐவின்ஸ் [Co-Leader, NASA Jet Propulsion Laboratory]

    “ஒரு திடுக்கிடும் முடிவாண்டு விஞ்ஞானப் புள்ளி விவர அறிக்கையில் உலகக் காலநிலை நிறுவகம் (WMO) சமீபத்திய உச்ச அதம உஷ்ண மாறுதல்கள் [ஸ்விட்ஜர்லாந்தில் மிகச் சூடான ஜூன் மாத வேனில், அமெரிக்காவில் எண்ணிக்கை மிக்க சூறாவளி அடிப்புகள்] யாவும் காலநிலையைச் சார்ந்தவை என்று கூறுகிறது.  உலக நாடுகளின் உச்சக் காலநிலை ஏற்றம், இறக்கம், மழைப் பொழிவுகள், புயல் வீச்சுகள் ஆகியவை யாவும் பூகோள சூடேற்ற முன்னறிப்புக் கூற்றுகளை ஒத்திருக்கின்றன.  உன்னத கம்பியூட்டர் மாதிரிக் கணிப்புகள் [Super Computer Models], சூழ்வெளி சூடாகும் போது, வெப்பம் மிகையாகிக் காலநிலைப் போக்கில் சீர்குலைவும், நிலையில்லா ஆட்டமும் ஏற்படும் என்று காட்டுகின்றன.  சமீபத்தைய ஆராய்ச்சிகள் காலநிலை மாறாட்டத்தால் பூகோள உஷ்ணம் தொடர்ந்து சூடேற்றும் போது இயற்கையின் சீற்றங்கள் தீவிரமாகி, அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாவதாய்க் காட்டுகின்றன.”

    உலகக் காலநிலை நிறுவகம் [World Meteorological Organization (WMO)]

    Greenland homes

    “2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள்.  அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங் களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது!  வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதி யாக்கப் பட்டது!  அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”

    உள்நாட்டுக் காலநிலை மாறுபாட்டு அரங்கம் [Intergovernmental Panel for Climate Change (IPCC) April 2, 2001]

    Greenland Location

    “வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை!  மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”

    ஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)]

    பூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகிறது!  கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது!  கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்!

    அமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]

    Melting Days

    “கணினி யுகத்தில் காலநிலை மாடல்கள் பேரளவு முன்னேற்ற விளைவுகளைக் காட்டியுள்ளன. முக்கியமாக பூகோள சூடேற்றத்தால் ஏற்படும் கால நிலை வேறுபாடுகளுக்கு ஆர்க்டிக் துருவ வட்டார மாறுதல்கள் 25%-30% அளவில் பங்கேற்றுள்ளன.

    பூகோளச் சூடேற்றப் போக்கைப் பற்றி:

    1. பூகோள உஷ்ணம் 1900 ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் பூதள உஷ்ணம் 1.2 to 1.4 வரை கூடியுள்ளது. 2000 ஆண்டு முதல் 2009 வரை கடந்த பத்தாண்டுகள் மிக்க வெக்கைக் காலமாகக் கருதப் படுகிறது.  கடந்த 50 ஆண்டுகளில் அலாஸ்கா, கிழக்கு ரஷ்யா, மேற்குக் கனடா மூன்றிலும் 7 டிகிரி F [4 C] சராசரி உஷ்ணம் ஏறியுள்ளது.

    2.  20 ஆம் நூற்றாண்டின் பத்தில் ஏழு வெப்பம் மிகையான காலங்கள் 1990 ஆண்டுகளில் பதிவாகி யுள்ளன.  அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் எழுந்த வருடமாகக் கருதப் படுகிறது.

    Fig 1 Carbon Emissions

    Fig 1 Global CO2 Concentrations

    3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு வேகத்தில் மிகையாகி யிருக்கிறது!  கடந்த 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் கடல் மட்டம் 4 முதல் 8 அங்குலம் வரை ஏறியுள்ளது.  அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் 2 அடி உயரம் ஏறுமென்று விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்.

