Blog

  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 36

    க. பாலசுப்பிரமணியன்

    மனத்தின் மாசினை நீக்கிடுவாயோ இறைவா…

    திருமூலர்-1-3

    மனத்தைக் கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. நமது  சிந்தனைகளே நமக்கு மகிழ்வையும் துயரத்தையும் தருகின்றன. இந்தத் துயரத்தில் வாடுகின்ற பட்டினத்தார் தன்னுடைய மனநிலையை விளக்கும் வண்ணம் பாடுகின்றார் :

    நெஞ்ச முருகி நினைந்துனைத்தான்  போற்றிநெடு

    வஞ்சகத்தைப் போக்க வகையறியேன் பூரணமே

    எள்ளுக்கு ள்ளெண்ணெய்போ லெங்கு நிறைந்திருந்த

    துள்ள மறியா  துருகினேன் பூரணமே

    மனத்தைக் கட்டுப்படுத்திட்டுவிட்டால்; அங்கே இறைவனின் சோதி சுடர் விட்டுப் பிரகாசிக்கும். இறைவன்பால் சிந்தையை நிறுத்தி எங்கும் எதிலும் அவன் ஆதிக்கத்தைக் காணும் பொழுது நமக்கு சிந்தை சலனங்களிலிருந்து விடுபட்டு அமைதியில் அமைந்திடும். அது அன்பின் வடிவாகவும் எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பின் மையமாகவும்  மாறிவிடும்.

    இந்த ஆனந்த நிலையைப் பெறுவதற்கு எந்த கோவிலுக்குச் செல்லலாம்? எந்த நதியில் நீராடலாம்? எந்த இறைவனின் பாதங்களைப் பற்றிக்கொள்ளலாம்?

    கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை

    ஆடினாலும் அரனுக்கு அன்பு இல்லையேல்

    ஓடும் நீரினை ஓட்டைக் குடத்து அட்டி

    மூடி வைத்திட்ட  மூர்க்கனோடு ஒக்குமே 

    என்று  தேவாரத்தில் அப்பர்  சொல்வது அன்பின் நிலையைத் தெளிவாக விளக்குகின்றது

    இதே கருத்தை வலியுறுத்தும் திருமூலர் சொல்கின்றார்

    ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து

    பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை

    காதலில் அண்ணலைக் காண இனியவர்

    நாதன் இருந்த நகரறி வாறே.

     இதுவே ஆனந்தமான உன்னத நிலை மனதில் நிற்கும் மாசுகளைக் களைந்து சிந்தையை இறைவனிடம் வைத்தால் கிடைக்கும் இன்பத்தை திருமூலர் தன்னுடைய எளிய சொற்கள் மூலம் விளக்குகின்றார்

    கொலையே களவுகட்  காமம் பொய்கூறல்

    மலையான பாதக மாம் அவை நீக்கித்

    தலையாஞ் சிவனடி சார்ந்தோர்க்

    கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே

     இவ்வாறு தன்னை ஏற்று ஆட்கொண்ட இறைவனின் கருணையை திருவாசகத்தில் மாணிக்கவாசகர் அழகாக எடுத்துரைக்கின்றார்

    வெறுப்பனவே செய்யும்என் சிறுமையைநின் பெருமையினால்

    பொறுப்பவனே அராப்பூண்  பவனேபொங்கு கங்கைச்சடைச்

    செறுப்பவனேநின் திருவரு ளால்என் பிறவியைவேர்

    அறுப்பவனே உடையாய் அடியேன்உன் அடைக்கலமே 

     தன்னுடைய மனது படுத்தும் பாட்டில் வருந்தி இறைவனுடைய தாள்களை மட்டும் நம்பி நிற்கின்ற நிலையை நாம் வள்ளலாரிடமும் காண்கின்றோம்

    மையல் வாழ்க்கையில் நாள்தொறும் அடியேன்

    வருந்தி நெஞ்சகம் மாழ்குவ தெல்லாம்

    ஐய ஐயவோ கண்டிடா தவர்போல்

    அடம்பி டிப்பதுன் அருளினுக் கழகோ

    செய்ய மேல்ஒன்றும் அறிந்திலன் சிவனே

    தில்லை மன்றிடைத் தென்முக நோக்கி

    உய்ய வைத்ததாள் நம்பிநிற் கின்றேன்

    உனைஅ லால்எனை உடையவர் எவரே

    அடியார்கள் அனைவருமே இறைவனிடம் மனமுருகி வேண்டிக்கொண்டதெல்லாம்…. “மனத்தின் மாசினை நீக்கிடுவாயோ இறைவா.”

    (தொடருவோம்)

    Share
  • வாராமல் காத்திடுவோம் !

          ( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா )

     

     

    நீரிழிவு எனும்வார்த்தை பாரினையே கலக்கிறது

    யாருக்கு வருமென்று யாருக்கும் தெரியாது

    எல்லோரும் நீரிழிவை எதிரியாய்ப் பார்க்கின்றார்

    வல்லவரும் நல்லவரும் நீரிழிவால் வாடுகிறார் !

     

    நல்லகாலம் இருப்பார்க்கு நீரிழிவு வருவதில்லை

    அல்லல்தரும் நோயெனவே அனைவருமே எண்ணுகிறார்

    அறுசுவையுள் பலவற்றை அணுகிடவே முடியாமல்

    அடக்கிவைக்கும் நோயாக நீரிழிவு வந்திருக்கு !

     

    நீரிழிவு இப்போது யாரையுமே விடுவதில்லை

    ஏழை பணக்காரென்று பாரபட்சம் பார்ப்பதில்லை

    குழந்தைமுதல் கிழவர்வரை கொடுக்கிறது தொல்லையினை

    நலமிழந்து வாடிநிற்க நீரிழிவு செய்கிறது !

     

    உணவைக் குறையுங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்

    நலன்கெடுக்கும் வகையினிலே நடக்காது இருந்திடுங்கள்

    பசித்தவுடன் உண்ணுங்கள் புசித்தவுடன் உறங்காதீர்

    எதற்குமே பதட்டமதை இயன்றவரை தடுத்திடுவீர் !

     

    இனிப்புக் குறைவென்று எழுதிவைத்த உணவுகளை

    இயன்றவரை தவிர்த்துவிடல் எல்லோர்க்கும் உகந்ததுவே

    காய்கறிகள் உண்டிடுங்கள் கனிகள்தேர்ந் தெடுத்திடுங்கள்

    வாழ்வினிலே நிறைவாக வாழ்வதற்கு வழிபிறக்கும் !

     

    காசில்லாப் பயிற்சி கனக்காகவே இருக்கிறது

    யாருமே அப்பயிற்சி தனைக்கண்டு கொள்வதில்லை

    கிடைக்கின்ற நேரமதில் நடைப்பயிற்சி செய்துவிடின்

    உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகி வருமன்றோ !

     

    நீரிழிவு வியாதிபற்றி நினையாமல் இருக்கையிலே

    எப்படியோ வந்தெங்கள் இன்பமதைப் போக்கிவிடும்

    விழிப்புணர்வு எனுமுணர்வு எமைவிட்டு அகலுவதும்

    வில்லங்கம் வருவதற்கு காரணமாய் இருக்குதன்றோ !

     

    வெள்ளம் வருமுன்னே அணைகட்டிக் காப்பதுபோல்

    தெள்ளத் தெழிவாக விழிப்புணர்வைப் பெறவேண்டும்

    வந்தபின்பு எல்லோரும் நொந்துநிற்கும் நிலைமாறி

    வாராமல் காப்பதற்கு வழிவகைகள் தேவையன்றோ !

    Share
  • கபீர்தாசரின் கவிதைகள் (தமிழாக்கம் : க. பாலசுப்ரமணியன்)

    க. பாலசுப்பிரமணியன்

    kabir-424x282

    கைகளில் மாலைகள் உருண்டிட

    நாவினில் சொற்கள் உருண்டிட

    நினைவோ எங்கெங்கோ உருண்டிட

    இதுவோ மனிதா! இறைவன் பக்தி?

     

    குயவனைப் பார்த்து மண்ணே சொன்னது

    எத்ததனை நாட்கள் உருட்டுவாய் என்னையே

    எனக்கென ஒருநாளும் உண்மையில் வந்திடும்

    உருட்டுவேன் உன்னையே இந்த மண்ணினில்!

     

    மற்றவரிடம் கேட்பது மரணத்துக்கு நிகர்

    எவரிடமும் எதுவும் கேட்காதீர் !

    கேட்கும் பொழுதே மனமே மடிக்கும்

    இல்லை என்பவனோ மடிந்தான் முன்னே !

     

    வண்ணமே வண்ணமே எந்தன் இறைவன்

    எங்கும் எதிலும் அன்னவன் வண்ணமே

    வண்ணத்தைக் காண நானும் சென்றேன்

    அந்தோ! என்னிலும் வண்ணமே வண்ணமே !

     

    நீரில் குடமும் குடத்தில் நீரும்

    உள்ளும் புறமும் நீரே நீரே ;

    குடமும் உடைந்திட உள்ளும் புறமும்

    ஒன்றே ஒன்றே நீரே நீரே நீரே !

     

    மூட்டையாய் மூட்டையாய் நூல்கள் படித்தும்

    முடிவினில் அறிஞன் எவனும் இல்லை :

    அன்பெனும் இரண்டரை அட்சரம் அறிந்தவன்

    அறிவுக்கு எவரும் நிகராய் இல்லை !

     

    நலமா நலமா என்றே அனைவரும் கேட்பார்

    நலமாய் இருந்தவர் யாரு மில்லை !

    மரணத்தின் பயத்தினில் மனத்தினை நிறுத்தியே

    மாந்தரில் நலமாய் இருந்தவர் யாரோ ?

     

     

    Share
  •    அறிவியல் தமிழ் – கற்றல் கற்பித்தல் – 1

    முனைவர் ப. ஜெயகிருஷ்ணன்

    முன்னுரை 

         மனிதனின் வளமான வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைவது அறிவியலாகும். அறிவியலை முறையாகப் பெறாத நாடும்,மொழியும் உலக அளவில் தலை நிமிர்ந்து நிற்க முடியாத அளவிற்கு அறிவியல் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.. உலகிலுள்ள அனைத்து மக்களும் அறிவியலை அவர்களது மொழிகளில் கொண்டுவரப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வளர்ச்சி அடைந்த நாடுகளான  பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் அறிவியல் தொழில்நுட்பக் கல்வியை அவர்களது மொழியிலேயே கற்கின்றனர். கி.பி. 2050-ஆம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்பம், கணினி வழிக்கல்வி ஆகியவற்றை முறையாகப் பெறாத ஆறாயிரம் மொழிகளில்  5980- மொழிகள் உலகில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடும் என்று யுனெஸ்கோ அறிக்கை தெரிவிக்கிறது. மாறி வருகின்ற உலகிற்கு ஏற்பத் தமிழ்மொழியும் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே அறிவியலைத் தமிழ்வழியில் கற்கவும் கற்பிக்கவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளாக வெளிவந்த தமிழ் நூல்களிலுள்ள அறிவியல் செய்திகளும் ஆராயப்பட்டு வருகின்றன. இயல்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று தமிழை மூன்றாக வகைப்படுத்துவர். அறிவியல் தமிழ் நான்காம் தமிழாக இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

          தமிழில் தொல்காப்பியம்,சங்க இலக்கியம் ஆகியவற்றில் ஏராளமான  அறிவியல் செய்திகள் காணப்படுகின்றன. இவை 2000-ஆம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் அறிவியலில் மேன்மையான அறிவு பெற்றிருந்ததை காட்டுகின்றன. தொல்காப்பியம் தமிழ் மொழிக்கு இலக்கணம் கூற வந்த நூலாயினும் அறிவியல், தத்துவம், மருத்துவம் வானவியல், சோதிடம், கணிதம் போன்ற துறைகளின் கருத்துக்களை வெளியிடும் ஒரு நூலாகவும் அமைந்துள்ளது.

    உலகில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மேலைநாட்டு அறிவியல் சிந்தனையாளர்களான தேல்ஸ் (கி.மு.639-544) அனாக்ஸிமாண்டர்(கி.மு.611.547) ஷுனோபேன்ஸ்(கி.மு.576480) எம்படோகில்ஸ்(504-433) அரிஸ்டாட்டில் (கி.மு.384-322) போன்றோர்கள் வெளியிடாத பல அறிவியல் கருத்துக்களைத் தொல்காப்பியர் வெளியிட்டுள்ளார். உயிரினங்களின் வாய்ப்பாட்டைத் தொல்காப்பியர்.

               ”ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
              இரண்டறிவதுவே யதனொடு நாவே
              மூன்றறிவதுவே யவற்றொடு மூக்கே
              நான்கறிவதுவே யவற்றொடு கண்ணே
              ஐந்தறிவதுவே யவற்றொடு செவியே
              ஆற்றிவதுவே யவற்றொடு மனனே” என்று ஆறு வகையாகப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் தகுந்த எடுத்துக்காட்டுகளையும் தொடர்ந்துள்ள நூற்பாக்களில் தருவது அவரின் ஆழ்ந்த உயிர்கள் குறித்த அறிவை அறிந்து கொள்ள முடிகின்றது.

               புல்(ஓரறிவு); நந்து(இரண்டு அறிவு)
    எறும்பு(மூன்று அறிவு);தும்பி(நான்கு அறிவு);
    விலங்கு(ஐந்து அறிவு);மனிதன் (ஆறு அறிவு);

    என்ற பாகுபாடு பரிணாம வளர்ச்சியைத் தெளிவாக எடுத்தியம்பும் சிந்தனையாக அமைந்துள்ளது.

         தாவரங்களின் பல்வேறு பாகங்களான தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், பூ, குழை என்று பிரித்து விளக்கியிருப்பது தாவரவியல் ஆசிரியர் தாவரங்களின் பாகங்களைப் படம் வரைந்து விளக்கியுள்ளது போல் அமைந்துள்ளது.

               ”தோடே மடலே ஓலை என்றா;
    ஏடே யிதழே பாளை என்றா
    ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும்
    புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர்”
    (மரபியல்-87)

    பின்னர் எழுந்த சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், உரைநடை இலக்கியம், கவிதை, சிறுகதை, நாவல், புதுக்கவிதை ஆகியவற்றில் ஏராளமான அறிவியல் செய்திகளை அறிஞர்கள் தந்துள்ளனர். இவற்றை முறையாக ஆய்வுக்கு உட்படுத்திக் கற்கும்போது ஏராளமான அறிவியல் தமிழ் கலைச்சொற்களை நாம் பெறமுடியும்.

    தமிழில் அறிவியல் கலைச்சொல்லாக்க முயற்சியும் குறிப்பிடத்தக்க வரலாற்றினைக் கொண்டதாகும்.

     சான்றாக ‘அறிவியல்’ என்ற சொல்லின் படிநிலை வளர்ச்சியைக் கூறலாம்

         இயற்கை சாஸ்திரம்-1927
    பிரதம சாஸ்திரம்-1935
    அறிவுக்கலை-1942
    பொது விஞ்ஞானம்-1959
    அறிவு நூல்-1963
    விஞ்ஞானம் -1982
    அறிவியல்-1993-2012

    அறிவியல் கருத்துக்களை உள்வாங்கித் தமிழில் அறிவியல் நூல்களை மொழிபெயர்ப்பு, இலக்கணப் பிழைகள் இன்றி உருவாக்க முனைய வேண்டும். ஆனால் பல அறிவியல் நூல்கள் குறிப்பாகப் பாடநூல்கள் ஆங்கில வழி நூல்களின் நேரடி மொழிபெயர்ப்பாக அமைந்துள்ளன. ஆனால் இன்று எழுத்து சொல் வாக்கிய அமைப்புகளில் அறிவியலைக் தருவதில் ஒரு சீர்மையற்ற நிலையே காணப்படுகிறது. இந்த நிலை மாறவேண்டும்.

    தவறான மொழி பெயர்ப்பு

    The mineral wealth versus world population

         என்ற தொடர் தமிழ்வழிப் பாடநூலில் ‘உலக மக்கள் தொகைக்கு எதிராகத் தாதுச் செல்வங்கள் அமைகின்றன’ என்பது தவறான மொழிபெயர்ப்பாகும்.  ‘தாதுச் செல்வங்களும் மக்கள் தொகையும்’ என்று மொழி பெயர்த்திருக்க வேண்டும்

    சீர்மையற்ற மொழிபெயர்ப்பு

    ஒரு பொருளுக்குப் பல சொற்கள் வழங்குவது சீர்மையற்ற மொழிபெயர்ப்பாகும்.

    சான்று: பீக்கர், முகவை, ஜாடி

    சிமின்று, சிமெண்ட், சிமென்ட்டு, சிமெண்டு

    இலக்கணப் பிழைகளின்றி அறிவியல்தமிழ் அமையவேண்டும். குறிப்பாக எழுவாய் பயனிலை மாறிவருதல்,வேற்றுமை உருபுகளின் தவறான பயன்பாடு, ஒருமைப் பன்மை மயக்கம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்

    பேச்சு வழக்குச்சொற்களின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்

    சான்று: இராது, லியாக, முன்னமே, கெட்டியான.

    எழுத்து

    தமிழ் நெடுங்கணக்கில் 247 எழுத்துக்கள் உள்ளன. பிறமொழி உறவால் ஸ,ஷ, ஜ, க்ஷ ஆகிய கிரந்த எழுத்துக்களும் தமிழில் பயில்கின்றன. இலக்கண விதிகளில் பின்வரும் சில விதிவிலக்குகளை அறிவியல்தமிழில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    மொழி முதலெழுத்து

    இரப்பர், இரசாயன பந்தம்

    மொழி இடை எழுத்து

         எலக்ட்ரான் – க்ட்
    பெயின்ட் – ன்ட்

    மொழி இறுதி எழுத்து

         ஆர்பிட்
    ஸ் என்ற கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு
    ஸ்கான்டியம், ஸ்ரான்ஸியம்
    பாஸ்பரஸ் – பாஸ்பரசு – (தமிழ் மரபு)

    ஒலிபெயர்ப்பு முறைகள்

    உலகப் பொதுக்கலைச்சொற்கள் வழக்கில் அறிமுகமாகிவிட்ட பிறமொழிகள், அறிவியலாரின்பெயர்கள், சமன்பாடுகள், அளவுகள், குறியீடுகள், சுருக்கக் குறியீடுகள் ஆகியவற்றை அவ்வாறே அறிவியல் தமிழில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    கலைச்சொல்லாக்க முறைகள், பின்வரும் முறையில் அமைய வேண்டும்.

