நான் அறிந்த சிலம்பு – 240
-மலர் சபா
மதுரைக் காண்டம் – கட்டுரை காதை
வார்த்திகனைச் சிறைவிடுத்து, அவனுக்கு இரண்டு ஊர்களை அளித்தல்
திறக்க இயலாதபடி மூடிக்கொண்ட
கோவில் கதவின் உறுதியான நிலையறிந்து,
வீரம் மிக்க வேலை உடைய
பாண்டிய நெடுஞ்செழியன் மயங்கினான்.
“என் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியானதா?
கொற்றவைக்கு நேர்ந்த வருத்தம் என்ன?”
இதை ஆராய்ந்துவந்து என்னிடம் கூறுங்கள்…
என மன்னன் கட்டளையிட்டான்.
இளமையான அந்தச் சேவகர்,
மன்னனை வணங்கிச் சென்றனர்.
உளவுகண்டு செய்தி அறிந்து,
வார்த்திகனைச் சிறையிலிருந்து அழைத்துவந்து
மன்னன்முன் நிறுத்தினர்.
உணமையை எடுத்துரைத்தனர்.
உண்மையறிந்து மனம் வருந்தினான் மன்னன்.
வார்த்திகனிடம் பேசலானான்.
“பெரியவரே! உம்மைச் சிறையில் அடைத்தது
செங்கோன்மைக்குப் பொருத்தமான
செயல் அன்று;
தம் கடமையிலிருந்து தவறிய
அறிவில்லாத எம் காவலரால்
என் அரசநீதி தவறிவிட்டது.
இதைப் பொறுத்துக்கொள்வது
பெரியவராகிய உங்கள் கடமை!”