    4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன!  வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன!

    Image result for oceans are warming rapidly

    5. (1986-1995) ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் தென் ஆஃபிரிக்க நாடுகளுக்கு மிக்க உச்சமான வெப்ப காலமாகக் கருதப்படுகிறது.

    6.  WHO [World Health Organization]  பூகோளச் சூடேற்றத்தால் [மித மிஞ்சிய சூடு / குளிர், வரட்சி, பஞ்சம்,  கடும் வெப்ப அலைகள், உணவுப் பற்றாக் குறை, மலேரியா போன்ற நோய்கள்]  ஆண்டுக்கு 150,000 பேர் மரிப்பார் என்று எச்சரிக்கிறது.

    டாக்டர் ஸிசிலியா பிட்ஸ், [Dr. Cecilia Bitz, Physicist, University of Washington, Polar Science Center] and  [11 Facts About Global Warming]

    Global Warming Effects

    ஆர்க்டிக் வட்டார பனிப்பாறைச் சரிவும் கடல் மட்ட உயர்வும்  [டிசம்பர் 2012]

    துருவப் பகுதிகளில் பனிப்பாறைச் சரிவுகளும்,  பனிக்குன்று களும் உருகி கடல் மட்டம் உயர்வதும், கடல் நீர் வெப்பம் கூடுவதும் கடந்த 50 ஆண்டுகளாய் இரண்டாம் தொழிற் புரட்சி வலுவாகிக் கடும் கிரீன்ஹௌஸ் வாயுக்கள் கொள்ளளவு மிகையாகி வருவதை யாரும் புறக்கணிக்க முடியாது.  அதனால் பூமியின் பருவ நிலைக்கோளாறுகள், முரண்பாடுகள்  பேரளவில் தோன்றி உலக மக்கள் நடை வாழ்வு, நாகரீகம் சிதைவாகி இன்னல் அடைந்து  வருகிறார்.   21 ஆம்  நூற்றாண்டில் பயங்கரக் “காத்ரீனா” ஹர்ரிகேன் கடற் சூறாவளி அடித்து நியூ ஆர்லியன்ஸ் நகரம் முற்றிலும் சேதமடைந்து நாசமான ஓர் நரகக் காட்சியை தீட்டியது.   2012 அக்டோபரில் அடித்த பூத ஹர்ரிகேன் “ஸாண்டி”  நியூ யார்க், நியூ ஜெர்ஸி மாநிலங்களை நிர்மூல மாக்கியது.   ஹர்ரிகேன் கத்ரீனாவும், ஸாண்டியும் சூட்டு யுகம் தயாரித்த மாபெரும் பயங்கர ஹைடிரஜன் குண்டுகளாகக் கருதப் பட வேண்டும்.

    CO2 Emissions by countries

    சூட்டு யுகத்தில் 2012 ஆண்டில் அறியப்பட்ட சில எதிர்பாரா விளைவுகள்:

    26 ஆய்வகத்தின் 47 சூழ்மண்டல வாதிகள் கூடி 10 துணைக்கோள்  அறிவிப்புகளைத் திரட்டி, துருவப் பனிப்பாறைச் சரிவுகளின் உறுதியான விளைவுகளை வெளி யிட்டுள்னர். 1992 முதல் 2011 ஆண்டு வரை சுமார் 20 ஆண்டுகளில் ஐரோப்பாவின் தூர இயக்கு உணர்வு துணைக்கோள் [ERS Mission : European Remote Sensing Satellite] அனுப்பிய தகவல்படி, கிழக்குக் கடற்கரை கிரீன்லாந்தின் பனித் தளம் ஐந்து கி. மீடர் [சுமார் 3 மைல்] சுருங்கி விட்டதாக அறியப் படுகிறது. துருவப் பகுதி பனித்தளப் பரிமாணத்தைக் கண்காணிக்கும் அந்த ஐரோப்பியத் துணைக் கோள் “பரிதி முகநோக்குத் துருவச் சுற்று வீதியில் [Sun-synchronouspolar orbit] சுற்றி வருகிறது. 1992 ஆண்டு முதல் கிரீன்லாந்து அண்டார்க்டிக் பகுதிகளின் பனித் தட்டுகள் உருகிக் கடல் மட்டம் 11 மில்லி மீடர் உயர்ந்துள்ளதாக அறியப் படுகிறது. 2012 ஆண்டு வெளியீட்டின்படி துருவத்தில் கிரீன்லாந்து, அண்டார்க்டிகா இரண்டின் பனிச்சிதைவு 1990 ஆண்டைப் போல் மூன்று மடங்காகப் பெருகி யுள்ளது.