    நேருக்குநேர் மொழிபெயர்ப்பு
    இணைப்பு மொழிபெயர்ப்பு
    கருத்துப் பெயர்ப்பு

    சான்று (Salts – உப்புக்கள், Rock Salt – இந்துப்பு)

    ஒட்டுக்களைப் பெயர்த்தல்

    1. Exothermic reaction – வெப்பம் வெளியிடும் வினை- exo- வெளி
    2. Endothermic reaction – வெப்பம் கொள்வினை -Endo- கொள்
    3. Sub atomic particle – துணை அணுத்துகள்கள் -Sub-

     புதுச்சொல் படைத்தல்

          Element – தனிமம்;     Coal – நிலக்கரி
    Blow – ஊது; blowing – ஊதுதல்; blower – ஊதி.

    கணினிப் பயன்பாடு

         மேலைநாட்டு மொழிகளில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக எண்ணற்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றின் விளைவாக முதல்மொழி, இரண்டாம் மொழி, அந்நியமொழி என்ற நிலையில் கணினி வழிக் கற்பிப்பதற்கும் கற்பதற்கும் பல புதிய அணுகுமுறைகள் வெளிவந்துள்ளன. தமிழ் மொழியில் கணினிவழிக் கற்றலும் கற்பித்தலும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன. கணினியை மொழி கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படுத்துவதன் முக்கிய நோக்கமே அதன் பல்லூடகத் தன்மையாகும். கணினிவழிக் கற்றுத் தருவது என்பதாகாது; பல்லூடகத்தின் ஒவ்வொரு பரிமாணத்தையும் முழுமையாகக் கேட்டல், உணர்தல், பார்த்தல் போன்றவற்றின் அடிப்படையில் மொழியின் அடிப்படைத்திறன்களை வளர்ப்பதாகும். பல்வேறு கோணங்களில் பாடக்கருத்துக்களை மிக எளிமையாகச் சுலபமாக ஆர்வமூட்டும் வகையில் பயிற்றுவிக்கிறது பல்லூடகக் கல்வி. எனவே பல்லூடகத்தன்மையில் தயாரிக்கப்பட்டு ஆசிரியரின் துணையோடு நடைபெறும் மொழிக்கல்வி, மொழித்திறன்களை வேகமாக வளர்க்கஉதவும். பாடப்பொருளையும் எளிதில் கற்றுவிட முடியும்.

               எனவே தமிழில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள கணினிவழிக் கல்வி முறைகள் அனைத்தையும் இணையதளங்களில் உள்ள தமிழ் கற்பித்தல் முறைகளையும் மதிப்பீடு செய்யவேண்டும்.அதனடிப்படையில் நிறைகுறைகளைக் கண்டறிந்து குறைகளைக் களைந்தால், பிற மொழியினருக்குத் தமிழ்க் கற்பித்தல் சிறப்பாகச் செய்யஇயலும்.

    பல்லூடகம் வழி தமிழ்க் கற்றலும், கற்பித்தலும் 

         உலகில் மனித இனம் தோன்றியது முதல் இன்றுவரை பல்வேறு முறைகளில் கற்பித்தலும் கற்றலும் நிகழ்ந்து வருகின்றன.

    கல்வெட்டு, ஓலைச்சுவடிகளில் இருந்த தகவல், அச்சு இயந்திரக் கண்டு பிடிப்பிற்குப் பின்பு காகித ஊடகத்திற்கு வந்தது போன்று இன்று கணினிக் கண்டு பிடிப்பினால் மின்னணு வடிவில் வந்துள்ளது என்றும் இது காலத்திற்கேற்ற ஊடக மாற்றம் என்றும் கூறுவார் எல்.இராமமூர்த்தி. கணிப்பொறி மென்பொருள், பல்லூடகம் (Multimedia), இணையம் போன்ற தகவல்தொடர்புச் சாதனங்களின் கண்டுபிடிப்பு இன்று எல்லாத் துறைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருவது போன்று மொழிக்கல்வியிலும் இலக்கியக்கல்வியிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. கற்பித்தல், கற்றலில் புதிய புதிய முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உலக நாடுகள் பல கணிப்பொறி, பல்லூடகம்வழி அவர்கள் மொழியைக் கற்பிக்கவும் கற்கவும் பெரும் ஆர்வம்காட்டி வருகின்றன

               செம்மொழி என்ற உயர்வைப் பெற்றுவிட்ட தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியங்களையும் நவீனக் கணிப்பொறித் தொழில்நுட்பத்தின் வழிக் கற்பிப்பதும் கற்பதும் இன்று இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது. தமிழைக் கணிப்பொறி வழிக் கற்பதற்கு அரசும் தனியார் நிறுவனங்களும் தமிழில் அறிமுக நூல்கள், இதழ்கள், கட்டுரைகள், குறுந்தட்டுகள் போன்றவற்றை வெளியிட்டுள்ளன.

    இணையமும் தமிழும்

         உலகையே ஒரே கைக்குள் மாற்றிவிட்ட ஆற்றல்வாய்ந்த தொழில் நுட்பம்தான் இணையம். இணையத்தில் செய்திகள் படிக்கலாம், படங்கள் பார்க்கலாம், பாடல்கள் கேட்கலாம், அரட்டை அடிக்கலாம், பொழுது போக்கலாம், அறிவைப் பெருக்கலாம். உலகம் முழுவதிலும் உள்ள அனைத்துக் கணினிகளையும் ஒரே மின்னணு வலையில் சங்கிலிப் பிணைப்பில் ஒன்றாக்கிச் செய்யப்பட்டதுதான் இணையம்.

    இணையதளம்

               உலகில் முதல் இணையதளம் அர்பாநெட் ஆகும். தமிழில் முதல் இணையதளம் 1995- இல் தொடங்கப்பட்ட (Words home & Nation-Anthology of Singapore) வளையத்தில்தான் தமிழ் இணையம் வழக்கில் வந்தது.

    தமிழ் இணைய மாநாடு

               தமிழ் இணைய மாநாடு 1997-இல் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்திலும், இரண்டாவது தேசிய மாநாடு 1999-இல் சென்னையிலும், மூன்றாவது 2000-இல் சிங்கப்பூரிலும், நான்காவது 2001-இல் மலேசியாயாவிலும், ஐந்தாவது கலிபோர்னியாவிலும் ஆறாவது அண்ணாப் பல்கலைக்கழகம், சென்னையிலும்  நடைபெற்றது.

    இணையம் வழி தமிழ் கற்றலும் கற்பித்தலும்

               ஆசிரியரை மையமிட்டக் கல்வி மாணவரை மையமிட்டக் கல்வி என்ற இரண்டு முறைகளும் மாறி இணையத்தை மையமாக வைத்த கல்வி என்று பரவலாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இணையம்வழி தமிழ்படிக்கப் பல இணையதளங்கள் உள்ளன. குறிப்பிடத்தகுந்தது தமிழ் இணையப் பல்கலைக்கழகமாகும். 17-2-2001-இல் தொடங்கப்பட்டது. மூன்று முதன்மையான பணித்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 1.கல்வித்திட்டம் 2. மின்நூலகம் 3. கணித்தமிழ்ப்பணிகள். இங்கு பின்வரும் ஆறு நிலைகளில் கல்வி கற்பிக்கப்படுகிறது. 1.மழலைக்கல்வி 2.சான்றிதழ்க்கல்வி 3.பட்டையக்கல்வி 4.பட்டப்படிப்பு 5.பட்டமேற்படிப்பு ,6.ஆய்வு இவை தவிர பயணியர் தமிழ் சிறப்பு ஆய்வுத்திட்டங்களும் உள்ளன. இங்கு இணையம் வழித்தேர்வும் நடைபெறும். எந்த நாளிலும் எந்த நேரத்திலும் தேர்வு எழுதலாம். இணைய வழிப்பாடநூல் எழுதுவதும் தமிழ் இலக்கண இலக்கிய வடிவங்களைக் கற்பிப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஒலிப்படக்காட்சிவழி ஆக்கப்பட்டுள்ளன. தேவாரம் போன்ற பாடல்கள் ஓசை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மின்நூலகம்

               நூல்களைக் கணினியில் பாதுகாக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இதற்காகச் செயலாற்றி வருகிறது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிலையமும் இப்பணியை செய்து வருகிறது. தமிழகத்திலுள்ள கன்னிமாரா நூலகம், தேவநேயப்பாவாணர் நூலகம், தஞ்சைப் பல்கலைக்கழக நூலகம் இப்பணியை செய்து வருகின்றன. உலகில் அனைவரும் பயன்படுத்தத் தக்க விதத்தில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் செயலாற்றிவருகிறது. தொல்காப்பியம் முதல் இக்கால இலக்கியம் வரை ஏறக்குறைய 250-க்கும் மேற்பட்டநூல்கள் 100000 பக்கங்களுக்கு மேல் அமைந்துள்ளன. இலக்கண இலக்கியம், சமய இலக்கியம், சிற்றிலக்கியம், நீதிநூல்கள், சித்தர் இலக்கியம், 20ஆம் நூற்றாண்டு இலக்கியங்களான கவிதை, உரைநடை, புதுக்கவிதை போன்றவை இடம்பெற்றுள்ளன. ரோஜா முத்தையா செட்டியாரின் நினைவால் சிகாகோ பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இங்கு 100000 நூல்கள் உள்ளன. இணைய முகவரி w.w.w.lib.uchicago.edu/su/southasia/rmrl/html,[itir சென்னை நூலகம் 2006-இல் தொடங்கப்பட்டது. www.chennailibrary.com, விருபா டாட்காம் நூலகம் தமிழ் தொடர்பான ஏராளமான தகவல்கள் கிடைக்கும் நூலகம் டாட்நெட் இது ஈழத்து நூல்களையும் இதழ்களையும் வெளியிட்டு வருகிறது.

    ஒருங்குறியீட்டு முறை

               கணினிகளுக்கிடையே தமிழ் எழுத்துக்களைப் படைப்பதில் எழுத்துச் சிக்கல் இருந்துவந்தது.  20-ஆம் நூற்றாண்டில் ஒருங்குறியீட்டு (Unicode) முறை வந்ததால் இச்சிக்கல் தீர்ந்தது. யூனிக்கோடு முறையில் டாம்,  டாப் என்ற இருவகை எழுத்துருக்களும் தமிழ் 99 விசைப்பலகையும் பயன்படுத்தப்பட்டது. இருந்தாலும் இடப் பிரச்சனையால் தமிழை முழுமையாக வெளியிட முடியவில்லை. 256 – எழுத்துக்குறிகளில் 128 குறியிடங்கள் ஆங்கிலத்திற்குக் கொடுக்கப்பட்டன. கணினி வல்லுநர்கள் 8 பிட் முறையை 16 பிட்டாக மாற்றினார்கள். 65536 குறியிடங்கள் கிடைத்தன. எல்லா மொழி எழுத்துக்களையும் பயன்படுத்த முடியும். முதல் மாநாட்டில் TSCII உருவாக்கப்பட்டது. இரண்டாவது மாநாட்டில்……TANSCII உருவாக்கப்பட்டது. இதில் தமிழுக்கு 128-160 இடங்கள் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து 16 பிட் வளர்ச்சியால் தமிழுக்கு 2944முதல் 3072 ஒதுக்கப்பட்டன.  அவற்றில் 12 உயிர், 18 மெய், குறியீடுகள், கிரந்த எழுத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    [தொடரும்]

    ******

    கட்டுரையாசிரியர் பணிபுரிவது
    தமிழ்த்துறை
    கேரளப்பல்கலைக்கழகம்
    காரியவட்டம்
    திருவனந்தபுரம் 695 581

     

     

     

    Share
  • பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்

    -முனைவர் ஆறுச்சாமி. செ. 

    முன்னுரை

         இயற்கை எழில்கொஞ்சும் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்தான் பாலக்காடு மாவட்டம். தமிழகத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தைக் கிழக்கு எல்லையாகக் கொண்டு அமைந்துள்ளது இம்மாவட்டம்.

    பெயர்க்காரணம்

         மாவட்டத்தின் பெயர்க்காரணம் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அவை,“முற்காலத் தமிழர் தம் கடவுள் வழிபாட்டில் மரங்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. பாலை, நெல்லி, வேம்பு, காஞ்சிரம், பனை போன்ற மரங்களின் கீழ் அம்மனைப் பிரதிஷ்டை செய்து வழிபடும் வழக்கம் இருந்துள்ளது. காலப்போக்கில் அந்த அம்மனுடன் சேர்த்து அந்த மரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வழிபடும் நிலை உருவானது. அத்தகைய வழிபாட்டின் மூலம்தான் இம்மாவட்டத்திற்கு இப்பெயர் வந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. பாலக்காடு மாவட்டத்திலுள்ள ‘நெல்லியாம்பதி; எனுமிடத்தின் தென்பகுதியிலுள்ள வெங்கலமுடிக்கும் கல்யாணப் பந்தலுக்கும் இடையிலுள்ள வனப்பகுதியில் ‘பாலக்கடவம்மன் கோவில்’ எனும் பழம்பெரும் கோயில் ஒன்று உள்ளது. பாலை மரத்தின் கீழ் அமர்ந்த நிலையில் அங்கே அம்மன் அருள் பாலிக்கிறாள். அம்மன் அருளால் பிரசித்திப் பெற்ற அவ்விடத்தின் பெருமை பக்கத்திலுள்ள ஊர்களிலெல்லாம் பரவியிருந்தது. அதன் மூலமாகத்தான் பாலக்காடு மாவட்டத்திற்கு இப்பெயர் வந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.”

    பாலக்காடு மாவட்டத்தில் பறையர்இன மக்கள் வசிக்கும் இடங்கள்

         பாலக்காடு மாவட்டத்தில் திருத்தாலா, பட்டாம்பி, ஒற்றப்பாலம், ஸ்ரீகிருஷ்ணபுரம், மண்ணார்க்காடு, அட்டப்பாடி, பாலக்காடு, குழல்மந்தம், கொல்லங்கோடு, நெம்மார, ஆலத்தூர், மலம்புழா ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் பறையர்இன மக்கள் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தமிழ்பேசும் மக்களாக இருந்தவர்கள். மலையாள நாட்டுக் கலப்பால் இதில் பெரும்பான்மையான மக்களும் மலையாளம் பேசுபவர்களாக மாறிவிட்டனர்.”

    பெயர்க்காரணமும், விளக்கமும்

         கேரள மாநிலத்தில் வாழும் இவ்வின மக்களில் தமிழ்மொழி பேசுவோர் ‘பறையர்’ என்ற பெயரிலும், மலையாள மொழி பேசுவோர் , ‘புலையன்’, ‘சாம்பவன்’, ‘சாம்பன்’ போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் ‘பறையர்’, ‘ஆதிதிராவிடர்’ போன்ற பெயர்களிலும், தெலுங்கு தேசத்தில் ‘மாலா’, ‘மாடிகா’ போன்ற பெயர்களிலும், கர்நாடகாவில் ‘ஹோலியா’ என்ற பெயரிலும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

         “பறையன்’ எனும் சொல் ‘பறை’ எனும் தமிழ்ச்சொல்லினை அடியொற்றிப் பிறந்ததாகவும், இவ்வின மக்கள் முற்காலத்தில் திருமணங்களிலும், மற்ற விழாக்களிலும் பறையடிக்கும் தொழிலைச் செய்தவர்களாதலால் ‘பறையன்’ எனும் பெயரில் அழைக்கப்பட்டதாகவும் கால்டுவெல் கூறுகிறார். ஆர்.யு.ஸ்டுவார்டு எனும் அறிஞர் பழங்காலத் தமிழ் இலக்கிங்களில் ‘பறையன்’ எனும் சொல் பயன்படுத்தப்படவில்லை எனக் கூறுகிறார். ‘புலையன்’ எனும் சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என மேலும் அவர் உரைக்கிறார். கி.பி. 11ஆம் நூற்றாண்டில் வெளிவந்த திவாகர நிகண்டில் ‘புலையன்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெரிய புராணத்தில் வரும் நந்தனார் ‘புலையர்’ இனத்தவர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ‘புலையர்’ எனும் சொல்தான் பறையர்களின் முதல்பெயராக இருந்திருந்தது. ஆனால் மலையாளத்தில் இந்தச் சொல் இன்னும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்”.

         இவ்வின மக்களிடையே சாதித் தோற்றம் குறித்து வழங்கப்படும் கதைகளில் ‘மறையன்’ எனும் சொல்லிலிருந்துதான் ‘பறையன்’ எனும் சொல் உருவானதாகக் கூறப்படுகிறது. தவறு செய்துவிட்டு அதை மறைத்ததால் அவன் ‘மறையன்’ என்று ஒதுக்கப்பட்டான். காலப்போக்கில் அச்சொல் ‘பறையன்’ என மாறியது எனக் கூறப்படுகிறது. ‘பறை கொட்டுதல்’ இவர்களது குலத்தொழிலாக இருந்திருக்கிறது. பழங்கால விழாக்களில் இவ்வின மக்கள் பறையடிக்கும் தொழிலைச் செய்ததாக கால்டுவெல் கூறுகிறார். ஆய்வுக்களப் பகுதியில் சேகரித்த தரவுகளின்படி சமீபகாலம் வரை இவ்வின மக்கள் பறையடிக்கும் தொழிலைச் செய்திருந்தனர் என்பதை அறியமுடிந்தது. காலமாற்றத்தின் விளைவாகத் தற்போது பெரும்பான்மையான மக்கள் இத்தொழிலை விடுத்து வேறு தொழில்களை நாடிச் சென்றுவிட்டனர். ஆனால் இன்றும் சில பகுதிகளில் இத்தொழிலைச் செய்யும் மக்கள் இருப்பதையும் அறியமுடிந்தது.

         எனவே கால்டுவெல் கூறியதுபோல ‘பறை’ என்ற சொல்லிலிருந்தே ‘பறையன்’ என்ற சொல் உருவானதாகக் கொள்ளலாம்.

    பூர்வீக வரலாறு

         பாலக்காடு மாவட்டத்தில் வாழும் பறையர் இனமக்களின் மொழியும், வாழ்வியல் முறைகளும் தமிழ்மக்களைப் போலவே உள்ளது. அதனால் இவர்கள் தமிழ்நாட்டிலிருந்து இங்குக் குடியேறியவர்களாயிருப்பர் எனும் கருத்து நிலவுகிறது.

         1956க்கு முன்னர் கேரளாவின் பல பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைந்திருந்தன. 1956இல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளமும், தமிழ்நாடும் தனித்தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. அப்போது தமிழக எல்லைப்பகுதியாயிருந்த பாலக்காடு மாவட்டம் கேரள மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. அந்நிலையில் பாலக்காடு மாவட்டத்தில் வாழ்ந்த மக்களும் கேரள எல்லைக்குள் மாற்றப்பட்டனர். எனவே இவ்வின மக்களின் பூர்வீகம் தமிழகம் எனக் கொள்ளலாம்.    இக்கருத்தை உறுதிசெய்யும் விதமாகப் பறையர் இனமக்கள் பாலக்காடு மற்றும் அதையொட்டிய கோயம்புத்தூர் (தமிழ்நாடு) மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படுகின்றனர். அவர்களது கிளைப்பிரிவுகள் அவர்கள் வாழும் இடங்களின் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அவ்வாறு வரும் இடங்கள் கொங்கு வட்டாரத்தில் அமைந்துள்ள இடங்களின் பெயர்களாகவே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே இவர்கள் பூர்வீகமாகத் தமிழ் மக்களே. காலமாற்றத்தால் இவர்கள் கேரள எல்லைக்குள் வாழ்ந்து வருகின்றனர் எனக் கருத இடமுள்ளது.

         கேரள மாநிலத்தில் வாழும் இவ்வின மக்கள் பறையர், புலையர், சாம்பவர் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். இவர்களுள் பறையர் இனத்தார் தமிழையும், மற்றவர்கள் மலையாளத்தையும் தாய்மொழிகளாகக் கொண்டுள்ளனர்.

    சாதி குறித்த கதைகள்

         பறையர் சாதியின் தோற்றம் குறித்து கூறப்படும் கதைகளில் பறையனுக்கும் பார்ப்பானுக்கும் தொடர்பு இருப்பதாகக்கூறப்படுகிறது. ஆதியில் பறையன் பார்ப்பான் என்னும் சாதிகள் இல்லாமலிருந்தது. பின்னாளில்தான் இது உருவானதாகக் கூறப்படுகிறது.

               ‘பார்ப்பானுக்கு மூத்தவன் பறையன் 
               கேட்பார் சொல் கேட்டுக் கெட்டழிந்து போனான்’

    என்று ஒரு மரபுத் தொடர் இவர்களிடையே வழக்கத்தில் உள்ளது. இதில் பார்ப்பான் பறையனின் தம்பி என்றும், இருவரும் சகோதர உறவுடையவர்கள் என்றும் கூறப்படுகிறது. அவர்களுக்கிடையே உள்ள உறவு குறித்தும், பிரிவு ஏற்பட்டது குறித்தும் இவ்வினமக்களிடையே ஒரு கதை வழங்கப்படுகிறது. கள ஆய்வில் சேகரிக்கப்பட்ட அக்கதை பின்வருமாறு அமைகிறது.

         “முன்னாளில் ஓர் ஊரில் அண்ணன் தம்பி இருவர் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். இருவரும் காளிதேவிக்குப் பூஜை செய்யும் தொழிலைச் செய்துவந்தனர். பூஜை நேரத்தில் அங்கு காராம்பசு ஒன்று வரும். அதனை காளிக்குப் பலி கொடுத்து பூஜை செய்வர். பூஜை முடிந்ததும் ஒரு கோலால் அதன் மாமிசத்தைத் தொட்டதும் உடனே அப்பசு உயிர் பெற்றுச் சென்றுவிடும். இந்நிகழ்ச்சி நாள்தோறும் நடந்து வந்தது.

         இந்நிலையில் அண்ணனின் மனைவி கர்ப்பவதியாகிறாள். அவள் ஒருநாள் தன் கணவனிடம் “உங்களிடம் மாமிச வாடை அடிக்கிறதே! காளிக்குப் படைக்கும் இறைச்சியை நீங்களும் உண்கிறீர்களா? அப்படியானால் எனக்கும் கொஞ்சம் கொண்டு வாருங்கள்” என்று கேட்கிறாள். கர்ப்பவதியான அவளின் ஆசையைத் தட்ட முடியாத கணவன், பூஜை முடிந்ததும் சிறு துண்டு இறைச்சியை தன் நகக்கண்ணில் மறைத்துவைத்துக் கொண்டு வந்து மனைவிக்குக் கொடுக்கிறான். இதனை அவனது தம்பி மறைந்திருந்து பார்த்துவிடுகிறான்.

         மறுநாள் வழக்கம் போல பூஜை முடிந்து பசுவை எழுப்ப, அது எழவில்லை. இது கண்ட தம்பி “நீ இறைச்சியை மறைத்து எடுத்துச் சென்றதால் தெய்வக்குற்றம் ஆகிவிட்டது. அதனால்தான் பசு எழவில்லை” என்று கூறி ‘போடா மறையா’ என்று திட்டுகிறான். அவன் ஊர்ப்பஞ்சாயத்தினைக் கூட்டி அண்ணன் மேல் புகார் கூறுகிறான். அண்ணன் தன் தவற்றை ஒப்புக் கொள்கிறான். தவறுசெய்த அவன் கோவில் பூஜை செய்வதிலிருந்து விலக்கப்படுகிறான். ‘இனி கோவில் பூஜைகளை யார் செய்வது’ என ஊர்மக்கள் வினவ, ‘அதை என் தம்பி பார்ப்பான்’ என்கிறான் அண்ணன். ‘அப்படியானால் நீ என்ன செய்வாய்?’ என ஊரார் கேட்க, ‘இறந்த பசு உள்ளதே! அதன் மாமிசம் மற்றும் தோலைப் பயன்படுத்தி நான் தொழில் செய்து பிழைத்துக் கொள்வேன்’ என்கிறான் அண்ணன்.

         தன் நகக்கண்ணில் இறைச்சியை மறைத்து எடுத்து வந்து தவறு செய்ததால் தம்பி அண்ணனை ‘போடா மறையா’ என்று திட்டுகிறான். ‘மறையன்’ எனும் சொல்லிலிருந்துதான் ‘பறையன்’ எனும் சொல் உருவானதாகக் கூறப்படுகிறது. மேலும் தவறு செய்த அண்ணன் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுவதோடு அடிமைத்தொழில் செய்யவும் விதிக்கப்படுகிறான். இதன் காரணமாகத்தான், பறையர் இன்றைய கீழ்நிலை வாழ்வை அடைந்ததாகக் கூறப்படுகிறது.

         பஞ்சாயத்தில் ‘பூஜை வேலையை இனி தம்பி பார்ப்பான்’ என்று அண்ணன் கூறுகிறான். ‘பார்ப்பான்’ எனும் சொல்லிலிருந்தே ‘பாப்பான்’ எனும் சாதிப்பெயர் உருவானதாகக் கூறப்படுகிறது. அவர்கள் கோவிலில் பூஜைகள் செய்யும் பணியைச் செய்ததால் உயர் நிலையை அடைந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

         இறுதியில் அண்ணனும் தம்பியும் திரும்பிச் செல்கையில் அண்ணன் தம்பியிடம் இறந்து கிடக்கும் பசுவைத் தூக்க உதவுமாறு கேட்க தம்பியோ ‘நான் பூணூல் அணிந்து பூஜை செய்பவன். அதனால் இப்பசுவை நான் தொடமாட்டேன். மேலும் நீ ஓதுக்கப்பட்டவனாதலால் இனி நீ எனக்கு அடிமை’ என்று கூறி மறுத்து விடுகிறான். தன்னைக் காட்டிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தன்னை அடிமை என்றும் கூறியதால் அண்ணன் கோபமுற்று தம்பியைப் பார்த்து ‘இனி நமக்குள் எந்த உறவுமில்லை. என் வீட்டுக்கு நீ வரக்கூடாது. உன் வீட்டிற்கு நானும் வரமாட்டேன். நமக்குள் இனி எந்த உறவும் இல்லை’ என்று கூறிப் பிரிந்து செல்கிறான். இவ்வகையில்தான் ‘பார்ப்பான்’, ‘பறையன்’ எனும் இரு சாதிகள் உருவானதாகக் கூறப்படுகிறது. இப்போதும் ‘பறச்சேரிக்குள் பாப்பான் நுழையக் கூடாது’ எனும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.”

         கள ஆய்வில் சேகரிக்கப்பட்ட இக்கதையிலிருந்து பார்ப்பானும், பறையனும் சகோதர உறவுடையவர்கள் என்றும், சூழ்நிலை காரணமாகப் பிரிவினை ஏற்பட்டு இருவரும் உயர்சாதியும், கீழ்சாதியுமாக மாறிப் போயினர் என்றும் நம்பப்படுகிறது. பார்ப்பானுக்கும், பறையனுக்கும் உள்ள தொடர்பைக் கோவில் பூசாரி தொடர்புடையதாகவும், அண்ணன் தம்பி உறவுடையதாகவும் கூறும் வாய்மொழிக் கதை குறித்து எட்கர் தர்ஸ்டன் எனும் அறிஞர் கீழ்வருமாறு கூறுகிறார்.

    “ஒருஊர்ல அண்ணன் தம்பி இருவர் கோவிலில் பூசாரிகளாக இருந்தனர். அந்தக் கோவிலுக்குத் தினமும் இந்திரலோகப் பசு ஒன்று வரும். அந்த பசுவின் மடியிலிருநத்து இரத்தம் சொட்டும். அந்த இரத்தத்தை சாமிக்குப் படைத்துப் பூஜை செய்தனர்.    ஒருநாள் அண்ணன் மனைவி தன் கணவன் கையில் பட்ட இரத்தத்தைக் கண்டு காரணம் கேட்டாள் அவன் நடந்ததைக் கூற, அவள் அதை நம்ப மறுக்கிறாள். “நீ பசு இறைச்சியைத் தின்று வருகிறாய். அதை மறைக்கவே இவ்வாறு பொய்யுரைக்கிறாய். எனக்கும் சிறிது இறைச்சி கொண்டு வா” என்கிறாள். கார்ப்பவதியான அவளது ஆசையை அவனால் தட்ட முடியவில்லை. அன்று காலை தெய்வப்பசு வந்தவுடன் அதன் காம்பிலிருந்து சிறு முண்டு சதையை வெட்டியெடுத்துக் கோவிலில் வைத்து கறியைச் சமைத்துக் கொண்டு வந்து மனைவிக்குக் கொடுக்கிறான்.

         அண்ணனின் செய்கைகளை மறைந்திருந்து கண்ட தம்பி ‘அண்ணனும், அண்ணியும் மாட்டுக்கறி சாப்பிட்டனர்’ என்று பஞ்சாயத்தில் புகார் செய்தான். பஞ்சாயத்தார் அண்ணனை விசாரிக்க, அவன் குற்றத்தை ஒப்புக் கொள்கிறான். இதனால் அண்ணனைக் கோவில் வேலையிலிருந்தும், ஊரிலிருந்தும் ஒதுக்கி வைக்கின்றனர்.

         அண்ணன் அவ்வூரில் பிழைக்க வழியின்றி பக்கத்து ஊருக்குச் செல்கிறான். அங்கே ஊர்க்காவலனாக வேலை செய்கிறான். அவ்வூர்  வழக்கப்படி ஊர்க்காவலனே பறையடிக்கவும் வேண்டும். அண்ணன் பறையடித்தான். எனவே அவன் ‘பறைக்காவலன்’ எனப்பட்டான். இப்பெயா் காலப்போக்கில் ‘பறையன்’ எனும் சாதிப் பெயரானது. அதன்பின் அண்ணனும், தம்பியும் தொடா்பில்லாமல் ஆயினா்”.

         இது போன்றதொரு கதை கன்னியாகுமரி மாவட்டத்தில் வழங்கப்படுவதாக திரு. பொன்னீலன் அவர்கள் கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அக்கதை பின்வருமாறு,

         “ஒரு ஊர்ல அண்ணன் தம்பி ரெண்டு பேரு சந்தோசமா வாழ்ந்துட்டிருந்தாங்க. அண்ணன் விவசாயத்தக் கவனிச்சிட்டிருந்தான். தம்பி சிவபக்தன். சிவபூசையில நாட்டம் உள்ளவன். தினசரி மதிய நேரம் சிவனுக்குப் பூஜை செய்வான். பூசை தொடங்கும் நேரத்திலே இந்திரலோகத்திலுள்ள காமதேனு இறங்கி அவன்கிட்ட வந்திடும். தம்பிக்காரன் அத அடிச்சிக் கறி சமச்சி சிவனுக்குப் படைச்சிப் பூசை செய்வான். பூசை முடிஞ்சதும் கெண்டியில இருக்கிற தண்ணிய எடுத்து படைப்பு மேலே தெளிப்பான். கறியெல்லாம் திரண்டு காமதேனுவாகி, அது அப்படியே ஆகாயத்துக்குப் போய்விடும்.

         பல நாளும் இப்படியே நடந்துட்டிருந்தது. ஒருநாள் தம்பிக்கு ஏதோ அவசர வேலை. வெளியூர்போகணும். அண்ணனக் கூப்பிட்டு, “அண்ணா அண்ணா! இன்னிக்கு சிவ பூசையை நீ செய்யி. எந்தத் தவறும் வந்திடாம கவனமாச் செய்யி. சாயங்காலமா நான் திரும்பி வந்திடுவேன்” என்கிறான். தம்பி சொன்னபடியே அண்ணன் சிவபூசையைத் தொடங்குகிறான். எப்போதும் போல இந்திரலோகத்தில் இருந்து காமதேனு இறங்கி வருது. காமதேனுவ அடிச்சிக் கறி சமச்சி, தலை வாழை இலையில சிவனுக்குப் படச்சிப் பூசை செய்து முடிக்கிறான் அண்ணன். பக்கத்தில கும்புட்டுக்கிட்டு நிற்கிறா அண்ணனுடைய இளம் மனைவி. ஒன்பது மாச நிறைசூலி அவ. சிவனுக்குப் படச்ச கறி கமகமன்னு அவ மூக்கில அடிக்குது. நாக்கில எச்சில் ஊறுது. கணவன்கிட்ட தன் ஆசையைச் சொல்லுறா.

         “அம்மாடி, சாமிக்குப் படச்சது, நாம எச்சில்படுத்தக் கூடாது” என்கிறான் புருசன்காரன் கண்டிப்பாக. கொஞ்சமாவது கொடுன்னு கெஞ்சுறா அவ. நிறைசூலி, கேட்டதைக் கொடுக்காம இருந்தா பிறக்கிற குழந்தை சவலையாய்ப் போய்டுமே. வேற வழியில்லாம சம்மதிக்கிறான் அவன். “இத்துனூண்டு ஒரு துண்டு மட்டும் எடுத்து ருசி பாரு” என்கிறான். ஒரு துண்டுக் கறி எடுத்துச் சாப்பிட்டா அவ. அடேயப்பா, என்ன ருசி! இன்னொரு துண்டு எடுத்தா.

         இறுதியில் எப்போதும் போலக் கெண்டித் தண்ணியப் படைப்பு மேல தெளிக்கிறான் அண்ணன். கறி கறியாக் கிடக்கு. காமதேனு எந்திரிக்கல்ல. நடுங்கிப் போறான் அவன். என்ன செய்யிறதுன்னே புரியல. சாயங்காலம் ஆகுது. வெளியூர் போயிருந்த தம்பி திரும்பி வந்து பார்க்கிறான். படச்ச மேனிக்குக் கறியாய் கிடக்கு காமதேனு! நடுங்கிக்கிட்டே அண்ணன்காரன் நடந்ததைச் சொல்லுறான்.

    தம்பிக்காரனுக்குக் கோபமானா அப்படி ஒரு கோபம். “கேப்பார் சொல் கேட்டதாலே இன்று முதல் நீ கீழாய்ப் போனாய். இன்றுமுதல் நீ யாரோ, நான் யாரோ. இனிமேல் நான் உன்னோடு வாழமாட்டேன்” அப்படின்னு சொல்லிக்கிட்டு, அவனவிட்டுப் பிரிஞ்சி தனியாய் போயிட்டான்.    போனவன் அய்யனானான். இருந்தவன் பறையனானான்”.