    சூடேறும் பூகோளம் பற்றி முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி அல் கோர்

    Antarctica

    பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது!  ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

    Global ocean mean temperature

    பூகோளக் காலநிலை யந்திரத்தை இயக்கும் பரிதி

    பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்ட மான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது!  வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது!  அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகை யாகிறது!  வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் “கிரீன்ஹௌஸ் விளைவு” அல்லது “கண்ணாடி மாளிகை விளைவு” [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது.  அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது!  அந்த வெப்ப எழுச்சியால் துருவப் பகுதியில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் உப்பு நீரில் மூழ்கி நிலவளம் பாழ்படும்.  அல்லது சி.எ·ப்.சி [Chloro Fluoro Carbons (CFC)] போன்ற பூமி வாயுக்கள் மேலே பரவிப் பாதுகாப்பாய் உள்ள ஓஸோன் பந்தலில் துளைகளைப் போட்டால், பரிதியின் தீய புறவூதாக் கதிர்கள் பூமியில் பாய்ந்து சேதம் விளைவிக்கின்றன.

    Atmospheric CO2

    பூகோளத்தின் வாயு மண்டலம் பரிதியின் வெப்பச் சக்தியாலும், பூமியின் சுழற்சியாலும் தொடர்ந்து குலுக்கப் பட்டு மாறி வருகிறது!  பரிதியின் வெப்பம் வேனிற் பரப்பு அரங்குகளில் ஏறித் துருவப் பகுதிகளை நோக்கித் தணிந்து செல்கிறது.  அப்போது குளிர்ந்த துருவக் காற்று கீழ்ப்படிந்து பூமத்திய ரேகை நோக்கி அடிக்கிறது.  பூதளப் பரப்பின் நீர்மயம் ஆவியாகி மேலே பரவிப் பல மைல் தூரம் பயணம் செய்து, உஷ்ணம் குன்றும் போது மழையாகப் பெய்கிறது அல்லது பனிக்கட்டியாக உறைகிறது.  நாளுக்கு நாள் ஒரே விதியில் மாறிவரும் சீரான காலநிலை மாற்றத்தை நாம் புரிந்து கொண்டாலும், மெல்ல மெல்ல மிகையாகும் காலநிலை வேறுபாடுகள் விந்தையான புதிராய் உள்ளன. 1940 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தில் உஷ்ணம் தணிந்து பனிக்குன்றுகள் 1972 ஆண்டு வரை பெருகிக் கொண்டு விரிந்தன!  பிரிட்டனில் அதே காலங்களில் சில வருடங்கள் சூடாக ஆரம்பித் தாலும் உஷ்ணக் குறைவால், பயிர் வளர்ச்சிக் கால நீடிப்பில் இரண்டு வாரங்கள் குன்றி விட்டன!  அவ்விதமாக காலநிலை யந்திர மானது விந்தையாகப் பூகோளத்தில் விளையாடிக் கொண்டிருந்தது!