         சிற்சில வேறுபாடுகளுடன் வழங்கப்படும் இக்கதைகளின் அடிப்படைக் கருத்து ஒன்றுதான். இக்கதைகள் பார்ப்பானுக்கும், பறையனுக்கும் இடையிலிருந்த தொடர்பை எடுத்துக் கூறுவனவாக உள்ளன. ‘பார்ப்பானுக்கு மூத்தவன் பறையன்’ எனும் பழமொழி இதை அடியொற்றி உருவானதாகும். “பிராமணரின் திருமண நிகழ்வில் அண்ணன் வரிசையில் பறையருக்கு வெற்றிலை பாக்கு, பழம் முதலியவை கொடுக்கும் வழக்கம் இருந்தது” என்று திரு. பக்தவத்சல பாரதி கூறும் கருத்து இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

    தொகுப்புரை

     பாலக்காடு மாவட்டத்தில் வாழும் பறையர்களின் பூர்வீகம் தமிழகமாகும். பழமையான தமிழ்க்குடிகள் நான்கனுள் ஒன்றாகப் பறையர் குடியும் இருந்திருந்ததை இலக்கியங்கள் மூலம் அறியமுடிகிறது. பழங்காலத்தில் இவ்வினம் மேன்மையான நிலையில் இருந்திருந்தது என்பதையும், காலமாற்றத்தினால் இன்றைய கீழ்நிலைக்கு மாறிப்போனது என்பதையும் இலக்கியங்கள் வாயிலாக உணரமுடிகிறது.

    பறையடித்தல் இவர்களின் பூர்வீகத்தொழிலாகும்.‘பறை’ எனும் சொல்லிலிருந்தே பறையன் எனும் சொல் உருவாகியிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பறையடித்தல் தொழில் அதிகமாகச் செய்யப்படுவதில்லை. இவர்கள் வேறு வேலைகள் செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். இவ்வினத் தோற்றம்குறித்து வழங்கப்படும் கதைகளில் பறையனும், பார்ப்பானும் சகோதர உறவுடையவர்கள் என்றும், சூழல் காரணமாக இருவரும் இருவேறு சாதிகளாக மாற்றப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

    இவ்வினத்தின் உட்பிரிவுகள் ‘கிளைகள்’ என்ற பெயரில் வழங்கப்படுகின்றன. அவர்கள் வாழ்ந்த இடங்களின் பெயரிலும், செய்த தொழில்களின் அடிப்படையிலும் இக்கிளைப் பெயர்கள் வழங்கப்படுகின்றன. வாழிடங்களின் அடிப்படையில் 24 கிளைகளும், தொழில் அடிப்படையில் 29 கிளைகளும் உள்ளன. பாலக்காடு மாவட்டத்தில் வாழும் இவ்வின மக்கள் ‘சங்குப்பறையர்கள்’ எனும் கிளையைச் சார்ந்தவர்களாவர். கேரளமண்ணில் வாழ்ந்தாலும் இவ்வினமக்களின் வாழ்வியல் நெறிமுறைகள் தமிழ்ப்பண்பாட்டைப் பின்பற்றியே அமைந்துள்ளன.

    *****

    பயன்பட்ட நூற்கள்

    1. Edgar Thurston, Castes and Tribes of Southern India.
    2. புறநானூறு

    Edgar Thurston, Castes and Tribes of Southern India

    1. Edgar Thurston, Castes and Tribes of Southern India
    2. Edgar Thurston, Castes and Tribes of Southern India
    3. செம்பான், தகவலாளி, பூலாம்பாறை, வாளையார், பாலக்காடு.
    4. புதிய பனுவல், மாத இதழ், ஜூலை 2010
    5. இது பெரிய எழுத்து, மாத இதழ், மார்ச் 2010
    6. புதிய பனுவல், மாத இதழ், ஜூலை 2010
    7. Edgar Thurston, Castes and Tribes of Southern India
    8. கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள்

    *****

    கட்டுரையாளர்
    உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை,
    கற்பகம் உயர்கல்விக் கலைக்கழகம்,
    கோவை.

     

     

     

    Share
  • கொழிஞ்சாம்பாறை வட்டாரத்தில் நிகழ்த்தப்படும் மூவரசர் நாடகம் – 1

    -முனைவர் பா. உமாராணி

         ஆதிகாலம் தொடங்கி இன்றுவரை மனிதன் நம்பிக்கைகளின் மீது தன் வாழ்வியல் பண்பாடுகளைக் கட்டமைத்து வருகின்றான். திருவிழாக்கள், பண்டிகைகள் போன்றவை இதன் அடிப்படையில் தோன்றியவையாகும். மனித சமூகம் தேடலில் முடிவு விடைகிடைக்காத செய்திகளுக்குத் தமக்கே உரிய பாணியில் ஒரு நம்பிக்கையை உருவாக்கிக் கொள்கிறது. தாங்கள் உருவாக்கிக் கொண்ட நம்பிக்கைகள் மற்றோரால் பின்பற்றப்படும் பொழுதும் ஏற்றுக்கொள்ளப்படும் போதும் அது சமூக அங்கீகாரத்துடன் செயலாற்றத் தொடங்குகிறது. அத்தகு நம்பிக்கைகள் காலம், இடம், எல்லைகடந்து விரிந்து செயலாற்றுபவையாக உள்ளன. அவ்வகையில் கேரள மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள கொழிஞ்சாம்பாறை வட்டாரத்தில் உள்ள  அத்திக்கோடு பகுதியில் நடைபெறும் மூவரசர் நாடகம் (மூன்று ராஜாக்கூத்து) என்ற நாடகம் கிறித்துவ மக்களின் நம்பிக்கைகள் சார்ந்து அமைந்துள்ளது.

    பண்டைய கேரளம்  

          பண்டைய காலத்தில் கேரளம் என்பது தமிழகத்தின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது. அதனைச் சேரநாடு என்று வழங்கி வந்ததுடன், அந்நிலத்தை ஆண்டவர்களும் தமிழர்களாகவே இருந்துள்ளனா். கால மாற்றத்தின் விளைவாக மொழிவாரியாகப் பிரிந்த கேரளம், பின்பு தனக்கென்ற ஒரு அடையாளத்தை நிலைநிறுத்திக் கொண்டபோதும் சமூகப் பண்பாட்டு அடிப்படையிலும், மொழி, இன அடிப்படையிலும் பெரிதும் வேறுபாடு இல்லாமல் தமிழகத்தின் சாயலைப் பெற்றே விளங்குகின்றது. அதுவும் எல்லையோரம் அமைந்துள்ள தமிழா் வாழ்பகுதிகளில் பழைய தமிழ்ப் பண்பாட்டின் எச்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன என்றால் அது மிகையில்லை.

         இந்திய எல்லையின் மேற்குக் கடலோரத்தை ஒட்டிய பகுதியாக கேரளம் விளங்குகின்றது. கேரளத்தின் கிழக்கே மேற்குத் தொடா்ச்சி மலையும், மேற்கே அரபிக்கடலும், moondruதெற்கே இந்துமகா சமுத்திரமும், வடக்கே கா்நாடகப் பகுதியும் அமைந்துள்ளது. இந்தியாவின் மேற்கு அரப்பிக்கடலோரத்தை ஒட்டித் தெற்கு வடக்காகப் பரந்து கிடக்கும் பகுதி கேரளப்பகுதியாகும். இதில் “மலையை ஒட்டிய பகுதிகளை மலைநாடு என்றும், கடலை ஒட்டிய பகுதிகளை கடல் நாடு என்றும், மத்தியப் பகுதியை இடைநாடு என்றும் அழைப்பார்கள்” (பாலக்காடு – சித்தூர் தமிழா் வாழ்வியல், மா. பேச்சிமுத்து) என்றும் குறிப்பிடுவா்.

         ”சேரளம்” என்ற சொல் மருவி கேரளம் (சேர் + அளம்) என்று வழங்கப்படுகிறது.  கடல் உள்வாங்கியதால் அதிகமாகச் சோ்ந்த நிலப்பகுதி ‘சேரளம்’ என்று அழைக்கப்பட்டது. வடமொழி அறிஞா்கள் சேரளத்தைக் ‘கேரளம்’ என்றே அழைத்தனா்.

    கேரளம் – புனைகதை வரலாறு

         திருமாலின் பத்து அவதாரங்களில் ஆறாவது அவதாரமாகக் கருதப்படும்  பரசுராமன் அவதாரத்தில் (பரசு என்ற வடசொல்லின் பொருள் மழு) பரசுராமன்  சத்திரியா்கள் மீது சினம்கொண்டு உலகத்திலுள்ள சத்திரியா்களில் ஆண்களை மட்டும் கொன்று அவா்களின் குருதியை ஐந்து பெரிய குளங்களில் தேக்கிவைத்தான். சினம் தணிந்து பரசுராமன் வருணன் பூமாதேவியோடு கன்னியாகுமரிக்குச் செல்கிறான். குமரி முனையிலிருந்து தன் கை மழுவை வடக்கு நோக்கிக் கடலில் எறிந்தான். (கோகா்ணத்திலிருந்து தெற்கே கன்னியாகுமரி நோக்கி மழுவை எறிந்தான் என்றும் சிலா் சொல்கிறார்கள்) அம்மழு 160 காதம் தொலைவிலுள்ள கோகா்ணம் வரையுள்ள கடல் பகுதியை உள்வாங்கிக் கரைப்பகுதியாக உருமாற்றியது. இக்கரைப்பகுதியே பரசுராமன் நாடு (கேரளம்) என்று புராணக்கதை கூறுகிறது. தான் உருவாக்கிய கரைப்பகுதியில் 64 நம்பூதிரி பிராமணா்களை அழைத்து வந்து பரசுராமன் குடியமா்த்தினான் என்ற செய்தியும் மக்களிடையே கதையாக ஊடுருவியுள்ளது. பரசுராமன் மழுவெறிந்து உருவாக்கிய கரைப்பகுதியின் எல்லையினை,

         “வடக்குத்தலம் பழனி வாழ்கீழ் செங்கோடு
         குடக்குத்திசை கோழிக் கோடாம் – கடற்கரையின்
         ஓரமது தெற்காகும் ஓரெண்பதன் காதம்
      சேரநாட்டு எல்லையெனச் செப்பு” (பாலக்காடு -சித்தூர் தமிழா் வாழ்வியல், மா. பேச்சிமுத்து) என்ற பழம்பாடல் குறிப்பிடுகிறது.

         கேரள மாநிலத்தில் பேசப்படுகின்ற மொழி மலையாளம். மலை + ஆழம் = மலையாழம் என்று பெயா் உருவாகி, பிறகு பேச்சு வழக்கில் மலையாளம் என்றாகி இருக்கலாம். மலையாள மொழி ஏறத்தாழ 12- ஆம் நூற்றாண்டுக்கு முன் தனிமொழியாகப் பிரிந்திருக்க வாய்ப்பில்லை. கேரள மக்களின் பேச்சு மொழியே தமிழ் என்ற பெயரில்தான் வழங்கி வந்துள்ளது. சான்றாக சமஸ்கிருதத்தில் செய்யப்பட்ட கேரள நூல்களுக்கு மக்களுடைய மொழியில் விளக்கம் தரும்போது தமிழ்க்குத்து என்று சொல்வதே வழக்கமாக இருந்துள்ளது. உதாரணமாக அமரகோசம் என்னும் சமஸ்கிருத அகராதியின் மலையாள மொழிபெயா்ப்பு ‘அமரம் தமிழ்க்குத்து’ என்றே அழைக்கப்பட்டது. மலையாள மொழியில் முதல் இலக்கண நூல் லீலாதிலம். இது கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என்கிறார்கள். இதில் முதல் சிற்பமாக அமைந்துள்ள பகுதியில் பாட்டு என்னும் இலக்கியத்திற்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது.  இப்பாட்டு என்பது தமிழ் நெடுங்கணக்கால் அமையப்பட வேண்டும் என்று இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது.

         “மலையாளத்திற்குத் தமிழ் அன்னையாக இருந்தாலும், அக்காவாக இருந்தாலும் சரி, இரண்டிற்குமுள்ள தொடா்பிற்கு மிக நெருக்கமானது என்பதில் ஐயமில்லை. சேரமான் பெருமாள் நாயனார், குலசேகர ஆழ்வார் போன்றோர் காலம்வரை தமிழ் சேர நாட்டில், அதாவது இன்றைய கேரளத்தில் அரசவை மொழியாக விளங்கியிருக்கிறது” (இந்திய மொழிகள் ஓர் அறிமுகம், ப.110) என்கிறார் பூரணச்சந்திரன்.

         மலையாள எழுத்து வட்டெழுத்து எனப்படுகிறது. இதுவும் பிராமி எழுத்துக்கின் ஒரு கிளையிலிருந்து உருவானதே என்று அறிஞர்கள் கருதுகின்றனா். மலையாளத்தில் சாதிக்கேற்ற பேச்சு வழக்கு நடை இருந்தாலும், பிராமண வழக்கில் மட்டும் சமஸ்கிருதக் கலப்பு மிகுதியாக உள்ளது. ஈழவா் போன்ற தாழ்ந்த சாதி மக்கள் பேசும் “பச்ச மலையாளம்“ என்பது பெரும்பாலும் தமிழ் போன்றே காணப்படுகிறது.

    கொழிஞ்சாம்பாறை – தமிழா் சமுதாயம்

         மலையாள மொழியும் கேரள மாநிலமும் தோன்றுவதற்கு முன்பு அங்கு வாழ்ந்தவா்கள் தமிழர்களாவா். வரலாற்றின் மூலம் இந்த உண்மைகள் தெளிவாக விளங்குகின்றன. தமிழகத்தின் அண்டை மாநிலமாகக் கருதப்படும் கேரளத்தில் வாழும் தமிழா்களில் பெரும்பாலோர் சென்றேறு குடிகள் அல்லா். காலங்காலமாக அவா்கள் அங்கேயே வாழ்ந்து வருகிறவா்கள் ஆவா். இவா்களுக்கான பண்பாட்டு அமைப்பானது தமிழகப் பண்பாட்டை ஒத்தியங்குகிறது.

         கேரள மாவட்டத்தில் ஒன்றான பாலக்காட்டில் சித்தூர் வட்டத்தின் வட கிழக்குப் பகுதியில் சித்தூர் ஒன்றியம் உள்ளது. சித்தூர் ஒன்றியத்தில் ஒன்று கொழிஞ்சாம்பாறை வட்டாரம். மலையாளத்தில் வட்டாரத்தை ‘பர்க’ என்று குறிப்பிடுகின்றனா்.

         கொழிஞ்சாம்பாறை (பர்க) வட்டாரத்தில் கொழிஞ்சாம்பாறை, வடகரப்பதி, எருத்தேன்பதி, நல்லேப்பிள்ளி என நான்கு பஞ்சாயத்துகளும் (64) வார்டுகளும் அடங்கும். கொழிஞ்சாம்பாறை வட்டாரத்தில் மக்கள் தொகையில் 50 விழுக்காட்டிற்கு மேல் தமிழா்கள் வாழ்கிறார்கள். இவா்கள் அனைவரும் சித்தூர் வட்டத்தின் பூர்வீகக் குடிமக்களாவா். கேரள மாநில அரசு சித்தூர் வட்டம் மற்றும் பாலக்காடு நகராட்சியைத் தமிழ் மொழிச்சிறுபான்மையினா் வாழும் பகுதியென்று அறிவித்துள்ளது.

         இப்பகுதியில் அனைத்து சாதியினரும் வாழ்ந்து வருகின்றனா். அதில் கிறித்துவ இன மக்கள் கொண்டாடும் மூவரசா் நாடகம் மிகவும் புகழ்வாய்ந்ததாகும். இது கிறித்துவ சமயச் சார்புடைய விழாவாக இருப்பினும் இவ்விழாவில் அனைத்து சாதியினரும் பங்கேற்று மகிழ்கின்றனா்.

    மூவரசா் நாடகம் (மூன்று ராஜாக்கூத்து)

         சவரியார் நாடகம், கலுகொந்தம்மாள் நாடகம், ஞான சவுந்தரியம்மாள் நாடகம், இஸ்தாக்கியார் நாடகம், மூவரசா் நாடகம் முதலிய பன்னிரெண்டு நாடகங்கள் போர்த்துக்கீசியா் காலத்தில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதற்காகவும், மதமாற்றம் செய்வதற்காகவும் தமிழில் இயற்றப்பட்டது. இதன் பாடல்கள் ஓலைச் சுவடியில் உள்ளது. இவற்றில் பல காணாமலும் போயின. இவ்வோலைச் சுவடிகளைத் திரட்டி அதில் உள்ள கூத்துக்களை நூலாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார் ஜோசப்பெஸ்கி என்பவா். அவா் இயற்றிய ‘புனித பதுவை அந்தோணியார் வாழ்வு, ஆன்மீகம் மற்றும் நாடகம்’ என்ற நூலிலிருந்து தெரிந்து கொண்டதும், நேரில் கள ஆய்வின் மூலமும் செய்திகள் சேகரிக்கப்பட்டு பதிவுசெய்யபட்டதுமான மூவரசா் நாடகம் குறித்த செய்திகளைக் காண்போம்.

         ஆண்டு தோறும் ஜனவரி 6-ஆம் நாள் இரவு கொழிஞ்சாம்பாறை அத்திக்கோடு அந்தோணியார் திருவிழாவில் ஆலய அங்கணத்தில் வைத்து மூவரசு நாடகம் நடிக்கப்படுகிறது. இந்நாடகம் 157 ஆண்டுகளாகத் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

         இந்நாடகத்தை எழுதியவா் உபதேசி சபரிமுத்துவின் மகன் புலவா் ஆரோக்கியசாமி வாத்தியார். போர்த்துகீசியரின் காலத்தில் அத்திக்கோடு தேவாலயத்தைக் கட்டியவர் என்று நம்பப்படும் அருள் திரு. அருளானந்த சுவாமிகள் இந்நாடகத்தை இயற்றத் துணை செய்தவா். ஆரோக்கியசாமி வாத்தியார் பாண்டியநாடு ஆயக்குடியில் பிறந்தவா். இச்செய்தியை,

         “பாருமென்றுரைப் பதற்குத் தமிழ்த்தாயிரும்
    பாண்டிய நாட்டு
    ஆய்குடியோன் பணிமா தாவின்”
    என்று கூறுவிதமாக நாடகப் பாயிரப் பாடல் அமைந்துள்ளது.

    நாடகத்தின் கதை

         “புதிய ஏற்பாட்டில் கூறப்படும் இயேசுவின் பிறப்பினை moondru1ஒட்டி முதல் 13 நாட்கள் நடைபெற்ற 23 செய்திகளே இந்நாடகத்தின் கருப்பொருளாக அமைந்துள்ளது. கிறிஸ்து பிறந்திருப்பது உண்மையா என்று அறிய விரும்புகிறான் ஏரோது மன்னன். வேத விற்பன்னா்களை அழைத்துக் கேட்கிறான். அப்போது அவா்களும் அதுகுறித்த செய்தியை அறிய விழைகிறார்கள். யேசு பெத்தலகேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தபோது வானத்தில் மூன்று அதிசய விண்மீன்கள் தோன்றுகின்றன. கீழ்த்திசையில் உள்ள மூன்று அரசர்கள் விண்மீனால் வழிகாட்டப்பட்டு பெத்தலகேம் மாட்டுத் தொழுவத்தை வந்து அடைகிறார்கள். குழந்தை இயேசுவைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறார்கள். இந்நாடகத்தில் கிறித்துவ மதக்கதை இடம்பெறுகின்றது. இந்நாடகம் பிறமதத் தெய்வங்களை விமர்சனம் செய்கின்றது.

    நடிகா்கள் நாடக ஒப்பனை

         மூவரசா் நாடகத்தில் நடிப்பவா்கள் பெரும்பாலும் குடும்பவழி வந்தவா்களான பண்டிதக்காரா் வீடு, முரடன் வீடு, கொட்டில்காரன் வீடு, மரியன் வீடு போன்ற குடும்பத்தைச் சார்ந்தவா்களே ஆவா். மூவரசா் நாடகத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஏரோது அரசா். மரக்கட்டைக் கிரீடம், அரைஞாண் மரத்தாலி, தோடு, பெரிய மீசை முதலிய ஒப்பனைகளை அரசனுக்குச் செய்கின்றனா். பெரும்பாலும் கதகளி நாட்டியத்தின்போது அணியப்படும் கிரீடத்தைப் போன்றே ஒரு கிரீடத்தை மணிமுடியாக அணிகிறார்கள்.

         மூன்று அரசா்களை மாட்டு வண்டியில் அமரச் செய்து, அத்திக்கோடு வெந்தப்பாளையம் ஊரின் மூன்று திசைகளிலிருந்தும் அந்தோணியார் கோவில் வளாகத்திற்கு அழைத்து வருவது நாடக வழக்கம். இக்காட்சி வீதி நாடகப்பாணியை ஒத்து இருப்பதால் காண்பவா்கள் அனைவரையும் கவருகிறது.

         இரவு எட்டு மணியளவில் தோ் நிகழ்வுகள் தொடங்கப்படுகிறது. அச்சமயத்தில் நாடகம் அரங்கில் நிகழ்த்திக்காட்டப்படுகின்றது. ஒரு நாள் மட்டும் நிழ்த்தப்பெறும் இக்கூத்தில் குறிப்பிட்ட குடும்பத்தினா் மட்டுமே நாடக உறுப்பினா்களாக இருக்கின்றனா். பிறா் நாடக வேடம் தரிக்க அனுமதியில்லை. தோ் நிகழ்வின் போது பயன்படுத்தும் வண்டியையும், மாட்டையும் நோ்ச்சிக் கடன்களுக்காகத் தருபவா்களும் உள்ளனா். இதன் மூலம் நோயிலிருந்து விடுபட்டு வாழலாம் என்ற நம்பிக்கையும், வேளாண்மை மற்றும் தொழில் ஆகியவற்றில் செழுமையடையலாம் என்ற நம்பிக்கையும் இருந்து வருகின்றது.

         இவ்விழாவைக் காண்பதற்காக கிறித்துவா் மட்டும் அல்லாமல் அனைத்துப் பிரிவினரும் சமயச்சார்பற்று கலந்து கொள்வதைக் காணமுடிகிறது. இதன் நிழல்படம் கீழே சோ்க்கப்பட்டுள்ளது.

    ******

    சான்றுகள்

    1. புனித அலேசியார் நாடகம், Dr.A. Joseph Besky, Center  For Chiristian Research (CCR), St. Jesoph’s College (Autonomous), Trichy, First Edition-2013.
    2. புதிய சுல்தான்பேட்டை மறைமாவட்ட வரலாறு, Dr. A.Joseph Besky, LIVIA ARAN ANBHAGAM, Athicode, Chittur, Palakkad, kerala. First Edition-2014.
    3. இந்திய மொழிகள் ஓர் அறிமுகம், பூரணச்சந்திரன்.
    4. பாலக்காடு -சித்தூர் தமிழா் வாழ்வியல், மா. பேச்சிமுத்து.

    ******

    கட்டுரையாளர்,
    உதவிப்பேராசிரியர்,
    கற்பகம் உயா்கல்விக் கலைக்கழகம்,
    கோயம்புத்தூர்-21.

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (249)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக அஜீத் பாய் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    அஜித் பாய் அமெரிக்க தகவல் தொடர்புத்துறை (எப். சி சி) தலைவர் ஆவார். இப்பதவியை வகிக்கும் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கர் எனும் பெருமைக்கு உரியவர். இவரது பெற்றோர் கொங்கணி மொழி பேசுவோர். அஜீத் பாய் பிறந்த ஊர் நியூயார்க்.

    வக்கீல் படிப்பில் தேர்ச்சி பெற்ற அஜீத் பாய் அமெரிக்க டிபார்ட்மெண்ட் ஆஃப் ஜஸ்டிஸில் பணிபுரிந்தார். அதன்பின் 2001ல் வெரிசான் கம்பனியில் சேர்ந்தார். அதன்பின் எப்.சி.சியில் பல்வேறு பதவிகளை வகித்தார். இவரது நிர்வாகதிறமையை பாராட்டி ஒபாமா 2012ம் ஆண்டில் எப்.சி.சி கமிட்டியில் உறுப்பினராக ஆக்கினார். அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதும் அஜீத் பாயை எப்.சி.சி தலைவராக நியமித்தார். இந்த பெருமைமிகு பதவிக்கு நியமிக்கடும் முதல் இந்தியராக அஜீத் பாய் ஆனது அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    சுதந்திர பொருளாதார கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட அஜீத் பாய் அரசு இணையத்தில் தலையிடுவதை கடுமையாக எதிர்த்துவந்தார். ஒபாமா அரசு கொண்டு வந்த நெட் நியூட்ராலிட்டி விதிமுறைகள் இணையத்தில் அரசின் தலையீட்டை அதிகரித்து, சுதந்திர இணையம் உருவாவதை தடுக்கும் என நம்பினார்.

    இன்று அஜீத் பாய் வெளியிட்ட அறிவிப்பில் இணைய நெட் நியூட்ராலிட்டி விதிகள் முழுமையாக இரத்து செய்யபடும் என அறிவித்துள்ளார். பொருளாதார நிபுணர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், கருத்துரிமை ஆர்வலர்கள் என பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்து அஜீத் பாயை பாராட்டி வருகிறார்கள்.

    இணையம் சுதந்திரமாக இருப்பதே அனைவரின் கருத்துரிமையையும் உறுதி செய்யும் என்பதால் அஜீத் பாய் எடுத்துள்ள இந்த முடிவு உலகெங்கும் உள்ள கருத்து சுதந்திர ஆர்வலர்களின் சுதந்திரத்தைக் காக்கும் விதத்தில் இருக்கிறது. இன்று நெட் நியூட்ராலிட்டி சட்டம், நாளை வேறு ஒரு சட்டம் என இணையத்தை அரசு நசுக்க முற்படுவது கருத்துரிமைக்கு எதிரான செயலாகும்.

    அஜீத் பாயின் இந்த வெற்றிகரமான முடிவும், அவரது வாழ்வின் வெற்றிக்கதையும் உலகெங்கும் உள்ள இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என நம்பி வல்லமை  அஜீத் பாயை பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • மொழிபெயர்ப்பாளர் மாநில மாநாடு!

    மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் மொழிபெயர்ப்பாளர் மாநில மாநாடு!  பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு

    மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் ஈரோடு யு.ஆர்.சி பள்ளி அரங்கில் 12.11.2017 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பேரவையின் மாநிலத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமையேற்றதோடு பேரவையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து உறுப்பினர்களிடையே விளக்கிப் பேசினார்.

    காலை 10 மணிக்குத்  தொடங்கி மாலை 7 மணிவரை நடைபெற்ற இக்கூட்டத்தில் 15 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :

    • மக்கள் சிந்தனைப் பேரவையின் 20-ஆம் ஆண்டு நிகழ்வுகளை வருகிற 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஓராண்டு முழுக்க பல வடிவங்களில் தமிழகமெங்கும் நடத்துவது
    • பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் மொழிபெயர்த்து புதிய நூலாக்கப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள மொழிபெயர்ப்பாளர்களை ஒருங்கிணைத்து மாநில அளவில் மொழிபெயர்ப்பாளர் மாநாட்டை திருச்சியில் 2018-இல் முழுமையான தயாரிப்புகளுடன் நடத்துவது எனவும் இதில் தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களையும் பங்கேற்கச் செய்வது
    • தமிழகமெங்குமுள்ள இளம் பேச்சாளர்களை ஒருங்கிணைத்து தமிழக இளம் பேச்சாளர் மாநாடு ஒன்றினை ஈரோட்டில் நடத்துவது, இதில் தமிழ் மாநிலத்திலுள்ள ஏற்கனவே பேச்சுத் துறையில் ஈடுபாடும் ஓரளவு பயிற்சியும் கொண்ட முப்பது வயதிற்கு உட்பட்ட இளம் பேச்சாளர்களை இம்மாநாட்டின் பிரதிநிதிகளாகப் பங்கேற்க வைப்பது.
    • வருகிற டிசம்பர் 11-ஆம் தேதி ஈரோட்டில் பாரதி விழாவை சிறப்பாக நடத்துவது, இந்நிகழ்வில் தமிழறிஞர் சிலம்பொலி    சு. செல்லப்பன் அவர்களுக்கு பாரதி விருது வழங்குவது, கவிஞர் தமிழ்ஒளியின்  திருவுருவப் படத்தைத் திறந்து வைப்பது
    • மக்கள் சிந்தனைப் பேரவையை மாநில அமைப்பாக விரிவடையச் செய்வது,  ஏற்கனவே அமைப்புக்கள் உருவாகியுள்ள மாவட்டங்களில் பேரவையின் நடவடிக்கைகளை மேம்படுத்தவது, இதுவரை பேரவை உருவாகாத மாவட்டங்களில் உடனடியாக பேரவையின் மாவட்ட அமைப்பை உருவாக்க நடவடிக்கைகள் எடுப்பது. எதிர்வரும் காலங்களில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தை அடுத்தடுத்த மாவட்டங்களில் நடத்தி பேரவையின் மாநிலத் தன்மையை மேம்படுத்துவது. உள்ளிட்ட பல தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக மாநிலச் செயலாளர் ந.அன்பரசு வேலையறிக்கை வாசித்தார்.  பொருளாளர் க.அழகன்  வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்தார். துணைத்தலைவர் பேராசிரியர்                கோ.விஜயராமலிங்கம், துணைச் செயலாளர் ஜா. தினகரன் உள்ளிட்ட மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

    T.Stalin Gunasekaran,

    President,
    Makkal Sinthanai Peravai,
    A – 47, Sampath Nagar,
    Erode – 638011.
    Ph No : 0424  – 2269186.
    Share
  • கடன் தீர்க்கும் ஹோமத்துடன் பிணி தீர்க்கும் யாகங்கள்

    தன்வந்திரி பீடத்தில்
    கடன் தீர்க்கும் ஹோமத்துடன் பிணி தீர்க்கும் யாகங்கள்

    நாம் நம் வருமானத்திற்கு மேல் அதிகமாக செலவுகள் செய்து வரும்பொழுதும் தேவையற்ற ஆடம்பர பொருட்களை வாங்குவதாலும், வருமானத்திற்கு வழிவகை இல்லாததாலும், ஜாதக ரீதியாக பூர்வ புண்ய பலன் சரியாக அமையாததாலும் நமக்கு கடன் சுமை உருவாகிறது. அதனால் மன நோய்க்கும் உடல் நோய்க்கும் ஆளாகிறோம்.

    மேலும் கடனில் தேவை, தேவையற்றது என இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை திருமணம், வீடு, மனை வாங்குதல், நல்ல தொழில் அமைத்தல், குழந்தைகளின் கல்வி போன்ற நல்ல காரியங்களை நடத்த வாங்கும் கடன் சுப கடன் என்றும் , விபத்து, நோய்கள் , ஆடம்பர மோகம், தேவையற்ற பழக்க வழக்கங்கள் போன்றவைகளுக்காக வாங்கும் கடன்கள் அசுப கடன் எனலாம்.

    கடன் வாங்கும் பழக்கம் என்பது போதைக்கு அடிமையாவது எனலாம்.கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினானே இலங்கை வேந்தன் என்பது ஆன்றோர் வாக்கு. கடன் ஒருவனை தேவையற்றவைகளில் சிக்கவைத்து ஆரோக்யத்தையும் குடும்ப சந்தோஷத்தையும் அழித்துவிடும். எனவே, கடனே இல்லாமல் வாழக்கையை அமைத்துக் கொண்டு வாழ்வதுதான் இன்றைக்கு சிறப்பானது.

    அதிகப்படியான கடன் பெற்றவர்கள் அதிலிருந்து மீண்டுவர ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ லக்ஷ்மி குபேரர், ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர், மஹா லக்ஷ்மி, ஸ்ரீ உமா மஹேஸ்வரர் போன்ற தெய்வங்களை உரிய நாட்களில் முறையாக வழிபாடு செய்தால் ருணம் எனும் கடன் நிவர்த்திக்கு வழி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    கடனுக்கான காரணம் தீய பழக்க வழக்கங்கள், ஜாதகர்களுக்கு நடைபெறும் தசாபுக்திகள், பித்ரு தோஷங்கள், தெய்வ குற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்கள் உண்டு எனலாம். இவற்றை மனதில்கொண்டு மக்கள் கடன் எனும் இருளில் இருந்து நீங்கி ஆரோக்யத்துடன் சகல ஐஸ்வர்யமும் பெறவும், சௌபாக்யங்கள் கிடைக்கவும், சாபங்கள் அகலவும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 24.11.2017 வெள்ளிக் கிழமை திருவோணம் நட்சத்திரம், வாஸ்து நாள், ஷஷ்டி விரதம் கூடிய நாளில் காலை 10.00 மணியளவில் மன நோய், உடல் நோய் நீங்க ஸ்ரீ தன்வந்திரி ஹோமமும், கடன் பிணி நீங்கும் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் ஹோமத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-13 – 18

    து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
    அலைபேசி : 9444939156.

    மீண்டும் தஞ்சைக்கோயிலின் ஓரிரு கல்வெட்டுகளைக் காண்போம்.

    இவை, கோயிலின் சுற்று மாளிகையின் தூண்களில் இருப்பன. விமானத்தின்
    அதிட்டானப்பகுதியில் உள்ள கல்வெட்டுகளைக்காட்டிலும் இவற்றில் அழகும் திருத்தமும் குறைவு.

    கல்வெட்டு-1

    பதினாறு வரிகள் கொண்ட இக்கல்வெட்டு, தூணின் ஒரு முகத்தில் உள்ளது. கொடையாளி, இறைவரின் செப்புத்திருமேனி ஒன்றையும் அதன் பீடத்தையும் அளித்து, உருத்திராக்கம் (ருத்ராக்‌ஷம்) ஒன்றைப் பொன்கொண்டு பொதித்தளித்திருக்கிறார்.

    கல்வெட்டின் படத்தை உருப்பெருக்கம் செய்து எழுத்துகளைச் சற்றே
    ஊன்றிப்பார்த்துப் படிக்க. கல்வெட்டின் பாடம் கீழே தரப்பட்டுள்ளது.

    தஞ்சை-தூண் கல்வெட்டு-1

    1 விரல் நீளத்து எ
    2 ண் விரல் அகலத்
    3 து எண் விரலுசர
    4 த்து பத்மத்தோடு
    5 ங்கூடச்செய்த பீ
    6 டம் ஒன்று இவ
    7 னே இவர்க்குக்
    8 குடுத்தன ருத்ரா
    9 க்‌ஷம் ஒன்றிற் கட்
    10 டின பொன் ஏழு ம
    11 ஞ்சாடி உட்பட ருத்ரா
    12 க்‌ஷம் ஒன்று நிறை அ
    13 ரைக் கழஞ்சே நா
    14 லு மஞ்சாடியுங் கு
    15 ன்றிக்கு விலை காசு
    16 ஒன்று

    குறிப்பு:
    1 செப்புத்திருமேனியின் நீள,அகல, உயரங்கள் தரப்பட்டுள்ளன. உசரம்=உயரம்
    (யகர, சகர மயக்கம்.)
    விரல்-பெருவிரல் அளவு.
    12 விரல்=ஒரு சாண்.