    Sea Level ChangeImage result for oceans are warming rapidly

    கிரீன்ஹௌஸ் விளைவுகளால் பூகோள வெப்பம் ஏறும் போது, கொந்தளிக்கும் கடல் நீர் உஷ்ணம் அதிகமாகி கடல் வெள்ளத்தின் கொள்ளளவு மிகையாகிறது [Volumetric Thermal Expansion].  அடுத்து துருவப் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டத்தின் உயரத்தை மேலும் உயரச் செய்கிறது!  பொதுவாகக் கடல் மட்ட வேறுபாடுகளை அளப்பது சற்று கடினமானது.  அலைமானித் தகவல் [Tide Gauge Data] மூலமாகத்தான் கடல் மட்ட உயர்வுகளைப் பதிவு செய்ய முடியும்.  கடந்த 100 ஆண்டுகளாக வெப்ப ஏற்றத்தால் பூகோளக் கடல் மட்டம் 10-25 செ.மீ. உயர்ந்திருப்பதாக அறியப்படுகிறது!  பூகோளச் சூடேற்றத்தால் மட்டும் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 100 ஆண்டுகளில் 2-7 செ.மீ. உயர்ந்திருப்ப தாகக் கணிக்கப் பட்டுள்ளது! பனிமண்டலமும் துருவப் பனிப்பாறைகளும் உருகிக் கடல் மட்டம் 2-5 செ.மீ. மிகையானதாக அறியப் படுகிறது!  மீதமான 4-13 செ.மீ. கடல் வெள்ளக் கொள்ளளவு நீட்சியாக எடுத்துக் கொள்ளலாம். 21 ஆம் நூற்றாண்டில் மானிடரியக்கும் தொழிற் துறைகளில் உண்டாகும் கிரீஹௌஸ் வாயுக்கள் வெளியாக்கம் பூகோளக் காலநிலைப் பாதிப்புகளைப் பேரளவில் விளைவிக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கப் படுகிறது!

    Fig 1 Arctic Ice Melting

    சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

    கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை.  அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமிலவாயு [CO2].  மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas].  அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது.  அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக்களையும் CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692.  அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

    2003 ஆம் ஆண்டில் உதாரணமாக பிரிட்டனில் 300,000 வீடுகளுக்கு மின்சார ஆற்றல் பரிமாற நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டால் 1810 மில்லியன் கிலோகிராம் CO2 வாயு “கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் கம்பேனியால்” [Glaxo Smith Kline] வெளியானது!  பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் 614 மில்லியன் கிலோ மீடர் பயண தூரத்தை ஒப்பிட்ட போது, 2002 ஆம் ஆண்டில் 91.5 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியானதாக 2003 இல் கணக்கிடப் பட்டது.  அதே கம்பெனியின் விற்பனைச் சரக்குகள் 50 நாடுகளுக்கு விமான, வீதி வாகனங்கள் மூலமாக அனுப்பியதில் 12.6 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியேறி சூழ்வெளியில் கலந்துள்ளது என்றும் அறியப்படுகிறது!

    Image result for oceans are warming rapidly

    (தொடரும்)

    தகவல்:

    1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference] (April 9, 2007)

    2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

    3.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

    4.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

    5.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

    6.   [11 Facts About Global Warining ]

    7.   http://www.cosmosmagazine.com/news/676/ice-retreat-opens-passage-north-pole  [September 21, 2006]

    8.  http://www.spiegel.de/international/world/a-warming-arctic-greenland-s-ice-sheet-melting-faster-than-ever-a-661192.html  [November 13, 2009]

    9.  http://topics.nytimes.com/top/news/science/topics/globalwarming/index.html#  [December 6, 2012]

    10.  http://en.wikipedia.org/wiki/Global_warming  [December 8, 2012]

    11.  http://en.wikipedia.org/wiki/Hurricane_Katrina  [Katrina Hurricane Damage in New Orleans] [December 9, 2012]

    12.  http://en.wikipedia.org/wiki/Hurricane_Sandy  [Sandy Hurricane Damage in New York, New Jersey etc]

    13.  http://en.wikipedia.org/wiki/European_Remote-Sensing_Satellite  [European Remote Sensing Satellite Mission] [December 7, 2012]