    2 பொன்னின் நிறை கழஞ்சு, மஞ்சாடி ஆகிய அளவுகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
    மஞ்சாடி= இரண்டு குன்றிமணி எடை
    20 மஞ்சாடி= ஒரு கழஞ்சு

    3 நீல வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகளைக்குறிப்பன.
    ( பத்ம பீடம், ருத்ராக்‌ஷம்)

    கிரந்தம்

    கல்வெட்டு-2

    இதுவும் ஒரு தூண் கல்வெட்டு. இருபத்து நான்கு வரிகளை
    உடையதாய் முழுச்செய்தியைச் சொல்லும் கல்வெட்டு. ஆறு படங்களாகக்
    காட்டப்பட்டுள்ளது. எழுத்துகளைப்படிக்கும் பயிற்சிக்கு உகந்தது எனக்கருதுகிறேன். முதலாம் இராசராசனின் அதிகாரிகளுள் புரவுவரித் திணைக்களம் என்னும் துறையில் வரிப்பொத்தக நாயகன் என்னும் பதவியிலிருக்கும் காஞ்சன கொண்டையன் என்பவன் தஞ்சைக்கோயிலின்
    சிறு தேவதைகளுக்கான பரிவாரக்கோயிலில் கணபதிப்பிள்ளையார்க்கு
    இருபத்தொன்பது பலம் நிறையுள்ள வெண்கலத் தளிகையைக் கொடையாக
    அளித்த செய்தியைக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

    முதல் படம்:

    Kalvettu73

    பாடம்:
    ஸ்வஸ்திஸ்ரீ உடை
    யார் ஸ்ரீ ராஜராஜீ
    ச்0வரம் உடையா

    இரண்டாம் படம்:

    Kalvettu74

    பாடம்:
    ர் கோயிலில் பரி
    வாராலயத்துப்
    பிள்ளையார் க3ண
    பதியார்க்கு உடை

    மூன்றாம் படம்:

    Kalvettu75

    பாடம்:
    யார் ஸ்ரீ ராஜராஜ
    தே3வர் பணிமக
    ன் புரவுவரி திணை

    நான்காம் படம்:

    Kalvettu76

    பாடம்:
    க்களத்து வரிப்பொ
    த்தக நாயகன் பா
    ண்ட்3ய குலாச0நி
    ள நாட்டுப் புறக்கிளி
    யூர் நாட்டுக் காமத

    ஐந்தாம் படம்:

    Kalvettu77

    பாடம்:
    மங்கலமுடையா
    ன் காஞ்சன கொண்
    டையன் உடையார் ஸ்ரீ
    ராஜராஜதே3வர்க்கு யா

    ஆறாம் படம்:

    Kalvettu78

    பாடம்:
    ண்டு இருபத்தொன்ப
    தாவது வரை குடுத்த
    வெண்கலத்தளிகை
    ஒன்று நிறை இருப
    த்தொன்பதின் பலம்

    குறிப்பு:
    1 நீல வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகளைக்குறிப்பன.
    2 புரவுவரித் திணைக்களம் – அரசு வருவாய்(வரி)த்துறை.
    3 வரிப்பொத்தக நாயகன் – அரசு வரிக்கணக்குப்
    பதிவேட்டுத்துறை மேலலுவலர்.
    4 தளிகை – உண்கலம் (தட்டு).
    5 பலம் – ஓர் எடை.

    கிரந்தம்-2

    து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
    அலைபேசி : 9444939156.

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 14

    படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

    [1] கீழ்வரும் கல்வெட்டு உடுமலை அருகிலுள்ள கடத்தூர் மருதீசர் கோயிலில் உள்ள தூண் கல்வெட்டு. தூணின் மூன்று சதுரங்களில் மூன்று பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. எளிமையான ஒரு கல்வெட்டு. ஒளிப்படத்தை அவரவர் தேவைக்கேற்பப் பெரிதாக்கி எழுத்துகளைப் படித்துப்பார்க்க.

    தூணின் முதல் சதுரத்தில் கல்வெட்டுப்பகுதி

    P1080081

    தூணின் முதல் சதுரத்தின் பாடம்:

    ஸ்வஸ்திஸ்ரீ
    வீரசோழ தே
    வற்கு யாண்
    டு பத்தொன்
    பதாவது

    தூணின் இரண்டாம் சதுரத்தில் கல்வெட்டுப்பகுதி

    P1080082

    தூணின் இரண்டாம் சதுரத்தின் பாடம்:

    வெள்ளப்ப நா
    ட்டுத்தேவி
    யர் சேரியில்
    கோளந் இரா
    மநாந அழ(கி)
    ய மாணிக்கப்
    பல்லவரைய

    தூணின் மூன்றாம் சதுரத்தில் கல்வெட்டுப்பகுதி

    P1080083

    தூணின் மூன்றாம் சதுரத்தின் பாடம்:

    நேந் இத்தூண்
    செய்வித்தேந்

    ——————————————————————————————————————————————-
    து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
    அலைபேசி : 9444939156.

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 15

    படிக்கும் பயிற்சியில் மேலும் ஓரிரு கல்வெட்டுகள் கீழே;

    Rajarajan pallipadai kalvettu

    [1] இராசராசன் பள்ளிப்படைக் கல்வெட்டு.

    கல்வெட்டின் பாடம்:

    ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபு4வந சக்ரவத்திகள் ஸ்ரீ கு
    லோத்துங்க சோழதேவற்கு யாண்டு நாற்ப
    த்திரண்டாவது ஸ்ரீ சிவபதசேகரமங்கலத்து
    எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவராந ஸ்ரீ
    சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்
    பெரியதிருமண்டபமுன்…டுப்பு ஜீ(ர்)
    நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி
    த்தார் பிடவூர் பிடவூர் வேளான் வேளிர்
    அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்
    யகம் செய்துநின்ற ஜயசிங்ககுல கா
    வளநாட்டு குளமங்கல நாட்டு சா
    மங்கலத்து சாத்தமங்கலமுடை
    ன நம்பிடாரன் நாடறிபுகழுன் இ
    டன் விரதங்கொண்டு செய்தார் இ
    (ர்) பிடார்களில் ராஜேந்த்ரசோழனு
    (ட) நாயகநான ஈசாநசிவரும் தேவ
    யமந அறங்காட்டிப்பிச்சரும் ||-

    குறிப்பு: பச்சைவண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.
    ஜீர்நித்தமையில்-அழிவு ஏற்பட்டமையால்

    [2] உடுமலை-கடத்தூர் மருதீசர் கோயில் கல்வெட்டு:

    P1080078

    கல்வெட்டின் பாடம்:

    1. இருதூணி குறுணிக்கும் பூவில் எண்கல்லு பாட்டம் அளந்
    2. ற்கும் குறுணி இரு நாழி அரிசி அமுதுபடி சென்றுவ(ரு)
    3. . த்திரத்துக்கு ஆறுநாழி சோறும் இட்டு வருவ
    4. சோழபட்டனும் கைக்கொண்ட அச்சு இரண்(டு)

    [3] உடுமலை-கடத்தூர் மருதீசர் கோயில் கல்வெட்டு:

    கல்வெட்டின் பாடம்:

    கும் கோவணப்பொழிக்கு தெற்கும் இந்நான்கெல்லைக்கு 20 – வி. இ
    நாச்சியாற்கும் வினாயகப்பிள்ளையாற்கும் க்ஷேத்திரபாலப்பிள்(ளையா)ற்
    சனி எண்ணைக்காப்புக்கு வந்துசேவித்த ஆடுபாத்திரம் பாடு(பா)த்
    டைய சிவபிராமணன் சைய்வச்சக்கரவத்தியும் விக்கி
    ணை சாத்திவருவோம்மாகவும்
    குறிப்பு: பச்சைவண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.

    —————————————————————————–

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 16

    கல்வெட்டு படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு தரப்பட்டுள்ளன. வழக்கம்போல், படங்களை உருப்பெருக்கம் செய்து படியுங்கள். எழுத்துகளை அதன் வடிவத்திலேயே (பார்வைப்படி) எழுதிப்பார்ப்பது நல்ல பயன் தரும்.

    கல்வெட்டு – 1

    Copy of P1040100

    கல்வெட்டின் பாடம் :

    ம் குமுதகத்திலும் வெட்டிக்கிடந்த
    ட்டிஎடுத்து சுந்தரபாண்டிய தே
    த படியே ஆற்றூருடையான்
    ழதேவற்கு யாண்டு 35 வது கெ
    றம் உடைய நாயனார் கோயிலில்
    ல் நாள் ஒன்றுக்கு சந்தி ஒன்றுக்
    நாழியும் ஆக நாள் ஒன்றுக்கு அரிசி
    க்கும் நெல்லு குறுணி ஒரு நாழியு

    குறிப்புகள்:

    குமுதகம் – கோயில் விமானத்தின் அடித்தளப்பகுதியில் ஒன்று. குமுதம்
    என்பது பொதுவாக வழங்கும் பெயர்.
    சந்தி – பூசை வேளை
    நாழி = 1 படி
    குறுணி = 8 நாழி

    கல்வெட்டு – 2

    P1080141

    கல்வெட்டின் பாடம் :

    ஸ்வஸ்திஸ்ரீ வீரராஜே
    ந்த்ர தேவற்கு யாண்டு
    பத்தாவது கோடி
    க்காரைத்தொழிலிர
    ருக்கும் பெ(ரு)மாள் உ
    ரிமையா(ரி)ல் இராச
    சிசிறியானேந் இட்
    (திரு) வாயல் முகவணை
    (உத்திரம்) உள்பட இந்நிலை
    கால் இட்டேந் இராசசிறி
    யானேந்

    குறிப்புகள் :
    பெருமாள் – அரசன்
    உரிமையார் – அரசனுக்கு உரிமையானவர் (இங்கே படை வீரர்கள்
    ஆகலாம்).
    திருவாயல்(திருவாயில்), முகவணை, உத்திரம், நிலைக்கால் – கட்டிட
    உறுப்புகள்.

    கல்வெட்டு – 3

    கல்வெட்டின் பாடம் :

    1. ஸ்வஸ்திஸ்ரீ வீரராஜேந்திர தேவ
    2. ற்கு யாண்டு பதிநஞ்சாவது எதிர் எதிர்
    3. ரைவழினாட்டுக் கோடிக்காரைத்
    4. (தொ)ழு முதலிகளில் சோழன் கூத்தனான
    5. ராசேந்திர இருங்கோளனேன் பெருமா
    6. டுகக்கொத்துக்கு நாயக்கமாரில் தொ

    குறிப்பு :
    கரைவழி நாட்டுக் கோடிகாரைத்தொழு என்னும் ஊர் குறிப்பிடப்படுகிறது.
    முதலி – தலைவன்; அரச அதிகாரி.
    கொத்து – வேலையாள் அல்லது ஊழியர் தொகுதி. இங்கே குரிப்பிடப்
    படுவது பெருமாள் வடுகக் கொத்து என்பவர்.
    (பெருமாள் – அரசன்)

    குறிப்பு : சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.

    ————————————————————–

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 17

    கல்வெட்டு படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு தரப்பட்டுள்ளன. வழக்கம்போல், படங்களை உருப்பெருக்கம் செய்து படியுங்கள். எழுத்துகளை அதன் வடிவத்திலேயே (பார்வைப்படி) எழுதிப்பார்ப்பது நல்ல பயன் தரும்.

    கல்வெட்டு – 1

    Copy of P1070195

    கல்வெட்டுப் பாடம்:

    1 ஸ்வஸ்திஸ்ரீ வீரராசேந்
    2 திர தேவற்கு யாண்டு 40
    3 வது வைகாசி திங்க வடபரிசா
    4 ர நாட்டில் சேவூரில் வெள்ளா
    5 ன் உகையரில் தேவந்தேவநேந்
    6 ஆளுடையா திருமுருகந்பூண்டி
    7 நாயநாற்கு சந்தியாதீபம் ஒந்(று)
    8 க்கு சீபண்டாரத்தில் ஒடுக்கி(ன)
    9 பழஞ்சலாகை அச்சு ஒன்றுக்
    10 கும் சந்திராதித்தவரை செல்
    11 வதாகக் கல்வெட்டுவித்தே
    12 ந் இது பந்மாஹேஸ்வர
    13 க்ஷை

    குறிப்புகள் :

    சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்
    கல்வெட்டின் காலம் கி.பி. 1247. அரசன் வீரராசேந்திரன், கொங்குச்சோழன்.
    வடபரிசார நாடு – கொங்குப்பகுதியில் பண்டு வழங்கிய இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகளில் ஒன்று.
    உகையர் – கொங்கு வெள்ளாளர்களில் ஒரு பிரிவு
    சீபண்டாரம் – கோயில் கருவூலம்; ”ஸ்ரீ” என்பது வடமொழி எழுத்தைத் தமிழாக்கியது.
    ப்ழஞ்சலாகை அச்சு – கொங்குப்பகுதியில் புழக்கத்தில் இருந்த பழங்காசு.
    வெள்ளாளன் தேவன் தேவன் என்பவன், திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சந்திவிளக்கு எரிப்பதற்காகக் காசு கொடை அளித்த செய்தி கூறப்படுகிறது.

    கல்வெட்டு – 2

    Copy of P1060325

    கல்வெட்டுப் பாடம்:

    1 ஸ்வஸ்திஸ்ரீ விசையாபுதைய சாலிவாகன சகாத்தம் (உ)
    2 1458ன் மேல் செல்லாநின்ற துன்
    3 முகி வரு. அற்பசி மீ 7 தேதி துவாதெசியும் புத
    4 வாரமும் உத்திர நக்ஷரமும் பெற்ற னாள் ஸ்ரீ
    5 ன் ராசாதிராசன் ராசபரமேசுரன் ஸ்ரீ வீரப்பி
    6 றதாப ஸ்ரீவீர அச்சுத்தராயமகாராயர் பிறுது
    7 வி ராச்சியம் பண்ணி அருளாநின்ற காலத்து அந்
    8 த அச்சுதராயமகாராயற்கு தெக்ஷிணாபுமாதெ
    9 ண்டமான் காவேரிவல்லபன் கடகசூறைக்காற்
    10 றன் விருதன் வாயுவந்தி விருதுகஜாசிங்கன் பெ
    11 க்கெத்துராசுல ஒக்கெத்துகண்டன் மண்டலி
    12 க மகலராசன் உறையூற்புரவாதீசுரன் பொன்னா
    13 ம்பலநாத ஸ்ரீபாதசேகர காசிபகோத்திரத்
    14 து ஆபஸ்தம்ப சூத்திரத்து சூரிய வங்கித்தில் சோ
    15 ழகுல ஒங்கர சென்னையதேவ மகாராசாவின் பு
    16 த்திரரான ஸ்ரீமன்மகாமண்டலேசுர வாலையதேவமகா
    17 ராசா நம்முடைய சுவாமி அச்சுத்தராயமகாராயற்கு பு

    குறிப்புகள் :

    கல்வெட்டின் காலம், கல்வெட்டில் சாலிவாகன சகாத்தம் 1458 எனக்குறிப்பிடப்பெறுகிறது. சாலிவாகன ஆண்டு, சக வருடம், சகரை ஆண்டு ஆகிய அனைத்தும் சாலிவாகன சகாப்தத்தைக்குறிப்பதாகும். இந்த ஆண்டுடன் 78 ஆண்டுகளைச் சேர்க்க கிறித்தவ ஆண்டு பெறப்படும். எனவே இக்கல்வெட்டின் காலம் கி.பி. 1536. விஜய நகர அரசர்கள் காலம். இங்கு, அரசர் அச்சுதப்ப நாயக்கர். கல்வெட்டில் கொடுக்கப்பட்ட துன்முகி தமிழ்வட்டத்து ஆண்டு கி.பி. 1536-ஆம் ஆண்டுடன் மிகச்சரியாகப்பொருந்துவதைக் காணலாம். ஒரு சில், கல்வெட்டுகளில், இக்காலக் குறிப்புகள் பொருந்தாமல் போவதுண்டு. (இந்த 2016-ஆம் ஆண்டும் துன்முகி/துர்முகி என்பதை நோக்குக.) தமிழ் மாதமான ஐப்பசி மாதம், கல்வெட்டில் அற்பசி மாதம் எனக்குறிக்கப்பெறுகிறது. இது போன்ற பெயர்களை நினைவில் கொள்ளுதல் கல்வெட்டுகள் படிக்க் உதவும். காலக்குறிப்பில், புதவாரம், துவாதசி திதி, உத்திர நட்சத்திரம் ஆகிய குறிப்புகள் விளக்கமாகத் தரப்பட்டுள்ளதை நோக்குக.
    கல்வெட்டுக்காலத்தில், விஜயநகர அரசரின் சார்பாக கொங்குமண்டலத்தின் மகாமண்டலேசுவரனாக நிர்வாகம் செய்தவன் வாலையதேவமகாராசன். அவனுடைய கோத்திரமும், சூத்திரமும் தரப்பட்டுள்ளன.
    விஜயநகர அரசருக்கும், மண்டலாதிபதிக்கும் பல்வேறு விருது/சிறப்பு அடைமொழிகள் தரப்பட்டுள்ளன.

    ——————————————————————

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 18

    கல்வெட்டு படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு தரப்பட்டுள்ளன. வழக்கம்போல், படங்களை உருப்பெருக்கம் செய்து படியுங்கள். எழுத்துகளை அதன் வடிவத்திலேயே (பார்வைப்படி) எழுதிப்பார்ப்பது நல்ல பயன் தரும்.

    கல்வெட்டு – 1 கல்லின் முன்புறம்

    Copy of P1060940

    கல்வெட்டின் பாடம் :

    1 யுவ வரு சித்
    2 திரை மீ
    3 ஸ்ரீ ராமப்ப
    4 அய்யனவ
    5 ர்கள் காரிய
    6 த்துக்குக்கற்த
    7 ரான சிதம்
    8 பரநாத பிள்ளை
    9 பாரபத்தியத்தில்
    10 வடபரிசாரநா
    11 ட்டு ஒத்தனூரா
    12 ன பெரும்பழ
    13 னத்துக் காணி
    14 யுடைய வெள்
    15 ளாழர் மூலர்க
    16 ளில் வேலப்ப
    17 னும் பாளந்தை
    18 களில் உத்தமனு
    19 (ம் மேற்படியூர்ச்)
    20 …………………………….

    கல்லின் பின்புறம்

    Copy of P1060940

    கல்வெட்டின் பாடம் :

    1 இ நித்த தன்ம
    2 ம் பரிபாலன
    3 மாக நடத்தின
    4 பேரெல்லா
    5 ங் காசிராமே
    6 சுரம் சேவித்தா
    7 பலன் பெறுவ
    8 ராகவும் இந்த
    9 த்தன்மம் வில
    10 கினவர்கள் கெ
    11 ங்கைக் கரையி
    12 ல்க்காராம்பசு
    13 ப்பிராமணன்
    14 மாதாபிதாகுரு
    15 இவர்கள் அஞ்
    16 சுபேரையுங்
    17 கொன்ற தோ
    18 ஷத்திலே
    19 போகக்கடவ
    20 தாகவும்

    குறிப்பு :

    கோவை மாவட்டக் கல்வெட்டுகள் நூலின் குறிப்புகளில், ராமப்பய்யன் அலுவலராகிய சிதம்பரநாதபிள்ளை காலத்தில் வெளியிடப்பெற்ற அரசு ஆணை
    என்று கூறப்பட்டுள்ளது. காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு என்று தரப்பட்டுள்ளது.
    ராமப்பய்யன் என்பவர் திருமலை நாயக்கரின் படைத்தளபதி ஆவார். எனவே இக்கல்வெட்டு, திருமலை நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலம் கி.பி. 1623-1659. கல்வெட்டில் வரும் யுவ வருடம் (அறுபது ஆண்டுகள் கொண்ட தமிழ் ஆண்டு வட்டத்தில் ஒரு ஆண்டின் பெயர்) என்னும் குறிப்பு
    கி.பி. 1635-ஆம் ஆண்டுடன் பொருந்துகிறது. எனவே, கல்வெட்டின் காலம் சரியாகக்
    கி.பி. 1635 எனலாம். இங்கே தரப்பட்டுள்ள கல்வெட்டின் படத்தில் 20-ஆம் வரியிலிருந்து மேலும் ஒன்பது வரிகள் நிலத்தில் புதைந்து போயுள்ளன.
    மேற்படி நூலின் குறிப்புப்படி, கொங்கு நாட்டின் வடபர்ரசார நாட்டுப்பிரிவைச்
    சேர்ந்த ஒத்தனூரான பெரும்பழனத்து உத்தமசோழீசுவரர் கோயிலுக்கு அபிஷேகம்,
    நைவேத்தியம், நந்தாதீபம், சந்தியா தீபம் ஆகியவற்றுக்காக ஊர்ச்சந்தையின் மகமை
    வருமானத்தைக் கொடையாக அளித்துள்ள செய்தி தெரியவருகிறது.
    காரியத்துக்குக் கர்த்தரான என்னும் தொடர் நாயக்கர் காலக் கல்வெட்டுகளில்
    பெரும்பாலும் காணப்படுகின்ற ஒன்று. வெள்ளாளர்களில், மூலர்கள், பாளந்தைகள்
    ஆகிய கூட்டப்பிரிவினர் இருந்துள்ளனர் என்பது அறியப்படுகிறது.
    தன்மத்தைக் காப்பவர், காசி-இராமேசுவரம் சென்றுவழிபட்ட நன்மையையும்,
    தன்மத்தை விலக்கினவர் கங்கைக் கரையில், பசு, பிராமணன், தாய்,தந்தை, குரு
    ஆகிய ஐவரைக்கொன்ற தோஷத்தை அடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது
    குறிப்பிடத்தக்கது.
    பழங்கல்வெட்டுகளில் நல்ல தமிழ்ச்சொற்கள் பயின்றதைப் போலன்றி,
    நாயக்கர் காலக் கல்வெட்டுகளில், காரியகர்த்தர், பாரபத்தியம், அபிஷேகம்,
    நைவேத்தியம், பரிபாலனம், சேவித்தல், தோஷம் ஆகிய வடமொழிச் சொற்கள்
    மிகுதியும் காணப்படுவது சிந்தனைக்குரியது. ஆட்சியாளர்களைச் சார்ந்தே மொழி
    வளர்வதும் தேய்வதும் நடைபெற்றுவந்துள்ளது என்பது வரலாற்றுச் சான்றாகும்.
    கல்வெட்டில் வரும் பெரும்பழனம் (பெரும்பழன நல்லூர்) தற்போது
    பெருமாநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.

    —————————————————
    து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
    அலைபேசி : 9444939156.

    Share
  • படக்கவிதைப் போட்டி 135-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    monkeys

    கூட்டமாகக் குந்தியிருக்கும் மந்திகளும் அதன் பறழ்களும் (குட்டிகள்) நம் உள்ளத்தை அள்ளிக்கொண்டு போகின்றன. இந்தக் காட்சியைத் தன் படப்பெட்டியில் பதிவுசெய்து தந்திருக்கும் திரு(மிகு?). சத்யாவுக்கும், படக்கவிதைப் போட்டிக்கு இந்த அழகிய படத்தைத் தேர்வுசெய்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றி உரியது.

    படத்தில் காணும் கவிகளைப் (குரங்குகள்) பாட, வல்லமைமிகு நம் கவிகள்  (கவிஞர்கள்) அணிவகுத்து நிற்பதால் தாமதமின்றி அவர்களை அழைத்துவிடுகிறேன். கவிகளே எழுக! கவிமழை பொழிக!

    *****

    “கூடிவாழும் குரக்கினம் மலைமீதில் இளைப்பின்றி ஏறும்; பழந்தின்றுக் களைப்பின்றி ஆடும்; கைப்பொருளைப் பறித்துக்கொண்டு ஓடும்” என்று குரங்கின் குணங்களைச் சுவையாய்ப் பட்டியலிடுகின்றார் திருமிகு. சியாமளா ராஜசேகர்.

    குடும்பமுடன் கூடிவாழும் குரங்கினத்தைக் காணீர்
    ***
    கொஞ்சுதமிழ்ச் சொல்லெடுத்துப் புலவோரே பாடீர்
    !
    தடுமாற்ற மில்லாமல் கிளைகளிலே தாவும்
    ***
    தன்னோடு குட்டியையும் சுமந்துகொண்டு போகும் !
    படுவேக மாகவது மலைமீதி லேறும்
    ***
    பழந்தின்று பசியாறிக் களிப்பினிலே ஆடும் !
    வெடுக்கென்று கைப்பொருளைப் பறித்துக்கொண் டோடும்
    ***
    விரட்டிவிட்டால் முறைத்தவண்ணம் பார்த்திருக்கும் நின்றே !!
     

    *****

    குரங்கின் வாழ்வியலைத் தன் கவிதையில் எளிமையாய்ப் பதிவுசெய்திருக்கிறார் திரு. ரா.பார்த்தசாரதி.

    மனம் ஒரு குரங்கு, மனித மனம் ஒரு குரங்கு என்றான்
    சிந்திக்கும் ஆற்றலை குரங்கிற்கு கடவுள் கொடுக்க மறந்தான்
    அவைகளுக்கிடையே ஒற்றுமை எனும் பண்பைக் கண்டான்
    பிறரிடம் பறித்துக் கொண்டு தின்னும் குணத்தையும் கண்டான்
    மலையும், மரக்கிளை அதன் குடியிருப்பாக கொள்ளும்
    இடம்விட்டு இடம் மாறி உணவிற்காக செல்லும்
    குட்டியைத் தன் வயிற்றில் விட்டுவிடாமல் சுமந்து செல்லும்
    தானும் உண்டு, தன்னைச் சூழ்ந்த தன் இனத்திற்குக் கொடுக்கும்.!
    மனித மனம் ஒரு குரங்குதான், அது அங்குமிங்கும் தாவும்
    மனம் சொன்னபடி மனிதனின் உடல் கேட்காது எனத் தெரியும்
    இருந்தும் கடல் அலைபோல் மனம், அலைபோலப் பாயும்
    மன இறுக்கத்தால் உடல் சோர்வும், நோயும் வந்தடையும்!
    […]
    பகுத்துண்டு எனும் பண்பினை அதனிடம் கற்கவேண்டும்
    குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்றது ஆதிகாலம்
    மனிதன் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்யும்
    பேசும் ஆற்றல் இல்லாத பிராணியாகவே கருதப்படும் !
    குரங்கே மூன்று குட்டிகளானாலும் அன்புடன் வளர்க்கிறாய்
    ஒன்று உன் முதுகின் பின்னும்,சிறிய குட்டியை அணைத்தும்
    மற்றொன்றைத் தகப்பனிடம் பாதுகாப்பாக அமர்த்தியும்
    உண்ண என்ன கிடைக்கும் என நினைத்துக் கூடி அமர்ந்துளாயா?!

    *****

    ”ஓ மாந்தர்காள்! குரங்குச் சிலையை ஆலயத்தில் கண்டால் ஆஞ்சநேய அவதாரமென்று கன்னத்தில் போட்டுக்கொள்ளும் நீங்கள், நிஜக்குரங்குகளைக் கண்டால் அஞ்சி ஓடுகின்றீர்; மனித மனம் மந்தியைப் போல் என்று தத்துவம் பேசும் நீவிர், எமை அடக்க முந்துகின்றீர்; உம் உளம்அடக்க மறக்கின்றீர்” என்று மாந்தர்களுக்கு அறிவுகொளுத்தும் புந்திமிகு மந்தியைக் காண்கிறோம் திரு. கொ.வை.அரங்கநாதனின் கவிதையில்.

    கோடையிலே இளைப்பாறக்
    கூடு ஒன்று எங்களுக்கில்லை
    கொட்டு மழை பெய்தால்
    நனைவதைத் தவிர வழியில்லை

    காட்டிலே வாழ்ந்திருந்தால்
    கஷ்டமின்றி இருந்திருப்போம்
    நாட்டுக்குள் வந்ததால்
    நாங்கள் படும் துயரம் கொஞ்சமல்ல

    சுவரின்மேலே நாங்கள்
    சும்மாவே உட்கார்ந்திருந்தாலும்
    கல்லால் அடித்துவிட்டு
    கைகொட்டிச் சிரிக்கிறீர்கள்

    குழந்தை குட்டியுடன் நாங்கள்
    குடும்பமாய்த் திரியும்போதும்
    வேடிக்கையும் பார்த்துவிட்டு
    விரட்டவும் செய்கிறீர்கள்

    பூட்டிய வீட்டினுள்ளும்
    புகுந்துத் திருடும்
    மனிதர்களே இருக்கும்போது
    திறந்த வீட்டினுள்
    திண்பண்டங்கள் நாங்கள் எடுத்தால்
    தேசத்துரோகிப் போல்
    தேடித் தேடி வதைக்கிறீர்கள்

    ஆஞ்சனேய அம்சமென்று
    கன்னங்களில் போட்டு கொள்கிறீர்கள்
    அடுக்களையில் எட்டிப் பார்த்தால்
    அலறி ஏன் ஓடுகின்றீர்கள்?

    […]

    மனிதர்களின் மனமெல்லாம்
    மந்திகள் போன்றெதென்று
    தத்துவங்கள் பேசுகின்றீர்கள்
    எங்களை அடக்கத்தான்
    எத்தனை பேர் வருகின்றீர்கள்!
    உங்கள் உள்ளிருக்கும்
    ஒரு மந்தியினை அடக்க
    உங்களால் முடியுமாவென்று
    ஒரு முறை முயன்று பாருங்கள்
    அப்புறமாய் எங்களிடம் வாருங்கள்!

     *****

    ”குரங்குகள் கூட்டத்தோடு வாழும்; குட்டிகளை நாட்டதோடு பேணும். குரங்கின் துணையோடு தன் வாழ்க்கைத்துணையை மீட்டான் காகுத்தன் என்கிறது இராமகாதை. குரங்கு பொம்மைகளை வைத்துக் குவலயத்துக்கே நீதியுரைத்தார் அண்ணல் காந்தியார். குரங்குகள் இன்று குணங்கெட, தரங்கெட்ட மனிதர்களின் சகவாசந்தான் காரணமோ?” என்று வினவுகின்றார் திரு. பழ.செல்வமாணிக்கம் 

    *****

    மனிதக் குரங்குகள் :

    குரங்கின் பரிணாம வளர்ச்சி மனித இனமாம்!
    டார்வின் உலகிற்குச் சொன்ன உண்மை!
    தட்டிப் பறிப்பதினால், மனிதனும், குரங்கும்
    ஒன்றென்று சொன்னாரோ!
    தாவும் பழக்கத்தால் இரண்டும்
    ஒன்றென்று சொன்னாரோ!
    குரங்கின் நல்ல பண்புகளை என்றேனும்
    நினைத்துப் பார்த்ததுண்டா!
    குரங்குகள் கூட்டமாய் வாழும் அதன் ஒற்றுமையைக் காட்டி!
    குட்டியை சேர்த்தணைத்துத் தான் திரியும்!
    குட்டி பெரிதாகும் வரையில் பாசத்தைக் காட்டி!
    குரங்குகள் துணையோடு, ராமன், சீதையை சிறை மீட்டார்!
    அனுமன் என்ற குரங்கோ பக்திப் பெருக்காலே!
    ராமர், சீதையையே தன் இதயச் சிறையில் வைத்தார்!
    அண்ணல் காந்தி மகான், தீயவை அழிவதற்கு!
    குரங்கு பொம்மைகளால், நீதிதனை உரைத்தார்!
    ஆதிகால மனிதர்கள் கூட்டமாய் தான் வாழ்ந்தார்!
    குழந்தைகள், குடும்பமென்று அன்போடு தான் இருந்தார்!
    ஆதலினால் சொல்கிறேன்!
    ஆதி கால குரங்குகள் நல்லவை தான்!
    தரங்கெட்ட மனிதர்களைப் பார்த்துத்தான்!
    குரங்குகள் குணம் கெட்டதாய் மாறியதோ!

    *****

    ”மாந்தகுலம் தாம் பெற்ற பிள்ளைகளை மண்ணிற்கு உரமாய் வீசியெறியும் இக்காலத்தில், மந்திகளோ தம் குட்டிகளை வரமாய் வளர்க்கின்றன. ஆதலினால் தாய்மையின் தூய்மையை மந்திகளிடம் கற்பீர் மானிடரே!” என்கிறது திரு. செண்பக ஜெகதீசனின் கவிதை.

    தாய்மையே சிறப்பு…

    குரங்கி லிருந்து பிறந்ததாகக்
    கூறிக் கொள்ளும் மானிடரே,
    தரமது குறைந்து நீங்களெல்லாம்
    தாய்மையை இழிவாய் விடலாமா,
    உரமாய்ப் போய்விடக் குப்பையிலே
    உங்கள் பிள்ளையைப் போடலாமா,
    வரமாய்க் குட்டிகளை வளர்ப்பதைத்தான்
    வந்து பாரீர் எம்மிடமே…!

    *****

    ’உன்னில் இருந்துவந்த எந்தன் செயல்களை எண்ணி நீ தலைகுனிகின்றாயோ?’ என்று குரங்கிடம் வருந்திக் கேட்கிறார் திருமிகு. சிந்து. 

    உன்னில் இருந்து வந்த
    என்னை எண்ணித்
    தலை குனிகிறாயோ?
    என் செயல்களால்
    உன் தலை குனிவதை
    நினைத்து…

    *****

    ”குரக்கினங்கள்கூடத் தம் உறவுகளோடு நேயமாய் வாழ்ந்திருக்க, மனிதனோ இரக்கமின்றி, பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் சேர்க்கின்றான். தாயின் காலடியில் சொர்க்கம் கொலுவிருக்க, அவளைப் புறக்கணித்தல் நலமாமோ?” என்று தாய்மையின் சிறப்பைத் தரணிக்கு உணர்த்துகின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.

    தாய்மை

    அன்பின் பகிர்வில் பாகுபாடு இல்லை
    அரவணைத்துக் கொள்வதில் அவளுக்கு ஈடு இல்லை
    ஒரறிவு முதல் ஆறறிவு வரை குழந்தை வளர்ப்பு அன்னையின் நிழலில்

    குட்டியின் பசியாற்றிப் பசியாறும் ஒரே ஜீவன் அன்னை மட்டுமே
    குழந்தையின் நலன் ஒன்றே தாய்மையின் எதிர்பார்ப்பு
    குழந்தையின் புன்னகையே தாயின் பூரிப்பு
    ஆதரவு தருவதாய் ஏமாற்றும் இவ்வுலகில்
    அன்னையின் அன்பு மட்டுமே நிரந்தரமானது
    கும்பிடும் தெய்வம் தேடிஅலையும் மானுடம்
    குலங்காக்கும் தாய்மையின் நலங்காத்தல் இல்லை
    குரங்கினம் தன் குட்டியின் நலம் ஒன்றைப் பேணுகையில்
    குழந்தை முதல் பேணி வளர்த்த பெற்றோரைப் பேணாமல்
    முதியவர் காப்பகம் சேர்ப்பது மானுட இனத்தில் மட்டுமே
    காட்டுக்குள் கூடிவாழும் உயிரினக் குடும்பம்
    கரம்கோத்து உறவினைக் அன்பில் மூழ்கடிக்கும்
    செல்ல விளையாட்டும் கள்ளக் குறும்பும்
    உள்ள மகிழ்வோடு நாளும் அரங்கேறும்
    கானகம் கூத்தாட உயிரினநேயம்
    வையகம் தழைக்கச் செய்தி சொல்லும்
    வைப்பு நிதி தராத இன்பமதனை
    தாய்மையின் அருகினில் நித்தம் பருகலாம்
    ஆதலால்

    தாய்மை போற்றுவோம்.

    *****

    ”டிஜிட்டல் இந்தியாவின் சீர்கேடுகளைப் பட்டியலிட்டு, இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் கண்களையும் காதுகளையும் வாயையும் மூடிக்கொண்டிரும் மந்திகள் நாம்” என்று கனல்கக்கும் வரிகளைத் தன் கவிதையில் பொதிந்துவைத்துள்ளார் திருமிகு. லீலா.