    14.  http://en.wikipedia.org/wiki/Gravity_Recovery_and_Climate_Experiment  The Gravity Recovery And Climate Experiment (GRACE), a joint mission of NASA and the German Aerospace Center  [Noember 20, 2012]

    15.  EcoAlert :  Forty Seven ESA/NASA Experts Warn of Increasing Ice Melt & Rising Sea Levels  [December 3, 2012]

    16.  http://www.jpl.nasa.gov/news/news.php?release=2014-148   [May 12, 2014]

    17. http://scitechdaily.com/rivers-glacial-meltwater-contribute-rising-sea-levels/  [Jan 13, 2015]

    18.  http://en.wikipedia.org/wiki/Greenland  [May 16, 2015]

    19.  http://www.nasa.gov/jpl/rivers-are-draining-greenland-quickly-nasa-ucla  [May 16, 2015]

    20. http://www.spacedaily.com/reports/NASA_Zeroes_in_on_Ocean_Rise_How_Much_How_Soon_999.html   [August 27, 2015]

    21.  http://www.space.com/30379-nasa-sea-level-rise-model-video.html  [August 26, 2015]

    22.  https://www.theguardian.com/environment/climate-consensus-97-per-cent/2017/jun/26/new-study-confirms-the-oceans-are-warming-rapidly [June 26, 2017]

    22(a)  http://www.dailygalaxy.com/my_weblog/2017/06/ecoalert-greenlands-great-melt-nasa-monitoring-the-massive-ice-sheet-thats-adding-250-gigatonnes-of-.html [June 27, 2017]

    23.   https://phys.org/news/2017-06-oceans-rapidly.html  [June 30, 2017]

    24. http://www.terradaily.com/reports/Oceans_are_warming_rapidly_999.html  [July 3, 2017

    25.  https://www.accuweather.com/en/weather-blogs/climatechange/new-research-confirms-that-global-oceans-are-warming-rapidly/70002053  [July 6, 2017]

    26. http://www.spacedaily.com/reports/Figuring_out_how_fast_Greenland_is_melting_999.html  [July 7, 2017]

    27.  http://www.dailygalaxy.com/my_weblog/2017/07/ecoalert-greenlands-ice-melt-doubles-the-planets-canary-in-the-mine-shaft.html  [July 10, 2017]

    28.  https://www.livescience.com/59773-trillion-ton-iceberg-breaks-off-antarctica.html?  [July 12, 2017]

    29. https://phys.org/news/2017-10-paris-climate-goals-recede-geoengineering.html  [October 11, 2017]

    30. http://environmentalresearchweb.org/cws/article/yournews/70191  [October 13, 2017]

    31.  https://www.canada.ca/en/environment-climate-change/services/climate-change/science.html  [November 23, 2015 – 2017]

    ++++++++++++++++++++

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  November 26, 2017 [R-5]

    Share
  • படக்கவிதைப் போட்டி (137)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    23515563_1478743548846506_1738025179_n
    சாந்தி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.12.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம2

    Share
  • ஓலைச்சுவடி

    முனைவர் சு.சத்தியா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை

    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர்.

     

    தமிழையும்  தமிழனையும்

    தரணியெங்கும்  ஒளிவீசசெய்த

    ஓலைங்க!பனைஓலைங்க!

    இலக்கண  இலக்கியம்

    மருத்துவம்  கண்டதிந்த

    ஓலைங்க! பனைஓலைங்க!

    அக்கால வாழ்வுதனை

    எக்காலமும்  காட்டுமிந்த

    ஓலைங்க! பனைஓலைங்க!

    ஓலைச்சுவடி  படித்திடுங்க

    ஓய்வில்லாமல் உழைத்திடுங்க!

    உலகம் நம்மை தேடிவரும் பாருங்க!

    இதுதான் நம் தமிழ் தாத்தா கண்டெடுத்த

    ஓலைங்க பனைஓலைங்க!….

    Share