    குரங்கு பொம்மை:

    ஒரு பக்கம் விவசாயப் போராட்டம்..
    மீத்தேன் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம்
    அணு உலைப் போராட்டம்
    மீனவர் சிறைப்பிடிப்பு..
    மணல் கொள்ளை…
    மழை, டெங்கு இதற்கு இடையில் சின்னத்தை மீட்பதில் இருக்கிறது இன்றைய அரசாங்கம்
    இந்தியாவை விட்டு
    தமிழ்நாடு பிரிந்தால் இந்தியாவே …
    ஒற்றைக் காலில்
    நிற்கும்… என்று அறைகூவல் விட எனக்கும் ஆசைதான்…
    தேசபக்தி பற்றிப் படம் எடுக்கும் கூட்டம்…
    ஒருபுறம்…
    விமானவிபத்தில் இறந்த ராணுவ வீரரை மதிக்காமல் அட்டைப்பெட்டியில் சுற்றி வைத்துள்ளது மறுபுறம்…
    டிஜிட்டல் இந்தியாவா மாற்ற நினைக்கும் மத்திய அரசு … இராணுவ வீரனுக்கான இறுதி மரியாதைகூட வழி இல்லாமல் தவிக்கிறது…
    அரசாங்க ஊழியர்களுக்கு 20% தரும் அரசு…
    ஏழைகள் அன்றாடம்
    உபயோகிக்கும் பொருட்களின் விலை
    உயர்த்தியுள்ளது…
    தன் இனத்திற்கு ஒரு
    கொடுமை என்றால்
    மற்ற இனங்கள் துணிந்து போராடும்…
    மனித வர்க்கம் மட்டுமே
    செல்பி எடுக்கும்…
    காந்தி சொன்ன
    வார்த்தைகளை பின்பற்ற
    அநீதி கண்டால்
    கண்களை, காதுகளை, வாயும் மூடும் குரங்கு கூட்டம் யாமே.. வீழ்வதா?! வாழ்வதா?!

    *****

    ”குரங்குகள் குடும்பத்தோடு பாசத்தைப் பகிர்ந்தபடி வாழ்கையில், மனிதன்மட்டும் அன்பைத் துறந்து அருளின்றிக் கண்டம்விட்டுக் கண்டம் போகிறான் பொருள்தேடி” என்று வேதனைப்படுகின்றார் திருமிகு. சொல்லின் செல்வி.

    குரங்கின் மனமாய்

    போதும் புறப்பட்டு வந்துவிடு
    ஏதும் காரணம் சொல்லிவிடு
    காசுக்கு ஆசைப்பட்டு
    வெளிநாட்டு அடிமையாய்
    வீட்டுக்கு பொருள் சேர்த்தது போதும்

    அடுத்தவர் ஒன்றாய் வாழ்ந்தது பார்த்து / அழுது தவித்தது போதும்
    எனக்குக் கணவனாக
    பிள்ளைக்குத் தகப்பனாக
    ஒரு முழு நாள் ஆனது .
    ஆண்டு மூன்றாண்டுகிறது/
    அப்பா எனக் கூப்பிட்டு
    அழும் குழந்தையை
    அள்ளி அணைக்கவா முடியும்?
    அலைபேசியில்
    காதலாகப் பேசினாலும்
    இறுக்கி அணைக்கவா முடியும்?
    ஏக்கத்தைக் கொடுக்கும் என் வாழ்க்கை
    தாக்கத்தை தருகிறது தனிமையில் சிறையில்..!

    குரங்குகள் கூட்டுக் குடும்பமாய்..
    குரங்கின் பரிணாமம் நாமோ தனித்தனியாய்
    பாசத்திற்கு ஏங்குகிறேன்
    குரங்கை விட மோசமாய்..!

    *****

    கவிக்குலத்தின் செயல்களையும் அவற்றின் வாழ்வியலையும் மனித குலத்தோடு ஒப்பிட்டுச் சுவைபடப் பாடியிருக்கும் கவிகளை மனதாரப் பாராட்டுகின்றேன்!

    ******

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…

    குரங்கின் செயல் நல்வழிகாட்டும்!

    பக்தியுடன் பார்த்தால் குரங்கல்ல வானரவீரன்..
    ……….பகவானிடம் பணிசெய்யும் பக்திச் சேவகனாம்.!
    சக்தி வேண்டினதுவே சஞ்சீவி ஆஞ்சனேயன்..
    ……….சரணடையின் சுமையிலாது புலனடக்க எளிது.!
    யுக்திசெயும் இயல்பினிலிது தந்திர மந்தியாம்..
    ……….வாலில்வைத்த தீயால் இலங்கையை அழித்தது.!
    முக்திதரும் காகுத்தனைக் காட்டும் மாருதியாய்..
    ……….முன்வினை பின்வினை அகல வழிகாட்டுமாம்.!

    குடும்பம் பிரிவினை பொறாமை ஏதுமில்லை..
    ……….கூட்டுக் குடும்பமாய் வாழுமிதன் இயல்பாகும்.!
    எடுத்துச் சொல்லு மளவுக்கு இராமகாதையில்..
    ……….இடம் பிடித்தபெருங் குடும்பப் பேரினமாகும்.!
    இடுப்பில் இறுகப்பற்றித் தொங்குமதன் குட்டி..
    ……….இடுக்குவழி வீழாததைக் “குரங்குப்பிடியென்பர்”.!
    கடுவனின் சாதனையாம்!.சீதாப் பிராட்டியைக்..
    ……….காணும்வரை உண்ணா நோன்பிருந்தது வரலாறு.!

    “குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்” எனும்..
    ……….கூற்றை உணர்த்தும் செயல்கள் பலவுண்டாம்.!
    மரத்துக்கு மரம்தாவும் குரங்கின் செயல்களில்..
    ……….மானுடம் கற்கவேண்டும் “வாழ்வியல் பாடம்”.!
    அரக்கச் செயல்கள் செய்யும் மனிதர்களையே..
    ……….குரங்குச் சேட்டையொடு ஒப்பிட்டுப் பேசுவர்.!
    இரண்டு மனமுடன் குழப்பும் இம்மாந்தரைக்..
    ……….குரங்குமனம் கொண்டவர்கள் என்றே கூறுவர்.!

    இன்றொரு பேச்சு நாளையது மாறிப்போச்சு..
    ……….என்றொரு நிலையில் “மனமொரு குரங்காம்”.!
    இன்றிருக்கும் அரசியலே இதற்கு உதாரணம்..
    ……….இவர்கள்செயும் செயலே “குரங்குகை பூமாலை”.!
    தின்று ஏப்பம்விட்ட மக்கள்வரிப் பணமெலாம்..
    ……….திரைக்குள் மறைக்க “இஞ்சிதின்ன குரங்காவார்”.!
    மென்று விழுங்கியது போதா தென்கிறபோதில்..
    ……….வெகுண்டெழுவார் “கள்ளுண்ட குரங்கு போல”.!

    ”இடுப்பில் இறுகப்பற்றித் தொங்குமதன் குட்டி..
          இடுக்குவழி வீழாததைக் “குரங்குப்பிடியென்பர்!” 

    ஆம், குரங்குக்குட்டி தன் தாய்க்குரங்கைக் ’குரங்குப்பிடி’யாய் இறுகப் பற்றிக்கொண்டிருக்கும் இயல்புடையது. இதனை ’மர்க்கட (குரங்கு) நியாயம்’ என்பார் வைணவ வடகலை மரபை வளர்த்த வேதாந்த தேசிகர். இதன் பொருளாவது… உயிர்கள் தாமே வலியச்சென்று இறைவனை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதாகும்.

    மாந்த குலத்தின் முன்னோராக அடையாளப்படுத்தப்படும் குரங்குகளின் செயல்களில் வேடிக்கையும் உண்டு; விபரீதமும் உண்டு. குரங்கு கையில் பூமாலை கிடைத்துவிட்டால் போதும்…அதனைப் பிய்த்தெறிந்த பின்பே ஓயும்; கள்ளைப் பருகிவிட்டு அதுபோடும் ’உண்டாட்டு’ ஏனையோர்க்குத் தருவதோ பெருந் திண்டாட்டம்!

    நாட்டில் அதிகாரத்திலிருக்கும் பலரின் செயல்கள் கள்ளுண்ட குரங்கின் செயல்களாகவே காட்சியளிக்கின்றன என்று நடப்பியலைத் தன் பாட்டில் நயமாய்ச் சொல்லியிருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

    Share
  • திருக்குறளுக்கு சர்வதேச அங்கீகாரம்!

    banner1

                       திருக்குறளுக்கு  சர்வதேச அங்கீகாரம்

              இங்கிலாந்து நாட்டில் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு

        இங்கிலாந்து நாட்டின்  லிவர்பூல்  பகுதியில் அமைந்துள்ள  சர்வதேசப் புகழ் பெற்ற ஹோப் பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு (2018) ஜூன்  மாதம் 27,28,29 ஆகிய நாட்களில் இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெறவுள்ளது.

       நாகர்கோவிலில் கடந்த மே-மாதத்தில் நடைபெற்ற முதல் அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டின் தொடர்ச்சியாக இரண்டாவது மாநாடு லிவர்பூலில்  நடை பெறுகின்றது.

      தமிழக எல்லைகளுக்கு அப்பால் திருக்குறள் (Thirukkural beyond the Frontiers of Tamil India) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடக்கும் இம்மாநாட்டில் இந்திய நாட்டுப் பேராளர்களோடு அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை சார்ந்த ஏராளமான அறிஞர்கள் பங்கேற்று ஆய்வுரை வழங்க உள்ளனர். ஸ்காட்லாந்த்து நாட்டைச் சார்ந்த தமிழ்ப் பேரறிஞர் ஆஷர், ருசியா நாட்டைச் சார்ந்த பேராசிரியர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி,  ஹாங்காங் நாட்டைச் சார்ந்த பேராசிரியர்  கிரஹோரி  ஜேம்ஸ், தென்கொரிய நாட்டைச் சார்ந்த பேராசிரியர் யாங்கிமூன், மலேசிய நாட்டைச் சார்ந்த பேராசிரியர் டத்தோ. டென்னிசன் ஜெயசூரியா, இலங்கை  நாட்டைச் சார்ந்த பேராசிரியர். சண்முகதாஸ் ஆகியோர் இம்மாநாட்டு பேராளர்களில் குறிப்பிடத்தக்கோராவர். 25க்கும் மேற்பட்ட நாடுகளை சார்ந்த அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இம்மாநாட்டினைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

       திருக்குறளுக்கு உலகப்பொதுநூல் (The Book of the World) என்னும் தகுதிப்பாட்டினை யுனெஸ்கோ (UNESCO) மூலம் பெற்றுத்தரும் குறிக்கோளினை மனதிற் கொண்டு நடத்தப்படும் இம்மாநாட்டை சென்னையிலுள்ள ஆசியவியல் நிறுவனம், இங்கிலாந்திலுள்ள லிவர்பூல் ஹோப் பல்கலைக்கழகம், மொரிசியசு நாட்டிலுள்ள புலம் பெயர்ந்து வாழும் அனைத்துலக தமிழர் மையம் (INTAD), தமிழ் லீக் (Tamil League), அமெரிக்க நாட்டின் இல்லினாய்சு மாநிலத்தில் அமைந்துள்ள அனைத்துலகத் தமிழ் மொழி, பண்பாட்டு ஆய்வு நிறுவனம் போன்ற பல்வேறு அமைப்புக்கள் இணைந்து நடத்த உள்ளன. இதனைத் தொடர்ந்து திருக்குறள் உலக மாநாடு (Global Conference) பிரான்சு நாட்டில் யுனெஸ்கோ நிறுவன வளாகத்தில் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் 6, 7 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

       இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டில் பங்கேற்க விழைபவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.

     இயக்குர்,

     ஆசியவியல் நிறுவனம்

     சோழிங்கநல்லூர் PO

     செம்மஞ்சேரி, சென்னை – 600 119

     மின்னஞ்சல்:    info@instituteofasianstudies.com

     தொலைபேசி:   24500831, 24501851

      கைபேசி:             9840526834

     இணையதளம்:  www.instituteofasianstudies.com

    Share
  • ரமண வசனாம்ருதம்….!

     

    கிரேசி மோகன்
    ————————
    ”தூக்கத் தினிலிருப்போம், துக்கத் தினிலிருப்போம்,
    சாக்காய் படுத்தாலும் சம்சார -ஏக்கத்தால்,
    ஆவது தாகம் அதனைத் தணித்திட
    ஜாவ்அந்த சோணா ஜலம்’’….!

    “ராமா யணத்தைநாம் ராமருக்கே சொன்னாற்போல்
    சாமா னியனென்றே செப்புதுஸத் , -நாமானோம்
    ஆணவ(அகந்தை மனம்) புத்தி அதனால் தடைமுக்தி ;
    வீணவம் மாய விதி “….!

    ‘’உலகமது உண்மையில் உன்னுள் உளது
    அலகிலா ஆனந்த ஆன்மத் -திலகமதை
    இட்டுக்கொள் உந்தன் இதயத்தில், பின்னர்நீர்
    தட்டுங்கள் தாப்பாள் திறப்பு’’…..!

    ‘’தூங்கும் உனக்கில்லை சாங்கியம்(கடமை), சாத்திரங்கள்,
    ஆங்குள்ள ஆளோ அபேதனாய் -ஈங்குளான்:
    இத்தை நினைந்து இயல்பாய் இருந்திடு:
    சொத்தை உடம்பு ஜடம்’’….!

    உலகத் துயரை உனக்கு உணர்த்தும்
    கலக மனமே, கருமம் -பலவகை
    தோற்றுவித்து துன்பமதில் துய்த்திட வைத்திடும்:
    மாற்றியருள் அண்ணா மலை’’….!

    “பொய்நெஸ் விலக பிறந்திடும் ஆனந்த
    ஐநெஸ்(I-ness )ஸாய் ஆன்ம அவதார -” HIGHNESS “,-
    அவரது ஆட்சியில் அல்லியூர் கேணி(கிணறு -திருஅல்லிக் கேணி)
    சுவரில் நுணலாய் (தவளை ) சுகி”….!
    “முன்னாடி யாரோநீ! ,பின்னாடி யார்யோனி!-
    கண்ணாடி பூர்வத்தைக் காட்டாது;-பன்னாடை!-
    செய்ததையே செய்தாய்; சரணடை ஈசரிடம்-
    கைதாவாய் காலன் கரத்து”….!
    “எந்தவேலை ஆனாலும் எந்தவேளை ஆனாலும்,
    சிந்தையில் சித்தை சுகித்திருக்க, -அந்த,
    சமாதி லயமே சகஜமாகும் ,பட்ஷம்,
    சமாதானம் ஆகும் சலிப்பு”….!

    ”அதுவேண் டுமென்றும், இதுவேண் டுமென்றும்
    எதுவேண் டினாலும்நீ ஏழை, -புதுவிதமாய்,
    ஆடுஓ நாய்க்காய் அழுமோ! அதுநனைய!,
    ’’மேடருணை செல்மன மே’’….கிரேசி மோகன்….

     

    சல்லடை போட்டு சலித்து சலித்தேனே
    உள்ளடைந்த நானார் உணர்வதற்கு -பல்லிடை
    மாட்டிய பாக்காய் மனநட்டு வாங்கத்தால்
    நாட்டியம் ஆடுதே ’’நான்’’….!

    ராப்பகலாய் தேடு ரமண உபாயத்தால்
    தோற்பில்லை நீங்கா தெளிவுதான் -ஆப்பகல
    மந்தியே ஆன்ம மயிலேறி வான்புகலாம்
    உந்தியாரில் உள்ளபடி உய்….கிரேசி மோகன்….!

    “இல்லை உரைக்க இருப்பான் மறுப்பவன்
    முல்லையில் வீசும் மணமாக;-தொல்லைக்கு
    முற்றுமெனப் போட்டிட, மீளா உறக்கத்தில்
    பற்றுமனம் இன்றிப் படு “….கிரேசி மோகன் ….!

    ‘’இறந்துவிட்ட ஆட்டின் இருவிழியாய், ஞானி
    திறந்திருந்தும் கொள்ளான் திருஷ்டி, -பிறந்திறக்கும்,
    இவ்வாழ்வு மாயை, இராப்பகல் பேதமற,
    முவ்வாசை தாண்டி முழி’’….கிரேசி மோகன்….!

     

     

    Share
  • ஏன்? இந்த மாற்றம்!….

     
    முனைவர் சு.சத்தியா
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
    தஞ்சாவூர்

     
    இதயத்தில் ஈரமுள்ளவர்கள் வாழ்வால் – அன்று
    வயலில் ஈரமிருந்தது
    இன்றோ இதயத்தில் ஈரமற்றவர்கள் செயலால்
    வயலில் ஈரம் வற்றியது
    கழனிகள் புறவழிச்சாலைகளாயின
    சோலைகள் மயானமாயின
    கலப்பை ஏந்தியவன் கதியற்றவனானான்
    இயற்கையோடு இயைந்த வாழ்வு – இன்று
    செயற்கையாகிப் போனது
    நமக்குள் ஒற்றுமையின்மையால்
    பூமியும் பிளவுப்பட்டு நிற்கிறது
    நாம் பொறுமையை இழந்துப் போனதால்;
    கடலும் பொங்கி எழுகிறது
    நம் மனம் தூய்மையற்றுப் போனதால்
    காற்றும்கூட மாசடைந்துப் போனது
    வஞ்சகத்தை நெஞ்சத்துள் குடிகொள்ளவிட்டதால்
    எரிமலையும் வெடித்து சிதறுகிறது
    கருணை காட்ட தவறியதால்
    ஆகாயமும் நம்மை கதிகலங்கவைக்கிறது
    நாம் நாமாக இருந்தால்
    ஏன்? இந்த மாற்றம் – பின்னே
    ஏன்? இந்த ஏமாற்றம்!……

    Share
  • படக்கவிதைப் போட்டி (136)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    23574003_1478743038846557_593520156_n

    ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (25.11.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share